ஆசை உருவாகும் அச்சம் நமைச்சாய்க்கும்
பாசம் தொடந்து பரிகசிக்கும் – வாசமெனுங்
குன்றுவந்து முன்னே குழைந்தாலும் என்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!

பொன்னாடை மாறும் புகழ்மாலை தாம்மாறும்
சொன்மாலை மாறும் சுகம்மாறும் – என்றைக்கும்
ஒன்று நிலையாம் ஒழுக்கமாம் நன்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!

கூட்டம் தொடர்ந்திருக்கும் கூப்பிட்டால் தான்தெரியும்
ஈட்டம் எவரால் எனும்செய்தி – வாட்டத்தில்
குன்றும் மனமிகவும் குற்றமடா நன்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!

காலைச் சிவப்பொளிபோல் காட்சி அழகெல்லாம்
காலம் கனிந்தால் கரைந்துவிடும் – காலமே
நன்றும் நலிவும் நமக்கியற்றும் நன்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!

வேதாந்த தத்துவம் வேகப் புரட்சிகள்
சேதார மில்லாச் செழுங்காதல் – தோதாக
நின்றாலும் சென்றாலும் நீமட்டும் நன்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!

-விவேக்பாரதி
29.09.2018

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *