என் கவிதை
#ம.இல.நடராசன்
“பரபரப்பற்ற சாந்தமான
ஞாயிறின் அதிகாலையில்
எழுந்து,
திங்களோடு வெள்ளி
இருக்கும் நீல வானின்
மையை எடுத்து
அந்நாளுக்கான என்
கவிதையை எழுத
கவிதையைத் தேடினேன்.
எங்கெங்கோ தேடியும் என்
கவிதை அகப்படவில்லை.
என் கவிதை குட்டைப் பாவாடை
அணிந்திருந்ததால்
ஆடையின் கவர்ச்சியால்
இழுக்கப்பட்டு,
மாறி மாறி பதினெட்டு
பேரால் வன்புணர்ச்சி
செய்யப்பட்டு,
உயிரோடு எரிக்கப்பட்டதாக
நாளிதழில் பின்பு படித்தேன்.
என்ன! என் கவிதைக்கு
அப்போது ஐந்து வயது இருக்கும்.
மீண்டும் மறுபிறவியிலும்
என் கவிதை பெண்ணாக
பிறந்து,
பேதை, பெதும்பை, மங்கை
கடந்து,
மடந்தையில் மடம் செல்லும்போது
குருக்கள் மற்றும் சீடர்களால்
Sexual harassment
செய்யப்பட்டது.
பின்னர் அதிலிருந்து மீண்டு
ஆண்டுகள் கழித்து
என் கவிதை பூப்பெய்ததும்,
காதலன் படுக்கைக்கு அழைக்க
அதை என் கவிதை
மறுக்க,
அவன் ஆசிட் வீசிவிட்டான்.
நல்லவேளை அது நீர்த்துப் போன
அமிலமாக இருக்கப் பெருத்த சேதமின்றி
என் கவிதையின் முகம்
தப்பித்தது பிடிக்காமல், கோபத்தில்
என் கவிதையின் முகத்தை
நீலப்படங்களாக்கி அவன்
Morphing செய்து இணையத்தில்
உலவவிட்டு விட்டான்.
திருமணமான பின் என் கவிதை
கணவனது இச்சைகளின் இம்சை
தாங்காது,
தொடைகளில் அவன் கொடுத்த
Cigarette bud தழும்புகளோடு,
அவனை வாழா வெட்டியாக்கி
தனிமை அடைந்தது.
தனிமையிலே வாழ்ந்து
எப்படியோ மத்திமவயதைக்
கடந்து,
என் கவிதை கிழவியான
பின், மீண்டும்
புணர்ச்சி பசியெடுத்த
49வது மிருகத்தால்,
50வது முறையாகக்
கற்பழிக்கப்பட்டு,
தன் அடுத்தப் பிறவியிலாவது
பாதுகாப்பான நாட்டில் பெண்ணாக
பிறக்க வேண்டுமென்ற
எண்ணத்துடன் உயிர்விட்டது.”
18-09-2018
15.15 மணி
…………………………………………………………………
இதோ இந்த ‘என் கவிதையை’
நான் எழுதிய வேளையில் கூட,
என் இன்னொரு கவிதையை
யாரேனும் எங்கேனும்
வன்புணர்ச்சி
செய்துக்கொண்டு இருக்கலாம்.