Tag: இசைக்கவி ரமணன்

  • இன்னும் என்னை……

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (32)

    இன்னும் என்னை..
    (பாடல்)

    10178015_617178681706941_2670382240026680791_n
    இன்னும் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
    அன்பே என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?

    உன்விழியின் ஊஞ்சலிலே என்னெஞ்சம் உயிர்தேடும்
    காலையும் மாலையும் நினைவின்றி
    கனவும் நினைவும் துணையின்றி
    புல்லின் நுனியில் பனிபோலே
    துளித்துளியாய் நான் கரைகின்றேனே (இன்னும் என்னை)

    கார்த்திகை தீபம் எந்தன் மனம்
    தவழும் தென்றல் உந்தன் மனம்
    அணைப்பாயா? இல்லை அணைப்பாயா?
    அழகிய கைகளில் எடுப்பாயா?
    பார்வையில் உயிரை நிறைப்பாயா? என்னைப்
    பாதையில் மலராய் இறைப்பாயா?

    தவிப்பே தவமாய்க் கனல்கின்றேன், ஒரு
    தவத்தின் முனையில் கரைகின்றேன் (இன்னும் என்னை)

    வெற்றியும் தோல்வியும் ஏதுமில்லை
    வேதனை சாதனை பேதமில்லை
    காதலெனும் ஒரு போதையிலே, மனம்
    கலந்தபின்னே உயிர் மீதமில்லை
    இதுதான் தருணம் வருவாயா?
    எனக்கொரு ஜனனம் தருவாயா?

    மலரில் பனித்துளி பழியில்லையே!
    மெளனம் மரணத்தின் மொழியில்லையே! (இன்னும் என்னை)

    படத்திற்கு நன்றி

     

     

    Share
  • இனி ஒருகணம் பிரியாமல் ……

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (31)

    இனி ஒருகணம் பிரியாமல்

     {கேட்டு மகிழ}

    10610675_516956361770600_5810124378370175541_n
    நிம்மதியாகச் சென்று வா! எந்த
    நிலையையும் அன்பால் வென்று வா!
    நினைவும் கனவும் இறைவனையே
    நித்தம் விடாமல் தொழுது வா!
    நிம்மதி பிறர்க்குத் தந்து வா! அதில்
    நிம்மதி புதிதாய்க் கொண்டு வா!
    நீலக் கடலின் வெள்ளலைபோல், நீ
    நேரே சீக்கிரம் ஓடி வா!

    சந்நிதி என்பது அன்புமனம், அதில்
    சரவிளக்காவது தொழுதசுகம்
    சதியாய் இடைவரும் விதியைக் கூடச்
    சமன் படுத்துவதே சாந்த குணம்
    அந்நியம் அறியா அன்பினிலே, அந்த
    ஆண்டவன் நெய்தான் உன் நெஞ்சை
    அள்ளிக் கொடுக்கக் கொடுக்கப் பெருகும்
    அன்பைக் கொடுத்து அழகே வா!

    என்மனம் என்பதோ உன்விழியில்
    என்னுயிர்? உன் இமையின் அசைவில்
    என்கன வெல்லாம் உன்முகமே
    என் நினைவெல்லாம் உன் நலமே
    என்றோ ஏனோ பிரிந்தநதி
    இன்று கலந்தது அவனருளால்
    ஒன்றொன்றான இன்பத்தை, இன்னும்
    ஒருமுறை கொண்டாட ஓ…டி… வா!

    தினம்தினம் உனக்காய்ப் பிரார்த்திப்பேன்
    திசையெலாம் உன்முகம் பார்த்திருப்பேன்
    தினம்தினம் கண்முன் நீ வளர, பனித்
    திரையின் ஊடே களித்திருப்பேன்!
    எனையுன் உயிரில் கலந்தவளே! என்
    உயிரினும் இனிய தெய்விகமே!
    எனையினி ஒருகணம் பிரியாமல்
    இறுகத் தழுவிடச் சீக்கிரம் வா!

    படத்திற்கு நன்றி

    Share
  • நிறமில்லாதொரு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (30)

    நிறமில்லாதொரு
    (பாடல்)

     

    Paintings of rural indian women - Oil painting (15)

    நிறமில்லாதொரு வெட்டவெளியாய் நீண்டு கிடந்தேன் நான்
    நீ வந்தாய் நிறம் தந்தாய் நிலம் கண்டது வான்!
    வடுவில்லாத வானம்போல வாழ்ந்திருந்தேன் நான்
    நீ கொஞ்சம் விலகும்போது சிவந்து போனது வான்!

    உனக்கும் எனக்கும் உறவுவைத்த ஒருவன் அவனங்கே
    உன்னை என்னை உருகவைக்கும் உயிரின் காதலிங்கே
    எனக்கும் உனக்கும் தொடரும் நெருக்கம் ஏது உரிமையிங்கே
    எல்லாமிருந்தும் ஏதுமில்லை என்ன வாழ்க்கை இங்கே? (நிற)

    உயிரினுள்ளே உயிரின் ஒளியாய்ப் பஞ்சுப் பதம்வைத்தாய்
    உள்ளம் முழுதும் வெள்ளிநிலவை மெள்ள ஏற்றிவைத்தாய்
    அயர்விலாமல் பரிவுகாட்டும் அன்பின் அதிசயமே! உன்னை
    அடைந்தும் அடையா துடையும் குமிழாய் வாழ்க்கை விதிவசமே (நிற)

    முள்ளில் நடக்கும் நமது வாழ்வின் முடிவு தெரியாது! இதை
    மூட்டிவைத்துப் பிரிக்கும் விதியின் மூலம் புரியாது
    இருந்தபோதும் இணைந்துவாழ்வோம் விடியும் காலம் வரும், நம்
    விதியைத் தாண்டி வாழ்க்கை ஒன்றை நமது காதல் தரும் (நிற)

    படத்திற்கு நன்றி

    Share
  • எங்கே சிட்டுக்குருவி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (29)

    எங்கே சிட்டுக்குருவி?

    {கேட்டு மகிழ}

     

    10317549_739794126082611_4567379894746634661_o
    சிட்டுக்குருவி சிறகடித்துப் பறந்துவிட்டதா? என்
    சின்னச்சின்ன முத்தங்களை மறந்துவிட்டதா?
    கட்டிக்கொள்ளும் போதுகொஞ்சம் கசந்துவிட்டதா? ஒரு
    கணப்பொழுதில் என்காதல் கரைந்துவிட்டதா?

    இப்படியென் பாதையென்றும் வளைந்ததில்லையே! என்
    இதயத்தை இப்படிநான் இழந்ததில்லையே!
    தப்புசரி என்றுமாறும் வாதங்களெல்லாம், அவள்
    தரிசனத்தின் ஒளியினிலே தகர்ந்துபோனதே!

    வெந்துமனம் ஒன்றிங்கே விம்முகின்றது, அதன்
    வேதனைகள் மெளனத்திலே பம்முகின்றது
    அந்தமனம் எந்நிலைமை அறிந்துகொள்ளுமா? என்னில்
    அவளன்றி யாருமில்லை புரிந்துகொள்ளுமா?

    மண்ணில்வீழும் நேரம் வாழ்வில் மாலை நேரமா? அது
    மண்ணில் வீழும்போது பாவம் மலரலாகுமா?
    கண்ணின் சின்னத் திரைக்குப்பின்னே கடல்கள் குமுறுதே! என்னைக்
    கட்டிக்கொண்ட தேவதையைத் தேடிப் பதறுதே!

    விட்டுவிட்டுப் போவதுனக்கு வாடிக்கைதானா? என்னை
    வீழவைத்துப் பார்ப்பதுமோர் வேடிக்கைதானா?
    தொட்டுச்சொன்ன சத்தியங்கள் மறந்துபோனதா? இதழைத்
    தொட்டுத் தொட்டுச் சொன்னதெல்லாம் பறந்துபோனதா?

    கொஞ்சமேனும் மனமிருந்தால் ஓடிவந்திடு! மொத்தம்
    கொள்ளைபோன நிம்மதியைக் கொண்டு தந்திடு!
    கொஞ்சம்கூட இடைவெளியே மிஞ்சிடாமலே, என்னைக்
    கொஞ்சிக்கொஞ்சி உந்தன்நெஞ்சில் கூட்டிவைத்திடு…

    படத்திற்கு நன்றி

    Share
  • வளையும் பாதை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (28)

     

    வளையும் பாதை

    {கேட்டு மகிழ}

    10270279_276364999201423_1998995586313210948_n
    இது மனமா?
    இல்லை வானமா?
    இல்லை வானமே ஒற்றை மேகமாக மாறிவிட்டாதா?

    வீதியில் நான் நடக்கும்போதும், என்
    விரலை ஒரு 
    பிஞ்சு மேகம்தான் 
    பிடித்துக்கொண்டு நடக்கிறது

    புழுதியில்லை..காற்றின் அலட்டலில்லை
    ஒரு
    பொற்சிலைச் சிவனின் புன்னகை போலப்
    பொடித்தூறல்..
    தெரிந்தும் தெரியாமல்..இடைவிடாமல்
    விட்டுவிட்டு விழுகின்ற திவலைகளால்
    தெளிவுக்குத் திரையே விளக்கமாகும் விசித்திரம்!

    சாலையிலே ஈரமிருக்கிறது
    நேற்றிரவில் கன்னத்தை நீ
    கவ்வி இட்ட முத்தத்தின் நினைவு போல

    தற்செயலாய் வந்ததுபோல் பாவனை காட்டித்
    தானே அதில்வந்து வீழ்ந்தமலர்போல்
    உன்முகம் அதிலும் வந்து என்னை
    உற்றுப் பார்ப்பது எதற்கோ!

    கள்ளக் காதலர்கள்போல்
    வெளிச்சமும் இருளும் தழுவிக் கிடக்கும் இந்த
    வேளைக்கு என்ன பெயர் வைப்பது?
    காலையின் வெண்மையும் இல்லை
    மாலையின் செம்மையும் இல்லை
    இரவின் தனிமை மட்டும்
    இருப்பதுபோல் தொடர்கிறது, ஓர்
    இடைஞ்சலற்ற நிசப்தம்

    இருப்பது எங்கே
    நடப்பது எதை நோக்கி
    எதுவும் தெரியாமல்தான், அதோ
    வளையும் பாதையில்
    வளைகிறது வாழ்க்கை

    வளைவுதான், வெற்று இருப்பில்
    வனப்பைக் கொண்டுவந்து சேர்த்து
    வசீகரிக்கிறது

    என்ன இருக்கும் அந்த வளைவில்?

    பாசை படிந்த பாறையின் ஓரம், தன்
    பட்டுக் கண்களால், ஒரு
    நீலமலர் கண்சிமிட்டி
    நெஞ்சு லேசாகிப் போகுமோ?

    சட்டையைக் கழற்றிவிட்டுச்
    சகியுடன் புணர்வதற்காகப்
    பளபளவென்று சாலையைக் கடக்குமோ
    படமொடுங்கிய பாம்பு?

    அவசரம் மிக அவசரமென்று
    பரவசமாகக் குறுக்கே
    பறக்குமோ ஒரு சிட்டுக்குருவி?

    எது விலகிச்சென்றதென்று
    என்னை அறியவிடாமல்
    புதர்கள் சிரித்துக்கொள்ளுமோ?

    ஆயிரம் வசந்த காலங்களை
    அள்ளிப் பூங்கொத்தாக்கி
    அதரம் குவித்து
    அவற்றை முகர்ந்து மகிழ்ந்தபடி

    இதயத்தை மீட்பின்றி
    இன்னும் இன்னும் 
    கண்களால் கவர்ந்தபடிக்
    காத்திருப்பாயா நீ!

     

    படத்திற்கு நன்றி

    Share
  • கண்ணே கலங்காதே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (27)

     

     

    கண்ணே கலங்காதே

    {கேட்டு மகிழ}

    4f45772108e844927371fa00bc5be2c3

     

    மாயை எனச்சிலர் மருட்டுகிறார், இது
    மாறும் எனச்சிலர் சிரிக்கின்றார்
    நேயம் எனச்சிலர் சொல்கின்றார், சிலர்
    நேற்றைய தொடர்ச்சி என்கின்றார்
    வாயொன் றிருந்தால் போதாதோ? பல
    வாறாய் வார்த்தைகள் பெருகாதோ?
    நீயேன் கண்ணே கலங்குகிறாய்? இது
    நிஜமா என்றா மயங்குகிறாய்?

    தீயை அணைக்க முடியாது, இனி
    திரும்பிச் செல்லவும் வழியேது?
    காயைப் படைத்தவன் இனிமையினைக்
    கடைசியில் எதற்கு வைத்தானோ?
    காலம் வந்தால் கனியாதோ? அது
    கனியும் போதில் இனிக்காதோ?
    ஆலம் விழுதின் ஊஞ்சலிலே, நாம்
    அசைவோம் முழுமதி இரவினிலே!

    எதிரே விரியும் பாதையிலே
    எத்தனை வளைவுகள் திருப்பங்கள்!
    ஏக்கம் தூங்கும் இதயத்தில்
    எத்தனை ரகசிய விருப்பங்கள்!
    புதிரின் மடியில் நாமெல்லாம், சிறு
    பூக்கள் போலே உதிர்கின்றோம், ஒரு
    கதியின் வசத்தில் வாழ்கின்றோம், அதைக்
    கண்ணீர்த் துளியால் நனைக்கின்றோம்

    முற்றத் தினிலே முழுநிலவு
    முன்னறி வித்து வருகிறதா?
    மொட்டை மாடியில் கோடைமழை
    முன்னுரை ஏதும் தருகிறதா?
    பற்றிக் கொள்ளும் சருகெல்லாம்
    தயங்கித் தயங்கி எரிகிறதா?
    பாலத் தினிலே சந்திப்பு! கீழே
    பாயும் நதியிது புரிகிறதா?

    பாசம் நட்பு நேசமென
    பலமுக மானது காதல்தான்
    பற்றைக் கடந்த பற்றாக
    பல்குவ தெல்லாம் காதல்தான்
    ஈசன் நினைப்பும் காதல்தான், தமிழ்
    இன்பம் தோய்வதும் காதல்தான்
    எங்கோ இருந்த இருமுகிலை, இங்கே
    இணைத்துப் பொழிவதும் காதல்தான்

    உனக்காய் வாழ்வதில் சுகமுண்டு, அது
    உனக்கே உனக்காய் ஆனாலும்
    உள்ளுக் குள்ளே ரகசியமாய், நித்தம்
    உறுத்துவதிலும் சுகமுண்டு
    எனக்கே எனக்காய் நீயும்தான், உன்
    நெஞ்சை மறைத்து வாழ்கின்றாய், அதன்
    எதிரே காதல் போதாமல்
    ஏழை திகைத்து நிற்கின்றேன்……..

    படத்திற்கு நன்றி

    Share
  • என்னுயிரின் பொன்னொளியே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (26)

    என்னுயிரின் பொன்னொளியே!
    (பாடல்)

    s-ilayaraja-indian-artist

    என்னுயிரின் பொன்னொளியே! என்மனதின் பூமழையே!
    என்னசொல்லிப் பாடுவேன்? இன்னும் ஏக்கம் தொடர்கிறதே!
    சொன்னதெல்லாம் போதாதே! சொல்லாமல் தீராதே!
    சொல்லிச்சொல்லிப் பார்க்கிறேன் இன்னும் தாகம் வளர்கிறதே!

    பாடும்போது உந்தன் முகமே பல்லவியாக எழுகிறதே
    படுக்கும்போது பஞ்சுமடியில் நெஞ்சம் அமிழ்ந்து குளிர்கிறதே, தாளம்
    போடும் விரல்கள் நெஞ்சைத் தட்ட
    பேதைமனது விண்ணை முட்ட
    உயிரின் சுனையாய்க் குவியும் இதழ்கள் நெருங்கி வருகிறதே! அந்த
    ஒருகணத்தில் உயிரே விலகி புதிதாய் உயிரொன்று மலர்கிறதே!

    என்கனவின் ரகசியமே! தினம்வளரும் அதிசயமே!
    என்கவிதை எங்குமே உன் முகமே தெரிகிறதே!
    நெஞ்செல்லாம் கரைகிறதே! நெகிழ்ந்து நெகிழ்ந்து வருகிறதே!
    புன்னகையின் மின்னலில் புது புவனம் விரிகிறதே!

    கண்ணும் கண்ணும் கண்டபோது காலம் கலங்கித் திகைத்ததம்மா
    கால்சதங்கை கேட்டபோதே கதையும் முழுதாய்ப் புரிந்ததம்மா!
    காதலிலே தேகம் நெய்து
    போதையிலே விழிகள் பெய்து
    மீதமிலாமல் உயிரின் உணர்வை மீட்டும் தேவதையே! இனி
    மீள்வதும் இல்லை வாழ்வதும் இல்ல என்னுயிர் உன்வசமே!

    என்வாழ்க்கை உன்வரமே! என்சுவாசம் உன் தயவே!
    என்னசெய்து உன்னைப் பெற்றேன் கருணையின் திருவடிவே!
    மழலைகொஞ்சும் உன்பேச்சு! மழைபோலே உன் சிரிப்பு
    யாவும்தந்து இன்னும் தரவே
    ஏங்கும் தெய்வதமே! உயிர்
    என்றும் உன் பதமே!

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

     

    Share
  • அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (27)

     

    அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ

    {கேட்டு மகிழ}

    10346451_671691352922340_5932846411327986116_n

     

    பொழிய ஆரம்பித்தால்
    நிறுத்தவே தெரியாமல்
    கொட்டிக் கொண்டிருக்கிறது மழை.

    ஆற்றங்கரை அரச மரத்தில்
    ஆயிரம் பதினாயிரம் இலைகள்
    ஒவ்வொன்றும் ஒன்றினிடத்தில்
    ஓயாமல் ரகசியம் பேசி
    வீசப்படுகிறதாம் காற்று.

    நாகர்கோயில் மணிக்கூண்டிலிருந்து
    நேரெதிரே பார்த்தால்
    நீல மலைகளின் மெளனம் அவிழ்ந்ததுபோல்
    செல்லுவதே தெரியாமல்
    மளமளவென்று
    வந்துகொண்டே இருக்கிறது காற்று.

    எங்கிருந்து என்று தெரியாமல்
    எங்கு என்றும் புரியாமல்
    அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ
    அவளும் அவனும்?

    பாஷையெல்லாம் காலியாகிப்போய்
    கவிதையெல்லாம் ஆளை விடு என்று
    களைத்தபின்னும்
    பேசிக்கொண்டே இருப்பதற்கு
    ஏதேனும் இருந்துகொண்டே இருக்குமோ?

    கண்களைக் கண்கள் கவ்வியபடி
    கட்டிப் பனியாய் உருகியபடி
    உருகிக் கரையவே உருவெடுத்தவர்கள் போல்
    அவளும் அவனும்
    இன்னும் எத்தனை நேரம்தான்
    ஆறிப்போன பாழும் காப்பியை
    உறிஞ்சுவதாகவும் ரசிப்பதாகவும்
    உட்கார்ந்து பேசுவார்கள்?

    ஒருநாள் அவனுக்குத் தோன்றிவிட்டது
    தான்தான் ரொம்பவும் பேசுவதாக
    நாணத்தால் அவன் சாம்பத் துவங்கியது
    அந்தப்
    பட்டாம் பூச்சிக் கண்களில்
    படாமல் இல்லை.

    ‘’இவனுடைய விரலின் முனை
    இவளுடைய நிழலைக்கூடத்
    தீண்டாது போனாலும்
    எப்போதும் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கும்
    இதயக் கோப்பைகளை
    இவர்கள் மாறி மாறி அருந்திக்கொண்டிருப்பார்கள்’’
    என்று
    அவர்களுக்காக மட்டுமே
    அசரீரி சொன்னது.

    அவன் பேச்சை நிறுத்திவிட்டான்
    அவள், அவனை நிறுத்தவில்லை

    கால்கள் அவனை வீட்டுக்கும்
    சிறகுகள் அவளைக் கூட்டுக்கும்
    கூட்டிச் சென்றன.

    மறுநாள் காலை
    அவன் வீட்டு மணி ஒலித்தது
    வாசலில்
    படபடத்து நிற்கிறது
    பட்டாம் பூச்சி
    பெட்டியோடு..

    Share
  • ஒரு ரயில் பயணத்தில்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (26)

     

    ஒரு ரயில் பயணத்தில்….

    {கேட்டு மகிழ}

    10301055_285979498239973_6877421676757917975_n

    தூசு, சத்தம், துர்நாற்றம்
    கூட்டம், குப்பை, தள்ளாட்டம்
    ஈசல் பறக்கும் நெஞ்சங்கள்
    ஈக்கள் மொய்க்கும் வியாபாரம்

    ஓசை மிகுந்த குலுக்கலிலே
    தூளிக் குழந்தை அயர்கிறது
    நேசம் நெருக்கம் இவையெல்லாம்
    பேசும் குரலில் மிளிர்கிறது

    இறங்குவ தொன்றே நினைத்தபடி
    இதையும் அதையும் செய்கின்றார்
    இறங்கி விடாத பண்டத்தை
    ஏனோ விரும்பித் தின்கின்றார்

    இடிக்கக் கூட முடியாமல்
    இத்தனை நெரிசல் ரயிலில்தான்
    புழுதி விசிறும் வெய்யிலிலும்
    பொறுமை காப்பது இந்தியர்தான்

    இத்தனை நெருக்கடி மத்தியிலும்
    இருக்கையில் எழுந்து நின்றபடி
    சித்திர நடனம் செய்கின்ற
    சிறுமியை வியந்து பார்க்கின்றேன்!

    வேரில்லாத பேச்சுக்கள்
    வேடங் காட்டும் வீச்சுக்கள்
    யாரென் றிலக்கே இல்லாமல்
    வீசப் படுகிற ஏச்சுக்கள்

    சாமியாடும் சில தலைகள்
    சதா பேசும் சில தலைகள்
    சாமரம் போடும் சில தலைகள்
    தளைகள் மண்டிக் கிடக்கும் தலைகள்…

    சுமையை
    இறக்கி வைப்பார் சிலர்
    ஏற்றி வைப்பார் சிலர்
    ஏற்றவும் இறக்கவும் மனமின்றி
    சுமந்து சுமையாய்ச் சிலர்…

    நாற்றம் பிடித்த கழிவறைகளுக்கு
    நடுவே
    டோக்கன் போடும் பக்தனாக
    நின்றபடி
    துப்பல் தேசத்தின் தொண்டர் குழாத்தின்
    தூரிகை லாகவம் பார்த்தபடி
    அத்தனை கூட்டத்திலும் நாற்றத்திலும்
    அவசரத்திலும்
    அவுக் அவுக்கென்று பிரியாணியை
    அள்ளிப் போட்டுக் கொள்பவரையும்
    ரசித்தபடி

    பொருள்களோடு பொருட்டின்றி
    நின்று கொண்டிருக்கின்றேன்…

    எப்படி என்னால் முடிந்தது?

    இப்போது
    உன் பத்து விரல்களும்
    என் கன்னத்தைப்
    பற்றிக்கொண்டால்
    எப்படி இருக்குமென்று பாவித்தேன்

    நனவின் நடப்பை
    கனவுத் துடுப்பால்தானே
    கடக்க வேண்டும்?!

     

     

     

    Share
  • கனவிலே கண்ணன்

    இசைக்கவி ரமணன்

     

    கனவிலே கண்ணன் (பாடல்)

     images (1)

     

    கனவிலே கண்ணன்
    நினைவிலே கண்ணன்
    கனவும் நினைவும் கலந்து மயங்கும்
    கவிதை யாவும் கண்ணன்
    கனவும் நினைவும் கண்ணன்
    கவிதை யாவும் கண்ணன்

    தன்னை உருக்கிக் கரைந்து போகும்
    தவத்தின் கனலில் கண்ணன்
    தானில்லாத லஹரியில் வந்து
    தழுவும் உறவு கண்ணன்
    கவலை யாவும் கன்னியராகி
    அவர்கள் நடுவில் கண்ணன்
    திசைதொலைந்து திணறும்போது
    தெருவின் முனையில் கண்ணன்

    தவத்தின் கனலில் கண்ணன்
    தழுவும் உறவு கண்ணன்
    கவலை நடுவில் கண்ணன்
    தெருவின் முனையில் கண்ணன்

    சொல்ல மறந்த வார்த்தையுள்ளே
    சுழலும் ஜோதி கண்ணன்
    சொல்லி முடிந்து ஓய்ந்த பின்னும்
    தொடரும் மெளனம் கண்ணன்
    எல்லை யாவும் தீர்ந்த போது
    இன்னும் இன்னும் கண்ணன்
    எதிரில் தோன்றி மறைந்து சிரிக்கும்
    இதய வாசன் கண்ணன்

    சுழலும் ஜோதி கண்ணன்
    தொடரும் மெளனம் கண்ணன்
    இன்னும் இன்னும் கண்ணன்
    இதய வாசன் கண்ணன்

     

    Share
  • சில நாட்கள்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (25)

     

    சிலநாட்கள்

    {கேட்டு மகிழ}

    0_5cd93_2d2431e3_orig[1]

    சிலநாட்கள் இப்படித்தான்
    கையில் எடுத்ததெல்லாம் கீழே விழும்
    காகிதம் கூட கனக்கும்
    எத்தைச் சொன்னாலும் தப்பாய்ப் போகும்
    அவளுக்கே கூட
    என் சொற்கள் சலிக்கும்

    சில நாட்கள் அப்படித்தான்
    உறங்கவே முடியாத உற்சாகம்
    ஒவ்வொர் அடியிலும் வெற்றிக் கல்
    அவளாகவே வந்து
    கழுத்தைக் கட்டிக்கொள்வாள்

    நாட்களே ஏனிப்படி இருக்கிறீர்கள்?
    ஏன் நடிப்பு? ஏதுக்கு நொடிப்பு?

    தேதியைக் கிழித்தான் சிறுவன்
    மீதி,
    நாட்காட்டியில்
    மிஞ்சிக் கெஞ்சிக் கொண்டிருந்தது
    செய்த கப்பலைச் செலுத்த வேண்டி
    மணலில் சரிந்து நதியில் இறங்கினான்

    வளர்ந்தும் குறுகியும் தளர்ந்தும்
    கரைதிமிறும் வெள்ளமாகவும்,
    அவ்வப்போது
    கரையோடு ஒதுங்கி ஆதங்கம் பேசியும்
    வறண்டும் கூட
    வளைந்து வளைந்து தொடரத்தான் செய்கிறது நதி.

    ஆற்றுக்குக் கடலும் முடிவில்லை என்றால்
    அது நடுவே நின்றாலென்ன?
    அடித்துக்கொண்டு சென்றாலென்ன?
    நதிபோலத்தானே நமது நாட்களும்?
    நகர்த்த முடியாத நிறுத்த இயலாத
    நிரந்தரத் தொடர்ச்சிதானே?

    ஒருநாள்
    கெண்டைகள் விழிகண்டு துள்ள, கூந்தலில்
    மண்டும் வண்டுகள் கண்ணில் மயங்கவும்
    மின்னற் கைகளால் விலக்க, நீரில்
    கண்ட முகத்தைக் கண்டு நாணிக்
    கல்லெறிந்து முகம் தேடியபடி
    ஆற்றங் கரையில் ஆறே உயிர்த்ததுபோல்
    தன்னைப் புறந்தள்ளிப் பாயும் கவிதையில்
    தானே மயங்கிக் கிடக்கும் கவிஞன்போல்

    அந்த மாலைப் பொழுதுகளில்
    அவள் தென்படுவாள்
    அடுத்தநாள் மாலை
    அந்த மாலையாய் இருக்காது
    அதற்கு அடுத்த நாள்
    மாலையே இருக்காது
    ஆனாலும் மாலை மீண்டும் வருமென்று
    ஆற்றுக்கும் மீனுக்கும் காற்றுக்கும் தெரியும்

    நேற்றைய நிகழ்வின் நினைப்புத்தானே
    இன்றைய வெறுமையை, நாளைய மறுப்பைக்
    கடப்பதற்கான சுவாசம்?

    அவற்றைத் தாண்டி அங்கே நின்றால்
    ஆற்றங் கரையில் அவள் இருப்பாள்
    அலைகள் புரளப் புன்னகைத்தபடி..

    அப்படித்தானே கண்ணே?

    படத்திற்கு நன்றி

     

    Share
  • நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக    (24)

    நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா
    (பாடல்)

     

    Paintings of rural indian women - Oil painting (4).forblog

     

    நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா ஒன்ன
    நெறெச்சு வச்சிருக்கேன் தாயி தாயி
    ஒன் காவலும் நான் கொண்டைச் சேவலும் நான், இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி!
    கொஞ்சிக்கொஞ்சி மனசுக்குள்ளே கோயில் கட்டினேன், அங்க
    குயிலு ராகத்துல வண்ணம் பூசினேன்
    அஞ்சி அஞ்சிக் கண்ணீரால் கழுவித் தொடெச்சேன், அங்க
    அன்பு என்னும் ஒரே ஒரு கொடிய வளத்தேன்

    நெஞ்சாரச் சொல்லுறேண்டி உசுர தீபமாக்கினேன்
    நெனெப்பு முழுக்க ஒன்ன நெனெச்சு நெனெச்சு ஏங்கினேன்
    கண்ணுரெண்டும் சிமிட்டிச் சிமிட்டிக் கலகலன்னு சிரிப்பவளே!
    காட்டுக்குள்ள நொழெஞ்சவனத் தடுத்து வழி மறிச்சவளே
    கண்ணெல்லாம் இருண்டபோது காலைபோல வந்தவளே!
    காதோரம் பாடுகிறேன் தாயி தாயி! இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி! (நெஞ்சுக்குள்ள)

     
    மேகத்தையும் மேகத்தையும் காத்து சேக்குது
    ஆத்தையும் ஆத்தையும் பூமி சேக்குது
    தேகத்தையும் தேகத்தையும் தாகம் சேக்குது
    தவிப்பையும் தவிப்பையும் சோகம் சேக்குது

    பாத்ததும் புரிஞ்சதடி சேந்து பிரிஞ்சு பொறந்தகத
    பழகித் தெரிஞ்சதடி பிரிக்க முடியாத கத
    ஆனந்தமானவளே! அன்பின் மறுபெயரே!
    அலைகடல் நடுவினிலே அமைதி தரும் நிலவே!
    தாயாகி சேயாகி தழுவவந்த தேவதையே!
    கண்ணில்மணியாக ஒன்னக் காப்பேன் தாயி! ஒன்
    கண்ணாளன் சொல்லுறதக் கேளு தாயி! என்
    மார்பில் ஒன்னெ ஏந்திக்குறேன் தாயி தாயி, எம்
    மடியில் சாச்சுக்குறேன் தாயி தாயி! இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி!

     

    படத்திற்கு நன்றி: இளைய ராஜா

     

     

    Share
  • பராசக்தி!

    இசைக்கவி ரமணன்

     

    பராசக்தி! (கேட்டு மகிழ)

    10530681_820952731257554_5883851054705537964_n

     

    அறிந்தவர்க்கே புதிராய், ஆனந்த வெள்ளமாய்
    முடிந்தெரிந்து போனபின்னும் மூங்கில் தளிர்போலே

    தெரிந்து முளைப்பவளாய், தேசத்து நாயகியாய்,

    திசைகளாய் வாழ்வில் திகழ்பவளின் தாள்போற்றி!

     
    தன்னந் தனியளாய்த் தனித்திருந்தும், உயிர்மீட்டும்

    சின்னஞ் சிறிய சிரிப்புச் சிரிப்பவளாய், ஆங்கோர்

    வன்னக் கடற்கரை வாசலிலே நின்றிருக்கும்

    வாலையே உன்றன் வசந்தப் பதம் போற்றி

     
    செம்மைத் தமிழுக்குத் தெம்புதரும் மதுரையில், என்

    பிள்ளைக் கவிதைகளை இடையொசிந்து கேட்டிருக்கும்

    அம்மே! அலங்காரி! அனற்புயலைப் புன்னகையில்

    அமைதிசெயும் ராஜ மாதங்கி அடி போற்றி!

     
    பரந்து கிடக்குமிந்தப் பார்வெளியில், நிலவாய்

    பவனிவரும் உறவு எங்கள் பராசக்தி! துன்பமே

    விரிந்திருக்கும் பாழில் நான் விழுந்து தவிக்கையிலே

    விசைத்துச் சிலிர்க்கவைக்கும் வீரகீதம் பராசக்தி!

     
    ஒற்றைப் பொய்க்கும் ஒருநூறு சவுக்கடிக்கும்

    உண்மையின் தாயெங்கள் பராசக்தி! மானத்தை

    விற்றுவிட்டுப் பற்றிலார்போல் விரவிக் கிடக்குமந்த

    வீணருக்கோ கொள்ளிப் பேயெங்கள் பராசக்தி!

     
    சின்னக் குழந்தையிடம் சிரிப்பாக, ஞானத்

    திகிரியிலே கனலும் நெருப்பாக, அந்தக்

    கன்னற் கணுக்களிலே ரசமாக, உயிர்க்

    கவிதையிலோர் சாயைமட்டும் வசமாக

     
    கட்டவிழ்ந்த காட்டாற்று வெள்ளமாக, மெத்தக்

    கற்றவர்க்கும் கால்தடுக்கும் பள்ளமாக, புத்தி

    முட்டமுட்ட முழைக்கின்ற பாறையாக, எங்கோ

    முணுமுணுத்துக் கொல்லுகின்ற தேரையாக

     
    ஓட ஓடச் சரியும் தொடுவானாக

    உந்த உந்த விலகும் நிலவாக

    பாடப் பாடப் பணிய மறுக்கும்

    பரவசம் அதிசயம் பொய் எங்கள் பராசக்தி!

     
    பிடரியுள் குடியிருக்கும் பீதியுள் புகுந்து ஏதோ

    பிதற்றுகின்ற பேதையிவள்! பெரும்புதிர் இவள் தாதை! பனி

    படர்ந்திருக்கும் இமயத்தின் பயம்சரிந்த சரிவுகளில்

    பல்லவி மறந்து அலையும் பசுமழலை பராசக்தி!

     
    உலகிலே இருக்கின்ற உயிரெலாம் கொன்று

    உயரப் பறக்கின்ற ஒருகோடித் தீக்குழம்பை

    உலையிட்டுக் கொதிக்கவைத்து உதிரமாய்க் கொட்டினாலும்

    நிலைகொணாது தவிக்கின்ற நீலி எங்கள் பராசக்தி!

     
    ஓடுகின்ற ஒருகோடி நரம்பெல்லாம் துடித்தாலும்

    ஒவ்வோ ரணுவுமிவளை ஓஹோ என் றழைத்தாலும்

    ஓடிக்கொண் டேயிருந்து ஒருநோக்கில் நகைவெட்டி

    ஒளிசிதறி மறைந்துவிடும் ரெளத்திரமே பராசக்தி!

     
    தீக்குழம்பில் தோணிவிட்டு, திமிர்பிடித்த கரிகளிடம்

    திமில்தேடித் தலைதிருகித் திண்மைக்கு மலையுடைத்து

    போக்குக்கே புரியாத போக்கில், புவியதிரப்

    புறப்பட் டுலாவுகின்ற பெளருஷமே பராசக்தி!

     
    கவிதையாம்! பக்தியாம்! இவளைக் கண்டாராம்! கொண்டாராம்!

    கதையிலெத்தனை கதைகள்! காளியடா காளியிவள்!!

    சிவிகையிலே புயலமர்ந்து திருவுலா வருமோடா?

    சிற்றெறும்பு தின்வடுத்தால் யானைகளைத் தேடுமோடா?

     
    அம்மா! என்றே அலறி, அகம் சிதறிச் சிதறி

    அதோ அந்தத் தரைமீது தலைபிளந்து வீழ்ந்திருப்போம்!

    தம்மால் ஆகாததெல்லாம் தயவில்தான் சாத்தியம், இந்தத்

    தழலுக்குத் தனையறியாச் சரணம்தான் பாத்திரம்

    Share
  • என்ன செய்வது?

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக   (23)

    என்ன செய்வது?

    {கேட்டு மகிழ}

    ht1971

    உன்

    நிழலைக்கூடத் தழுவிடாமல் விலகி நிற்பதா? ஓர்

    இழையும்கூட விலகிடாமல் தழுவிநிற்பதா? என்னைக்

    கழுவிலேற்றும் கண்களைநான் கண்டு வாழ்வதா? அதில்

    விழுந்து கலந்து புரண்டு விளிம்பில் கரைந்து போவதா?

     

    வாழ்க்கை என்னும் யாழ்நரம்பில் ராகம் மாறலாம், ஒரு

    வசந்தகால மாலைகூட சோகமாகலாம்

    மீட்டும்விரல்கள் மீட்டியபின் மீள முடியுமா? ஒரு

    மின்னல்சன்னல் ஏறிவந்தால் தாள முடியுமா?

     

    மண்ணில் போட்ட கோலம் சற்று மாறுவதுண்மை, ஒரு

    மழைவிழுந்தால் மண்ணிலெங்கோ மறைவதும் உண்மை

    எண்ணி வைத்த புள்ளிகளா என்ன சொல்வது? அவை

    இஷ்டம்போல இணையும்போது என்ன செய்வது?

     

    வானில் புள்ளிவைத்துப் போன விரல்கள் என்னவோ? அவை

    வைத்தபடி வைத்துச் சென்ற விவரம் என்னவோ?

    மோனவிழிகள் காண்பதெல்லாம் கோலமாகுமா? அதில்

    மூண்டுவரும் கனவையெல்லாம் வானம் ஏற்குமா?

     

    அந்தப் புள்ளி இந்தப் புள்ளி இணைவதும் இல்லை, யுகம்

    ஆயிரங்கள் போனாலும் பிரிவதும் இல்லை

    சொந்தங்கள் சொல்லிச்சொல்லிப் புரிவதும் இல்லை, ஏதும்

    சொல்லாமல் இருப்பதாலே குறைவதும் இல்லை

     

    அன்பு என்றும் தியாகமின்றி வாழ முடியுமா? தன்னை

    அர்ப்பணிக்காமல் திரியும் தீபமாகுமா?

    ஒன்றிலொன்று உயிரைப்பெய்து ஒன்றுபட்டபின், அங்கு

    உறவுமேது பிரிவுமேது ஒன்றுமில்லையே!

     

    புள்ளியென்றும் கோலமென்றும் விரல்கள் எண்ணுமா? இரவுப்

    பொழுதில் மறைவில் கண்பனிக்கும் கதையை அறியுமா?

    வெள்ளிமுளைக்க ஏதுமில்லை வெட்ட வெளியிலே, மாலை

    விழுந்தபின்பு மீதமில்லை நீல வானிலே

     

    இரவும் பகலும் ஒன்று நீங்க ஒன்று வாழலாம், அந்தி

    இடையில் மட்டும் ஒன்றையொன்று நின்று காணலாம்

    ஒருமுறைதான் உயிரில்தோன்றும் உறவு என்பது, அதை

    ஓயாமல் உறுதிசெய்யும் பிரிவு என்பது……….

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • என்மனம் ரொம்பப் பாவமே

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக  (22)

    என்மனம் ரொம்பப் பாவமே

    (பாடல்)

    10011167_254221321415791_728106104_n

    என்மனம் ரொம்பப் பாவமே

    உன்மேல் தீராத காதலே!

    எந்த நாளும் மாற்றமின்றி

    நீளும் இந்த போதையே

    உந்தன் எதிரில் வண்ணக் கனவுகள்

    கண்ட ஊமை ஆனதே! நீ

    வந்து சென்றபின் நொந்த நெஞ்சினில்

    நூறு மின்னல்கள் தாக்குதே! கொடும்

    நாணமே உயிரானதே! (என் மனம்)

     

     

    கவிஞன் நானெனில் கவிதை நீயெனில்

    வாழவைப்பது நீ

    காதல் நீயெனில் கனவு நானெனில்

    வீழவைப்பதும் நீ

    தவிப்பு நானெனில் தவம் நீயெனில்

    தகிக்க வைப்பது நீ, நான்

    தவிடுபொடியாய்ச் சிதறும்போது

    தாவி அணைப்பது நீ! உயிர்

    தழுவித் தருவதும் நீ!

    பாறை நான், அதில் ஈரம் நீ, அதில்

    புல் நான், அதில் பூவும் நீ!

    மெளனம் நான், எழும் வார்த்தை நீ, அதன்

    பொருள் நான், அதன் உருவம் நீ

    எதையும் மீறும் அதிசயம் நீ

    வீதி ஏழை நான்! நீ

    இதையும் மீறி என்னை ஏற்றால்

    புலரும் இன்னொரு வான்! அதிலும்

    குலவும் நிலவே நீ! அதில்

    குழையும் மலரே நான்!

     

    Share