என்மனம் ரொம்பப் பாவமே
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (22)
என்மனம் ரொம்பப் பாவமே
(பாடல்)
என்மனம் ரொம்பப் பாவமே
உன்மேல் தீராத காதலே!
எந்த நாளும் மாற்றமின்றி
நீளும் இந்த போதையே
உந்தன் எதிரில் வண்ணக் கனவுகள்
கண்ட ஊமை ஆனதே! நீ
வந்து சென்றபின் நொந்த நெஞ்சினில்
நூறு மின்னல்கள் தாக்குதே! கொடும்
நாணமே உயிரானதே! (என் மனம்)
கவிஞன் நானெனில் கவிதை நீயெனில்
வாழவைப்பது நீ
காதல் நீயெனில் கனவு நானெனில்
வீழவைப்பதும் நீ
தவிப்பு நானெனில் தவம் நீயெனில்
தகிக்க வைப்பது நீ, நான்
தவிடுபொடியாய்ச் சிதறும்போது
தாவி அணைப்பது நீ! உயிர்
தழுவித் தருவதும் நீ!
பாறை நான், அதில் ஈரம் நீ, அதில்
புல் நான், அதில் பூவும் நீ!
மெளனம் நான், எழும் வார்த்தை நீ, அதன்
பொருள் நான், அதன் உருவம் நீ
எதையும் மீறும் அதிசயம் நீ
வீதி ஏழை நான்! நீ
இதையும் மீறி என்னை ஏற்றால்
புலரும் இன்னொரு வான்! அதிலும்
குலவும் நிலவே நீ! அதில்
குழையும் மலரே நான்!