இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (26)

என்னுயிரின் பொன்னொளியே!
(பாடல்)

s-ilayaraja-indian-artist

என்னுயிரின் பொன்னொளியே! என்மனதின் பூமழையே!
என்னசொல்லிப் பாடுவேன்? இன்னும் ஏக்கம் தொடர்கிறதே!
சொன்னதெல்லாம் போதாதே! சொல்லாமல் தீராதே!
சொல்லிச்சொல்லிப் பார்க்கிறேன் இன்னும் தாகம் வளர்கிறதே!

பாடும்போது உந்தன் முகமே பல்லவியாக எழுகிறதே
படுக்கும்போது பஞ்சுமடியில் நெஞ்சம் அமிழ்ந்து குளிர்கிறதே, தாளம்
போடும் விரல்கள் நெஞ்சைத் தட்ட
பேதைமனது விண்ணை முட்ட
உயிரின் சுனையாய்க் குவியும் இதழ்கள் நெருங்கி வருகிறதே! அந்த
ஒருகணத்தில் உயிரே விலகி புதிதாய் உயிரொன்று மலர்கிறதே!

என்கனவின் ரகசியமே! தினம்வளரும் அதிசயமே!
என்கவிதை எங்குமே உன் முகமே தெரிகிறதே!
நெஞ்செல்லாம் கரைகிறதே! நெகிழ்ந்து நெகிழ்ந்து வருகிறதே!
புன்னகையின் மின்னலில் புது புவனம் விரிகிறதே!

கண்ணும் கண்ணும் கண்டபோது காலம் கலங்கித் திகைத்ததம்மா
கால்சதங்கை கேட்டபோதே கதையும் முழுதாய்ப் புரிந்ததம்மா!
காதலிலே தேகம் நெய்து
போதையிலே விழிகள் பெய்து
மீதமிலாமல் உயிரின் உணர்வை மீட்டும் தேவதையே! இனி
மீள்வதும் இல்லை வாழ்வதும் இல்ல என்னுயிர் உன்வசமே!

என்வாழ்க்கை உன்வரமே! என்சுவாசம் உன் தயவே!
என்னசெய்து உன்னைப் பெற்றேன் கருணையின் திருவடிவே!
மழலைகொஞ்சும் உன்பேச்சு! மழைபோலே உன் சிரிப்பு
யாவும்தந்து இன்னும் தரவே
ஏங்கும் தெய்வதமே! உயிர்
என்றும் உன் பதமே!

 

படத்திற்கு நன்றி : இளையராஜா

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.