Tag: இசைக்கவி ரமணன்

  • அவையும் மலர்கள்தான்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (21)

    அவையும் மலர்கள்தான்

    {பாடல் கேட்டு மகிழ}

    Paintings of rural indian women - Oil painting (9)

    வினையாலணையும் பெயர் என்றார்

    துயிலாலணையும் இமைகளோடு போராடிக் கொண்டிருந்தேன்

    ”இலக்கியமும் இலக்கணமும் இரண்டு கண்கள் என்றார்”

    இரண்டுமே செருகிவிட்டன

    ”அன்புதான் பாசம் அதுதான் நேசம் அதுவேதான் நட்பு

    அதனால்தான் காதல் அதன்முகமே தேசபக்தி…”

    கனவில் கேட்ட வாசகங்களின் விழிப்பில்

    கைகளை விலக்கிக் கழுத்தைத் திருப்பினேன்

    சன்னல் வழியே மைதானத்தில்……….

     

    அழகான மரம் அது

    ஒருக்களித்துப் படுத்திருக்கும் ஒய்யார தேவதைகள் போல்

    பெருத்தும் சிறுத்தும் விடலை மனங்களைப்

    பின்னி எடுத்தபடிப்

    புரண்ட கோலத்தில் கிளைகள்

     

    ரீதி மாறாத காதல் மனம்போல்

    ஒரேவிதமாய் ஆயிரம் மலர்கள்

    ஒரே குடும்பம்தான் என்றாலும்

    குழுக்களாய்ப் பிரிந்து வம்பளந்து

    கூடும்போது குலாவிக் கொள்ளும்

     

    விடியும் முன்னேயே ஈரத் தலையை

    முடிந்தபடி வந்துநிற்கும் மூக்குத்திப் பெண்ணின்

    மூக்கை உரசும் மலர்கள்

    பூக்குடலையில் மூச்சுவிட்டுப்

    பூசைக்குப் போய்ச்சேரும்

     

    பள்ளிக்கூடக் காலை நேரம்

    பாரத மாதா புகழ்பாடி

    கொடியேற்றி விறைக்கும்போது

    நம்பற்குரியோர் சூழ்ந்திருக்கும்

    கம்பத்திருந்து கொட்டும் சில

     

    கூந்தல் கருமையைக் கூட்டிக்காட்டும் சில

    ஏந்தி மண்டியிட்டு

    இதயத்தைக் கொடுப்பதற்காகச் சில

     

    அம்மாவுக்கும் அக்காவுக்கும்

    ஆசை ஆசையாகச் சில

    சும்மாவேனும் பறித்துப் பார்க்க்ச் சில

    இம்மியும் விலகாமல் மரத்தோடு சில

    இறந்தவரின் வெந்த நெஞ்சில் சில

     

    ஒரே மரம். ஆயிரம் பூக்கள்

    உள்ளுக்குள்ளே நூறு குழுக்கள்

    ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பயன்கள்

     

    சில மலர்கள் மட்டும்

    காயாமலும் கனியாமலும்

    யார்கையிலும் சேராமலும்

    யாரும் பார்க்காமலும்

    அடிமரத்தின் நிழலிருட்டில்

    உதிர்கின்றன,

    உன் கண்ணில் இன்னும் படாத

    என் காதலைப் போல்

     

    அவையும் மலர்கள்தான்

    அதே மனதைச் சேர்ந்தவைதான்

    என்று நீ உணர்கின்ற நேரம்

    உதிர்ந்த மலர்கள் உரமாகி

    ஒவ்வொரு கிளையிலும் முகங்காட்டி

     

    எவ்வழியேனும் உன்

    மென்விரல் தீண்ட

    எப்படியேனும் உன்

    வன்னக் கால்களை வருடிப் பார்க்க

     

    எழுந்த கண்ணீரைத் தேனாய் இறுக்கி

    ஏங்கிச் சிரித்திருக்கும்…………

     

    படத்திற்கு நன்றி

     

    Share
  • ராத்திரியில் மனசுக்குள்ளே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (20)

     

    ராத்திரியில் மனசுக்குள்ளே
    (பாடல்)

    1900087_510462785753528_5400619279422432625_n

    ராத்திரியில் மனசுக்குள்ளே பூத்திருக்கும் கனவையெல்லாம்
    ரகசியமா மாலையாகக் கட்டினேன், அதெப்
    பாத்திருந்த வெண்ணிலவ பறிச்செடுத்துப் பதக்கமா, ஒன்
    நெஞ்சத்தொட்டுச் சூட்டிப் பாக்க வந்தேன்
    கண்சிமிட்டும் வெண்ணிலவா முன்னவந்து நிக்கும்போது
    கையிலுள்ள மாலைகொஞ்சம் நாணுதே! உன்
    செவந்த இதழ் சின்னதாகப் பிரியும்போது மின்னல்வீசி
    ஏழைமனசு பாவம்ரொம்பக் கூசுதே!

    காத்திருக்கும் நேரத்துல காலம்பாரு வக்கணையா
    காலநீட்டி நிம்மதியாத் தூங்குதே! ஒன்னெ[ப்
    பாத்திருக்கும் ஒருகணத்தில் பலயுகமும் பொலபொலன்னு
    பஞ்சப்போலக் காத்திலெங்கோ பறக்குதே!
    சேத்துவச்ச சிறுவாடு நேத்துவந்த கனவோடு
    சில்லரையும் மிஞ்சாம தீர்ந்ததே! ஒரு
    செறகில்லாம ஒம்முன்னே மொறெயில்லாம நிக்கும்போது
    பட்டாம்பூச்சிக்கண்ணு விரிஞ்சு சிரிக்குதே!

    காத்தடிச்சா மழவரலாம் கட்டோடு கலெஞ்சிடலாம்
    கடலுக்குள்ளே சிப்பியொண்ணு கலங்குதே
    மனசுக்குள்ளே மத்து ஒண்ணு மாறிமாறிச் சுத்துறப்போ
    பகலும் இரவும் கையைக்கொட்டிச் சிரிக்குதே
    சந்தனத்தைத் தடவிக்கிட்டு வந்துநின்ன காத்துக்குள்ளெ
    எம்மனசச் சேதியாக்கி வச்சேன், அது
    வந்துனக்கு சேந்துருச்சோ வழியில்வம்பு பண்ணிருச்சோ
    வானத்துல புள்ளிவச்சுச் சொல்லேன்

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

     

    Share
  • வருவாயா?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (19)

    வருவாயா?

    {கேட்டு மகிழ}

    10486783_299956013508635_266905490165609309_n

    என்றோ பெய்யும் மழையின்

    ஏதோ ஒரு சிறு துளி

    எப்படியோ மண்ணில் நுழைந்து

    விதையின் கதவைத் தட்டி

    விழியோடு விழி பேசலாம்

    பரந்து விரியும் சோலைக்குப்

    பரிசம் போடலாம்

     

    விலக்க முடியாத இருளில்

    விழிக்க முடியாத விழிகள்

    வெறித்துக் கிடக்கும்போது

    ஏதோ ஒரு கரம் கூந்தலை விலக்க

    நெற்றி தெரிவதுபோல்

    நேருக்கு நேரே நேர்ந்து விடலாம் விடியல்

     

    ஊமையின் நெஞ்சுக்குள்

    ஊசியாய் மின்னலொன்று

    உயிர்சிலிர்க்க நுழைந்தபின்னும்

    உதடு பிரிக்க முடியாமல் துயருறும் போது

    வானம், என்றோ கேட்ட

    கானத்தை நினைத்துக்கொண்டு

    சற்றே சிலிர்க்க

    வயிரங்களெல்லாம் வார்த்தைகளாகலாம்

     

    இப்படித்தான்

    இப்படியேதான் நானும்……..

     

    வந்துவிடுவாய்தானே?

     

     

    Share
  • உன் கண்கள்!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (18)

    உன் கண்கள்!

    (பாடல்)

    10537115_733346410056383_5641177453017657101_n

    உன் கண்கள்! அதில் மலரும்

    என்னெஞ்சம்! அதில் சிரிக்கும்

    உன் கண்கள்! வாழ்க்கை இதே!

     

    தீபங்கள்! தினம்தினமும்

    தீ வேண்டும்! எனக்கென்றும்

    நீ வேண்டும்! நீதான் வேண்டும்!

     

    அருகினில் உருகுகிறேன்

    தொலைவினில் மருகுகிறேன்

    ஒருகணம் பலயுகமாய்

    உதிர்ந்துதிர்ந்து ஏங்குகிறேன்!  (உன் கண்கள்)

     

    காற்றோடு தவழ்ந்துவரும்

    கனவென்றன் பூநெஞ்சம்

    சொல்லாத கவிதை போலே

    சோதிக்கும் உன் பாதம்

     

    பாதத்தில் சேரும் வரை

    பனித்துளியும் பாரம்

    நில்லாமல் உன்னில் தீர

    என்றுவரும் நேரம்?

     

    ஊரில்லை! உயிரன்றிப்

    பேரில்லை! உறவன்றி

    வேறில்லை! விந்தையிதே!

     

    உன்வார்த்தை போதாது

    உன் மெளனம் தாங்காது

    இவையன்றி வேறேதும்

    என்னெஞ்சம் ஏங்காது!

     

    வாழாமல் வாழ்கின்றேன்

    வளராமல் கரைகின்றேன்

    உன்வாசல் ஓரத்தில்

    ஒரே கீதம் பாடுகிறேன்!

     

    நீயின்றேல் ஒருதுளியும்

    நானில்லை! ஒருதுளியும்

    நானிருந்தால் நீயில்லையே!

     

     

     

    Share
  • நீ சொல்லாதே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (17)

     

    நீ சொல்லாதே!

    {கேட்டு மகிழ சொடுக்குங்கள்மேலே}

     

    ஒரு

    19

    சுழலின் தவிர்க்கவொண்ணாச் சூழ்ச்சியும்

    ஒரு

    மழலையின் தானறியாத ஆட்சியும்

     

    சாமரம் வீச

     

    நீ

    நெருங்கி நெருங்கி வந்தபோதெல்லாம்

    வற்றிய என் உதடுகளை

    வரியோடும் உன் வசந்த இதழ்கள்

    பற்றிக்கொண்டுவிடும் என்று

    பகற்கனவு காணவில்லை

     

    புண்ணியன் அல்லன் நான் என்பது

    புரிந்தே இருக்கிறது எனக்கு

     

    ஆம்

    நினைக்கவில்லை

    நீ முத்தமிடுவாய் என்று

     

    ஆனால்

    நீ வந்து, மூச்சுப்பட நின்று

    நெருப்பை வீசுவாய் என்று

    நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை!

     

    எட்டி இருக்கச் சொல்

    எங்கேனும் போகச் சொல்

    ஏன், சாகச் சொல்

    ஏதும் கேட்காமல்

    ஏதும் காட்டாமல்

    செய்து முடிவேன் சேவகனாய்..

     

    ஆனால்—–

    உனக்குள் என்னையும்

    எனக்குள் உன்னையும்

    உருட்டி உருட்டிப் பார்க்கிறதே!

     

    உனக்கும் எனக்கும் நடுவில்

    உயிரை மண்ணாய்ப் பிசைகிறதே!

     

    உறக்கம் கனவு நினைவெல்லாம்

    ஊடுருவிப் புரட்டி எடுக்கிறதே!

     

    ஒன்றையும் வேண்டாமல்

    உயிரை அள்ளி அள்ளி இறைக்கிறதே!

     

    இதயத்தைத் தொட்டுச் சொல்

    இதையா காதலில்லை என்றாய்???

     

    என்-

    காதலை மறுத்துவிடு

    கவலையில்லை! செத்துவிடலாம்

     

    இதைக்

    காதலில்லை என்று மட்டும்

    கண்ணே! நீ சொல்லாதே!!

     

    அவமானத்திற்கு மரணம் கிடையாது

    அது நரகங்களின் தலைநகரம்………..

     

     

     

     

     

    Share
  • விழுப்புரம் சந்திப்பு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக    (16)

     

    விழுப்புரம் சந்திப்பு

     {பாடலைக் கேட்டு மகிழ}

    indian-couple-love-romantic-honeymoon-cool-picture

    விழுப்புரம் சந்திப்பு…..ம்..

    எப்போது நம் சந்திப்பு?

     

    இப்போதுதானே சந்தித்தோம் என்று

    மனித பாஷை பேசலாமா நீ?

    ஓ!

    முத்தங்களுக்கும் பட்டியல்?

     

    சந்தித்த போதெல்லாம்

    சிந்தித்துக்கொண்டே இருந்தோமே

    விதி மகிழ மகிழ

    பிரிவைப் பற்றி?

     

    சந்திக்க ஏங்குகிறோம்

    சந்தித்தால் உருகுகிறோம்

    சந்தித்தபின் மருகுகிறோம்

     

    சந்திக்கத்தான் பிரிகிறோமா

    பிரியத்தான் சந்திக்கிறோமா

     

    இந்த நெடும் பயணத்தில்

    இத்தனை சந்திப்புகள்

    இருப்பதெல்லாம்

     

    பிரிவும் சந்திப்பும்

    என்றேனும் ஓர்நாள்

    சமன்பெறும் என்ற நம்பிக்கையாலா?

     

    எனக்கென்னவோ இந்தப்

    பிரிவுப் பிடாரிதான் சந்திப்பு மோகினியாய்

    வித்தை காட்டுகிறாள் என்று தோன்றுகிறது

     

    எல்லோரும் இறங்கிவிடும்

    ஏதோவொரு சந்திப்பில்

    என்ன இருக்கப் போகிறது

    எனக்கும் உனக்கும்?

     

    என்றைக்குச் சந்தித்தோமோ

    அன்றைக்கே முழுமையாக

    இறக்கிவிட்டு விட்டோமே

    எல்லோரையும்!

     

    உனக்கென்ன தோன்றுகிறது?

    ஒய்யாரக் கழுத்தை ஒசித்து

    உயிரை உதட்டில் குவித்து

    மூச்சு நிற்கும்படி

    முத்தமிட்டு விட்டால்

    சங்கமத்தின் நிரந்தரத்தில்

    பிரிவு தொலைந்தே போய்

    சந்திப்பு நிலைக்குமென்று

    சிந்திக்கிறாயா?

     

    விழுப்புரம் விலகிவிட்டது

    வேண்டுமென்றால்

    சங்கிலியை இழுத்துவிட்டுத்

    தண்டவாளத்தின் நடுவே

    சற்றும் நழுவாமல்

    முற்றும் தழுவியபடி

    சந்திப்போமா?

    படத்திற்கு நன்றி

     

    Share
  • நந்தவனக் குயிலே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (15)

     

     

    நந்தவனக் குயிலே!

      (பாடல்)

    10294248_354612934692545_5491888087630846935_n

    நந்தவனக் குயிலே! சின்னப் பனித்துளியே!
    சின்னப் பனித்துளியில் சிலிர்க்கும் சித்திரப் புல்நுனியே!
    புல்லின் நுனிமுனையில் புன்னகைக்கும் ஒளியே!
    ஒளிமடி தேடும் ஒய்யார நிழலே!

    நிழல்தவழ்ந்துவரும் அந்த நீலநதிக்கரையே
    கரைமணல் பஞ்சில் காலைத் தழுவும் நிலவே!
    நிலவு நெகிழ்ந்திடும் நேசம் பொங்கிவரும் விழியே
    கொஞ்சம் விழியசைந்தால் நெஞ்சில் கொஞ்சும் நந்தவனமே!

    வானம் கொடுத்தவரம் வாணி வீணை தெறித்த ஸ்வரம்
    மோனக் குகையினிலே ஒருநாள் முளைத்த ஒளிமயம்
    தேனும் திணறும்விழி இன்பத் தென்றல் மயங்கும் மொழி
    ஊனும் உருகுதம்மா! இந்த உயிருக்கென்ன வழி?

    சின்னச்சின்ன விழிகள் பேசும் என்ன என்ன மொழிகள்!
    மொழியின் நடுவே ஏனோ மூடும் மர்மத் திரைகள்
    திரைநடுவினிலே வந்து திறக்கும் உதயங்கள்
    உதயக் கரங்களில் வந்து உருகும் இதயங்கள்

    பஞ்சுச் சிறகாக உன்னை நெஞ்சில் அணைத்திடவா?
    பட்டு மலரிதழில் உயிரைத் தொட்டு முத்தம் தரவா?
    கண்ணை இமைத்தாலும் கலங்கும் வண்ணத் திருக்குளமே
    ஓரத்தில் நின்றபடி உயிரால் வருடி மகிழவா?

    ஒன்றும் புரியவில்லை எந்தன் உள்ளம் உள்ளத்தில் இல்லை
    உள்ள உயிரொன்று உந்தன் உள்ளங் கையில் முல்லை
    என்று தொடங்கியதோ? நடுவில் ஏன் மறைந்ததுவோ?
    என்றும் தொடர்ந்திடுமோ? என்னென்ன செய்திடுமோ?

    Share
  • அதுவும் இதுவும்…

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (14)

     

     

    அதுவும் இதுவும்…

    {கேட்டு மகிழ இங்கே சொடுக்கவும்}

     

    2f525004326e8d13fa96ef6e2140a672-d68s40h
    அதுவோர் அழகிய சுனை
    இது ஏதோ ஒன்றின் முனை

    அது
    மடுவாய் இருக்கலாம்
    தோற்றப் பிழையாய் இருக்கலாம்
    சுனையாகவே கூட இருக்கலாம்

    இது
    மலையாய் இருக்கலாம், அதிலொரு
    மலராய் இருக்கலாம், ஏதோ ஒன்றின்
    முனையாகவே கூட இருக்கலாம்

    அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட்டது
    அதுவோ இதுவோ இல்லை
    யாரோ எதுவோ தெரியவில்லை

    ஓர்
    அந்திச் சிவப்பின் மந்திர மயக்கம்போல்
    அதீதமான அபாயத்தின் விளிம்புபோல்
    அபரிமிதமான லஹரியில்
    தன்வயமின்றித் தள்ளாடின
    இயல்பின் உச்சத்தில்
    எதுதான் சந்நிதியில்லை?

    மயக்கத்தில், அது
    மயக்கமென்று புரியாததால்
    தெளிவின் எதிர்ப்பதமே
    தெளிவென்று மார்தட்டும்.

    உலகமே தொலைந்துபோன இந்த
    உன்மத்தத்தில்
    ஊரேது? உறவேது?
    உயிர்தான் ஏது?

    எதற்கும் அப்பாற்பட்டதாய்
    அதுவும் இதுவும் எண்ணிக்கொண்டிருக்க
    ஓரத்தில் சாய்ந்தபடி
    ஒருவழிப்போக்கன் சொன்னான் :

    ’’அது சுனையல்ல
    ஆனந்தக் கடலின் முனை

    இது முனையல்ல
    அடங்காத கண்ணீரின் சுனை”

    Share
  • போய்விடாதே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (13)

     

    போய்விடாதே!

     {கேட்டு மகிழ சொடுக்குங்கள்}

    birds-cloud-girl-pretty-running-Favim.com-116014_large

    அம்மாடி!
    இனிமேலும் இந்த
    பூமியை விட்டுப் பறப்பதற்கு
    உந்தித் தவிக்க வேண்டாம்.

    கால்கள் பிசகுபோல் காணப்பட்டு
    வார்த்தை விழாத சந்தங்கள்போல்
    இறக்கைகளை விரித்துக்கொண்டு
    நாக்கு குழறிய பேச்சுபோல் புழுதி கிளப்பி நாணும்
    யத்தனத்தின் அருவருப்பு இத்தோடு தீர்ந்தது.

    இறகுகளைச் சிறகுகளாய் நம்பினேன்
    சொடுக்கி எடுத்த மீன்களின் செதில்கள்போல்
    உதிர்ந்து உதிர்ந்து அவை
    உயிரை உறுத்தின

    பறக்கவேண்டும் என்பது ஆசையல்ல
    பறக்க முடியாது என்னும் பொய்யைத்
    தாங்க முடியவில்லை
    சிறகுகளா பறப்பதற்குக் காரணம்?!

    பொருளைத் தாங்கி பொருளில் நின்று
    பொருளால் தொடப்படாமல் புன்னகைத்துக் கொள்ளும்
    அருளல்லவா வானம்!
    அதன் தயவல்லவா நான் பறப்பதும்
    பறக்காமல் மிதப்பதும்
    பூமியைப் புள்ளியாகப் பார்ப்பதும்
    காற்றின் இழைபிரித்துக் கானங்கள் பாடுவதும்!

    நிறைவின் உச்சத்தில்
    நீந்தாமல் நீந்தி நிலவுகின்றேன்
    எங்கிருந்தாலும் வானந்தானே என்னும்
    ஏமாற்று வேலைகள் நடக்காது
    நிலத்தில் ஏது நீலம்? நிர்மலம்?
    நீளும் விரிவு? நிம்மதி?

    ‘’ஓ! அப்படியென்றால் நானெதற்கு?’’
    என்று
    புன்னகைத்தபடி புன்னகை போலவே
    போய்விடாதே

    வானம் போதுமென்று
    வாய்விட்டுச் சொல்லிவிடுமா
    வானம்பாடி?

    எல்லாம் அடைந்துவிடலாம்
    எண்ணங்கள் நின்றுவிடலாம்
    ஏக்கங்கள் தொடரத்தானே செய்யும்?

    நீ
    வந்துசென்ற பின்னே அங்கே
    குந்தியிருக்கும் வாசத்தைப் போல
    என்
    பல்லவியைத் தொடர்ந்து
    பாதை வளைவில்
    எட்டிப் பார்க்கும் சரணத்தைப் போல….

    Share
  • காணவில்லை

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (12)

    காணவில்லை

    (கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே)

     

    images (2)
    சிட்டுக் குருவிகளைக் காணவில்லை என்று
    விசனத்தோடிருந்தார்கள்
    நான்மட்டும்
    கைகளை மடக்கிக் கழுத்தைப் பொருத்தி
    அண்ணாந்தபடி என்னுள்
    மல்லாந்திருந்ததைக் கண்டு
    நேயமற்றவன் என்று
    நெருங்கி விலகினார்கள்

    எப்படிச் சொல்வது…?

    ஒருநாள்
    எதையோ திறக்கப்போய்
    இதயம் திறந்துகொண்டபோது
    கூடமெங்கும் சிட்டுக் குருவிகளின்
    குதூகலம்.

    ஒரேபாட்டு, தன்னைத் தானே
    ஓயாமல் பாடிக்கொள்வதைப் போல
    எல்லாக் குருவிகளும்
    ஒரேமாதிரியாய்த்தான் இருக்கின்றன.

    எத்தனை இருக்கும்?
    எப்படித் தெரியும்??
    எழுத்துக் கூட்டியா பார்ப்பார்கள் மழலையை?

    ஒருவேளை
    மூச்சுவிடாமல் இங்குமங்கும் பறந்தபடி
    என்னவோ சொல்லிக்கொண்டே இருப்பதால்
    ஒன்றுதான் நூற்றுக்கணக்காய்த் தெரிகிறதா?

    இருக்கட்டும்
    இவைகளின்….இல்லை…இதன் தயவில்தான்
    இதயம் தட்டுப்பட்டது.
    இரவுபகலை அறவே காணோம்
    சிட்டுக் குருவிகளின் கீச்சுக்கீச்சே
    இதயத் துடிப்பாகிவிட்டது

    கணநேரம் அந்தக் கீச்சுக்கீச்சு நின்றால்
    அதே கூடத்தில் துளி இறகாய்
    நானே
    விழுந்திருக்கும் வினோதம் கண்டு
    மீண்டும் துவங்கும் கீச்சுக்கீச்சால்
    மீளவா போகிறது உயிர்?

    Share
  • சிட்டுக்குருவிக் கூட்டமே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (11)

     

    சிட்டுக்குருவிக் கூட்டமே!

    (பாடல்)

    south-indian-women-paintings-wallpaper

    சிட்டுக்குருவிக் கூட்டமே!

    சில்லுவண்டுச் சீட்டியே!

    சொட்டுச் சொட்டா எறங்கிவந்து தோளெத்தொட்டு மூச்சுப்பட்டு

    மொகவாயெ ஏந்தி என்ன

    முழுக்க முழுக்க மூழ்கடிக்கும் பரவசமே!

     

    பரவசமே! ஈசல்

    பரபரப்பே!

    படபடக்குற கண்ணுக்குள்ளெ பளபளக்குற மின்னலிலே

    கெறங்கிப்போன மனசக்கிள்ளிக்

    கிலுகிலுப்பை ஆட்டிக்கிட்டுச்

    சிரிப்பவளே சிரிப்பவளே சிரிப்பவளே

     

    மனசெப் பந்தாக்கி மதில்மேலே எறியாதே! அது

    மருதாணிக் கைக்குள்ளெ மறுபடியும் சேரும்வரெ

    மாருத்துடிக்க வெக்காதே!

    கனவெயும் நெனவெயும் கலக்கிப்போட்டுக் கொழப்பாதே!

    காலத்தெ நிறுத்திவச்சுக் காவடிச் சிந்து பாடாதே!

     

    உள்ளங்கையி ரேகையே! என்

    உசுரெக் குலுக்கும் ராகமே!

    மெள்ளவுள்ளெ வந்திடாமெ மினுக்கிக்கிட்டு மேடையேறி

    நீட்டிப் படுத்துகிட்டு

    கொலுசுக் காலு கிணுகிணுங்கும் ஒய்யாரியே!

     

    ஒய்யாரியே! அட என்

    உல்லாசமே!

    ஒண்ணும் மிஞ்சாமெ ஊரெவாரிச் சுருட்டிக்கிட்டு

    ஒண்ணுமே தெரியாமெ

    கண்ணக்கொட்டி எதிரெ நிக்குற கைவிலங்கே!

     

    வெள்ளத்துக்கே திடுதிப்புன்னு தாகம்வந்து சேருமா?

    விறுவிறுன்னு வீதியேறி வீட்டுக்கதவத் தட்டித்தட்டி

    ஏக்கத்தோடு நிக்குமா!

    கொள்ளைக் கூட்டம்நம்மெக் கும்பிடுபோட்டுப் பாக்குமா?

    கொடுக்க வந்ததெய்வம் பழெயகடனக் கேக்குமா?

     

    ஆலவூஞ்சல் ஆட்டமே! அட என்

    அந்தரங்கத் தோட்டமே!

    காலு தாளம் போடும்போது ககனம் கரகம் ஆடுதடி

    காத்துக்குள்ளே மூச்சாகி மூச்சுக்குள்ளே உசுராகி

     

    உசுருக்குள்ளே சிரிப்பவளே! என்னெ

    உருக்கி உருக்கி வளர்ப்பவளே!

    வருசம்மாசம் வாரமெல்லாம்

    வாசலோடு கோலமாச்சு

    வந்துசேர்ந்த ஒருகணந்தான்

    பூசணிப்பூ சிரிப்பாச்சு!

     

     

     

    Share
  • காதல் தலைநகரம்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (10)

    காதல் தலைநகரம்

     {கேட்டு மகிழ}

    10492257_262440010611850_2207399982510381694_n

    திருவரங்கம்

    பேதைமை செய்யும் பெரியவாகிய கண்களின்

    காதல் தலைநகரம்

     

    உண்ணும்போது மிடறு விழுங்கிக்கொள்ள

    தண்ணீர் கொஞ்சம் அருந்திக்கொள்வதுபோல்

    சாவகாசமாய், சற்றே நின்றது ரயில்

    அது

    அடுத்த கவளத்தை அள்ளிப் போட்டுக்கொள்ளுமுன்

    பதறி ஏறினர் முதிய தம்பதியர்

     

    மதர்ப்போடு நகர்கிறது ரயில், ஒரு

    மகாராணியின் பல்லக்கைப்போல

     

    நடைமேடையெங்கும்

    கறுத்த பெண்கள் கூவிச் செல்கிறார்கள்

    அவர்கள் கைகளில்

    நேற்றிரவு எதையும் பொருட்படுத்தாமல்

    நீ அலையாய்ச் சிரித்த சிரிப்புகள்

    மல்லிகைச் சரங்களாய்….

     

     

     

     

     

    Share
  • நான் பாடும் முன்னே

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (9)

     

    நான் பாடும் முன்னே

    (பாடல்)

     

    images
    நான் பாடும் முன்னே நீ பறவையாகிறாய்
    நான் தேடும் போதோ தொடு வானமாகிறாய்
    நான் வாடும்போதோ கன்னம் வருடும் தென்றலாகிறாய்
    இமை மூடும்போதோ உற்றுப்பார்க்கும் கண்களாகிறாய்

    நீ பாதையா நான் பயணமா
    நான் பயணமா நீ மலர்களா
    நீ மலர்களா நான் பரிதியா
    நான் பரிதியா நீ வானமா

    உயரே உயரே என்னை ஏற்றி உயரச் செல்லும் பெண்ணே
    உயிரின் நிலைமை முழுதும் மாற்றும் உலகம் காணாத கண்ணே
    மண்ணா விண்ணா சொல்லேன் கண்ணா (பாடும் முன்னே)

    இரு கண்களில் பல கனவுகள்
    பல கனவினில் சில காலைகள்
    சில காலையில் சுப வேளைகள்
    சுப வேளையில் வரும் பாடல்கள்

    பாடல் நடுவே பல்லவி மறந்து சரணம் தேடும் போது
    பனிச்சதங்கையில் பாரிஜாதங்கள் காதில் கேட்காது
    காதில் விழுந்தது போலே உன்முன் (பாடும் முன்னே)

    Share
  • தாலாட்டும் அன்பினிலே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (8)

     

    தாலாட்டும் அன்பினிலே

    (கேட்டு மகிழ)

    woman-poster-GO37

    தாலாட்டும் அன்பினிலே, நின்று
    தள்ளாடும் பூங்கொடியே! தென்றல்
    காலாட்டும் கீற்றினிலே, நீ
    கள்ளூறும் நிலவல்லவலோ!

    சேலாடும் உன் விழியில், நின்று
    நூலாடும் என்னுயிரே! என்னைத்
    தோளோடு நீ அணைத்தால், நான்
    தொல்லைக்குத் தொடுவானே!

    நானென்ன சொல்வேனம்மா? மெளன
    நாதங்கள் பொல்லாதம்மா! நீ
    தேனென்றபின் எனதே என்றபின், இன்னும்
    நீங்காத திரையென்னவோ? மனம்
    நில்லாமல் வலை பின்னவோ?

    தேனூறும் பூவிருக்க, மணம்
    திசையெங்கும் பாய்விரிக்க, இங்கு
    நானோடு நான் துன்பம் தானோடு தான், இதில்
    நாளென்ன பொழுதென்னவோ? என்று
    நான்மட்டும் வலைபின்னவோ?

    பேசாமல் வந்துவிடு! மறு
    பேச்சின்றித் தந்துவிடு! என்னை
    நானாக வாழவிடு, இல்லை
    நீயாக மாற்றிவிடு

     

    படத்திற்கு நன்றி

     

    Share
  • எப்படி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (7)

     

    எப்படி?

    {கேட்டு மகிழ} 

    images (1)

     

    எப்படி வந்தாய் உள்ளே?

    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க

    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க

    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி

    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து

    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

     

    எப்படி வந்தாய் உள்ளே?

    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே

    போதுமென்று புன்னகைக்கிறாயா?

    கன்னம் மேவும் மின்னலினாலே

    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

     

    எப்படி? ம்…எப்படி?

    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்

    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு

    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க

    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

     

    எப்படி? வேறெப்படி? ம்..?

    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்

    காலைப் பிடித்து சாதித்தாயா?

    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?

    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

     

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?

    ஊஹூம்…

    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?

    சாவகாசமாக அமர்ந்து

    சாகடித்த கதைகளை வரிவரியாய்

    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?

    ஓ!

    முற்றும் என்னை முடித்துவிட்டு

    முகத்தில் அதென்ன கோணல்?

    ஆ!

    வந்திருக்கிறார்களாம்!

    வரவேற்கவில்லையாமாம்!!

     

    அழைத்தோ அழைக்காமலோ

    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்

    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்

    அத்துமீறி வந்தவர்களுக்கு

    ஆரத்தி கேட்கிறதா?

    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு

    திவ்யப் பிரபந்தமா?!

     

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்

    நெஞ்சைப் பிசைகிறது…

     

    சரி சரி

    அந்த அறையில்

    மேசையில் இருக்கும் என்

    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

     

    Share