நீ சொல்லாதே!
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (17)
நீ சொல்லாதே!
{கேட்டு மகிழ சொடுக்குங்கள்மேலே}
ஒரு
சுழலின் தவிர்க்கவொண்ணாச் சூழ்ச்சியும்
ஒரு
மழலையின் தானறியாத ஆட்சியும்
சாமரம் வீச
நீ
நெருங்கி நெருங்கி வந்தபோதெல்லாம்
வற்றிய என் உதடுகளை
வரியோடும் உன் வசந்த இதழ்கள்
பற்றிக்கொண்டுவிடும் என்று
பகற்கனவு காணவில்லை
புண்ணியன் அல்லன் நான் என்பது
புரிந்தே இருக்கிறது எனக்கு
ஆம்
நினைக்கவில்லை
நீ முத்தமிடுவாய் என்று
ஆனால்
நீ வந்து, மூச்சுப்பட நின்று
நெருப்பை வீசுவாய் என்று
நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை!
எட்டி இருக்கச் சொல்
எங்கேனும் போகச் சொல்
ஏன், சாகச் சொல்
ஏதும் கேட்காமல்
ஏதும் காட்டாமல்
செய்து முடிவேன் சேவகனாய்..
ஆனால்—–
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
உருட்டி உருட்டிப் பார்க்கிறதே!
உனக்கும் எனக்கும் நடுவில்
உயிரை மண்ணாய்ப் பிசைகிறதே!
உறக்கம் கனவு நினைவெல்லாம்
ஊடுருவிப் புரட்டி எடுக்கிறதே!
ஒன்றையும் வேண்டாமல்
உயிரை அள்ளி அள்ளி இறைக்கிறதே!
இதயத்தைத் தொட்டுச் சொல்
இதையா காதலில்லை என்றாய்???
என்-
காதலை மறுத்துவிடு
கவலையில்லை! செத்துவிடலாம்
இதைக்
காதலில்லை என்று மட்டும்
கண்ணே! நீ சொல்லாதே!!
அவமானத்திற்கு மரணம் கிடையாது
அது நரகங்களின் தலைநகரம்………..

