இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (12)

காணவில்லை

(கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே)

 

images (2)
சிட்டுக் குருவிகளைக் காணவில்லை என்று
விசனத்தோடிருந்தார்கள்
நான்மட்டும்
கைகளை மடக்கிக் கழுத்தைப் பொருத்தி
அண்ணாந்தபடி என்னுள்
மல்லாந்திருந்ததைக் கண்டு
நேயமற்றவன் என்று
நெருங்கி விலகினார்கள்

எப்படிச் சொல்வது…?

ஒருநாள்
எதையோ திறக்கப்போய்
இதயம் திறந்துகொண்டபோது
கூடமெங்கும் சிட்டுக் குருவிகளின்
குதூகலம்.

ஒரேபாட்டு, தன்னைத் தானே
ஓயாமல் பாடிக்கொள்வதைப் போல
எல்லாக் குருவிகளும்
ஒரேமாதிரியாய்த்தான் இருக்கின்றன.

எத்தனை இருக்கும்?
எப்படித் தெரியும்??
எழுத்துக் கூட்டியா பார்ப்பார்கள் மழலையை?

ஒருவேளை
மூச்சுவிடாமல் இங்குமங்கும் பறந்தபடி
என்னவோ சொல்லிக்கொண்டே இருப்பதால்
ஒன்றுதான் நூற்றுக்கணக்காய்த் தெரிகிறதா?

இருக்கட்டும்
இவைகளின்….இல்லை…இதன் தயவில்தான்
இதயம் தட்டுப்பட்டது.
இரவுபகலை அறவே காணோம்
சிட்டுக் குருவிகளின் கீச்சுக்கீச்சே
இதயத் துடிப்பாகிவிட்டது

கணநேரம் அந்தக் கீச்சுக்கீச்சு நின்றால்
அதே கூடத்தில் துளி இறகாய்
நானே
விழுந்திருக்கும் வினோதம் கண்டு
மீண்டும் துவங்கும் கீச்சுக்கீச்சால்
மீளவா போகிறது உயிர்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.