Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • மக்கள் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!

    மக்கள் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈழத்தில் பிறந்தார். இன்னல் பல கண்டார். எதற்குமே இளைக்காமல் ஏற்றம் பல பெற்றார். இரக்கமே அவருள் எங்கும் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம்கொண்டார். இதயக் கனியானார்.

    வாழவைத்த தெய்வமானார். கலங்கரை விளக்கமானார்.எங்க வீட்டுப்  பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்குகிறார்.

    அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளும் நிரம்பியதாகும். அவர் தென்றலைத் தீண்டியதி ல்லை. தேன் தொட்டு நின்றதும் இல்லை.பஞ்சணையில் படுத்ததும் இல்லை. பசியாற உண்டதும் இல்லை.

    அரைவயிறு, கால் வயிறுதான், அவருக்கும் அவரது குடும்பத்துக்குமே கிடைத்தது.

    நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால் நாட்டை விட்டு நாடுவரும் நிலையங்கு தோன்றியது. தந்தையை இளம் வயதில் பறி கொடுத்துவிட்டு தாயுடனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார்.

    பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது. பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியை விட்டு நாடகத் துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது. வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது.

    எழுத்தாளர் அனுராத ரமணனின் தாத்தா குடிலன் ஆர். பாலசுப்பிரமணியன் எம் ஜி ஆரின் ஆசிரியராக இருந்தார். இவர் பிற்காலத்தில் குணசித்திர நடிகரானார்.

    நாடகத்தில் இருந்து படிப்படியாக திரைத்துறைக்குள் எம் ஜி ஆர் வந்து சேர்ந்தார். 1945 ல் ஜுபிடர் நிறுவனத்தார் எம்ஜிஆரை தமது படங்களான ராஜகுமாரி, அபிமன்யு, படங்கள் வாயிலாக கதாநாயகன் ஆக்கினார்கள்.

    1947 – 1948 காலப் பகுதியில் எம்ஜிஆருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ350 ஆகும்.

    இக்காலகட்டமானது எம்ஜிஆரின் முதல்காலகட்டம் எனக் கொள்ளலாம். சாதாரண எம்ஜிஆராக அவர் இருந்தாலும் அவருக்குள்ளேதான் முனேற வேண்டும் என்னும் என்னும் வேகமே காணப்பட்டது எனலாம். அவர் யாரையும் நோகடிக்கமாட்டார். முரண்டு பிடிக்கமாட்டார். மரியாதை கொடுப்பார். சற்றுக் கூச்சச் சுபாபம் உள்ளவராகவும் காணப்பட்டார். காந்தியச் சிந்தனை அவர்மனத்தில் அக்காலத்தில் பதிந்துகாணப்பட்டது. அவரிடம் கடவுள் நம்பிக்கையிருந்தது. உருத்திராட்சம் அணிந்திருந்தார். அவர் பிற்காலத்தில் திமுகவில் இணைந்திருந்தாலும் சில கொள்கைகளில் விடாப் பிடியாக இருந்தாலும்… கடவுள் நம்பிக்கையை பழித்ததோ, குறைகூறியதோ இல்லை என்றே சொல்லலாம்.

    “பக்தியுள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும்.சாமி கும்பிட வேண்டாம் என்று நான் சொல்லத் தயாரில்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர்கள். மோசடிகள் செய்ய முயலாதீர்கள்.என்பதே என் வேண்டு கோள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் என் கொள்கை” என்று 15/ 12/ 1962 ல் மருதமலை முருகன் கோவிலில் எம்ஜிஆர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

    எம்ஜிஆர் அவர்களின் ஸ்டூடியோவில் 14 வருடங்கள் பணிபுரிந்தவர் திருமதி ஜோதி பிரபா. எம்ஜிஆரின் கடவுள் நினைப்புப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார். எம்ஜிஆர் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது கேக்கின் மேல் வைக்கப்பட்ட மெழுகு திரியை அணைத்த பொழுது எம்ஜிஆர் அவர்கள்…… ” ஏற்றிய ஒளியைப் பிறந்த நாளன்று அணைப்பது தவறு…. கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்… நமக்குத் தேவை யில்லை. நமது பண்பாடு கோவிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்தையும் பெறவேண்டும்.. என்று கண்டித்தாக குறிப்பிடுகிறார்.

    எம்ஜிஆர் அவர்கள் தமது அம்மாவின் நினைவு நாளில் மெளன விரதம் இருப்பாராம். அவருடை செயினில் இருக்கும் அம்மாவின் படம் பதித்த டாலருக்கு தினமும் சந்தனம் வைத்து அதனை தனது பனியனுள் வைத்துக் கொள்ளுவாராம். கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டாராம் என்று அவரிடம் பணிபுரிந்த ஜோதி பிரபா சுட்டிக்காட்டுகிறார்.

    எம்ஜிஆர் அவர்களின் மனதில் ஆத்மீகச் சிந்தனை இருந்து கொண்டே வந்திருக் கிறது. ஆனால் வெளியே அதனை விளம்பரப்படுத்திட அவர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது. இந்த ஆத்மீக பலமே அவரைப் பல இன்னல்களிலும் இருந்து காப்பாற்றியது என்பதையும் மறுப்பதற்கில்லை எனலாம்.

    நடிகமணி டி.வி. நாராயணசாமி என்பரே எம்ஜிஆர் அவர்கள் திமுக சார்பானவராக மாறக்காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு. அண்ணா அவர்களோடு நெருங்கவும் திமுக காரனாக மாறவும் ஆன ஒரு சூழ்நிலைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு ஏற்பட்டது.இதனால் அரசியலிலும், சினிவாவிலும் செல்வாக்கு மிக்கவராக உருவாகத் தொடங்கினார்.

    எம்ஜிஆர் அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் மிகுந்த விருப்பும், மரியாதையும் இருந்தது. திமுகாவில் அவர் இணைந்தாலும் திமுகவின் கொள்கைகளில் பூரண ஐக்கியம் இருந்திருக்கிறதா என்பது சந்தேகமே! அவர் மனம் ஆஸ்த்திகத்தையே நாடி நின்றது எனலாம்.

    மதுரையில் எம்ஜிஆர் அவர்களுக்கு வளங்கப்பட்ட வெள்ளி வாளை மூகாம்பிகை அம்மனுக்கே வளங்கினார். காஞ்சிப் பெரியவரே எம் ஜிஆரை “இவர் நல்லமனுஷன்” என்று சொல்லியிருக்கிறார் என்றால் ஆஸ்த்திகத்தின் செல்வாக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நிறைந்தே இருந்திருக்கத்தானே வேண்டும்.

    முருகபக்தரான திருமுருக வாரியார் சுவாமிகளுக்கு திமுக தொண்டர்களால் தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்ட வேளை அவரையும் சமாதானம் செய்து…. அண்ணாவையும் சமாதானம் ஆக்கி.. வாரியார் சுவாமிகளைக் கொண்டே “பொன்மனச் செம்மல்” என்னும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர் என்றால் …. அங்கும் அடியாக இருந்தது ஆஸ்திக வேரே எனலாம்.அவரின் அந்த ஆஸ்த்திக நம்பிக்கைதான் அவரை அதியுயர் நிலைக் குக் கொண்டுசென்றிருக்கலாம் என்பது எனது எண்ணக்கிடக்கையாகும்.

    தேவருக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிகவும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்.தான் அரசியலில் பிரவேசித்துக் கட்சி தொடங்குவது, தேர்தலில் நிற்பது பற்றியெல்லாம் எம்ஜிஆர் சொன்ன போது…. எம்ஜிஆர் நல்லபடி வெற்றி பெறவேண்டு மென்று தேவர் மருதமலை முருகனுக்குக் காணிக்கையும் செலுத்தி அரிச்சனையும் செய்து , விபூதிப்பிரசாதத்துடன் எம் ஜி ஆரிடம் வந்து கொடுக்கிறார். எம் ஜி ஆரும் தேவர் கொடு த்த பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்லாமல்… அதனை வாங்கிக்கொள்கின்றார்.இவையெல்லாம் மக்கள் திலகத்தின் ஆஸ்த்திகத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா?

    பிராமணரை எதிர்ப்பது என்பது திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய பிரசாரமாகும். ஆனால் எம்ஜிஆர் கருத்து சற்று வித்தியாசமானதாகவே காணப்பட்டது. “முன்னேறிய ஜாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய கஷ்டங்களும் தீரவேண்டும்” என்று எம்ஜிஆர் கூறினார். ஆனால் அவரின் கட்சிக்கு இது ஒத்துவராத கொள்கை தான். கடும் எதிர்ப்பு வந்ததும் அதைப்பற்றிப் பேசாமலேயே இருந்துவிட்டார்.

    எம்ஜிஆர் ரசிகமன்றத்தையே முதன் முதலாக தோற்றுவிக்கக் காரணமாயிருந்ததே யார் என நினைக்கிறீர்கள்? கல்யாணம் என்னும் ஏழைப் பிராமண இளைஞனே !

    எம்ஜிஆர் மனத்தில் இவையெல்லாம் பிற்காலத்தில் பலமாற்றங்களுக்கும் சிந்தனைக்கும் வித்திட்டிருக்கலாம் அல்லவா?

    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் படப் பிடிப்போடு நின்று அதில் தீவிரம் காட்டத் தொடங்கினார். திராவிட நாடு பிரிவினையை அண்ணா அவர்கள் கைவிட்ட போது எம்ஜிஆர் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை. ஹிந்தி எதிர்ப்புக் காலத்தும் அவரின் ஈடுபாடு அவ்வளவு இருந்ததாகவும் தெரியவில்லை.

    திமுக கொள்கைகளைவிட …. அவர்களது பேச்சாற்றல், நல்ல தமிழ் எழுத்து, அதுமட்டுமல்லாமல் அந்தக்கட்சியில் தனக்குக் கிடைத்த வரவேற்பு, செல்வாக்குஇவைதான் எம்ஜிஆர் அவர்களைக் கவர்ந்திருந்தது என்பதே உண்மையாகும்.

    ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தனது செயல்களில் உற்சாகமாக உழைப்பதை மட்டும் விட்டுவிடாமலும் இருந்தார். அவரிடம் சில கொள்கைகள் இருந்தன. அவற்றை அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார். அதே வேளை தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக வற்புறுத்தவும் மாட்டார்.முன் கோபம் உள்ளவர். ஆனால் பின்னர் சரியான காரணத்தை எடுத்துக் கூறினால் சமாதானம் ஆகியும்விடுவார்.சந்தேகமும் அவரிடம் காணப்பட்டதாகப் பலகுறிப்புகள் வாயிலாக அறியமுடிகிறது. பலம்களும் பல்வீனங்களும்தான் மனித வாழ்க்கை. அதில் இருந்து யருமே விட்டுவிலகவே முடியாதல்லவா ?

    எம்ஜிஆர் படங்களுக்குப் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து எம்ஜிஆர் அவர்களின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாய் இருந்தவர் கவிஞ்ஞர் வாலி அவர்கள். அவர் ஸ்ரீரங்கத்துப் பிராமணர். நெற்றியில் விபூதி இல்லாமல் அவர்வருவதே இல்லை. ஒரு படப்பிடிப்பின் போது .. எம்ஜிஆர் அவர்கள் .. வாலியிடம் .. தான் சார்ந்தகட்சியினர் விபூதியணியும் வாலியை எப்படிப் பாட்டெழுத சமமதித்தாய்? எங்கள் கட்சியில் வேறு ஆட்களா இல்லை என்று கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். ஆகையால் இனி வரும்போது விபூதியை இட்டுக்கொள்ளாமல் வந்தால் நல்லது என்று எம்ஜிஆர் வாலியிடம் சொல்ல நேர்ந்தது.

    அதற்கு வாலி சொன்னார்-அப்படியா அண்ணா! நல்லது நீங்கள் வேறு பொருத்தமானவரை பார்த்து எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார். ஆனால் பொன்மனச் செம்மல் அவரைச் சமாதானப் படுத்தி உங்கள் விருப்பப்படியே விபூதியுடனே எழுதுங்கள் என்று சொன்னதாக.. வாலிஅவர்களே கூறியிருக்கிறா ர்கள்.

    தனது கருத்தைச் சொன்னார். ஆனால் மற்றவர் வருந்த மக்கள் திலகம் முயலவில்லை.இதனால் வாலியும் அவரும் நீண்டகாலம் கலையுலக் நண்பர்களாகவே இருந்ததை யாவரும் அறிவர். எம்ஜிஆர் இயல்பாகவே எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர். ஒழுக்கமாக வாழ்ந்தவர். ஏழ்மையை நன்கு அனுபவித்தவர். வீடு இல்லாமல், படிக்க முடியாமல், பணம் இல்லாமல், ஆதரவு இல்லாமல், வாழ்ந்து வந்தவர். இல்லாமை இல்லாமல் போக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். குடிசைகள் குடியிருக்கும் நல்லமனை ஆகவேண்டும். ஏழை என்று சொல்லும் நிலை இருக்கவே கூடாது. கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், மடமை ஒழிந்து மக்கள் விழிப்புப் பெறவேண்டும். என்றெல்லாம் எம்ஜிஆர் மனத்தில் பெரிய கனவு இருந்தது.

    அந்தக் கனவுகளை கண்முன்னே கொண்டுவந்து மக்களுக்கு வெளிச்சமாகக் காட்டி அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்றுவிரும்பினார்.அதற்கு அவர் கையில் எடுத்த உத்திதான் தமிழ்ச் சினிமா.

    எப்படி எப்படி எல்லாம் கனவுகண்டாரோ அப்படியே அதே பாத்திரமாகவே சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் தோன்றினார். வெற்றியும் கண்டார். அந்த வெற்றிதான் அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரி பதவியைத் தேடிக் கொடுத்தது. உயர், மத்தியதர, மக்களை இலக்காகக் கொள்ளாமல்… தொழிலாளர்கள், விவசாயமக்கள், கீழ், மத்திய தரத்தினரை தனது இலக்காகாக் கொண்டு… ஏழைபங்காளனாக, வீரனாக, நீதியை நிலை நாட்டுபவ னாக சமதர்மவாதியாக, என்று .. நல்ல குணமுடைய, யாவரும் விரும்பும் பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து… அதற்கு ஏற்ப கதை , வசனம் ,பாடல்கள்காட்சிகள் அமைத்து எம்ஜிஆர் மக்கள் மனத்தில் குடியேறி நின்றார்.

    எம்ஜிஆர் அவர்களின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனித மேல் நிலைப் பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதியவைக்கப் பெற்றது.அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவரகவே அவர் போற்றப்பட்டார்.

    இதனால் தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படி நிலையினர் இடையே அவர் ஒரு புருஷராகவே போற்றப்பட்டார்.தம் நிலையிலுள்ள ஒருவர் மேல் நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் .. அச் சமூக மட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.

    இதனால் தன்னம்பிக்கையும், சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையும் உள்ள ஓர் இளைஞ்ஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது எனலாம். எம்ஜிஆர் தனது கவர்ச்சியின் தளமாக … தமிழ் பற்றிய நிலைப்பாட்டினைக் கொள் ளவில்லை. இன்றும்கூட கலைஞ்ஞர் கருணாநிதியோடு தொடர்புறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்ஜிஆர் அவர்க ளொடு பொருத்திப் பார்க்கப்படுவதில்லை. எம்ஜிஆர் அவர்களுடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதனாக வரவேண்டும் என்பது பற்றியதாகாவே காணப்பட்டது.

    இன்று எம்ஜிஆர் அவர்கள் இல்லாத நிலையிற்கூட.. நினைத்துப் பார்க்கும்பொழுது… அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனலாம்.

    எம்ஜிஆர் அவர்களை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது… அதனைத் தளமாகாக் கொண்டு வளர்ந்து.. தனக்கென ஓரிடத்தினை வகுத்துக் கொண்டார் என்றே கூறல் வேண்டும். மேலும் அண்ணா, கலைஞ்ஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்றே கொள்ளல் வேண்டும்.

    அண்ணாவின் பாசறையில் வளர்ந்தாலும் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவிடம் இருந்த நல்லகுணங்களையே எடுத்துக்கொண்டார். தனக்கென உள்ளவற்றைப் பறிகொடுக்கவிரும்பவில்லை. சரியெனப் பட்டதை சமயத்தில் வெளிப்படுத்தித் தன்னுடைய தனியியல்பையும் அவர் வெளிப்படுத்தத் தவறியதும் இல்லை. எம்ஜிஆர் அவர்கள் எம்ஜிஆர் ஆகவே இருக்க விரும்புகிறார் என்பதை பேரறிஞர் அண்ணாவும் அறிந்து வைந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    நீதியை, நியாயத்தை, விட்டுவிட எம்ஜிஆர் விரும்பவில்லை. நீதியும் நியாயமும் எடுபடா நிலையில்த்தான் அவருக்கும் ஏனையோருக்கும் கருத்து மோதல் வந்து பிரியும் நிலை ஏற்பட்டது. அந்த நேர்மைதான் அவரை மக்கள் மனத்தில் என்றும் மக்கள் திலகம் ஆக்கியது.

    தமிழ்ச் சினிமாவில், அரசியலில், தனிப்பட்ட நடைமுறையில் எல்லாம் எம்ஜிஆர் அவர்களை ஒரு காலபுஷன் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல நண்பனாக இருந்துள்ளார் நல்ல நடிகனாக இருந்துள்ளார். சிறந்த கொடைவள்ளலாக விளங்கியுள்ளார். கடின உழைப்பாளியாகவும் இருந்துள்ளார். சிறந்த தொண்டனாகவும் இருந்துள்ளார். அதேவேளை நல்ல அரசியல் ஆட்சியாளனாகவும் விளங்கியுள்ளார்.

    எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவேளையில் பல அருமையான பணிகளை எல்லாம் ஆற்றியிருக்கி ன்றார். இலவசங்கள் பலவற்றை ஈந்து எல்லோர் மனங்களிலும் மன்னாதி மன்னனானார்.

    மதுவிலக்கை 1984ல் அமுலுக்குக் கொண்டுவந்தார். தமிழர் அல்லாதவர் எம்ஜிஆர் என்றும் … அவர் ஒரு மலையாளி என்றும் பிரசாரம் செய்யப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது பின் கண்டறியப்பட்டது. எம்ஜிஆர் அவர்களது காலத்திலேதான் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கம் நிகழ்ந்தது. எம்ஜிஆர் அவர்கள் தனது சினிமாவில் எதையெல்லாம் காணவிளைந்தாரே அவற்றை நிறைவேற்றவே எண்ணம் கொண்டு உழைத்தார்.

    அவர் பட்டப்படிப்புப் படித்தவர் அல்ல. ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று கனவும் கண்டார். அதற்கான வழிவகைகளை தன் ஆட்சியிலும் ஏற்படுதிக்கொடுத்தார். அவரின் உதவியினால் படித்து முன்னேறி யவர்கள் பலபேர். அவர்கள் எல்லாம் அவரை இன்றும் தெய்வமாகவே போற்றுகின்றனர்.

    அவரின் உயர்வுக்கும் பெருமைக்கும் காரணம் அவரது வள்ளல் தன்மை என்பதை எவருமே ஏற்றுக்கொள் ளுவார்கள். கலைஞர் அவர்கள் தனது குடுப்பத்தைப் பார்ப்பார். எம்ஜிஆர் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப் பதையே நினைப்பார். தனக்கென எதையுமே சேர்த்துவைக்கும் நிலை எம்ஜிஆர் அவர்களிடம் இருக்கவில்லை. அவரது கைகள் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள். கலியுகக் கர்ணன் என்றால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப்பொருந்தும் எனலாம்.

    படமுதலாளிகள், பட இயக்குனர்கள், சகநடிகர்கள், படத்தொழிலாளர்கள், உதவியென நாடிவருபவர்கள் யாவ ருக்கும் வளங்கிய வள்ளலாக எம்ஜிஆர் அவர்கள்விளங்கினார். அப்படி ஒருவரை இன்று காண்பது அரிது என்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வர்கள்.

    ஈழத்தமிழரைக் காப்பாற்ற தன்னால் இயன்றரை அதாவது உயிரிருக்கும்வரை எண்ணியவர் எம்ஜிஆர் அவர்கள். பிரபாகரனை தனது மகனாக எண்ணி கோடி கோடியாக தனது சொந்தப் பணத்தைக் கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர் அவர்கள். தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ மனத்தாலே ஆசைப்பட்டவர் மகோன்னத மாம னிதர் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள். அவரின் பிரிவால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்தை விடப் பலமடங்கு புலம்பிப் புரண்டவர்கள் ஈழத்துத் தமிழர்கள் ஆவர்.அந்த அளவுக்கு மக்கள் திலகம் ஈழத்துத் தமிழர்களின் இதயதெய்வமாக விளங்கினார்.

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.

    நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடி நடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக் காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம். அதுமட்டு மல்ல.. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும்?

    குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும்.. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை. “நான் செத்துப் பிழைச்சவன்டா” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே” என்று எம்மை யெல்லாம் உற்சாகப் படுத்தி “நாளை நமதே இந்த நாளும் நமதே” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் நாடோடி மன்னனாகவும் கண்டோம் சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” “ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார் அந்த “இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா? அவர்தான் மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டு கொண்டு இருக்கிறார்!

    Share
  • மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்!

    மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா. 

    மங்கையர்கள் கூடுகிறார் மனமுருகப் பாடுகிறார்
    பொங்கிவரும் பக்தியினால் புலருமுன்னே எழும்புகிறார்
    எழும்பாத மங்கையரை எழுந்துவர வேண்டுகிறார்
    எம்பிரான் திறமுரைத்து எல்லோரும் பாடுகிறார்

    ஆதியொடு அந்தமும் ஆண்டவனே என்கின்றார்
    மாலறியா நான்முகனும் மலைக்கநிற்பா னென்கின்றார்
    பரஞ்சோதி என்கின்றார் பருங்கருணை யென்கின்றார்
    எழுந்திருந்து வந்திடுவீர் ஈசன்புகழ் பாடிடுவோம்

    முத்தன்ன வெண்ணகையீர் முகமகமலர்ந்து வந்திடுவீர்
    அத்தன் ஆனந்தன் அவன்புகழைப் பாடிடுவோம்
    சித்தம் அழகுடையீர் சிவனடியைப் பரவிடுவோம்
    முத்தத்தில் நிற்கின்றோம் முகமலர்ந்து வாருங்கள்

    விண்ணாகி நிற்கின்றான் மண்ணாகி நிற்கின்றான்
    வேதாமாய் நாதமாய் வியாபித்தும் விரிந்துள்ளான்
    கண்ணார் அமுதமுமாய் காணுகிறான் கண்ணுதலான்
    காலையிலே நீராடிக் கழல்பணிவோம் எழுந்திடுவீர்

    சிவன்புகழைப் பாடுகிறோம் செவியதனைக் கேட்கலையோ
    அவன்புகழைக் கேட்காத அச்செவியும் நற்செவியோ
    வன்செவியை வைத்திருக்கும் மாதரசே எழுந்திடுவாய்
    மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்

    பகலிரவு எல்லாமே பரஞ்சோதி நினைப்பென்பாய்
    படுக்கையினை அணைத்தபடி படுத்திருக்கும் மாயமென்ன
    நேசமென்பாய் பாசமென்பாய் நினைப்பெல்லாம் இறையென்பாய்
    எழுந்தோடு வந்திடுவாய் ஏத்திடுவோம் இறைநாமம்

    தித்திக்கப் பேசினாய் திரும்பவும் உறங்குகின்றாய்
    வண்ணக் கிளிமொழியார் வந்திட்டோம் வாசலுக்கு
    கண்ணைத் துயின்று காலத்தைப் போக்காதே
    கண்ணுக் கினியானைப் பாடிடுவோம் வந்திடுவாய்

    கோழிகூவும் சத்தமும் குருகுகளின் சத்தமும்
    காதினிக்குக் கேட்கலையா காலையென்று தெரியலையா
    ஊழி முதல்வனாய் உயர்ந்துதிருக்கும் பரம்பொருளை
    உணர்வுடனே பாடுகிறோம் உடனெழுந்து வந்திடுவாய்

    பெருந்துயரைத் தீர்க்கும் பரம்பொருளைப் பாடுகிறோம்
    பரம்பொருளே கடைத்தேற்றும் தீர்த்தமாய் ஆகியுள்ளான்
    அவன்புகழைச் சேர்ந்திருந்து அனைவருமே பாடிப்பாடி
    ஆடிடுவோம் நீர்நிலையில் அமைந்திடுமே நல்வாழ்வு

    அப்பனைப் பாடுவோம் அம்மையையைப் பாடுவோம்
    அருந்திறத்தைப் பாடுவோம் அருங்கலைத்தை பாடுவோம்
    அறியாமை போயகல அனைவருமே சேர்ந்தொன்றாய்
    அதிகாலை நீராடி அகமெண்ணிப் பாடிடுவோம்

    ஆணாகிப் பெண்ணாகி அலியாக நிற்கின்றான்
    அனைத்துக்கும் காரணமாய் ஆகியும் இருக்கின்றான்
    அண்ணா மலையான் அருள்சுரக்கும் ஊற்றாவான்
    அவன்புகழைப் பாடிநின்று அனைவரும் நீராடிடுவோம்

    வாதவூர்ப் பிறந்தார் மணிமணியாத் தமிழ்கொண்டு
    பேரறிவாம் பெரும்பொருளை பாடுகிறார் பக்தியுடன்
    மார்கழியில் நீராட மங்கையர்கள் அழைக்கவென
    திருவெம்பாப் பாட்டாக தித்திப்பாய் வழங்கியுள்ளார்

    அதிகாலை வேளையிலே அனைவருமே எழுந்திருந்து
    அரன்நாமம் அகமெண்ணி ஆடிடுவோம் நீர்நிலையில்
    நீர்நிலையில் ஆடுகையில் நினைவெல்லாம் நிமலனிடம்
    நிறைந்திருக்க வேண்டுகிறார் வாதவூர்ப் பெருமகனார்

    மார்கழியை மனமிருத்தி ஆண்டாளும் வேண்டுகிறாள்
    மார்கழியின் மகத்துவத்தை மனமிருத்தப் பாடுகிறாள்
    சைவமும் வைணமும் சங்கமிக்கும் காலமாய்
    மார்கழியை ஆக்கிவிட்டார் அடியார்கள் இருவருமே

    திருப்பாவை திருவெம்பாவை திவ்வியமாய் இருக்கிறது
    திருவருளை மனமிருத்த திருவமுதாய் வாய்த்திருக்கு
    ஏலோரெம் பாவாய் இதயத்தில் அமர்கிறது
    எல்லோரும் இறையெண்ணி இதையோதி இருந்திடுவோம்

    Share
  • நாவலர் பெருமான், காலத்தின் குரலாய் நிற்கின்றார்

    நாவலர் பெருமான், காலத்தின் குரலாய் நிற்கின்றார்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    பக்தி இயக்கத்தின் முதற்குரலாய் தமிழ் உலகில் ஒலித்த குரல், ஒரு பெண்மணியின் குரல். அவர்தான் காரைக்கால் தந்த பெருமாட்டிதவப் புதல்வி காரைக்கால் அம்மையார் ஆவர்.

    இவர் சைவ பக்தி இயக்கத்தின் எழுஞாயிறாய் – பின்னர் வந்த அடியார்கள் அனைவருக்குமே ஆதாரமான குரலாய் விளங்குகிறார் எனலாம். சைவத் திருமுறைகளின் தோற்றத்தின் குரலாயும் நிற்கின்றார். இவர் சைவத்தைக் காத்திடக் கையில் எடுத்தது அமிர்தமாம் தமிழ் மொழியை. தமிழ் மொழியில் – அற்புதத் திருவந்தாதிதிரவிரட்டை மணிமாலை,திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகியவற்றை அளித்து ஆன்மீகக் குரலாய் ஒலித்து நிற்கிறார். இவரின் பின்னர் வந்த அடியார்கள் பலரும்அம்மையாரைப் பின்பற்றி இறைபுகழ் பரப்புவதில் தங்களின் குரலை ஒலித்து நிற்கிறார்கள்.

    ஆழ்வார்கள் வந்தார்கள். ஆளுடைய பிள்ளையார் வந்தார். அப்பர் வந்தார். ஆலால சுந்தரர் வந்தார். வாதவூர் வண்டும் வந்ததது. இவர்கள் அனைவரின் குரல்களும் தமி ழில் சைவத்தை நிலை நாட்டிட ஓங்கி ஒலித்து நின்றன எனலாம். இந்தக் குரல்கள் ஒலித்த காலம் வேறு. அந்தக்காலச் சூழலும் வேறு. அவர்களின் குரலில் காணப்பட்ட தத்துவங்களும் வேறு என்றுதான் கருதிட வேண்டும். அவர்கள் அனைவருமே அந்தக் கால தமிழ் இலக்கியத்தின் போக்கினை மனமிருத்தி பாடல்களை ஊடகமாக கொண்டே  தமது குரலை வெளிப்படுத்தும் கட்டாயம் காணப்பட்டது. ஏனெனில் தமிழ் இலக்கியத்தை ஆட்கொண்டு இருந்த வடிவம் பாட்டு அல்லது செய்யுள் வடிவமே யாகும்.

    காலம் மாறுகிறது. கோலமும் மாறுகிறது.சமூகத்தின் சிந்தனையும் மாறுகிறது. ஆனால் ஆன்மீகம் என்பது மட்டும் என்றுமே மாறிவிட மாட்டது. காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப கருத்து மோதல்களும்பிற மோதல்களும் பெருகுவது மட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே அமைந்துவிடும். அத்தகைய வேளையில் சமயம் தளரும். சமய தத்துவங்கள் கேள்விக்குறி யாக்கப்படும். அன்னிய சக்திகளால் – மொழியும் சமயமுமே கேலிக்கு உரியதாக ஆகும் நிலையும் ஏற்பட்டு விடலாம். அப்படியான நிலை தோன்றும் வேளை – அந்த அந்தகார இருளில் சிக்கித்தவிக்கும் மக்களைசமுதாயத்தைக் காப்பாற்ற ஒரு குரல் கட்டாயம் தேவைப்படுகிறது. அப்படியான ஒரு தைரியம் வாய்ந்த தகுதியான குரலை ஓங்கி ஒலிக்க வைப்பதற்கு ஒருவரை ஆண்டவன் கட்டாயம் அனுப்பியே வைப்பான், அப்படி அனுப்பி வைக்கப்படு பவர் காலத்தின் குரலாய் வரலாற்றில் இடம் பிடித்தே நிற்பார். அப்படி “காலத்தின் குரலாய்” ஆகி நிற்பவர்தான் நல்லை நகர் தந்த நாவலர் பெருமான் ஆவர்.

    அன்னியரான ஆங்கிலேயர் ஆதிக்கம்.அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களின் ஆதரவுடன் அன்னிய மதமான கிறித்தவம் பரப்பப்படுகிறது. மதத்தைப் பரப்புவதற்கு அரசாங்கமே பக்கத்துணையாய்பணமும் கொடுக்கிறது. பாதுகாப்பும் கொடுக்கிறது. சலுகைகளைக் காட்டி, கிறித்தவ சபையினரும் அதன் மதபோதகர்களும் சைவர்களை மதமாற்றம் செய்வதில் தீவிரமாய் ஈடுபடுகின்றனர். சலுகைகளைக் கண்டவர்கள் சலனப்படுகிறார்கள். சொந்தச் சொத்தான சைவத்தை மறக்கிறார்கள். கிடைத்த அற்பச் சலுகைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளுகிறார்கள். என்றாலும் அவர்கள் மனத்தில் தங்களின் சமயம் ஒட்டிக்கொண்டிருப்பதை அகற்றிடவே முடியவில்லை. அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் திரிசங்கு நிலையிலை பலர் இருந்தார்கள் என்பதை பல செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

    நாவலர் பெருமான் பாரம்பரியமிக்க சைவக்குடும்பத்தில் சைவச் சூழலில் பிறந்தவர். அவர் பிறந்த இடமே கோவில் அருகில் இருக்கும் இடமாகும். திருநீறு பூசி சிவனைத் தியானிக்கும் குடும்பந்தான் நாவரின் குடும்பம். நமச்சிவாய என்னும் நாமமே நம்மை என்றும் காத்திடும் என்னும் அசையா நம்பிக்கை கொண்ட குடும்பந்தான் நாவலர் குடும்பம். ஆசார அனுட்டாங்களை அனுட்டித்து சைவத்தை உயிராக எண்ணிய குடும் பந்தான் நாவலர் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்ததால் நாவலரின் உணர் வெல் லாம் சிவனும்சைவமுமே நிறைந்து காணப்பட்டது. அதனால் அவர் சைவத் தைக் காத்திடும் குரலாய் அந்தக் காலத்தில் விளங்கும் கட்டாயம் ஏற்பட்டது.

    திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழை முறையாகக் கற்றார். இலக்கியம் கற்றார். இலக்கணம் கற்றார். புராண இதிகாசங்களை எல்லாம் ஐயந்திரிபறக் கற்றார். அந்தக்கால சூழலுக்கு அமையபெற்றவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆங்கிலக் கல்வியைப் படிக்க பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆங்கிலக் கல்வியைக் கற்றால்த்தான் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்னும் நிலை மேலோங்கிக் காணப்பட்ட காலம் அது. தங்கள் பிள்ளை படித்து பெரிய பதவியில் அமரவேண்டும் என்று நாவலர் பெற்றாரும் எண்ணங் கொண்டிருந்தனர், ஆனால் இறைவன் திருவுள்ளமே வேறாக, மாறாகஅமைந்தது. இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியாய் விளங்கும் கல்லூரி யில்தான் நாவவர் ஆங்கிலக் கல்வியை மேற்கொண்டார்.

    சைவமும் சிவமும் உள்ளத்தில் நிறைந்திருக்க, கிறித்தவப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிலை நாவலருக்கு ஏற்பட்டது. ஆங்கிலத்தை நன்றாகவே கற்றார். பள்ளியில் இருந்த பார்சிவல் பாதிரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டார். நாவலரின் தமிழ் மொழி ஆற்றலைக் கண்டு வியந்தார். அத்துடன் தங்களின் மொழியான ஆங்கிலத்தின் ஆற்றல் கண்டும் நாவலர்மீது தனிப்பட்ட பற்றும் பாசமும் கொண்டார் பார்சிவல் பாதிரியார் அவர்கள்.. அந்த பற்றினால் விவிலியத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பாரிய பொறுப்பினை வழங்கினார். நாவலரும் அப்பணியினை யாவரும் பாராட்டும் வகையில் செய்து முடித்தார். சைவத்தை மனம் நிறைத்த நாவலர் விவிலியத்தை எப்படி மொழி பெயர்க்க ஒப்புக்கொண்டார் என்பது ஒரு பெரும் புதிராகவே இருக்கிறதல்லவா! வேதங்களை வகைப்படுத்தி அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மாக்ஸ் முல்லர் என்னும் ஆங்கிலேய கிறித்தவராவர். திருவாசகத்தைக் கையிலெ டுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண, ஜி.யூ, போப் அவர்கள். இவர் தன்னை போப்பையர் என்று அழைத்ததாக அறிகின்றோம். ஆனால் அவர்கள் எவருமே தங்கள் மதத்தை விட்டு மற்றய மதத்துக்கு மாறவில்லை என்பது நோக்கத்தக்கது. அந்த வழியில்த்தான் நாவலர் பெருமானும் தன்னுடைய குருவின் சொற்களுக்கு மதிப்புக் கொடுக்கவே விவிலிய மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் அல்லவா ! மொழி பெயர்த்த நிலையில் நின்றுவிடுகிறார். சைவம்தான் அவரின் உணர்வுள் ஊறி இருந்தது.

    விவிலியத்தை மொழி பெயர்த்தபடியால் கிறித்தவம் பற்றிய நுட்பங்களை நாவலர் நன்கு தெளிவாகவே அறியும் வாய்ப்புக் கிட்டியது. இதனால் எதிர் வாதமிட வந்த அன்னிய மத போதகர்கள் வாய் பேசாது மெள்னியாய் ஆக்கிடும் வகையில் அவரின் குரல் ஓங்கி ஒலிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சைவத் தையும் நன்கறிந்திருந்தார். கிறித்தவத்வத்தையும் உள்நுழைந்து அறிந்திருந்தார். இதனால் நாவலர் பெருமானின் குரல் அக்காலத்தில் வலிமைமிக்க குரலாய், மாற்று மதத்தினருக்குச் சிம்மக்குரலாய் அமைந்தது என்பதை மறுத்துரைத்துவிட முடியாது எனலாம்.

    நல்லவை எங்கிருந்தாலும் அதனை நாவலர் உள்வாங்கினார். அன்னிய மத போதகர்கள் தங்கள் மதத்தைப் பற்றி நல்ல அறிவு பெற்றிருந்தனர். தங்களின் மத த்தைப் பரப்புவதற்கு தேவாலயங்களைப் பயன்படுத்தி – தங்கள் மதம் தொடர்பான விளக்கங்களைத் தெளிவாகப் பிரசங்கம் மூலம் செய்தார்கள். இந்த நடை முறை நாவ லர் உள்ளத்துள் பதிந்து விட்டது. அன்னிய மதத்தார் இப்படிச் செய்வதால் பாமரமக்கள் அவர்கள் பக்கம் பார்ப்பதை அவர் உற்றுக் கவனித்தார். சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் மத்தியில் காணப்பட்ட நிலைமைகள் நாவலருக்கு ஒவ்வாததாய் அமைந்தது.

    கிறித்தவ பாதிரிமாரிடம் நிறைந்து காணபட்ட கல்வி அறிவு – சைவசமயக் குரு மாரிடம் காணப்படாமையினைப் பொறுக்க இயலா நிலையில்  நாவலரின் குரல் ஓங்கி ஒலித்துக் கண்டித்தே நின்றது. சைவத்துக்குப் புறம்பான நிகழ்வுகள் கோவில் களில் நிகழும் பொழுது நாவலரின் குரல் கோபத்துடன் எழுந்தே ஒலித்தது. சைவ ஆசாரங்கள் நிலை தளரும் பொழுது அவரின் குரல் ஆணி அடித்தாற் போலவே எங்கும் ஒலித்து நின்றது. கோவில்களில் பூசை செய்து நின்ற அந்தணக் குருமாரையும் அவரின் குரல் விட்டு வைக்கவே இல்லை எனலாம். “யாழ்ப்பாணச் சமயநிலை” என்னும் நூல் நாவலரின் அக்காலக் குரலாய் அமைந்தது என்பது நோக்கத்தக்க தேயாகும்.

    சைவத்தின் கருவூலங்களான புராணங்களை, திருமுறைகளை யாவரும் அறிய வேண்டும். அத்துடன் யாவர் உள்ளத்திலும் அமர வேண்டும் என்னும் எண்ணம் நாவலரிடம் நிறைந்தே காணப்பட்டது. ஆனால் அக்காலச் சூழலில் பாமரமக்கள் பலர் இவைகளை அறியாதவர்களாகவும், விளங்காதவர்களாகவுமே காணப்பட்டார்கள். இந்த நிலையில் இருந்தவர்களிடையே – தம்முடைய பிரசங்கங்களால் அன்னியர்கள் மதமாற்ற முயற்சியை மேற்கொள்ளுவது இலகுவாய் அமைந்ததை நாவலர் கண்ணுற்றார். கண்ணுற்றவர் உள்ளம் கலங்கியது. இப்படியே விட்டால் சைவம் என்னும் பெயரே இல்லாமற் போனாலும் போய்விடுமோ என்று கவலைப்பட்டார். கவலைப்பட்ட நாவலர் கவலைப்பட்டுக் கொண்டு இருந்துவிடாமல் – படிப்பறியாத பாமர்களை மனங்கொண்டும், பேதலித்து நிற்பாரை மனங்கொண்டும் – வண்ணார் பண்ணைச் சிவன் கோவிலை மையமாக்கி தன்னுடைய உள்ளத்துணர்வுகளைச் சைவப்பிரசங்கமாய் தொடங்கினார். இங்கு புராணங்கள். இதிகாசங்கள். திருமுறைகள், சைவ நடை முறைகள் அத்தனையும் நாட்கள் தோறும், வாரந் தோறும், மாதந்தோறும் காலத்தின் குரலாய் நாவலர் பெருமானிடம் இருந்து வெளிப்பட்டு நின்றது.

    கந்தபுராண கலாசாரம் என்னும் கருத்தே நாவலரின் உள்ளத்தின் உன்னதமான குரலாகும். நாவலர் என்னும் பெருமகன் மட்டும் அந்தக்காலத்தில் பிறந்திராவிட்டால் – அவரின் குரல் சைவமாய், தமிழாய், நல்லொழுக்கமாய், ஓங்கி ஒலித்திருக்கா விட்டால் அக்காலச் சூழலினால் அத்தனையும் எங்கேயோ ஓடி மறைந்திருக்கும். ஆனால் நாவலரின் குரலோ  “காலத்தின் குரலாய்” ஓங்கி ஒலித்தே நின்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். அதனை வலியுறுத்திட நல்ல தொரு சான்றாக வந்து அமைந்ததுதான் இப்பாடல்.

    நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
    சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
    ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
    ஆத்தனறி வெங்கே அறை

    சைவத்தைக் காத்திட, தமிழைக் காத்திட, சமூக ஒழுக்கத்தைக் காத்திட – நாவலர் இல்லறத்தையே ஒதிக்கி சமூக ஞானியாய், சமய ஞானியாய், மொழியில் தத்துவ த்தில் ஞானியாய் ஆகிநின்றார். கல்வியில் கால் பதித்தார்.கடமையில் கால் பதித்தார். கண்ணியத்தில் கால்பதித்தார். கடவுள் கொள்கையில் கால் பதித்தார். தர்மத்தில் கால் பதிந்தார். சன்மார்க்க வழி நடந்தார். எந்தத்துறையினை எடுத்தாலும் அங்கெல்லாம் நாவலரின் பொறுப்பான குரலே ஓங்கி ஒலித்து நின்றது. அவரின் குரல் ஒலித்த இடமெல்லாம் குறைகள் என்னும் இருள் ஓடியே ஒழிந்தது. நாட்டின் தேசியப் பெருமக னாய் நாவலர் பெருமான் கொண்டாடிப் போற்றப்பட்டார். அப்படி அவர் போற்றப்படுகிறார் என்றால் அவரின் குரல் “காலத்தின் குரல்” ஆகியே இருக்கிறது என்பதுதானே உண்மை!

    Share
  • கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    கந்தனை நினைந்து போற்றுவோம் வாரீர்
    வீட்டிலும் வெளியிலும் ஏற்றுவோம் வாரீர்
    வேலவன் திருவடி பற்றுவோம் வாரீர்

    அகமதில் உறைந்திடும் ஆணவ இருளை
    அகற்றிடத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    சிவனது மைந்தனைச் சிந்தையில் இருத்தி
    சிறப்புடன் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    கார்த்திகைப் பெண்களால் ஏந்திய குழந்தை
    கந்தனாய் வந்தனன் கலியுகம் காக்க
    கந்தனைச் சொந்தமாய் கொண்டிடும் பக்தர்
    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    மாலயன் அடிமுடி தேடிய நிலையில்
    மாபெரும் சோதியாய் வந்தனன் சிவனும்
    பேரொளிப் பிழம்பு தோன்றிய நாளை
    யாவரும் கார்த்திகைத் தீபமாய் கண்டனர்

    அக்கினித் தலமாய் ஆகிய தலத்தில்
    அகண்ட தீபம் ஏற்றுவார் அடியார்
    கார்த்திகை நாளில் ஏற்றிடும் தீபம்
    கந்தனை. தந்தையை இணைத்திடும் தீபம்

    சோதியாய் சுடராய் ஆகிடும் தெய்வம்
    ஆதியாய் அந்தமாய் ஆகிடும் தெய்வம்
    அப்பனாய் பிள்ளையாய் அமைந்திடும் தெய்வம்
    அனைத்துமே கார்த்திகைத் தீபத்துள் அடங்கும்

    காணுகின்ற பேரொளியே கடவுளாய் தெரிகிறது
    கார்த்திகையில் தீபமதில் காணுகிறோம் கடவுளையே
    கண்காணாத் தெய்வமதை ஒளியாக நம்புகிறோம்
    கார்த்திகையில் தீபமேற்றி கடவுளருள் பெறுவோமே

    Share
  • வாரியார் சுவாமிகள் வாழ்கிறார்!

    வாரியார் சுவாமிகள் வாழ்கிறார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    வீணை படித்திருந்தால் வித்துவானாய் மேடைகளில் இசை நிகழ்சிகள் செய்த படியேதான் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் இறைவனின் ஆணை வேறாக இருந்ததால் பாதை மாறியது. பயணமும் மாறியது. சைவமும் தமிழும் கைபிடித்து நின்றது. கலியுகத் தெய்வம் கந்தப் பெருமான் தன்னுடைய   கடைக்கண் பார்வையில் வைத்திருக்கும் நிலையும் உருவாகியது. இப்படி யெல்லாம் யாருக்கு நேர்ந்தது  என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா! வேறுயாருமல்ல….. பேச்சாலும், எழுத்தாலும், கதைகளாலும், இசையாலும்எம்மையெல்லாம் தன்பக்கம் ஈர்த்து நின்ற வாரியார் சுவாமிகளே!

    கிருபானந்த வாரியார் என்னும் பெயரினை நாங்கள் சாதாரணமாகவே பார்க்கிறோம். அந்தப் பெயருடன் சுவாமிகள் என்பதையும் சேர்த்து அழைத்து விட்டு அத்துடன் நின்று விடுகிறோம். ஆனால் அந்தப் பெயரின் அர்த்தத்தை நாங்கள் எவருமே எண்ணியே பார்ப்ப தில்லை. கிருபை ‘ என்றால் கருணை; ‘ ஆனந்தம் இன்பம்;  ‘வாரி‘ என்றால் பெருங்கடல்இப்பொழுது – “கிருபானந்த வாரியார் ” என்னும் பெயரினை எண்ணிப் பாருங்கள். மலைப்பாக இருக்கிற தல்லவா! இவருக்கு இப்பெயர் கருவிலேதான் உருவாகி இருக்க வேண்டும் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. கருணையே உருவமாகக் கொண்டே அவர் விளங்கினார். கருணை உருவில் இருந்தே பிரசங்களை ஆற்றினார். அனைவரையும் கட்டிப் போட்டார். கருத்துக்களை வழங்குவதில் கடலாகாவே இருந்தார். அவரின் செய்கைகள் அத்த னைக்கும் ஏற்றதாக அவரின் பெயரும் அமைந்து வந்திருக்கிறதல்லவா! இதைத்தான் – ‘ நினையாது முன்வந்து நிற்கினும் நிற்கும் – எனை யாளும் ஈசன் செயல் ‘ என்பதா!

    திருவருட்செல்வர்களாக இருந்தவர்களைப் போற்றி தெய்வத் தமிழ்ச் சேக்கிழார் பெருமானால் பெரிய புராணம் பாடப்பட்டது. அந்தப் புராணத்தின் நாயகர்கள் அறுபத்து மூவர் ஆவர். அனைவருமே ஆண்டவனுக்குப் பலவிதத்தில் தொண்டாற்றியவர்களாகவே இருக்கிறார்கள். அறுபத்து மூவருடன் நின்று விடாமல் அந்த எண்ணிக்கையில் வாரியார் சுவாமிகளுக்கும் இடம் இருக்கிறது என்னும் சிந்தனையைப் பலரும் சொல்லுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. ஆகையால் வாரியார் சுவாமிகளையும் சேர்த்து திருவருட் செல்வர்கள் அறுபத்து நான்கு என்று அழைப்போமா! உடன்படுவீர்கள் என்று எண்ணுகிறேன். பத்தொன்பது வயதில் இல்லறத்தினுள் இணைகின்றார். அவருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. இளமையில் இல்லறத்தில் இணைந்தவர் – சிற்றின்பக் கடலினுள் மூழ்கிவிட நாட்டங் கொண்டவராய் இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இல்லறத்தை நல்லறமாகவே கருதி – மனைவி இருந்த போதும் – சிற்றின்பம் என்பதை மறந்து – இல்லறத்திலே ஒரு துறவியாகவே வாழ்ந்தார் என்பதை மனமிருத்தல், அவசியமாகும். இப்படி இருப்பதுதான் உண்மையான துறவாகும். பொருள்கள் வந்து குவிந்தாலும் – அருளின் வசமே அவரின் மனம் இருந்த காரணத்தால் – இல்லற ஞானியாகவே வாரியார் சுவாமிகள் விளங்கினார் என்பதுதான் அவரின் தனித்துவத்தைக் காட்டி நிற்கிறது எனலாம்.

    இப்பொழுது – காணுமிடமெல்லாம் பல அமைப்புகள். ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு தலைவர். ஒவ்வொரு தலைவருமே தம்மைச் சாமியார் என்று முத்திரை குத்திக்கொண்டு – செய்யக்கூடாத அத்தனை இழிவான காரியங்களையும் செய்கிறார்கள். ஏமாற்றிப் பிழைக்கின்றார்கள். அவர்களுக்கு என்று தரகர் கூட்டமோ இன்னொரு பக்கம். பொருள் குவிகிறது. அருள் அறுகிறது. ஆடம்பரம் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு சென்று அகப்பட்டு அல்லல்படுகிறார்கள் அநேகம் பேர்! இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்களை சுவாமிகள் என்று அழைப்பது எத்தகைய மதியீனம்மனைவி இருந்தும் – இல்லறத்தை துறவறமாக்கி வாழ்ந்த வாரியாரைத்தான் சுவாமிகள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கிறதல்லவா! “பசித்திரு, தனித்திருவிழித்திரு” என்பதை வாரியார் சுவாமிகள் நன்கு உணர்ந்தவர். அதனால் அவர் எல்லாவற்றிலும் விழித்தே இருந்தார்.

    பள்ளிக்கூடத்தைத் தொட்டிராதவர் வாரியார். நிழலுக்கும் அந்தப் பக்கம் போகாதவர் வாரியார். அவரைப் பல்கலைக்கழகங்களும்பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பாராட்டிக் கெளரவித்தார்கள். பல்கலைக் கழகங்கள் வாரியாரை வரவழைத்து அவரின் உரைகளை  – கற்றிடும் மாணவரையும்பேராசிரியர்களையும் கேட்கவைத்த நிலையினை எண்ணிப் பார்க்கையில்யாவும் இறையின் திருவருள் என்றுதானே எண்ண வேண்டும். பள்ளிக்குச் சென்று சாதாரண கல்வியினைக் கற்காதவர்புராணங்களையும், இதி காசங்களையும்வேதக்கருத்துக்களையும்சைவசித்தாந்தக் கருத்துக்களையும்தமிழ் இலக்கியஇலக்கண மரபுகளையும்எப்படித் துன்னுள் தேக்கி வைத்திருந்தார் என்று நினைத்துப் பார்க்கவே பெரும் வியப்பாக இருக்கிறதல்லவா!

    மூன்று வயதில் வாரியாரின் வித்தியாரம்பம் ஆரம்பிக்கிறது. தந்தைதான்  அவரின் ஆத்மார்த்த குரு. ஐந்து வயதாக இருக்கும் பொழுதே ஏட்டினைப் படிக்கும் அளவுக்கு கற்றலில் முன்னிற்கிறார். எட்டு வயதில் வெண்பாபாடும் அளவுக்கு துலங்கி நிற்கிறார். பாக்களிலே வெண்பா பாடுவது என்பது மிகவும் கடினமானது. சட்டதிட்டங்களுடன் பாடப்பட வேண்டிய யாப்பினைக் கொண்டதுதான் வெண்பா. அப்படியான “வெண்பாவினை” எட்டு வயதில் வாரியார் பாடினார் என்றால் “வாணி அவர் நாவில் அமர்ந்து விட்டாள்” என்று தானே எண்ணிட வைக்கிறதல்லவா! அத்துடன் அவரின் ஆற்றல் நின்று விடவில்லை. தன்னுடைய பனிரெண்டாவது வயதிலே பனிரெண்டாயிரம் பாடல்களையே மனனம் செய்திருக்கிறார் என்றால் நம்புவீர்களாஆம் …. இது வெறும் புகழ்ச்சி அல்ல! இது உண்மைஇப்படி ஒரு பிள்ளை வளர்ந்து வந்ததென்றால் அதற்குப் பின்னால் அந்த ஆண்டவனும் கூடவே வந்திருக்கிறான். எந்த நேரமும் அந்தப் பிள்ளையை அரவணைத்த படியே இருந்திருக்கிறான் என்பதுதானே அர்த்தமாகும். இதைத்தான் “கருவிலே திருவுடையார்” என்றார்கள்.

    “இவன் தந்தை என்நோற்றான்” என்னும் நிலையில் வாரியார் பிள்ளையாய் வாய்திருக்கிறார். ‘நோற்றான்’  என்றால் நோன்பு இருந்தான் என்பதுதான் அர்த்தமாகும்.வாரியார் தந்தையார் மல்லையாதசர் அந்தப் பரம்பொருளை வேண்டி பக்திசிரத்தையுடன் நோன்பு நோற்ற காரணத்தால்த்தான் – வாரியார் ஒளி விட்டுப் பிரகாசித்தார் என்பது பொருத்தமாய் இருக்கிறதல்லவா! வள்ளுவம் காட்டுகின்ற,

    “தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
      முந்தி இருப்பச் செயல்”

    “மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
      என்னோற்றான் கொல்எனும் சொல்”

    இந்த மொழி – வாரியாருக்கும் அவரின் தந்தையாருக்கும் எத்துணை பொருத்தமாய் அமைகிறது பாருங்கள்!   

    வேத நெறி தளைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” ஒரு பிள்ளை பிறந்தது. அந்தப்பிள்ளை ஞானப் பால் உண்ட பிள்ளை. அந்தப்பிள்ளை தன்னை நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்” என்றது. இன்னுமொரு பெரியவர் “தமிழோடு இசை பாட மறந்தறியேன்” என்றார். அப்பெரியார்தான் அப்பர். இந்தத் திருவடியார்கள் வழியில் பயணத்தை ஆரம்பிக்கிறார் எங்கள் வாரியார் சுவாமிகளும். அவரும் “தமிழையும் இசைய யும்” துணையாகக் கொள்ளுகிறார். திருவடியார்கள் ஊர்கள் தோறும் சென்று இறைவனைப் பாடிப் பரவி மக்களை ஆன்மீகத்துக்குள் வரச்செய்தார்கள். எங்கள் வாரியார் சுவாமிகளும் ஊர் ஊராய்நாடு நாடாய் சென்று சன்மார்கத்தை நன் மார்க்கமாய் காட்டி நிற்கிறார். ஆதலால் அறுபத்து நான்காவது திருவடியார் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா.  

    நல்லைநகர் தந்த நாவலர் பெருமான் சொன்னபடியே செய்தார். சொல்லிவிட்டு மட்டும் நின்று விட வில்லை. நாவலர் பெருமான் ஈழத்தின் ஞானவிளக்கு. தமிழையும், சைவத்தையும் தன்னுடைய இரு கண்களாகவே அவர் கருதிச்செயற்பட்டார். பொருளைவிட அருளையே அவர் பெரிதும் நம்பினார் – துணையாக்கினார். அவரும் எழுதினார். பேசினார். புராணங்களையெல்லாம் பக்தி சிரத்தையுடன் கையிலெடுத்தார். விளக்கினார். அவரை இன்றும் நினைக்கிறோம். என்றுமே நினைத்துக் கொண்டே இருப்போம்.

    அவரின் வழியில் வாரியாரையும் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன். நாவலர் பெருமான் ஆசார அனுட்டானங்களைச் சொல்லி விட்டுப் போகாமல் தானும் அதன் வழி மிகவும் இறுக்க மாகவே நின்றார். வாரியாரும் தன் வாழ்நாள் எல்லாம் ஆசார அனுட்டானங்களைக் கைவிடாதவராகவே வாழ்ந்தார். “நீறில்லா நெற்றி பாழ்” என்னும் தமிழ் மூதாட்டியின் வார்த்தைகளை இருவருமே வாழ்வெல்லாம் போற்றி நின்றார்கள். நாவலர் பெருமானின் படங்கள் அத்தனையும் நெற்றியில் நிறைந்த திரு நீற்றின் மூன்று குறிகளுடனேயே காணப்படும். வாரியார் என்றதும் அவரின் திருநீறு நிறைந்த அகன்ற நெற்றியே ஒளி விட்டு மனத்தில் வந்து நிற்கும். கூடாதது அத்தனையும் கூடாதது என்று எண்ணியே இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மனமிருத்துவது சாலப் பொருந்தும் என்று கருதுகிறேன்.

    நாவலர் பெருமான் சிவதீட்சை பெற்றிருந்தார். விபூதி உருத்திராக்கத்தை உயிராகப் போற்றிக் காத்து வந்தார். வாரியாருக்கு ஐந்து வயிலே திருவண்ணாமலை பாணிபத்ர மடத்தில் “சிவலிங்க தாரணம்” நடத்தப்பட்டது. அத்துடன் இவரின் தந்தையாரால் “சடாஷர மந்திரமும்” உபதேசிக்கப்பட்டது. தந்தையாரின் உபதேசத்துடன் மதுரை திருப்புகழ் சுவாமியினால் “சூட்சும சடாஷர” மந்திரமும் உபதேசிக்கப்பட்டது. அது மட்டு மன்றி வாரியாரின் கனவில் பாம்பன் சுவாமிகள் தோன்றி “சடாஷர மந்திரத்தை” திரும்பவும் உபதேசித்தார் என்றும் அறிய முடிகிறது. நாவலர் பெருமான் கால்பட்ட இடங்களெல்லாம் வாரியாரின் கால்களும் பட்டிருக்கின்றன. நாவலரின் சிந்தனைகள் பரவிய இடமெல்லாம் வாரியாரும் சென்று தன்னுடைய சிந்தனைகளைப் பரப்பினார் என்பதும் நோக்கத்தத்தது. நாவலர் பிரமச்சாரியத்தை மேற்கொண்டார். வாரியார் இல்லறத்தில் இருந்து கொண்டே பிரமச்சரியத்தை மேற்கொண்டு வந்தார் என்பதும் கருத்திருத்த வேண்டியதே. நாவலரை இலங்கை அரசாங்கம் கெளரவித்து முத்திரை வெளியிட்டது. வாரியாரை இந்திய அரசாங்கம் கெளரவித்து முத்திரை வெளியிட்டதுசைவத்தையும்தமிழையும் காத்தவ ர்களை நாடும் போற்றியது. நாட்டு அரசாங்கங்களும் போற்றின.

    நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களையும்ஐஞ்ஞூறுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் வாரியார் சுவாமிகள் சமுதாயம் பயனுறும் வகையில் வழங்கி இருக்கிறார். அவரின் நூல்கள் பல பதிப்புக்களைத் தொட்டு யாவர்மத்தியிலும் சென்று இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. எதனை எழுதினாலும் அதனை யாவரும் விளங்கும் படியே எழுதுவார். இராமாயாணம் பற்றி எழுதினார். பாரதம் பற்றி எழுதினார். கந்தபுராணம் பற்றி கற்றவரும் மற்றவரும் விளங்கும் வகையில் “கந்தவேல் கருணை” என்னும் மகுடத்தில் எழுதினார். பெரிய புராணத்தை யாவரது  மனதில் பதியும் வகையில் தனக்கே உரித்தான தமிழ் நடையில் “சிவனருட் செல்வர்” என்னும் பெயரில் வழங்கினார். யாருமே தொட முடியாத ஒரு பெரும் எழுத்துப் பணியினை இவர் மேற்கொண்டார். அதுதான் வாக்குக்கு அருணகிரி என்று போற்றப்படும் அருணகிரியின் ஆன்மீகப் பனுவல் திருப்புககழ் தொடர்பான பணியாகும். வேலூர் மாவட்டத்தில் பிறந்தததால்  வேலவன் வசமானார். காங்கேய நல்லூரில் பிறந்ததால் காங்கேயப் பெருமான் திருவடியைப் பற்றினார். அந்தக் காங்கேயனின் அருள் பெற்ற அருணகிரியின் திருப்புகழ் பாடல்கள் வாரியாரை வசப்படுத்தின. “முத்தைத்தரு” என்று எம்பருமான் கந்தப் பெருமானால் அடியெடுத்துக்கொடுத்த திருப்புகழ் என்னும் என்னும் அமுதத்தை தான் மட்டும் பருகினால் போதாது என்று கருதினார் வாரியார். அதனால் ஆயிரத்து தொழாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டில் “திருப்புகழ் அமிர்தம்” என்னும் மாத இதழைத் தொட ங்கினார். அவரின் பல வேலைகளுக்கு மத்தியிலும் விட்டு விடாமல் முப்பத்து ஏழு ஆண்டுகள் அந்த மாத இதழை நடத்தி – எழுத்துப் பணியில் ஆன்மீக முத்திரையினைப் பதித்திட்டார் எங்களின் வாரியார் சுவாமிகள். பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்று அவரின் எழுத்து ஆளுமை அத்தனையும் திருப்புகழ் அமிர்தம் தாங்கிச் சிறப்புற்று நின்றது. தமிழிலே சந்தம் சிந்தும் பாடல்கள் என்றால் அது திருப்புகழ் மட்டுமே. அந்தச் சிந்துகளில் தனது சிந்தனைகளை வெளிப்படுத்திய வாரியாரும் ஒரு அருணகிரிதானே!

    பெண்களைப் பெரிதும் மதித்தார். குழந்தைகளைக் கொண்டாடியே மகிழ்ந்தார். அவரின் ஒவ்வொரு பிரசங்கத்திலும் முன்னே இருப்பவர்கள் நிச்சயமாகக் குழந்தைகளாகவே இருப்பர். இசையுடன் இணைந்த அவரின் பிரசங்கம் கேட்பவர்களை எங்குமே அசைய விடாமல் ஆக்கியேவிடும். வளர்ந்து வருகின்ற குழந்தைகளிடம் நன்னெறியைப் புகுத்த வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் வாரியார் எனலாம். இதனால் தன்னுடைய பிரசங்க மேடையின்முன் அமர்ந்திருக்கும் – குழந்தைகளிடம் பல வினாக்களைக் கேட்டு – அதற்குப் பதில் அளித்த குழந்தைகளை மேடைக்கு வரவழைத்து நல்ல நூல்களை வழங்கி ஆசீர்வதித்தார். இந்த அணுகு முறை மிகவும் சிறப்பானது மட்டுமல்ல புதியதொரு அணுகு முறையாகவும் அமைந்தது  என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகளையும், பெண்களையும் மதிப்பவர்களை சமூகமும் என்னாளும் மதித்துக் கொண்டே இருக்கும். குழந்தை என்றாலே செல்வம்தான். பெண்கள் என்றாலும் செல்வம்தான். பெண்களை வீட்டின்  மகாலக்சுமி என்றுதானே பார்க்கின்றோம். வாரியாருக்கு இந்த நுட்பம் மனதில் தோன்றிய படியால்த்தான் அவர் தன் வாழ்வெல்லாம் – பெண்களை மதித்தார். குழந்தைகளைக் கொண்டானார் எனலாம். “இல்லாள்” கருத்துடையது. “இல்லான்” எதுவுமே இல்லாதவன் என்று வாரியார் சுவாமிகளே சொல்லியிருக்கிறார்.

    வாரியார் சுவாமிகளின் பிரசங்க உத்தியைப் பாராட்டியே ஆக வேண்டும்.தத்துவங்களைச் சொல்லு வார்.ஆனால் அவற்றை யாவரும் விளங்கும் வகையில் நல்ல கதைகள் மூலமாய் சொல்லுவார். அதாவது இனிப்புத் தடவிய மருந்துபோல அவரின் கருத்துக்கள் வந்து அமையும். கதையினையும் நாடகப் பாணியிலேதான் சொல்லுவார். சொல்லும் பொழுது இசையும் அங்கே இணைந்து நிற்கும். தேவார,  திருவாசக, திருமுறைப் பாடல்கள்-  தாள , லயத் துடன், பக்கவாத்தியங்கள் இணைய வரும்பொழுது – கருத்துக்கள் பசுமரத்தாணி போல மனத்தில் சென்று பதிந்தேவிடும். எந்த அளவுக்கு சைவசிந்தாந்த, வேதாந்த அறிவு நிரம்பி இருந்ததோ அந்த அளவுக்கு – இசைஞானமும் அவரகத்தில் நிறைந்தே இருந்தது. இளமையிலேயே பல பாடல்களை மனனம் செய்திருந்த காரண த்தால் – கதைக்குப் பொருத்தமான கருத்துக்கள் பொதிந்த பாடல்கள் அங்கு வந்து நிற்கும். அப்படி வரும் பாடல்களையும் தன்னுடைய கணீரென்று குரலில் அவர் இசைத்தும் பாடும் பொழுது அந்த சரஸ்வதி தேவியே அவரை விண்ணிருந்து வாழ்த்திடுவார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இயலும், இசையும், நாடகமும் அவரின் பிரசங்கத்தின் முத்திரை எனலாம். தமிழ் மொழியை மிகவும் நுட்பமாய் அவர் அறிந்திருந்தார் என்றுதான் பலபேருக்கும் தெரியும். அவருக்கு சமஸ்கிருதமும் தெரியும். பிரசங்கங்களில் அவர் காட்டுகின்ற நயத்தகு தமிழ் சொற்றொடர்கள் போல – பொருத்தமான இடங்களில் பொருத்தமான சமஸ்கிருதச் சுலோகங்களையும் காட்டி அதற்கான விளங்களையும் அவர் காட்டுவதும் சிறப்பாகவே இருக்கும்.

    பெண்கள் என்றாலே அவர்கள்தான் சமூகத்தின் கண்கள் என்று வாழ்வெல்லாம் எண்ணி வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள். “பெற்றெடுத்த தாயின் பெயரை  (இனிஷியலாய் ) பெயருக்கு முன்னால் போடலாமே” என்று எவருமே தமிழ்ச் சமூகத்தில் சிந்தியாததைசொல்லாததைச் சொன்னவர் வாரியார் சுவாமிகள். அந்த அளவுக்கு பெண்மையைப் போற்றி நின்றார். புரட்சி புரட்சி என்கிறார்களே! இதுவல்லவா சிறப்பான புரட்சி!

    கிடைத்த பொருளையெல்லாம் தனது சொந்தச் சுகத்துக்காக அவர் பயன்படுத்தவே இல்லை. பொருளை அருளான வழியில் பயனாக்கினார். பள்ளிக் கூடத்துக்கே போகாதவர் – காங்கேய நல்லூரிலே துவக்கப் பள்ளிநடுநிலைப்பள்ளிபெண்கள் மேல்நிலைப்பள்ளிஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்று பள்ளிகளை நிறுவி வருங்காலச் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

    வயலூரில் அருணகிரி அறச்சாலையினை நிறுவி உணவளித்து நிற்க உறு துணையானார். பசிப்பி ணிக்கு மருந்தானார். பக்குவம் பெற கல்விக்கு கலங்கரை விளக்கமானார். வந்த பொருளையெல்லாம் இறைவனது ஆலயத் திருப்பணிக்கும் கொடுத்து ஆனந்தம் அடைந்தார். “தர்மம் செய்ய நினைத்தால் தாமதிக்கக் கூடாது” என்பதுதான் வாரியார் எண்ணமாக இருந்தது.

    தர்மத்தைத் தனது மனதில் இருத்தித் தேடிய பொருளையெல்லாம் பயனுறு வகையில் செய்த வாரியார் சுவாமிகள் – கொடுத்துச் சிவந்த கைகளை உடையவராய் விளங்கிய ஒருவரை வாழ்த்தி “பொன் மனச் செம்மல்” என்று விலைமதிப்பில்லாப் பட்டத்தை வழங்கினார். பல பட்டங்களை அவர் பெற்ற பொழுதும் வாரியார் சுவாமிகளால் வழங்கப்பட்ட இப்பட்டமே இன்றளவும் அவரை யாவரிடத்தும் அறியச் செய்து நிற்கிறது எனலாம். அவர்தான் மூன்று எழுத்தில் மக்கள் மனதில் பதிந்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். வாரியார் சுவாமிகளின் வாழ்த்தின் பின் அந்த மூன்றெழுத்தாளர் மக்களின் திலக மாகவே ஆகிவிட்டார் வாழ்த்துவார் வாழ்த்தினால் அதுதான் பெருவரமாகும். வாரியார் வாழ்த்தும் அப்படி யானதே !

    மண்ணுலகில் பிறப்பவர்கள் யாவருமே மண்ணை விட்டுப் பிரிவது என்பது தவிர்க்க முடியாததுதான். அப்படிப் பிரிந்தவர்களை “காலமாகிவிட்டார்” அமரராகிவிட்டார்” இறையடி சேர்ந்துவிட்டார்” தெய் வீகமானார்” என்றெல்லாம் சொல்லுவது மரபாகி விட்டது. இப்படிச் சொல்லுவது எல்லோருக்கும் பொருந்துமா என்று சிந்தித்திப் பாருங்கள்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வபவன் வானுறையும்
      தெய்வத்துள் வைக்கப் படும்”

    இக்குறள் வழியில் சிந்தித்தால் யாரை வானுறையும் தெய்வ நிலைக்கு அதாவது –  காலமாகி விட் டார், அமரராகி விட்டார்இறையடி சேர்ந்து விட்டார்தெய்வீகமானார் – என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கும் என்பது தெளிவாகிறதல்லவா!

    வள்ளுவத்தின் கருத்துப்படி “வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு” இப்படிச் சொல்லுவது தான் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா! அந்தவகையில் வாரியார் சுவாமிகள் போன்றவர்களையே – மண்ணுலகை விட்டுப் பிரியும் நிலையில் இப்படி அழைக்கலாம் என்பது பொருத்தமாய் இருக்கும் என்ப தைக் கருத்திருத்த வேண்டியது அவசியமாகும் என்று கருதுகிறேன். வாரியார் சுவாமிகள் நாத்திகர்களை யும் ஆத்தீகத்தில்  நாட்டங் கொண்டிடச் செய்தார். சினப்போரையும் சிந்திக்க வைத்தார். சிரிப்பினை மருந்தாக்கிக் கொடுத்தார். வைதாரையும் வாழ்த்தினார். எதிர்த்தவர்களையும் இரக்கத்துடன் பார்த்தார்.

    சுவாமிகளின் ஆன்மீகத் தொண்டு. அவரின் அறப்பணிகள். அவரின் சிந்தனையால் வெளிவந்த படைப்புகள். அவரின் உரைகள் பதிந்த ஒலி ஒளிக் காட்சிகள் . வெள்ளித்திரையில் வந்தும் வேலவனைக் காட்டிய அவரின் பாங்கு. இவையனைத்துமே அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது. ஆகையால் அவர் அமரரானாலும் எங்கள் மத்தியில் இன்னுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    Share
  • கனகவேல் காக்க!

    கனகவேல் காக்க!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே”, “கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப் போற்றுகின்றார்கள். எனலாம்.  கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். “வைதா ரையும் வாழவைப்பான் முருகன்” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.

    கந்தக்கடவுள் எங்களின் சொந்தக்கடவுள் என்று என்ணியே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேலை வணங்குவதே வேலை என்றும் மனத்தில் இருத்தியும் வைத்திருக்கிறோம்.வேலும் மயிலும் வேதனை போக்கிடும்சோதனை தீர்த்திடும் என்னும் நம்பிக்கை – கந்தக்கடவுளைச் சொந்தக் கடவுளாய் நினைப்பவர்களிடம் நிறைந்தே இருக்கிறது. தெய்வங்கள் பல உண் டேனும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் காட்சி தருவது கந்தக் கடவு ளேதான் என்பதை யாவரும் அகத்தில் அமர்த்தியே இருக்கிறார்கள். கரு ணைகூர் முகங்கள் ஆறு கரங்கள் பனிரெண்டு கொண்டு உலகுய்ய திரு மேனி கொண்ட அருள் தெய்வமாய் கந்தக்கடவுள் விளங்குகிறார்.அந்தக் கருணைக் கடல் ஏந்துவது அயில்.அவரைத் ஏந்துவதோ மயில். வேல் என்றால் வெல்” என்பதுதான் பொருள். வெற்றியை அளிப்பதுதான் வேல். வே லைக் கரத்தில் தாங்கியதால் கந்தக்கடவுள் வேலவனாகி நிற்கின்றார். வென்று வேற்றியை உலகிலே தரக்கூடியது எது என்றால் – அது “ ஞானந் தான் “ .ஞானத்தை அறிவு என்றும் சொல்லலாம்.அறிவு என்பது செந்தமிழ்ச் சொல்லாகும்.செந்தமிழ் முருகனின் கையிலுள்ள வேல் – அறிவினது பூரணமான உருவம் என்றே சொல்லலாம்.ஆழமாய்அகலமாய் கூர்மையாய் அறிவென்பது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமை யான அறிவாக அமை யமுடியும்.முருகன் கையின் வேலும் ஆழமாயும், அகலமாயும்கூர்மையாகவுமே இருக்கிறது அல்லவா ! வேலவன் என்றால் பூரணமான அறிவின் இருப்பிடம் என்றுதான் என்ணிடத் தோன்றுகிறதல்லவா !

    வேல் என்றாலே அஃது – அஞ்ஞானத்தை அகற்றி. வினையினை வேரறுக்கும். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாய் உருப்பெற்று நின்றவர்கள்தான் சூரபது பதுமனும் அவனின் தம்பியருமான – சிங்கமுகனும் ,தாரகனுமாம். இவர்களைச் சாய்த்தது ஞானமாகிய வேல்தான். நான் என்னும் அகங்காரம் தலையெடுத்தால் அழிவு நிச்சயம் என்பதை சூரசம்ஹாரம் வெளிப்படுத்தி நிற்கிறது. வரம் பெறலாம். அதனால் உரமும் பெறலாம். வரமும் உரமும் கிடைத்த பின்னர் அதனை அறவழியில் பயன்படுத்தாமல் – அறத்துக்குப் புறம்பான வழியிலே பயன் படுத்தினால் என்ன நேரும் என்பதையே சூரசம்ஹாரம் உணர்த்தி நிற்கிறது. கடுந்தவத்தால் பெற்ற வாழ்வும் வளமும் – தர்மத்தைத்தைத் துணையாக் காமல் இருந்த காரணத்தால் ஒழிந்தே போய்விட்டது.தர்மத்தை மதி யாது நடந்து – தலைகால் தெரியாது நடக்கும் பொழுது – அதனை தடுக்க நிச்ச யம் ஒரு சக்தி வந்தே நிற்கும். அந்தச் சக்திதான் கடவுள். அந்தக் கடவு ளாய் வேலவன் வந்தார். வேலால் வென்றார். வினைகளை ஓட் டினார்.

    வேலேந்தும் வேலவனை விளக்கும் வகையில் அமைந்ததுதான் கந்தபுராணம்.கந்தபுராணம் என்றதும் எங்கள் நினைவில் வந்து நிற்பார் நல்லை நக ர் ஆறுமுகநாவலர் பெருமான். கந்தபுராணத்தைச் சொந்தப் புராணம் என் று மனமிருத்தியவர் அவர். கோவில்கள் தோறும் கந்தபுராணத்தை பிரசங்கம் செய்து – யாவரும் அறிய வேண்டும் என்று அரும்பணியாற்றினார். கந்தனது புராணத்தை மையப்படுத்தி ” கந்தபுராண கலாசாரம் ” என்னும் சைவத் தமிழ் கலாசாரம் தோற்றம் பெற்றது மிகவும் முக்கிய விடயம் எனலாம். ஒரு கலாசாரமாக உருவாகி வருமளவுக்கு கந்தப் பெருமானின் மீதான பக்தி ஆழப்பதிந்து இருந்திருக்கிறது என்பது மனங் கொள்ளத் தக்கதேயாகும்.

    கந்தப்பெருமையை மனமெண்ணி நிற்கின்ற அடியவர்கள் “கந்தசஷ்டி விரதத்தை” வாழ்விலே பெரும் விரத மாகவே கொண்டிருக்கிறார்கள். கந்தசஷ்டி வருவதை உன்னிப்பாய் கவனித்தபடியும் இருப்பார்கள். இந்தியா, இலங்கை எங்கணும் இருக்கின்ற கந்தனது அடியார்கள் கந்தசஷ்டியைக் கண்ணுங் கருத்துமாய் கடைப்பிடித்தே வருகிறார்கள். கந்தசஷ்டி என்றதும் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நல்லைக் கந்தனே வந்து நிற்பார். நல்லைக்கந்தன் சன்னிதானத்தில் பல அடியார்கள் கந்தசஷ்டி காலங்களில் கந்தனின் பூசையினைக் கண்டு அங்கு கொடுக்கும் தீர்த்தத்தை மட்டுமே பருகி – ஆறு தினங்களுமே எதுவுமே சாப்பிடாமல் விரதம் அனுட்டிப்பார்கள் என்பது முக்கியமாகும். நல்லூர் வரமுடியாத அடியார்கள் தங்கள் வீட்டிலேயே கடும் விரதமாய் இருப்பார்கள் – இன்றும் பலர் விரதத்தை விடாமல் அனுட்டிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாண த்தில் பலர் பல வருடங்களாகவே இடை விடாது தொடர்ந்து கந்தசஷ்டி யைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். நீரை மட்டும் அருந்துவார் சிலர்.மாலையில் பாலை மட்டும் பருகு வார் சிலர்.பாலையும், ஒரு பழத்தையும் மாலையில் எடுப்பாரும் இருக்கி றார்கள். முதியவர்கள் மட்டுமன்றி – இளைஞர்களும் கூட கந்தசஷ்டியை பக்தி பூர்வமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதேயா கும்.

    கந்தசஷ்டி நோற்கும் காலங்களில் யாவருமே கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வார்கள். கோவில்களில்களில் விரதமிருக்க அடியார்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பாடுவதற்கு வசதியாக – கந்தசஷ்டி கவசத்தை ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பும் வழக்கம் இடம்பெற்றும் வருகிரது. கந்தசஷ்டி கவசத்தை மனனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் பொருத்தமாய் அமைகிறது. ஆனால் பெரும்பாலனவர்கள் கந்தசஷ்டி கவசத்தை மனப்பாடம் செய்தே வைத்திருப்பார்கள். கந்தப் பெருமானை மனமெண்ணிப்பாடும்பொழுது அப்பாடல் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறந்த பாதுகாப்புக் கவசமாய் அமைகிறது என்பதால்தான் அப்பக்தி துதிக்கு “கந்தசஷ்டி கவசம்” என்று பெயர் அமைந்ததோ என எண்ணிடத் தோன்றுகிறது.

    கந்தசஷ்டி கவசம் இலகுவான மொழிநடையில் அமைந்திருக்கிறது. இசையுடன் பாடவும் பொருத்தமாய் அமைந்திருக்கிறது.கந்தசஷ்டி கவசத்தை பலரும் மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதில் பொதிந்திருக்கும் தத்துவத்தை பெருதும் கண்டு கொள்ளுவதே இல்லை. கந்தசஷ்டி கவசத்தை உன்னிப்பாய் கவனித்தால் அதில் பொதிந்திருக்கும் பொக்கிஷ ங்களைக் கண்டு கொள்ளலாம். அவற்றை மனமிருத்துதல் வாழ்க்கைக்கு அவசியமாகும். பக்திப்பாடல்கள் பாடப்படுவதால் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சாதாரண பாடல்களும் தருகின்ற இன்பம் வேறு. அப்பாடல்களினால் ஏற்படும் உளநலம் வேறு. சாதாரண பாடல்கள் பார்க்கும் பார்வை வேறு. பக்திப்பாடல்கள் பார்க்கும் பார்வை வேறு. அந்த வகையில் கந்தசஷ்டி கவசம் தருகின்ற கருக்கள் உடலையும், உள்ளத்தையும் தூய் மையாக்கவும், உறுதிப்படுத்தவும், நல்லுணர்வுகளை ஏற்படுத்தவும் உறு துணையாகி நிற்கின்றன என்பதை யாவரும் மனமிருத்துதல் அவசியமாகும்.

    நீறிடுநெற்றியும் நீண்ட புருவமும்                                                                    
    பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்                                                                
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்                                                                                            
     ஈராறு செவியில் இலகு குண்டலமும்                                                                                                             
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்                                                                                                       
    பல்பூஷணமும் பதக்கமும் தரித்து                                                                                             
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்                                                                                                 
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்                                                                                            
    செப்பழகுடைய திருவயிறு உந்தியும்                                                                                                      
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்                                                                                                          
    நவரத்னம் பதித்த நற்சீராவும்                                                                                         
    இருதொடையழகும் இணை முழந்தாளும்                                                                                         
    திருவடியதனில் சிலம்பொலி முழங்க

    என்று. கந்தப்பெருமானைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டுத்தான் கந்தசஷ்டிகவசம் தன்னுடைய தத்துவங்களைத் தந்து நிற்கிறது. போர்புரிபவர்கள் எதிரியிடமிருந்து வருகின்ற படைக்கலங்களின் பாதிப்பி லிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அணிவதுதான் “கவசம்”. அது சாதாரண கவசம். இதுவோ “கந்தசஷ்டி கவசம்”. அகப்பகை, புறப்பகை எதுவுமே எம்மைத் தாக்கிடா வண்ணம் காத்திடவல்லதாகும். கந்தனது வேல் ஞானத்தின் பேருவம். அந்த ஞானத்தின் துணைமட்டும் வாய்த்து விட்டால் வந்தவினையும், வருகின்ற வல்வினையும் – வந்தவழியே ஓடி ஒழிந்தே விடும். 

    அடியேன் வதனம் அழகுவேல் காக்க                                                                                     
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க                                                                            
    கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க                                                                                            
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க                                                                                                 
    நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க                                                                                                    
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க                                                                                            
    முப்பத் திருபல் முனைவேல் காக்க                                                                                                  
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க                                                                                                      
    கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க                                                                                            
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க                                                                                     
    மார்பை இரத்தின வடிவேல் காக்க                                                                                    
    சேரிள முலைமார் திருவேல் காக்க                                                                                                                     
    வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க                                                                                               
    பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க                                                                                         
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க                                                           
    பழுபதினாறும் பருவேல் காக்க                         
    வெற்றிவேல்வயிற்றை விளங்குவேல் காக்க                                                                                                 
    சிற்றிடைய அழகுறச் செவ்வேல் காக்க                                                                                                 
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க                                                                                                            
    ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க                                                                             
    பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க                                                                                                    
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க                                                                         
    பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க                                                                          
    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க                                                                      
    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க                                                                                    
    கைகள் இரண்டும் கருணைவேல் காக்க                                                                     
    முன்கை இரண்டும் முரண்வேல் காக்க                                                                                      
    பின் கை இரண்டும் பின்னவள் இருக்க                                                                                                    
    நாவில் சரஸ்வதி நற்றுணையாக                                                                                                             
    நாபிக் கமலம் நல்வேல் காக்க                                                                                                          
    முப்பால் நாடியை முனைவேல் காக்க                                                                                 
    எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க                                                                                     
    அடியேன் வதனம் அசைவுள நேரம்                                                                                                  
    கடுகவே வந்து கனகவேல் காக்க                                                                                              
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க                                                                    
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க                                                                                         
    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க                                                                                                         
    தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க                                                                                                                       
    காக்க காக்க கனகவேல் காக்க    

    எத்தனை வேல்கள்! அத்தனை வேல்களும் பெறும் பெயர்களல்ல. எத்தகைய கொடிய பகைகளைகளையும் எம்மிடத்து வாராமல் காத்து நிற்கும் கருணைநிறை வேல்கள்! நம்மை என்றுமே வாழ்வில் காத்துமே நிற்கும் என்னும் நம்பிக்கையை நம்மனத்தில் ஊன்றும் வகையில் கந்த சஷ்டி கவசம் அமைந்திருக்கிறதல்லவா! எங்களது உடம்பில் உள்ள அத்தனை பகுதிகளும் எந்தவிதமான பாதிப்பும் இன்றிக் காக்கப்பட வேண்டும் என்று – அந்த வேலவனிடம் வேண்டுகோள் விடுக்கும் முறையும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்பாக அமைகிறது அல்லவா! உடம்பின் ஒவ்வொரு பாகமும் காக்கப்பட வேண்டும் என்னும் சிந்தனையும், அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் பாடல்களின் வரிகளும், பாடல் வரிகளின் நிறைவில் “காக்க” என்று அமைவதும் – உள்ளத்தை நலப்படுத்துகிறது, உடலை நலப்படுத்துகிறது. “காக்க” என்பதும் சிறந்த மந்திரமாய் அமைகிறதல்லவா! இந்த வரிகளைப் பாடும்பொழுது – தியானத்தில் இருப்பதுபோன்ற ஒரு உணர்வு நம்முள் ஏற்படுகிறது அல்லவா! திரும்பத் திரும்ப இந்த வரிகளை வாய் உச்சரிக்க – எம்மை அறியாமலேயே எம்முள் ஒரு சக்தி உட்புகுவதை நாம் அனுபவித்தால் அறி வோம். பில்லி, சூனியம், பெரும்பகை, வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனி, பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனி, கொள்ளிவாய்ப் பேய்கள், குறளைப் பேய்கள் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர், அத்தனையும் கந்தசஷ்டி கவசத்தின் ஒலி கேட்டவுடன் உருக் குலைந்தே போய்விடும் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். பில்லி , சூனியம் என்பது இன்றும் கிராமப்புற மக்களின் மனதில் குடியிருக்கும் பயமாகும். நவநாகரிகத்தில் இவை மூட நம்பிக்கையாய் இருக்கலாம். ஆனால் – பில்லி  சூனியம் என்பதை “எம்மை விடாது பிணித்தி ருக்கும் கொடியவினை” என்று கருதிவிட்டால் கருத்து மனம் அமரும் அல்லவா!

    புலியும் ,நரியும் ,புன்னரி நாயும், எலியும் கரடியும்,கிட்டவராது ஓடிவிடும். தேளும், பாம்பும், செய்யான், பூரான், கடிப்பதால் வரும் விஷங்களும், அதனால் ஏற்படும் கடித்துயரங்களும் இறங்கிவிடும். அதுமட்டுமட்டமல்ல ஒளிப்பும், சுளுக்கும், ஒரு தலை நோயும், வாதம் சயித்தியம், வலிப்பு, பித்தம், சூலை, சயம், குன்மம், சொக்குச் சிரங்கு குடைச்சல், சிலந்தி, குடல்விப் பிரிதி, பக்கப் பிளவை, படர் தொடை வாழை, கடுவன் படுவன், கைத்தாள் சிலந்தி, பற்குத்து அரணை, பருஅரை யாப்பும், ஆகிய பிணிகள் எல்லாம் எம்மை விட்டு அகன்றே விடும் என்று கந்தச்சஷ்டி கவசம் – வாழ்வியலுக்குப் பெருந்துணையினை வழங்கி நிற் கிறது.எங்களுக்கு வருகின்ற நோய்கள் அத்தனையும் வரிசைப் படுத்திக் காட்டியிருக்கும் பாங்கினை வியக்காமல் இருந்திடவே முடியாது. அதும ட்டுமல்ல விஷங்களைக் கொட்டி உயிராபத்தை தருகின்ற அத்தனை ஜந் துக்களின் பெயர்களையும் வரிசைப்படுத்தி பாங்கு – ஒரு சிறந்த விஷக்கடி வல்லுனரையே மனத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது எனலாம்.   

    எங்களுக்கு மனத்துயரங்கள், ஆபத்துகள், ஏற்படுகின்ற தருணத்தில், எங்கள் உறவுகள் நோயினால் அல்லது வேறு துன்பத்தால் அல்லல்படுகின்ற வேளையில் எல்லாம் நாங்கள் “கந்தசஷ்டி கவசத்தை” சொல்லியபடி இருப்போம். அப்படி நாங்கள் இருப்பதற்கு அடிப்படையே – ஆபத்திலிருந்து அல்லலிருந்து நிச்சயம் காப்பாற்றப்பட்டுவிடலாம் என்னும் அசையாத நம்பிக்கையே எனலாம். இன்றும் இதனைப் பலரும் செய்கிறார்கள், செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். இதனை வலியுறுத்தி, மனத்தில் நல்ல நம்பிக்கை தரும் வகையில் கந்தசஷ்டி கவசத்தின் முதல் துதியே உறுதி பயந்து நிற்பது ஐயத்தைப்போக்கி அணைப்பதாய் அமைகிறதல்லவா!

    “துதிப்போர்க்கு வல்வினை போம்துன்பம்போம்நெஞ்சில்
    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும்நிமலரருள் கந்தர்
    சஷ்டி கவசம் தனை”

    கந்தசஷ்டி கவசத்தை ஓதுங்கள் ! ஓதியபடி இருங்கள் என்பதற்குச் சான்றாக வருகின்ற இக்கருவினை மனமிருத்தல் அவசியமேயாகும்.

    காசினியிற் றுன்பகலக் கந்தனருள் பெற்றுயர
    மாசில்லாச் சீரெய்த மாமனையும் – பேசுதிரு
    காதலரும் பெற்றுவக்க கந்தர் கவசத்தை
    ஓத வெவரும் உவந்து

    நிறைவில் எல்லாவற்றையும் அளிக்கின்ற வேலினை வணங்குவோம். அந்த வேலினைக் கையேந்தும் வேலவ்னையும் வணங்குவோம்.கந்தசஷ்டி கந்தனை மனமிருத்தும்.கந்தனை அருகழைக்கும் !

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் – வாரி
    குளித்தவேலி கொற்றவேல் சூர்மார்புங் குன்றக்
    துளைத்தவே லுண்டே துணை

    Share
  • ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி!

    ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    இருளகன்று ஒளிபரவ இறைவனிடம் வேண்டிடுவோம்
    இடரகன்று இனிமைவர இறைவனிடம் வேண்டிடுவோம்
    புவிமலர்ந்து வாசம்வர புனிதனிடம் வேண்டிடுவோம்
    புத்துணர்வு நிறைந்துவர நித்தமுமே வேண்டிடுவோம்

    மத்தாப்பு பட்டாசு மனமதிலே வருகிறது
    தித்திக்கும் பட்சணமோ தினமுமே தெரிகிறது
    மொத்தமுள்ள உறவுகளில் முகமலர்ச்சி வருவதற்கு
    தித்திக்கத் தீபாவளி வரவெண்ணி வேண்டிடுவோம்

    முடங்கியே இருந்திட்டோம் முகம்பாராது இருந்திட்டோம்
    பயணவழி அத்தனையும் பார்க்காமல் இருந்திட்டோம்
    விருந்துண்ணல் தவிர்த்திட்டோம் விமானத்தை மறந்திட்டோம்
    மனந்திரும்ப தீபாவளி மலர்ந்திடவே வேண்டிடுவோம்

    முகமூடி வாழ்க்கையினை முழுவுலகும் பார்த்ததுவே
    அகம்முழுக்க ஆசைகளை அடக்கியே வைத்தோமே
    ஆரவாரம் அத்தனையும் அடங்கியே நின்றதுவே
    ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி

    அருகிருந்தும் ஆலயத்தை அணுகவே முடியவில்லை
    ஆறுதலாய் வெளிசென்று அளவளாவ முடியவில்லை
    கலைநிகழ்ச்சி களியாட்டம் காணாமல் ஓடியதே
    களிப்புதனைக் கையேந்தி வந்திடட்டும் தீபாவளி

    பழையபடி கடைத்தெருவில் பட்டுக்கள் வாங்கவேண்டும்
    பலவகையில் பட்சணங்கள் வாங்கியே உண்ணவேண்டும்
    பக்குவமாய் கையணைத்து பலருமே மகிழவேண்டும்
    பார்சிறக்க மனம்சிரிக்க மலரட்டும் தீபாவளி

    Share
  • தேடப்படாத இலக்கியமாய் இருக்கும்  குண்டலகேசியும் வளையாபதியும்!

    தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    தமிழ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும்  தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடிய பின்னர்தான் ஆரம்பிப்பது என்பது வழமையாக இருந்து வருகிறது. தேடப்படாத இலக்கியமாக இருக்கின்ற குண்டலகேசியையும், வளையாபதியையும் பற்றி உங்கள் யாவருக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் இவ்வேளையில் – தமிழ் வாழ்த்தினை சொல்லாமல் ஆரம்பித்தால் அது சிறப்பாய இருக்காதல்லவா! ஆதாலால் தமிழ் அன்னைக்கான வாழ்த்தினை வழங்கி தேடப்படாத இலக்கியத்தை தேடலாம் என்று எண்ணுகின்றேன்.

    காதொளிரும் குண்டலத்தாள்
    கனிமொழியாள் வாழ்க
    கைக்கு வளையாபதி கொள்
    கன்னிகையாள் வாழ்க
    மேதகு மென்மார்பிடைச்
    சிந்தாமணியாள் வாழ்க
    மின்னுமணி மேகலை சூழ்
    மெல்லிடையாள் வாழ்க
    சீதமலர்ப் பாதமொலி
    சிலம்புடையாள் வாழ்க

    வாழ்த்துப் பாடி ஆகிவிட்டது. இனி விஷயத்துக்கு வருவோம்.

    காணக்கிடைக்காத காப்பியங்கள் என்று கருதப்படுவனதான் வளையாபதியும் குண்டல கேசியுமாகும். சிலம்பதிகாரத்துக்கோ, மணிமேகலைக்கோ, சீவக சிந்தாமணிக்கோ கொடுக் கப்படுகின்ற முக்கியத்துவங்கள் வளையாபதிக்கோ குண்டலகேசிக்கோ கொடுக்கப்படுவதி ல்லை. இவை இரண்டைப் பற்றியும் யாருமே பெரிதாய் பேசுவதும் இல்லை. ஐம்பெரும் காப்பியங்கள் என்னும் நிலையில் இக்காப்பியங்கள் இரண்டும் காப்பிய வரிசையில் கடை சியாகவே வைக்கப் பட்டிருப்பதையும் கருத்திருத்த வேண்டும்.

    சிலம்புக்காவலர், சிலம்புச் செல்வர், என்றுதான் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. மணிமே கலையானது சிலம்போடு இணைக்கப்பட்டு “இரட்டைக் காப்பியங்கள்” என்று வியந்து கூறப்படுவதையும் காண் கின்றோம். இரட்டைக் காப்பியம் என்னும் பெயர் எப்படி வந்தது? யார் இவ்வாறு இணைத்தார்கள் என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது அநபாயச் சோழ மன்னன் மிகவும் விரும்பிப் படித்த காப்பியமாக சீவகசிந்தாமணி இருந்தது என்று அறிய முடிகிறது. சிற்றின்ப ரசம் பொருந்திய சிந்தாமணியினை அரசன் விடாமல் படித்துச் சுவைப்பதை சேக்கிழாரின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அநபாயனின் போக்கினை மாற்ற வேண்டுமென்று அல்லும் பகலும்  அமைச்சராய் இருந்த சேக்கிழார் எண்னினார். சேக்கிழாரின் எண்ணம் ஈடேறியதால் அநபாயன் மனம் மாறினான் என்றும் – இந்த மடை மாற்றத்துக்கு சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் சைவசமயக் காப்பியம் காரணமாய் அமைந்தது என்பதையும் அறிகின்றோம்.

    ஆனால் காப்பிய வரிசையில் இடம் பெற்று நிற்கும் வளையாபதிக்கோ, குண்டல கேசி க்கோ இப்படியான ஒரு நிலை வரவில்லை என்பதையும் கருத்திருத்தல்  வேண்டும். என்றாலும் இவற்றை எல்லாம் மீறி இந்த இரண்டு காப்பியங்களும் பேசு பொருளாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.அந்தக் காப்பியங்களைப் பற்றிப் பேசும் நிலையும் இன்று எனக்கும் வாய்த்திருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதே!

    ஆரம்பத்திலே பாடப்பட்ட தமிழ் வாழ்த்தினை எழுதியவருக்கும்-  குண்டலகேசி, வளையாபதி பற்றிய ஒரு ஆதங்கம் இருந்தே இருந்திருக்கிறது. அவரின் மனமிருந்த கருத்தே வாழ்த்தாய் மலர்ந்திருக்கிறது. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றுபாரதி போற்றுகின்றார். ஆனால் இந்த வாழ்த்துப் பாடியவரோ சற்று வித்தியாசமாய் பார்க்கிறார். தமிழ் அன்னை என்றவுடன் முதலில் தெரிவது அவளின் முகம்தானே! முகத்துக்குப் பின்தான் மற்றைய உறுப்புகள் வந்தமையும். பார்க்கப்டாத முக்கியத்துவம் கொடுக்கப்படாத – குண்டலகேசியை “காதொளிரும் குண்டலத்தாள்” என்று முதலில் காட்டுகிறார். பின்னர் அடுத்த நிலையில் வளையாபதியினை “கைக்குவளையா பதிகொள் “கனிமொழியாள் வாழ்க” என்று காட்டி தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்திய பின்புதான் – மென்மார்பிடைச் சிந்தாமணி என்றும், மின்னும் மேகலைசூழ் மெல்லிடை என்றும்  கடைசிசியில்த்தான் “சீதமலிப் பாதமலர் சிலம்புடையாள்” என்று ஐம்பெரும் காப்பிய வரிசையினையே மாற்றிப் பார்க்கும் ஒரு புதுமையை இப்புலவர் செய்திருக்கிறார் என்பதையும் கருத்திருத்தல் அவசியம் என்று எண்ணுகின்றேன். பார்க்கப்படாத தேடப்படாத நிலையில்  குண்டலகேசியும், வளையாபதியும், இருக்கக் கூடாது என்னும் மனக்குறை யினைப் போக்குவதாய் இந்த வாழ்த்து அமைகிறதல்லவா!

    கல்லூரிகளில் படிக்கும் காலத்தும், பல்கலைக்கழகங்களில் பயிலும் காலத்தும் – சிலம் பையும்,மணிமேகலையும், சிந்தாமணியையுமே முக்கியத்துவப்படுத்தி கற்பித்தார்கள். ஐம்பெரும் காப்பியம் என்று தமிழ் வகுப்புகளில் பாடம் நடத்தும் வேளையில் மட்டுமே, குண்டலகேசியினதும், வளையாபதியினதும், பெயர் உச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரண்டையும் பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதையும் சுட்டாமல் இருக்கவே  இயலவில்லை. அந்த அளவுக்கு குண்டலகேசியும், வளையாபதியும், பார்க்கப்படாத காப்பியங்களாகவே இருந்திருக்கின்றன. படிக்கின்ற காலத்தில் எனக்குள் ஒரு ஐயம் எழுந்தது. ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இடம்பெறும் வளையாபதியும், குண்டல கேசியும் அனாதை நிலையில் ஏன் பார்க்கப்படுகின்றன என்பதுதான் அது!

    எனக்கு ஆசான்களாய் அமைந்த ஒரு பேராசிரியரிடம் இதனைப் பற்றித் துணிந்து கேட்டுவிட்டேன். எனது ஐயத்தைக் கேட்ட பேராசான் சற்று யோசித்து விட்டு “நாங்கள் பாடம் நடத்தாவிட்டால் என்ன? பாடப்பகுதியில் சேர்க்கப்படாவிட்டால்த்தான் என்ன? வளையாபதியும், குண்டலகேசியும் இல்லை என்றுதான் ஆகிவிடுமா? ஐம்பெரும் காப்பி யங்கள் என்னும் வரிசையிலிருந்தும் அகற்றப்பட்டுத்தான் போய்விடுமா? ஒருக்காலும் போகவே மாட்டாது. பொது மக்கள் மத்தியில் அந்த இரண்டுமே மிகவும் சிறப்பாகப் போய்ச்சேர்ந்தே விட்டது. உனக்கு அது தெரியுமா? என்று என்னை நோக்கி ஒரு கேள்விச் சர த்தை எனது ஐயப்பாட்டுக்கு மறுமொழியாக அவர் விடுத்தார்”

    “நான் மெளனமாய் இருந்தேன்”. என் ஆசானே பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள். அவர் முதலமைச்சர் நிலைக்கு வருவதற்கு முன்பே தேடப்படாத இலக்கியம் என்னும் குண்டலகேசியைத் தேர்ந்தெடுத்து நன்றாக உள்வாங்கியும் விட்டார். குண்டகேசியை யாவரும் அறியச் செய்வதற்கு உகந்த வழி எது என்பதை மனமெண்ணி அவர் தேர்ந்தெடுத்த வழிதான் திரைத்துறையாகும். திரையில் வந்தால் அது எல்லாவிடத்தும் செறிந்தும் பரந்தும் நிறைந்தும் விடு மென்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் குண்டலகேசியைஉள்வாங்கி  “மந்திரிகுமாரி” என்னும் திரைக்காவியத்துக்கு வித்திட்டார். அவரே திரைக்கதை வசனமும் எழுதினார். அவரின் எண்ணத்தில் குண்டலகேசி காவியம் 1950 ஆம் ஆண்டில் மந்திரிகுமாரி என்னும் பெயரில் வெள்ளித்திரையில் வலம் வந்தது என்று என் ஆசான் மூச்சுவிடாமல் சொல்லி நின்றார்”. அந்தப் படத்தைப் பார்த்தால் புரியும் குண்டல கேசியின் கதை என்றார்.

    அத்துடன் நிற்காமல் எனது அடுத்த ஐயத்தையும் போக்கினார் ஆசான். வளையாபதியும் தேடாத இலக்கியமாய் இருக்கக் கூடாது என்று எண்ணினார் புரட்சிக்கவி பாரதியின் சீடர் பாரதிதாசன். கலைஞருக்கு மிகவும் பிடித்தமான தமிழ்க் கவிஞன்தான் புதுவைக்கவி பாரதிதாசன். அந்தப் புதுவைப் புயல் பாரதிதாசன் திரைக்கதை வசனம் எழுதி திரையில் வளையாபதியை வெளிபரப் பண்ணினார் . “வளையாபதி என்னும் பெயருடனேயே 1952 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் தேடப்படாத இலக்கியம் வந்தது” என்று எனது மனத்தெழுந்த ஐயங்களெலாம் விளங்கும் வகையில் – விளங்கும் உதாரணத்துடன் ஆசான் அவர்கள் சொன்னதும் – எனக்கு நல்ல திருப்தி கிடைத்தது. பள்ளிக்கூடமும் பல்கலைக் கழகமும் செய்யாததை வெள்ளித்திரை செய்து விட்டதே என்பது பெரும் ஆறுதலாய் எனக்கு இருந்தது.

    தேடப்படாத காவியங்கள் வரிசையில் வளையாபதிபோல் இருப்பதுதான் குண்டல கேசியாகும். வளையாபதி ஒன்பதாம் நூற்றைண்டைச் சேர்ந்தது. குண்டலகேசி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்களின் கருத்தாய் இருக்கிறது. வளையாபதியின் ஆசிரியர் இன்னார் என்று அறியா நிலை இருக்கிறது. ஆனால் குண்டலகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார் என்று காட்டப்படுகிறார். எழுபத்து இரண்டு பாடல்களுடன் வளையாபதி அமைய குண்டலகேசியோ மிகக்குறைந்த அளவில் பத்தொன்பது பாடல்களுடன் இலக்கியமாய் கவனிக்கப்படுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். வளையாபதி சமணத்தைப் பேச குண்டலகேசியோ பெளத்தத்தைப் பேசுகிறது.

    சிலம்பிலும் பெண்தான். மணிமேகலையிலும் பெண்தான். சிந்தாமணியிலும் பெண்ணே. குண்டலகேசிலும் பெண்தான் வந்து முன்னிற்கிறாள். பெண்கள் இல்லை என்றால் காப்பியங்களே இல்லை என்று சொல்லும் வகையில் காப்பியங்களைக் கொண்டு செல்லும் விதத்தில் பெண்களே இருப்பதும் நோக்கத்தக்தேயாகும். அதே வேளை வணிகர் குலம் என்பதும் தொடர் நிலையாக இருப்பதையும் காண்கின்றோம். வளையாபதியில் வருகின்ற கதாநாயகன் வணிகர் குலத்தவன். குண்டலகேசியின் கதாநாயகியும் வணிகர் குலத்தவள்தான். ஆனால் கதையின் போக்கு மட்டும் மாறுபடுகிறது.

    வசதிமிக்க வணிக குலத்துப் பிறந்தவள் பத்தா சீதா. இவளின் காதல் பொருந்தாவிடத்தில் சென்று விடுகிறது. அதனால் அவளின் வாழ்வும் வசந்தத்தை இழந்து விடுகிறது. வசதி யான குடும்பத்தைச் சேர்ந்தவள் – கொள்ளை அடிக்கும் ஒருவனை விரும்புகின்றாள். அரசனால் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டவனைக் கண்டதனால் காதல் கொண்டு அவனையே மணந்திட நினைந்து விடுகிறாள். மகளின் ஆசையினை தந்தை நிறை வேற்றும் பொருட்டு – கொலைக்களம் அனுப்பபட்ட கொள்ளைக்காரனைப் பொரு ளைக் கொடுத்து மீட்டு மகளுக்கு மணம் முடித்து வைக்கிறான். கள்வன் காதல் கணவனாய் வந்தமை பத்தாவுக்கு பெரும் ஆனந்தமாய் அமைகிறது.

    களவிலே ஊறிப்போனவனுக்கு களவினை மறந்து வாழ்வது என்பது சற்றுக் கடினந்தான். வீட்டிலேயே கைவரிசையினைக் காட்டிட முனைகிறான். இதனால் மனஸ்தாபம் உருவாகிறது. முடிவில் மனைவியையே கொன்றுவிடத் திட்டமும் இடுகிறான். அவளைக் காதல் மொழிகள் கூறி மலை உச்சிக்கே அழைத்துச் சென்று கொன்றுவிடத் திட்டமிட்டு அவளை மலை உச்சிக்குக் கூட்டிச் செல்கிறான். தன்னைக் கொல்லப் போகிறான் என்பதை அறிந்து கொண்ட பத்தா – தந்திரமாக அவனை மூன்றுமுறை வலம் வருபோல செய்து முடிவில் தன்னைக் கொல்ல வந்த தனது காதல் கணவனையே மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள் என்று கதை அமைகிறது.

    வாராய் நீ வாராய்
    போகுமிடம் வெகு தூரமில்லை
    நீவாராய்

    ஆகா மாரிதம் வீசுவதாலே
    ஆனந்தம் பொங்குதே மனதிலே

    இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
    கலந்துயிர் விண்ணினைக் காண்பாய்
    அமைதி நிலவுதே
    சாந்தம் தவழுதே

    முடிவிலா மோன நிலையை நீ
    மலை முடிவில் காணுவாய்
    ஈடிலா அழகு சிகரம் மீதிலே
    கண்டு இன்பமே கொள்வோம்

    இன்பம் அடைந்தே இகமறந்தே
    வேறு உலகம் காணுவாய் அங்கே

    புலியினைத் தொடர்ந்தே
    புதுமான் நீயே

    இந்தப் பாடல் வந்து எழுபத்து ஒரு ஆண்டாகிறது. ஏழாம் நூற்றாண்டில் வந்த குண்டலகேசிக் கதைக்கு ஏற்ற பாடலைக் கேட்கின்ற வேளை கதையின் காட்சி கண்முன்னேயே வந்து நிற்கிறதல்லவா? காவியக்காட்சி வெள்ளித் திரையில் மந்திரிகுமாரியாய் மலர்ந்தது என்பதை நினைத்துப் பார்ப்போம்.

    சமணமும், பெளத்தமும் வாழ்க்கை நிலையாமையினை வலியுறுத்தும் பாங்கிலேதான் கருத்துக்களைக் கொட்டியபடியே இருக்கும். அந்த வகையில் காதலித்தவன் வஞ்சகம் செய்தபடியால் குண்டலகேசியின் அப்போதைய மன நிலைக்குச் சமணந்தான் மருந்தாய் அமைந்தது எனலாம். சமணப்பள்ளியை அடைந்தாள். சமண சம்பிரதாயப்படி அவளின் கூந்தல்கள் களையப்பட்டன. மழித்த தலையுடன் சமணப்பள்ளியில் இருந்தாள். சமணத்தில் ஊறிய அவள் சமணத்தை எதிர்ப்போரை யெல்லாம் வாதித்திட்டு நிற்கும் நிலைக்கு வந்து நின்றாள். ஆனால் பெளத்தத்திடம் அவள் வாதம் எடுபடா நிலையில் முடிவில் அவள் பெளத்தத்துக்கே மாறிவிடாள். மழிக்கப்பட்ட அவளின் கூந்தல் சுருண்டு வளர்ந்தது.வளைந்து குண்டலம் போல் அவளின் கூந்தல் காணப்பட்டதால் குண்டலகேசி என்றே அழைக்கப்ட்டாள். அந்தப் பெயரே இக்காப்பியத்துக்கும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

    யாக்ககை நிலையாமை, கூற்றுவனின் கொடுமை,வாழ்க்கையின் நிலையாமை, உடம்பின் இழிவு, என்பன பற்றியெல்லாம் குண்டலகேசி தன் கருத்துக்களைப் புகன்று நிற்கிறது,

    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
    நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

    நிலையாமையினை விளக்குதற்கு குண்டலகேசி ஆசிரியர் தருகின்ற ஒவ்வொரு படிமுறையும் அவரின் பேராளுமையினையே காட்டி நிற்கிறது எனலாம். இதைவிட இலகுவாய் நிலையாமையினை விளக்கிடல் முடியுமா என்றுதான் எண்ணிப் பாருங்களேன்! செத்துப்பிழைத்துக் கொண்டே ஒவ்வொரு நாளுமே இருக்கின்றோம். ஆனால் அதற்காக யாருமே அழுவதே இல்லை. இந்த உடலைவிட்டு உயிர்பிரிந்த போது மட்டும் ஏன்தான் அழுகிறார்களோ தெரியவில்லை என்று – யாவரும் விழித்திட வேண்டும் என்று நிலை யாமையினை எப்படி நாசுக்காய் காட்டுகிறார் குண்டலகேசி ஆசிரியர்.

    மறிய மறியும் மலிர்ப மலிரும்
    பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
    அறிவது அறிவர் அழுங்கார் உவவார்
    உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று

    நயமும், நலமும், பொதிந்த பாடல். பாடலின் அமைப்பே அருமையோ அருமை! சொல்லும் பாங்கும், சொல்ல தேர்ந்தெடுத்த சொற்களின் பாங்கும், அந்தச் சொற்களைப் பாடலாய்க் கோர்த்த பாங்கும் வியக்காமல் இருந்திடவே முடியாது. அழுதாலும் பயனில்லை. ஆனந்தப் படுவதாலும் பயனில்லை. வருவதும் வரும். வந்தது வந்ததுபோல் போயும் விடும். போய்விடும் பொழுது புலம்புவதால் ஆவது எதுவுமே இல்லை. என்ன அருமையான வாழ்க்கைத் தத்துவம். தேடப்படாத குண்டலகேசியா இப்படிச் சொல்கிறது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா!

    மண்ணுளார் தம்மைப் போல்வர் மாட்டதே அன்று வாய்மை
    நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
    விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
    கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்

    கறை என்பது மனிதராயினும், தேவராயினும் ஏன் கண்ணுதற் கடவுளாகிய சிவனே ஆயினும் கறை என்பது கறைதான். தவறு என்றால் அங்கு எந்தவிதப் பாகுபாட்டுக்கும் இடமே இல்லை. என்று பார்க்கும் குண்டலகேசியின் பார்வை சுட்டெரிக்கும் தூய்மையான பார்வையாய் தெரிகிறதல்லவா!

    உவமைநயம் மிக்க நல்லதொரு பாடலையும் குண்டலகேசியில் பார்க்கிறோம். உவமையினைக் காட்டிட அமைந்தாலும் அங்கும் தத்துவமே முன்னிற்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
    ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
    தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்ல்லாத்
    தூயவனை நோக்கியுள துப்பரவும் எல்லாம்.

    காற்றை நம்பியே ஓடம் செல்லுகிறது. ஊழ்வினையின் வழியேதான்  வாழ்க்கை அமைகிறது. மனத்தில் தூய்மை வருவதற்கு உகந்தவழி எது தெரியுமா? தூய மனத்தினை உடைய அந்த புத்தபிரானை நினைப்பதேயாகும், இங்கு ஒவ்வொன்றுக்குமே காட்டப்படும் உவமையினை எண்ணிப்பார்த்தால் குண்டலகேசியும் நல்லதொரு இலக்கியமே என்பது புலனாகும்.

    ஐம்பெரும் காப்பிய வரிசையில் இடம் பெறும் வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்னும் கருத்து இலக்கிய அறிஞரிடையே காணப்படுகிறது. அதேவேளை இதனை வள்ளுவத்தின் பின் வந்ததென்றும்  அறிஞர்கள் சிலர் சொல்லு கிறார்கள். வள்ளுவத்தின் சில பாடல்களை எடுத்தாளும் தன்மையினை வளையாபதி கொண்டு இருப்பதால் இப்படிக் கூறும் நிலையும் வந்திருக்கலாமோ என்றுகூடக் கருதிட முடிகிறதல்லவா? இது சமணம் சார்ந்தது என்னும் கருத்து இருக்கிறது. அதேவேளை இதில்வரும் நாயகன் சைவமதத்தவனாய் இருப்பதால் – சமணம்  சார்ந்தது என்று எடுப்பது பொருந்துமா என்னும் நிலையும் அறிஞரிடையே காணப்படுகிறது. ஆனால் வளையாபதியின் பாடல்களில் காணப்படும் கருத்துக்களை நோக்கும் பொழுது சமணச் சார்ப்பான தன்மையே பெரிதும் இருப்பதும் தெரிய வருகிறது.

    வளையாபதிக் காவியத்தின் ஆசிரியர் யார் என்பதும் அறியமுடியவில்லை. எழுபத்து இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஆனாலும் இப்பாடல்களை மையப்படுத்தி ஒரு கதையும் அமைந்தே இருக்கிறது. அந்தக் கதையும் ஊகமாய்த்தான் இருக்கும் என்னும் ஒரு நோக்கும் அறிஞர்களிடையே  இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    எழுபத்து இராண்டு பாடல்களுமே ஒரே இடத்தில் கிடைக்க வில்லை. புறத்திரட்டு என்னும் நூல் பதினான்காம் நூற்றாண்டில் வந்தமைகிறது. அந்த நூலில் இருந்து அறுபத்து இரண்டு பாடல்களை வளையாபதியின் பாடல்கள் என்று அறிஞர்கள் கண்டறிந் திருக்கிறார்கள். அடியார்க்கு நல்லார் என்பார் சிலப்ப திகாரத்துக்கு உரை எழுதி இருக் கிறார். அவர் உரை எழுதும் பொழுது மூன்று பாடல்களை எடுத்துக்காட்டாய் கையா ண்டிருக்கின்றார். அந்த மூன்று பாட்டும் வளையாபதியின் பாட்டென்று தீர்மானித் திருக் கிறார்கள். அத்துடன் மேலும் இரண்டு பாடல்களும் கிடைத்திருக்கின்றன. இலக்கணத்துக் கென்று பல நூல்கள் தமிழில் இருக்கின்றன அவற்றில் யாப்பருங்கலக்காரிகை என்பதும் முக்கிய இலக்கண நூலாகும்.

    இந்த நூலுக்கு ஒரு தமிழறிஞரால் எழுதப்பட்ட விருத்தி உரையில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாய் கையாளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கையாளப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வளையாபதிக்கே உரியதாகும் என்று தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக் கிறார்கள். வளையாபதிக்கான பாடல்கள் இப்படித்தான் சேர்க்கப்பட்டன என்பதை வளை யாபதி பற்றி நோக்கும் பொழுது அறியக்கூடியதாக இருக்கிறது.

    நிறைவான நிலையில் வளையாபதி காப்பியம் கிடைக்கா விட்டாலும் – கிடைத்த பாடல் களைக் கருத்திருத்தில் இருத்தி அதனையும் காவிய வரிசையில் வைத்தமை யினைப் பாராட்டியே ஆகவேண்டும்.குறைவான பாடல்கள் கிடைத்த நிலையிலும் அதனூடாக ஒரு கதையினையும் இணைத்த பாங்கையும் பாராட்டவே வேண்டும்.

    சிலம்பில் புகார் வந்தது போல் வளையாபதியிலும் புகார்வருகிறது. இங்கு தான் – கதையின் நாயகனான நவகோடி நாராயணன் வருகிறான். சிலம்பின் நாயகனான கோவலன் கண்ணகியை மணம் முடிக்கிறான். பின்னர் மாதவியையும் மணக்கிறான். கோவலனும் கண்ணகியும் வணிகர் குலத்தவர். மாதவி அக்குலத்தவள் அல்ல. வளை யாபதி நாயகன் நவகோடி நாராயணனும் வணிகர் குலத்தவன். வணிகர்  குலத் துப் பெண்ணை இவனும் முதலில் மணக்கிறான். பின்னர் வணிகர் குலம் அல்லாத இடத்தில் இருக்கும் ஒரு பெண்ணையும் இரண்டாந்தாரமாய்  மணக்கிறான். கிட்டத்தட்ட கோவலனின் சகோதரன் போல வளையாபதி நாயகன் நவகோடி நாராயணனும் அமைகிறான் அல்லவா!

    சிலம்பின் நோக்கம் வேறு. அதனால் அங்கு கதையின் திருப்பம் வேறு விதமாய் மாறுகிறது. வளையாபதியை எழுதிய ஆசிரியர் கதையினை வேறு நிலையில் காட்டிட முன் வருகிறார். தன் குலத்தை விட்டு வேறு குலத்தில் இரண்டாந்தாரமாய் நவகோடி நாராயணன் திருமணம் செய்ததை அவனுடைய வணிக குலத்தார் எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பார் – அவனையே வணிகர் குலத்தை விட்டு ஒதுக்கி விடுவோம் என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள். குலத்தாரின் எதிர்ப்புக்கு அஞ்சிய நிலையில் நவகோடி நாராயணன் தன்னுடைய இரண்டாவது மனைவியை விட்டு விட்டு தனது வணிகத்தைக் கவனிக்கக் கடற்பயணத்தை மேற்கொள்ளுகின்றான். அவனால் கைவிடப்பட்ட அவனின் இரண்டாவது மனைவி அப்பொழுது வயிற்றில் கருவினைச் சுமந்தபடி இருந்தாள் என்பது முக்கியமாகும்.

    கடல் பயணத்தால் ஈட்டிய பெருஞ் செல்வத்துடன் முதல் மனைவியோடு நவகோடி நாராயணன் ஆனந்தமாய் வாழ்கிறான். அபலையான அவன் இரண்டாம் மனைவி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அந்தப் பிள்ளை வளர்ந்து வரும் வேளை – அவனது நண்பர்கள்  “தகப்பன் பெயரே தெரியாதவன்” என்று கேலியும் கிண்டலுமாகப் பேசி அவனை மனம் நோகும்படி செய்து விடுகிறார்கள். மனம் நொந்த பிள்ளை தாயிடம் வேதனையைக் கொட்டித் தீர்க்கின்றான். பிள்ளையின் கவலை தாயையும் வாட்டியதால் இதுவரை மூடி வைத்திருந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள்.

    தனக்குத் தந்தை இருக்கிறார் என்று கேட்டதும் கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு துள்ளலுடனும், உற்சாகத்துடனும், ஆனந்தந்துடனும் தந்தையை நாடிச் செல்லுகின்றான். தந்தையைக் காணுகிறான். ஆனால் தந்தையோ தன்னுடைய வணைகர் குலத்துக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து அவனை மகனாக ஏற்றிட மறுத்துவிடுகிறான். ஏற்க மறுத்த விஷயத்தை அறிந்த தாயானாவள் சக்தியாய் விளங்கும் காளியை வேண்டுகிறாள். வணிகர் குலத்துப் பெண்கள் மத்தியில் காளியின் அனுக்கிரகத்தால் அவள் புனிதமானவள் என்னும் நிலை வெளிச்சமாகிறது. நிறைவில் நவகோடி நாராயணன் கைவிட்ட மனைவியையும், மகனையும் இணைத்துக் கொள்ளுகின்றான். அந்தப் பிள்ளைக்கு வீரபாணிபன் என்று பெயரையும் சூட்டி எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்று வளையாபதி கதை நல்லதாய் நிறைவுறுகிறது.

    நல்லதொரு சுபமான திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அல்லவா? இப்படியான ஒரு கதை இதற்குள் புதைதிருந்த காரணத் தால்த்தான் – பாரதி தாசன் இதனைத் திரைக்காவியம் ஆக்கினாரோ என்றும் நினைத்திட வைக்கிறதல்லவா!

    வளையாபதி இவ்வளவுதானா? இதனைப் படிப்பதால் என்னதான் வரப் போகிறது? வளையாபதி ஏதாவது கருத்துக்களைப் பகர்ந்திருக்கிறதா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா! கருத்துக்கள் இல்லா விட்டால் அங்கு காவியமும் இல்லை. இலக்கியமும் இல்லை என்றாகிவிடும் அல்லவா! சமணக் காவியமா, சைவக் காவியமா என்றெல்லாம் விவாதிப்பதை விட்டு விட்டு – இக்காவியம் எதனைக் கூறுகிறது என்று பார்த்தால் – கல்லாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை இவைதான் இக்காவியத்தின் கருப்பொருள்களாகும்.  அதேவேளை வாழ்வியலுக்கு ஏற்ற கருத்துக்கதுக்களையும் காட்டாமலும் வளையாபதி இருக்கவில்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். இங்கே காட்டப்பட்ட கருக்கள், சைவத்திலும் போற்றப்படு கின்றன. அதே வேளை சமணனந்தான் இக்கருக்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக் கிறது என்பது பொதுவான நிலை எனலாம். ஆதலால் வளையாபதியினைச் சமணக் காப்பியம் என்றே எடுக்கும் நிலை வந்துவிட்டது.

    பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
    துறையிலா வசன வாவி துகில் இலாக் கோலத் தூய்மை
    நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
    சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே

    என்னதான் இருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லாவிட்டால் எல்லாமே வீண்தான் என்று காட்டும் இந்தக் கருவானது வாழ்வியலைக் குறிப்பதாய் இருக்கிறது அல்லவா? வளையாபதியின் பார்வை இப்படியும் இருக்கிறது.

    உயர்குடி நனியுட் டோன்றலூனமில் யாகையாதன்
    மயிர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
    பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோட லென்றாங்
    கரிதிவை பெறுதலேடா பெற்றவர் மக்க ளென்பார்

    என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் அமையப் பெறுதல் வேண்டும். அவ்வாறு அமையப் பெறுபவர்களே பிறவியின் பயனை அடைந்து நல்ல பிறப்புடையாராய் மதிக்கப்படுவர் என்பதும் வளையாபதியின் பெருநிலை எனலாம். செப்பம் வேண்டும், நாண் வேண்டும். ஒழுக்கமும், வாய்மையும்  அமைய வேண்டும். ஈகையும் கூடவே இன்சொல்லும் இருக்க வேண்டும்.அதுமட்டுமன்றி இகழாமையும் கொள்ள வேண்டும்.ஒழுக்கத்தைப் பேணவேண்டும், பணிவுடமையினைப் பக்குவமாக்க வேண்டும்.என்னும் வாழ்வியல் தத்துவங்கள் இப்பாடலினால் காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே.

    அடக்கமுடமை, அறமனை காத்தல், பிறன்மனை நாடாமை, உண்டி கொடுத்தலின் உயர்வு, அருளின் பெருமை, புலால் மறுப்பதன் உன்னதம், தவத்தின் மாண்பு, காமத்தின் இழிவு, கள்ளாமை விளக்கம், செல்வத்தின் நிலையாமை, இளமை நிலையாமை என்று பல அறக்கருத்துக்களை வழங்கும் பாங்கில் – கிடைத்திருக்கும் வளையாபதிப் பாடல்கள் தந்து நிற்கின்றன.

    வல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
    கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
    நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
    நீத்தல் துணிவாம் நிலையாது இளைமையே

    என்னும் பாடலை மனமிருத்தினால் ஆடாத ஆட்டமும் பாடாத பாட்டுகளுமாய் திரியவே மாட்டோம்.இருக்கும் வாழ்வினைச் சீராக வாழ்வதற்கே முயலுவோம்.

    வளையாபதியின் கிடைத்த பாடல்களே இவ்வளவு அரிய கருத்துக்களை வழங்கி இருக்கிறது என்றால் – முழுமையாய் வளையாபதி கிடைத்திருக்கு மானால் – எத்தனையோ பொக்கிஷமான கருத்துக்களை அனைவருமே பெற்றுப் பயன் அடைந்திருப்போம். நல்ல கற்பனை வளமான பாடல்களையும் வளையாபதி கொண்டி ருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    காப்பு + இயம் என்பதே காப்பியம் ஆகிறது. மக்களின் வாழ்வியல் சிந்தனை, சமய நம்பிக்கைகள், அரசியல் நிலை, இவற்றை உள்ளடக்கியதாய் அதனூடாக பயணிக்கும் வகையில் கதைமாந்தரைக் கொண்டு கதையை  நடத்தி – அக்கதை மாந்தரின் வாயிலாகப் பலகருத்துக்களை வெளியிடும் பாங்கில் – படைத்த புலவனின் ஆளுமையினை வெளிப்படுத்தும் பாங்கில் முகிழ்த்து வந்து நிற்பதுதான் காவியம் ஆகிறது. காவியம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. எல்லாக் காவியங்களிலும் இந்த வரை விலக்கணங்கள் முழுமை பெற்றிருக்கின்றனவா என்பதும் ஆராய்வுக்கு உரியதேயாகும்.

    காவியங்களில் தலைவன் தலைவி நிச்சயம் இடம் பெறுவார்கள். சில வேளை தலைவனை விட தலைவியே அக்காவியத்தில் முதன்மையாய் இருப்பதையும் காணமுடிகிறது. காவியத்தைப் படைப்பவரின் எண்ணமே இவற்றை வடிவமைக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. கதைகளினூடாக பல்வகையான அறங்களை வெளிப்படுத்திக் காட்டும் பாங்கினையே காவியங்களில் காண்கிறோம்.

    அந்தவகையில் ஐம்பெரும் காவியங்களும் இணைந்தே இருக்கின்றன என்றுதான் எடுக்க முடிகிறது. குண்டலகேசியையும் வளையாபதியையும் படிப்பதால் என்னவந்து விடப் போகிறது என்னும் எண்ணமும் நிச்சயம் ஏற்பட்டே ஆகும்.தேடப்படாத இலக்கியங்களான இவை  – பல கருத்துக்களைச் செப்பி நிற்பதற்காகவேனும் படிக்க வேண்டும். இந்தக் காவியங்கள் காலத்தும் திருமணம் என்பதில் சாதிக்கட்டுப்பாடு மிகவும் இறுக்கமாய் இருந்திருக்கிறது என்பதும் அறிந்திட முடியும். தாக்கத்துக்கு உள்ளானவர்கள் பெண்களாகவே கானப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திடுகிறோம் பெண்களையே – அக்காலம் தொடக்கம் இக்காலம் வரையில் துன்பத்துள் ஆழ்த்துவது என்பது சமூகத்தின் மாற்ற முடியா நிலை என்பதும் மனத்தில் பதிகிறது. எதிர்த்த பெண்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு வசந்தம் இல்லாது வரண்டே போனது என்பதும் மனத்தில் பதிகிறது. முடிவில் உலக வாழ்வினையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கே பெண்கள் வந்தும் விடுகிறார்கள் என்பதையே குண்டலகேசியும் , வளையாபதியும் எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது எனலாம்.

    காலத்தின் கருத்துக்களே இலக்கியமாய் எழுகின்றன. இலக்கிய வரலாற்று அறிஞரின் நோக்கும் இதுவாகத்தான் இருக்கிறது. ஐம்பெரும் காப்பியங்கள் எழுந்த காலத்துச் சமய நிலையும், சமூக நிலையும், அரசியல் நிலையும், அந்தக் காப்பியங்களிலும் புகுந்துவிடாமல் இருக்கவே இல்லை என்பதும் நோக்கத்தக்கதே. ஐம்பெரும் காப்பியங்களிலும் சமயக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாத் ஒன்றாகவே காணப்படுகிறது. சிலம்பினைச் சமணம் சார்ந்தது என்று சொன்னாலும் கூட – அது சமய நல்லிணக்க்த்தைப் பேணுவதாய் அமைகிறது என்று அறிஞர் சுட்டிக் காட்டுவார்கள். அதே வேளை தேடப்படாத இலக்கியம் என்று நான் குறிப்பிடும் குண்டல்கேசியும், வளையாபதியும், சமய சமரசத்துக்கு அப்பால் சென்று – சமணம் என்னும் மதம்சார்ந்த உறுதியான கருத்துக்களைக் காட்டும் பாங்கிலேயான் அமைந்திருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். அதேவளை   வாழ்வியலிலும்  அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாய், நிலையாமையினை மேலோங்கிக் காட்டும் பாங்கினையே – தேடப்படாத இலக்கியங்கள் செப்பி நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதேயாகும். கதைக்குக் கதையாயும், கருத்துக்களுக்குக் கருத்தாயும் – காட்டி நிற்கும் குண்டலகேசியையும், வளையாபதியையும் “தேடப்படாத இலக்கியம்” என்று எண்ணுவதையோ அல்லது சொல்லுவதையோ மறந்துவிடுவோம். அவையும் நாடப்படும் இலக்கியமே என்பதையும் கருத்திருத்துவோம்!

    Share
  • கல்வித் தெய்வமானவளே கருணையுடன் அருள்புரிவாய்!

    கல்வித் தெய்வமானவளே கருணையுடன் அருள்புரிவாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேர்ண், ஆஸ்திரேலியா 

    கற்பனையாய் வருவாய் கவிதையாய் வருவாய்
    காவியமாய் வருவாய் கருத்துப் பெட்டகமாவாய்
    சொற்பதமாய் வருவாய் சுந்தரமாய் வருவாய்
    நற்பதத்து நாயகியே நாளுமெமக் கருள்புரிவாய்

    வெள்ளைக் கமலத்தை விரும்பியே ஏற்றாயே
    வீணையினைக் கரமேந்தி மீட்டுகிறாய் அறிவிசையை
    தெள்ளுதமிழ் நாம்பாட செய்தவளும் நீயன்றோ
    நல்லதமிழ் கொண்டுன்னை நாம்பரவி நிற்கின்றோம்

    குழந்தை மொழியினிலும் குயிலின் குரலினிலும்
    கொஞ்சும் கிளியினிலும் குடிபுகுவாய் நீயென்றும்
    வஞ்ச மனமுடையார் வண்ணமுற வருவதற்கு
    வாண்மையுடை கல்வியினை வழங்கிடுவாய் கலைமகளே

    கல்வியினை நாடாதார் கணக்கின்றி இருக்கின்றார்
    கல்விகற்க விருப்புடையார் வசதியின்றித் தவிக்கின்றார்
    கல்வியினைக் காசாக்கும் கசடர்பலர் பெருகிவிட்டார்
    கல்வியினைப் பெற்றுநிற்க கருணைகாட்டு கலைமகளே

    கல்வியெனப் பலபட்டம் பெற்றிட்டார் நாட்டினிலே
    கண்ணியத்தைக் குழிதோண்டி புதைத்துமே நிற்கின்றார்
    கல்வியதன் பெறுமதியைக் கருத்திலவர் கொள்ளாமல்
    கயமைக்குணம் கொண்டுள்ளார் கண்பாராய் கலைமகளே

    குருவாகி நிற்கின்றார் குறைகளையும் கொண்டுள்ளார்
    குருநாடிப் போவோர்க்கு குந்தகமும் கொடுக்கின்றார்
    குருமாரின் குறைகளைய கொடுத்திடுவாய் நற்பாடம்
    குருவாகி இருக்கின்ற குணக்குன்றே வேண்டுகிறோம்

    கல்வியெனும் பெருங்கடலில் கசடுபல கலக்கின்றார்
    கல்வியெனும் பெருங்கடலின் கசடறுப்பாய் கலைமகளே
    கல்வியெனும் பாற்கடலை கருத்துடனே சுவைப்பதற்கு
    கல்வித் தெய்வமானவளே கருணையுடன் அருள்புரிவாய்

    Share
  • செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம்!

    செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நிலையாக நில்லாமல் நீள்சுகத்தை நல்காத
    அலைபாயும் பொருள்நாடி அனைவருமே அலைகின்றார்
    அலைமகளே உன்னருளை அவர்நாடா ஓடுகிறார்
    அவரகத்தை மாற்றிவிட அருள்சுரப்பாய் அலைமகளே

    இவ்வுலக வாழ்வினுக்கு இன்பமே பொருளாகும்
    இன்பமதை மனமிருத்தி பொருள்நாடல் முறையல்ல
    பொருளெம்மை வந்தடைந்தால் போகமதை மனமகற்றி
    அலைமகளின் அருள்கிடைக்க அனுதினமும் வேண்டிடுவோம்

    தளர்வறியாச் செல்வமதை தந்தருள வேண்டுகிறோம்
    நிலைதழும்பா வாழ்க்கையினை நீயருள வேண்டுமம்மா
    விலையில்லாச் செல்வமென்று விளம்பிநிற்கும் மனமகல
    அலைமகளே அருள்புரிவாய் அடிபணிந்து பரவுகிறோம்

    அளவான பொருளமைய அலைமகளே அருளிடம்மா
    அறம்செய்யும் அகமமைய அருள்புரிவாய் அலைமகளே
    ஆசைவலை அறுவதற்கு அம்மாநீ உதவிடுவாய்
    அனுதினமும் திருவடியைப் பரவுகிறோம் அனைவருமே

    கொள்ளையிடும் குணமுடையார் குவலயம்விட்  டகலவேண்டும்
    குணமுடையார் குவலயத்தில் குறைவிலா திருக்கவேண்டும்
    வறுமையெனும் வார்த்தையது வரண்டழிந்து போகவேண்டும்
    வையகத்தில் மக்களென்றும் வாழ்வாங்கு  வாழவேண்டும்

    செல்வமதை தீதில்லா வழியினிலே பெறவேண்டும்
    செல்வமதை நல்லதற்கு செலவிடவே எண்ணவேண்டும்
    செல்வமது செல்லுமெனும் நிலையதனை மனமிருத்தி
    செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம்

    வற்றாத செல்வமதை வழங்கினாலும் தாயே
    வழங்குகின்ற மனமமைய வரமருள்வாய் நீயே
    சுற்றமொடு சூழவுள்ளார் சுமையகல வேண்டும்
    சுந்தரியே இலக்குமியே தொழுகின்றோம் அம்மா

    நற்கருமம் செய்வதற்கே நற்செல்வம் தருவாய்
    தற்பெருமை கொண்டோரை தலைபணிய வைப்பாய்
    பொற்குவியல் கொடுத்தாலும் நற்குணத்தை அளிப்பாய்
    புனிதமுடை  நின்பாதம் தொழுகின்றோம் அம்மா

    Share
  • மனமகிழ மனமுறையும் பெருவிழாவே  நவராத்திரி!

    மனமகிழ மனமுறையும் பெருவிழாவே நவராத்திரி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஒன்பது என்பது எண்களிலும் முக்கியமானது. ஜோதிடங்களிலும் முக்கிய மானது.எண்கணித ஜோதிடத்திலும் இன்றியமையாததாய் இருக்கிறது.இந்த ஒன் பதை நவ என்னும் பெயரினைக் கொடுத்து இராத்திரியுடன் இணைத்து நவராத்திரி என்றும் அழைக்கின்றோம்.நவராத்திரி என்றாலே ஒன்பது இரவுகள் என்பதையும் எல்லோரும் அறிவோம். நவ – என்றால் இன்னுமொரு கருத்தும் இருக்கிறது. அதாவது புதுமை என்பதையும் கருத்திருத்த வேண்டும். நவநாகரிகம் என்று – புதிய அம்சங்களுடன் வந்தமைந்த நாகரித்தைப் பெயரிட்டு அழைக்கிறோம் என் பதையும் யாவரும் அறிவோம்.புதுமைகள் பல வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்னும் எண்ணத்தினால்த்தான் வருடந் தோறும் நவராத்திரியினைப் பக்தி பூர்வமாக அனுஷ்டித்து வருகிறோம் என்றும் எண்ணிடத் வைக்கிறதல்லவா !

    நவராத்திரி என்றவுடன் பெண்மைதான் முன்னே வந்து நிற்கும். பெண்மை என்றதும் அங்கு தலைமை தாங்குவது தாய்மைதானே! தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை தொன்று தொட்டு சமூகத்தில் இருந்து வருகிறது என்பதை வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.எம்மைப் படைத்த ஆண்டவனையே “அம்மையே” என்றுதான் அழைத்து ஆராதிக்கின்றோம். மணிவாசகப் பெருமானே “அம்மையே அப்பா ஒப்பிலாமணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று தாயினையே முன்னிறுத்தி அந்தப் பரம்பொருளை விழிக் கின்றார். ” தாயினும் நல்ல தலைவர் என்றடியார்” என்றும், “தாயும் நீயே தந்தையும் நீயே” என்றும். சம்பந்தப் பெருமானும் தாயினை முன்னிறுத்திப் பாடுவதும் நோக்கத்தக்கதே.தமிழ் மூதாட்டி ஒளவையார் எத்தனையோ அறிவு ரைகள் பகர்ந்தவர். அவர்கூட கொன்றை வேந்தனை ஆரம்பிக்கும் வேளை “அன்னையும்” என்றுதான் முதலடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறார்.

    நாம் வாழும் பூமியைய் தாய் என்கின்றோம். வாழ்வினுக்கு அவசியமான பொறுமையைத் தாய் என்கின்றோம். அனைவரின் அகத்திலும் அமரவேண்டிய கருணையையும் தாய் என்றுதான் சொல்லுகிறோம். ஓடுகின்ற ஆறுகளுக்கும் தாய்மையைக் கொண்ட பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத் துகிறோம் அல்லவா!

    உலகிலே யாவராலும் மதிக்கப்படுவதும், புனிதமாய் கருதப்படுவதும் என்ன வென்று பார்க்குமிடத்து  அஃது தாய்மையாய்த்தான் மலர்ந்திருக்கிறது எனலாம். தாய்மைக்கு ஈடாக எதுவுமே இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவேதான் தாய்மையை வழிபாட்டு நிலைக்கு எங்கள் முன்னோ ர்கள் உயர்த்தினார்கள் எனலாம். அந்தத் தாய்மையினை நவராத்திரியுடன் இணைத்து – ஒன்பது இரவுகளையுமே தாய்த் தெய்வ வழிபாடாக எங்களின் முன்னோர்கள் அமைத்து விட்டார்கள். பெண்மை என்றாலே பெருஞ்சக்தி என்றுதான் போற்றப்படுகிறது. அந்த வகையில் பெருஞ்சக்தியாக உருவெடுக்கும் தெய்வத்துக்கு ஒப்பிட்டுத்தான் சக்தி வழிபாடு என்பதே தொடங்கி இருக்கலாம் என்று கருதமுடிகிறதல்லவா! அகிலத்தின்  இயக்கத்துக்கு அந்தச்சக்தியே முதன்மையாய் இருக்கிறது அல்லவா! அப்படிப்பட்ட சக்தியானது இல்லாவிட்டால் இந்த அகிலத்தின் இயக்கமே அற்றுவிடும் அல்லவா? இந்த அடிப்படையில் சக்தியை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே பக்தி பூர்வ மான நவராத்திரி விழாவாகும்.

    சிவ என்றால் ஏகன் என்பதே அர்த்தமாகும். ஏகம் என்றால் ஒன்று என்றுதானே பொருள்.அதனால்த்தான் சிவனுக்கு உரிய ராத்திரியான சிவராத்திரியை ஒன்றாக் கினார்களோ தெரியவில்லை. நவ என்றால் ஒன்பது. நவசக்திகளைக் குறிக்க நவ ராத்திரியை ஏற்படுத்தியும் இருக்கலாம் அல்லவா! சக்தி பெரிதா சிவன் பெரிதா என்று எடுத்து வீண் வாதம் மட்டும் செய்து விடவே கூடாது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தியும் இல்லையே என்றாகிவிடும். இரண்டுமே பிரிக்க முடியா நிலையாகும். இதனால்த்தான் “மன்னுயிர்கள் சாரத் தருஞ் சக்தி – பின்னமிலான் எங்கள் பிரான்” என்று திருவருட்பயன் காட்டி நிற்கிறது.

    வடக்கே காஷ்மீர் தொடக்கம் தெற்கே கன்யாகுமரிவரை, மேற்கே பாஞ்சால த்திலிருந்து கிழக்கே பர்மா வரை, ஈழத்தில் பல பகுதிகளிலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சைவர், வைணவர், சாக்தர், காணாபத்தியர், என்று எல்லா மதத்தவர்களுமே நவராத்திரியை அனுஷ்டிக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்க தேயாகும். நவராத்திரி எப்பொழு ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது – பாரத காலம், இராமாயண காலம் என்று நீண்ட காலமாகவே நவராத்திரி கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்றுதான் அறிய முடிகிறது.

    நவராத்திரி என்பது சக்தியை மையப்படுத்திய பூஜையாக இருப்பதால் – இதனைப் பல பெயரில் அழைத்து அனு‌ஷ்டித்து வருவதும் நோக்கத்தக்கது. அம்பாள் எனக் காஷ்மீரிலும், பவானி என ராஜஸ்தானிலும், கல்யாணி என கூர்ஜரத்திலும், உமையென்று மிதிலைப்பகுதியிலும், அழைத்துப் போற்றிப் பரவுகின்றனர்.இதனை விடவும் – மீனாட்சி, காமாட்சி, சாமுண்டி, சரஸ்வதி, துர்க்கை, பகவதி என்றும் பெயரிட்டு சக்தியை போற்றி வருவதையும் காணக்கூடியதாகவும் இருக்கிறது.

    சக்தியினைப் பரவி நிற்கும் நவராத்திரி என்பது ஒன்றல்ல. நவராத்திரி என்பது வருஷத்தில் நான்கு முறை வருகிறது. மஹா நவராத்திரி என்னும் பெயருடன் தையில் வருகிறது. வஸந்த நவராத்திரி என்பது பங்குனியில் வருகிறது, ஆனியில் வருவது ஆஷாட நவராத்திரியாய் அமைகிறது. புரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. இந்த சாரதா நவராத்திரியைத்தான் இந்தியா தொடக்கம் ஈழம்வரை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவின் வடபகுதியில்  ‘தசரா” என்னும் பெயருடன் கலைமகளின் விழா அமைகிறது. நாங்கள் நவராத்திரி விழாவாக எடுக்கின்றோம். நவராத்திரியின் நிறைவினை விஜயதசமி என்று அழைக்கிறோம். விஜயதசமியையும் உள்ளடக்கியே வடக்கில் “தசரா” என்றார்களோ என்றும் கருதக்கூடியதாக இருக்கிறதல்லவா!

    நவம் என்றால் ஒன்பது  எண்ணிக்கை என்று பார்த்தோம்.. அது எண்ணிக்கை மட்டுமல்ல – புத்துணர்ச்சி என்னும் கருத்தையும் தாங்கியே நிற்கிறது. கலைகளைப் போற்றி நின்று கொண்டாடும் வழிபாட்டு விழாவாக நவராத்திரி அமைகிறது எனலாம். கலைகளை முன்னிறுத்தி அனுஷ்டிக்கும் பொழுது அங்கு புத்துணர்வு மேலிடுவது இயல்பான ஒன்றல்லவா? இதனால் நவராத்திரி புத்துணர்வினை நல்கி புதுத்தெம்பு பெருகி வாழ்வில் மகிழ்வினை நல்கிட உதவும் விரதமாய், கொண்டாட்டமாய் அமைகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    எங்களின் சமயம் எங்கள் வாழ்வுடன் இணைந்தே வருகிறது. ஆனபடியால்த்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.  தளர்வுண்டு போகாதிருப்பதற்குக் காரணம் அதன் தொடர் நிலை என்றுதான் என்ண முடிகிறது. அப்படித் தொடர்வதற்குக் காரணம் –  நாங்கள் சமயத்தை வாழ்வியல் ஆக்கிக் கொண்டதே முக்கிய நிலை எனலாம். கடவுளையே உறவு முறையில் அழைத்து கடவுளுக்கே குடும்பமும் வைத்து வாழ்வியயோடு இணைத்து நிற்கும் சமயத்தை உலகில் எங்குமே காணமுடியாது. அதனால் வாழ்வுக்கு வாழ்வியலுக்கு எவை எல்லாம் இன்றியமையாதனவோ அவற்றையெல்லாம் இறையுடன் இணைத்து அவற்றுக்கு பெருமையும் பெறுமதியும் காட்டி நிற்பதுதான் எங்கள் சமயத்தின் உன்னதம் எனலாம். கர்த்தர், கருணாநிதி, பிதா, பிள்ளை, அண்ணல், அரும்பொருள், நாயகன், நடுநிலையாளன், மாண்புடையான், மெய்ப்பொருளானவன், தலைவன், தோழன், என்றெல்லாம் அன்பு பாராட்டி அழைக்கின்றார் அந்தப் பரம்பொருளை. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக “தாய்” என்று அழைப்பதே சிறப்புடையதாகும் என்று தவசிரேஷ்டர்கள் எண்ணுகிறார்கள்.

    தாயிடத்துப் பிள்ளை உரிமையுடன் எதையுமே கேட்கும் நிலை இருக்கிறது. தாயான சக்தியிடம். வாழ்வினில் செம்மையாக வாழ எவையெல்லாம் எமக்குத் தேவை என்பதைத் காட்டி நிற்பதுதற்கு நவராத்திரி எல்லோருக்கும் வரமாய் வாய் த்திருக்கிறது எனலாம்.

    நல்ல நலம் வேண்டும். இவ்வுலகில் வாழுதற்கு நல்ல வளம் வேண்டும். நலமும் வளமும் வாய்த்துவிடுவது மட்டும் முக்கியமல்ல. அத்துடன் தெளிவும் வரவேண்டும். நலமென்னும் என்னும் பொழுது வீரமாகிறது.வளம் என்னும் பொழுது செல்வம்  ஆகிறது.தெளிவென்னும் பொழுது கல்வி வந்து அமைகிறது தெளிவைத் தரும் கல்வியையும், வளத்தைத் தரும்   செல்வத்தையும், நலத்தைத் தரும் வீரத்தையும் தந்தருளவாய் தாயே என்று மனமுருக  வேண்டிப் பிரார்த்தி த்து நிற்பதுதான் நவராத்திரியாய் வந்து அமைகிறது. வீரத்துடனும், செல்வத்துட னும் அறிவு அதாவது கல்வியானது இணைய வேண்டும். அப்படி இணைந்தால் த்தால் வீரமும் செல்வமும் ஒழுங்கான முறையில் பயனை அளிக்கும். அப்படி அமையும் பொழுது அங்கே வெற்றி என்னும் வெளிச்சம் பிரகாசமாய் வந்து நிற்கும். இதுதான் உண்மை. இதுதான் நிச்சயம். இதனை உணர்த்துவதாய் அமைவதுதான் நவராத்திரி. இந்த வெற்றியையே உணர்த்தி நிற்பதைத்தான்  விஜயதசமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்..

    சக்தியின் வடிவங்கள் பற்பல. எந்தத் தேவைக்கு என்ன சக்தி தேவையோ அந்தச் சக்தியாய் – தாயாய் விளங்கும் ஆதிசக்தி வந்து நிற்பாள். நாட்டின் ஆட்சி அதிகார த்தை நடத்தும் மந்திரிசபையில் பாதுகாப்பு, கல்வி, நிதி என்பதை நடத்துவதற் கென்று இருபது போல் – ஆதி சக்தியானவளும் உலக இயக்கத்துக்கு இன்றியமை யமையாதனவாகிய வீரம், செல்வம், கல்விக்கும் பொறுப்பான சக்தியாய் வருவதை நவராத்திரி விளக்கி நிற்கிறது எனலாம். துர்க்கை எனும் சக்தி வீரத்துக்கும்,   இலக்குமி எனும் சக்தி செல்வத்துக்கும், சரஸ்வதி எனும் சக்தி கல்விக் குமாய் அமைந்திருக்கிரது என்பது நோக்கத்தக்கதாகும்.

    தாய்மை என்பதைப் பெண்மையில்த்தான் காணலாம். பெண்மை என்றால் மென்மை என்றும் பொருள் இருக்கிறது. அந்த மென்மைக்குள்ளே பொறுமையும் இருக்கிறது. மோலோங்கும் சினமும் இருக்கிறது. பெண்மை அடங்கி நிற்கும் பொழுது அங்கு  மென்மை மேலோங்கும். அதே  பெண்மை பொங்கிடும் வேளை யாவுமே பொசுங்கிவிடும் வெம்மையே வெளிப்பட்டு நிற்கும். பெண்மையினை மென்மையாய்த்தான் அணுகவேண்டும். சக்திகளாய் அமைகின்ற – மலை மகளையும், அலைமகளையும், கலைமகளையும், அன்புடன் அணுகினால் வாழ்வினிலே நலமும் வரும், வளமும் வரும், நல்ல தெளிவும் வரும்.

    நல்நலமும், நல்வளமும், நல்லறிவும், ஒன்றாக இணையும் பொழுதுதான் வாழ்க்கையென்பது பூரணமாகிறுது. இதில் ஒன்று குறைந்தாலும் அஃது நிறைவுடைய வாழ்வாக அமையவே மாட்டாது.இவை மூன்றையும் பெற்றிட மனம் மொழி மெய்களால் உருக வேண்டும். நம்மை மறந்து சலனமற்ற அந்தச் சக்தியிடம் சரணடைதல் வேண்டும். கிடைத்த வளத்தை கீழாக்குவதோ பாழாக் குவதோ பொருத்தமில்லா நிலையாகும்.

    இறைவனைக் குறித்து உண்ணாமல் , உறங்காமல், உயிருக்கு வருகின்ற ஊறுகளைப் பாராமல், தவமியற்றி அதன் பயனாக வரத்தால் பல பெற்றிட்ட பலர் – கிடைத்தற்கரிய அத்தனையையும் , தங்களது ஆணவம் என்னும் அகந்தையினால் பொல்லாவழியில் செலுத்து – முடிவில் வரமும் போய் வாழ்வும் அழிந்ததை இதிகாசங்கள், புராணங்கள் வாயிலாக அறிகின்றோம்.

    சுத்தம் என்னும் பதத்தின் முன் அகரம் வந்தால் அது “அசுத்தம்” ஆகி விடுகிறது. சுரர் என்னும் பதத்தின் முன் அகரம் வரும்பொழுது “அசுரர்” வந்துவிடுகிறார். சுத்தமாய் இருப்பவர் “சுரர்”. அசுத்தமாய் இருப்பவர் “அசுரர்” என்றாகி விடுகிறதல்லவா! நவராத்திரி பற்றிய சிந்தனையில் இஃது அவசியாமா என்று எண்ணிடத் தோன்றுகிறதா? இறைவனிடம் வரம்பல பெறுவதற்கு நீண்ட நாட்கள்…. ஏன் வருடக்கணக்கில் தவமியற்றி பெறுதற்கு அரிய பேறுகளை எல்லாம் பெற்றதன் பின்னர் – அத்தனையையும் அறமில்லா வழியில் செல்லவிட்டு, ஆணவத்தின் உச்சிக்கே சென்று, முடிவில் வரமும் இழந்து, வாழ்வும் முடிந்துபோன நிலையினைப் புராணங்கள் இதிகாசங்கள் காட்டுகின்றன.

    சிவ பக்தனானா இராவணன், சிவனிடம் வரம் பெற்ற பத்மாசூரன், சிவனிடம் வரம் பெற்ற சூரபதுமன், ஹம்சன், இரணியன், மகுடாசூரன் என்று இந்தவரிசை நீள்கிறது.வீரம், செல்வம், கல்வி மூன்றும் வந்தாலும் – அங்கு அகந்தை மட்டும் வந்துவிடக்கூடாது. அறிவுடன் அதாவது நல்லறிவுடன் சேரும் வீரமும் , செல்வமுமே நிலைக்கும். பயன் அளிக்கும். பல்கியும் பெருகும். மாறாக நடப்பின் அத்தனையும் பயனற்றே போய்விடும் என்பதை மனமிருத்த வேண்டும். அந்த அருமையான தத்துவத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் பக்திபூர்வமான நிலைதான் “நவராத்திரி” என்பதையும் அனைவருமே அகமிருத்துவது அவசிய மாகும்.

    நவராத்திரி என்பது விரதமா அல்லது கலைகளின் விழாவா என்று எண்ணும் பொழுது – விரதத்துடன் இணைந்த கலைவிழாவாகத்தான் நவராத்திரியைப் பார்க்கின்றோம். நவராத்திரி தொடங்கி விட்டாலே – ஆடலுக்கும், பாடலுக்கும் குறைவே இருக்காது. கலைஞர்கள் அனைவரும் சங்கமிக்கும் விழாவாக நவராத்திரி அமைவது அனைவருக்கும் பேரானந்தமாகும். வீட்டிலும் பாட்டு. வெளியிலும் பாட்டு. கல்லூரிகள், கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்பார்க்கும் இடங்கள், யாவற்றிலும் நவராத்திரி மிகவும் சிறப்பாகக் கலை விழாவாகவும், பக்தி பூர்வமான சமய நிகழ்வாக அமைவதைக் காணக்கூடியதாக இருக்கும்.அதே வேளை அனைத்து ஆலயங்களிலுமே நவராத்திரி பக்திபூர்வமாய் நடைபெறுவதையும் காணலாம்.

    நவராத்திரி என்றதும் மனமெல்லாம் ஒருவித பூரிப்பே ஏற்படும். ஏனென்றால் கலைகளின் விழாவாக இருப்பதால். இந்த விழாவில் “கொலு” வைப்பது என்பது வீட்டிலும் இருக்கும்.ஆலயங்களிலும் இடம் பெறும். “கொலு” என்றால் அழகு என்பதுதான் அர்த்தமாகும். கொலு என்பது ஆடம்பரத்துக்காக வைக்கப்படுவது அல்ல. கொலு வைப்பதிலும் அர்த்தங்கள் பொதிந்தே இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமேயாகும்.

    கொலுவைப்பதிலும் சில நடைமுறைகள் வழக்கில் இருந்தே வருகின்றன. அதாவது ஒற்றைப் படையில் அமையுமாறுதான் கொலுவின் படிகளை அமைத்து வருகிறார்கள்.ஆனால் அவரவர் வசதிக்கு ஏற்பவும் கொலுவினை வைத்து வரு வதையும் காணமுடிகிறது.ஒன்பது படிகளாக வைப்பதை விஷேடம் என்று கருதும் நிலையே பரவலாகக் காணப்படுகிறது.

    “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணாலாகிய பொம்மைகளால் என்னைப் பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், செளகரியங்களையும் அளிப்பேன்” என்று தேவி பாகவதத்தில் – அம்பாள் கூற்றாக வருவது கொலு வைப்பதற்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் அல்லவா !

    கொலு மேடையில் கீழிருந்து முதற் படியிலே – ஓரறிவான, புல், செடி போன்ற வற்றையும், இரண்டாம் படியில், ஈரறிவுடைய நத்தை, சங்கு போன்றவற்றையும், மூன்றாவது படியில், மூன்றறிவுடைய கறையான், எறும்பு போன்றவற்றையும், நான்காம் படியில் நான்கறிவான நண்டு, வண்டு, போன்றவற்றின் பொம்மை களை யும், ஐந்தாம்படியில் ஐந்தறிவான மிருகங்கள், பறவைகளின் பொம்மைகளை வைத்தல் வேண்டும். ஆறாவது படிதான் எங்களுக்கு உரியதாகும். சிந்திக்கும் அறிவுடைய நிலை மனிதர்களுக்கே இருப்பதால் இந்தப் படியில் மனிதர்களின் பலவகைப் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும்.ஏழாவது படியானது – மனிதனாய் இருந்தும் உயர்நிலையினை எய்திய ரிஷிகளுக்கு உரியதாய் அமைகிறது.அங்கு ரிஷிகளின் பொம்மைகள் வைக்கப்படும். மனிதருக்கும் ரிஷிகளுக்கும் அப்பால் தேவர்கள் வருகிறார்கள்.எனவே எட்டாம் படியில் தேவர்கள் இடம் பெறுவார்கள். இதில் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள், தேவைதைகளின் பொம்மைகள் வைக்கப்படும்.ஒன்பதாம் படிதான் கடவுளருக்கு உரிய இடமாகும்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெருந் தெய்வங்களும், ஸரஸ்வதி , லக்‌ஷ்மி, பார்வதி ஆகிய முப்பெருந் தேவியரும், இடம் பெறுவர். நடுநாயகமாய் ஆதிபராசக்தியின் பொம்மை வீற்றிருக்கும்.

    வெறும் பொம்மைகளைக் கொண்டதாக கொலு அமைந்து விட்டது என்று எண்ணிவிடக்கூடாது. மனிதன் என்பவன் தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொண்டே வருகிறான்.அவனின் ஆன்மீகச் சிந்தனை பிரகாசிக்கும் நிலையில் முடிவில் இறைவனுடன் கலக்கவே வேண்டும். அப்படியான ஒரு தத்துவார்த்தத்தை உணர்த்துவதாகவே நவராத்திரியில் வைக்கப்படும் கொலு காட்டி நிற்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.       .

    இறை சக்தியால் நாமெல்லாம் இயங்குகிறோம். இறைசக்தியே எமக்கு இயக்க சக்தியாகும். அந்தச் சக்தியே அறிவை செல்வத்தை ஆற்றலை அளிக்கிறது. அந்த அளவிட முடியாத சக்தி அளித்த ஆற்றலை – அந்தச் சக்தியின் ஆசியுடன் வாழ்வில் கையாண்டால்  “வாழ்க்கை வழமாகும். வாழ்க்கை வையத்துள் வசந்தமாக அமையும்.”  இப்படி வாழ்வியலோடு இணைந்த சக்தியாய் அமைவது தான் நவராத்திரி விழாவின் கருப்பொருள் எனலாம்.

    மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
    ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
    ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
    வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

    வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
    ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
    காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
    மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே

    பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
    மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
    அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
    தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே

    Share
  • நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்!

    நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    ஆஸ்திரேலியா 

    நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்
    பொற்பதத்தைத் தினம்பரவி நற்கருணை வேண்டுகிறோம்
    நிற்பதுவும் நடப்பதுவும் நீநினைத்தால் நடந்துவிடும்
    உற்பதங்கள் வாராமல் உதவிடுவாய் மலைமகளே

    நாடழிக்கும் பேரரக்கன் தாண்டவத்தை ஆடுகிறான்
    நீயெழுந்து பேரரக்கன் நிட்டூரம் அழித்திடுவாய்
    கோரமுடை முகமுடைய கொரனோவாம் கொடியரக்கன்
    கொட்டமதை அடக்குதற்கு விரைந்துதிடுவாய் மலைமகளே

    துர்க்கையெனப் பெயர்தாங்கும் தூயவளே மலைமகளே
    துயர்துடைக்க நீவருவாய் எனநம்பி இருக்கின்றோம்
    பற்பலவே துன்பவலை படர்ந்தெம்மைச் சூழ்கிறது
    பார்காக்க கடைக்கண்ணால் பார்த்திடுவாய் மலைமகளே

    தளரா மனந்தந்து தயைதருவாய் மலைமகளே
    தயைகருணை மனம்நிறைய தானருள்வாய் மலைமகளே
    நிலையான ஆரோக்கியம் நீயருள வேண்டுகிறோம்
    நின்பாதம் தொழுகின்றோம் நீயருள்வாய் மலைமகளே

    வீரமெனப் பலரெண்ணி வீழ்த்துகிறார் மானுடத்தை
    வீரமதைப் பலபதர்கள் வீணாக்க வந்துள்ளார்
    வீரமதைச் சக்தியாய் கொண்டியங்கும் மலைமகளே
    தாரணியில் வீரமதைத் தர்மமாய் காட்டிடம்மா

    நின்பாதம் சரணடைந்தோம் நீதருவாய் நல்வீரம்
    நின்னருளால் நல்நினைப்பை நெஞ்சமெலாம் நிறைத்துவிடு
    நீதிநிறை வீரமதை நிலவுகில் நிறுத்திவிடு
    நின்சக்தி நிச்சயமாய் காத்துவிடும் மலைமகளே

    Share
  • குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்!

    குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    எழுத்தை அறிவித்து எம்மகத்தைத் திறந்திட்ட
    பழுத்த அறிவுடைய பக்குவமே குருவாவாவர்
    நிலத்தை வளமாக்கி நிறைவளத்தைக் காணுகின்ற
    மனத்தை உடையவரே மாண்புடைய குருவாவார்

    அகமுறையும் அழுக்ககற்றி அறிவுச்சுடர் ஏற்றிவைத்து
    ஆதவனாய் ஒளிவிடுவார் அவரேநற் குருவாவார்
    செவிநுகரப் பலதருவார் சிறியவற்றை ஒதுக்கிடுவார்
    புவியதனில் பெருந்துணையாய் பொருந்திடுவார்  குருவாவார்

    கற்பவற்றைக் காட்டிடுவார் கருத்தமர வழியாவார்
    நிற்பதற்கும் நடப்பதற்கு நீள்வழியும் ஆகிடுவார்
    நற்பதத்தைத் தேர்ந்திடுவார் நாளுமதை மொழிந்திடுவார்
    இப்புவியில் நல்வரமாய் வாய்த்தவரே குருவாவார்

    இலக்கியமு மாவார் இலக்கணமு மாவார்
    தலைக்கனமே இல்லா தரமான குருவாவார்
    உலைக்களமாய் இருப்பார் உருக்கியே எடுப்பார்
    நிலைத்திடவே வைக்கும் நிறை குருவுமாவார்

    மெஞ்ஞானம் விஞ்ஞானம் சொல்ஞானம் தருவார்
    அஞ்ஞானம் அகல்வதற் கவர்விளக்  காகிடுவார்
    கல்ஞானம் கல்ஞானம் எனவுரைத்து நிற்பார்
    நல்ஞானம் மிக்குடையார் நம் குருவுமாவர்

    காவியமும் அறிவார் ஓவியமும் அறிவார்
    கணிதமும் தெரிவார் கற்சிலையும் வடிப்பார்
    வானிலையும் சொல்வார் வைத்தியமும் சொல்வார்
    வாழ்க்கையிலே வளமாய் வந்தமைந்தார் குருவாய்

    தலைதொட்டு நாளும் தலைநிமிர வைப்பார்
    தலைகுனியும் செயலை தலைகுனிய வைப்பார்
    உலகிடையே வாழ  உயர்கருத்தை விதைப்பார்
    உணர்வுடனே கலந்து உள்ளுறைவார் குருவாய்

    குருவாசி பெற்றிடுவார் குவலயத்தில் சிறப்பார்
    குருவாசி கிடைத்திடுதல் பெரு வரமேயாகும்
    குருவாய்த்தல் யாவருக்கும் நல் வரமேயாகும்
    குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்

    Share
  • முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்!

    முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    ஓடிய கால்கள் உழைத்திட்ட கைகள்
    தேடியே செல்வம் திரட்டிய உள்ளம்
    வாடியே நில்லா வதங்கிடா வதனம்
    வதங்கியே மூலை இருப்பது முறையா?

    தூக்கிய சுமைகள் சுகமென எண்ணி
    சாப்பிடு நேரம் தனையுமே மறந்து
    காப்பிடு நோக்கில் களிப்புற்ற உள்ளம்
    கண்ணீரை உகுப்பது கருணையின் நிலையா?

    தடுக்கியே விழுவதைத் தடுத்திட நினைத்து
    அணைத்திடும் நோக்கில் அன்பினைச் சொரிந்து
    விடுப்புகள் இழந்து விருந்துகள் கொடுத்த
    வியப்புடை உள்ளம் வேதனை உறுவதா?

    விடியலை வழங்க விரைத்திட்டார் நாளும்
    தலையிடி என்று தவிர்த்திலார் வாழ்வில்
    உலையிடை பட்ட இரும்பென உருகி
    உழைத்தவர் இப்போ உழலுறார் வாழ்வில்

    தோளினில் ஏற்றிச் சாமியைக் காட்டினார்
    தோழனாய் மாறி சுறுசுறுப் பூட்டினார்
    வாழ்வினில் வசந்தம் காட்டிட முனைந்தார்
    வதங்கிய நிலையில் இருப்பது முறையா?

    கைப்பிடித் தழைத்து பள்ளியில் சேர்த்தார்
    கணக்கெழுத் தென்று பலபல காட்டினார்
    மெய்யினில் வருத்தம் மேவிடா நின்றார்
    மேதினி மீதினில் விக்கித்து நிற்கிறார்

    கற்பனை பலபல கண்டுமே நின்றார்
    கற்றவர் அவையினில் நிற்கவும் வைத்தார்
    நிற்பதும் நடப்பதும் நெஞ்சுரம் என்றார்
    நிற்கவே முடியா நிலையினில் இப்போ

    பள்ளியின் வாசலைப் பார்த்துமே நிற்பார்
    துள்ளியே வந்ததும் தூக்கியே கொஞ்சுவார்
    அள்ளியே அணைத்து அன்பினைப் பொழிவார்
    அள்ளியே அணைத்திடா அவரிப்போ தவிக்கிறார்

    அம்மாவும் அப்பாவும் பாட்டியும் தாத்தாவும்
    அன்புடை மாமியும் மாமாவும் இப்போ
    அழகெலாம் குலைந்து அயர்விலே உழன்று
    ஆறுதல் தேடுறார் அவர்நிலை உணர்வோம்

    காவோலை விழுவதும் குருத்தோலை சிரிப்பதும்
    காதாலே கேட்கக் களிப்பாக இருக்கும்
    காலத்தின் மாற்றம் எப்போதும் நிகழும்
    களிப்பினைத் தந்தவர் கண்ணீரைத் துடைப்போம்

    முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்
    ஒதுக்கிட நினைத்தல் உயர்குணம் அன்று
    அவரது ஆசியை அனைவரும் பெறுவோம்
    ஆண்டவன் நமக்கு அருளினை அளிப்பான்

    Share
  • ஆன்மீகத்தை அகம் நிறைத்தார் பாரதி!

    ஆன்மீகத்தை அகம் நிறைத்தார் பாரதி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    பாட்டுத்திறத்தாலே பாரினைப் பார்க்க வைத்தவர் பாரதி. இந்தியத் திரு நாட்டின் ஈடில்லாப் புதல்வர் பாரதி.அஞ்சாமையுடன் அறமுரைத்தவர் பாரதி.அன்னைத் தமிழை அரியாசனம் வைத்தவர் பாரதி.ஒற்றுமைக்கு உர மூட்டியவர் பாரதி.ஒடுக்கப்படுதலை உதறியே எறிந்தவர் பாரதி. நம்பிக்கையினை உயிர்மூச்சாய் ஆக்கியவர் பாரதி. மூடத்தனத்தின் முடைநாற்றம் போக்கியவர் பாரதி.உயர்திணை அஃறிணை என்று பாராமலே உணர்வு டன் பார்த்தவர் பாரதி.

    பாரதியார் ஒருபக்கம் பார்த்தவர் அல்ல. அவரின் நோக்கு பரந்து விரி ந்தது. அவரின் படைப்புகளும் பலதிறப்பட்டன. தேயத்தைப் பாடினார். சாதி யைப் பாடினார். சன்மார்க்கத்தைப் பாடினார். பெண்மையைப் பாடினார். மனிதர்க்குத் தேவையான உண்மையை பாடினார்.முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனத்தைப் பாடினார். பாப்பாவுக்கும் பாடினார். படித்தவர்க்கும் பாடி னார். பாமரர்க்கும் பாடினார். கவிபாடி ஓயாத பாரதியார் கதைகளும் எழு தினார். கட்டுரைகளும் எழுதினார். புதுக்கவிதை என்னும் வழியிலும் பய ணம் செய்தார். ஆயினும் இவற்றை எல்லாம் எழுதும் வேளை  ஆன்மீக உணர்வுடனேயே எழுதியிருக்கிறார். ஆன்மீகமே உறுதுணை என்னும்  அசையா நம்பிக்கையினை அகம்முழுவதும் பாரதி வைத்திருந்தார் என்பது கருத்திருத்த வேண்டியதாகும்.

    பாரதி என்பவர் பாரதநாட்டின் சொத்தாகி நின்றார். ஆனால் இன்று பாரெ ங்கும் பாரதியைக் கொண்டாடி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாத்திகரும் கொண்டாடுகிறார்கள். ஆத்திகரும் கொண்டாடி பெருமைப்படுகிறார்கள். பாரதி நாத்திகரா அல்லது ஆத்திகரா என்று எண்ணிப் பார்க்கும் பொழுது  அவரை எந்தவிதத்தில் எடுப்பது என்று வரும் பொழுது அவர் ஆத் தீகத்தில் அமிழ்ந்து விடுவதைக் காணமுடிகிறது எனலாம். எழுச்சி யைப் பாடினாலும்எதிர்ப்பைப் பாடினாலும்,   விடு தலையைப் பாடினா லும்வெற் றியைப் பாடினாலும் – ஆன்மீகத்தை அகத்தில் நிறைத்தே பாரதி பாடியிருக்கிறார் என்பதையே  கண்டிட முடிகிறது.

    பக்தி உடையர் காரியத்தில்
    பதறார்! மிகுந்த பொறுமையுடன்
    வித்து முளைக்கும் தன்மையைபோல்
    மெல்லச் செய்து பயனடைவார்!
    சக்தி தொழிலே அனைத்துமெனில்
    சார்ந்த நமக்கு சஞ்சலமேன்?
    வித்தைக்கு இறைவா! கணநாதா
    மேன்மைத் தொழிலிற் பணியெனையே!

    வித்தைக்கு இறைவனாக இருப்பவனே கணநாதனே என்கிறார்.அகத்தினில் பக்தியை அமர்த்தி இருப்பவர்கள் வாழ்க்கையில் பதறார் சிதறார் என்று நம்பிக்கையுடன் பாரதி சொல்லுகிறார்.உலகின் இயக்கமே சக்திதான். அந்தச் சக்திதான் எம்மையெல்லாம் வாழ்விக்கிறது. வழியினைக் காட்டு கிறது என்பதில் முழு நம்பிக்கையினை பாரதி கொண்டிருந்திருக்கிறார்.

    பாரதி சிந்தனையில் பெரும்பங்கு வகித்த ஆன்மீகத்தைப் பற்றியும்பார தியின் ஆன்மீகத் தேடலின் நோக்கம் பற்றியும்எதை இலக்காகக் கொண்டு பாரதி தன் ஆன்மீகத் தத்துவத்தைக் கட்டமைத்தான். என்பது பற்றியும் பார் ப்பது முக்கியமாகும். பாரதி பாப்பாவுக்கு என்று பாட்டு எழுதுதினான்.பாப்பா பாட்டுத்தானே என்று  சாதாரணமாக எடுத்து விடக் கூடாது. பசுமரத்தாணி போல் ஆன்மீகத்தை – ஆன்மீகம் என்று காட்டாமலேயே பாரதி அதற்குள் புகுத்தி விடுகிறான். எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் ஆன்மீகக் கருக் கள் முளைக்க வேண்டும் என்பதுதான் அவனின் அகத்தின் அவாவாக அமைந்தது எனலாம்.

    கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
    கூட்டி விளையாடு பாப்பா,
    எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
    இரக்கப் படவேணும் பாப்பா.

    பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
    பசுமிக நல்லதடி பாப்பா;
    வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
    மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

    வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
    வயலில் உழுதுவரும் மாடு,
    அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
    ஆதரிக்க வேணுமடி பாப்பா.

    பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
    புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
    தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
    தீங்குவர மாட்டாது பாப்பா.

    துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
    சோர்ந்துவிட லாகாது பாப்பா,
    அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
    அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

    வேத முடையதிந்த நாடு, – நல்ல
    வீரர் பிறந்த திந்த நாடு,
    சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
    தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

    சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
    நீதிஉயர்ந்தமதிகல்வி – அன்பு
    நிறைய உடையவர்கள் மேலோர்.

    உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
    உண்மையென்று தானறிதல் வேணும்;
    வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
    வாழும் முறைமையடி பாப்பா.

    இப்பாடல்கள் அத்தனையும் பாப்பாவுக்குப் பாடப்பட்ட பாடல்கள்தான். ஆனால் இப்பாடல்கள் வழியே பாரதி தெய்வீக உணர்வை ஊட்டுகிறான். சிந்தனைகளை ஆன்மீகம் என்னும் வெளிச்சத்தில் காட்டியும் நிற்கிறான் என்பதை அகமிருத்துவது அவசியமாகும். பாப்பாக்களுக்குச் சொல்லப்பட்ட அத்தனையும் வளர்ந்த எங்களுக்கும் நல்ல வரமாக இருக்கிறது என்பதை மறுத்து உரைத்திட முடியுமா சொல்லுங்கள்! சாதி பற்றிச் சொல்லுகிறான். உயர்வு தாழ்வு பற்றி உரைக்கின்றான். அறத்தை, அன்பை, அகிம்சையை, என்று எல்லாவற்றை யும் இதில் கொண்டுவந்து தந்துவிடுகிறான். பாரதி காட்டும் இத்தனையும் நல்ல ஆன்மீகம்தானே! 

    கீதையினைத் தொடாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம்.இந்தியத் திருநாட்டின் தலைவர்கள் யாவருமே கீதையினை மனமிருத்தி வைத் திருந் தார்கள்.கீதையின் நாயகன் கண்ணனே தெய்வமாய் காட்சி கொடுத்தான். கீதை யும் கீதை சொன்ன கண்ணனும் பாரதியின் உள்ளத்தில் ஊன்றியே இருந்ததை அவனின் பல சிந்தனைகள் எமக்கெல்லாம் தெரியப் படுத்தியே நிற்கின்றன. பாரதியின் தத்துவத் தேடல்களே அவரின் படைப்புகளாக மலர்ந்திருக்கின்றன என் பது மனங்கொள்ளத்தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காகவோமொழியி னருக்காகவோ,நாட்டினர்க்காகவோ அல்ல அவரின் தேடல்களாகும். அந்தத் தேட ல்கள் மனிதகுலம் முழுமைக்குமான தேடல்கள் என்றுதான் எண்ணுதல் வேண்டும்.. எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே நாளும் சிந்தித்த பாரதி அனைத்து உயிர்க் குலத்துக்குகுமான சமத்துவத்தைக் கீதையில் கண்டார். பாரதியின் தேடல் முழுமை பெற்ற இடம் அதுதான்.

    “எல்லாம் கடவுள் மயம் அன்றோஎவ்வுயிரினும் விஷ்ணுதானே நிரம்பியிருக் கிறான்ஸர்வமிதம் ப்ரஹம்! பாம்பும் நாராயணன்நரியும் நாராயணன். பார்ப்பா னும் கடவுளின் ரூபம்பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து வை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங் களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டுஆபத்துண்டுமரணமுண்டுஎல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.” 

    என்று பகவத்கீதைக்கு பாரதி எழுதியிருக்கும் – முன்னுரையில் காட்டியிருக்கும் சிந்தனை அவரின் ஆன்மீகத்தின் நிலையினைக் காட்ட முயலுகிறதல்லவா! 

    பாரதி பகவத்கீதையினை எப்படிப்பார்க்கிறார். அவரின் உள்ளம் எப்படி ஆன்மீக த்தை நாடி நிற்கிறது என்பதை அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் புலப்படுத்தி யே நிற்கின்றன. பாரதியின் இந்த உள்ளம் விநாயகர் நான்மணி மாலையினை ஆக்கி அளிக்கும் நிலையில் அதனுள்ளும் வெளிப்பட்டும் நிற்கிறது என்பதையும் காணமுடிகிறது.

    நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
      இமைப்பொழுதும் சோராதிருத்தல்
      சிந்தையே இம்மூன்றும் செய்”

    மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே
        கவலைப் படிதலே கருநரகமம்மா
        கவலையற்றி ருத்தலே முக்தி”

    துயரிலாது இங்கு
      நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
      அமரத் தன்மை எய்தவும்
      இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே”

    மனமே எனைநீ வாழ்வித்திடுவாய்
        வீணே உழலுதல் வேண்டா”

    மேவி மேவித் துயரில் வீழ்வாய்
      எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்
      பாவி நெஞ்சே பார்மிசை நின்னை
      இன்புறச் செய்வேன் எதற்குமினி அஞ்சேல்”

    என்று விநாயகர் நான்மணி மாலையியில் பாரதியின் உள்ளத் தினின்றும் வெளி வரும் அத்தனையும் கீதையின் அடியோற்றி அதன் அர்த்தமாய் ஆன்மீக வெளிச்சமாய் அமைந்திருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டியதே. பாரதியின் விநாயகர் நான்மணி மாலை யினை மனம் முழுக்கப் பதித்தால் கீதையின் பல கருத்துக்கள் ஆன் மீக முத்தாய் முகிழ்த்து வருவதை நாமனைவரும் கண்டு தெளி யலாம்.

    அச்ச மில்லை அமுங்குத லில்லை
      நடுங்குத லில்லை நாணுதலில்லை
      பாவமில்லை பதுங்குத லில்லை
      ஏது நேரினும் இடர்பட மாட்டோம்
      அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
      கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
      மூட நெஞ்சே முப்பது கோடி
      முறையுனக் குரைத்தேன் இன்னும் உரைப்பேன்
      தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே
      ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு
      பராசக்தி உளத்தின் படியுலுகம் நிகழும்
      நமக்கேன் பொறுப்பு”

    இதுதான் பாரதியின் அகமுரைக்கும் ஆன்மீக நிலையாகும்.இவ்வாறு பாரதி விநாயகர் நான்மணி மாலை பாடிட பகவத்கீதை பாரதிக்கு ஒளிவிளக்காய் அமைந்தது எனலாம். பாரதியின் ஆன்மீகம் இப்ப டியே அவரின் பாடல் வழியில் பயணிக்கிறது.

    பாரதியின் ஆன்மீகப் பார்வை என்பது எல்லை கடந்தது. இந்தி யனாய், தமிழனாய், அந்தணகுலத்தவனாய், புரட்சியாளனாய். இருந்தாலும் அவனின் சிந்தனை என்பது பரந்து சிறகடித்தது என்பதை த்தான் – அவனின் படைப்புகள் பறைசாற்றி நிற்கின்றன எனலாம்.

    ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
      மோனத்திருக்கும் முழு வெண் மேனியன்
      கருநிறங் கொண்ட  பாற் கடல்மிசைக் கிடப்போன்
      மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
      ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
      உருவத்தாலே உணர்ந்துணராது
      பல வகையாகப் பரவிடு பரம்பொருள்
      ஒன்றேஅதனியல் ஒளியுறுமதி வாம்;
      அதனிலை கண்டார் அல்லலை அகற்றினர்;
      அதனருள் வாழ்த்தி அமர்வாழ்வு எய்துவோம் “

          ‘ தெய்வம் நீ என்றுணர் 

    என்று ஆத்திசூடியில் பாரதி கடவுள் கொள்கையினைக் காட்டும் பாங்கும் அவனின் தெளிந்த ஆன்மீகத்தை வெளிப்படுத்தி நிற்கிறதல்லவா! 

    பாரதி கடவுள் நம்பிக்கை மிக்கவனாகவே இருந்தான். அவனின் எந்தச் செயலிலும் எப்படியோ தெய்வம் பற்றிய சிந்தனை வந்தே நிற்கும். இதற்கு அடைப்படையே அவனின் அகத்திருந்த ஆன்மீகமே எனலாம்.

    ”  காக்கைச் சிறகினிலே நந்த லாலா நின்றன்
      கரியநிறந் தோன்று தையே நந்த லாலா
      பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா
      பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா
      கேட்கு மொலியிலெல்லாம் நந்த லாலா
      கீத மிசைக்குதடா நந்தலாலா
      தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா
      தீண்டுமின்பந் தோன்றுதடா நந்த லாலா”

    பாரதியின் கடவுள் பற்றிய இந்தச் சிந்தனை ஆன்மீக நிலையின் பெரு நிலை என்றே கொள்ள முடிகிறது. மரமும்பறவையும்தீயும்ஒலியும்வண்ணமும் கடவுளாகவே பாரதியின் பார்வைக்குத் தெரிகிறது. இது பாரதியின் உன்னத ஆன்மீகப் பார்வை என்றே கொள்ள முடிகிறது.

    எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்”

      “என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்
        நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரி யனுமாய்
        பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
        எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்”

      ” இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்
        கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
        எண்ணம் விசாரம் எதுவுவன் பொறுப்பாய்ச்
        செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
        கல்வி அறிவு கவிதை சிவ யோகம்
        தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
        ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்
        கண்ணனைநான் ஆட்கொண்டேன் கண்கொடேன் கண்கொண்டேன்”

    பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
    கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
    மண் மீதுள்ள மக்கள்பறவைகள்,
    விலங்குகள்பூச்சிகள்புற்பூண்டுமரங்கள்
    யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
    செய்தல் வேண்டும்தேவ தேவா!

    ஞானாகாசத்து நடுவே நின்று நான்
    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
    விளங்குகதுன்பமும்மிடிமையும்நோவும்
    சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெல்லாம்
    இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனை நீ
    திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
    அங்கனே யாகுக!” என்பாய் ஐயனே! 

    வெட்ட வெளியாய் அறிவாய் வேறுபல சத்திகளைக்
    கொட்டு முகிலாய் அணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்
    தூல அணுக்களாய் சூக்குமமாய் சூக்குமத்தில்
    சாலவுமே நுண்ணியதாய் தன்மையெலாம் தானாகி
    தன்மை ஒன்றில்லாததுவாய் தானே ஒருபொருளாய்
    தன்மை பலவுடைத்தாய் தான்பலவாய் நிற்பதுவே

    சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
    சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
    வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
    வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

    பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
    பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
    நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
    நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

    உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
    பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

    வெயிலளிக்கும் இரவிமதிவிண்மீன்மேகம்
    மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
    எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

    ஆன்மீகம் என்றால் என்ன என்பதை பாரதி நன்கே அறிந்து வைத்திருந்திருக்கிறான்.உண்மையான ஆன்மீகம் எது என்பதை அவன் உள்ளத்தில் நன்றாகவே பதித்து வைத்திருந்திருக்கிறான். இப்படி அவன் இருந்த காரணத்தால்த்தான் அவனின் ஒவ்வொரு கவிதைகளும் ஆன்மீக உணர்வினை அடிநாதமாகக் கொண்டு மலர்ந்தன என்பதை மறுத்துவிட முடியாது..

    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று அப்பர் பெருமான் அஞ்சாமல் உரைத்தார் என்றால் அவரின் ஆன்மீகம்தான் காரணம் எனலாம். அனல்வாதம் புனல்வாதம் செய்து அஞ்ஞானி களை சம்பந்தப் பெருமான் வெற்றி கொண்டார் என்றால் அங்கும் ஆன்மீகம்தான் அடிப்படை எனலாம். காரைக்கால் பெருமாட்டியை  “அம்மையே” என்று ஆண்டவனே அழைத்தார் என்றால் ஆன்மீக ம்தான் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

      ” அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
        உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
        அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

    என்று பாரதி பாடவும்அதன் வழி நடக்கவும் அவருக்கு அருந்து ணையாக அமைந்தது அவரின் அகத்தில் அமர்ந்திருந்த ஆன்மீகமே எனலாம். பாரதியை புரட்சிக்கவி, புதுமைக்கவிபுயலாய் புறப்பட்டு வந்த கவிபாமரக்கவிஎன்றெல்லாம் வியந்து நின்றாலும் பாரதி ஆன்மீகம் என்னும் பாதையில் பயணித்த அருங்கவி என்று சொல்லுவதுதான் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா!

    Share