Tag: சக்தி சக்திதாசன்

  • அன்பான தீபாவளி வாழ்த்துகள்

    சக்தி சக்திதாசன்.

    diwali-114v

     

     

    ஒளிரும் தீப ஒளியில்

    கருகும் தீய எண்ணங்கள்

    மிளிரும் இந்த வேளையில்

    பொழியும் ஆனந்த உணர்வுகள்

    விடியும் பொழுதோடு ஒரு

    வெளிச்சப் பொழுதென

    மலரும் தீபாவளி அதனோடு

    புலரட்டும் பொன்னான காலம்

    தேசத்தின் காவலில் நின்று

    நேசத்தின் வாயிலைத் திறந்து

    பாசத்தின் முகத்திரை கொண்டு

    வீசட்டும் வாழ்த்துகள் இன்று

    இருளைக் கலைத்திடும் நேரம்

    ஒளியை ஈந்திடும் காலம்

    இல்லங்கள் தோறும் ஏற்றிடும்

    உள்ளங்கள் மலர்ந்திடும் தீபங்கள்

    கொடுமைகள் அழிந்திடவும் எங்கும்

    அஹிம்சைகள் தழைத்திடவும்

    புரிந்திடும் அர்த்தங்கள் கொண்டு

    எரியட்டும் தீபங்கள் இன்று

    இருப்பவர் உள்ளங்கள் எல்லாம்

    இரக்கத்தை மனதினில் ஏற்றி

    இல்லாதோர் இல்லங்கள் தோறும்

    இன்பத்தை இரந்திட வேண்டும்

    வளமான வாழ்க்கையைக் கண்டோர்

    வழங்கட்டும் கருணையை ஒளியுடன்

    வருமிந்த தீபாவளித் திருநாள்

    விளம்பட்டும் பொதுநலக் கருத்தை

    அன்பினிய இதயங்கள் அனைத்திற்கும்

    அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்

    அணையாது என்னுள்ளத்து தீபம்

    அதுதானே மாறாத நேசம்

     

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்  குடும்பம்

     

     

    Share
  • கவியரசர் நினைவுநாள் நினைவாக

    சக்தி சக்திதாசன்
    எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியரசரின் நினைவுநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.

    ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.0 R

    காசைவிட எது பெரிது?

    “தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்

    தான்போய்க் குடியி ருந்தால்

    தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா

    சம்சாரி என்றறியுமா?

    நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்

    நீசரென் றேயழைப் பார்;

    நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்

    நெருங்குமுன அறிய வேண்டும்!

    காசு பெரிதல்லநல் நண்பர்பெரி தாமென்று

    கருத்தினில் இருத்து வாயே!

    கனிவுடைய சிறுகூடற்பட்டியில் வதிகின்ற

    கன்னிமலை யரசி துணையே!”

    -கவியரசர் க்ண்ணதாசன்-

     

    தன்னுடைய சிறுகூடற்பட்டி மலையரசித் தாயிடம் தனது மனதில் காசைவிச தனது நண்பர்கள் தான் பெரிதென்ற எண்ணத்தை நிலைநிறுத்துமாறு எத்தனை பவ்வியமாக வேண்டுகிறார் பார்த்தீர்களா?

    கண்ணதாசன் அவர்கள் நண்பர்கள் பலரென்று நம்பியவர்களாலே ஏமாற்றப்பட்டவர். வெளுத்ததெல்லாம் பால் எனும் எண்ணம் கொண்டவர். ஆயினும் அவரது மனதில் நட்பை அதாவது உண்மையான் நட்பை பெரிதாக எண்ணும் சிந்தை எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கிறது பார்த்தீர்களா?

    காதல் என்னும் அந்த இனிய உணர்வினால் தாக்கப்பட்டோர் அனைவருமே என்றுகூடச் சொன்னால் தவறாகாது.

    அந்தக் காதல் உணர்வு மனதில் கொடுப்பதோ இன்பவேதனை. அந்த வேதனையைச் சொல்லில் வடிப்பது அதைவிட வேதனை.

    அத்தகைய ஒரு இன்பவேதனையை எமது இனிய கவியர்சர் எத்தனை இதமாகத் தந்திருக்கிறார் பாருங்கள் !

    விருத்தம்:

    நூறுமுறை பிறந்தாலும், நூறுமுறை இறந்தாலும்

    உனைப் பிரிந்து வெகுதூரம் – நான் ஒருநாளும்

    போவதில்லை, உலகத்தின் கண்களிலே –

    உருவங்கள் மறைந்தாலும், ஒன்றான உள்ளங்கள்

    ஒருநாளும் மறைவதில்லை!’

    பாடல்:

    ஓராயிரம் பார்வையிலே

    உன் பார்வையை நான் அறிவேன்

    உன் காலடி ஓசையிலே

    உன் காதலை நான் அறிவேன்

    (ஓராயிரம்)

    இந்த மானிடக் காதலெல்லாம்

    ஒரு மரணத்தில் மாறிவிடும்

    அந்த மலர்களின் வாசமெல்லாம்

    ஒரு மாலைக்குள் வாடிவிடும்

    நம் காதலின் தீபம் மட்டும்

    எந்த நாளிலும் கூட வரும்

    (ஓராயிரம்)

    இந்தக் காற்றினில் நான் கலந்தேன்

    உன் கண்களைத் தழுவுகின்றேன்

    இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

    உன் ஆடையை நாடுகின்றேன்

    நான் போகின்ற பாதையெல்லாம்

    உன் பூமுகம் காணுகின்றேன்

    (ஓராயிரம்)”

    ஒன்றான உள்ளங்கள் ஒருபோதும் மறைவதில்லையாம். எத்துணை உண்மை இது.

    இப்போது உங்கள் மனங்களிலே ஒரு கேள்வி எழலாம், அப்போ ஏமாற்றும் காதலெல்லாம் என்ன? என்று.

    இங்கேதான் கவியரசரின் வார்த்தைகளின் உண்மை புரிகிறது. அப்படிப்பட்ட ஏமாற்றும் உள்ளங்கள் ஒருபோதுமே ஒன்றாவதில்லை.

    மானைடர் காதலையும், மலர்களின் வாசத்தையும் தாண்டி ஒரு சரித்திரம் படைக்கும் காதலைக் கையோடு கூட்டிவருகிறார் கவியரசர்.

    சாந்திநிலையம் என்னும் படத்தில் குழந்தைகளை வைத்து மறைந்த நடிகர் திரு.நாகேஷ் அவர்கள் பாசுவதாக அமைந்த ஒரு பாடல்.

    ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கைகளில் தான் தங்கியுள்ளது என்பதனை இத்தனை எளிதாகச் சொல்லக்கூடியவர் நமது கவியரசர் தான்.

    படம்: சாந்தி நிலையம் – வருடம் 1969

    இசை: M.S. விஸ்வநாதன்

    நடிப்பு: ஜெமினி கணேசன், காஞ்சனா,மஞ்சுளா, நாகேஷ்

    பாடல் வரிகள: கவியரசர் கண்ணதாசன்

    “பூமியில் இருப்பதும்

    வானத்தில் பறப்பதும்

    அவரவர் எண்ணங்களே

    இருக்குமிடம் எதுவோ?

    நினைக்குமிடம் பெரிது

    போய்வரும் உயரமும்

    புதுப்புது உலகமும்

    அவரவர் உள்ளங்களே!

    நெஞ்சினில் துணிவிருந்தால்

    நிலவுக்கும் போய்வரலாம்

    உலகம் போகின்ற வேகம்

    உருவமும் இனிமேல் மாறும்

    நடக்கும் கதைகளைப் பார்த்தால்

    நமக்கே சிறகுகள் முளைக்கும்

    ரஷ்யர்கள் அனுப்பிய கூடு

    ராக்கெட் என்பது பேரு

    சிஷ்யர்கள் அனுப்பிய கூடு

    தெரியுது வானத்தில் பாரு!

    பாடலைக் கேட்டதுமே நாமும் வானத்தில் கைகளை விரித்துக் கொண்டு பறக்கலாம் போல ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.

    அப்பப்பா ! இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு இருக்கிறதே ! அதை எப்படி வீளக்க முடியும்?

    மனம் என்பது மேடையாம், அந்த மேடையிலே ஒரு ஆட்டம் நடக்கிறதாம் போங்கள். அது யாரென்று நினைக்கிறீர்கள் அவனுடைய/அவளுடைய மனதைக் கொள்ளை கொண்டவருக்குரிய முகமாம்.

    மற்றொரு வகையில் சொன்னால் காதல் வயப்பட்டவர் தூங்க முடியாமல் தவிப்பார் என்கிறார் கவியரசர்.

    அந்தப் பெண் என்ன செய்கிறாளாம்….. தமிழழென்பது காவ்இரி போல வற்றாது ஓடிக்கொண்டிருக்கும் நதிதானே ! இவள் தமிழ்மகள் எப்படியான தமிழ் மகள்?காவிரி போன்ற வற்றாத தமிழ் நதிய்இல் நீராடி வந்த தமிழ்மகள்.

    அது மட்டுமா?

    இயற்கை வனத்தில் காதல் மலர் பறித்து தனது விழிகளில் சூடிவிட்டாளாமே போங்கள் …..

    ஒருபூச்சரம் எப்படி வளைந்து, வளைந்து ஆடுமோ ? அப்படி அவளது அழகிய உடல் ஆடுகிறதாம், அந்த உடலுடன் ஓடி ஆடி விளையாடுவது அவனுக்கு பொன்னுடன் விளையாடுவது போல பெருமையளிக்கிறதாம்….

    என்ன கற்பனை கவியரசருக்கு ?

    அவள் அவனோடு வந்து பேசுவது சிலை உயிர் பெற்று வந்து பேசுவது போலல்லவா இருக்கிறது.

    விழி, விழியுடன் கலப்பதும்… இதழ் இதழுடன் கலப்பதும்…. இஅவர்களின் காதல் களியாட்டத்தைக் கண்டதும் இரவு ராணியான நிலவின் உறவாடலில் கூட சுவை சேர்ந்து விடுகிறதாம்…..

    சரி இனி பாடலைப் பார்ப்போமா ?

    படம் : வல்லவனுக்கு வல்லவன் – 1965

    குரல் : டி.எம்.எஸ்., சுசீலா

    பாடல் : கண்ணதாசன்

    இசை : வேதா

    நடிகர்கள் : ஜெய்சங்கர், அசோகன், மணிமாலா

    மனம் என்னும் மேடையின் மேலே

    முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    மனம் என்னும் மேடையின் மேலே

    முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்)

    தமிழ்க் காவிரி நீராடி இருவிழியில்

    காதல் மலர் சூடி

    வண்ணப் பூச்சரம் போலாடி உடலழகில்

    பொன்னுடன் விளையாடி

    சிலை ஒன்று நேரில் வந்து உயிர் கொண்டு பேசுது

    கலைத் தென்றல் வீசுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்)

    விழி மேலொரு விழி சேர்த்து பருவக்கலை

    மேனியில் கை சேர்த்து

    கனி இதழுடன் இதழ் சேர்த்து வெண்ணிலவின்

    இரவுக்கு சுவை சேர்த்து

    சிலை ஒன்று தேரில் வந்து எனைக் கொண்டு சென்றது

    துணை தென்றல் ஆனது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்) “

    அன்பு நெஞ்சங்களே கவியர்சரின் நினைவு தினத்தில் அவரின் நினைவுகளோடு உங்களுடன் உறவாட நினைத்ததின் பலனே இப்படைப்பு.

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(126)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    புதியதோர் மடல், புதியதோர் வாரம், புதியதோர் கருத்து.

    மேலைநாடுகள் மிகவும் செழிப்பானவை. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை வசதிகள் நிறைந்தது. அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வசதிகள் இங்கே காணப்படுகின்றன. இதுவே பொதுவாக மேலைநாடுகளைப்ப் பற்றி கீழைத்தேச நாடுகளின் அபிப்பிராயமாகும்.

    இது ஒருவகையில் சரியான அபிப்பிராயமாக இருந்தாலும் முற்றிலும் உண்மையான கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியாது.

    சாதரணக் குடிமக்களுக்கிடையில் எந்த வித பாரபட்சமுமின்றிக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலும் அனைத்தும் அனைவர்க்கும் பொதுவாகக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது.

    நான் முதன் முதலில் இங்கிலாந்தில் கால் எடுத்து வைத்த போது கொண்ட அபிப்பிராயத்திற்கும், நாற்பது வருடங்களின் பின் கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கும் பல இடைவெளி உண்டு.

    அதற்கான காரணங்கள் பல. அப்போதைய எனது தேவைகளும் இப்போதைய எனது தேவைகளும் அதிக அளவில் வித்தியாசப்படுவது ஒரு காரணம்.

    அன்று நான் பிறந்து வளர்ந்த எனது தாய்மண்ணின் வளர்ச்சிக்கும் இன்றைய வளர்ச்சிக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமும் மற்றொரு காரணம்.

    மாணவனாக அன்று எனக்கிருந்த உடனடித் தேவை எனது எதிர்கால வாழ்வின் உத்தரவாதத்திற்கான கல்வித்தகமை மட்டுமே. கல்வித்தகமையை அடைந்ததும் நான் வாழ்ப்போவது இங்கிலாந்திலா? அன்றி எனது தாய்மண்ணிலா என்று முடிவு எடுத்திராத ஒரு நிலையில் இங்கிலாந்து வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளோடு எனது அடிப்படைத் தேவைகள் ஒன்றிப்போகாத ஒரு நிலை.

    தேசியச் சுகாதாரச் சேவை பற்றியப் பூரண புரிந்துணர்வோ அன்றி வேலை வாய்ப்புகள் பற்றிய அறிதலோ எனக்குத் தேவைப்படாத ஒரு காலமாக அது இருந்தது.

    ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் மாறுபட்டது. கல்வியை முடித்து ஏறத்தாழ 35 வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் பணிபுரிந்து ஒரு இங்கிலாந்து குடியுரிமை பெற்றவனாக வாழும் போது வாழ்வின் மற்றைய அனைத்துத் தேவைகளும் அத்தியாவசியமாகிறது.

    என்னடா இந்த மடல் எங்கே எம்மை இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் உங்களுக்கு எழுவது இயற்கை.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.பி.ஸி தொலைக்காட்ச்சிச் சேவையில் ஒரு நிகழ்ச்சியை காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அதில் கண்ணுற்ற ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

    இதற்கான முக்கியக் காரணம் எமது பின்புல நாடுகளில் மட்டும் தான் வாழ்க்கை வசதிக்குறைவுகள் உண்டு எனும் கருத்துக்குப் புறம்பாக இங்கிலாந்து போன்ற முன்னேற்றமடைந்த நாடுகள் என்று கருதப்படும் நாடுகளில் கூட அவைகளின் அளவுகளிலும் மக்களின் வாழ்க்கை வசதிகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன எனும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதே !

    126.2உங்களில் பலர் “அல்சைமர்ஸ்” (Alzheimer’s) எனும் ஒரு நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    இது ஒருவகையில் ஞாபகமறதியோடு சம்மந்தப்பட்ட ஒரு வியாதியாகும். ஆனால் சரியான சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவகையில் பாதுகாக்கப்படாவிட்டால் மிகவும் மோசமான நிலையை நோயாளிகள் விரைவில் அடைந்து விடுவார்கள்.

    இதனைப் பூரணமாக குணமாக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் இது தீவிரமாகும் துரிதத்தை மட்டுப்படுத்தவே உபயோகிக்கப்படுகின்றன.

    இங்கிலாந்து அரசினால் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பீட்டின் படி 2015ம் ஆண்டில் இங்கிலாந்தில் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 520,000 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    126.1இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வியாதியில் பீடிக்கப்பட்ட இருவரை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டார்கள். ஒருவர் இங்கிலாந்தின் ஒரு பகுதியிலும், மற்றொருவர் இங்கிலாந்தின் மற்றொரு பகுதியிலும் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இந்நோய் இருப்பது விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

    ஆனால் மற்றவருக்கோ இவ்வியாதி இருப்பதைக் கண்டுப்பிடிப்பதற்கே மூன்று அண்டுகள் பிடித்தது. அதன் காரணமாக அவரது நோய் மேலும் மூன்று ஆண்டுகளுக்குண்டான தீவிரத்தை எட்டி விட்டது.

    சரி இங்கே எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி என்ன ?

    ஒரே நாடு, ஒரே அரசாங்கத்தின் கீழே இயங்கும் நாடு, வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களின் தேசிய சுகாதரச் சேவையின் நிர்வாகங்களின் கீழ் ஒரே வியாதிக்கான நிவாரணங்கள் மட்டும் ஏன் வித்தியாசப்படுகின்றன ?

    126.3அப்படிப்பார்க்கும் போது, அவர்களது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளின் தாக்கம் வித்தியாசப்படுவது இத்தகைய முன்னேற்றமடைந்த , ஜனநாயகத்தின் உச்சம் என்று கருதப்படும் பாராளுமன்ற முறையக் கொண்ட நாட்டில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கக் கூட முடிகிறதா ?

    ஒரு மனிதன் ஒரு நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்கிறான் என்பது அவனது வாழ்க்கைக் காலத்தை நிர்ணயிக்கிறதா ? எனும் கேள்வி எழுகிறது.

    இப்படியான நிகழ்வுகள் எமது பின்புல நாடுகளுக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் வசதிகள் நிறைந்த நாடு என்று கருதப்படும் நாடுகளிலும் நடைபெறுகிறது என்பதுவே யதார்த்தம்.

    ஏன் இதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறேன் ? ஓ …நானும் ஐம்பதுகளின் முடிவில் நிற்கிறேனோ ?

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை…
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(125)

    சக்தி சக்திதாசன்.

    magna  carta
    அன்பினியவர்களே !
    இதோ அடுத்தொரு மடலில் உங்களின் முன்னே. அனைத்து உள்ளங்களும் நலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு பகிர்தலைத் தொடர்கிறேன்.

    ஒரு நாடு எத்தனை தூரம் நாகரீகமடைந்திருக்கிறது என்பதற்கு அந்நாட்டினுடைய சட்ட திட்டங்களை எடுத்துப் பார்ப்பது அவசியமாகிறது.

    மனைதர்களை மனிதர்களாக மதிப்பதும் அவர்களுக்குரிய அடிப்படை மனித உரிமைகள் சட்டவிதிகளின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளதா? என்பதன் மூலமே அந்நாடு எத்தகைய சமூக முன்னேற்றத்திற்கு  தன்னை உள்ளாக்கியிருக்கிறது எனும் உண்மை தெளிவாகிறது.

    இன்று காலை தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது அதிலே கூறப்பட்ட ஒரு விடயம் என்னை வெட்கப்படவைத்தது.

    அட! அது என்னப்பா விடயம்? நாமும் தெரிந்து கொள்ளலாமே எனும் ஆவல் உங்களுக்கு எழுவது இயற்கை.

    அவசரப்படாதீர்கள், ஆர்வமிகுதியால் பரபரப்படையாதீர்கள், இதோ விடயத்திற்கு வருகிறேன்.

    இங்கிலாந்தில் ஏறத்தாழ 40 வருடங்கள் வாழ்ந்த நான் இந்நாட்டின் சட்ட அமைப்புகளின் அடிப்படையை இதுவரைகாலமும் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து விட்டேனே எனும் எண்ணம் தான் என்னை நாணித் தலைகுனிய வைத்தது.

    Magna_Carta_(British_Library_Cotton_MS_Augustus_II.106)ஆமாம் தொலைக்காட்சியில் “மக்னா கார்ட்டா (Magna Carta)”  எனும் ஒரு பத்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அதன் உண்மையான அறுதியான பிரதி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படப் போகிறது எனும் கருத்துப் பரிமாறப்பட்டது.

    பல சமயங்களில் இந்த “மக்னா கார்ட்டா”(Magna Carta) எனும் பெயர் கூறப்படுவதைக் கேட்டிருந்த போதும் அதன் உண்மையான விளக்கத்தைப் பற்றி அறியாமல் இருந்து விட்டேன்.

    இந்த 40 வருட காலமும் எனது வாழ்க்கைக்கு அச்சாரமாகவிருந்த இந்நாட்டின் சரித்திரத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய ஆவணத்தைப் பற்றி நான் அறியாமல் இருந்தது இந்நாட்டினை என் நாடாக நான் கருதாத காரணத்தினாலோ?

    சரி, இனியாவது இதைப்பற்றிச் சிறிது கொள்ளலாம் எனும் நோக்கத்தோடு நான் அறிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மடலாக இம்மடல் அமைகிறது.

    கி.பி 1209ம் ஆண்டளவில் இங்கிலாந்தின் அரசனாக ஜோன் என்பவர் அரசாண்ட காலம். அன்றைய காலத்தில் அரசருக்கெதிராக கிளர்ச்சி செய்வோர்கள்; இல்லை, அரசனின் பார்வையிலோ அன்றி அரசனின் ஆதரவாளரின் பார்வையிலோ அரசனுக்கு எதிராக செயற்படுவோர்; அன்றி எதிர்க் கருத்துகளைக் கொண்டுள்ளோர் எனக் கருதப்படுவோர் எவ்வித விசாரணைகளுமின்றித் தண்டிக்கப்பட்ட காலம்…

    125.2அப்போதய நிலப்பிரபுக்கள் பலர் இச்செய்கையால் அதிருப்தி அடைந்திருந்தனர். அது மட்டுமின்றி அரசன் விதித்த  அதிகமான வரிகள், அத்துடன் அரசனால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த போர்கள் எனப் பல காரணிகள் இந்நிலத்துவ பிரபுக்களுக்கு அரசன் மீதும் அவன் கொண்டிருந்த தன்னிச்சையான அதிகாரத்தின் மீதும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

    அப்போதைய கத்தோலிக்க போப் ஆண்டவராக இருந்த “போப் இனொசன்ட் 3 (Pope Innocent III) என்பவரோடு அரசன் ஜானுக்கிருந்த உறவின் அதிருப்தி கூட இவ்வரசனின் மீதான வெறுப்புக்குக் காரணமாகவிருந்தன.

    இப்பிரச்சனைகளின் காரணமாக இந்நிலப்பிரபுக்கள் இவ்வரசனுக்கெதிரான கிளர்ச்சியை 1209ம் ஆண்டிற்கும் 1212ம் ஆண்டிற்குமிடையில் பலமுரை நிகழ்த்தினர்.

    அக்காலகட்டத்தில் மக்கள் ஆதரவில்லாத அரசர்களை இப்பிரபுக்கள் வேறு சிற்றரசர்களின் ஆதரவோடு வீழ்த்துவது வழக்கமாக இருந்தாலும் இம்முறை இக்கிளர்ச்சி வேறு வடிவமெடுத்திருந்தது…

    இம்முறை இக்கிளர்ச்சியின் நோக்கம் அவ்வரசனைப் பதவியிலிருந்து இறக்குவது என்பதில்லாமல், இப்பிரபுக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை அரசன் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

    அரசன் ஜானினதும் , போப் ஆண்டவரின் பல இழுத்தடிப்புகளுக்கும் பின்னால் தமது கோரிக்கைகளைச் சாசனமாக்குவதில் நிலத்துவ பிரபுக்கள் வெற்றி கண்டனர்.

    இவர்களது வெற்றிக்கு அப்போதைய பிரான்சு மன்னன் லூயியினதும், ஸ்கொட்லாந்து மன்னன் அலெக்ஸ்சாண்டரினதும் ஆதரவு இருந்ததே காரணம் என்று சொல்லப் படுகிறது.

    இச்சாசனம் அப்போது “சுதந்திரச் சாசனம்” என்றழைக்கப்பட்டது. இதன் அடிப்படை சாராம்சமாக தனிமனித உரிமைகள் பாதுக்கக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிற்கென நீதிமுறைச் சட்டங்கள் வகுக்கப்பட்டு அதன் முன்னால் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலே ஒழிய மக்கள் யாரும் தண்டிக்கப்படமுடியாது என்பவை வலியுறுத்தப்பட்டன.

    25 நிலப்பிரபுக்களைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டு அச்சபை இச்சாசனத்தை அங்கீகரித்தது. இச்சாசனத்தின் படி இதற்கு எதிராக அரசன் செயற்படுகிறார் என்று கண்டறியும் பட்சத்தில் அரசனின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

    தனது உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுத்த அரசன் ஜானுக்கும் நிலப்பிரபுக்களுக்கிடையிலான வேறுபாடு வலுவடைந்தது.

    அரசனுடன் தமக்கு ஏற்பட்ட வேறுபாடுகள் தீர்க்கப்படமுடியாது என உணர்ந்த பிரபுக்கள் அரசனுக்கெதிரான உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டார்கள். இப்போர் “முதலாவது பிரபுக்கள் யுத்தம் (First Barons War) “ என்றழைக்கப்பட்டது…

    125.1இதுவரை மன்னனின் உரிமைகளை வறையறுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்த பிரபுக்கள், இப்போது அரசனை பதவியிலிருந்து இறக்குவதை நோக்கமாகக் கொண்டு இங்கிலாந்தின் முடியை அப்போதைய பிரான்சு மன்னன் லூயி இடம் தாரைவார்த்தார்கள்.

    ஆனால் அவர்களது சாசனத்தின் அவ்காசம் மூன்று மாதமே நீடித்தது. அப்போது 1216ம் ஆண்டு அரசன் ஜோன் இறந்தான்.

    அதன் பின்னே இச்சாசனம் சட்டமூலமாக்கப்பட்டது. இச்சாசனமே “மக்னா கார்ட்டா” (*Magna Carta) என்றழைக்கப்பட்டது. இது ஒரு லத்தீன் சொல்லாகும் இதன் அர்த்தம் “சிறந்த சாசனம்” ஆகும்.

    சரி, அப்படிப் பெருமையாக இத்தனை காலம் கழித்துப் பேசப்படும் இச்சாசனத்தைப் பற்றி நீ ஏன் அலட்டிக் கொள்கிறாய் என்கிறீர்களா?

    இன்றைய இங்கிலாந்தின் அரசாங்க அரசியலமைப்பின் அடிப்படையே இச்சாசனம் தான். “குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை அனைவரும் நிராபராதிகளே ” என்று கூறப்படும் சட்ட தாரக மந்திரத்தின் பிறப்பிடமே இச்சாசனம் தான்.

    பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடுகளாக இருந்த பெரும்பான்மையான நாடுகளின் அரசியலமைப்பும், சட்டமூலங்களும் இதன் பின்னனியில் தான் அமைந்திருக்கின்றன.

    அடடா ! இதை அறிந்து கொள்ள எனக்கு சுமார் 40 வருடங்கள் எடுத்திருக்கின்றதா ?

    போச்சுடா !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    * Magna Carta (Latin for Great Charter), also called Magna Carta Libertatum or The Great Charter of the Liberties of England, is an Angevin charter originally issued in Latin. It was sealed under oath by King John at Runnymede, on the bank of the River Thames near Windsor, England, on 15 June 1215.[Wikipedia]

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(124)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    cameron confஇனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

    வசந்தகாலம் வந்த சுவடு தெரியாமல் மறைந்ததும் அடுத்து வந்த கோடைக்காலம் காற்றோடு காற்றாக மறைந்ததும் இதோ கண்முன்னே இலையுதிர் காலம் சதிராடுவதும் பச்சைப் புற்தரையை பொன்னிறக் கம்பளம் கொண்டு மூடியதைப் போல புற்களை உதிர்ந்த பொன்னிற இலைகள் மூடி நிற்பது எமக்கு உணர்த்துக்கிறது.

    ஆமாம் இங்கிலாந்திலே இலையுதிர்காலத்தில் எது நடக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சிகளின் வருடாந்த மாகாநாடு தவறாமல் நடந்தேறி விடும்.

    இதுவரை இங்கிலாந்து அரசியல் தளத்தினில் நடக்கும் அரசியல் போராட்டம் மும்முனைத் தாக்குதலாகத்தான் இருந்தது.

    ஆமாம் கன்சர்வேடிவ் கட்சி , லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி என இவை மூன்றுமே அரசியல் களத்தில் முக்கியமாக மோதிக் கொள்ளும் கட்சிகளாக இருந்தன.

    ஆனால் கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் அடையாததினால் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றிய கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததும் இப்போராட்டக்களத்தில் இரண்டு கட்சிகளின் மோதல்களே பெருமளவில் இடம்பெற்றன.

    ஆனால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஐக்கிய இராச்சியத்தையும் விட்டுவைக்காத காரணத்தினால் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம் எடுத்த மிகவும் சிக்கலான செலவுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களினால் மத்தியதர, அடித்தர மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது.

    இப்பாதிப்போடு ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டால் பொதுவாக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பாதிப்பினாலும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் சமீப காலத்தில் இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலுள்ள பலர் ஐக்கிய இராச்சியத்தினுள் இலகுவாக நுழைந்து இந்நாட்டின் உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் எனும் பொதுக் கருத்தின் பாதிப்பினாலும் இவைகளை எதிர்க்கிறோம் என்று தொடங்கப்பட்ட யூகிப் எனும் அரசியல் கட்சியின் ஆதரவு பலமாகியது.

                                      milliband confFarage confclegg conf

    அந்தக் கட்சியின் தலைவரான மைக்கல் ப்ஃராஜ் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினராகவிருந்தவர்.  தமது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தனதும் தன்னைப் போன்ற மற்றைய உறுப்பினர்களினதும் கொள்கையை முன்னெடுக்கத் தயங்கியதால் அக்கட்சியிலிருந்து வெளியேறி யூகிப் எனும் கட்சியை அரம்பித்தார்.

    ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதை விட அதனிலிருந்து வெளியேறுவதே ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பதே இக்கட்சியின் பிரதானக் கொள்கையாகும்.

    இக்கட்சியின் ஆதரவு பெருகி இப்போது இக்கட்சி கருத்துக்கணிப்பில் இதுவரை மூன்றாவது பெரிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியை விட முன்னனியில் நிற்கிறது.

    அதுதவிர சமீபத்தில் இரண்டு கன்சர்வேடிவ் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு யூகிப் கட்சிக்குத் தாவி இடைத்தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

    இது ஆளும் கட்சிகளில் முக்கியமான கன்சர்வேடிவ் கட்சிக்கும் அதன் தலைவர் பிரதமர் டேவிட் கமரனுக்கும் தலையிடியைக் கொடுத்துள்ளது…

    இந்நிலையில் தான் 2014ம் ஆண்டு அரசியல் மகாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. முதலில் நடந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மாநாடு சோபிக்கவில்லை. அவர்கள் கொள்கையில் தமக்கு நேர் எதிரான கன்சர்வேடிவ் கட்சியோடு கூட்டரசாங்கத்தில் இணைந்தது அவர்களுக்கு செல்வாக்குச் சரிவையே ஏற்படுத்தியுள்ளது.

    அடுத்து நடந்து முடிந்த யூகிப் கட்சியின் மநாடு அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. அரசியலில் புது அதிர்வலையை ஏற்படுத்தியவர்களின் மற்றைய கொள்கைகள் ஏதுவாயிருக்கும் எனும் எதிர்பார்ப்பே அதற்குக் காரணம். ஆயினும் இதுவரை பராளுமன்றக் கதிரையையேக் கண்டிராத இக்கட்சியினர் பதவியிலமர்ந்ததும் அவர்களது நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதுவே அனைவரினதும் கேள்விக்குறி.

    எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சியினரின் மாநாடு அவர்களின் அரசியல் அந்தஸ்திற்கேற்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பேடுகள் எதுவுமின்றி 80 நிமிடங்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட், தான் குறிப்பில்லாமல் பேசுகிறேன் என்பதில் கவனமாக இருந்து முக்கியமான கொள்கைகள் இரண்டைப் பற்றிப் பேச மறந்து விட்டார்.

    அட இவரா? பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போகிறார் போச்சுடா ! எனும் வகையில் பல ஊடகங்கள் இப்பவே அவரது தோல்வியைக் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன.

    கடைசியாக நேற்று நடந்து முடிந்த பதவியிலிருக்கும் கட்சியின் மாநாடு கொஞ்சம் விவாதங்களைக் கிளப்பி விட்டிருக்கின்றன. நாட்டின் உண்மையான நிதி நிலைமையையயும் அதைச் சீர் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அப்படியே மக்களுக்குப் புட்டு  புட்டு வைக்கிறேன் என்று மத்தியதரக் குடும்பத்தினர் பலரை கவலை கொள்ள வைத்த நிதியமைச்சர் ஒருபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் பொதுக்மக்களின் சர்வஜன வாக்கெடுப்பை 2017ல் நடத்துவோம் என்று மக்களுக்குக் குரல் அளிக்கும் அதிகாரத்தை எமது கட்சியை விட வேறெந்தக் கட்சியும் நடத்துவதாக உறுதியளிக்கவில்லை என்று மார்தட்டிய பிரதமர் மறுபுபுறம்.

    ஆரவாரம் ஓய்ந்ததும் இலைகள் உதிரவும் சரியாகத்தான் இருக்கின்றது.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது என்பது என்னவோ உண்மைதான் !

    ஆனால் வசந்தத்தின் முடிவில் கோடையின் நுழைவாசலில் வரப்போகும் 2015ம் ஆண்டுத் தேர்தல் என்ன மாறுதலைக் கொண்டுவரக்கூடும் ?

    ஒரு வித்தியாசம் மூன்று கட்சிகளுக்கிடையில் அல்ல நான்கு கட்சிகளுக்கிடையில் நடக்கும் அரசியல் போராட்டம் மக்களுக்கு என்ன மாறுதலைக் கொண்டுவரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(123)

    சக்தி சக்திதாசன்.

    scotlandஅன்பினியவர்களே !

    மற்றொரு வாரமடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    இவ்வாரம் இம்மடலை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.

    அட என்ன இது? எதைப் பற்றிய கருத்தாடல் இது என்று எண்ணுகிறீர்களா?

    செப்டெம்பர் மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்து நாடு தனது எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்து இருக்கும்.

    அதன் முடிவு என்னவாயிருக்கும் என்பதை அறியாமலே தான் நான் இந்த மடலை வரைகிறேன்.

    ஸ்காட்லாந்து நாடு ஐக்கிய இராச்சியத்தினின்றும் நீங்கி தனியான நாடாக இயங்க வேண்டும் என்று ஒரு பகுதியினரும், இல்லை ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதே ஸ்காட்லாந்து நாட்டிற்கு மிகவும் உகந்தது என்று மற்றொரு பகுதியினரும் பலகாலமாக வாதாடி வந்தனர்.

    2010ம் ஆண்டு தேர்தலில் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமருமான டேவிட் கமரன் அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் ஸ்காட்லாந்து நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஸ்காட்லாந்து நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான திகதியையும் குறித்துக் கொடுத்தார்.

    Scotland1ஸ்காட்லாந்து நாட்டின் மாநில அரசான ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தமது நீண்டகால அபிலாஷையான ஸ்காட்லாந்து நாட்டின் பிரிவினையை நனவாக்கிக் கொள்லும் முயற்சியில் அதற்கான பிரசாரத்தில் இறங்கினார்கள்.

    அதேநேரம் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும், இப்பிரிவினை ஐக்கிய இராச்சியத்தின் எஞ்சிய பகுதிகளுக்கோ அன்றி ஸ்காட்லாந்து நாட்டிற்கோ பயன் தரப்போவதில்ல்லை எனும் நிலைப்பாட்டில் இப்பிரிவினையை எதிர்த்தார்கள்.

    அவர்களின் சார்பில் பிரச்சாரத்தை முன்னை நாள் லேபர் அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தவரும், ஸ்காட்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டவருமான அலிஸ்டர் டார்லிங் முன்னெடுத்தார்.

    அவருக்கு உதவியாக முன்னைய லேபர் அரசாங்கப் பிரதமராகவிருந்த கோர்டன் பிரவுன் அவர்கள் செயற்பட்டார்.

    கடந்த இருவாரங்களுக்கு முன்னால் மட்டும் இப்பிரிவினை வாதத்திற்கு எதிராகவே ஸ்காட்லாந்து மக்களின் பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இருக்கும் என்றே பொதுவான கருத்துக் கணிப்பாக இருந்தது.

    ஆனால் இவ்வாக்கெடுப்பின் திகதி நெருங்க நெருங்க பிரசாரம் தீவிரமடைந்தது. இரண்டு பிரிவினர்களின் தலைவர்களுக்கு மத்தியில் தொலைக்காட்சியில் பகிரங்க விவாதங்கள் நடைபெற்றன.

    இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் இவ்வாக்கெடுப்பின் முக்கியத்துவம் துலங்கத் தொடங்கியது.

    என்னே ஆச்சரியம் பிரசாரம் தொடங்கிய காலம் முதல் இப்பிரிவினைக்கெதிராகவே மக்கள் தீர்ப்பு இருக்கும் எனும் நிலை மாறி பிரிவினையை ஆதரிப்போர் விகிதாசாரம் முதல்முறையாக உயர்ந்தது.

    scotland3தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல பிரதமர் டேவிட் கமரன், துணைப்பிரதமர் நிக் கிளேஹ், எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட் என மூன்று முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாக ஸ்காட்லாந்து நாட்டிற்கு படையெடுத்தார்கள்.

    மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார்கள். பிரிவினை என்பது இலேசான விடயம் அல்ல அதன் பக்க விளைவுகளும், பின்விளைவுகளும் ஸ்காட்லாந்து நாட்டினருக்கும், எஞ்சிய ஐக்கிய இராச்சியத்திற்கும் பாதகமாகவே அமையும் என்பதைப் பறைசாற்றினார்கள்.

    ஐக்கிய இராச்சியத்தின் முன்னனி வியாபார ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் இப்பிரிவினை இடம்பெற்றால் தமது வியாபார ஸ்தலங்களின் ஸ்காட்லாந்து நடவடிக்கைகளை ஐக்கிய இராச்சியப் பகுதிகளுக்கு மாற்ற வேண்டி வரும் என்றும் மறைமுகமாக அது ஸ்காட்லாந்து மக்களின் வேலைகளைப் பறிக்கும் என்றும் எச்சரித்தார்கள்.

    இங்கிலாந்து நாட்டின் அரச வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்து நிறுவனத்தின் முகாமையாளர் இப்பிரிவினையால் ஸ்காட்லாந்து நாட்டின் நிதிநிலைமைகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

    விளைவாக கருத்துக் கணிப்புகள் இப்பிரிவினைக்கு எதிரானவர்களின் வெற்றியை நோக்கித் திசை திரும்பியுள்ளது.

    பிரிவினைப் பிரசாரத்தை முன்னெடுக்கும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சரோ… சே! இதெல்லாம் வெறும் பூச்சாண்டி! இப்பிரிவினைக்கெதிரானவர்களின் தூண்டுதல்களினால் இத்தகைய பயமுறுத்தல்கள் மக்களின் நோக்கத்தைத் திசைதிருப்ப விடுக்கப்படுகின்றன என்கிறார்.

    இம்மடலை நான் வரைந்து கொண்டிருக்கும் இன்றுதான் பிரச்சாரத்திற்குரிய கடைசிநாள். நாளை பொது வாக்கெடுப்பு.

    இதிலிருந்து எமக்கு உறுதியாகத் தெரிவது என்னவென்றால் , இவ்வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்படத்தான் போகிறது.

    எப்படி என்கிறீர்களா ?

    scotland2ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரித்து அம்மக்கள் வாக்களித்தால் அம்மாற்றம் ஸ்காட்லாந்து மட்டுமல்ல ஏனைய ஐக்கிய இராச்சிய பகுதிகளையும் மிகவும் பாதிக்கும்.

    ஐக்கிய இராச்சியத்தின் தேசியக்கொடி மாற்றப்பட வேண்டும்.

    இப்பிரிவினைய எதிர்த்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து அங்கம் வகிக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் தீர்மானித்தால் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் படி ஸ்காட்லாந்து நாட்டு மாநில அரசுக்கான அதிகாரப்பரவலாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட் வேண்டும்.

    இதை நடைமுறுத்த வேண்டுமானல் ஏனைய மாநில அரசுகளான “வேல்ஸ்”, “வட அயர்லாந்து” ஆகிய மாநில அரசுகளின் அதிகாரங்களும் இதற்கு இணையாக பரவலாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் “இங்கிலாந்து” எனும் மாநில அரசு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

    இவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானல் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சாசனம் மாற்றி எழுதப்பட வேண்டும்.

    சில வாரங்களுக்கு முன்னால் பிரபல ஊடகவியலாளர் அண்ட்ரூ நீல் அவர்களினால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இவ்வாக்கெடுப்பின் முடிவினால் ஏற்படும் பாதிப்புகள் விரிவாக விளக்கப்பட்டது.

    ஸ்காட்லாந்து மக்கள் பிரிந்து போனால் போகட்டும் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம் என்று இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஏனைய ஐக்கிய இராச்சியப் பகுதி மக்கள் அனைவரும் அவதானமாக பார்க்க வேண்டிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சி இது.

    இதன் பாதிப்புகளின் ஆழம் நாமனைவரும் இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதவாறு அமைந்துள்ளது.

    இதைப்பற்றி விரிவாக மற்றொரு மடலில் பார்ப்போம்.

    எது எப்படியாயினும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னூறு ஆண்டுகால அரசியல் வரலாறு, அதன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவது நிச்சயமாகிறது.

    சரி ஸ்காட்லாந்து மக்கள் தமது விதியை நிர்ணயிக்க வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது, அதனால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மட்டுமல்லவே ஏனைய ஐக்கிய இராச்சிய மக்களுமல்லவா ?

    அப்படியாயின் அவர்களின் எண்ணப்பிரதிபலிப்புகளை நிர்ணயிக்க அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இல்லையா ?

    அர்த்தமிகுந்த கேள்வி காலம் விடை பகருமா?

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(122)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன்.

    இவ்வுலகத்தின் சுழற்சியோடு சுழலும் மக்களின் வாழ்க்கைச் சுழற்சியின் அச்சாணியாகத் திகழ்வது பணமாகும்.

    இப்பணத்தின் முக்கியத்துவம் கணக்கிலடங்காத வகையில் பலராலும் பல்வேறு வகைகளில் அழகாக எடுத்தியம்பப்பட்டிருக்கின்றது.

    விரும்பியோ விரும்பாமலோ இவுலக சரித்திரத்தில் பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட இப்போதைய ஐக்கிய இராச்சியம் பெரும் பங்கு வகித்திருக்கிறது.

    நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ இங்கிலாந்த்து இன்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் பூசல்களுக்குக் காரணமாக இருப்பதும் ஒரு சரித்திர உண்மையே !

    இந்த அடிப்படைக் காரணத்தினால் இன்றைய உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து இருப்பதும் தவிர்க்கப்படமுடியாத உண்மையே !

    உலகின் பல்வேறு நாடுகளில் இங்கிலாந்து கொண்டிருந்த அன்றைய ஆதிக்கத்தின் விளைவாகவே இன்றைய இங்கிலாந்து ஒரு பல்வேறு இனங்களை உள்ளடக்கிய, பல்வேறு மதங்களை உள்ளடக்கிய, பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களை உள்ளடக்கிய ஒரு பல்லினக் கலாச்சார மையமாகத் திகழ்கிறது.

    இன்றைய வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் இருந்து இங்கிலாந்த்தை நோக்கிப் படையெடுக்கும் இளையதோர் சமுதாயம் இருப்பது கண்கூடான ஒரு உண்மை.

    பலநாடுகளின் கல்விமுறைகள் அக்கல்விச்சாலைகளில் இருந்து பட்டம் பெற்றோர் இங்கிலாந்தில் பணிபுரிவதற்கு ஏதுவான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பல நாடுகளில் இங்கிலாந்து செல்வதற்குத் தேவையான வகையில் அவர்களின் அறிவை விஸ்தரித்துக் கொள்வதற்காகப் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டு அவற்றின் மூலம் அவர்கள் பொருளாதார இலாபம் அடைந்து வருவதும் கண்கூடாகக் காணக்கூடியதொன்றாகவே இருக்கிறது.

    bank3சரி,  இதற்கெல்லாம் ஆதாரமான இங்கிலாந்தின் சட்டபூர்வமான தேசிய வங்கியின் சரித்திரத்தைச் சிறிது பின்னோக்கிப் பார்ப்பதற்காவே இத்தகையதோர் ஆரம்பத்துடன் இம்மடலில் உங்களைச் சந்திக்கிறேன். 1690களில் ஜரோப்பிய கடலில் ஆதிக்கம் செலுத்திய கடற்படைக்குச் சொந்தமான நாடு அன்றைய பிரஞ்சு தேசமாகும். அவர்களின் அக்கடற்படையின் ஆதிக்கத்தின் அனுகூலத்தினால் பிரான்சு நாட்டிடம் படுதோல்வியடைந்தது இங்கிலாந்து.

    இத்தோல்வி கொடுத்த பாடத்தினால் தாம் ஒரு அதிசிறப்பான கடற்படைய நிறுவ வேண்டிய தேவைக்கு அப்போதைய இங்கிலாந்து அரசரான 3ஆம் வில்லியம் மன்னர் தள்ளப்பட்டிருந்தார்.

    இத்தேவைக்குரிய பணத்தை அப்போதைய இங்கிலாந்து அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. இத்தேவையே இன்றைய ” இங்கிலாந்து வங்கி   (Bank of England) க்கு அத்திவாரமிட்டது எனலாம்.

    பிரத்தியேக மக்கள் அரசுக்கு பொன் கட்டிகளைக் கொடுத்து வங்கி மூலம் அதற்குரிய காகிதக் கற்றைகளை பெற்றுக் கொள்வார்கள். பின்பு இக்காகிதக் கற்றைகள் மீண்டும் கடனாகக் கொடுக்கப்படும்.

    இத்தகைய முறையின் மூலம் அப்போதைய இங்கிலாந்து அரசு கப்பற்படையை ஸ்தாபிப்பதற்கான தொகையை விட இரண்டு மடங்கான தொகையை பன்னிரண்டே நாட்களில் சேகரித்துக் கொண்டது.

    bank1இவ்வங்கியின் ஸ்தாபகத்தின் மூலகர்த்தா அப்போதைய ஹலிவாக்ஸ் (Halifax) எனப்படும் பகுதியின் முதலாவது பிரபுவான சார்லஸ் மொண்டகே (Charles Montague) என்பவராவார்.

    இவங்கிக்கான முதலாவது அரச முத்திரை 1694 யூலை மாதம் 27ம் நாள் வழங்கப்பட்டது.

    இவ்வங்கியின் முதலாவது கவர்னராக ஜான் கொப்லான் (John Houblon) என்பவர் நியமிக்கப்பட்டார்.

    இவரது படம் இங்கிலாந்து 50 பவுன் தாளில் 1994ம் ஆண்டு பதிவிடப்பட்டது.

    இவ்வங்கியின் முதலாவது தரிப்பிடமாக லண்டன் நகரின் பகுதியான வால்புறூக் தெரிவு செய்யப்பட்டது. இக்கட்டிடத்தின் அடிப்பகுதியில் பழைய ரோமேனிய புராதனக் கண்டுபிடிப்பான மித்திராஸ் கோவிலின் எச்சங்கள் 1954ம் ஆண்டு சித்திர ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடக் கூடிய ஒரு நிகழ்வு.

    bank2தற்போது அமைந்திருக்கும் திரட்நீடில் எனும் தெருவிற்கு மாறுவதற்கு முன்னால் 1780ம் ஆண்டில் சமூகவெறியாட்டம் போட்ட கும்பல் ஒன்றின் தாக்குதலுக்குள்ளானது. அன்றிலிருந்து 1973ம் ஆண்டு வரை இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்பு ரோந்தில் இங்கிலாந்து இராணுவத்தின் படைப்பிரிவின் ஒரு பகுதியினர் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    1844ம் ஆண்டில் இங்கிலாந்து வங்கிக்கு இங்கிலாந்து பவுன்  காகிதக் கற்றைகளை விநியோகிக்கும் முழு உரிமையும் அளிக்கப்பட்டது.

    1997ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு  பதவிக்கு வந்த லேபர் அரசாங்கத்தின் நிதியமைச்சரான கோர்டன் பிரவுன் அவர்களால் இங்கிலாந்து வங்கிக்குப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

    இதுவே இங்கிலாந்து வங்கியின் வரலாற்றுச் சுருக்கமாகும். ஒரு நாட்டின் செல்வச்செழிப்புக்குக் காரணம் அந்நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளே.

    தாம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனும் சுயநல நோக்கினால், தொலைநோக்கான பொதுநலக் கொள்கைகளை முன்வைக்காது குறுகிய கொள்கைகளை முன்வைப்பதற்கு  பதவியிலிருக்கும் அரசுகள் முனைந்து வந்த காரணத்தினாலேயே இங்கிலாந்து வங்கிக்கு முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டது.

    இது இங்கிலாந்தின்  அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அனைத்துத் தரப்பினராலும் கணிக்கப்படுகிறது.

    இவ்வங்கியின் தற்போதைய கவர்னராக முந்தைய கனேடிய வங்கியின் முகாமையாளரான “மார்க் கானி (Mark Carney) பதவி வகிக்கிறார்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(121)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    கல்வியின் மகத்துவத்தை, அதன் இன்றியமையாத அவசியத்தை உலகின் எந்த மூலையில் அமைந்துள்ள நாடுகளும், அவற்றின் அடித்தளமாக, உயிரோட்டமாக அமைந்திருக்கும் சமுதாயங்களும் மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கும் ஒரு கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுவே யதார்த்தமான உண்மையாகும்.

    நாடுகளுக்கிடையே இருக்கும் தூரம் குறைந்து வருகிறது. பிரயாணிக்கும் வேகம் அதிகரிப்பதனால் அதற்காகச் செலவு செய்யும் நேரமும் குறைந்து கொண்டே வருகிறது.

    விஞ்ஞான அறிவு அதிகரித்து அதன்மூலம் நமது அன்றாட வேலைப்பளுக்களைக் குறைப்பதற்கான சாதனங்களின் கண்டுபிடிப்புகள் அதிகரிப்பதனால் அத்தகைய பொருட்களின் மீது மக்கள் கொண்டிருக்கும் சார்பு நிலையும் அதிகரிக்கிறது. அதன்மூலம் இத்தகைய பொருட்களின் உற்பத்தியின் பெருக்கம் அவசியமாகிறது.

    பொருளாதார முன்னேற்றத்துக்கான வழிமுறைகள் இத்தகைய வியாபரங்களுக்குள் தேடிக்கொள்ளும் உத்தியோகங்களிலேயே தங்கியுள்ளது.

    இது கல்வியின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் வலியுறுத்தி நிற்கிறது.

    எனது இவ்வார மடலின் மூலம் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகும் விடயம் எதுவாகவிருக்கும் எனும் எண்ணம் உங்களுக்குத் தலைதூக்குவது இயற்கையே.

    இன்றைய அறிக்கை ஒன்றின்படி இங்கிலாந்தின் அதியுயர் பதவிகள் பிரத்தியேகப் பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களிடமே தங்கியுள்ளதாகத் தேரிவிக்கிறது.

    அது சரி ! அதற்கென்ன என்று கேட்கிறீர்களா ?

    பிரத்தியேகப் பாடசாலைகளில் கல்வி பயில்வதற்கு மிகுந்த செலவு ஏற்படும். அதாவது இங்கிலாந்தில் பிரத்தியேகப் பாடசாலைக் கட்டணம் மிகவும் அதிகம். எனவே இத்தகைய பாடசாலைகளில் கல்வி பயில்வோர் மிகவும் செல்வமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

    இந்த அறிக்கையில் அவர்கள் ஏறத்தாழ 4000 வியாபாரங்கள் மற்றும் அரசியல் துறைகளில் ஆய்வு நடத்தியதில்;

    71% வீதமான உயர் நீதிபதிகள்
    62% வீதமான உயர் இராணுவ அதிகாரிகள்
    55% வீதமான உயர் அரச அதிகாரிகள்
    36% வீதமான அமைச்சரவை பதவிகள்
    43% வீதமான பத்திரிக்கை ஆசிரியர்கள்
    ஆகியோர் மிகவும் பிரபலமிக்க பிரத்தியேகப் பாடசாலைகளில் பயின்று, மிகவும் பெயர் பெற்ற சர்வகலாசாலைகளில் பட்டம் பெற்றவர்களாவார்கள் எனவும், இவர்களின் குடும்பப் பின்னணியின் படி இவர்கள் செல்வமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.

    இப்படிப்பட்ட ஒரு சூழலில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் அன்றி மாணவி எப்படி இத்தகைய உயர் பதவிகளை எய்தலாம்? எனும் கேள்வி சில அரசியல் எதிர்தரப்புகளில் இருந்து எழுகிறது.

    educationஇன்றைய இங்கிலாந்து அனைத்து மக்களுக்கும் சமமான தளத்தை அமைத்துக் கொடுக்கிறதா? எனும் கேள்வியும் மிகவும் ஓங்காரமாக ஒலிக்கிறது.

    ஆனால் இத்தகைய ஒரு நிலையை மாற்ற உகந்த வழி என்ன? குற்றம் சாட்டும் உங்களிடம் இதற்கு மாற்று வழி இருக்கிறதா? வசதி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த மாணவனோ அன்றி மாணவியோ அதிகக் கட்டணம் செலுத்தி பிரத்தியேகப் பாடாசாலைகளுக்குச் செல்வதைத் தடுப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் சவாலாக இருக்காதா ? என்று அரசாங்கத் தரப்பிலிருந்து சத்தமாகக் கேட்கிறது.

    இதற்கு ஒருவகையிலான தராதரப்படுத்துதல் முறையை அறிமுகப்படுத்தலாமே என்கிறார்கள் ஒரு சாரார்.

    சமுதாயத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக தராதரப்படுத்துதல் முறையைக் கொண்டுவருதல் சட்டத்திற்கு முரணானது எனும் வாதம் சட்டத்தரப்பினில் இருந்து வருகிறது.

    எந்தக் கல்லூரியில் படித்து, எந்தச் சர்வகலாசாலையில் பட்டம் பெற்றிருந்தாலும் அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பயிற்சிக்ககா ஒதுக்கப்படும் இடங்கள் தகமை பெற்ற மாணவர்களின் குடும்பப் பின்னணியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை தனியார் தரப்பு வியாபாரங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது இந்த நிலையை ஒருவகையில் மாற்றியமைக்க உதவும் என்கிறார்கள் சிலர்.

    எது எப்படி இருப்பினும் கல்வியும், வேலை வாய்ப்புகளும் நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் அடையக்கூடியவகையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம் .

    இதற்கு சட்டம் அவசியமா? அன்றி பெற்றோரின் கடமையின் வலிமை உணரப்பட வேண்டியது அவசியமா? மிகவும் சிக்கலான கேள்வி இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவிக்கு நன்றி: http://whyworkineducation.com/about/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(120)

    — சக்தி சக்திதாசன்.

    U.S. Journalist James Foley Beheaded by Islamic State Militants in Iraq
    U.S. Journalist James Foley Beheaded by Islamic State Militants in Iraq

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    நாடுகளுக்கிடையேயுள்ள தூரம் குறைந்து, ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மற்றைய நாட்டினர் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஒருநாட்டின் பொருளாதாரம் மற்றொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன் எப்போதுமில்லாதவாறு இப்போது தங்கியுள்ள ஒரு காலமிது.

    இனங்களுக்கிடையேயான கலாச்சார மேம்பாட்டை நன்கு புரிந்து கொண்டு மனிதநேயத்தோடு மற்றவர்களை அனுசரித்து நடக்கும் வகைக்கு ஏற்ற ஒருசூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஆனால் உண்மையில் இத்தகைய ஒரு பொன்னான காலத்தில் இன்றைய உலகம் எந்த ஓர் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது ?

    எமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதமான இயற்கைப் பரிணாமத்தை ரசிக்காமல் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். ?

    ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக இலட்சிய நோக்கை நோக்கி முழு பிரயத்தனத்துடன் முன்னேற முயற்சிப்பது தவறாகாது.

    தமது தலைமுறையை விடத் தமது சந்ததியினர் வாழ்வில் மிகவும் பல செளகரியங்களுடன் வாழ வேண்டுமென்பதற்காக அயராது உழைப்பதும்தவறாகாது.

    ஆனால் இன்றைய உலகிலோ மதத்தின் பெயரால், இனங்களின் பெயரால், மொழியின் பெயரால் அனாவசியமான போர்கள் தொடுக்கப்பட்டு இலட்சக்கணக்கான மனித உயிர்கள் வீண் வீம்புக்காக பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    மதமோ அன்றி, புரிந்துணர்வு கொண்ட பெரியோர்களோ என்றுமே தம்முடைய நம்பிக்கைக்காக மற்றைய உயிர்களைப் பறிப்பதைப் போதிக்கவுமில்லைஅன்றி ஏற்றுக் கொள்ளவுமில்லை.

    ஆனால் மதத்தின் பால் அன்பு கொண்டவர்கள் என்று கூறுவோர்களின் வெறித்தனமான நடவடிக்கைகள் இன்றைய நூற்றாண்டு மனித நாகரீகத்தையே எள்ளி நகையாடுகிறது.

    நான் சமீபத்தில் எனது காரில் வேலைத்தளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில் வானொலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைச்செவிமடுத்தேன். சமீபத்தில் ஈராக்கில் கோரமாகக் கழுத்து வெட்டப்பட்டு மரணமெய்திய அமெரிக்க  ஊடகவியலாளரின் மரணத்தைப் பற்றிய கருத்தாடல் நடந்து கொண்டிருந்தது.

    அப்போது வானொலியில் அக்கருத்தாடலில் பங்கு பற்றிய நேயர் ஒருவர் , இப்படியான போர்ச்சூழலுக்குள் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியளாளருக்குத் தாம் ஈடுபடும் செயலின் பயங்கரம் புரிந்திருக்க வேண்டும். பின் எதற்காக நாம் அவருக்காகப் பரிதாபப் பட வேண்டும் எனும்வகையில் கருத்துத் தெரிவித்தார்.

    அவர் கூற்றில் இருக்கும் ஓரளவு உண்மையையும், தனது கருத்தைச் சொல்லும் உரிமை அவருக்கு இருப்பதையும் ஏற்றுக் கொண்டாலும் எனக்குஅக்கருத்து மனதில் ஒருவித சலனத்தை ஏற்படுத்தியது.

    இன்றைய நவீன தொலைக்காட்சி மயமான வாழ்க்கைச் சூழலில் நாம் எமது இல்லங்களில் இருந்து கொண்டே 24 மணிநேர செய்தியறிக்கைகளின் மூலம் பல மைல் தொலைவிலுள்ள நாடுகளில் நடக்கும் பயங்கரமான யுத்தங்களைப் பார்த்துப் பரிதாப்படுகிறோம், அன்றி விமர்சனம் செய்கிறோம்.

    இத்தகைய காட்சிகளை எம் கண்முன்னால் கொண்டு வந்து கொடுப்பவர்கள் யார்? அத்தகைய பயங்கரப் போர்முனைகளில் தமது உயிரைப் பணயம் வைத்துப் படம் பிடிக்கும் படப்பிடிப்பாளர்களும் அதற்கு  முறையான விமர்சனங்கள் கொடுத்து அவற்றை உயிர்ப்பிக்கும் ஊடவியலாளர்களும் தானே !

    தமது உயிர்களுக்குப் பயந்து நாம் வாழும் நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அங்கு செல்லாதிருந்தால் யார் எமக்கு நாம் வாழும் நாட்டின் கோணத்தில் அங்கு நடப்பவைகளை உண்மையுடன் எடுத்துச் சொல்லுவது ?

    ஒரு நாட்டின் போர்முனையில் அப்போர் தாம் வேண்டாத மக்கள் தம்மீது திணிக்கபடுவதையும், அம் மக்கள் படும் அவஸ்தையை உலகின் கவனத்திற்கு, சர்வதேச நாடுகளின் மட்டத்தில் கொண்டுவரும் அளப்பரிய பணிகளைச் செய்து வருகிறார்கள் இவ்வூடகவியலாளர்கள்.

    வெளிநாடுகளில் நடக்கும் செய்திகள் உண்மை வடிவத்தில் எமக்குக் கொண்டு வரப்பட வேண்டும் !

    அதை நாம் இருந்த இடத்தை விட்டு அசையாமல் ரசிக்க வேண்டும் !

    ஆனால் அவ்வூடவியலாளர்கள் அகோரமான முறையில் அக்கிரமக்காரர்களின் கையால் கொலைசெய்யப்படும் போது மட்டும் அது அவ்வூடகவியளாளரின் பொறுப்பு என்று இலகுவாகக் கூறி விட வேண்டும் !

    இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவிக்கு நன்றி: http://www.people.com/article/james-foley-american-journalist-beheaded

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(119)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    தினமும் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான திட்டங்களும் வழிமுறைகளில் பலவழிகளில் சலிப்படைய வைப்பது இயற்கை.

    வீட்டுக்கு வீடு வாசற்படி இருப்பது போல மனிதராய்ப் பிறந்த எம் அனைவருக்கும் ஏதாவது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டேயிருக்கின்றன.

    வரும் பிரச்சனைகளின் வடிவங்களும் அவற்றின் தாக்கங்களும் வேண்டுமானல் வேறுபடலாம் ஆனால் பிரச்சனைகள் எதுவும் இல்லாதோர் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று.

    என்னடா இது ? ஆரம்பிக்கும் போதே பிரச்சனை, பிரச்சனை என்று கொண்டு வருகிறானே ! என்று சிறிது கலக்கமடைவது புரிகிறது. விசாரம் வேண்டாம் விடயத்திற்கு வருகிறேன்.

    பிரச்சனைகளைப் பிரஸ்தாபித்து நான் ஆரம்பித்த காரணம் இப்பிரச்சனைகளிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத் தேவையை வலியுறுத்த வேண்டியதாலேயே !

    ஆமாம் கொஞ்ச நேரம் எம்மை மறந்து நாம் இருக்க வேண்டி தொலைக்காட்சி அல்லது சினிமா என்று எமது மனதை அவற்றில் லயிக்க விடுவது அனைவருக்கும் பொதுவான செயலாகிறது.

    இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அன்றி சினிமாக்களிலோ நாம் எம்மை மறந்து சிரிப்பது அதிலே இடம்பெறும் நடைச்சுவை நிகழ்ச்சிகளிலோ அன்றி நகைச்சுவைக் காட்சிகளிலோ எமது மனம் எம்மையறியாமலே லயிப்பதினாலேயாகும்.

    எந்த அளவிற்கு இந்நகைச்சுவைக்காட்சிகளில் எமது மனம் லயிக்கிறது என்பது அக்காட்சியில் நடிப்பவர்ளின் தத்ரூபமான நடிப்பைப் பொறுத்தே இருக்கும்.

    அப்படியாக எம்மை லயிக்க வைக்கும்படியான நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    சரி எதற்காக இத்தனை விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ?

    நேற்று அமெரிக்க திரையுலகமான ஹாலிவுட்டில் நடந்த ஒரு துயரகரமான நிகழ்வே எனது மனதில் இச்சிந்தனைக் குதிரையைத் தட்டி விட்டது.

    எமது துயரங்களை மறந்து எம்மைச் சிரிக்க வைப்பதற்காக பலமணிநேரம் மேடையிலோ அன்றித் தொலைக்காட்சியிலோ அன்றி திரையரங்குகளிலோ பாத்திரமேற்று பணிபுரியும் அந்நடிகர்கள் தமது பிரத்தியேக வாழ்வினில் கவலைகளை மறந்து வாழ்கிறார்களா ?

    ஹாலிவூட்டின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான “ராபின் வில்லியம்ஸ்” ( Robin Williams ) அவர்களை அறியாதவர்கள் மிகச்சிலரே.

    cold-and-dieகடந்த திங்கட்கிழை தனது வீட்டில் தூக்குக் கயிற்றை மாட்டி தனது உயிரைத் தானே எடுத்துக் கொண்டார் எனும் செய்தியை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.

    1951ம் ஆண்டு சிக்காகோ நகரில் “ராபர்ட் விட்ஸெரால்ட் வில்லியம்ஸ்” என்பவருக்கும் “லாரின் மக்லாரின்” என்பவருக்கும் மகனாக ராபின் மக்லாரின் வில்லியம்ஸ் பிறந்தார்.

    இளவயதிலே தனது தந்தையிடம் மிகுந்த பயம் கொண்டவராகவே வளர்ந்த இவரின் தாயாரும் பணிபுரிந்தமையால் தாதிமார்களிடமே வளர்ந்தவர் இவர்.

    பின் ஒருமுறை குறிப்பிடுகையில் “அன்புக்காக ஏங்கியவன் நான் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

    பள்ளியில் சக மாணவர்களால் “அதி சிறந்த நகைச்சுவையாளர்” என்று கெளரவிக்கப்பட்ட அதே நேரம் “வாழ்க்கையில் வெற்றியடையும் வாய்ப்பே இல்லாதவர் ” எனும் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் பிரசித்தி பெற்றது அந்நாளில் அமெரிக்கத் தொலைக்கட்ச்சியில் பிரபலமான நகைச்சுவைத் தொடரான “ஹாப்பி டேஸ்” ( Happy days ) எனும் தொடரில் பாத்திரமேற்று நடித்த பின்னரே.

    மூன்றுமுறை மணமுடித்த இவருக்கு முதலாவது மனைவியின் மூலம் ஒரு மகனும், இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகள் , மகன் என இரு குழ்ந்தைகளும் பிறந்தனர்.

    இவர் நதித்த படங்களில் “Good morning vietnam “, “ Mrs. Doubtfire”, “The dead poets society “ என்பன மிகவும் பிரசித்தி பெற்ற திரைப்படங்களாகும்.

    இவ்வாறு மேடையிலும், திரையிலும் மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் போதை வஸ்துகள் மது என்பனவற்றிற்கு அடிமையாக மாறினார். தனது இந்த பழக்கங்களை இல்லாதொழிப்பதற்காக பலமுறை இதற்கான சிகிச்சை நிலையங்களில் தானாகவே போய்ச் சரணடைந்துள்ளார்.

    இவர் சமீபகாலத்தில் பல பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாகியிருந்தார் என்று ஒரு செய்தி பத்திரிகைகளில் அடிபடுகிறது.

    இவர் சமீபத்தில் பலத்த மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது..

    தன்னுடைய வாழ்வுநிலை கொடுத்த மனபாதிப்பைத் தாங்கமுடியாமல் தனது உயிரைத் தானே மாய்த்துக் கொண்டார்.

    இவரது மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா தொடங்கி பல நாட்டைச் சேர்ந்த அரசியல், கலைத்துறைப் பிரமுகர்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

    அடுத்தவரின் துயரைப் போக்க சிரிப்பு அதிர்வலைகளை உருவாக்கும் இவரைப் போன்றவர்களின் சொந்தவாழ்க்கை கொடுக்கும் மன அழுத்தத்தைப் பற்றி  இவர்களது நகைச்சுவைகளை ரசிக்கும் நாம் எப்போது கூட எண்ணியிருந்திருக்க மாட்டோம்.

    கவியரசரின்,

    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான்
    சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
    எனும் பாடலின் அர்த்தம் இவர்களை மையப்படுத்தி எழுந்ததோ ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(118)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    ஒரு நாட்டின் சரித்திரத்தோடு அதன் கலாச்சாரப் பாரம்பரியம் மட்டும் பின்னி இருப்பதில்லை.

    பல சமயங்களில் ஒரு நாட்டின் பிரசித்தி பெற்ற தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள், அந்நாட்டின் இலக்கியப் பிரசித்தி வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் எனப் பலவகையானவைகளும் சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும்.

    ஒரு பிரசித்தி வாய்ந்த பொருளின் பெயரைக் குறிப்பிட்டவுடன் அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று கூறிவிடுவார்கள். அந்நாட்டின் முகவரிகளுள் அதுவும் ஒன்றாகி விடுகிறது.

    அதேவகையில் நான் புலம்பெயர்ந்து இன்று எனது வாழ்புலமாகி விட்ட இங்கிலாந்தும் தனக்கேயுரிய பாணியில் பலவற்றினோடு தனது நாட்டின் பெருமையைத் தக்க வைத்துள்ளது எனலாம்.

    குறிப்பாக வில்லியம் ஷேக்ஸ்பியர் என்று குறிப்பிட்டதுமே அவரை இங்கிலாந்துடன் தொடர்பு படுத்துவது அவ்விருவருடைய தனித்துவத்தையும் குறிப்பதாகிறது.

    ஆனால் இன்றோ தாயரிப்புகளில் கண்டுபிடிப்புகளில் முன்னனி வகித்த இங்கிலாந்து தேசத்தின் “உற்பத்திப்” பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது. அதனுடைய முழுப் பொருளாதார அடிப்படையும் நிதி அடிப்படையிலும், சேவைகளின் அடிப்படையிலுமே அமைந்துள்ளது.

    அதுசரி சக்தி இந்த மடலின் வழியே எங்கே இழுத்துச் செல்கிறான் ? என்றொரு கேள்வி உங்கள் மனங்களில் எழுவது இயற்கை..

    மிகவும் சுவையான செய்தி ஒன்றைச் சமீபத்தில் அறிந்தேன், அதைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திலேயே உங்களுடன் இந்த மடலுடனான உறவாடல்.

    “ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) “ எனும் காரைப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருப்பீர்கள்.

    இன்றைய வியாபார உலகில் ஒரு பழைய ஆஸ்டன் மார்ட்டின் காரின் விலையே சுமார் 50 இலட்சத்திற்கு மேலேயே போகும்.

    Astonஅது சரி இந்தக் காரின் பூர்வீகம் தான் என்ன ?

    இங்கிலாந்தின் பக்கிங்கம்ஷ்யர் எனும் இடத்திற்கு அருகில் உள்ளதே இந்த ஆஸ்டன் ஹில் எனும் பகுதி. இப்பகுதியின் இயற்கை வனப்பை மிகவும் ரசிக்கும் லயனல் மார்ட்டின் என்பவர், தாம் விற்பனை செய்யும் சிங்கர் எனும் ஓட்டப்பந்தயக் காரை இப்பகுதியிலேயே பரீட்சார்த்த ஓட்டம் செய்து பார்ப்பார். அவரும் அவரது நண்பரும் இணைந்து ஒரு விரைவுக் காரைத் தாயாரிக்க முடிவு செய்தார்கள்

    அவர்கள் தயாரித்த காருக்கு திரு மார்ட்டின் அவர்கள் மிகவும் ரசிக்கும் ஆஸ்டன் ஹில் பகுதியின் முதற்பெயரான ஆஸ்டனையும் திரு மார்ட்டின் அவர்களது பெயரான மார்ட்டின் என்பதனையும் இணைத்து  “ஆஸ்டன் மார்ட்டின்” என்று பெயரிட்டார்கள்.

    அதுவே பின்பு மிகவும் பிரசித்தி பெற்ற மோட்டார் கார் ஆகியது. அதன் பிரபல்யத்தை அதிகமாக்கியது “ஜேம்ஸ்பாண்ட்” படங்களில் ஜேஸ்பாண்டுக்கு மிகவும் பிடித்தமான மோட்டார் காராக அக்கார் இடம்பெற்ற காரணமே !

    இது லண்டனில் 1913ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது உலகப் போரின் போது லயனல் மார்ட்டினும் அவரது பங்குதாரராரும் நண்பருமான பாம்போர்டு என்பவரும் இங்கிலாந்து இராவணுத்தில் இணைந்தார்கள்.

    முதலாவது உலகமகாயுத்தம் முடிந்ததும் இந்தக் கம்பெனி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வித்தியாசமான மாடலில் ஆஸ்டன் மார்ட்டின் தயாரிக்கப்பட்டது.

    இன்றும் அதிகூடிய விலையுயர்ந்த கார்களின் மத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக்காரின் பிறப்பின் ரகசியம் இதுதான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(117)

    –சக்தி சக்திதாசன்.

    சக்தி சக்திதாசன்
    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றொரு மடலில் மனந்திறந்து உங்களுடன் பேசும் ஒரு சந்தர்ப்பம்.

    2014ம் ஆண்டு பிறந்ததுதான் தெரியும். இதோ 7 மாதங்கள் ஓடி மறையும் வேளை. வாழ்க்கையை நாம் மாதங்களில் கணக்கிட்டால் கிடைப்பது எமக்கு அதிர்ச்சியே !

    இலண்டனில் பலவருடகாலமாக வசித்து வரும் எனது பால்ய நண்பன் ஒருவனுடன் அன்றொருநாள் தொலைபேசியில் உறவாடிக் கொண்டிருந்தேன். மிகவும் சுவையாக பேசக்கூடிய அவன் தந்த ஒரு தகவல் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியையே தந்தது.

    அப்படி அவன் என்னதான் கூறி விட்டான் என்கிறீர்களா?

    இந்த உலகில் வாழும் மனிதர்களின் சராசரி வயது 70 என்று எடுத்துக் கொள்வோம். அப்படியாயின் ஒரு மனிதனின் வாழ்க்கை ஏறக்குறைய 840 மாதங்கள் தானே !

    உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்வோம் வாழ்க்கையில் நான் 56 வருடங்களைக் கடந்து விட்டேன் அதாவது 672 மாதங்களை வாழ்ந்து முடித்து விட்டேன்.

    சரி மனிதனின் சராசரி வாழ்க்கையோ 840 மாதங்கள் அதிலே 672 போய்விட்டால் எஞ்சி இருப்பதோ 168 மாதங்களே !

    அடடா இனிக் கடக்கும் ஒவ்வொரு மாதமும் இந்த 168ல் ஒன்றை எடுத்துச் செல்லப்போகிறது . . . .

    எண்ணும் போது கொஞ்சம் அச்சமாக இருக்கிறது இல்லையா ?

    இன்னும் பார்க்க வேண்டியது, பழக வேண்டியது, சுவைக்க வேண்டியது வாழ்க்கையில் அநேகம் இருக்கிறதே. ஒருவேளை எனக்கு நேரம் கிடைக்காமல் போய்விடுமோ ? எனும் சந்தேகம் மனதை ஆக்கிரமிக்கிறது இல்லையா ?

    இவ்வுண்மையை அழகாக எடுத்துச் சொன்ன என் நண்பன் என் மெளனத்தைக் கண்டதும் பெரிதாகச் சிரித்துக் கொண்டே ” என்ன பயந்து விட்டாயா? “ என்று கேட்டான்.

    “இல்லேடா கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது ” என்றேன் சமாளித்துக் கொண்டே.

    அட இதைப்போய் ஏன் எமக்கு சொல்கிறான் என்கிறீர்களா? அன்பினியவர்களே ! வாழ்க்கையின் நீளத்தைக் கண்க்கிடும் போதுதான் அதன் உண்மையான அர்த்தம் விளங்குகிறது.

    எதையோ தேடி, எங்கோ ஓடி, யார் யாருடனோ தேவையற்ற சில்லறை விடயங்களுக்காக மனஸ்தாபப்பட்டு இதெல்லாம் எதற்காக மீதமிருக்கும் இந்த எஞ்சிய மாதங்களையும் மகிழ்வில்லாமல் ஆக்குவதற்காகவா ?

    மனித வாழ்க்கை எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதை மகிழ்வுடனும் அமைதியாகவும் வாழ வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தார்மீகக் கடமையாகிறது..

    எனது மகனின் திருமணத்திற்காக மூன்றுவார காலம் சென்னை சென்று கடந்தவாரம் திரும்பி வந்தேன்.

    சென்னையில் நான் தங்கி இருந்த சமயம் பல சமயங்களில் பல கால் டாக்ஸிகளில் பிரயாணம் பண்ண வேண்டிய தேவையிருந்தது.

    அப்படிப் பயணிக்கும் பொழுதுகளில் பல வித்தியாசமான கார்ச் சாரதிகளுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையும் எனக்குத் தந்தது புதுப்புது அனுபவங்களே !

    வாழ்க்கையை எத்தகைய நம்பிக்கையுடன் அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்று எண்ணும் போது அவர்களின் மனத்திடம் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

    இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் ஒரு 75 சதவிகிதம், நான் 19 வயது இளைஞனாக இருந்தபோது எனக்கு இருந்திருந்தால் எத்தனையோ சாதனைகள் படைத்திருக்கலாமே. அடடா, இன்னும் சராசரி 168 மாதங்களே எஞ்சியிருக்கும் போது இத்தனை அனுபவப் பாடங்களா ? என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    அத்தோடு சேர்ந்து ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அந்த எல்லாம் அறிந்த ஆதிமூலம் எனக்கு இப்பொழுது  இவைகளை அறியத் தருகிறான். அட எமக்குப் பயன்படாவிட்டால் என்ன எனது அடுத்த தலைமுறைக்குச் சொல்லி வைப்பது என் கடமை எனும் எண்ணம் எனக்கு பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது.

    சிலநேரங்களில் சில மனிதர்கள் சில வகையினில் எம்மைப் பாதிப்பார்கள் அந்தப் பாதிப்புகளில் இருக்கும் அனுகூலங்களை மட்டும் நாம் பொறுக்கி எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டால் எதிலுமே குறை காணும் சுபாவம் எம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அகலத் தொடங்கும்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒவ்வொருவருக்காகவும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் காத்திருக்கிறது. அல்லாதவற்றை விலக்கி அவற்றைக் கண்டுகொள்ளும் ஆற்றலை நாம் வளர்த்துக் கொண்டுள்லோமா?

    இதுவே எம்முன்னால் இருக்கும் கேள்வி !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

     

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(116)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    இன்னொரு வாரம், இன்னொரு மடல், இன்னொரு சந்திப்பு.

    ஐக்கிய இராச்சியம் நான் அறிந்த நாள் முதல் வட அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் எனும் நான்கு பகுதிகளின் சேர்க்கை ஆகும்.

    இந்த ஒன்றிணைப்பான ஐக்கிய இராச்சியம் தான் ஒரு காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியமாக தனது காலனித்துவ நாடுகளின் மீது கோலோச்சியது.

    இங்கிலாந்து அரசர் முறையே வேல்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளை வெற்றி கொண்டு பிளவு பட்ட அயர்லாந்தின் வடபகுதியையும், வேல்ஸ்சையும் ஒன்றாக இணத்தார்.

    அதன் பின்பு இரண்டு அரசுகள் அதாவது இங்கிலாந்துடன் இணைக்கப்பட்ட வேல்ஸ், வடஅயர்லாந்து உள்ளடங்கிய ஒரு அரசும், ஸ்கொட்லாந்து அரசும்  தனியே இயங்கி வந்தது.

    பின்பு 1503ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் அரசரான ஐந்தாவது ஜேம்ஸ் இங்கிலாந்தின் அரசரான 7வது ஹென்றியின் மூத்த புதல்வி மார்கிரெட் டியூடோர் என்பவரை மணந்ததும் தான் ஸ்காட்லாந்து அரசரின் கனவான இங்கிலாந்து அரசும் ஸ்காட்லாந்து அரசும் இணையும் படலங்கள் ஆரம்பமாகின.

    englandஇப்படியாக மலர்ந்ததுதான் ஐக்கிய இராச்சியம். இந்த ஐக்கிய இராச்சியம் ஒன்றான  யூனியன் ஆக அமைந்திருந்தாலும் கடந்த லேபர் கட்சியின் அரசு டோனி பிளேயரின் தலைமையின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் அங்கங்களான ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் என்பனவற்றிற்கு சட்டசபை முறையிலான அதிகாரங்களை வழங்கியது.

    இன்று அப்பகுதிகளுக்கு இந்திய முறையப் போன்று முதலமைச்சரும் சட்டசபைகளும் உண்டு.

    ஆனால் பிரச்சனை அத்தோடு நின்று விடவில்லை. ஸ்காட்லாந்து அரசியல் கட்சியில் ஒன்றான ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தாம் தனிநாடாகத் திரும்பப் பிரிந்து போக வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்து பல தேர்தல்களில் ஜயித்தது.

    அத்தோடு ஸ்காட்லாந்து உள்நாட்டுத் தேர்தலில் அக்கட்சியே ஜெயித்து சட்டசபையை அமைத்தது.

    அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசாங்கம் ஸ்காட்லாந்து நாடு தனியே பிரிந்து போவதை அந்நாட்டு மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு பொதுஜன வாக்கெடுப்பை ஸ்காகொட்லாந்தில் நடத்தப் போவதாக அறிவித்து அதற்கான திகதி இவ்வருடம் செப்டெம்பர் மாதம் என அறிவித்தது.

    இதோ ஜூன் வந்து விட்டது, ஸ்காட்லாந்து பிரிவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி தேசியக் கட்சியும், அதனால் ஸ்காட்லாந்து அடையப்போகும் தீமைகளைப் பற்றி இங்கிலாந்தின் மற்றைய பிரதானக் கட்சிகளும் கடுகதிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.

    ஆனால் இங்கிலாந்து மக்களை ஸ்காட்லாந்து தாம் பிரிந்த பின்பு எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் சில விடயங்கள் மிகவும் எரிச்சலூட்ட வைக்கின்றன.

    குறிப்பாக ஸ்காட்லாந்து பிரிவினையை வேண்டுவோர் பிரிவின் பின்னரும் தமது நாட்டின் கரன்சியாக பிரிட்டிஷ் பவுண்ஸ்சையே வைத்திருக்கப் போகிறோம் என்பது பல இங்கிலாந்து மக்களுக்கு மிகவும் ஆத்திரத்தையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணுகிறது..

    இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இது மிகவும் சிக்கலான சந்தியாகிறது முடிவு எதுவாயினும் அது இரு பகுதிகளையும் பாதிக்கத்தான் போகிறது.

    சரி செப்டெம்பர் மாதத்தின் பின்னால் இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(115)

    –சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..

    பரபரப்பான வாழ்க்கை, நவீன விஞ்ஞான யுகத்தின் அதியுயர் கட்டத்தில் நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம்.

    இருபத்தி நான்கு மணிநேர ஊடக யுகமிது. பிரசித்தி பெர்றவர்களின் 24 மணிநேர நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து எங்கே ஒரு சிறு தளும்பல் ஏற்படுகிறதோ அதனை உடனே அம்பலத்திற்குக் கொண்டு வருவதே இவ்வூடகங்கள் தமது திறமைகளுக்கு விடுத்துள்ள சவாலாகும்

    இத்தகைய ஒரு சூழலில் மிகவும் பிரபல்யமடைந்த கலைஞர்கள், பிரசித்திப் பெற்றவர்களின் பிள்ளைகள் இவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது மிகவும் நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றே.

    உதாரணமாகப் புகழ் பெற்ற கலைஞர் ஒருவருக்கு மகனாகவோ அன்றி மகளாகவோ பிறந்து விட்டால் சாதாரணமானவர்கள் அனுபவிக்கும் சாதாரண மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்க முடியாமல் போய்விடுவது ஒரு துரதிர்ஷ்டமே !

    இத்தகைய சமுதாய அழுத்தங்களுக்குள்ளாகி பல பிரபல்யமடைந்தவர்கள் போகக்கூடாத வழிகளில் போய் தமது வாழ்வைச் சீரழித்துக் கொள்வதைக் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

    இங்கிலாந்தின் பிரபல்யமான பொப்பிசைப் பாடகர் “பாப் கெல்டோவ் (Bob Geldof) என்பவரைப் பற்றி அநேகம் பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் பல ஏழ்மை நாடுகளின் ஏழ்மை நிலையைப் போக்க உதவும் முகமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்துப் பெயர் பெற்றவர்.

    அவரது மனைவியும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமாக இருந்தவர். அவர் பெயர் “போலா யேட்ஸ் (Paula Yates) அவர் கூட தனது பிரபல்யம் வாழ்க்கையில் கொடுத்த அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி இருந்தார்.

    பின்பு ஒருநாள் யதேச்சையாக அளவுக்கதிமாக போதை வஸ்துகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

    Peachesஇவர்களது மகளின் பெயர் “பீச்சஸ்” (Peaches) இவர் கூட சில மாதங்களுக்கு முன்னால் தன் தாயைப் போன்று அளவுக்கதிகமாகப் போதை வஸ்துகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

    25 வயது நிரம்பிய, இரண்டு சிறு குழந்தைகளுக்குத் தாயான இவரின் கணவர் கூட ஒரு பிரபல்யமான இசைக்கலைஞர்.

    இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் “த ஸ்பெக்டெட்டர்” (The Spectator) என்னும் ஒரு பிரபலமான இதழுக்கு இவர் பேட்டியளித்திருந்தார். அப்பேட்டி இவர் இறந்து சில மாதங்களின் பின்னால் அவரது மரண விசாரணை முடிந்த பின்னால் இப்பொழுதே பிரசுரிக்கப்பட்டுள்ளது. அப்பேட்டியில் பேட்டி கண்டவரிடம் “நான் இளமையானவள் ஆனால் வாழ்க்கையில் எது கொடியது தெரியுமா? எம்மைப் பற்றி மக்கள் மனதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பிழையான அபிப்பிராயங்களே” என்று தனது மன ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

    அதுமட்டுமல்ல தனது தாயின் அகால மரணம் தனக்குக் கூட மிகவும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது என்று கூறுகிறார். அவரைத் தெரிந்த அனைவரும் இவருக்கும் இவரது தாயாரைப் போன்றே முடிவு ஏற்படும் என்று முடிகட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் கொண்டவர்களின் தன் மீதான பார்வையை மாற்றியது தன்னிரு குழந்தைகளே என்றும் கூறியிருக்கிறார்.

    போதைவஸ்துக்களின் மிகவும் ஆபத்தான “கெரோயின்” (Heroin) என்றழைக்கப்படும் போதை வஸ்து அதை உபயோகிப்போர் மீது கொண்டுள்ளா அழுத்தமான பிடியைப் பற்றி விபரிக்கும் இவர், இப்போதைவஸ்து பல அரும்பெரும் கலைஞர்களின் வாழ்வைச் சீரழித்ததை எண்ணிப் பார்க்கும் போது தனக்கு வேதனையாக உள்ளது என்றும் கூறியிருந்திருக்கிறார். இப்படியெல்லாம் தனது வாழ்க்கையின் பிரச்சனைகளை புரிந்து வைத்துக் கொண்ட ஒருவரே இப்போதைவஸ்துவுக்கு அடிமையாகி 25 வயதே நிரம்பிய நிலையில் இரு குழந்தைகளைப் பரிதவிக்க விட்டுச் சென்றது போதைவஸ்துகளின்பாவனையின் ஆபத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

    வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் உழைத்து முன்னேறி பிரபல்யமடைந்து விட்டு பின் அந்த வாழ்க்கையை போதைவஸ்துவிற்கு அடிமையாக்குவதின் அநியாய விளைவினை எமது இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இம்மடலின் அடிப்படை நோக்கமாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(114)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…

    ஊரெல்லாம் திருவிழா, காரெல்லாம் இங்கிலாந்துக் கொடி, பேச்செல்லாம் இங்கிலாந்து உதை பந்தாட்ட அணியைப் பற்றி, என்ன எதைபற்றிய அலசல் எனும் கேள்வி எழுகிறதா ?

    உலகக் கால்பந்தாட்டப் போட்டி பிரேஸில் நாட்டில் கோலாகலமாக ஆரம்பித்தது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்து அணி பிரேஸில் நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டது.

    நான் இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தது முதல் எப்போதும் நான்கு வருடத்திற்கொருமுறை நடைபெறும் இவ்வுதைப் பந்தாட்டப் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் இரசிப்பதுண்டு.

    என்ன அதிலே விஷேசம் என்கிறீர்களா ?

    அடிப்படை வசதியற்ற ஏழ்மை சூழ்ந்த நாடுகள் செல்வச் செழிப்பு மிக்க நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிடும் ஒரே நிகழ்வு எனும் காரணமே !

    இதிலே போட்டியிடும் பல நாடுகள் பொருளாதர நிலையிலே பங்கு பெறும் பல நாடுகளை அண்மிக்கக் கூட முடியாது. இருப்பினும் இப்போட்டிக்குத் தமது அணிகளைத் தயார் செய்து மிகுந்த செலவுகளுடன் கூடிய பயிற்சிகளை அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி இப்போட்டிகளில் பங்கு கொள்ள வைக்கிறார்கள்.

    ஆனால் இப்போட்டிகளில் பங்கு பெற்றும் தமது நாடுகளை தெருவோரம் நின்று தொலைக்காட்சி விற்பனை நிலையங்களின் காட்சிக் கண்ணாடிகளின் முன் நின்று பார்த்துக் கைதட்டி ரசிக்கும் அவ்வேழை மக்கள் அதே உணவுக்குக் கூட வழியில்லா நிலையில் தான்.

    என்ன உலகமடா இது என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா ?

    சரி இனி எமது நாடான இங்கிலாந்து நாட்டின் நிலைமைக்கு வருவோம். 1966ம் ஆண்டு உலக உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று உலகச் சாம்பியன்களாக வலம் வந்த பின்பு இன்றுவரை உதைபந்தாட்டப் போட்டியை நாம் தான் கண்டுபிடித்தோம் ( அதுவேறு சர்ச்சை) என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கிலாந்து நாட்டிற்கு மீண்டும் அந்தச் சந்தர்ப்பம் இன்றுவரை எட்டாமலே போகிறது.

    இது ஒருவகை சாபமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது .

    உலக அளவிலேயே உதைபந்தாட்டம் முக்கியமான விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்தில் நடப்பதே மிகவும் பிரசித்து பெற்றது.

    ஏனைய உதைபந்தாட்ட நாடுகளில் உள்ள திறமையான உதைபந்தாட்ட வீரர்கள் பலர் இங்கிலாந்தின் உள்நாட்டு உதைபந்தாட்ட அணிகளில் தம்மை இணைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

    இதற்கு முக்கிய காரணமாக இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்டத்தின் தரத்தின் உயர்வைக் குறிப்பிடுகிறார்கள்.

    இத்தகைய உயர் அபிப்பிராயத்தினைக் கொண்ட உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடானது 1966ம் ஆண்டிற்குப் பின்னால் ஒரு தடவையாவது உலக உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் செல்லவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமே !

    இங்கிலாந்து உதைபந்தாட்ட நிர்வாகக் குழுவினரும் இதுவரை எத்தனையோ திறமையான வெளிநாட்டு பயிற்சியாளர்களைத் தமது அணிக்கு முதன்மைப் பயிற்சியாளர்களாக நியமித்தும் அவர்களது இலக்கை இதுவரை அவர்களால் அடைய முடியவில்லை.

    FIFA 2014 England2FIFA 2014 England

    இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்ட உலகக் கோப்பை எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடைந்தவர்களில் நானும் ஒருவன் .

    என்ன செய்வது இனி 2018ம் ஆண்டை நோக்கி எமது ஆவலைத் திருப்ப வேண்டியதுதான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    படம் உதவி: Getty Images, www.gettyimages.com

    Share