Tag: இந்த வார வல்லமையாளர் விருது

  • இந்த வார வல்லமையாளர்! (242)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திரு. இரா.பானுகுமார் அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது.

    இன்று தமிழ்மரபில் சமணத்துக்கு இருக்கும் உயர்ந்த இடத்தை உலகுக்கு அறிவிக்கும் “தமிழ் சமண மரபு விக்கி” பக்கம் தமிழ்மரபு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக அதன் தலைவி முனைவர் சுபாஷினி அவர்களையும், திரு பானுகுமார் அவர்களையும், செல்வமுரளி அவர்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. இந்த பக்கம் வெளியாவது தமிழ் சமணத்தின் வரலாற்று சுவடுகளை தமிழர் அறியமிக உதவி செய்யும் என வல்லமை நம்புகிறது.

    சமணத்துக்கும் தமிழருக்கும் உள்ள உறவு மிக தொன்மையானது. ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. ஆனால் கால ஓட்டத்தில் சமணமதம் தமிழகத்தில் இருந்த சுவடே தெரியாது இருந்த நிலையில் அதன் தொன்மையை வலையுலகில் பரப்பியவர்களில் பானுகுமார் அவர்கள் மிக முக்கியமானவர். 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வலைப்பதிவில் தமிழ்சமணம் குறித்து எழுதிய கட்டுரைகளை படித்து வியந்துகொண்டிருந்தேன். அவரும் பொள்ளாச்சி நாசா. கணேசன் அவர்களும் சமணர் குறித்த பல கட்டுரைகளை எழுதினார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை அதற்கு பேருதவி செய்துள்ளது.

    சமணம் பற்றி மக்களுக்கு இருக்கும் பல குழப்பங்களை தெளிவிக்கிறார் பானுகுமார். உதாரணமாக சமணம் இல்லறவியலையும், இன்பத்தையும் மறுக்கிறது எனும் மாயையை கீழ்கண்டவாறு உடைக்கிறார்

    “உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்!

    மக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல!

    “இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
    புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)

    வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் – அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. “

    ஸ்வஸ்திகாவுக்கும் சமணத்துக்குள் உள்ள தொடர்பு என்ன என்பதை கீழ்கண்டவாறு விளக்குகிறார்

    “பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று.
    இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும்,
    சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது
    தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக்
    தான். சமணர்களுக்கு இது அடையாளச் சின்னமுமாகப் பயன்படுகிறது.
    சமணர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளில் இவற்றை பொறித்து வைப்பர்.
    வெளி ஊர்களில் இருந்து புலம் பெயரும் சமணக் குடும்பங்களை இந்த
    சின்னத்தை வைத்தே, சமணர்கள் வாழும் வீட்டை அடையாளம் கண்டுக்
    கொள்வார்கள்.”

    சமணத்தின் சிறப்பையும், தமிழ் மரபில் அதற்குள்ள சிறப்பையும் தமிழர் உணர இத்தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது. வல்லமையாளர் பானுகுமார் அவர்களுக்கு வல்லமையின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (240)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திலகவதி மதனகோபால் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    திலகவதி மதனகோபால் அவர்களின் சொந்த ஊர் கோவை. உணவியல் துறையில் பட்டம் பெற்றவர் உணவியல் நிபுணர் ஆவார். முகநூலில் பல சமூக முன்னேற்ற கருத்துக்களை பகிர்ந்து வரும் திலகவதி அவர்கள் சமீபத்தில் பெண் முன்னேற்றம், பெண்விடுதலை குறித்த மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை பதிப்பித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    #திருமணம்_மற்றும்_தாய்மை_அழகாக_இருக்கும்_என்று_என்_மகளிடம்_ஏன்_சொல்லுவேன்…..

    திருமணம் மற்றும் தாய்மை பெண்களின் வாழ்கையில் இன்றியமையாத ஒன்று அல்ல என்றாலும், அவற்றில் உள்ள நன்மைகளைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க நாம் முயற்சி செய்யவேண்டாமா?

    நான் ஒரு பெண்ணியவாதி தான், ஆனால் அதைப் பிரச்சாரம் செய்யும் ரகம் அல்ல. பெண்ணியம் பற்றிய தவறான புரிதலே ஆண்களை வெறுக்கும் நிலைக்கு மாறிவிடுகிறது.

    தன்னை மேம்படுத்திக்கொள்ள எல்லா வழிகளையும் நான் என் மகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன். அவள் ஆசைப்படும், விருப்பப்படும் எதை வேண்டுமானாலும் அவள் செய்யலாம். இறுதி முடிவு அவளுடையதாகவே இருப்பினும், திருமணம் மற்றும் தாய்மை முக்கியம் இல்லை என்று நான் ஒரு போதும் அவளிடம் சொல்ல மாட்டேன்.

    தாய்மார்கள் திருமணம் முக்கியம் அல்ல என்று தங்கள் மகள்களுக்கு அறிவுரை கூறும் கட்டுரைகளைப் படிக்கும் போது எரிச்சலடைய செய்கிறது. நம்மைப் பாதுகாக்கவோ, பார்த்துக்கொள்ளவோ நம் வாழ்க்கையில் ஆண்கள் தேவையில்லை தான். நிதி ரீதியாகச் சுயாதீனமாக(financially independent) இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதைத் திருமணத்துடன் தொடர்புப் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. பழங்காலத்தில் திருமணம் ஒரு பெண்ணின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவே இருந்திருக்கலாம், ஆனால் அதுவே திருமணத்திற்கான அடித்தளமாக இருப்பதாக நாம் இன்னும் நம்புகிறோம் என்று அர்த்தமா?

    1திருமணம் என்பது இரு மனங்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, ஒருவருக்கொருவர் தோழமை, ஆதரவு உணர்வோடு இருந்து மற்றவர்களுடைய தனிப்பான்மையைப் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, விசித்திரமான அணுகுமுறை மற்றும் எரிச்சலூட்டும் பழக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, எல்லாச் சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து ஒன்றாகப் பயணிப்பது. அதுமட்டும் இல்லாமல் திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒரு விதப் அழகான பிணைப்பு ஆகும்.

    வேறு எந்த உறவுமுறை இவை அனைத்தையும் வழங்க முடியும்? எப்படி நாம் நம் மகளிடம் திருமணம் அவசியம் இல்லை என்று சொல்ல யோசிக்க முடியும்? திருமணத்தால் ஏற்படும் சந்தோஷத்தையும், தாய்மை வழங்கக்கூடிய இணையற்ற உணர்வையும் அவர்கள் அனுபவிக்க நாம் விரும்பவில்லையா? ஆம், எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக அமைவதில்லை என்பது உண்மைதான் பலர் பல இன்னல்களுக்கும், இறுக்கமான வாழ்க்கைக்கும் தள்ள படிக்கிறார்கள், ஆனால் இந்தக் காரணங்களினால் திருமணத்தை விட்டுக்கொடுப்பது/தவிர்ப்பது என்பது ஒரு தீர்வாக இருக்க முடியாது.

    பெண்ணியம் அர்த்தம் என்ன? பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுடனான எல்லாப் பழமையான பழக்கவழக்கங்களையும் தடுப்பதா? அல்லது முன்னர்ச் செய்த எல்லாவற்றிற்கும் குருட்டுத்தனமாகச் எதிர்ப்பதா?

    நன்றாகப் படித்த ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதிலும், குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலும் என்ன தவறுள்ளது? எப்போதில் இருந்து இந்தப் பிற்போக்கு எண்ணம் உண்டானது புரியவில்லை?”

    இவரது சமூகநல கருத்துகளுக்காக இவரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது. அடுத்த தலைமுறை பெண்கள் இவரைபோன்ற ஆளுமைகளால் வழிநடத்தபட இவ்விருது ஊக்கம் அளிக்கும் என வல்லமை ஆசிரியர் குழு நம்புகிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • பி வி சிந்துவுக்கு நல்வாழ்த்துகள்

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக பி வி சிந்து அவர்களை அறிவிக்கிறோம்

    ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் பிவி சிந்து. அவர் புல்லால கோபிசந்தின் மாணவி. உலககோப்பை போட்டியில் அவரிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றவர் ஜப்பானிய வீராங்கனை நொசோமி ஒசுகாரா. ஆனால் இதற்குமுன் லண்டன் ஓபனில் வெற்றி பெற்றிருந்தார். இருவருக்குமிடையே சச்சிந் ஷேன் வார்ன் இடையே இருந்தது போல ஆரோக்கியமான போட்டி இருந்து வந்தது.

    இந்த சூழலில்  கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21௧9, 16௨1, 21௰ என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.

    அரை இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுகாராவை எதிர்கொண்டார் சிந்து. உலகக் கோப்பை போட்டியில் ஓகுகாராவிடம் சிந்து தோற்றிருந்தார். இந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் சிந்துவின் ஆட்டத்தின் அனல் பறந்தது. ஓகுகாராவை 22௨0,11௨1,21௧8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கொரிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் சிந்து. இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கணை பி.வி. சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

    1

    இதன்மூலம் இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்ற சரித்திரம் படைத்துள்ளார். பிவி சிந்துவுக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவக், ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என நம்பிக்கொன்டிருந்த பலரையும் பாட்மிண்டன் பக்கம் திருப்பியதாலும், பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரமாகத் திகழ்வதாலும் சிந்துவின் வெற்றியை இந்தியப் பெண்கள் அனைவரின் வெற்றியாகவும் கருதி வல்லமை அவரை வாழ்த்துவதில் பெருமை அடைகிறது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (238)

    செல்வன்
    இவ்வார வல்லமையாளராக திரு அரிசோனன் மகாதேவன் அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
    வல்லமையில் பல ஆண்டுகளாக எழுதிவருபவர் திரு அரிசோனன். இவர் தமிழகத்தில் பிறந்து, கொரியாவில் பணியாற்றி தற்போது அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் வசித்து வருகிறார். “தமிழ் இனி மெல்ல” எனும் சோழர் காலத்தை மையமாக வைத்த புதினத்தை தாரணி பதிப்பகத்தார் மூலம் வெளியிட்டுள்ளார். தாரகை எனும் வலைதளம் மூலம் தமிழ், தமிழ்மண் குறித்த செய்திகளை வெளியிடுகிறார்.
    அரிசோனா மண்ணில் தமிழும், ஆன்மிகமும் தழைப்பது இவரது எழுத்தின் மூலம் அறியலாம். அரிசோனா பிள்ளையார் ஆலயம் குறித்த செய்திகளை இவர்மூலம் வல்லமை குழுவில் அறிந்துகொண்டோம். சைவ உணவு மற்றும் ஜீவகாருண்யத்தில் மிகுந்த அக்கறை கொண்ட அரிசோனர் கொரியாவில் சைவம் என்றால் என்னவென்றே தெரிந்திராத நாட்டில் சைவ உணவுக்கொள்கையை பின்பற்ற தாம் பட்ட சிரமங்களை குழுவில் பதிவுகளின் மூலம் எடுத்துரைத்தார். பலசமயம் வெறும் சீரியலை மட்டுமே உண்டதையும், சைவ உணவின்றி பட்டினி இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
    1
    வல்லமையில் நடந்த பலவிவாதங்களில் இவர் பங்குகொண்டுள்ளார். அதில் என்னை மிக கவர்ந்த விஷயம் தன்னை எதிர்ப்பவரையும் பண்புடன் இவர் அணுகும் விதமே. மிக சர்ச்சைக்குரிய கருத்துக்களை விவாதிக்கையிலும் உணர்ச்சிவசப்படாது கருத்தை எடுத்து வைப்பதில் வல்லவர்.
    மதுவிலக்கு கருத்தில் மிகதீவிர ஈடுபாடு உள்ள இவர் இது குறித்து குறிப்பிட்ட சம்பவம் ஒன்றில் தான் விருந்தினராக சென்ற இல்லம் ஒன்றில் மது குறித்து உரையாடி, விவாதம் எழுந்து அதனால் தான் உண்ணாமல் வெளியேறியதையும் குறிப்பிட்டார்.
    மதக்கலவரம் வந்த சமயம் சிறுபான்மை மதம் சார்ந்த தம்பதியினர் ஒருவரை கலவரக்காரர்கள் துரத்த அவர்களை தன் வீட்டில் வைத்து யாரும் அறியாமல், தனக்கு ஆபத்து வந்தாலும் வரலாம் எனும் சூழலிலும் கலங்காது குடிமகனாக தன் கடமையை ஆற்றிய பண்பாளர்
    இத்தகைய சிறப்புக்குரியவரை “ஒரு அரிசோனன் ” மகாதேவன் அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது. அரிசோனன் அவர்களின் நற்பண்புகள் வருங்கால இளைஞர்கள் பின்பற்ற இவ்விருது ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது
    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (237)

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

    பாலகுமாரன் அறிமுகம் தேவையற்ற எழுத்தாளர். ஆனால் இவ்வாரம் சிகரெட்டின் தீமைகள் குறித்து அவர் எழுதிய கட்டுரை தமிழ்சமூகத்திற்கு மிக விழிப்புணர்வு தருவதாக அமைந்துள்ளது. அதை கீழே காணலாம்

    1

    “இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.

    சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

    நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?

    நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?

    கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.

    இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    உதவியும் செய்தது. என்ன உதவி?

    சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன். அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

    காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.

    வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.

    இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.

    பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.
    எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது’ என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். �நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள்� என்றும் சொன்னார்கள்.

    அது நேர்ந்தது.

    திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி� என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.

    மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை.

    முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.

    அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.
    நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.

    நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக & நன்கு சுவாசிக்கிறவனாக & மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.

    ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?

    சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன்.
    அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

    பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

    இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.
    சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

    ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.
    நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்துகொண்டார்கள்.

    இதை எப்படி சரி செய்வது?

    வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

    மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

    வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை.

    ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை. ஜூரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன் குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.

    ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படி புகைத்தால்தான் கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

    மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ… இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

    �நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பரவாயில்லை.

    மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

    சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.

    சிகரெட் உங்களை இன்றல்ல… பிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும். நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம். அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற நிலைமை & எழுத முடியாத நிலைமை & பேச முடியாத நிலைமை & ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது.

    அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையான விஷயம்.

    வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே நோய்வாய்ப்படும். எனவே எது விஷமோ, எது மிக கொடூரமாக நம்மை தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.
    புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல, உங்கள் குடும்பத்திற்கு தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது. உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப்
    போவது. எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது.

    நான் விட்ட பிறகும்

    அது விடவில்லை.

    சிகரெட் குறித்த விழிப்புணர்வை தன்னையே உதாரணமாக்கி அளித்த பாலகுமாரனுக்கு அளிக்கபடும் இவ்விருது இக்கொடிய வழக்கத்தை துறக்க தமிழ் சமூகத்திற்கு உதவும் என வல்லமை நம்புகிறது

    வல்லமையாளர் பாலகுமாரனுக்கு நம் நல்வாழ்த்துகள்

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் ! (235)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக பெஜவாடா வில்சன் அவர்களை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    கர்நாடகாவை சேர்ந்த பெஜவாடா வில்சன் மனிதகழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வருபவர். மனித கழிவுகளை மனிதர் கையால் அகற்றுதல் 1993ல் இருந்து இந்தியாவில் சட்டவிரோதம் என்பதே பலருக்கும் தெரியாத தகவல். ஏனெனில் இன்னும் அந்த சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே தெரியாத அளவு பல மாநிலங்களில் தொழிலாளர்கள் இன்னமும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இத்தகைய தொழிலாளரின் குடும்பத்தில் பிறந்தவர் தான் பெஜவாடா வில்சன். இவரது தந்தை ஜேக்கப் பெஜவாடா கர்நாடகாவின் கோலார் மாநகராட்சியில் மனித கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்தார். இதற்கு இந்தியில் சபாயி கரம்சோரி எனப் பெயர். இவரது சகோதரருக்கு இந்திய ரயில்வேயின் இரயில்களில் கழிவுகளை அகற்றும் வேலை கிடைத்தது. பள்ளியில் இவரை சகமாணவர்கள் தோட்டி என அழைத்து கேவலப்படுத்துவார்கள். இதனால் தற்கொலை செய்யகூட வில்சன் முயன்ற சூழல் எல்லாம் உருவானது.

    1

    பொலிட்டிகல் சயன்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற வில்சன் வேலைக்குப் போவதை விட்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுக்கு எதிராகப் போராட ஒரு இயக்கத்தைத் துவக்கினார். அதற்கு சஃபாயி கரம்சோரி அந்தோலன் என பெயர் சூட்டினார். கடிதங்கள் எழுதுதல், போராட்டம் என பலமுனைகளில் போராடி வந்தார். 1993இல் இந்திய பாராளுமன்றம் மனிதர்களின் கழிவை மனிதர்கள் அகற்றுவதை தடுக்கும் சட்டத்தை இயற்றியது. ஆனால் பலனின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இது இன்னமும் தொடர்ந்தே வருகிறது

    2003இல் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் வில்சன். சட்டம் அமுல்படுத்தாமல் இருப்பதை கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு 16 அரசு அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டது. அனைத்து மாநிலங்களின் கேபினட் செக்ரட்டரிகளுக்கு இதை ஒழிக்க கடுமையான நெறிமுறைகளை அறிவித்து உத்தரவும் அனுப்பப்பட்டது.

    பத்தாவது திட்டகமிஷனில் கரம்சோரி அந்தோலன் சார்பில் இதற்கான திட்டங்கள், நெறிமுறைகளை வகுக்கும் குழுவின் தலைவராக பெஜவாடா வில்சன் இடம்பெற்றார்.

    இவருக்கு ஜூலைமாதம் ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது

    துப்புரவு தொழிலாளிகளின் நலனுக்காக பாடுபடும் இவருக்கு அளிக்கப்படும் இந்த வல்லமையாளர் விருது, இக்கொடுமையை அகற்றும் பணிக்கான விழிப்புணர்வாக அமையும் என வல்லமை நம்புகிறது

    பெஜவாடா வில்சன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (233)

    செல்வன்

    இந்த வார வல்லமையாளர் – திரு. என். சொக்கன்

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர், கவிஞர் திரு என்.சொக்கன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    திரு என். சொக்கனை பத்தாண்டுகளுக்கும் மேலாக அறிவேன். இவ்வாரம் இவரது “பக்தித்தமிழ்” எனும் நூல் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இதை பற்றி குறிப்பிடும் என்.சொக்கன் அவர்கள்

    “தமிழைப் பொறுத்தவரை பக்தியும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருக்கின்றன. வைணவத்தை ஆழ்வார்களும், ஆசார்யன்களும் தமிழால் வளப்படுத்தி, பாரெங்கும் பரப்பினார்கள் என்றால், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சைவமும் அடியார்களால், நாயன்மார்களால் தமிழை ஆதாரமாகக்கொண்டு செழித்து வளர்ந்தது. இங்கே தமிழ், ஒட்டுமொத்தமான பக்தி வளர்ச்சிக்குதான் பயன்பட்டதே தவிர பிரிவினை எதற்கும் வித்திடவே இல்லை என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.அதைவிட பக்தியோடு தானும் வளர்ந்தது, பாமரராலும் எளிதாகஉணரப்பட்டது.

    எளிமை, நயம், அரிதான கற்பனை, சந்தம், இலக்கணம் என்று எல்லா வகையிலும் பக்தியின் மேன்மைக்குத் தன்னை வளைத்துக் கொடுத்தது தமிழ். பக்தி எனும் அமிர்தத்திற்கு, அதன் கொள்கலனாகத் தமிழ் விளங்கியது, விளங்கிவருகிறது என்றால் அது மிகையில்லை. அப்படிப் பக்தியும், தமிழ் நயமும் இயைந்த கட்டுரைகளை திரு என். சொக்கன் தினகரன் ஆன்மிகம் பலன் இதழில் தொடர்ந்து நூறு அத்தியாயங்கள் எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். சுமார் எண்ணூறு பாடல்களுக்கான எளிய விளக்கங்களோடு பலப்பல கதைகள், சுவையான நிகழ்வுகளோடு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
    இந்நூல் தற்போது மின்னூலாகக் கிடைக்கிறது. அச்சு நூலின் முதல் பாகம் வெளியாகிவிட்டது, அடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும்” என்கிறார்.

    1

    Screen Shot 2017-07-31 at 10.30.19 PM

    குழந்தைகளுக்கு தமிழை அழகான எழுத்துநடை மூலம் கொண்டுசேர்க்கும் தமிழாசிரியர் என்.சொக்கன். குழந்தைகளுக்கான திருக்குறள் எனும் ஆடியோ, விடியோ தொகுப்பையும் வலையேற்றி வருகிறார். இவ்வாரம் அதில் 158வது விடியோ/ஆடியோ பதிப்பு வெளியானது. கம்பராமாயண வகுப்புகள், குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகளை எடுப்பதும் இவரது சாதனைகளில் சேர்ந்தது.

    தமிழின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். நா. சொக்கன் என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர் ஆவார். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

    அம்பானி, ஏ.ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ், நாராயணமூர்த்தி , சல்மான் ரஷ்டி, குஷ்வந் சிங், வால்ட் டிஸ்னி போன்ற பலரது வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தினமணி போன்ற பல நாளிதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    இவரைப் போல தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஊக்கம் கிடைக்கும் வகையில் இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (232)

    செல்வன்

    இந்தவார வல்லமையாளர் விருது! – கமலஹாசன்

    இவ்வார வல்லமையாளராக கலைஞானி கமலஹாசன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவ்வாரம் அதிகம் அடிபட்ட பெயர்களில் கமலஹாசன் பெயரே முதன்மையானது என்பதில் ஐயமில்லை. அரசியலுக்கு நடிகர்கள் வருவது புதிதல்ல எனினும் கமலஹாஸம் வருவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அவரும் இதுவரை “அரசியல் எனக்கு தெரியாதத் துறை” என்றே கூறிவந்தார். ஆனால் தமிழகத்தில் ஊழல் நிலவுவதாக அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாக தமிழக அமைச்சர்கள் அவர் மேல் கண்டனக்கனைகளை பொழிந்தவுடன், தமிழக அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியை பொதுவெளியில் இட்டு ஊழல் நிலவுவதற்கான சான்றுகளை அம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக்கோரினார்.

    இம்மாதிரி ஊழல் புகார்களை வரவேற்க வேண்டிய தமிழக அரசு அதற்கு மாற்றாக அச்சத்தினால் மின்னஞ்சல் முகவரிகளையே வலைதளத்திலிருந்து அகற்றியது சர்ச்சையை உண்டாக்கியது. இத்தகைய ஊழல் குறித்த மிகப்பெரும் விவாதத்தை பொதுமக்கள் சார்பில் எழுப்பிய காரணத்தால் கமலஹாசன் அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம்.

    1

    தமிழகத்தில் இன்று நிலவும் மிகப்பெரும் கொள்ளை ஊழலின் விளைவாக இயற்கை வளங்களான ஏரிகள், குளங்கள், ஆற்றுமணல் ஆகியவை கொள்ளையடிக்கப்படுவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மது, இயற்கை வளங்கள் கொள்ளை ஆகியவை நிற்கப்போவது கிடையாது. ஆக இதுகுறித்த விவாதங்கள் எழுந்து ஆளும், எதிர்கட்சிகள் இரண்டும் பொதுமன்றத்தில் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய சூழல் உருவாவது நல்லதே. கமலஹாசன் போன்ற அறிஞர்கள் இதை எழுப்புவது பாராட்டுக்குரியது.

    நடிகர் கமலஹாசன் பன்முகத்தன்மை கொன்ட கலைஞர். சிவாஜிக்குப்பின் தமிழகம் கண்ட சிறந்த நடிகக்கலைஞர்களில் முதன்மையானவர். இவரது படங்கள் மிக முற்போக்கான கருத்தைக்கொண்டவை. பகுத்தறிவு, மூடநம்பிக்கையைத் தொலைத்த ஆன்மிகம், சாதி,மத வாதம் கடிதல் ஆகிய முற்போக்கு கருத்துக்களை இவர் படங்களில் காணலாம். நாயகன், மகாநதி, அன்பே சிவம், குணா ஆகிய படங்கள் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றவை.

    இத்தகைய மகா கலைஞனை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (231)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக Inter University Centre for Astronomy & Astrophysics (IUCAA),&  Indian Institute of Science Education and Research (IISER) (புனே) ஆகிய அறிவியல் ஆய்வு மையங்களை சேர்ந்த இந்திய வானவியல் விஞ்ஞானிகள் டீமை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அவர்கள் பெயர்:

    ஜாய்தீப் பாக்சி
    சிஷிர் சங்காயன்
    பிரகாஷ் சர்க்கார்
    சோமக் ராய்சவுத்ரி
    ஜோ ஜேக்கப்
    ப்ரதிக் தபாடே

    (ஆங்கிலத்தில் Joydeep Bagchi, Shishir Sankhyayan, Prakash Sarkar, Somak Raychaudhury, Joe Jacob, Pratik Dabhade)

    இந்த ஆறு விஞ்ஞானிகளும் புதிதாக ஒரு நட்சத்திரக் கூட்டத்தையே (கேலக்ஸி) கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயர் சூட்டியுள்ளனர். அதிலும் சரஸ்வதி கேல்க்ஸியானது சூப்பர்க்ளஸ்டர் எனப்படும் மிகப் பெரிய கேலக்சி வகையை சார்ந்தது.

    1

    சரஸ்வதி கேலக்ஸி பூமியில் இருந்து 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 60 கோடி ஒளியாண்டுகள் ஆகும். இதில் உள்ள நடசத்திரங்களின் எண்ணிக்கை (மூச்சை பிடித்துக்கொள்ளவும்) 20 லட்சம் ஆயிரம் கோடி.

    பிரபஞ்சம் தோன்றி 1000 கோடி ஆண்டுகள் கழித்து சரஸ்வதி தோன்றியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது குறித்த நம் கணக்கீடுகளை சரஸ்வதியை ஆய்வதன் மூலம் மாற்றியமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    இந்த மகத்தான சாதனையை செய்த இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டி அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • இவ்வார வல்லமையாளர்

    நம் இந்திய அரசாங்கத்திடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிம் யாங் – ஷிக் கொரிய நாட்டில் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று, தமது இந்தியத் தத்துவங்கள் முதுநிலை பட்டப்படிப்பை சியோல் டோங்க்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டமும் பெற்றவர்.

    unnamed (1)

    கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர்.

    இவர் பெற்றுள்ள விருதுகள் : The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற பல விருதுகள் பெற்றுள்ளவர் இவர். இவர்தம் அற்புதமான கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்ட தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருப்பதையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்வதோடு எமக்களித்த கௌரவமாகவும் கருதுகிறேன்.

    பவள சங்கரி (மொழிபெயர்ப்பு)

    ஓ, எமது குருவே தாகூர் – கிம் யாங் ஷிக்

    ஆங்கிலத்தில் – கிம் ஜின் – சுப்

    உங்களுக்காகப் பாடுகிறேன் நான்
    அன்பின் பாடல், வேதனையின் பாடலும்
    சிலவேளைகளில் விரக்தியின் பாடலும்
    நீங்கள் இசைக்கும் அதே இன்கீதமதை
    உங்களுக்காகப் பாடுகிறேன் நானும்.

    வெகுகாலம் முன்பு
    எம் பத்தாம் அகவையில் அடியெடுத்தபோது
    எம் மென்னிதயமதை நிறைத்திருந்த
    வெகு தொலைவிலிருந்து வளி சுமந்து வந்த
    உங்கள் புதிரான பாடலின் ஓசையைக் கேட்டேன்.

    உங்கள் தாய் மண்ணிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்
    அந்த வெதுவெதுப்பான வசந்த வளி எமது சாளரத்தையும் சீண்டியது
    பிரகாசத்துடன் ஒளிர்கின்ற கதிரோனையும் நறுமணத்தையும் தழுவுகிறேன் நான்.

    “நீங்கள் யார்?
    நரைமுடிகளுடனும் வளைந்த முதுகுடனும் வந்த நீங்கள்
    கதிரொளியும் நறுமணமும் உடன் கொண்டுவந்துள்ளீர்கள்!”
    “இளம் பெண்ணே,
    எம் பாடல்களின் சுருள்களினூடே தேடியவாறோர் நாள்
    அந்த மர்ம தேசத்திற்கு நானும் வருவேன்
    மணமிகு மாங்கனிகள் பூத்துக்குலுங்கும் அக்களத்தில்
    தங்கமான இன்கனிகள் இலையுதிர்காலத்தில் கனியும்
    அங்கே பசுந்தென்னை மட்டைகள் குளிர் கடற்காற்றில்
    மென்மையாக அசைகிறது!”

    ஆயினும் நான்
    பிறந்து வளர்ந்த அத்தேசம் 
    காட்டுமிராண்டிகளின் ஆக்கிரமிப்பால்
    பேரழிவிற்கு உட்பட்டிருந்தது
    எங்கள் தேசம் அடக்குமுறையினாலும்
    அதிபயங்கரமான பேரழிவுகளினாலும் 
    இழிந்துபட்டுக் கிடந்தது.
    அன்றிலிருந்து எங்கள் தாய்மண் ஆழ்இருளில் மூழ்கிக்கிடந்தது
    தாங்கொணாப் பேரலைகளும் வீசியடித்தது 
    எரிச்சலையும் வேதனைத் துடிப்பையுமே விட்டுவைத்ததது.
    இருபத்தியெட்டு, மார்ச் 1929இல், யோகாஹாமா, ஜப்பானிலிருந்து நீங்கள் திரும்பியிருந்த அந்நொடியில் வேதனையில் வாடும் கொரிய தேசத்திற்காகத் தாங்கள் ஒரு சிறிய நான்கு வரிக்கவிதையை வடித்திருந்தீர்கள். 
    உங்கள் குரல் மெலிந்தும், மென்மையாகவும் இருந்தாலும் நீதிக்காக உங்கள் இதயத்திலிருந்து வெடித்துச்சிதறிய இரைச்சல், வெகுதொலைவில் இல்லாத கொரியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கான வெகுகாலக் காத்திருப்பின் தீர்க்கதரிசனமாகவே இருந்தது. 
    உங்களுடைய அசைக்கமுடியாத ஆழ்ந்த நம்பிக்கையும், அக்கறையும் ஒரு வாழ்க்கையைக்காத்து பிரகாசிக்கச் செய்தது.
    ‘கிழக்கே ஒரு விளக்கு’ என்ற உங்கள் பாடல், எங்கள் அடக்குமுறைப்புலம்பலினூடே எங்கள் செவிகளை நெருங்கி நெருங்கி வந்தது.

    பாடல் இதோ :

    கிழக்கே ஒரு விளக்கு – ஆர். தாகூர்

    ஆசியாவின் பொற்காலங்களில்
    விளக்கேந்தி ஒளியூட்டியவர்களினூடே
    கொரியாவும் ஒன்றே எனினும்
    கிழக்கு பட்டொளியாய் மின்னுதற்பொருட்டு
    அவ்விளக்கு மீண்டுமொருமுறை
    ஒளியூட்டக் காத்திருக்கும் தருணமிது!

    யோகாஹாமா, மார்ச் 1929

    imagesநீங்கள் சொன்னது சரி. 
    உங்கள் நற்கருணையின் உண்மை வெளிப்பாடே இந்த தீர்க்கதரிசனப் பாடல்.
    உங்கள் அறையில், நீங்கள் வழமையாக ஆழ்மன தியானத்தின்போது அமரும் சாய்வு நாற்காலியான, அந்த என் விருப்பமான நாற்காலியின் அருகில் நின்றிருக்கும்போது, நுண்ணிய, எளிய, மெல்லிய ஊதாவாக வளர்ந்துவரும்  புருவம் போன்ற பிறைநிலவையோ அல்லது வானின் துருவ நட்சத்திரத்தையோ அண்ணாந்து பார்ப்பது வழக்கம்.

    ஏதோவொரு தருணத்தில்
    உங்கள் அன்பெனும் நீரூற்றிலிருந்து நீர் இறைத்து,

    எம் மென்மையான இதயத்தின் வலிமிக்க தாகத்தைப்போக்கி,

    அதை ஒரு சாந்தமான கானகத்துக் குளிர்க்காற்றாக புனிதமாக்குகிறேன்.
    இப்படியாக உங்கள் இடைவிடா ஆழ்ந்த அன்பு

    என் ஆன்மாவை சாந்தமாக்கி, செறிவூட்டி,

    என் வாழ்வையும் வளமாக்கியுள்ளது.

    இன்று வளர்ந்துவிட்ட அப்பெண்
    அமைதியாகத் தன் வீணையை வாசிப்பாள்
    அன்பிற்காகவும் அமைதிக்காகவும்
    உங்கள் நித்திய சத்தியத்தை இசைக்கிறாள்..

    இந்த புதிய நூற்றாண்டிலும்
    அனைத்து மக்களின் அன்பிற்காகவும் பாடுவேன்
    நீங்கள் விரும்பியபடி,
    நீங்கள் பாடியவாறு மென்குரலில் பாடுகிறேன்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் (227)

     செல்வன்

    வீர வாஞ்சி

    ஜூன் 17 வீர வாஞ்சி என அழைக்கப்பட்ட வாஞ்சிநாதனின் 106வது நினைவுதினம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி.2

    1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெறுகிறார். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலராகவும் பணியாற்றினார். இவருக்கு பிரிட்டிஷ் அரசின்மீது கோபமும் வெறுப்பும் இருந்தது. அதனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு தன்னையும் சுதந்திரப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, தன் அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது. புதுவையில் வ.வே.சு.ஐயர் வீட்டில் சென்று தங்குவது, மகாகவி பாரதியுடன் உரையாடல், மேலும் பாரதமாதா இயக்கத்துடன் தன்னை இணைத்து போராட்டம் எல்லாம் அவரை ஆங்கிலேயருக்கு எதிராக போராடத் தூண்டுகிறது.

    இந்தச் சூழலில் சுதேசி கப்பல் நிறுவனம் நடத்திய சிதம்பரனாரை கலோனிய ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்து செக்கிழுக்க வைத்து கொடுமைப்படுத்தியது. இதைக் கேள்விப்பட்ட வாஞ்சிநாதன் மற்றும் அவரது பாரதமாதா சங்கத்தினரின் இரத்தம் கொதித்தது. சிதம்பரனாருக்கு ஏற்பட்ட இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான ஆங்கிலேய அரசுக்கு புத்தி புகட்டும் நோக்கில் இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் என்பவரை கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.

    1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டார். கலெக்டரை காப்பாற்ற ரயிலை திருநெல்வேலிக்கு திருப்பியும் பயனின்றி தன் மனைவியின் மடியில் படுத்தபடி உயிரை விட்டார் ஆஷ்.

    ஆஷை சுட்டுக்கொன்றுவிட்டு, காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிடம் நோக்கி ஓடினார் வாஞ்சி. அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.1

    திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும். பிற போராட்டங்கள் போலன்றி இது ஆங்கில அரசின் அனைத்து மட்டங்களிலும் மரணபீதியை உருவாக்கியது. மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளை கடைபிடித்தே பாரதமாதா சங்கத்தையும், வாஞ்சிநாதனின் நண்பர்களையும் ஆங்கிலேயே அரசால் ஒடுக்க முடிந்தது. வீர வாஞ்சிநாதனின் நினைவு மக்கள் மனதில் நிற்கும் வண்ணம், குமரி அனந்தன் அவர்கள் முன் முயற்சியால் வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி – மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. அவரது நினைவு நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள்.

    வாஞ்சிநாதனின் வரலாற்றை ரகமி 1980களில் தினமணியில் தொடராக எழுதியது வாஞ்சிநாதனின் வரலாற்றை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க உதவியது.

    வீரத்துக்கும், விவேகத்துக்கும், தேசபக்திக்கும், போராட்ட குணத்திற்கும் உதாரணமான வாஞ்சிநாதன் விடுதலை வேட்கை கொண்ட அனைவருக்கும் முன்னுதாரணம் ஆவார். அவரது 106வது நினைவுதினத்தில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]​

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (226)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளர் – பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)

    சென்றவாரம் வெளியான Wonder WomanPatty_Jenkins_by_Gage_Skidmore_3 (வியப்புக்குரிய பெண்) எனும் திரைப்படம் இவ்வாரம் 435 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதன் இயக்குனர் பேட்டி ஜென்கின்ஸ்.

    இப்படம் பல மைல்கற்களை கடந்துள்ளது.

    பெண் இயக்குனர் ஒருவர் இயக்கிய முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம்.
    பெண்கள் சூப்பர்ஹீரோ வாக நடித்தால் படம் ஓடாது எனும் மூடநம்பிக்கையை தகர்த்த படம்.
    மிக ஆழமான ஒரு நீதியையும், கதையுடன் சேர்த்து சொன்ன படம்.

    பேட்டி ஜென்கின்ஸ் பெண்களின் கோணத்தில் உலகை காணும் படைப்புகளை படைப்பதில் வல்லவர். 2003இல் இவரது முதல் படமான Monster, ஐலீன் உர்னோஸ் எனும் வீடற்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

    இரண்டவது படம் எடுக்க இவருக்கு சுமார் 14 ஆண்டுகள் பிடித்தன. ஆனால் படம் வெளிவந்தபோது மகத்தான வெற்றி பெற்று, இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படமாக ஆனது.

    JL_Wonder_Woman

    ஒன்டர் வுமன் அமெசான் எனும் தீவை சேர்ந்தவர். அது பெண்கள் மட்டுமே வசிக்கும் தீவு. ஆண்களுக்கு அனுமதி இல்லை. அப்படிப்பட்ட தீவில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த மாய, தந்திர சக்திகள் படைத்த இளவரசியான ஒன்டர் வுமன் மனிதர்கள் போரால் படும் அவதிகளை களைய முதலாம் உலகப்போர் சமயம் இங்கிலாந்து செல்கிறார்.

    அப்படி செல்கையில் தன் இளவரசி பட்டத்தை துறக்கவேண்டி உள்ளது. இங்கிலாந்து செல்லும் ஒண்டர் வுமன் அன்றைய சமூக ஆண்கள் பெண்களை சமமானவர்களாக கருதாததை கண்டு வியப்படைகிறார். ஏனெனில் அவரது தீவில் முழுக்க இருந்தவர்கள் பெண்கள் மட்டுமே. முதலாம் உலகப்போரை தடுத்து நிறுத்தி, தன் காதலனை அந்த முயற்சியில் இழந்து, மனிதர்கள் குற்றம் குறை உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களிடையே இருக்கும் நல்ல பண்புகளையும் கருத்தில் கொண்டு உலகைக் காக்க விரும்புகிறவர்கள் சோர்வடையாமல் அம்முயற்சிகளைச் செய்யவேண்டும் எனும் நீதியை உணர்த்துகிறார் ஒண்டர் வுமன்.

    இது ஒரு பெண் ஹீரோவைப் பற்றிய படம் என்றாலும் பெண்ணீய நோக்கில் வந்த படம் என கூறமுடியாது. ஏனெனில் படம் மானுட சமுதாயம் முழுமைக்கும் உள்ள பிரச்சனைகளை மையபடுத்தி வந்த படம். பெண்ணிய நோக்கிலான படம் எனில் அரசியல் சிக்கல்களில் சிக்கி தன் மதிப்பை இழந்திருக்கும். அப்படி ஆகாமல் சாமர்த்தியமாக அனைத்து கட்சியினரும், அனைத்து கொள்கை சார்ந்தவர்களும் பாராட்டும் வண்ணம் ஒரு சிறந்த படைப்பை படைத்த பேட்டி ஜென்கின்ஸ் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்.

    ஒண்டர் வுமன் மானுட சமுதாயம் முழுமைக்குமான நல்ல வழிகாட்டி என ஐ.நா சபை கருதி ஒண்டர் வுமன் கதாப்பாத்திரத்தை தனது சிறப்பு தூதராகவும் அறிவித்து சிறப்பு சேர்த்தது.

    இத்தகைய சிறந்த படைப்பாளியான பேட்டி ஜென்கின்ஸை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் வெற்றி இயக்குனராக வெற்றிக்கொடி நாட்ட விரும்பும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்தவார வல்லமையாளர்: (225)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளர்: உம்முல் கர்

    (29/05/2017 – 05/06/2017 )

    1

    எட்டாம் வகுப்பு படித்ததற்காக குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், சுயமுயற்சியால் இன்று ஐ.ஏ.எஸுக்கு தகுதி பெற்றுள்ளார்

    உம்முல் கர். சிறுவயது முதல் இவருக்கு உடல் ஊனம் உண்டு. சிறு காயம் பட்டாலும் எலும்புகள் உடைந்துவிடும். இவரது பெற்றோர் மிக வறிய பின்புலத்தை சார்ந்தவர்கள். தந்தை டெல்லியில் பிளாட்பாரத்தில் துணி விற்கும் வியாபாரியாக இருந்தார். அவர்கள் குடும்பம் டெல்லியில் குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு சிறுகுடிசை.

    மகளின் வியாதிக்கு செலவு செய்யவே அவர்களால் முடியாத சூழல். 25 முறை மகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் மகளை தீனதயாள் உபாத்யாயாவின் உடல் ஊனமுற்றோருக்கான இலவச பள்ளியில் சேர்த்தார்கள். எட்டாம் வகுப்பு படித்தவுடன் படிப்பை நிறுத்தச் சொன்னார்கள்.

    ஆனால் அமர்ஜோதி எனும் சேவை நிறுவனம் உம்முல் கரின் படிப்புச் செலவை ஏற்க முன்வந்தது. ஆனால் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மகளை கண்டபடி திட்டித் தீர்த்தார்கள். “ஒரு பெண் எட்டாவது வரை படித்தால் போதும்” என்றார்கள்.

    அதனால் அவர்களுடன் சண்டைபிடித்து வெளியேறினார் உம்முல்கர். டெல்லியில் இருந்த குடிசைப்பகுதி ஒன்றில் தனியே ஒரு குடிசையை வாடகைக்கு பிடித்தார். தினம் மாலை 3 மணிமுதல் இரவு 11 வரை குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு பேட்ச், பேட்சாக டியூஷன் எடுத்து தன் செலவுகளை சமாளித்தார். நூறு ருபாய் மட்டுமே கட்டணம். ஏனெனில் அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ரிக்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலிகள் போன்றோரின் பிள்ளைகளே.

    12வது வகுப்பில் 91% எடுத்துத் தேறிய உம்முல் கர், அதன்பின் கார்கி கல்லூரியில் சேர்ந்தார்.

    இந்த சூழலில் வியாதி முற்றி, எலும்புகள் உடைந்து நடக்கமுடியாமல் சக்கரநாற்காலியில் ஒரு வருடம் இருக்கும் சூழல் உருவானது. ஆனாலும் சளைக்காமல் கல்லூரிக் கட்டணத்தை தன் டியூஷன் சம்பளத்தைக்கொண்டே கட்டினார். அதன்பின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்காலர்ஷிப் பெற்று முதுகலை பட்டமும் பெற்றார். அவருக்கு அங்கே மாதம் 3500 உதவித்தொகையும் கிடைத்தது.

    அதன்பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 420வது ரேங்க் பெற்று தேறினார். ஐ.ஏ.எஸ் ஆகும் வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார்

    சமூகமும், குடும்பமும், தன் உடல்நிலையும் தன் மேல் வீசி எறிந்த தடைகற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி சிகரம் தொட்ட உம்முல் கரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் ! (224)

    செல்வன்

    இந்த வார வல்லமையாளர்  – கே.வி.மாமா

    (22/05/2017 – 28/05/2017 )

    யதேச்சையாகத்தான் அந்த காணொலி என் கண்ணில் பட்டது.

    திருவரங்கத்தில் வசித்து, மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற   கே.வி.மாமா எனும் கே.வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்றவாரம் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் திருவரங்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து மயானங்களின் இடுகாட்டு காவலர்களும் கலந்துகொண்டு பறையொலி அடித்து முழக்கி தம் சோகத்தைத் தெரிவித்தார்கள். அவரது இறுதி ஊர்வலம் மயானக்காவலர்கள் (வெட்டியான்கள்) புடைசூழ நடைபெற்றது.

    அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?

    Screen Shot 2017-05-28 at 10.48.49 AM

    60 ஆண்டுகளுக்கு முன்னால் திருவரங்கன் படித்துறையில் ஒரு வயதான பெரியவர் அமர்ந்திருக்கிறார். என்ன, ஏது என விசாரிக்க அப்போது 20 வயதே ஆன கே.வி.மாமா அருகே போக, அப்பெரியவர் படித்துறையில் அமர்ந்து உயிரை விட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் விசாரித்து அவரது குடும்பத்தைக் கண்டுபிடிக்கையில், அப்பெரியவருக்கு இருந்தது ஒரு வயதான மனைவி மட்டுமே என்பதும், ஈமச்சடங்குகள் செய்ய அவரிடம் வருமானமோ, உறவினர்களோ கூட இல்லையென்பது தெரியவந்தது.

    அதன்பின் தானே முன்நின்று அவரது இறுதிச்சடங்கை நிறைவேற்றினார் கே.வி.மாமா. அப்போது அவருக்கு 20 வயதுதான். அதன்பின் திருவரங்க நகரில் எங்கே அனாதைப்பிணம் விழுந்தாலும், அதை முன்நின்று அடக்கம் செய்யும் காரியத்தைத் துவக்கி 60 ஆண்டுகளாகத் தம் இறப்புவரை அதைச் செய்துவந்தார்.

    வாழ்க்கையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த எவரும் இவரை அறியாமல் இருந்ததில்லை … இவரது பெரு முயற்சியால் ஸ்ரீரங்கம் வட திருக்காவேரியில் திருமங்கை மன்னன் படித்துறை இன்று பொலிவுடன் எழுந்து நிற்கிறது. திருவரங்கத்தில் அரங்கநாதர் தேர் வரும் போதெல்லாம் ஸ்ரீபாதம் தாங்கிகளையும், தேரின் பொது கட்டை போடுகிறவர்களையும் தனது கணீர் குரலால் நேர் படுத்திய அரங்கனின் முதன்மைக் கைங்கரிய பாரராகவும் தொண்டாற்றி வந்தார்.

    பிறருக்கு அர்த்தமுள்ள வகையில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டு பெருவாழ்வு வாழ்ந்த இப்பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவரது வாழ்வு மற்ற அனைவருக்கும் முன்னுதாரணமாக அமையும் என நம்புகிறோம்.

     இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (223)

    செல்வன்

    இந்தவார வல்லமையாளர்: சுந்தர் ஐயர்

    Screen Shot 2017-05-19 at 11.48.06 PM

    ஜோக்கர் படத்தில் வரும் ஜாஸ்மினே, ஜாஸ்மினே எனும் பாடலை பாடிய சுந்தர் ஐயர் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார்.

    இவரது சொந்த ஊர் தருமபுரி. மிக எளிய பின்புலத்தை சேர்ந்தவர். அரசு இசைப்பள்ளியில் இசை ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் மாதம் 7000 ரூ. சம்பளத்துக்கு வேலை செய்யும் இவர், அந்த சம்பளத்தில் தன் குடும்பத்தினரை காப்பாற்ற மிகச் சிரமப்பட்டு வருகிறார். வேலைநேரம் போக தெருக்கள், கோயில்களில் அமர்ந்து பாடுவது வழக்கம்

    தருமபுரியில் ஒருமுறை ஜோக்கர் பட ஷூட்டிங் பார்க்கப்போனபோது யதேச்சையாக படத்தயாரிப்பாளரிடம் சில பாடல்களை பாடிக்காட்டினார்.  அதன்பின் தயாரிப்பாளர் இவரை சென்னைக்கு அழைத்து ஜோக்கர் படத்தில் வரும் ஜாஸ்மினே, ஜாஸ்மினே பாடலை பாட  வாய்ப்பளித்தார்.

    சென்னைக்குச் செல்ல பேருந்து கட்டணம் கூட இல்லாமல் தன் மனைவியின் தோட்டை அடமானம் வைத்து சென்னை சென்ற சுந்தர் ஐயர், பாடலைப் பாடி ஐயாயிரம் ரூபாய் சன்மானம் பெற்றார். அதன்பின் தருமபுரி திரும்பி தன் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு தேசிய விருது கிடைத்த செய்தி வந்ததும் இனிய அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

    டெல்லி சென்று தேசிய விருதைப் பெற்று வந்தாலும், இன்னமும் அடுத்தவேளை உணவுக்கு அரிசி வாங்க வழியில்லாமல்தான் இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவிக்கையில் “தெருப்பாடகனாக இருந்த எனக்கு ஒரே பாடலில் தேசிய விருது கிடைத்தது நம்ப முடியாத விசயம். ஆனாலும் இப்போதும் என்னிடம் அடுத்தவேளை அரிசி வாங்க காசு இல்லை. வசதியானவர்களுக்கு விருது கிடைத்தால் அது பெருமை, எளியவர்களுக்கு கிடைத்தால் அது வெறுமை” என கருத்து தெரிவித்தார்.

    எளிய பின்புலத்தில் பிறந்து, முதல் பாடலில் தேசிய விருது பெற்ற சுந்தர் ஐயர் அவர்களின் இந்த வெற்றி வறுமையில் வாடும் எளிய கலைஞர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக கருதி அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து சிகரங்களை எட்ட வாழ்த்துகிறோம்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share