Tag: கவிஜி

  • என் புத்தன்!

    -கவிஜி

    வண்ணங்களற்ற
    தேவதைகள்
    நீருக்குள்
    நிறம் கோக்கிறார்கள்…! 

    நிறங்களின் உதிரிகளாக,
    சிறுவர்கள்
    நீருக்குள்
    நாய் சுமக்கிறார்கள்…! 

    புத்தகம் வழியாக
    ஆள விரும்புகிறவன்
    நீருக்குள்
    மாலை செய்கிறான்…! 

    பகலும் இரவும்
    ஒன்றென்ற
    நீருக்குள்
    பாம்புகளும் மிதக்கின்றன! 

    இடம்பிடிக்க முடியாமல்
    கலங்கி நிற்கும்
    கிழவிக்கு இடம்தந்த
    தொழுநோய்க்காரன் ஒதுங்கிப்
    படுத்துக் கொள்கிறான்…! 

    பிச்சை புகினும்
    வாழ்க்கை தேடும் கண்ணில்லாதவன்
    இன்னொரு கண்ணில்லா,
    காலுமில்லாதவனிடமிருந்து
    நீரைத் தள்ளுகிறான்…! 

    குடித்துச் செத்தவன் வீட்டுக்
    கடைக் குட்டியும்
    ஓடி ஓடிச் சோறு போடுகிறது…! 

    முகநூல் வெட்டிக்கு மட்டுமல்ல
    மார்க்குக்கே
    புரியச் செய்தவன்
    மதங்களற்றவன்
    மற்றும்… சாதி அழித்தவன்…! 

    என் நகர்வலத்தில்
    மெல்லக் கலைகிறது
    என் புத்தன் வேஷம்…!

     

     

    Share
  • ஏதேன் தோட்டம்

    -கவிஜி

    எங்களூரில்
    ஒரு ஏதேன் தோட்டம்
    இருக்கிறது…

    ஆதாம் ஏவாள்கள்
    எந்த வீட்டிலிருந்தும்                             edengarden
    வரலாம்…

    ஆப்பிள்களுக்கு பதில்
    குறுஞ்செய்திகள்
    விளைந்து கிடக்கும்
    அலைக்கற்றைகளின் தோட்டம் அது…!

    சமிக்ஞைகளின்
    தவறவிட்ட அழைப்புகளாகப்
    புன்னகைக்கலாம்…
    ஒளிக்கண்கள்…!

    அடையாளங்கள்
    ஆடைகளின் நூலிழையில்
    பட்டாம் பூச்சிகள்
    செய்வது
    ரகசியச் செய்திகள்…!

    கண்டும் காணாமல்
    போய்விடும் மிருகங்கள்
    அப்படியே இருக்கும்வரைச்
    சாத்தானை அழைக்க
    வேண்டியிருக்காது…!

    கடவுளாய்த் திறந்தே கிடக்கும்
    ஏதேன் தோட்டம்
    ஒவ்வொரு ஊரிலும்
    இருக்கிறது…
    உங்கள் ஊரிலும்
    இருக்கலாம்…!

     

    Share
  • அள்ளி அணைத்திடவே…!

    -கவிஜி 

    அறையெங்கும்
    பின்தொடரும்
    நிழலென…
    முன் பின் என
    எங்கும் எதிலும்,
    மிகச் சிறிய
    ஓர் அரவமாக
    அத்துமீறும் பெரிய
    அலையாக,
    சொல்ல வரும்
    அத்தனையும் சொல்லிவிட
    முடியாத தர்க்கங்களாக
    முயக்க நிலையின்
    தழுவல்களாக…
    பெருங்கண் கொண்ட
    ரகசியக் கீற்றாக
    அள்ளி அணைத்திடவே
    அடங்கிட முடியாத
    ஆத்மாவின் பேரலை
    போல,
    அணைத்துக் கொண்டே
    பின் தொடர்கிறது
    சற்றுமுன் அவள்
    குளித்த
    குளியலறையின் வாசம்…!

     

     

    Share
  • கடைசி வானம்

    -கவிஜி 

    புத்தனிடம் பேச
    எதுவுமில்லாத யசோதரையிடம்
    பேச நிறைய இருக்கிறது…!

    ***

    உலகின் முதல் கதையும்
    கடைசிக் கதையும்
    ‘கடவுள்’ ஆகவே இருக்கிறது…!

    ***

    கைகளை எவ்வளவு
    அகலமாக விரிக்க
    முடிகிறதோ
    அவ்வளவுதான் வானம்
    குழந்தைக்கு…!

    ***

    பூவைச் சூடிக்
    கொண்ட தோட்டம் என
    உன் கல்லறை…!

    ***

    உங்கள் வீட்டுப்
    பூனைகளிடம்
    கேட்டுவிடாத கேள்விகளில்
    எங்கள்வீட்டு அடுப்பு கடைசியாய்
    எரிகிறது…!

     

    Share
  • தேடல் என்பது உள்ளவரை…

    உங்களுக்கு பிடிச்ச ஒருத்தர பிரிஞ்சிருக்கீங்களா…. அதும்.. 15 வருசமா அவுங்க எங்க இருக்காங்க.. என்ன பண்றாங்கன்னு தெரியாம தவிச்சிருக்கீங்களா….?

    இன்றும் கண் முன்னால் நிற்கிறது அந்தக் கோரக் காட்சி… மனிதர்கள் செத்து செத்து விழுந்த… பூமியெங்கும் ரத்த மழையும், குண்டு மழையும் பொழிந்த மணித் துளிகளில்.. மரணத்தின் கைகளில் விளையாடிக் கொண்டிருந்த மிதுனனும் நியந்தாவும்… ஆளுக்கொரு திசையில் பிரிந்து கிடந்த இடைவெளியை மழை கொஞ்சம்… அழுகை கொஞ்சம்…. துப்பாக்கிக் கொஞ்சம்.. மனித சடலங்கள் கொஞ்சம் என பிரித்தே போட்டது… பிரிவுகளின் கரம்… வெகு நீளமானது… அத்தனை பச்சை ரத்த வாசம் கொண்டவை… அதன் நகங்களின் கோரத்தில் அழுக்கடைந்து நிற்கும் இடைவெளியை எடுக்க எடுக்க தூர் கொண்டு நிரம்பும் ஆதி ரகசியமாய் பிரிவு மிகப் பெரிய நரகத்தை பதிந்தது….

    lady 255கடந்தன 15 வருடங்கள்… எத்தனை அகதி முகாம்களைக் கடந்த பின்னும் அவளைக் காண முடியவில்லை… அவனிடம் இருப்பதெல்லாம் அவளுடைய 6 வயது அன்றைய புகைப்படம் மட்டுமே.. எங்கெங்கு தேடிய பின்னும் ரத்த சுவடுகளில் காய்ந்து ஒழுகிய நடுக்கம் மட்டுமே தோட்டாக்களை பிரசவித்துக் கொண்டிருப்பதாக நினைவுச் சுருள் ரத்தம் சொட்டிக் கொண்டே இருந்தன……இதோ, “இன்று கதவைத் தட்டிக் கொண்டு வீட்டுக்குள் வந்து விட மாட்டாளா…” என்று ஏங்கும் தருணமெல்லாம்… குருதி சொட்டும் கழுகின் வட்டங்களை பிணங்களின் பெரு மூச்சென அவனின் அறையெங்கும் அனல் ததும்பி தலை கீழாய் தூக்கிட்டுக் கொண்டே இருக்கும்.. கண்கள் மூடி நடுங்குவான்…நடுங்குதலின் நேரங்களில்… ஒடுங்குதலின் மூலையென மூளையெங்கும்…விரவி பரவிக் கொண்டே இருக்கும் நியந்தாவின் நினைவில்… ஓங்கி அழும் திறன் கூட மிரட்டும்….

    நியந்தா……

    ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் அல்லது அதிக பட்சம் அவன் வாயில் விழுந்து எழுந்து வெற்றிடக் கவிதையாக வளைந்து நெளிந்து கரைந்து கொண்டே இருக்கும் அல்லது பூத்துக் கொண்டே இருக்கும்… பொருளென அன்றைய மிதுனன் நியந்தாவைக் கொண்டாடிக் கொண்டே இருந்தான்.. இருவரும் சம வயதுக்காரார்கள்தான்.. நியந்தா மூன்று நான்கு மாதங்கள் மூத்தவளாக இருப்பாள்… தன்னை அக்கா என்று கூப்பிட சொல்லி சண்டை எல்லாம் போட்டு இருக்கிறாள்… பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள்.. இருவரின் அம்மாக்களும் சமபாதியாக எல்லா பொருத்தங்களும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான்… இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் மிதுனனும் நியந்தாவும்… கல்யாணம் செய்து கொண்டு இதே வீட்டினில் அவர்களைப் போலவே இரு குழந்தைகளைப் பெற்று போட்டு நாம் அதுங்களை கொஞ்சி மகிழ வேண்டும் என்பது அவர்களின் தீரா பகலின் பேச்சுக்களின் நீளம்…

    ஓயாத சண்டை…. ஓய்ந்த போது யாருமே இல்லாமல், தான் மட்டும் தமிழகம் வந்து சேர்ந்திருந்தான் மிதுனன்… அழுதான்… அரட்டினான்… எல்லா முகங்களும் அந்நியப்பட்டே இருக்க, அம்மா… அப்பா… அக்கா.. எல்லாரும் செத்துக் கிடந்ததைக் கண்டு உறைந்து நின்ற நினைவினில் நியந்தாவின் பிணம் கூட கிடைக்கவில்லையே…என்று அழுகை அடக்கி தேடத் துவங்கினான்… இதோ 15 வருடங்கள் ஓடி விட்டன.. இன்றும் தேடுகிறான்.. நேற்று நண்பன் ஒருவனிடம் பேசும் போதுதான் “முகப் புத்தகத்தில் தேடிப் பார்த்தால் என்ன?”- என்று ஒரு யோசனை கிடைத்தது.. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முகப் புத்தகத்தில்…கையில் இருக்கும் நியந்தாவின் ஆறு வயது புகைப்படத்தை…பதிந்து விட்டு….

    “இந்தப் பெண்ணை யாராவது எங்கேனும் பார்த்திருந்தால் அல்லது நட்பு கொண்டிருந்தால்…. தகவல் அனுப்புங்கள்…15 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் இது…இதைத் தவிர வேறு ஒன்று என்னிடம் இல்லை… ஒருவேளை நியந்தாவே இதைப் பார்க்க நேரிட்டாலும் கடவுளைக் கொண்டாடும் தருணமாக அது இருக்கும்… இன்னும் எத்தனை வருடங்கள் பிரிந்து கிடப்பது என்று தெரியவில்லை…மலை உச்சிகளும்… ஆற்று படுகைகளும்.. எங்கள் உலகமாகிக் கிடந்தது ஒரு காலம்…. என்ன உண்டாலும் பாதி பாதி பகிர்ந்து கொண்ட காலம் ஒன்று இருந்தது… அவள் ஆடை நான் அணிந்து கொண்டு அவள் போல நடந்து காட்டிய நாட்களில் வெட்கம் தாளாமல் குசினிக்குள் ஒளிந்து நின்று அவள் பார்த்த காலம் மீண்டும் வேண்டும்…

    கை கோர்த்தபடியே தூங்கிப் போன இரவுகளில் பிரிவுக்கு இருந்த கதவை மூடாமலே எங்கள் வீடு இணைந்திருந்த காலம் தேடிக் கதறுகிறேன்….. எல்லாம் போன பின்னும் எல்லாமாக இவள் இருந்தால் போதும்.. இன்னும் கொஞ்ச நாள் இருந்திடலாம் என்றே 15 வருடங்கள் கடந்து விட்டேன்… காணும் விழியெங்கும் காட்சிகளாய் விரியும் காற்றின் நிறங்களில் விண்மீன் சிதறலென மிதந்து கொண்டே இருக்கும் மனதுக்குள் மெய்ம் மறக்க இவள் வேண்டும்…….அழுதழுதே அடங்கி விடவா நான்… இல்லை,.. அள்ளி அணைத்திடவே நியந்தாவின் இருப்பு வேண்டும்…. இருத்தல் வேண்டும்…கை போன கால் போன உயிர் போன பிணங்களில் ஊடாக ரத்த சகதியில் புரண்டு வெளிறிபோன உடலோடு நானும் நியந்தாவும்… பதுங்கி கிடந்த பதுங்கு குழியின் பெருமூச்சு சுவாசம் இன்றும் ஆழ்மனதில் நினைவிழந்து மூச்சடைக்க வைக்கின்றன… கொத்து கொத்தாய் வீழ்ந்த மனிதர்களிடம் எழும்ப சொல்லி அலறும் 6 வயது தானே அவளுக்கும்…. அதிகாலை ஏது… அந்தி மாலை ஏது… அத்தனையும் அணைத்தபடி கிடந்த நடுக்கம்தானே….சரி எப்படியும் இந்த இரவாவது மிஞ்சிக் கடந்து விடுவோம் என்ற போது தான்… பிரித்து இழுத்துப் போன மிலிட்டரிக்காரன் ஒருவன், முகத்தில் வழிந்த மனித சதைகளை துடைத்தெரிந்தபடியே வெறித்துப் பார்த்துப் போனான்.. வீரிட்டு அழுத என் சத்தம் யார் காதிலும் விழவில்லை.. விழுந்ததெல்லாம் குண்டுகளின் கன மழை……

    எத்தனையோ அதியங்கள் நடக்கும் இந்த உலகில் அவளும் கிடைத்து விடுவாள் என்றே நம்புகிறேன்.. தோழர்களே…. உதவுங்கள்… உங்கள் நண்பர், அவர்களின் நண்பர் என்று இந்த செய்தி பரவட்டும்.. நியந்தாவின் குரல் கூட இதோ இப்போது கூட எனை அழைக்கலாம்…. காத்திருக்கிறேன்….. மிதுனன்….”- என்று முடித்து செய்தியை பரப்பி.. இதோ இரவும் தீர்ந்தது…..

    விடியலில் அவசரமாக கணினியைத் திறந்தான்…..

    அனுதாபங்கள்.. சோக பகிர்வுகள்.. நம்பிக்கை வாழ்த்துக்கள், மற்றும் லைக்ஸ்கள் குவிந்து விரவிக் கிடந்த முகப் புத்தகத்தில்…. “நான் பாத்திருக்கேன் மிதுனன்….” என்று ஒரு செய்தி இருந்தது……உலகம் சற்று நின்று அட நின்றே விட்டது.. என்று கண்கள் திறந்து கத்தினான்… கடவுளுக்கு நன்றி கூறினான்… அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வந்தன.. வந்த அழுகையெல்லாம் சிரிப்பாக மாற,, மாறிய சிரிப்பெல்லாம் மீண்டும் அழுகையாக மாறியது… கணினியை அணைத்துக் கொண்டான்…. செய்தியை மீண்டும் நன்றாக படித்தான்……

    “நண்பரே வணக்கம்… நான் இந்த புகைப்படத்தை, மட்டும் பார்த்திருக்கிறேன்…… நன்றாக மனதில் இருக்கிறது.. ஆனால் எங்கு பார்த்தேன்.. எப்போது பார்த்தேன் என்று மட்டும் நினைவில் இல்லை… கொஞ்சம் டைம் கொடுங்கள்… எப்படியும் ஞாபகப் படுத்தி சொல்கிறேன்……. நன்றி….” – நிவ்யா

    மனதுக்குள் அதிர்வலைகள் அங்கும் இங்கும் அலைந்து… மறுபடியும் நிவ்யாவுக்கு ஒரு செய்தி அனுப்பினான்….

    “நிவ்யா… கொஞ்சம் யோசியுங்கள்.. தயவு செய்து எப்படியாவது… கண்டு பிடித்து விடுங்கள்… யாருக்குமே தெரியாத இடத்தில அவள் இருக்கிறாள் என்ற போது இதோ நீங்கள் தெரியும் என்கிறீர்கள்.. அப்படி என்றால் கண்டிப்பாக அவளை நான் நெருங்கி விட்டேன் என்றே நம்புகிறேன்…. உதவுங்கள் நிவ்யா.. கொஞ்சம் யோசியுங்கள்..” -மிதுனன்

    பதில்கள் தொடர… நிவ்யாவும்… மிதுணனும் நெருங்கிய நண்பர்களாகிப் போனார்கள்…மிதுனன் கிளம்பி நிவ்யாவின் ஊருக்கே சென்று விட்டான்…. இருவரும் சேர்ந்தே தேடத் துவங்கினார்கள்…. நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், உறவுகள், அவர்களின் உறவுகள்…. என்று இவர்களின் தேடல் நீண்டு கொண்டே இருந்தன…. நிறைய பேசிக் கொண்டார்கள்…. நிவ்யாவின் ஆறுதல் அவனுக்கு தேவையுமாக இருந்தது…

    அந்தி மாலைப் பொழுதில் வீதிகளில் வெறிச்சோடிய இரவு சாயல்களை நழுவ விட்டுக் கொண்டே இருவரும் நடந்தார்கள்….

    “என்னால் இதுக்கு மேல யோசிக்க முடியல மிது….. என்ன பண்றது”- என்று அழுகவே தொடங்கி விட்டாள் நிவ்யா….

    “இல்ல நிவ்யா….. நல்லா பாரு.. இந்த போட்டோவைத்தான நீ பார்த்தா…?”-என்றான் மிதுனன்… ஒரு குற்றவாளியின் படபடப்போடு….

    “கண்டிப்பா தெரியும் மிது.. இந்த போடோவைத்தான்.. ஒரு மூணு வருசத்துக்கு முன்னால ஏதோ ஒரு வீட்ல பார்த்தேன்.. இங்கதான் எங்கையோ… இதே ஊர்ல… ஆனா… எந்த இடம்னு தெரியல….. சுத்தமா ஞாபகத்து வர மாட்டேங்குது….”-அவள் இயலாமையின் கைகளுக்குள் அகப் பட்டுக் கொண்ட கைப் பிசைதலாய் தடுமாறினாள்….

    “உங்க சொந்தகாரங்க வீடு ஏதாவதா… இல்ல உன் நெருங்கிய தோழிங்க வீடா…. இல்ல ஏதாவது முகாமா… ஏதாவது பள்ளிக் கூடமா… யோசி நிவ்யா.. எனக்கு கிடைச்ச கடைசி ஆயுதம் நீ.. நீயும் உதவலனா இனி அவள நான் பாக்கவே முடியாது…..”-என்று படபடப்போடு கூறி கண்களில் நீர் வழிய காற்றில் வெற்றிடம் நிறைத்தபடியே …வீதியில் போகும் பெண்களில்… கோவிலுக்கு போகும் பெண்களில்… யாராவது தன் நியந்தாவாக இருக்க மாட்டாளா என்று உற்று உற்று கவனித்த மிதுனனின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள் நிவ்யா…

    யாருமே அவள் சாயலில் இல்லை….

    இருவரும் சோர்ந்து பழுப்பேறிய இரவு வீதிகளில் ஒரு காற்றைப் போல நடந்தார்கள்… நாய்களின் கவனம் அவர்களை கலைக்கவே இல்லை.. சில காவலர்கள் விசாரிக்கவும் செய்தார்கள்… தலைக்குள் சுழலும்… வெளிகளின் ரீங்காரத்தை இருவருமே உணர்ந்தார்கள்.. மிதுனன் கண்ணீர் சிந்தி குலுங்கவும் தொடங்கினான்.. அணைத்துக் கொண்ட நிவ்யா….சற்று யோசித்தாள்….. நடந்தபடியே இருந்த மௌனத்தைக் கலைத்தவள், தயங்கியபடியே பேசத் தொடங்கினாள் …….

    “மிது… ஒரு வேளை நான் இந்த போட்டோவ பார்த்து தப்பா முடிவு பண்ணி உங்கிட்ட சொல்லி இருக்கலாம்….. எனக்கென்னமோ நியந்தா வருவான்னு நம்பிக்கை இல்ல…அவ எங்க இருக்கா, என்ன பண்றா எதுமே தெரியல…6 வயது போட்டோவ வெச்சுகிட்டு எப்டி கண்டு பிடிக்கறது மிது… என்னமோ தப்பா இருக்கு….எங்கையோ குழப்பமா இருக்கு…..”-அவள் பேசிக் கொண்டே நடந்தாள் … அவன் பார்த்துக் கொண்டே நடந்தான்..

    நள்ளிரவு பனிகளின் பரவல் இருவரையும் மறைத்து இசைந்து கொண்டே போவதை இருவருமே கவனித்தார்கள்.. சாலையோர திண்டுகளில் எத்தனை உயிர் உடல் போர்த்திக் கொண்டு தூங்குகிறது…. சாலைவாசிகளின் வாழ்க்கை கண் முன்னே வந்து போனது… கவனம் மாறி கண்கள் துடைத்துக் கொண்டான் மிது… மெல்ல மெல்ல நிவ்யா அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்…

    “இந்த உயிரும் உடலும் விசித்திரம் நிறைந்தவை இல்லையா மிது…!” என்றாள் நிவ்யா….

    தோளில் சாய்ந்திருந்த முகத்தை சற்று நின்று திரும்பிப் பார்த்த மிதுனன்… மெல்ல புன்னகைத்தான்…..

    “நினைப்பது அல்ல வாழ்க்கை.. வாழ்வதுதான் நினைப்பு… என்றான் பதிலுக்கு….

    ‘எத்தனை உறவுகளோடு வருகிறோம்… போகும் போது ஒன்றுமேயில்லாமல் போய்விடுவதில்தான்..மொத்த சூன்யமும் மறைந்து நிற்கிறது …..”

    “சலனங்கள் அற்ற உறவுகளில் ஓர் உயிர் இன்னோர் உயிரைத் தேடியே சார்ந்திருக்கிறது… அதற்கு பயம்.. இந்த வாழ்க்கையின் மீது பயம்…ஏதோ ஒரு பற்றுதல் தேவைப் படுகிறது.. அது கடவுளாக இருக்கலாம்.. புத்தகமாக இருக்கலாம்.. சாத்தானாக இருக்கலாம்.. ஒரு மனைவியாக இருக்கலாம்.. ஒரு தோழனாக இருக்கலாம்.. ஒரு காதலியாக இருக்கலாம்… ஏதோ ஒன்றாக இருக்கலாம்.. முடிச்சு தேவைப் பட்டுக் கொண்ட உயிர்தான் நிம்மதியாக வாழ்ந்து நிம்மதியே இல்லாமால் சாகிறது….”

    “இங்க மரணத்துக்கு மட்டும்தான் மனிதன் பயப்படுகிறான்..அதுவும் தனியாக சாவதை ஒருவரும் விரும்புவதில்லை….அதற்குதான் போர் கொண்டு மொத்தமாக செத்துப் போகிறான்…. மரணம் அவனை மரணித்த பின்னும் விரட்டுகிறது…”

    “சக உயிர்கள் மேல் கொண்ட அன்புதான் அவனை வாழ்ந்து கிடக்க சொல்கிறது… நன்றாக பார்..தற்கொலை செய்து கொள்பவர்களில் பலர் அன்புக்கு ஏங்கியவர்கள்தான்….. தன்னை யாருமே கண்டு கொள்ளாத ஒரு நிலையில்தான் ஒரு வகை வெறுப்பு வருகிறது…. வந்த வெறுப்பு மரணத்தையும் சேர்த்துக் கொண்டு வருகிறது… இது சூன்யக்காடு.. வழிகளற்ற வழிகள் நிறைந்து கிடக்கும், கோடுகளால் வரையப்படாமலே முடிந்து போகின்றன கோட்டோவியங்கள்…”

    அவர்கள் பேசிக் கொண்டே நடந்தார்கள்…நடந்து கொண்டே பேசினார்கள்.. இரவைக் கொண்டாடும் அவர்களின் கண்கள் சூரியனின் உருகுதலைக் கொண்டே வியர்த்தும் கொட்டியது…..

    “என்னால உனக்கு ரெம்ப கஷ்டம்….. .. இல்லையா…நிவ்யா!….. நான் நாளைக்கு ஊருக்கு போய்டறேன்.. நியந்தா வரும் போது வரட்டும்…நாமளும் எத்தன இடத்திலதான் தேடறது… கிடைக்கனும்னு இருந்தா கிடைச்சிருப்பா…. கிடைப்பா… விடு….” என்று அவன் சொல்ல சொல்ல.. நிவ்யாவின் கண்களில் பெரும் சுழற்சி…. பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போனவளின் மனது போல ஒரு இல்லாமைக்குள் நின்றபடியே மாயங்களின் முடிச்சை அவிழ்ப்பவளாக மெல்ல சிரித்தாள்… நெருங்கி வந்து இறுக அவனை அணைத்துக் கொண்ட நிவ்யா…. ஆழ்ந்த மனக் கண்கள் சுழற்சியில் மேல் எழுந்து விட்ட தவிப்பில்…”மிது……. நான் கண்டு பிடிச்சிட்டேன்…கண்டு பிடிச்சிட்டேன்”- என்று கத்த…….சற்று அவளை உற்று நோக்கி நிஜத்தை உள் வாங்கிய மிதுனனும் ஆர்வ மிகுதியில் அவளை தூக்கிக் கொண்டு சுற்றினான்…..

    சுற்றுவது பூமி எனப் படுவது இப்போதுதான் என்பதாக ஒரு வலை அவர்களை பின்னிக் கொண்டே சிரித்தது…

    “என்ன சொல்ற நிவ்யா….?” அவன் கேட்க கேட்கவே……. “வா……. வா…….. “என்று அவனை இழுத்துக் கொண்டு அடுத்த வீதியில் ஓடினாள் நிவ்யா.. வீதியின் முகப்பில் நின்று பார்த்தவர்களுக்கு வீதி முழுக்க இடது புறமும் வலது புறமும்.. அடுக்கி வைத்தார் போல கட்டட வாழ்விடங்கள் நிறைந்து நின்றன…

    அவளின் கண்கள் இரு பக்கமும் சுழன்றன..

    நிறைந்து நின்ற வீடுகளில் நின்ற மிதுவின் கண்கள் ஆச்சரியத்தில் உறைந்து, எப்படி இத்தனை வீடுகளில் கண்டு பிடிப்பது என்பது போல பார்த்தன…… அவள் கண்கள் மூடிக் கொண்டே நகர்ந்தாள்… “இதுவா….? அதுவா…! அதுவா….! இதுவா….? இல்லை இந்த வீடு….. இல்லை அந்த வீடு……” நினைவுக் குழிக்குள் புதையுண்ட அந்த வீட்டுக் காட்சியை நினைவுக்குள் மேல் எழுப்ப முயன்று கொண்டே நடந்தாள்… குழிக்குள் விழுந்த விட்ட ஒரு ரூபாய் நாணயத்தை மேலே நின்றபடியே இரண்டு குச்சி கொண்டு இரண்டையும் ஒரு சேர அழுத்தி இணைத்து இரு குச்சியின் பிடியில் நாணயத்தை சிக்க வைத்து இரண்டு கைகளின் சமரச அழுத்தலில் மேல் கொண்டு வருவது போல.. மனதுக்குள் ஆழ்ந்து காணாமலே போன காட்சியை மேலே கொண்டு வந்து கொண்டிருந்தாள்… அதே சமயம்… அவன் வேறோர் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்….

    கண நேர தடுமாற்றத்தில் கிடைத்து விட்ட வழி போல அவள் கண்டே பிடித்து விட்டாள்…இதோ இந்த வீடு தான்…. அந்தக் காட்சி….. நியந்தாவின் புகைப்படத்தை கண்ட அந்த ஓர் நாள், ஒரு கணம்…. அந்த வீட்டு ஜன்னல் அருகே நின்ற போது பிடிபட்டு விட்டது.. மீண்டும் ஒரு முறை மனதுக்குள் காட்சியை நன்றாக ஓட்டிப் பார்த்த நிவ்யா….. “அயோ…..கடவுளே…..” என்று உணர்வுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல.. சில்லிட்டு நடுங்கி கண்களில் திரண்டு விழும் கண்ணீரை துடைக்காமலே சட்டென அந்த இடத்தைக் கடந்து மிதுனனிடம் ஓடி வந்தாள்……

    அவளின் சோர்வை, தடுமாற்றத்தைக் கண்ட மிதுனன், “என்னாச்சு நிவ்யா…. இன்னும் கொஞ்சம் தேடினா கண்டிப்பா கிடைப்பான்னு நம்பறேன்…ப்ளீஸ்…… இன்னைக்கு மட்டும் தேடலாம்……வா…நிவ்யா…..”- என்று கெஞ்ச கெஞ்ச அவனை இறுகக் கட்டிக் கொண்டாள் நிவ்யா….

    என்ன நடக்கிறது என்று யோசித்து அவளை பார்க்க, “என் பேச்சை கேப்பியா மாட்டியா” என்று கண்கள் கலங்க… கெஞ்சுவது போல பேசினாள் நிவ்யா….. சுற்றும் அமைதியால் நிரம்பிக் கிடந்த வெளியில் பழுப்பு நிறம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிக் கிடந்தது…….

    என்னாச்சு என்பது போல பார்த்த அவனிடம்…. “இங்க இல்ல மிது… நான் தப்பு தப்பா யோசிக்கறேன்.. எனக்கு இன்னும் சரியா தெரியல.. இப்போ நான் தூங்கனும்… ப்ளீஸ்……. வா……….. போலாம்”- என்றபடியே நிவ்யா முன்னோக்கி வேகமாக நடக்க அவள் பின்னால் ஒன்றும் புரியாமல் செயலிழந்து யோசித்துக் கொண்டே நடந்தான் மிது….

    “என்ன நாய் இப்பிடி குலைக்குது” என்றபடியே யாரோ திறந்த வீட்டில் வந்த வெளிச்சத்தில் இருவரும் புகையாகி மறைந்து கொண்டிருந்தார்கள்…

    சற்று முன் அந்த ஜன்னலில் தெரிந்த காட்சிக்குள் வரிசையாக மாட்டப் பட்டிருந்த புகைப்படங்களில் நியந்தாவின் புகைப் படத்துக்கு மட்டும் மாலை போடாமல் வைத்திருந்தார்கள்…. இந்த காட்சியைத்தான் என்றோ ஒரு நாள் நிவ்யா பார்த்திருக்கிறாள்…. அதைத்தான் மறந்து விட்டு பல கட்ட மனத் தேடல் முயற்சிக்குப் பின் இன்றும் பார்த்திருக்கிறாள்….. இப்போதுதான் நிஜம் புரிந்திருக்கிறது……..

    ஆம்….நியந்தா இன்னும் சாகவில்லை…..நியந்தா இன்னும் சாகவேயில்லை….

    சாகாதவளை செத்தவர்கள் உலகத்தில் தேடிக் கொண்டிருக்கும் மிதுவையும் தன்னையையும் நினைத்து ஒரு வகை சுய பச்சாதாபத்தில் அழுகை பொத்துக் கொண்டு வரவே “அவள் இங்கு இல்லை” என்று சமாளித்துக் கொண்டு வேக வேகமாய் அந்த இடத்தை விட்டு நடந்து கொண்டிருக்கிறாள்…..மிதுவையும் அழைத்துக் கொண்டு… எக்காரணம் கொண்டு அவனுக்கு தெரியக் கூடாது என்பதாலும்…

    அந்த அதி காலை நேரத்திலும்…உயிருள்ளவர்களின் உலகத்தில்… ஜன்னலை கொஞ்சமாக திறந்து வைத்துக் கொண்டு மிதுனனின் 6 வயது புகைப்படத்தை முகப் புத்தகத்தில் பதிந்து கொண்டு தேடிக் கொண்டிருந்தாள் 21 வயது நியந்தா….

    Share
  • அவள்கள்!

    -கவிஜி 

    அவள்கள் எனது
    பார்வையாக, பாதையாக
    இருந்தார்கள்…
    எங்கெல்லாம் இல்லாமல்
    போகிறேனோ….அங்கு
    அவள்கள் என்னைக்
    கண்டு கொண்டார்கள்…! (more…)

    Share
  • திருப்புக்காட்சி

    -கவிஜி 

    மழை தேசப்
    பாலை வனத்தில்
    வானுயர மரங்களின்
    பூமி தொடாத கண்ணீர்
    கொடுஞ்சூடு…!

    தொலை தூரப்
    பெருவானில்
    நதிதேடும் இரு
    சிறகின் புரியாமை
    வழி தேடல்…!

    கரை தாண்டும்
    சிறைப் பூக்கள்
    உதிராத வழிப் பாதையில்
    இளைப்பாறக் கிடைக்காத
    நிழலான மரக் கூடு…!

    வெந்து தணிய
    வேகத் தடையில்லை
    என்று கனிந்த
    காற்றுச் சொல்லொன்றாய்க்
    கனவுடைத்த
    கருங்கல்…!

    எண்ணக் குதிரையில்
    ஏகாந்தம் குலை நடுங்கப்
    பதியாத நினைவுகளைப்
    பாதி பாதியாய்
    அடுக்கிக் கொண்ட
    ஆற்றுப் படுகையில்
    என்
    திருப்புக் காட்சி…!

     

    Share
  • கூந்தல் குடை!

    -கவிஜி  

    உன் குடைக்குள்
    நுழைந்துகொண்ட
    பின்மதிய மழை நாளில்தான்
    உன் கூந்தல் குடையானது…!

    நீ தவறவிட்ட
    கைக்குட்டையில் திடீர்த் தொலைதல்
    திருப்பங்களென
    விரல் நீட்டுகிறது என் வழிகள்…!

    நொடிக்கொருதரம் புன்னகைக்கும்
    இதழோரம்
    குவிந்து விரியும்
    மச்சத்தின் வண்ணத்தில்தான்
    பீறிடுகிறது என் நிகழுதல்…!

    நீ விரும்பிப் படித்த
    புத்தகத்தைப் படிக்காமலே
    எடுத்தெடுத்துப் பார்ப்பதில்
    நாளுக்கு நாள் அதிகமாகிறது
    பக்கங்கள்…!

    ஓரப்பார்வைக்குச் சற்று
    அதிகமென நீ சொல்லும்
    மொழியினூடே,
    பரவசம்
    என்பதில் கடவுள் வந்துபோகும்
    அத்தனையிலும்
    உனது புகைப்படமாகிறேன்
    நான்…!

     

    Share
  • சிறகுகள்

    -கவிஜி

    வருகிறீர்கள்
    அமர்கிறீர்கள்
    பறக்கிறீர்கள்
    ரசிகனை வேடனாக்கிய
    நீங்கள் எந்த நாட்டு பறவைகள்…?

    ***

    உன்னைப் போல
    யோசித்து
    என்னைப் போல
    மாறிவிடுவதில் தான்
    நீயாவது புரிகிறது
    எனக்கு…!

    ***

    வருகின்ற கடிதத்தில்
    இருக்கும் என்பதான
    உன் எழுத்தில்
    என் கையெழுத்து,
    பிரிக்காத உறைக்குள்
    எழுதுவதற்கு முந்தைய
    கணமாய்….!

    ***

    மொழிமாற்றம்
    செய்யப் படுகிறது
    ஆடை இல்லாத நீ
    ஆங்கிலக்காரி என்று…!

    ***

    அடுத்தடுத்த பெயர்களிலும்
    நீயே வருகிறாய்…
    நான்தான்
    உனக்கு ஒரே பெயர்
    வைத்து விடுகிறேன்…!

     

    Share
  • எமிலி மெடில்டா

    – கவிஜி. 

    முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்….

    அது ஒரு சனிக்கிழமை….

    கண்டிப்பாக பள்ளி விடுமுறை… அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்… அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்…ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி “இந்த மாதிரி …..இந்த மாதிரி…….” என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்… “உன்னவன்” என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்.. அவள் படிப்பாள்.. படிக்கும்போது எவ்வாறு எதிர்வினை புரிகிறாள் என்பதனைப் பார்க்கும் ஆவலில் நான் சற்று தள்ளி கிரிக்கெட் விளையாடுவது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்……

    நேரம் ஓடிக் கொண்டிருந்தது…. 9…..10…..11…. 11.30…..

    நானே பந்து வீசிக் கொண்டிருந்தேன்….. பந்து வீசும் இடத்தில் இருந்தால்தான் அவளை நன்றாக நேருக்கு நேர் பார்க்க முடியும்… அவளும் வெளியே நின்று அவளின் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தாள்… அதே குட்டைப் பாவாடை.. எனக்கு பிடித்த அதே சிவப்பு பனியனில் நேற்று தான் இந்தியா வந்த பிரெஞ்ச்காரி மாதிரி இருந்தாள்…

    “முதல் முதல் திருடியதால்…. என்னை முழுசாய் திருடவில்லை…………………..” என்று சுப்ரமணி வீட்டு ரேடியோ… எனக்காகவே பாடுவது போல பாடிக் கொண்டிருந்தது……. நேரம் ஆக, ஆக… எனக்குள் கொப்பளிக்கத் தொடங்கியது, டோபாமைனின் வீரியமா… பயங்களின் அமிலமா…? என்று புரியவில்லை.. புரியாத புள்ளியில்தான் அவளின் அப்பா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்….

    நன்றாக கேட்டது……..”போ.. அம்மா கூப்டறா….நான் கழுவறேன்” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளைக் கழுவத் தொடங்கினார்..

    எனக்கு வியர்த்து விட்டது…. போடுகிற பந்து எல்லாம் நோ பால் ஆகவே போய்க் கொண்டிருக்க……..

    பாலு….. என்னிடம் வந்து “இன்னைக்கு அடி கண்டிப்பாக உண்டு.. பேசாம இங்க இருந்து போய்டு…..”- என்று காதுக்குள் கிசுகிசுத்தான்….

    கையை பிசைய கூட மறந்த விட்ட படபடப்பில்… “என்ன செய்யலாம்”- என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மகராஜன் போல போஸ்ட்மேன் வந்தார்… நேராக அவரிடமே சென்று …..”உங்க பொண்ணுக்கு போஸ்ட் வந்தருக்கு… குடுத்ருங்க…….” என்று கொடுத்து விட்டு போய் விட்டார்… எனக்கு அழுகையே வந்து விடுவது போல இருந்து… அவர் அங்கேயே பிரித்தார்.. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் …… எங்கள் குழுவில் உள்ள 6 பேருமே அவரையேதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்……திக் திக் நொடிகளில்… எங்கள் விளையாட்டு ஆங்காங்கே காலத்தை நிறுத்துவது போல.. நிறுத்தி ஒரே புள்ளியில் குவிந்த வண்ணம் நடுங்கிக் கொண்டிருக்க……..

    “எமி……………………லீ………………………………..” என்று அழைத்தார்.

    அவளும் விரிந்த கூந்தலோடு டீ குடித்துக் கொண்டே வெளியே வந்தாள்.. ‘என்னப்பா’ என்பது போல…

    கிரீட்டிங்கை நீட்டினார்.. அவள் வாங்கிப் பார்த்த மறுகணம் பட்டென்று என்னைப் பார்த்தாள்…… நான் அதற்கு முந்தைய கணமே சட்டென திரும்பிக் கொண்டேன்… அவளின் அப்பா அவள் பார்த்த பார்வையை நூல் பிடித்தது போல சட்டென திரும்பினார்.. அதற்குள் அவள் கப்பென்று குனிந்து கொண்டு “தெரிலப்பா… யார்னு”- என்றபடியே வீட்டுக்குள் வேகமாக சென்று விட்டாள்…நான் கண்களை எதுவரை முடியுமோ அது வரை நீட்டித்தேன்….

    “அப்பறம் என்னதான் ஆச்சு.. சொல்லு………”- என்றேன்…. சைக்கிளை மிதித்துக் கொண்டே….

    “அதை அனுப்பினது நீ தான்னு ஒத்துக்கோ அப்புறம் ஏன்னாச்சுனு நான் சொல்றேன்…”- என்றாள் எமிலி.. என் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு…

    “அயோ இல்லடி.. நான் அனுப்பல…”-என்று சொல்லி மெல்ல சிரித்தேன்….

    “பொய் சொல்லாதடா………….” என்றபடியே என் வயிற்றைப் பிடித்து கிள்ளினாள்…..

    “எனக்கு தெரியும்.. அவளோ தைரியமா உன்ன தவிர எவனும் அந்த வேலையை பண்ணிருக்க மாட்டான்….” என்று என் முதுகில் சாய்ந்து கொண்டாள், செல்லமாய் முகத்தை முதுகினில் உரசிக் கொண்டே…..

    நாங்கள் பயணித்த மழைப் பிரதேசத்தில் சனிக்கிழமை என்பது அத்தனை அழகா என்பது போல இருந்தது… எங்கள் பார்வைக்குள் கிடந்து உருளும் பொன்னிற கூந்தலென மேகங்களும், பனி சாரலும்….வந்து போகும் காற்றெல்லாம் வாடைக் காற்றா என்பது போல… ஓடை நீரில் முகம் தெரியும் சூட்சுமமாக நீர் தெளித்து விளையாடும்…..இயல்புகளில் இன்னிசை சுமக்கும் இயற்கையோடு நான் அவளாக, அவள் நானாக… நாங்கள் நாங்களாக… அல்லது வேறு யாரோவாக…மாறிக் கொண்டிருந்தோம்… இல்லாத தேசத்தில் இருப்பது போல ஒரு கனவுலகைக் கட்டிக் கொண்டே………

    “உனக்கு ஞபாகம் இருக்கா… நாம எப்டி முதல்ல பார்த்தோம்னு”- கேட்டேன்…..

    அவள்…”ம்ம்ம்………….. இருக்கு………………… ஒரு வெங்காயக்காரன்தானே நம்மல சேத்து விட்டான்……….” என்று சொல்லி சிரித்தாள்…

    உருண்டைக் கண்கள்.. கனத்த உதட்டில்… கேரளக்காரி என்பதை அவ்வப்போது.. கண்கள் சுருக்கி….”அய்ய்யே…….” என்று சொல்வதில் காட்டிக் கொண்டே இருப்பாள்…இருந்தாள்…. அவளோடு இருப்பது போல ஒரு வித பரவச நிலை… வேறெங்கும் நான் கண்டதில்லை… ரிலேடிவிட்டி தியரியை புரிந்து கொண்ட கணம் அவளின் அருகாமை… அவளுக்கும் அப்படித்தானாம்.. சொல்லுவாள்.. சில போது வார்த்தைகளை மெல்லுவாள்…

    “எங்கப்பா யார் தெரியுமா… மிலிட்டரி…” என்ற ஒரு நாளில்தான் முதல் முத்தத்தை எதிர் பார்க்காத கணத்தில் கொடுத்து விட்டு ஓடி வந்தேன்… அடுத்த நாள்… காலையில் கல்லூரி செல்லும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கையில் என் அருகே கோபமாக வந்து என் தலையில் நங் என்று கொட்டி விட்டு ஓடிப் போனாள்… என் நண்பர்கள் மத்தியில் சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் பேருந்தில் ஏறி போனது ஞாபகங்களின் கவிதை….

    “ஆங்….. தள்ளுவண்டி வெங்காயக்காரன்…….. இன்றும் எப்போதாவது பார்ப்பேன்…அதே புன்னை கையோடு கடந்து செல்வார்….

    அன்று ஒரு திங்கள் கிழமை…

    நான் தலைக்கு குளித்து விட்டு வாசலில் நின்று தலையைக் காய வைத்துக் கொண்டிருந்தேன்… எனக்கு வலது பக்கத்தில் ஒரு பெண்…………. ம்ம்ம்… ஒரு 11வது படிப்பாள் என்று நினைக்க கூடிய உடல்வாகில்…… துணியை அயர்ன் பண்ணக் கொடுத்து விட்டு காத்துக் கொண்டு நின்றாள்… நான் தலையைத் துவட்டுவதற்கு தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினேன்… அவளும் எதற்கோ சரி என்பது போல தலையை ஆட்டினாள்… இடையில் வெங்காயக்காரன், என்னையும் பார்த்து விட்டு அவளையும் பார்த்து விட்டு.. “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………………. “- என்பது போல தலையை ஆட்டினான்… எனக்கு ஒன்றும் புரியவில்லை… நான் வெங்காயக்காரனையும் பார்க்கிறேன்… அவளையும் பார்க்கிறேன்.. அவளும் அப்படியே பார்த்தாள்….. நான் திரும்பி வீட்டுக்குள் வந்து விட்டேன்…

    ஆனால் அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை…என்னமோ செய்தது… யோசிக்க யோசிக்கும், யோசிக்கும் அத்தனை யோசனையும்…ஒரு யோசனையில்தான் போய் நின்றது.. அது அவளின் முகம்..

    “என்னடா இது வம்பா இருக்கு.. நான் ஏன் இப்போ அந்த புள்ளைய நினைக்கறேன்…”- என்று என்னென்னமோ ஓடுகிறது…. காலையில் மந்திரித்து விட்டது போல அதே நேரம் அதே இடத்தில் தலை துவட்டிக் கொண்டு நின்றேன்.. அவளும் அதே இடத்தில் துணி அயர்ன் பண்ணக் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருந்தாள்… இன்று வெங்காயக்காரன் இல்லை…. ஆனால் நான் உரிந்து கொண்டு நின்றேன்…எங்கேயோ பார்ப்பது போல பார்த்தேன்.. அவளும் அதே போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்…..

    “பேர் என்னவாக இருக்கும்.. என்ன படிப்பாள்…?…”

    அப்போதுதான் கவனித்தேன்… குட்டைப் பாவாடை.. குட்டியூண்டு சட்டை… பொட்டில்லாத முகம்… அழுத்தமான பார்வை… நான் பார்க்க பார்க்கவே துணியை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்… அழுத்தமான நடை… அத்தனை அழகான கச்சிதமான… கம்பீரமான நடை… நேர் கொண்ட பார்வையில் வேகமாய் போய்க் கொண்டிருந்தாள்….அந்த வீதியே அதிர்வது போல உணர்ந்தேன்… இன்னும் வேறு வகையான மாய சுழலுக்குள் சூழலுக்குள் நான் போவதும் வருவதும் போல கிறு கிறுத்து நின்றேன்.. நிற்பது நானாக இருப்பினும்… நின்றது காதல்தான் என்று உணர்ந்தேன்…

    “நானும் உன்ன பார்த்தேன்… ஆனா… இப்டி உன்னையே பார்ப்பேன்னு யோசிக்கல…”- நாங்கள் மரத்தினடியில் அமர்ந்து கொண்டு இலை உதிரும் சிறு துளிகளில் சில்லிட்டபடியே கண்களும் கண்களும் நோக்க.. நொடிகளைக் கவிதையாக்கி கற்பனைக்குள் நீராடும் மீனாகும் துடிப்போடு… கொஞ்சம் நெருக்கிக் கொண்டே… நெருங்கினோம்… நெருங்கிய பொழுதெல்லாம் நொருங்கினோம்….

    “ம்ம்ம்… நீயே சொல்லு… நீ தான் கதை சொல்லி ஆச்சே……” என்றாள்… நெற்றி பார்த்த முத்தம் பதித்தபடியே…நான் யுத்தம் கண்ட வாளினையப் போல.. சீறிட்டு கூர்மையானேன்…

    அதன் பிறகு…. அவள் போகும் இடம், வரும் இடம் எல்லாம்… பின் தொடர்ந்து…… அதை அவளும் உணர்ந்து……. ஒரு நாள்.. மொட்டை மாடியில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்…….

    நன்றாக தெரியும்…. நான் நிற்பது தெரிந்துதான்.. சைக்கிளில் அந்த வீதி முழுக்க சுற்றிக் கொண்டேயிருந்தாள்….அவள் சைக்கிளில் சுற்றினாள்… நான் நின்று கொண்டே சுற்றினேன்….

    “சரி.. இன்று கேட்டு விடுவதுதான் சரி”- என்று நம்பி… காற்றினில் வரைந்து கொண்டே மௌன பாஷையில் “-உன் பேர் என்ன…?” என்றேன்..

    அவளுக்கு புரிந்து விட்டது.. போய் விட்டாள்..

    அடுத்த முறை வரும்போது இடது கையை கேண்டில் பாரில் இருந்து எடுத்து ‘படித்துக் கொள்’ என்பது போல சற்று மேல் நோக்கிக் காட்டினாள்.. உள்ளங்கையில் ஏதோ எழுதி இருந்தது… கண்களை சுருக்கி குனிந்து நன்றாக உற்றுப் பார்த்தேன்.. E- இல் தொடங்கி ஏதோ புரியாத மொழி போல இருந்தது பெயர்…. . சத்தியமாக புரியவில்லை… புரியாத போது இருக்கும் அதீத ஆர்வம் புரிந்த பின் இருப்பது இல்லை… ஆனால் எனக்கு புரிந்த இன்னும் இருந்தது…. புரியாத போது இருந்ததைப் போலவே…

    “என்னடா இது……!!!!!”- என்று தலையைப் பியித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு காகிதத்தை சுருட்டி மேலே வீசினாள்.. ஓடிப் போய் பிரித்தேன்.. சுருக்கம் நிறைந்த இதயம் சீராக துடிப்பது போல இருந்தது, தீராத வேகம் கொண்ட ரத்தத்தில் புது சக்தி பிறந்ததைப் போல…..

    “எமிலி மெடில்டா”- “என்னால் இந்தப் பெயரைப் படிக்க கூட முடியவில்லை….. என்ன மாதிரி பேர் இது.. இதுவரை கேட்டதே இல்லையே….”- மனம் சுருக்கெழுத்து போட்டிக்குள் தடுமாறுவது போல இருந்தது…

    “இது இங்லீஷ் பேர் மாமா…. உனக்குதான் தெர்ல…”-என்று சொல்லி சத்தமாக சிரித்தாள்.. அவள் இப்படி சிரிப்பதற்காகவே இன்னும் ஒரு முறை தெரியல என்று சொல்லலாம் போல……

    “என் பேர் கூட சொல்ல தெரியல… இதுல என் மேல லவ் வேற…..”- என்றபடியே இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்ட ஒரு நாள் மதியத்தில் அவளின் சட்டையை நான் அணிந்திருந்தேன்…….. என் சட்டையை அவள் அணிந்திருந்தேன்……. அவளின் வீடு பட்டாம் பூச்சிகளால் நிரப்பப்பட்டது போல காணப்பட்டது…….. அன்று, அப்படி ஒரு மழை… நாங்கள் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி மழையை பார்த்துக் கொண்டிருந்தோம். மழையும் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது…. காலங்கள் நின்று போன காலம் அது… ஒரு வித இளம் சூட்டில் இருவருமே… மெல்ல புன்னகைத்துக் கொண்டோம்… பின்மதிய நேரம் கூட இருள்மாலை போல கவிழ்ந்திருந்தது… அவள் கழுத்தின் வாசத்தில் மெய்ம் மறந்த காலம் அது… என் கழுத்துக்குள் முகம் முயங்கிக் கொண்டிந்த காலத்தை யாரோ தடுத்து நிறுத்தியது போல… எங்கள் பின்னால் யாரோ நிற்பது தெரிந்தது…..திரும்பினோம்.. பயந்து கொண்டே…

    அவளின் அம்மா..

    நான் எதுவுமே சொல்லாமல் சட்டையை கழற்றினேன்.. அவளும் நடுங்கிக் கொண்டே பயந்தபடியே… சட்டையை அங்கேயே கழற்றினாள்…

    “அப்புறம் என்னாச்சுடி……” என்று பல முறை கேட்ட பிறகும்.. எமிலி ஒன்றுமே சொல்லாமல்…….” உங்க அத்தைகிட்ட ஓகே வாங்கவேண்டியது என் பொறுப்பு …..” என்று என் தலையைக் கலைத்து விட்டாள்….

    இன்றும் கூட கலைத்து விட்டாள்… நானும் அவள் கூந்தலை கழற்றி விட்டேன்… மலை உச்சி காற்றுக்கு அது குடையாக நீண்டு கொண்டே இருந்தது….. “குடை வேண்டுமா… மழை வேண்டுமா…” என்று முனங்கும் இதழில் “இதழ் வேண்டுமே…இனி மீண்டுமே…” என்று கொஞ்சினேன்…கண்கள் கொண்டு கவிதை செய்தாள்…. படிக்க முடியவில்லை……தொடர்ந்தேன்….

    அவளின் கழுத்தினோரம் நான் முயங்கி சரிந்து கொண்டேன்….

    “ரசனைக்கார மாமா டா நீ ……” என்று செல்லமாக கன்னத்தில் கடித்து வைத்தாள்…

    “உனக்கொரு பேர் வைக்கட்டா…?”- என்றாள் ஒரு கிறிஸ்மஸ் நாள் அன்று…

    “ம்ம்.. வையேன்…” என்றேன்…

    ம்ம்ம்……என்று ….. யோசித்தபடியே… “பிரான்சிஸ் எடின் பாரோ” என்றாள்…

    ‘என்னடி பேர் இது….. உன் பேர் மாதிரியே வாய்க்குள்ள நுழையவே மாட்டேங்குது”- என்றேன்……

    சிரித்துக் கொண்டே …” செம பேர் மாமா…… நம்ம கல்யாண பத்திரிகையில இந்தப் பேர்தான் இருக்கணும் சரியா……?” என்றாள்..

    “எப்படியோ என்னை மதம் மாற சொல்ற.. இல்லியா…”

    “ஏன் மாமா…. மாற மாட்டியா”..

    “உனக்காக மதம் என்ன….. மதத்தையே கூட மாத்துவேன்……..”

    ‘அப்போ நானும் மாறிக்குவேன்…. எனக்கொரு பேர் வையேன்…”

    “ம்ம்ம்….. ரத்னா…. எங்க பாட்டி பேர்…”

    அத்தனை கூட்டத்திலும் கை கோர்த்துக் கொண்டாள்….

    “என்னது ஒன்பதுதான் படிக்கறயா… ஓகாட்……”- என்று புலம்பிய ஒரு டியூசன் நாளில்தான்… நீ லவ் கன்பாம் பண்ணின……. ஞாபகம் இருக்கா..?”- அதற்கும் சிரித்தாள்….

    “11வது படிக்க வேண்டிய வயசு… 3வதுல ஒரு தடவை… 7வதுல ஒரு தடவை பெயில்னு சிரிச்சுட்டே சொன்ன பாரு… நான் முடிவே பண்ணிட்டேன்.. கட்டினா உன்னதான்டின்னு…”-
    அதற்கும் சிரித்தாள்….

    அவள் சிரிப்போடு நான் என் அழுகையை மறந்த காலங்கள்தான் பொற்காலம்… மழை ரசிக்கத் தொடங்கிய காலம் அது… மறுகன்னம் காட்டத் துவங்கிய காலம் அது..காலங்களின் காலம் அது…. அது முழுக்க நாங்கள் மட்டுமே…

    அதன் பிறகு… மலை ரசித்தோம்… மௌனம் புசித்தோம்… முத்தங்களில் இதழ்கள் புதுமைகள் படைத்தன… நாட்கள்….. வருடங்கள்……. நகர…… நகர……. நான் முதுகலைப் பட்டம் வாங்க போய் விட, அவள் இளங்கலை பட்டத்துக்குள் நுழைந்தாள்… வயதும் ஆனது… ஒரு நாள், அந்த ஒரு நாள், நான் மீண்டும் தூக்கம் இல்லாமல் போன அந்த நாள்.. அதை நன்றாக ரீவைண்டிங் செய்து பார்க்க முடிகிறது……

    ஆம்….அவள் என்னை விட கொஞ்சம் உயரமாகியிருந்தாள்… இல்லையே……… நன்றாகத் தெரியும்.. நாங்கள் பழக ஆரம்பிக்கும் போது, அவள் என்னை விட உயரம் குறைவு.. ஆனால் இப்போது எப்படி உயரமாகியிருக்கிறாள்…?…

    “ஹீல்சா”- என்று பார்த்தேன்…. இல்லை…

    அதன் பிறகான நாட்களில்…… அவள் நன்றாக என்னை விட வளர்ந்து விட்டிருந்தாள்… இப்போது அவள் நிஜமாலுமே ஒரு பிரெஞ்சுக்காரியைப் போல தான் இருந்தாள்…இன்னும் இன்னும் அழகாக ஆகி இருந்தாள்….. என்னால் சைக்கிளில் அமர்ந்து கொண்டுதான் அவளிடம் பேச முடிந்தது..

    “ஏன் மாமா.. கிட்ட வரவே மாட்டேங்கற”- என்று ஒரு நாள் கேட்டாள்…வழக்கம் போல ஒரு பார்வை கொண்டு…

    நான் தடுமாறி எக்கி… ஹீல்ஸ் வைத்த ஷூவுடன்….. அருகில் சென்று நின்றும், என்னால் பேச முடியவில்லை…. என் கவனம் முழுக்க உயரத்தில் நின்று விட… அவள் பேசிய வார்த்தைகள் உள்ளுக்குள் போக மறுத்தது… இனம் புரியாத தவிப்புக்குள் நான் கரை புரளத் தொடங்கினேன்…பின் சின்ன சின்ன சண்டைகளை நானே முளைக்க வைத்தேன்…. காரணம் அறியேன் என்று கூறினாலும்… கனன்று கொண்டிருந்த உயரம் என்னை இன்னும் இன்னும் தாழ்த்திக் கொண்டே இருந்தது……நான் அவளைத் தவிர்க்கத் தொடங்கினேன்….தவிர்த்தலின் ஊடாக ஒரு மெல்லிய கோடு.. ரத்தம் கசிவதைக் கண்டேன்…

    “உயரம் ஒரு பொருட்டா.. காதலில்..”- என்று இன்று என்னால் வாய் கிழிய பேச முடியும்.. ஆனால் அன்று பேசவும் முடியவில்லை.. யாரிடமும் பகிரவும் முடியவில்லை…முடியாதவைக்குள்… முயங்கி சரிந்து கொண்டேன்…

    “ஏன் மாமா என்னை பிடிக்கலையா…..?” என்று ஒரு நாள் அழுது கொண்டே கேட்டாள்……

    நான் பதிலே பேசாமல்… கடந்து விட்டேன்… காரணமே இல்லாமல் ஏன் பிரிய வேண்டும் என்று நண்பர்கள் கூட கேட்டார்கள்… ஆனால் யாரிடமும் எதுவும் பேச இயலவில்லை…. இயலாமையின் உச்சம் கூட கீழே எங்கேயோ இருந்தது போலதான் இருந்தது…

    என் ரசனைகள் உடைந்து சுக்கு நூறாகின… நான் நிறைய பயந்து நடுங்கிய நாட்கள் அவை… அவளும் நானும் நாளை ஒன்றாக நடந்து சென்றால் ஊர் பேசும் கேலியை என்ன செய்வது என்று உள்ளுக்குள் புழுங்கிய நாட்கள் அவை…..வேண்டும் என்றே சைக்கிளைக் கழுவியபடி கிரிக்கெட் விளையாடும் என்னை பார்த்து அழுது கொண்டே நிற்பாள்.. நான் அவள் பக்கம் திரும்பவே மாட்டேன்…திரும்ப திரும்ப திரும்பிய காலங்கள் திரும்பாலே திரும்பிக் கொண்டது போல அவள் திரும்பாமலே என் திரும்பதலுக்கு நிற்பாள்… நான் அப்போதும் திரும்ப மாட்டேன்…. திரும்புதலில் நேர்கோடு புரிய மறுக்கின்றன.. எனக்கும் அன்று புரியவில்லை… இரவினில் அவள் வாசலைக் கடப்பதை தவிர்க்கத் தொடங்கினேன்… அவள் பெயர் எழுதிய என் புத்தக பக்கங்களைக் கிழித்தெறிந்தேன்… என்னால் பழையபடி யாரிடமும் சிரிக்க முடியவில்லை….. சிரிப்பது போல கூட இருக்க முடியவில்லை…. மொத்தத்தில் இருக்கவே முடியவில்லை……… ஒரு ஓட்டம் துரத்திய மலை உச்சியில் கால் வலிக்க நின்ற காலங்களை நினைக்காத போதும் நான் மலை உச்சியில் தனியாக சுற்றி..நகர்ந்து நகர்ந்து… ஒரு குட்டைப் பாவாடையைக் கடந்து வர எனக்கு அத்தனை சுலபமாகவும் இருந்து…. ஒரு சிவப்பு பனியனை நான் சுத்தமாக மறந்து போனேன்… மறப்பது ஒன்றுமே இல்லை…… மண்ணாங்கட்டி மனம்.. அதையும் சேர்த்து தான் சொல்கிறேன்……

    நாட்கள்….. மாதங்கள்.. வருடங்கள்… கடந்த ஒரு பத்தாண்டுக்கு பின்னால் ஒரு நண்பனின் திருமணத்திற்கு கோவையில் உள்ள பிரபலமான ஒரு ஆலயத்துக்கு சென்றிருந்தேன்..

    அங்கே ஒரு சிஸ்டர்… என்னையே பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது…… திருமணம் முடிந்து சாப்பிட ஹாலுக்குள் செல்லும் போது நிதானமாக என் அருகே வந்து நின்றார் அந்த சிஸ்டர்…

    நான் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்……. மனதுக்குள் கிழிந்து பறந்த ஒரு கோடி விவிலியங்கள் எரிந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன்…….

    “என்னைத் தெரியுதா?….. என்றார்…….

    நான் தலையைப் பிடித்து கொண்டு சரிந்தேன்… எனக்கு அருகே அத்தனை உயரத்தில் ஒரு ஏசுவைப் போல நின்று கொண்டிருந்தாள் எமிலி மெடில்டா….

    அவள் எனக்கு எழுதிய கடைசி கடிதத்தின் கடைசி வரிகள் அங்கே மீண்டும் ஒலிப்பதாகத் தோன்றியது…………

    “என் ஆதியும் நீயே என் அந்தமும் நீயே…”

    Share
  • வளைவுகளின் தியானம்

    -கவிஜி

    உள்ளூர
    ஊரத் தொடங்கும்
    எறும்புகளின்
    பயணத்தில்
    நான் சாலையாகிறேன்…

    சுவாசிக்க மறந்த
    இருபுறங்களின்
    சுளீரில்
    நான்
    கவனமற்றுப்
    பின்தொடர்கிறேன்…

    நானும் யாவும்
    தீர்வல்ல என்பதாகத்
    தீர்க்கவல்ல தரிசனம்
    நொடியில்
    கடக்கிறது…

    நான்
    அற்புதங்களின் தேசம்
    உருவாக்க
    ஒன்றும் இல்லாமல்
    போன திசைகளின்
    வீழ்ச்சியாய்ப்
    பூகோளம் வரைகிறேன்…

    வளைவுகளில்
    கடவுள் வந்து போகலாம்…
    முதலில் வளைவுகள்
    சொல்லித்தர
    வேண்டி, யோசிக்கையில்
    எறும்புகள்
    ஓய்வெடுக்கின்றன…

    வளைவுகளின் பொருள்
    தெரியாத
    தியானத்தோடு…!

     

    Share
  • முக்கோணத் தொடுதிரை!

    -கவிஜி  

    நண்பர்கள்
    நம்பர்களாகிப்
    போனார்கள்…

    ஒன்றாக இருந்தாலும்
    முகம் அறியாதவர்களே
    ஒன்றியிருக்கிறார்கள்…!

    உறவினர்கள்
    பக்கத்து வீட்டுக்காரர்கள்
    அனைவருமே ஸ்டேடஸுக்குள்
    அடங்கி விட்டார்கள்…                                              cell-phone

    தலை குனிந்தே
    நடப்பதில் ஆண் பெண்
    சமம் ஊர்ஜிதப் படுத்தப்படுகிறது…!

    எழுந்ததும் கையில்
    மிதக்கும் அலைபேசி
    எழுவதற்கு முந்தியும் அலைகிறது
    மனதுக்குள்…!

    மாற்றங்கள் வேண்டிய
    மானுட குலம்
    மாற்றத்துள் மாட்டிக் கொண்ட
    முக்கோணமாய்த் தொடுதிரைக்குள்
    காணாமலே போகிறது…

    முகநூலில் கட்டை விரல்
    உயர்த்தலில்
    வாழ்த்தலின் அத்தனை
    உணர்வும் சிதைவதாகவே
    தோன்றுகிறது…!

    எண்ணங்கள் அனைத்துக்குமே
    எழுத்துருவம் தர
    முடியும் என்றே
    முரட்டு நம்பிக்கை
    விதைக்கிறது…

    இனி முகங்கள்
    மறக்கும் அகங்களின்
    கழுத்தில் எண்களே
    அடையாளமாகும்!

     

     

    Share
  • சிவப்பு பக்கங்கள்

    கவிஜி

    “இந்த விருது கிடைக்கும்னு நினைச்சிங்களா…..?”

    mystery 340“இந்த விருதுன்னு இல்ல… ஏதோ ஒரு விருது கிடைக்கும்னு நினைச்சேன்……”

    “இன்னொரு கேள்வி….”

    “கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டீங்க.. அதுல என்ன இன்னொரு கேள்வி.. எல்லாமே கேள்வி தானே…”

    “உங்க எழுத்து மாதிரியேதான் சார் இருக்கு.. உங்க பதிலும்…”

    “நன்றினு சொல்லிட்டு உங்கள கடந்து போகத்தான் நினைக்கறேன்… ரெண்டுமே முடியல…”

    (சிறு புன்னகை இரண்டு பக்கமும்…)

    “அதென்ன சார்… எழுத்தாளன் அப்டினாவே… ஒரு மாதிரி கோபமா.. முரட்டுத்தனமா இருக்கனுமா என்ன…?”

    “அப்டி எல்லாம் இல்லையே… என்ன மாதிரி தாடி வச்சிட்டு குடுமி கூட வெச்சுக்கலாமே…”

    (சிறு மௌனம் இரண்டு பக்கமும்) -(சில கிளிக்ஸ்…..)

    “கடைசி கேள்வி…..”

    “அப்போ… வில்லங்கம்தான்…”

    “ஹ ஹ ஹா….”

    “சிலை சிரிக்கற மாதிரி…(மைண்ட் வாய்ஸ்)….ம்ம்ம்ம்

    “அது ஏன் உங்க எல்லாக் கதைகளும்,…. ஒரு மாதிரி அமானுஷ்யங்களாவே இருக்கு…..”

    அறைக்குள் அங்கும் இங்கும் அலைந்தான் பிரான்சிஸ் எடின் பாரோ…அந்தக் கேள்வி நீரலையாய்… வெப்பச் சலனமாய், வேகத் தடையாய் மூளைக்குள் ஒளிந்து கொண்டும்… ஓடிக் கொண்டும் இருந்தது….. சரியான கேள்விதான்….எல்லா கேள்விக்கும் பதில் வேண்டுமா என்ன…? ஏன் அப்படிக் கேட்டாள்…! அதுவும் உண்மை தானே.. இது வரை எழுதிய 65 சிறுகதைகளிலும்… அமானுஷ்யங்கள்தானே கிளைமேக்ஸாக இருக்கிறது… சரி இருந்தால் என்ன…? சிலருக்கு காதல் பாணி.. சிலருக்கு காமம்.. சிலருக்கு கொலை.. சிலருக்கு கடவுள். சிலருக்கு வன்முறை… அவனுக்கு பேய் ஆவி.. பூதம்…. எத்தனை சொன்னாலும் இந்த மனம் மட்டும் சமாதானம் ஆவதே இல்லை.. இல்லாத தொடர்புக்கு, இருப்பது போல ஒரு கூட்டு முறை பிராத்தனையை இறக்கிக் கொண்டே துளி துளியாய், பின் மொத்தமாய் கயிறாய் விட்டு விடும் மாய யதார்த்தமாக… அவனுக்குள் இறங்கிக் கொண்டே இருந்தது கேள்வி… இதே கேள்வியை அம்மு கூட ஒரு முறை கேட்டதுண்டு….அவன் சொன்ன பதிலில் அவளின் பதில்கள் கேள்விகளானது வேறு விஷயம்…

    அம்முகூட ஒரு கதையின் கதாபாத்திரமாகத்தான் அவனுக்கு அறிமுகம் ஆனாள்…….. கதைகளின் வாயிலாக அவனுக்கென்று ஒரு உலகை சிருஸ்டித்துக் கொண்ட கதவற்ற புத்தகம்தான் எடின்….இரவைத் தூங்குவதற்கு என்று எவன் சொன்னது.. அது கொண்டாடுவதற்கு… இரவின் கண்களுக்குள் நீ தெரியும் நாளில்தான் பூமியின் மறுபக்கம் உனக்குள் பிரவேசிக்கும் என்பது அவனின் சித்தாந்தம்… சித்தாந்த தத்துவங்களில் அடிக் கோடிட்ட வரியாக இருப்பதே அவனின் பேனாவின் வலிமை…. உன் பேனாவில் மட்டும் வலி’மை’யை ஊற்றி எழுதுகிறாய் என்று அம்மு அடிக்கடி சொல்வது, அவனுக்குள் ஊற்றெடுத்த பெருவாகம் என்பது விதி.. விதி என்பது மேலே கையைக் காட்டும் தலை கீழ் விகிதமல்ல.. அது காலச் சூத்திரம்…

    திறந்திருந்த ஜன்னலில் இரவின் நீலம்…….. தொலைந்து கொண்டே போனதை, முடிந்தவரையில் பார்த்தவனுக்கு அந்தக் கேள்வி மட்டும் பெரும் சித்துகளை கொட்டிக் கொண்டேயிருந்தது…. இருப்பதும் ஒன்றுதான்.. இல்லாமல் போவதும் ஒன்றுதான்… மாற்றி யோசித்த கணங்களை பின்னோக்கி, வாரிய மண் புதையலாய், சூடு பனியாகி கொண்ட வெள்ளோட்டக் கரையில் வழிந்திட்ட நிழல் யாருடையது என்பதுபோல அந்தக் கேள்வி.. கேள்வியின் நாயகன் அல்ல.. நாயகி… இப்படி ஒரு கேள்வியை ஏன் கேட்டாள்.. கேட்கத்தானே கேள்வி… என்று மீண்டும் மீண்டும் யோசிக்கத் தொடங்கினான்.. தொடக்கத்தைப் போல சோம்பல் எதுவும் இல்லை… மதுவுக்குள் முகம் பிரகாசித்தது..அவனை அவனே இப்போது கேட்டுக் கொண்டான்..

    ஏன்… நீ ….. ஏன் அமானுஷ்யக் கதைகளையே எழுதுகிறாய்…?….. பிடித்திருக்கிறது என்று சொல்லி நழுவிச் செல்ல தோன்றவில்லை…

    போதை ஏற
    புத்தி மாறுவதில்லை
    எழுதுபவனுக்கு…

    வாய் கிழியப்
    பேசும் நாளில்
    போதையே இருப்பதில்லை…

    இருப்பது போதையாக
    இருப்பினும் அது
    இரவுக்குள் இருப்பதால் திறக்கப்படவில்லை……

    அட கவிதை கொட்டும் கணங்களிலும் கனத்துக் கிடக்கும் கேள்வியை என்ன செய்வது…..?

    அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது… இரவுகளில்….வீட்டில் மின்சாரம் உபயோகிப்பது இல்லை…எப்போதும் இருள் சூழ்ந்த சூழலே அவனுக்கு வெளிச்சம்……. வீட்டுக்குள் எங்கு, என்ன இருக்கிறது என்று அவனுக்கு நன்றாக தெரியும்….. இருட்டுக்குள் நடந்து கொண்டே ஒரு பேயைப் போல இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள், ஏதோ பேய் கூட குடும்பம் நடத்தியது போல…… அவன் நிழலைக் கண்டுதான் பின் வீட்டுத் தாத்தா இறந்து போனார் என்பது காலத்தால் அழிக்க முடியாத குற்றச்சாட்டு….

    அதற்கு அவன் கூறிய பதில்-

    “இறப்பவன் நிழல் பார்க்காமல் கூட இறப்பான்..” என்பது.

    தலையை பிடித்துக் கொண்ட இன்னொரு பாட்டி இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்… வெறும் தகவல்களை அவன் ஒருபோதும் உள் வாங்குவதேயில்லை… கூடு விட்டு கூடு பாயும் சிந்தனைகளை ஒன்று குவிக்கவே, இருள் என்பது கொஞ்ச வெளிச்சம் என்பான் பாரதியைப் போலவே… இங்கு எல்லாமே மாதிரிதான்.. போலதான்.. என்பது…அறிவின் கூட்டு சதி…

    அவன் யோசித்தான்…. இன்னும் ஒரு போத்தல் வோல்கா தேசம் உள்ளே போனது…. அறை சுற்றத் தொடங்கியது கேள்வியாக…

    “ஏன் அமானுஷ்யக் கதைகளையே எழுதுகிறேன்…….? நான் எங்கு எழுதுகிறேன்…..(!)” என்று உள்ளுக்குள் இருந்து ஒரு பதில் அன்று முதன் முதலாக தூண்டில் போட்டது. அகப்பட்டவன் போல…… கண்ணாடி முன் நின்று பார்த்தான். கண்ணாடியும் கருப்பாக கொஞ்சம் வெளிச்சத்தில் அவனைப் போலவே பார்த்தது…. நன்றாக நினைவுக் கிண்ணங்கள் உருளத் தொடங்கின…… எந்தக் கேள்விக்குள் அவன் போக தயங்கினானோ அந்தக் கேள்வி அவனைக் கை பிடித்து கால் பிடித்து இழுத்துப் போனது… இதுவரை எழுதிய கதைகளின் தலைப்பை ஒவ்வொன்றாக யோசித்தான்….. ஜன்னலுக்குள் ஒரு வால் நட்சத்திரம் சிதறி விழுந்தது போல இருக்க ஜன்னல் தன் அளவைக் குறுக்கிக் கொண்டு நட்சத்திரத்துக்கு வழி விட்டதாக ஒரு காட்சி… வாராமலே போனது….

    “நியந்தாவின் வண்ணங்கள், குடைக்குள் மழை, 1984 டிச 28, யாதுமாகிய நிவ்யா, தசையினை தீ சுடினும், ஜிப்ரானின் செல்மா, குருதி சொட்டும் கழுகின் வட்டங்கள், யாரது இடைவிடாமல் இசைப்பது”- இப்படி எல்லாக் கதைகளுமே அமானுஷ்யங்களோடு முடிந்தவைதான் …. அவனுக்குள் ஒரு கிணறு மூடிக் கொண்டே வருவது போல… ஒரு வகை அதீத சப்தம்…. புகை போல கிளம்பிக் கொண்டே இருந்தது….. அவன் உணரத் தொடங்கினான்… உயரப் பறப்பது போல.. உலகின் சிறகை வெட்டிக் கொண்டே வெளி எங்கும் பால்வீதி தூவிக் கொண்டே ஒரு புள்ளிக்குள் கவனம் சிதைக்கிறான்… ஆம்.. அந்த கதைகளை அவன் எழுதத் துவங்கும் போது இருந்த கரு, மெல்ல மெல்ல ஒரு அமானுஷ்யக் கதைக்குள், கருவுக்குள், முடிவுக்குள் சென்று விடுவதை உணர முடிந்தது.. திக் என்று வியர்த்துக் கொட்டியது… சூடு…

    எழுதும் போது இருந்த மன நிலை… உடல் நிலை.. அறை சூழல் என்று ஒவ்வொன்றாக நினைவு படுத்தி பார்த்தான்…..ம்ஹும்…. ஒன்றும்… நினைவுக்கு வரவில்லை…..

    “அது எப்படி, நான் எழுத நினைத்த கதை தானாக ஒரு அமானுஷ்யக் கதையாக மாறும்….?”-

    முதன் முதலாக ஒரு நடுக்கம் தோன்றியது… முதன் முதலாக இருட்டுக்குள் ஒரு புள்ளி அவன் கண்களுக்குள் சுழன்றது.. அது தீவிர தோட்டாவின் வேகம் போல வெளி துளைத்துப் போய்க் கொண்டேயிருந்தது…மெழுகுவர்த்தி பற்ற வைத்தான்… அது பயந்து கொண்டே அழுவது போல இருந்தது… கீற்று வெளிச்சம், இரவைக் கீறிய வெளிச்சம்….

    இரவைக் கெடுக்கும் எதையும் அவன் விரும்புவதில்லை… ஆனாலும் சோதனை முயற்சிக்காக அவன் அதை செய்தான்…. அது எப்படி… தானாக கதை மாறும்…..?

    அப்படி என்றால்… என்னோடு யாரோ இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்..”-அவன் நெற்றி சுருக்கி யோசித்தான்…

    அவன் எழுதிய அனைத்து கதைகளுமே இதே அறையில் வைத்து அதிகாலை வெளிச்சத்தில் எழுதுதவைகள் தானே… இரவுகளில் எழுதுவது அவனுக்கு பிடிக்காது… எழுதுவதற்கா இரவுகள்…? இரவுகள் இரவுகளுக்காக… “அயோ…………………………”

    அவன் தலையை பிடித்துக் கொண்டான்… இழுத்துக் கொண்டே செல்லும் கற்பனைக் கரப்பான் பூச்சிகளின் மெல்லசைவில் கூச்செறியும் மயிர்களின் புல்லரிப்பில் கட்டுப் படுத்திக் கொண்டே… எழுதத் தொடங்கினான்…

    ஒரு சாதாரண எழுத்தாளனின் கதை…

    “ஒரு எழுத்தாளன் கஷ்டப் பட்டு எழுதி ஒரு நாவலை முடிக்கிறான்…. அதை பிரசுரிக்க முடியாமல் அவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது….” இதுதான் ஒன் லைன்… …. இதுல அமானுஷ்யம் எங்கேயும் இல்லை… பார்க்கலாம்… இப்படிதானே அவன் எல்லாக் கதைகளையும் ஆரம்பிக்கிறான்…. ஆனால் எழுதி முடித்து அச்சாகி வரும் போது.. அது அமானுஷ்யக் கதையாக முடிந்து, பலத்த ஆதரவையும் பெற்று விடுவதன் முடிச்சை இன்று எப்படியாவது அவிழ்ந்து விட வேண்டும் என்றுதான் இதோ எழுதிக் கொண்டிருக்கிறான்….

    அவன் எழுத எழுத அந்த அறை ஒரு வித இளஞ்சிவப்புக்குள் இருந்து கொண்டிருப்பது போன்ற ஒரு நொடிநேரப் பயணங்களை உணர முடிந்தது…..முன் அறையில் யாரோ இருப்பது போல தோன்றும் நிமிடங்கள் வரத் தொடங்கியது…. கண்டிப்பாக தெரியும்…. தெரிவது போல ஒரு கண்டிப்பும் இருக்கத்தான் செய்தது….. மனமெங்கும்.. மூளையெங்கும்… அறையெங்கும்… சொட்டு சொட்டாய் கொட்டிக் கொண்டேயிருக்கும் இருளின் ஊடாக.. நிழலற்ற ஒன்றாய் ஏதோ நடப்பதும், இருப்பதும்… அமர்வதும்..என்று சூழல் சூழ்ந்து கொண்டேயிருந்தது….. அவன் விரல்களில் எழுதுகோல், நாட்டியம் ஆடுவதைக் கண்டு கொண்டே யாரோ கை தட்டுவது போல… மூச்சடைத்த காற்றின் வேகம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வேகமாய் சுழலத் தொடங்கியது…..

    கதையை முடித்து விட்டு… தலை நிமிர்ந்தான்….. அதுவரை அவனை யாரோ பார்த்து கொண்டு நின்றுது போல ஏதோ ஒன்று சட்டென மறையத் தொடங்கியது… மறைவதும் தோன்றுவதும் என்ன வகை கட்சி பிழைகள் என்று யோசித்துக் கொண்டே படிக்கத் தொடங்கினான் எழுதிய கதையை… திக் திக் நொடிகளுக்குள் பக் பக்.. பட படப்புடன்…. அப்படி எதுவும் இருந்து விடக் கூடாது.. என்ற பயத்துடன் படிக்கத் தொடங்கினான்……. கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது……

    “தமிழ்நாட்டில் எழுத்தாளனாய் இருப்பதை போல ஒரு சாபம் வேறொன்றுமில்லை……. அயல் தேசத்தார் எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள்.. இங்கோ.. ‘ஏன் நல்ல படிக்க மாட்டியா…….(?) எழுத போய்ட்ட’ என்கிறார்கள்.. அட முட்டாள்களே… எழுதுபவன்… ஆக சிறந்த படிப்பாளியாகத்தான் இருக்க முடியும்.. படிப்பு என்பதே பள்ளி, கல்லூரி, முனைவர் பட்டம் என்று நினைக்கும் கூமுட்டைகளுக்கு எங்கு இருந்து கதையை ஆரம்பிப்பது….?”

    படிக்க படிக்கவே அவ்வப்போது திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டான்… அவன் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்.. இருளுக்குள் ஒரு வெளிச்சம் இடம் மாறிக் கொண்டே இருப்பதை உணர முடிந்தது…. நன்றாக தெரிந்தது, முதுகுக்கு பின்னால் யாரோ அமர்ந்திருப்பது…!!!!

    விட்ட இடத்திலிருந்து மீண்டும்.. படிக்கத் தொடங்கினான்… அவன் கண்கள் இன்னும் கூரானது….

    “இல்லை இது நான் எழுதவில்லை…. நான் எழுதவில்லை…நான் எழுதவே இல்லை… ஒரு வேளை எழுதியிருப்பேனோ…?” அவன் யோசித்தான்..

    சற்று கடந்து விட்ட கணங்களை பின்னோக்கி வலுக்கட்டாயமாக இழுத்து வந்து பிரித்துப் பார்த்தான்.. இல்லை.. அவன் எழுத வந்தது… “நாவல் பிரசுரம் ஆகாத மனநிலை, மெல்ல மெல்ல மனப் பிறழ்வுக்குள் போவது பற்றி ..” ஆனால் எழுதி இருப்பது……, அவன் கோபத்தில் தன் தலையை சுவற்றில் ஓங்கி ஓங்கி முட்டுகிறான்…. அவனோடு.. யாரோ இருக்கிறார்கள்.. அவனை ‘போ..போ.. போய்.. தூக்கில் தொங்கு, தொங்கு’ என்று கொக்கரிக்கிறார்கள்.. அந்த அறையே மெழுகுவர்த்திகளால் நிறைந்து காணப் படுகிறது ..

    ‘மரணத்தைப் போல ஒரு ஜோதி எங்கும் இல்லை.. போ.. உன் மரணத்தை நடத்து..அது ஒரு கொண்டாட்டம்.. விழா எடு… அழகான உயர் தர கயிறு கொண்டு உன் கழுத்தில் சுருக்கு போட்டுக் கொள்…மிக மிக மென்மையாக சுருக்கில் தொங்கு.. கால்களை பட படவென உராயாதே… கழுத்து இறுகும் போது, நுண்ணிய நரம்புகள் அறுபட அறுபட அதை அனுபவி… உணர்… மரணத்தை உள் வாங்கு.. பயப்படாதே.. “காலா சற்றே என் காலடியில் வாடா.. சற்றே உன்னை மிதிக்கிறேன்..” என்பது போல.. மிதி… சிரி.. கண்கள் வெளியே தள்ளும்… விடாதே.. நாக்கு வெளியே வரும் விடாதே… அற்புதமான கணங்களை கடந்து செல்… உன் சுதந்திரம் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது….. போ…”- சொல்வது சாத்தனா கடவுளா.. என்று திரும்பிப் பார்க்கையில்… நடுக்கம்,உடம்பு, மூளை, மனம் எங்கும்……

    அந்த அறையில் நீண்ட நெடிய இரைச்சல் ஓங்காரமிடத் தொடங்கியது……… கதை முடிந்த இடத்தில்… ‘பிரான்சிஸ் எடின் பாரோ” என்று கையொப்பம் இட்டு… 20 10 1870 என்று எழுதி இருந்தது…. இன்னும் தூக்கி வாரிப் போட்டது… எதிரே இருந்த கேலண்டரில் 20 10 2014 என்று இருந்தது….. தலை சுற்றியது…… எழுதிய கதையில் பாதியை அவன் எழுதவேயில்லை… என்று உணர உணரவே…….

    யாரோ கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது….

    திறந்து கொண்டு கையில் விருதோடு உள்ளே வந்த பிரான்சிஸ் எடின் பாரோ.. … இருட்டு வீட்டுக்குள் ஜன்னல் வழியே தெரிந்த வெளிச்சத்தில் கிடந்த காகிதங்களைக் கண்டான்……

    “இன்னைக்கு எழுதி பார்த்து, ஏன் எல்லாமே அமானுஷ்யக் கதைகளா ஆகுதுன்னு கண்டு பிடிச்சிடனும்” என்று முனங்கிக் கொண்டே எழுதத் தொடங்கினான்…..

    காகிதத்தில் ஏற்கனவே பதிந்திருந்த எழுத்துகள் உயிர் பெறத் தொடங்கின….அவன் பின்னால் யாரோ அவனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார்கள்…

    Share
  • நிலா

    -கவிஜி  

    நிலவைப் பிடித்தபெண்
    மெல்ல மேலே
    இழுக்கிறாள்…
    கைக்கெட்டும் தூரத்தில்
    சற்று உடல்வளைத்துப்
    பிடிக்கும் கணத்தில்
    ஆடிய வாளி, நிலவை
    மீண்டும் கிணற்றுக்குள்
    தவற விடுகிகிறது…
    தடுமாறி ஏந்திய
    உள்ளங்கையில் மெல்ல
    நிறமாறித் தடுமாறுகிறது
    நிலா…!

     

     

    Share
  • தேவதைகள் தூங்குகிறார்கள் …

    — கவிஜி.

    தேவதைகள் கொல்கிறார்கள் என்றுதான் எழுத நினைத்தேன், ஒரு மணி நேரத்துக்கு முன்னால். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு பின்னால் தேவதைகள் தூங்குகிறார்கள் என்று எழுதி விட்டேன். மனம் அப்படித்தானே அது எழுதிக் கொண்டே அழிக்கவும் செய்யும். மாய வித்தைகளின் எல்லாப் பக்கங்களையும் தன் மாய மைகளினால் நிரப்பிக் கொண்டே செல்லும். செல்கிறது. ‘காண்பதெல்லாம்’ கனவினைப் போல், புதைந்தழிந்தே போனதனால் நானும் ‘ஆழ் மனமோ’ என்ற பாரதியையும் உணர்ந்தேன். சொந்த மனம் தன்னை ஒதுக்குவதை தாங்கி கொள்ளும் சக்தி ஏனோ எனக்கு மனம் கூட்டி வந்திருக்கிறது. சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய், என்பதைக் கொஞ்சம் மாற்றி சுடர் மிகு பலத்துடன் படைத்து விட்டாய் என்று முணு முணுத்துக் கொண்டேன்.

    மனதைக் கீறி அதில் நானும் தேவதையே என்று எழுதும் தேவதைகளின் மன தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும் என்று ஓங்கி அழும் பேராசைகளின் இரைச்சலின் கூப்பாடுகளாக எனது துளியெல்லாம் நிறமற்ற ரத்தமானதைப் போல உணர்ந்து சிரித்தேன். சிரித்து உணர்ந்தேன். அல்லது இரண்டும் அற்ற இடைவெளியில் இல்லாமலே உணர்ந்தேன். சிரித்தேன்.

    நான் எதிர் திசையின் எதிர்ப்பதமாகவே எப்போதும் இருப்பதால், திமிரின் பிள்ளையென தீண்டியும் தூண்டியும் செய்ய முடியாத ஆழத்தில் நீந்தி நீந்தி நீராவதால், கடல் ஒன்றும் பெருங் கனவல்ல என்று கூடி நரைத்து கிழம் எய்திய சங்கத் தமிழின் ஒன்றும் அறியா தினமாக மாறும் மனதுக்குள் முண்டியடித்து அமர்ந்து விட்டேன். நிதானம் இழக்க அவகாசம் தேடும் மனதுக்குள் நான் பெரும் தானங்களின் கவிதையாக கிறுக்கு பிடித்து தலை சிலுப்பிய ஏதோ ஒரு அடுக்கின் கலைதலின் புலம்பல்களாக கொஞ்சம் மது தேடித் திரிந்து, மிஞ்சும் சதி பின்னித் திரியும், நீள வான ஓடைக்குள் மூழ்கிடவே விரும்பினேன். தேவதைகள் கொல்கிறார்கள் என்று உரக்க சொல்லும் துணிச்சல் உண்டு என்பதால் அணைத்து தள்ளிப் போன காலத்தின் முகமூடிக்குள் தலை சாய்த்துக் கொண்டேன்.

    காரணம் இல்லாமல் வெறுக்கும் கலைகளை நல்லவேளை நான் கற்றுக் கொள்ளவே இல்லை. கற்றதையெல்லாம் அன்பின் சுவடுகளாகவே வீசி எறிகிறேன். சில போது அதன் தீச்சுடரை பந்தமாய் கொளுத்தி விடுகிறேன். கொழித்து செழுமையாகப் பீறிடும் முத்தத்தால் மீண்டும் மீண்டும் காதலையே விதைக்கிறேன். விதைந்த போது தேவதைகள் தூங்குகிறார்கள் என்று எழுதத் தோன்றியது. ஆம், தேவதை தூங்கிக் கொண்டுதான் இருந்தாள்.

    கவிஜி கதைரயில் பயணத்தில் எப்போதாவது எப்போதும் மறக்க முடியாத பெண் ஒருத்தி நம்மோடு பயணித்து விடுகிறாள். இன்று அப்படி ஒருத்தி என்னோடு பயணித்தாள். என்னோடு மட்டுமே பயணித்தது போல பக்கவாட்டு மேல் பெர்த்தில் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். பெட்ஷீட் கழுத்து வரை போர்த்தி முகம் தெரியும் அளவுக்கு இடம் விட்டிருந்தாள். அல்லது கண்களை மூடிக் கொண்டிருந்தாள், தமிழன்பனின் புதுக் கவிதையென பார்த்ததும் பிடித்து விடும் முகம். பிடித்து விட்ட முகம். வேர்த்து விறுவிறுத்து கனத்து, சிவந்த கிடந்த மனதுக்குள் அந்த முகம் ஒரு மஞ்சள் நிலவை விதைத்தது. அரும்பு மீசை போல உள்ள பூனை ரோமத்தில் முயங்கித் திரண்ட வியர்வைத் துளிகளின் சூட்டை, ஒரு சில் காற்றின் ஈரத்தோடு என் கண்கள் நனைத்து நின்றன. தூண்டில் கண், ஜப்பான் மூக்கு, தொங்கட்டான் காது, இரண்டடுக்கு ஆரஞ்சு சுளையின் இதழ்கள் கொண்ட சற்றே பெரிய நெற்றியில் சிறிய பொட்டு கொண்ட வட்ட முகம். ஜப்பான்காரியாவதற்கு முந்தைய நிமிடத்தில் நின்று விட்ட தமிழ் முகம்.

    வலது பக்க மேல் பெர்த்தில் நான். தம்பி தன் இடத்தை எனக்கு விட்டுக் கொடுத்து அவன் கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டான். எனக்கு நேராக எதிர் பெர்த்தில் என் நண்பன் படுத்ததும் தூங்கி விட்டான். அவனுக்கு கீழே ஒரு ஹிந்திக்காரன். அவன் பாடல் கேட்பதில் மூழ்கி விட்டான். அவனுக்கு கீழே அந்த தேவதையின் மொட்டைத்தலை அப்பா தூங்கியே விட்டார். எனக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பெரியவர். அவரைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. தேவதை பெர்த்துக்கு கீழ் இருந்த பெர்த்தில் ஒரு நடுத்தரம். கண்கள் இறுக மூடியேதான் புரண்டு கொண்டிருந்தது.

    தேவதை அவளின் முதல் வார்த்தையை, வாக்கியத்தை, சொற்றொடரை கவிதையாகவே கூறினாள். கவிதைக்கு கவிதைதானே வரும் என்று ஒரு சிறுவனைப் போல யோசித்தது கவிதைகளற்ற மனம்.

    “அந்த லைட்ட கொஞ்சம் அணைக்க முடியுமா?”!!!!!!. நான் கண்களால் அணைத்தேன். எனது நடுங்கிக் கொண்டிருக்கும் என் மனதுக்குள் அவளின் வார்த்தைகள் தேவையாய் இருந்ததை நான் உணர்ந்தபடியே லைட்டை நிஜமாகவே அணைத்தேன். கதவுப் பக்கமாகவே எங்கள் இருக்கை அமைந்து விட்டதால் அங்கு எரிந்து கொண்டிருந்த லைட்டின் வெளிச்சம் அவளுக்கும் எனக்கும் ஒரு ஒரு மெல்லிய கோடாய் ஒளிச் சிதறலை அவள் நிறத்திலேயே படற விட்டுக் கொண்டிருந்தது. அவள் கண்கள் இப்போது ஆழமாக மூடி இருந்தன. நான் வலது பக்கம் திரும்பி படுத்து தலைக்கு வலக்கையை அணைக் கொடுத்து அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒரு மயிலிறகாய் அவளின் சாந்த முகம் காந்தம் பரப்பிக் கொண்டிருந்தது.

    “இந்த மாதிரி தேவதைகளைக் காதலித்துக் கொண்டே இருக்கலாமோ”- என்று எனது மனம் கோபச் செழுமைக்குள் இருந்து அன்பின் வரட்சிக்குள் மிதக்கத் தொடங்கியது.

    நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன் ரயிலின் ஆட்டத்துக்கு அவளின் பூசின உடம்பு குலுங்கிக் கொண்டேயிருந்தது ஒரு சாவி கொடுத்த குழந்தை பொம்மையாக. எனக்கு காரணமே இல்லாமல் புன்னகை வந்தது, காரணமே இல்லாமல் கோபம் வந்ததைப் போல. விட்டு தூரம் சென்று ஓடி மறைந்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட பொழுதை இந்த ஜப்பான் முகம் மனதால் ஏந்திக் கொண்டதைப் போலவே உணர்ந்தேன். அந்த முகத்தில் அத்து மீறி நுழைந்த என் பார்வையை ஏதோ ஒரு பெண் மனத் தவிப்பின் உட்புறம் புரிந்து கொண்ட புள்ளியில் சட்டென்று கண் விழித்தாள். விழிக்கும் போதே அந்த பார்வையின் நீட்சி சரியாக என் கண்களை நோக்கியே சரிந்தது. அவள் கண்கள் என் கண்களில் படரும் நொடியில் தொடர்ச்சியாக நான் சட்டென என் கண்களை மூடிக் கொண்டேன் தூங்குவது போல. தூங்கிய விழிகளுக்குள் இரு பூமிப் பந்தாய் மனம் சுழன்றது. “இன்னும் பார்த்து கொண்டு இருப்பாளோ? பார்த்து விட்டாளோ? அயோ என்ன நினைப்பாள்?” என்று தேவையே இல்லாத கற்பனைகளை தொடர விட்டு மீண்டும் கண்களை மெல்லத் திறந்தேன், அவள் கண்கள் மூடி இருந்தன. ஒரு வட்ட தத்துவம் போல அல்லது ஜென் கவிதையின் ஜின் சிந்தனையைப் போல.

    ‘இத்தனை விதமாக தூங்க முடியுமா’ என்று அவள் ஆச்சரியப் பட வைத்தாள். திரும்பி படுத்தாள், தலைக்கு கையை அணைக் கொடுத்துப் படுத்தாள். கால்களை சற்று தூக்கி வைத்துக் கொண்டு படுத்தாள். ஒருக்களித்துப் படுத்தாள். கழுத்தை இப்பக்கம் அப்பக்கம் என்று ஒரு ஓவிய தொடரைப் போல அவள் மாறிக் கொண்டேயிருந்தாள். நான் மனம் முழுக்க அவளை நிரப்பத் தொடங்கினேன். ஹைகூவின் அடுத்த நிலை என்றே நம்பத் தொடங்கினேன். அலை அடித்து மூச்சுத் திண றிக் கொண்டிருந்த மனதுக்குள் பசுமையை சோலையைக் கொண்ட தீவு மடியென இருந்தது. அந்த அமைதியான சோதி முகம் வீணையடி நீ எனக்கு என்று பாரதி மீட்டிய தந்தியை நானும் மிதித்து, சிறு பிள்ளையாய் நொண்டி விளையாடினேன். கடைசியில் என்னைப் போலவே முதல் படுத்திருந்த நிலைக்கு வந்து விட்டிருந்தாள். அவளின் இடது தலைக்கு கை கொடுத்து முகம் என்னைப் பார்ப்பது போல வைத்திருத்தாள். அந்த ரயில் முழுக்க நாங்கள் இருவர் மட்டுமே என்பது போல ஒரு சிறுவனின் சிக்கு புக்கு ரயிலை நானே ஓட்டினேன்.

    மனதுக்குள் தடக் தடக்… நரம்புகளில் கரக் முறுக் …

    ட்ராக் மாறும் சத்தத்தில் தாமாக விழித்துக் கொள்ளும் கண்களின் தொடர்ச்சி அவளின் முகத்தை விரித்துக் கொண்டே போனது. மலர் வனக் காட்டுக்குள் ஒற்றைப் பூவென இம்முறை அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை, சட்டென்று விழித்தாள். ஆனால், நான் சட்டென்று மூடிக் கொள்ளவில்லை. மைக்ரோ நொடி இடைவெளியில் எங்கள் கண்கள் நன்றாக சந்தித்துக் கொண்ட பிறகுதான் நான் கண்களை மூடினேன். இளையராஜாவின் அசரீரி இசையோடு, “முகிலினங்கள் அலைகின்றதே, முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ”

    எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏதோ ஒரு காதல்காரன் “மெல்லினமே மெல்லினமே மெல்லிய காதல் பூக்கும்” பாடலை மிக மெதுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ என்று சத்தமாக என் கற்பனை பூரித்தது. கொலை செய்த தேவதைகளைக் கடந்த மன நிம்மதிக்குள் தூங்கும் தேவதை நிறங்கள் விதைத்தாள். புதுப் பொருள் தரும் சாந்தம் மீண்டும் விழித்தாள். மீண்டும் மூடினேன். மீண்டும் விழித்தாள். மீண்டும் மூடினேன். பார்வைகளின் சந்திப்புகளின் மைக்ரோ நொடி சற்றே நீண்டது, சற்றே பெரிய சிறுகதை போல. அப்படி பார்க்கும் நொடியெல்லாம் அர்த்தம் சொல்லும், அல்லது அர்த்தம் வெல்லும் பார்வையின் சப்தத்தை நான் உரிந்து கொண்டே இருந்தேன். ஒரு பசி எடுத்த காதல்காரனாய் என்னால் எழுத முடியாத கவிதையெல்லாம் அவளே வைத்திருக்கிறாளோ என்று கூட மனம் தடுமாறியது, தடுமாறினால்தான் அது மனம் என்பது போல.

    மீண்டும் ஒரு முறை ரயில் ட்ராக் மாற, சற்று வேகத்துடன் தட தடக்க நான் சட்டென்று விழித்தேன். அவளும் அதே நொடியில் அதே வேகத்தில் விழித்தாள். இம்முறை இருவருமே கண்களை மூடிக் கொள்ளவில்லை. நேருக்கு நேராய் கண்கள் நான்கும் கண நேரத்துக்கும் அதிகமாக பார்த்துக் கொண்டே பின் சட்டென மெல்ல புன்னகைத்து விட்டோம். நான் நன்றாகவே சத்தம் வராமல் வாய் திறந்து சிரித்து விட்டேன். அவள் புன்னகையோடு கண்களை சற்று பெரிதாக்கினாள். எனக்கு அதன் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தேய்ந்து கொண்டே போகும் சூரியனைப் போல சுட்டதும், பட்டு சுருங்கியது மனது. வெப்பச் சலனம் வியர்வைக்குள் ஒற்றை உருண்டையை முதுகின் நடு கோட்டில் இறக்கியது. அவள் திரும்பி படுத்து உடலை ஆங்காங்கே சரி செய்தபடியே மீண்டும் எனை நோக்கியே படுத்தாள். எதை நோக்கியோ நகர்ந்தது. எங்களின் ரயில் கடந்த பயணம் ரயில் இப்போது திருப்பூர் தாண்டி இருந்தது.

    “அய்யோ இன்னும் ஒரு மணி நேரத்தில் கோவை வந்து விடுமே என்ன பண்ண?” என்று மூளை பர பரத்தபடியே மெல்ல இதழ் சேர்த்து. சப்தம் எழாமல் “உன் பேர் என்ன?” என்று கேட்டேன். இப்போது மெல்ல தலையை சரித்து கீழே யாராவது, குறிப்பாக அவளின் அப்பா பார்க்கிறாரா? என்று பார்த்தேன் யாரும் பார்க்கவில்லை. குறிப்பாக அவளின் அப்பா பார்க்கவே இல்லை. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். உதடு சரித்து ஏதோ முணு முணுத்தாள்.

    ஒன்றும் புரியவில்லை மீண்டும் சொல்லுமாறு ஜாடை செய்தேன். மெல்ல, செல்ல கோபத்தோடு கொண்ட முறைத்தல் போல ஒரு புன்னகை கலந்து மீண்டும் உதடு சரித்தாள். வீ… என்பது போல பெயர் நீண்டதுஇப்போதும் புரியவில்லை. நான் காசு தொலைத்த சிறுவனாய் விழித்தேன். ஐயோ இத்தனை அழகா இருக்கா. குண்டு குண்டுன்னு மொழு மொழுன்னு பாக்கவே ஜப்பான் பொம்மை மாதிரிதான் இருக்கா. “பேசாம என் கூட வந்துரு”- என்று காமத்தின் திறவு கோலென, காதல் கன்னா பின்னாவென வலை வீசியது. கண்களின் குளத்தில் சிக்கிக் கொண்ட மனதுக்குள், ஆயிரம் மீன்கள் கவிதை ஆயிரம் காரணத்தோடு இல்லாமல் எழுதி தவித்தது.

    என் பெயர் கேட்டாள். நான் “விஜி.. விஜி…” என்றேன் அதே மெல்லிய வாய் மூடித் திறத்தலின் மொழியாக.

    அவளும் “வீ… என்ன வீ?”- என்றே கலவரப் பட்டாள். இருவருமே முகம் அறியா நிழலை விரட்டிக் கொண்டிருந்தோம். என் காயங்களுக்கு எல்லாம் அந்த ஒற்றை பார்வையும் அருகாமை ஜாடையுமே மருந்தாகி விட்ட மாயங்களில் நான் தூங்கும் தேவதையையே நினைக்கத் தொடங்கினேன். மற்றவை மறந்தே போனது. ரயில் கூட மறந்த கணங்களில் தான் வடகோவை வந்தே விட்டது. நண்பனும், தம்பியும் எழுந்து தங்களை தயார் செய்ய ஒவ்வொருவராக எழுந்து இறங்குவதற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு விழி அவள் மீதும் மறு விழி மற்றவர் மீதும் இருக்க, நானும் காலணிகளை அணிந்து, தலை சீவி,பேக் எடுத்துக் கொண்டு தவித்து நிற்க, அவளின் முழு விழியை அப்பாவின் மீதும் அதில் ஒரு துளி விழியை என் மீதும் வைத்துக் கொண்டே தயார் ஆகிக் கொண்டிருந்தாள் அவள். என் தோளுக்கு நிற்கும் அளவான உயரம் சற்று கணத்த உடம்பு. காந்த உதடுகளின் வாயிலாக, அளவான கண்களின் மொழியாக, முகம் தைத்து பார்வையை மாற்றிக் கொண்டேயிருந்தாள். சட்டென காலியான கனவாய் நான் மீண்டும் தவித்து தடுமாறி தேவதைத் தூக்கத்துக்கு சாமரம் வீசிக் கொண்டே ரயிலை விட்டு இறங்கி நடை பாதையில் நடக்கத் துவங்க, எனைக் கடந்து முன்னேறிய அவளின் கை என் கைக்குள் வேகமாக எதையோ திணித்து. மறு கணத்தில் பிரிந்து போனது. நான் குனிந்து கையை விலக்காமலே பார்த்து விட்டு சுயயோசனை வந்து நிமிர, அவள் கூட்டத்தில் கரைந்து காணாமல் போயிருந்தாள். மெல்ல கையை தளர்த்தி விரித்தேன். ஒரு பஸ் டிக்கெட்டில் 8148476 அலைபேசி எண்அவளைப் போலவே குண்டு குண்டாய் உருண்டிருந்தது.

    இரவுதான் பேச வேண்டும்.

    எல்லா தேவதைகளும் ஏமாற்றுவதில்லை. உடல் வலியோடு திரும்பி படுக்கிறேன். எதிரே அவள் படுத்திருப்பது போலவே ஒரு வெற்றிட வெளி நிரம்புகிறது என் அறையெங்கும். அது தேவதைகளின் அன்பை மட்டுமே வடிகட்டி விடும் நம்பிக்கையின் பிடிமானம்.

    Share