-கவிஜி 

அவள்கள் எனது
பார்வையாக, பாதையாக
இருந்தார்கள்…
எங்கெல்லாம் இல்லாமல்
போகிறேனோ….அங்கு
அவள்கள் என்னைக்
கண்டு கொண்டார்கள்…!

இலை மறந்த
நிலை சிறந்தது…
மரத்தடிப் பிள்ளையாரிடம்
என்விரல் கோத்து வேண்டிக்
கொண்டார்கள்…!

ஒயிலாட்டம் மயிலாட்டம்
மஞ்சள் நீராட்டு
ரெக்கார்ட் டான்ஸ்
என எதிலும் நானிருக்க
எனைச் சுமந்தார்கள்
அவர்கள் விழியில்…!

முத்தமிட்டார்கள்…
கட்டிக் கொண்டார்கள்…
அவர்கள்…கலையில்…!

இருக்கும் நான்கு
டாக்கீஸ்களில்
அவள்களோடு
படங்களான நாட்களில்
மிதிவண்டிப் பயணம்
பஞ்சு மிட்டாய் ஆனது…!

காட்சிகளை மாற்றிக்
கொண்டே வந்த நான்
இன்றும் இல்லாமல்
போகிறேன்…
இருந்தும் அவள்கள்
இருக்கிறார்கள்
அவள்களாய் இன்றி,
வேறு வேறு ஆடைகளில்…!

நான் ஒரு
தலைமுறை
வயதில் திகைத்து நிற்க,
அவள்கள் மட்டும் அதே
வயதில், ததும்பிக் கொண்டு
நிற்கிறார்கள்…!

அவள்கள்
எனக்கானவர்கள்
எப்போதும்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *