கூந்தல் குடை!
-கவிஜி
உன் குடைக்குள்
நுழைந்துகொண்ட
பின்மதிய மழை நாளில்தான்
உன் கூந்தல் குடையானது…!
நீ தவறவிட்ட
கைக்குட்டையில் திடீர்த் தொலைதல்
திருப்பங்களென
விரல் நீட்டுகிறது என் வழிகள்…!
நொடிக்கொருதரம் புன்னகைக்கும்
இதழோரம்
குவிந்து விரியும்
மச்சத்தின் வண்ணத்தில்தான்
பீறிடுகிறது என் நிகழுதல்…!
நீ விரும்பிப் படித்த
புத்தகத்தைப் படிக்காமலே
எடுத்தெடுத்துப் பார்ப்பதில்
நாளுக்கு நாள் அதிகமாகிறது
பக்கங்கள்…!
ஓரப்பார்வைக்குச் சற்று
அதிகமென நீ சொல்லும்
மொழியினூடே,
பரவசம்
என்பதில் கடவுள் வந்துபோகும்
அத்தனையிலும்
உனது புகைப்படமாகிறேன்
நான்…!