Tag: நிர்மலா ராகவன்

  • நலம் .. நலமறிய ஆவல் (56)

    நிர்மலா ராகவன்

    என்னைப்போல் உண்டா!

    நலம்
    இரண்டே வயதான குழந்தை அவள். எந்த ஒரு புதிய உடையையோ, சட்டையையோ அணிந்தபின், ஓடிப்போய் கண்ணாடிமுன் நின்று அழகு பார்த்துக்கொள்வாள்.

    இன்னொரு குழந்தை, ஒரு முறை தலைமயிரை வெட்டிக்கொண்டு வந்ததும், `அழகா இருக்கியே!’ என்று எல்லாரும் பாராட்ட, தினசரி தானே வெட்டிக்கொள்ள ஆரம்பித்தாள்! வீட்டிலிருந்த கத்தரிக்கோல்கள் எல்லாவற்றையும் ஒளித்துவைக்க நேர்ந்தது!

    பண்டைக்காலத்தில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த நார்சீஸஸ் (Narcissus) என்பவன் நீரில் தெரிந்த தனது பிம்பத்தைக் கண்டு சொக்கிப்போய், நகராது அதையே பார்த்துக்கொண்டு இருந்தானாம். நாளடைவில், ஒரு மலராகி விட்டானாம்! இது காதில் பூசுற்றும் வேலையோ, என்னவோ, ஒரு பூவிற்கு இன்றளவும் அவன் பெயர்தான்.

    சிறுகுழந்தை, `உலகமே தன்னைச்சுற்றித்தான் இயங்குகிறது!’ என்பதுபோல் நடந்துகொள்வது இயற்கை. வளர்ந்த பின்னரும் அப்படியே இருப்பவர்களுக்கு நார்சீஸிஸம் (Narcissism) என்ற தன்மை இருப்பதாகப் பெயர். இது அளவுக்கு மீறினால், ஒருவித மனநோயாகிறது.

    `நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று கடவுளைப்போல் தன்னை நினைக்கும் ஒருவன், `நான் செய்வதெல்லாம் சரிதான்!’ என்று அலட்டிக்கொண்டு, அவன் சொல்லிலோ, செயலிலோ குற்றம் கண்டுபிடிப்பவர்களை எதிரியாகப் பாவித்து நடத்துவது நார்சீஸிஸம்.

    அளவுக்கு அதிகமான சுயநலம், தன் திறமைகளையும் அழகையும் தானே மெச்சி, `என்னைப்போல் உண்டா!’ என்ற பெருமிதம் கொள்வது, பிறரது பாராட்டுக்காக ஏங்குவது போன்ற குணங்கள் நார்சீஸிஸத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.

    எதற்குப் பிறர் மெச்சுவதுபோல், பிறரைப்போல் இருக்க வேண்டும்? நாம் நாமாகவே இருந்தால் நிறையச் சாதிக்கலாமே!

    இது புரிந்து, `என்னால் முடியும்!’ என்று தன் திறமையின் எல்லையை உணர்ந்து, நம்பிக்கையுடன் ஒரு காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பது தன்னம்பிக்கை.

    தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிகள்: நம்மை பயப்பட வைக்கும் (நல்ல) காரியம் ஒன்றைச் செய்து முடிக்க வேண்டும்.

    நம் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு. நாம் நம்மையே தாழ்வாக நினைக்கும்போதுதான் பொறாமை பிறக்கிறது.

    நார்சீஸிஸம் ஏன் வருகிறது?

    தமக்கு என்ன வதை நேர்ந்தாலும், அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளத் தெரியாது சிறுவர்களுக்கு. ஆனால், அதை மறக்க முடியாது, அல்லது ஏதாவது சிகிச்சையால் அதை ஏற்கும் திறனையும் பெறாது, பெரியவர்களான பின்னரும் அதன் பாதிப்புடன் இருப்பார்கள் ஒரு சிலர்.

    அப்படிப்பட்ட ஒருவரின் கதையைப் பார்ப்போமா?

    சீராகச் செயல்படாத குடும்பம் அது. மிகுந்த கோபக்காரரான தந்தை மனைவியுடன் அவள் பெற்ற குழந்தைகளையும் உடல் வதைக்கு ஆளாக்கினார். பணத்தட்டுப்பாடு வேறு. சகோதர சகோதரிகளுக்குள் மட்டும் எப்படி ஒற்றுமை ஏற்படும்? இல்லை, கல்வியில்தான் மனம் போகும்? குடும்பத்தில் எல்லாருக்கும் சொல்ல முடியாத அவமானம் மற்றும் தாழ்மை உணர்ச்சி.

    சிறு பிராயத்துத் தேவைகள் மாறாமலே வளர்ந்த அந்த ஒருவன் தன் தேவைக்காகத்தான் பிறர் இருக்கிறார்கள் என்பதுபோல் பிறரை நடத்தினான். தான் சொல்வதைக் கேட்காவிட்டால் அளவுகடந்த ஆத்திரம் எழும். தன் குறைபாடுகளை ஏற்கத் துணியாது, பிறரது குற்றங்களையே கவனிப்பான். `நான் ஏதோ விதத்தில் தாழ்ந்தவன்!’ என்று உள்ளுணர்வு உறுத்திக்கொண்டே இருக்க, தெரிந்தவர், தெரியாதவரை எல்லாம் மட்டம் தட்டி, அதனால் தான் ஓரளவு உயர்ந்துவிட்டதாக மனப்பால் குடித்தான்.

    முன்பின் தெரியாதவர்களுடன் அலட்டலாகச் சிரித்துப் பேசி, பலரது நட்பைப் பெற்றுவிட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்கள் இவனைப் போன்றவர்கள். ஆனால், தம் குடும்பத்தாருடன் இணக்கமாக நடக்க மட்டும் தெரியாது. பிறருக்கு உரிய அன்பையும் மரியாதையையும் அளிக்கத் தவறிவிடுவதால், காலப்போக்கில் பிறரது மரியாதையை இழந்துவிடுகிறார்கள்.

    இதெல்லாம் பயத்தால் ஏற்படுவது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

    என்ன பயம்?

    பிறர் நம் தோற்றம், செயல்களை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற பயம் இத்தகையவர்களிடம் நிலைத்திருக்கும். ஆகையால், பிறர் பாராட்டுவார்கள் என்று உறுதியாக நம்புவதைத்தான் வெளிக்காட்டுவார்கள். இதற்காகவே பிறருக்காக நிறைய நேரத்தைச் செலவிடுவார்கள். இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர்களுக்கு ஆரம்பத்தில் நிறைய நண்பர்கள் வாய்ப்பதில் ஆச்சரியமில்லை.

    இக்குணம் கொண்ட ஒருவன் கையாளும் பொதுவான சில முறைகள்

    தான் செய்த தவறுக்குப் பிறரைக் காரணம் காட்டுவான்.

    எந்த ஒரு சிறு விஷயத்திற்கும் அநாவசியமான பொய்.

    உதாரணம்: நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டு, நுழைவுச்சீட்டு கிடைக்காது திரும்பியதும், `உன்னை விட்டுப்போக மனமில்லை. அதனால் திரும்பிவிட்டேன்!’ என்று கூசாமல் மனைவியிடம் கூறி, அவளுடைய நல்லெண்ணத்தைப் பெற முயற்சிப்பது.

    மிரட்டல். (`யாருமே நான் சொல்வதைக் கேட்பதில்லை. நான் இருந்து என்ன பயன்? தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்!’)

    கொடுமைப்படுத்துதல்.

    `உன் மனசில யாரோ இருக்கான்!’ என்று, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், மனைவியைச் சாடுவது. மனைவியை உடல் மற்றும் உணர்ச்சிபூர்வமான வதைக்கு உட்படுத்திவிட்டு, `தப்பு செய்தது நீதானே? நான் உன்னை இப்படி நடத்துவது சரிதானே?’ என்று குற்ற உணர்ச்சியை அவளுக்கே திருப்புவது.

    பிறர் சொல்லில், செயலில் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பது.

    பொய்யான வாக்குறுதிகள். (`உன்னைத் தங்கத்தாலேயே இழைக்கப்போகிறேன்!’ `நாம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போகலாமா?’)

    மேற்கண்ட எதுவும் பலிக்காவிட்டால், முகத்தைத் தூக்கிக்கொண்டு, மௌனமாக நாட்களைக் கடத்தல். இது கெஞ்சலில் முடியும்.

    இப்படிப்பட்டவர்களை எப்படித்தான் சமாளிப்பது?

    `நான் ரொம்ப கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்!’ என்று பரிதாபகரமாக ஒரு இளைஞன் கூறும்போது எந்தப் பெண்ணின் மனமும் உருகிவிடாதா! ஆனாலும், திருமணத்துக்குமுன் ஒருவன் இக்குணங்களை வெளிப்படுத்தினால், அவனைவிட்டு விலகுவதுதான் புத்திசாலித்தனம்.

    திருமணமானதும் சில பெண்கள், `உணர்ச்சிபூர்வமான வதை’ என்று விவாகரத்து கோருகிறார்கள்.

    பொறுத்துப்போகவேண்டிய கட்டாயம் இருப்பவர்கள், தான் எந்தத் தவறும் செய்யவில்லை, கணவருக்குத்தான் மனநிலை சரியில்லை என்று புரிந்து, அவர் வாயிலிருந்து வெளிப்படும் கடும் சொற்களுக்கு மதிப்பளிக்காது, தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்டால், ஓரளவு அமைதி பெறலாம்.

    நார்சீஸிஸம் பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் இருக்கிறதாம். குற்றவாளி: அவர்களுடைய ஹார்மோன்.

    தகுதி இல்லாவிட்டாலும் எத்துறையிலாவது பிரபலமாக விழைபவர்கள், நடிப்புத்துறையில் ஈடுபடும் ஆசை இருப்பவர்கள் அல்லது ஈடுபட்டிருப்பவர்களில் பலரும் நார்சீஸஸத்தால் பாதிக்கப்பட்டவர்களாம். (நடிகைகள் சிலர் தொலைகாட்சியில் பேட்டி அளிக்கும்போது தம் நீண்ட (போலி) முடியை மார்பில் விட்டுக்கொண்டு, அடிக்கடி அதைத் தடவுவது இதனால் இருக்குமோ?)

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (55)

    நிர்மலா ராகவன்

    நலம்-1-1-1-1-1

    வாழ்க்கை எனும் பாதை

    திருமணமான பத்து வருடங்களில் மகிழ்ச்சியாக இருந்ததாகவே ரத்னாவிற்கு நினைவில்லை.

    சர்வாதிகாரியான மாமனார், `இது என் ராஜ்யம்!’ என்பதுபோல் அவளை சமையலறைப்பக்கமே விடாத மாமியார், வாயில்லாப்பூச்சியான கணவன் — இவர்களைப் பொறுத்துப் போக வேண்டிய கடமை.

    தனிக்குடித்தனம் போகலாம் என்றாலோ, `பெரியவர்களை விட்டுவிட்டு உனக்கென்னடி வாழ்வு!’ என்று பிறந்தவீட்டினர் பழிப்பார்களே என்ற தீராத பயம்.
    தன் விருப்பப்படி எதுவும் செய்ய முடியாது, தலையாட்டி பொம்மையாக இருந்த நிலையில், தன் பொறுமையைத் தானே பாராட்டிக்கொண்டு இருக்கதான் முடிந்தது ரத்னாவால்.

    கிட்டத்தட்ட ரத்னாவைப்போன்ற மணவாழ்க்கைதான் வாணிக்கும் அமைந்தது. `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று பயந்து பயந்தே பொறுத்துப்போனால் உடலுடன் மனநிலையும் கெடும் அபாயம் இருப்பதை உணர்ந்தாள்.

    தாயின் ஏச்சுப்பேச்சுகளை எதிர்பேச்சின்றி பொறுத்துப்போன சாதுவான கணவரை எப்படி நல்வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்தாள். ஓர் உபாயம்தான் தென்பட்டது. தொலைவில் ஒரு உத்தியோகம் தேடிக்கொண்டு, அதைச் சாக்காக வைத்து தனிக்குடித்தனம் போனாள்.

    `நீங்கள்தானே இந்தக் குடும்பத்தின் தலைவர்!’ என்று அவள் அடிக்கடி கூற, கணவரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தார். தன் நன்றியைக் காட்டும் விதமாக மனைவியின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டினார்.

    “ஹூம்! சில பேருக்கு வாழ்க்கை இப்படி அமைஞ்சுடறது!” வாணியைப் பார்த்துப் பொருமினாள் ரத்னா.

    `பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்று அஞ்சியே தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள எந்தவித முயற்சியும் எடுக்காதவள் அவள். தான் இப்படி வாழ்க்கையுடன் போராடும்போது எந்த உறவினரும் தன்னுடன் சேர்ந்து துயரப்படவில்லையே என்ற வருத்தம்தான் அவளுக்கு மிஞ்சியது.

    வாழ்க்கைப்பாதையைக் கடந்துதான் ஆகவேண்டும் — அது எவ்வளவு நிரடலாக இருந்தாலும்.

    `எப்படி நம் வாழ்க்கைப் பாதையை மாற்றலாம் என்று புரியவில்லையே!’ என்று குழம்புகிறவர்களுக்கு சீனத் தத்துவ ஞானி ஒருவர் என்றோ அறிவுரை கூறி வைத்திருக்கிறார்: `ஆயிரம் மைல்களைக் கடக்க வேண்டுமானாலும் ஒவ்வொரு அடியாகத்தான் நடக்க வேண்டும்!’ மாறுதலே இல்லாது ஒரே இடத்தில் நிற்க மனிதன் என்ன, தாவரமா!

    புதிய பாதையா, ஐயோ!

    புதிதான பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அச்சமாகத்தான் இருக்கும். நிறைய வலிகளையும் சந்திக்க நேரிடலாம். இதற்கெல்லாம் பயந்தே பலரும் எவ்வளவு கடினமான வாழ்க்கையையும் மாற்றத் துணியாது, `என் தலைவிதி அவ்வளவுதான்!’ என்று பேசியே காலத்தைக் கடத்துகின்றனர். ஆனால், அது ஆறுதல் அளிக்குமா?

    கடந்த காலத் துயரைப்பற்றிப் பேசினால், அது நடந்தபோது இருந்த அதே பாதிப்பை ஏற்படுத்தி, ஒருவரை பலகீனராக ஆக்கும்.

    இன்றைய பயணம் செம்மையாக இருக்க வேண்டுமானால் நேற்றைய பயணத்தையே நினைத்து வருந்திக்கொண்டிருப்பது சரியல்ல. அதிலிருந்து ஏதாவது கற்க முடிந்தால் அப்பாடத்தை மட்டும் கற்றுக்கொண்டு, விட்டுவிட வேண்டியதுதான். நடந்து முடிந்தவைகளை மாற்றவா முடியும்!

    பலர் தமக்குப் பிடித்ததை செய்ய முயன்று, ஆரம்பித்தில் தோல்வியோ, அல்லது கேலியோ எதிர்ப்பட்டால் செய்ய முயன்றதை அரைகுறையாக விட்டுவிடுவார்கள். அப்படி நாம் வெற்றி காண்பதைப் பொறுக்காதவர்களை அலட்சியம் செய்ய வேண்டியதுதான்.

    கதை

    சுமார் இருபது வயதாக இருந்தபோது, எனக்கு எழுத்துலகில் பத்து வருட அனுபவம். பிரமிக்க வேண்டாம். எதையும் பிரசுரத்திற்கு அனுப்பியதில்லை. என் படைப்புகளின் தரக்குறைவு எனக்கே தெரிந்திருந்ததுதான் காரணம். `உருப்படியாக ஏதாவது செய்யேன்!’ என்று தாய் கெஞ்சினார். (திட்டினாலோ, மிரட்டினாலோ நான் மசியமாட்டேன் என்று அவர் அறிந்ததுதானே!) `இவள் ஒரு போர்!’ என்று பழித்தார்கள் பிறர். நானோ ஓயாமல் படிப்பேன், இல்லையேல் எழுதுவேன்.

    நான் தொடர்ச்சியாக கதைகள் எழுத ஆரம்பித்ததும், புதிய விஷயங்களைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்ததது. புதிய இடங்களுக்குப் பயணித்தேன். நிறையத் திண்டாட்டம். இருந்தாலும், வாழ்க்கையைப்பற்றி சிறிது புரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பலவிதப் புத்தகங்களைப் படித்தேன். பலரைப் பேட்டி கண்டேன். அவர்களுள் நோய் முற்றிய நிலையிருந்த பெருநோயாளிகள், வீட்டைவிட்டு ஓடி வந்த இளம்பெண்கள், குண்டர் கும்பலிலிருந்து விலகிய இளைஞர்கள், உடல்வதைக்கு ஆளான மனைவிகள் என்று பலதரப்பட்டவர்களும் அடக்கம்.

    இதையெல்லாம் விரிவாக ஒரு உரையின்போது கூற, “எழுத நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்க!” என்று வியந்தார் ஒருவர்.

    கஷ்டமா! நான் அவைகளை அனுபவம் என்றுதான் எடுத்துக்கொண்டேன்.

    விஷயங்களைத் தேடுவதே சுவாரசியமாக இருந்தது. என்று, எவ்வாறு எழுதப்போகிறோம் என்றெல்லாம் அப்போது யோசிக்கத் தோன்றவில்லை. மனிதர்களையும் வெவ்வேறு விதமான வாழ்க்கையையும் புரிந்துகொள்வதே கலக்கத்தையும் வியப்பையும் ஒருங்கே உண்டாக்கியது.

    வெற்றி காண நீண்ட பயணம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

    எழுத ஆரம்பித்த காலத்தில், என்னைப் பரிகசித்து, என் நம்பிக்கையைக் குலைக்க சிலர் முயன்றவர்களுக்கு நான் பயணிக்க விரும்பிய பாதையைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்.

    அன்று பிறரது பரிகசிப்பு என்னைத் துளியும் பாதிக்கவில்லை. சவாலாக எடுத்துக்கொண்டேன். இப்போது புகழ்ச்சியும் என்னைப் பாதிக்க விடுவதில்லை.

    கற்பனையும் நிதரிசனமும்

    `நம் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என்று தீர்மானித்துக்கொண்டால் அது நடக்கிற சமாசாரமா?

    இளைஞர்கள் திரைப்படங்களிலும் புதினங்களிலும் வரும் காதல் மற்றும் மணவாழ்க்கையைப் பார்த்துவிட்டு, சொந்த வாழ்க்கையிலும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

    வெளிநாடு போய் சம்பாதித்தால், லட்சாதிபதியாக சொந்தநாடு திரும்பலாம் என்று மனப்பால் குடிக்கும் தொழிலாளிகளுக்கும் இதே நிலைதான்.

    உற்றவர்களைவிட்டுத் தனிமையுடன் போராடியபடி வாழவேண்டிய கட்டாயம், நினைத்தபடி பணம் சேமிக்க இயலவில்லையே என்ற ஏமாற்றம் — இப்படி அவர்கள் எதிர்பாராத பல தோல்விகள். இவற்றைப் பெரிதாக எண்ணாது, கருமத்திலேயே கண்ணாக இருப்பவர்கள்தாம் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

    கதை

    கோலாலம்பூரில் சாப்பாட்டுக்கடை ஒன்றில் பரிசாரகராகப் பணியாற்ற பங்களாதேஷி ஒருவர் வந்திருந்தார். தன் நாட்டில் புதுமனைவியை விட்டு வந்திருந்ததாக என்னிடம் தெரிவித்தார். ஒரு வருடம் கழித்து, தனக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாகச் சொன்னவர், என்னுடன் வந்திருந்த என் பேரனுக்கும் அதே நான்கு மாதங்கள்தாம் என்று கேட்டு, `நான் தூக்கிக்கொள்கிறேனே!’ என்று கெஞ்சலாகக் கேட்டார்.

    குழந்தையுடன் உள்ளே போனவர் விசித்து விசித்து அழுவதைப் பார்த்தோம். பரிதாபமாக இருந்தது. குழந்தையின் கையில் ஐந்து ரிங்கிட் நோட்டைத் திணித்திருந்தார்! அவருக்கு அது பெரிய தொகை. தடுத்துப்பார்த்தோம். `ஏன்?’ என்றவருக்குத் திரும்ப அழுகை வந்துவிட்டது. அதற்கு மேலும் மறுத்துப் பேச முடியவில்லை.

    அண்மையில், அவருடைய பிள்ளைகள் பெரிய படிப்பு படிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவருடைய உண்மையான உழைப்பால் மற்ற ஆட்களுக்கு மேலதிகாரியாக ஆகியிருந்தார். `இது ஃப்ரீ!’ என்று என் பேரனுக்குப் பிரத்தியேகமாக குலாப்ஜாமூன் கொண்டு வைக்கும் அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் அளித்திருந்தார்கள்.

    சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று, நட்சத்திர ஹோட்டல் திறக்குமளவுக்கு அவரிடம் சொத்து சேராதிருக்கலாம். ஆனால், `வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தானே செய்யும்!’ என்று புரிந்து, கடினமான வாழ்க்கையால் மனம் தளராது, அதை அனுபவித்து ஏற்று, வெற்றி கண்டவர் அவர்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (54)

    நிர்மலா ராகவன்

    தலைமைத்துவமும் பணிவும்

    நலம்-1-1-1-1
    ஒரு சிற்றூரிலிருந்து மேற்பயிற்சிக்கு வந்திருந்த ஓர் ஆசிரியை, “பிரபலமாக இருப்பவர்களெல்லாம் கர்விகளாக இருக்கிறார்கள்!” மூக்கைச் சுளித்தபடி கூறினாள்.
    தான் எதிலும் புகழ் பெறும் தகுதியற்றவள் என்று அவள் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொண்டதுதான் அவளைப்போல் இல்லாத பிறரைப் பழிக்கக் காரணமாக இருந்திருக்குமோ?

    ஒரு சிறுகதைப் போட்டியில், முதல் பரிசு தாராவிற்குத்தான். அதை வெளிப்படையாகச் சொன்னால், தன்னைக் கர்வி என்று நினைத்துவிடுவார்களோ என்று `அடக்கத்துடன்’ என்னிடம் கூறினாள்: “என் ஃப்ரெண்டுக்குப் பரிசு கிடைச்சிருக்கு. அவங்க சார்பில வாங்கிட்டுப் போக என்னை அனுப்பினாங்க!”

    இப்பெண்களுக்கு தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.

    எது பணிவு?

    பிறருக்குமுன் கூனிக்குறுகி நடப்பதும், தன்னைத்தானே மட்டம் தட்டிக்கொள்வதும்தான் பணிவின் அறிகுறியா?

    தனக்குமுன் பிறர் அப்படி நடப்பது தன் பராக்கிரமத்தை உயர்த்திவிடுகிறது என்று தப்புக்கணக்குப் போடுகிறவர்கள்தாம் — தகுதி இல்லாவிட்டாலும் — பதவிக்கு அலைகிறார்கள்.

    செய்வதெல்லாம் சரி!

    பதவி வந்ததும், தாம் தப்பே செய்ய முடியாது என்ற இறுமாப்பு. அவர்கள் சொல்வதையோ, செய்வதையோ, `தவறு’ என்று சுட்டிக் காட்டுகிறவர்கள் பகைவர்களாக ஆகிறார்கள்.

    அண்மையில், இம்மாதிரியான ஒரு தலைவரிடம் நான் அவரது குறைகளை எடுத்துச் சொன்னேன்.

    எவ்வித தடங்கல் எழுந்தாலும் சிறிதும் மனம் தளராது, நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பவர் அவர். இருந்தாலும், அதிகாரம் கைக்கு வந்ததும், தன் கீழ் இருப்பவர்களிடம் அவர்களது வாழ்க்கைப் பின்னணிக்கேற்ப பழகுவது எப்படி, எவ்வித பொறுப்புகளை அவர்களிடம் கொடுக்கலாம் என்பதை அறிந்திருக்கவில்லை.

    வெற்றி கண்டுவிட்டவர்கள் எந்த வினாடியும் கீழே விழலாம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள்.

    பலருடன் பகைமை ஏற்பட்டுவிட, தளர்ந்தவராக என்னுடன் தொடர்பு கொண்டார்.

    நமக்குக் கீழே பலர் இருக்கிறார்கள். அவர்களை நம் தரத்துக்கு உயர்த்த முயன்று, நம்மைவிட மேலேயும் சிலர் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு அவர்களை மதித்து நடந்தால்தான் ஒருவர் வெற்றிப்படியின் மேலே, மேலே நடக்க இயலும்.

    “ஆதாயம் கிடைக்குமென்று நம்பி, `ஆமாம் சாமி’ போட்டவர்களை நம்பினீர்கள். ஒருவரைப்பற்றி இன்னொருத்தர் கோள் மூட்டினால், யார் பக்கம் நியாயம் என்று விசாரிக்காமல் ஆத்திரப்பட்டுத் தண்டித்தீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் சிலரைத் தூக்கிவைத்துப் பேசி, பாரபட்சம் காட்டினீர்கள்,” என்று, ஒரு தலைவருக்கு இருக்கக்கூடாத அவருடைய குணங்களை உரையாடலுக்கு ஊடே, ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினேன்.

    நான் எந்த அணியையும் சேராமல் தனித்தே இருந்ததால், என்னை அவருக்கும், அவரை அண்டியவர்களுக்கும் புரியவில்லை. அதனாலேயே அச்சம். எனக்குப் பின்னால் ஏதேதோ பேசினார்கள்.

    நெடுநேரம் மௌனமாக இருந்துவிட்டு, “பத்து வருஷத்துக்கு முந்தி நீங்க என்னைத் தனியாக் கூப்பிட்டு இதையெல்லாம் சொல்லியிருந்தா, நான் எத்தனையோ பேரோட பகைக்கு ஆளாகி இருக்கமாட்டேன்!” என்றார். உண்மையான வருத்தம்போல்தான் தோன்றியது.

    நொந்தவாறு, இதையே பல முறை கூறியபோது, “அப்போது அதைக் கேட்டிருக்க மாட்டீர்கள். `இவ யார் எனக்குப் புத்தி சொல்ல?’ன்னு ஆத்திரம்தான் வந்திருக்கும்!” என்றேன் லேசாகச் சிரித்தபடி.

    எளிமையும் பணிவும் இருந்தால் — தலைமைப் பதவியை விடுங்கள் — வாழ்வில் எவ்வித இடரையும் சமாளிக்கும் நெஞ்சுரம் வந்துவிடும்.

    `நான்தான் பெரியவன்!’ என்ற ஆணவத்துடன் ஒவ்வொருவரும் சுயலாபத்தையே நாடினால், எந்த நற்காரியமும் நிலைத்து இருக்க முடியாது.

    எனக்கு எல்லாம் தெரியும்

    பணிவு என்பது தன்னம்பிக்கையின் மறுபக்கம். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிச்சல்.

    ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது, எங்கள் விரிவுரையாளர் ஒரு கேள்வியைத் தொடுத்தார்: “ஒரு மாணவன் கேட்கும் கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்?”

    பலரும், “ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவோம்,” என்றார்.

    என் முறை வந்தபோது, “எனக்குத் தெரியாது என்று உண்மையை ஒப்புக்கொள்வேன்,” என்றேன், உறுதியாக.

    “அப்போது உங்களை `முட்டாள்’ என்று அவர்கள் நினைக்க இடம்கொடுத்து விடுகிறீர்களே?” என்று கேலியாகக் கேட்டார்.

    “எப்போதும் அப்படிச் சொல்லப் போவதில்லையே! அத்துடன், அதற்கான பதிலை அறிந்துகொண்டு வந்து சொல்வேன்!” என்றேன்.

    விரிவுரையாளர், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்று வியந்து பாராட்டினார்.

    சிலருக்கு செய்த தவற்றைப் பணிவுடன் ஒத்துக்கொண்டால், கௌரவக்குறைவு.

    `நீங்கள் கூறுவது சரி,’ என்றால், மற்றவர் தன்னைவிட உயர்வு என்றாகிவிடுமோ என்ற பயம். ஏதேதோ சொல்லி, தம் தவற்றைச் சரியென்று சாதிப்பார்கள். குறை கூறியவர்களைப் பழிக்கவும், பழிவாங்கவும் தயங்கமாட்டார்கள்.

    இவர்களைப் போன்றவர்கள் மேல் நிலையை அடைந்தாலும், அது நீடிக்காது.

    சில சந்தர்ப்பங்களில், `எனக்குத் தெரியாது!’ என்று உண்மையை ஒப்புக்கொண்டால்தான் பிறர் நமக்களிக்கும் மரியாதை நிலைக்கும்.

    கதை

    என்னுடன் வேலை பார்த்த ஆசிரியை மிஸஸ். டானுக்கு விஞ்ஞானம் பிடிக்காது. வரவும் வராது. ஆனால், அதுதான் மதிப்பு என்று அவளுடைய தந்தை அப்பாடத்தை அவள் எடுத்துக்கொள்ளச் சொன்னாராம். (மனக்குறையுடன், என்னிடம் அவள் சொன்ன தகவல்).

    பௌதிகம், உயிரியல், வேதியியல் மூன்றும் மிஸஸ். டான் கற்பிக்க ஏற்பாடாகி இருந்தது. அவள் மாணவிகளுக்கு ஒரு பௌதிகக் கணக்கைச் சொல்லிக்கொடுக்க முயன்று, விடை சரியாக வராததால், `கேள்வியே தப்பு!’என்று கூறிவிட்டாள்.

    பல மாணவிகள் ஒவ்வொருவராக என்னிடம் வந்து கேட்டார்கள். (நான் அப்பாடத்தின் மூத்த ஆசிரியை என்று பெயர்).

    முதல் ஆண்டே பதினோரு வகுப்புகளுக்கு அதையே கற்பிக்க வேண்டிய நிலையில், `எப்படியோ அடிச்சு விடலாம்!’ என்று என்னால் இருக்க முடியவில்லை. ஒரே பாடத்தைக் கற்பிக்க பல புத்தகங்களைப் படித்தேன். லேசாகப் புரிந்தது. மாணவர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்க, இன்னும் அதிகமாகப் புரிந்தது.

    இப்போது அக்கணக்கை எப்படிப் போடுவது என்று விளக்கினேன். “மிஸஸ்.டான்..,” என்று அவர்கள் ஆரம்பித்தார்கள்.

    அவர்களைத் தடுத்து, “நான் இப்படித்தான் போடுவேன்!” என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டேன்.

    `பணிவு’ என்பது நாம் முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேறி இருக்கிறோம், இன்னும் முன்னேற முடியும் என்பதை அறிவது.  நம்முடன் நாமே போட்டியிடுவது.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (53)

    நிர்மலா ராகவன்

    நலம்-1-1-1

    சுய விமரிசனம்

    அபய முத்திரை

    இந்துக்கோயில் சிலைகளில் இந்த முத்திரையைப் பார்த்திருப்பீர்கள். பக்கவாட்டில் இருக்கும் வலது உள்ளங்கை வெளியில் தெரிய, விரல்கள் மேல் நோக்கி அமைந்திருக்கும்.

    பயம் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் அபயம். அதாவது, `பயமின்றி இரு, உன்னைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன்!’ என்று ஒருவருக்கு உணர்த்தி, அவரை அமைதிப்படுத்துவது இந்த அபய முத்திரை. இதைக்கொண்டு புத்தர் ஒரு மதயானையைக் கட்டுப்படுத்தினாராம். எல்லா புத்தர் சிலைகளிலும் இம்முத்திரையைக் காணலாம். இடக்காலைத் தூக்கி ஆடும் நடராஜரின் வலது கரமும் இப்படித்தான் அமைந்திருக்கும்.

    அபய முத்திரையைக் காட்டி, நமக்கு நாமே நல்லது செய்துகொள்ளலாம்.

    எதற்காக என்கிறீர்களா?

    நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, தவறிழைத்துவிட்டு அதையே நினைத்துக்கொண்டு ஆரோக்கியத்தைப் பாழடித்துக்கொள்ளாமலிருக்க. நம்மை நாமே மன்னித்துக்கொள்ள.

    சுய விமரிசனம்

    பொழுதைப்போக்க உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் என்று பலரைப்பற்றியும் (வேண்டாத) விமரிசனங்கள் செய்வது பலரது பழக்கம். இதனால் தாம் பேசுவதிலும், செய்வதிலும் மற்றவர்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிப்பார்களோ என்ற பயம் எழுகிறது.

    எப்போதும் நம்மையே நாம் விமரிசித்துக்கொண்டு, நமது குறைபாடுகளை பறைசாற்றிக்கொண்டு இருக்க வேண்டுமா?

    நாம் செய்வது நமக்குச் சரி என்று பட்டால் போதாதா?

    குற்ற உணர்வு

    குற்ற உணர்வு சிறு பிள்ளைக்கும் உண்டு. அம்மாவுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்துவிட்டு, திருதிருவென குழந்தை முழிப்பது இதனால்தான்.

    `குழந்தை தெரியாமல் செய்துவிட்டது!’ என்று பெருந்தன்மையுடன் அதன் காரியத்தைப் பெரிதுபண்ணாது விட்டுவிட்டால், குழந்தை அநாவசிய பயமின்றி வளரும்.

    அதைவிட்டு, திட்டியோ, அடித்தோ, இன்னும் கூறப்போனால், `அவர்கள் வீட்டிலே நீ அழகான கண்ணாடி ஜாடியை உடைத்தாயே!’ என்று நீண்ட நாட்கள் அதையே சொல்லிக் காட்டிப் பழித்துக்கொண்டு இருந்தால் பெரியவர்கள் தம் பலம் பெருகிவிட்டதாக எண்ணலாம். ஆனால், நாளடைவில், தான் செய்வது எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் குறைவுள்ளது என்ற சிறுமை உணர்வு எழும். `நான் ஏனோ இப்படி இருக்கிறேனே!’ என்ற சுயபச்சாதாபமும் எழும்.

    பெற்றோர்கள் அன்பானவர்களாக இருந்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் குழந்தைகள் மனதில் நச்சை விதைத்துவிடுவார்கள். அண்மையில், ஒரு ஒன்பது வயதுச் சிறுவன் வகுப்பில் பேசினான் என்பதற்காக அவனுடைய ஆசிரியர் பிற மாணவர்களை அவனுடன் சேரக்கூடாது என்றாராம். அப்பையன் வாழ்க்கையை வெறுத்து, தற்கொலை முயற்சிவரை போய்விட்டான். இது நடந்தது மலேசியாவில். அவன் செய்தது அப்படி ஒன்றும் பழிக்கக்கூடிய காரியம் இல்லை, ஆசிரியர்தான் அதிகார பலத்தால் தவறிழைத்தவர் என்று புரியும் வயதாகவில்லை அவனுக்கு.

    உருவத்தில் கோளாறா?

    `குண்டு,’ `வழுக்கை’ என்றெல்லாம் பிறர் கேலி பேசும்போது சிரித்து வைத்தாலும், சிறுமை உணர்ச்சி எழுவதைத் தடுக்கமுடியுமா?

    அதை மறைக்க, தம்மைத்தானே கேலி செய்துகொள்வார்கள். இது தம்மையுமறியாது, பிறரை உயர்த்திப் பேசும் வழியும்கூட.

    பொதுவாக, எந்தக் குடும்பத்திலும் இரண்டாவது மகன் மூத்தவனைவிட உயரமாக இருப்பான். தங்கை அக்காளைவிட உயரமாக இருப்பாள். இதுவும் இயற்கைதான். இதற்கெல்லாம் அவமானத்தால் சுருங்குவது எதற்கு?

    கதை

    `நான் தனியா எங்கேயும் போகமாட்டேம்பா. எல்லாரும் என்னையே முறைச்சுப் பாப்பாங்க. அழுகை வரும்!’ பதினாறு வயதில் என்னுடன் படித்த அருள்மேரி கூறியது இது.

    அவளுடைய ஐந்தடி எட்டங்குல உயரத்தைப் பார்த்து சிநேகிதிகள் பிரமித்தாலும், அவளுக்கு வித்தியாசமான அந்த உயரமே பெரிய குறையாக, அவமானகரமாக இருந்தது. எப்போதுமே இரண்டு, மூன்று பேர் அவளுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வாள்.

    சராசரிக்கு அதிகமான உயரங்கொண்ட பெண்ணும், அதற்குக் குறைவான ஆணும் தங்களை ஏதோ விதத்தில் தாழ்ந்தவர்களாக நினைத்து வருந்துகிறார்கள்.

    கதை

    இந்திரன் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. உருவம் மட்டும் குள்ளம். எதற்காவது தப்பு கண்டுபிடித்து எல்லாருடனும் — பலர் பார்க்க — சண்டை போடுவார். `Shorty’ என்று எல்லாரும் அவரை முகத்திற்கு நேரேயே குறிப்பிட்டது அவரை அவ்வளவு தூரம் பாதித்திருக்கலாம்.

    தன்கீழ் வேலை செய்தவர்கள் எந்தவித தவறும் செய்யக்கூடாது என்று எதிர்பார்த்தார். நடக்கக்கூடிய காரியமா அது! யார்தான் தவற செய்யவில்லை?

    அலுவலகத்தில் மட்டுமில்லை. யார் வீட்டுக்குப் போனாலும், அங்கேயும் குற்றம் கண்டுபிடிப்பார். இதனால் அவருக்கு உற்ற நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை. எல்லாரும்தான் பயந்து ஓடினார்களே! மதுவே உற்ற தோழன் என்றாக, மனைவி, குழந்தைகளுக்குக்கூட அவரிடம் மரியாதை போயிற்று.

    அவருக்குக் கீழிருந்த ஒருவர் தன் நேர்மையான உழைப்பு, மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம் ஆகியவற்றால் அரசாங்க விருதுகளைப் பெற்றபோது, `எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே!’ என்றார் ஆற்றாமையுடன், தான் எங்கு தவறு செய்தோம் என்று புரியாது.

    இந்திரன் போன்றவர்களுக்கு அபய முத்திரை அவசியம். `நான் குள்ளமாக இருந்தால் யாருக்கு என்ன வந்தது? இயற்கையை எதிர்த்துப் போராட முடியுமா!’ என்று, குறைகளுடன் தன்னைத்தானே ஏற்றால், பிறரையும் மதிக்கும் குணம் வருமே!

    கோபத்தை விடு, முன்னேறலாம்

    நாம் செய்த காரியத்தில் நிறைவு இல்லாவிட்டால், அதைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் ஆத்திரம் வருகிறது. சண்டை போடத் தோன்றுகிறது.

    நான் ஆங்கில தினசரி ஒன்றிற்கு இந்திய இசை, நாட்டிய விமரிசகராக இருந்தபோது, கலைஞர்களின் தரத்தை அலசி, பாராட்டத் தக்கவைகள் பலவற்றைக் குறிப்பிட்டிருந்தாலும், ஓரிரண்டு குறைகளைச் சுட்டிக்காட்டியதற்காக அவர்கள் கோபத்துக்கும், தீராப்பகைக்கும் ஆளாகி இருக்கிறேன். அதிலிருந்து, `உலகப் புகழ் வாய்ந்தவர்கள்’ என்ற பெயர்பெற்றவர்களைப்பற்றி மட்டும் எழுத ஒப்புக்கொள்வேன். எதற்கு வம்பு!

    சுமாரான ஒரு நடன ஆசிரியை தன் நிகழ்ச்சிக்கு வந்து அதைப்பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள், தொலைபேசிமூலம்.

    “நான் எப்படி எழுதுவேன்னு தெரியுமில்லையா?” என்று கேட்டு அவளை யோசிக்கவிட்டு, பிறகு, “எழுதணுமா?” என்று சமாதானமாகக் கேட்டேன்.

    அவள் பயந்து, “பரவாயில்லை. சும்மா வாங்க,” என்றாள். அவளுக்கே தன் திறமையில் நம்பிக்கை இல்லைபோலும்!

    பள்ளியில் படிக்கும்போது, `பிழைதிருத்தம்’ என்று பண்ணினோம். அடுத்த முறை அதே தவறுகள் வராது பார்த்துக்கொண்டபோது, மதிப்பெண்கள் கூடின. நாம் வளர்ந்து பெரியவர்களானதும் அக்குணம் ஏன் மாறியது?

    வயதான கோளாறா?

    வயதானவர்களுக்கு — தம்மைத் தாமே ஏற்க — அபய முத்திரை மிகவும் உபயோகமானது.

    `இளம் வயதில் இருந்த உடல் வலிமை, உத்தியோகம், வருமானம் எதுவுமே இப்போது இல்லையே!’ என்ற வருத்தம் ஏற்பட, அது மனைவியின்மேல் ஆத்திரமாக மாறுகிறது. அவள் எது சொன்னாலும், தன்னைப் பழிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

    “என் கணவருக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். ஓயாமல் படிப்பார்,” என்றாள் ஒரு சிநேகிதி.

    நான் சில இணையதளங்களைப்பற்றிக் கூறினேன்.

    பதிலாக, “அவ்வளவுதான்! கத்த ஆரம்பித்துவிடுவார். நான் என்ன சொன்னாலும் அவருக்குப் பிடிப்பதில்லை!” என்றாள்.

    மேற்கண்ட வசனத்தை வெவ்வேறு நாடுகளிலிருந்த பல பெண்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

    பெண்களுக்கு இயற்கை உபாதைகள் பன்னிரண்டு வயதிலிருந்தே ஆரம்பித்து, பிள்ளைப்பேறு காலங்களிலும் தொடர்வதால், முதுமையின் தளர்ச்சி அவர்கள் மனதை அவ்வளவாகப் பாதிப்பதில்லையோ?

    எழுத்தாளர்களும் சுயவிமரிசனமும்

    தன்னைத்தானே விமரிசித்துக்கொண்டு, தான் செய்தது நிறைவாக இல்லை என்று ஒப்புக்கொள்ளும் குணம் எழுத்தாளர்களுக்கு மிக அவசியம்.

    `இரவு பகலாக எழுதினேனே! இதில் சிலவற்றைக்கூட அடிக்க மனம் வரவில்லையே!’ என்று தான் எழுதியதன்மேல் காதல் கொள்பவர்களின் எழுத்து வாசகர்களுக்கு நிறைவைத் தராது.

    பத்திரிகை ஆசிரியர்களின் தொழிலே அதுதான் என்பதை புரிந்துகொள்ள விரும்பாது, `நான் கஷ்டப்பட்டு எழுதினதை கன்னாபின்னான்னு சுருக்கிட்டான்!’ என்று புலம்பும் எழுத்தாளர்கள் உண்டு.

    `இது அநாவசியம். அல்லது, தவறு!’ என்று நம்பகமான ஒருவர் விளக்கங்களுடன் சுட்டிக்காட்டும்போது அதை எப்படி சரிப்படுத்தலாம் என்று யோசித்தால்தானே முன்னேற முடியும்?

    ஒரு துறையில் எத்தனை ஆண்டுகால அனுபவமாக இருந்தாலும், தவறுகளைத் தவிர்க்க முடியாது. `நான் என்ன கடவுளா, தப்பே செய்யாமலிருக்க!’ என்று மன்னித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆரோக்கியமாவது கெடாமலிருக்கும். அபய முத்திரை இருக்கவே இருக்கிறது!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (52)

    நிர்மலா ராகவன்

    சவாலைச் சமாளி!

    நலம்-1-1
    சுவரும் சித்திரமும்

    அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில், முனைவர் பட்டப்படிப்புக்கு பத்துபேர் சேர்ந்திருந்தனர். இறுதியில் இருவர் மட்டுமே நிலைக்க, மற்றவர்கள், `மிகக் கடினம்!’ என்று பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்களாம்.

    `ஏன் அப்படி நம்மைவிட்டுப் போய்விட்டார்கள்? என்று எதிர்மறையாகச் சிந்திக்காது, `நம்மிருவருக்குள் என்ன ஒற்றுமை?’ என்று ஆராய்ந்தபோது, எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அடிக்கடி உணவு உட்கொள்ளும் பழக்கம் இருவருக்கும் இருந்தது தெரியவந்தது. அவர்களுள் ஒருத்தி என் மகள்.

    அவள் பள்ளி இறுதியாண்டு பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தபோது, மணிக்கொருமுறை ஏதாவது தின்னக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். (என் தாய் எனக்குச் செய்தது). உதாரணமாக, தக்காளிப்பழத்தை வில்லைகளாக நறுக்கி, அரிந்த வெங்காயம், கொத்துமல்லி ஆகியவைகளுடன் உப்பு, மிளகுபொடி தூவித் தின்பது புத்துணர்வைத் தரும்.

    அப்போதெல்லாம், `என்னைக் குண்டா ஆக்கப் பாக்கறியா?’ என்று கேலியாகச் சிரித்தபடி, வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டவள், தான் தனியாகப் போனபின்னரும், தன்னையும் அறியாது, அதே பழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கிறாள்.

    நிறைய வேலை இருந்தால், அடிக்கடி சிறிதேனும் நல்ல ஆகாரம் உட்கொள்ள வேண்டும். மனிதன் ஒட்டகமில்லை. அவ்வப்போது சாப்பிட்டால்தான் உடலைப் பேண முடியும்.

    சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும்?

    `வேலை மும்முரம்’ என்று பலர் உடல்நிலையைச் சரியாகக் கவனிக்காது விட்டுவிட்டு, `நான் மட்டும் ஏன் சிறிது நேரத்திலேயே அயற்சி அடைகிறேன்!’ என்று அயர்கிறார்கள். ஓரிடத்திற்கு எவ்வளவுதான் அவசரமாகப் போகவேண்டும் என்றாலும், காரில் போதிய பெட்ரோல் இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துக்கொள்வது அவசியமில்லையா?

    காப்பியும் டீயும்

    ஓயாமல் காப்பி குடித்தால் சுறுசுறுப்பு வரலாம். ஆனால் தலை நரைக்கும்! “பரீட்சைக்குப் படிக்கும்போது, ஒரு நாளைக்கு பதினாறு கப் காப்பி குடிப்பேன்! அதில் சர்க்கரை சேர்க்கிறோமா! ரொம்ப குண்டாகிவிட்டேன்!” — இது ஓர் இளைஞன் என்னிடம் புலம்பியது.

    அளவுக்கு அதிகமாக டீ குடித்தாலோ, ஒரு கப் டீ குடித்தவுடனேயே, `அடுத்து எப்போது கிடைக்கும்?’ என்று அந்த போதையை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும் மனம். வேளாவேளைக்கு குடித்தே ஆகவேண்டும், இல்லையேல் தலைவலி என்று பாடுபடுத்தும். சிலருக்கு பித்தம் அதிகமாகி, தலை சுற்றல், வாந்தி, பாதத்தில் வெடிப்பு போன்ற தொல்லைகளும் எழும்.

    பிறர் சிரிப்பார்களே!

    வாழ்வில் எல்லாம் எளிதாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் சராசரிக்குக் கீழேயே காலமெல்லாம் இருக்கத் தயாராக வேண்டும்.

    ஏதாவது புதிய காரியம் ஒன்றைச் செய்ய முற்படும்போது தவறுகள் நிகழத்தான் செய்யும். `தவறுகள் நிகழ்ந்துவிடுமோ?’ என்ற பயமோ, பிறர் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்களே என்ற கலக்கமோ கொள்பவர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

    உன்னால் முடியும்!

    ஒரு புதிய காரியத்தை நாம் செய்ய முற்படும்போது, `உன்னால் முடியாது!’ என்று நமக்கு நெருங்கியவர்கள் அவநம்பிக்கை தெரிவித்தால், அது நம் நலனைக் கருதிச்சொல்லும் வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மறைந்துகிடக்கும் நம் ஆற்றல் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். பொறாமையாலும் இருக்கலாம்.
    ஒரு காரியத்தை ஒன்பது முறை செய்ய முயன்று, பத்தாவது முறை வெற்றி அடைபவர் என்ன சொல்வார், தெரியுமா? `ஒன்பது முறை இதை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றேன்!’

    இவர் தன் ஆற்றலில் நம்பிக்கை வைத்திருப்பவர். ஒருவர் தன்னைத்தானே நம்பாவிட்டால், எடுத்த காரியத்தை எப்படி முடிக்க முடியும்?

    தோல்வியால், அல்லது பிறரது கேலியால், ஒருவர் சிறிது காலம் மனம் தளரலாம். ஆனால், அந்த தோல்வியையே எண்ணி மறுகாது, திரும்பத் திரும்ப அதே காரியத்தை வெவ்வேறு விதங்களில் செய்வது நன்மையில் முடியும். இப்படித்தான் பல கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கின்றன. விஞ்ஞானம் மட்டுமில்லை, இசை, சினிமா, என்று பல துறைகளிலும் இப்படித்தான் மாறுதல்கள் ஏற்படுகின்றன. சமையலில்கூட.
    சமையலிலா!

    சாதாரணமாக, உருளைக்கிழங்கின் தோலைச் சீவிவிட்டுத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். இல்லாவிட்டால். வேகவிட்டு, தோலை உரித்து.. என, நிறைய நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.

    எனக்குக் கண்புரைச் சிகிச்சை நடந்தபின், ஒரு மாதமேனும் அனலில் நிற்கக்கூடாது என்று எச்சரித்திருந்தார்கள்.

    ஒரு நாள் சமைத்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட, தோலைச் சீவாது, சற்றே பெரிய துண்டங்களாக நறுக்கி, அரிந்த வெங்காயம், கறிவேப்பிலையுடன், பொரியலுக்கு வேண்டிய உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூளைச் சேர்த்து, கடிகாரத்தில் அலாரம் வைத்து இருபது நிமிடங்கள் கழித்து நிறுத்திவிட்டேன். Pressure Pan -ல் குறைந்த சூட்டில் சமைத்தேன். அப்போதுதான் அடுப்படியில் நின்று கிளறிக்கொண்டே இருக்க வேண்டாம். தோலுடன் சமைப்பதால், வாயுத்தொல்லை கிடையாது.

    `இனி எப்போதும் இப்படித்தான் ஆக்கவேண்டும்!’ என்று நினைக்கும் அளவுக்கு பதம் நன்றாக அமைந்திருந்தது. இன்று அதன் பெயர், `Accidental Potato Curry!” — தற்செயலாக நிகழ்ந்த நற்காரியம்.

    எளிதில் உணர்ச்சிவசப்படுவது

    சிலரைப் பார்த்தால், இவர்கள் மட்டும் பெரும்பாலும் அமைதியாக இருப்பது எப்படி, இவர்களுக்கு உணர்ச்சிகளே கிடையாதா என்ற ஆச்சரியமெல்லாம் எழும்.

    ஒருவர் தன்னைத் திட்டினால், பதிலுக்குத் தானும் அடித்தோ, திட்டியோ ஆகவேண்டும் என்ற சினிமாத்தனமான கொள்கை இவர்களுக்குக் கிடையாது. அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால், தெளிவான சிந்தனை எழாது என்பதால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர்கள் இவர்கள்.

    உணர்ச்சிவசப்பட்டு நல்ல எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர்.

    கதை

    இளம்பெண்ணான தேவிகாவுக்கு சிபாரிசால் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம் கிடைத்தது.

    போனஸ் அறிவிக்கப்பட்டபோது, மேலதிகாரியிடம் போய், தன்னை ஏமாற்றிவிட்டதாக அழுதாள். தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள் என்பதை மறந்து சண்டை பிடித்தாள். காரணம்: அது எப்படி மேலாளருக்கு அவளைவிட அதிகமான தொகை அளிக்கலாம்?

    சம்பளத்துடன், தேவிகாவின் உத்தியோக உயர்வுக்கான மேற்படிப்புச் செலவையும் அந்த நிர்வாகமே ஏற்றுக்கொண்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.

    உணர்ச்சிக் கொந்தளிப்பில், எந்த சமாதானத்தையும் ஏற்க இயலவில்லை அவளால். ஆத்திரத்துடன் வேலையை ராஜிநாமா செய்தாள். இப்போது படிப்பும் அரைகுறையாக நின்றுபோயிற்று. இதனால் யாருக்கு நஷ்டம்?

    இதனால், எப்போதும் அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள் சரியானவர்கள் என்றில்லை. இவர்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டவர்கள். அதனாலேயே, எந்த விஷயத்திலும் ஆழம் பாராது ஈடுபட்டு மாட்டிக்கொள்வதும் உண்டு.

    மனோதிடம் வளர..

    பிறர் செய்ய அஞ்சும் (நல்ல) காரியங்களைச் செய்யப் பழகிக்கொள்வது மனோதிடத்தை வளர்க்கும்.

    ஒரு வேளை, வெற்றி கிட்டாமல் போகலாம். அதனால் என்ன! செய்ய காரியங்களா இல்லை?

    ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, உடனுக்குடனே பலனை எதிர்பார்ப்பது சமூகத்தின் அடித்தளத்திலிருப்பவர்களின் தன்மை என்கிறார்கள் சமூக இயலில்.

    கதை

    எங்கள் உறவினர் வீட்டில் வேலை பார்த்த பெண்மணியின் பதினைந்து வயது மகள் அவ்வப்போது துணைக்கு வருவாள். சிறுமிக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுத்த முயற்சி பயனற்றுப்போனது. அவளைப் பொறுத்தமட்டில், வீட்டு வேலை செய்தால், மாதக்கடைசியில் பணம் கிடைக்கும். பிடித்ததாக ஏதாவது வாங்கிக்கொள்ளலாம். படிப்பதால் என்ன லாபம்?

    உடலை வருத்தி நாளெல்லாம் சம்பாதித்ததை அன்றிரவே புதிய திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காகவோ, மதுபோதைக்காகவோ செலவிடுபவர்களும் இந்த ரகம்தான்.

    ஊக்கத்தைக் கைவிடாது பல வருடங்கள் கல்வி கற்றால், அல்லது ஏதாவது தொழிலைக் கற்றால் நல்ல வேலையும் அதற்குரிய ஊதியமும் கிடைக்காது போகாது. ஆனால் அத்தகைய தூரநோக்குப்பார்வை எல்லாருக்கும் இருப்பதில்லை.

    சில பிரபல நடிகர்கள் (நடிகைகள்) ஆரம்ப காலத்தில் நடித்த படங்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. நடிப்பு அவ்வளவு சுமார்.

    ஆனால், `இதுதான் நான் பயணிக்கப்போகும் பாதை!’ என்று முடிவெடுத்துக்கொண்டு, தேர்ந்தவர்களிடம் கற்று, விடாமுயற்சியுடன் சிறுகச் சிறுக முன்னேறி இருக்கிறார்கள்.
    இவர்கள் உடனடியாக ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து, அதன்படி நடக்கவில்லை. ஏளனமோ, தோல்வியோ, எதையும் கண்டு ஒரேயடியாக அயர்ந்துவிடவுமில்லை. தம் இலக்கினையே குறி வைத்து எவ்வித சவாலையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

    எத்துறையை எடுத்துக்கொண்டாலும், சவாலைச் சமாளிக்கும் நெஞ்சுறுதி உள்ளவர்கள்தாம் இறுதியில் மனதில் நிற்கிறார்கள்.

    தொடருவோம்

    Share
  • ஏனிந்த முடிவு?

     நிர்மலா ராகவன்

    தொலைபேசியைக் கையில் எடுத்தவுடனேயே அம்மா கூறினாள், முகமன்கூட இல்லாமல்: “திவா போயிட்டான்”.

    அக்குரலிலிருந்த தீர்மானம், இனி அவன் எங்கேயும் போகமுடியாது என்று ஒலிப்பதுபோலிருந்தது.

    “அண்ணன் குடும்பத்தோட சண்டையோ, பூசலோ, இந்தச் சமயத்தில விட்டுக்குடுக்கலாமா? நான் போய் பார்த்தேன். உடம்பெல்லாம் நீலம் பாரிச்சு..!”

    அதற்குமேல் கேட்க முடியவில்லை சுதாவால். இயற்கையான சாவு நேர்ந்தால் உடலில் உடனே நிறமாற்றம் உண்டாகுமா?

    `இது தற்கொலைதான்!’ என்று அவளது அந்தராத்மா கூவியது. ஏனெனில், இது திவாகரின் முதல் தற்கொலை முயற்சி அல்லவே!

    அம்மா தன்பாட்டில் பேசினாள்: “திவாவோட சாவுக்கு ஆளுக்கு ஒரு காரணம் சொல்றாங்க. விஷக்காய்ச்சல்னு சிலபேர். ரெண்டு தங்கைகளுக்கு கடன் வாங்கிக் கல்யாணம் செஞ்சு குடுக்கறதுக்காக வாங்கின கடனை அடைக்க முடியாம்போன அதிர்ச்சியில மாரடைப்புங்கிறாங்க மத்தவங்க”.

    ஏதாவது பேசியாக வேண்டுமே என்று சுதா வாயைத் திறந்தாள். “எப்படிப் போனா என்னம்மா? போயிட்டான். அவ்வளவுதான். கல்யாணமாகி ஒரு வருஷம்தானே ஆச்சு! பாவம், அவ!” தான் பார்த்தே இராத பெண்ணுக்காகப் பரிதாபப்பட்டாள்.

    “நீ வேற! பிணம் இந்தப் பக்கம் போகுது, அவன் பெண்டாட்டி அந்தப் பக்கம் அவங்கப்பா வீட்டுக்குப் போயிட்டா. சம்பிரதாயத்துக்குக்கூட அழவே இல்ல! என்னத்த சொல்றது! நல்லாவே இல்லே, போ!”

    அப்படியானால், அந்த தம்பதியருக்குள் எத்தகைய உறவு இருந்திருக்கும்? இத்தனைக்கும், ஓராண்டு காலம் ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்! யோசிக்க ஆரம்பித்தாள் சுதா.

    அவளுடைய பெற்றோரின் வீடு மாடியும் கீழுமாக விசாலமாக இருந்தது. அங்கு அவனுக்கென்றே தனி அறையை விட்டிருந்தார்கள். சுவற்றை ஒட்டிய புத்தகங்களுடன் வாசகசாலையை ஒத்திருக்கும். அவனுடைய தாய் வீட்டில் ஒரே ஹாலில் சகோதரிகளுடன் படுப்பதைவிட இங்கு எவ்வளவோ சுகமாக இருந்தது. ராஜி அத்தைக்கு எந்த உதவி வேண்டுமானாலும் அவனைத்தான் அழைப்பாள்.

    “எதுக்கு அத்தை என்னை அவ்வளவு அவசரமா வரச்சொன்னீங்க?”

    “நம்ப வீட்டுக்கு ஒங்க மாமாவோட சிநேகிதர் வந்திருக்காருடா, திவா. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. ஒனக்குப் பள்ளிக்கூடம் லீவுதானே! அதான்! சுதாவை எப்படித் தனியா விட்டுட்டுப் போறதுன்னு யோசிச்சேன்”.

    திவாகர் சிரித்தான். “சுதாவுக்கு நான் காவலா? நல்ல வேடிக்கைதான்! அவகிட்ட வாலாட்டறவங்களை சும்மா விட்டுடுவாளா? ஒதைக்க மாட்டா?”

    என்னதான் மகள் தற்காப்புக் கலையில் கறுப்புப்பட்டி ஜெயித்திருந்தாலும், பதினெட்டு வயதுப் பெண்ணை யாரோ ஒரு ஆணுடன் தனியாக விடலாமா? தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

    “அட, இதுக்குப் போய் கெஞ்சணுமா? என்ன அத்தை நீங்க!”

    “நீ ஏதாவது புஸ்தகத்தை எடுத்துப் படிச்சுக்கிட்டிரு, திவா. சுதா கீழே படிச்சுக்கிட்டிருக்கா. பாத்துக்க. சீக்கிரமே அந்த அங்கிள்  வெளியில் கிளம்பிடுவார்,” என்று ரகசியக்குரலில் கூறிவிட்டு ராஜி அத்தை பறந்தாள்.

    மாடியில் தொலைகாட்சிமுன் அமர்ந்திருந்த மனிதர் அவனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று புரியாது, அவன் தன் அறைக்குப் போய் கட்டிலில் படுத்தான்.

    “திவா! கதவைச் சாத்திக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டிருக்கே?” இரண்டு நிமிடங்களுக்குமேல், கதவை உடைக்காத குறையாகத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்தாள் அவள். “எனக்கு அங்க ஒரு புஸ்தகம் வேணும். திறக்கப்போறியா, இல்லையா?”

    சிறிது தாமதமாக அவன் கதவைத் திறந்தபோது, கட்டிலில் படுத்திருந்த விருந்தாளி சற்று புரண்டு படுத்ததைக் கவனித்தாள்.

    உள்ளை போக யத்தனித்தவளிடம், “நீ இரு,” என்றவன் கதவை வெளியில் சாத்தினான். “தாங்க்ஸ்!” என்றான் முணுமுணுப்பாக.

    அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் சுதா. அவன் முகம் அழுவதுபோலிருந்தது. தலை மிகக் குனிந்திருந்தது.

    “அத்தைகிட்ட சொல்லிடாதே!” என்றான் கெஞ்சலாக. அவனுக்கிருந்த படபடப்பில், தவறு யார்மேல் என்று ஆராயத் தோன்றவில்லை.

    எவ்வளவு பெரிய இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றி இருக்கிறாள்! இவள் தனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பக்கபலமாக இருப்பாள் என்ற நம்பிக்கை வந்தது.

    முதலில் படிப்பு, பின்பு சுதாவின் கல்யாணப்பேச்சு எடுக்கப்படும்போது தன் எண்ணத்தை அத்தையிடம் தெரிவித்தால் மறுக்கவா போகிறாள் என்று பொறுத்துப்போக எண்ணினான்.

    ஆனால் திவாகரால் நீண்ட காலம் பொறுமையாக இருக்க முடியவில்லை.

    ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ராஜி.

    “இந்த திவா என்ன நினைச்சுக்கிட்டிருக்கான்? எனக்கு காதல் கடிதம் எழுதியிருக்கான்மா. அதுவும் காலேஜூக்கு!”

    “எங்கே, கொண்டா!”

    “அது.. எனக்கு வந்த கோபத்திலே ஒடனே கிழிச்சுப் போட்டுட்டேன். பிரின்சிபல் கைக்குப் போயிருந்தா..?”

    “ரொம்ப நல்லவன்மாதிரி நடிச்சானே, ராஸ்கல்! இவனையெல்லாம் வீட்டிலேயே சேர்த்திருக்கக் கூடாது!”

    அந்த சிறிய சமாசாரம் பூதாகாரமாக உருவெடுக்க, அண்ணன் தங்கை உறவு அறுபட்டது. ஆனால், திவாகர் மனம் தளரவில்லை.

    “சுதா! நீ எனக்குப் பதிலே தரலியே?” கட்டைக்குரல் கீச்சுக்குரலோடு கலந்து ஒலித்தது. தன்னையுமறியாமல், அவ்வப்போது கீச்சுக்குரலில் பேசுவான். `வேடிக்கை’ என்றெண்ணி பிறர் சிரிக்க, அப்போதெல்லாம் அவமானத்தால் அவன் முகம் சிவந்துவிடும்.

    அவனை ஏறெடுத்துப் பார்த்த சுதா திகைத்தாள்.  முன்பு பார்த்துப் பழகிய திவாவா இவன்!

    உலகிலேயே அழகில் தன்னை மிஞ்சுபவர்கள் கிடையாது என்ற கர்வம் பதின்ம வயதினருக்கு எழுவது இயற்கை. திவாகர் தன் உருவத்தில் செலுத்திய கவனத்தால் பிற ஆண்பிள்ளைகளின் கேலிக்கு இலக்காகி இருந்தானே! ஈரத்தலை சொட்டச் சொட்ட அவன் அரைமணி நேரம் தலை சீவிக் கொண்டது மறக்கக்கூடியதா!

    இப்படி கலைந்த தலையும், குழிவிழுந்த கன்னங்களுமாக, ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவன்போல் காட்சி அளிக்கும்படி அப்படி என்ன நேர்ந்துவிட்டது?

    அவளுக்கு முன்பு எப்போதோ நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

    `ஐயே! எங்க வீட்டில பொம்பளை ராஜ்ஜியம்! யாருக்கு அங்க இருக்கப் பிடிக்கும்!’ என்றான் திவா. அவனுக்கு மூன்று தங்கைகள், ஒரு அக்காள்.

    அப்போது சிரித்தபடி வந்தான் அண்ணன் சிவா. `அதான் நீயும் பொம்பளைமாதிரி ஆகிட்டியா, திவாகரி?’

    `அண்ணா! அசிங்கமாப் பேசாதே!”

    அவனுக்கு அன்று பரிந்ததைத் தவறாக எடுத்துக்கொண்டுவிட்டானோ! இப்படிச் சுற்றிச் சுற்றி வருகிறானே! தான் எப்போது, எங்கு போவோம் என்று கவனித்து, வாசகசாலைக்கும் வந்துவிட்டான்!

    “சுதா! நீ எனக்குப் பதிலே தரலியே?” மீண்டும் கேட்டான் திவாகர்.

    அண்ணனுடனும் அவனுடனும் சிறு வயதிலிருந்தே விளையாடி இருக்கிறாள். படித்த புத்தகங்களைப்பற்றி விவாதித்து இருக்கிறாள். ஒரே வயது மூத்தவனான அவனிடம் பாடங்களில் சந்தேகம் கேட்டிருக்கிறாள். இப்போதோ அவனைப் பார்த்தாலே அருவருப்பாக இருந்தது.

    “ஃபார் ஹெவன்ஸ் ஸேக்! (For heaven’s sake)”  என்று அடிக்குரலில் கர்ஜித்தாள். “என்னைத் தொந்தரவு செய்யாதே!”

    திவாகர் எந்த நிமிடமும் அழுதுவிடுவான் போலிருந்தது. தளர்நடையுடன் அங்கிருந்து சென்றான்.

    மறுநாள் வாசகசாலை நிர்வாகி, “ஒங்க சொந்தக்காரராமே! இதை ஒங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்!” என்று ஒரு சிறு கவரைக் கொடுத்தபோது, தன் முகபாவம் மாறாமலிருக்கப் பெரும்பாடு பட்டாள் சுதா.

    அதைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு விரைந்தாள்.

    அதில் ஒரே வரி: என் தற்கொலை முயற்சி என் நண்பர்களால் தடுக்கப்பட்டது.

    அந்த எழுத்துக்களின்மேல் ஒரு மெல்லிய கோடு. எழுதிவிட்டு, பிறர் கண்ணில் படாமலிருக்க அடிக்கிறானாம்!

    ராஜியும் சுதாவும் சேர்ந்து சிரித்தார்கள். “பைத்தியம் பிடிச்சிருக்கு இவனுக்கு!” என்றாள் ராஜி. “இனிமே நீ தனியா எங்கேயும் போகவேண்டாம், சுதா! பாக்கறவங்க லைப்ரரிக்காரன்தான் ஒனக்கு லவ் வெட்டர் எழுதி, எழுதிக் குடுக்கிறான்னு நினைக்கப்போறாங்க!”என்றவள், `சீக்கிரமே இவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சுடணும். இல்லாட்டி இது எங்கே போய் முடியுமோ!’  என்று முடிவெடுத்தாள்.

    `பட்டப்படிப்பு முடிந்ததுமே கல்யாணமா!’ என்று சுதா அடம் பிடிக்கவில்லை. இனி திவாவின் தொல்லை இருக்காது என்ற நிம்மதி பிறந்தது.

    “திவாகருக்கு கல்யாண இன்விடேஷன் அனுப்ப வேண்டாம்னு பாக்கறேன்!”

    தாயின் யோசனையை ஏற்கும்விதமாக சுதா தலையசைத்தாள்.

    அடுத்த ஆண்டே ஒரு பெரிய காகித உறை — அழகிய பூ வேலைப்பாட்டுடன், சரிகை மின்ன, பூமாலையணிந்த ஆணும் பெண்ணும் கைகோர்த்த நிலையில் இருந்த படத்துடன் — தபாலில் வந்தது. பிரிக்காமலேயே அது யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று புரிந்து போயிற்று சுதாவுக்கு.

    வேறு யார்! `உன்னைவிட்டால் எனக்கு வேறு பெண்ணே கிடைக்கமாட்டாளோ?’ என்று திவாதான் சவால் விட்டிருக்கிறான்!

    திவாகரை, `திவாகரி,’ `பொம்பளை’ என்று பிற பையன்கள் பலவாறாக கேலி செய்ததில் ஏதோ உண்மை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அன்று அந்த மனிதர் அவ்வளவு துணிச்சலுடன் அவனிடம் முறைகேடாக நடக்கத் துணிந்திருப்பாரா?

    தானே ஒத்துக்கொள்ள விரும்பாத இயல்பை அவன் உணர்ந்து அதிர்ந்த தருணமோ அது?

    அதை ஏற்கத் துணிவில்லாது, `ஒரு பெண்ணை மணந்தால் எல்லாம் சரியாகிவிடும்!’ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும். அந்த பயத்தில்தான் தன்னை அப்படித் துரத்தியிருக்கிறான்!

    அப்படியானால், கல்யாணமாகி ஒரு வருடத்துக்குள் ஏனிந்த முடிவை எடுத்தான்?

    சுதாவின் கற்பனை கட்டுக்கடங்காமல் ஓடியது.

    திவாகரால் இன்னொரு பெண்ணுடன் இணைந்து, ஓர் ஆண்மகனாக வாழ முடியாமல் போயிருக்கும். எந்தப் பெண்ணுக்கும் உற்ற கணவனாக அவனால் இருக்க முடியாது என்ற உண்மை தந்த அதிர்ச்சியைத் தாங்காதுதான்..!

    “பாவம், திவா!” என்றாள் சுதா. உரக்கவே.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (51)

    நிர்மலா ராகவன்

    கர்வமும் காலணியும்

    நலம்-1
    கேள்வி: குள்ளமான ஒருவர் குதிகால் மிக உயரமாக அமைந்த காலணியை அணிந்தால் என்ன ஆகும்?

    பதில்: எல்லாரையும்விட உயர்ந்திருக்கிறோம் என்ற பெருமை எழும். ஆனால் அது நிலைக்காது. அவர் சீக்கிரமே விழக்கூடும்.

    அந்தக் காலணியைப்போல்தான் கர்வமும்.

    பதவியால் வரும் கர்வம்

    தாழ்மையான நிலைமையில் இருந்த ஒருவருக்கு எப்படியாவது பிறர் தன்னை மதிக்கச் செய்யவேண்டும் என்ற ஆத்திரம். எப்படியோ ஒரு சங்கத்தின் தலைமைப் பதவியைப் பிடித்தார். எல்லாரும் `தலைவரே’ என்றுதான் அவரை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனை வேறு!

    `சாதித்துவிட்டோம்!’ என்ற அகந்தை அவர் கண்ணை மறைக்க, தன்னுடன் பழகியவர்கள் எல்லாருமே தன்னைவிடத் தாழ்ந்தவர்கள்தாம் என்பதுபோல் நடக்கத் தொடங்கினார். அச்சத்தாலோ, அல்லது தலைவரைவிட நாம் தாழ்ந்தவர்கள்தாமே என்ற மனப்பான்மையாலோ வாய்திறவாது பின்தொடர்ந்தவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டது.

    அபூர்வமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்த்தவரை பேச்சாலும் செய்கையாலும் வீழ்த்தினார்.

    இப்படியே சில காலம் சென்றது. அவரது போக்கைச் சகிக்க முடியாது, ஒவ்வொருவராக விலக, சற்று பயம் ஏற்பட்டது. தன் போக்கை சிறிதே மாற்றிக்கொண்டு, அவர்களை அழைத்து மிக மிக இனிமையாகப் பேசினார்.

    எல்லா மனிதர்களும் எப்போதுமே முட்டாள்களா, என்ன! ஒரு முறை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எக்காலத்திலும் நம்பத் தயாராக இல்லை. மிதப்பாக இருந்தவர் சுருங்கிப்போனார். பதவி பறிபோக, யாரும் அவரை மதிக்கவில்லை. ஓங்காரக் குரல் மெலிந்தது, உருவத்தைப்போல.

    நிறைய வாழ்த்து அட்டைகள்!

    `நான் அரச பரம்பரையில் வந்தவள்!’ என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட ஆசிரியை ஒருத்தி எங்கள் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டாள்.

    பள்ளி மாணவர்கள் எல்லாரும் கூடும்போது, ஓரங்குல பருமனான(!) நீண்ட கழியை எடுத்துக்கொண்டு குறுக்கேயும் நெடுக்கேயும் நடப்பாள். அதிகாரம் செலுத்துகிறாளாம்! `Walking Tall!’ என்று கேலியாக ஆசிரியைகள் சிரித்தது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

    பண்டிகையின்போது, “எனக்கு இந்த வருடம் எவ்வளவு வாழ்த்து அட்டைகள் வந்திருக்கிறது, தெரியுமா!’ என்று என்னிடம் பெருமை பேசினாள்.

    நான் சும்மா தலையாட்டி வைத்தேன். `நீ பதவி விட்டு விலகினால், எத்தனை வரும் என்று யோசிக்க மறந்துவிட்டாயே!’ என்று நினைத்துக்கொண்டேன்.

    இம்மாதிரி குறுகிய காலம் பதவி வகிப்பவர்கள் பிறரை அவமரியாதையாக நடத்திவிட்டு, அதன்பின் அவர்கள் தங்களை மதிப்பதில்லையே என்று அவமானமோ, ஆத்திரமோ அடைவது என்ன நியாயம்?

    செல்லத்தால் கர்வம்

    பதவி என்றுதான் இல்லை, ஒரே குடும்பத்தில் மிக அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும் கர்வம் எழுகிறது.

    மூன்று ஆண்குழந்தைகளுக்குப்பின், பல வருடங்கள் கழித்துப் பிறந்தவள் ரூபா. பெற்றோர் மட்டுமின்றி, மூத்த அண்ணனுக்கும் செல்லக் குழந்தை ஆனாள்.

    ஒருமுறை, அண்ணன் நடந்துவரும் வழியில் வேண்டுமென்றே காலை நீட்ட, அவன் தடுக்கி விழப்போனான். “ரூபா!” என்று அவன் இரைய, “நீ பார்த்து நடந்திருக்கவேண்டும்!” என்று தந்தை அருமை மகளுக்குப் பரிந்ததோடு நில்லாமல், அவனைத் திட்டினார்.

    என்ன தவறு செய்தாலும் யாரும் கண்டிக்காததால், `தனக்கு நிகர் யாருமில்லை!’ என்ற கர்வம் ரூபாவிற்கு மேலோங்கியது. அருமை அண்ணனுக்கும் அவளைப் பிடிக்காமல் போயிற்று.

    பெரியவர்களையும் எதிர்த்துப் பேசும்போது, தாய் மெல்ல விழித்துக்கொண்டாள்.

    அடுத்த முறை அவள் பெரியவர்களை மரியாதைக்குறைவாகப் பேசியபோது, கன்னத்தில் அறை விழுந்தது.

    பத்து வயதான அச்சிறுமி தந்தையைப் பார்த்தாள் — தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்வாரென்று எதிர்பார்த்து. அவரோ முகத்தைத் திருப்பிக்கொண்டார், `நடந்தது எதையும் நான் காணவில்லை,’ என்பதுபோல். அவளுடைய நடத்தை அவருக்கும் அதிருப்தியை விளைவித்திருந்தது.

    தான் இப்படியே இருந்தால் அனைவருக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விடும் என்று புரிந்துகொண்டாள் ரூபா. `ஏன் இப்படி ஆனோம்?’ என்று ஆராயத் தெரியாவிட்டாலும், இது தவறு என்றவரை புரிந்தது. குணம் மாறியது.

    வித்யா கர்வம்

    ஒரு சங்கீத வித்வான் தன்னுடன் வயலின் வாசித்தவரின் வாசிப்பு திருப்திகரமாக இல்லையென்று தன் வாத்தியத்தாலேயே அவரது தலையில் ஓங்கி அடித்தாராம்! இதைப் பார்த்த என் தாயார் அங்கலாய்ப்புடன் கூறினார்: “அதற்குப்பின் எந்த ஆணும் அவருடன் ஒரே மேடையில் உட்காரச் சம்மதிக்கவில்லை!”

    ஒருவர் தான் மேதை என்று அதே துறையிலிருக்கும் பிறரை அவமரியாதையாக நடத்தினால், நாளடைவில் மற்ற கலைஞர்கள் மட்டுமின்றி, கலையும் அவரை விட்டுப்போய்விடும்.

    அடக்கம் அமரருள் உய்க்குமோ, என்னவோ, நாம் அடக்கமாக இல்லாவிட்டால், வாழ்க்கை நம்மை அடக்கிவிடும்.

    அடக்கம் என்பது நம் சுயமரியாதையை விட்டுக்கொடுப்பது என்பதாகாது. பொறாமை கொண்டு, பிறர் நம்மைத் தாக்க முயல்கையில், அவர்களை எதிர்ப்பதற்காக நம்மைப்பற்றிச் சற்றுப் பெருமையாகப் பேசிக் காட்டலாம். ஏனெனில், அவர்களுக்கு அம்மொழிதான் புரியும்.

    எப்படி போதிப்பது?

    உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை பல கலைகளிலும் சிறப்பாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் முன்னிலையில் அவனைப்பற்றிப் பிறரிடம் பெருமையாகப் பேசுவது வீண் அகம்பாவத்தைத்தான் வளர்க்கும். புகழ்ச்சியை நம்பி வீழ்ந்தவர்கள் பலர்.

    மாறாக, தனிமையில், `நீ கெட்டிக்காரன். சுறுசுறுப்பானவன். உனக்கே தெரியும். உன் திறமைகளை யாராவது புகழ்ந்தால், `நன்றி!’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு. அதைப்பற்றி அதிகம் யோசிக்காதே. அப்புறம் சிந்திக்கும் திறன், விவேகம் எல்லாம் குறைந்துவிடும். தலைக்கனம் வந்துவிடும்,’ என்று சொல்லி வளருங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்க, மேலும் பலவற்றில் பிரகாசிப்பான்.

    கனவே சுகம்

    சிலர் ஒரு காரியத்தைச் செய்யும்போதே அதைப்பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். இவர்கள் கனவிலேயே இன்பம் காண்பவர்கள். சாதிப்பது அப்படி ஒன்றும் பெரிதாக இருக்காது.

    காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பதற்குள் அதைப்பற்றிப் பிறருடன் பேசினால், அது நல்லபடியாக முடிவது ஏது!

    சிறப்பான வெற்றி அடைவேன்!

    ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் `சிறுகதைப்போட்டி’ என்று அறிவித்திருந்தார்கள். பரிசுகள் தங்கத்தாலான கைகடிகாரங்கள். எனக்கு இரண்டாவதாக இருந்ததைப் பிடித்தது. `நான் இதைப் பெறப்போகிறேன்!’ என்று நிச்சயித்துக்கொண்டேன்.

    அதற்கு முந்திய வருடம் அப்போட்டியில் கலந்துகொண்டிருந்தேன். பிரசுரத்துக்கு ஏற்றதாகக்கூட என் கதை தேர்வு செய்யப்படவில்லை. அயராமல், `அடுத்த வருடம் நிச்சயம் பரிசு பெறுவேன்!’ என்றேன் என் குடும்பத்தினரிடம்.

    கர்வமோ, அசட்டுத் தைரியமோ இல்லை. உறுதியாக ஒன்று கிடைக்குமென்று நம்பினால், அந்த நம்பிக்கையே நம்மை வழிநடத்தும். வாரத்தில் நான்கு நாட்களாவது அமெரிக்க வாசகசாலைக்குச் சென்று, கதைகளை எழுதும் விதங்களை விரிவாக விளக்கும் பத்திரிகைகளைப் படித்தேன்.

    அரைமணி நேரத்தில் ஒரு கதை எழுதி, அதை அப்படியே விட்டுவிட்டு, சில நாட்கள் கழித்து திருத்தி அனுப்பினேன்.

    நான் விரும்பிய கடிகாரமே கிடைத்தது. விரும்பியதை அணியும் ஆசை இருக்கவில்லை. பிறரது பாராட்டோ, பத்திரிகை செய்தியோ பெரிதாகப் படவில்லை. ஆங்கிலத்திலும் நிறைய எழுத வேண்டும், எழுத முடியும் என்ற நம்பிக்கையே பெருமகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தது.

    நமக்குப் பிடித்ததை நம்மால் இயன்றவாறு முனைப்புடன் செய்தால் வெற்றி கிடைப்பதை யாரால் தடுக்க முடியும்?

    ஆனால், `சாதித்துவிட்டேன்!’ என்று கர்வப்பட்டால் அத்துடனேயே திருப்தி அடைந்துவிடுகிறோம். அதற்குமேல் பெரிய வெற்றி எதுவும் கிடைக்காது.

    ஒரு மலை ஏறிவிட்டீர்களா? அடுத்து எந்த மலை என்று யோசியுங்கள்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (50)

    நிர்மலா ராகவன்

    மகிழ்ந்திருங்கள்

    நலம்-1

    `நான்கு வயதிலிருந்தே எல்லா பாட்டுப் போட்டிகளிலும் நான்தான் முதல்! எனக்குப் பாடகராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் என் பெற்றோர் என்னைக் கலந்து பேசாமல், இஞ்சினீயராக ஆக்கிவிட்டார்கள்!’ நாற்பது வயதாகிவிட்ட ஒருவரின் ரகசியப் புலம்பல் இது.

    தனக்குப் பிடித்த துறையை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை.

    `மகனுக்கு நல்லதுதானே செய்கிறோம்!’ என்று நினைத்து அவர்கள் செய்தது அவருக்குப் புரிந்தாலும், கௌரவமான பதவியோ, நல்ல வருமானமோ அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. வேண்டாவெறுப்பாகவே உத்தியோகம் பார்க்க வேண்டிய நிலைமை.

    மகிழ்ச்சியை எப்படி அடைவது?

    நமக்கு வேண்டும் என்பதை அடைந்தால் மகிழ்ச்சி. இது மனிதருக்கு மனிதர் மாறுபட்டிருக்கும்.

    `என் குழந்தைகள் உடல் உபாதை எதுவுமில்லாது, சிரித்தபடி இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!’ என்கிறார் ஒரு தாய்.

    `எனக்குப் பிடித்த ஒரு காரியத்தை நல்லவிதமாகச் செய்து முடித்தால்!’ — இன்னொருவர்.

    பலர் மனதில் எழும் கேள்வி: `நான் எவ்வளவோ பாடுபட்டும் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றனவே?’

    கதை

    ஒரு காய்கறிச்சந்தையில் இந்திய தம்பதி இருவர் இட்லி வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இட்லியுடன் இருவகை சட்னி. மலாய், சீனர்கள் எல்லாரும் ஆசையுடன் வாங்கிப்போனார்கள்.

    அந்த மாது என்னிடம் கூறினார், “போன வாரமும் கடைபோட்டோம். ஒரே நஷ்டம்!”

    வியாபாரம் செய்தால் நிறைய பணம் ஈட்டலாம் என்று நம்பி வந்திருக்கிறார்கள். ஆனால், அதற்குமுன் கணக்கு கற்கத் தவறிவிட்டார்கள்.

    சுவையான, அளவில் பெரிதான இட்லிகள். இரண்டு இட்லி நாற்பத்தைந்து காசு என்று ஏதோ விலை சொல்லி, அதற்குமேல் ஒருவர் வாங்கிப்போனால், அதற்கான கிரயத்தைச் சரியாகச் சொல்லத் தெரியாது, வாய்க்கு வந்ததைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.

    `இரண்டு இட்லிக்கு இவ்வளவு செலவாகிற்று. அதைவிடக் கூடுதலாக விலை சொன்னால்தான் லாபம்,’ என்றெல்லாம் கணக்குப்போடத் தெரியாமல் போக, ஆழம் தெரியாமல் காலை விட்டிருக்கிறார்கள்.

    ஒரு காரியத்தைச் செய்யுமுன், அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவேண்டாமா?

    பொதுவாக, எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிட்ட நம் இலக்கு சரியாக இருக்க வேண்டும். அதன்பின், அதை நோக்கி உழைக்க வேண்டும் — என்ன இடர் வந்தாலும் மனந்தளராது.

    “உழைப்பு, விளையாட்டு, மௌனம் மூன்றும் கலந்தது வெற்றி”. (ஐன்ஸ்டைன்)

    மௌனம் எதற்கு என்று யோசித்தோமானால், நாம் செய்யப்போவதைப்பற்றி எல்லாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கக்கூடாது என்பது புரிகிறது. எல்லாரும் நம்மைப்போலவே சிந்திப்பார்கள் ன்று சொல்ல முடியாது. ஊக்குவிப்பதற்குப் பதில் அச்சத்தை ஏற்படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆரம்பத்திலேயே தளர்ச்சி அடைந்துவிடுவோம்.

    விளையாட்டு என்பது ஒரே காரியத்தை அலுக்கும்வரை செய்யாது, போதுமான ஓய்வு அல்லது வேறு காரியங்களிலும் ஈடுபடுவது என்று கொள்ளலாம். செய்பவருக்கு அலுப்பு தட்டினால், அக்காரியம் சோடையாகிவிடும்.

    இதெல்லாம் ஒரு வெற்றியா!

    வெற்றி, மகிழ்ச்சி என்பதெல்லாம் சமூகத்தில் ஒருவருக்கு என்ன இடம், அவரிடம் என்னென்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தல்ல.

    இக்காலத்தில் பதவி மோகம் என்ற வியாதி பெரும்பான்மையோரை ஆட்டுவிக்கிறது. விலையுயர்ந்த கார்கள் பல, கிலோ கணக்கில் தங்க நகைகள், பட்டங்கள் இதெல்லாம் ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருமா என்பது யோசிக்க வேண்டிய சமாசாரம்.

    சட்டத்துக்கு உட்பட்டு இவ்வளவும் சம்பாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். எப்படி எப்படியோ சேர்த்த சொத்தைப் பிறர் கண்ணில் படாது ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமே, பிடிபட்டுவிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் உழன்றிருந்தால் மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?

    வெற்றி கிட்ட

    எந்த ஒரு காரியத்தில் ஈடுபடும் முன்னரும் பயம் எழுவது தவிர்க்க முடியாதது. `வெற்றி பெற்றே தீருவேன்!’ என்ற தீவிரம் `தோல்வி அடைவோமோ?’ என்ற பயத்தைப் போக்கிவிடும்.

    நாற்பது வயதுக்குமேல் ஒரு பெண்மணி நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா?

    எனக்கு வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. வீடியோவைப் பார்த்துக் கற்க ஆரம்பித்தேன். முதலில் திணறலாக இருந்தது. அவ்வப்போது என் மகள் வந்து கற்றுக்கொடுக்க முயற்சித்து, `உன் டீச்சர்கள் உனக்கு எப்படித்தான் பாடம் சொல்லிக்கொடுத்தார்களோ!’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

    எந்த ஒரு காரியத்தையும் எப்படிச் செய்வது என்பது அவரவர் திறமையையும் துணிச்சலையும் பொறுத்தது. முப்பதுக்குமேல் வயதானவர்களுக்கு எந்த புதிதான விஷயத்தைக் கற்பிப்பதானாலும், சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல், `இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று கூறுவது தவறு. இம்முறையால், `என்னால் முடியுமா?’ என்ற அவர்களுடைய குழப்பமும், பயமும் இன்னும் அதிகரிக்கும்.

    நீருக்குள் மூச்சு விடுதல், கைகளை எப்படி அசைப்பது என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, நீந்துவதை அவர்கள் போக்கில் விடவேண்டும். (என் மகள் ஆரம்பப்பள்ளி மாணவியாக இருந்தபோது, இருபதடி உயரத்திலிருந்து நீருக்குள் குதிக்கச்சொல்வார்கள். அந்த வயதில் பயம் தெரியாது. எப்படியோ திணறி, நீர்மட்டத்துக்குமேல் வந்துவிடுவாள்).

    பெரியவர்களின் மனநிலை புரியாது, ஒரு நீச்சல் பயிற்சியாளர், தன்னிடம் பழகவந்த பெண்களுக்குத் தான் சொல்வது புரியவில்லையே என்ற எரிச்சலுடன், `உங்களுக்கு ஆங்கிலம் புரியுமா, இல்லையா?’ என்று விரட்ட, எல்லாரும் அவரிடம் கற்பதை நிறுத்திக்கொண்டார்கள்.

    சில பெண்கள், `நீச்சலால் உடல் குண்டாகி விடுகிறது!’ என்று பாதியில் விட்டார்கள். புதிய உடற்பயிற்சியினால் பசி அதிகமாக எடுக்கத்தான் செய்யும். அதற்காக உணவின் அளவை அதிகரித்தால், எடை கூடாமல் என்ன செய்யும்?

    வேறு சிலர் முகம் கறுத்துவிடுகிறது என்று நிறுத்தினார்கள்.

    எதைக் கற்கும்போதும் பல இன்னல்களுக்கும், தடங்கல்களுக்கும் ஆளாகுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காகப் பயந்து பாதியில் விட்டால் முழுமையாகக் கற்பது எப்படி?

    நான் நீச்சல் கற்கும்போது, (நிசமாகவே) கண்ணை மூடிக்கொண்டு எதிரில் நீந்திவந்து கொண்டிருந்த ஒருவர் கைகளை சுழற்றிப்போடும்போது, அது அறைவதுபோல் என் முதுகில் பட, நான் அமிழ்ந்து போய்விட்டேன். எப்படி நீருக்குமேலே வருவது என்று புரியாமல் திணறிக்கொண்டு, ஏதேதோ முயற்சிகள் செய்தபோது, ஆபத்பாந்தவனாக ஒரு கரம் என்னைத் தூக்கிவிட்டது. காவலர்தான்.

    சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பின் வீடு திரும்பினேன். ஒரு பெண்மணி, `என்னையும் ஒரு தடவை காப்பாற்ற நேரிட்டது,’ என்று கூறியது பலம் தருவதாக அமைந்தது.

    வழக்கம்போல் மறுநாளும் உற்சாகம் குன்றாது போனேன்.

    நீச்சல் காவலர்கள் என் மகளிடம் சொன்னார்களாம், `எங்களுக்கு தண்ணீரில் இறங்கிச் சொல்லிக்கொடுக்க அனுமதி கிடையாது. ஆனால் உன் தாயின் மன உறுதி அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது!’ என்று. குளத்திற்கு வெளியே நின்ற நிலையில், கையசைவைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

    தண்ணீரில் அமிழ்ந்து கிடப்பது எனக்குப் பிடித்த விஷயம். உடலில் புத்துணர்ச்சி பெருகும். ஒவ்வொரு நாளும் இதுவரை உபயோகப்படுத்தப்படாத ஒரு பாகத்தில் வலி உயிர்போகும். இருந்தாலும், எடுத்த முயற்சியை அரைகுறையாக விட மனமிருக்கவில்லை.

    மிக ஆழமாக இல்லாத இடத்திலேயே பயமின்றி, சாவகாசமாக நீந்திக்கொண்டிருந்தவளை, ஒரு காவலர், `நீங்கள் ஆழமான இடத்தில் LAPS செய்யத் தயாராகிவிட்டீர்கள்,’ என உற்சாகப்படுத்த, அடுத்த கட்டத்துக்குத் தாவினேன். அதனால், இரண்டு மாதங்களில் 500 மீட்டர் தொலைவு நீந்த முடிந்தது. ஒரு நாள் விடாது போவேன்.

    வெற்றி என்பது எடுத்த காரியத்தில் பிரச்னைகளையும், தோல்விகளையும், பிறரது கேலியையும் லட்சியம் செய்யாதிருப்பது.

    யாரோ சொல்கிறார்களே என்று நமக்கு உடன்பாடில்லாத ஒன்றில் ஈடுபட்டால், திருப்தியோ, மகிழ்ச்சியோ கிடைக்காது — ஆரம்பத்தில் பார்த்த பொறியாளர்போல். விரக்திதான் மிஞ்சும்.

    நமக்குப் பிடித்தவற்றை, நம் தகுதியை உணர்ந்து செய்தால் வெற்றியும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் உறுதி.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (49)

    நிர்மலா ராகவன்

    உறவுகளும் நட்பும்

    நலம்

    உறவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும், நல்ல நண்பர்களையாவது பெறும் பாக்கியம் இருக்கிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

    `குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்கிறார்கள். ஆனால், நம்மிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்றே ஆராய்பவர்களிடம் போலியாகப் பழகினால்தான் அவர்களுடைய மதிப்பைப் பெறமுடியும். அப்போது நாம் நமக்கே உண்மையாக இருப்பது எப்படி நடக்கும்? நிறைவுதான் கிட்டுமா?

    உறவினரோ, நண்பர்களோ நம்மால் ஏதாவது காரியம் ஆகவேண்டியிருந்தால், சிலர் துதி பாடுவார்கள். வேறு சிலர் பொறாமையால் நமது முன்னேற்றத்தைத் தடுக்க நைச்சியமாகப் பேசி நடப்பார்கள்.

    இன்னொரு பிரிவினர், `இப்படி நடப்பதுதான் சிறந்தது,’ என்று தம் அபிப்ராயங்களைப் பிறரிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பவர்கள். அவர்கள் அதிகாரத்தை விரும்புகிறார்களே தவிர, அறிவுரை அக்கறையால் இருக்காது. தனித்து இயங்கும் துணிவு குறைவானவர்கள்தாம் இப்படி நடக்கிறார்கள். தவிர்க்க முடியாவிட்டால், அவர்கள் எதிரில் தலையாட்டிவிட்டு, அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

    இதனால்தான் தகாத நட்பினருடன் பழகுவதைவிடத் தனிமை சிறந்தது என்று சொல்கிறார்களோ!

    தனிமையில் இனிமை

    சிந்திப்பதற்குத் தனிமையைப்போல் வேறில்லை. வாய் மூடினால் காதும், கண்ணும் இன்னும் சிறப்பாக வேலை செய்ய, எதையும் பகுத்தறியும் தன்மை வளரும்.

    இது புரியாதவர்கள்தாம் யாருடனாவது, எதைப்பற்றியாவது எப்போதும் பேச முனைகிறார்கள். தனிமையிலிருப்பவர்களைப் பார்த்து, `இவர்கள் ஏன் நம்மைப்போல் இல்லை?’ என்று அதிசயப்படுகிறார்கள். `ஒரு வேளை, நம்மை மதிக்கவில்லையோ!’ என்ற ஆத்திரமும் ஏற்படுகிறது. எப்போதும் பிறருடன் சேர்ந்து கலகலப்பாகப் பழகினால் மட்டுமே மகிழ்ச்சி என்றிருந்தால் ஆழ்ந்து யோசிப்பது எங்ஙனம்?

    தனிமையில் பெரும்பொழுதைக் கழிப்பவர்களுக்கு உலகத்தினரின் போக்கு புரிந்துபோகிறது. அதிகம் பேசாது, பிறரது பிரச்னைகளை அவர்களே பகிர விரும்பும்போது உன்னிப்பாகக் கேட்க முடிகிறது. பிறருக்கு ஏற்ற ஆலோசனை அளித்து, ஆதரவாக இருக்கும் தன்மை வளர்கிறது.

    விரும்புகிறார்களோ, இல்லையோ, எழுத்தாளர்கள் தனிமையில் கழிக்க வேண்டிய பொழுது அதிகம். அதற்காக, எல்லா நேரத்தையும் தனிமையில் கழிக்க வேண்டும் என்பதுமில்லை. மனிதன் தனியான தீவில்லை.

    திருமணம் குறுகியகாலப் பயிரா?

    ஒரே பார்வையில் ஒருவரை பிடித்துப்போனாலும், எந்த உறவும் பலப்படுவதற்கு நீண்ட அவகாசம் பிடிக்கும். இதனால்தான் திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ஆனால், இன்றோ!

    கதை

    மணமகள் தேவை என்ற பகுதியில் விண்ணப்பம் செய்து மனைவியாகி இருந்தாள் காஞ்சனா. மணமகனான மகாதேவனுக்கு அப்போது நாற்பது வயதுக்குமேல் ஆகியிருந்தது.

    நோயாளியான அண்ணனையும், சக்கர நாற்காலியில் வாசம் செய்த தாயையும் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஒரு கல்யாணம் செய்துகொண்டால், தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள, அதில் சிறிதாவது இன்பம் சேர்க்க ஒரு ஜீவன் கிடைக்குமே என்ற ஆசையில் விளம்பரம் செய்திருந்தார்.

    திருமண நாள் குறிக்கப்பட்டதுமே கடன் வாங்கி, சொந்த வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் உற்சாகமாக இறங்கினார்.

    முதல் இரவிலேயே காஞ்சனா சில நிபந்தனைகளை விதித்தாள்: அண்ணன் அவர்களுடன் இருக்கக்கூடாது, சொந்த வீட்டைத் தன் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டும். `பெற்றோர் இருந்துவிட்டுப்போகட்டும்’ என்று `பெரிய மனது’(!) பண்ணினாள்.

    புதுமனைவியா, நினைவு தெரிந்த நாள்முதல் இரட்டைப்பிறவிபோல் பழகிய அண்ணனா என்றெல்லாம் மகாதேவன் யோசிக்கவே இல்லை. உடனே அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்.

    இப்போதெல்லாம், `திருமணம்’ செய்துகொண்டால், குறுக்கு வழியில் பணக்காரி ஆகலாம் என்று பல பெண்கள் நினைப்பதுபோலிருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டில் நடந்த கதைதான்.

    முதலிரவன்றே உடல் நிலை சரியாக இல்லை என்று சாக்கு சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குப் போய்விட்டாள் சௌந்தரி. கணவன் எவ்வளவு முயன்றும் அவனுடன் வாழ ஒப்பவில்லை. வேறு வழியில்லாமல், `விவாகரத்து’ என்றபோது, `இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான்!’ என்றாளாம் சௌந்தரி.

    என்ன செய்வது என்று அவர்கள் திகைத்துக்கொண்டிருந்தபோது, “திருமணம் நிறைவு பெறவில்லை என்று காரணம் காட்டினால் கிடைக்கும்,” என்று ஓர் உபாயத்தைச் சொன்னேன்.

    அவளிடமிருந்து விடுதலை கிடைத்தாலும், மன நிம்மதி போய்விட்டது அந்த அப்பாவிக் கணவனுக்கு. அதிகம் விசாரிக்காமல் பண்ணிக்கொண்டதன் விளைவு! ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்பட்டோம் என்ற அதிர்ச்சி மறக்கக்கூடிய ஒன்றா!

    குறுகிய காலத்தில் பணக்காரியாக ஆகும் திட்டத்துடன் ஏமாற்றி, பொய்யுரைத்து, ஆண்களின் உணர்ச்சிகளுடன் விளையாடும் பெண்களும் நம்மில் இருக்கிறார்கள் என்கிற நிதரிசனமே அதிர்ச்சியாக, கசப்பாக இருக்கிறது.

    ஏமாறுவதும் ஏமாற்றுவதும் இரு பாலருக்கும் உள்ள குணம்தான் என்றாலும், ஏமாற்றப்பட்டவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

    கதை

    நிறையப் படித்து, பெரிய வேலையிலிருந்த காரணத்தினாலேயே ரூபாவிற்குத் திருமணம் தடைபட்டுக்கொண்டே போயிற்று. அவளையும் ஒருவர் மணக்க முன்வந்தபோது, பூரித்துப்போனாள். கணவர் சொற்படி கேட்டு, வேலையை விட்டாள்.
    `நல்ல வேலையை ஏன் விட்டாய்?’ என்று அங்கலாய்ப்புடன் கேட்டவர்களிடம், `எங்களுக்கு இன்னும் பணம் வந்து ஒன்றும் ஆகவேண்டாம். அவர் சம்பாதிக்காததா!’ என்று பெருமை பேசினாள் ரூபா.

    `என் கணவர் என்னைவிட்டு ஒரு வருடம் பிரிந்திருந்தால்கூட இன்னொரு பெண்ணை நாடமாட்டார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது!’ என்பாள் கர்வத்துடன்.

    நாற்பதாண்டு இல்லறத்துக்குப்பின் அந்த நம்பிக்கை பொய்த்தபோது, அதன் தாக்கம் அதிகமாக இருந்தது: `மகனின் மனைவியிடமே தவறாக நடந்துகொள்பவனையா குணக்குன்று என்று நம்பினோம்!’ (விழாக்காலங்களில் அவளே கணவனை பழித்தபோதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது).

    தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்ற ஏமாற்ற உணர்வில் அன்பாகப் பழகியவள் ஆத்திரக்காரியாக மாறினாள்.

    எதுதான் நல்ல இல்லறம்?

    கணவனும், மனைவியும் இரு தனி மனிதர்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் அமைய வேண்டுமானால், இரட்டையரைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

    இது புரியாது, ஒருவரோடு மற்றொருவர் போட்டி போட்டுக்கொண்டிருந்தாலோ, அல்லது, வித்தியாசமாக இருப்பதால் பழித்துக்கொண்டிருந்தாலோ, இருவருமே வீழும் சாத்தியக்கூறு அதிகம். கோபமாக இருக்கும்போது அதை அடக்கிக்கொண்டு யோசித்தாலும், பழைய குப்பைகளைக் கிளாறமலும் இருந்தாலே பல பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாமே!

    ஒரு தமிழ்ப்படத்தில், `உனக்கு என்மேல் காதல்! அதை ஒப்புக்கொள்!’ என்று கதாநாயகன் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைகிறான், திரும்பத் திரும்ப! `அன்பு’ என்பது அடித்தால், மிரட்டினால், கெஞ்சினால் வருமா, என்ன?

    ஒத்துப்போன சில விஷயங்களைப் பங்கு போட்டுக்கொண்டு, (உ-ம்: ஏதாவது பொழுதுபோக்கு), அவரவருக்குப் பிடித்ததைச் செய்தால், குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். இத்தகையச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் மன ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (48)

    நிர்மலா ராகவன்

    பொறுமை எதுவரை?

    நலம்
    ஒரு மலேசியப் பத்திரிகையில் வந்த கேள்வி: `திருமணமான முப்பது வருடங்களில் என்னை என் கணவர் அடிக்காத நாளே கிடையாது! எலும்புகள் நொறுங்கி, மருத்துவச் சிகிச்சைக்கு அடிக்கடி போனதும் உண்டு. இதற்கு நான் என்னதான் செய்வது?’

    பதில்: உங்கள் பொறுமைக்கு நல்ல பயன் கிடைக்கும்.

    சம்பந்தப்பட்ட பெண்ணைப்போல் என்ன விளைந்தாலும் பொறுமை காத்தவர்கள் முன்பற்களை இழந்து, காலைச் சரியாக ஊன்றமுடியாது நடப்பதைக் கண்டிருக்கிறேன். வதையால் சிலர் இறந்துகூடப் போயிருப்பார்கள்.

    `பொறுமை’ என்பது பெண்களின் அணிகலன் என்று தப்பாகச் சொல்லிவைத்துவிட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது.

    பொறுமை என்றால் அறவே யோசிக்காமல் ஒரு நிகழ்வை ஏற்பதாகாது. ஏன் அப்படி நிகழ்கிறது, பொறுத்துக்கொண்டே போனால் இறுதியில் என்ன ஆகிவிடும் என்றெல்லாம் சிந்தித்தால் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது புலனாகும். இதில் ஆண்-பெண் வித்தியாசம் கிடையாது. எவராக இருந்தாலும், அளவுக்கு மீறிய பொறுமையால் பாதிப்புதான்.

    கதை

    ஒன்றாகப் படித்த, ஆனால் தன்னைவிடச் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற கல்லூரி அழகு ராணி மேகலாவை காதல் கல்யாணம் செய்துகொண்டான் ரகு.

    எண்ணற்ற கனவுகளுடன், இந்தியாவிலிருந்து அவனுடன் வெளிநாட்டிற்குப் பயணமானாள் மேகலா.

    (பெரும்பாலான ஆண்களுக்குத் தாம் மணக்கப்போகும் பெண்ணைப் பிறரிடம் காட்டி பெருமைப்படலாம் என்ற பேராவல் எழுவது இயற்கை. ஆனால், கல்யாணத்திற்குப் பின்னரோ, தம்மைவிட எந்த விதத்திலாவது அவள் சிறந்திருந்தால் பொறுக்க முடியாது போய்விடுகிறது. எப்படியாவது அவளை அடிபணிய வைக்கவேண்டுமென்று பெருமுயற்சி செய்வார்கள்).

    சில வருடங்களுக்குப்பின் அவள் உத்தியோகம் பார்ப்பதற்குத் தடை விதித்த ரகு, அவளுடைய அழகையும், குணத்தையும் பிறர் புகழ்ந்ததைச் சகிக்க முடியாது, அவளைப் பலவாறாக துன்புறுத்தினான். அவளுடைய பொறுமை இருபத்து ஐந்து வருடங்களுக்குமேல் நீடித்தது.

    அத்தனை காலம் மேகலா ஏன் விட்டுக்கொடுத்தாள் என்ற கேள்வி எழுகிறது.

    மேகலாவின் தந்தை அவளைப்போலவே பரமசாது. அந்த நல்ல மனிதரை பலர் முன்னிலையில் தன் தாய் தலைகுனிவாகப் பேசியதைப் பார்த்து வளர்ந்திருந்த பெண் தானும் அப்படி இருக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தாள். ஒரு முறை உடல்வதையின் உக்கிரம் தாங்காது, காவல்துறையை அழைக்கத் துணிந்தாள்.

    விளைவு: ரகுவின் கைகளுக்கு விலங்கு மாட்டப்பட்டது. ஆத்திரத்துடன் மேகலாவை விவாகரத்து செய்தான் அவன். அப்போதும், `என்னைக் கைவிடாதீர்கள்!’ என்று அவள் கெஞ்சி அழுதாளாம்.

    இப்படி ஒரு பொறுமை பெண்களுக்கு அவசியம்தானா?

    ஆணைச் சார்ந்திருந்தால்தான் பெண்ணுக்குக் கௌரவம் என்று பொறுத்திருந்தாளோ!

    அல்லது, தன்னைப்பற்றிப் பெருமையாக நினைத்திருந்த உறவினர்கள் தன்னைத் தாழ்மையாக நினைத்துவிடக்கூடாதே என்ற பதைப்போ?

    மேகலாவிடம் படிப்பிருந்தது. சொந்தக்காலில் நின்றிருக்க முடியும்.

    கணவனின் வதையிலிருந்து ஒரு பெண் விடுபட நினைத்தால், அதில் என்ன கேவலம்?

    இன்னொரு கதை

    அவளும் அவளை மணந்தவரும், இருவருமே, பொறுமை அற்றவர்கள். அவள் அன்பான, செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு வாய்த்தவரோ சிறு வயதில் எந்த ஆசையும் நிறைவேறாது. ஏமாற்றமும் அதனால் விளைந்த ஆத்திரமும் கொண்டு வளர்ந்தவர்.

    மனைவியைத் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முயற்சித்து, அவள் தனக்குமீறி எதுவும் செய்யக்கூடாது என்பதுபோல் அப்படி ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    `கணவன் சொற்படி நடப்பதே ஒரு பெண்ணுக்குப் பெருமை,’ என்று போதிக்கப்பட்டு வளர்ந்திருந்த அவள் முதலில் பொறுத்துப்போனாள். பிறகு, `ஏன் முன்போல் எதிலுமே வெற்றி பெற முடியவில்லை?’ என்று யோசித்து, வாக்குவாதம் செய்தாள். இருவரும் மோத, சிக்கிமுக்கி கற்களைப்போல் நெருப்பு வளர்ந்தது.

    தான் பெற்ற குழந்தைகளுக்கு ஒரு அப்பா வேண்டும் என்று பொறுத்துப்போன அவள், பொறுமையின் எல்லையைக் கடந்தாள்.

    யோசித்துப் பார்க்க, சிறு பிராயத்தில் அடைந்த துன்பங்களைக் கணவரால் மறக்க முடியவில்லை, அதனால் அவரைத் தன்னால் மாற்ற முடியாது என்று புரிந்துகொண்டாள். ஆகவே, தான் மாறினாள். அவர் எது சொன்னாலும் வாய்திறவாது கேட்டுவிட்டு, பின் தனக்குச் சரியென்று பட்டதைச் செய்ய ஆரம்பித்தாள். அவள் எதிர்த்து வாயாடாததால், அவருக்கும் சண்டையில் சுவாரசியம் இல்லாது போயிற்று! அவள் போக்கில் விட்டார்.

    பொறுமை இல்லையே!

    கேக் செய்த கதை

    அத்தம்பதிகள் புதிதாக மணந்தவர்கள். எது செய்தாலும் ஒன்றாக இணைந்து செய்வதில் இன்பம் காண விழைந்து, கேக் செய்ய முயற்சித்திருக்கிறர்கள்.

    ”ஏனோ நாங்கள் எப்போது கேக் செய்தாலும், உதிர்ந்து போகிறது!” என்றார் அந்த மலாய் நண்பர். பக்கத்து வீட்டுக்காரர்.

    “சூடு ஆறுவதற்குள் வெட்டியிருப்பீர்கள்!” என்றேன்.

    அவர் அசட்டுச்சிரிப்புச் சிரித்தார். “பார்க்க நன்றாக இருந்ததா! எங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை!”

    தெருவில் வாகனமோட்டிச் செல்பவர்கள் சிவப்பு விளக்கு பச்சையாக மாறும்வரை பொறுமை இல்லாமல் விரைந்து, எதிர்ப்படும் வாகனத்தில் மோதி உயிர் இழப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

    காதுகொடுத்துக் கேள்!

    ஒரு மாது என்னிடம் சொன்னாள், “என்னிடம் யாராவது தங்களைப்பற்றிப் பேச வந்தால், `உங்கள் கஷ்டம் எனக்கெதற்கு? என் வாழ்வே சிரிப்பாய் சிரிக்கிறது!’ என்று கத்தரித்து விடுவேன்!” என்று.

    தன் கஷ்ட நஷ்டங்களையே சிந்தித்துக் கொண்டிருந்தால் உற்சாகம் குன்றிப்போகாதா! பிறருக்கு நம்மாலான உதவியைச் செய்ய முற்படும்போது மனநிறைவு, தன்னம்பிக்கை எல்லாம் கிடைக்குமே! அத்துடன், பிறர் நம்மைவிடத் துன்பப்படுகிறார்கள் என்று அறியும்போது நிம்மதியும் பிறக்கும்.

    கதை வேண்டுமா?

    ஒரு சிலரிடம், அவர்கள் கேளாமலேயே, பலரும் தம் கதையைச் சொல்லிக்கொள்வார்கள். பிறர் சொல்வதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்கவும் பொறுமை அவசியம், அல்லவா?

    எழுத்தாளராகவோ, நடிகராகவோ ஆக விருப்பம் இருப்பவர்கள் பிறரை ஆழ்ந்து கவனித்து, முடிந்தால் அவர்கள் கதையையும் அறிந்துகொண்டால்தானே கற்பனை பெருகும்!

    பொறுமையற்ற பிள்ளைகள்

    பெற்றோரில் ஒருவர் பொறுமையற்றவராக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களைப் பார்த்தே எதையும் கற்கும் அவர்களது குழந்தைக்கும் அதே தன்மை வரும் சாத்தியம் உண்டு.

    மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைக்கும் எல்லாவற்றையும் பொறுமையாக ஏற்கமுடியாது. விதையை மண்ணில் நட்டுவிட்டு, முளைத்துவிட்டதா என்று தினமும் முதல் வேலையாக மண்ணை விரலால் தோண்டிப் பார்க்கும்.

    குழந்தைகள் பொறுமையாக இல்லாதிருப்பது அவர்களுடைய அனுபவக் குறைவால்தான். மூத்தவர்கள் நிதானமாக விளக்கினாலோ, செய்துகாட்டினாலோ தானே அவர்களைப் பின்பற்றுவார்கள்.

    எழுத்தாளர்களுக்குப் பொறுமை

    ஆரம்ப எழுத்தாளர்கள் எதையாவது அவசரமாக எழுதி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, தங்கள் படைப்பு பிரசுரமாகவில்லையே என்று மனமுடைந்து போனால், அவர்கள் இத்துறையில் நிலைத்து இருக்கமுடியாது.

    ஒருவரது படைப்பு சிறப்பாக அமைய வேண்டுமென்றால், பல முறை திருத்தி எழுதும் பொறுமை வேண்டும். எழுதியதை அப்படியே வைத்துவிட்டு, சில நாட்கள் கழித்துப் படித்துப் பார்த்தால், யாருடையதையோ படிப்பதுபோல் இருக்கும். பல குறைகள் தென்படும்.

    `எவ்வளவு பிரயாசைப்பட்டு எழுதினேன்!’ என்று சுயபச்சாதாபம் கொள்ளாமல், இரக்கமின்றி அடித்துத் திருத்த வேண்டியதுதான். இப்போது கணினியால் அந்த வேலை எளிதாகிவிட்டது. ஆங்கிலத்தில் சொல்வார்கள், `You don’t write. You rewrite!’ என்று.
    படித்து முடித்துவிட்டீர்களா?

    உங்கள் பொறுமைக்கு ஒரு பாராட்டு! நீங்களே முதுகில் தட்டிக்கொள்ளுங்கள்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (47)

    நிர்மலா ராகவன்

    யாவரும் வெல்லலாம்

    நலம்-2-1-1-1
    `நான் ஒரு சோம்பேறி!’

    “எனக்கு சுறுப்பே கிடையாது. எந்தக் காரியத்தையும் ஒத்திப்போட்டுவிடுவேன்!”
    நம் பலவீனங்களை நாமே வெளிப்படையாகச் சொல்லாவிட்டால், பார்த்தவுடனேயே பிறருக்குத் தெரியவா போகிறது! அடக்கம் என்று (தவறாக) எண்ணுவதால் வரும் வினை இது.

    உண்மையில், இவ்வாறான நடத்தை ஒருவரது தாழ்வு மனப்பான்மையைத்தான் குறிக்கும்.

    நீண்ட கதை

    தன்னை ஒரு பயந்தாங்கொள்ளி என்று வாய்க்குவாய் சொல்லிக்கொண்ட எனது சக ஆசிரியை, மேரி, அப்படியில்லாத என்னை எப்போதும் வலுச்சண்டைக்கு இழுக்க, நான் அவளுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டேன்.

    ஒரு நாள், பாவமன்னிப்புபோல மேரி என்னிடம் அவளுடைய தாயைப்பற்றிக் கூறினாள். ”எங்கம்மா சொல்றதைத்தான் நான் கேட்டாகணும். வீட்டிலே எல்லார்மேலேயும் ரொம்ப அதிகாரம் செலுத்துவாள். அப்பாவும் அம்மாவை எதிர்த்து ஒன்றும் கூறமாட்டார்!” இதைச் சொல்லி முடிப்பதற்குள் படபடப்பு அதிகரிக்க, பல்லிடுக்கில் விரலை வைத்து அழுத்தினாள்.

    பல குழந்தைகள் இருக்கும் இல்லத்தில், அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை மனைவியிடமே விட்டுவிடுவார்கள் சில ஆண்கள். அப்போது ஒரு தாய் கொஞ்சம் கெடுபிடியாகத்தான் இருக்க நேரிடும். இல்லாவிட்டால் எல்லாரையும் எப்படி கட்டி மேய்க்க முடியும்?

    சில குழந்தைகள் தைரியமாக அப்போக்கை எதிர்ப்பார்கள், இல்லாவிட்டால் அலட்சியம் செய்து தம் போக்கில் நடப்பார்கள். இவர்களுக்குத் தண்டனையோ, திட்டோ ஒரு பொருட்டல்ல.

    மேரியைப்போன்ற சிலர் பயந்துபோய், `எனக்கு அம்மாவை எதிர்க்கத் தைரியம் இல்லையே!’ என்று தமக்குள் குமைந்து, சுயவெறுப்பை வளர்த்துக்கொள்வார்கள். அம்மாவைப்போல் இருப்பதாகத் தாம் நினைக்கும் பிற பெண்களை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன். இதை Transference என்கிறார்கள் மனோதத்துவத்தில்.

    நான் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது, குறுக்கே புகுந்து மேரி சண்டைபோட்டதன் காரணம் புரிய, அவள்மீது எனக்குப் பரிதாபம் ஏற்படவில்லை.

    குழந்தைப்பருவத்தில் எத்தனையோ இடர்கள். அவைகளைச் சமாளிக்கத் தெரியாததால் அப்போது குழப்பமும் வேதனையும் ஏற்பட்டிருக்கலாம். எப்போதோ நடந்தவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, தன்னுடன் பிறரையும் வருத்துவானேன்! வயது வந்ததும், அவைகளை அலசி, சமாதானம் அடைந்திருக்கலாமே!

    நடந்தது பத்து சதவிகிதமாக இருக்கும். ஆனால், மேரி போன்ற சிலர் அவைகளை நினைத்து, நினைத்து ஆத்திரத்தை வளர்த்துக்கொள்வது மீதி. இப்படிப்பட்ட மனப்போக்கினால், மனம் எளிதாகத் தளர்ந்துவிடும். இந்த தளர்ச்சி பயமாக, அல்லது நாணமாக எல்லாக் காரியங்களிலும் வெளிப்படுவதுதான் சோகம்.

    மேரியின் தாழ்மை உணர்வு அவளுடைய கூனலிலும், சாயம்போன பழைய புடவைகளையே உடுத்திவந்து, `ஏன் என்னை மாணவிகள் மதிப்பதில்லை?’ என்ற குழப்பத்திலும் வெளிப்பட்டது. (பட்டதாரி ஆசிரியையான அவளுக்கு பணப்பிரச்னை எதுவுமில்லை).

    ஒரு நாள், “என் அக்கா மகள், `இந்தமாதிரிப் புடவைகளையா கட்டிக்கொண்டு வேலைக்குப் போகிறாய்!’ என்று அதிசயப்பட்டுக் கேட்டாள்,” என்று என்னிடம் பேச்சுவாக்கில் சொன்னாள்.

    “நான் சொல்லவேண்டாம் என்று பார்த்தேன்!” என்றேன், சிறு சிரிப்புடன்.

    “அரதல் பழசா?”

    `ஆள் பாதி, ஆடை பாதி’ என்பதுபோல், நம் நடை உடை பாவனைகளை வைத்துத்தான் உலகம் நம்மை எடைபோடுகிறது. நம் மனம் குழம்பியிருக்கும்போது ஆடையிலோ, நிமிர்ந்து நடப்பதிலோ நாம் கவனம் செலுத்தத் தவறிவிட்டுகிறோம். நம்மைக் கவனிப்பதில் நாமே அலட்சியமாக இருந்தால், பிறர் எப்படிக் கவனிப்பார்கள், அல்லது மதிப்பார்கள்?

    `ஆம்,’ என்பதுபோல் தலையாட்டிவிட்டு, “இவை உன்னுடைய வார்த்தைகள். நான் சொல்லவில்லை,” என்றேன் அவசரமாக.

    அன்றையிலிருந்து புதிய புடவைகளை உடுத்திவந்தாள்.

    தாழ்ந்தவர்களா?
    `தலித்’ என்றால் என்ன?
    `ஒடுக்கப்பட்டவர்கள்,’ என்று எனக்கு விளக்கமளித்தாள் ஒரு தலித்திய பெண் எழுத்தாளர்.

    நான் சற்று யோசித்துவிட்டு, “நாடுவிட்டு நாடு செல்பவர்கள் எல்லாருமே தலித்துகள்தாம்,” என்றேன்.

    இவர்களைப் பிறர் சரிசமமாக ஏற்பதில்லை. ஊடகங்களிலும், ஏன் பாட புத்தகங்களிலும்கூட தாழ்மையானவர்கள் என்பதுபோல்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.

    கதை

    மலேசிய ஆரம்பப்பள்ளியில், ஆங்கிலப் பாட புத்தகங்களில், `அகமது புத்திசாலி. ஆசிரியர் பாராட்டுகிறார்,’ என்ற ரீதியில் ஆரம்பித்து, சீனர்களுக்கு இரண்டாவது இடம் கொடுத்து, `முத்து முட்டாள், சோம்பேறி,’ என்று எழுதப்பட்டிருந்தது.

    என் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில், அவள் ஏன் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல மறுத்தாள் என்பது புரிந்தது.

    என் பள்ளியின் சார்பில் பாடத்திட்டத்துறைக்கு (Curriculum Department) அனுப்பப்பட்டிருந்தேன்.

    “ஏனோ, இந்திய மாணவர்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள்,” என்று அங்கிருந்த ஓர் அதிகாரி சலிப்புடன் கூறினார்.

    “பாட புத்தகங்களில் இப்படித் தாறுமாறாக எழுதியிருந்தால், பின் எப்படி அவர்கள் சுயகௌரவம் வளரும்?” என் குரலிலிருந்த ஆத்திரம் அவரை அதிரவைத்தது.

    என்னிடம் வெகுவாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு, “இனிமேல் இப்படி நடக்காது பார்த்துக்கொள்கிறேன்! பதிப்பகங்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்,” என்று உறுதி அளித்தார்.

    அடிக்கடி `நீங்கள் தாழ்மையானவர்கள்!’ என்று பிறர் ஒதுக்கினால், ஒருவர் அதை நம்பத் துவங்கி, தன்னையே மட்டமாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறார். (அந்த இயலாமை ஆத்திரமாக மாறி, தம் குடும்பத்தினரிடம் பாய்வதும் உண்டு).

    தாழ்மை உணர்ச்சி ஏன்?

    உயர்கல்வி, செல்வச்செழிப்பு, அல்லது அவர்கள் விரும்பும் ஏதோ ஒரு தன்மை இல்லாதவர்கள் தம்மை மட்டமாக எடைபோட்டுக்கொள்கிறார்கள். தமக்குள் ஏதோ திறமை இருக்கலாம் என்று அவர்கள் நினைத்துப் பார்ப்பதுகூடக் கிடையாது.
    சமீபத்தில், “பரதநாட்டியத்தால் என்ன நன்மை?” என்று சில பெண்களிடம் கேட்டேன். அக்கலையில் பதினைந்து வருடங்கள் இடைவிடாது ஈடுபட்டிருந்தார்கள்.
    `மன இறுக்கம் கிடையாது,’ என்றாள் அர்ச்சனா.
    `Posture! (தோற்றப்பாங்கு)’ என்றாள் சவிதா.
    அவளைப் பல காலம், `கூனாதே! தலையில் கனமான புத்தகத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து நட!’ என்று விரட்டியிருக்கிறேன். இருந்தும் அவளால் மாற முடியவில்லை.

    விரக்தியுடன், `உனக்கு எவ்வளவுதான் சொல்வது! பிழையில்லாமல் எவ்வளவு அழகாக நீ ஆடினாலும், கூனல்தான் கண்ணுக்குத் தெரிகிறது; அதனால் பாராட்டத் தோன்றவில்லை,’ என்று நான் இறுதியாகக் கூறியபின், சவிதா விழித்துக்கொண்டாள். ஏழ்மை தன் குற்றமில்லை என்று தெளிந்தாள். நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தாள். உடலைப்போலவே தன்னம்பிக்கையும் உயர, கல்வியிலும் உயரமுடிந்தது.

    தோல்வியா? ப்பூ!

    தோல்வியைக் கண்டு சிரிக்கப் பழகினால், நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள மாட்டோம். பிறரையும் அப்படிச் செய்ய விடமாட்டோம்.

    நான் ஏதோ விளையாட்டுப்போட்டியில் கலந்து வெற்றி பெறாதபோது, ஒரு மலாய் ஆசிரியை, “ஐயையே! தோத்துட்டியே!” என்று கேலிசெய்தாள். அவளை எனக்குப் பரிச்சயமில்லை. என்னுடன் முதன்முறையாக அன்றுதான் பேசினாள்.

    நான் உடனே, “நானாவது தைரியமாகப் பங்குகொண்டேன். நீ அதுகூடச் செய்யவில்லையே!” என எதிர்த்தேன்.

    என் முகம் அவமானத்தில் சுருங்கும் என்று அவள் எதிர்பார்த்தது நடைபெறாததால், அவளுக்கே அது திரும்பியது.

    வெற்றி தோல்வியை சமமாகப் பாவித்து நடப்பவர்களின் பலமே அவர்களது துணிச்சல்தான். இதனால் பல புதிய காரியங்களில் ஈடுபடமுடிகிறது. அவர்கள் பல துறைகளில் கொண்ட ஈடுபாடும், அவைகளில் பெறும் வெற்றியும், `இவர்களுக்கு என்ன, ஒரு நாளில் இருபத்து நாலு மணிக்குமேல் இருக்கிறதா!’ என்று பிறரை வியக்கவைக்கும்.

    வெற்றியா! எப்படி?

    தோல்வியை அஞ்சி ஒரு காரியத்தில் இறங்காதிருப்பது கோழைத்தனம். அதை வெற்றிகரமாக முடிக்க நம்மால் முடியுமா, முடியாதா என்று பின் எப்படி அறிந்துகொள்ள முடியும்? `இது இல்லாவிட்டால் இன்னொன்று!’ என்று வேறொரு காரியத்தில் இறங்கி, நம் திறமையைப் பரீட்சை செய்துகொள்ளலாம்.

    எந்த ஒரு காரியம் செய்ய ஆரம்பித்தாலும் அதில் ஆர்வம் காட்டவேண்டும். `இன்னும் எப்படி இதில் சிறப்பது?’ என்று சிந்தித்து, தேவையானால், ஆராய்ச்சியும் செய்யவேண்டும்.

    `இந்தக் காரியத்தைச் செய்வதால் என்ன லாபம்?’ என்ற சிந்தனை எழுந்தால் விளைவு எப்படி திருப்திகரமாக இருக்கும்?

    `ஏனோ எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியவில்லையே!’ என்ற தளர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும்தான் மிகும்.

    தொடருவோம்

    Share
  • யார் பிள்ளை?

    நிர்மலா ராகவன்

    “நாளைக்கு அப்பாவோட திவசம், பாபு. லீவு எடுத்துடு!’

    அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பாபுவாம், பாபு! பாலசுப்ரமணியம் என்று பெற்றோர் வைத்திருந்த பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் என்னவாம்? பெயரை மாற்றிவிட்டால் மட்டும் தான் அவர்களுக்குப் பிறந்த பிள்ளை இல்லை என்றாகிவிடுமா?

    மீனாட்சி இன்னும் இரண்டு முறை நினைவுபடுத்தினாள்.

    இறுதியாக அவன் பதிலளித்தான். “ம்!”

    `இந்த கர்வத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! ஒடனே பதில் சொன்னா கொறைஞ்சு போயிடுவியோ?’ என்று முணுமுணுத்தவள், “நீ யாருக்கும் வேண்டாத பிள்ளை! நினைவு வெச்சுக்க. இந்த அப்பாதான் பாவம்னு ஒன்னை எடுத்து வளர்த்தாரு!”

    அவனுக்கு உடலெல்லாம் கூசிப்போயிற்று. எத்தனை தடவைதான் இதையே சொல்லிச் சொல்லி அவனது சுயகௌரவத்தை அழிக்கப் பார்த்திருப்பாள் இவள்!

    விவரம் தெரியாத வயதில், `அம்மா’ என்று அழைத்ததோடு சரி. அப்போதெல்லாம், `எனக்கே பசிக்குதே! பிள்ளைக்கும் பசிக்குமில்லே!’ என்று அவன் சாப்பிட்டுக் கை கழுவிவிட்டு வருவதற்குள், ஒரு பெரிய தட்டில் மிக்ஸ்சர், நிலக்கடலை என்று ஏதாவது வைத்திருப்பாள். அதன் பலனாக, அவளைப்போலவே அவள் வளர்த்த மகனும் பருத்துப்போனான். நண்பர்களுடன் பழகத் தெரியவில்லை. அம்மாவை அதிகமாக நாடினான். அவள் விரும்பியதும் அதுதானே!

    இடைநிலைப் பள்ளியில் காலெடுத்து வைத்தபோதுதான், தான் ஒன்றுவிட்ட அண்ணன், அக்காள் என்று நினைத்தவர்களெல்லாம் உண்மையிலேயே தன் கூடப்பிறந்தவர்கள் என்ற உண்மை தெரிய வந்தது.

    “நம்ப அப்பா இப்பல்லாம் என்னை அடிக்கிறதில்லே!” பூரிப்புடன் சொன்னான், வேலு — சித்தி மகன்.

    “என்னண்ணே, என்னையும் ஒன்னோட சேத்துக்கறே?” என்று சிரித்தான் பாபு. “சரியாச் சொல்லு. என்னோட அப்பாதான் நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்போவே செத்துப்போயிட்டாரே!”

    “போடா! அது ஒண்ணும் ஒன்னோட நிஜ அப்பா இல்லே”.

    “ஒனக்கு ரொம்பத் தெரியுமோ?” என்று வீம்பாகக் கேட்டாலும், பாபுவின் தொனி இறங்கிப்போயிற்று. அவனுடைய குழந்தைப் பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றுகூட வீட்டில் இல்லையே என்று கேட்டபோதெல்லாம் ஏதேதோ சாக்கு சொல்லி, பேச்சை மாற்றினாளே — `அம்மா’ என்று இப்போது அவளைப்பற்றி நினைக்க முடியவில்லை.

    ஏன் இந்தப் பொய்?

    “நீதான் மறந்துட்டே. நான்தானே ஒனை கையைப் பிடிச்சு, ஒனக்கு நடக்கச் சொல்லிக் குடுத்தேன்!” தலையை நிமிர்த்திச் சொன்னான். “நம்ப வீட்டிலே அந்த ஃபோட்டோகூட இருக்கு. அடுத்தவாட்டி வரப்போ எடுத்துட்டு வரேன், என்ன?”

    தன்னிடம் பராமுகமாக இருந்த சித்திதான் தன்னைப் பெற்ற அம்மாவா? தன்னை மட்டும் ஏன் அவளுக்குப் பிடிக்காமல் போயிற்று? எதற்காக இன்னொருத்தரிடம் தன்னைத் தூக்கிக் கொடுத்தாள்?

    அவனுடைய குழப்பங்களை உணராது, வேலு மேலும் கூறினான்: “எனக்கு அஞ்சு வயசா இருக்கிறப்போ ஒனக்கு ரெண்டு வயசு. ஒன்னைப் பெரியம்மாவுக்குத் தத்து குடுத்துட்டாங்க. நீயும் இப்போ இந்த பெரிய பங்களாவுக்குச் சொந்தக்காரன் ஆயிட்டே!” அவன் குரலில் பொறாமை வெளிப்பட்டது.

    அவன் சொல்லிப்போனது பாபுவின் மனதில் சூறாவளியைக் கிளப்பியது. `அம்மா’ என்று சொல்லிக்கொண்டு, என்ன அநியாயமெல்லாம் செய்திருக்கிறாள்!

    `நெஞ்சில சளியா இருக்கு. குளிக்காதேன்னு நான் சொல்லச் சொல்ல, தலைக்குக் குளிச்சுட்டு வந்து நிக்கறியா?’ என்று அவனை பிரம்பால் விளாசினாளே! அது தன்மேல் உள்ள பரிவாலோ, பாசத்தாலோ இல்லை. அதிகாரம். அவ்வளவுதான். அவள் அவனை எப்படி நடத்தினாலும் கேட்பாரில்லை என்ற தைரியம்.

    எவ்வளவோ எதிர்க்க நினைத்தாலும், வேறு என்ன செய்வது என்று புரியவில்லை, அந்த வயதில். அறையை உள்ளே தாளிட்டுக்கொண்டு, படிப்பில் மூழ்கினான்.

    பிற பையன்களைப்போல பெண்களைப்பற்றிப் பேசுவது அவனைப் பொறுத்தவரை வீண்! அவன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணே வேண்டாம்!

    தான் வளர்த்த பிள்ளையில் இன்னொருத்தி பங்குக்கு வருவதா என்று நினைத்தவள்போல அவளும் அவனது கல்யாணப் பேச்சை எடுக்காதது அவனுக்கு சௌகரியமாகப் போயிற்று.

    `இன்னிக்கு சாயந்திரம் கோயிலுக்குப் போகணும்,’ என்பாள், அடிக்கடி. அவன் ஒன்றும் பேசாது, அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்து அவளைத் தன் காரில் அழைத்துப்போவான். அங்கு அவன் பெயரையும் நட்சத்திரத்தையும் அர்ச்சகரிடம் தெரிவிக்கும்போது, அவன் பற்களைக் கடித்துக்கொள்வான். ரொம்பத்தான் அன்பு!

    அவன் இரவு நேரங்கழித்து வீடு திரும்பினால், `எவளோட இருந்துட்டு வந்திருக்கே?’ என்று வார்த்தைகளாலேயே குதறுகிறாள்! அவளை மணந்தவர் — அதுதான் வருடம் தவறாது, தான் பார்த்தே அறியாத ஒருவருக்குத் திவசம் பண்ணுகிறோமே, அவர்தான் — ஒரு வேளை, அப்படி இருந்தாரோ, என்னவோ! அந்த எரிச்சலைத் தன்மீது காட்டுகிறாள்!

    தனக்குப் பெண்கள் என்றாலே வெறுப்பு என்று அவளுக்கு இன்னுமா புரியவில்லை?
    இப்போதெல்லாம் அவள் கோயிலுக்குப் போவதில்லை. படுக்கையில்தான் வாசம். இரவு பகலாக கவனித்துக்கொள்ள ஒரு பணிப்பெண்.

    நல்ல வேளை, தான் நன்கு படித்து பெரிய வேலைக்குப் போனதால், பணத்தட்டுப்பாடு இல்லை என்ற ஆறுதல் ஏற்பட்டது அவனுக்கு. அவளது அறை வாயிலிலேயே நின்றுகொண்டு, “ஏதாவது வேணுமா?” என்று அவ்வப்போது கேட்பான். அவள் முனகியபடி மறுத்துவிடுவாள். வளரும் பருவத்தில் உணவளித்து வளர்த்தவளுக்கு ஏதோ, அவன் செய்யும் கைம்மாறு!

    அன்று சித்தி, அவனைப் பெற்றவள், வந்திருந்தாள். அவள் பொதுவாக அவனிடம் அதிகம் பேசியதில்லை. அதிசயமாக, தனியே அழைத்துப் பேசினாள்.

    “பாபு! ஒன்னை எதுக்கு அக்காகிட்டே குடுத்தேன், தெரியுமா?”

    அவன் வெறித்தான்.

    “ஒங்க சித்தப்பா சூதாடி. ஆபீஸ் பணத்திலே கைவெச்சுட்டாரு. வேலை போயிடுச்சு”.
    `சே! இது என்ன, இந்த ரெண்டு குடும்பமும் தாறுமாறா இருக்கே!’ என்று நொந்துகொண்டான்.

    “எடுத்த அம்பதாயிரத்தைத் திருப்பிக் குடுக்காட்டா ஜெயில்! அக்காகிட்ட வந்து அழுதேன். யோசிக்காம பணத்தைக் குடுத்தாங்க”. எதையோ யோசித்தாள். ”நானும் கடன் படணுமான்னு யோசிச்சேன்”.

    அதற்குமேல் கேட்கப் பிடிக்காமல் எழுந்து நடந்தான். கணவரைக் காப்பாற்ற பெற்றவளே தன்னை விற்கத் துணிந்திருக்கிறாள்!

    தன் விலை ஐம்பதாயிரம் வெள்ளி!
    சே, இவளெல்லாம் ஒரு தாயா!

    சிறு வயதில் தான் `அம்மா’ என்று அழைத்துவந்தவளை, இவளுடைய அக்காளை, நினைத்துப் பார்த்தான்.

    எத்தனையோ வருடங்களாக, `நீ ஒன்றும் என் அம்மா இல்லை!’ என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டிருக்கிறான். அதைப் பெரிதாக நினைக்காது, பிள்ளைக்குப் பசிக்குமே என்று உணவையே அன்பாக ஊட்டியிருக்கிறாள்!

    முன்பு ஒரு முறை, தலைக்குத் தண்ணீர் விட்டுக்கொண்ட அன்று அறைந்தாளே! அது பிள்ளைக்கு ஜன்னி கண்டுவிடுமே என்ற கலக்கத்தால்!

    நேரம் காலமில்லாது ஊர்சுற்றினால் மகன் கெட்டுவிடுவான் என்று எந்த பொறுப்பான தாய்தான் கவலைப்பட மாட்டாள்? வளர்த்தவளுக்கு அந்த உரிமைகூட கிடையாதா, என்ன!

    ஒவ்வொரு நினைவாக மேலெழுந்து, இவன் வளர்த்தவளிடம் மனதால் நெருங்க, சித்தி மனத்துக்குள் அழுதபடி, என்றோ மறைந்துவிட்ட கணவரிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள்: `அக்காவுக்குப் பிள்ளை பிறக்கலேன்னு இன்னொரு கல்யாணம் கட்டிக்கிறதா இருந்தாரு மாமா. அதைத் தடுக்க நம்ப பிள்ளையைக் குடுக்கலாம்னு மனசாரச் சொன்னதே நீங்கதான்! ஐயோ! ஒங்களைப்போய் சூதாடி, திருடன்னு வாயில வந்ததைச் சொல்லிட்டேனே!’

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (46)

    நிர்மலா ராகவன்

    மாற்றம் ஏமாற்றமல்ல

    நலம்-2-1-1-1

    மாறுவது நல்வழியில் இருப்பின், அதுவே முன்னேற்றம் என்பது. இல்லாவிட்டால், காலத்தையும், விதியையும் பழித்துக்கொண்டு, வாழ்வில் பிடிப்பில்லாது இருக்கவேண்டியதுதான். இதைத்தான், ஆடை நனைந்த சிறு குழந்தைகள்தாம் மாற்றத்தை விரும்புவர் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு.

    எதுவும் பழையபடியே இருந்தால், அது பழகிப்போய்விடுகிறது. புதிய வழி எப்படி இருக்குமோ என்ற அச்சமே மாற்றத்தை ஏற்கவிடாது தடுக்கிறது.

    தெருவில் நடந்து போகையில், ஒரு வாகனம் நம் எதிரில் விரைந்து வந்தால் நேராகவே போவோமா? திசையை மாற்றுவதில்லையா? வாழ்க்கையும் அதுபோல்தான். சில தடங்கல்களை மாற்றத்தால் விலக்கலாம்.

    மாற்றத்துக்கு முக்கியமானது `பிறர் என்ன சொல்லி விடுவார்களோ!’ என்ற பயத்தை விலக்குவது. `சரியானதுதான்’ என்று நமக்குப் பட்டதை துணிந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

    “உலகில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், நீ உன்னையே மாற்றிக்கொள்!” (மகாத்மா காந்தி).

    கதை

    நான் ஆசிரியத் தொழிலில் புகுந்தபோது, கோலாலம்பூரிலிருந்த பிற ஆசிரியைகளைவிட மிகவும் மாறுபட்டிருந்தேன். பெரும்பாலானோர் சீனர்கள். எண்ணை வைத்து வாரிய என் ஒற்றைப்பின்னல் அவர்களை மட்டுமின்றி, மாணவிகளையும் முகம் சுளிக்க வைத்தது. நான் தனித்து உணர்ந்தேன்.

    முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டேன். `ஒரு சொட்டுக்குமேல் எண்ணை வைத்துக்கொள்ளாதே! அடிக்கடி தலை சீவிக்கொள்,’ என்றெல்லாம் சக ஆசிரியைகள் நட்புரிமையுடன் போதித்தார்கள். `லிப்ஸ்டிக் அணியுங்கள், டீச்சர்!’ என்று கெஞ்சினார்கள் மாணவிகள்.

    வெளி அலங்காரத்தில் அவர்களைப்போல சில மாறுதல்களைச் செய்துகொண்டதால் அவர்களுக்கு என்னைத் தங்களில் ஒருத்தியாக ஏற்க முடிந்தது.

    என் புக்ககத்தினரைப் பொறுத்தவரை, கணவன் இறந்தபின்தான் ஒரு பெண் தலையை மழித்துக்கொள்வாள். எனவே அவர்கள் அதிர்ந்தார்கள். எல்லாரையும், எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.

    என் பெயர் சற்று பிரபலமானதும், “என் பொண்ணும் ஒன்னைமாதிரியே தலைமயிரை வெட்டிண்டுட்டா!” என்று பெருமையுடன் சொன்னார்கள் சில தாய்மார்கள்!

    கேலியைப் பொருட்படுத்தாதே!

    `நடக்கிறோம், ஓடுகிறோம். இது போதாதா?’ என்று திருப்தியுடன் பலரும் இருக்க, `மனிதனும் பறக்கலாம்’ என்று நம்பி ஆராய்ச்சிகள் செய்த ரைட் சகோதரர்கள் எவ்வளவு கேலிக்கு ஆளானார்கள்! `

    அவர்கள் நிகழ்த்திய மாற்றத்தால் உலகம் இன்று சுருங்கித்தான் விட்டது. பிறர் ஏற்கவில்லையே என்று அவர்கள் தமது ஆராய்ச்சியைப் பாதியிலேயே கைவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்!

    கல்வியால் மாற்றங்கள்

    `ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால்தான் அடங்கி இருப்பார்கள், அவர்களை எதற்காக மாற்றுவது?’ என்று பின்தங்கிப்போனவர்களுக்கு கல்வி அறிவே கூடாது என்றிருந்த காலம் அது. ஒரு பிராமணர் சேரிகளுக்குச் சென்று, கல்வி போதித்ததால் அவரை அச்சமூகம் விலக்கி வைத்துவிட்டதாகப் படித்திருக்கிறேன். எந்தவித மாற்றமும் முதலில் எதிர்ப்புக்கு ஆளாகும்.

    அதுபோல்தான் பெண்கள் கல்வி பயில்வதும். `நிறையப் படித்தால், கர்வம் வந்துவிடும். நம்மை மதிக்கமாட்டாள்!’ என்ற அச்சத்தால் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதே துர்லபம் என்றிருந்தது போன நூற்றாண்டின் பாதிவரை.

    பட்டப்படிப்புப் படித்த பெண் ஒருத்தி சில பழக்கவழக்கங்களை அறிவுபூர்வமாக எதிர்க்கும்போது, `இதுக்குத்தான் பெண்களைப் படிக்க வைக்கக்கூடாது என்கிறது!’ என்று உறவினர் கண்டனம் செய்வார்கள்.

    படித்து வேலைக்குப் போகும் பெண்ணானவள் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை உயர்த்துவதோடு, சொந்தக்காலில் நிற்கவும் பழகுகிறாள். அவளுடைய தன்னம்பிக்கை கூடுகிறது. அதனால், குழந்தைகளும் நல்லவிதமாக வளர்க்கப்படுவார்கள். ஒருக்கால் கணவனை இழந்தாலும், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கணவனை அச்சத்துடன் பார்த்து வந்த நிலை மாறி, இன்று நண்பனாகக் கருத முடிகிறது என்றால், அது பெண் கல்வியினால் அல்லவா? இதெல்லாம் புரியாது, பெண்கள் கல்வியறிவே அற்றவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றிருந்த காலமும் உண்டு. துணிந்து அதை மாற்றியவர்களுக்குப் பாராட்டுகள்.

    மாற்றுவது எப்படி?

    பேசும், எழுதும் வார்த்தைகளாலும், புதிய எண்ணங்களாலும், செயலாலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

    என்னிடம், `யாரும் உங்களைப்போல் புகார் செய்து எழுதுவதில்லை!’ என்றார் என் மாணவியின் தந்தை. முதல்முறையாக அப்போதுதான் சந்தித்திருந்தோம்.
    என்ன புகார்?

    தமிழ்ப்பெண்கள் நெற்றிப்பொட்டு வைத்துக்கொண்டு வந்தார்கள் என்ற காரணத்தால் அவர்கள் கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியைப்பற்றி;

    தமிழ்ப்பையன் வகுப்பில் பேசினான், வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரவில்லை என்று அவனைத் தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அடித்த கட்டொழுங்கு ஆசிரியருக்கு எதிராக;

    மாணவிகளை பாலியல் வதைக்கு உட்படுத்த முயன்ற ஆசிரியர்களைப்பற்றி;

    தினமுமே, ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் செய்த சில தவறுகளை ஒலிபெருக்கியில் அலறி, மாணவர்களும் கேட்டு பரிதாபப்படச் செய்த தலைமை ஆசிரியையைப்பற்றி;

    மனைவியை அடித்துத் துன்புறுத்திய எனது பக்கத்து வீட்டுக்கார மலாய்க்காரரைப்பற்றி;

    இங்குள்ள பிரபலமான கோயில் பிரகாரத்திலேயே ஒரு குரங்குக்குட்டியை கயிற்றில் கட்டி, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கட்டணம் விதித்தவனையும், அதை அனுமதித்தவர்களையும்பற்றி. குரங்குக்குட்டி தன் சாகசங்களைக் காட்ட குட்டிக்கரணம் அடித்தபோது, அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த குட்டையான கயிறு அதைப் பின்னால் இழுத்ததைப் பார்க்க என் மனம் கொதித்தது.

    இதைப்போல் இன்னும் எவ்வளவோ!

    நான் கணவனால் வதைபடும் இந்தியப் பெண்களைப்பற்றி (ஆங்கிலத்தில்) எழுதி, எவ்விதம் நம் சமூகம் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்கிறது என்று எழுதியபோது, முன்பின் தெரியாத ஒருவர் என்னைப் பொது இடத்தில் பார்த்தபோது, அடிக்காத குறை.

    வதைபடும் பெண்களுக்கு அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாத நிலையில், என்னைப்போன்ற பிறர் அதை அலசுவதில் என்ன தப்பு? (மனைவியை அடிப்பது இப்போது மலேசியாவில் சட்டவிரோதம்).

    இப்படியாக, பிறருக்கு நன்மை விளைவிக்கும் பற்பல மாற்றங்களையும் எழுத்தால் ஒருவர் நிகழ்த்த முயன்றால், நிறைய எதிர்ப்புகளையும், அவமானங்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

    தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள், `எதிரிகள் வேண்டுமென்றால், ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்து,’என்று! (இதனால்தான் கோழைகள், `நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம். பிறர் எப்படி நாசமாகப் போனால் என்ன!’ என்று, சுயநலமிகளாக இருப்பதிலேயே திருப்தி அடைந்துவிடுகிறார்கள்போலும்!)

    மாற்றம் நிகழ்ந்து, பிறர் அதனால் பயனடையும்போது நமக்கும் மகிழ்ச்சி உண்டாக, இப்படித்தான் துணிச்சலாகச் செயல்பட வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். தைரியம் அதிகரிக்கும்.

    வேண்டாத மாற்றங்கள்

    எல்லாவித மாற்றங்களும் நன்மையில்தான் முடியும் என்பதில்லை. உதாரணமாக, சிகரெட்டு பிடித்தாலோ, அல்லது மது அருந்தினாலோதான் நண்பர்களுடன் கலந்து பழகமுடியும் என்ற மாற்றம் தகாது. இளமையில் உற்சாகமாக இருப்பது போகப் போக வீண்செலவிலும், ஆரோக்கியக் கேட்டிலும்தான் முடியும்.

    `தீயது’ என்று புரிந்தவுடன் விலக, அப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்பழக்கங்களை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பிற நண்பர்கள் கேலி செய்வார்கள். `கெட்ட பழக்கம்’ என்று ஒருவர் மட்டும் சேராதிருப்பது அவர்களைப் பழிப்பது போலாகிவிடுகிறது. இது புரிந்தால், அஞ்சத் தேவையில்லை.

    இயற்கை நிகழ்த்தும் மாற்றங்கள்

    `நாங்கள் மாறவே மாட்டோம்!’ என்று பெருமை பேசுகிறவர்கள் இருக்கலாம். ஆனால், வயது ஏற ஏற, நாமும் மாறவேண்டும் என்று கருதவைக்கும் எண்ணம் ஒன்றும் நம்மில் பலருக்கு இருக்கிறது. வயது வந்த பெண் இருந்தால், தாய் அலங்காரத்தில் நாட்டம் கொள்ளக்கூடாது; தாய் தந்தையர் தனித்தனியே படுக்க வேண்டும் — இப்படி.

    `எனக்கென்ன, வயதாகிவிட்டது!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்களைத்தான் வயதுக்கேற்ற வியாதிகளும் அண்டுகின்றன.

    என் தோழி ஒருத்தி தன் தந்தை தனது எண்பத்து இரண்டாம் வயதில் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆனார் என்று அவள் பெருமையுடன் தெரிவித்தாள். அவள் மலாய்க்காரி.

    பசித்தால் சாப்பிடுகிறோம். உடற்பசி என்றால் மட்டும் கேவலமா! இத்தகைய மனப்போக்கினால், மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்பவர் விவரம் தெரியாத பெண்களுடன் சல்லாபம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

    எனக்குப் பேரக்குழந்தை பிறந்ததும், என் சிநேகிதி மிஸஸ் கோ, “நீ இன்னும் நீச்சல் குளத்துக்குப் போகிறாயா?” என்று கேட்டாள்.

    “ஏன் கூடாது?” என்று கேட்டேன்.

    அவள் ஏதோ கேலி செய்தாள்.

    நான் சட்டை செய்யவில்லை. வயதாகிவிட்டதே என்று நடக்காமல் இருந்துவிடுகிறோமா? நீச்சல் ஆரோக்கியமான பொழுதுபோக்குதானே! எதற்கு மாற்றிக்கொள்வது?

    கதை

    நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு ரோமியோவும் இருந்தார். தினம் ஒரு சீனப்பெண்ணின் கையைக் கோர்த்துக்கொண்டு நடந்ததால், எல்லாரும் அவரை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்.

    நான் அவருடன் பேசியதே கிடையாது. அவருடைய இயற்பெயரையும் அறியேன். (வெவ்வேறு பாடங்களை எடுத்திருந்தோம்).

    இருபது ஆண்டுகள் கழித்து, மேற்பயிற்சியின்போது என்னைச் சந்தித்து, “நீங்கள் மிகவும் மாறிவிட்டீர்கள்!” என்றார்.

    நான் அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறதா?” என்று விசாரித்தேன்.

    “இருபது வயதில் மகள்,” என்றார், பெருமையுடன்.

    “இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் மகள் இப்போது இருப்பதுபோலவா இருந்தாள்?” என்று கேட்டுவிட்டு, அவர் வாயைப் பிளக்க வைத்துவிட்டு, அப்பால் நகர்ந்தேன்.

    இயற்கை நமது உடலில் மட்டுமா மாற்றங்களை ஏற்படுத்துகிறது? நடை, உடை, பேச்சு எல்லாமே இடத்துக்குத் தக்கபடி மாறிவிடுகின்றன.

    கதை

    எங்கள் நண்பர் ஸலிஹின் மேற்படிப்புக்காக கானடா சென்றிருந்தார். திரும்பி வந்ததும், அவருடைய உச்சரிப்பு `அமெரிக்கானோ’ மாதிரி ஆகிவிட்டது என்று நண்பர்கள் கேலி செய்தார்கள்.

    “நான் அங்கு வகுப்பில் பேசியபோது எல்லாரும் சிரித்தார்கள். (சாதாரணமாகவே, அவர் பேசுவது மலாய் மொழியா, அல்லது ஆங்கிலமா என்று புரியாது). அதனால் உச்சரிப்பை மாற்றிக்கொண்டேன். இப்போது இங்கும் எல்லாரும் சிரிக்கிறார்கள்!” என்றார் அழமாட்டாக்குறையாக.

    கல்யாணமான பின்போ, அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல நேரிட்டாலோ, தம் குழந்தைகள் மாறிவிடுகிறார்களே என்று பெற்றோர் அங்கலாய்ப்பதிலும் அர்த்தமில்லை.

    மாறாக, சிறுவயதில் தாம் போதித்த அன்பு, நேர்மை, பரோபகாரம் போன்ற நற்குணங்களை என்ன துன்பம் வந்தாலும் இழக்காது இருக்கிறார்களே என்று பெருமைப்படலாமே!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (45)

    நிர்மலா ராகவன்

    மனோபலமே பலம்

    நலம்-2-1-1

    `நான் பலசாலி!’ என்று தன் புஜபலத்தால் மார் தட்டிக்கொள்ளும் ஒருவர் தனக்கென வாழ்வில் ஒரு இடர் வந்துவிட்டால் அதைத் தாங்கிக்கொள்வாரா? யோசிக்கவேண்டிய விஷயம்.

    உடல் வலிமை இருந்தால் மட்டும் போதும் என்று நிறைவடைவது கற்காலத்திற்கு ஏற்றதாக இருந்திருக்கலாம். இன்று நாம் எந்த கொடிய விலங்குகளுடன் நேருக்கு நேர் மோதுகிறோம்!

    மாற்ற முடியாததை ஏற்பது

    நம் வாழ்வில் நடப்பவை எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. இயற்கைச் சீற்றத்தால், பிற மனிதர்கள் அளிக்கும் தொல்லையால், அல்லது நம் மனமே நமக்கு எதிராகச் செயல்படுவதால் துன்பம் வரக்கூடும். வெளியிலிருந்து வரும் கஷ்டங்களை தவிர்க்க முடியாதுதான். ஆனால், நம் மனத்தை மாற்றிக்கொண்டால், அவைகளைச் சமாளிக்கலாமே!

    பலம் எப்படி வருகிறது?

    `என்னை ஒருவருக்குப் பிடிக்கிறது!’ என்ற உணர்வு எழும்போது, மனோபலமும் வருகிறது. சிறு வயதில், குடும்பத்தினர் எந்த எதிர்பார்ப்புமில்லாது காட்டும் அன்பே ஒரு குழந்தைக்குப் பலம் அளிக்கிறது.

    வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது, கோபத்தாலும் வருத்தத்தாலும் தம் இயலாமையை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் எவ்வளவுதான் தேக பலம் கொண்டவர்களாக இருப்பினும், அவர்களை வலிமை மிக்கவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. கவலைப்பட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு பலமும் குறைந்துகொண்டே போகாதா!

    மாறாக, மாற்றமுடியாதவைகளை ஏற்று, துன்பத்தால் தம் தைரியத்தை இழக்காது இருப்பவர்களே பலம் பொருந்தியவர்கள். நீண்ட காலம், இடைவிடாது, போராட நேரிடலாம். இருந்தாலும், இவர்கள் மனம் தளர்வதில்லை. நினைப்பதைச் சாதிப்பார்கள்.

    கதை

    ஹெலன் கெல்லர் (1880 – 1968) தமது ஒன்றரை வயதிலேயே பார்வை மட்டுமின்றி, செவிப்புலனையும் இழந்தவர். பேச மட்டும் முடியும் என்ற நிலை. ஆனால், பார்க்கவோ, கேட்கவோ முடியாது, எப்படிப் பேச முடியும்?

    ஆசிரியையின் உதட்டைத் தொட்டு, `தண்ணீர்’ என்ற சொல்லை அறிய கொட்டும் நீரின்கீழ் கையை வைத்து உணர்ந்து, ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கவும், பேசவும் கற்றார். பிற்காலத்தில், பட்டதாரி, விரிவுரையாளர், பதினோரு புத்தகங்களை எழுதியவர், தன்முனைப்புப்பற்றிய மேடைப்பேச்சாளர் என்று இவரது சாதனைகள் பல.

    பெற்ற தாய் மட்டுமின்றி, அவருக்குக் கற்பித்த ஆசிரியையின் அன்பினாலும், விடாமுயற்சியாலும்தான் பிற்காலத்தில் ஹெலன் கெல்லர் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆனார்.

    கூடி வாழ்ந்தால்..

    பலத்தை அதிகரிக்க இன்னொரு வழி நம்மை ஒத்தவர்களுடன் கூடிச் செயல்படுவது. என் பள்ளி நாட்களில், `Combined study’ என்ற முறையை வற்புறுத்துவார்கள் ஆசிரியைகள்.

    படித்து முன்னுக்கு வருவதில் ஆர்வம்கொண்ட நான்கு மாணவிகள் ஒரு குழுவில் இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு பாடத்தைப் படித்துவந்து, தனக்குத் தெரிந்த விதத்தில் விளக்கவேண்டும். நிறைய விவாதங்களும் இருக்கும். யாராவது ஒருவர் அநாவசியமாகப் பேசி நேரத்தை வீணடித்தால், அவர் எச்சரிக்கை செய்யப்படுவார்.
    இம்முறையால் கல்வி கற்பது சுவாரசியமாக இருக்கும். குறைந்த நேரத்தில் நிறைய கற்கவும் முடியும். தோழிகளுடன் கலந்து பேசுவதால், கண் மட்டுமின்றி, காது, வாய் எல்லாவற்றிற்கும் வேலை. அதனால் பாடம் மறக்கவே மறக்காது.

    பலவீனமாக இருக்கும் பலர் ஒன்றுகூடி, பலம் பெற்றுவிட்டதாக மனப்பால் குடிப்பதும் உண்டு. இவர்களுக்குத் தனியாக நின்று எதையும் செய்யத் துணிவு இருப்பவர்களைக் கண்டு பயம் எழும்.

    கதை

    இருபத்து ஐந்து வருடங்களுக்குமுன், நான் ஒரு புதிய பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் சென்றேன். அங்கு பெரும்பான்மையான ஆசிரியைகளும் மாணவிகளும் சீனர்கள்.

    ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நான் வித்தியாசமாக இருந்ததாகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் மாஜோங் என்ற சூதாட்டத்துக்கு இரவு வேளைகளில் வரும்படி என்னை அழைத்தபோது மறுத்துவிட்டேன். அவர்கள் அளித்த பன்றி இறைச்சி கலந்த உணவுப்பொருட்களையும் வாங்கவில்லை.

    `நாங்கள் கொடுக்கும் உணவுப்பொருட்களை வாங்காதவர்களை Rude (முரட்டுத்தனமானவர்கள்) என்போம்!’ என, நான் பதிலுக்கு, `என்னுடைய கொள்கைகளை மதிக்காதவர்களைத்தான் நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’ என்றேன்.

    போதாத குறைக்கு, நெற்றியில் திலகமிட்டு, புடவை கட்டிப்போனேனா! (அங்கிருந்த ஆறு தமிழ் பேசும் ஆசிரியைகளும் கேலி செய்யப்பட்டதால், பொட்டு வைத்துக்கொள்வதையே விட்டுவிட்டதாக பிறகு அறிந்தேன். `நீங்கள் வந்தபிறகுதான் தைரியமாக பொட்டு வைத்துக்கொள்கிறோம்!’ என்று ஓர் ஆசிரியை தெரிவித்தாள்!)

    என்னையும் அப்படிப் பணியவைக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், பிறர் சார்பில் ஒருத்தி மட்டும் ஓயாது என்னை கேலி செய்வதுபோல் மட்டம் தட்டி, துன்புறுத்தியவண்ணம் இருந்தாள்.

    ஒரு நாள் பொறுக்கமுடியாது, “You think I am also stupid like you aah? (என்னையும் உன்னைப்போல் முட்டாள் என்று நினைத்தாயா) என்று இரைந்தேன்.

    எல்லாருடைய முகத்திலும் ஒரே கோபம். ஆனால் மேலே எதுவும் பேச அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை.

    அதற்குப்பின் என்ன! ஒரே மரியாதைதான், அது போலியாக இருந்தாலும்!

    பரோபகாரம் பலமாகுமா?

    வெகு சிலர், `பிறருக்கு உதவுவது நல்லது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,’ என்று செயல்படுவார்கள். இவர்களது குணமறிந்த பலரும் இவர்களை வேலைவாங்கி, பிறகு கண்டும் காணாததுபோல் நடந்துகொள்வார்கள். அப்போது ஏமாற்றத்தால் இவர்களது மனம் உடைந்துவிடும். பொதுவாக, உலகின்மேலேயே கசப்பு ஏற்பட்டுவிடும்.

    உதவி செய்பவர் பலமடைய, யாரால் தமக்குத் தாமே உதவி செய்துகொள்ள முடியவில்லையோ அவர்களுக்குமட்டும் உபகாரம் செய்வது அவசியம். இதை ஒட்டித்தான், `பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அதிகாரத்தால் பலமா?

    தமக்குக் கீழே இருப்பவர்களை ஓயாது அதிகாரம் செய்வது ஒருவரது பலவீனத்தைத்தான் குறிக்கிறது. பிறரின் ஒத்துழைப்பை அதிகாரத்தால் பெற முடியாது.

    கதை

    என் மாணவிகள் கழுத்தில் சுளுக்கு, வயிற்றுவலி என்று என் உதவியை நாடுவார்கள். அவர்களின் விரல்களை Reflexology முறைப்படி அழுத்தியோ, ஹிப்னாடிச முறைப்படியோ குணப்படுத்துவேன்.

    ஜாவியா என்ற ஆசிரியை `தலைவலி’ என, சில மாணவிகள், என்னைக் கைகாட்டி விட்டிருக்கிறார்கள்.

    என்னிடம் வந்து அதிகாரமாக, “என் கையை அமுக்கி, என் தலைவலியைப் போக்கு,” என்றாள். அவள் குடும்பத்தில் மூத்தவள். அவளுக்குப்பின் பத்து பேர். ஆளுங்கட்சியில் ஏதோ ஒரு குழுத்தலைவியாம். அதற்காக பார்ப்பவர்கள் எல்லாரும் தான் சொற்படிதான் நடக்க வேண்டும் என்றால் முடியுமா?

    நான் அலட்சியமாக, “நீயே செய்துகொள்ளலாம். இந்த இடங்களை அமுக்கிக்கொள்,” என்று காட்டிவிட்டேன். ஒருவருக்கு இம்முறையால் சிகிச்சை அளித்தால், அளிப்பவர் தன் கையை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இல்லையேல், அந்த உபாதை அவருக்கும் வந்துவிடும்.

    “நீதான் பண்ணணும்,” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, “ஸாரி. இது சின்ன விஷயம்தானே?” என்று விலகினேன்.

    உரக்கவோ, அதிகாரமாகவோ பேசினால்தான் பலம் என்று நினைத்து வந்திருக்கிறாள் ஜாவியா. என்னிடம் அடைந்த தோல்வியை எதிர்பாராததால், அவள் முகத்தில் அப்படி ஓர் ஆத்திரம்!

    அமைதி குன்றாமல், மென்மையாகப் பேசுகிறவர்களை பலவீனர்கள் அல்லது முட்டாள்கள் என்று எடைபோடுகிறது இன்றைய உலகம். அப்படி எண்ணுபவர்கள்தாம் முட்டாள்கள்.

    தொடருவோம்

    Share
  • சண்டையே வரலியே!

    நிர்மலா ராகவன்

    “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” சோகபிம்பமாகக் காட்சி அளித்த வைத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் குப்புசாமி மகன் ரங்கு என்னும் ரங்கசாமி — சுருக்கமாக, கு.ரங்கு.

    “ஒனக்குக் கல்யாணமாகி இன்னும் அம்பது நாள்கூட ஆகலியே! ஆசை அறுபது நாளுன்னு இல்ல சொல்லி வெச்சிருக்காங்க! அப்படிப் பாத்தா, இன்னும் பத்து நாள் இருக்கே!” என்று ஏதேதோ யோசித்துவிட்டு, “ஒன் மிஸஸ் இது வேணும், அது வேணும்னு கேட்டு நச்சரிக்கிறாங்களா? ரொம்ப சண்டை போடறாங்களோ? அப்புறம்..,” என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தான்.

    நண்பனை எரிச்சலுடன் பார்த்தான் வைத்தா. “நீ வேற! அவ சண்டையே போட மாட்டேங்கறா. அதுதான் பிரச்னையே! நான் `நில்’லுனா நிக்கறா. `ஒக்கார்’னா ஒக்காந்துக்கறா. வாழ்க்கையே போரடிச்சுடுத்து, போ!”

    “ரொம்ப பணிவானவங்கதான்!” பாராட்டினான். “இப்படி ஒரு மனைவி கிடைக்க குடுத்தில்ல வெச்சிருக்கணும்! இதுக்கு ஏன் இப்படி அலுத்துக்கறே?”

    “ஒங்கிட்ட சொல்றதுக்கு என்னடா!” என்றாலும், வைத்தா சிறிது வெட்கப்பட்டான். “எங்களுக்குள்ளே சண்டையே வர்றதில்லை!”

    “அதான் சொன்னியே! மேலே சொல்லு!” என்று ஊக்கினான் நண்பன்.

    “எங்க கல்யாணம் ஜாதகம் பாத்து, பொண்பாத்து நடந்தது! மோதல் இல்லாம காதல் எப்படிடா வரும்?”

    கு.ரங்கு ஒரு சிறு சிரிப்புடன், “எனக்கு அந்தப் பிரச்னையே கிடையாது,” என்று வைத்தாவின் பொறாமையைத் தூண்டிவிட்டு, தன் சொந்தக் கதைக்குப் போனான்: “என் சமாசாரம் நேர் எதிரிடை. தானே சண்டைக்கு இழுப்பாங்க. அப்புறம் எங்கூட பேசமாட்டாங்க. எப்பவும் நான்தான் எறங்கி வந்து, ஸாரின்னு சொல்லணும். எதுக்குச் சொல்றோம்னே புரியாது”.

    வைத்தாவின் கண்கள் பிதுங்கின. இல்லற வாழ்க்கையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா! ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே!

    “அப்புறம்.., சமாதான உடன்படிக்கைமாதிரி புதுப்புடவை வாங்கிக் குடுக்கணும், இல்லே, சினிமாவுக்குக் கூட்டிப் போகணும்”. கு.ரங்குவின் குரலில் அலுப்போ, கோபமோ இருக்கவில்லை. கண்கள் கிறங்கின, எதையோ நினைவுக்குக் கொண்டுவந்து.

    வைத்தாவுக்குப் புரிவதுபோலிருந்தது. “ஓகோ! சண்டை போட்டப்புறம் சமாதானப்படுத்தற சாக்கிலே..! மோதல் காதலா மாறிடறதாக்கும்!”

    “அதேதான்! எங்கப்பாவோட மாமா..,” என்று ஆரம்பித்தவனை எரிச்சலுடன் அடக்கினான் வைத்தா. “இப்போ எதுக்கு பழங்கதை?”

    “கேளேன்! அந்தக் காலத்தில சின்ன வயசிலேயே கட்டி வெச்சுடுவாங்கல்லே? மாமாவுக்கு ஒண்ணும் புரியலியாம். அத்தை வர்ற சமயம் பார்த்து, கதவுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு அப்படியே தாவி..!”

    “சீ, போடா! இதையெல்லாமா வெளியிலே சொல்றது?”

    “அவசரப்படாதே. அவங்க முடியைக் கொத்தாப் பிடிச்சு இன்னொரு கையால அடிப்பாராம்”.

    “கிராதகன்!”

    “அங்கதான் விஷயமே இருக்கு. அத்தையோ சின்னப்பொண்ணு, பாவம்! பயந்து அழுவாங்களா! உடனே அவங்களைச் சமாதானப்படுத்தி, உள்ளே அழைச்சுக்கிட்டுப் போய்..,” என்று விரசமாகக் கண்ணைச் சுழற்றினான் கு.ரங்கு.

    “என்னடா?”

    “என்னால அடிக்கல்லாம் முடியாதுப்பா!” கண்டிப்பான குரலில் சொன்னான். “எங்கப்பா ஓயாம அம்மாவை ஏதாவது திட்டிண்டே இருப்பார். அதனால், `நீ அப்பாமாதிரி ஆகிடாதேடா. ஒன் பொண்டாட்டியை எதுவும் சொல்லக்கூடாதுடா, வைத்தா!’ன்னு சொல்லிச் சொல்லி என்னை வளர்த்திருக்கா எங்கம்மா”.

    பிறகு, முணுமுணுப்பான குரலில், `என்னால திட்டக்கூட முடியாதுங்கறேன். அடிக்கச் சொல்லிக்குடுக்கிறான் அசத்து!’ என்றான்.

    இப்போது ஒரு புதிய சந்தேகம் முளைத்தது: அப்பாவுக்குக் கதவிடுக்கில் ஒளிந்து அடிக்கத் தெரியாததால்தான் கண்டபடி இரைச்சல் போட்டாரோ?

    அவர்கள் சண்டையை மட்டும்தான் அம்மா சொல்லியிருக்கிறாள்.

    அதற்கப்புறம் என்ன நடந்திருக்கும்?

    “என்னடா?”

    தன் எண்ண ஓட்டத்திற்காகச் சிறிது வெட்கி, “ஒண்ணுமில்லே. நீ சொல்லு!” என்றான் வைத்தா.

    “இப்படி சாந்தமா, ஒன் குரல் ஒனக்கே கேக்காதமாதிரி நீ பேசினா, எப்படி சண்டை வரும்? சும்மா சிவாஜி கணேசன் கணக்கா கர்ஜனை செய்யக் கத்துக்க. கட்டபொம்மன் படம் எத்தனை தடவை பாத்திருப்பே!” என்றபடி வைத்தாவை ஓரிடத்திற்கு அழைத்துப்போனான் நண்பன்.

    `குரல் வளம் பெருக!’ என்ற பலகை மாட்டியிருந்தது அவ்விடத்தில்.

    “குரல் மிருதுவா, நல்லாத்தானே இருக்கு?” கேட்டவரும் மென்மையான குரலில் பேச, வைத்தாவுக்குச் சந்தேகம் எழுந்தது: `இவரா நமக்கு உரக்கப் பேசும் பயிற்சி அளிக்கப்போகிறார்?’

    “நீங்க பாடறவரா?” என்ற கேட்டவரிடம், `மனைவியுடன் சண்டைபோட!’ என்று எப்படிச் சொல்வது!

    ஆபத்பாந்தவனாக, “பாடறதுக்கில்லே, ஸார். இவர் மேடைப் பேச்சாளர்!” என்று குறுக்கே புகுந்து, ஒரு பொய்யை அள்ளிவிட்டான் கு.ரங்கு.

    “பெரிய குரல் எதுக்கு? இப்பல்லாம்தான் மைக் வைக்கறாங்களே!” சொன்ன உடனேயே, `வலிய வந்த வியாபாரத்தை முட்டாள்தனமாகக் கெடுத்துக்கொள்ளப்போனேனே! என்று தன்னைத்தானே நொந்துகொண்டார் பயிற்சியாளர். அதற்குமேல் எதுவும் கேட்காது, “காலையில பாலிலே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுபொடி, பனங்கல்கண்டு, அப்புறம்.. குங்குமப்பூ, ஏலக்காய் எல்லாத்தையும் போட்டு காய்ச்சிக் குடிங்க. ஐஸ் தண்ணி வேண்டாம்,” என்று பாடத்தை ஆரம்பித்தார்.

    அத்துடன் ஏதேதோ யோகப்பயிற்சி செய்ததன் பலனாக, ஒரே மாதத்தில் வைத்தாவின் குரல் பலமாக ஒலித்தது.

    “சீ..,” என்று அவன் கத்த ஆரம்பிப்பதற்குள் ஓடி வரலானாள் சீதா.

    நண்பனிடம் புகார் செய்யப்போனான். “என் குரல் கேக்கறதுக்குள்ளே ஓடி வந்துடறாடா!” என்றான் பரிதாபமாக.

    கு.ரங்கு யோசித்தான். “இப்படிச் செய்யேன். ராத்திரி பன்னண்டு மணிக்கு அவங்க அசந்து தூங்கறப்போ எழுப்பி, `இந்த நிமிஷம் எனக்கு சப்பாத்தி பண்ணிக்குடு’ன்னு அதிகாரம் பண்ணு. நிச்சயமா கோபம் வரும். எப்படி என் யோசனை?”

    “சகிக்கல. இதுக்காக நான் அலாரம் வெச்சுக்கணும். அதோட, அவ பண்ணிப்போட்டா, அர்த்த ராத்திரியில யார் நாலு சப்பாத்தி திங்கறது?” வெளியில் அலுத்தாற்போல் பேசினான். ஆனாலும், இப்படிச் செய்துதான் பார்ப்போமே என்ற ஆசை எழாமலில்லை.

    “நாலுதானா! அவங்க கை ஓயறவரைக்கும் பண்ணச்சொல்லி தின்னு!”

    நள்ளிரவில் அலாரம் அடித்தது.

    “இப்போ சப்பாத்தி சாப்பிடணும்போல இருக்கு. பண்றியா, சீதா?” என்றான் அருமையாக.

    அவளும், “அதுக்குள்ளே பொழுது விடிஞ்சுடுத்தா?” என்றபடி அவசரமாக எழுந்தாள்.
    “இல்ல, மணி பன்னண்டுதான்! ஒனக்கு கஷ்டமா இருந்தா வேண்டாம்!”

    “ராத்திரி வேளையில கேட்டுட்டேள்! ஒரு சமயம்போல இருக்குமா?” என்றபடி சமையலறைக்குள் போனாள்.

    இரவு வேளையில் நாம் கேட்டு, இவள் சப்பாத்தி செய்து தராவிட்டால், இறந்துவிடுவோமா, என்ன! வைத்தாவின் இதழ்களில் வெற்றிப்புன்னகை.

    சண்டை வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்ற நினைவில் மனம் லேசாகியது.
    மறுநாள் காலை மனத்துடன் வயிறும் கனத்தது. அரை நாள் விடுப்புக் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினான்.

    இன்று கண்டிப்பாக, `உனக்காவது கோபம் வருமா, வராதா?’ என்று மனைவியிடம் கேட்டு இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
    வீட்டுக்குள்ளிருந்து பேச்சு சப்தம் கேட்டது.

    “இதுக்குத்தாம்மா நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்! நீயும், ஒன் புத்திமதியும்!”

    இந்தப் பெரிய குரல் யாருடையது?

    சீதாவா இப்படிப் பேசுகிறாள்?!

    “அப்படி நான் என்னத்தடி சொல்லிட்டேன்? `கல்யாணமாகி ஒரு வருஷத்துக்காவது ஒன்னோட காளி சொரூபத்தை வெளியில காட்டாதே. அப்புறம் கோவிச்சுண்டு, அவர் சொல்றபடியெல்லாம் ஆடற பொண்ணைத் தேடிண்டு போவார் — ஒங்கப்பாமாதிரி’ன்னு சொன்னேன்”. மாமியாரின் குரல் தழுதழுத்தது.

    “இவர் `நில்’லுன்னா நிக்கணும், `ஒக்கார்’னா ஒக்காரணும். அப்பப்பா! டிரில் மாஸ்டர் தோத்தார்!”

    “நீயும் என்னைமாதிரி ஆகிடக்கூடாதேன்னுதான்..!” அம்மாக்காரி தன்னைக் காத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தாள்.

    “எல்லாரும் கார்த்தால காப்பி குடிப்பா. இவருக்கோ, பால்லே ஏலக்காய், அது, இதுன்னு என்னென்னமோ கண்ராவியெல்லாம் போட்டு காய்ச்சிக் குடுக்கணும். கைக்குழந்தை தோத்தது, போ!” சீதா பொருமினாள்.

    “ரொம்ப இருமறாரா? அதான் அப்படி! T.B-யோ, என்ன எழவோ!”

    “அதெல்லாம் ஒண்ணுமில்லே. இவாளுக்கெல்லாம் பொண்டாட்டின்னா அடிமைன்னு எண்ணம். இருக்கட்டும், இருக்கட்டும். ஒரு வருஷம் முடியப்போறது. அப்போ நான் யாருன்னு காட்டறேன்,” என்று வீரமாகப் பேசியவளுக்குக் குரல் கம்மியது. “அர்த்தராத்திரியில என்னை எழுப்பி, சப்பாத்தி பண்ணிப்போடு!’ன்னு அதிகாரம் பண்றார்மா. ஒண்ணு, ரெண்டோட முடிஞ்சுதா! என் கை ஓயறவரைக்கும்.. நானும் அசடுமாதிரி…,” என்று தாங்கமுடியாத சுயபரிதாபத்துடன் சொல்லிக்கொண்டே போனவள், “ஆட்டா மாவு இல்லேன்னு சொல்லத் தோணல பாரு! நீ அவ்வளவு தூரம் வேப்பிலை அடிச்சிருக்கே எனக்கு!” என்று நொந்துகொண்டாள்.

    “எழுந்ததும், தோளெல்லாம் கடுக்கறது. வேலைக்குப் போகமுடியல. அதான் அவசரமா ஒன்னை வரச்சொல்லி ஃபோன் பண்ணினேன். இப்படியே இருந்தா, அவர் என்னை விட்டுட்டுப் போறாரோ, இல்லியோ, நான்தான் இந்த வீட்டைவிட்டு எங்கேயாவது தொலையப்போறேன்!” பொரிந்தாள் சீதா.

    அப்படியும் மனம் ஆறாது, “அந்தப் பைத்தியத்தோட சேர்ந்து இருந்தா, நானும் புடவையைக் கிழிச்சுண்டு தெருத்தெருவா ஓட வேண்டியதுதான்!” என்று முடித்தாள்.
    பைத்தியமா! நானா?

    எவ்வளவு பாடுபட்டு ஒவ்வொரு திட்டமாகத் தீட்டினோம்!
    அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை வைத்தாவால். ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்தான்.

    அந்த வேளையில் அவனை எதிர்பாராத பெண்கள் இருவரும் அயர்ந்துபோனார்கள். மாமியார் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றுகொண்டாள். என்ன இருந்தாலும் புது மாப்பிள்ளை ஆயிற்றே! மகளிடமும் கண்ணால் சமிக்ஞை செய்ய, அவள் அதைக் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தே இருந்தாள்.

    “ஏன் சீதா? நான்தான் கேட்டா, ஒனக்கு புத்தி எங்கே போச்சு? அப்படியா அடுக்கடுக்கா பண்ணிப் போடுவே? கண்ட வேளையில ஹெவியா சாப்பிட்டு, இப்போ ஒரே பேதி!” என்றான் பெரிய குரலில். குரலை வளமாகச் செய்த ஆசிரியர்மீது பக்தி எழுந்தது.

    பதிலுக்கு, “ஏதோ, ஒரு சப்பாத்தி, ரெண்டு சப்பாத்தின்னு சாப்பிடுவா. நீங்க எட்டு, பத்துன்னு மொசுக்கினா?” என்று விட்டுக்கொடுக்காமல் கத்தினாள் சீதா.

    இனிமேல் தனக்கு அங்கு வேலையில்லை, அவர்களே முட்டி மோதிக்கொண்டு ஏதோ செய்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாமியார் சந்தோஷமாகத் தன் வீட்டுக்குக் கிளம்பினாள்.

    Share