Tag: ராஜகவி ராகில்

  • நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள்

     

     

    ராஜகவி ராகில்

     

     

    சூரியன் கொண்டு வந்து விட்டுச் சென்ற இருளெனவும்

    ஓர் இருளிலிருந்து கடத்தப்பட்ட
    இன்னோர் இருள் மின்குமிளெனவும் நீ

    ஓர் உயிர்த் தசை
    பாவ இரும்புத்துகளாய் காந்த இதயம்
    பொய் வேரில் நாவு மரம்
    இருட்டு உண்கின்ற இரவுக் கண்
    கறுப்பு இசை உணர்கின்ற மலட்டுக் காது

    ஓர் உயிர்க் காடு
    கார் வெயில் உறிஞ்சுகின்ற வேர்கள்
    வளைந்து நெளிந்து அசைகின்ற பாம்புக் கிளைகள்
    பருந்துகளாய்ப் பறந்து பிணம் உண்கின்ற இலைகள்

    பாவ நச்சு விதை முளைக்கின்ற வயல்
    நெருப்பை உண்கின்ற விறகு
    கோப மலை ஏறுகின்ற உணர்ச்சிப் படிகள் என
    சூறாவளி சிக்குப்பட்டு பிய்த்து வீசப்பட்டுக் கிடக்கிறது மனிதம்

    முதற்கல் வைக்க கிடைக்கவே இல்லை
    ஒரு மனிதன்
    ஊரில் ஆலயம் கட்டுவதற்கு .

    Share
  • நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள்

     

    ராஜகவி ராகில் 

     

     

     

    சூரியன் கொண்டு வந்து விட்டுச் சென்ற இருளெனவும்

    ஓர் இருளிலிருந்து கடத்தப்பட்ட
    இன்னோர் இருள் மின்குமிளெனவும் நீ

    ஓர் உயிர்த் தசை
    பாவ இரும்புத்துகளாய் காந்த இதயம்
    பொய் வேரில் நாவு மரம்
    இருட்டு உண்கின்ற இரவுக் கண்
    கறுப்பு இசை உணர்கின்ற மலட்டுக் காது

    ஓர் உயிர்க் காடு
    கார் வெயில் உறிஞ்சுகின்ற வேர்கள்
    வளைந்து நெளிந்து அசைகின்ற பாம்புக் கிளைகள்
    பருந்துகளாய்ப் பறந்து பிணம் உண்கின்ற இலைகள்

    பாவ நச்சு விதை முளைக்கின்ற வயல்
    நெருப்பை உண்கின்ற விறகு
    கோப மலை ஏறுகின்ற உணர்ச்சிப் படிகள் என
    சூறாவளி சிக்குப்பட்டு பிய்த்து வீசப்பட்டுக் கிடக்கிறது மனிதம்

    முதற்கல் வைக்க கிடைக்கவே இல்லை
    ஒரு மனிதன்
    ஊரில் ஆலயம் கட்டுவதற்கு .

    Share
  • குயில் கீச் கீச் குருவி குக்கூ

    ராஜகவி ராகில் –

     

    தண்ணீர்க் குளிர்ச்சியும்

    பலூன் மெது மெதுப்பும்

    ரோஜா மலர் மென்மையுமாக எனது கைப்பேசி
    என் கையில் காதுப்பையில் இரும்புக்குடில்
    நீ குடியேறுகிறாய்
    மொழிக்கை வீசியும் வார்த்தை ஆடை உடுத்தியும்

    என் உயிர் உன் குரல் என
    ஒரு புள்ளிகம்பத்தில் கட்டிப்போடுகிறாய்
    அவிழ்த்துக் கொண்டு வெளியேற விருப்பமில்லாத
    ஒரு மனதையும்
    ஒலிகளால் ஒப்பனை செய்து என்னை அழைத்துச் செல்கின்ற
    ஒரு வயதையும் பரிசாகத் தந்துவிட்டு

    உனது காற்று வெளியில் என் இரும்புக் கைக்குட்டை
    ஒரு வானொலியாய்ப் பேசவும்
    என் எண் மலர்கள் தூவிய உன் இரும்புக் குருவி
    குக்கூ சத்தத்திலும்
    ஒலியலைகளுக்குள் என்னை நான் அஞ்சலிடுகிறேன்

    நீ எழுதுகின்ற எழுதப்போகின்ற கடிதம்
    என்னிடம் இருக்கிறதெனவும்
    பசியெடுக்கின்ற போதெல்லாம் சொல்லுணவு
    ஒலித்தட்டில் பரிமாறப்படுமெனவும்
    என் குயிலும் உன் குருவியும் சொல்கின்றன கீச் கீச் கூக்கூவென

    உயிரின் ஒலி காற்று மொழிபெயர்த்தபோது
    நீ கிடைத்தாயென
    குயிலும் குருவியும்

    காற்றைச் செதுக்கும் சிற்பி
    உனது எனதுமான எண்கள் எனவும் கூவிக் கீச்சிடும்
    பறக்காத பறவைகள் மொழிகின்றன
    உனக்குள்ளும் எனக்குள்ளும் .

    Share
  • அப்பா உழவன்

    – ராஜகவி ராகில்

     

    அதிகம்
    அப்பா வயல் நெல் மணிகளை விட
    விளைந்த வியர்வைத் துளிகள்

    வயற்காடு கறுத்திருக்கின்ற பொழுதிலும்
    சூரியன் முதுமையுற்று
    மேற்கு வைத்தியசாலைப் பக்கம் சென்றபின்தான்
    வீட்டில் அப்பா வந்து நிற்பார்
    கறுத்துப்போன உருவமாய்

    இருளும் வெளிச்சமும் களவொழுக்கம் புரிகின்ற
    வைகறையில்
    அம்மா அரைத் தூக்கத்தோடு
    சோறு சமைத்துக் கட்டிக் கொடுப்பாள்
    மாதத்தில் சில நாட்கள்

    அப்பா உழவனென்றாலும்
    வீட்டு அரிசிப்பானை வெறுமையாகவே இருக்கும்
    பல நாட்கள்

    அம்மாவைச் சாப்பிடும்
    அக்கம் பக்கமெல்லாம் அரிசிக்கடன்

    அடுத்ததெருக் கடை கடன் புத்தகம்
    நீண்டு செல்லும் கள்ளக் கணக்குடன்

    நூறு பத்து ரூபா நோட்டுக்களுக்கு
    வித்தியாசம் சொல்லிக் கொடுக்க
    புத்தகம் சுமந்ததில்லை அம்மா

    வயல் தேநீர்க் கடை
    அப்பா பசி
    கடனில் மிதக்க
    வியர்வை திருடிப் பிழைக்கும் கள்ளக் கணக்கு

    அப்பா முகத்தில் சில பூக்கள் விரியும்
    அறுவடை நாளில்

    கடைசியில் முதலாளி வீட்டுக்கு
    அப்பா வியர்வை செல்லும் மூட்டை மூட்டையாய்

    பதக்கடைச் சாக்குகள் கூலியாய் மிஞ்ச
    அதிலொரு பங்கு
    தேநீர்க் கடைக் கடன் ஓட்டை அடைக்கும்

    அக்கம் பக்கத்துக் கடன்களோடு
    அம்மா காத்திருப்பாள்
    நெல் வண்டி வரும்வரை

    வாசலிலேயே
    பகிர்ந்தளிக்கப்படும் அப்பா உழைப்பு

    மீண்டும் உழவன் வீட்டில்
    தொடரும் சோற்றுப் பஞ்சம் .

    Share
  • வானம் உழவன்

    ராஜகவி ராகில்

     
    இருள் விதைக்கும் ஒரு பொழுது
    பனித்துளிகள்
    மலர்களில் புணரும் ஒரு வேளை
    பிறப்பெடுத்துப் பரவும் நறுமணம்
    ஞாபகப்படுத்துகிறது உன்னைத்தான் .
    விழிகள் பயணிக்கப் பயணிக்க
    நீண்ட சாலையாக உன் அழகு .
    புதிது புதிதாகின்றன
    வயதும் என் மனதும் .
    ஆற்றங்கரை மரவேர் உணர்ச்சியுடன்
    செழிப்பாய் என் காதல் .
    சந்தனக்கட்டைகள் என் கண்கள்
    அடுக்கி அடுக்கி எரிக்கிறேன் பார்வைத் தீ மூட்டி
    உன் அழகெனும் புகை பரவுகிறது
    என் உயிருக்குள் .
    இலையுதிர்கால வரட்சி
    ஒரு மொட்டு மலரும் முன் படுகின்ற அவஸ்த்தை
    பறவைக்கு இரையாகாமல்
    ஊர்ந்து செல்லும் புழுவின் பதட்டம்
    இவைகளை விட அதிகமடி
    உன் காதல் உன் அழகு தரும் துடிப்பு .

    Share
  • ஏழை

     

    ஏழை வீட்டு அடுப்பில்
    அழுதபடி ஈரமாகிறது
    விறகு
    வியர்வைக் கடலில்
    குளிக்கிறான் ஏழை
    ஒரு பிடிச்சோற்றுக்காய்

    மூன்று வேளையும்
    வயிற்றுக்கு விழாயெனில்
    அது நிலா நாள்தான் ஏழைக்கு

    ஒவ்வொரு நாளையும்
    அவன் உழைப்புக்கு அடகு வைத்தாலும்
    இழக்கிறான் முதலும் வட்டியும்

    சுவாசிக்கவும் காசெனில்
    பிறந்தபோதே மூச்சிழந்திருப்பான்
    ஏழை

    ஏழைக் குடிசை சோற்றுப்பானைக்குள்
    இருக்கும்
    உண்மை நேர்மை உழைப்பு

    சிப்பிகளுக்கு ஏக்கம்
    ஏழை வியர்வை எடுத்து முத்தாக்க

    பணக்காரன் வெள்ளிப் பாத்திரத்தில்
    உணவு
    ஊழல் பொய் சுரண்டல்

    மழைக்காலம் கண்ணீரால் நிரம்பியது
    ஏழைக் குடிசை
    ஏழை புன்னகைபோல் அழகில்லை
    சொர்க்க
    பூக்களுக்கும்

    சோழ மன்னனைவிட மேல்
    ஏழைக்குத் தொழில் கொடுத்து
    சோறுபோடும் முதலாளி

    ஏழை கண்ணீர் துடைத்த விரலால்
    சூரியன் தொடினும்
    அது குளிரும்

    மண் குடிசைகளில் ஏழை இதயங்கள்
    பொன் முட்டைகள்

    வறுமைக்குத் தீ கண்டு பிடிக்காதவரை
    அறிவு இல்லை
    எந்த விஞ்ஞானிக்கும்

    ஏழை வாழும் பூமியில் வெளிச்சம் மகிழ்ச்சியில்லை
    நூறு நூறு சூரியன்
    உதித்தாலும்

    ஏழை பசிபோக்கும் செல்வத்தில் தெரியும்
    ஒளிப் புன்னகை

    – ராஜகவி ராகில் –

    Share
  • ஆறாம் அறிவு தேடுபவன்!

    -ராஜகவி ராகில்

    ஓ ……மனமே
    தியானக் கயிற்றால் கட்டிப்போட்டாலும்
    பாய்கிறாய்
    பிய்த்துக் கொண்டு
    நினைவுக் கையால் இறுக்கிப் பிடித்தாலும்
    வழுக்கி வழுக்கி விழுகிறாய்
    வரால் மீனாட்டம்!

    இந்தக் கூடைக்குள் நிறைகின்றன
    குப்பைகள்
    அழுக்குகள்
    முயன்று முயன்று தோற்றுப் போகிறேன்
    ஒரு வெள்ளைச் சீலை
    குழந்தைச் சிரிப்பாய் வைக்க
    பொய்ப் புதருக்குள்
    வாழ்கிறாய்
    பாம்பாக!

    புகழெனும் விசக் குளத்தில்
    பாவத் தாமரையாக மலர்ந்து
    சிரிக்கிறாய் நீ
    வணக்கமென்ற ஆணியறைந்து
    கொழுவினால்
    விழுகிறாய்
    கழன்று கழன்று
    காமநாகம் கழுத்தில் சூடியபடி
    ஆட்டிவைக்கிறாய் உயிர்
    சந்தேகப் பிசாசு
    காதலித்துக் கைப்பிடித்து
    எனக்குள் உருவெடுக்கிறாய் பேயாய்!

    நீ
    நிரந்தரமான நோய்
    ஒழுக்க வீதியில் நடந்தபோதும்
    கால்களில் தைக்கிறாய்
    முள்ளாய் நின்று
    ஐம்புலத் தூண்களில்
    என்னை நான் நிறுத்தினாலும்
    சாய்க்கிறாய் சூறாவளியாக வந்து
    ஒரு ஞானியாகும் என் ஆசையில் வைக்கிறாய்
    பெருந்தீ!

    ஒரு முனிவன் அன்றி
    வேறு யாருமில்லை வீரன் என
    அறிய வைத்தாய் நீ
    எனது நான்
    மரணிக்க வேண்டுமெனில்
    நீ ஆகவேண்டும் என் அடிமையாய்
    இழிவினை செய்விக்கிறாய்
    நீ
    எஜமானாக இருந்துகொண்டு
    உன்னை
    ஒளியாக்க விரும்புகிறேன்
    நீ ஒளிக்கிறாய் என்னை இருளாக்கி!

    ஓ ….மனமே
    என் சாத்தான் நீயேதான்
    என் மனமெனும் அரசனே
    உன்னை வெல்லுதல்தான்
    இந்தச் சிப்பாய் இலக்கு
    நீ என்னைப் பிரகசமாக்கினால்
    நம்புவேன்
    நீதான் எனது ஆறாம் அறிவென்று!

     

     

    Share
  • ஊர்ச் சிப்பி நீ!

     – ராஜகவி ராகில்

    உன் அழகு
    திருவிழா
    அதில்
    தொலைந்து போனான்
    என் கண் சிறுவன்!

    உன்னைப்
    புகைப்படம் எடுத்தால்
    தெரியும்
    ரோஜாப்பூ!

    உன்
    பாதம்பட்ட மண்ணெடுத்து
    எறும்புகள் கட்டும்
    மணல் மாளிகை!

    உன்
    கொலுசு ஓசை கேட்ட
    தென்றல்
    உணர்ச்சிவசப்பட்டு ஆகிடலாம்
    புயலாக!

    உன்
    தரிசனம் கிடைப்பின்
    தேனாகும்
    எவர் குருதியும்!

    தமிழ்
    தன்னைத் தானே ரசிக்கிறது
    நீ
    உச்சரிக்கும்போது
    மட்டும்!

    முழு நிலா
    தேய்கிறது
    உன் முகஅழகை
    வெல்ல முடியவில்லையாம்!

    உன்
    ஊர்ச்சிப்பிக்குள்
    ஒரே ஒரு
    முத்து
    நீ!

     

    Share
  • மழலை நிலா!

    -ராஜகவி ராகில்

    உயிர் பெறுவதற்குக்
    காத்திருக்கிறது
    உன் மொழி!

    வயலின்                                                         Mom n baby
    வீணை
    புல்லங்குழல்
    எல்லாம் சேர்ந்த
    தனி
    இசைக்கருவி நீ!

    செடிகள்
    பூப் பூக்கின்றன
    நீ தவழ்வது பார்த்து
    ரசிப்பதற்காக!

    உன் விழிகள் காண்பதென்றால்
    விண்மீன்கள் வரும்
    பகலிலும்!

    நீ மூச்சுவிடும்போது மட்டும்தான்
    சுத்தம் அடைகிறது
    காற்று!

    உன் விரல்கள் தொட்டுப்பார்க்க
    எத்தனை ஆசை தெரியுமா
    மலர்களுக்கு?!

    தாய்க்கு
    உயிர்கொடுத்த
    தென்றல் நீ!

    உலகில்
    அதிசயங்களே இல்லை
    உன்னைத்தவிர!

    இறைவன் நிகழ்த்திய
    மகிழ்ச்சி நீ!

    அதோ…
    உன் புன்னகை தேடி
    வருகின்றன
    பட்டாம் பூச்சிகள்!

    உன் முதல் வார்த்தை அம்மாதான்
    என்றாலும்
    அவள் காத்திருக்கிறாள்
    குழந்தையாக!!

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share