நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள்

 

 

ராஜகவி ராகில்

 

 

சூரியன் கொண்டு வந்து விட்டுச் சென்ற இருளெனவும்

ஓர் இருளிலிருந்து கடத்தப்பட்ட
இன்னோர் இருள் மின்குமிளெனவும் நீ

ஓர் உயிர்த் தசை
பாவ இரும்புத்துகளாய் காந்த இதயம்
பொய் வேரில் நாவு மரம்
இருட்டு உண்கின்ற இரவுக் கண்
கறுப்பு இசை உணர்கின்ற மலட்டுக் காது

ஓர் உயிர்க் காடு
கார் வெயில் உறிஞ்சுகின்ற வேர்கள்
வளைந்து நெளிந்து அசைகின்ற பாம்புக் கிளைகள்
பருந்துகளாய்ப் பறந்து பிணம் உண்கின்ற இலைகள்

பாவ நச்சு விதை முளைக்கின்ற வயல்
நெருப்பை உண்கின்ற விறகு
கோப மலை ஏறுகின்ற உணர்ச்சிப் படிகள் என
சூறாவளி சிக்குப்பட்டு பிய்த்து வீசப்பட்டுக் கிடக்கிறது மனிதம்

முதற்கல் வைக்க கிடைக்கவே இல்லை
ஒரு மனிதன்
ஊரில் ஆலயம் கட்டுவதற்கு .

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *