ஏழை

 

ஏழை வீட்டு அடுப்பில்
அழுதபடி ஈரமாகிறது
விறகு
வியர்வைக் கடலில்
குளிக்கிறான் ஏழை
ஒரு பிடிச்சோற்றுக்காய்

மூன்று வேளையும்
வயிற்றுக்கு விழாயெனில்
அது நிலா நாள்தான் ஏழைக்கு

ஒவ்வொரு நாளையும்
அவன் உழைப்புக்கு அடகு வைத்தாலும்
இழக்கிறான் முதலும் வட்டியும்

சுவாசிக்கவும் காசெனில்
பிறந்தபோதே மூச்சிழந்திருப்பான்
ஏழை

ஏழைக் குடிசை சோற்றுப்பானைக்குள்
இருக்கும்
உண்மை நேர்மை உழைப்பு

சிப்பிகளுக்கு ஏக்கம்
ஏழை வியர்வை எடுத்து முத்தாக்க

பணக்காரன் வெள்ளிப் பாத்திரத்தில்
உணவு
ஊழல் பொய் சுரண்டல்

மழைக்காலம் கண்ணீரால் நிரம்பியது
ஏழைக் குடிசை
ஏழை புன்னகைபோல் அழகில்லை
சொர்க்க
பூக்களுக்கும்

சோழ மன்னனைவிட மேல்
ஏழைக்குத் தொழில் கொடுத்து
சோறுபோடும் முதலாளி

ஏழை கண்ணீர் துடைத்த விரலால்
சூரியன் தொடினும்
அது குளிரும்

மண் குடிசைகளில் ஏழை இதயங்கள்
பொன் முட்டைகள்

வறுமைக்குத் தீ கண்டு பிடிக்காதவரை
அறிவு இல்லை
எந்த விஞ்ஞானிக்கும்

ஏழை வாழும் பூமியில் வெளிச்சம் மகிழ்ச்சியில்லை
நூறு நூறு சூரியன்
உதித்தாலும்

ஏழை பசிபோக்கும் செல்வத்தில் தெரியும்
ஒளிப் புன்னகை

– ராஜகவி ராகில் –

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *