அப்பா உழவன்
– ராஜகவி ராகில்
அதிகம்
அப்பா வயல் நெல் மணிகளை விட
விளைந்த வியர்வைத் துளிகள்
வயற்காடு கறுத்திருக்கின்ற பொழுதிலும்
சூரியன் முதுமையுற்று
மேற்கு வைத்தியசாலைப் பக்கம் சென்றபின்தான்
வீட்டில் அப்பா வந்து நிற்பார்
கறுத்துப்போன உருவமாய்
இருளும் வெளிச்சமும் களவொழுக்கம் புரிகின்ற
வைகறையில்
அம்மா அரைத் தூக்கத்தோடு
சோறு சமைத்துக் கட்டிக் கொடுப்பாள்
மாதத்தில் சில நாட்கள்
அப்பா உழவனென்றாலும்
வீட்டு அரிசிப்பானை வெறுமையாகவே இருக்கும்
பல நாட்கள்
அம்மாவைச் சாப்பிடும்
அக்கம் பக்கமெல்லாம் அரிசிக்கடன்
அடுத்ததெருக் கடை கடன் புத்தகம்
நீண்டு செல்லும் கள்ளக் கணக்குடன்
நூறு பத்து ரூபா நோட்டுக்களுக்கு
வித்தியாசம் சொல்லிக் கொடுக்க
புத்தகம் சுமந்ததில்லை அம்மா
வயல் தேநீர்க் கடை
அப்பா பசி
கடனில் மிதக்க
வியர்வை திருடிப் பிழைக்கும் கள்ளக் கணக்கு
அப்பா முகத்தில் சில பூக்கள் விரியும்
அறுவடை நாளில்
கடைசியில் முதலாளி வீட்டுக்கு
அப்பா வியர்வை செல்லும் மூட்டை மூட்டையாய்
பதக்கடைச் சாக்குகள் கூலியாய் மிஞ்ச
அதிலொரு பங்கு
தேநீர்க் கடைக் கடன் ஓட்டை அடைக்கும்
அக்கம் பக்கத்துக் கடன்களோடு
அம்மா காத்திருப்பாள்
நெல் வண்டி வரும்வரை
வாசலிலேயே
பகிர்ந்தளிக்கப்படும் அப்பா உழைப்பு
மீண்டும் உழவன் வீட்டில்
தொடரும் சோற்றுப் பஞ்சம் .