Tag: ராஜகவி ராகில்

  • குளிர் வெப்பம்!

    -ராஜகவி ராகில்

    கோடை நிலமழை
    உன் வருகை

    மலர்கள் பார்த்துப் பேசுகிறேன்
    உன்னோடு உரையாடிய திருப்தியாதலால்

    அருகில் இருக்கின்ற இலைகள் கூட
    வாசமாகி நேசிக்கின்றன உன்னை

    காற்றைப் பிடித்துப் பிடித்து பார்க்கிறேன்
    உன் சொற்கள் இருக்கின்றனவா என்று

    மழைத் துளிகளை விடக் குளிர்கின்றன
    உன் வார்த்தைகள்

    கிளியிடம் உன் பெயர் சொன்னேன்
    அது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது
    கனிகள் மறந்து

    உன்னைக் கண்ட
    நேற்றுக் கூட இன்றாகத்தான் இருக்கும்
    என்றுமே எனக்கு

    உன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும் என
    எழுத்துக்களெல்லாம்
    வரிசையாக வந்து நின்று அடம் பிடிக்கின்றன
    ஆசையுடன்

    கடலில் குளி நீ
    காலடியில் முத்துச் சிப்பிகள் நிரம்ப
    ஐஸ் மழை சிவப்பாகியது
    உன் மேனியில் விழுந்து

    பனிக்கட்டிகள்
    உனக்காகக் காத்திருக்கின்றன
    அழகான வெயிலாக
    குளிரான வெப்பமாக நீ வருவாய் என்று!

     

     

    Share
  • உசிருக்குள் விரிந்திருக்கும் புழுதிப் பூ! 

    ஈடில்லை
    கூடை கூடையாய்
    மலர்கள் பறித்து வந்து தூவினாலும்
    மேடை அமைத்துக் கவிதைச் சொற்களால்
    மாலைகள் போட்டாலும்
    பாட்டு ஆட்டமென வாழ்த்திசை பொழிந்தாலும்
    நீண்டு கிடக்கின்ற புழுதி வீடது
    கூரையில்லாத அது எனது இரண்டாம் மடி!

    கூரை வீடு
    உறங்கி விழிக்கவும்
    சோறு சாப்பிடவும்

    மிக அதிகம்
    நான் அசையாத ஆற்றில் நீந்தி விளையாடி
    புழுதித் தண்ணீர் குடித்தது!

    அப்பா தூங்கும் நேரங்கள் பார்த்துத்
    திருட்டுத்தனமாய்
    சைக்கிளோட்டப் பழகி
    விழுந்து எழுந்து
    கால் கைகள் காயங்களால் வலித்ததுவும்

    பின்
    நான் சைக்கிளோட்டும் அழகு இரசித்தபடி
    என் கூடவே வந்ததுவும்
    கல்வெட்டுக்களாய் எப்போதும் என் உசிரில்!

    மார்கழி மழை நாட்களில்
    ஓர் ஆறாய் ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளம்
    ஒரு மீன்போல்
    முதல் நீச்சல் பழகியது இன்னும் குளிர்கிறது ஈரமாய்!

    நீண்ட மைதானமாய்ப்
    பல விளையாட்டுக்கள் கற்றுத் தந்து
    இரவு எட்டுமணிக்கப்புறம் பேய்போல பயங்காட்டியதும்
    மனப் பைக்குள் பத்திரமான முத்துக்களாய்…

    அது
    இப்போதும் இருக்கிறது
    விளையாட்டுக்கள் இல்லாத ஓர் அனாதைத் தெருவாய்!

     

     

     

    Share
  • மிட்டாய் மலை இழுத்துச் செல்கின்ற எறும்பு!

    -ராஜகவி ராகில்

    கூந்தல் விரித்துத் தரையில்
    நீ நடந்துகொண்டிருந்த ஒரு தருணத்தில்
    பச்சைப் புல்வெளி ஆனதாம் கறுப்பாய்

    நான் அறிந்திருந்தேன்
    உன் நிழல் பார்த்து மயங்கி விழுந்தபோது
    உன் அழகு நிஜத் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிவிட்டதாய்!

    பலநிறப் பூக்கள் வாழும் வாசப் பிரதேசம்
    மலர்களெல்லாம் வெண்மையான
    ஒரு திடீர்ப் பொழுது
    நீ வந்து கொண்டிருந்தாய் புன்னகை வெயிலெறித்தபடி!

    ஈர்ப்பு பூமிக்கு இருப்பதாக
    நியூட்டன் சொன்ன கருத்து மறுத்து
    இதுவரைப் பேசிக்கொண்டிருக்கின்றன உனது கண்கள்!

    புல்லாங்குழல் கூறியது…
    ‘என் துளைகளுக்கு உன் பார்வை மட்டும் ஊட்டினால் போதும் ‘ என!

    உப்பு மணற்காடு
    நீ சிப்பிகள் சேர்த்துக் கொண்டிருந்த ஓர் அந்தி
    என்னைப் போல ஒரு புலவன் கண்டு சொன்னான்
    ‘முத்து,
    சிப்பிகள் பொறுக்கிக் கொண்டிருக்கின்றது’ என!

    தென்றல் விசாரணை நடத்தியது
    ‘எந்தச் செடியில்
    எந்தக் கிளையில்
    நீ மலர்ந்து உதிர்ந்து நடந்து வந்தாய்’ என்று!

    எறும்புக் கூட்டம் உன்னை இழுத்துச் செல்லலாம்
    அல்லது
    கடத்திவிடலாம்
    எவரும் எவையும்
    இதுவரை ஏறாத இனிப்பு மலையென்று! 

    நிலா
    ஓய்வு தேவையெனக் கேட்ட வேளை
    உன்னைக் காட்டியதாம் பதிலீடாய்! 

    காக்கையொன்று
    உன்னைக் கடந்து சென்ற நேரம் மயிலானதும்
    நீ ஆற்றில் கால்கள் நனைத்தபோது பொங்கிச் சூடானதும்
    எப்போதோ அறிந்திருந்தேன்
    நான் என் காதலுடன்!

     

     

     

    Share
  • உன் அந்தப்புரத்தில் சாஜகான் அடிமை

    – ராஜகவி  ராகில் –

     

    விழி விரல்களாலும் விழிக்கால்களாலும்

    உன் அழகு தொட்டுத் தொடர்கிறேன் நான்

    உன் வெள்ளைப் பள்ளத்தாக்குப் புன்னகைக்குள்

    தூக்கி வீசுகிறாய்

    நீ என்னை

     

    ஆயுள் வரை

    ஈரமாகவே இருக்க விரும்புகிறேன்

    உன் காதல் மழையில் நனைந்து

     

    என் காதல்

    இனி

    பூக்கள் விரும்பாது

    உன் வார்த்தை வாசம் நுகர்ந்த பின்

     

    உன் ஜன்னல் வழியாய் நிலவாய் ஒளிர்கிறது

    உன்னைக் கனவு காண்கின்ற

    என் இரவு

     

    பனியாக்கிவிடும் உன் அழகு

    நீ

    நெருப்பில் நூலெடுத்து

    சேலை நெய்து உடுத்தினாலும்

     

    நீ வருகின்ற நாளில்

    என் ஊருக்குக் கிடைக்கலாம் மின்சாரம்

    உன்னிடம் வாசம் வாங்கக் காத்திருக்கும்

    ரோஜாப் பூக்கள்

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும்

     

    உன்னால்

    என் அறை குளம்

    கட்டில் மிதக்கிறது

    தாமரையாய்

     

    காதல்

    கண்கள்

    கண்களுக்கு ஊட்டுகின்ற நஞ்சு

    நீ பருக்கிய பின்

    என் உயிர் மூச்சு வீசுகிறது புயலாய்

     

    என்னை

    அந்தப்புரமாக்கிய அரசியே

    நீ ஒரு பூ பார்த்திடின்

    பழமாகி

    நுழைந்திடும் உன் வாய்க்குள்

    அல்லது

    பட்டாம் பூச்சியாகி

    அமர்ந்திடும் உன் கைக்குள்

     

    – ராஜகவி  ராகில் –

    Share
  • ஒரு வரிக் கரும்பு

     

    ராஜகவி ராகில்

     

     

    * முள்ளில் பனித்துளி

    * சிலந்தி வலையில் பட்டாம் பூச்சி

    * குளத்தில் நிலா அசைகிறது

    * உதிர்ந்து கிடந்த இலையில் பிணவாடை

    * குடத்தினுள் காற்று

    * அரிசிப்பானைக்குள் கடன்

    * அடுப்பில் எறும்புகள்

    * விளக்கில் இருள்

    * வேப்பமரத்தின் கீழ் மிட்டாய்க்காரன்

    * காலையில் உதிர்ந்து கிடந்தது கனவு

    * தேநீர்க் கடைக்காரன் கோபக்காரன்

    * கொக்கு இருளில் கறுப்பு

    * ஆற்றில் விழுந்தும் நிழல் நனையவில்லை

    Share
  • எரியும் இருள்

     

    ராஜகவி ராகில்

     

    நான் ஓட்டை விழுந்த கம்பல்ல

    புல்லாங்குழல்

     

    உன் உளி தொடும் வரை

    கல்லாய்க் காத்திருக்கிறேன் நான்

     

    நான் செய்வதை நிழலும் செய்தது

    பொம்மை வெறுத்தேன்

     

    கல் வீசியும் விழாத மாங்காய்

    என் கனவில் விழுந்து கிடந்தது

     

    கண்ட கனவை

    காலையில் கட்டிலில் தேடினேன் நான்

     

    உன் அழகு குளிர்த் தேநீர்

    என் கண் குவளையில் ஊற்றி அருந்துகிறேன் நான்

     

    சொற்களால் என்னைக் கிழித்த நான்

    சொற்களால்தான் தைக்கிறேன்

     

    நான் நீர்க் குமிழி

    என்னை உடைத்து விடாதீர்கள்

     

    நான் பட்டாம் பூச்சி

    பூவென்று நினைத்து சிலந்தி வலையில் அமர்ந்து விட்டேன்

     

    நீ விளக்கேற்றினால்

    எரியும் எனது இருள்

     

    Share
  • பக்கத்து வீடு

    ராஜகவி ராகில்

     

     

    நகரம்

    சீமெந்துக் காடு

    தொலை தூரம் பக்கத்து வீடு

     

    கிராமம் சோலை

    உள் அறைக்குள் பூத்திருக்கும்

    பக்கத்து வீடு

     

    பக்கத்து வீட்டோடு

    பகை கொண்டவன்

    மனிதப் படியிலிருந்து கீழ் இறங்கியவன்

     

    தாகமென்றால்

    கிணற்றோடு வரும்

    பக்கத்துவீடு

     

    பக்கத்து வீடு

    சுவாசம்

    ஒவ்வொரு நாளும் பலகறி வீட்டில்

     

    புன்னகை கண்ணீர்

    பரிமாறுகின்ற பாத்திரம்

    பக்கத்து வீடு

     

    அடுப்பு எரியவில்லை

    அடுத்த வீட்டு நெருப்பில்

    உனக்காகப் பொங்கும் பால்

     

    பக்கத்து வீடுதான்

    முதல் முற்றம் சுற்றம்

     

    பக்கத்து வீடு

    லட்டு

    இனிக்கத் தொடங்கும்  இதய நா

     

    நரம்புகளில் தாலாட்டு ஒலிக்கும்

    பக்கத்து வீடு

    தாய் மடி போலானால்

     

    தூக்கம் தைக்கும்

    பக்கத்து வீடு

    முள்ளென்றால்

     

    பக்கத்து வீட்டோடு காதல் உண்டெனில்

    ஒவ்வொரு நாளும்

    மகிழ்ச்சிக்கு நடக்கும்

    திருமணம்

     

    Share
  • பேரெழில் தீயடி

     

    – ராஜகவி ராகில் –

     

    நீர்க் குமிழியுடையாமல் அதனுள்ளே உனை

    அழைத்துச் செல்வேன் பார்

    பேரெழில் சிதையாமல் எனக்குள்ளே உனை

    இழுத்துண்பேன் பார்

    தேர்க் குடையாய்க் கார்மேகம் வரச் சொல்லி

    உன் கைதான் பிடித்து நடப்பேன் நானடி – செல்லம்மா

    தேநீர்க் குவளைக்குள் பேரெழில் தனை இறக்கி

    உன் கண்ணால் குடித்துக் கிடப்பேன் நானடி

     

     

    Share
  • ஆடம்பரமற்ற எனது நிழல்

     
    ஆடம்பரமற்ற எனது நிழல்

    நான் நிழலால் செல்கிறேன்
    என் கூடவே வருகிறது நிஜம்

    என் நிழலுக்குள்
    சூரியன் நுழைய முடியவில்லை

    மர நிழலுக்குப் பொறாமை
    அங்குமிங்கும் செல்கின்ற என் நிழல் பார்த்து

    நான் இருக்கிறேன்
    இருளுக்குள் இறந்து விடுகிறது எனது நிழல்

    வெளிச்சம் படைக்கின்ற
    என் நிழலுக்கு இரகசியமில்லை

    அடித்தாலும் மிதித்தாலும் வலிக்காத
    என் நிழலைத்தான் நான் நேசிக்கிறேன்

    நீரில் மூழ்காத எனது நிழல்
    நனைவதில்லை

    வண்ண ஆடை உடுத்தாலும்
    கறுப்பாகவே இருக்கிறது ஆடம்பரமில்லாத எனது நிழல்

    – ராஜகவி ராகில் –

    Share
  • அறைக்கண்ணாடி

     

    நெசவாளியை நெய்கின்ற பட்டு நூல்
    அணில் கனவு காண்கிறது
    நீ தேவதைச் செடியென்றும் உன் இதழ்ப் பழம் கடித்து
    உண்ணலாமென்றும்
    பள்ளிக்கூடம் செல்லாத பாமரனும் எழுதுவான் செய்யுள்
    இரண்டு இளநீர் மட்டுமே காய்த்திருக்கின்ற
    இளந் தென்னை நீயென
    குருவி கிளி விரும்பும்
    உன் பற்கள் வெள்ளை நெற்கள் என நினைத்து
    கொறித்திட
    தென்றல் வாசித்து மகிழும் உன் மூக்கு
    இரண்டு துளைகள் கொண்ட இரண்டு இஞ்சிப் புல்லாங்குழல்
    என்று
    மன்மதன் விரும்புவான்
    உன் கன்னத் தங்கக் காகிதத்தில்
    இதழ் எழுதுகோல் கொண்டு கவிதை எழுத
    விலகியிருக்கும்
    இரண்டு கறுப்புத் தண்டவாளங்கள் உன் புருவங்கள்
    விபத்தாகுவான்
    கண்களால் புகையிரதம் செலுத்துபவன்
    உன் நுதல் கண்ட பிறை தொடர்ந்து வளராது
    அப்படியே நிற்கும்
    அழகில் சொக்கியும் சிக்கியும்
    கறுப்பு வெள்ளையென இரண்டு மீன்கள் துடிக்கின்ற
    உன் முகக் குளத்தில்
    ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குப் பார்வை
    நிலா
    நட்சத்திரங்கள் உதிக்கலாம்
    உன் கூந்தல் ஒரு துண்டு இரவென்று நினைத்து
    கவனம்
    உன்னைப் பார்த்தபடியே விழித்திருக்கிறது
    அறைக்கண்ணாடி
    அதற்குப் போடு அல்லது நீ போடு ‘ பர்தா ‘
    புதிதாகப் படைக்கப்பட்ட தண்டுப் பூக்கள்
    உன் விரல்கள்
    அதில் போதையோடு அமரும் பட்டாம் பூச்சிகள்
    நான் நம்புகிறேன்
    பிறைப் பிஞ்சு பெளர்ணமிப் பழமாக
    தண்ணீர் ஊற்றுகிறது உன் அழகுதான் என
    – ராஜகவி ராகில்

    Share
  • என்னைத் தேடும் நானும் கண்டு பிடிக்க முடியாத நானும்

     

     

    ஒற்றைத் தாள் நாணயம் நான்
    மாற்றிச் செலவு செய்யத்தான்
    முடியவில்லை

    வாழ்க்கை தூர்ந்து போன கிணறு
    அள்ளிக் குடிக்கவும்
    குளிக்கவும் எப்படி இயலும்

    மின்மினிப் பூச்சியாய்
    நான் பறந்து கொண்டிருக்கிறேன் சுடர் நோக்கியவாறு

    எனக்கென்று எதுவுமே
    சொந்தமில்லை
    நான் கூட வேறொருவன் உடமை

    புல்லாகத்தான் முளைத்திருக்கிறேன்
    மரமாகும் வழி தெரியவில்லை

    ஒன்பது வாசல்கள் உள்ளன
    எந்த வழியாலும்
    நான் வெளியேறலாம்

    வெற்றிடமாகத்தான் வந்தேன்
    சுமையால் நிரம்பிக்கிடக்கிறது பை

    என்னை எனக்கே தெரியவில்லை
    என் பெயர் கேட்கிறார்கள்

    வாழ்க்கை ஓர் அடுப்பு
    தண்ணீர்ப் பானையாய்
    நான் உட்கார்ந்திருக்கிறேன்

    வெளியே பேசியது துளிதான்
    உள்ளே கடல்

    – ராஜகவி ராகில் –

    Share
  • மெளனம்

      ராஜகவி ராகில்

     

    தான்

    மெளனமாக இல்லையென்று

    சத்தம் போட்டுச் சொன்னது மெளனம்

     

    சிற்பத்தினுள்

    கேட்டுக் கொண்டே இருக்கிறது

    உளியின் சத்தம்

     

    தானாகவே அவிழ்த்துக் கொண்டு

    வெளியேறுகிறது

    மெளனம் பிடித்து இறுகக் கட்டிப் போட்டாலும்

     

    சொற்களால் நிரம்பியுள்ளது

    கோபத்தின் மெளனம்

     

    ஞானி மெளனத்தில் கேட்கின்றன

    பூக்கள் அவிழ்கின்ற ஒலிகள்

     

    மெளனத்திடம்

    வரிசையாக வந்து நிற்கின்றன

    சத்தம் போடாத வார்த்தைகள்

     

    மெளனம் குளத்தில் போட்டால்

    தளம்பும்

    கலங்கும்

     

    மெளனமான ஒருவனைத்தான்

    மெளனம்

    தேடிக் கொண்டிருக்கிறது

     

    மெளனம்

    ஓட்டைகள் நிரம்பிய கோப்பை

    நீரூற்றவே முடியாது

     

    மெளனம் ஞானமடைகிறது

    சத்தமிட்டு

    போதிக்கின்றபோது

     

     

     

    Share
  • சொல்

    ராஜகவி ராகில்

     

     

    என் வார்த்தைகளை திருப்பிக் கேட்டேன்

    பதில் வந்தது

    இனி

    உனக்குச் சொந்தமில்லையென

     

    குழியானது

    சொல் விழுந்த இடம்

     

    ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும்

    மோதியபோது

    காயமடைந்தது மொழி

     

    வாங்க மறுத்தது முள்

    பூச் சொற்கள் கொடுத்தபோது

     

    பலமாய் வீசிய சொல்

    புயலாய் மாறியது

     

    நீரூற்றி வளர்த்த சொல்

    பூப் பூத்தது

     

    கூடவே வந்தன

    சொல்லிய சொற்கள்

     

    தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன

    மலர்ந்த

    சொற்களில்

     

    இரண்டு பதங்கள் உரசியபோது

    உண்டானது

    நெருப்பு

     

    குற்றச் சொற்களையும்

    சிறையில் அடைக்க வேண்டும்

     

     

    Share
  • உழவன் உயிர்

    ராஜகவி ராகில்

     

    எழுதுகோல்

    நிலம் காகிதம்

    எழுதுகிறான்

    உழவனெனும் கவிஞன்

     

    தேகம் கருமேகம்

    வியர்வை மழை

    பொழிகிறான்

    பயிர்கள்

    செழிக்க

     

    பச்சை நிற

    நெற்பயிரை

    மஞ்சளாக்கி மகிழ்கிறது

    உழவன் உழைப்பு

     

    வயல் என்பது

    சேற்று நிலமல்ல

    உழவன்

    கருந்தோல்

     

    அவன் கண்ட

    கனவின் நிஜம்

    நெல்மணி

     

    உழவன் இல்லாத

    ஊரில்

    நீர் நிலமிருந்தும்

    அது

    பாலைவனம்

     

    ஓர் உழவன்

    சமன்

    ஆயிரம்

    அரசர்களுக்கு

     

    உழவனை மதிக்காத

    ஊர்

    எரியும்

    பஞ்சத்தால்

     

    வெறும் பானைக்குள்

    சோறு

    நிரப்புகிறது

    உழவன் வியர்வை

     

     

    Share
  • தூரிகை உதறியதில் விழுந்த வர்ணம்!

    -ராஜகவி ராகில்

    மழை
    இலைகள் பிரார்த்தனை கேட்டு
    நனைந்த கார்முகிற்செடி
    குளிர்ந்து
    குனிந்து தூவுகின்ற
    துளித் துளி ஈர மல்லிகை!

    கடல்
    அலைக் குதிரைப் படை
    வந்தும்
    சென்றும் காவல் காக்க
    தண்ணீர் தேச மன்னன் வாழ்கிறான்
    மீன் மக்களோடு! 

    அருவி
    மலைப் பொந்துக்குள்ளிருந்து புறப்படுகின்ற
    ஊற்று அரவம்
    இறங்கி
    விழுந்து சீறுகிறது
    வெண் நாகமாய்! 

    குயில் 
    துளை ஒன்று
    சிறகுகள் இரண்டு கொண்டு பறக்கின்ற
    புல்லாங்குழல் இசையழகி!

    பெளர்ணமி
    வேர்
    நீர் இல்லாமல் எப்படி வளர்ந்தாள் என
    இரவு கேட்கும் கேள்விக்கு
    ஒளிப் பதில் சொல்லும் தேவதை!

     

     

     

    Share