சொல்
ராஜகவி ராகில்
என் வார்த்தைகளை திருப்பிக் கேட்டேன்
பதில் வந்தது
இனி
உனக்குச் சொந்தமில்லையென
குழியானது
சொல் விழுந்த இடம்
ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும்
மோதியபோது
காயமடைந்தது மொழி
வாங்க மறுத்தது முள்
பூச் சொற்கள் கொடுத்தபோது
பலமாய் வீசிய சொல்
புயலாய் மாறியது
நீரூற்றி வளர்த்த சொல்
பூப் பூத்தது
கூடவே வந்தன
சொல்லிய சொற்கள்
தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன
மலர்ந்த
சொற்களில்
இரண்டு பதங்கள் உரசியபோது
உண்டானது
நெருப்பு
குற்றச் சொற்களையும்
சிறையில் அடைக்க வேண்டும்