அறைக்கண்ணாடி

 

நெசவாளியை நெய்கின்ற பட்டு நூல்
அணில் கனவு காண்கிறது
நீ தேவதைச் செடியென்றும் உன் இதழ்ப் பழம் கடித்து
உண்ணலாமென்றும்
பள்ளிக்கூடம் செல்லாத பாமரனும் எழுதுவான் செய்யுள்
இரண்டு இளநீர் மட்டுமே காய்த்திருக்கின்ற
இளந் தென்னை நீயென
குருவி கிளி விரும்பும்
உன் பற்கள் வெள்ளை நெற்கள் என நினைத்து
கொறித்திட
தென்றல் வாசித்து மகிழும் உன் மூக்கு
இரண்டு துளைகள் கொண்ட இரண்டு இஞ்சிப் புல்லாங்குழல்
என்று
மன்மதன் விரும்புவான்
உன் கன்னத் தங்கக் காகிதத்தில்
இதழ் எழுதுகோல் கொண்டு கவிதை எழுத
விலகியிருக்கும்
இரண்டு கறுப்புத் தண்டவாளங்கள் உன் புருவங்கள்
விபத்தாகுவான்
கண்களால் புகையிரதம் செலுத்துபவன்
உன் நுதல் கண்ட பிறை தொடர்ந்து வளராது
அப்படியே நிற்கும்
அழகில் சொக்கியும் சிக்கியும்
கறுப்பு வெள்ளையென இரண்டு மீன்கள் துடிக்கின்ற
உன் முகக் குளத்தில்
ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குப் பார்வை
நிலா
நட்சத்திரங்கள் உதிக்கலாம்
உன் கூந்தல் ஒரு துண்டு இரவென்று நினைத்து
கவனம்
உன்னைப் பார்த்தபடியே விழித்திருக்கிறது
அறைக்கண்ணாடி
அதற்குப் போடு அல்லது நீ போடு ‘ பர்தா ‘
புதிதாகப் படைக்கப்பட்ட தண்டுப் பூக்கள்
உன் விரல்கள்
அதில் போதையோடு அமரும் பட்டாம் பூச்சிகள்
நான் நம்புகிறேன்
பிறைப் பிஞ்சு பெளர்ணமிப் பழமாக
தண்ணீர் ஊற்றுகிறது உன் அழகுதான் என
– ராஜகவி ராகில்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *