-ராஜகவி ராகில்
மழை
இலைகள் பிரார்த்தனை கேட்டு
நனைந்த கார்முகிற்செடி
குளிர்ந்து
குனிந்து தூவுகின்ற
துளித் துளி ஈர மல்லிகை!
கடல்
அலைக் குதிரைப் படை
வந்தும்
சென்றும் காவல் காக்க
தண்ணீர் தேச மன்னன் வாழ்கிறான்
மீன் மக்களோடு!
அருவி
மலைப் பொந்துக்குள்ளிருந்து புறப்படுகின்ற
ஊற்று அரவம்
இறங்கி
விழுந்து சீறுகிறது
வெண் நாகமாய்!
குயில்
துளை ஒன்று
சிறகுகள் இரண்டு கொண்டு பறக்கின்ற
புல்லாங்குழல் இசையழகி!
பெளர்ணமி
வேர்
நீர் இல்லாமல் எப்படி வளர்ந்தாள் என
இரவு கேட்கும் கேள்விக்கு
ஒளிப் பதில் சொல்லும் தேவதை!

Leave a Reply