மெளனம்

  ராஜகவி ராகில்

 

தான்

மெளனமாக இல்லையென்று

சத்தம் போட்டுச் சொன்னது மெளனம்

 

சிற்பத்தினுள்

கேட்டுக் கொண்டே இருக்கிறது

உளியின் சத்தம்

 

தானாகவே அவிழ்த்துக் கொண்டு

வெளியேறுகிறது

மெளனம் பிடித்து இறுகக் கட்டிப் போட்டாலும்

 

சொற்களால் நிரம்பியுள்ளது

கோபத்தின் மெளனம்

 

ஞானி மெளனத்தில் கேட்கின்றன

பூக்கள் அவிழ்கின்ற ஒலிகள்

 

மெளனத்திடம்

வரிசையாக வந்து நிற்கின்றன

சத்தம் போடாத வார்த்தைகள்

 

மெளனம் குளத்தில் போட்டால்

தளம்பும்

கலங்கும்

 

மெளனமான ஒருவனைத்தான்

மெளனம்

தேடிக் கொண்டிருக்கிறது

 

மெளனம்

ஓட்டைகள் நிரம்பிய கோப்பை

நீரூற்றவே முடியாது

 

மெளனம் ஞானமடைகிறது

சத்தமிட்டு

போதிக்கின்றபோது

 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *