Tag: பவள சங்கரி திருநாவுக்கரசு

  • ஆடிப்பூர நாயகியே!

    பவள சங்கரி

    10410743_284757875043571_8764516859868651313_n

    ஆடிப்பூரத்தில் அங்கமெல்லாம் மின்னும் பொன்னாய்
     ஆடிப்பாடி வருகிறாள் மின்னிடையாள் ஆனந்தமாய்
    கொஞ்சுதமிழும் பஞ்சு மெல்லடியும் பாந்தமாய்
    பொருந்திவர நஞ்சுண்ட கண்டனின் நாயகியாய்
    அபயமளிக்கும் நற்றுணை வேதமே அன்னையாய்
    பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்
    நித்தமும் நின்னை நினைந்துருகும் வரமருள்வாய்
    வாரணாம்பிகையே! வாயுதேவியே! வாகீசநாயகியே!
    போற்றி போற்றி!! அன்னையே அகிலாண்டநாயகியே!!
    அஞ்சேலெனும் மந்திரமருளும் மாதவச் செல்வியே!!
    வணங்குகிறேன் நிதம் நின்னையே! எனதன்னையே!!

    படத்திற்கு நன்றி

     

    Share
  • கால காலேசுவரர் சன்னதி

    பவள சங்கரி

    1

    நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்
    பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை
    ஓற்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
    நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே

    _ மத் சிதம்பர சுவாமிகள்

    2

    பூமாதேவி செய்த தவம்

     

     

    4

    3

    avRyBTlPmXDDsMri6FN1YlZC7b3aLOFuWSB8Ecs4uZE,af3F0NtqlJGUJMRoxBVR5Fi3re3dp0db8wrAoyrfJS4

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளதுதான், கால காலேசுவரர் சன்னதி. இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் அற நிலையத்துறையின் பொறுப்பில் ரூ. 45 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படுகிறது. ஆளுயர நடராசர் திருவுருவம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர் அல்லாத, தேசிகர் வகுப்பைச் சேர்ந்த ஒரு 90 வயது மூதாட்டியே இக்கோவிலுக்குத் தன்னால் இயன்ற வகையில், அவ்வப்போது வரும் பக்தர்களின் சிறு காணிக்கைகள் மூலம் பூசைகள் செய்து வந்திருக்கிறார். மழையும் பொய்த்துப்போனதால் ஊரில் விவசாயமும் நலிந்து போய், மக்கள் தங்கள் பாடே திண்டாட்டம் என்கிற நிலையில், சுவாமியை கவனிக்க முடியாமல் விட்டிருக்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரிலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள, அனந்தமங்கலம் ஆஞ்சேநேயர் சுவாமி கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது கால காலேஸ்வரர் சன்னதி.

    என்றும் பதினாறு என்று வரம் பெற்ற மார்கண்டேயனைக் காக்கும் பொருட்டு, சிவபெருமான் எமனை வதம் செய்து காலசம்கார மூர்த்தியாக விளங்கும் திருத்தலமே, திருக்கடவூர். அப்படி வதம் செய்தபோது எமனின் தலை தெரித்து விழுந்த இடம்தான் எருக்கட்டாஞ்சேரி என்கிறார்கள். ஐயனின் திருவருளால் அந்தத் தலை மீண்டும் உயிர் பெற்று எழுந்த இத்தலம் ‘எழுப்பி விட்டான் சேரி’ எனப் பெயர் பெற்று பின்னர் மருவி ‘எருக்கட்டாஞ்சேரி’ என ஆகியுள்ளது.

    சிவபெருமானார் எமனை வதம் செய்ததால், மக்களுக்கு எமபயம் முற்றிலும் நீங்கிவிட்டது. அதனால் இறைபக்தி குறைந்ததோடு அதர்மங்கள் பெருகியுள்ளன. நாட்டில் அக்கிரமங்களும் அதிகரித்துள்ளன. பூமித்தாய் பாரம் தாங்காமல் மனம் நொந்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற வரத்தின் மூலமாக மீண்டும் எமனுக்கு உயிர் பெற்றுத் தருகிறாள். சினம் தணிந்த சிவபெருமான் எமனுடைய தலையை இத்தலத்தில் பொருந்தச் செய்து உயிர் கொடுத்தார்.எமனுக்கே உயிர் கொடுத்த இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு, மரணபயம் நீங்கி, நோய், நொடியில்லாமல் வாழ்வார்கள் என்பது ஐதீகம். திருக்கடவூர் சென்று வழிபடும் பக்தர்கள் எருக்கட்டாஞ்சேரி கால காலேசுவரரையும் அன்னை கருத்தடக்கன்னியையும் வழிபட்டு வருவது வழக்கம். இதனால் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் தீர்க்காயுளுடனும் வாழலாம் என்ற நம்பிக்கையும் மக்களிடம் பரவலாக இருக்கிறது. விரைவில் இக்கோவிலின் திருப்பணி நிறைவேறி ஐயனின் அருளொலி பூரணமாக பிரகாசிக்க நம்மால் ஆனதையும் செய்யலாமே..

    Share
  • நிலையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

    பவள சங்கரி

    சமீபத்தில் இலண்டனிலிருந்து வரும் ’இலக்கியப் பூக்கள்’ என்ற அகில வானொலியில் ஒலிபரப்பான எனது சிறு படைப்பு.

    நிலையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

    வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எத்தனையோ இலட்சியங்களும் குறிக்கோளும் கொண்டிருந்தாலும், அனைவருக்கும் பொதுவான ஒரு விசயம், நாம் அனைவரும் ஒரே எல்லையை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதுதான். அதுதான் மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம், அமைதி இப்படி பல பெயர்கள் கொண்ட அந்த ஒரே விசயம். ஒருவர் எத்தனைதான் சாதனைகள் புரிந்தாலும், மகிழ்ச்சி என்ற ஒன்று கிட்டாத வரை அதில் எந்த பலனும் இல்லை அல்லவா? இந்த மகிழ்ச்சி எதனால் அதிகம் வருகிறது? அல்லது எப்போது நிலைத்து நிற்கிறது, இது எல்லோருக்குமே எழக்கூடிய ஒரு வினாதானே?

    பெரும் பணக்காரராக, அதாவது கோடிக்கணக்கான சொத்து உள்ளவராக இருந்தால் எல்லையில்லா மகிழ்ச்சி வருமோ?

    ஓரளவிற்கு, அதாவது ஒரு டிகிரி என்று வைத்துக் கொள்ளலாம். சரி தேவையான துணிமணிகளும், பொருட்களும் வாங்கிமுடித்தவுடன் பிறகு சிறிது சிறிதாக மகிழ்ச்சி குறைந்து சலிப்பு தோன்ற ஆரம்பிக்கும். சமீப காலங்களில் சராசரி வருமான விகிதம் கணிசமாக ஏறித்தான் இருக்கிறது. ஆனால் அதனால் மகிழ்ச்சி பெருகியுள்ளது என்றுகூற முடியாது. பணம் ஒரு அளவிற்கும் மேல் சேர்ந்து விட்டால், பிறகு அது மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய காலம் எப்போதென்றால், தன் நண்பனை விடவோ, தன் பக்கத்து வீட்டுக்காரரைவிடவோ அல்லது நெருங்கிய உறவினரைவிடவோ அதிகமாக இருக்கும் வேளையில் மட்டுமே சிறிது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும்.

    பணம் மனிதரின் தரத்தை உயர்த்துகிறது. தரம் உயர்ந்தால், மற்றவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அப்போது ஓரளவிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.ஆனாலும் மத்திய வர்க்கத்திலுள்ளவர்களைவிட மேல்மட்டத்தில் உள்ளவர்கள் குறைந்த மகிழ்ச்சியுடையவர்களாகவே காணப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

    விருப்பு அதிகமானால் மகிழ்ச்சி அதிகமாகுமா?

    சில ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்ஸ் மெகேலோஸ் என்ற விஞ்ஞானி பல நாடுகளிலிருந்தும் 18,000 கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து அவர்களிடம், மகிழ்ச்சி குறித்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வின் முடிவில், அவர்களின் விருப்பம் பணம் தேடல் பற்றியதாக இல்லாமல், நட்பு, குடும்பம், வேலை, ஆரோக்கியம், தொழில் போன்றவைகளின் முன்னேற்றம் குறித்ததாகவே இருந்தது. அதாவது போதும் என்ற மனம் இருப்பதில்லை. தேடல் தொடர்ந்து கொண்டே இருப்பதனால், மகிழ்ச்சி இருப்பதில்லை.

    அதி புத்திசாலித்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

    மிகுந்த அறிவாளிகளாக இருப்பவர்கள் அதிக எதிர்ப்பார்ப்பு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே சாதாரண சாதனைகளவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது அவர்களின் சாதனைகள் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதைவிட, மேலும் பெரிய சாதனைகள் செய்ய வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தி, மகிழ்ச்சியைத் தடை செய்துவிடுகிறது.

    பிறவியிலேயே வரும் ஒரு குணமா…..இந்த மகிழ்ச்சி என்பது?
    இது ஓரளவிற்கு உண்மையாம். அதாவது, மரபணு வழியாக இந்த மகிழ்ச்சி, தன்னிறைவு வரும் வாய்ப்பு இருக்கிறதாம். அதாவது, தாய் தந்தை வழியாகவும், அவர்கள் வளர்ப்பு முறையிலும் மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியப்படுகிறது. சலிப்போ, சங்கடமோ மகிழ்ச்சியோ எதுவாகினும், பரம்பரைப் பழக்கமும் துணை போகிறது. பெற்றோர் எவ்வழியோ, குழந்தைகள் அவ்வழி இல்லையா?

    ‘அழகு ’ மகிழ்ச்சிக்கான ஒரு முக்கியமான காரணமா?

    அழகாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதற்கு, ஆச்சரியமான பதில் ஆம் என்பது. பொதுவாக ஆரோக்கியமான அழகு உடையவர்கள் மகிழ்ச்சி உடையவர்களாகவே உள்ளனர் என்கிறது சில ஆய்வறிக்கைகள். இதில் இன்னொரு ஆச்சரியம், மனதில் தான் அழகாக இருப்பதாக எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் கூட போதுமாம், மகிழ்ச்சியுடையவர்களாக இருப்பதற்கு. பொதுவாக பெண்கள் பெரும்பாலும் தாங்கள் குண்டாக இருப்பதாகவும், ஆண்கள் உயரம் குறைவாகவும், கட்டான உடலமைப்பு இல்லையே என்று எண்ணி வருந்துகிறார்களாம்.

    நல்ல நட்பு மகிழ்ச்சியைக் கொடுக்குமா ?

    சமூக உறவுகள் மனித வாழ்க்கையின் அடிப்படை மகிழ்ச்சிக்கு சிறந்த ஊக்குவிப்பாக இருப்பதுதான் நிதர்சனம். நல்ல நட்பு வட்டம் உடையவர்களும், கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவுகளுடன் சார்ந்து வாழும் தன்மையுடையவர்களும் பெரும்பாலும் மகிழ்ச்சியுடையவர்களாகவே இருக்கிறார்கள்.

    திருமணம் மகிழ்ச்சியான வாழ்க்கையின் ஆதாரமா?

    42 நாடுகளில் செய்த ஆய்வின் அடிப்படையில், அமெரிக்க ஆய்வாளர்கள், நல்ல திருமண வாழ்க்கை அமைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரும் அடிப்படையான மகிழ்ச்சி உடையவர்களாகவே இருக்கிறார்களாம். தனிமனிதனாக இருப்பவர்களைவிட, திருமணம் ஆகி நல்ல குடும்பத்துடன் வாழ்பவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்.

    நம்பிக்கை – மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

    ஹெரால்ட் கோயிங் என்கிற அமெரிக்க மனோதத்துவ நிபுணர், மறுபிறவி நம்பிக்கை உடையவர்கள் வாழ்க்கையில் அதிகமாக தனிமையை உணர்வதில்லை என்கிறார். ஒருவகையில் கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் இதனோடு ஒத்துப் போகிறது. மன அழுத்தமான சூழலில் இந்த ஆன்மீக நம்பிக்கை ஒரு தனிப்பட்ட சக்தியை வழங்குவதாக பல தத்துவ ஞானிகளும் சொல்கின்றனர். நம் அனுபவத்திலும் நம்மால் அதை உணர முடிகிறது. மத நம்பிக்கை பல எதிர் விளைவுகளுக்கு ஒரு நிவாரணியாகவே செயல்படுகிறது. ஆழ்ந்த ஆன்மீக நம்பிக்கை கொண்டோரின் ஆயுள் விருத்தியாவதற்கும் இதுவே காரணமாகிறது. மன அமைதியும், நம்பிக்கையும் ஒருவரை மகிழ்ச்சியான சூழலில் வைத்திருக்க உதவி புரிகிறது.

    தயாள குணம் மகிழ்ச்சியை அதிகப்படுத்துமா?

    ஆம் என்கிறது நம் சைவ சித்தாந்தமும், கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மத தத்துவங்களும். தயாள குணம் உடனடி மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு ஆயுதம் என்கிறது மனோத்தத்துவ ஆய்வுகள். இது கொடுப்பவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் ஆக இரு சாராருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விசயமாகும். இதற்கு சரியான சான்று மகாபாரதப் போரில் கர்ணன் தன் இறுதி நேரத்தில் கூட தன் தர்ம புண்ணியங்கள் அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுத்து மகிழ்ச்சி அடையும் உன்னத நிலையாகும்.

    வயது முதிர்ச்சியால் மகிழ்ச்சி கூடுமா குறையுமா?

    முதுமை அவ்வளவு கொடுமை அல்ல. ஆம் முதுமையில் தான் தன்னிறைவு அடைகிறதாம் மனது. காரணம் முதியவர்கள் வாழ்க்கையின் கடினமாகப் பகுதியையே அதிகமாக எதிர்பார்த்து இருப்பதனால், பிரச்சனைகள் அவர்களின் மகிழ்ச்சியைப் பாதிப்பதில்லை என்கிறது ஆய்வுகள். அனுபவம் காரணமாக தங்களின் இயல்பை உணர்ந்து வைத்திருப்பதாலும், தங்களுக்கு சாத்தியமாகக் கூடிய விசயங்களிலேயே நாட்டம் செலுத்துவதாலும் அவர்களின் மகிழ்ச்சிக்கு பங்கம் வருவதில்லை. அதாவது சுருங்கச் சொன்னால், 85 வயது பெரியவர் தன் மனைவிக்குக் கொடுக்கும் பிரியாவிடை முத்தம் ஏற்படுத்துகிற உணர்வுப்பூர்வமான பின்விளைவுகள் ஒரு 20 வயது இளைஞன் தன் மனைவிக்குக் கொடுக்கும் முத்தம் ஏற்படுத்துவதில்லை என்கிறது ஆய்வுகள்!!

    ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில் தான் உள்ளது என்பது தெளிவாகிறதல்லவா?

    Share
  • புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

    புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

    DSC00268

    மூலவர்   : முத்து மாரியம்மன், துர்க்கை

    தல விருட்சம் : வேம்பு மரம்

    தீர்த்தம் : வெல்லகுளம்

    பழமை : 500 ஆண்டுகள்

    புராணப் பெயர் : புன்னைவனம்

    ஊர் : புன்னைநல்லூர்

    மாவட்டம் : தஞ்சாவூர்

    மாநிலம் : தமிழ்நாடு

    தல சிறப்பு :  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார்.

    DSC00277

    தல வரலாறு : நம் இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதன் அதிசயத்தின் அடிப்படையில் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் இது புராணக்கதை என்ற குறுகிய வட்டத்தில் சென்றாலும், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள மன்னர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் என்ற ஆதாரங்கள் ஓரளவிற்கேனும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தலமும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்ற சிறப்பைப் பெறுகிறது.

    DSC00287

    தண்ணளி வீசும் பசும் வயல்வெளிகளுக்கிடையே புன்னைநல்லூர் மாரியம்மன் எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் தென்படுவது, மராத்திய மன்னர்களின் தனிப்பட்ட பாணியில் அமைந்த பரந்த மண்டபம். கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் இரண்டாம் பெரும் சுற்றுச்சுவர் போன்றவை சரபோஜி மன்னர் தஞ்சை மண்ணை ஆட்சி செய்த காலத்தில், கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவேறியுள்ளன. இந்த ஆலயத்தின் மூன்றாவது சுற்றுச்சுவர் மராட்டிய மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் அவர்களால் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    DSC00297

    இத்தலம் அமைந்த வரலாறு சுவையானது. வெறும் புற்று வடிவமாக அன்னை அருள்பாலித்துக் கொண்டிருந்த சமயம் அது. மகான் சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் கனவில் அம்மன் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்ப வேண்டி கட்டளை பிறப்பிக்கிறாள். இவரே அம்மனுக்கு மாரியன்னை வடிவமும் கொடுத்து ஸ்ரீசக்கரமும் உருவாக்கம் செய்தார். பின் ராஜஸ்ரீ சிவாஜி மகாராஜாவின் மூலம் ஆலயம் அற்புதமாக எழும்பியது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் முக்கியமான எண்பத்தி எட்டு திருக்கோவில்களில் புன்னை மாரியம்மன் கோவிலும் ஒன்று. கோவிலின் உட்பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் அழகே உருவாக அமைக்கப்பட்டுள்ளன.

     

    சதாசிவ பிரமேந்திரர்
    சதாசிவ பிரமேந்திரர்

    DSC00282

    கீர்த்தி சோழன் என்னும் மன்னன் அம்மனின் அருளால் பெற்ற ஆண்மகவிற்கு தேவசோழன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். அவன் நன்முறையில் வளர்ந்து பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அப்போது தஞ்சையை ஆண்டுவந்த வெங்கோஜி மகாராஜா 1680 ம் ஆண்டில் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்தபோது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்மன் அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் எழுந்தருளியுள்ள தன்னை தரிசிக்க வருமாறு கட்டளையிடவும், அரசனும் தம் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து அங்கிருந்து புன்னைக் காட்டிற்குச் செல்ல வழியமைத்து, அம்மனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சிறிய கூரையும் வேய்ந்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டதோடு அந்த கிராமத்தையே ஆலயத்திற்காக வழங்கினார். மேலும் 1728 -1735 ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட துளஜா என்ற மன்னனின் புதல்வி வைசூரி நோயால் கண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாள். அச்சமயம் அம்மனின் கீர்த்தியை அறிந்து ஆழ்ந்து வழிபட்டதால் பூரண குணம் பெற்றாள். இதனால் அம்மனின் திருவருளை எண்ணி பெரிதும் வியந்த அம்மன்னன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார். காலப்போக்கில் அது பெரும் கோவிலாக மாறியுள்ளது என்று வரலாறு கூறுகிறது.

    சண்டி
    சண்டி

    ஆறடி உயரமுள்ள அம்மனின் முகத்திலும், சிரசிலும் கோடைக்காலத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்படுவதைக் காணலாம். இதன் காரணமாகவே ஆலயத்தின் அருகில் உள்ள, உள்தொட்டி என்று அழைக்கப்படும் தொட்டியிலும், வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படும் பிரகாரத்தைச் சுற்றி உள்ள தொட்டிகளிலும் , அம்மை நோய்கண்டவர்கள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது. மனம் குளிர்ந்த அம்மன் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறாள். அதனால் அம்மை நோய் முதல், தோல் வியாதி, கண் நோய் , வயிற்று வலி, உடம்பில் சொறி, சிரங்கு, கட்டிகள் ஏற்படுதல், போன்றவற்றால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இந்த அம்மனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் கட்டாயம் குணமடைவதாக நம்பிக்கை வலுவாக இருக்கிறது. மேலும் வேலை வாய்ப்பு, பணியிடம் மாற்றம் , தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் அதனை நிறைவேற்றி கொடுக்கிறார் என்பதால் கோவிலில் எந்த நேரமும், குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் அதிகமாக பக்தர்கள் வந்து வழிபடுவதைக் காண முடிகிறது.

    DSC00271

    அம்மனுக்கு மாவிளக்குப் போடுதல் என்பதே இங்கு முக்கியமான பிரார்த்தனையாக உள்ளது. அம்மை நோய் கண்டு குணமடைந்தவர்கள் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். உடம்பில் கட்டிகளால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போட்டும், சொரி சிரங்கினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உப்பு வாங்கிப் போட்டும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். கணவரின் நலனுக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலையும் நேர்த்திகடனாக செய்கின்றனர். அம்மனுக்கு நிலைமாலை சாத்துவதால் தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடப்பதாகவும் நம்பிக்கை உள்ளது. பால்குடம் எடுத்தல், பால்காவடி, அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும்.

    DSC00278

    அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருவதால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிடேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது. விட்டிணு துர்க்கை அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திக்கும் அன்றாடம் அபிசேகம் நடைபெறுகிறது. 5 ஆண்டிற்கு ஒரு முறை, ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஒரு மண்டலத்திற்கு அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து, அதில் ஆவாகனம் செய்து, அந்த அம்மனுக்கே அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. அப்போது கருவறையில் உள்ள அம்மனுக்கு 48 நாட்களிலும் அன்றாடம் இரு வேளைகளிலும் சாம்பிராணி தைலம், புணுகு, போன்ற வாசனை பொருட்களால் அபிசேகம் நடைபெறுகிறது.

    DSC00273

    தைலாபிடேகம் செய்யும் காலங்களில் அம்மன் அதிகமான உக்கிரத்துடன் இருப்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு அம்மனுக்கு தயிர் பள்ளயம், இளநீர் போன்றவைகள் வைத்து நைவேத்தியம் நடைபெறுகிறது. ஆகம விதிப்படி அம்மனுக்கு நான்கு காலங்களும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் , முத்துப்பல்லக்கு ஆவணி மாதம் , கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் , தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா போன்றவைகள் வெகு சிறப்பாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. மாசிமகத்தன்று 1008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று உற்சவ மூர்த்திக்கு அபிசேகம் செய்கிறார்கள். ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று மிகச் சிறப்பான பூச்சொரிதல் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோவில் இருக்கும் ஊரின் பெயரே ‘மாரியம்மன் கோவில்’தான்.
    இங்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அன்றாடம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

    முகவரி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் – 613 501,  தஞ்சாவூர் மாவட்டம். 

    Share
  • அடுக்குமாடி குடியிருப்புகளும், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னையில் மீண்டும் ஒரு அவலம். நில அதிர்வாலோ அல்லது சுனாமியாலோ ஏற்பட்ட பேரழிவு அல்ல. அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலமே இது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள் பல இருக்கின்றன. அவைகள் சட்ட அளவில் மட்டும் இருக்கும் போல் உள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு முறையான மண் பரிசோதனை, நில ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ஆறு மாடிகள் கட்டலாம் என்று வல்லுநர்களின் அத்தாட்சி பெற்ற பின்புதான் பதினொரு மாடி கட்டப்பட்டது என்றால் பதினொரு மாடி கட்டி முடிக்கும் வரை அரசு பொறியாளர் எங்கு சென்றுவிட்டார். அவருடைய கவனத்திற்கு இந்தச் செய்தி எப்படி எட்டாமல் இருந்திருக்கும்? அவருடைய அலட்சியப்போக்கின் விலையாக இன்று எத்தனை உயிர்களை பலி வாங்கிவிட்டது. இந்தக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தரச் சான்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலம். குடியிருக்க ஒரு வீடு சொந்தமாக வேண்டும் என்ற ஆசையில் எங்கோ இருந்துகொண்டு சிரமப்பட்டு, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி ஒரு வீட்டை வாங்குபவர்களும், இந்த கட்டுமானப் பணிகளுக்காக, வயிற்றுப்பாட்டிற்காக பீகார், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து குடும்பத்துடன் வேலைக்கு வந்தவர்கள் என இரு சாராரும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டு வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களுடைய பிணங்களை வந்துப் பார்த்து ஆறுதலளிப்பதைவிட, அமைச்சர் பெருமக்கள் தங்களுக்குக் கீழ் உள்ள நிர்வாக அதிகாரிகளை சரியான முறையில் பணியாற்றச் செய்திருந்தாலே இந்த கோர சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்யாமல், இனியாவது சென்னை மாநகரைச் சுற்றி கட்டிக்கொண்டிருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்து, தரச் சான்றிதழ்கள் தருவார்களா மாநகராட்சி அலுவலர்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    10514583_1459257254331310_1997140068682654040_n

    தமிழக அரசும், கட்டுமான நிறுவனங்களும், கட்டிடங்கள் கட்டுவதற்காக தங்களுடைய வயிற்றுப்பாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு, உயிர் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் உறுதி செய்ய மனதுவைக்க வேண்டும். பல லட்சம் மதிப்புள்ள இந்தக் கட்டிடங்களை வாங்குபவர்களின் பாதுகாப்பிற்காகவும் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். இதில் பயன்படுத்தப்படக்கூடிய சிமெண்ட், மின்பொருட்கள், இரும்புப் பொருட்கள் போன்றவைகளின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். இனியாவது இது போன்ற மோசமான அழிவுகள் ஏற்படாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் ஆணையம் இதன் போக்கில் எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share
  • விலைபோகும் விளை நிலங்களும், தொடரும் தவறான அணுகுமுறைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    வாய்க்கால் பாசனம் பெறக்கூடிய விளை நிலங்கள் இன்று விற்கப்பட்டு அவைகளில் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டோ அல்லது மாற்று வழி பயன்பாட்டிற்கோ கொண்டுவரப்படுகின்றன. குளங்களும், வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலை மாறி அவைகள் அழிக்கப்பட்டு மனை நிலங்களாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. நல்ல குளப் பாசனங்கள் பெறும் ஒரு சில விளை நிலங்களும் மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த நிலை பாரபட்சமில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகின்றன. இதனை எந்த அதிகாரிகளும், கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு விவசாய விளை நிலங்கள் மாற்று வழிகளுக்குப் பயன்படுத்தப் பட்டால் இன்னும் குறுகிய காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அரசு இதில் கவனம் செலுத்தி விலை நிலங்கள் காக்கப்பட்டு வருங்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. அரசு, இந்த விற்பனையை உறுதி செய்பவர்கள், ஆவண பதிவாளர்கள் போன்றவர்கள் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அதிகாரிகள் மூலமாகவோ விளை நிலங்கள் பாழ்படுவதைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டியது உடனடித் தேவை.

    ரயில்வே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இன்று பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கட்டணமும் 6.5 சதவிகிதம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் கூறக்கூடிய காரணம் நிதி பற்றாக்குறை என்பதே. ஒவ்வொரு அரசும் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறி பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் உயர்த்துவதே வழமையாகக் கொண்டுள்ளது. பற்றாக்குறையை சரி செய்வதற்கு மாற்று வழியை சிந்திக்க வேண்டியதை விடுத்து கட்டணத்தைக் கூட்டி மக்களின் தலையில் சுமையை அதிகரிப்பது வருத்தத்திற்குரிய விசயம். பயணிகளுக்குப் பயன்படும் தனியார் உணவகங்கள் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் கொண்டுவருதலும், அங்கு பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பரந்த இடங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் கொண்டு வருதலும், மின்சார ரயில் அதிகமாகப் பயன்படுத்தும் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதலும், நவீன முறையில் விளம்பரங்கள் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் மூலமாக இந்தப் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் . இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபடுவதால் மக்கள் சுமை ஏறாமல் இருப்பதோடு, வேலை வாய்ப்புகளும் கூடுகிறது.

    மற்ற ஆட்சிகளைப் போலவே பாரபட்சமே இல்லாமல் விலை உயர்வுக்கு வரி விதிப்பே இந்த ஆட்சியிலும் காரணமாகியிருக்கிறது. சர்க்கரை ஆலைகளில் 4000 கோடி ரூபாய் வட்டி இல்லாத கடனாக அளித்து விவசாயிகளின் பாக்கிகளை நேர் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுவுமின்றி அவர்கள் கட்ட வேண்டிய சுங்க வரி செலுத்துதலையும் ஐந்து ஆண்டுகள் வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆலைகளுக்கு கரும்பு வந்தவுடன், அதிலிருந்து சர்க்கரை எடுக்கப்பட்டு, ஆலைகளை விட்டு அது வெளியேறும்போது சுங்க வரியுடனும், அவர்களுடைய இலாபத்துடனும், பணமாகப் பெற்றுக்கொண்டு அதற்குப் பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இது ஒரு கிலோ சர்க்கரையாக இருப்பினும் அல்லது 120 மூட்டை (12 டன்) ஏற்றக்கூடிய அளவாக இருப்பினும் ஆலை முதலாளிகள் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இப்படி ஒரு நிலையில் 4000 கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் அளித்தும், சுங்கவரி கட்டுவதற்கும் காலக்கெடுவை நீட்ட வேண்டிய தேவை என்ன என்ற ஐயமும் எழுகிறது. ஏழை விவசாயிகளின் கரும்புக்குத் தர வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இயங்கக் கூடிய ஆலைகளின் நிர்வாகத்தை சீர் செய்யவேண்டியதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டியதும் அரசின் கடமை. அது போலவே ஆலைகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களைக் காப்பதும் அரசின் கடமை. நிர்வாகங்கள் செய்யக்கூடியத் தவறுகளால் வறுமையின் காரணமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளைக் காக்க வேண்டியது அவசியம். திரு மோடி அவர்களின் அரசு மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தி நம் பொருளாதார நலிவுகளுக்கு முக்கிய காரணமாக இது நாள் வரை இருந்த நிர்வாகச் சீர்கேடுகளை சீர் செய்து வளமான பொருளாதாரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறக்குமதி செய்யக்கூடிய சர்க்கரைக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியதால், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை ஏற்றம் மக்களுக்குச் சுமையாகியுள்ளது. விலை ஏற்றத்தைத் தவிர்க்காமல் விலை ஏற்றத்திற்கு அரசு துணை போவதால் பண வீக்கம் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாமல் போகும்.

    Share
  • புதிய நிதிநிலை அறிக்கையும், மக்கள் எதிர்பார்ப்பும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை, உயர்திரு மோடி அவர்களின் அரசாங்கத்தின் முதல் நிதி அறிக்கை. மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அறிக்கை. முந்தைய அரசு செய்த பல தவறுகளை சரி செய்தாலே நம் பொருளாதாரம் ஏற்றம் பெறலாம் என்ற நிலை இருப்பதையே வல்லுநர்களின் கருத்து தெளிவாக்குகிறது.

    1.. இன்றைய ரூயாயின் மதிப்பு குறைந்துள்ளதால் வருமான வரி பிடித்தம் என்பதற்குரிய வரம்புகளை மாற்றியமைத்தல் அவசியம். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை, பால், காய்கறி மற்றும் விளை பொருள் விற்பனையாளர்களால் ஏற்படும் விலை ஏற்றங்கள் மக்களுக்கு சுமையாகிறது. இதுவரை அரசாங்கம் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியல்லை. வியாபாரிகள், இடு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று சொல்லி விலையேற்றம் செய்கிறார்கள். இதற்குத் தீர்வாக தங்கள் இடு பொருட்களின் விலையைக் குறைக்கக் கோர வேண்டுமே தவிர அந்தச் சுமையை மக்களின் மேல் திணிப்பது சரியாகாது. பண வீக்கம் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்தினால் இந்த வருமான வரி வரம்புகளை மாற்றம் செய்யத் தேவையிருக்காது. மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கை ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்த ஆவண செய்ய வேண்டும்.

    2. பண வீக்கத்திற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிதான் என்று முந்தைய அரசுகள் கூறிக்கொண்டிருந்தன. 35 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ. 74.45 ஆக உள்ளது. ஒரு புறம் வாகன உற்பத்தி இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆட்சியில் வாகன உற்பத்தி மந்த நிலையை அடைந்துள்ளது என்று கூறி சில சலுகைகளை அறிவித்தனர். இதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இயற்கை எரி வாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய வாகனங்களுக்கும் வரிச் சலுகைகள் அளித்திருந்தால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகரித்திருக்கும். ஆயிரம் அல்லது 1200 சி.சி. களுக்குள்ளான அனைத்து வாகனங்களுக்கும் இயற்கை எரிவாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு பயன்பாட்டையும் கட்டாயப்படுத்தினால் நலம் பயக்கும். அதேபோல் இரு சக்கர வாகனங்களிலும் எரி பொருளாக இந்த இயற்கை எரி வாய்வுகளைக் கொண்டு வந்தால் நமக்கு பல லட்சம் கோடி அன்னிய செலாவணி மீதியாகலாம். இதற்கு ஏதுவாக அனைத்து பெட்ரோலிய நிலையங்களிலும் எரி வாய்வு நிரப்புதலை கட்டாயமாக்கினால் நன்றாக இருக்கும். மிகப் பெரிய நகரங்களில் கூட திரவ எரிவாய்வு நிரப்பும் நிலையங்கள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி. இதைத் தவிர்த்து இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் மின்சாரத்தை எரி பொருளாகப் பயன்படுத்துவோருக்கு வரிச்சலுகைகள் மூலமாக ஊக்கப்படுத்தலாம் . அரசு இதை கவனத்தில் கொண்டால் நலம் விளையக் கூடும்.

    3. படித்த இளைஞர்கள் ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல பெரு நகரங்களில், குறைந்தபட்சம் மாவட்ட தலை நகரங்களிலாவது இந்தக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    4. விற்பனை வரி மற்றும் VAT என்ற மதிப்புக் கூட்டுவரி முறையை மாற்றம் செய்ய வேண்டியதும் அவசியம். விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி இவையனைத்தையும் ஒருங்கிணைத்து அல்லது தவிர்த்து வரி (TURN OVER TAX) என்ற வரி விதிப்பு முறையைக் கொண்டுவந்தால் எளிமையான கணக்கு வழக்குகளும், நேர்மையான கணக்கும் கிடைக்கும். இதன் மூலமாக முன்பு கிடைத்த வரி வருமானங்களை விட பல ஆயிரம் கோடி வருமானங்கள் ஒவ்வொரு மாதமும் அரசுக்குக் கிடைக்கும் வாய்ப்பாகவும் அமையும். இதனால் கருப்புப் பண புழக்கமும் கட்டுக்குள் வரும்.

    5. தங்க இறக்குமதியை கட்டுப்படுத்துவதைத் தவிர்த்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்தி சதவிகிதத்தை அதிகப்படுத்தினால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகமாகக் கூடும்.

    6. அன்னிய செலாவனி அதிகம் அளிக்கக் கூடிய ஜவுளித் துறையில் சரியான கவனம் இதுவரை செலுத்தப்படவில்லை. இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களை அதாவது பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு துணியாகவோ, ஆயத்த ஆடையாகவோ இறகுமதி செய்கிறோம். இதைத் தவிர்த்து ஆயத்த ஆடைகளாவோ அல்லது துணியாகவோ ஏற்றுமதி செய்தால் மிக அதிகமான வருமானம் பெறலாம்.

    அன்னிய செலாவனி அதிகம் கையிருப்பு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தினால் பொருளாதார நிலை சீரடையலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

    அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பதிவுகளுக்குரிய சேவை வரி விகிதங்கள் கட்டிடங்களுக்குரிய எண்ணிக்கையை வைத்து வரி விதித்திருப்பதைத் தவிர்த்து கட்டுமானங்களின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரி விதிப்பு இருக்குமானால் அரசு ஊழியர்களும் மத்தியதர மக்களும் பெரும் பயன் அடைவார்கள். பதினொரு வீடுகளுக்குக் குறைவாக கட்டக்கூடிய நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு வீட்டின் மதிப்பு 1 கோடியோ, 2 கோடியோவாகா இருந்தாலும் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.குறைந்த மதிப்புள்ள வீடுகளுக்கு அதாவது 25 லட்சம் மதிப்புள்ள 100 வீடுகள் கட்டும் போது எண்ணிக்கையின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் பாதிக்கக் கூடியவர்கள் மத்திய தர பிரிவினரும், அரசு ஊழியர்கள் மட்டுமே. ஆகவே அரசு தங்களுடைய நிதி நிலை அறிக்கையில் வீட்டின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரிவிதிப்புகளை விதிக்க முன் வந்தால் நலம்.

    Share
  • ஜனநாயகம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    1989ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி, பெய்ஜிங், டியானமென் (Tiananmen) சதுக்கத்தில் மாபெரும் போராட்டம் நடந்தது. சுதந்திரத்திற்கு ஆதரவாகப் போராடிய பல ஆயிரம் மாணவர்களை தங்களுடைய இரும்புக் கரம் கொண்டு கொன்று குவித்து அந்தச் சுதந்திரப் போராளிகளை நசுக்கினர். அதன் பிறகு இந்த 25 ஆண்டு காலத்தில் எந்த விதமான போராட்டங்களோ, ஜனநாயகம் பற்றிய பேச்சோ இல்லாமல் கவனமாக பார்த்துக்கொண்டனர். ஜனநாயகத்திற்காகப் போராடிய அந்த மாணவர்களை நினைவுகூர வேண்டிய காலமிது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காகப் போராடி ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டு வந்து தலைவரானவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள். இன்று பாரக் ஒபாமா அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு சாதாரண தனி மனிதனும் தலைமைப் பொறுப்பில் வர முடியும் என்று காட்டிய அமெரிக்காவின் ஜனநாயகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆட்சி நடைமுறையில் இருப்பினும், அங்கு இருப்பது மன்னராட்சி முறை. அதாவது, மகாராணி, அவருடைய மகன், பேரன் என்று பரம்பரையாக ஆட்சி செய்யும் முறையே உள்ளது. அதனுடைய காமன்வெல்த் நாடாகிய ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்து அரசியாரின் பிரதிநிதி தலமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கும் சுய ஆட்சி போராட்டங்கள் நடந்து அது தோல்வியைக் கண்டது. தாங்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வாழ்வதையே விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

    மாபெரும் ஜனநாயக நாடான நம் இந்தியாவிலும் ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் பரம்பரை ஆட்சி நடைபெற்றது. காந்தியடிகள் கைகாட்டுதலால் பிரதமரான நேரு, அவர்களுக்குப் பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி, அவருடைய மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி என்று வரிசையாக ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு இந்த காங்கிரசு கட்சியை கலைத்துவிடலாம், ஒவ்வொரு தலைவரும் அவரவர்கள் கொள்கையின் மூலம் மக்களுக்குப் பணி செய்து ஆட்சி செய்ய வரட்டும் என்ற நிலையை தொடராமல் விட்டதால் பரம்பரை ஆட்சி வந்தது. ஆனால் இன்று நம்முடைய இந்திய ஜனநாயகம், மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி ஒரு சாதாரண தனி நபர் இந்தியாவை ஆட்சி செய்யும் அளவிற்கு வளர முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதற்காக நம் இந்திய ஜனநாயகத்திற்கும், உயர்திரு மோடி அவர்களுக்கும் நம் பாராட்டுகள். பாராளுமன்றத்தில் இரண்டே உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு கட்சி இன்று ஆலமரமாக வளர்ந்து வரலாறு படைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இந்த ஜனநாயகத்தால் பிரதமர் மோடி அவர்களுக்குக் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை மனதில்கொண்டு மக்களுக்காகப் பணியாற்றினால் மக்கள் அவர்களை காலத்திற்கும் மறக்காமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பை அளிப்பார்கள் என்பது உறுதி. காங்கிரசு பேரியக்கமே என்றாலும் இன்றைய மோசமான தோல்வியால் துவள வேண்டியதில்லை. உடனடியாக, நல்ல மக்கள் தலைவரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் உண்மை. மீண்டும் அடி மட்டத்திலிருந்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில் தோல்விக்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் மக்களுக்குப் பணியாற்ற ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் காங்கிரசு கட்சியின் நிலை கேள்விக்குறி ஆகிவிடும் அபாயம் உள்ளது என்பதே நிதர்சனம்.

    Share
  • வென்றிடும் பாரதம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    031810_1447_narendradam1 (1)

    16 வது மக்களவைக்கான தேர்தல் திருவிழா நிறைவடைந்து, மக்கள் பெருவாரியாக வாக்களித்து நிலையான ஆட்சிக்குத் தோதான ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்து தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனிப்பெருங் கட்சியாகத் தலை நிமிர்ந்து ஆட்சியைப் பிடித்து, பிரதமர் இருக்கையை அலங்கரிக்கப்போகும் உயர்திரு நரேந்திர மோடி அவர்கள் தம்முடைய மகத்தான வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையில், எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானதொரு பிரதமராகச் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது நம் இந்திய மக்களுக்கிடையே பெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிலையானதொரு ஆட்சியை அமைத்து சரித்திரம் படைக்கும் பி.ஜே.பி. அரசு போலி மதச்சார்பின்மைவாதிகளின் பொய்யானப் பிரச்சாரத்திற்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசும், கட்சியும் இணைந்து மிகச் சிறந்ததொரு ஆட்சியை வழங்கமுடியும் என்று நிரூபிக்கும் அந்த பொற்காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் கூட்டம். கட்சியின் வண்ணம் காவியாக இருப்பினும் எண்ணம் பசுமையாக வளமான வாழ்க்கையை அளிக்கப்போவதாக இருப்பதும் உறுதியாகத் தெரிகிறது.

    ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையைப் பின்பற்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒரே இந்தியா, ஒரே சட்டம், என்ற நிலை ஏற்படுத்தப்படவேண்டும். நம் நாடு, நம் மக்கள் என்ற நிலை இருந்தால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட சட்டங்கள் தேவையில்லை. கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு தமிழன் காஷ்மீரிலோ அல்லது இமாசலப் பிரதேசத்திலோ, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சென்று குடியேறி தனி மனித சுதந்திரத்திற்குப் பங்கம் வாராத நிலையை எட்டக்கூடிய உரிமையைப் பெற வேண்டும். 370 வது சட்டப்பிரிவுகள் தேவையில்லை என்ற நிலை வர வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் போல பிற்படுத்தப்பட்ட மாநிலங்களும் முதல்நிலை மாநிலங்களாக மாறும் வகையில் தெளிவான அணுகு முறைகளும், அதற்கு ஏற்றாற்போலத் திட்டங்களும் அமைத்தால், இந்தியா வல்லரசாக ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே சத்தியம். அதற்கான அனைத்து வளங்களும் நம் நாட்டில் கொட்டிக்கிடப்பதும் மறுக்க இயலாத உண்மை.

    கடுமையாக உழைக்கக்கூடிய மக்களும், சரியான வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் எந்த குழப்பமும் இல்லாமல், எவருக்கும் அடிபணிய வேண்டிய தேவையில்லாமல் தனிப்பெரும் சக்தியாக, தன்னிச்சையாக நல்ல ஆட்சியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் உயர்திரு மோதி அவர்களின் சரியான வழிகாட்டுதலால் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்று நம்பும் காலம் வந்துவிட்டது. சிதைந்து கிடக்கும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதும், சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டியதும் போன்ற மிகப்பெரும் பொறுப்புகள் அவசரகால நடவடிக்கைகளாகக் காத்துக்கிடக்கிறது.

    சோசலிசம் என்றால் அனைவரும் ஏழையாவது அல்ல, அனைவரும் வளமாக வாழ்வது என்பதை நிரூபிக்கப்போகும் அரசை வாழ்த்தி வரவேற்போம்! அனைவருக்கும் இலவசக் கல்வி, ஆய்வகங்களைப் பயன்படுத்தும் உரிமை போன்றவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். 30 கோடி மக்கள் முகமுடையாய் என்று பாரதி பாடினான். இன்று 130 கோடி மக்களுக்கும் ஒரே தலைவராக இருந்து வழி நடத்தப்போகும் உயர்திரு மோதி அவர்களை மனமார வாழ்த்தி வரவேற்போம்! வெல்க பாரதம்.

    படத்திற்கு நன்றி:

    Narendra Damodardas Modi: The man who gets “famous” for EVERYTHING he does …

    Share
  • அம்மா என்னும் பிரம்மா!

     

    பவள சங்கரி

    Elephant-Family-Wallpapers15
    அம்மா கைதேர்ந்ததொரு சிற்பி
    பிண்டத்தைக் கொடுத்த பிரம்மாவுக்கு
    அண்டத்தில் வாழும் உருவைச் செதுக்கிய சிற்பி!
    கண்டம் விட்டு கண்டம் போனாலும் உண்மை
    விண்ணம் ஆகாமல் உறுதியாய் வடித்த சிற்பி!

    குருதியுடன் குறும்பும் குறும்புடன் அன்பும்
    அன்புடன் பண்பும் பண்புடன் பாசமும்
    பாசமுடன் நேசமும் நேசமுடன் மனிதமும்
    சேர்த்தேச் செதுக்கினாள் சீரான உளிகொண்டு!

    வாய்கோணி வழிந்தோடும் சலவாயில் சொல்தேடி
    வாக்குச் சித்தராய்க் கிடந்த மழலையைத் தட்டி
    வார்த்தெடுத்து வாழவைத்த வல்லமையான சிற்பியவள்!
    சிற்றாடை கட்டிச் சிட்டாகப் பறந்து திரிய எத்தனித்தபோது
    சிறப்பாக நடைபயில சினந்துநின்று பதம் பார்த்த சிற்பியவள்!

    உற்றார் என்றாலும் ஊரார் என்றாலும் பரிவோடு பற்றுதல் அளவையும்
    கற்றார் உளரென உளியால் உள்ளத்தே ஆழச் செதுக்கியவள்!
    மாற்றாரையும் வஞ்சம் கொள்ளாமல் மதிகொண்டு வாழ்த்தும்
    பேற்றைத் தவமாய் ஊட்டி உயிர்த்த உன்னதச் சிற்பியவள்!

    பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகுதானென்று வசைபாடியே
    பற்றில்லாமல் பதின்மத்தைக் கடக்கச் செய்த பெரும்சிற்பியவள்!
    அன்பு மட்டுமே நிரந்தரம் மனிதம் மட்டுமே மதிநலம் யாக்கை நிலையாது
    அதமம் இல்லாது அருளெனும் உதிரம் குழைத்து உருவாக்கிய சிற்பியவள்!

    கந்தையும் சிந்தையும் கசக்கிக் கட்டிக் கருத்தாய் கடவுளாய் வாழ
    வழிகாட்டி உள்கடவென உத்தமமாய் உருவாக்கிய சிற்பியவள்!
    சொல்லொன்றும் செயலொன்றுமென செறிவற்று நில்லாமல்
    சீர்தூக்கிச் சிதிலமில்லாமல் சிறப்பெய்தச் செய்த சிற்பியவள்!

    களிமண்ணாய்க் கிடந்ததைப் பொன்னாய் மணியாய் சீராய் செதுக்கிய
    ஓசையில்லா ஒளிவட்டமும் ஆடம்பரமில்லா ஞானமும் தேர்ந்த சிற்பியவள்!
    கனிவும் பணிவும் பாலபாடமாய் உறுதியும் உன்னதமும் கன்னிப்பாடமாய்
    தெளிவும் நம்பிக்கையும் வாழும்காலமாய் இறுதிவரை போராடும் வரமும்
    குழைத்துச் சமமாய் மூச்சைக்கலந்து சீராய் வெளியிடச்செய்த சீர்மிகு சிற்பியவள்!!

    சிப்பிக்குள் முத்தாய்ச் சீவனுக்குள் சிவமாய்ச் சீராகவாழும் தன்மையாய்
    என்னை வார்த்தெடுத்த சீலமிகு சிற்பியவள்!!
    அம்மா.. அவள்தான் என் பிரம்மா!!!

     

     

    Share
  • கடித இலக்கியப் போட்டி முடிவுகள்!

    பவள சங்கரி

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடித இலக்கியப் போட்டியின் முடிவுகள். தன்னுடைய இடையறாத பணிகளுக்கிடையேயும் திரு. இசைக்கவி இரமணன் அவர்கள் போட்டியின் முடிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு நம் வல்லமையின் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும், உற்சாகமாகக் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். நாம் ஏற்கனவே அறிவித்திருந்திருந்த முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகளுடன், திரு இரமணன் அவர்கள் மேலும் ஆறு பேர்களுக்கு தலா ரூ. 200 வீதம் ஆறுதல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.

    இதோ திரு இரமணன் அவர்களின் போட்டி முடிவுகள் :

    இசைக்கவி இரமணன்

    imagesஉலகம் அழகானது. ஆனால், வாழ்க்கைக்கு அதனளவில் அழகேதும் கிடையாது. வைக்கோலைத் தின்று வெந்நீர் குடிக்கும் சுவாரசியமே உள்ள இந்த வாழ்க்கையில், பிறந்த கணத்திற்கு முன்பிருந்தே உயிரின் பிடரியை மரணம் கவ்விக் கிடக்கும் இந்தக் கணநேரக் கூத்தில் என்ன அழகு இருக்க முடியும்?

    வாழ்க்கை வேறு, வாழுதல் வேறு. நன்கு வாழுவதன் மூலமே ஒன்றுமற்ற வாழ்க்கை ஒளிபொருந்தியதாக மாறுகின்றது. அதுதான் வாழ்வாங்கு வாழுதல். அதற்கு இரண்டு அம்சங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, நேயம். இன்னொன்று கலை.

    நேயம், மனிதனை மனிதனாக்குகிறது. கலை, மனிதனுக்கும் இறைவனுக்கும் பாலம் போடுகிறது. வாழ்க்கை, காட்டாறாக இருந்தாலும், பாலத்திலிருந்து பார்க்கும்போது நமக்குப் பதற்றமில்லை. கலை, எல்லாவற்றையும் படைத்து இயக்கும் பரமசக்தியிடமிருந்தே வருகிறது. அந்தப் பரம்பொருள், மனிதனில் தன்னை நேயம் என்றே பதிவு செய்துகொண்டுள்ளது.

    சேதி சொல்லும் இயற்கை, நியதி காட்டும் கோள்கள், பாதி சொல்லும் உயிரினங்கள், பாடம் சொல்லும் வாழ்க்கை, இவையே கலைகள் விளங்கும் தளங்கள். இயற்கையிலும் வாழ்க்கையிலும் ஏற்கனவே தென்படுவதை, நேயமென்னும் தூரிகை ஏந்தி ஓவியன் சித்திரம் தீட்டுகிறான். கவிஞன் கவிதை பாடுகிறான். இன்னொருவன் கல்லை தெய்வமாக்கிக் காட்டுகிறான்.

    கலைகளில் கடிதமும் அடக்கம் என்பது உண்மை. பேசும் சொல்லும், பதியும் எழுத்தும் கலை வயப்படுவது இயல்புதானே? கலை மிளிரும் எழுத்தே இலக்கியம். எனவேதான், வல்லமைக் குழுமத்தார், ஒரு கடித இலக்கியப் போட்டியை அறிவித்தார்கள். வந்து குவிந்தன கடிதங்கள். வம்பாய், என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எதையும் தட்டிக் கொடுப்பவன் எதைத் தட்டிப் பார்த்து எப்படித் தெரிந்து எதனை எடுப்பான்?

    ஆனால், வந்து சேர்ந்த கடிதங்கள் எல்லாம் சுசீந்திரத்துத் தூண்கள் போலானதால், தட்டி மகிழ்ந்தேன். அவற்றை, நான் நன்று, மிக நன்று, மிக மிக நன்று என்றே வகைப்படுத்த முடிந்தது.

    அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பற்பலரும் பலவித வண்ணம் காட்டியிருக்கிறார்கள். முதலில், அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரி, எந்த அடிப்படையில் நான் பரிசுகளுக்கு உரியவை இன்னின்னவை என்று தேர்ந்தெடுத்தேன்?

    • சொந்த அனுபவம், சற்றே அறிவு, கொஞ்சம் கற்பனை, நிறைய நேசம், இவை கலந்துவரும் கடிதங்களே மனதில் நிற்க வல்லவை. அல்லவா?
    • ஒரு கடிதத்தின் நீளம், அது தாளில் எடுக்கும் இடத்தைப் பொறுத்தல்ல, மனதில் பிடிக்கும் இடத்திற்கு ஏற்பவே நிச்சயிக்கப்படுகிறது. அமைப்பாளர்கள், இரண்டு பக்கங்கள் என்பதாக ஓர் அளவை நிர்ணயம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த அளவோடு நிறுத்திவிடுவதாலேயே அந்தக் கடிதம் சரியான நீளத்தில் இருப்பதாகக் கருதிவிட முடியாது. வளவளவென்று போகுமானால், ஒரு பக்கத்திற்கும் குறைவான கடிதம் கூட நீளமாகவே தெரியும்.
    • நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் மேலிடும் போது, கடிதம் சுமையாகி விடுகிறது
    • கட்டுரை, கடிதமாகாது. கவிதையும் அப்படித்தான்! கடிதம், உரைநடையின் தளம். அதில், கவிதையின் தறுவாய் தென்படலாம். கட்டுரையின் சாயல் தட்டுப்படலாம்.
    • நமது அனுபவத்தைச் சார்ந்திருந்து, அன்பின் அடிப்படையில் வருகின்ற சொற்கள், நேரடியான அறிவூட்டும் நடவடிக்கைகளை விட மேலானவை.
    • ‘இவருக்கு நண்பர்கள் வேண்டாம், முகவரிகள் போதும்!’ என்று சொல்லும் அளவுக்குச் சில கடிதங்கள் இருக்கின்றன. சொல்ல நினைத்ததைச் சொல்வதற்கு பதிலாக, என்ன கேட்க விரும்புவார்கள் என்று அன்பார ஊகித்தல் கடிதங்களை அழகாக்கும்.

    இவ்வளவு சொன்னால் போதும் என்று தோன்றுகின்றது.

    எப்படி இருப்பினும், என்னுடைய தேர்ந்தெடுப்பு என்னுடைய ரசனை, புரிதல், அறிவு இவற்றிற்கேற்பத்தான் இருக்குமே அன்றி, இதுதான் சரியான முடிவு என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நான் சராசரிக்கும் குறைவான சாதாரண மனிதன்.

     

    முதற்பரிசு:

    கவாகம்ஸ்

    கடிதத்தின் இறுதியில்தான் அது ஒருவர் தனக்கே எழுதிக்கொண்ட கடிதம் என்பது விளங்குகிறது. ஓர் அறிவியல் புனைவும், ஆழமான காதலும் கலந்து மிகவும் விறுவிறுப்பாகவும் மிளிர்கின்றது இந்தக் கடிதம். கொஞ்சம் கூட சுருதி விலகாத பாடல் போன்று இருக்கின்றது.

    இரண்டாம் பரிசு: 

    மாதவன் இளங்கோ

    இது தனது ரசிகைக்கு ஓர் ஓவியர் எழுதிய கடிதம். இந்தக் கோணமே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் மனம், அவனுடைய படைப்பைக் காட்டிலும் எத்தனை நுண்மையானது, பரிசைக் காட்டிலும் அவன் எப்படி ரசனையைத்தான் நம்பி வாழ்கிறான் என்பதெல்லாம் இந்தக் கடிதம் சிறப்பாக உணர்த்துகின்றது.

     

    மூன்றாம் பரிசு :

    ரஞ்சனி நாராயணன்

    அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம். நெஞ்சைத் தொட்டது.

     

    ஆறுதல் பரிசுகள்:

    1. கீதா மதிவாணன்: அம்மா, தன் மகனுக்கு எழுதிய அழகான கடிதம்
    2. விசாலம் : மகளுக்குத் தாய் எழுதிய மனதைத் தொடும் கடிதம்
    3. சரஸ்வதி ராஜேந்திரன்: அம்மா, மகளுக்கு எழுதிய அன்புக் கடிதம்

     

     திரு. இரமணன் அவர்கள் வழங்கும் சிறப்புப் பரிசு ரூ. 200 பெறுபவர்கள்

     

    1. நந்திதா : தாய்க்கு எழுதிய அருமையான வரலாற்றுக் கடிதம்
    2. வி. பாலகுமார் : ஒரு கணவன் மனைவிக்கு எழுதியிருக்கும் அன்புக் கடிதம்
    3. கலையரசி : பெண்ணைப் பெற்றவள் தோழிக்கு எழுதிய கடிதம்
    4. ராஜலஷ்மி பரமசிவம் : தோழிக்கு எழுதிய கடிதம்
    5. சங்கர் சுப்ரமண்யன் : காதலிக்கு – சமர்ப்பிக்கப்படாத மடல்
    6. புதுவை பிரபா : ஹாஸ்டலில் சேர்த்த மகளுக்கு அப்பா எழுதியது

    எழுதுகோலை எடுக்கும் முன்பே, இதயத்தைத் திறந்துவிடுவோம்! அன்பு காட்டும் வழியில் வந்து விழட்டும் சொற்கள்!

    அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    வாய்ப்பளித்த வல்லமைக்கு வணக்கம் கலந்த நன்றி.

    அன்புடன்,

    ரமணன்

     

    இந்தப் போட்டியை அறிவித்த தேமொழிக்கும்  தேர்ந்தெடுத்துக் கொடுத்த திரு ரமணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். 

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

    Share
  • அட்சய திருதியையும், மூட நம்பிக்கைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    அட்சய திருதியை என்ற இந்நாளை நம் இந்துக்கள் மற்றும் சமணர்கள் புனித நாளாகக் கருதுகின்றனர். இந்த அட்சய திருதியை பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட காலத்திலிருந்து இருக்கக்கூடிய ஒரு சிறப்பான நாள். ஆனால் இந்த ஐந்தாறு வருடங்களாகத்தான் மிக அதிகமான விளம்பரங்கள் மூலமாக மக்கள் மனதைக் கெடுத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளவர்கள் நகைக் கடைக்காரர்கள். இதனை வியாபார யுக்தியாகப் பயன்படுத்தியவர்கள், இரண்டு கிராம் தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் கூட அது 200 கிராமாக விரைவில் வளரும் என்று பாமரர்களை எளிதாக மூளைச்சலவை செய்கிறார்கள். இதை நம்பி தங்கள் வாழ்வும் வளமாக மாறும் என்ற ஆசையில் தங்களுடைய கடைசி பைசாவைக் கூட குறிப்பிட்ட அந்த நாளில் நகைக் கடையில் சென்று கொட்ட ஆரம்பித்துள்ளார்கள்.. கொட்டியவர்களின் வாழ்க்கை வளமானதோ இல்லையோ, நகைக் கடைக்காரர்களின் வாழ்க்கை வளமானது. மக்கள் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நின்று நகை வாங்க கையிருப்பைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த வெள்ளி வியாபாரிகளும் தங்கள் பங்கிற்கு, வெள்ளி என்றால் ‘சுக்கிரன்’ அதனால் அன்று வெள்ளி வாங்கினால் சுக்கிர திசை தேடி வந்து செல்வந்தனாக்கும், அதனால் அட்சய திருதியையில் வெள்ளி வாங்குங்கள் என்று விளம்பரம் செய்ய அங்கும் மக்கள் கூட்டம்! இதே போல துணிக் கடை, மின் சாதனங்கள், தொழில்நுட்பச் சாதனங்கள் போன்ற அனைத்தையும் பாரபட்சமில்லாமல் அட்சய திருதியையில் சேர்த்துவிட்டார்கள், அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் ஊக்குவிக்கிறார்கள். அந்த வகையில் நில விற்பனையாளர்களும் இதில் பங்குபெற்றுள்ளனர்.

    இதையெல்லாம்விட மோசமான கொடுமை ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் அருகிலுள்ள பாகான் – கி- தானி என்ற கிராமத்தில் மக்கள் இதை நியாயப்படுத்துவதோடு அவர்கள் மேற்கொண்ட செயலைக் கேட்கும்போது உள்ளம் பதறுகிறது. பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். காரணம் அட்சய திருதியையில் திருமணம் செய்தால் வாழ்க்கை பூத்துக் குலுங்கும் என்று எவரோ கிளப்பி விட்டதைக் கேட்டு, பலர் அவசர அவசரமாக, சட்டத்திற்குப் புறம்பாக, தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். எட்டு வயது சிறுவனுக்கும், 5 வயது சிறுமிக்கும் உள்பட இது போன்று பல திருமணங்கள் நடந்தேறியுள்ளன. ஜெய்ப்பூர் மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் என்று ஒரு புறம் செல்வச் செழிப்போடு காணப்பட்டாலும், மறு புறம் மக்கள் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, திருமணச் செலவை குறைப்பதாக எண்ணிக்கொண்டு, 7 வயது சிறுமிக்குத் திருமணம் செய்வதே தவறு என்ற போதிலும், அவளுடைய இளைய சகோதரிகளான 4, 5 வயது நிரம்பாத இளம் குழந்தைகளுக்கும் அதே மேடையில் திருமணம் செய்திருக்கிறார்கள்.

    காலச் சூழலில் சிக்கி அல்லாடும் மக்கள் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர்களின் மன உணர்வுகளை விலை பேசும் ஒரு கூட்டம் புதிது புதிதாகத் தங்கள் வியாபார யுக்திகளைப் பெருக்குகிறார்கள். பிரதோசக் கால வழிபாடு, பௌர்ணமி பூசை, கிரிவலம் போன்ற அனைத்து ஆன்மீக நம்பிக்கைகளும் இன்று வியாபார நோக்கிலேயே செயல்படுவது நல்லதொரு மாற்றம் அல்ல. மனித உணர்வுகளைப் பணயம் வைத்து தங்கள் சுய இலாபங்களைக் கருதி திட்டம் போட்டு மக்களை ஏமாற்றுபவர்கள் மனித நேயத்தோடு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நாமும் மூட நம்பிக்கைகளில் சிக்காமல் சுய உணர்வுடன், சிந்தித்து செயல்பட விழித்துக் கொள்ள வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றுதான் என்றாலும், அது நம்மைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவரவர், தத்தம் சூழ்நிலைகளுக்கேற்ப அமைவதாக இருந்தால்தான் வளமான வாழ்வு கிடைக்குமேயொழிய விளம்பரத்தைக் கண்டு மயங்கி நின்று ஏமாந்தால் அதனால் வளம் பெறப் போகிறவர்கள் விளம்பரதாரர்கள் மட்டுமே என்ற விழிப்புணர்வும் வேண்டும்.

    Share
  • குண்டு வெடிப்பும் நம் மெத்தனமும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னை இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்ட பிறகு மிக விரைவாக நமது ஆய்வினைத் துவக்கியுள்ளோம். பெங்களூரூ இரயில் நிலையத்தில் குறிப்பிட்ட அந்தப் பயணி ஏறியிருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கை மூலம் அறிய முடிகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத் துறையின் மூலமாக நமக்குக் கிடைத்த தகவலின்படி, தென்னிந்தியாவில் இது போன்ற தீவிரவாதம் நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். அதை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்றைய இந்த இழப்பைச் சந்திக்காமல் இருந்திருக்கலாம். மற்றுமொரு தகவல் அறிக்கையின்படி தினசரி ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் மக்கள் பயனிக்கக்கூடிய இது போன்ற மிகப்பெரும் இரயில் நிலையங்களில், பயணிகளைச் சோதிப்பது எங்கனம் சாத்தியம் என்கின்றது. சென்னை இரயில் நிலையத்தில் ஒளிவருடிகள் (ஸ்கேனர்கள்) மற்றும் கண்காணிப்புக் கருவிகள் இருந்தபோதிலும் அவைகள் பயன்படுத்தப்படுவதில்லை. சாலைப் போக்குவரத்தில் ஒரு வழிப்பாதை அமைப்பது போல இந்த கண்காணிப்பான் வழியாகத்தான் பயணிகள் அனைவரும் செல்ல வேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டியது அவசியம். இரயில் நிலையத்தின் உள்ளே வருபவர் மட்டுமன்றி வெளியேறுபவர்களும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்தான். பெரும் திரளாக மக்கள் வெளியேறக்கூடிய சூழலில் அவர்களையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இரயில் நிலையங்கள் சிறியதோ அல்லது பெரியதோ அவைகள் ஒரு முனைப்படுத்த வேண்டியது அவசியம். மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீதி மன்றங்கள், மருத்துவமனைகள், போன்ற இடங்களிலும் இத்தகையக் கட்டுப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய வழிபாடு பயன் தராது! பொது இடங்களிலும், உள் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி, அமைதிப்பூங்காவான நம் தமிழ் நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். . தனி நபராக இருப்பினும், மத்திய, மாநில கூட்டமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும் நாட்டின் பொது நலன் கருதி அவைகளின் உதவிகளையும் கோரிப் பெற்று தீர்வு காண்பதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. .  ஜெய்ஹிந்த்!

    Share
  • மே தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மே தினம் என்றால் பொதுவுடமைக் கட்சி போன்ற ஒரு சில கட்சிகளின் பாற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதையும் தவிர்த்து சில அரசியல் கட்சிகள் மே தினத்தைக் கொண்டாடுகின்றன. வழக்கம் போல ‘ஒரு நாள் விடுமுறை மறுநாள் பணி’ என்ற நிலையே இன்றும் இருக்கிறது. இன்று நாம் தொழிலாளர்கள் நல்வாழ்வைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகளிலும் கூட தொழிலாளர் நலம் பற்றியும் அவர்தம் சிரமங்கள் பற்றியும் அதிகம் அக்கறை கொள்ளாத சூழ்நிலையே காணப்படுகிறது. இந்தியா போன்ற கீழ்திசை நாடுகளில் மே 1ம் தேதி மே தினமாகவும், அமெரிக்காவில் செப்டம்பர் 1 ம்தேதி தொழிலாளர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றன. முதலாளித்துவ நாடாகிய அமெரிக்காவில் கூட ஒபாமா தலைமையில் இயங்கக் கூடிய அமெரிக்க அரசு ஒரு மணி நேரத்திற்கு 10. 1 டாலராக ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. இது முந்தைய நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகமான ஊதியமாக நிர்ணயம் செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நமது கீழ்திசை நாடுகளிலோ தொழிலாளர்களுடைய நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வே இருப்பதாகத் தெரியவில்லை. வங்காள தேசத்தின் தலை நகரில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் பல நூறு தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி மாண்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய விசயம். பாதுகாப்பற்ற சூழ்நிலையே தொழிலாளர்களின் வாழ்வில் உள்ளது. இது அங்குமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், கொரியாவிலும், நம் இந்தியாவிலும்கூட இது போன்ற நிலையே காணப்படுகின்றன. அது வெறும் உதாரணம் மட்டும்தான். இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் சூழ்நிலைகளின்பால் சென்றுள்ள நாம் தனி மனித வளங்களை மட்டுமே, பேணுகின்றோம். அந்த ஒரு சில மனிதர்களின் வாழ்விற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் நிலை இன்றும் அவலமாகவே உள்ளது. கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களில் பணிபுரிபவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் போன்றோரின் நிலையும் போற்றப்படுவதாக இல்லாதிருப்பது வேதனைக்குரியது. மழை பொய்த்தால் உயிர் மாய்த்தலும், சுரங்கங்களில் மாட்டிக்கொண்டால் மடிதலும் வெளி உலகிற்குத் தெரியாமலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற தினசரி அவலங்கள். இந்த நிலையிலிருந்து நாம் மாறி, ஆட்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைக் காப்போம், அதனைப் பெருமளவில் பெருக்குவோம். இன்று இந்தியா பொருளாதாரத்தில் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது பெரும் பொருளாதார நாடாக மாறி தனிப்பெரும் சிறப்புப் பெற்றுள்ளது. நாம் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் இதற்குக் காரணமான நம் தொழிலாளர் சகோதரர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் உழைப்பாளர் தினத்தைப் போற்றுவோம். உழைப்பவருக்கு உரிய பங்கினை மறுக்காது அளிப்போம். காகங்களைப் போல பகிர்ந்து உண்டு வாழ்வோம். ஜெய்ஹிந்த்!

    Share
  • தமிழ்நாட்டில் சுபமாக முடிந்த தேர்தல் திருவிழா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா சுபமாக முடிந்துள்ளது. அடுத்த வானவேடிக்கை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கோலாகலமாகத் தொடரும்! சென்ற முறையைவிட இந்த முறை தேர்தலில் பங்களிப்புகள் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 14 சதவிகிதம் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. பின் தங்கிய மாவட்டங்களில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 81 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தனித் தொகுதிகளிலும் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. வட மாவட்டங்கள் என்று குறிப்பிடப் படக்கூடிய சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் குறைந்துள்ளன. குறிப்பாக படித்த மத்தியதர மக்கள் அதிகம் வாழக்கூடிய தென் சென்னையில் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைவான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இது படித்த சமுதாயத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. பல்வேறு ஊடகங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவைகளின் தனிப்பட்ட முறையிலான வேண்டுகோள்களுக்குப் பிறகும் இந்த அளவிற்குக் குறைவான வாக்குப் பதிவுகள் தென் சென்னையில் நடைபெற்றுள்ளது வெட்கத்திற்குரிய விசயம்.

    இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சமாக அதிகப்படியான வாக்குப் பதிவுகள் இளைய சமுதாயத்தினரிடமிருந்து வந்துள்ளது என்பதுதான். நல்லதொரு மாற்றமான இதனால் தேர்தலின் கணிப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகும் பணப் பரிமாற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மக்கள் தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதும் விளங்குகிறது. முடிவுகளும் அவ்வாறே வரும் என்று நம்பலாம். மும்பையில் நடைபெற்ற தேர்தலில் எல்லோரும் பாராட்டும் வகையில் 55 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை 40 முதல் 44 சதவிகித வாக்குப்பதிவுகளே நடைபெற்றிருக்கிறது. இதுவும் அவமானகரமான விசயம். பாண்டிச்சேரியில் 82 சதவிகிதமும், மேற்கு வங்காளத்தில் 80 சதவிகிதமும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் என்று 100 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றதோ அன்றுதான் அது நமது ஜனநாயகத்திற்குக் கிடைத்த முழு வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும். பணப் பரிமாற்றங்கள் அறவே இல்லாத ஒரு தேர்தலாகவும் அது இருக்க வேண்டும். இன்றுவரை அது சிம்ம சொப்பனமாகவே இருந்து வருவதும் வேதனைக்குரிய விசயம். வாழ்க ஜனநாயகம்!

    ஜனநாயகம் வேரூன்ற வேண்டுமென்றால் வாக்களிப்பதில் இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது போலவே அரசியலிலும் அவர்களுடைய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!

    ஜெய்ஹிந்த்

    Share