புதிய நிதிநிலை அறிக்கையும், மக்கள் எதிர்பார்ப்பும்!

0

பவள சங்கரி

தலையங்கம்

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை, உயர்திரு மோடி அவர்களின் அரசாங்கத்தின் முதல் நிதி அறிக்கை. மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அறிக்கை. முந்தைய அரசு செய்த பல தவறுகளை சரி செய்தாலே நம் பொருளாதாரம் ஏற்றம் பெறலாம் என்ற நிலை இருப்பதையே வல்லுநர்களின் கருத்து தெளிவாக்குகிறது.

1.. இன்றைய ரூயாயின் மதிப்பு குறைந்துள்ளதால் வருமான வரி பிடித்தம் என்பதற்குரிய வரம்புகளை மாற்றியமைத்தல் அவசியம். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை, பால், காய்கறி மற்றும் விளை பொருள் விற்பனையாளர்களால் ஏற்படும் விலை ஏற்றங்கள் மக்களுக்கு சுமையாகிறது. இதுவரை அரசாங்கம் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியல்லை. வியாபாரிகள், இடு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று சொல்லி விலையேற்றம் செய்கிறார்கள். இதற்குத் தீர்வாக தங்கள் இடு பொருட்களின் விலையைக் குறைக்கக் கோர வேண்டுமே தவிர அந்தச் சுமையை மக்களின் மேல் திணிப்பது சரியாகாது. பண வீக்கம் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்தினால் இந்த வருமான வரி வரம்புகளை மாற்றம் செய்யத் தேவையிருக்காது. மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கை ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்த ஆவண செய்ய வேண்டும்.

2. பண வீக்கத்திற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிதான் என்று முந்தைய அரசுகள் கூறிக்கொண்டிருந்தன. 35 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ. 74.45 ஆக உள்ளது. ஒரு புறம் வாகன உற்பத்தி இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆட்சியில் வாகன உற்பத்தி மந்த நிலையை அடைந்துள்ளது என்று கூறி சில சலுகைகளை அறிவித்தனர். இதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இயற்கை எரி வாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய வாகனங்களுக்கும் வரிச் சலுகைகள் அளித்திருந்தால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகரித்திருக்கும். ஆயிரம் அல்லது 1200 சி.சி. களுக்குள்ளான அனைத்து வாகனங்களுக்கும் இயற்கை எரிவாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு பயன்பாட்டையும் கட்டாயப்படுத்தினால் நலம் பயக்கும். அதேபோல் இரு சக்கர வாகனங்களிலும் எரி பொருளாக இந்த இயற்கை எரி வாய்வுகளைக் கொண்டு வந்தால் நமக்கு பல லட்சம் கோடி அன்னிய செலாவணி மீதியாகலாம். இதற்கு ஏதுவாக அனைத்து பெட்ரோலிய நிலையங்களிலும் எரி வாய்வு நிரப்புதலை கட்டாயமாக்கினால் நன்றாக இருக்கும். மிகப் பெரிய நகரங்களில் கூட திரவ எரிவாய்வு நிரப்பும் நிலையங்கள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி. இதைத் தவிர்த்து இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் மின்சாரத்தை எரி பொருளாகப் பயன்படுத்துவோருக்கு வரிச்சலுகைகள் மூலமாக ஊக்கப்படுத்தலாம் . அரசு இதை கவனத்தில் கொண்டால் நலம் விளையக் கூடும்.

3. படித்த இளைஞர்கள் ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல பெரு நகரங்களில், குறைந்தபட்சம் மாவட்ட தலை நகரங்களிலாவது இந்தக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

4. விற்பனை வரி மற்றும் VAT என்ற மதிப்புக் கூட்டுவரி முறையை மாற்றம் செய்ய வேண்டியதும் அவசியம். விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி இவையனைத்தையும் ஒருங்கிணைத்து அல்லது தவிர்த்து வரி (TURN OVER TAX) என்ற வரி விதிப்பு முறையைக் கொண்டுவந்தால் எளிமையான கணக்கு வழக்குகளும், நேர்மையான கணக்கும் கிடைக்கும். இதன் மூலமாக முன்பு கிடைத்த வரி வருமானங்களை விட பல ஆயிரம் கோடி வருமானங்கள் ஒவ்வொரு மாதமும் அரசுக்குக் கிடைக்கும் வாய்ப்பாகவும் அமையும். இதனால் கருப்புப் பண புழக்கமும் கட்டுக்குள் வரும்.

5. தங்க இறக்குமதியை கட்டுப்படுத்துவதைத் தவிர்த்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்தி சதவிகிதத்தை அதிகப்படுத்தினால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகமாகக் கூடும்.

6. அன்னிய செலாவனி அதிகம் அளிக்கக் கூடிய ஜவுளித் துறையில் சரியான கவனம் இதுவரை செலுத்தப்படவில்லை. இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களை அதாவது பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு துணியாகவோ, ஆயத்த ஆடையாகவோ இறகுமதி செய்கிறோம். இதைத் தவிர்த்து ஆயத்த ஆடைகளாவோ அல்லது துணியாகவோ ஏற்றுமதி செய்தால் மிக அதிகமான வருமானம் பெறலாம்.

அன்னிய செலாவனி அதிகம் கையிருப்பு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தினால் பொருளாதார நிலை சீரடையலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பதிவுகளுக்குரிய சேவை வரி விகிதங்கள் கட்டிடங்களுக்குரிய எண்ணிக்கையை வைத்து வரி விதித்திருப்பதைத் தவிர்த்து கட்டுமானங்களின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரி விதிப்பு இருக்குமானால் அரசு ஊழியர்களும் மத்தியதர மக்களும் பெரும் பயன் அடைவார்கள். பதினொரு வீடுகளுக்குக் குறைவாக கட்டக்கூடிய நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு வீட்டின் மதிப்பு 1 கோடியோ, 2 கோடியோவாகா இருந்தாலும் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.குறைந்த மதிப்புள்ள வீடுகளுக்கு அதாவது 25 லட்சம் மதிப்புள்ள 100 வீடுகள் கட்டும் போது எண்ணிக்கையின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் பாதிக்கக் கூடியவர்கள் மத்திய தர பிரிவினரும், அரசு ஊழியர்கள் மட்டுமே. ஆகவே அரசு தங்களுடைய நிதி நிலை அறிக்கையில் வீட்டின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரிவிதிப்புகளை விதிக்க முன் வந்தால் நலம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.