Tag: சக்தி சக்திதாசன்

  • கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (6)

    கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (6)

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    கவியரசர் கண்ணதாசன் எனும் காவியப் பெருங்கடலினுள் விழுந்து நீச்சலடிப்பது என்பது உள்ளத்தை எப்போதும் ஆனந்தமயமாக வைத்திருக்கக்கூடிய செயலாகும்.

    தமிழர்கள் நெஞ்சங்களிலெல்லாம் தனக்கென ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டவர் கவியரசர் என்றால் அது மிகையாகாது.

    தன்னுள்ளத்தில் விழுந்த காலத்தின் வடுக்களை கவிதை வரிகளாக்கினார். திரைத்துறை விற்பன்னர்கள் கொடுத்த கதைகளுக்கும் காட்சிகளுக்கும் ஏற்ப தனது அனுபவங்களின் மூலம் தான் பெற்ற வாழ்வின் ஞானத்தை அக்காட்சிகளுக்கேற்ற பாடல் வரிகளாக்கினார்.

    கவியரசர் ஆன்மீகத்தை ஆழமாகப் புரிந்து கொண்டவர். அனைத்து மதங்களின் சாரத்தையும் அறிந்து கொண்டவர்.

    வாழ்க்கையெனும் ஆழியிலே நாத்திக அலைகளைக் கடந்து அமைதியான பகுதியான ஆத்திக பரப்பினிலே மிதந்தவர். கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் அனைத்தையும் அழகக உள்வாங்கிக் கொண்டவர்.

    இந்தப் பதிவிலே என்றும் என் மனதில் ஆழப்பதிந்த ஒரு பாடலைப் பகுத்துப் பார்த்து அதை எந்தக் கோணத்தில் அவர் பார்த்து எழுதியிருப்பார் என்பதை எனது கோணத்திலே பார்க்கத் தலைப்படுகிறேன்.

    மெல்லிசை மன்னரான எம்.எஸ்.வி அவர்கள் நடத்தும் கச்சேரிகளில் முதல் பாடலாக ஒலிக்க வேண்டும் என்று கவியரசரே விரும்பிய,

    “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்று ஒலிக்கும் இனிமையான பாடலே அது.

    ஒரு பாடலுக்குள் எத்தனை விஷயங்களைப் புகுத்தலாம் என்பதற்கு இந்த ஒரு பாடலே கவியரசரின் ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது என்று சொல்லலாம்.

    கண்ணனின் தாசனல்லவா கண்ணதாசன் அவர் கண்ணனைப் பற்றிப் பாடாத பொழுதுகள் இல்லையென்றே கூறிவிடலாம். தத்துவப் பாடலாகட்டும், பக்திப் பாடலாகட்டும், காதல் பாடலாகட்டும் அனைத்தினுள்ளும் கண்ணனைப் புதையல் போன்று புதைத்து வைத்திருப்பார் கவியரசர்.

    மேலும் கண்ணனைப் பற்றிப் பாட வேண்டும் என்று எண்ணுகிறார் கவியரசர். அவர் நினைவில் நிறைந்திருக்கும் கண்ணனின் கைகளில் எப்போதும் தவழ்ந்திருப்பது என்ன ?

    புல்லாங்குழல் அல்லவா ?

    துணைக்கு அழைக்கிறார் புல்லாங்குழலை. கண்ணனின் கைகளில், உதடுகளில், இடுப்பில் என்று அந்த மாயக் கண்ணனுடன் அனுதினமும் இணைந்திருப்பது புல்லாங்குழல் அல்லவா ?

    அந்தப் புல்லாங்குழலையே கண்ணன் அதாவது தேவகியின் மைந்தன் புருஷோத்தமன் என்று புகழப்படும் கண்ணனைப் பாடும்படி பணிக்கிறார் கவியரசர்.

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

    என்கிறார் கவியரசர்.

    புல்லாங்குழலைத் தொட்டவர் ஆன்மீக வித்தகராயிற்றே கங்கைக்கரைத் தோட்டத்தை விட்டு விடுவாரா என்ன ?

    புல்லாங்குழலைக் கொடுத்த மூங்கில்களை அழைத்து பாட வைத்து விடலாம் ஆனால் கங்கைக்கரைத் தோட்டத்தை எப்படி இங்கே கொண்௶டு வர முடியும் ?

    சிந்திக்கிறார் கவியரசர். உடனே அவருக்கு வந்து விடுகிறது கண்ணன் மாகாபாரதத்திலே கங்கைக்கரையில் நிகழ்த்திய லீலைகளில் ஒன்று.

    அது என்ன என்கிறீர்களா?

    வாருங்கள் கொஞ்சம் மகாபாரதத்துள் செல்வோம்.

    கங்கையிலே பிராமணகோடி என்று ஒரு இடம். அந்த இடத்திலே ஆழம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்விடத்தில் தான் பாண்டவர்களில் தருமனுக்கு அடுத்தவனான பீமன் குதித்துக் குளிப்பது வழக்கம்.

    தனக்குத் தலையிடியாக இருக்கும் பீமனை எப்படி ஒழிப்பது என்று தவித்துக் கொண்டிருந்த துரியோதனன் அவனை அழிப்பதற்கு ஒரு அருமையான திட்டம் தீட்டினான்.

    பீமன் வழமையாகக் குதிக்கும் இடத்தில் நீருக்கடியில் வெளியே காணமுடியாதபடி நுனிகளில் கடுமையன விஷம் பூசப்பட்ட ஈட்டிகளை நாட்டி வைத்தான்.

    பீமனும் குளிக்க வந்தான் அப்போது அங்கே வந்த கண்ணன் ” பீமா நீ குதிக்கப் போகும் இடத்தைப் பார் அங்கே சில வண்டுகள் மொய்க்கின்றனவே அவைகளின் மீது பாய்ந்து அவைகளைக் கொல்லாது அவற்றைத் தாண்டிக் குதித்து விடு “

    துரியோதனன் திட்டம் தவிடு பொடியாகி விட்டது. மனதில் இது திரைப்படம் போல ஓட விடுவாரா எமது கவியரசர் ?

    கொடுக்கிறார் அடுத்த வரிகளைப் பாருங்கள்

    வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே – எங்கள்

    மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

    என்கிறார்.

    சரி கண்ணனோடு கங்கைக்கரைத் தோட்டத்தை இணைத்து விட்டோம் இனி அடுத்து எனச் சிந்தனைச் சுழல்கள் வட்டமிட ,

    “ஓ கண்ணனின் திருமேனியை முதலில் தரிசித்தது யார் ? மேகங்களல்லவா ? “

    சரி அவைகளைக் கொண்டு என்ன செய்விக்கப் போகிறார் எங்கள் கவிக்குயவர்.

    பெருமதிப்பிற்குரியவர்கள் எங்காவது வருகிறார்கள் என்றால் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்களின் மீது பன்னீர் தெளித்து மரியாதை செய்யும் வழக்கத்தை நினைவில் கொள்கிறார்.

    சாதாரண மனிதர்களுக்கே பன்னீர்த்துளிகள் தெளிக்கப்பட்டால் உலகத்தின் உதாரணமாகத் திகழப்போகும் அக்குழந்தை கண்ணனை எப்படி வரவேற்கப் போகிறதாம்.

    மேகங்கள் கரைந்து பன்னீர்த்துளிகளாய் பரந்தாமன் மீது விழுகிறது என்கிறார் எங்கள் வித்தகக் கவி.

    பன்னீர் மலர்சொரியும் மேகங்களே – எங்கள்

    பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்

    என்று சித்தரிக்கிறார் வார்த்தை வித்தகர்.

    இதுவரையும் புகழ் பாடுங்களேன் என்றுதானே வரிகளை யாத்திருந்தார். இப்போது என்ன திடீரென மெய்யழகைப் பாடுங்களேன் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?

    கண்ணன் குழந்தையாகச் சிறையில் பிறந்ததும் தந்தை வாசுதேவனால் வெளியே எடுத்துச் செல்லப்படும்போது அக்குழந்தையின் மேனியழகை முதன் முதல் கண்ணுற்றது மேகங்கள் தானே ! அதனால் தான் மேகங்களை கண்ணனது மெய்யழகைப் பாடும்படி கேட்கிறார் போலும்.

    ஆசுகவியின் சிந்தையில் அடுத்து வருவது ராகங்கள். அதுவும் தென்கோடி ராகங்களை அழைக்கிறார். என்ன இது ? வடக்கே மதுராவில் பிறந்த கண்ணனைப் பாட தென்கோடி ராகங்களா ? சிந்திக்க வைக்கிறார் கவியரசர்.

    கண்ணனையே கணவனாக அடைய வேண்டி பாசுரங்கள் பாடிய ஆண்டாள், ஆதிசங்கரர்,ராமானுஜர்,வேதாந்த தேசிகர் என்போர் மட்டுமல்ல கண்ணனையே எண்ணிப் பல பாடல்கள் பாடிய மகாகவி பாரதியார் வரை அனைவரையும் ஈந்தது தென்திசை தானே !

    தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

    ஶஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்

    என்று அழகுற வரிகளை அள்ளி வீசுகிறார் எங்கள் கவியரசர்.

    சரி ராகங்களை அழைத்து வந்து விட்டார். அவை கச்சேரியை ஆரம்பிக்க வேண்டாமா ?

    அவை எங்கிருந்து ஆரம்பிக்கப் போகின்றன? ஓ அவைகளும் கண்ணனின் குழந்தைப் பருவத்திலிருந்துதான் ஆர்ம்பிக்கின்றனவாம். அதுவும் அந்தக் குழந்தையாய் அவர் யாரைச் சித்தரிக்கின்றாரென்றால் குருவாயூரில் இருந்து பக்தர்களை ரட்சிக்கும் குருவாயூரப்பனைச் சொல்கிறார்.

    அதுவும் கண்ணனை குருவாயூரில் தவழ்ந்தவன் என்று சொல்லாமல் தவழ்கின்றவன் அதாவது இன்றும் அருள் பாலித்துக் கொண்டிருப்பவன் என்கிறார்,

    குருவாயூரில் தவழ்ந்து ரட்சிக்கும் அதே கண்ணன் தானே மதுராவையும் ஆள்கின்ற மன்னனாகக் காட்சியளிக்கிறான் இல்லையா ? அதை எப்படி இங்கே இணைக்கிறார் பாருங்கள்,

    குருவாயூர் தன்னில் அவன்

    தவழ்கின்றவன்

    ஒரு கொடியோடு மதுராவை

    ஆள்கின்றவன்

    ஆகா, இதுதான் கவியரசருக்கேயுரித்தான தனி முத்திரை எனலாம்.

    அதுசரி ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் என்கிறார் ஏன் தெரியுமா? கண்ணனின் அரசாட்சியில் அவனுக்கு அங்கு எதிர்க்கட்சியே கிடையாது. மாற்றுக்கொடியில்லா மாநகரம். கன்ணன் எனும் அந்த மதுரகானம் இசைப்பவனின் மதுரத்தில் மயங்கி பேதமின்றி மக்கள் வாழ்கிறார்கள். என்கிறாரோ நம் கவியரசர் ?

    எல்லாவற்றையும் தன் கானத்துக்குள் வைத்தவருக்கு அடடே நாம் தரிசிக்கும் எங்கள் ஏழுமலையானின் உறைவிடத்தை உரைக்க வேண்டாமோ என்ற எண்ணம் வருகிறது போலும்.

    சரி மீண்டும் ஒரு சம்பவ சம்பாஷனைக்குள் நுழைவோம் வாருங்களேன், கண்ணா உன் அம்மாவான எனக்கு என் மகனின் திருமணம் ஒனறைக்கூட பார்க்க வாய்ப்பளிக்கவில்லையே என்றொரு குறையைக் கூறுகிறாள்.

    சரி கவலையை விடுங்கள் தாயே நான் கலியுகத்தில் ஸ்ரீனிவாசனாக அவதரிப்பேன் நீயே மறுபடியும் எனக்குத் தாயாக வருவாய் உன் முன்னிலையிலேயே நான் திருமணம் செய்து உன் குறையைப் போக்குகிறேன் என்பார்.

    ஸ்ரீனிவாசப் பெருமாளாக கன்ணனும் அவரது தாய் வகுளமாலிகையாக யசோதையும் வந்து ஸ்ரீனிவாசக் கலியாணத்தில் யசோதையின் குறையும் தீர்க்கப்பட்டு திருப்பதியில் ஏழுமலையானாக வாசம் செய்கிறார்.

    இதையெல்லாம் கவியரசரின் அழைப்பின் பேரில் வந்து பாடிக் கொன்டிருக்கும் ராகங்கள் அட ஸ்ரீரங்கத்தை விட்டு விடலாமா என்று எண்ணி விட்டன. விடுவாரா கவியரசர் ? விளையாடி விட்டார் போங்கள். இரண்டையும் இணைத்து அழகாய்த் ராகங்களின் பாகமாகத் தருகிறார்.

    திருவேங்கடத்தில் அவன்

    அருள்கின்றவன்

    அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி

    கொள்கின்றவன்

    ராகங்களை பெண்களாகத்தான் பார்ப்பது வழக்கம். அப்படியான சூழலில் தன்னுடைய உதவிக்கு அபயக்குரல் கொடுத்த பாஞ்சாலியைப் பற்றிக் கூறாமல் விட்டுவிடலாகாது என்பதால் அடுத்த வரி வந்து விழுகிறது.

    பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்

    என்று சூதாட்டத்தில் தம்மையே இழந்து பின்னர் பாஞ்சாலியை இழந்த பாண்டவர்களினால் காப்பாற்ற முடியாத பாஞ்சாலியைக் காக்க தன்கையைக் கொடுத்த கண்ணனின் புகழை அவ்வரிகள் உள்ளடக்குகின்றன.

    அது மட்டுமா ? அச்சம்பவமே போரின் ஆரம்பம் என்பதை சூசகமாகக் குறிப்பிடுவதற்கு ஏதுவாக பரந்தாமன் சங்கை எடுத்தான் என்று கூறுகிறார்.

    சங்கை என்பது இரண்டு வகையாக அர்த்தப்படுத்தப்படும். பகாப்பதமாக எடுத்தால் அது பயத்தையும், சந்தேகத்தையும் குறிக்கும். பகுபதமாக எடுத்தால் சங்கை எடுத்து முழக்கினான் என்று கொள்ளலாம்.

    பாஞ்சாலியின் பயத்தையும் , சந்தேகத்தையும் போக்கினான் கண்ணன் என்பதோடு போரின் ஆரம்பத்தை அறிவிக்கும் வகையில் சங்கை முழக்கினான் என்றும் பொருள்படக் கூடிய வகையில் அடுத்த வரிகள் அமைகின்றன.

    அன்று பாரதப்போர் முடிக்க

    சங்கை எடுத்தான்

    என்ன இது அடாவடித்தனமாக இருக்கிறதே துரியோதனின் நாட்டின் பகுதியைப் பறித்தல்லவா கண்ணன் பாண்டவர்களுக்கு கொடுத்தான் என்று எண்ணினால் அதற்கு கூட பதில் வருகிறது.

    என்ன என்கிறீர்களா ?

    பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக்

    கொடுத்தான்

    என்று கண்ணன் முறையற்ற செயல் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவித்தும் விடுகிறார்

    சரி இதுவெல்லாம் சரிதான் இத்தனை விடயங்களையும் கண்டு, கேட்டு, படித்தவர்களுக்காய் எதைக் கொடுத்தான் கண்ணதாசனின் கண்ணன் என்று பார்த்தால்,

    நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம்

    கொடுத்தான்

    என்று கூறி எமக்குக் கிடைத்ததுதான் அளப்பரிய பரிசு கண்ணனுக்கு பெரிய பாராட்டுப் பத்திரமே தந்து விடுகிறார்.

    கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீக அறிவியல் ஆழமானது என்பதைப் புரிந்து கொள்ளும் பயணத்தில் இது மற்றொரு மைல்கல்.

    அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை

    Share
  • கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (5)

    கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (5)

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ஆன்மீகம் என்றால் என்ன ?

    மதங்களைக் கடந்த ஆன்மாவை உணர்தல் எனும் பொருளைக் கொள்ளலாம். ஆன்மீக அறிவியலாளர்கள் மனிதனின் மரணம் என்பது உடலுக்குத்தான் உரித்தானது ஆன்மாவுக்கு அழிவில்லை என்று கூறுகிறார்கள்.

    கவியரசர் தனது பதிவினில் மதம் என்பது மனிதனுக்கு அணிகலனே ஒழிய அது ஆடையல்ல என்கிறார். அது எதைக் குறிக்கிறது ?

    ஒரு மனிதனுக்கு ஆடை அவனது மானத்தைக் காக்கும் அளவுக்கு முக்கியமானது ஆனால் அணிகலனோ அவனது அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாகத்தான் கனிக்கப்படுக்கிறது என்கிறார்.

    மறைமுகமாக மனிதர்க்கு மதம் என்பது அத்தியாவசியமானதொன்றல்ல என்று குறிப்பிடும்போது அவர் மதவெறியை ஒதுக்கி மனிதாபிமானத்தோடு கூடிய ஆன்மீக அறிவியலை நாடும்படி கூறுகிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ணன் எனும் திரைப்படத்துக்காகக் கவியரசர் யாத்த பாடலில்,

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
    மரணத்தின் தன்மை சொல்வேன்
    மானிடர் ஆன்மா மரணம் எய்தாது
    மறுபடிப் பிறந்திருக்கும்
    மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
    வீரத்தில் அதுவும் ஒன்று நீ
    விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
    வெந்துதான் தீரும் ஓர்நாள் ..

    என்று எழுதியிருந்தார். அழகாக, அற்புதமாக ஆன்மாவின் தன்மையை அதனை அழகாக உள்வாங்கியிருக்காமல் கவியரசரால் இத்தனை அருமையான வரிகளை, எளிமையான வரிகளைத் தந்திருக்க முடியுமா?

    பூஜ்ஜியம் தான் உலகின் அனைத்தின் ஆரம்பமாகும் அந்தப் பூஜ்ஜியத்துக்குள்ளேதா இறை எனும் ஒரு சக்தி தன்னைப் புரிந்து கொள்ளமுடியாத வகையில் புதைத்து வைத்துள்ளது என்பதைப் பூடகமாக கவியரசர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆன்மா உலகில் மறுபடி, மறுபடி பிறந்திருக்கிறது அதன் பிறப்பின் நோக்கமே அனுபவங்களை அடைவதே. அடைந்த அனுபவங்களின் மூலம் தேவையான ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுக் கொள்வதே ஆன்மாவின் தேவையாகிறது.

    அந்த அனுபவங்களின் அவசியத்தை, அனுபவத்தின் ஆழத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கவியரசர் மதங்கடந்த ஆன்மீக அறிவியல் அடிப்படையில் பல படைப்புகளை ஈந்துள்ளார்.

    அந்த வகையில் இந்தப் பதிவில் அவரது கவிதையொன்றைப் பார்க்க விழைகிறேன்.

    யதார்த்த வாழ்வினில் நாம் காணும் விடயங்களை அப்படியே எளிமையாக ஆண்௶டவன் எனும் ஒரு சக்தியை நோக்கித் தூக்கிப் போட்டு அதற்கு அவ்வாண்டவனும் யதார்த்தமான பதிலைக் கூறி வாழ்வின் உண்மைகளை விளக்குவதாய் அக்கவிதை அமைந்திருக்கும்.

    ஆன்மீக அறிவியலின் படி ஆன்மீக உலகிலிருந்து மறுபிறவி எடுக்கையில் அனுபவங்களின் அடிப்படையில் நாமே எமது வாழ்வினைத் தெரிவு செய்கிறோம் என்கிறார்கள்.

    குழந்தையாய்ப் பூமியில் பிறந்ததும் எமது வாழ்வின் நோக்கத்தை மறந்து போய் விடுகிறோம். எமது பிறப்பின் நோக்கத்தையும், நான் யார் எனும் கேௐள்விக்கு விடை காணூம் முகமாகவும் அதற்கான மார்க்கமாகவே தியானப் பாதையில் பயணிக்கும்படி ரமண மகரிஷி முதற்கொண்௶டு அனைத்து யோகிகளும், மகான்களும் போதிக்கிறார்கள்.

    ஆன்மீகக் கடலில் நீந்திய கவியரசர் என்ன கூறுகிறார் பார்ப்போமே ,

    நான் யார்?

    நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?

    நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!

    தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

    அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?

    • கவியரசு கண்ணதாசன்

    சரி இனி கவியரசரின் கவிதையினைப் பார்ப்போம். இக்கவிதைக்கு விளக்கம் தேவையில்லை என்பதுவே இக்கவிதையின் சிறப்பாகும்.

    கவிதைகளில் கவியரசர் கையாளும் எளிமையினையும் அப்படியே இக்கவிதை எடுத்துக் காட்டுகிறது.

    வரிக்கு வரி அவரது யதார்த்த வினாக்களும் அதற்கான விளக்கங்களும் அலாதியானவை. ஆன்மீகத் தத்துவத்தின் அடிப்படையை அப்படியே எடுத்தியம்புபவை.

    சாதாரண சராசரி வாழ்வினை மேற்கோள்வோரின் உள்ளக்கிடக்கையை அப்படியே வெளிக்கொணரும் கவிதை என்றே சொல்ல வேண்டும்

    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
    பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
    படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
    படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
    அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
    அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
    அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
    அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
    பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
    பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
    மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
    மணந்து பாரென இறைவன் பணித்தான்!
    பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
    பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
    முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
    முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
    வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
    வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
    இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
    இறந்து பாரென இறைவன் பணித்தான்!
    ‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
    ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
    ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
    ‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

    – கண்ணதாசன்

    ஒரு ஆன்மாவின் அடையாளம் அதன் அனுபவங்கள். ஆண்டவனின் அருகாமையை உண்ர வைப்பதும், அந்த ஆண்டவன் வெளியே எங்கும் இல்லை எமக்குள்ளேயே இருக்கிறான் என்பதையும் அறிவுறுத்தும் வகையில் கவியரசியரின் ஆன்மீக அறிவியலின் அடையாளமாகத் திகழ்கிறது இக்கவிதை,

    (மீண்டும் வரும்வரை)

    Share
  • ஒரு ஆசிய ஆளுமையின் குரல் ஓய்ந்தது

    ஒரு ஆசிய ஆளுமையின் குரல் ஓய்ந்தது

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ஜார்ஜ் அழகையா (George Alagiah) எனும் பெயர் இங்கிலாந்து உத்தியோகபூர்வமான தொலைக்காட்சியான பி.பி.ஸி நிறுவனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெயராகும்.

    1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சிறீலங்கா அப்போதைய இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு கிறீத்துவர்களான டொனால்ட் அழகையா எனும் பொறியியளாலருக்கும், திரேசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் உண்டு.

    இவர் தனது பெற்றோர்களுடன் ஐந்தாவது வயதில் மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார்.

    கானா நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்த ஜார்ஜ் அழகையா தனது ஆரம்பக்கல்வியை சென்.ஜோன்ஸ் எனும் போர்ட்ஸ்மவுத் இடத்திலமைந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

    கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்து ஜார்ஜ் அழகையா அவர்கள் டர்காம் (Durham) யூனிவர்சிட்டியில் அரசியல் துறையில் பட்டம் பெற்றார்.

    பட்டாதாரியாகிய பின்னால் 1980ம் ஆண்டு சவுத் எனும் இதழின் ஆபிரிக்க ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

    சுமார் எட்டு வருடங்கள் இங்கு பணி புரிந்த பின்னால் 1989ம் ஆண்டில் இங்கிலாந்தின் முன்னனி ஊடகமான பி.பி.ஸியில் பணியில் அமர்ந்தார்.

    முதலில் உலக விடயங்களின் நிருபராகவும், பின்னர் ஆபிரிக்க நாடுகளின் நிருபராகவும் பணியாற்றினார். அதன் பின்னால் தென்னாபிரிக்க நிருபராக ஜொகனஸ்பேர்க் இல் நியமிக்கப்பட்டார்.

    ஆபிரிக்க நாட்டு விவகாரங்களில் நன்கு தேர்ச்சியடைந்த இவர் பல ஆபிரிக்க நாடுகளில் பாரிய பிரச்சனைகள் நடைபெற்ற வேளைகளில் மிகவும் துணிகரமாக செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு வந்திருந்தார்.

    ருவாண்ட நாட்டு இனப்படுகொலைகள், தெற்கு ஈராக் சதுப்புநில ஆரபியர்களின் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர் ஜார்ஜ் அழகையா அவர்கள் .

    ஆப்கானிஸ்தான், லைபிரியா, சிரியா லியோன், சொமாலியா போன்ற நாடுகளின் உள்நாட்டு யுத்தங்களின் போது போர் உக்கிரமாக நடந்த பகுதிகளில் துணிச்சலாக முன்னின்று செய்திகளைச் சேகரித்தார்.

    1999ம் ஆண்டு பி.பி.ஸி மதிய ஒருமணிச் செய்தித்தொகுப்பின் உதவித் தொகுப்பாளராகக் கடைமயாற்றினார்.

    2002ம் ஆண்டு பி.பி.ஸி 4வது அலைவரிசையில் பிரதான செய்தி வாசிப்பாளராகப் பதவியேற்றார்.

    2003ம் ஆண்டு பி.பி.ஸியின் முக்கிய செய்தியான மாலை ஆறு மணிச் செய்தியை மற்றொரு பிரபல்யமான செய்தியாளர் சோபி ரேவேத் (Sophie Raeworth) உடன் 2005 வரையும், பின்னர் மற்றொரு புகழ் பெற்ற செய்தியாளர் நட்டாஷா கப்பிளின்ஸ்கி (Natasaha Kaplinski) உடன் 2007ம் ஆன்டு வரையும் இணைச் செய்தியாளராகவும் பணியாற்றினார்.

    2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 மணிச் செய்திச் சேவையின் பிரதான தொகுப்பாளரானார். அத்தோடு 2006 ம் ஆண்டிலிருந்து பி.பி.ஸி உலகசேவையின், இன்றைய உலகச் செய்திகள் எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கடமையாற்றினார்.

    அத்தோடு பி.பி.ஸி தொலைக்காட்சியின் பிரதான இரவு 10 மணிச் செய்திகளின் தொகுப்பாளர்கள் இல்லாத ல் அந்தன் செய்தித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

    ஆபிரிக்க நாட்டு அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட இவர் பிரபலமான ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களான நெல்சன் மண்டலே , முன்னால் ஐக்கிய நாடுகள் சபை காரியதரிசி கோவி ஆனன், மதகுரு டெஸ்மண்ட் டூடூ , முன்னால் சிம்பாவெ அதிபர் ரோபேர்ட் முகாபே ஆகியோருடன் நேர்காணல்களை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

    அற்புதமான குரல்வளமும் ஆங்கில மொழியின் ஆளுமையும் கொண்டவர் அமரர் ஜார்ஜ் அழகையா என்பதும் இவர் எமது பின்புல நாடான ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் பெருமைக்குரியதே .

    பிரான்ஸிஸ் ரோபாதன் (Frances Robathan) எனும் தனது சர்வகலாசாலைத் தோழியான வெள்ளை இனப் பெண்மணியைத் திருமணம் செய்த இவருக்கு இரண்டு ஆண் குழைந்தைகள் உண்டு.

    2000ம் ஆண்டு பாவ்டா (BAFTA) எனும் பிரித்தானிய தொலைக்காட்சிச் சேவைகளுக்கான பரிசினைப் பெற்ற குழுவில் இவரும் அடங்குவர்.

    ரோயல் டெலிவிஷன் சொசைடி எனும் அமைப்பினால் சிறந்த சர்வதேச நிருபர் எனும் பரிசையும் , அமெனெஸ்டி இன்டர்நஷனல் யூகே அமைப்பினால் சிறந்த ஊடகவியலாளர் எனும் பரிசுகளையும் பெற்றவர்.

    2008ம் ஆண்டு இங்கிலாந்து அரசினால் ஆர்டர் ஆவ் பிரிட்டிஷ் எம்பயர் – OBE எனும் விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

    உலக வியாபார அரங்கில் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு தகுந்த ஊதியம் அளிக்கும் நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும் அங்காடிகளிலேயே மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் எனும் கருத்தை முன்வைக்கும் Fair trade Foundation எனும் அமைப்பின் நிர்வாகக்குழுவில் கெளரவ அங்கத்தினராக இருந்த இவரை அதிலிருந்து இராஜினாமாச் செய்யும்படி பி.பி.ஸி நிர்வாகம் கேட்டதை அடுத்து இராஜினாமாச் செய்தார். இதற்கு பொதுமக்களிடமிருந்து பி.பி.ஸிக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது. அதற்கு விளக்கமாக பி.பி.ஸி தமது நடுநிலை வகிக்கும் கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையாகவே அவரை இராஜினாமாச் செய்யச் சொல்லி கேட்டதாக கூறப்பட்டது.

    2003 டிசம்பர் சுனாமி பேரலை அழிவுக்குப் பின்னர் 2004ம் ஆண்டு ஜார்ஜ் அழகையா அவர்கள் தன் தாய்மண்ணான ஈழத்தின் மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் செய்து பேரலையால் அழிந்த தனது பூர்வீக இல்லத்தைப் பார்வையிட்டார். அங்கு தானும், தனது சகோதரிகளும் விளையாடிய கிணற்றுப் பகுதியை டையாளம் கன்ட இவர் அதை மகிழ்வுடன் குறிப்பிடிருந்தார்.

    இவரது பிரித்தானிய தொலைக்காட்சிப் பங்களிப்பு 2014ம் ஆண்டு வயிற்றுப் பௐகுதியில் ஏற்பட்ட புற்று நோயினால் தடைப்பட்டது.

    2015ம் ஆண்டு இறுதியில் தனது நோய்க்கான வைத்தியம் நிறைவுற்றதாகவும் உடல்நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி மீண்டும் தொலைக்காட்சிச் செய்திச் சேவையில் இணைந்தார்.

    மீன்டும் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புற்றுநோய் மருவியுள்ளாதாகக் கூறி தொலைக்காட்சிப் பணியை இடைநிறுத்திக் கொண்டார்.

    2020ம் ஆண்டு புற்றுநோய் தனது நுரையீரலுக்கு பரவியுள்ளதாகவும் இனித் தன்னைக் காப்பாற்ற முடியாது என்றும் அறிவித்திருந்தார்.

    37 வருடங்கள் மணவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இவர் தன் மனைவியையும், குழந்தைகளையும் ஆழமாக நேசித்தார்.

    தனது கடைசி விருப்பமாக தனது உயிர் பிரியும் வரை தனது காதல் மனைவியின் கைகளைப் பற்றியபடி இருக்கவேண்டும் என்பதைக் கொண்டிருந்தார், அவரது ஆசைப்படியே அவரது மனையின் கைகளைப் பற்றியபடியே கடந்த 24ம் தேதி தனது 67வது வயதில் இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்தார்.

    தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் அமரர் ஜார்ஜ் அழகையா. இத்தகைய ஒருவர் தான் புலம் பெயர்ந்த நாட்டிலே அனைத்து மக்களின் இல்லங்களிலும் ஒரு ஆசிய ஆளூமையாக ஒலித்துக் கொண்டிருந்ததே அவரது தமிழ்ப் பூர்வீகத்தினை உயர்த்திப் பிடிப்பதாகும்.

    தமிழர்களாகிய நாமனைவரும் அவரது ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்போம்.

    Share
  • ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசன் பாடல்களும் . . . . . . . (4)

    ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசன் பாடல்களும் . . . . . . . (4)

    சக்தி சக்திதாசன்

    கடந்த மாதம் ஜூன் 24ம் தேதி சிறுகூடல்பட்டியில் 97 அகவைகளுக்கு முன்னால் மலையரசித் தாயின் மடியான மண்ணில் கலையரசி அருள் பெற்ற குழந்தையாகத் தவழ்ந்தவரே எம் கவியரசர்.

    தமிழுலகின் முத்தாகத் திகழப் போகிறேன் என்பதை அறிவிக்கும் முகமாகவே முத்தையா எனும் பெயர் கொண்டு முகிழ்த்தவர் கவியரசர்.

    நாத்திகம் எனும் ஆழியில் நீந்தி ஆத்திகம் எனும் கரையேறியவர் கண்ணதாசன்.

    அரசியல் எனும் வனத்திலே வாசம் செய்ததினால் பெற்ற அனுபவங்களின் வழியேகி ஆன்மீகக் காற்றை சுவாசித்து மனதினில் வாசம் செய்தவரே கவியரசர்.

    தன்னைத்தானே புடம் போட்டு தனக்குள் சத்திய யுத்தம் நடத்தித் தன் சுயதரிசனம் கண்டவர்.

    ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதற்கு வாழ்க்கையில் இருந்து அந்நியமாகி காட்டுக்குள் ஓடத்தேவையில்லை, லெளகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே பெளதீக வாழ்க்கையின் அங்கமாக ஆன்மீகத்தை எப்படி இணைத்துக் கொள்ளலாம் என்பதை எளிமையாக விளக்கியவர் கவியரசர்.

    தான் ஒரு நல்ல இந்துவாக வாழ்வதற்கு மற்றைய மதங்களுடன் பேதமையை வளர்க்கத் தேவையில்லை என்று வாழ்ந்து காட்டியவர்.

    ஆன்மீகம் என்றால் வெறும் இறைபக்திதான் ஆன்மீகமா ?

    இல்லை

    மதம் கடந்த தன்னிலை அறிதல் ஆன்மீகமா?

    இரண்டையும் நன்கு அலசிப்பார்த்து இரண்டின் முக்கியவத்தினையும், வேறுபாட்டையும் எளிமையான தமிழில் விளக்கியவர் கவியரசர்.

    இதோ இந்தப் பதிவில் ஆனந்தஜோதி எனும் திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுவதாக இடம்பெற்ற ஒரு காட்சியின் பாடல்.

    அற்புதப் பாடகர் அமரர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ஐயா – இராமமூர்த்தி ஐயா அவர்களின் இசையில் கவியரசர் யாத்த வரிகளைப் பார்ப்போம் வாருங்கள்.

    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

    அருமையான ஒரு கேள்வியை எம்முன்னெ தூக்கி வீசுகிறார் கவியரசர்.

    கவியரசரின் பாடல்களின் தனித்தன்மைகளில் ஒன்று கேள்வியாக வரிகளை வீசிவிட்டு அதை விளக்கும் விடையையும் தொடர்ந்து வீசுவதாகும்.

    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?

    திரும்பவும் கேள்வி வடிவில் பதிலையும் போடுகிறார்.

    பதிலென்று குறிப்பிடும்போது வெளிப்படையாகச் சொல்லாமல் எமக்கு ஒரு கேள்வியைப் போட்டு அதனை எமக்குள் நாமே சுய அலசல் மூலம் அறியக்கூடியதாக அமைத்திருக்கின்றார்.

    அறிவியல் ஆன்மீகத்தின் அடிப்படையே தன்னைத் தானே விசாரிப்பதே ! அதற்கு இங்கே அத்திவாரமிடுகிறார் இல்லையா ?

    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இசையை ரசிக்கின்றாய்
    இசையின் உருவம் வருகின்றதா?

    கேள்விகள் ! கேள்விகள் ! அவை ஒவ்வொன்றினுள்ளும் ஆன்மீக அறிவியல் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளன.

    ஆமாம் இங்கேதான் இறைவன் என்பதன் ஆன்மீக விளக்கத்தை அறிவிக்க முயல்கிறாரோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

    இருள் அது கருமையாகத்தானே இருக்கிறது.

    இங்கேதான் கவியரசரின் அறிவியலின் ஆழம் புரிகிறது.

    இருளில் “இருக்கின்றாய்” எதிரே இருப்பது தெரிகின்றதா ? என்றுகூட கூறியிருக்கலாம். ஆனால் அதிலென்ன பெரிய ஆன்மீகம் இருக்கிறது என்று எண்ணலாம்.

    இரவில் ” விழிக்கின்றாய் ” என்று கூறுகிறார். தூங்குபவர் இரவில் விழித்தால் எதிரே இருப்பது தெரியாமல் இருப்பது அனைவருக்கும் நிகழக்கூடிய ஒன்றே !

    அதையே மனதை தூக்கத்தில் வைத்திருப்பவர் உள்ளத்துக்குள் இறைவன் இருப்பதை அவர்களால் உணர முடியாது அவர்களின் மனம் இருளில் இருப்பது போலத்தானே என்கிறாரோ ?

    அடுத்துப் பார்த்தால்

    இசையை ரசிக்கின்றாய்
    இசையின் உருவம் வருகின்றதா? என்கிறார் . இறைவனின் வடிவில் ஆன்மாவைல் காண்கிறோம் அதற்கு உருவம் இல்லை ,இசையை ரசிக்கிறோம் அதற்கும் உருவம் இல்லை ஆனால் அதைக் கேள்விக்குள்ளாக்குகிறோமா?

    இங்கேயும் எம்மை ஆன்மீக வழியில் சிந்திக்கத் தூண்டுகிறார் இல்லையா ?

    மீண்டும் ஒரு கேள்வி பாருங்களேன் ,

    உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
    வெளியே தெரிகின்றதா ?

    உண்மை பேசு என்கிறோம் அந்த உண்மையைக் கண்களால் உருவமாகப் பார்க்கிறோமா ?

    ஆனால் அதே உண்மையை இறைவனாகக் கருதும்போது அதற்கு மட்டும் ஏன் சாட்சி தேடுகிறாய் என்கிறார் கவியரசர் என்பது எனது பார்வை.

    புத்தன் மறைந்து விட்டான்
    அவன் தன் போதனை மறைகின்றதா?
    சத்தியம் தோற்றதுண்டா
    உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
    இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
    சஞ்சலம் வருகின்றதா?

    புத்த பகவானைக் குறிப்பிட்டதுமே கவியரசரின்  ஆன்மீக அறிவியலின் ஆழம் புரிந்து விடுகிறது.

    உள்ளத்தில் எழும் எண்ணங்களின் வடிவே எமது வாழ்க்கையாகிறது என்று போதித்த புத்த பகவானின் போதனைகளின் வீரியத்தை குறிப்பிட்டதின் மூலம் ஆன்மீக அறிவியலின் அடிப்படையையே அலசி விடுகிறார் எம்முடைய கவியரசர்.

    சத்தியத்தின் பாதையே தர்மத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்கிறது இதுவே கீதை, பைபிள், குர்ஆன் ஆகிய மாத நூல்களின் அடிப்படையகிறது.

    இத்தோடு மத நல்லிணக்கத்தினையும் அவையனைத்தும் அறிவியல் ஆன்மீகத்தை முதன்மைப்படுத்துகின்றன என்பதையும் எளிமையாகவும், தெளிவாகாவும் யாராலும் விளக்கிடக் கூடுமா ?

    காலத்தால் அழிக்க முடியாத சரித்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை. அவைகளை பொருளுணர்ந்து படிப்பவர்களுக்கு சஞ்சலம் வருவதற்கு வாய்ப்பே இல்லையென்கிறார் கவியரசர்.

    இதோ அடுத்து கொண்டு வருகிறார் பாருங்களேன் !

    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    சாட்டைக்கு அடங்காது
    நீதி சட்டத்தில் மயங்காது!
    காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
    காக்கவும் தயங்காது!
    காக்கவும் தயங்காது!

    நீதிதேவன் என்கிறோம். அப்படியானால் நீதி கூட இறைத்தன்மை பெற்று விடுகிறது  இல்லையா ?

    அத்தகைய நீதியை சாட்டை கொண்டு வளைத்திட முடியுமா ?

    சிலவேளைகளில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து நீதியை மழுங்கடிக்கலாம். ஆனால் நீதி நிச்சயம் விழித்துக் கொள்ளும் மாயத்திரையை விலக்கிக் கொண்டு வெளிவரும் என்கிறார்.

    அதேபோலத்தான் மனமெனும் மேடையை மறைத்திருக்கும் மாயத்திரையை அறிவியல் ஆன்மீகத்தின் மூலம் விலக்கினால் நம்முள் உறையும் ஆன்மாவே இறைவன் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ கவியரசர்?

    என் எழுத்துகளின் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளினுள் இலைமறைகாயாக ஒளிந்திருக்கும் ஆன்மீகத்தை அறிவியல் அடிப்படையில் அலசிப் பார்த்து ஆனந்திக்கிறேன்.

    பாடலைப் பார்த்து ரசிப்பதற்கு:https://youtu.be/jiFxjK4BAv8

    மீண்டும் வருகிறேன்

    Share
  • மொரீசியஸ் நாட்டில் ஒரு கைலாசம்

    லண்டன்வாழ் தமிழ்க் கவிஞர் சக்தி சக்திதாசன், அண்மையில் மொரீசியஸ் நாட்டுக்குச் சென்று வந்தார். இதன் தலைநகரான போர்ட் லூயிஸ் பெருநகரில் கயிலாயம் (கைலாசம்) என்ற பெயரில் சிவன் கோவில் உள்ளது. சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோவில் என்றும் இதனை அழைப்பர். இந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கிய சக்திதாசன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையில் நாமும் இதைக் காண, பதிவு செய்து அனுப்பியுள்ளார். இந்த அழகிய கோவிலுக்குள் இதோ ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . 3

    அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . 3

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    கவியரசரின் ஆன்மீக அறிவு அவருக்குக் கிடைத்த சாட்சாத் சரஸ்வதி கடாட்சம் . தனக்குள் தன்னைத்தேடி தானே கற்றுத் தேர்ந்தார். தன் வாழ்க்கை நதி ஓடிய பாதைகள் தன்னை அழைத்துச் சென்ற கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளுக்கூடாக தான் பயணித்த பயண அனுபவங்களின் வழி நின்று அதனுள் இருந்த ஆன்மீகத்தை அனைவர்க்கும் அள்ளித் தெளித்தார்.

    அனுபவ ஆன்மீகமே வாழ்வின் உண்மை நிலையை எடுத்துக்காட்ட வல்லது என்பது புரிந்து கொண்ட அனைவராலும் அவற்றை ஒரு திரைப்பட இயக்குனரோ அன்றி நடிகரோ எதிர்பார்க்கும் வகையில் காட்சிகளுக்கேற்ற வரிகளாக்குவது ஒன்றும் இலகுவான காரியமல்ல.

    ஆனால் அதுவே கவியரசருக்கு கைவந்த கலையாயிற்று. “ முன்னோரு காலத்தில் கம்பன் வீட்டில் கனக்கெழுதியிருந்திருப்பேனோ ” என்று கூறி தன்னைத் தானே வியந்த கவியல்லவா கண்ணதாசன் ?

    அவர் பாடல்களுக்குள் புதைத்த அனுபவங்கள் பல தன்னுடைய சொந்த வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்தவை மட்டுமல்ல பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார், பல ஆன்மீக அறிஞர்களுடன் கலந்துரையாடினார். தான் பட்டு அறிந்ததோடு, படித்து அறிந்தவைகளையும், கேட்டு அறிந்தவைகளையும் இணைத்து தனது ஆன்மீக ஞானத்தை வளர்த்துக் கொண்டார் .

    கவியரசர் பாடல்களை மட்டும் அள்ளித் தந்து விடவில்லை அதற்குள் பொருளையும் அல்லவா குவித்து வைத்திருக்கிறார் . அதுவும் காதல் பாடல்களுக்குள் கூட ஏதாவது ஒரு ஓரத்தில் ஆன்மீகக் கருத்தினை சூசகமாக புதைத்து வைப்பதில் வல்லவர் கவியரசர்.

    புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் தனது பாடல்களில் ஆங்காங்கே ஓரிரு வரிகளுக்குள் ஏதாவது புராண அல்லது இதிகாச சம்பவங்களைப் புதைத்து வைத்து அதைப் படிப்பவர்கள் மனங்களில் அச்சம்பவத்தைப் பற்றி அறியும் ஆவலைத் தூண்டுவதில் வல்லவர் .

    ஏசுகாவியம் எழுதிய அனைத்து மதங்களைக் கடந்த அறிவியல் ஆன்மீகவாதியல்லவா எமது கவியரசர் .

    ஆன்மீகத்தை சாதாரண மக்கள் மத்தியில் ௐௐகொண்டு சென்றவர்களுள் கவியரசர் கண்ணதாசன் ஒரு தனியிடத்தைப் பெறுகிறார். ஆன்மீகம் என்பது மதம் சார்ந்த பக்தியின் அடிப்படையில் ஆரம்பித்திருந்தாலும் ஆன்மாவின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதே ஆன்மீகம் , அது மதங்களைக் கடந்தது என்பதில் கவியரசர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரி இப்போ அவரது பாடல் ஒன்றின் சாரத்தைப் பார்ப்போமா,

    ஆலயமணி எனும் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அமரர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் ஒலித்த பாடலுக்கான வரிகளைப் பார்ப்போம்.

    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
    (சட்டி …)

    இங்கே என்ன சொல்ல வருகிறார் கவியரசர் ?

    மனிதனின் சராசரிக் குணம் என்ன ?

    கைகளில் ஒரு சுடுகின்ற சட்டியைப் பிடிக்கிறோம் என்று வையுங்கள் உடனடியாக ஐயோ சுடுகிறதே என்று அதற்குரிய முன்னெச்சரிக்கை எடுப்பவர்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

    எம்மால் சமாளித்து விட முடியும் என்று கைகளில் கொஞ்ச நேரம் சூட்டைத் தாங்கிக் கொள்வோம் பின்பு அந்தச்சூடு தாங்க முடியாமல் கையைப் பொத்துவிடும் போலிருக்கும் போது கைகளை அப்படியே விட்டு விடுகிறோம் .

    அதேபோலத்தான் இப்படத்தில் வரும் கதாநாயகன் பொறாமை எனும் அரக்கக் குணத்துக்கு அடிமையாகி இழக்கக்கூடாதவைகளையெல்லாம் இழக்கிறான். அது அவனது நெஞ்சை எரித்து விடும் போதுதான் அவனுக்கு ஆன்மீக ஞானம் ஏற்படுகிறது.

    நாலுவகையான செயல்களினாலும் பாதிக்கப்பட்டதன் பின்னால் தான் அவனுக்குத் தனக்கும் மேலே ஒரு சக்தியின் ஞாபகம் வருகிறது. இங்கேதான் அவரது அறிவியல் ஆன்மீகம் தெரிகிறது.

    என்ன என்கிறீர்களா ?

    உடனடியாக அவர் இறைவனைப் பற்றி பேச வரவில்லை. நல்லது எது, கெட்டது எது என்பதனைப் பற்றி மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறார்

    அடுத்துப் பார்ப்போமா ?

    பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
    மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
    அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
    (சட்டி …)

    ஆகா ! எப்படி எம்மை ஆன்மீகத்துடன் கொண்டு இணைக்கிறார் ?

    எல்லோருடைய மனங்களிலும் நற்குணங்களும் உண்டு அதே போல் தீயகுணங்களும் உண்டு .

    இதை அழகாக அன்பர் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் குறிப்பிடும்போது அசுர தேவர் யுத்தம், இராமயண யுத்தம், மகாபாரத யுத்தம் எனும் வகையிலான நல்லெண்னங்களுக்கும், தீய எண்ணங்களுக்குமிடையிலான யுத்தமானது மனிதராகப் பிறந்த அனைவர் உள்ளங்களிலும் நிகழ்கிறது நல்லெண்ணங்கள் வெற்றியடைந்தால் நற்செயல்களையும் , தீய எண்ணங்கள் வெற்றிய்டைந்தால் தீய செயல்களையும் புரிகிறோம் என்பார்.

    இதையேதான் அன்று எமது கவியரசர் பாதி மனதில் தெய்வம் இருப்பதாகவும், மீதி மனதில் மிருகம் இரு[ப்பதாகவும் கூறியுள்ளார் போலும். எத்தனை துல்லியமான ஆன்மீக அறிவியல் கவியரசர் உள்ளத்தில் விளையாடியிருக்கிறது பார்த்தீர்களா ?

    அந்த அறிவியல் ஆன்மீகம் கதாநாயகன் உள்ளத்தில் குடியேறிவிட்டதை அழகாக ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா என்று பூடகமாகப் புதைத்து வைத்துள்ளார் கவியரசர்.

    இதோ வருகிறது அவரது அடுத்த அற்புத வரிகள் பார்ப்போம் வாருங்கள் ,

    ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
    ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
    (சட்டி …)

    மனித மனதின் சஞ்சலங்களுக்கு ஓய்வுண்டா என்ன ?

    குறிப்பாக இத்திரைப்படத்தின் கதாநாயகன் மனதில் சந்தேகப் பேய் ஆரவாரமிடுகிறது. அவனை அதாள பாதாளத்துக்கே கொண்டு செல்கிறது.அச்சந்தேகப் பேயின் ஆரவாரத்தில் அகப்பட்டு பலமான அடிவாங்கியபோது அவனிக்குள் ஆன்மீக ஞானம் குடி கொள்ளத் தொடங்குகிறது.

    எம்மில் பலரும் இம்மாதிரியான அனுபவங்களுக்கூடாகப் பயணித்திருப்போம். அவ்வனுபங்களின் ஆழப்புரிதல் எமக்குத் தேவையான ஆன்மீகத்தை அள்ளி வழங்குகிறது. ஆன்மீகத்தை வெறும் பக்தி மார்க்கமாகவே பார்த்துக் கொண்டிருப்பவர்களின் புரிதல்களுக்கும், அவ்வான்மீகத்தை அறிவியலின் அடிப்படையில் மதங்களைக் கடந்த ஒரு பார்வையைக் கொண்டு அடைந்த புரிதல்களுக்கும் பலமான வித்தியாசம் உண்டு.

    இதனையே கவியரசர் இங்கே உணர வைக்க முற்படுகிறார் போலும்.

    மனதிலுள்ள ஆரவாரப் பேய்கள் ஓடி விட்டது என்றால் ஒலிக்கும் ஆலயமணியின் உண்மை அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிறார். ஆலயமணி வெறும் ஆண்டவனை அறிவிக்க ஒலிப்பதல்ல தூய்மையான உள்ளத்தின் வெளிப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒலியென்கிறார் கவியரசர்.

    அந்த ஒலி அச்சமயத்தில் தர்மத்தை அவனுக்கு அறிவுறுத்துகிறது என்கிறார். தர்மம் என்றால் வெறும் தானம் எனும் ஒரு பொதுவான புரிதலைக் கடந்து வாழ்வின் தார்மீகக் கடமைகளையும் குறிக்கிறது என்கிறாரோ கவியரசர் ?

    அத்தகைய தார்மீகக் கடமைகளைச் சரிவரப் புரிந்து கொண்ட மனதில் சாந்தியைத் தவிர வேறு ஏது குடி கொள்ள முடியும் ?

    சரி இனி இந்தப் பாடலின் ஜீவநாடியான வரிகளைப் பார்ப்போம். இங்கேதான் கவியரசரின் ஆன்மீக ஞானம் கொடிகட்டிப் பறக்கிறது எனலாம்.

    இதோ அந்த வரிகள் ,

    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா- நான்

    இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
    (சட்டி …)

    பல வருடங்களாக இந்த வரிகளை மந்திரம் போல மனதினுள் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அதன் உண்மையான அர்த்ததத்தைப் பற்றிச் சிந்திக்கத் தலைப்படவில்லை.

    அது என்ன “எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா” என்கிறார் கவியரசர் ? அதற்குள் அப்படி என்ன ஒரு பெரிய விடயத்தை உள்ளடக்கியிருப்பார் கவியரசர் என்றே எண்ணத் தோன்றியது.

    என்ன முன்னுக்குப் பின்னான முரணாக இருக்கிறதே ! என்று எண்ணத் தோன்றியது. கவியரசரின் பாடல் வரிகளின் சிறப்பே அது பலரின் பார்வைக் கோணங்களுக்கேற்ப வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்க வல்லது என்பதே !

    அப்படியாக கற்றுக்குட்டியான எனது கோணப்பார்வையில் அதைப்பார்க்க விளைந்தேன்.

    எறும்பின் தோலை உரித்துப் பார்த்தால் அதனுள்ளிருந்து யானை வருவதென்பதெல்லாம் என்ன நடக்கக் கூடிய காரியமா ? அதை உணர்ந்து கொள்ள அதன் அடுத்த வரியைப் பார்ப்பது முக்கியமாகிறது.

    “ நான் இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ” என்கிறார் கவியரசர்.

    எறும்புத்தோலுக்குள் இருந்து யானை வருவது எப்படி நடக்க முடியாத காரியமோ அதேபோலத்தான் பொறாமை எனும், அழுக்காலும், செல்வந்தன் எனும் மமதையைலும் மூடிக்கிடந்தவனின் இதயத்தோலை உரித்துப் பார்த்தால் அதனுள் ஞானம் வருவது என்கிறார் என்பது இக்கற்றுக்குட்டியின் புரிதல்.

    அதுமட்டுமல்ல ஒரு சிறிய எறும்பின் தோலினுள் யானை ஒளிந்திருக்க முடியுமானால் இந்த அகங்கார இதயம் எத்தனை சிறியதாக இருப்பினும் அதனை உரிப்பது போன்ற தூய்மையை அடைந்தால் அத்தனை பெரிய ஞானத்தை அடைய முடியாதா? என்கிறார் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ?

    சரி பிறக்குமுன்னே இருந்த உள்ளம் என்கிறாரே அது என்ன ?

    இங்கேதான் அறிவியல் ஆன்மீகத்தின் ஆழத்துக்கே சென்று விட்டார் எனலாம் . ஆன்மீக அறிவியலாளர்களின் பார்வையில் பிறக்குமுன்னே நாம் ஆன்மாவாக ஆன்ம உலகில் இருக்கிறோம். எமது கர்மவினைகளுக்கேற்ப என்னவிதமான அனனுபவங்களை அடைய வேண்டுமோ அதற்குரிய வகையில் பிறப்பெடுக்க வேண்டி நாமே எமது பிறப்பை தெரிவு செய்கிறோம் என்கிறார்கள்.

    அப்படியாயின் பிறக்குமுன்னே எமது உள்ளம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்பில் நாம் செய்த கர்மவினைகளை நன்கு ஆராய்ந்து எம்மை நாமே புடம் போட்டுக் கொண்ட ஒரு தெளிவான உள்ளம் இருந்திருக்க வேண்டுமல்லவா

    அத்தகைய ஒரு ஆன்மீகத்தெளிவை இப்போது அடைந்து விட்டதாக அவ்வரிகள் சொல்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாமா ?

    அடுத்துப் பாருங்களேன் ” இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா ” இறந்த பின்னால் வரும் அமைதியா ? அது எப்படி இருக்கும் ?

    செட்டியாரல்லவா? பட்டினத்துச் செட்டி சொன்ன ” செத்தாரைப் போல திரி ” எனும் வாசகமும் , நபிகள் நாயகத்தின் ” இறப்பதற்கு முன்னால் இறந்து விடு ” எனும் வாசகமும் கவியரசருக்கு ஞாபகம் வந்திருக்கும்.

    அறிவியல் ஆன்மீகவியலாளர் என்ன சொல்கிறார்கள் ? எம்மைச்சுற்றி நடப்பவற்றினுள் எம்மை மூழ்க விடாமல் அனைத்தையும் ஒரு சாட்சிக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்கிறார்கள் .

    அதற்குச் சுலமான வழி என்ன ” இறந்த பின் வரும் அமைதியை மனம் இப்போதே அடைந்து விடுவது தானே ” .

    அன்பு வாசக உள்ளங்களே ! இந்த அற்புத வரிகளை யாத்த கவியரசர் ஒரு அறிவியல் ஆன்மீகவாதி என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியுமா ?

    இந்தப் பாமரனின் கோணப்பார்வையை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    மீண்டும் வருவேன்

    Share
  • அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . (2)

    அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . (2)

    சக்தி சக்திதாசன்

    வாழ்வின் தேடல்கள் பலவகைப்படும். அத்தேடல்களின் வழி நாம் எமது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கிறோம். சிலருக்கு அத்தேடல்களின் வழியான வாழ்க்கை வெற்றியாக அமைகிறது சிலருக்கு அதுவே வேதனைகளின் காரணமாகிறது.

    ஆன்மீகம் என்பது மதங்களைக் கடந்த ஒரு மார்க்கம் என்பதைப் புரிந்து கொள்வதர்கு முன்னால் வாழ்வில் பல மைல்களைக் கடந்து போய்விடுறோம். சிலருக்கு அது புரியப்படாமலே போய்விடுகிறது.

    இது எல்லாவற்றையும் கடந்தவர் நமது கவியரசர் என்றால் மிகையாகாது. ஆன்மீகத்தை அதன் உண்மை வடிவிலேயே கண்டு கொண்டவர் என்பதுவே உண்மையாகிறது.

    உள்ளத்தின் உணர்வுகளைப் பேசினார். அதை சத்தியத்தின் வாக்காகவே கூறினார். வாழ்வின் யதார்த்தங்களுக்கு மதம் எனும் சாயத்தைப் பூசிப்பார்க்க முனைந்து அதன் மூலம் மதங்களைக் கடந்த ஆன்மீகத்தின் வாசற் கதவைத் தட்டிப்பார்த்தார்.

    அவரது பாடல்களில் சோகம் இருக்கும், காதல் இருக்கும், ஆனந்தம் இருக்கும், பரவசம் இருக்கும், பக்தி இருக்கும் ஆனால் அனைத்தினுள்ளும் கொஞ்சம் மூழ்கிப் பார்த்தால் ஏதோ ஒரு ஓரத்தில் ஆன்மீகம் கலந்திருக்கும்.

    அவரது ஆன்மீக எழுத்துகளில் இழைந்தோடும் எளிமை மனித வாழ்க்கையின் அடிப்படையை எம்மோடு பேசும்.

    அவசரமான வாழ்க்கை வாழ்கிறோம். அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் ஒரு அவசர கதியிலேயே நடக்கிறது. எதையும் நிதானமாக, ஆழமாக சுவைத்துப் பார்த்து ரசிக்க முடியாதவாறு வாழ்க்கையின் வேகம் எம்மை இழுத்துச் செல்கிறது.

    இந்த நிலையில்தான் இன்றைய வாழ்வில் ஒரு சமநிலையைப் பேணுவதற்காக எமது தாயக நாடுகளில் மட்டுமல்லாது மேலை நாடுகளிலும் யோகா, தியானம் போன்ற ஆன்மீக வழிகாட்டுதல்கள் பிரசித்தி பெற்று வருகின்றன.

    அறுபதின் நடுப்பகுதிகளைக் கடந்த ஒரு நிலையில் தான் தியானம் எனும் ஒரு வழியின் மூலம் ஆன்மீகத்தின் உண்மைநிலையை அறியக்கூடிய சூழல் எனக்கு உருவாகியது.

    அத்தகைய ஒரு சூழலில் அத்தியான அனுபவத்தினுள் நுழைந்த எனக்கு எனது எழுத்துகளின் மானசீகக் குருவான கவியரசர் கண்ணதாசனின் பாடலின் வரிகள் ஏதோ எனக்காகவே ஒலிப்பது போன்று தென்பட்டது. அவரது ஆன்மீக அறிவியலுடன் கூடிய வரிகளைக் கொண்௶ட பாடலது.

    அது எந்தப் பாடல் என்று கேட்கிறீர்களா?

    அன்னை வேளாங்கண்ணி எனும் திரைப்படத்தில் நவரசத் திலகம் முத்துராமன் அவர்களுக்காக காந்தர்வக் குரலோன் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலித்த பாடல் அது.

    ஆனந்தமானது , அற்புதமானது – நான் அந்த மருந்தைக் கண்டு கொண்டேன் – அந்த

    ஞாலத்திலே என்னை அறிந்து கொண்டேன்

    நிதானத்திலே உண்மை புரிந்து கொண்டேன்

    ஆகா ! என்னே அருமையான வரிகள் ஒரு மதங்கடந்த ஆன்மீக கோணத்திலே பார்த்தால் எமது உள்ளத்துக்கு எது தேவையோ , ஒரு அமைதியான வாழ்க்கைக்கு எது தேவையோ , எமது தேடல்கலின் விடையாக எது தேவையோ அதைக் கன்டு கொள்ளும் வழிக்கு சைகை காட்டுவது போல கவியரசர் எமக்கு அற்புத வரிகளைத் தந்திருக்கிறார்.

    தியானம் எனும் ஒரு சாதனத்தை மதங்கடந்த ஆன்மீகத்தை நான் முதற்தடவையாக உளச்சுத்தியோடு கையாண்டபோது அதன் பயனாக என் மனம் கண்ட உணர்வுகளை அப்படியே வரிகளாக்கித் தந்தது போன்ற ஒரு எண்ணமே என்னுள்ளத்தில் இவ்வரிகள் ஏற்படுத்திய தாக்கம்.

    இத்தனை சிறிய விதையிலிருந்து
    எத்தனை பெரிய மரம் வந்தது
    அத்தனை மரமும் இத்தனை காலமும்
    அதற்குள் எப்படி குடி கொண்டது

    மிகவும் எளிமையான கேள்விகள் . இயற்கையின் அதிசயம் . வாழ்வில் ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ பெரிய மரங்களைக் கடந்து செல்கிறோம். அம்மரத்தின் கனி பழுத்து விதையாகி அதன்கீழ் விழுந்து பரவிக் கிடப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் எத்தனை பேரின் உள்ளத்தில் இத்தகைய கேள்விகளை இயற்கையை நோக்கி வீசக்கூடியதாக இருந்தது . நிச்சயமாக எனக்கு இருக்கவில்லை . இக்கேள்விகளில் ஏதாவது மதச்சாயம் தென்படுகிறதா ?

    இதுதான் எமது கவியரசரின் அறிவியல் ஆன்மீகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை .

    பத்தாம் மாதம் பிறப்பது என்பதை
    பரம்பொருள் யாருக்கும் எழுதி வைத்தான்
    இத்தனைநாளில் இறப்பது என்பதை
    இரகசியமாக ஏன் வைத்தான் ?

    நாமனைவரும் எமது அன்னை வயிற்றிலிருந்து பத்து மாதங்களில் இவ்வுலகில் தவழுவோம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆனால் எப்போ எமது ஆன்மா எமது உடல் எனும் சட்டையை அகற்றி விட்டு வெளியேறப் போகிறது என்பது மட்டும் எவருக்குமே தெரியாத ஒரு விடயமாக இருக்கிறது. இதுகூட மதங்களைக் கடந்த ஒரு உண்மைதானே ! இதை எத்தனை அழகாக , எளிமை பூத்த வரிகளினூடாக கவியரசர் யாத்துத் தந்திருக்கிறார் .

    உடலெனும் கூடு வீழ்வதன் முன்னே
    அவனுடன் கூடுதல் ஆனந்தம்
    உயிரெனும் காற்று ஓடிடும் முன்னே
    தத்துவக் காற்றே பேரின்பம்

    ஆகா ! தத்துவங்களை இத்தனை எளிமையாக பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வல்லமை படைத்தவர் என் எழுத்துக்களின் மானசீகக்குரு கவியரசர் என்பதற்கு மேற்கண்ட வரிகளை விட வேறேதும் சான்றுகள் ௹தேவையோ ?

    உயிரெனும் காற்று எமது இறுதிச் சுவாசத்தின் வழி ஆன்மாவுக்கு வெளியேறும் வாசலைக் காட்டுகிறது. அவ்வான்மா அகன்றதும் உடலென்ன வெறும் கூடுதானே !

    இங்கென்ன கவியரசர் கூற வருகிறார் ?

    அந்நிகழ்வு நடப்பதன் முன்னரே ” அவனுடன் கூடுதல் ஆனந்தம் ” என்கிறார். இங்கேதான் கேள்வி எழுகிறது யார் அந்த ” அவன் ” ?

    சிவனா ? அல்லாவா ? இயேசுவா ? அனைவர்க்கும் பொதுவான ஆன்மாவே அந்த அவன் என்கிறார் எனலாம் அல்லவா ?

    அப்படியானால் அந்த அவனுடன் ஆன்மாவுடன் உயிர் பிரிவதன் முன்னால் கூடுவது எப்படி ?

    ஆம் ஆன்மாவுடன் பேசும் மொழி, ஆன்மாவுடன் இணையும் வழி தியானம் ஒன்றே அதற்கு மதமில்லை, மொழியில்லை, இனமில்லை. அனைவருக்கும் பொதுவானது. அனைவராலும் கைக்கொள்ளப்படக்கூடியது. இப்போது மீண்டும் ஒருமுறை கூறிப்பாருங்கள்,

    ஆனந்தமானது , அற்புதமானது நானந்த மருந்தைக் கண்டு கொண்டேன்.

    எத்தனை அழகாக ஆன்மீக அறியலுடன் எம்மை இணைத்திடும் வரிகளவை.

    நம்பிக்கையுடனே இறைவனைத் தேடு
    நாளைய பொழுதே அவன் வருவான்
    நன்மை, தீமையில் அவனை நாடு
    நன்மை மட்டும் அவன் தருவான்

    ஆமாம் நாம் எதைச் செய்தாலும் அதை நம்பிக்கையுடன் தான் செய்ய வேன்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்தச் செயலும் வெற்றியளிக்காது. இது யாவரும் அறிந்த சத்திய வார்த்தைகள்.

    இறைவன் எமக்குள்ளேதான் இருக்கிறான். அப்படியானல் எங்கே அவனைத் தேடு என்கிறார் எமது கவியரசர்?

    ஓ ! எமக்குள்ளே தேடச் செல்கிறாரோ இக்கவிச்சக்கரவர்த்தி?

    உன்னையறிந்தால் , நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றுன் சொன்ன வித்தகரல்லவா இவர்.

    எமக்குள்ளே தேடும்போது அங்கே நாம் யாரைக் காண்கிறோம் எம்மது ஆன்மாவின் மூலத்தை அறிகிறோம். அப்போது அங்கே உறைந்திருக்கும் இறைவனை அடையாளம் காண்கிறோம். அதற்கான பாதைதானே தியானம்?

    எமக்குள்ளே உறைந்திருக்கும் அவ்விறைவன் மதச்சாயம் கொண்டவரா? மதங்களைக் கடந்தவராயிற்றே, அனைவர்க்கும் பொதுவான இறையல்லவா அவன்?

    அழிந்து போகும் உடலல்ல நாம், சிதைந்து போகும் மனமுமல்ல நாம். நிலையான ஆன்மாவே நாம். அந்த ஆன்ம நிலையில் நாமனைவரும் ஒன்றே ! ஒரு பரமத்தின் துகள்களே!

    இங்கேதான் எமது கவியரசரின் அறிவியலுடன் கூடிய ஆன்மீகம் துலங்குகிறது. அவருடைய ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் அவர் புதைத்து வைத்திருக்கும் ஆன்மீக அதிசயங்கள் அளப்பரியன .

    இது என்னுடைய பார்வையின் கோணமே! இதே வரிகள் வேறோருவர் பார்வையில் வித்தியாசமான ஆன்மீக விளக்க்லங்களை அளிக்கலாம். இதுதான் கவியரசர் படைப்புகளின் மகுடமாகிறது. அதனால்தான் அவரது பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    என் அன்பு உள்ளங்களே! நான் ஒரு ஆன்மீக அறிஞல்லன். ஒரு சாதாரண பாமரனே! ஆன்மிக அறிவியல் எனும் ஆழியின் கரையோரத்தில் கால்களை நனைக்கும் ஒரு வழிப்போக்கனே நான். எனது எழுத்துக்களின் மானசீகக்குருவான கவியரசரின் படைப்புகளில் ஒளிந்திருக்கும் ஆன்மீக அறிவியலை சுவைக்கும் நோக்கத்தில் என்னோடு உங்களையும் இணைத்துக் கொள்கிறேன்.

    இப்போது மீண்டும் அந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்களேன்.

    மீண்டும் வருவேன்

    Share
  • ஓர் இளவரசர் இராஜாவாகிறார்

    ஓர் இளவரசர் இராஜாவாகிறார்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    2023 மே மாதம் 6ஆம் தேதி பிரித்தானிய நாட்டின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். எமது வாழ்வில் கூட இது ஒரு முக்கியமான நாளாகிறது.

    ஏன் என்கிறீர்களா ?

    இன்றுதான் நாமனைவரும் ஒரு முடிசூட்டு விழாவினை நேரடியாகப் பார்க்கும், பங்குபற்றும் சந்தர்ப்பம் பெற்றவர்களானோம்.

    இன்று ஓர் இளவரசர் இராஜாவாக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டுள்ளார் . அதுவும் சமீபகால சரித்திரத்திலேயே வயதில் முதிர்ந்த இளவரசர் எனப் பெயர் பெற்ற இளவரசர் சார்ள்ஸ் இன்று தனது 74ஆவது வயதில் மூன்றாவது சார்ள்ஸ் மன்னராக முடிசூட்டப்பட்டுள்ளார் .

    பிரித்தானியா நாட்டின் அரச கட்டிலில் அமர்ந்தவர்களில் அதிக காலம் கோலோச்சியவர் எனும் சரித்திரத்தை ஏற்படுத்தியவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஆவார்.

    70 ஆண்டுக்காலம் ஆட்சி அரியணையில் அமர்ந்திருந்து விட்டு தனது 96ஆவது வயதில் மரணமடையும் வரை அரசியாக இருந்தவர்.

    இன்று முடிசூட்டப்பட்ட சார்ள்ஸ், தனது நான்காவது வயதில் இருந்து பட்டத்துக்குரிய இளவரசராக தனது அன்னையின் நிழலில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    70 வருடகால இளவரசர் அனுபவத்தைப் பெற்ற சார்ள்ஸ், வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்நோக்காமலில்லை.

    இளவயதில் ஒரு பெண்ணைக் காதலித்திருந்தாலும் தனது பெற்றோரின் விருப்பத்தின்படி இங்கிலாந்து இராஜ பரம்பரை வழக்கத்திற்கு உட்பட்டு டயானா அவர்களைத் திருமணம் செய்து வில்லியம், ஹரி எனும் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.

    இளவரசர் சார்ள்ஸ் அவர்களுக்கும், இளவரசி டயானா அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகளினால் பல சர்ச்சைகளுக்கு  உட்படுத்தப்பட்ட அவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் தனது முன்னைய காதலியுடனும், இளவரசி டயானா டோடி எனும் இஸ்லாமியருடனும் தமது காதல் வாழ்க்கையை நடத்தினர்.

    பாரிஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளவரசி டயானா. தனது காதலன் டோடியுடன் மரணத்தைத் தழுவினார்.

    ஏழு வருடங்களின் பின்னால் இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலா பார்க்கர் போல்ஸ் என்பவரை மணமுடித்தார்.

    விவாகரத்து , மறுமணம் என்பது இராஜ பரம்பரையில் சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்பட்டதாலும், இங்கிலாந்தில் அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அது தவறென்று கருதப்பட்டதாலும் இளவரசர் சார்ள்ஸ் மன்னராவது சந்தேகத்துக்கு இடமாயிருந்தபோதும் அதனை ஏற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் இரண்டாவது புதல்வர் ஹரி, கறுப்பினக் கலப்புடைய  அமெரிக்க நடிகை ஒருவரை மணமுடித்தார்.

    ஹரி அவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் குடும்பத்தில் ஹரி தம்பதியுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது .

    இளவரசர் ஹரி இராஜ வம்சத்தினால் தனக்குக் கிடைத்த பட்டங்கள் மற்றும் சலுகைகளைத் துறந்து அமெரிக்கா சென்று சாதாரண வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்து இராஜ குடும்பத்தினின்றும் தன்னை விலக்கிக் கொண்டார்.

    அமெரிக்கா சென்ற ஹரி தம்பதியினர் அங்கு பிரபலமான ஓப்ரா வின்வரி எனும் தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு இங்கிலாந்து இராஜ பரம்பரைக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய நேர்காணலை வழங்கினர்.

    இத்தனை பிரச்சனைகளையும் எதிர்கொண்டபடியே தனது பட்டத்துக்குரிய இளவரசரின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினார் இளவரசர் சார்ள்ஸ்.

    தந்தை எடின்பரோ கோமானைத் தொடர்ந்து இரண்டாவது எலிசபெத் மகராணியாரும் உயிர் நீத்தனர்.

    கடந்த வருடம் தனது அன்னையின் மறைவினையடுத்து பிரித்தானிய நாட்டு இராஜாவாகப் பொறுப்பேற்ற இளவரசர் சார்ள்ஸ் இன்று அதாவது 2023 மே மாதம் 6ஆம் தேதி அதிகாரபூர்வமாக முடிசூட்டிக் கொண்டார்.

    தனது கலாச்சார விழுமியங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் இங்கிலாந்துக்கு நிகர் இங்கிலாந்து என்றே சொல்ல வேண்டும்.

    1953ஆம் ஆண்டு இரன்டாவது எலிசபெத் மகாராணியார் முடிசூட்டும் வைபவத்தின் போது நான் இவ்வுலகத்தில் பிறக்கவில்லை. ஆனால் அது எத்தகைய கலாச்சாரப் பின்னணியில் நடைபெற்றது என்பதைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததுண்டு.

    இன்று மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் முடிசூட்டு வைபவத்தைத் தொலைக்காட்சி நேரலை மூலமாகக் கண்டு களிக்கக்கூடிய வசதியுடையவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் .

    மன்னர் சார்ள்ஸ் அவர்களையும் அவரின் இராணியார் கமீலா அவர்களையும் நேரடியாகக் காண்பதற்காக அவர்கள் எவ்வழியாக அவர்களது இல்லத்திலிருந்து வைபவம் நடக்கும் தேவாலயத்துக்கு ஊர்வலமாகச் செல்வார்களோ அவ்வழிதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வந்து கூடாரமடித்துத் தங்கியது இந்நாட்டு மக்கள் தமது கலாச்சார விழுமியங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினைப் புலப்படுத்துகின்றது..

    தரைப் படை, ஆகாயப் படை, கப்பற்படை என முப்படைகளைச் சேர்ந்த படை வீரர்களின் அணிவகுப்போடு பொதுநலவாய நாடுகளின் படைத்தளபதிகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து முடிசூட்டப்படப்போகும் இளவரசர் சார்ள்ஸ் அவரது துணைவியார் இருவரும் அழகிய வேலைப்பாடமைந்த குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

    வைபவம் நடக்கவிருந்த வெஸ்ட் மினிஸ்டர் அபே சார்ச் மண்டபத்தில் அழைக்கப்பட்டிருந்த பொது மக்கள் , சர்வதேச நாட்டுத் தலைவர்கள் , அனைத்து மதத் தலைவர்கள் , முன்னைநாள் பிரதமர்கள் , முக்கியமான பிரஜைகள் எனப் பலரும் திரண்டு மன்னருக்காகக் காத்திருந்தனர்.

    உறவினர்கள் புடைசூழ மன்னரும், அவரது துணைவியாரும் மண்டபத்தில் அவர்களுக்கான ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

    இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் முடிசூட்டப்படும்போது அமர்ந்திருந்த அரியணை, காலம் காலமாக இங்கிலாந்து அரசர்கள் உபயோகித்த அரியணை என்பது குறிப்பிடத்தக்கது ,

    இதே தேவாலயத்தில் தான் முதன் முதலில் 1066ஆம் ஆண்டு முடிசூட்ட[ப்பட்ட மன்னரான வில்லியம் த கொன்கரர் தொடங்கி இன்றுவரை அனைத்து முடிசூட்டு விழாக்களும் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் இழைக்கப்பட்ட சிம்மாசனம். மிகவும் பிரபலமான தேவாலயப் பாடல்கள் புகழ் பெற்ற இசை வல்லுனர்களின் வழிகாட்டுதலில் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய குழுவினர்களினால் இசைக்கப்பட்டது .

    இவ்விழாவிற்கு அமெரிக்காவில் இருந்து மன்னரின் இளைய மைந்தன் ஹரி கலந்து கொண்டிருந்தாலும் அவரது மனைவி மெகனும் குழந்தைகளும் கலந்து கொள்ளவில்லை.

    ஆர்ச்பிஷப் ஆப் கண்டபெரி புரொட்டஸ்டண்ட் ஆங்கில சார்ச் இன் தலைமைக் குருவின் முன்னால் முடிசூட்டப்படும் மன்னர்களுக்கு உரித்தான பாரம்பரிய உறுதிமொழிகளை எடுத்த மன்னர் சார்ள்ஸ்க்கு முடுசூட்டப்பட்டு, ராணியார் கமீலாவுக்கும் அவருக்குரிய முடி சூட்டப்பட்டது..

    முடியேற்றப்படும் முன்னால் மன்னரைச் சுற்றி ஒரு திரையிடப்பட்டது. மன்னர் மதச் சம்பிரதாயத்தின்படி இறைவனின் பிரதிநிதியாகத்தான் அங்கு முடிசூட்டப்படுகிறார் என்பதை அறிவிப்பதற்காக தலைமை மதகுருவினால் அவரது தலையில் பரிசுத்த எண்ணெய் வைக்கப்பட்டது, இதன்போது மன்னர் தனது ஆடம்பர அங்கிகளைக் களைந்து வெறும் துணி மட்டுமே அணிந்திருந்தார். இதனைப் பார்வையாளர்கள் காணக்கூடாது என்பதற்காகவே திரைக்குப் பின்னால் நிகழ்ந்தது.

    அவரின் உறுதிமொழிகளின் போது ஒரு சிறுவன் மன்னரை நோக்கி ” நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் ” என்று கேட்டதும் “நீங்கள் எனக்குச் சேவை செய்வதற்காக இங்கு வரவில்லை உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார். இதுவும் ஒரு சம்பிரதாய வழக்கமே

    தங்கம், வைரம், வைடூரியம் இழைக்கப்பட்ட முடியைத் தலையில் தாங்கி மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    கிறிஸ்தவ வழிமுறைகளின் படி இவ்வைபவம் நடைபெற்றாலும் முடிசூட்டப்பட்ட மன்னர் அனைத்து மதத் தலைவர்கள் முன்னின்று அவர்களின் மதவழிகளில் ஆசிகளைப் பெற்றது பிரித்தானிய சரித்திரத்தில் முதன்முறையாக இடம்பெற்றது.

    குறிப்பாக, தற்போதைய இங்கிலாந்துப் பிரதமரான ரிஷி சுனாக் இந்து மதத்தைச் சேர்ந்தவராவார். இவர் இவ்வைபவத்தின் போது கிறிகிறிஸ்தவ மதநூலான பைபிளில் இருந்து ஒரு பகுதியைப் படித்தது புதிய மன்னரின் போக்கின் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததைப் பலரும் அவதானித்ததைக் கண்டுகொள்ள முடிந்தது.

    மன்னருக்கு முடிசூட்டப்பட்டதை அடுத்து நாட்டுப் பிரஜைகள் தமக்குப் பிடித்திருந்தால் புது மன்னருக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இது கட்டாயமாக்கப்படவில்லை .

    முடிசூட்டப்பட்டதை அடுத்து மன்னரும் , ராணியாரும் தங்க ரதத்தில் வைத்து ஊர்வலமாக அவரகளது உத்தியோக வாசஸ்தலமான பக்கிங்காம் பலஸ் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் . அவர்கள் பின்னால் பட்டத்து இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேட் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் மற்றொரு ரதத்தில் பின்தொடர்ந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து இராஜ குடும்பத்தின் உத்தியோகப்பூர்வமான அங்கத்தினர்கள் தொடர்ந்தார்கள்.. குறிப்பாக மன்னரின் தங்கை இளவரசி ஆன் அவர்கள் தனது உத்தியோகப்பூர்வமான அங்கிகளுடன் குதிரையில் அவ்வூர்வலத்தில் கலந்து கொண்டது அழகாக இருந்தது.

    வழிதோறும் மழையைப் பொருட்படுத்தாது சாலையோரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று மன்னரை வாழ்த்திக் கோஷமிட்டது இந்நாட்டு மக்கள் தமது பாரம்பரியத்தை எவ்வளவு முக்கியமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டியது.

    தமது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற மன்னரும், இராணியாரும் தமது குடும்ப அங்கத்தினருடன் பால்கனிக்கு வந்து தம்மை வாழ்த்தக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கையசைத்துத் தமது நன்றியறிதலைத் தெரிவித்தார்கள்.

    மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மரியாதை செய்யும் பொருட்டு வான்படையினர் வானூர்திகளில் ஊர்வலமாகப் பறந்து ஒரு கண்காட்சியை நிகழ்த்தினர்.

    அதைத் தொடர்ந்து தமது மாளிகையின் பின் தோட்டத்தில் மன்னரும் அவர் குடும்பத்தினரும் பாதுகாப்புப் படையினருக்குத் தமது பிரத்தியேகமான நன்றிகளைத் தெரிவித்தார்கள்.

    கிறிஸ்தவ மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிறிஸ்தவரான மன்னர் தாம் கிறிஸ்தவ மதத்தின் காவலர் மட்டும் அல்ல இந்நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் அனைத்து மதங்களின் பாதுகாவலர் என்பதைப் பல இடங்களில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

    மாணவனாக இந்நாட்டினுள் 48 ஆண்டுகளின் முன்னால் கால் பதித்தேன். எனது உயர் கல்வியை முடித்து, திருமணப் பருவத்தில் புகுந்து இன்று ஒரு பேத்திக்குத் தாத்தாவாக உள்ளேன்.

    என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில் நான் சந்தித்த மாற்றங்கள் அனைத்திலும் இந்நாட்டின் சட்டதிட்டங்கள் எனக்கு அனுகூலமாக இருந்தனவே தவிர என்றுமே முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.

    ஜனநாயகம் என்பதன் உண்மை அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இந்நாட்டு வாழ்க்கை எனக்கு உதவியது, அத்தகைய நாட்டின் பாரம்பரிய தலைவராகக் கருதப்படும் மன்னரின் முடிசூட்டு விழாவின் பார்வையாளராக இருந்தது எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

    ஆமாம் எங்கோ பிறந்தேன், எங்கோ தவழ்ந்தேன், இங்கே மிதந்தேன். வந்த என்னை வாழவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பிரஜைகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    பல்லாண்டுகள் வாழ்க என்று மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    Share
  • அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும். . . . . (1)

    அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும். . . . . (1)

    சக்தி சக்திதாசன்

    ஆன்மீகம், ஆன்மீகம் என்று பேசியிருக்கிறோம், பேசக் கேட்டிருக்கிறோம்.

    அது என்ன அறிவியல் ஆன்மீகம் எனும் கேள்வி நெஞ்சில் எழுகிறது.

    எமது முன்னோர்கள் சொன்னார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு ஒரு விடயத்தை ஆன்மீகத்தின் பெயரால்.பின்பற்றுவதை விட்டு அதற்கான காரணத்தை ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்க முற்படும்போது அது எவ்வாறு இருக்கும் என்பதை எனக்கு வரையறுக்கப்பட்ட அறிவின் எல்லைக்குள் பார்ப்பதுவே நோக்கமாகிறது.

    அதுசரி இங்கே கவியரசர் கண்ணதாசன் எவ்வாறு  இணைகிறார் ?

    எனது எழுத்துகளுக்கு மானசீகக்குருவாக நான் வரித்துக் கொண்டிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.

    நாத்திகம் எனும் ஆற்றில் அடியுண்டு புரட்டி எடுக்கப்பட்டு புடம் போட்டு ஆத்திகக் கரையில் ஒரு கரைதேர்ந்த ஆன்மீகவாதியாக உருப்பெற்றவர் கவியரசர் கண்ணதாசன்.

    அவர் தனது உள்ளக் கருத்துகளை உள்ளத்தினுள் ஏற்றுவதற்காய் பல நூல்களைப் படித்தார்.

    அனுபவங்களில் அடைந்தவைகளை காலம் எனும் ஆசான்  தனக்குப் புகட்டிய பாடங்கள் என எடுத்துக் கொண்டார்.

    வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும், ஒவ்வொரு உணர்வுக்கும் அதனைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் பாடல், கவிதை வரிகளாக்கினார்.

    புராணப்படங்களில் மட்டுமல்லாது சமூகப் படங்களில் வரும் பாடல் வரிகளுக்குள் அவர் புதைத்து வைத்த ஆன்மீக விடயங்கள் பலவாகும்.

    இவற்றில் எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, நான் அறிந்த, கேட்டவைகளின் அடிப்படையில் எனது கோணைப் பார்வையைப் பதிவு செய்வதே இக்கட்டுரைகளின் நோக்கமாகிறது.

    கவியரசரின் நெஞ்சத்திலே ஓடியவைகளல்ல எனது பார்வை. அவரது வரிகளின் தாக்கம் ஒரு பாமரனின் பார்வையில் எத்தகைய ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுவே இங்கே பதியப்படுகிறது.

    ஆன்மீகம் என்பது ஆன்மாவின் ராகமாகிறது. இது மதங்களைக் கடந்தது.

    இறைவனை எமக்குள்ளே காண முற்படும்போது அங்கே அது மதம் எனும் எல்லைகளைக் கடந்து விடுகிறது.

    ஆனால் ஆன்மீகத்தை நோக்கிய எமது பயணத்திற்கு பக்தி மார்க்கம் பாதையாகிறது.

    நீச்சல் பழகும் போது மிதக்கும் கட்டைகளைக் கையில் பிடித்து நீந்தப் பழகுகிறோம்.

    நன்றாக நீச்சல் அடிக்கத் தொடங்கியதும் அம்மிதக்கும் கட்டைகளின்றி நீந்தி மகிழ்கிறோம்.

    நீச்சலில் கரை கண்டதும் ஆழத்திற்கு மூழ்கி மென்மேலும் பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிறோம்.

    அது போலத்தான் ஆன்மீகக் கடலில் நீச்சலடிக்க எமக்குப் பக்தி மார்க்கம் எனும் மிதக்கும் கட்டைகள் தேவைப்படுகின்றன.

    ஆன்மீகம் முற்றாகக் கைவந்ததும் ஆன்மாவின் ராகத்தோடு இணைந்த பரவசத்தில் மூழ்குகிறோம்.

    இக்கட்டுரைகளை ஒரு தொடராக இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிட எண்ணுகிறேன்.

    எனது ஆக்கங்களுக்கு எப்போதும் ஆதரவளித்து, ஊக்கமளிக்கும் வல்லவர்கள் பலர் நிறைந்த இந்த வல்லமை தளமே இதற்கான அடித்தளமாகிறது.

    மீண்டும் அடுத்த தொடரில்…

    Share
  • 2022 ஒரு சாமானியனின் பார்வை

    2022 ஒரு சாமானியனின் பார்வை

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    ஐயையோ! ஓடியே போயிற்றா? 2022 அதற்குள்ளாகவா? நம்பவே முடியல்லையே! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். ஆமாம் காலண்டர் தேதிகள் கிழிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியில் வந்து நிற்கிறது. ஓரிரவுக்குள் 2022 ஐக் கடந்து 2023 க்குள் கால் வைக்கப் போகிறோம்.

    சரி ஒரு வருடம் எம் வாழ்க்கையில் கடந்து போயிற்று. அதற்குள் அது தாங்கிக் கொண்டும், கடந்து சென்ற நிகழ்வுகள் தான் எத்தனை?

    இன்பம், துன்பம் எனும் இரண்டு நிகழ்வுகள் வெவ்வேறு வடிவங்களில் எம்மீது நிகழ்த்தி விட்டுச் சென்ற நிகழ்வுகளின் மீது ஒரு சாமானியனாக, பாமரனாக, ஒரு பேரக்குழந்தையின் தாத்தாவாக, தந்தையாக, மாமனாராக, தம்பியாக, அண்ணனாக, கணவனாக உள்ளத்தின் தாக்கங்கள் தந்த உணர்வுகள் மீட்டிய ராகங்கள் தான் எத்தனையெத்தனை?

    முதலில் எனது பிரத்தியேக வாழ்வின் தாக்கங்களை எடுத்துப் பார்க்கலாமே ! 2022 ம் ஆண்டின் அரம்பமே ஒரு சுழற்சியுடன் தான் ஆரபமாகியது என்று வைத்துக் கொள்ளுங்களேன். இரண்டு ஆண்டுகள் கைகளாக்கிய கொரோனா எனும் வைரஸ் சரி இனி தண்டனை போதும் என்று எண்ணி எம்மை விடுவித்தது.

    சரி இலக்கிய தாகத்தின் நிமித்தம் வருடந்தோறும் ஜனவரியில் தமிழகத்தின் தலைநகர் சென்னை நோக்கி ஓடிவரும் எனக்கு இரண்டு வருட வனவாசம் முடிந்து இனிக் கிளம்பலாம் என்று எண்ணி பயண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பிக்கும் போது விழித்துக் கொண்ட கொரோனா விட்டேனா பார் என்றது பாருங்கள்.

    ஒமிக்குரோன் எனும் ஒரு புதிய வடிவம் எடுத்து என்னைப் பார்த்துச் சிரித்தது. சரிப்பா! நானா? நீயா? எனும் போட்டி வேண்டாம் நீயே ஜெயித்ததாக வைத்துக்கொள் என்று சொல்லி சரணடைந்து பிரயாண ஏற்பாடுகளை ரத்துச் செய்து விட்டேன்.

    இப்படியான எனது 2022 ஆரம்பம் எப்படி இருக்கப் போகிறதோ ? எனும் அங்கலாய்ப்புடன் இருந்தேன். கோவிட்டுக்கான 3ம் தடுப்பூசி, நான்காம் தடுப்பூசி என்று ஏற்றிக் கொண்டே போனபோதுதான் புரிந்தது. ஓ! முதுமை எனும் வாசலுக்குள் நுழைந்து விட்டேன் எனும் உண்மை.

    ஒய்வூதியம் விருப்பத்துடன் பெற்று 7 வருடம் முடிந்த நிலையில் நானிருந்தேன்,என் மனைவி தானும் ஓய்வூதியம் விருப்பத்துடன் இரண்டு வருடத்தின் முன் எடுத்துக் கொண்டும் அதைச் சரியாக அனுபவிக்க கொரோனா விடவில்லையே!

    ஆயினும் எப்படியோ நேரம் கிடைப்பதோ அரிது எனும் வகையில் வாழ்க்கை ஓடியது. இடையிலே ஸ்பானிய நாட்டின் பாகமான காஸ்டல் டி சொல் எனும் நகரிற்கு ஒருவார விடுமுறையில் சென்றதும் அத்துடன் அக்டோபர் மாதம் கிரேக்க நாட்டுத் தீவுகளில் ஒன்றான சாக்கிந்தோஸ் அல்லது சாண்டி என்று அழைக்கப்படும் தீவுக்கு ஒரு வார விடுமுறையில் சென்றதும் கோவிட் கெடுபிடிகளில் இருந்து விடுபட்டதற்கான ஒரு அடையாளமானது.

    எழுத்து, விடுமுறை, பேத்தியுடனான இனிய பொழுதுகள் எனும் இடையறாத அக்கணப் பொழுதுகளின் சுகிப்போடு இனிமையும், திகிலும், ஆச்சரியத்தையும் தாங்கி பிரத்தியேக வாழ்வு தனது வருடப் பயணத்தை நிறைவு செய்கிறது.

    சரி இனி இங்கிலாந்தின் 2022 நிகழ்வுகளைப் பார்ப்போமா?  2022 இன் ஆரம்பம் ஒமிக்குரோன் எனும் திரிபடைந்த கொரோனா எனும் கிருமியின் திக் விஜயத்தின் திசை எத்திசையை நோக்கிப் போகப் போகிறது எனும் கேள்வியே இங்கிலாந்தின் வருடப் பயணத்தின் அனுபவங்கள் இருக்கப் போகிறது எனும் எண்ணமே பலரின் உள்ளங்களையும் ஆக்கிரமித்திருந்தது.

    ஒமிக்குரோனைப் பற்றிய பரபரப்பில் ஈடுபட்டிருந்தோருக்கு தெரிந்திருக்குமா? இங்கிலந்தின் அரசியல் பயணத்தின் ஆச்சரியங்கள்? ஆம் ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று பிரதமர்களைக் கண்டது இங்கிலாந்து. அதுமட்டுமா? இங்கிலாந்து சரித்திரத்தில் முதன்முறையாக இந்தியக் கலாசாரப் பின்னனியைக் கொண்ட ஒருவரைத் தனது பிரதமராக்கிய பெருமையை இங்கிலாந்து மக்களுக்கு 2022 கொடுத்தது .

    70 ஆண்டுகள் இங்கிலாந்தின் மகுடத்தைச் சூடிச் சரித்திரம் படைத்த, ஒரே வருடத்தில் மூன்று பிரதமர்களை நியமித்த பெருமையைத் தனதாக்கிய இரண்டாவது எலிசபெத் மகாராணியின் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ப்ந்ருமைதையும் கொண்டது 2022. எமது வாழ்நாளிலேயே ஒரு மகாராணியாரின் பிரஜையாக இருந்தது மட்டுமில்லாமல் மகாராஜாவின் பிரஜையாகவும் எம்மை ஆக்கிய பெருமையும் 2022 க்கே உண்டு.

    30 வருடங்களின் பின் வாழ்க்கை செலவாதாரம் மிகவும் அதிகரித்த நிலையைத் தீவிரமாக்கியது 2022. தமது சம்பள உயர்வுக்காக வேலைநிறுத்தம் எனும் போராட்டத்தில் பல ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட நிலையைத் தோற்றுவித்ததும் 2022 எனலாம்.

    எரிவாயு, பெட்ரோல், மின்சாரம் ஆகியற்றின் விலை மக்களால் சமாளிக்க முடியாத ஒரு கட்டத்திற்கு உயர்ந்ததும் இந்த 2022 யே ஆகும்.

    இப்படியாக இங்கிலாந்தில் தாக்கங்களை ஏற்படுத்திய 2022 சர்வதேசரீதியை மட்டும் விட்டுவிட்டதா என்ன?

    மிக முக்கியமாக சுமார் ஒரு வருடத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட ரஸ்ய – யூக்கிரென் போரின் தாக்கம் அனைத்துலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டது என்றே சொல்ல வேண்டும். மேற்குலக நாடுகள் எரிபொருள்களின் விலையுயர்வு எனும் பிரச்சனைக்குள் மாட்டித் தத்தளிக்கையில் இந்தியா பொருளாதாரத்தில் தன்னை ஸ்திரமாக்கி உலக அளவில் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்டக்கூடிய நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டே செல்கிறது. அதேநேரம் சிறீலங்காவோ பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு மற்றைய  நாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டது.

    சீனாவுக்குள் கொரோனா வைரஸ் எடுக்கும் மாற்றத்தினை அறியாமல் உலக சுகாதார நிறுவனத்தின் தடுமாற்றம். அரபு நாடுகளின் நிலையற்ற தன்மை, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆதிக்கம், வட கொரியாவின் அணுவாயுத மிரட்டல்கள், ரஸ்ய ஆயுத ஆக்கிரமிப்பின் எல்லைகள் என சர்வதேசத்தைப் பலமுனைகளில் மிரட்டும் சூழல்களுடன் 2022 ஒரு போர்வைக்குள் தன்னை இழுத்து மூடிக் கொள்கிறது.

    அனைத்துக்கும் மேலாக காலநிலை, சுற்றுச்சூழல் மாசளவின் தாக்கத்தின் விளைவை நோக்கிய மாற்றங்களின் ஆழத்தை விளக்கும் வகையில் அமெரிக்க நாட்டினை பனிப்பொழிவினுள் மூடி எமக்கெல்லாம் பாரிய சிந்தைகளைத் தூவிவிட்டு மறைந்து போகிறது 2022.

    இந்தச் சாமானிய பாமரனின் 2022 ஐ நோக்கிய பின்னூட்டப் பார்வையை எதிர்மறையாக நோக்காமல் அதனுள் புதைந்துள்ள நேர்மறை கருத்துகளை உள்வாங்கிக் கொள்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் விரியும்  2023 இனுள் உங்களுடன் இணைந்து நானும் நுழைகிறேன். வாருங்கள் நல்லதையே தியானிப்போம்.

    அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்

    Share
  • விடியலா? விரிசலா?

    விடியலா? விரிசலா?

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ரிஷி சுனாக் எனும் பெயர் இன்று உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர்.

    இந்திய மரபுவழி. வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட பிரித்தானிய நாட்டிற்கு பிரதமராக முடியுமா? என்று எண்ணிய பலருள் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.

    அந்தக்கேள்விக்குப் பதிலாக அமைந்திருக்கிறது ரிஷி சுனாக் அவர்களின் தெரிவு.

    42 வயதே நிரம்பியவர் ரிஷி சுனாக். 47 வருடங்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து வருபவன் நான். மாணவன் எனும் நிலையிலிருந்து இன்று ஒரு பேரக்குழந்தையின் தாத்தா எனும் நிலையை எட்டியிருக்கின்றேன்.

    என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நிலை மாற்றத்திலும் பல அனுபவங்களுக்கூடாக பயணித்திருக்கிறேன். அப்வனுபங்களில்.இனத்துவேஷமும் அடங்கும் என்பது.உண்மை. ஆனால் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட முன்னேற்றத்துக்கும் இனத்துவேஷம் என்பது முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்பதும் உண்மை.

    பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையோர் நான் முன்னேறுவதற்கு உந்துதலாக இருந்தார்களேயன்றி இடையூறாக இருக்கவில்லை.

    அதே மனப்பான்மைதான் இன்றைய ரிஷி சுனாக் அவர்லளையும் பிரதமர் பதவியில் அமர்த்தி பார்த்திருக்கிறது என்பதே உண்மை.

    ரிஷி சுனாக் அவர்களின் அரசியல் கட்சியின் அரசியலோடு நாம் உடன்படுகிறோமோ இல்லையோ பேதங்களைக் கடந்து அவ்வரசியல் கட்சி அவருக்களித்த ஆதரவினைக் கண்டு புலபெயர்ந்த நாம் புளாங்கிதமடைய வேண்டும்.

    இதுவரை நான் கண்ட பல புலம்பெயர் சமூக மக்கள் பல வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்து பிரித்தானியப் பிரஜாவுரிமையைப் பெற்றிருந்தும் பிரித்தானிய நாட்டு வாழ்க்கையை ஒரு வாடகை வீட்டில் வாழ்வது போன்ற மனப்பான்மையுடன் அணுவது போலவே தென்படுகிறது.

    அது என்ன வாடகை வீட்டு மனப்பான்மை? ஒரு சொந்த வீட்டில் குடியிருப்பவரையும், வாடகை வீட்டில் குடியிருப்பவரையும் எடுத்துக் கொண்டால் இருவரில் யார் தாம் வாழும் வீட்டின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்?

    அதற்கு தம்மை நியாயப்படுத்தும் காரணமாக தாம் அந்நிய நட்டவர் எனும் வகையில் நடத்தப்படுவதாகக் கூறிக் கொள்வார்கள்.

    அத்தகையோரின் வாதங்களைத் தவிடு பொடியாக்கும் வகையில் இன்று நாம் வாழும்  ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக ஒரு புலம்பெயர் சந்ததியைச் சார்ந்தவர் வந்திருப்பது அமைந்திருக்கிறது இல்லையா?

    புலம்பெயர்ந்து வந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழ்வை அமைத்துக் கொண்ட பலருக்கும் தாம் வாழ்க்கையில் எடுத்த இலட்சியத்தை முனைப்புடன் உழைத்தால் அடையலாம் எனும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது .

    ஆனால் புலம்பெயர் சமூகத்தினர் தம்மை தாம் வாழும் நாட்டின் அரசியலமைப்பில் இணைக்காமல் தமது சமூகங்களுக்குள் முடங்கிக் கொண்டால் தம்மையும், தமது சமூகத்தின் தேவைகளையும் முன்னிலைப் படுத்த முடியாது.

    ரிஷி சுனாக் என்பவர் ஐக்கிய இராச்சியத்தின் அரசில் அமரக்கூடிய அரசியல் கட்சியில் இணைந்து தாம் வாழும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைப்பதன் மூலம் தாம் சார்ந்த சமூகத்தையும், புலம்பெயர்ந்து வாழ்வோரின் தலைமுறையினரின் திறமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதுவே உண்மை.

    இன்றைய இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல் உலக அளவில் ஒரு பேசுபொருளாக இருக்கிறது. இதற்கு உலகரீதியிலான பின்னனிக் காரணங்கள் இருப்பினும் கடந்த பன்னிரெண்டு வருடங்லளாக அரசக் கட்டிலில் அமர்ந்திருக்கும் ரிஷி சுனாக் அவர்களின் கன்சர்வேடிவ் கட்சியும் காரணம் என்பது மறுக்கப்பட முடியாதது.

    குறிப்பாக பொரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக பிரதமராகிய லிஸ் ட்ரஸ் அம்மையாரும் , அவர் பதவியிலமர்த்திய அவரது முதலாவது நிதியமைச்சரும் அவசரமாகக் கொண்டு வந்த அதிரடிப் பொருளாதாரத் திட்டங்கள் இங்லிலாந்துப் பொருளாதாரச் சந்தையைப் படுகுழியில் தள்ளியது.

    தொடர்ந்து வெறும் 49 நாட்களே பதவி வகித்த லிஸ் ட்ரஸ் பதவி விலக நமது ரிஷி சுனாக் பிரதமரானார்.

    புதிய பிரதமர் ரிஷி சுனாக் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பூதாகரமானவை.

    பிரித்தானியப் பொருளாதாரச் சந்தை அரசின் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

    ஒற்றுமை இழந்து பல திக்குகளில் இழுபடும் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் தான் செல்லும் திசை நோக்கி நகர்த்த வேண்டும்.

    வாழ்வாதாரச் செலவினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் சராசரி பிரித்தானியப் பிரஜையின் வாழ்வினைச் சீராக்கும் கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

    இவையனைத்தையும் விட ஒரு ஆசியர் எமது நாட்டின் பிரதமரா? என்று வெகுண்டெழும் ஒரு சாரார் பெரும்பான்மை மக்களின் தொடர் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும்.

    இத்தனைக்கும் மேலாக ரிஷி சுனாக் ஒரு அதீத செல்வந்தர் என்றும் அவருக்கெப்படி அல்லலுறும் மக்களின் இன்னல்களைப் புரிந்து கொள்ள முடியும் எனும் தாக்குதல் வேறு.

    ரிஷி சுனாக் பிரதமாரானதும் ஆசியருக்கு பல அனுகூலங்கள் கிடைக்கும் என்று கருதுவது முட்டாள்தனமானது. அவர் தனது பதவியை தம்மைச் சார்ந்தவர்களுக்காக துஷ்பிரயோகம் செய்வார் என்று எதிர்பார்த்து அவரை வீழ்த்துவதற்கு பல இனத்துவேஷிகள் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    ஓபாமா அவர்கள் அமேரிக்காவின் ஐனாதிபதியானதும் அவரது பதவிக்கால முடிவில் அவர் தான் சார்ந்த கறுப்பின சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்? எனும் விமர்சனத்தை மும் வைத்தனர்.

    அத்தகைய எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை . ஒரு நாட்டின் ஐனாதிபதியாகவோ அன்றி பிரதமராகவோ பதவியேற்பவர் தான் சார்ந்த சமூகத்திற்காக மட்ட செயற்பட முடியாது அந்நாட்டின் சகல மக்களிந் பொது நன்மைக்காகவே செயற்பட முடியும்.

    ரிஷி சுனாக்கின் வெற்றி எம் அனைவரதும் வெற்றியாகும். ஏனெனில் அவரது வெற்றியே நாம் வாழும் நாட்டினை கட்டியெழுப்பி எம் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும்.

    ஐக்கிய இராச்சியத்தின் இனத்துவேஷிகளுக்கு ரிஷி சுனாக் பிரதமரானது மிகுந்த புகைச்சலை உண்டாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. எங்கே இவரை வீழ்த்தலாம் என்பதில் மிகுந்த சிரத்தையோடு செயற்படுவார்கள் என்பதும் உண்மை.

    மனித உணர்வுகளின் ஒரு வடிவம் தான் இனத்துவேஷம். ஒரே நிறத்தையுடையவர்களாக இருந்தும் நாடு, மதம் எனும் வேறுபாடு எமக்குள்ளேயோ பேதங்களைத் தருவதில்லையா?

    ரிஷி சுனாக் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானது இங்கிலாந்துக்கு விடியலை ஏற்படுத்துமா?

    இல்லை,

    ஐக்கிய இராச்சியத்தின் பெரும்பான்மை இனத்தவர்க்கும், சிறுபான்மையினருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துமா?

    Share
  • மரணித்தும் மறையாத மகாராணி

    மரணித்தும் மறையாத மகாராணி

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

    நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம், ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை.

    இவர் யார் ? இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன ? இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ?

    இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    இருபத்தைந்து வயது நிரம்பிய இளவரசியாக இளம் தாயாராக கணவனுடன் கெனியா நாட்டுக்கு விஜயம் செய்த இரண்டாவது எலிசபெத் அம்மையார் இங்கிலாந்துக்கு மகாராணியாக திரும்பிய போது அந்த இௐளம் தாயாரின் முன்னால் இருந்த பாரிய கடமையை ஏற்று எத்தகைய வகையில் செயலாற்றி முடித்தார் என்பதற்குச் சரித்திரம் சான்றாக அமைகிறது.

    அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களது மூத்த புத்திரியாக லண்டன் Mayfair எனும் இடத்தில் 1926ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ம் தேதி பிறந்தார் . இளவரசர் பிலிப் என்பவரை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி மணந்தார். இன்றைய அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்களோடு சேர்த்து நான்கு குழந்தைகளின் தாயாராவார்.

    73 ஆண்டுகள் எதுவித குழப்பங்களுமற்ற மணவாழ்க்கையில் இணைந்திருந்த மகாராணியாரின் கணவர் இளவரசர் எடின்பரோ கோமகன் பிலிப் அவர்கள் கடந்த ஆண்டு தனது 99 வயதில் 100 வயதுக்கு ஒரு மாதம் முன்னதாக தனது பூவுடலை நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    70 ஆண்டுகாலம் முடி சூடியிருந்த மகாராணியார் எதுவிதமான சர்ச்சைகளுக்குமுட்படாமல் தனது மரணம் வரை முடிக்குரியவராக இருந்தார் என்பது சரித்திரமே ! இத்தகைய ஒரு வெற்றியான வாழ்க்கையை அவர் அடைவதற்கான அவரது விசேடத் தன்மைகள் என்ன?

    வெற்றியான மகாராணியார் வாழ்க்கை ஏதோ சுமூகமாக ஓடியது என்று சொன்னால் இல்லை என்றே பதில் வரும். அவரைச் சுற்றி அவரது சொந்தங்கள் உறவுகளினால் ஏற்பட்ட பல சர்ச்சைகளை அவர் கையாண்ட விதமே அவரது பண்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது.

    அவரது மூத்த மகனாக முடிக்குரிய இளவரசராக இருந்த இன்றைய அரசராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்ல்ஸ் அவர்களது மணமுறிவும் அதைத்தொடர்ந்து அதனுடன் இணைந்து எழுந்த பலவிதமான இளவரசி டயானா சம்பந்தமான சர்ச்சைகளையும் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் கையாண்ட விதம் பிரமிக்கத் தக்கது.

    அதையடுத்து அவரது இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ அவர்களுடைய மணமுறிவு மட்டுமல்ல , சமீபத்தில் அவர் மீது எழுந்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் பாரபட்சமின்றி அரச கெளரவங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து விலக்கியதன் மூலமாக ஒரு தாய் எனும் நிலையிலில்லாமல் ஒரு நாட்டின் மகாராணி எனும் நிலையிலிருந்து எடுத்த முடிவுகள் அவர் தனது நாட்டுக்கான சேவைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

    இங்கிலாந்து அரச பரம்பரைக்குள் முதலாவதாக வந்த வேற்றின பந்தத்தை ஏற்று அதற்குக் காரணமான அவரது பேரனான இளவரசர் ஹரி அவர்களையும் அனுசரித்து அவர் நடந்து கொண்ட விதம் அவரது பண்பினை மேலோங்கி நிற்க வைக்கிறது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது பேரன் இளவரசர் ஹரியும் , அவரது மனைவியும் தாம் அரச குடும்பத்துடனான உரிமைகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது மட்டுமல்ல அமேரிக்காவில் இரச குடும்பத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் அளித்த நேர்காணல்கள் அளித்ததையும் உள்வாங்கி அதனை மிகவும் சாதுரியமாகக் கையாண்டு தன்னுடைய மதிப்பை உலகளாவிய ரீதியில் உயர்த்திக் கொண்டார்.

    இப்படியாக நேற்று 08.09.2022 தனது பூவுடலை நீத்து வானுலகம் எய்திய மகாராணியார் தனது பிரத்தியேக வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளை தனது தேச சேவைக்கு எவ்வித பங்கமும் ஏற்படா வகையில் பணியாற்றியதே இவரின் அதியுன்னத பண்பாகக் கணிக்கப்படுகிறது.

    இதுவரை இவர் தனது 70 ஆண்டுகால முடியாட்சியில் 15 இங்கிலாந்துப் பிரதமர்களைக் கண்டு அவர்களைச் சம்பிரதாயபூர்வமாக நியமித்திருக்கிறார். உலகளாவிய ரீதியில் எடுத்துப் பார்த்தோமானால் இதுவரை 170 நபர்களைப் பிரதமராகப் பார்த்திருக்கிறார், இவர் மகாராணியாகியது செய்த முதலாவது பிரதமர் நியமனம் நான் பிறந்த மண்ணாகிய அப்போதைய சிலோன் என்றழைக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் டட்லி சேனநாயக்கா ஆவார். இவர் செய்த கடைசிப் பிரதமர் நியமனம் இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் ட்ரஸ் அவர்களாவார்.

    இங்கிலாந்தின் முடிக்குரிய மகாராணியாக மட்டுமல்லாமல் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக இவர் ஆற்றி வந்த கடமைகள் எண்ணிலடங்கா. இதுவரை சுமார் 600 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கெளரவ தலைவராக பணியாற்றிய இவரது சேவை அளப்பரியது.

    தன்னுடைய தலைமையின் கீழுள்ள பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தன்னுடைய பிரஜைகளாகவே கருதிச் செயல்பட்டு வந்தவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார்.

    இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் முதல் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் சார் வின்சென்ட் சார்ச்சில் அவர்கள். இவர் பிறந்தது 1874ம் ஆண்டு. இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் கடைசிப் பிரதமராக இருப்பவர் திருமதி லிஸ் ட்ரஸ். இவர் பிறந்தது 1975ம் ஆண்டு. ஆக மொத்தம் மகாரணியாரின் ஆட்சிக் காலத்தில் இவர் கண்ட பிரதமர்களின் வயது இடைவெளி 100 வருடங்களாகும். இதுவோர் உலக சாதனை என்றால் மிகையில்லை.

    இத்தனை பிரதமர்களையும், இத்தனை ஆட்சி மாற்றங்களையும் சந்தித்த மகாராணியாரின் பழகும் தன்மையில் மட்டும் எதுவித மாற்றங்களுமேயில்லை, சமூக, விஞ்ஞான, சமய மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக் கொண்டிருந்தும் மகாராணியாரோ மனிதத்துவம் மீதும், இறையின் மீதும் கொண்ட நம்பிக்கையை இழக்காமல் இருந்ததே அவரது இந்த நன்மதிப்பின் முக்கிய காரணமாகிறது.

    என்றுமே நாட்டின் அரசியல் மாற்றங்கள் மீதோ அன்றி அரசியல்வாதிகள் மீதோ எதுவிதமான சொந்தக் கருத்துக்களையும் இவர் திணிப்பதேயில்லை எப்போதுமே தனது சொந்தக் கருத்து எதுவாயிருந்தாலும் அரசியலில் நடுநிலைமையையே கடைப்பிடித்து வந்துள்ளார்.

    தன்னுடைய அந்திம காலம் வரை தனது நாட்டுக்கான சேவையை செய்து கொண்டேயிருந்தார் என்பதே இவரது சேவை மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாகிறது. வியாழக்கிழமை 08.09.2022 அன்று மறைந்த மகாராணியார் இரண்டு நாட்களுக்கு முன்புவரை அதாவது 06.09.2022 அன்று முன்னால் பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது இராஜினாமாவை ஏற்றதோடு புதிய பிரதமர் திருமதி லிஸ் ட்ரஸ் அவர்களை சம்பிரதாயபூர்வமாக பிரமராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றுவரை உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் மகாரணி (The Queen) என்று சொன்னால் அனைவரின் நினைவிலும் மேலோங்கி நிற்பது இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஒருவரே. இது அவர் மகாராணியார் எனும் சொல்லுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒரு மதிப்பு என்றே எடுத்துக் கொள்வோம்.

    மறைந்த மதிப்பிற்குரிய இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆத்மாவுக்கு அஞ்சலி செய்வதோடு அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்கள் தன்னுடைய தாயாரின் பாதையில் ஒரு வெற்றியான அரசராகச் செயல்பட எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். இங்கிலாந்துப் பிரஜைகளில் ஒருவனாக சக பிரஜைகளோடு எனது துயரையும் பகிர்ந்து கொள்கிறேன்.

    Share
  • ஐனநாயகச் சர்வாதிகாரம்

    ஐனநாயகச் சர்வாதிகாரம்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன்.

    என்ன! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது.

    நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம். உலக அளவிலே உக்கிரைன் நாட்டில் ஈடம் பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பதிப்படைந்திருக்கிறார்கள்.

    அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன்.

    சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.

    எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ளமாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள்.

    மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு.

    எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும்.

    சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.

    இதுதவிர அவருக்கு அவரது கட்சிக்குள்ளிருந்த செல்வாக்குக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். மிகவும் நெருக்கடியாக சொற்பமான பெரும்பான்மையுடன் வட அயர்லாந்துக் கட்சியின் கூட்டணியின் தயவில் ஊசலாடிக் கொண்டிருந்த அன்றைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தை “ப்ரெக்ஸிட்டை நடைமுறைப் படுத்துவேன்” எனும் சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டு 80 உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது முதற்காரணம், அவரை எதிர்க்கக்கூடிய ஆற்றல் மிக்க மற்றொருவர் அக்கட்சியில் இருக்கவில்லை என்பது அடுத்த காரணம்.

    சரி இப்போ கேள்வி எழுகிறது. இத்தனை அனுகூலங்களைக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சன் இன்று பெரும்பான்மை வெற்றியீட்டிக் கொடுத்த தலைவர் எனும் நிலையிலிருந்து பதவியை இராஜினாமாச் செய்யும் நிலையை வந்தடைந்தது எப்படி?

    பொரிஸ் ஜான்சனின் வெற்றிக்கும், தோல்விக்கும் கோவிட் 19 ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை எனலாம். எப்படி அது அவருக்கு வெற்றி என்று சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

    மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் கோவிட் 19 எனும் உலகம் எதிர்நோக்கிய முன்னேற்போதும் உலகு கண்டிராத நோயினூடாக நாட்டை வழிநடத்த வேண்டிய முதல் பிரதமராக நாட்டினை இழப்புகள் அதிகமின்றி அவ்விருளினைக் கடந்து கூட்டிச் சென்றிருக்கிறார். மேற்குலக நாடுகளிலேயே இந்நோய்க்குத் தேவையான தடுப்பூசிகளை தேவையான அளவு கொள்வனவு செய்து முதன் முதலில் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய நாடு எனும் பெயரைத் தக்க வைத்துக் கொண்டார்.

    இனி இந்தக் கோவிட் 19 அவருக்கு எந்த வகையில் தோல்வியைப் பரிசாக்கியது என்று பார்க்கலாமா?

    கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக நாட்டினை முடக்கும் தீவிர சட்டங்களை அமுலாக்கிய பொரிஸ் ஜான்சன் அவர்களது முக்கிய ஆலோசகராக இருந்தவர் டொமினிக் கமிங்ஸ் என்பவர் ஆவார். இந்தக் கோவிட் சட்டங்கள அமுலாக்க ஆலோசனை வழங்கிய அவரே அச்சட்டங்களை மீறியது வெளிப்பட்டதே பொரிஸ் ஜான்சன் அவர்களின் சறுக்கலுக்கு ஆரம்பச்சுழி இட்டது என்று சொல்லலாம்.

    சட்டங்களை மீறிய அவரது ஆலோசகரை தண்டிக்காமல் மன்னித்தார் பொரிஸ். அதுவே அவரது தொடர்ந்த தவறான நடத்தைகளின் ஆரம்பம். கருத்து வேற்றுமைகளினால் பொரிஸ் ஜான்சனிடமிருந்து வெளியேறிய டொமினிக் கமிங்ஸ் தன்னுடன் பொரிஸ் ஜான்சனை விழுத்தக்கூடிய பல ஆவண இரகசியங்களோடு வெளியேறி இருக்கலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

    கொஞ்சம் கொஞ்சமாக பொரிஸ் ஜான்சனின் முகச்சாயம் வெளுக்கத் தொடங்கியது. சிரித்து மழுப்பி முரண்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொரிஸ் ஜான்சன் அவர்களது அரசியல் அனுபவ வெற்றிடம் மக்களுக்குப் புலப்படத் தொடங்கியது.

    தொடர்ந்து கசியத் தொடங்கிய அரசாங்க உள்நடவடிக்கைகள் அவருக்கு வெடி வைத்தன. தம்முடைய இரத்த உறவுகளின் மரணத்தின் போது உடனிருக்க முடியா நிலையிலிருந்த மக்கள் அப்போதைய கால கட்டத்தில் பிரதமரின் அலுவலகத்தில் மது உள்ளடங்கிய ஒன்றுகூடல்கள் நடந்ததை அறிந்தால் சும்மா விடுவார்களா என்ன?

    வெறும் வாய்க்கு எப்போ அவல் கிடைக்கும் என்று காத்துக் கிடந்த எதிர்க்கட்சிகளுக்கு பத்துநாள் பட்டினி கிடந்த நாயின் முன்னால் வீசப்பட்ட மாமிசத் துண்டினைப் போல இந்தக் கசிவுகள் அமையவும். பாராளுமன்றத்தில் உண்டு இல்லை என்று விவாதம் செய்தார்கள். விழித்துக் கொண்ட ஊடகங்களுக்கு மென்று சப்பித் துப்புவதற்கு பிரதமரும், அவரைச் சார்ந்த பலரும் அகப்பட்டுக் கொண்டார்கள்.

    தனக்கு கீழியங்கும் தனது அலுவலகத்தில் கோவிட் 19 சட்டங்களை மீறும் வகையில் எதுவிதமான ஒன்றுகூடல்களும் நடைபெறவேயில்லை என்று ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் உறுதியளித்த பிரதமரின் முகத்தில் கரி பூசப்பட்டது. துடைத்துக் கொண்டே சிரித்தார் பொரிஸ் ஜான்சன்.

    விளைவாக நீண்டதோர் விசாரணையின் பின்பு பொலீசாரினால் கிரிமினல் குற்றத்துக்கான அபராதத்தைச் செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார் பொரிஸ் ஜான்சன்.

    இதைவிடச் சிறிய குற்றச்சாட்டுகளுக்காகவே பதவி விலகிய பலர் உதாரணமாக இருக்க பதவியை இறுகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பொரிஸ் ஜான்சன் வெறும் மன்னிப்புடன் இந்த அத்தியாயத்தை மூடிவிட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த விடயமும், இவர் மீது மக்கள் கொண்ட அவநம்பிக்கையும் நிறுபூத்த நெருப்பாகத் தகித்துக் கொண்டுதான் இருந்தது.

    எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா என்ன? ஒரு நாயின் கால்களில் கிடைத்த எழும்புத் துண்ட அது சும்மா விட்டு விடுமா என்ன? மக்கள் மனங்களில் பொரிஸ் ஜான்சன் பற்றிய அவநம்பிக்கை, மற்றும் தயங்காமல் உண்மைகளை மறுக்கும் வல்லமை பெற்றவர் எனும் எரிந்து கொண்டிருந்த அபிப்பிராய நெருப்புக்கு எண்ணெய் ஊற்ற ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் தவறவில்லை.

    இதன்போது பொரிஸ் ஜான்சனைக் காப்பாற்ற வந்தது போலவே ரஸ்ய அதிபர் பூட்டின் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சனுக்கு முன்னால் ஒரு மிதக்கும் கட்டையை வீசினார் பூட்டின். விடுவாரா பொரிஸ் ஜான்சன்? எட்டிப் பிடித்துக் கொண்டார். ஒருவாறு கரையேறி விடுவார் என்றுதான் அரசியல் அவதானிகள் கருதினார்கள். அத்துடன் உக்கிரன் போரினால் ஏற்பட்ட எண்ணெய்த் தட்டுப்பாடு, ப்ரெக்ஸிட் மற்றும் உக்கிரைன் போர் முதலியனவற்றின் தாக்கத்தில் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவின் உயர்வு அவைகளும் பொரிஸ் ஜான்சன் மீது விழுந்த கற்களைத் தடுக்கும் கேடயங்களாகின.

    சரி இவையெல்லாவற்றையும் ஒருவாறு பூசி மெழுகி சமாளித்து விட்டேன் என்று பெருமூச்செறிந்து நடந்த பொரிஸ் ஜான்சன் அவர்களுக்கு மற்றுமோர் பேரிடி காத்திருந்தது.

    சரி அந்தப் பேரிடி எந்த வடிவில் அவருக்குக் காத்திருந்தது என்று அறிய ஆவலாக இருப்பீர்களே!

    பொரிஸ் ஜான்சன் அவர்களால் தனது பாராளுமன்றக் கட்சி உறுப்பினர்களை வழிநடத்தவும், அவர்களின் நடத்தைகளைக் கண்காணிப்பதற்கும் அமர்த்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உப தலைவர் பதவிக்கு சிலகாலங்களின் முன்னால் அமர்த்தப்பட்டவர் கிறிஸ் பின்ச் என்பவர். பிரதமராவதற்கு முன்னால் பிரதமர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பொரிஸ் ஜான்சன் அவர்கள் வெளிநாட்டு அமைச்சராகவிருக்கும் போது இதே கிறிஸ் பின்ச் அவரின் கீழ் பணிபுரிந்தார். அப்போது அவர் மற்றொரு அலுவலகப் பணியாளருடன் முறைதவறி நடந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு பின்பு மன்னிப்புக் கேட்டதன் பிரகாரம் பொரிஸ் ஜான்சனினால் மன்னிக்கப்பட்டவர்.

    சரி இப்போது இதே கிறிஸ் பின்ச் என்ன செய்து விட்ட்டார் தெரியுமோ? கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் ஒன்றுகூடும் கிளப் ஒன்றிலே இக் கிறிஸ் பின்ச் என்பவர் அதிகமாக மது அருந்தி விட்டு அங்கு இருந்த இரண்டு இளம் கன்சர்வேடிவ் ஆண் உறுப்பினர்களோடு முறை தவறி நடந்திருக்கிறார்.

    இந்தப் பிரச்சனை வெளியே ஊடகங்களில் வருவதறிந்து இக் கிறிஸ் பின்ச் தானே தனது பதவியை இராஜினாமச் செய்தார். ஆனால் இதன் பின்னும் அவரை கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலக்க பொரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தவிர இவரை இப்பதவிக்கு அமர்த்தும் போது இவர் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் என்று தனக்குத் தெரியாது என்று வேறு ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்திலும் சொல்லி விட்டார்.

    அது தவிர ஊடகங்களில் அதை வலியுறுத்தும்படி தனது அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்களைப் பணித்துள்ளார்.

    அது பொரிஸ் ஜான்சன் நினைத்த பாதையில் செல்லவில்லை. கிறிஸ் பின்ச் அவர்களின் மீதான முந்தைய குற்றச்சாட்டு ஏற்கனவே பொரிஸ் ஜான்சனுக்குத் தெரியும் எனும் உண்மை வெளிவந்தது. “என்னை மன்னித்து விடுங்கள் நான் மறந்து விட்டேன்” என்றார் பொரிஸ் ஜான்சன். மன்னிப்புக்கும் ஒரு எல்லையுண்டு தானே! இனித்தன் சாயம் மக்களிடம் வெளுக்காது என்றுணர்ந்தும் பதவிக் கட்டிலை விட்டிறங்க மறுத்து விட்டார் என்றால் பாருங்களேன் !

    “இதற்கு மேலும் தாங்காதடா சாமி!” என்று நிதியமைச்சர் ரிஷி சுனாக், மற்றும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் இருவரும் தமது அமைச்சர் பதவியை இராஜினாமச் செய்தார்கள். பொரிஸ் ஜான்சன் காகித அட்டையில் கட்டிய மாளிகை சரியத் தொடங்கியது. ஒவ்வொன்றாக அரசாங்கத்தில் இருந்த துணை அமைச்சர்கள், காரியதரிசிகள் எனச் சுமார் 54 பேர் ஒன்றன் பின் ஒன்றாக இராஜினாமாச் செய்தார்கள்.

    அவர்கள் அனைவரதும் காரணம் பிரதமர் மீதான அவநம்பிக்கை.

    வேறு வழியின்றி தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக பொரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

    ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறது,

    “கெட்டிக்காரனின் பொய்யும், புளுகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்
    எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்”

    இது எட்டு நாளில் இல்லை சுமார் இரண்டு வருடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

    சரி இதிலே எங்கே சர்வாதிகாரம்? எனும் கேள்வி எழுந்திருக்குமே!

    ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் இராஜினாமாச் செய்து விட்டார். அடுத்த பிரதமரை வெறும் 200000க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே தெரிவு செய்யப் போகிறார்கள்.

    8 பேர் பிரதமராவதற்காக கட்சித் தலைவர் பதவிக்கு நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்த போதிலும் அவர்களுள் இருவரை மட்டுமே பாரளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியினர் வாக்களித்துத் தெரிவு செய்து தமது அடிப்படை உறுப்பினர் முன் நிறுத்துவார்கள்.

    சரி வானோலி நிகழ்ச்சி ஒன்றில் நானறிந்து கொண்டது காதைக் கொடுங்கள் சொல்கிறேன்.

    கடைசியாகத் தெரிவு செய்யப்படப் போகும் இருவரில் யார் பிரதமராக வேண்டும் என்று பெரும்பான்மை கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்களோ அவர்களோடு தெரிவு செய்யப்படும் மற்றைய வேட்பாளர் யாராக இருக்க வேண்டும்?

    கன்சர்வேடிவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாதவராக இருக்க வேண்டும் என்பதால் அத்தகைய வழியில் தமது சக உறுப்பினர்களையும் வாக்களிக்கும் வகையில் வழி நடத்தி விடுவார்களாம். எப்படி இருக்கிறது ஐனநாயகம்?

    ஓ! இதுதான் ஐனநாயகச் சர்வாதிகரமோ ?

    Share
  • அகவை நூறு கண்ட சஞ்சிகை

    அகவை நூறு கண்ட சஞ்சிகை

    சக்தி சக்திதாசன்

    “ரீடர்ஸ் டைஐஸ்ட்” எனும் பெயர் அடிபடாத நாடுகள் இல்லை என்றே கூறலாம். தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு வாசகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான இடத்தை வகித்து வரும் ஒரு ஊடக சஞ்சிகையாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” ஐ நாம் காணக்கூடியதாக உள்ளது.

    நான் ஒரு பள்ளி மாணவனாக ஈழத்தில் வலம் வந்த போது என் தந்தையின் வழக்கமான வாசிப்புச் சஞ்சிகைகளில் ஒன்றாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” இருந்தது என்பதை நான் நினைவு கூர்கிறேன். அவரது பரிந்துரைப்பிலும், ஊக்குவிப்பிலும் நானும் ” ரீடர்ஸ் டைஐஸ்ட்” சஞ்சிகையை அவ்வப்போது அப்போதே படித்து வந்தும் இருக்கிறேன். அதிலுள்ள துணுக்குகள் என்னை மிகவும் அதிகமாகக் கவர்வதுண்டு. அது தவிர பலர் எழுதும் தமது வாழ்வியல் அனுபவங்களும் கூட மிகவும் ஆச்சர்யமூட்டுபவையாக இருக்கும்.

    அந்தச் சஞ்சிகையின் ஆக்கங்களின் ஆழத்தை நான் எனது 19 வயதில் லண்டன் வந்தபோது என்னால் முழுமையாக உணரக்கூடியதாக இருந்தது. எப்படி என்கிறீர்களா ?

    நான் இலண்டன் வருவதற்கு முன்னால் ஈழத்தை விட்டு வெளிநாடு ஒன்றுக்குமே சென்றிராத என் தந்தை இலண்டன் வாழ்வு முறைகளைப் பற்றியும். இலண்டன் வாழ்வின் சில நடைமுறை வழக்கங்களையும் எனக்கு அறிவுரையாகக் கூறினார். அப்போது அவரின் அறிவுரைகளை அப்போதைய வாலிபத் துடுக்கின் நிமித்தம் அக்கறையுடன் நான் எடுத்துக் கொள்ளவில்லை.

    என்னே அதிசயம் ?

    இலண்டனில் நான் பார்த்த நடைமுறைகளை அப்படியே என் தந்தை விபரித்திருந்தது என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பின்பு நான் ஈழத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தபோது இது பற்றி நான் வினவியபோது தனக்கேயுரித்தான புன்னகையுடன் அனைத்தும் தான் ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” பல வருடங்களாக வாசித்து வருவதனால் அறிந்து கொண்டது என்று விளக்கமளித்தார்.

    1922 ம் ஆண்டு முதலாம் உலக மகாயுத்தத்தில் காயமடைந்திருந்த அமேரிக்கர் ௶” ட்வீட் வாலேஸ் (DeWitt Wallace ) ரென்பவரின் சிந்தையில் உதித்ததே இந்த “ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் சஞ்சிகையாகும்.

    பல சஞ்சிகைகளில், கட்டுரைகளில் வந்த சுவையானவற்றைத் தொகுத்துக், சிலவற்றை மீண்டும் தனது பாணியில் எழுதியும் ஒரே சஞ்சிகையில் கொண்டுவர அவர் எண்ணியதன் விளைவாகவே அகவைகள் நூறுக்கு முன்பு ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் இந்த சுவையான சஞ்சிகை உதயமாயிற்று.

    தனது அரசியல் நிலைப்பாடாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” பழமைவாத (Concervative) க்கு ஆதரவாகவும், மற்றும் கம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாட்டையுமே கொண்டிருந்தது. இந்தச் சஞ்சிகையின் மூலம் வருடமொன்றுக்கு 5000 டொலர்கள் ஈட்ட முடியும் என்றே டாவீட் வாலெஸ் அவர்கள் எண்ணினார் எனினும் 1929ம் ஆண்டில் ஆச்சரியமளிக்கும் வகையில் 900000 டொலர்கள் ஈட்டினார் என்பதும் சுமார் 290000 சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது என்பதும் வரலாற்றுப் பதிவாகும்.

    இச்சஞ்சிகையின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய இராச்சியத்தில் 1928ம் ஆண்டு பதிவிடப்பட்டது.

    இச்சஞ்சிகையின் 40வது வருட பூர்த்தியின்போது சுமார் 40 நாடுகளில் சர்வதேச பதிப்புகளும், 13 மொழிகளில் 29 மில்லியன் விநியோகத்தை எட்டியது.

    பல தசாப்தங்களாக இச்சஞ்சிகையின் ஒவ்வொரு பதிப்பிலும் 30 பதிவுகள் இடம்பெறுவது வழக்கம்.

    இவற்றுள்

    • அதிசயமான துணுக்குகள் ( Amusing Anecdotes )

    • சொந்த அனுபவங்கள் ( Personal Glimpses )

    • சீருடையில் நகைச்சுவை ( Humor in Uniform )

    • ஐக்கிய அமெரிக்காவில் வாழ்க்கை ( Life in these United States )

    • நிஜ வாழ்க்கை நாடகங்கள் (Drama in Real Life )

    என்பன போன்றவை மிகவும் குறிப்பிடத் தக்க பதிவுகளாகும்.

    “ரீடர்ஸ் டைஐஸ்ட்” படிக்காதவர்கள் அல்லது அதைப் பற்றி அறியாதவர்கள் மிகவும் சொற்பம் என்றே சொல்ல வேண்டும். ஒரு நாட்டுக்கு போகாமல் அந்நாட்டைப் பற்ரிய வாழ்வு முறையை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இச்சஞ்சிகையில் கட்டுரைகளும், துணுக்குகளும் இடம் பெறுவதே இச்சஞ்சிகையின் வெற்றிக்குக் காரணமாகிறது.

    இன்றைய இலத்திரனியல் ஊடக காலத்தில் கூட இணையத்தளம் வாயிலாக தனது செல்வாக்கை இச்சஞ்சிகை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்பது இதன் வாசகர்களின் ரசிப்புத் தன்மையின் ஆழத்தைச் சுட்டிக் காட்டி நிற்கிறது.

    நூறாவது அகவையில் கால் பதித்து தனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இச்சஞ்சிகை இது பொன்று இன்னும் பல நூறாண்டுகள் தனது தனித்தன்மையை இழந்து விடாமல் நிலைத்திருக்கும் என்பது என் போன்ற எழுத்துப் பித்தர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

    Share
  • அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார்.

    எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும்.

    ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன்.

    மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.

    ப்ரெக்ஸிட் எனும் தீர்வு ஏதோ இலகுவாக செயற்படுத்தப்படக்கூடியதொன்றல்ல என்பது அரசியல் அறிவில் தெளிவுடைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.

    அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவுகள் பற்றி அனுபவமிக்க அரசியல், மற்றும் பொருளாதார நிபுணர்கள் பல அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியிருந்தனர்.

    ப்ரெக்ஸிட் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் எனும் பெயரெடுப்பதற்காக அவசரம் அவசரமாக பல சிக்கலான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு விட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதன் விளைவுகளைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் போதுதான் முன்னறிவிப்பின்றி உலகினுள் பிரவேசித்தது கொரோனா.

    கொரோனா எனும் நுண்கிருமியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பதுதான் தலையாய கடமை எனும் கோஷத்துடன் ப்ரெக்ஸிட் பிரச்சனைகளை ஓரம் கட்டி வைத்தார் எமது பிரதமர்.

    2020 மார்ச்/ஏப்பிரல் தொடங்கி 2022 ஜனவரி முடிவுவரை பல்வேறு காலப்பகுதிகளில் லாக்டவுண் பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு பரிமாணங்களிலும் நிறுவப்பட்டது..

    அதிகபட்ச லாக்டவுண் விதிகளாக ஹாஸ்பிட்டல்களில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் உறவினர்களைக் கூட கடைசிமுறையாகப் பார்க்க முடியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன.

    வயோதிப இல்லங்களில் வசிக்கும் தமது வயதான உறவினர்களைச் சந்திக்க முடியாதவாறு லாக்டவுண் விதிகள் அமைந்திருந்தன. மிகவும் கடினமான விதிகளை மிகவும் சிரத்தையுடன் ஐக்கிய இராச்சிய மக்கள் பின்பற்றினர் , இவ்விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர் பிரதமரே.

    இவ்விதிகளை மீறியோர் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.

    ப்ரெக்ஸிட் வெற்றியின் பின்னனியில் உழைத்தவரான டொமினிக் கமிங் ஸ் என்பவரைத் தனது அரசியல் அலோசகராக தான் பிரதமரானவுடன் பொரிஸ் ஜோன்சன் அவர்கள் நியமித்திருந்தார். இவ்வாலோசகரின் அதீத நடவடிக்கைகள் பிரதமரின் கட்சி உறுப்பினர்கள் பலரை மனக்கசப்புள்ளாக்கியது.

    சுமார் ஒருவருடத்தின் முன்னால் தீவிரமான லாக்டவுண் நேரத்தில் பிரதமரின் அரசியல் ஆலோசகர் தனது ஜோடியுடன் ஒரு உல்லாச இடத்திற்கு விஜயம் செய்தார் என்பது சிறிது காலத்தின் பின்னால் அம்பலத்துக்கு வந்தது.

    வெகுஜனத்தின் அதிருப்தியையும் பொருட்படுத்தாது விதிகளை மீறிய அவ்வாலோசகருக்கு தனது ஆதரவை அளித்துப் பாதுகாத்தார் பிரதமர்.

    ஆனால் சில காலத்தின் பின்னால் பிரதமருக்கும், அவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலினால் அவ்வரசியல் ஆலோசகர் பதவி நீக்கப்பட்டார். ஆனால் பிரதமருடன் நெருக்கமாகவிருந்த அவரினால் பிரதமருக்கு பல இடையூறுகள் நேரிடலாம் எனும் அச்சம் பிரதமரின் ஆதரவாளர்களிடம் அப்போதே நிலவியது.

    இந்தப் பின்னனியில் தான் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது பதவியையே பறிகொடுக்கக் கூடிய ஒரு நிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறார்.

    எப்படி என்கிறீர்களா ?

    ஐக்கிய இராச்சிய மக்களின் மீது அதிகூடிய லாக்டவுண் விதிகள் போடப்பட்டு அவர்கள் அதனை கடைப்பிடித்து வந்த அதே நேரம் பல்வேறு காலகட்டங்களில் பிரதமரின் கீழியங்கும் அவரது கட்டிட அரச உத்தியோகத்தர்கள் சுமார் 16 தடவைகள் விருந்துகளை ஐக்கிய இராச்சிய அரசுக் கட்டிடமான பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே நடத்தியிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியான தகவல்கள் ஓன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன.

    நாடே ஓரளவு கொதித்தெழுந்தது. தமது நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கூட கலந்து கொள்ளாமல் விதிகளை பொதுமக்கள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கையில் பிரதமரின் உத்தியோகபூர்வமான கட்டிடத்தில் விருந்துகளை நடத்தியிருக்கிறார்கள் அதிலும் ஓரிரு விருந்துகளில் பிரதமரே நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார் எனும் தகவல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

    இத்தகவல் முதலில் வெளிவந்தபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் விருந்துகள் எதுவுமே நடக்கவில்லையென்றும் லாக்டவுண் விதிகள் எவையுமே மீறப்படவில்லையென்றும் உறுதியளித்தார். தொடர்ந்து வெளிவந்த புகைப்படங்கள் செய்திகள் அனைத்தும் பிரதமரின் கூற்றுக்கு எதிராகக் காணப்பட்டது.

    பிரதமர் ராஜினாமாச் செய்ய வேண்டும் எனும் கோஷம் நாட்டின் நாலாபக்கங்களில் இருந்து எழுந்தாலும் பிரதமரின் அமைச்சரவை அவருக்கு ஆதரவாக நின்றது.

    பாராளுமன்றத்தில் பட்டும் படாமலும் மன்னிப்புக் கோரிய பிரதமர் மிகவும் உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரியாகிய சூ கிறே என்பவரை நடைபெற்ற விருந்துகளின் பின்னனியை விசாரிப்பதற்காக நியமித்தார்.

    பிரதமரின் நிலை இன்னும் மோசமாகியது. அவரால் நியமிக்கப்பட்ட அரச உயரதிகாரியால் தனது அறிக்கையை முழுமையாகச் சமர்ப்பிக்க முடியவில்லை. காரணம் பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விருந்துகளில் 12 சட்டத்தை மீறியிருக்கலாம் எனும் காரணத்தினால் அவை போலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.. பொலிஸாரின் விசாரணைகள் முடிவுறும் வரை அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்படக் கூடாது என்று பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பிரதமர் பாராளுமன்றத்தில் தவறான செய்திகளைக் கூறியிருக்கிறார் என்பதால் அவர் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை விட்டு வருகின்றனர். நாட்டு மக்கள் மத்தியிலும் பிரதமரின் செல்வாக்கோடு அவரது கட்சியின் செல்வாக்கும் சரிந்து வருகிறது.

    பிதமரும், அவர்து அமைச்சர்களும் நடந்த தவறுக்கு வருந்துகிறோம் ஆனால் ப்றெக்ஸிட், கொரோனா தடுப்பூசி, கொரோனா நோயின் கட்டுப்பாடு என்பனவற்றை பிரதமர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் அவரின் பதவி ராஜினாமா என்பது அவசியமற்றது என வாதிடுகிறார்கள்.

    அதேசமயம் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமது கட்சியின் தலைமைப் பதவிக்கு ஏற்றவரில்லை எனப்தால் அவர்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதங்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள் என்பது செய்தி. இவர்களது எண்ணிக்கை 54 ஐ எட்டுமானால் பிரதமர் மீது அவரது கட்சியே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்னெடுக்கும்..

    பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் நிகழ்ந்த விருந்துகளைப் பற்றிய பொலிஸாரின் விசாரணை முடிவுகள் இன்னும் என்ன அதிர்ச்சிகளை வைத்திருக்கிறது என்பதும் பிரதமரின் பதவிக்கு ஒரு அச்சுறுத்தலே .

    பிரதமருக்கு உடனடியான ஆபத்து இல்லையெனினும் மேமாதம் நடைபெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அவரது பதவிக்குச் சாவுமணி அடிக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது.

    ஐக்கிய இராச்சிய அரசியல் மேடையில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேறப் போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டுமாயினும் இந்நாடகம் களைகட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

    அது என்ன தொலைவில் ஒரு சத்தம்?

    ஓ ! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எனும் வாசகமோ?

    Share