கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (6)

1
k6

சக்தி சக்திதாசன்
லண்டன்

கவியரசர் கண்ணதாசன் எனும் காவியப் பெருங்கடலினுள் விழுந்து நீச்சலடிப்பது என்பது உள்ளத்தை எப்போதும் ஆனந்தமயமாக வைத்திருக்கக்கூடிய செயலாகும்.

தமிழர்கள் நெஞ்சங்களிலெல்லாம் தனக்கென ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டவர் கவியரசர் என்றால் அது மிகையாகாது.

தன்னுள்ளத்தில் விழுந்த காலத்தின் வடுக்களை கவிதை வரிகளாக்கினார். திரைத்துறை விற்பன்னர்கள் கொடுத்த கதைகளுக்கும் காட்சிகளுக்கும் ஏற்ப தனது அனுபவங்களின் மூலம் தான் பெற்ற வாழ்வின் ஞானத்தை அக்காட்சிகளுக்கேற்ற பாடல் வரிகளாக்கினார்.

கவியரசர் ஆன்மீகத்தை ஆழமாகப் புரிந்து கொண்டவர். அனைத்து மதங்களின் சாரத்தையும் அறிந்து கொண்டவர்.

வாழ்க்கையெனும் ஆழியிலே நாத்திக அலைகளைக் கடந்து அமைதியான பகுதியான ஆத்திக பரப்பினிலே மிதந்தவர். கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் அனைத்தையும் அழகக உள்வாங்கிக் கொண்டவர்.

இந்தப் பதிவிலே என்றும் என் மனதில் ஆழப்பதிந்த ஒரு பாடலைப் பகுத்துப் பார்த்து அதை எந்தக் கோணத்தில் அவர் பார்த்து எழுதியிருப்பார் என்பதை எனது கோணத்திலே பார்க்கத் தலைப்படுகிறேன்.

மெல்லிசை மன்னரான எம்.எஸ்.வி அவர்கள் நடத்தும் கச்சேரிகளில் முதல் பாடலாக ஒலிக்க வேண்டும் என்று கவியரசரே விரும்பிய,

“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்று ஒலிக்கும் இனிமையான பாடலே அது.

ஒரு பாடலுக்குள் எத்தனை விஷயங்களைப் புகுத்தலாம் என்பதற்கு இந்த ஒரு பாடலே கவியரசரின் ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது என்று சொல்லலாம்.

கண்ணனின் தாசனல்லவா கண்ணதாசன் அவர் கண்ணனைப் பற்றிப் பாடாத பொழுதுகள் இல்லையென்றே கூறிவிடலாம். தத்துவப் பாடலாகட்டும், பக்திப் பாடலாகட்டும், காதல் பாடலாகட்டும் அனைத்தினுள்ளும் கண்ணனைப் புதையல் போன்று புதைத்து வைத்திருப்பார் கவியரசர்.

மேலும் கண்ணனைப் பற்றிப் பாட வேண்டும் என்று எண்ணுகிறார் கவியரசர். அவர் நினைவில் நிறைந்திருக்கும் கண்ணனின் கைகளில் எப்போதும் தவழ்ந்திருப்பது என்ன ?

புல்லாங்குழல் அல்லவா ?

துணைக்கு அழைக்கிறார் புல்லாங்குழலை. கண்ணனின் கைகளில், உதடுகளில், இடுப்பில் என்று அந்த மாயக் கண்ணனுடன் அனுதினமும் இணைந்திருப்பது புல்லாங்குழல் அல்லவா ?

அந்தப் புல்லாங்குழலையே கண்ணன் அதாவது தேவகியின் மைந்தன் புருஷோத்தமன் என்று புகழப்படும் கண்ணனைப் பாடும்படி பணிக்கிறார் கவியரசர்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

என்கிறார் கவியரசர்.

புல்லாங்குழலைத் தொட்டவர் ஆன்மீக வித்தகராயிற்றே கங்கைக்கரைத் தோட்டத்தை விட்டு விடுவாரா என்ன ?

புல்லாங்குழலைக் கொடுத்த மூங்கில்களை அழைத்து பாட வைத்து விடலாம் ஆனால் கங்கைக்கரைத் தோட்டத்தை எப்படி இங்கே கொண்௶டு வர முடியும் ?

சிந்திக்கிறார் கவியரசர். உடனே அவருக்கு வந்து விடுகிறது கண்ணன் மாகாபாரதத்திலே கங்கைக்கரையில் நிகழ்த்திய லீலைகளில் ஒன்று.

அது என்ன என்கிறீர்களா?

வாருங்கள் கொஞ்சம் மகாபாரதத்துள் செல்வோம்.

கங்கையிலே பிராமணகோடி என்று ஒரு இடம். அந்த இடத்திலே ஆழம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்விடத்தில் தான் பாண்டவர்களில் தருமனுக்கு அடுத்தவனான பீமன் குதித்துக் குளிப்பது வழக்கம்.

தனக்குத் தலையிடியாக இருக்கும் பீமனை எப்படி ஒழிப்பது என்று தவித்துக் கொண்டிருந்த துரியோதனன் அவனை அழிப்பதற்கு ஒரு அருமையான திட்டம் தீட்டினான்.

பீமன் வழமையாகக் குதிக்கும் இடத்தில் நீருக்கடியில் வெளியே காணமுடியாதபடி நுனிகளில் கடுமையன விஷம் பூசப்பட்ட ஈட்டிகளை நாட்டி வைத்தான்.

பீமனும் குளிக்க வந்தான் அப்போது அங்கே வந்த கண்ணன் ” பீமா நீ குதிக்கப் போகும் இடத்தைப் பார் அங்கே சில வண்டுகள் மொய்க்கின்றனவே அவைகளின் மீது பாய்ந்து அவைகளைக் கொல்லாது அவற்றைத் தாண்டிக் குதித்து விடு “

துரியோதனன் திட்டம் தவிடு பொடியாகி விட்டது. மனதில் இது திரைப்படம் போல ஓட விடுவாரா எமது கவியரசர் ?

கொடுக்கிறார் அடுத்த வரிகளைப் பாருங்கள்

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே – எங்கள்

மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

என்கிறார்.

சரி கண்ணனோடு கங்கைக்கரைத் தோட்டத்தை இணைத்து விட்டோம் இனி அடுத்து எனச் சிந்தனைச் சுழல்கள் வட்டமிட ,

“ஓ கண்ணனின் திருமேனியை முதலில் தரிசித்தது யார் ? மேகங்களல்லவா ? “

சரி அவைகளைக் கொண்டு என்ன செய்விக்கப் போகிறார் எங்கள் கவிக்குயவர்.

பெருமதிப்பிற்குரியவர்கள் எங்காவது வருகிறார்கள் என்றால் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்களின் மீது பன்னீர் தெளித்து மரியாதை செய்யும் வழக்கத்தை நினைவில் கொள்கிறார்.

சாதாரண மனிதர்களுக்கே பன்னீர்த்துளிகள் தெளிக்கப்பட்டால் உலகத்தின் உதாரணமாகத் திகழப்போகும் அக்குழந்தை கண்ணனை எப்படி வரவேற்கப் போகிறதாம்.

மேகங்கள் கரைந்து பன்னீர்த்துளிகளாய் பரந்தாமன் மீது விழுகிறது என்கிறார் எங்கள் வித்தகக் கவி.

பன்னீர் மலர்சொரியும் மேகங்களே – எங்கள்

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்

என்று சித்தரிக்கிறார் வார்த்தை வித்தகர்.

இதுவரையும் புகழ் பாடுங்களேன் என்றுதானே வரிகளை யாத்திருந்தார். இப்போது என்ன திடீரென மெய்யழகைப் பாடுங்களேன் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?

கண்ணன் குழந்தையாகச் சிறையில் பிறந்ததும் தந்தை வாசுதேவனால் வெளியே எடுத்துச் செல்லப்படும்போது அக்குழந்தையின் மேனியழகை முதன் முதல் கண்ணுற்றது மேகங்கள் தானே ! அதனால் தான் மேகங்களை கண்ணனது மெய்யழகைப் பாடும்படி கேட்கிறார் போலும்.

ஆசுகவியின் சிந்தையில் அடுத்து வருவது ராகங்கள். அதுவும் தென்கோடி ராகங்களை அழைக்கிறார். என்ன இது ? வடக்கே மதுராவில் பிறந்த கண்ணனைப் பாட தென்கோடி ராகங்களா ? சிந்திக்க வைக்கிறார் கவியரசர்.

கண்ணனையே கணவனாக அடைய வேண்டி பாசுரங்கள் பாடிய ஆண்டாள், ஆதிசங்கரர்,ராமானுஜர்,வேதாந்த தேசிகர் என்போர் மட்டுமல்ல கண்ணனையே எண்ணிப் பல பாடல்கள் பாடிய மகாகவி பாரதியார் வரை அனைவரையும் ஈந்தது தென்திசை தானே !

தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

ஶஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்

என்று அழகுற வரிகளை அள்ளி வீசுகிறார் எங்கள் கவியரசர்.

சரி ராகங்களை அழைத்து வந்து விட்டார். அவை கச்சேரியை ஆரம்பிக்க வேண்டாமா ?

அவை எங்கிருந்து ஆரம்பிக்கப் போகின்றன? ஓ அவைகளும் கண்ணனின் குழந்தைப் பருவத்திலிருந்துதான் ஆர்ம்பிக்கின்றனவாம். அதுவும் அந்தக் குழந்தையாய் அவர் யாரைச் சித்தரிக்கின்றாரென்றால் குருவாயூரில் இருந்து பக்தர்களை ரட்சிக்கும் குருவாயூரப்பனைச் சொல்கிறார்.

அதுவும் கண்ணனை குருவாயூரில் தவழ்ந்தவன் என்று சொல்லாமல் தவழ்கின்றவன் அதாவது இன்றும் அருள் பாலித்துக் கொண்டிருப்பவன் என்கிறார்,

குருவாயூரில் தவழ்ந்து ரட்சிக்கும் அதே கண்ணன் தானே மதுராவையும் ஆள்கின்ற மன்னனாகக் காட்சியளிக்கிறான் இல்லையா ? அதை எப்படி இங்கே இணைக்கிறார் பாருங்கள்,

குருவாயூர் தன்னில் அவன்

தவழ்கின்றவன்

ஒரு கொடியோடு மதுராவை

ஆள்கின்றவன்

ஆகா, இதுதான் கவியரசருக்கேயுரித்தான தனி முத்திரை எனலாம்.

அதுசரி ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் என்கிறார் ஏன் தெரியுமா? கண்ணனின் அரசாட்சியில் அவனுக்கு அங்கு எதிர்க்கட்சியே கிடையாது. மாற்றுக்கொடியில்லா மாநகரம். கன்ணன் எனும் அந்த மதுரகானம் இசைப்பவனின் மதுரத்தில் மயங்கி பேதமின்றி மக்கள் வாழ்கிறார்கள். என்கிறாரோ நம் கவியரசர் ?

எல்லாவற்றையும் தன் கானத்துக்குள் வைத்தவருக்கு அடடே நாம் தரிசிக்கும் எங்கள் ஏழுமலையானின் உறைவிடத்தை உரைக்க வேண்டாமோ என்ற எண்ணம் வருகிறது போலும்.

சரி மீண்டும் ஒரு சம்பவ சம்பாஷனைக்குள் நுழைவோம் வாருங்களேன், கண்ணா உன் அம்மாவான எனக்கு என் மகனின் திருமணம் ஒனறைக்கூட பார்க்க வாய்ப்பளிக்கவில்லையே என்றொரு குறையைக் கூறுகிறாள்.

சரி கவலையை விடுங்கள் தாயே நான் கலியுகத்தில் ஸ்ரீனிவாசனாக அவதரிப்பேன் நீயே மறுபடியும் எனக்குத் தாயாக வருவாய் உன் முன்னிலையிலேயே நான் திருமணம் செய்து உன் குறையைப் போக்குகிறேன் என்பார்.

ஸ்ரீனிவாசப் பெருமாளாக கன்ணனும் அவரது தாய் வகுளமாலிகையாக யசோதையும் வந்து ஸ்ரீனிவாசக் கலியாணத்தில் யசோதையின் குறையும் தீர்க்கப்பட்டு திருப்பதியில் ஏழுமலையானாக வாசம் செய்கிறார்.

இதையெல்லாம் கவியரசரின் அழைப்பின் பேரில் வந்து பாடிக் கொன்டிருக்கும் ராகங்கள் அட ஸ்ரீரங்கத்தை விட்டு விடலாமா என்று எண்ணி விட்டன. விடுவாரா கவியரசர் ? விளையாடி விட்டார் போங்கள். இரண்டையும் இணைத்து அழகாய்த் ராகங்களின் பாகமாகத் தருகிறார்.

திருவேங்கடத்தில் அவன்

அருள்கின்றவன்

அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி

கொள்கின்றவன்

ராகங்களை பெண்களாகத்தான் பார்ப்பது வழக்கம். அப்படியான சூழலில் தன்னுடைய உதவிக்கு அபயக்குரல் கொடுத்த பாஞ்சாலியைப் பற்றிக் கூறாமல் விட்டுவிடலாகாது என்பதால் அடுத்த வரி வந்து விழுகிறது.

பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்

என்று சூதாட்டத்தில் தம்மையே இழந்து பின்னர் பாஞ்சாலியை இழந்த பாண்டவர்களினால் காப்பாற்ற முடியாத பாஞ்சாலியைக் காக்க தன்கையைக் கொடுத்த கண்ணனின் புகழை அவ்வரிகள் உள்ளடக்குகின்றன.

அது மட்டுமா ? அச்சம்பவமே போரின் ஆரம்பம் என்பதை சூசகமாகக் குறிப்பிடுவதற்கு ஏதுவாக பரந்தாமன் சங்கை எடுத்தான் என்று கூறுகிறார்.

சங்கை என்பது இரண்டு வகையாக அர்த்தப்படுத்தப்படும். பகாப்பதமாக எடுத்தால் அது பயத்தையும், சந்தேகத்தையும் குறிக்கும். பகுபதமாக எடுத்தால் சங்கை எடுத்து முழக்கினான் என்று கொள்ளலாம்.

பாஞ்சாலியின் பயத்தையும் , சந்தேகத்தையும் போக்கினான் கண்ணன் என்பதோடு போரின் ஆரம்பத்தை அறிவிக்கும் வகையில் சங்கை முழக்கினான் என்றும் பொருள்படக் கூடிய வகையில் அடுத்த வரிகள் அமைகின்றன.

அன்று பாரதப்போர் முடிக்க

சங்கை எடுத்தான்

என்ன இது அடாவடித்தனமாக இருக்கிறதே துரியோதனின் நாட்டின் பகுதியைப் பறித்தல்லவா கண்ணன் பாண்டவர்களுக்கு கொடுத்தான் என்று எண்ணினால் அதற்கு கூட பதில் வருகிறது.

என்ன என்கிறீர்களா ?

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக்

கொடுத்தான்

என்று கண்ணன் முறையற்ற செயல் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவித்தும் விடுகிறார்

சரி இதுவெல்லாம் சரிதான் இத்தனை விடயங்களையும் கண்டு, கேட்டு, படித்தவர்களுக்காய் எதைக் கொடுத்தான் கண்ணதாசனின் கண்ணன் என்று பார்த்தால்,

நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம்

கொடுத்தான்

என்று கூறி எமக்குக் கிடைத்ததுதான் அளப்பரிய பரிசு கண்ணனுக்கு பெரிய பாராட்டுப் பத்திரமே தந்து விடுகிறார்.

கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீக அறிவியல் ஆழமானது என்பதைப் புரிந்து கொள்ளும் பயணத்தில் இது மற்றொரு மைல்கல்.

அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (6)

  1. Super… wonderful..awesome… no words to express the indepth understanding and explanation line by line.. by Sakthidasan… I love this song too much from my teen age… but not with this detailed meaning.. now I am happy I got a beautiful meaning… unforgettable one.. fortunate to have such a great one… thanks a ton.. wishes to find such many more songs and present to the spiritual ppl.. 🌎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.