Tag: எம். ஜெயராம சர்மா

  • கைகோர்த்து நிற்போமே !

     

     

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    gandhi_delhi_500_22_05278

     

    பசித்திருந்தார் தனித்திருந்தார்
    விழித்திருந்து செயற்பட்டார்
    பழிபாவம் தனைவெறுத்துப்
    பக்குவமாய் வாழ்ந்திருந்தார்!

    தனக்கெனவே பலகொள்கை
    இறுக்கமாய்க் கடைப்பிடித்தார்
    தளர்ந்துவிடும் வகையிலவர்
    தனைமாற்ற விரும்பவில்லை!

    பொறுப்புகளைப் பொறுமையுடன்
    பொறுப்பேற்றே ஆற்றிநின்றார்
    வெறுத்தாலும் பலவற்றை
    விருப்பமுடன் அவர்செய்தார்!

    மற்றவரை மனம்நோக
    வைக்காமல் இருந்துவிட
    மனத்தளவில் வேதனையை
    வைத்துவிட்டார் மாமனிதர்!

    தன்வீட்டை நினையாமல்
    தாய்நாட்டை நினைத்துநின்றார்
    தாய்சொல்லைத் தட்டாத
    தனயனாம் காந்திமகான்!

    தாய்சொல்லே வேதமாய்
    தான்மனத்தில் கொண்டதனால்
    தாய்நாட்டின் விடுதலைக்காய்
    தனையிழக்கத் துணிந்துநின்றார்!

    உடையை மாற்றினார் உணவை மாற்றினார்
    படையை மாற்றினார் பாதைகூட மாற்றினார்
    ஆயுதத்தை மாற்றினார் அஹிம்சைதனை ஏற்றினார்
    அகிலம்பார்த்து வியந்துநிற்க அரக்கத்தையும் ஓட்டினார்!

    நீதிபார்த்து நின்றுநின்று நிமிர்ந்து செயலாற்றினார்
    சாதிபேதம் தனையுடைத்துச் சமத்துவத்தைப் போற்றினார்
    பாதியாடை தானுடுத்திப் பார்வியக்கச் செய்திட்டார்
    பாரதத்தை மீட்டெடுத்த பாரதத்தின் பொக்கிஷம்!

    பண்புகாத்து பலரும்போற்ற பாரதத்தை உருவாக்க
    பட்டபாடு கொஞ்சமல்ல காந்திமகான் வாழ்வினிலே
    காந்திபட்ட பாடெல்லாம் கடுகளவு நினையாமல்
    காற்றிலே பறக்கவிட்டுக் கவலையின்றித் திரிகின்றார்!

    நீதியொரு பக்கம் நிட்டூரம் மறுபக்கம்
    சாதியொரு பக்கம் சதிகாரர் நாற்பக்கம்
    கள்ளமின்றிச் சிரிக்கின்ற காந்திபடம் காசுதனில்
    கள்ளப்பண முதலைகளோ நல்லவராய் உலவுகிறார்!

    காசுபற்றி நினையாத காந்திமகான் இப்போது
    காசுதனில் இருந்தாலும் கவலையுடன் தானிருப்பார்
    காந்திதனைக் காசில்வைத்துக் கலப்படங்கள் செய்வாரைக்
    காந்தி ஜயந்திதனில் கல்லெறிந்து கொல்லல் வேண்டும்!

    மதுவெறுத்த காந்திமகான் மனம்மகிழ வைப்பதற்கு
    மதுக்கடையை ஒழித்துவிட மனத்திலெண்ணம் வருமாயின்
    புதிதான பாரதத்தைப் பூமியிலே கண்டிடலாம்
    அதுதானே காந்திமகான் ஜயந்திக்கே அர்த்தமாகும்!

    கொடியேற்றம் மலர்வளையம் கொண்டாட்டம் பேச்சரங்கம்
    வெளிவேஷம் எல்லாமே காந்திக்குப் பொருத்தமல்ல
    பழிபாவம் தருகின்ற பாதகங்கள் தனையொழித்துப்
    பாரதத்தை மீட்டுவிட்டால் காந்திக்குப் பெருமைவரும்!

    காந்தி ஜயந்திதனைக் கருத்துடனே மனத்திருத்திக்
    காந்தி மனம்விரும்பும் காரியங்கள் செய்துநிற்போம்
    காந்தி மகான் கண்டெடுத்த கண்ணான சுதந்திரத்தைக்
    காந்தி மகான் வாழ்த்திநிற்கக் கைகோத்துக் காத்துநிற்போம்!

    Share
  • இறைஞ்சுகிறேன் இறைவனிடம்!

    (எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா) 

    தலைவைத்து மடிமீது
    நானுந்தன் முகம்பார்த்து
    நிலைதளரும் வேளைதனில்
    நீயென்னைத் தலைதடவி
    உளம்நிறைய ஆவலுடன்
    உணர்வுகொண்டு உருக்கமுடன்
    இருக்கின்ற நிலைகாண
    ஏங்கிநான் இருக்கின்றேன்!

    ஓடிநீ   விழுந்துவிட்டால்
    என்னுதிரம் கொட்டிவிடும்
    உன்கண்ணில் நீர்வழிந்தால்
    என்னுள்ளம் பதறிவிடும்
    வாடிவிடும் முகம்காணின்
    வந்துவிடும் பெருங்கவலை
    வையகத்தில் என்னுயிரே
    வடிவழகே நீதானே!

    நடுச்சாமம் முழித்துவிட்டால்
    நடுக்கமுடன் எனையணைப்பாய்
    படுக்கையிலே என்னருகே
    படுத்துவிட அடம்பிடிப்பாய்
    பிடித்தபடி படுத்திடுவாய்
    பெருவிருப்போ டிருப்பாய்
    உடுத்திருக்கும் உடுப்பையெல்லாம்
    உதறிநீ எறிந்திடுவாய்!

    என்மார்பில் முகம்புதைத்து
    என்கழுத்தை இறுக்கிடவே
    உன்கைகள் தனைக்கொண்டு
    உணர்வுடனே பற்றிடுவாய்
    எப்போதும் அதைநினைத்து
    இன்றுமே பார்க்கின்றேன்
    எனையிறுக அணைப்பதற்கு
    எவருமின்றித் தவிக்கின்றேன்!

    இல்லத்தில் விட்டுவிட்டு
    ஏன்மகளே சென்றுவிட்டாய்
    நல்லபடி உனைவளர்த்து
    நான்மகிழ்ந்து இருந்தேனே
    தொல்லையென நீநினைத்து
    என்னையிங்கு விட்டுவிட்டாய்
    நல்லபடி நீவாழ
    நானிறையை வேண்டுகிறேன்!

    உன்கையின் அணைப்பாலே
    உலகினையே மறந்தேனே
    உன்பேச்சைக் கேட்டவுடன்
    உளம்நிறைவு பெற்றேனே
    உன்சிரிப்பு என்னாளும்
    உயர்மருந்து ஆனதடி
    என்தவிப்பை உன்மனது
    ஏனின்னும் உணரலையோ!

    எப்படிநீ இருந்தாலும்
    என்னிதயம் உன்வசமே
    தப்புநீ செய்தாலும்
    தாங்குவது என்னியல்பே
    எப்பவுமே என்மகளே
    இடரின்றி நீயிருக்க
    இறைவனிடம் என்னாளும்
    இறைஞ்சுகிறேன் என்னுயிரே!

     

     

    Share
  • கழல்பணிந்து நிற்போமே !

       ( எம் .ஜெயராமசர்மா . …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    நலமான உடல்வேண்டும்

    நல்லகல்வி வரவேண்டும்

    வளமான செல்வமெங்கள்

    வாழ்வினுக்கு வேண்டுமம்மா

    விலைபோகா மனம்வேண்டும்

    வீண்பழிகள் அறவேண்டும்

    நிலையான வாழ்வமைய

    நின்னருளை வேண்டுகின்றோம் !

     

    செல்வத்தைச் சேர்பதற்கு

    சேராதவிடம் சேர்ந்து

    அல்லல்பட்டு அல்லல்பட்டு

    அலைகின்றார் மாநிலத்தே

    தொல்லுலகில் செல்வமதை

    நல்லபடி சேர்ப்பதற்கு

    வல்லமையைக் கேட்டிடுவோம்

    வரம்தருவாள் லட்சுமியும் !

     

    வீரமென்னும் பேராலே

    கோரம்மிங்கே நடக்கிறது

    வீரத்தின் தூய்மையெலாம்

    விபரீதம் ஆகிறது

    உடல்வீரம் உளவீரம்

    உண்மைவீரம் ஆவதற்கு

    துர்க்கையது பாதமதை

    துணையெனவே பற்றிடுவோம் !

     

    கற்றறிந்த பெரியோர்கள்

    கபடமுடன் நடக்கின்றார்

    கல்வியினைக் காசாக்கி

    களங்கத்தை ஊட்டுகிறார்

    கற்றபடி நடக்காமல்

    மற்றவரை வதைக்கின்றார்

    கல்விதரும் சரஸ்வதியே

    காப்பாற்று கல்விதனை !

     

    அறிவில்லா வீரத்தால்

    ஆவது ஒன்றுமில்லை

    ஆற்றலில்லா கல்வியினால்

    ஆருக்கும் நன்மையில்லை

    கல்வியொடு வீரம்செல்வம்

    கைகோர்த்து நிற்பதற்கு

    கருணைநிறை சக்திகளின்

    கழல்பணிந்து நிற்போமே !

     

     

     

    Share
  • காற்று

    ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
    காற்றுக்கு மாற்றுப்பேர் நிறையவுண்டு
    கவரும்படி வீசினால் தென்றலாகும்
    சீற்றமுடன் வந்துவிடின் சூறாவளி
    சில்லென்று வீசினால் குளிர்காற்றாகும்
    வடக்கிருந்து வந்துநிற்கும் வாடையாகும்
    வனங்களிடை வீசினால் சேதமாகும்
    அளவோடு வீசினால் இதமேயாகும்
    ஆனாலும் காற்றெமக்கு ஆதாரமே !

    வாகனங்கள் ஓடுவதும் காற்றாலே
    வானூர்தி இயங்குவதும் காற்றாலே
    நாமியங்கி நடப்பதுவும் காற்றாலே
    நல்விளைச்சல் விளைவதுவும் காற்றாலே
    வான்வெளியில் காற்றுநிலை அற்றுப்போனால்
    மண்மீது உயிர்கள்நிலை அற்றுப்போகும்
    கஞ்சியின்று வாழ்நாளைக் களித்திடலாம்
    காற்றின்றி வாழ்ந்துவிடல் அரிதேயாகும் !

    சோறின்றி இருந்தாலும் இருந்திடலாம்
    சொட்டுநீர் அருந்தாதும் வாழ்ந்திடலாம்
    ஆடையின்றி வாழ்ந்தாலும் வாழ்ந்திடலாம்
    ஆனாலும் காற்றின்றி வாழமாட்டோம்
    நீழ்புவியில் வாழ்வார்க்குக் காற்றுத்தேவை
    நிம்மதியாய் வாழ்வதற்கும் காற்றும்தேவை
    ஆதாரம் எமக்கென்றும் காற்றேயாகும்
    ஆதலால் நற்காற்றைச் சுவாசிப்போமே !

    நகரத்தில் நற்காற்றை காணமாட்டோம்
    நகரமெலாம் நரகமாய் ஆகிப்போச்சு
    கட்டிடங்கள் இஷ்டமுடன் எழும்பியாச்சு
    கரியமிலவாயு அங்கே புகுந்துமாச்சு
    சுவாசிக்கும் காற்றெல்லாம் சுத்தமின்றி
    அபாயத்தை கொடுக்கும்நிலை ஆகிப்போச்சு
    சுவாசிக்க நற்காற்றை மக்கள்தேடி
    சுற்றுகிறார் வெட்டவெளி நாடிநாடி !

    தொழிற்சாலைப் புகையெல்லாம் ஒன்றுகூடி
    சுவாசிக்கும் காற்றுக்கு ஆப்புவைக்கும்
    அவலநிலை இப்போது அதிகமாகி
    அநேகம்பேர் நோயிலினிலே மாழுகின்றார்
    இயற்கைதரும் காற்றதனை எமக்குவாரா
    இடையூறு பலவழியில் பெருகிப்போச்சு
    ஆட்சியாளர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து
    அசுத்தமின்றிக் காற்றுவர வழியைக்காண்பீர் !

    காயமென்னும் பெயர்பெற்ற உடலம்தன்னை
    காற்றதுவே இயக்கி நிற்கும் சக்தியாகும்
    மாயமென உருவம்பெற்ற காற்றுமங்கே
    மறைந்தோடி விட்டுவிடின் மரணமாகும்
    உருவமிலா காற்றுமங்கே உள்ளேநின்று
    ஊனுடம்பை உருவமாக்கி காட்டிநிற்கும்
    அக்காற்றின் அழுக்ககற்ற முனையாவிட்டால்
    அனைவருமே அசைவற்று இருப்போமன்றோ !

    Share
  • நீர் !

    எம் .  ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

    பாரினிலே நாம்வாழ நீரெமக்கு முக்கியமே

    வேரினுக்கு நீரின்றேல் விருட்சமெலாம் வந்திடுமா

    ஊருக்கு ஒருகுளத்தில் நீர்நிரம்பி இருந்துவிடின்

    ஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடுமே

    நீரின்றி பலமக்கள் நீழ்புவியில் இருக்கின்றார்

    ஆர்நீரைக் கொடுத்தாலும் அருந்திவிடத் துடிக்கின்றார்

    கார்கொண்ட மேகங்கள் கனமழையைக் கொட்டிவிடின்

    நீரின்றி இருப்பார்கள் நிம்மதியாய் இருப்பரன்றோ !

     

    விஞ்ஞானம் வளர்ந்ததனால் விந்தைபல விளைகிறது

    நல்ஞானம் எனமக்கள் நாளுமே போற்றுகிறார்

    அவ்ஞான வளர்ச்சியினால் அளவற்ற தொழிற்சாலை

    ஆண்டுதோறும் பெருகிநின்று அவலத்தைத் தருகிறது

    தொழிற்சாலைக் கழிவனைத்தும் தூயநீரில் கலக்கிறது

    அதையருந்தும் மக்களெலாம் ஆபத்தில் சிக்குகிறார்

    ஆபத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர் வராவிட்டால்

    அருந்துகின்ற நீராலே அவலம்தான் பெருக்கெடுக்கும் !

     

    கிராமப் புறங்களிலே கிணற்றுநீர் இருக்கிறது

    மழைபொய்த்து விட்டுவிட்டால் அந்நீரும் வற்றிவிடும்

    நகரப்புறங்களிலே நன்னீரே என்று சொல்லி

    தகரத்தில் போத்தல்களில் தண்ணீரைக் காணுகிறோம்

    விதம்விதமாய் போத்தல்களில் விற்கின்ற நீரனைத்தும்

    வெளிக்கிட்டு வருமிடத்தை யாருமே பார்ப்பதில்லை

    போத்தல்களில் வரும்நீரை  பொறுப்பின்றி அடைப்பதனால்

    குடிக்கின்றார் அனைவருமே கிடக்கின்றார் கட்டிலிலே !

     

    உயிர்வாழ வேண்டுமெனில் உடல்கேட்கும் நீரினையே

    நீரின்றி வாழ்ந்திடுதல் நினைத்திடவே முடியாது

    உட்செல்லும் நீராலே உடல்நிறைவு பெறுகிறது

    உயிரோட்டம் தருவதற்கு நீரெமக்கு தேவையன்றோ

    ஆற்றுநீர் ஊற்றுநீர் அனைத்தையும் குடித்தாலும்

    அசுத்தமில்லா நீரினையே அருந்திடுதல் முறையாகும்

    உள்போகும் நீரினைநாம் உயிரெனவே நினைத்திடுவோம்

    உவப்புடனே நீரருந்தி உலகத்தில் வாழ்ந்திடுவோம் !

     

    ஆபிரிக்க நாடுகளில் அருந்துதற்கு நீரில்லை

    அவர்நீரை எடுப்பதற்கு அலைந்தபடி இருக்கின்றார்

    ஆட்சிதனில் இருப்பார்கள் அதைப்பற்றி அலட்டாமல்

    ஆடிப்பாடி விடுதிகளில் அருந்துகிறார் குடிவகையை

    குடிக்கின்ற நீருக்குக் குடிகள்படும் அவலமதை

    குடித்தாட்டம் போடுகிறார் கொஞ்சமேனும் நினையாமல்

    அடிக்கின்ற கூத்ததனை ஆண்டவனே நீபாரு

    அல்லல்படும் மக்களுக்கு அருந்திவிட நீரைக்கொடு !

    Share
  • ஆனந்தம் பெருகிடுமே !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    கல்லுக்குள் உறைந்திருக்கும்

    கலைநயத்தைப் பார்ப்பதற்கு

    மெல்லவே உளிசென்று

    வெட்டிவிடும் கல்லதனை

    வேண்டாத பகுதிகளை

    வெட்டியே எறிந்துவிடின்

    வெளிப்படும் பகுதிதான்

    வியப்பெமக்குத் தந்துவிடும் !

     

    வேதனையும் சோதனையும்

    தாங்குகின்ற  வேளையில்தான்

    மேலான தன்மையங்கே

    வெளிப்பட்டு வந்துநிற்கும்

    கல்பட்ட வேதனையால்

    கடவுளுரு காட்சிதரும்

    கால்மிதிக்கும் கல்லுக்கு

    வேதனைகள் புரியாது !

     

    மனமென்னும் கல்தன்னை

    மாற்றிவிட  வேண்டுமென்று

    தினமுமே பலவற்றை

    செய்கின்றோம் வாழ்வெல்லாம்

    ஆனாலும் அம்மனமோ

    ஆகாத வழிசென்று

    ஆணவத்தை அணைத்துவிட

    ஆர்வம்கொண்டே நிற்கிறது !

     

    ஆணவத்தை அணைத்துவிட்டால்

    அன்பங்கே அகன்றுவிடும்

    அறமொளிந்து மறமோங்கி

    ஆசையங்கே ஆர்ப்பரிக்கும்

    அன்புபாச நேசமெல்லாம்

    அனாதரவாய் ஆகிவிடும்

    ஆண்டவனின் நினைப்புமே

    அற்பமாய் ஆகிவிடும் !

     

    வேண்டாத அத்தனையும்

    வேராக ஊன்றிவிடின்

    வில்லங்கம் அத்தனையும்

    நல்லவற்றை அழித்துவிடும்

    வில்லங்கம் தனையகற்ற

    நல்லதொரு செயலாக

    வேண்டாத அத்தனையும்

    வெட்டிவிடல் முறையாகும் !

     

    வேண்டாத விஷயங்களை

    விரைவாக வெட்டிடுவோம்

    வேதனையும் சோதனையும்

    சாதனைக்கே வழிசமைக்கும்

    ஆதலால் அனைவருமே

    ஆண்டவனைக் காண்பதற்கு

    அகற்றிடுவோம் ஆணவத்தை

    ஆனந்தம் பெருகிடுமே !

    Share
  • எமது வாழ்வில் கோவில் – பகுதி II

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா,

    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

    (எமது வாழ்வில் கோவில் – பகுதி I)

    கோவில்கள் சமூகத்தின் உயிர்நாடியாகும். கோவில்கள் ஆன்மீகத்தின் உறைவிடமாகும். அறமுரைக்கும் இடமாகாவும்,நீதிவழங்கும் இடமாகவும், சாந்தியினை சமாதானத்தினை வழங்கும் இடமாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வின் மையப் பொருளான ஆண்டவனையே காணும் இடமாகவும் விளங்குகின்றது என்பது முக்கியமாக  இருக்கிறதல்லவா?

    மனம் நொந்தாலும் கோவிலுக்குப் போவோம். மனம் மகிழ்ந்தாலும் கோவிலுக்குப் போவோம்.  கோவிலுக்குப் போவதால் எங்கள் குணங்களே மாறுகின்றன அல்லவா?கோவிலைச் சாந்தி நிலையம் என்று கூறுவது பொருத்தமாக  இருப்பது போலத் தெரிகிறதல்லவா ?

    சாந்தி தருவது கோவில்.சக்தி தருவது கோவில். ஏங்கிய பேர்களுக்கு என்றும் இன்பம் அளிப்பதும் கோவில். தூங்கிய மனத்தை நாளும் துடித்து எழச்செய்வதும் கோவில். சுந்தரமாய் இருப்பதும் கோவில். சுகத்தை அளிப்பதும் கோவில். வந்திடும் அடியார்களுக்கு மாற்றத்தைத் தருவதும் கோவில். நொந்துநிற்கும் உள்ளங்களை நொடியாமல் செய்வதும் கோவில். மந்திரமயமாய் இருந்து மருளினைப் போக்குவதும் கோவில்கள் அன்றோ !

    கோரயுத்தங்கள் புரிந்து வெற்றிகளைக் குவித்த சோழமன்னர்கள் தான் வானளாவிய கோவில்களைக் கட்டினார்கள். சோழப் பேரரசு காலம் கோவில்களின் பொற்காலம் என்றும் எங்கள் சமயத்தின் உன்னத காலம் என்றும் சொல்லலாம். எத்தனையோ யுத்தங்கள் புரிந்து வெற்றிகளைக் குவித்தாலும் சோழர்காலம் இன்றளவும் போற்றப் படுவதற்குக் காரணம் கோவில்கள் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள். அந்தளவு சோழர்காலத்தில் கோவில்கள் சமூகத்தின் மையநாடியாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்க விசயமெனலாம். கோவில்கள் நீதிஸ்தலமாகவும்,  வங்கிகளாகவும்,இலக்கியங்களை அரங்கேற்றும் மன்றமாகவும், மொழிப்பற்றிய கருத்துக்களை அரங்கேற்றும் அவையாகவும், பலவித கலைகளை இணைக்கும் மத்தியாகவும் என அரச சபையினைவிட முக்கியத்துவம் மிக்கனவாகக் கோவில்களே விளங்கி இருந்தன என்பதை வரலாற்றால் அறிகின்றோம். சைவத்தின் கண்களாக விளங்குகின்ற திருமுறைகளே கோவிலில் இருந்துதான் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது.திருமுறைகள் கோவில் வழிபாட்டின் முக்கியத்துவத்தை மிகவும் சிறப்பாகச் செப்பி நிற்கின்றன,

    கந்தபுராணம், பெரியபுராணம், யாவுமே கோவிலில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டன. சேக்கிழார் பெருமானின் பெரியபுராண அடியார்கள் வாழ்வே கோவிலினையே மையமாய்க் கொண்டிருந்தது என்பது மனக்கொள்ள தக்கதாகும்.

    கோவில்களை அடிப்படையாகக் கொண்டே இசை, நடனம்,சித்திரம் சிற்பம், கட்டிடக்கலை யாவும் வளர்ச்சி அடைந்தன. சிற்பக்கலையின் பல்வேறுவித பரிணாமங்கள் கோவில் இல்லாவிட்டால் வந்திருக்குமா என்பது ஐயத்துக்கு உரியதே ! அதே போன்றதே கட்டிடக் கலையுமாகும். பல்வேறுவிதமான நுட்பங்கள் கொண்ட கட்டிடக் கலைகளின் இருப்பிடமாய் கோவில்கள் விளங்கி இருக்கின்றன.  இன்றளவும் இக்கலைகள் கோவில்களை அண்டியே வளர்கின்றன என்பதும் முக்கிய அம்சமெனலாம். சமயம் சார்ந்தவையாக  ஓவியம், சிற்பம் இருந்தாலும் கலைகள் என்னும் விதத்தில் என்றும் சிறப்பினையே தந்துகொண்டு இருக்கிறது என்பது உண்மையாகும்.

    சோழர்களைத் தொடர்ந்து பாண்டியர்கள், பல்லவர்கள் கோவில் கட்டுவதில் பெரிதும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் சோழர்காலம் என்பது எங்கள் சமயவரலாற்றிலும் கோவில்கள் வரலாற்றிலும் செல்வாக்கு நிறைந்த காலமாகவே விளங்கியது என்பது வரலாற்று உண்மையெனலாம்.

    சோழர்காலம் மக்களுக்குக் கோவில்கள் எந்தளவுக்கு முக்கியம் வாய்ந்திருந்தது என்பதை வெளிப்படுத்தும் காலமாகவே இருந்தது எனலாம். கலை கலாசாரம் இவைகள் கோயில்களினூடாக  மக்களுக்கு சென்றடையும் என்னும் ஒரு நம்பிக்கை இக்காலத்தில் பிறந்தது என்றே கூறலாம். இதற்கு முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமானும் முக்கிய காரணமாக விளங்குகிறார் எனலாம். அரசர்களை நல்வழிப்படுத்தும் நல் அமைச்சராக சேக்கிழார் அமைந்தமையால் சோழமன்னர்களின் போர்முகம் மாறி அங்கு சமயமும் கோவில்களும் மனத்தில் அமர்ந்து கொண்டுவிட்டது. இதனால் ஆட்சியும் சிறந்தது. அரசர்களும் ஆண்டவன் பக்கம் சென்றார்கள். ஆண்டவனுக்கான கோவில்களும்  எழுச்சி பெற்றன. மன்னர்களின் மனம் கோவிலை நாடவே மக்களும் கோவிலைத் தஞ்சமடைந்தனர். இதனால் ஊர்கள் தோறும் கோவில்கள் எழுச்சி பெற்றன. மக்கள் வாழ்விலே கோவில்கள் தான் முக்கியம் என்னும் ஒரு கருதுகோள் ஊன்றிவிட்டதையே காண்கின்றோம்.

    பெரியபுராணம் உருவானதால் கோவில்களின் முக்கியத்துவமும் அடியார்களின் பெருமையும் யாவருக்கும் தெரிய வந்தது. கோவிலில் செய்யும் தொண்டுகள் எம்மை உய்விக்கும் வல்லமை வாய்ந்தவை என்னும் கரு உருவாவதற்கும் பெரிய புராணம் வழிவகுத்தது எனலாம்.

    ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமமே என்னும் அரிய தத்துவத்தை சமூகத்துக்கு உணர்த்தவும் பெரியபுராணம் வழிவகுத்தது எனலாம். அடியார்களின் வரலாற்றைப் படிக்கின்றவர்கள் நல்ல வழியினை நாடவும் கோவிலைத் தேடவும் கும்பிட்டு மனச்சாந்தி பெறவும் தொடங்கினர் எனலாம்.

    “நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா – நித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்கு ” என்று அப்பர் சுவாமிகளின் அழைப்பினைப் பார்க்கும்பொழுது கோவிலின் இன்றியமையாமை புலப்படுகிறதல்லவா ? நிலைபெறவே யாவரும் விரும்புகின்றோம்.

    அப்படி விரும்பும் எமக்கு அதற்கான உருவை, கருவை, நல்கும் இடம் கோவில்களே தான் என்பதுதான் அப்பரின் வாக்கின் அர்த்தமாய் அமைகிறது. கோவிலைப் பார்த்தவுடன் மனமதில் நல்ல மாற்றம் வந்து விடுகிறது. அந்தக் கோவிலுக்குள் சென்றுவிட்டால் உள்ளுக்குள் எம்மையறியாமலேயே ஒரு புத்துணர்வும் புகுந்து விடுகிறது. மனதிலுள்ள பாரங்கள் எல்லாம் குறைந்து விட்டது போன்ற ஒரு நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. இவையெல்லம் இந்த  “நிலைபெறுதலில்” அடங்கி இருக்கிறது என்பதை யாவரும் உணர வேண்டும்.

    எதைத் தொடங்குவதாக இருந்தாலும் அதனைக் கோவிலில் வைத்தே தொடங்கும் நிலை உருவானது. திருமணமோ, ஏடு தொடங்கலோ, காது குத்தலோ, புதுத் தொழில் ஆரம்பித்தலோ, புதுமனைப் புகுவிழாவுக்கு உரிய பொருட்களை வைத்து எடுப்பதோ, பிரயாணங்கள் செல்லத் தொடங்கு முன்னர் சென்று வழிபடுதலோ என அனைத்தையுமே கோவில்களில் தான் தொடங்கும் வழக்கம் அன்று தொடங்கி இன்றுவரை நம்மிடம் ஊறிப்போய் இருக்கிறதல்லவா ? இவ்வாறு செய்கின்ற பொழுது இவற்றைப் படித்தவரும் செய்கின்றார். பாமரரும் செய்கின்றார். யாவருடைய மனத்திலும் கோவில் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. என்பதையே இது காட்டுகிறதல்லவா ?

    (தொடரும்)

    Share
  • எமது வாழ்வில் கோவில் – பகுதி I

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா, B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS

    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்              

     

    “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.   இவ்வாறு கோவிலை இவர்கள் முதன்மைப் படுத்தியதற்குக் காரணம் என்ன? கோவில் இல்லா விட்டால் வாழவே முடியாதா ? கோவில் என்பது வாழ்க்கையில் கட்டாயமான ஒன்றா ? இப்படிப் பல வினாக்கள் நம்முள் பலருக்கு எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வினாவானது அன்று தொடங்கி   இன்றுவரை மக்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கிறது. இப்படி எழுகின்ற மனங்களுக்குத் தெளிவு பிறக்கும் நோக்கில் சில கருத்துக்களை முன்வைக்கு முகமாகவே இச்சிந்தனை  இங்கு உருவாகி வந்திருக்கிறது.

     வாழ்க்கை என்பது மனிதனுக்குக் கிடைத்த பெரும்பேறு என்று தான் எண்ண வேண்டும். மனிதன் விலங்குகள் போல வாழ்ந்துவிட முடியாது.

    ஏனென்றால் சிந்தித்துச் செயலாற்றும் வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. சிந்திக்கும் ஆற்றலே மனிதனை உயர்வு உடையவன்   ஆகக்காட்ட  முயல்கிறது எனலாம். விலங்குகளோடு ஒன்றாகவே காட்டில் வாழ்ந்த மனிதன் இப்பொழுது இல்லை. மனிதனது வாழ்வானது ஓங்கி உயர்ந்து வந்து நிற்கிறது. அப்படி வந்து நிற்கும் நிலையிலும் மனிதன் மனத்தில் ஒருபக்கம் விலங்கு குணமும் இயல்பும் ஒழிந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மனிதன் மனம் போனபடி வாழ முற்படுகின்றான். எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து வாழ்வினையே தொலைத்தும் இழந்தும் விடுகின்றான்.

    இந்த நிலையில் ” இப்படித்தான் வாழவேண்டும் ” என்னும் நெறி முறையினை மனிதனுக்கு வழங்கி நிற்பது கோவில்களும் சமயங் களுமே ஆகும். இதனால்தான் ” கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ” என்று எமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்

    எனக் கொள்ள முடிகிறதல்லவா ?

    (தொடரும்)

    Share
  • போராட்டம்

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

     

     

    மொழிகாக்கப் போராட்டம்

    இனம்காக்கப் போராட்டம்

    மதம்காக்கப் போராட்டம்

    மன்னருக்கும் போராட்டம்

    ஏழைக்கும் போராட்டம்

    கோழைக்கும் போராட்டம்

    இவ்வுலகில் போராட்டம்

    எத்தனையோ நடக்கிறது !

     

     

    இல்லாமை காரணமாய்

    எடுக்கின்றார் போராட்டம்

    வல்லமையை நிலைநிறுத்த

    வகைவகையாய் போராட்டம்

    வாழவெண்ணி நடத்துகிறார்

    வாழ்வெல்லாம் போராட்டம்

    நீளமாய் தொடர்கிறது

    நீள்புவியில் போராட்டம் !

     

     

    முதலாளி போராட்டம்

    முதல்பெருக வைப்பதற்கு

    தொழிலாளி போராட்டம்

    தோல்வியின்றி வாழ்வதற்கு

    அரசியலார் போராட்டம்

    ஆட்சியிலே அமர்வதற்கு

    அவர்மனதில் போராட்டம்

    அதிகசொத்துச் சேர்ப்பதற்கு !

     

    மாணவர்கள் போராட்டம்

    மதிப்பெண்கள் பெறுவதில்

    பெற்றவர்கள் போராட்டம்

    பிள்ளைகளை உயர்த்துவதில்

    ஆசிரியர் போராட்டம்

    ஊதியத்தைப் பெருக்குவதில்

    ஆளுகின்றார் போராட்டம்

    அனைத்தையுமே பதுக்குவதில் !

     

    மதுவொழிக்கப் போராட்டம்

    நடக்கின்ற தொருபக்கம்

    மதுக்கடைகள் திறப்பதற்கு

    வருகின்றார் ஒருபக்கம்

    குடிநீரே இல்லயென்று

    குடிகள்செய்வார் போராட்டம்

    குடித்துவிட்டு பலபேர்கள்

    குழப்பிடுவார் நாட்டினிலே !

     

    பார்க்கின்ற இடமெல்லாம்

    பலநிலையில் போராட்டம்

    போராட்டம் என்பதற்கே

    அர்த்தமின்றிப் போகிறது

    மனட்சாட்சி தனைநிறுத்த

    போராட்டம் தேவயன்றோ

    மனமெல்லாம் மாறிவிட்டால்

    போராட்டம் ஓடிவிடும் !

    Share
  • வீணாக்கார் தம்முயிரை !

               ( எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

     

    பிறப்புக்கும் இறப்புக்கும் பெரும்போரே நடக்கிறது

    பிறந்துவிட்ட யாவருமே இறந்துவிடல் நியதியன்றோ

    இறப்பதற்கு எவருமே ஏக்கமுடன் இருப்பதில்லை

    இருந்துவிட வேண்டும் என்னும் ஏக்கமதேயிருக்கிறது

    வருந்தியமன் அழைத்தாலும் வரமாட்டேன் என்றழுத்தி

    யமனுக்கே போக்குக்காட்டும் நாடகத்தை ஆடுகிறார்

    விருந்துண்டு நாள்முழுக்க மேதினியில் வாழ்வதற்கே

    மருந்துண்டு மருந்துண்டு வாழ்நாளை பார்க்கின்றார் !

     

    எத்தனையோ வைத்தியங்கள் அத்தனையும் பார்க்கின்றார்

    சத்திர சிகிச்சையெலாம் தான்செய்து நிற்கின்றார்

    நித்திரையை வரவழைக்க  நிறையப்பணம் கொடுக்கின்றார்

    அத்தனைக்கும் அவர்வசதி உச்சமதில் இருக்கிறது

    சொத்தெல்லாம் வித்தாலும் சுகம்பெறவே விளைகின்றார்

    சத்தான உணவையெல்லாம் தானவரும் உண்ணுகிறார்

    மொத்தமுள்ள வைத்தியரை குத்தகைக்கே எடுக்கின்றார்

    முழுமையாய் வாழ்வதற்கே முழுகவனம் செலுத்துகிறார் !

     

    வசதியுடன் வாழ்வோரும் வழிதெரியா வாழ்வோரும்

    நீண்டகாலம் வாழ்வதற்கே நினைக்கின்றார் நாளெல்லாம்

    மரணபயம் யாவருக்கும் மனம்முழுக்க இருப்பதனால்

    தினமுமவர் மனம்முழுக்க இறைவனையே எண்ணுகிறார்

    பயபக்தி கொண்டதனால் பலதுமவர் செய்கின்றார்

    பலகடவுள் வழிபாட்டை பாங்குடனே ஆற்றுகின்றார்

    மனம்முழுக்க வாழ்வுபற்றி பலவற்றை நிரப்பியதால்

    வாழ்நாளை இழந்துவிட மனமவர்க்கு மறுக்கிறது !

     

    இப்படியே பலபேரும் இருக்கின்ற உலகினிலே

    எப்படியும் வாழலாம் எனநினைக்கும் நினைப்பினால்

    தப்பான வழிசென்று தன்வாழ்வின் பயனறியா

    தற்கொலையை தேர்ந்தெடுத்து தாமழிந்து நிற்கின்றார்

    ஒருகணத்தில் உதிக்கின்ற உணர்வதனால் தமைமறந்து

    உலகமே தமக்கெதிரி எனநினைத்து வெறுப்படைந்து

    தமக்குள்ளே முடிவெடுத்து தன்வாழ்வை முடிக்கின்ற

    தரமில்லா மக்களுக்கு தன்னுணர்வை ஊட்டவேண்டும் !

     

    அவசரமாய் அவசரமாய் அவரெடுக்கும் முடிவாலே

    அவசரமாய் அவசரமாய் அவர்வாழ்வே முடிகிறது

    பதட்டமுடன் செயற்படுதல் பார்த்தவுடன் வெறுப்படைதல்

    கிடைக்கின்ற வாய்ப்பினையும் கீழெனவே நினைத்துவிடல்

    தாழ்வுமனப் பான்மையினை தமதாக்கிக் கொண்டுவிடல்

    புத்திமதி சொல்வாரை புறமொதுக்கி நின்றுவிடல்

    எப்பவுமே தப்பிதமாய் எக்கணமும் இருந்துவிடல்

    அத்தனையும் அவர்வாழ்வை அழித்துவிடக் காரணமே !

     

    மண்ணிலே நல்லவண்ணம் வாழவந்த வாழ்க்கையினை

    எண்ணியே மக்களெலாம் எத்தனையோ செய்கின்றார்

    புண்ணியங்கள் மனமெண்ணி பொறுப்புடனே நடக்கின்றார்

    கண்ணெனவே வாழ்க்கையினை காத்திடவே எண்ணுகிறார்

    மண்ணைவிட்டு ஓடிவிட மனமெவர்க்கும்  இருப்பதில்லை

    மகிழ்வுடனே வாழ்வதற்கு வகைகள்பல தேடுகிறார்

    உண்மையினை உணராமல் உயிரைமாய்த்துக் கொள்ளுகின்றார்

    மெல்லநின்று உணர்ந்துவிட்டால் வீணாக்கார் தம்முயிரை !

    Share
  • காலமெல்லாம் உதவுமன்றோ !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

     

    வசதிபல பெருகுகிறது வாழ்வுநிலை உயர்கிறது

    வள்ளல்குணம் மனதைவிட்டு மறைந்தோடி ஒழிகிறது

    தகுதிபல கொண்டவரும் தனைமறந்தே நிற்கின்றார்

    வெகுமதிகள் தனைநாடி விரைந்தோடி வருகின்றார் !

     

    கல்விகற்ற பெரியவரும் கண்ணியத்தை மறக்கின்றார்

    காசுசேர்க்க நிற்பதிலே கருத்தெனவே இருக்கின்றார்

    புண்ணியத்தை மனமதிலே பொசுக்கிவிட நினைக்கின்றார்

    பூதலத்தில் நடக்குமிது புரியாமல் இருக்கிறது !

     

    மேடையேறிப் பேசிடுவார் மேதையெனக் காட்டிடுவார்

    தலைக்கனத்தை விட்டுவிட தாம்நினைக்க மாட்டார்கள்

    உலகத்துப் பட்டமெலாம் ஒன்றாகப் பெற்றாலும்

    உள்ளமதில் திருப்தியினை உள்நுழைக்க மாட்டாரே !

     

    அன்புபற்றி பேசிடுவார் அறம்பற்றி பலவுரைப்பார்

    துன்பமுடன் இருப்பாரை தூரநின்றே பார்த்திடுவார்

    என்புதசை உடம்பென்று இவ்வுடம்பை இகழ்ந்திடுவார்

    அன்புமட்டும் அவரிடத்தில் அணுகிடவே மறுத்துநிற்கும் !

     

    சாத்திரங்கள் பலவுரைப்பார் சம்பிரதாயம் எனமொழிவார்

    ஆத்திரத்தை அடக்கிவிடார் ஆவேசம் கொண்டிடுவார்

    நேர்த்தியுடன் பாரார்கள் நெறிமுறைகள் தனையொதுக்கி

    நாத்திகராய் ஆத்திகராய் நடித்திடுவார் வாழ்வினிலே !

     

    பட்டங்கள் தேவையில்லை பதவிகளும் தேவையில்லை

    பகட்டுடனே வாழ்வதிலே பலருக்கும் பயனுமில்லை

    கஷ்டமுறும் மக்கள்தமை கருணையுடன் பார்த்துநின்று

    இஷ்டமுடன் பணிசெய்தால் எம்வாழ்வு விடியுமன்றோ !

     

    அன்புபாசம் நேசம்காட்டி அனைவருமே இணைந்திடுவோம்

    அறிவினது துணைகொண்டு அனைவருக்கும் உதவிடுவோம்

    பண்புநிலை தவறாது படிப்பினைநாம் காத்துநின்று

    பலருக்கும்  உதவிநின்றால் படிப்புநிலை உயருமன்றோ !

     

    கற்றதுவும் பெற்றதும் காருண்யம் கொடுக்கவேண்டும்

    கற்றவர்கள் கருத்தெல்லாம் மற்றவர்க் குதவவேண்டும்

    நற்றவத்தால் வந்தகல்வி நாட்டிற்கே உதவிநின்றால்

    கற்றதும் உற்றதுவும் காலமெல்லாம் உதவுமன்றோ !

     

    Share
  • எம்ஜிஆர் எனும் நாமம் !

    எம் ஜி ஆர் நூற்றாண்டு காலமாதலால் எம் ஜி ஆருக்கு சமர்ப்பாணம்

     

     

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய்

    எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார்

    கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து

    மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !

     

    ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல்

    வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார்

    நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து

    ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !

     

    தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே

    தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே

    வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு

    வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !

     

    எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும்

    அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார்

    படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு

    பாட்டமைத்த எம்ஜிஆர் பாடமாய் ஆகிநின்றார்  !

     

    தானதர்மம் செய்வதுதான் தலைசிறந்த தருமமென

    தன்வாழ்வில் அதைப்புகுத்தி இயன்றவரை உதவிநின்றார்

    பணம்கிடைத்த போதெல்லாம் பலபணிகள் அவர்செய்து

    பாமரரின் தோழமையை பரிசெனவே  பெற்றுநின்றார்  !

     

    வெள்ளித்திரை நாயகனாய் வீதியெல்லாம் வந்தாலும்

    உள்ளமெலாம் உயர்கருத்தை உவந்தேற்ற விரும்பினரே

    நல்லமனம் அவரிடத்து இயல்பாக அமைந்ததனால்

    நாட்டுமக்கள் வாழ்வுபற்றி நாளுமவர் எண்ணினரே !

     

    நடிக்கின்ற காட்சிகளில் குடிக்கின்ற காட்சிகளை

    வெறுத்துவிட்ட  நாயகனாய் வெற்றிநடை போட்டாரே

    குடிப்பழக்கம் தனையொதுக்கி குடிமக்கள் தனைப்பற்றி

    நடிப்பாலும் உணர்த்திநின்ற நாயகனே  எம்ஜிஆர் !

     

    ஆத்திகம் நாத்திகம் அனைத்தையும் அரவணைத்தார்

    அநியாயம் கண்டவுடன் ஆத்திரமும் அவர்கொண்டார்

    ஆதலால் அரசியலை அவசியமாய் ஆக்கிக்கொண்டு

    ஆட்சியினை வசமாக்க ஆக்கமுடன் அவருழைத்தார் !

     

    மக்களது ஆணையுடன் வந்தமர்ந்தார் எம்ஜிஆர்

    மக்களெலாம் அவராலே மறுவாழ்வு பெற்றனரே

    பாமரர்க்கு பயனைநல்கும் பலத்திட்டம் அவர்கொணர்ந்தார்

    பார்த்தவர்கள் வியந்தபடி போற்றினரே   எம்ஜிஆரை !

     

    படகோட்டியாய் இருந்து பலதுன்பம் பட்டாலும்

    எங்கவீட்டுப் பிள்ளையாய் எம்ஜிஆர் இருந்துவிட்டார்

    நாடோடி மன்னனாய் நற்கருத்தை விதைத்தஅவர்

    ஊர்கூடித் தேர்ந்தெடுக்க உட்கார்ந்தார் ஆட்சியிலே !

     

    பட்டிதொட்டி எல்லாமே எம்ஜிஆர் எனும்வெளிச்சம்

    பட்டுத் தெறித்ததனால் பலருமே பயனடைந்தார்

    கிட்டவந்து தொட்டுப்பார்க்க முட்டிமோதி நின்றார்கள்

    அத்தனையும் எம்ஜிஆரின் ஆளுமையின் மகத்துவமே !

     

    புதுக்கட்சி புதுப்பாடம் புதுஆட்சி அத்தனையும்

    புறப்பட்டு வரச்செய்த புரட்சிதான் எம்ஜிஆர்

    நிதம்மக்கள் வாழ்க்கையிலே நெருங்கிநின்ற உறவாக

    உரம்பெற்று வளர்ந்தவர்தான் உணர்வுநிறை எம்ஜிஆர் !

     

    எம்ஜிஆர் எனும்நாமம் இன்றளவும் ஒலிக்கிறது

    எல்லோரும் அவர்பெயரை இதயத்தில் வைத்துள்ளார்

    தமிழ்நாட்டின் விடிவுக்காய் தனைக்கொடுத்த எம்ஜிஆர்

    தமிழர்களின் மந்திரமாய் தானுயர்ந்து நிற்கின்றார் !

    Share
  • கங்காரு நாட்டின் கண்ணியம் 

     
    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    கங்காருநாடு என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலியா 200 வருட வரலாற்றினைக் கொண்டது. இங்குப் பல நாட்டினர், பல மொழிகளைப் பேசுபவர்கள், பல இன கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்கள் என 165 இனமக்களை அரவணைத்து அவர்களுக்கு அமைதியான ஆறுதலான வாழ்வினையும் வழங்கிக் கங்காருநாடு கண்ணியம் மிக்க நாடாக உலகில் விளங்குகிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

    ஜனநாயகத்தை நூறுசதவிகிதம் நிலைநாட்டி வெற்றியுடன் திகழும்  கண்ணியமும் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய தொன்றேயாகும்.

    இந்த நாட்டின் ஆதிகுடிகள் “அபோர்ஜினிஸ்” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் கங்காரு மண்ணுக்கு உரியவர்கள் ஆவர். ஆனால் பிரித்தானிய ஆக்கிரமிப்பால் நிலைமாறி இப்போது கங்காரு மண்ணின் சொந்தக்காரர் வெள்ளையர் ஆகிவிட்டார்கள். என்றாலும் ஆதிகுடிகள் வரலாறு கங்காரு மண்ணுடன் ஒட்டியே இருக்கிறது. அவர்களின் நிறம், அவர்களின் மொழியில் காணப்படும் சில சொற்கள், அவர்களின் விழாக்கால கொண்டாட்ட அலங்காரம் இவற்றையெல்லாம் உற்று நோக்கும்பொழுது தமிழர்களின் சாயல் அவர்களிடத்துப் படிந்திருப்பதாகக் கருத முடிகிறது. இதனால்தான் தமிழர்களையும் கங்காரு நாடு கைகொடுத்து வரவேற்றதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

    பல்லினக் கலாசாரத்தின் தொட்டிலாகக் கங்காரு நாடு திகழ்கிறது. மதம் கடந்தமக்கள் பலர் இங்கு இருப்பதனால் மதமென்னும் குணத்தை இங்கு காண்பது அரிதென்றே சொல்லலாம். அரசாங்கம் மதம்பற்றி எதுவுமே பேசுவதில்லை. அதே வேளை வழிபடும் சுதந்திரத்திலும் தலையிடுவதும் இல்லை. விரும்பியவர்கள் விரும்பியபடி தங்கள் சமயவழிபாடுகளை நிகழ்த்தும் உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது. இதனால்  வழிபாட்டில் மக்கள் தாம்விரும்பியவாறு ஈடுபடும்முழுச் சுதந்திரம் இங்கு காணப்படுகிறது. இதனால்தான்  அவுஸ்திரேலிய மாநிலங்களில் பல இந்துக் கோவில்கள் எழுச்சிபெற்று இருக்கின்றன. படிக்கும் பாடசாலைகளிலும் மதம்பற்றிப் பேசப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடசாலைகளில் அவரவர் மதக்கல்வி ஊட்டப்படுவதற்கும் எந்தவிதத் தடையும் போடப்படுவதும் இல்லை. அவுஸ்திரேலியர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் பெயர்களை கிறிஸ்தவப் பெயராக வைத்திருந்தும் அவர்கள் தாங்கள் எந்தமதம் என்று சொல்லிக்கொள்வதும் இல்லை. அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. இதனால் மதம் என்னும் பெயரால் இங்கு எந்தவிதச் சிக்கல்களோ மோதல்களோ ஏற்படுவதே இல்லை.

    பல்லினக் கலாசார நாடாக விளங்குகின்ற காரணத்தல் கறுப்பு வெள்ளை என்று பார்க்கும் குறுகிய நோக்கும் இங்கு இல்லை என்றே கூறலாம். இதனால் ஆசியநாட்டவரோ ஆப்பிரிக்க நாட்டவரோ அமைதியாக ஆறுதலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு இந்த நாட்டின் முக்கியப் பண்பாடாக விளங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் கூட எதுவித ஆடம்பரமும் இன்றிச் சாதாரண மக்கள் போன்றே சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவார்கள். மந்திரியாக இருந்தாலும் கடைகளில் பொருட்களை வாங்கினால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்குவார். மந்திரிக்கென்று தனியான சலுகைகள் கிடையாது. அவரும் சாதாரண பிரசையாகவே நடந்துகொள்ளும் முறையானது ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

    முன்னேற விரும்பும் யாவருக்கும் இந்த நாடு நூறு சதவிகித ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. விரும்பியதைப் படிக்கலாம். விரும்பிய தொழிலைச்செய்யலாம். படிப்பதற்கு வயது இங்கு ஒரு தடையில்லை.எந்த வயதினரும் விரும்பியதைப் படிக்கும் வசதி இங்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

    வேலைசெய்ய முடியாதவர் எனக் கணிக்கப்பட்டவர்கள், வயதுவந்தவர்கள், வேலையினை இழந்தவர்கள் யாவருக்கும் அவர்கள் அன்றாடம் வாழும் வகைக்கு ஏற்ற பண உதவிகளை இந்தநாடு சிறப்பாக வழங்கியும் வருகிறது. மூத்தோருக்குப் பல சலுகைகளையும் கொடுத்து வருகிறது. பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு இந்தநாட்டில் கிடைக்கிறது.  இந்த நாட்டுக்கு வந்த தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நாடு பல்கலாசாரத்தைப் பேணுவதால் தமிழர்தம் பண்பாடு கலாசாரங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சமூக அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள சர்வ சுதந்திரமும் வழங்கி நிற்கிறது என்பது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.

    தமிழை அரசாங்க அறிவித்தல்களில் கூட இந்தநாடு இடம்பெறச் செய்திருக்கிறது. தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கூடத் தமது கருமங்களை ஆற்றுவதற்கு மொழிமாற்றுச் சேவையினையும் இலவசமாகக் கொடுத்து உதவி நிற்கிறது. தமிழ் அமைப்புகளுக்கு பண உதவிகளை வழங்குகிறது. தமிழ்ச் சங்கங்களின் விழாக்ககளுக்கு குறிப்பிட்டளவு பண உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே.

    கங்காரு நாட்டில் தேர்தலில் இந்தநாட்டின் பிரசையாகிவிட்ட எவருமே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழர்கள் கலந்து வெற்றியீட்டி அரசியலில் கலந்த சேவையாற்றும் வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த நாட்டில் இருந்து படித்து தொழில் பார்க்க ஆங்கிலம் அவசியம் என்பதனால் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் அதே வேளை சொந்த மொழியை, பண்பாட்டை விட்டுவிடத்தான் வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. இது இங்கு வந்த யாவருக்கும் பெரும் வரப்பிரசாதம் என்றுதானே எண்ணவேண்டும்.

    இதனால் தமிழ் மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கையானது அவுஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளரப் பெருந்துணையாய் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. 1980ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கென்று ஒரு மொழிக்கொள்கை தேவை என்ற நோக்குடன் அரசின் மொழிக்கொள்கையை நடுவண் அரசு நான்கு முக்கியக் கோட்பாடுகளுடன் உருவாக்கி, தேசிய அளவில் அதை ஒழுங்குபடுத்தியது. அதில் ஆங்கில மற்ற மொழிகளைக் காத்தல், மற்ற மொழிகளிலும் அரசியல்சேவைகள் கிடைக்கப் பண்ணுதல், இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

    இதன்படி 1987 ஆம் அவுஸ்திரேலியாவின் தேசிய மொழிக்கொள்கை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கொள்ளை அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன்மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது என்பது இந்தநாட்டின் கண்ணியமான ஒரு செயற்பாடாக அமைகிறதல்லவா? தமிழை அரசாங்கம் ஒரு மொழியாக அங்கீகரிக்கும் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் முக்கியமான விஷயம் எனலாம்.

    சில நாடுகளில் தங்கள் தாய் மொழியில் பேசவே பயப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழ் மக்கள் வெளியிடங்களில் கூடியளவு தமிழில் பேசுவதை தவிக்கின்றார்கள். காரணம் அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் தங்களை இனங்கண்டுவிடுவார்கள் என்னும் பயத்தினாலே. அப்படி இனங்காணப்பட்டால் தமக்குப் பாதுகாப்பு இல்லாமை வந்து விடலாம் என்று இன்றளவும் அஞ்சும் நிலை காணப்படுகிறது.

    ஆனால் கங்காரு மண்ணில் மட்டும் இந்தப் பயத்துக்கு இடமே இல்லை. வீட்டிலோ, தெருவிலோ, வேலைசெய்யும் இடத்திலோ, போக்குவரவு செய்யும் பஸ்சிலோ, புகைவண்டியிலோ, சந்தைகளிலோ, விமான நிலையத்திலோ எங்கு வேண்டுமானாலும் இன்பத் தமிழில் இனிமையாகப் பேசக்கூடிய சுகம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்த அளவு வேற்று மொழிக்கும் அவர்களது பண்பாடுகளுக்கும் கெளரவம் வழங்கும் கண்ணியம் மிகவும் தாராளமாக இங்கு இருக்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

    இதனால்தான் தமிழ்விழாக்களையும், தமிழ் நூல்கள் வெளியீடுகளையும், இசை, நடன அரங்கேற்றங்களையும், தமிழ்ப் பத்திரிகைகளையும், தமிழ்ச் சங்கங்களையும் அமைத்துத் தமிழர்கள் தங்கள் சுயத்தினைத் தொலைக்காமல் கங்காரு நாட்டில் வாழ முடிகிறது என்றால் அதனை கங்காரு நாட்டின் கண்ணியம் என்று போற்றுவது பொருத்தமாக இருக்கிறதல்லவா!

    Share
  • 1000 கவிஞர்கள் கவிதை நூல் வெளியீடு 2017

    unnamed (5)

    unnamed
    ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி 32 உலகநாடுகளைச் சேர்ந்த 1000 கவிஞர்களின்
    கவிதைகளைத் தாங்கி உலகின் மிகவும் பெரிய கவிதைத் தொகுப்பு நூல்
    யாழ்பாணத்தில் வெளியீடு செய்யப்படும்  பெருவிழா நடைபெற இருக்கிறது.

    unnamed (4)
    தமிழ்க்கவிதை நூல் வெளியீட்டில் இவ்விழா மிகவும் சிறப்புடையதாக அமைகிறது.

    Share
  • நன்றியுணர்ச்சி

    (எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    கோடியைக் கொடுத்து நிற்போம்

    கொடைதனில் சிறந்து நிற்போம்

    வாடிய வாட்டம் காணில்

    மனமெலாம் இரங்கி நிற்போம்

    கூடிய மட்டும் நல்லாய்

    குணமுடன் நடந்தே நிற்போம்

    ஆருமே சொல்ல மாட்டார்

    அதன் பெயர் நன்றியாகும் !

     

    பிள்ளையின் பின்னால் நின்றாலும்

    பெரும்பாசம் கொடுத்துமே வளர்த்தாலும்

    கள்ளமே இல்லாமல் உழைத்தாலும்

    கருணையுடன் கடமைகளைச்  செய்தாலும்

    உள்ளமெல்லாம் உருக்கமே கொண்டாலும்

    ஊணுறக்கம் தனைத்துறந்து நின்றாலும்

    நல்லவரே எனும்நினைப்பும் வாராதே

    நன்றியுணர்வு என்பதுவுமே   மலராதே !

     

    நாடுமொழி இனம்காத்த பெரியவர்கள்

    நலம்துறந்து நலிந்துநின்ற மூத்தோர்கள்

    வாழ்வெல்லாம் பிறருக்காய் உழைத்தவர்கள்

    வதைபட்டு அடியுண்ட தியாகிகள்

    நோயுண்டார் தனைப்பார்க்கும் நல்மனத்தார்

    நொருங்குண்டார் தனைத்தேற்றும் பெருமனத்தார்

    வாழ்நாளில் காணாத ஒன்றென்றால்

    வாராத நன்றியுணர் வொன்றேயாம் !

     

    பிள்ளைகளைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள்

    பேணிநின்று வளர்திடுவார் பெரும்பொறுப்பாய்

    இல்லையெனச் சொல்லாது கொடுத்திடுவார்

    எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள்

    அள்ளவள்ள   நீரூறி   வருமெனவே

    அவர்கனவு கண்டுநிற்கும் வேளைதனில்

    உள்ளமதை ஒருபக்கம் வைத்திடுவார்

    ஒருநாளும் நன்றிதனை உரைக்கமாட்டார் !

     

    எமைப்படைத்த   இறைவனுக்கு நன்றிசொல்வோம்

    எமையீன்ற பெற்றவர்க்கும் நன்றிசொல்வோம்

    எழுத்தறிவை ஊட்டியெம்மை உயர்த்திவிட்ட

    எங்குருவர் யாவர்க்கும் நன்றிசொல்வோம்

    உதவிநிற்கும் கரங்களுக்கும் நன்றிசொல்வோம்

    உடனுறையும் நட்பினுக்கும் நன்றிசொல்வோம்

    உணர்வில்லா மனிதர்களாய் வாழுவோரே

    நன்றியெனும் உணர்ச்சியினை நசுக்கிவிட்டார் !

     

     

    Share