எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 

வசதிபல பெருகுகிறது வாழ்வுநிலை உயர்கிறது

வள்ளல்குணம் மனதைவிட்டு மறைந்தோடி ஒழிகிறது

தகுதிபல கொண்டவரும் தனைமறந்தே நிற்கின்றார்

வெகுமதிகள் தனைநாடி விரைந்தோடி வருகின்றார் !

 

கல்விகற்ற பெரியவரும் கண்ணியத்தை மறக்கின்றார்

காசுசேர்க்க நிற்பதிலே கருத்தெனவே இருக்கின்றார்

புண்ணியத்தை மனமதிலே பொசுக்கிவிட நினைக்கின்றார்

பூதலத்தில் நடக்குமிது புரியாமல் இருக்கிறது !

 

மேடையேறிப் பேசிடுவார் மேதையெனக் காட்டிடுவார்

தலைக்கனத்தை விட்டுவிட தாம்நினைக்க மாட்டார்கள்

உலகத்துப் பட்டமெலாம் ஒன்றாகப் பெற்றாலும்

உள்ளமதில் திருப்தியினை உள்நுழைக்க மாட்டாரே !

 

அன்புபற்றி பேசிடுவார் அறம்பற்றி பலவுரைப்பார்

துன்பமுடன் இருப்பாரை தூரநின்றே பார்த்திடுவார்

என்புதசை உடம்பென்று இவ்வுடம்பை இகழ்ந்திடுவார்

அன்புமட்டும் அவரிடத்தில் அணுகிடவே மறுத்துநிற்கும் !

 

சாத்திரங்கள் பலவுரைப்பார் சம்பிரதாயம் எனமொழிவார்

ஆத்திரத்தை அடக்கிவிடார் ஆவேசம் கொண்டிடுவார்

நேர்த்தியுடன் பாரார்கள் நெறிமுறைகள் தனையொதுக்கி

நாத்திகராய் ஆத்திகராய் நடித்திடுவார் வாழ்வினிலே !

 

பட்டங்கள் தேவையில்லை பதவிகளும் தேவையில்லை

பகட்டுடனே வாழ்வதிலே பலருக்கும் பயனுமில்லை

கஷ்டமுறும் மக்கள்தமை கருணையுடன் பார்த்துநின்று

இஷ்டமுடன் பணிசெய்தால் எம்வாழ்வு விடியுமன்றோ !

 

அன்புபாசம் நேசம்காட்டி அனைவருமே இணைந்திடுவோம்

அறிவினது துணைகொண்டு அனைவருக்கும் உதவிடுவோம்

பண்புநிலை தவறாது படிப்பினைநாம் காத்துநின்று

பலருக்கும்  உதவிநின்றால் படிப்புநிலை உயருமன்றோ !

 

கற்றதுவும் பெற்றதும் காருண்யம் கொடுக்கவேண்டும்

கற்றவர்கள் கருத்தெல்லாம் மற்றவர்க் குதவவேண்டும்

நற்றவத்தால் வந்தகல்வி நாட்டிற்கே உதவிநின்றால்

கற்றதும் உற்றதுவும் காலமெல்லாம் உதவுமன்றோ !

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காலமெல்லாம் உதவுமன்றோ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *