Tag: சு.கோதண்டராமன்

  • பாரதியின் வேத முகம் – 10

    சு. கோதண்டராமன்

    தேன் வந்து பாயுது காதினிலே

    பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய தேன் காதிலே பாய்ந்தால் அதன் இனிமையை அனுபவிக்கமுடியுமா என்று எண்ணுகிறோம்.

    ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று ஒரு பாடல். வாக்கு காதினால் உணரப்படுவது. இதில் கண்ணால் காணக் கூடிய ஒளி எங்கிருந்து வந்தது என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

    குழந்தைக் கதை என்ற தலைப்பில் ஒரு கதை- பாரதி எழுதியது. பெயர் தான் குழந்தைக் கதை. விஷயம் என்னவோ கனமானது தான், முதல் உலகப் போரைப் பற்றியது. அதில் ஒரு வரி, மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டுலாவின, என்று வருகிறது. வெயிலையாவது தின்பதாவது.

    இப்படிப் பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றி மாற்றிச் சொல்வது, ஒரு கவித்வ உத்தி மட்டுமல்ல. அதன் பின்னணியில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

    பாரதியின் பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். யோக சாஸ்திரப்படி, வெளியில் தெரியும் கண் காது முதலான பொறிகளால் நாம் காட்சி கேள்வி முதலான அனுபவம் பெறுவதில்லை. மாறாக, சித்தமே காண்கிறது, கேட்கிறது, வாசனை, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவற்றை அறிகிறது. சித்தம் செயல் படாமல் இருக்கும் போது பொறிகள் தம் வேலையைச் செய்தாலும் அது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. மாறாக, சித்தம் ஆனந்த நிலையில் இருக்கும் போது இந்த எல்லா அனுபவங்களும் பொறிகள் இல்லாமலே கூட நிகழும்.

    இதை விளக்குவது அவருடைய ஞானரதம் என்னும் கட்டுரை. கந்தர்வ லோகத்தில் பாரதி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்.

    கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னை அறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான ஸங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமை ஆகமாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக் கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை.

    இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே, அது எங்கிருந்து வருகிறது என்றேன். மேலே பார் என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரகைகளிடையே கொலு வீற்றிருக்கக் கண்டேன்.

    அவருடைய கிரணங்கள் என்றாள்.

    சந்திர கிரணங்களா, சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.

    சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நன்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கே கூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும் என்றாள்.

    இவ்வாறு பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றிச் சொல்வதற்கு வேத ஆதாரம் உண்டா? உண்டு. யஜுர் வேதம் 1.1.5.11 ‘ஒளியுள்ள சொற்களைச் சொல்லுக’ என்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்கள் சொல்லின் ஒலியை மட்டுமே அறிவோம். ரிஷிகள் அதன் ஒளியையும் அறிந்திருந்தார்கள். மருத்துகள் (புயற் காற்று) சூரியனைப் போலப் பிரகாசிக்கிறது என்கிறது ரிக் வேதம் 1.64.2. இன்னும் நிறைய உண்டு.

    வேத ரிஷிகளைப் போல் பாரதியின் சித்தமும் எப்பொழுதும் பரம்பொருளின் நினைவிலேயே, ஆனந்த நிலையில் தோய்ந்திருந்தது. அதனால் அவருக்குப் புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் சாத்தியமாயிற்று. தீக்குள் விரலை வைத்த போது நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைத்தது. காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல ஒளி வடிவமாகக் காட்சி தந்தது.

    Share
  • பாரதியின் வேத முகம் – 9

     

    -சு.கோதண்டராமன்

    இனி ஒரு விதி செய்வோம்

          பாரதியின் கோபம் வெளிப்படும் இடங்களில் ஒன்று ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்று துவங்குகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்பதை எந்த நாளும் காக்க வேண்டிய ஒரு விதியாக அவர் விதிக்கிறார். தின்ன வரும் புலியை அன்போடு சிந்தையில் தேக்கச் சொன்ன அவர் இவ்வளவு கொடூரமாகச் சபதம் செய்தது ஏன் ?

    சற்றே பின்னோக்கி, அவர் வாழ்ந்த காலத்தைப் பார்ப்போம். புகழ் பெற்ற தாது வருஷத்துப் பஞ்சம், இந்திய மக்களில் மூன்று கோடிப் பேரைப் பலி வாங்கிய கொடுமை அவர் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு தான் ஏற்பட்டது. இதன் துன்பங்கள் எல்லாம் மக்கள் கூறக் கேட்டு இளம் பாரதி மனதில் படிந்திருக்க வேண்டும். பசியின் கொடுமையை அனுபவித்தவர் தான் உள்ளபடி உணரமுடியும். பாரதியும் அதை அனுபவித்திருந்தார். கவிதையையும் நாட்டுக்கு உழைத்தலையும்  தொழிலாகக் கொண்ட அவருக்குப் பரிசாகக் கிடைத்தது வறுமை தான். ஆனால் அவர் ஒரு போதும் வாடிய தன் வயிற்றுக்காகக் கவலைப் படவில்லை. அவர் வருந்தியது இந்நாட்டு மக்களுக்காகத் தான்.

    கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன்

    காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்

    பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்

    பரிதவித்தே உயிர் துடிதுடித்தே

    துஞ்சி மடிகின்றாரே இவர்

    துயர்களைத் தீர்க்கவோர் வழி இல்லையே         

    என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

    பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயிரிட்டு இந்திய மண்ணின் சாரம் குறைந்துவிட்டது என்ற வாதத்தைப் பாரதி ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா பாருக்குள்ளே நல்ல நாடு என்றும், கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்றும் இனிய பொழில்கள் நெடிய வயல்கள்  எண்ணறு நிறை நாடு என்றும் கூறுகிறார்.

    பின் ஏன் பஞ்சம்? நம் மக்கள் உழைக்க அஞ்சுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஜப்பானியரைப் போல் உழைத்தால் நாம் எங்கோ போயிருப்போம் என்பர். பாரதி இதையும் மறுக்கிறார்.

    மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் நீர் பாய்ச்சாவிடினும் வகை வகையாப் புற்கள் நெற்கள் மலிந்திருக்கும் என்பார் அவர்.

    ஆக, பஞ்சத்துக்குக் காரணம் வளமின்மையோ உழைப்பின்மையோ அல்ல. எல்லாம் விளைந்தும் சரியான பங்கீடு இல்லாதது தான் காரணம். உடையவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்காமல் பதுக்குகிறார்கள். அதற்கு அடிப்படையான அன்பு இல்லை அவர்களிடம். அதனால் பாரதி பல இடங்களிலும் அன்பையே வலியுறுத்துகிறார்.

    மனிதரின் கடமையாக அவர் கூறும் நான்கில் ஒன்று, பிறர் துயர் தீர்த்தல். இதைச் செய்யச் சிலர் தவறுவதால் உலகில் பிறர் துடிதுடிக்கின்றனர். பஞ்சத்திலும் நோய்களிலும் பாரத மக்கள் புழுக்கள் போலத் துஞ்சத் தம் கண்ணால் கண்டும சோம்பிக் கிடக்கும் இந்நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் அவரது சொல்லின் வேகத்தைப் பாருங்கள்.

    மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? 

    இந்நிலை வளரவிட்டால் என்ன ஆகும் ? ரஷ்யப் புரட்சியைச் சுட்டிக் காட்டுகிறார். அங்கு

    உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை

    மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்

    ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி

    அன்பு கொண்டு பகுத்துண்டு வாழ்ந்தால் மேன்மையுறலாம். இன்றேல் மாகாளியின் கோபத்துக்கு இலக்காகி வஞ்சனையாளர் எல்லாம் வீழ்ந்திடுவர். எனவே நான் அழிக்காவிட்டாலும் மாகாளி இந்த சுயநல ஜகத்தை அழிக்கப் போவது திண்ணம். எனவே அன்பு செய்யுங்கள். அடுத்தவர் பசியை நீக்குங்கள். கிருத யுகம் மீண்டும் மலரும் என்கிறார் அவர். பாரதியின் கோபம் நமக்குப் புரிகிறது.

    பாரதியின் அன்பு வட்டம் இந்தியாவை மட்டுமோ, மனிதரை மட்டுமோ உள்ளடக்கியதல்ல. பூமண்டலம் முழுமையும் உள்ள எல்லா உயிர்களையும் கொண்டது அது.

    மண் மீதுள்ள மக்கள் பறவைகள்

    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்

    யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே

    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

    செய்தல் வேண்டும் தேவதேவா

    ஞானாகாசத்து நடுவே நின்று நான்

    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

    விளங்குக. துன்பமும் மிடிமையும் நோவும்

    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

    இன்புற்று வாழ்க என்பேன். இதனை நீ

    திருச்செவிக்கொண்டு திருவுளமிரங்கி

    அங்ஙனே யாகுக என்பாய் ஐயனே.

    “மங்கலம் நல்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். யக்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்கு தேவதைகள் நன்மை செய்யட்டும். மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டு கால் பிராணிகளுக்கு மங்கலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்” என்ற வேதத்தின் கூற்றே இங்கு எதிரொலிக்கக் கேட்கிறோம்.

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 8

     

    -சு.கோதண்டராமன்

    இப்போதே முக்தி

                    தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. இதையே தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்கிறோம். இவை ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் அடைய வேண்டியவை என்று கூறப்படுகின்றன.

    தரும நெறிப்படி நடக்க வேண்டும். பொருள் தேடி உண்ண வேண்டும். உலக இன்பங்களைச் சுவைக்க வேண்டும். பின் மோட்சம் அடைய வேண்டும். இந்த மோட்சம் என்ற சொல்லுக்கு விடுதலை, விடுபட்டு நிற்றல் என்று பொருள். இறந்தபின் அடைய வேண்டிய நிலை என்று தான் அனைவரும் இதற்குப் பொருள் கூறுகின்றனர்.

    ஆனால் மோட்சம் என்பது இறந்த பிறகு அடையப்பட வேண்டியது என்பது வேதத்தின் உண்மையான கருத்து அல்ல. வேதத்தின் உண்மையான கூற்றுப்படி நான்காவது புருஷார்த்தம் இறந்த பிறகு அடையும் சொர்க்கப் பதவி அல்ல, பயத்திலிருந்து விடுபடுவதையே அது குறிக்கிறது என்கிறார் விவேகானந்தர்.

    பாரதியாரின் பாடல் ஒவ்வொன்றிலும் இந்த வேதக் கருத்து ஆதார சுருதியாக ஒலிப்பதைக் கேட்கலாம்.

    மோட்சம் என்பது இறந்த பிறகு கிடைப்பது அல்ல என்பதை அவர் வாக்கிலேயே கேட்போம்.

    செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

    சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்

    பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்

    பேயுரையாமென்று இங்கு ஊதேடா சங்கம்

     

    இத்தரை மீதினில் இந்த நாளில்

    இப்போதே முத்தி சேர்ந்திட நாடிச்

    சுத்த அறிவு நிலையில் களிப்பவர்

    தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

    கவலைப்படுதலே கருநரகம்மா, கவலையற்றிருத்தலே முக்தி என்று அவரது விநாயகர் நான்மணிமாலை விளக்குகிறது.

    விடுதலை என்ற தலைப்பில் பாரதி நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார். நான்கில் எதுவும் அரசியல் சுதந்திரம் அடைவது பற்றியோ இறந்த பின் அடைவதாகச் சொல்லப்படும் சுவர்க்கம் பற்றியோ பேசவில்லை.

    பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்ற பாட்டில் ஜாதி சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், ஏழை பணக்காரன் சமத்துவம், ஆண்டான் அடிமை என்ற வேறுபாடற்ற சமத்துவம் இவை தான் பேசப்படுகின்றன. சமத்துவமற்ற நிலையிலிருந்து விடுதலை பெறுவதே இதன் கருப்பொருள். எல்லாம் கடவுளின் ரூபங்கள் என்ற வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதி இந்த சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இது சமுதாய வாழ்வின் விடுதலை.

    மற்ற மூன்று பாடல்களிலும் பாரதி மனிதன் தன் சொந்த வாழ்வில் தானாக ஏற்படுத்திக்கொண்ட தளைகளிலிருந்து விடுதலை பெறுவதைக் கூறுகிறார்.

    உயிர்க் கூட்டங்களில் மனிதன் மட்டும் தான் உணவு தேடுவதை ஒரு சுமையான வேலையாகச் செய்து கொண்டவன். தாவரங்களோ பறவைகளோ மனிதன் அளவு அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவற்றின் உணவுத் தேவை சொற்பமானது. உணவு தேடுவதையும் உண்பதையும் சுமையான கடமையாகக் கருதாமல் அவை மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. மரங்களும் செடி கொடிகளும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ என்று கேட்கிறார் பாரதி.

    அவரது முக்தி இலக்கணம் சிட்டுக்குருவியினது போன்ற வாழ்க்கை தான். அது எப்படிப் பொழுது போக்குகிறது?

    முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

                    முந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு

                    முற்றத்திலேயும் கழனி வெளியிலும்

                    முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

                    மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்

                    வைகறையாகு முன் பாடி விழிப்புற்று

                    விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்

                    சிட்டுக்குருவி போலே

    சோம்பேறித்தனமாக ஒரு வேலையும் செய்யாமல் கதை பேசிப் பொழுது போக்குவது தான் முக்தி என்று பாரதி கருதுகிறாரா? அல்ல, அல்ல. அன்பு செய்து என்று ஒரு வார்த்தை போட்டிருக்கிறார் கவனியுங்கள்.

    விடுதலை என்று தலைப்பிட்ட மற்றொரு பாடலில் பாரதி கூறுகிறார்,

    ………………..பாடுபடல்வேண்டா               

                    ஊனுடலை வருத்தாதீர், உணவு இயற்கை கொடுக்கும்

                    உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

    பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்று சொல்லும்போது சோம்பேறித்தனத்தைத் தான் அவர் விடுதலை என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. அடுத்த வரியில் தொழில் அன்பு செய்தல் என்று கூறுவதைச் சற்று சிந்தித்தால் தான் உண்மையான பொருள் விளங்கும்.

    மீண்டும் விநாயகர் துதிக்குப் போவோம். அதில் கடமைகள் யாவை என்று பட்டியல் இடுகிறார். தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் இந்நான்கே பூமியில் எவர்க்கும் கடமை என்கிறார். பிறர் நலம் வேண்டுதல் என்பது மற்றவர்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் என்று பொருள். பிறர் துயர் தீர்த்தல் என்பது அதிலிருந்து வேறானது என்பது புலனாகின்றது. அங்கு அன்பு செய்தல் என்று கூறியதைத் தான் இங்கு பிறர் துயர் தீர்த்தல் என்கிறார். இது மனத்தாலோ வாய்ச் சொல்லாலோ செய்யப்படும் பிரார்த்தனை அல்ல. இது உடலால் உழைப்பதையே குறிக்கும். தனக்காக உழைக்காமல் பிறருக்காக உழைத்தால் அது ஊனுடலை வருத்தாது. அது பாடாக, சுமையாகத் தோன்றாது. எனவே தன் உணவுக்காக, தன் சுகத்துக்காக உழைக்கும்போது தான் கவலைகளும் பயங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் தோன்றும். அவ்வாறின்றி பிறருக்காக உழைப்பது கவலையிலிருந்து விடுபட வழியாகிறது. அதுவே முக்தி என்பது பாரதியின் கருத்து.

    பாரான உடம்பினிலே மயிர்களைப் போல்

                    பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே

                    நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல

                    நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா

                    காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா

                    கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா

                    சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு

                    சிவன் செத்தாலன்றி மண் மேல் செழுமையுண்டு

     

                    ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்

                    அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண்டாகும்

                    பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்

                    பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு

                    நீதியில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா

                    நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சியன்றோ

     

    தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு இயற்கை கொடுக்கும் என்பதை மற்றொரு பாட்டிலும் தெளிவுபடுத்துகிறார்,

    நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்

                    இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கினிய

                    மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்

                    சிந்தையே இம்மூன்றும் செய்.

     

    இவ்வாறு ஊருக்கு உழைப்பதன் மூலம் தன்னைப் பற்றிய கவலையைத் துறந்து வாழும் வழியை அடைவது இவ்வுலகில் வாழும்போது தான் முடியும். அதைத் தான் பாரதி மண்ணுலகிலிருந்து வானகத்தைத் தீண்டுவது என்கிறார்.

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 7

    – சு.கோதண்டராமன்

    ஓம்

    வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. எந்த மந்திரத்தைக் கூறினாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?

    ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

    வேத மந்திரங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்தமான சொல் ஓம். கந்தர்வ லோகத்தில் பிரதிமைகள் இல்லாத கோவில்களும் சில உண்டு. அங்கு ஓம் என்று ஒளி எழுத்தில் எழுதி வைத்திருப்பதாக ஞானரதம் என்ற கட்டுரையில் அவர் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இறை வணக்கப் பாடலில் ஓம் எனப் பெரியோர்கள் ஓதுவது தான் பிரமம் எனப்படும் அறிவும் அனந்தமும் ஆகிய நிர்மலப் பொருள் என்கிறார். இறைவனை வணங்கும் போது ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்த வேண்டும் என்று அவரது விநாயகர் நான்மணிமாலை கூறுகிறது.

    ஓங்காரம் ஆசீர்வாதத்திற்கு உரிய மங்கலச் சொல் என்று பாரதி கருதியதை, “தருமன் முகமலர்ந்து வருக என்று சொல்லி ஓம் என்று ஆசீர்வதித்தான்” என்று அவரது தர்மலோகம் கூறுகிறது. ஓங்காரத்தை தியானத்திற்குரிய எளிய மந்திரமாகவும் மன அமைதி் தருவதாகவும் அவர் கருதினார் என்பது தருமலோகம் என்ற கட்டுரையில் “முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தார். நான் ஓம் என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலானேன்” என்று கூறுவதிலிருந்து அறியலாம்.

    இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

    ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

    புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

    பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

    பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.

    வேதத்தில் ஓங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதன் நோக்கம் புதுமையில் நாட்டம் கொண்டவனாக இரு என்று அறிவுறுத்துவதற்கே.

    சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

    புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

    பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

    இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

    வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி. ஆம். வேதத்தின் ஸம்ஹிதை என்ற காலத்தால் மூத்த பகுதியில் இந்த ஓங்காரம் ஒரு சொல்லாக அமையவில்லை. இது ஒரு பிற்காலக் கண்டுபிடிப்புத் தான் என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இன்று எந்த வேத மந்திரம் சொல்வதானாலும் ஓங்காரத்துடன் தான் துவக்கப்படுகிறது, ஓங்காரத்துடன் முடிக்கப்படுகிறது.

    நிகழ்காலத்திலும் இந்தப் புதுப்பி்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். அதனால் தான் ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் என்கிறார். நாம் புதுமையை விரும்பினாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் பழமையைக் கைவிடுவதற்கும் நமக்குத் தயக்கம் அதிகம். இதைப் பாரதி தன் மனத்துக்கு அறிவுறுத்தும் பாடலில் காட்டுகிறார்.

    புதியது காணில் புலனழிந்திடுவாய்

    புதியது விரும்புவாய் புதியது அஞ்சுவாய்

    அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்

    பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்

    பழமையே அன்றிப் பார்மிசை ஏதும்

    புதுமை காணோம் எனப் பொருமுவாய்

    பாரதி மற்றவர்க்கு உபதேசித்ததைத் தான் நடைமுறைப்படுத்திக் காட்டினார். முந்தைய புலவர்களினின்றும் மாறுபட்டு்க் காலத்திற்கு ஏற்ற புது வகையான பாடல்கள், புது வகையான கருப் பொருள்கள் கொண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது போல, மானிட சமுதாயம் நலம் பெறுவதற்கான ஒரு புதிய மந்திரத்தையும் உருவாக்கினார்.

    சொல் புதிது

    வேத மந்திரங்களைச் சொல்லி முடிக்கும்போது, ‘எங்கும் அமைதி நிலவுவதாக’ என்று பொருள்பட ‘ஓம் சாந்தி’ என்று மும்முறை சொல்லி முடிப்பது வழக்கம். இந்தியா தாழ்வுற்றுப் பாழ்பட்டு நின்ற நிலையில் நமக்குத் தேவை செயலற்றுக் கிடக்கும் அமைதி அல்ல, செயல்படுவதற்கான வலிமையே என்று உணர்ந்து பாரதி ஓம் சக்தி என்ற புதிய மந்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இம்மந்திரம் வேத வழக்கில் இல்லாதது. ஆனால் இதன் கருத்து வேத சம்மதமானதே என்பதை விவேகானந்தரின் இந்த உபநிடத மேற்கோள் மெய்ப்பிக்கிறது.

    உபநிஷத் கூறுகிறது, “வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.”

    இவ்வாறு ஓம் சக்தி மந்திரம் பாரதியால் வேத நெறி அடிப்படையில் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2013/01/பாரதி.jpg

     

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 6

    எத்தனை கோடி இன்பம்

    -சு.கோதண்டராமன்

    வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். காணும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. வாழ்க்கையின் இருண்ட பகுதியையே எண்ணி, ஐயோ என் வாழ்க்கை இப்படித் துன்ப மயமாக ஆகிவிட்டதே, உலகில் எல்லாரும் வஞ்சகக்காரர்கள், எல்லாப் பொருளும் துன்பம் நிறைந்தவை என்று அஞ்சி அஞ்சிச் சாகும் மானிடப் பூச்சிகளுக்கும் அவர்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு. இதோ இந்த வேத மந்திரத்தைப் பாருங்கள்.

    மது வாதா ருதாயதே

    மது க்ஷரந்தி ஸிந்தவ:

    மாத்வீர் நஸ் ஸந்த் வோஷதீ:

    மது நக்தம் உதோஷஸி

    மதுமத் பார்த்திவகும் ரஜ:

    மது த்யௌ ரஸ்து ந: பிதா

    மதுமாந்நோ வனஸ்பதி:

    மதுமாகும் அஸ்து சூர்ய:

    மாத்வீர் காவோ பவந்துந:

     

    பித்ரு தர்ப்பணத்தின் போது முப்பாட்டனார்க்கு எள்ளும் நீரும் அளிக்கும் போது இந்த மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் பொருள் என்ன?

    இனிய காற்று வீசுகிறது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன. செடி கொடிகள் நமக்கு இனியனவாக இருக்கட்டும். இரவும் விடியற்காலையும் இனியவையாக உள்ளன. பூமியின் புழுதி இனிதாக உள்ளது. நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பம் அளிக்கட்டும். வனத்தின் மரங்கள் இன்பம் நிறைந்தவைகளாக இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் இனிமையான பாலை அளிக்கட்டும்.

    உலகில் துன்பம் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்காகத் துவண்டு விடக் கூடாது என்பது பாரதியின் கருத்து. நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு அளிப்பாள் என்று நம்புக” என்று ஊக்கம் தருகிறார் அவர். துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம், இன்பமே வேண்டி நிற்போம் யாதும் அவள் தருவாள் என்று கூறுகிறார். அவருக்குக் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் நந்தலாலா தென்படுகிறான். கேட்கும் ஒலியில் எல்லாம் அவனது கீதமே காதில் விழுகிறது. தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது. அவரது இந்த வசன கவிதையைப் பாருங்கள். இந்த வேத மந்திரத்தின் நேர் மொழிபெயர்ப்பு போலவே உள்ளது.

    இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து

                    காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது

                    ஞாயிறு நன்று திங்களும் நன்று

                    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன

                    மழை இனிது மின்னல் இனிது இடி இனிது

                    கடல் இனிது மலை இனிது காடு இனிது

                    ஆறுகள் இனியன

     

    இன்பம் என்ற இந்த வசன கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள். நமக்கும் பாரதியைப் போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நன்றி சொல்லத் தோன்றும்.

    Share
  • பாரதியின் வேத முகம் – 5

     

    சு.கோதண்டராமன்

    சாதிகள் இல்லையடி பாப்பா

    இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

    வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

    ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

    வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

    வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

    நீதி நிலை தவறாமல் தண்ட

    நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

     

    பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

    தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

     

    நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த

    நான்கினில் ஒன்று குறைந்தால்

    வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி.

    பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

    நாலு குலங்கள் அமைத்தான் அதை

    நாசமுறப் புரிந்தனர் மூடர்

     

    பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

    பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: (நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன) எனப் பகவான் சொல்லியிருக்கிறார்.

          பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”

    இப்படி, விரிவாக வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

    சீலம் அறிவு தருமம் இவை

    சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

    ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை, மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை, ஏவல்கள் செய்பவர் மக்கள் என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.

    பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

    வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்

    வீட்டில் வளருது கண்டீர்

    பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை

    பேருக்கொரு நிறமாகும்

     

    சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்

    சாந்தின் நிறமொரு குட்டி

    பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்

    பாலின் நிறமொரு குட்டி

     

    எந்த நிறமிருந்தாலும் அவை

    யாவும் ஒரே தரமன்றோ

    இந்த நிறம் சிறிதென்றும் இஃது

    ஏற்றமென்றும் சொல்லலாமோ

     

    வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்

    மானிடர் வேற்றுமை இல்லை

     

    சாதி போல் அல்லாமல் வர்ணம் மாற்றிக் கொள்ளக் கூடியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவரது ஞானரதத்தில் தர்ம லோகம் என்ற பகுதியில் கதாநாயகன் கூறுகிறான்:–

    எனது பிதா க்ஷத்திரியர். நான் பிராமணன். என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”

    வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

    வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

                    சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

                    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

     

    மேலவர் கீழவரென்றே வெறும்

    வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்

    போலிச் சுவடியை எல்லாம் இன்று

    பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

    சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்

    தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்

    நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு

    நித்தமும் சண்டைகள் செய்வார்

    சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு

    தன்னில் செழித்திடும் வையம்.

     

    மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

                    கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்

                    கொண்டு வைய முழுதும் பயனுறப்

                    பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

     

    ……………………………………….ஆயிரம் சாதி

    வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்

    தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்

    என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

    சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.

    மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

    காக்கை குருவி எங்கள் சாதி

    காடும் மலையும் எங்கள் கூட்டம்

    என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

    கீதை முன்னுரையில் அவர், கண்ணபிரான் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமே அன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராது இருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்கிறார்.

    பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.

    இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.


     

    Share
  • பாரதியின் வேத முகம் – 4

    சு.கோதண்டராமன்

     பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

    பாரதியார் இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது ஏன்? அன்னியர் நம்மை ஆளக்கூடாது என்பதாலா? அல்ல. அத்வைதக் கொள்கையை நெஞ்சில் நிலையாகப் பதித்திருந்த அவர் நம்மவர் அன்னியர் என்று பிரித்துப் பார்க்கவில்லை.  அதனால் தான் அவரது எழுத்துகளில் எங்கும் ஆங்கிலேயர் பால் வெறுப்புக் காணப்படுவதில்லை. பின் அவரது விடுதலை வேட்கைக்குக் காரணம் என்ன? பார்ப்போம்.

    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

          விளங்குக, துன்பமு மிடிமையு நோவும்

          சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

          இன்புற்றுவாழ்க

    என்பது பாரதி விநாயகரிடம் வைக்கும் வேண்டுகோள். எல்லா உயிர்களும் தெய்வம் என்பதை உணர்ந்து விட்டால் பிறர் மீது அச்சம், பகைமை, கோபம், பொறாமை ஏற்படுமா? பூமண்டலம் எங்கும் அன்பும் பொறையும் மட்டுமே விளங்கும்.

    அச்சம் முதலான இந்தத் தீய குணங்களை நீக்கி விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்று பாரதி கூறுகிறார். எல்லோரும் அமர நிலை எய்த முடியும்.

    எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்ற வேதக் கருத்தை உலகிற்கு அளிக்கத் தகுதி பெற்ற ஒரே நாடு இந்தியா தான்.

    எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

    என்றுரைத்தான் கண்ண பெருமான்

    எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை

    இந்தியா உலகிற்களிக்கும் ஆம்

    இந்தியா உலகிற்களிக்கும் ஆம் ஆம்

    இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க

    இந்தியா தாழ்ந்து நின்றால் உலகனைத்திலும் அஞ்ஞான இருள் பரவி விடும். எனவே தான் பாரதி இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்.

    சுதந்திர தேவியின் ஒளி பெறாவிடில் அங்கு அறிவுண்டோ, ஆக்கமுண்டோ?

    காவிய நூல்கள், ஞானக் கலைகள், வேதங்களுண்டோ?”          என்று கேட்கிறார். மேலும் மற்றோரிடத்தில்,

    வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர்

    பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி?”

    என வினவுகிறார். ஏனெனில் அம்மிலேச்சர்,

    மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்கு

    ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்

    எனவே பாரதி இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது வேத நெறி தழைக்கவும், உலகெங்கிலும் அறம் ஓங்கி வளரவும் தான்.

    பாரதி மகாத்மா காந்தியைப் போற்றியது ஏன்? எல்லா உயிர்களும் கடவுள் என்ற அத்வைதக் கொள்கையைக் கொண்டு, இழிவான வழி முறைகளே நிறைந்த அரசியலைத் தூய்மைப்படுத்தியதற்காகத் தான்.

    மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம்

                கடவுளின் மக்களென் றுணர்தல்

                இன்ன மெய்ஞானத் துணிவினை மற்றாங்

                கிழிபடு போர் கொலை தண்டம்

                பின்னியே கிடக்கும் அரசியலதனிற்

                பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்

    என்று காந்தியைப் பாராட்டுகிறார் அவர்.

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/03/Subramania-Bharathiar-Rare-Photos.jpg


    Share
  • பாரதியின் வேத முகம் – 3

     சு.கோதண்டராமன்

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

          இறைவன் கண்ணனாக அவதரித்துப் பாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாகப் பணி புரிந்தது நமக்குத் தெரியும். அதே கண்ணன் துரியோதனனாக வடிவெடுத்து அர்ஜுனனோடு சண்டையிட்ட செய்தி தெரியுமா?

    இது என்ன புதுக்கதை? பாரதத்திற்குப் போட்டியாக யாரேனும் நாத்திகர் கீரதம் என்று ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்ன?

    இதை எழுதியவர் நாத்திகர் அல்ல. அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்து கண்ணனின் பரம பக்தராக வாழ்ந்து, இன்று பதின்மூன்றாவது ஆழ்வாராகப் போற்றப்படும் பாரதி தான் இப்படிச் சொல்கிறார்.

    அரைச் செய்தி சொன்னால் குழப்பமாகத் தான் இருக்கும். முழுவதையும் கேளுங்கள்.

    கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எதைக் கொண்டு படைத்தார் என்ற வினாவுக்கு விடையாக அத்வைதம் கூறுகிறது – கடவுள் எதைக் கொண்டும் உலகைப் படைக்கவில்லை. தானே பிரபஞ்சமாகத் தோற்றம் காட்டி அருளினார். அப்படி என்றால் இங்குக் காணப்படும் மலைகள், கடல்கள், காடுகள், விலங்குகள், மனிதர்கள் எல்லாமே கடவுளின் வெவ்வேறு தோற்றங்கள் தாமே. அப்படி இருக்க, மானிடரில் சிலரைப் பகைவர் என்று கூறி வெறுக்கிறோமே அது சரியா? சரி அல்ல. அதனால் தான் பாரதி கூறுகிறார் –

    பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

    புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே

    பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

    ‘யாரையும் மேல் தோற்றத்தை மட்டும் பார்த்து மதிப்பிடக் கூடாது. ஆழ்ந்து நோக்குக. புகை நடுவில் தீ போல, சிப்பியினுள் முத்து போல, குப்பை நடுவே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி போல, பகைவனிடத்திலும் உறைவது பிரம்ம சைதன்யமே. தின்ன வரும் புலியைப் பார். அதன் கண்ணில் தெரியும் பசியைக் கூர்ந்து நோக்கு. பராசக்தி தென்படுவாள். எந்த தேவி எல்லா உயிரினங்களிலும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் என்று தேவி பாகவதம் கூறுவதைச் சிந்தனை செய். அந்தப் பராசக்தியைக் கும்பிடு.

    ‘எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒரே கடவுள் என்றால், எதிரி என்று முத்திரை குத்தி ஒருவனை அழித்து விட்டு நீ வாழ நினைப்பது எவ்வளவு பேதைமை? எதிரியை அழிப்பதன் மூலம் நீ கடவுளை அழிக்க முயல்கிறாய். நீயும் கடவுள் தானே? அதாவது உன்னையே நீ அழிக்க முற்படுகிறாய்.

    ‘இதெல்லாம் கடவுளின் லீலை என்பதை உணர்க. அவனே புலியாகவும் மானாகவும் வடிவெடுத்து ஒன்றை ஒன்று அழிப்பதாகத் தோற்றம் காட்டுகிறான். எதுவும் அழிவதும் இல்லை, எதுவும் அழிக்கப்படுவதும் இல்லை. மாயத் தோற்றங்களில் ஒன்று மறைகிறது, ஒரு புதிய மாயத் தோற்றம் ஏற்படுகிறது.

    ‘பாரதக் கதை கேட்டிருக்கிறோம். அங்கே, பார்த்த சாரதியாக வந்தது மட்டும் கண்ணன் அல்ல. அங்கு இருந்த அனைத்து மனிதர்களும் விலங்குகளும் உயிரற்ற பொருள்களும் கண்ணனே. அவனே தன்னை இப்படிப் பல  கூறாக ஆக்கிக் கொண்டு பாரதப் போர் என்னும் மாயையைத் தோற்றுவித்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால், பார்த்த சாரதி மட்டுமல்ல, பார்த்தனும் கண்ணனே, அவனை எதிர்த்த துரியோதனனும் கண்ணனே, அவனது தம்பிகளும் கண்ணனே.

    ‘விசுவரூப தரிசனம் தந்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற முக்காலத்தையும் காட்டின கண்ணன் தன் உடலுக்குள்ளேயே இரு திறத்துப் படைகளையும் உள்ளடக்கிக் காட்டவில்லையா? இந்த உண்மையைச் சந்தேகம் இன்றித் தெரிந்து கொண்டால் உன் உள்ளம் நிறைவு பெறும். சிறிதேனும் சந்தேகம் கொண்டால் குடம் தேனில் ஒரு துளி விஷம் என்ற கதை ஆகிவிடும்’ என்பது பாரதியின் கருத்து.

    இனி அப்பாடலைப் பார்ப்போம்.

    பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

    புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே

    பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

     

    சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ?

    குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ?

     

    உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?

    தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?

     

    வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?

    தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவான் என்ற சாத்திரம் கேளாயோ?

     

    போருக்கு வந்தங்கெதிர்த்த கௌரவர் போல வந்தானும் அவன்

    நேருக்கருச்சுனன் தேரிற் கசை கொண்டு நின்றதும்   கண்ணனன்றோ?

     

    தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய்

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய்.

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/09/bharathiyar-4.jpg

    Share
  • பாரதியின் வேத முகம் – 2

     சூழ்ந்ததெல்லாம்  கடவுள்

                                                                                                                                                                                          சு.கோதண்டராமன்

    கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக் கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா?    புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது.

    தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது….. வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.

    ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ (ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்) என்ற கருத்தை அதில் காண்கிறார்.

    சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே

                சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க

                நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்

                நாராயணன் துரும்பிலுள்ளான் என்றான்

                வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை

                மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை

                அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை

                அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

                           

                கேளப்பா சீடனே கழுதை ஒன்றை

                கீழான பன்றியினைத் தேளைக் கண்டு

                தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி

                சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்

                கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

                கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்

                மீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்

                விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே

     

    யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.

    மந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார். இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக் கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.

    “நீயே கார்த்திகை நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி, சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய். நீயே ஆதிரை, நீயே ருத்திரன், நீயே புனர்வஸு, நீயே அதிதி, நீயே பூசம், நீயே பிரகஸ்பதி, நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே பித்ருக்கள்…” என்று நீளும் மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.

    இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

    சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;

    சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;

    வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,

    வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

     

    பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று

    பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்

    நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்

    நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

     

    உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;

    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;

    பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்

    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

     

    வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்

    மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே

    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;

    எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

    [பாரதி அறுபத்தாறு 15, 17, 18]

    மனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்தது எல்லாம் கடவுள்.

     

                சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்

                நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே

                சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

    தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.

    இவ்வுலகம் ஒன்று

    ஆண், பெண், மனிதர், தேவர்,

    பாம்பு, பறவை, காற்று, கடல்,

    உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே

    ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி,

    குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே

    இன்பம், துன்பம், பாட்டு,

    வண்ணான், குருவி, மின்னல், பருத்தி                            

    இஃதெல்லாம் ஒன்று

    மூடன், புலவன்,

    இரும்பு, வெட்டுக்கிளி

    இவை ஒரு பொருள்

    வேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்

    இவை ஒரு பொருளின் பல தோற்றம்

    உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று

    இந்த ஒன்றின் பெயர் – தான்

    தானே தெய்வம்

    தான் அமுதம் இறவாதது  

     

    பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.

    காக்கைச் சிறகினிலே நந்தாலா நின்றன்

    கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

    பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன்

    பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

    கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நின்றன்

    கீதம் இசைக்குதடா நந்தலாலா

    தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்

    தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

     

    உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே (அஹம் ப்ரம்மாஸ்மி) என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில்  வெளிப்படுகிறது பாருங்கள்.

     

    வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்

    மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

    கானிழல் வளரும் மரமெலாம் நான்.

    காற்றும் புனலும் கடலுமே நான்,

     

    விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,

    வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,

    மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்

    வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

     

    கம்பனிசைத்த கவியெலாம் நான்,

    காருகர் தீட்டும் உருவெலாம் நான்,

    இம்பர் வியக்கின்ற மாட கூடம்

    எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

     

    இன்னிசை மாதரிசையுளேன் நான்

    இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,

    புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,

    பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

     

    மந்திரங் கோடி இயக்குவோன் நான்

    இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்

    தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,

    சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

     

    அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

    அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,

    கண்ட பல சக்திக் கணமெலாம்நான்,

    காரணமாகிக் கதித்துளோன் நான்.

     

    நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,

    ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,

    ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

    அறிவாய் விளங்கு முதற் சோதி நான்.

     

    http://artgallerydg.blogspot.in/2010/10/subramanya-bharathi.html

     

    Share
  • மின்தடை

    சு. கோதண்டராமன்
    இரவு மணி எட்டு

    விசிறிகள் சுழல, விளக்குகள் ஒளிர,

    வீடு தோறும் தொக்கா முழக்கம்.

    போட்டிப் பெருங்குரல் மாணவர் படிப்பு.

    உலகமே சுறுசுறு, ஓய்விலா இயக்கம்.

     

    திடீரென மின்சாரம் நின்றது.

     

    விளக்குகள் அணைந்தன,

    தொக்கா ப்ரிட்ஜுடன் க்ரைண்டரும் வாய் மூட,

    வீட்டுக்குள் கொசுக்கடி, வெளியே வந்தோம்.

    வானம் மட்டும் பளிச்செனத் தெரிந்தது.

    இத்தனை விண்மீனா! ஈதென்ன விந்தை!

    முத்துகள் வயிரங்கள் பதித்த பட்டுடையோ!

    வெள்ளி முலாம் பெற்ற தென்னையோ பேரழகு!

    கண்களைக் கூசாத கவினுறு நிலவொளி!

    இயற்கைத் தென்றலின் இதமான தழுவல்!

     

    ஐந்து நிமிடம் கழித்து-

     

    மின்சாரம் வந்தது.

    உறைந்த உலகு உயிர்பெற்று எழுந்தது.

    விட்ட சீரியல் தொடர வேண்டும்,

    விடிந்தால் தேர்வு படிக்க வேண்டும்,

    எல்லோரும் பறவை போல் தத்தம் கூட்டில்.

    மீண்டும் இயந்திரமாயினர் மக்கள்.

    படத்துக்கு நன்றி

    http://kashmirobserver.net/news/power-cut-dismays-consumers

    Share
  • தெரு நாய்

    சு.கோதண்டராமன்

    எங்கும் பரவியுள ஈசனுக்கோர் பாமாலை

    எழுத முற்பட்டு ஏடெடுத்து அமர்ந்திட்டேன்

    “எனைப் பாடு, எனைப்பாடு” என்றொரு குறுக்கீடு

    எட்டி நான் பார்த்தேன். ‘சீ, ஒரு தெரு நாய்!’

    “உனக்கென்ன தகுதி ? குரைக்காமல் கிட” என்றேன்.

     

    “எங்குமுளன் ஈசன் எனில் என்னிடத்தில் அவன் இலையோ?”

    (நாய் தொடர்ந்து கூறியதை நம் மொழியில் தருகின்றேன்.)

     

    “மண்ணில் நான் பிறந்து மாதமொன்று ஆகிறது..

    புத்தியைக் கொண்டுந்தன் பிழைப்பை நடத்தென்று

    தாயும் விரட்டிடவே தனியன் ஆகிவிட்டேன்.

    கால் கொண்டு சேர்த்தது காலையில் இங்கென்னை.

    போவோர் பின் போனேன், வருவோர் பின் வந்தேன்.

    இங்குள்ள மனிதரை என் நண்பனாய் ஏற்றேன்.

     

    காலை முதல் பட்டினி, அது எனக்குப் பொருட்டல்ல.

    எனக்கொரு பிடி சோறு இடினும் இடாவிடினும்

    இப்போது வருகின்றான் யாரோ ஒரு வேற்றாள்.

    அவனிடமிருந்து உமதுடமை காத்திடுதல்

    எந்தன் கடமையென எண்ணிக் குரைக்கின்றேன்.

    பணி செய்து கிடப்பதென் கடனென் றுரைத்தது.

     

    நாய் உரைத்த சொல் யாவும் நாயகனின் சொல்லேயாம்.

    நாய் வடிவினில் விளங்கும் ருத்திரனுக்கு நம என்ற

    வேத மொழி நினைந்து விம்மிதம் எய்தினேன்.


    படத்துக்கு நன்றி

    http://thedogweb.meu.zoznam.sk/psie-vianoce/

    Share
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?

     

     சு. கோதண்டராமன் 

     

    போதி மரத்துப் புனிதன் சொன்னான்

    “சாவினை அறியாத் தனி மனை இல்லை”

     

    “பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும்

    உலகினில் இயல்பாம். ஒழித்திடு சோகம்”

    கண்ணன் உரைத்தான் கடும் சமர் நாளில்

     

    “நேற்றைய வலியும் நாளைய கனவும்

    நெஞ்சினில் பாரம். நீக்குக அதனை.

    இன்றெது உள்ளதோ இதுவே உண்மை”

    தத்துவ ஞானி ஜே.கே. பகர்ந்தான்.

     

    “சென்றது மீளுதல் செகத்தினில் இல்லை

    இன்று தான் புதிதாய்ப் பிறந்தோ மென்று

    எண்ணிக் களிக்க. இன்பமாய் வாழ்க.”

    ஆசையாய்ப் போற்றும் மீசைக் கவிஞன்

    அழுத்திச் சொன்ன கருத்துக ளாமிவை.

     

    அனைத்தும் கற்றேன். அறிஞன் ஆனேன்.

    இத்தனை அறிவையென் மூளைக்கனுப்பிய

    எந்தன் கண்களோ இன்னமும் அசடு.

    எட்டுச் சுரைக்காய் சுவைக்க அறியா.

     

    கண்டிராக் க்ண்ணனைக் காணவே வேண்டி

    கரைந்து உருகினாள் கவிதையில் மீரா.

    நிசிதின் பரசத நைன ஹமாரி

    (இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்)

     

    பெற்ற உறவைப் பிரிந்து நிற்கையில்

    இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்.

    ஏட்டுக் காயை எடுத்துச் சமைத்து

    அசட்டுக் கண்களுக் கருத்துவார் உளரோ?

     

    படத்துக்கு நன்றி

    http://nutrihealth.in/health/bottle-gourd-guard-against-diseases/

    Share
  • ஸப்தபதி

       சு.கோதண்டராமன்

    ஏழு அடி வைப்பது எதற்காக?

    இரு மனம் இசைந்து ஒன்றாக.

    முதலடி வைக்கையில் வேண்டுவதோ

    முகுந்தன் அருளால் மிகு உணவு.

     

    இரண்டாம் அடியை எடுப்பது

    இலட்சுமி நாயகன் புஷ்டி தர

    மூன்றாம் அடியை வைக்கும்போது

    முராரி காப்பான் விரதங்களை.

     

    நான்காம் அடியை வைப்பதனால்

    நாரணன் அளிப்பான் நல்ல சுகம்.

    ஐந்தாம் அடியால் வேண்டுவது

    அரியின்  அருளால் பசுச் செல்வம்.

     

    பருவ காலங்கள் துணை புரிய

    பிரார்த்திப்பது தான் அடுத்த அடி.

    ஏழாம் அடியை வைப்பதனால்

    இறைவனிடம் வேண்டும் வரம் என்ன?

     

    கணவன் செய்யும் நற்பணிகள்

    காரியம் யாவினும் கைகொடுக்க

    கண்ணபிரான் அருள் பின் தொடர்க.

     

    ஏழடி நடந்த நீ என் தோழி.

    என்றும் விலக்கோம் நம் நட்பை.

    சிந்தனையில் நாம் ஒன்றாவோம்.

    செயலிலும் நாமினி ஒன்றாவோம்

    உள்ளத் தூய்மை அன்புடனும்

    ஒன்றாய் இன்பம் அனுபவிப்போம்.

     

    இருக்கு வேதம் நீ என்றால் இசைக்கும் சாமம் நான் ஆவேன்

    பொறுக்கும் பூமி நீ என்றால் பொழியும் வானாய் நானிருப்பேன்

    விளையும் வயலாய் நீ இருப்பாய். விதையாய் உன்னுள் மறைந்திடுவேன்

    செல்லும் வாக்காய் நீ இருக்க, சிந்தனை மனமாய் நான் இருப்பேன்

     

    இன்சொல் நங்காய் என்னிடம் வருக.

    நன்மக்கள் பேறும் நலிவிலாச் செல்வமும்

    பெற்று நாம் வாழ்வோம், பெரும் புகழ் அடைவோம்

    படத்துக்கு நன்றி

    https://picasaweb.google.com/lh/photo/hjO-U6-l75FB2KaN6EwPVg

     

    Share
  • வைகறைப் பொழுது

    சு.கோதண்டராமன்

    பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

    இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷி ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார். அவரது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.

     

    வைகறைப் பொழுது இனியது. ஆனந்தம் தருவது. அழகானது. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும் ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.

     

    இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு  முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.

    இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு இயற்கை நியதி உள்ளது, அதில்  தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது தான். ருதம் என்ற பெயரால் குறிக்கப்பட்ட இந்த நியதி தான் கடவுள் கொள்கையாகப் பிற்காலத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றது.

    வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.

    பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்களாகக் கூறப்படும் இயற்கைச் சக்திகள் யாவும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.

      சு.கோதண்டராமன்

    எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்? இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் ரிஷி.

    இனி மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். (மொழிபெயர்ப்புகள் எப்போதுமே குறை உடையவை தாம். வேதக் கவிதையின் உயிர்த்துடிப்பை, அதில் அடங்கியுள்ள வியப்புணர்ச்சியை, ஆனந்தத்தை மொழிபெயர்ப்பது அரிது. அதன் கருத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன்.)

     

    1     வந்தது வந்தது பேரொளி இன்று,

    வானகமெங்கும் பரவியே நின்று.

    ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு

    அணங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.

     

    2     வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்

    இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.

    இரவென ஒருத்தி பகலென ஒருத்தி

    அமரத் தன்மை அடைந்த மகளிர்

    ஒன்று போல் இருப்பர் நிறம் தான் வேறு

    ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று

    விண்ணில் நடக்கும் விந்தை காணீர்

     

    3     மூலப் பரம்பொருள் ஏவியபடியே

    முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்

    இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி

    மாறி மாறியே பயணம் செய்வர்.

    நிறம் தான் வேறு மனமோ ஒன்று

    அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்

    தடுப்பதும் இல்லை நிற்பதும் இல்லை.

     

    4     உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை

    இனிய சொற்களின் எழில்மிகு தலைவி

    பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,

    கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    5     சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை

    பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்

    இன்ன நலன்களை இனிதே நாடவும்

    தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி

    விழியிலார்க்கு விழிகள் அருளி

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    6     கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்

    புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்

    இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்

    கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்

    வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    7     விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்

    நல்லுடை உடுத்த நளின மங்கையே,

    புவியின் செல்வம் ஆளும் ராணியே,

    மங்கலச் செல்வி, இன்று எம்மீது

    உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.

     

    8     கடந்து சென்ற கணக்கிலா விடியல்

    அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்

    இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்

    யாவற் றிற்கும் நீ வழி காட்டி.

    உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.

    இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?

     

    9     உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்

    தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.

    சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.

    தேவ பூசனை செய்யும் உந்துதல்

    உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!

     

    10    எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?

    இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?

    கடந்து சென்ற நாட்களின் வழியில்

    நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.

    இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்

     

    11     எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்

    எண்ணிலா விடியல் கண்டு களித்து

    எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.

    உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட

    இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.

    புதிய மக்கள் நாளை வருவர்

    விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

     

    12    நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை

    நெடிய பகையினை நீளத் துரத்தினை

    மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி

    இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை

    தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை

    இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு

    13    தேவி உனது திருநிறை ஒளியை

    பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.

    இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்

    மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்

    இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்

     

    14    விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்

    கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்

    செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்

    கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.

     

    15    உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்

    உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை

    வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்

    கடந்து சென்ற விடியல் களிலே

    கடைசியாய் வந்தது இன்றைய வைகறை

    இனிவர விருக்கும் விடிவு களுக்கு

    முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்

     

    16    உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,

    விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்

    பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்

    இன்று எமது ஆயுளில் இயைந்தது ஒரு நாள்

     

    17    ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து

    உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்

    போற்றும் புலவர்க் கருளுக உஷையே

    குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.

     

    18    சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து

    காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை

    வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்

    பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.

     

    19    தேவர் தாயே, அதிதியின் வடிவே

    வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!

    யாவரும் போற்றும் இனிய நங்காய்,

    உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை

    உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.

     

    20    உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு

    உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்

    மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்

    விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.

    படத்திற்கு நன்றி

    http://chakrabodyyoga.blogspot.in/2012/06/from-blah-to-brilliant-3-great-reasons.html

    Share
  • கண்ணீர்

     சு.கோதண்டராமன்

    என்னருமைக் கண்ணீரே,

    இன்னலிலே என் தோழா,

    உன்னருமை நானறிவேன்

    ஒன்றுரைப்பேன் கேளாய் நீ

     

    நலிந்தார்க்கு நற்றோழா நானறிவேன் நின் திறமை

    வலிமையுள்ள நின் முன்னே வாள் திறனும் சிறிதாகும்

    ஞாலத்தின் முழுமையிலும் நீ தூண்டி நடத்திட்ட

    கோலப் பெருஞ்செயல்கள் கோடி கோடி ஆகுமையே

     

    வாயினால் வடித்திடவே வார்த்தையிலாச் செய்தியெலாம்

    நீயாக உரைத்திடுவாய் நீள் விழியினில் நின்று.

    பேசவொணாப் பெருஞ்செய்தி இதயத்தில் உளதெல்லாம்

    நேசமுடை நெஞ்சத்தில் நீயே உரைத்திடுவாய்.

     

    உள்ளத்துச் சோகத்தை உன்னி உன்னி நின்னை பெரு

    வெள்ளம் போல் பெருக்கிவிட வேட்கை பிறக்குதையே.

    ஆனால்

    பத்துப் பேர் என்னைப் பார்த்து நிற்கும் போது

    முத்துப் போல் நீ வந்து முகம் காட்டி நிற்கிறாய்

    பிறரறியாது உன்னைப் பேணி மறைக்கிறேன்

    ஊரறிய அழுவதிலே உண்டாமோ ஆறுதலும்

     

    அருகில் யாருமே இல்லாத நேரம் நீ

    பெருகி வரவேண்டுமெனப் பிடித்து வைக்கிறேன்.

    தனிமையிலே நின்றுன்னை ஆறாய்ப் பெருக்குவதே

    மனச்சுமை குறைத்திடும் மார்க்கம் ஆகிவிடும்.

    படத்திற்கு நன்றி

     

     

    Share