Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 137

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    அடிகள் ஒருப்படுதல்
    கொடுங்கோல் ஆட்சி செய்யும்                            moon for silambu   
    மன்னனின் வீழ்ச்சியை
    மக்கள் எதிர்நோக்கியிருப்பது போலவே
    இவர்கள் மூவரும் ஞாயிறு மறையும்
    அந்தி வேளையை எதிர்நோக்கியிருந்தனர்.

    நிலமகள் கண்ணகியின் நிலைக்கு இரங்கித் துயிலுதல்
    அவர்கள் எதிர்பார்த்தவாறே
    பலவகைபட்ட விண்மீன்களாகிய
    தம் சேனையோடு
    பால்போன்ற வெள்ளிய கதிர்களைப் பரப்பி,
    பாண்டிய குலத்தின் முதல்வனாகிய
    திங்கள் செல்வன் தோன்றினான்.

    விண்மீன்கள் கொண்டு தொடுத்தது போல்
    ஒளிர்ந்த முத்துவடமும் சந்தனக் குழம்பும்
    கண்ணகியின் இளமை பொருந்திய முலைகளைச்
    சேராது நீங்கியது.
    முல்லை மலர் சூடிய அவள் பொலிவு பெற்ற கூந்தல்
    தாதுசேர் கழுநீர் மாலை பொருந்தாது நீங்கியது.

    சந்தனத் தளிர்களுடன் வேறு தளிர்களும்
    சேர்த்துத் தொடுத்த மாலையானது
    அவள் மாந்தளிர் மேனியைத் தழுவாது நீங்கியது.

    இவ்வாறு தோற்றம் கொண்டு
    நடந்து சென்ற கண்ணகியின் மீது
    பொதிகை மலையில் தோன்றி
    மதுரை இசைப்புலவர் நாவில் பொருந்திய
    தென்றல் அதனோடு பால்நிலாவும்
    தன் கதிர்களை விருப்பத்துடன் சொரிந்து
    அவள் வேட்கைதனைத் தூண்டியது.

    இதனைக் கண்ட நிலமகள்
    “முன்பு கணவன் உடன் இல்லாதபோது
    இவளை வருத்திய வேனில்,
    இப்போது அவன் அருகிருந்தும்
    அவளை வருத்துகிறதே” என்று
    பெருமூச்செறிந்து அடங்கினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 14 – 29
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html

    படத்துக்கு நன்றி:
    http://www.lurvely.com/photo/4981281546/moon_silhouette/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 136

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    இரவில் வழி செல்லுதல் நன்றுஎன்று கோவலன் கவுந்தியடிகளிடம் கூறுதல்

    முன்னர்க்கூறிய கொற்றவையணிந்த
    வேட்டுவக்கோலம் நீங்கி
    வரிக்கூத்துகளும் முடிந்தபின்,                        kovalan and others
    கோவலன் அறத்தின்வழி நிற்கின்ற
    கவுந்தியடிகளின் திருவடிகள் வணங்கி,

    “அடிகளே!
    மென்மையான கண்ணகி
    கடுமையான சூரியனின் வெப்பக் கதிர்களைப்
    பொறுத்துக் கொண்டு
    பகல்பொழுதில் நடந்து வர இயலாதவள்.

    பரல்கற்களையுடைய இக்காட்டு வழியில்
    அவளுடைய சீறடிகள் படிந்து நடப்பதும் இயலாது.
    அவளுடைய கால்களிலும் கொப்புளம் ஏற்பட்டுள்ளது.

    இப்பாண்டிய நாடுதன்னில்
    எதிர்ப்பட்டதையெல்லாம் தாக்கும் கரடியும்
    கொடும் புற்றுகளைத் தோண்டுவதில்லை;
    ஒளிபொருந்திய கோடுகளையுடைய புலிகளும்
    மான் இனத்தோடு பகை கொள்வதில்லை.

    பாம்பும் சூர் எனும் தெய்வமும்
    இரைதேடும் முதலையும் இடியும்
    தம்மைச் சார்ந்தவர்க்கு
    எந்தத் துன்பமும் செய்வதில்லை.

    இவ்வளவு சிறப்புகளும் உடைய
    செங்கோல் பாண்டியர் ஆட்சியதன் புகழ்
    எல்லாத் திசைகளிலும் பரவிநிற்பது
    மிகவும் பெருமை வாய்ந்ததன்றோ?

    எனவே
    கண்ணகியால் பொறுத்துக்கொள்ளமுடியாத
    துன்பங்கள் நிறைந்த
    இப்பகல் பொழுதை விட்டுவிட்டு,
    பல உயிர்களையும் இனிதாய்க் காக்கின்ற
    நிலவதன் ஒளியில் இரவுப்பொழுதில்
    இந்நெடிய வழியில் செல்வதில்
    துன்பம் ஒன்றும் இருக்காது”
    எனக் கோவலன் கூற
    கவுந்தியடிகளும் அதற்கு உடன்பட்டார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 13
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 135

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    பலிக் கொடை

    சங்கரி! அந்தரி! நிலி!
    சடைமுடியிலே சிவந்த கண்களையுடையவளே!          neeli
    பாம்பினை இளம் பிறையுடன் சூடியிருப்பவளே!
    பாலைவழியில் செல்வோரின் எண்ணிக்கை பெருகி
    அவரிடம் சூறையாடும் எம்தொழில் சிறக்க வேண்டுகிறோம்.
    நேர்த்திக் கடனாய் வலிமையான வில்லினையுடைய 
    எயினர் யாம் வழங்கும்
    பலியை ஏற்றுக் கொள்வாயாக!

    விண்ணில் வாழும் தேவர் அமுதுண்ட போதும்
    தத்தம் காலம் முடியும்போது மரணம் எய்துவர்.
    ஆனால் நீயோ எவருமே உண்ணாத நஞ்சினை
    உண்ட பின்பும் உயிரோடிருந்து
    பிறர்க்கு அருள்செய்வாய்!
    ‘துண்’ என்று ஒலியெழுப்புகின்ற துடி முழக்கத்தோடு
    பகைவர் அனைவரும் உறங்கும் இரவில்
    அவர் ஊருக்குள் புகுந்து
    அங்கிருப்பவரைக் கொன்று
    கொள்ளையிடும் கண்ணோட்டமற்ற
    எயினர் யாம்  வழங்கும்
    பலியை ஏற்றுக் கொள்வாயாக!

    உன் மாமனாகிய கம்சனின் வஞ்சகத்தால் தோன்றிய
    இரு மருத மரங்களின் இடையே
    இடையில் கட்டப்பட்ட உரலுடன் நடந்து சென்று
    அவற்றைச் சாய்த்தும்
    உருண்டு உன் மீது ஏற வந்த சக்கரத்தை
    உதைத்து நொறுக்கியும்
    உயிர்களுக்கு அருள் செய்பவளே!
    வழியில் போவோர் பொருளைப் பறித்துக்கொண்டு
    அவர்களுக்குத் துன்பம் செய்வதைத் தவிர
    எவரிடத்தும் கருணை காட்டாத
    எயினர் யாம் வழங்கும்
    பலியை ஏற்றுக் கொள்வாயாக!

    பாண்டிய மன்னனை வாழ்த்துதல்

    வேதங்களை அருளிய முதல்வனாம்
    சிவனின் தம்பி அகத்தியன்
    எழுந்தருளியதால் சிறப்புப் பெற்றது
    பொறைகளையுடைய உயர்ந்த பொதிகை மலை.
    அம்மலையை உடையவனும்
    வெற்றியை விரும்புபவனும் ஆகிய பாண்டியன்
    பகைவருடைய போர்முனை,
    ஆநிரைகளை மீட்க வரும் அவர்கள் தொழில்
    இவை பாழ்படும் வண்ணம்
    வெட்சி மாலை சூடுவானாக!

    வேட்டுவ வரி முற்றியது.
    அடுத்து வருவது புறஞ்சேரி இறுத்த காதை.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே:  20 – 23
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*

    படத்துக்கு நன்றி:
    http://alimoongoddess.com/2011/08/09/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 134

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    துறைப்பாட்டு மடை

    அவிப்பலி

    கதிரவனின் வெப்பம் உயிர்களை
    வருத்தாத வண்ணம்
    அவனுடனேயே வானில் சுழன்று திரியும்
    முனிவர்கள் அமரர்கள் ஆகியோருடைய
    துன்பம் தீரும்வண்ணம் அருள்புரியும்படி
    உன் திருவடிகள் இரண்டையும் வணங்கிநின்றோம்.

    பகைவர்களை வெற்றிகொள்ளும்             Kali
    வீர மறவர்களாகிய நாங்கள்
    எங்களது வெற்றிக்கு விலையாக
    எம்கழுத்தில் இருந்து வழியும்
    இரத்தத்தைத் தானமாகத் தருவதாக
    முன்பு சூளுரைத்தோமே…
    அதை இப்போதுதருகிறோம்.
    ஏற்றுக் கொள்வாயாக!

    அழகிய முடிசூடிய தேவர்கள்
    தம் அரசனாகிய இந்திரனுடன்
    வந்து வணங்குகின்ற
    நீலநிறம் உடைய
    உன் திருவடிகளைக் கண்டு வணங்கிநின்றோம்.

    திரண்ட பசுக்கூட்டங்களைக் கவர்ந்துவந்த
    மறவர்களாகிய நாங்கள்
    எம் வெற்றிக்கு விலையாக
    நிணத்துடன் கலந்து சிந்துகின்ற
    குருதிப் பலியைத் தந்தோம்.
    ஏற்றுக் கொள்வாயாக!

    துடியுடன் பறையும் கொம்பும் சேர்த்து,
    செவிகள் பிளந்து செவிடாகும் வண்ணம்
    உரக்க ஒலிக்கச் செய்பவர்கள் மறவர்கள்.
    நடு இரவில் எதிரில் வருபவர்களைத்
    தாக்கிக் கொல்கின்ற புலிபோல் வலிமையுடைய
    மறவர்களாகிய நாங்கள்
    குமரியாகிய நின்திருவடிகள் வணங்கிநின்றோம்.

    அங்ஙனம் யாம் பெற்ற வெற்றிக்கு
    ஈடாகத் தரும் நேர்த்திக்கடனே
    எம்கழுத்தில் இருந்து யாம் சிந்துகின்ற குருதியாகும்
    ஏற்றுக் கொள்வாயாக! 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே:  17 – 19
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://www.maalaimalar.com/2012/11/21143028/saptha-kannigal-worship-benefi.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 133

    -மலர்சபா

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    கொடை

    இளமையும் கருமை நிறமும் கொண்டaa
    எயினர் மகளே!
    நின் தமையன்கள் முன்பு
    பகைவர்களை வென்று
    கவர்ந்துவந்த பசுக் கூட்டங்கள்
    கொல்லன், துடியன்,
    பாட்டுகள் தாளத்துடன் புணர்க்கவல்ல
    நல்ல யாழ்ப்பாணன்…ஆகியோர்
    வீட்டின் முன்வாயிலில் நிறைந்துநிற்கின்றன.
    காண்பாயாக!

    மயிலின் அடியைஒத்த
    முற்றிடாத நகையுடையவளே!
    நின் தமையன்கள் முன்பு
    கரந்தையர் அலற அலறக்
    கவர்ந்து வந்த பசுக்கூட்டங்கள்
    கள்விற்பவள், நல்ல உளவறிந்து கூறும் ஒற்றன்,
    நல்லசகுனப்பொருத்தம் கூறும் சோதிடன்…ஆகியோர்
    வீட்டின்முன் நிறைந்து நிற்கின்றன.
    காண்பாயாக!

    குளத்துக்கண் உள்ள தாமரை மலர் போன்ற
    மையுண்ட கண்களை உடையவளே!
    நின் தமையன்கள் முன்பு
    பகைவர்கள் வருந்தி அலறிக் கூவி
    ஊரையே கூட்டிய வண்ணம்
    கவர்ந்து வந்த பசுக்கூட்டங்கள்
    கொச்சை மொழியும், நரைத்த தாடியும் உடைய
    முதிய மறவர் மறத்தியர்
    வீட்டு முன்றிலில் நிறைந்து நிற்கின்றன.
    காண்பாயாக!

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே:  14 – 16
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி
    http://ta.wiktionary.org/wiki

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 132

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    கூத்து உள்படுதல்
    2b
    அழகிய பொன்னால் செய்த பரல்களையுடைய
    சிலம்பும் வளையும் மேகலையும் ஒலித்து நிற்க
    வஞ்சம் புரிகின்ற வாள்தொழில் செய்யும்
    அசுரர்கள் அழியும் வண்ணம்
    கொற்றவையாகிய நீ
    மரக்கால் மீது நின்று
    கூத்தாடினாய் போலும்!

    அவ்வாறு அசுரர்களை அழிக்க
    மரக்கால் மீது நின்று
    நீ வாள் கொண்டு ஆடும் வேளையில்
    உன்னுடைய காயாம்பூ மேனியைப் போற்றித்
    தேவர்கள் தம் கைகளால் சொரியும் மலர்கள்
    மழை போல் காணப்படும் போலும்!

    வெட்சி

    பகைவரும் அச்சப்படும் சிற்றூர் ஒன்றிலுள்ள
    ஒப்பற்ற வீரன் ஒருவன்
    ஆநிரை கவரச் செல்லும் உரிய காலைப் பொழுதில்
    அப்போர்க்கு வெட்சி மாலை சூடுவதற்கு
    வெள்ளிய வாள் ஏந்திய
    கொற்றவையாகிய உழத்தியின் துணை
    வேண்டும் போலும்!

    அவ்வாறு வெள்ளிய வாள் ஏந்தி
    கொற்றவையாகிய உழத்தி வரும் போது,
    பகைவர் ஊரைச் சேர்ந்த காட்டில் உள்ள
    கருங்குருவி ஒன்று
    அவர்கள் பின்னால் வந்து
    பின்னர் வரக்கூடிய கேட்டினை
    முன்னரே அறிவிக்கும் போலும்!

    வெட்சிப் புறநடை

    கள் விற்பவள் பழங்கடன் கொடுக்காதவனுக்குக்
    கள் கொடுக்க மறுக்க
    அதனைப் பொறுக்காத வீரன்
    வில்லினை ஏந்தி,
    பறவை பின்னால் வர
    ஆநிரை கவர எண்ணிச் செல்வான்.

    அங்ஙனம் பறவை பின் தொடரச்
    செல்லும் வேளையில்,
    சிங்கக் கொடியைக் கையில் கொண்டு
    கொற்றவையும் முன் செல்வாள் போலும்!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 131

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    முன்னிலைப் பரவல்

    யானையின் தோலை மேலே போர்த்திக்கொண்டு
    புலியின் தோலை இடுப்பிலே உடுத்திக்கொண்டு
    காட்டு எருமை அதன்  தலைமேல் நின்றாய்;            arthanari
    தேவர் யாவரும் வணங்கிட
    வேதங்களுக்கும் அப்பாற்பட்ட
    புலப்படாது மறைந்த பொருளாய்
    அறிவின் கொழுந்தாகிச் சலிப்பில்லாமல்
    என்றும் நிலைத்து நிற்பாய்!
    இது என்ன மாயமோ!

    வரிகள் உடைய வளைகள் அணிந்த கையில்
    வாளை ஏந்திக் கொண்டு
    மாபெரும் மகிடாசுரனை அழித்து,
    கருமையாக முறுக்காக அமைந்த கொம்பினையுடைய
    கலைமானின் மீது நின்றாய்!
    இது என்ன மாயமோ!

    திருமால் சிவன் பிரம்மன் ஆகிய இவர்களின்
    தாமரை போன்ற உள்ளத்தில் தங்கியிருந்து
    விரிந்த கதிர்களையுடைய
    அழகிய ஜோதியாய் ஒளிவிடும்
    விளக்காகி நிற்பாய்!
    இது என்ன மாயமோ!

    சங்கினையும் சக்கரத்தினையும்
    தம் தாமரைக் கைகளில் ஏந்தி
    சிவந்த கண்களுடைய சிங்கத்தின் மீது நின்றாய்!
    கங்கையைத் தலைமுடியில் அணிந்த
    நெற்றிக்கண்ணுடைய சிவபெருமானின்
    இடப்பாகம் தன்னில் பெண்ணுருவத்தில்
    வேதங்கள் போற்றிட நிற்பாய்!
    இது என்ன மாயமோ!

    வென்றிக்கூத்து

    அவ்விடத்து,
    கொன்றைமலரும் துளசியும் ஒன்றாய்க் கட்டிய
    மாலையைத் தோள்மேல் சூடி,
    அசுரர் துன்பத்தால் வாடும் வண்ணம்
    அவர்தம் போர்முனையில்
    தேவர்க்கு வெற்றி உண்டாகும் வண்ணம்
    தான்கொண்ட குமரிக் கோலத்தில்
    வெற்றிக்கூத்தினை ஆடத் தொடங்குவாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  01 – 10
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://godphotosimages.blogspot.in/2013/01/blog-post_25.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 130

    -மலர் சபா

    மதுரைக்காண்டம் – 02: வேட்டுவவரி

    உரைப்பாட்டு மடை

    முன்றிலின் சிறப்பு

    நெற்றியில் கண்ணுடைய சிவபெருமான்
    தம் இடப்பாகத்தில் கொண்ட
    கொற்றவையின் முன்றிலின் இடத்து…

    மணம் வீசும் சுரபுன்னை மரமும்,
    நாரத்தையும் வரிசையாக ஒழுங்குபட நின்றன.
    ஆச்சா மரமும் சந்தன மரமும்
    உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தன.                     goddess durga for silambu 4th august
    எவ்விடத்தும் சேவும் மாவும்
    நெருங்கி வளர்ந்து நின்றன.

    பிறையை உடைய சடை கொண்ட
    கொற்றவையின் முன்றிலின் இடத்து
    வேங்கை மரங்கள் சிவந்த பொன் போன்ற
    பூக்களைச் சிந்தி நின்றன.
    நல்ல இலவமரங்கள் தம் கிளைகளில் பூத்த
    செம்மலர்களை உதிர்த்துக் குவித்தன.
    புன்க மரங்கள் வெள்ளைப் பொரி போன்ற
    பழம்பூக்களை உதிர்த்து நின்றன.

    திருமாலுக்கு இளைவளாகிய
    கொற்றவையின் முன்றிலின் இடத்து…
    வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும்
    மணம் வீசும் குராவும் கோங்கமும்
    பூத்துக் குலுங்கின.
    அவற்றின் கிளைகளில் வண்டுக்கூட்டம் முழங்கி
    யாழ் போல் இசைக்கும்.

    வள்ளிக்கூத்து

    துர்க்கை அணியும் அணியை எல்லாம்
    தாமும் அணிந்துகொண்டு நிற்கும்
    இப்பொன் வளையணிந்த குமரி
    முன்னர் செய்த தவம்தான் எதுவோ?
    பொன்வளையணிந்த இம்மாது பிறந்த குடிப்பிறந்த
    வில்லேந்தும் மறவர் குலமே சிறந்த குலம்.

    கொற்றவையின் அழகினை ஒத்ததாக
    அழகு கொண்ட, பாம்பினைப் போன்ற அல்குலை உடைய
    இக்குமரி செய்த தவம்தான் எதுவோ?
    இவள் பிறந்த குடிக்கண் தோன்றிய
    அம்பெய்தும் வில்லினையுடைய
    எம் வேட்டுவக் குலமே சிறந்த குலமாகும்.

    தாவும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட
    கொற்றவையின் கோலம் கொண்டு நிற்கும்
    அழகிய வளையணிந்த இவள் செய்த தவம்தான் எதுவோ?
    இவள் பிறந்த குடியில் தோன்றிய
    மூங்கில் வில்லினையுடைய
    மறவர் குலமே சிறந்த குலமாகும்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  01 –  06
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://allgodstuff.blogspot.in/2014/02/durga-maagif_8787.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 129

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    கண்ணகி நாணமுற்று, புன்முறுவல் பூத்து நிற்றல்

    சாலினி மொழி கேட்ட கண்ணகி நாணமுற்று
    “மூதறிவுடைய இவள் மயக்கத்தால்                          mahisasuramardini for silambu 28th july
    இவ்வாறு கூறுகிறாள்” என்றே கூறி,
    பெறுதற்கரிய கணவனாம் கோவலன்
    முதுகின் பின்னே ஒளிந்து கொண்டு
    புதிய புன்முறுவல் பூத்து நின்றனள்.

    பிறை என வெள்ளைத் தாமரை இதழைச்
    சூடி நிற்கும் நெற்றியும்
    நெற்றிக்கண்ணைத் திறந்து விழிக்கும்
    இமையாத விழிகளையும்
    பவளம் போன்ற வாயினையும்,
    வெள்ளி போல் ஒளிபொருந்திய சிரிப்பினையும்,
    நஞ்சினை உண்டதால் கறுத்த கழுத்தினையும் உடையவள்.

    கொடிய சினத்தை உடைய
    வாசுகி என்னும் பாம்பை நாணாகப் பூட்டி
    மேருவாகிய மலையை வில்லாய் வளைத்தவள்.

    நஞ்சுகொண்ட துளைகள் பொருந்திய
    பற்களை உடைய பாம்பினைக்
    கச்சாக அணிந்த முலைகளை உடையவள்.
    வளையணிந்த கைகளில் சூலம் ஏந்தியவள்.
    யானையின் தோலைப் போர்த்திக் கொண்டு
    அதன் மீது, பிறரை வருத்தும் தன்மையுடைய
    சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள்.

    இடது காலில் சிலம்பும் வலது காலில் கழலும்
    ஒலித்திடும் சிறிய அடிகளையும்
    மேலான வெற்றியைப் பெற்றுத் தரும்
    ஒளி பொருந்திய வாளையும் உடையவள்.

    தலை எருமையாகவும் உடல் அசுரனாகவும்
    இருவேறு வடிவங்கள் பொருந்திய
    திரண்ட தோளினியுடைய
    மகிடாசுரன் தலையின் மீது நின்றவள்.

    தேவரும் முனிவரும் மற்ற யாவரும் வணங்கும்
    அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி
    எனும் பெயர்களைப் பெற்றவள்.
    யாவரும் வணங்கும் இறப்பில்லாதவள்.
    திருமாலுக்கு இளையோள்.

    தெய்வங்களுக்கெல்லாம் தலைவியாய் நிற்பவள்.
    திருமகள் ஆனவள்.
    கொடிய வாளினைத் தன் கைகளில் தாங்கியவள்.
    கலைமான் ஊர்தி உடையவள்.
    பச்சை வீர வளை அணிந்தவள்.

    ஆய்கலைப் பாவை, அருங்கலப்பாவை எனப்
    பலராலும் புகழ்ந்து போற்றப் படுபவள்.

    திருமாலும் நான்முகனும் போற்றி வணங்கும் சிறப்புடைய
    கொற்றவை கோலம் தரித்துக்
    கலைமான் மீது அமர்ந்திருந்த
    சாலினியைக் கண்ட அம்மறக்குடிமக்கள்
    “நம் குலத்தில் தோன்றிய குமரிக்கு
    மிகவும் பொருத்தமாக இருக்கிறது இக்கோலம்;
    அவள் வாயிலாக ஐயை அருள் புரிந்தனள்”
    எனக் கூறிக் கொற்றவையை வாழ்த்தி
    வரிப்பாடல்கள் பாடினர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  51 –  74
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://srilasridurgaswamigal.wordpress.com/2012/03/07/mahisasuramardhini-stotram/mahisasuramardini/

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 128

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    வண்ணக் குழம்பும் சுண்ணப் பொடியும்                                            image
    மணம்வீசும் குளிர்ந்த சந்தனமும்
    புழுக்கப்பட்ட தானியங்களுடன் சோறும்
    பூக்களும் புகையும் மனம் கவரும் மணப்பொருட்களும்
    தாங்கியே மறப் பணிப்பெண்கள் பின் தொடர்ந்து வர…

    கால்கொட்டும் பறையும்
    சூறை கொள்ளும்போது ஊதும் சின்னமும்
    கொம்பும் புல்லாங்குழலும்
    பெருமை வாய்ந்த மணியும் கூடியே ஒலித்திட...
    இவற்றை அந்த அணங்கின் முன்னே நிறுத்த…

    தான் அளித்த வெற்றிக்கு விலையாகிய
    பலியை உண்ணும் பலிபீடத்தை முதலில் வணங்கி
    விரைந்து செல்லும் கலைமானை ஊர்தியாக உடைய
    கொற்றவையைக் கையால் தொழுது
    வணங்கிப் போற்றினாள் சாலினி.

     ஆவேசமுற்ற சாலினி கண்ணகியைப் புகழ்தல்

    இணைந்து பொருந்திய மலர்போன்ற சிற்றடிகள் வருந்தித்
    துன்பங்கள் பல அனுபவித்துத் தன் கணவனோடு தங்கியிருந்த
    மணம் வீசும் கூந்தலையுடைய கண்ணகியைச் சுட்டிக் காட்டி,
    “இப்பெண் கொங்கு நாட்டின் செல்வி;
    குடமலை நாட்டினையாளும் செல்வி;
    தென் தமிழ்நாட்டின் பாவை;
    உலகத்தோர் செய்த தவத்தின் பயன்;
    ஒப்பற்ற உயர்ந்த மாணிக்கம் போன்றவள்…”
    தெய்வத்தன்மை அடைந்த சாலினி
    கண்ணகியைப் பற்றி இங்ஙனம் கூறினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  36 – 50
    *http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*

    படத்துக்கு நன்றி:
    http://tamilvamban.blogspot.in/2014/03/03.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 127

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    மறக்குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து, வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல்  

    தம் பகைவர் தலையைத்
    தாமே அறுத்தெறிய வேண்டும் என்று                           kotravai 2
    எப்போதும் எண்ணுபவர்கள் மறவர் குடியினர்.
    அப்பகைவர் எவரும் தம்மை வென்றிடாதபடி
    மிக்க வீரம் கொண்ட அவர்
    தொல்குடி மக்களாவர்.

    அவர்கள் தம் குடியில் பிறந்த
    சாலினியைக் கொற்றவையைப் போல் அலங்கரித்தனர்.
    சிறிய வெள்ளிய பாம்பின் குட்டிபோல் இருந்த
    பொன் கயிற்றால் அவள் குறுகிய கூந்தலைக் கட்டினர்.

    முள்வேலியால் சூழப்பட்ட
    அவர்கள் தோட்டத்தில் புகுந்து,
    பயிர்களை அழித்த காட்டுப் பன்றியின்
    வளைந்திருந்த கொம்பைப் பிடுங்கி
    அவள் சடையில் இளம்பிறையாகச் சூடினர்.

    அஞ்சுவது என்பதை அறியாத வலிமைமிக்க
    புலியின் வாயைப் பிளந்து
    அதன் வெண்பற்களை எடுத்து
    வரிசையாகக் கோர்த்துத் தாலியாகக் கட்டினர்.
    வரிகளும் புள்ளிகளும் நிறைந்து காணப்படும்
    அதன் தோலை மேகலையாக அணிவித்தனர்.

    வயிரம் பாய்ந்த மூங்கில் வில்லை
    மிகவும் சிரமப்பட்டு வளைத்து நாண் ஏற்றி
    அவள் கையில் கொடுத்தனர்.
    முறுக்குடன் அமைந்த கொம்புகளையுடைய
    கலைமான் ஊர்தியில் அவளை அமர்த்தினர்.

    மதனப்பாவை, கிளி,
    சிறு முடிகளையும் அழகிய சிறகையும்
    உடைய காட்டுக்கோழி,
    நீலநிறம் பொருந்திய மயில்,
    பந்து, கழங்கு ஆகியவற்றை அவளுக்குத் தந்து
    அவளைக் கொற்றவையாக வழிபட்டனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  20 – 35
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://www.santabanta.com/photos/goddess-durga/9103043.htm

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 126

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்alar

    பலவித நறுமணங்களுடன் முடிக்கப்பட்ட
    கூந்தலையுடைய கண்ணகி,
    கடுங்கதிர் வீசிய சூரிய வெப்பத்தால் உண்டான
    துன்பத்தால் வருந்தினாள்.
    அவள்தம் சிறு பாதங்கள் சிவந்து தளர்ந்ததால்
    அடிக்கடி மூச்சு வாங்கினாள்.
    அத்துன்பத்தைத் தணிக்கும் வண்ணம்
    ஐயைக் கோட்டத்தின் ஒரு புறம்
    யாரும் பார்க்கா வண்ணம்
    சென்று அமர்ந்தனர் அம்மூவரும்.

    சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல்

    அவர்கள் அமர்ந்த இடத்தின் அருகே
    எயினர்கள் வாழும் பகுதியிருந்தது.
    அம்பினை வழங்குகின்ற வில்லை ஏந்திய,
    பகைவராய் இருந்தாலும்
    வில்லை வழங்குகின்ற கொடைத்தன்மையுடைய,
    பெரிய கையையுடைய
    மறவர் குடியில் பிறந்த உரிமை உடையதால்
    கொற்றவைக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் முகமாய்
    ‘சாலினி’ எனும் பெண்ணொருத்தி,
    தன் மீது தெய்வம் வந்து ஏறப்பெற்றவளாய்,
    காண்பவர் எல்லாம் வியக்கும் வண்ணம்
    உடம்பின் முடிகள் எல்லாம் சிலிர்த்து நிற்க,
    கைகளை உயர்த்தி ஆடியவளாய்
    முள்வேலியால் சூழப்பட்ட அந்த ஊரின் நடுவே
    மறவர்கள் கூடியுண்ணும் ஊர் மன்றத்தில்
    அடியெடுத்து வைத்து
    மிகுந்த ஆவேசத்துடன் ஆடத் தொடங்கினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01 – 19
    *http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
    படத்துக்கு நன்றி

    http://dosa365.wordpress.com/2012/10/23/76/kannagi-kovalan-kavunthi-adigal/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 125

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை

    தெய்வம் மந்திர வலிமைக்கு ஆற்றாது, உண்மை உரைத்து நீங்குதல்

    பாய்ந்து செல்லும் கலைமானை
    ஊர்தியாக உடைய கொற்றவை மந்திரத்தைத்           kotravai
    தன் வாயால் ஓதினான் கோவலன்.

    அதைக் கண்டு அஞ்சிய அம்மாயத்தெய்வம்,
    “நான் இவ்வனத்தில் திரியும் வனதேவதை;
    உம்மீது மோகமுற்று உமை மயக்க எண்ணினேன்.
    என் பிழை பொறுத்திடுக.
    கானமயில் போன்ற மென்மையான உன் மனைவியிடத்தும்
    புண்ணியம் செய்திட்ட தவத்திரு கவந்தியடிகளிடத்தும்
    நான் செய்த இப்பிழை பற்றிக் கூறாது பொறுத்தருள்க!”
    என்று வேண்டிக் கொண்டு மறைந்து விட்டது.

    கோவலன் தாமரை இலையில் தண்ணீர் கொணர்ந்து, கண்ணகியின் தாகத்தைத் தீர்த்தல்

    தன் தாகம் தணித்த கோவலன்,
    பசிய தாமரை இலையில்
    தண்ணீர் கொண்டு வந்து
    களைப்புற்றிருந்த கவுந்தியடிகளுக்கும்
    கண்ணகிக்கும் தந்து
    அவர்தம் துயர் நீக்கினான்.

    வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல்

    வானின் மீது செல்லும் ஞாயிறு
    தன் வெம்மையினைப் பரவச் செய்ததால்
    தீமைகள் மிக நிரம்பிய
    இக்காட்டு வழியில் செல்லுதல் கடினம் என்று கருதி,
    கோவலன் கவுந்தியடிகளுடனும்,
    வளைந்த காதணிகளை அணிந்த கண்ணகியுடனும்,
    மயக்கத்தைத் தரக்கூடிய
    கொடிய வழிகளையுடைய
    அப்பாலை நிலத்தின்கண்
    குரா வெண்கடம்பு கோங்கை வேம்பு மரங்களைக்
    கொண்ட பூஞ்சோலை ஒன்றினுள் புகுந்தனன்.

    மழைதரும் வளத்தைப் பெற்றிடாத
    அவ்விடத்தில் வாழ்ந்திருந்த மறவர்
    வழிப்போக்கரை வில்லைக் கொண்டு
    அச்சுறுத்திக் கவர்ந்த
    பொருட்களின் வளமே வாய்க்கப் பெற்றிருந்தனர்.

    கூற்றுவனை ஒத்த வலிமையுடைய அம்மறவர்கள்
    தம் கையில் வளைந்த வில்லேந்தி,
    பகைவர்களை வென்றிட விரும்பி
    அங்கே எழுந்தருளியுள்ள கொற்றவையை
    வணங்கிச் செல்வர்.
    வென்றதும், அதற்கு விலையாகத்
    தங்களது தலைகளையே அறுத்து
    அத்தெய்வத்துக்குப் பலியிட்டு
    நேர்த்திக் கடன் செலுத்துவர்.

    அப்பலியை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
    கொற்றவை, நெற்றியில் கண்ணுடைய குமரி;
    தேவர்களே போற்றிடும் பாவை;
    குற்றமற்ற சிறப்புடைய விண்ணுலகை ஆள்பவள்.
    அத்தகைய கொற்றவையின் கோயிலை
    மூவரும் அடைந்தனர்.

    (காடு காண் காதை முற்றியது; அடுத்து வருவது வேட்டுவ வரி)

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  196 –  216
    *http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
    <http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html>

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 124

    -மலர் சபா

    மதுரைக்காண்டம் – 11: காடுகாண்காதை

    தொடர்ந்து பேசலாயிற்று                                                              
    அந்தக் கானகத் தெய்வம்.

    “இங்ஙனம் சொன்னபின் மாதவி
    மயங்கி விழுந்தாள்.
    துறவோர், கற்றறிந்தோர்,
    நன்மை தீமை பலவும் தெரிந்தோர்
    அனைவரும் கணிகையர் என்றாலே
    உள்ளத்தை வருத்திடும் நோய் என்று கருதி,
    முகத்தைக் கூட நோக்காது விலகி விடுகின்றனர்.
    இக்கணிகையர் வாழ்வு மிக இழிந்ததுதான்!

    இவ்வாறெல்லாம் கூறிய மாதவி
    தன் செவ்வரி படர்ந்த செழுமையான கண்களில்
    வெண்முத்துக்களைப் போலக் கண்ணீர் சிந்தினாள்.

    வெள்ளிய நிலாப்போலத் திகழும் முத்து வடத்தையும்
    தன் கைகளாலேயே அறுத்து எறிந்தாள்.
    ஒரு போதும் அவளைப் பிரிந்திடாத என் மீதும் சினமுற்று
    என்னை விலகியிருக்கும்படிக் கூறினாள்.

    வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல் 

    வழிப்பட்டோர் மூலமாய்
    நீங்கள் மதுரை மூதூர் நோக்கிச் சென்றிட்டதாக அறிந்து,
    வணிகச் சாத்தோடு நான் இங்கே வந்தேன்.
    தனிமையில் துயருற்றேன்.
    இப்போது உம்மைக் கண்டேன்.
    நன்மை தீமை பகுத்து அறிபவரே,
    நீவிர் எமக்கு இடும் கட்டளை யாது?”
    என்று வினவியது
    வசந்தமாலை வடிவில் வந்த கானுறைத் தெய்வம்.

    கோவலன் மந்திரத்தால் உண்மையை அறிய முயலுதல்

    ‘அறிவை மயக்கும் தெய்வம்
    இக்கானகத்தில் உள்ளது’ என்று முன்பு
    மறையோன் உரைத்த மொழி

    நினைவுகூர்ந்த கோவலன்,
    மாயம் நீக்கும் மந்திரத்தின் மூலம்,
    கூந்தலை ஐந்தாகப் பிரித்துப் பின்னலிட்ட
    இப்பெண்ணின் தன்மையை நான் அறிவேன் என்று எண்ணினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  180 –  194
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 123

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை

    மூவரும் மேற்செல்லும்போது, வழி நடந்த வருத்தத்தால் கவுந்தி அடிகளும் கண்ணகியும் வழிமருங்கு இருப்ப, கோவலன் அண்மையிலுள்ள ஒரு பொய்கைக்கு நீர் அருந்தச் செல்லுதல்.

    குறைந்திடாது உயர்ந்த கொள்கையுடைய                      kovalan kannaki and kavundhi
    கோவலன் கண்ணகி தம்முடன்
    அன்றைய பகல் பொழுதில்
    ஓர் அரிய ஊரில் தங்கி,
    அடுத்த நாளில் மூவரும்

    அவ்விடம் விட்டுப் புறப்பட்டு
    மதுரை செல்லும் வழியில் சென்றனர்.

    வழி நெடுக நடந்ததால்,
    துன்பத்தாலும், தாகத்தாலும் வருந்திய
    கருந்தடங்கண்ணி கண்ணகியும், கவுந்தியடிகளும்
    வழியின் ஓரம் ஓய்வுக்காய் அமர்ந்தனர்.

    கோவலன், தாம் நடந்து வந்த வழியின்
    பக்கத்திலிருந்த இன்னுமொரு வழியில் சென்று
    அங்குள்ள பொய்கையில் தண்ணீர்ப் பருகி,
    பின் கவுந்தியடிகளுக்கும் கண்ணகிக்கும்
    நீர் கொண்டுவரும் விருப்பம் கொண்டவனாய்ப்
    பெரிய துறையை  அடைந்தான்.

    வனதேவதை வசந்தமாலையின் உருவில் தோன்றி, கோவலனிடம் முறையிடுதல்.

    அப்போது,
    முன்னர் மறையோன் உரைத்த
    கானகத்தில் உறையும் தெய்வம்
    கோவலன் முன்னே தோன்றியது.

    மாதவியிடம் கொண்ட காதலால்,
    அவள் தோழியையும் விரும்புவான் என்று கருதி,
    அவன் முன்னே அத்தெய்வம்
    வசந்தமாலை வடிவில் தோன்றியது.

    பூங்கொடி ஒன்று நடுநடுங்கிக்
    கீழே விழுந்தது போல
    அவன் காலடியில் விழுந்து
    கண்ணீர் உகுத்தது.

    “நறுமணம் கொண்ட தாழை மடலில்
    கோவலனுக்குச் செய்தி அனுப்பியபோது
    நான் தவறாக ஒன்றும் எழுதிடவில்லை.
    நீ பிழையான மொழிகளைக்
    கோவலனிடம் கூறியிருக்கிறாய்;

    அதனால்தான் கோவலன்
    என்னைப் பிரிந்துசெல்லும்

    கொடுமையினைச் செய்தான்”
    என்று தம்மிடம் கூறிய மாதவி
    வானளவு துயருற்று வருந்தியதாக
    அத்தெய்வம் கூறியது.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  150 – 162
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm

     

    Share