நான் அறிந்த சிலம்பு – 129
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி
கண்ணகி நாணமுற்று, புன்முறுவல் பூத்து நிற்றல்
சாலினி மொழி கேட்ட கண்ணகி நாணமுற்று
“மூதறிவுடைய இவள் மயக்கத்தால் 
இவ்வாறு கூறுகிறாள்” என்றே கூறி,
பெறுதற்கரிய கணவனாம் கோவலன்
முதுகின் பின்னே ஒளிந்து கொண்டு
புதிய புன்முறுவல் பூத்து நின்றனள்.
பிறை என வெள்ளைத் தாமரை இதழைச்
சூடி நிற்கும் நெற்றியும்
நெற்றிக்கண்ணைத் திறந்து விழிக்கும்
இமையாத விழிகளையும்
பவளம் போன்ற வாயினையும்,
வெள்ளி போல் ஒளிபொருந்திய சிரிப்பினையும்,
நஞ்சினை உண்டதால் கறுத்த கழுத்தினையும் உடையவள்.
கொடிய சினத்தை உடைய
வாசுகி என்னும் பாம்பை நாணாகப் பூட்டி
மேருவாகிய மலையை வில்லாய் வளைத்தவள்.
நஞ்சுகொண்ட துளைகள் பொருந்திய
பற்களை உடைய பாம்பினைக்
கச்சாக அணிந்த முலைகளை உடையவள்.
வளையணிந்த கைகளில் சூலம் ஏந்தியவள்.
யானையின் தோலைப் போர்த்திக் கொண்டு
அதன் மீது, பிறரை வருத்தும் தன்மையுடைய
சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள்.
இடது காலில் சிலம்பும் வலது காலில் கழலும்
ஒலித்திடும் சிறிய அடிகளையும்
மேலான வெற்றியைப் பெற்றுத் தரும்
ஒளி பொருந்திய வாளையும் உடையவள்.
தலை எருமையாகவும் உடல் அசுரனாகவும்
இருவேறு வடிவங்கள் பொருந்திய
திரண்ட தோளினியுடைய
மகிடாசுரன் தலையின் மீது நின்றவள்.
தேவரும் முனிவரும் மற்ற யாவரும் வணங்கும்
அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி
எனும் பெயர்களைப் பெற்றவள்.
யாவரும் வணங்கும் இறப்பில்லாதவள்.
திருமாலுக்கு இளையோள்.
தெய்வங்களுக்கெல்லாம் தலைவியாய் நிற்பவள்.
திருமகள் ஆனவள்.
கொடிய வாளினைத் தன் கைகளில் தாங்கியவள்.
கலைமான் ஊர்தி உடையவள்.
பச்சை வீர வளை அணிந்தவள்.
ஆய்கலைப் பாவை, அருங்கலப்பாவை எனப்
பலராலும் புகழ்ந்து போற்றப் படுபவள்.
திருமாலும் நான்முகனும் போற்றி வணங்கும் சிறப்புடைய
கொற்றவை கோலம் தரித்துக்
கலைமான் மீது அமர்ந்திருந்த
சாலினியைக் கண்ட அம்மறக்குடிமக்கள்
“நம் குலத்தில் தோன்றிய குமரிக்கு
மிகவும் பொருத்தமாக இருக்கிறது இக்கோலம்;
அவள் வாயிலாக ஐயை அருள் புரிந்தனள்”
எனக் கூறிக் கொற்றவையை வாழ்த்தி
வரிப்பாடல்கள் பாடினர்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 51 – 74
http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://srilasridurgaswamigal.wordpress.com/2012/03/07/mahisasuramardhini-stotram/mahisasuramardini/
