நான் அறிந்த சிலம்பு – 137
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
அடிகள் ஒருப்படுதல்
கொடுங்கோல் ஆட்சி செய்யும்
மன்னனின் வீழ்ச்சியை
மக்கள் எதிர்நோக்கியிருப்பது போலவே
இவர்கள் மூவரும் ஞாயிறு மறையும்
அந்தி வேளையை எதிர்நோக்கியிருந்தனர்.
நிலமகள் கண்ணகியின் நிலைக்கு இரங்கித் துயிலுதல்
அவர்கள் எதிர்பார்த்தவாறே
பலவகைபட்ட விண்மீன்களாகிய
தம் சேனையோடு
பால்போன்ற வெள்ளிய கதிர்களைப் பரப்பி,
பாண்டிய குலத்தின் முதல்வனாகிய
திங்கள் செல்வன் தோன்றினான்.
விண்மீன்கள் கொண்டு தொடுத்தது போல்
ஒளிர்ந்த முத்துவடமும் சந்தனக் குழம்பும்
கண்ணகியின் இளமை பொருந்திய முலைகளைச்
சேராது நீங்கியது.
முல்லை மலர் சூடிய அவள் பொலிவு பெற்ற கூந்தல்
தாதுசேர் கழுநீர் மாலை பொருந்தாது நீங்கியது.
சந்தனத் தளிர்களுடன் வேறு தளிர்களும்
சேர்த்துத் தொடுத்த மாலையானது
அவள் மாந்தளிர் மேனியைத் தழுவாது நீங்கியது.
இவ்வாறு தோற்றம் கொண்டு
நடந்து சென்ற கண்ணகியின் மீது
பொதிகை மலையில் தோன்றி
மதுரை இசைப்புலவர் நாவில் பொருந்திய
தென்றல் அதனோடு பால்நிலாவும்
தன் கதிர்களை விருப்பத்துடன் சொரிந்து
அவள் வேட்கைதனைத் தூண்டியது.
இதனைக் கண்ட நிலமகள்
“முன்பு கணவன் உடன் இல்லாதபோது
இவளை வருத்திய வேனில்,
இப்போது அவன் அருகிருந்தும்
அவளை வருத்துகிறதே” என்று
பெருமூச்செறிந்து அடங்கினாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 14 – 29
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html
படத்துக்கு நன்றி:
http://www.lurvely.com/photo/4981281546/moon_silhouette/