நான் அறிந்த சிலம்பு – 136
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
“இரவில் வழி செல்லுதல் நன்று” என்று கோவலன் கவுந்தியடிகளிடம் கூறுதல்
முன்னர்க்கூறிய கொற்றவையணிந்த
வேட்டுவக்கோலம் நீங்கி
வரிக்கூத்துகளும் முடிந்தபின்,
கோவலன் அறத்தின்வழி நிற்கின்ற
கவுந்தியடிகளின் திருவடிகள் வணங்கி,
“அடிகளே!
மென்மையான கண்ணகி
கடுமையான சூரியனின் வெப்பக் கதிர்களைப்
பொறுத்துக் கொண்டு
பகல்பொழுதில் நடந்து வர இயலாதவள்.
பரல்கற்களையுடைய இக்காட்டு வழியில்
அவளுடைய சீறடிகள் படிந்து நடப்பதும் இயலாது.
அவளுடைய கால்களிலும் கொப்புளம் ஏற்பட்டுள்ளது.
இப்பாண்டிய நாடுதன்னில்
எதிர்ப்பட்டதையெல்லாம் தாக்கும் கரடியும்
கொடும் புற்றுகளைத் தோண்டுவதில்லை;
ஒளிபொருந்திய கோடுகளையுடைய புலிகளும்
மான் இனத்தோடு பகை கொள்வதில்லை.
பாம்பும் சூர் எனும் தெய்வமும்
இரைதேடும் முதலையும் இடியும்
தம்மைச் சார்ந்தவர்க்கு
எந்தத் துன்பமும் செய்வதில்லை.
இவ்வளவு சிறப்புகளும் உடைய
செங்கோல் பாண்டியர் ஆட்சியதன் புகழ்
எல்லாத் திசைகளிலும் பரவிநிற்பது
மிகவும் பெருமை வாய்ந்ததன்றோ?
எனவே
கண்ணகியால் பொறுத்துக்கொள்ளமுடியாத
துன்பங்கள் நிறைந்த
இப்பகல் பொழுதை விட்டுவிட்டு,
பல உயிர்களையும் இனிதாய்க் காக்கின்ற
நிலவதன் ஒளியில் இரவுப்பொழுதில்
இந்நெடிய வழியில் செல்வதில்
துன்பம் ஒன்றும் இருக்காது”
எனக் கோவலன் கூற
கவுந்தியடிகளும் அதற்கு உடன்பட்டார்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 13
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html
படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm