நாகேஸ்வரி அண்ணாமலை
சென்ற வாரம் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பலருக்குப் பெரியாரைப் பற்றி நல்ல புரிதல் இல்லை போல் தெரிகிறது. முடிந்த அளவு பெரியாரைப் பற்றிய சரியான கணிப்பைக் கொடுக்க முனைந்ததின் விளைவே இந்தக் கட்டுரை. பெரியாரைப் பற்றி ஒன்றும் தெரியாத இளம்தலைமுறையினருக்கு ஒரு முன்னுரையாக அமையும்.
பெரியார் என்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1879-இல் ஈரோட்டில் ஒரு பணக்கார வணிகரின் மகனாகப் பிறந்தார். அவருடைய சிறு வயதில் வைஷ்ணவப் புரோகிதர்கள் சிலர் அவர் வீட்டிற்கு வந்து சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு அவருடைய தந்தையின் விருந்தோம்பலை அனுபவித்துவிட்டுச் சென்றனர். அப்போதிலிருந்து பெரியார் பிராமணர்களுக்கு ஏன் இத்தனை உபசாரம், ஏன் இத்தனை மதிப்பு என்று எண்ண ஆரம்பித்தார். அவர்கள் செய்தது அத்தனை பெரிய காரியமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போதே பிராமண எதிர்ப்பு அவர் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. வயது வந்தபிறகு ஒரு முறை காசிக்குச் சென்றபோது பிராமணர்களுக்கு உணவளித்த இடத்தில் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்ற காரணத்திற்காக இவருக்கு உணவு வழங்கப்படவில்லை. அன்றிலிருந்து சமூகத்தில் ஏன் பிராமணர்களுக்கு உயர்ந்த இடம் என்று ஆராய ஆரம்பித்தார்.
பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கலந்துகொண்டார். சேரன்மாதேவியில் இருந்த குருகுலப்பள்ளியில் பிராமண மாணவர்களுக்கும் பிராமணரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டதை எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பெரியார் பிராமணரல்லாத ஒருவரை ஆதரித்தார். ஆனால் காங்கிரஸில் இருந்த பல பிராமண வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரித்த பிராமணர் ஒருவர் வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸில் பிராமணரல்லாதவர்களின் செல்வாக்கு ஒரு போதும் ஏற்படப் போவதில்லை என்று முடிவுசெய்து காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.
சமூகத்தில் மிகுந்த ஏற்றத்தாழ்வு இருப்பதையும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதையும் உணர்ந்து எல்லோரும் சமம் என்ற உண்மையையும் எல்லோருக்கும் சுயமரியாதை வேண்டும் என்பதையும் தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார். ஆண்டாண்டு காலங்களாக சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை பிராமணர்கள் மட்டுமே படித்து இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அவர்கள் தரகராக இருப்பதை எதிர்த்தார். மதத்தின் பெயரால் – கடவுளுக்கு மிக அருகில் பிராமணர்கள்தான் இருக்கிறார்கள் என்று பலரையும் எண்ணவைத்து – பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதை மாற்ற முயன்றார். இதைத்தான் பிராமண எதிர்ப்பு என்று இன்றும் பலர் எண்ணுகின்றனர். மதத்தின் பெயரால் பிராமணர்கள் மக்களிடம் மூட நம்பிக்கைகளை வளர்த்ததால் இந்து மத எதிர்ப்பை ஆரம்பித்தார். மூட நம்பிக்கைகளில் ஒன்று பிராமணர்களுக்குத் தானம் செய்து தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடலாம் என்பது. வாழ்க்கையில் எல்லா அட்டூழியங்களும் புரிந்துவிட்டு கோவிலில் காணிக்கை செலுத்தி இறைவனை ஏமாற்றிவிடலாம் என்பது இன்னொன்று.
காலனீய காலத்தில் அரசுப் பதவிகளிலும் சட்டம், கணக்கு, மருத்துவம் போன்ற உயர் தொழில்களிலும் சிறுபான்மையராக இருந்த பிராமணர்களே ஆதிக்கம் செலுத்திய நிலை மாறி பெரும்பான்மையோருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்றும் நினைத்தார். ஜாதிகளில் ஏற்றத் தாழ்வு இருந்ததால் ஜாதி ஒழிப்பையும் தன் கொள்கைகளில் சேர்த்துக்கொண்டார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு பிராமணரே கூறியதைப் போல்தான் பெரியாரும் ஜாதிகளை ஒழிக்க முயன்றார். பெரியாரின் பிராமண எதிர்ப்பு, மத ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பவை இப்படிப் பிறந்தவைதான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்பது பெரியாரின் கொள்கைகளில் ஒன்று. கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அடிபணிய வேண்டியதில்லை. ஏனென்றால் எல்லோரும் பிறப்பில் சமம். மூடப் பழக்க வழக்கங்களை மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதற்கு மிகவும் முயன்றார்.
எல்லோரும் சமம் என்று கூறியபோது பெண்களும் ஆண்களுக்குச் சமம் என்றார். விதவை மறுமணம், பெண்கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
சமூகத்தில் ஒரு சாரார் தாழ்ந்த நிலையிலும் ஒரு சாரார் உயர்ந்த நிலையிலும் இருக்கும் அவலத்தை மாற்றிச் சமூக நீதி ஏற்பட்ட பிறகுதான் அரசியல் சுதந்திரம் வேண்டும் என்று நினைத்ததால்தான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் முன் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார். ஏற்கனவே உயர்ந்த பதவிகளில் இருந்த பிராமணர்கள் பிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நீட்டித்துக்கொள்வார்கள் என்று பயந்துதான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய நாளைத் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இது சரியோ தவறோ; இது சமூக நீதிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டும். எப்போதுமே பிரிட்டிஷார் இந்தியர்களை ஆண்டுகொண்டிருக்க வேண்டும் என்பது அவர் நோக்கமல்ல.
அரசியலில் ஈடுபட்டு பணம் நிறைய சம்பாதித்து அரசியல் அதிகாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைக்கவில்லை. மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைய வேண்டும், பிராமண ஆதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக உள்ள மதத்தையும் ஒழிக்க வேண்டும், ஜாதிகள் ஒழிய வேண்டும், சமூகத்தில் எல்லோருக்கும் சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பவையே பெரியாரின் கொள்கைகளின் அடிப்படை.













