Tag: நாகை வை.ராமஸ்வாமி

  • நீலக்கடல் காரோண  நாயகி நாகையரசி  நீலாயதாக்ஷி

    நீலக்கடல் காரோண நாயகி நாகையரசி நீலாயதாக்ஷி

    -நாகை வை. ராமஸ்வாமி

    ஆனைமுகன், ஐயன், அன்னையுனை வலம் வர
    மயிலமர் மால் மருகன் அகிலம் சுற்றி வர
    நந்திதேவன் நல்வரவாய் மத்தளம் முழங்கிட
    நான்மறை கோஷம் நாற்திசையும் ஒலித்திட
    பறவையமர் பரந்தாமன் அரவமுடன் அண்ணனாய் ஆசி கூற
    பிரமனுடன் அன்னமமர் கலைமகள் பாசமிகு பார்வையிட
    ஆவின் அம்சமாம் அருள்மிகு திருமகள் பொன்மலர் கொட்டிட
    நீலக்கடல் காரோண நாயகி நாகையரசி நீலாயதாக்ஷி
    காளையமர் காசிநாதன் காந்தமாய் கவர்ந்திட்ட கார்மேகக் குழலழகி
    மாசிலா வடிவழகி மகேசன் மடியமர் மாதுளம்பூ நிறத்தவளே
    மாணிக்கத் தாடங்கம் மார்பணி பொன்மணி கைவளை காலணி
    சதங்கையும் கொவ்வை செவ்வாயுன் புன்னகைக் கொப்பாமோ
    கொச்சை மொழி பச்சைக் கிளி தவழும் பூந்தளிர் கரமுடை
    சிங்கமமர் சிங்காரி சீர்மிகும் தாள் பற்றி
    இச்சையிலா வாழ்வு பெற இச்சையுடன் தாள் பணிந்தோம்
    இன்பப் பேறு பெற இறைஞ்சுகிறோம் அடி போற்றி!

    Share
  • எம் கதியே நீயே தாயே நீலாயதாக்ஷியம்மா

     

    ஆதி சக்தியே அங்கயற்கண்ணியே நாகை
    பதியாம் காரோணன் மனமோகன நாயகியே

    அதிரூப சுந்தரியுன் அழகுமிகு புன்னகை
    நதியாய் ஆனந்தக் கண்ணீர் பெருக்குதம்மா

    மதி சூடிய மாதா, மலை மகளே மா தேவியே
    மதி மயக்கமின்றி நின் பாதமென் மதி பதியம்மா

    வேதியர் வேத கோஷமொடு விழாக் கோல
    வீதியுலாக் காட்சியுன் திருவருள் செப்புதம்மா

    சந்நிதியில் நினைப் போற்று மெமை

    நிதியாக நீயே வந்தருள்வா யம்மா

    விதியெம் வாழ்வில் விளையாடுங் காலத்தே
    ஓதிடுமுன் அபய ஒலி ஓங்கார மாகுதம்மா

    சதி சூழ் பூவுலகில் சந்ததமுனை சிந்தித்தால்
    விதியும் மாறிடும் வேதனையும் மறைந்திடுமே

    உதித்த காலம் முதல் உதிரும் வேளை வரை
    பதித்திட அருளிடு நின் பதமலரடி நெஞ்சமதை

    பதியின் பாதி யுன் பத மலர் போற்று மெம்
    கதியே நீயே தாயே நீலாயதாக்ஷியம்மா

    ஆதி சக்தியே அங்கயற்கண்ணியே நாகை
    பதியாம் காரோணன் மனமோகன நாயகியே

    38/2018
    நாகை வை. ராமஸ்வாமி

    Share
  • என்னருமை தாயே பாராளும் நீலாயதாக்ஷியே

    நாகை ராமஸ்வாமி

    unnamed

    சிந்தனை செய்திட்டால் சித்தியும் சித்தியாக்கும்                      சிந்தனையில் வந்தமர் செந்தூர வண்ணவளே                           வந்தனை செய்துன் மலர்ப்பதம் பணியுமெனை                             என்ன வேண்டுமென செவியதில் கேட்பின்

    என்னென்ன வேண்டுமோ அத்துணையும் தந்தனை                     என்னென்ன தகுமோ அதனையும் அளித்தனை                            சின்னவன் எனை நீ சீர்தூக்கி விட்டனை                               வண்ணமிகு வாசமலர் திருமேனி வருடிட                               புன்னகை பூக்குமுன் கருணை முகம் கனிந்திட                           பண்ணுடன் நின் துதி பாடவும் பணித்தனை

    வேறென்ன வேண்டும் திருவே நின் துணையன்றி                      வேறென்ன வேண்டும் நினைப் பணிவதன்றி                            வேறென்ன வேண்டும் நின் நாம ஸ்மரணமன்றி                       வேறென்ன வேண்டும் நின் தாள் நிழலன்றி                        என்றுரைப்பேன்  என்றே உரைப்பேன்                                 என்னருமை தாயே பாராளும் நீலாயதாக்ஷியே

     

    37/2017                                           

    நாகை வை. ராமஸ்வாமி

    http://mio.to/album/Kalakkad+R.+Srinivasan%2C+Kalakkad+R.+Thyagarajan%2C+Lata+Ramchand%2C+Praveena+Avanthikrishan/Nagai+Sri+Neelayadakshi+Ambal+Devotional+Songs+-+Vol+1

    Website links to listen to Ambal songs 

    Raaga.Com  http://play.raaga.com/tamil/album/Nagai-Sri-Neelayadakshi-Ambal-Devotional-Songs-Vol-1-songs-TD02593

     

     

    Share
  • பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி

    நாகை வை. ராமஸ்வாமி

    Neela

    அரும் பெரும் ஐயாறு தியாகராசனும்                                     

    மூவரில் பெருமைமிகு முத்துசாமியும்                                     

    சீர்மிகு சிங்காரி நீலாயதாக்ஷி யுனை                                         

    பாரும் அடி பணிய பாடினரே பாராட்டி

    பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி                                

    சிவராஜதானி கொலுவுறும் சிவமய ராணி                                

    புவனம் காக்குமுன் பூந்தளிர் பதம் போற்றி                               

    தவமுடன் பாடிட எனக் கருள் தந்தனையே

    குவலயம் போற்றும் பாலா நீலாயதாக்ஷி                                                  

    பாலும் தேனும் பஞ்ச அமிர்தமுடன்                              

    கோலாகலமாய்  சுகந்த நீரும் கலந்துன்                                       

    காலடி சேர்த்தோம் ஏற்றிடுவாய் என்னம்மே

    கந்தனும் அண்ணனும் தந்தை தாய் உடனிருக்க                            

    நந்தியவன் மெய்மறந்து சுற்றியே வலம் வர                             

    விந்தைக் கோலமதை புந்தியதில் பதித்தனனே                        

    சிந்தையில் வந்தமரும் சிந்தூர வண்ணவளே

    என்றும் பாவமுடன் ஏலாதிருக்கு மெனை                            

    இன்பமுடன் நின் திருவடி நினைத்திட                                    

    அன்பும் அருளும் தயையும் தந்திடுவாய்                                  

    பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி

    Share
  • நாகை அம்பாள் நீலாயதாக்‌ஷி பிரார்த்தனை பாடல்

    நாகை வை. ராமஸ்வாமி

    images

    ஒம் ஶ்ரீ சாய்ராம்

    அன்பே, அமுதே, அகிலலோக நாயகி நீலாயதாக்ஷியே

    வித்திலே விருட்சம் வைத்தாய் மேகத்தில் வெள்ளம் வைத்தாய்

    என்னுள்ளே நின்னை வைத்தாய் கருணாகடாக்ஷி காரோண நாயகியே

     

    அன்பே, அமுதே, அகிலலோக நாயகி நீலாயதாக்ஷியே

    அருளே, அழகே, ஆதிஅந்தமில்லா அனந்தமே

    அசைந்தாடும் மயிலழகன் அம்மையே ஸ்ரீசக்ரவாஸினியே

     

    சப்த சாகரமும் சப்த ஸ்வரங்களும்

    சப்த கன்னிகைகளும் சப்த ரிஷிகளும்

    பஞ்ச பூதம் பணிந்து சந்ததம் நின் துதி பாடிட

    பஞ்சமின்றி அருளும் மந்தஹாஸ முகம் மகிழும் வேளை

    சுந்தர வதனமும் கமலத்திருவடியும் நெஞ்சத்தே வந்தமர

    நின் திருவடி போற்றி என்றும் மகிழ்ந்திட

    அருளிடுவாய் மலரடி தரிசனம் அடைக்கல சரணம்

    அன்பே, அமுதே, அகிலலோக நாயகி நீலாயதாக்ஷியே

    35/2015 நாகை வை. ராமஸ்வாமி

                                                                                     

    1. Listen to Nagai Sri Neelayadakshi Ambal Devotional songs MUSIC INDIA ON LINE   
    2. http://mio.to/album/Kalakkad+R.+Srinivasan%2C+Kalakkad+R.+Thyagarajan%2C+Lata+Ramchand%2C+Praveena+Avanthikrishan/Nagai+Sri+Neelayadakshi+Ambal+Devotional+Songs+-+Vol+1
    3. RADIOSAI http://www.ecatering.irctc.co.in/
    4. Rcom http://play.raaga.com/tamil/album/Nagai-Sri-Neelayadakshi-Ambal-Devotional-Songs-Vol-1-songs-TD02593
    Share
  • தொலைக்காட்சி தொடர், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சிந்தனைக்கு …

    -நாகை வை. ராமஸ்வாமி.

    media

    பல வெற்றிப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து தமிழ்நாட்டிற்கும் இந்திய தேசத்திற்கும் பெருமையும் புகழும் சேர்க்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் முதற்கண்.

    நீங்கள் அனைவரும் அறியாத, செல்லாத, அயல்நாடுகள் மிகக் குறைவே என்றே சொல்லலாம். பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மிக அருமையான, அழகான, சுத்தமான வெளிநாட்டுக் காட்சிகளை அமைக்கிறீர்கள். நம் நாட்டில் அப்படிப்பட்ட இடங்கள் இல்லையா? அப்படி அமைந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும்? எவரும் மெச்சும் வகையில், நம் ஊரில், நம் நாட்டில் அழகும், சுத்தமும், சுகாதாரமும், வசதிகளும் மிக்க அயல் நாட்டிற்கு நிகரான இடங்கள் அமைவதற்கு ஏன் ஆவன செய்யக் கூடாது? சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, அரசாங்கத்தை அணுகுங்கள், செயல்படுத்த முயலுங்கள். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து நம் நாட்டிற்கு வருமானமும் வளமும் பெருகும் அல்லவா? உங்களுக்கும் அயல்நாட்டில் படப் பிடிப்புக்காக ஆகும் செலவு எவ்வளவு மிச்சமாகும்?

    “பல படங்களில், ஏன், தொலைக்காட்சித் தொடர்களிலும் கூட ஏராளமான காட்சிகள், மக்கள் நல்வாழ்வுக்கு ஏற்றவகையிலில்லாமல் அமைக்கப்படுகின்றன, இளைஞர்கள் கெடுவதற்கான பல கெட்ட பாடங்களே கற்பிக்கப் படுகின்றன’” என்பன போன்ற வாதங்களும் குற்றச்சாட்டுகளும் பட்டி மன்றங்களிலும், விவாதங்களிலும் எதிரொலித்து அதிக பட்ச மக்கள் ஒப்புக்கொள்ளும் அவல நிலை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். புரிந்திருந்தால் ஏன் அதை செயல் படுத்த முயலவில்லை?

    பல படங்களில் வில்லன்கள் பாராட்டப்பட்டு, அவர்கள் செயல்களுக்கு நியாயமும் கற்பிக்கப்படுகிறது. சில கதாநாயகர்கள் செய்யும் ஒரு சில கோமாளித்தனங்களும், ஆபத்தான செயல்களும், சண்டைக் காட்சிகளில் வில்லன்கள் செய்யும் ‘அதி வீர தீர சாமர்த்தியமான’ செயல்களையும் உண்மையென நம்பி மோசம் போகும் இளைஞர்கள் ஏராளம். நாளுக்கு நாள் சண்டைக் காட்சிகள் கோரமான முறையில் காட்டப்பட்டு கொலை, கொள்ளை இன்னும் பல தவிர்க்கப்படவேண்டிய சமூக விரோதச் செயல்கள், இவற்றை எப்படியெல்லாம் செய்யலாம், என்னென்ன யுக்திகள் கையாளலாம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறவாறு அமைகின்றன.

    பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘நூறாவது நாள்’ படத்தின் அடிப்படையில் பல கொலைகள் செய்ததாக ஒப்புக்கொண்ட ஒரு நபர் தண்டிக்கப்பட்டது அந்நாள் நடுவயதுக்காரர்கள் அறிவார்கள்.

    காமெடி காட்சிகளில் அருவறுக்கும் வசனங்கள். காமெடி, பகுத்தறிவு என்ற பெயர்களில் குறிப்பிட்ட ஒரு ஆதரவில்லா சாதியினரை மட்டுமே இலக்காக்கி, அவர்களை ஏளனப்படுத்தும் அவலம் தமிழ் நாட்டு சினிமாவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்று சொல்லலாம். வேறு எந்த சாதியினரையும் இவ்வளவு ஈனமாகச் சாடினால் விளைவு என்ன ஆகும் என்று எவருக்கும் தெரியும். இவைகளில்லாமல் படங்கள் எடுக்க வழியா இல்லை?

    காதல் என்ற ஒரு சப்ஜெக்ட்டை வைத்துக்கொண்டு, என்னமோ காதல் செய்யத் தெரியாதவர்கள் எல்லாம் மடையர்கள், அல்லது ஏமாளிகள் அல்லது பயந்தாங்கொள்ளி அல்லது வாழ்க்கைக்கே லாயக்கில்லாதவர்கள் என்பது போலவும், வாழ்க்கைக்குக் காதல் ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பது போன்ற கதைகளும் பெருகிவிட்டன. இவற்றைப் பார்த்து கெட்டுப் போய் சீரழியும் மக்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள், உற்றார் உறவினரைப் பகைத்துக்கொண்டு, பெரும்பாலும் தகுதி இல்லாதவர்களிடம் ஏமாந்து வாழ்க்கையையே தொலைத்துவிட்டு கஷ்டப்பட்டு சீரழிபவர்கள் ஏராளம்.

    இந்த வகையில் நூதனமான தற்கொலைகளும் கொலைகளும் காட்டப்படுகின்றன . கொலைகளிலும் தேவையில்லாத பலவிதமான உத்திகள், ஆக்ரோஷமான பயங்கர வன்முறைகள். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், உடனே ‘போட்டுத் தள்ளவேண்டியது’, அதற்கு கூலிப் படையை நாடுவது, போன்ற காட்சிகள். இவற்றிற்கெல்லாம் பெருமளவு சினிமா, தொலைக்காட்சி பாதிப்பு காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம், பலரும் ஒப்புதல் அளிப்பர்.

    ஒரு காரியம் நமக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி யாரை ஏமாற்றவேண்டும், லஞ்சம் எப்படிக் கொடுப்பது என்பனவற்றைத் தெரிந்துகொள்வதற்கு ஏன் வேறு எங்கும் போகவேண்டும், சினிமாவும் தொலைக்காட்சியும் இருக்கும்போது?

    ஒரு அன்பான குடும்பத்தையே எப்படி எல்லாம் பிரிக்கலாம், எப்படி சண்டை போட்டுப் பிரிந்து போகலாம் அல்லது, பிரிய வைக்கலாம், பெற்றோர், குழந்தைகள் உறவிலேயே எப்படி சந்தேகம் கொள்வது, பெரியோரை எப்படி மரியாதைக் குறைவாக நடத்துவது அல்லது ஏசுவது, ‘ஏய், பெரிசு’ போன்ற அடைமொழிகள், குடும்பத்தினர் காதைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு வசைமொழிகள், எதற்கெடுத்தாலும், எல்லா இடத்திலும் ‘தூ தூ’ என்று அநாகரிமாக, அசிங்கமாகத் துப்பும் காட்சிகள், எதிராளியின் முகத்தில் காரி உமிழும் காட்சிகள், இன்னபிற அருவறுக்கும் காட்சிகள், அனைத்திற்கும் சினிமாவும் தொலைக்காட்சியும் ஒரு பல்கலைக்கழகமாக ஆகிக்கொண்டிருக்கிறதே என்ற பெருங்கவலை இருக்கிறது அனைத்துத்தர மக்களுக்கும்.

    சென்சார் போர்டு என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா, இருந்தால் சரிவர செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களுக்கு – விளம்பரம் ஒரு வருமான சாதனம் தான். ஆனால், 30 நிமிட நிகழ்ச்சியில், விளம்பரங்கள் 20 நிமிடங்களும் நிகழ்ச்சிகள் 10 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. விளம்பரத் தொடரில் அவ்வப்போது சிறிது கதையும் சொல்லப்படுவது போல் இருக்கிறது.

    விளம்பரங்களின் ஒலி அளவோ நிகழ்ச்சிகளின் ஒலி அளவைவிட மிக மிக அதிகம். ஏன் ஒரே அளவில் அமைக்கத் தவறுகிறீர்கள்? ஒவ்வொரு விளம்பர இடைவேளையும் போதும் ‘ரிமோட்டை’ வைத்துக்கொண்டு சப்த அளவைக் குறைப்பதோ அல்லது ‘ம்யூட்’டில் வைப்பதோ தான் வேலையாகிவிடுகிறது. இது தவிர, தேவையற்ற இசை, வசனங்களே காதில் விழாதவாறு பின்னணி இசையின் கர்ண கடூரம், இவற்றையெல்லாம் சீர்படுத்துங்கள்.

    இனியாவது, புகை பிடிப்பது, மது அருந்துவது, கற்பழிப்பது, வன்முறைச் செயல்கள் போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டாம். நடிகர்களே, கிழித்த காகிதம், குப்பை இவற்றை குப்பைத் தொட்டியில் அல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தூக்கி எறிவது, எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்புவது அல்லது சிறுநீர், மலம் கழிப்பது போன்ற காட்சிகள் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்

    எரிபொருள் சிக்கனப்படுத்தப்படவேண்டும் என்று எல்லோரும் அறிவர். பின் ஏன், சிதை எரிப்புக்காட்சிகள், வீடு கொளுத்தும் காட்சிகள் காட்டவேண்டும்? அடையாளமாக, எந்த நபர் இறந்ததாகச் சித்தரிக்கப் படுகிறாரோ, அவரது புகைப்படத்தை ஒரு மாலையுடன் காட்டினால் போதாதா?

    சண்டைக் காட்சிகள்? அடேயப்பா? எத்தனை, வாகனங்கள், பொருட்கள், பெட்ரோல் முதலிய எரிபொருட்கள் நாசமாக்கப்படுகின்றன? எரியூட்டப்படுகின்றன, தண்ணீர், பால், பழங்கள், காய்கறிகள் சேதமாக்கப்படுகின்றன? எல்லாவற்றையும் தவிர்க்கமுடியாது என்றாலும், அவசியமில்லாததை, நீங்கள் நினைத்தால் நிச்சயம் தவிர்க்கலாம். சிம்பாலிக் ஆக காட்டும் உத்திகள் உங்களுக்குத் தெரியாதவையா? அனிமேஷன் முறையில் இவற்றை காட்டினால் போதாதா? எவ்வளவு எரிபொருளும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்?

    படம் எடுப்பது பெரும்பாலும் வியாபார நோக்கமே என்றாலும், சமூக நலன் இன்னும் சற்று அதிகமாக உங்கள் பார்வையில் இருக்கவேண்டும். “சினிமாவும் தொலைக்காட்சியும் ஒரு பொழுதுபோக்கு சாதனமே, அவற்றில் காணப்படுபவை எல்லாம் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளே” என்று நீங்கள் வாதிடுவதும் ‘சினிமாவிலிருந்தும் தொலைக்காட்சிகளிலிருந்தும் தெரிந்து கொண்டுதான் நாங்கள் இந்த செயல்களைச் செய்கிறோம்’ என்று குற்றவாளிகளும் மாறி மாறி சொல்லிக் கொண்டேயிருந்தால், இதற்கு எல்லையே இல்லை, வடிகாலும் இல்லை. பாதிக்கப்படுபவர்கள் இளைய சமுதாயம் தான்.

    ஆகவே, காட்சிகளுக்கான ஒரு வரையறை வகுத்து, சமூகக்கேடு குறைவதற்கு உதவிட சமூக ஆர்வலர்களும் அரசாங்கமும் முன்வரவேண்டும். நீங்களும் பொறுப்பான பெற்றோர்கள் தான். இதற்கு பொறுப்பான பங்கு உங்களையும் சாரும். உங்கள் தொண்டு ஆக்கபூர்வமாக வளரச்செய்யுங்கள். நாடும், மக்களும், சுற்றுப்புரச் சுத்தமும் உலகத்தரமான மேம்பாடு அடைந்து, தமிழ்நாடும் இந்தியாவும் அனைத்துலகும் போற்றத்தகு பெருமையான இடம் வகிக்க தயவு செய்து பெரும்பங்கு ஆற்றிடுங்கள்.

    நடிகர் விவேக் போன்றவர்கள் பல புத்திமதிகள் சொல்லிவருகிறார்கள். அவரே தனியாகவோ, அவர் மூலமாகவோ மது அருந்துதல் புகை பிடித்தல், வன்முறைச் செயல்கள் இவற்றின் தீமைகளையும், வீட்டையும், தெருவையும், ஊரையும், நாட்டையும் சுத்தம் சுகாதாரத்துடன் வைத்திருத்தல், அவற்றின் நன்மைகள் இவற்றை அறிவுறுத்தலாம்

    சமூகப் பொறுப்புணர்வோடு நீங்கள் செயல்பட்டு, பல சாதனைகள் செய்து மக்களையும் நாட்டையும் ஏற்றமுறச் செய்யுங்கள். இன்னும் அதிக அக்கறையுடன் செயல்பட்டால், சமூக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும், உங்களை நாடும் மக்களும் இன்னும் பாராட்டுவார்கள் என்றே தோன்றுகிறது.

    நன்றி, வணக்கம்.

    நாகை வை. ராமஸ்வாமி
    மே 1, 2015

    Share
  • வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி!

    -நாகை வை. ராமஸ்வாமி

    neela

    சுந்தரி, ஷ்யாமளி, மதுர மனோஹரி, ஹ்ருதயேஸ்வரி
    கந்த மாதா, காதம்பரி, கனக தாரேஸ்வரி, காரோணேஸ்வரி
    எந்தனுள்ளம் வந்தமர் பூர்ணேஸ்வரி ஸ்ரீ சக்ரேஸ்வரி
    வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி!

    தந்த முகனும் தம்பியும் தவறா ஆசி தர
    நந்தி வாகனன் காரோணன் நலமுற அருளிட
    புந்தியில் போற்றினனே புன்னகை அரசியே
    சொந்த மெனையேற்று வந்தருள் நல்குவளே!

    சிந்தனை சிதறாது நினதடி போற்றவும்
    வந்தவர் நின் சன்னிதி வளமுடன் மகிழவும்
    பந்தங்கள் சொந்தங்கள் பலவும் பெறவும்
    எந்தனையாண்டு என்றென்றும் காத்திடுவாய்!

    சர்வேஸ்வரப் ப்ரியே, சர்வலோக மாதா
    சர்வோத்தமி, சர்வநாமகான காரணி
    சர்வ பாப நாசினி, சர்வாலங்கார பூஷணி
    சர்வரக்‌ஷகி சர்வமயீ நீலாயதாக்ஷி!

    சர்வத்திலும் நினைக் காண
    சற்குணம் தந்தருள்வாய்
    சர்வ ஜனனமும் நின்னடி போற்றிட
    சர்வ காருண்ய நீலாயதாக்ஷி வரமருள்வாய்!

    Share
  • கணேசன்

    –நாகை வை. ராமஸ்வாமி.

    குக்கிராமமும் இல்லாத, டவுனும் இல்லாத அந்த ஊர், கடலூர் டவுன் ஒட்டியது. மலைகள் இல்லாவிட்டாலும்,  கடிலம் ஆற்றை ஒட்டி, மலர்கள் பூத்துக் குலுங்கும், அழகான செழுமையான இடம்.

    அங்கே,  “திரு நாகலிங்கம் ஐயா உபய துணிக்கடல்”  மிகவும் பிரபலம் வாய்ந்தது.  மிகவும் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை, வளர்ந்து, பல நகரங்களிலும் கிளைகள் பெருகியதால், துணிக்கடை, ‘துணிக்கடல்’ ஆக மாறியது.  நாணயம், நம்பிக்கை, தரம் இவற்றிற்குப் பெயர் பெற்றது.

    அதன் உரிமையாளர் திரு கணேசன் அந்த ஊரின் பெரிய புள்ளி.  இலவசப் பள்ளிக்கூடம், இதர பல திட்டங்கள் அவர் நன்கொடையுடன் மக்களுக்கு நன்மை செய்து, அந்த செய்தி பரவி, பத்திரிகைகளிலும் வரத் தொடங்கியது.  அவர் எது செய்தாலும், ‘திரு நாகலிங்கம் ஐயா உபய….” என்ற பெயரில் தான் தொடங்குவார்.

    அன்று காலை, ‘செய்தியாளர்’ என்று எழுதப்பட்ட ஒரு ஜீப் அந்தக்கடை வாசலில் நின்றது.  அதிலிருந்து இறங்கிய ஒரு நிருபர், “கணேசன் சார் இருக்கிறார்களா” என்று வினவியபடியே கடைக்குள் நுழைந்தார்.

    “ஐயா வர இன்னும் நேரம் இருக்குங்க, நீங்க வேண்டுமானால் அவங்க தோட்டத்தில சந்திக்கலாம்” என்று விலாசம் கொடுத்தார்கள் சிப்பந்திகள்.

    சிப்பந்திகளை தம் குடும்ப உறுப்பினர்கள் போல் கவனித்து வந்தார் உரிமையாளர் கணேசன்.  அதனால், சிப்பந்திகளும், தண்டத்திற்கு அழும் மற்ற வேலைக்காரர்கள்  போலல்லாமல், பொறுப்புடனும், அக்கறையுடனும் வேலை செய்து, வியாபாரம் வளர பெரிதும் பாடுபடும் வகையினர்.

    தலையில் முண்டாசுடன் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த நடு வயது தாண்டிய,  ஆனால் கம்பீரம் குறையாத அந்த ஆசாமியிடம், நிருபர், “கணேசன் ஐயாவைப் பார்க்க வேண்டும், அழைத்துச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.

    “என்ன விஷயம்?”

    “எங்கள் பத்திரிகைக்கு ஒரு பேட்டி காண்பதற்காக”

    “அப்படியா, உள்ள வாங்க”

    உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அவரை அமர்த்திவிட்டு உள்ளே சென்றார் அந்த ஆசாமி.

    சிறிது நேரம் கழித்து உள்ளிருந்து, “வணக்கம், வாங்க, நான் தான் கணேசன்” என்ற குரல் கேட்டது.

    அந்த நபரைப் பார்த்த நிருபருக்கு ஒரே ஆச்சரியம்.  ஏனென்றால், அவர் சந்தித்த அந்த தோட்ட ஆசாமிதான் அவர்.

    “ஐயா, நீங்க..?”

    “நான் தான் அது.  அப்போ தோட்ட தொழிலாளி, இப்போ கடை முதலாளி, என்ன வேண்டும் சொல்லுங்க.

    “முதலில் கொஞ்சம் தேனீர் அருந்துங்க” என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுதே ஒரு அழகான ட்ரேயில் பீங்கான் கோப்பையில் சூடான தேனீர் பிஸ்கட்டுகளுடன் வந்தது.

    “ஐயா, முதலில் முன்னறிவிப்பில்லாமல் வந்ததற்கு என்னை மன்னிக்கவும். தாங்கள் இந்த வட்டாரத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரிய மனிதர்.  எங்கள் பத்திரிகையில் தங்கள் பேட்டி வரவேண்டும் என்று வாசகர் பலர் கேட்டுக்கொண்டதன் பேரில், வந்துள்ளேன்.”

    “அப்படி என்ன தம்பி பேட்டி எடுக்கும் அளவுக்கு நான் செஞ்சிட்டேன்? உங்க பெயர் என்ன சொன்னீங்க?”

    “நான் சென்னையிலிருந்து வருகிறேன் ஐயா, என் பெயர் ஸ்ரீதர், ‘சாதனை’’ பத்திரிகையின் சார்பாக வந்திருக்கிறேன்.

    “அப்படியா, பெயர் நல்லா இருக்கே, உங்களுடையவும், உங்கள் பத்திரிகையுடையவும்.  அது என்ன சாதனை? பெயர் புதுசா இருக்கே?”

    “ஆமாம் ஐயா, எங்கள் உரிமையாளர் திரு கிருஷ்ணஸ்வாமி எதையும் புதியதாக, ஒரு சாதனையாகச் செய்வார்.   எங்கள் பத்திரிகையில் வரும் பேட்டிகள், கட்டுரைகள் அனைத்தும் ஏதாவதொரு சாதனை பற்றியே இருக்கும்.  அது வருங்கால சந்ததியினருக்கு ஒரு படிப்பினையாகவும், ஊக்கமளிக்கும் முன்னோடியாகவும்,  அமையும்.  ”

    “ரொம்ப நல்ல விஷயம்.  சொல்லுங்க, என்ன தெரிஞ்சுக்க வேணும் என்னய பத்தி?”

    “எல்லாமே சொல்லுங்க, உங்க கடந்த கால வாழ்க்கை, எப்படி முன்னுக்கு வந்தீங்க, எல்லாமே”

    “நான் ஒரு ஆறாங் கிளாஸ் மட்டும் தொட்ட படிப்பறிவில்லாதவன், ஏதோ எனக்குத் தெரிஞ்ச வரை சொல்லிட்டே போறேன், எப்படி எளுதணும்னு நினைக்கிறீங்களோ, எளுதிக்கிங்க, ஆனால், தப்பா மட்டும் எளுதிடாதீங்க, சரியா?”

    “ஆகட்டும் ஐயா, சொல்லுங்க”

    ஜவுளிக்கடைகமல் ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஒரு காட்சி பின்னோக்கி செல்லும், வெகு பிரமாதமாக எடுத்திருப்பார்கள், அது போல, கணேசனின் நினைவலைகள் பல வருடங்கள் பின்னோக்கி சென்றன.

    கணேசன் ஒரு 11 வயது சிறுவன்.  குடிகார கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, கணேசனையும், அவனுக்கு அடுத்த 6 வயது தங்கையையும் பராமரித்துக் கொண்டு, சமாளித்து வரும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசமுடைய நல்ல குணமுடைய சிறுவன்.  ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினாலும், என்ன செய்வது எப்படி செய்வது என்று அறியாமல் திணறினான்.

    அன்று பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அவன் வீட்டில் நடந்ததைப் பார்த்து கதி கலங்கிப் போய்விட்டான்.   குடித்துவிட்டு வந்த அப்பா, காசு கேட்டு அம்மாவை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்.   இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் இப்பொழுது தான் நேரில் பார்க்கிறான்.

    சிறுவனாக இருந்தாலும், இப்பிரச்சினைக்குக் காரணம் பணம் என்பதைப் புரிந்து கொண்டான். ஒரு முடிவு எடுத்தான்.

    மறுநாள், வழக்கம்போல் அம்மா, பள்ளிக்கூடம் போவதற்காக சோற்றுமூட்டை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, “அம்மா, நான் இனி பள்ளிக்கூடம் போகமாட்டேன்.” என்றான்.

    அம்மா திடுக்கிட்டு, “ஏண்டா கணேசு, இப்படிச் சொல்லறே?” என்று கேட்டதற்கு, “நான் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கிறேன் அம்மா, நீ இப்படி அப்பாவிடம் அடிபடுவது எனக்கு ரொம்ப தாங்கலை” என்று அழுதான்.

    “எல்லாம் சரியாயிடும் கண்ணு, கடவுள் கண்ணைத் திறந்தார்னா, ஒரு நிமிஷத்தில் கஷ்டமெல்லாம் சரியாயிடும்,  அப்பா வேணுமின்னா அடிக்கிறாரு, அவருக்குள்ள ஒரு கஷ்மாலம் பூந்துகிட்டு ஆட்டுது. நீ இஸ்கூலுக்கு போய் படிச்சு பெரிய ஆளா வரணுமின்னு நான் கனா கண்டுகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா, என் தலையில இடி போடறே?”

    “சரி வுடு, இன்னிக்கு போவல.”

    அன்று இரவு தூங்காமல் மண்டைக்குள் கரப்பான் பூச்சி, தேள், பூரான் இவையெல்லாம் புகுந்து குடைந்தாற்போல் உணர்ந்தான், பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், மனசு லேசானது, மண்டையில் கலக்கம் இல்லை, தேள் இல்லை, தெளிவு இருந்தது.

    “டேய், கணேசு, செல்லம், எளுந்திரிச்சி இஸ்கூல் போடா கண்ணு” என்று சொல்லிக் கொண்டே வந்த அவன் அம்மாவுக்கு அதிர்ச்சி.

    படுக்கையில் கணேசன் இல்லை.  படுக்கை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.  பட்சி பறந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.  வயிற்றில் கலக்கம், நெஞ்சில் கனம், கண்களில் தாரை.

    ஆறு மாதங்களாகியும் கணேசன் என்ன ஆனான் என்று புரியாமல் தவித்தனர், அம்மாவும், தங்கையும்.

    ஒரு நாள் விடியல், “அம்மா” என்று குரல் கேட்டு, கனவோ என்று படுத்துவிட்டாள், மீண்டும் “அம்மா” என்று கேட்டு, குடிசைக் கதவைத் திறந்து பார்த்து ஆச்சரியத்தில் மகிழ்ந்தாள்.  அங்கே, சற்று வளர்ந்த கணேசன்.  உச்சி முகர்ந்து கட்டி பரவசமடைந்தாள்.

    அப்பா குடல் வெந்து இறந்த செய்தியும், அவன் ஒரு துணிக்கடையில் வேலையிலிருக்கும் விஷயத்தையும் பரிமாறிக்கொண்டனர்.

    அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வாங்கி வந்த துணிமணிகள், தின்பண்டங்கள் கொடுத்து அம்மாவின் கையில் ரூ.2000 கொடுத்து வணங்கினான்.  அன்று பூராவும் அம்மாவின் அரவணைப்பு அன்பில் திளைத்தான்.  அடிக்கடி வருவதாகச் சொன்னான்.

    கணேசன் வேலையில் சேர்ந்தது ஒரு பிரபல துணிக்கடையில்.  அவன் முதலாளி திரு நாகலிங்கம் ஒரு பெரிய தனவந்தர், மனவேந்தர் (பெரிய மனம் படைத்தவர்களை, ஏன் மனவேந்தர் என்று அழைக்கக் கூடாது?)

    அவனைப் பற்றி அறிந்து, முதலில் கவுண்டரில் உதவியாளராகச் சேர்த்து, வேலை கற்றுக் கொள்ளச் சொன்னார்.  பிறகு ‘டெலிவரி பாய்’ என்று சரக்குகளை  வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் பணி கொடுத்தார்.

    கவுன்டரில் துணி காண்பித்து அளந்து கொடுக்கும் வேலையும் அவ்வப்போது.. அதற்குள் வியாபாரம் பற்றிய விபரங்கள் தெரிந்துகொண்டான்.  துணி மணிகள் மொத்தமாக சென்னை, பம்பாய், சூரத் முதலிய இடங்களிலிருந்து கொள்முதல் செய்வது, தரம் பிரிப்பது, விலை நிர்ணயம் செய்வது எல்லாம்.

    அப்பொழுதுதான் அவனுக்குள் புகுந்தது பணத்தாசை பூதம்.  நாணயத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொண்ட அவன் துரோகம் செய்ய முற்பட்டான்.

    “தம்பி கணேசா, நாளை அடுத்த ஊர் மிராசுதார் வீட்டுக்கு சரக்கு கொடுத்துவிட்டு, பணம் வாங்கி வந்துடு, ஜாக்கிரதை, பணம் பெருசு.  வெள்ளன கிளம்பி நம்ம வண்டியிலே போய்விட்டு வந்துடு” என்றார் முதலாளி.

    “ஆகட்டும் ஐயா”

    ஏற்கனவே கவுன்டர் வேலை வரும்பொழுதெல்லாம், அரை மீட்டர் அளவுக்கு துணிகளில் மிச்சம் பிடித்து, பிட் துணி வரும்பொழுதெல்லாம், அதை சுருட்டி, ஒரு நண்பராக்கிக் கொண்ட டெய்லரிடம் கொடுத்து சிறிது சிறிதாக பணம் சேர்த்தான்.

    அங்குள்ள வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பித்து அதில் சேமித்தும் வைக்கத் துவங்கியாகிவிட்டது.

    மறுநாள் காலை வண்டி வந்ததும், ஐயாவிடம் சொல்லி, வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி, தானே வண்டியை ஓட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

    மாலை கடை திரும்பிய கணேசைப் பார்த்த முதலாளி பதற்றம் அடைந்துவிட்டார்.  ஏனெனில், அவன் உடம்பில் ரத்தக் காயங்கள்.

    விசாரித்தபொழுது, வழியில் திருடர்கள் அவனை மடக்கி பணத்தைப் பறிக்க முயன்றதில், அவனுக்கு செமத்தியாகக் கொடுத்துவிட்டனர்.

    “அடப் பாவமே, ஏண்டா கணேசா, பணம் பறி போய்விட்டதா?”

    “பூரா போகல ஐயா, நான் மறைச்சு வச்சிருந்தேன், ஒரு இருபத்தி ஐயாயிரம் மட்டும் எடுத்துக்கிட்டு போயிட்டாங்க ஐயா, மீதி பத்திரமா இருக்கு ஐயா, இந்தாங்க, எழுபத்தையாயிரம். ஆனா ரொம்ப வருத்தமாயிருக்கு ஐயா, ஐயா பணத்த இப்படி கோட்டை  விட்டுட்டமேன்னுட்டு ”

    “போனாப் போவது பயலே, நீ பத்திரமா வந்திட்ட இல்ல, டாக்டருகிட்ட போய் நான் சொன்னதாக சொல்லி மருந்து போட்டுக்கிடு”.

    “சரிங்க ஐயா,”  உள்ளுக்குள் சந்தோஷம் அவனுக்கு.  இதுவரை சேர்த்ததில் இருபத்திஐயாயிரம், இப்போது சுளையாக இருபத்தி ஐயாயிரம், ஐம்பது ஆயிரம் சேர்த்தாகிவிட்டது, ஒரு சின்ன கடையாகப் போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட வேண்டியது தான்.

    கடை வெச்சு, நல்லா பணம் பண்ணனும், தங்கச்சியை நல்லா படிக்கவெச்சு, நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்.  அம்மாவை பத்திரமா பாத்துக்கணும், அவங்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷமா வச்சுக்கணும்.

    அவன் கற்பனை இறக்கை முளைத்த வெண் குதிரையாக வானில் பறந்தது, அதில் அவன் ஒரு ராஜகுமாரானாக உட்கார்ந்திருந்தான்.  சினிமா பார்க்கும் பழக்கமுள்ளவனாதலால், அவன் உதடுகள் “ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம்….” என்ற பாடலை முணுமுணுத்தது, மனது, எம்.ஜி.ஆருக்குப் பதிலாக தன் உருவத்தைப் பதித்தது.

    சற்று ஓய்வில், முதலாளி வெளியில் சென்றிருந்த சமயம், வண்டிக்கார அண்ணாச்சி, கணேசைத் தனியே அழைத்து, “தம்பி உங்கிட்ட தனியே பேசணும், ராத்திரி தூங்கப் போகயிலே, எங்க வீட்டு வாசலுக்கு வந்து ஒரு குரல் கொடு.” என்றதும் தான் சுய நினைவிற்கே வந்தான்.

    “என்ன அண்ணாச்சி, எதினாச்சும் சங்கடமா?”

    “நேரில சொல்றேன், வா.”

    அன்று இரவு அண்ணாச்சி சொன்ன விஷயம், அவனுக்கு அதள பாதாளத்தில் விழுந்த உணர்வை ஏற்படுத்தியது.

    அவன், முதலாளிக்குச் செய்துகொண்டிருந்த துரோகம் அனைத்தும் முதலாளிக்குத் தெரியும் என்றும், அன்று வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி அவனே மிராசுதார் வீட்டிற்கு அவன் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம், அண்ணாச்சியை பின் தொடர்ந்து பார்க்கச் சொல்லிவிட்டார் முதலாளி.   வரும் வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, அவனே காயம் ஏற்படுத்திக் கொண்டு, பணத்தை அவன் அறையில் பதுக்கி வைத்துவிட்டு வந்த விஷயம் முதலாளிக்குத் தெரிந்துவிட்டது என்று சொன்னதுமல்லாமல், அநேகமாக அவனுக்கு சீட்டு கிழிக்கப்படும் என்றும் சொன்னார்.

    வியர்த்து வெலவெலத்துவிட்டது கணேசனுக்கு, இனி தன் வாழ்க்கை அவ்வளவுதான், கம்பி எண்ணி ஜெயில் வாசம் தான் என்ற பயத்தில் இரவைக் கழித்தான்.

    என்னதான் இருந்தாலும், அடிப்படையில் நல்ல குணம் கொண்ட அவன், அம்மா சொல்லிக் கொடுத்த அரைகுறை கடவுள் வாழ்த்துக்களைச் சொல்லி, விபூதி இட்டுக் கொண்டு, கோயிலுக்குச் சென்று கும்பிட்டுவிட்டு முதலாளி வீட்டிற்கு கடை திறக்குமுன்னே சென்றான்.

    முதலாளி, “எங்கடா பயலே வந்தே, காலங்கார்த்தால, என்று சொல்வதைப் பார்த்தால், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, அண்ணாச்சி சொன்னது வேறு, நடப்பது வேறாக இருக்கிறதே?

    எது என்னவானாலும் சரி என்று, முதலாளி கால்களில் நெடுஞ்சாணாக விழுந்து, “ஐயா, என்னை மன்னித்துவிடுங்க  என்ன வேண்டுமானாலும், எப்படி வேணுமானாலும் தண்டிச்சிடுங்க ஐயா, உங்க உப்பைத்தின்றுவிட்டு, உங்களுக்கே துரோகம் செய்துவிட்டேன் ஐயா”, என்று தேம்பித் தேம்பி அழுதவாறே செய்த தவறுகள் எல்லாம் சொல்லிவிட்டு, இதுவரை சேமித்து வைத்த ஐம்பதாயிரம் ரூபாயையும் கடையில் அவரிடம் கொடுத்துவிடுவதாகச் சொன்னான்.

    “எளுந்திரடா பயலே, எனக்கு எல்லாம் தெரியும்.  நீ நல்லவனாச்சே, ஏன் இப்படி புத்தி போச்சு என்று யோசனை செய்தேன், உன்னுடைய கடந்த கால வாழ்க்கைக் கஷ்டம், நீ உன் அம்மாவிடமும் தங்கச்சியிடமும் வச்ச பாசமும் இப்படி செய்யத் தூண்டிவிட்டது தெரிந்தது.  நீ கெட்டுப் போறதுக்கு முன்னமே, நான் ஒன்னய ஒரு வழி செஞ்சிருக்கணும்.  பரவாயில்ல, நீ இன்னிக்கு கடைக்குப் போகவேண்டாம்.  சாயந்திரம் வீட்டுக்கு வா”  என்றார்.

    வங்கிக் கணக்கை முடித்து பணத்தை எடுத்துக் கொண்டு, கையில் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, முதலாளி வீட்டுக்குச் சென்றான்.  பணம் பூராவையும் அவர் காலடிகளில் வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை கால்களில் விழுந்தான்.

    “டேய் பயலே, எழுந்திருடா,  நீ உண்மையானவன், உழைப்பாளி, நல்லவன் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும், நீ பட்ட கஷ்டம் உன்னை சில தவறுகளை செய்ய வைத்துவிட்டது.  நான் உன்னைக் கண்காணித்து வந்தேன்.  நீ உன் தவறுகளை உணர்ந்து, எடுத்த பணத்தை பூராவும் திரும்ப கொடுத்த நேர்மையே நான் உன் மீது வைத்த நம்பிக்கை வீணல்ல என்று காட்டுகிறது” என்றார்.

    பிறகு,  அங்கு காத்திருந்த வண்டிக்கார அண்ணாச்சியைக் கூப்பிட்டார், “என்னப்பா, நான் சொன்னது உனக்கு சம்மதமா?” என்று கேட்டார்.  அண்ணாச்சி, “ஐயா, எது சொன்னாலும் செஞ்சாலும் அது நல்லதுக்குத் தானே ஐயா, நீங்க சொன்னா சரி ஐயா” என்றார்.

    பிறகு, கணேசனிடம், “இந்தாப்பா, நீ வேலை செஞ்சது போதும்..” என்றார்.

    அவனுக்குத் தலை சுற்றியது.

    “ஐயா, எனக்குத் தண்டனை கொடுங்க ஐயா, ஆனா, வேலையிலிருந்து மட்டும் நிறுத்திடாதீங்க ஐயா” என்று கதறினான்.

    “எலே, இருடா, நான் ஒன்னய வேலை செஞ்சது போதும் என்று தானே சொன்னேன், வியாபாரம் செய்ய வேண்டாமுனு சொன்னேனா?” என்றார்.

    திகைத்தான் கணேசன்.

    அவனை மன்னித்ததோடல்லாமல், அவனுக்காக ஒரு சிறிய துணிக் கடை வைத்துக் கொடுத்து, அண்ணாச்சி மகளையும் அவனுக்கு கல்யாணம் செய்து கொடுத்து அவனை வாழ வைத்துவிட்டது அந்த மனித தெய்வம்.

    அவன் நா தழுதழுத்தது.  “ஐயா, உங்கள் பெருந்தன்மைக்கும் என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும், என் தோலை செருப்பாகச் செய்து தங்களுக்குப் போட்டாலும் ஈடாகாது” என்று சொல்லி தேம்பினான்.

    “ஹலோ, தம்பி ஸ்ரீதர், என்ன, நான் சொன்னது கேட்டுச்சா? தூங்கிட்டீங்களா?” என்றதும் தான், அந்த நிருபருக்கு கனவிலிருந்து மீண்டது போல் இருந்தது..

    ஐயா, மெய் மறந்து விட்டேன் ஐயா, இப்ப புரியுது நீங்க ஏன் உங்க கடைக்கு  எல்லாம் அப்படி பெயர் வைத்தீர்கள் என்று.

    “எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகம்  வருது, சொல்லவா?” என்றார் அந்த நிருபர்.

    “சொல்லுங்க தம்பி, ஆனால், இந்த போர்டைப் பார்த்துவிட்டு சொல்லுங்க” என்றார் கணேசன்.  “அட, அதாங்க நான் சொல்ல வந்தது” என்று சொன்ன ஸ்ரீதர் பார்த்த அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது,

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்துவிடல்” என்ற குறள்.

    நான் எங்க முதலாளிக்கு துரோகம் செய்தேன், ஆனால், என்னை அவர் நான் எண்ணிப் பார்க்க முடியாத, எனக்குத் தகுதியே இல்லாத உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார வச்சிட்டார்.  அதனால தான் அந்த குறளை ஒரு படிப்பினைக்காக எளுதி வச்சிருக்கேன் தம்பி.

    “டாடி, நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வரேன், பை” என்றவாரே வந்த அந்த பையனிடம், “அங்கிளுக்கு வணக்கம் சொல்லுடா தம்பி” என்றார்.

    வணக்கம் சொன்ன அந்த பையனிடம்,  “தம்பி, உன் பெயரென்ன?” என்று கேட்டதற்கு வந்த பளிச் –

    “நாகலிங்கம்”..

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://redtricom.files.wordpress.com/2013/07/sonia-selections-devon.jpeg?w=494&h=403

    Share
  • கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே

     

    நாகை வை. ராமஸ்வாமி    neelaiyadhakshi

     

    உள்ளின் உள்ளே உள்ளவளாய்

    உள்ளும் வெளியுமாகி நிற்கின்றாய்

    பள்ளம் அனைத்தும் நீக்குகிறாய்

    கள்ளம் எல்லாம் களைகின்றாய்

     

    என்னென்பேன் எவ்விதம் சொல்வேன் நின்னெழிலை

    என்னியதக் கமலமதில் என்றும் அமர்ந்தருளும்

    பொன்மயமானவளே புன்னகை பூத்தவளே

    எனதருமைத் தாயே நீலாயதாக்ஷியே

     

    கண்கள் கயலொத்த காரணமோ

    கண்காட்சி தந்தாய் அதிபக்தன் குளிர

    பண் பாடினான் மெய்மறந்து நின் புகழை

    எண்ணம் ஒன்றானானை நின்னடிக் கொண்டாயே

     

    மலர் வாசப் பந்தல் தோரண மாலையுடன்

    உலகாளும் உத்தமியே உன் பதம் போற்றி

    குளமாய்க் கண்கள் ஆனந்தமுற

    உளம் குளிர அலங்கார ஊஞ்சலிட்டோம்

     

    உல்லாசம் பொங்கிட ஒய்யார எழிலுடன்

    நலம் வளமாக பொன்னூஞ்சல் ஆடிடுவாய்

    சீலமிகு சிங்காரி சீர் பெற ஆடிடுவாய்

    வெள்ளமாய்க் கருணை பொழிந்திடுவாய்

     

    கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே!                               

     

    Share
  • சிங்கை கொலு & அன்னை நீலாயதாக்ஷி ஊஞ்சல் 2012

     

    நாகை வை. ராமஸ்வாமி

    அனைத்து உலக  ஹிந்துக்கள்  கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்த நவராத்திரியில்  அன்னை தேவி     துர்கை, லக்ஷ்மி,  சரஸ்வதி ஆகிய சக்திகளாகவும்  பத்தாவது நாளில், விஜயதசமியில்,    வெற்றி தேவியாகவும்   வணங்கப்படுகிறாள்.     

    எங்கள் இல்லத்தில்  ( நாங்கள் எங்கு வசித்தாலும், மும்பை முதல், பங்களூர், தற்சமயம் சிங்கப்பூர் ) பொம்மைக் கொலுவுடன்,  எங்கள் ஊர் நாகப்பட்டினம் அன்னை நீலாயதாக்ஷி தேவியை ஒரு சிறு ஊஞ்சலில் தோரணம் மலர் மாலைகளால்  அலங்கரித்துப போற்றி உற்றம் சுற்றம் அழைத்து பாடல்கள் பாடி, வரும் சுமங்கலிகளுக்கும கன்னியர்களுக்கும் மங்கலப்பொருட்கள் அளித்து மகிழ்ந்து வருகிறோம். 

      இந்த ஆண்டு சிங்கப்பூரில் எங்கள் இல்ல கொலு, ஊஞ்சல் புகைப்படங்கள் இத்துடன்.    அன்னை நீலாயதாக்ஷி போற்றி நான் எழுதி வரும் பாடல்களில் பத்து தேர்வு செய்து இசை வடிவம் அமைத்து குறுந்தகடாகவும் வெளியிட்டிருக்கிறோம்.  சில கணினி இசைத் தளத்திலும் (தள  முகவரி கீழே).    

     
    Amudame Kumudame
    Neelaayadaakshi Vandhaal
    Navarathna Kreedam
    Ulagaalum Umaiyavale
    Kaatharul Purivai
    Nityam Pooji Devi
    Kaarmegham Pozhindhidum
    Vidamunda Kandan
    Kallam Illaa Vellai Ullam
    Thiruvarul Mevidum
     

    Share
  • கணினி, ஜகம் நீ

     

    நாகை வை. ராமஸ்வாமி)

    அன்றொரு நாள், ஆண்டு 1999, இரவு 1.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    ஒரே நிசப்தம்.  ரிடையர் ஆக ஒரு சில மாதங்களே இருந்த அந்த பெரியவரும், அவர் மனைவியும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் மும்பை அபார்ட்மென்டில்.

    என்ன? பயந்துவிட்டீர்களா, ஏதோ பயங்கர நிகழ்ச்சி என்று?  நோ, நோ.

    அந்த நேரத்தில்  தான், முதல் முறையாக அமெரிக்கா  சென்றிருக்கும் அவர்கள் மகன் நேரடி உரையாடlல் செய்ய அழைப்பு மணி விடுப்பான்.  அவர்களுக்கு ஒவ்வொரு இரவும், மகிழ்வான சிவராத்திரி தான்.

    அப்பொழுது தான் அவர்களுக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஓரளவு தெரியும்.   அவன் கிளம்புவதற்கு முன் ஒரு பி..சி.. (பர்சனல் கம்ப்யூட்டர்) வாங்கி வைத்து ஆரம்ப விளக்கங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான்.  

    பத்துதடவை சொன்னாலே புரியாத வயதாகிக் கொண்டிருக்கும் மூளைச் செல்கள் புத்துணர்வு  பெற்று புரிந்து கொள்ளவே பத்து நிமிடம் ஆகும்.  அவன் ஓரிரண்டு தடவை சொல்லிக் கொடுத்துவிட்டு,  “யூ நோ அப்பா, யூ ஒன்லி டாட் மீ மெனி திங்ஸ்” என்று குல்லா வைத்துவிடுவான்.  அதில் மகிழ்ந்து அதிகம் கேட்கக் கூடாது என்ற குல்லாகூடிய தலைக் கனத்துடன் ஓகே என்று சொல்லிவிட்டார்

    ஒரு வழியாக கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டார்.  மகன் சொல்லியபடி, MSN

    ஜன்னலைத் திறந்து, காத்திருந்தார்

    மணி 2.00 நெருங்கிக் கொண்டிருக்கிறது.  திக், திக், ஏன் இன்னும் கூப்பிடவில்லை?

    ட்ர்ர்ர்ரிங்…….  ட்ர்ர்ரிங்.

    அப்பாடா, மணி அடித்தது.

    அவன் உருவம் தெரிந்தது.

    மனைவி தூக்கக் கலக்கத்தில், ஏதோ பிரமை பிடித்தவள் மாதிரி கனவா நனவா என்ற நிலையில், ஏற்கனவே பெரியதான தன் கண்களை இன்னும் அகல விரித்து கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டு மகன் உருவத்தைத் தடவிக்கொண்டிருந்தாள்.   பிரிவாற்றாமை கண்களில் நீர் வரச் செய்தது.

    வாயை அசைத்து ஏதோ சொல்கிறான்.  அந்த நாள் மௌனப் படம் பார்ப்பது போலிருந்தது. ஏதும் கேட்கவில்லை.

    அவர்கள் இருவரும் ஊரையே எழுப்பி விடுகிறமாதிரி காட்டுக் கத்தலாக “ஹலோ, ஹலோ, ஹலோ” என்று சுமார் இருபது ஹலோ போட்டிருப்பார்கள். அவர்கள் இருந்தது நான்காவது மாடி.  அவர்கள் கூப்பிட்ட ‘ஹலோ ஹலோ’க்களில், அந்த இரவு நேரத்தில் சாலையில் போய்க்கொண்டிருந்த சிலர் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு, “அவாஜ் ஆதா ஹை, மகர் கோய் நஹீ, டர் லக்தா ஹை” ‘சத்தம் மட்டும் கேட்கிறது, ஆளையே காணோமே’ என்று பயந்து அலறி அடித்து ஓடுவது நன்றாகத் தெரிந்தது.

    அவன் டைப் செய்வது தெரிந்தது.  கம்ப்யூட்டரில் அவன் மெசேஜ் தெரிந்தது.  

    “ஸ்பீக்கர் ஆன்ல இருக்கா?”

    “அது எப்படி செக் செய்வது?”

    “ஸ்பீக்கரில் பட்டன் இருக்கும்.  அது ரெட் லைட்டில் இருக்கா, க்ரீன் லைட்டில் இருக்கா?”

    “எந்த லைட்டும் இல்லை”

    “பட்டன் ஆன் செய்தாச்சா?”

    “எப்படி செய்வது?”

    “அப்பா…அது ஒரு  ப்ரஸ் பட்டன் தான்.  சைடில் இருக்கும்.  ஜஸ்ட் ப்ரஸ்  இட்.  நான் சொல்லியிருக்கிறேனே?”

    “இரண்டு நாள் தான் பாடம் எடுத்தாய், மறந்துவிட்டது கண்ணா, கோபிச்சுக்காதே.   ஒன் மினிட்.  ஓகே.  ஆன் ஆகிவிட்டது.  க்ரீன் லைட்.”

    “இப்போ பேசலாம்.  அம்மா எங்கே?”

    “இதோ ரெண்டு பேரும் தான் இருக்கோம்.  உனக்கு தெரியலையா?”

    “சரியா தெரியலை.   கேமிராவை சரியா ஃபோகஸ் செய்யணும்.”

    “இதோ ஒன் மினிட்.  ம்..ம்.. அட்ஜஸ்ட் செஞ்சாச்சு.”

    “சரியா அட்ஜஸ்ட் செய்யலை.  ரூம் சீலிங் தான் தெரிகிறது.  இன்னும் சற்று கீழே ஃபோகஸ் செய்யவும்.”

    தமிழ் அரைகுறையாகப் படித்திருந்ததால், செய் என்றோ  செய்யுங்கள் என்றோ சொல்வதற்குத் தெரியாது.   செய்யவும், பார்க்கவும், என்றுதான் சொல்வான்
     
    “ஓகே, இப்போ”

    “அப்பா….இப்போ  தரை தெரிகிறது.”

    “ஓகே, இப்போ?”

    “ஓகே. நீங்க இரண்டு பேரும் பாதி பாதி தான் தெரிகிறீங்க>”

    “இப்போ?”

    “குட்.  சரியாக இருக்கிறது.”

    “ஓகே.  சொல்லு.  எப்படியிருக்கே”

    “நான் ஓகே.  நீங்கள்  உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  சரி. எனக்கு டைம் ஆகிவிட்டது.  நாளைக்கு இதே நேரத்தில் இதே சேனலில்  பார்க்கலாம்.  அர்ஜன்ட் மெசேஜ் இருந்தால் மட்டும் மெயில் செய்யவும். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் செல்லம்…டிங் டாங்..”

    “இருப்பா இன்னும்  பேசவே இல்லை.  அதுக்குள்ளே  ஆஃப் செய்யாதே.”

    அவன் கேட்டால் தானே.   ஆஃப் செய்துவிட்டான்.   ம்..ம்.. இன்னும் 24 மணி நேரம்  காத்திருக்க வேண்டியது தான்.

    அடுத்த நாள் இரவு.

    அவன் சொன்னமாதிரி  செய்து ரெடியாகிவிட்டோம்.

    இதோ வந்துவிட்டான்.

    “ஹலோ..ஹலோ”

    “சொல்லுப்பா..கேட்கிறதா..”

    “நீங்கள் சொல்வது  கேட்கவில்லை.  நான் பேசுவது  கேட்கிறதா?”

    “கேட்கிறது”
     
    “ஓகே,  வெயிட்.  ஒயர் சரி  செய்யவேண்டும்.  பார்க்கிறேன்.”

    “அந்த  மௌஸ் இருக்கு பாருங்கள்.  அதை மேல் உள்ள பாரில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்று இருக்கும்.  அதில் நகர்த்தி க்ளிக் செய்யுங்கள்.”

    தலை சுற்றியது அவர்களுக்கு..   ஏற்கனவே கொஞ்சம் வெர்டிகோ ப்ராப்ளம்.

    “இரு, இரு. மெதுவாக சொல்லு.  மௌஸா, எலியா?  நான் எங்கே போவேன் இப்போ எலி பிடிக்க, என்ன சொல்றே?”

    “அப்பா, கீ போர்ட் கிட்ட, கம்ப்யூட்டர் கீழே ஒரு பெரிய ஹார்டுவேர் பெட்டி இருக்கிறது, பாருங்கள், அதிலேருந்து கனெக்ட் செய்த ஒயரிலிருந்து ஒரு சின்ன எலி மாதிரி கைக்கு அடக்கமான நகர்த்தக்கூடிய டிவைஸ் பேடின் மேல் வைத்திருக்கிறது, பார்க்கவும்.”

    “ஆமாம்.  அதுதான் மௌஸா?.  ஓகே.  அதை என்ன செய்யவேண்டும்?”

    “அதை லேஸாக நகர்த்தினால், கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஒரு அம்புக்குறி நகரும்.”

    “ஐ.  ஆமாம்.  நகருகிறது.  ஆனால்,  அம்புக்குறி எங்கோ  போகிறதே?”

    “மெல்ல நகர்த்துங்கள். அது எங்கு இருக்கிறதோ அங்கே அந்த மௌஸில் மேற்புரத்தில் உள்ள இடப்பக்கத்தில் உள்ள பகுதியை அமுக்குவதற்குத்தான் க்ளிக் செய்வது என்று பெயர்.”

    “நீ நன்றாக சொல்லிக் கொடுக்கிறாய்.  பேசாமல் கம்ப்யூட்டர் க்ளாஸ் ஆரம்பித்து இங்கேயே இருந்திருக்கலாம் போலிருக்கிறது.  எங்களுக்கு டென்ஷன் இருக்காது.”

    அவன் சொன்னபடியே செய்தார். ஆனால் மௌஸின் வலப் புறத்தை க்ளிக் செய்துவிட்டார்.  ஒரு சிறிய ஜன்னல்,  “cut, copy, paste……” என்று வந்தது.  அவனிடம் சொன்னார்.  அவன் சிரித்தான்.

    “அப்பா, அது இல்லை, இடது பக்கப் பகுதியை க்ளிக் செய்யவும்”  என்றான்.

    செய்தார்.  அம்புக் குறி வந்தது ஆனால் எங்கோ போய்விட்டது சொன்னார். “அம்புக் குறியைக் காணோம்.”  

    “வெயிட்.  ஜஸ்ட்  மூவ் த மௌஸ்”.   மூவினார்.  வந்தது.

    “என்ன விசேஷம்  செல்லம்?  எப்படி இருக்கே.  வேலை பிடித்திருக்கிறதா?  கீப் யுவர் பாஸ் ப்ளீஸ்ட் வித் யுவர் பெர்ஃபார்மன்ஸ், ஓகே?”   அவருக்கு அவன் வேலை கவலை. அவர் காலத்திய தந்திரங்கள் தான் தெரியும்.   அவன் அம்மா, “நல்லா சாப்பிடுப்பா.  ஏதாவது செய்யத் தெரியவில்லைனா, போனில் கேளு.”

    “ஓகே, ஓகே,  டைம் ஆகிவிட்டது.  இரண்டு நாள் லீவு.   திங்கட்கிழமை பார்க்கலாம்”
     
    “அடாடா, என்னடாது, ஒண்ணுமே பேசவில்லை.  அதுக்குளே  டைம் ஆகிவிட்டது, இன்னும்  இரண்டு நாள் வேற லீவு என்கிறாய்?”  அவர்கள் ஆதங்கம்.

    ராத்திரி பூரா சிவராத்திரியாய் விழித்திருந்து, கண்கள் சிவக்க, உடலில் சூடேறி, ஒவ்வொரு நாளும் தலையிலும் கண் இமைகளிலும் வேப்பெண்ணெய் தவிர, யார் யார் என்னென்ன சொல்கிறார்களோ அத்தனை எண்ணெய்களையும் தடவி,  ஒரு நாள் அந்த எண்ணெய் கீழே கிரானைட் தரையில் கொட்டியது தெரியாமல் தடாலென்று வழுக்கி விழுந்து ஒரு நாள் பூரா ராமர் வில் மாதிரி ஆனது ஒரு எண்ணெய் காண்டம்.

    அமெரிக்காவிலிருக்கும் மகனுடன் பேசுகிறோம் பேர்வழிகள் என்ற பெயரில் தினமும் இரவில் இரண்டு மூன்று மணி நேரம் இன்டர்நெட் ஆன் செய்து வைத்ததில் மாதாந்திர நெட் கனெக்ஷன் பில்லும்,  அவனைக் கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டே கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்யாத  போதெல்லாம், செல் ஃபோனிலும் பேசிக்கொண்டிருந்ததது எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 2500 ரூபாய் மாதம் கட்டவேண்டியிருந்தது ஒரு புராணம்.

    இம்மாதிரியான பல இரவுகள் கடந்த பின்தான் ஓரளவு எந்த கோளாறில்லாமலும்  அவர்களால் மகனுடன் கணினி  மூலம் உரையாட முடிந்தது,.

    அவராவது ஏதோ தடவித் தடவி கம்ப்யூட்டர் ஓரளவு கற்றுக் கொண்டுவிட்டார்.  ஆனால் அவர் மனைவிக்கு இன்னும் புரியவில்லை.  கொஞ்ச நேரம் அதிகம் உட்கார்ந்தால், “போதும் எழுந்திருங்க, அங்க வலிக்கிறது, இங்க வலிக்கிறதுன்னு ஒத்தடம் கொடு என்பீங்க.” என்று அலாரம் கொடுப்பாள்.

    .அவனிடம் கம்ப்யூட்டரில் ஏதாவது புரியவில்லை என்று கேட்டால், “யூ நோ அப்பா, இட் ஈஸ் எ சைல்ட்ஸ் ப்ளே ஃபார் யூ. ஒங்க ஆபீசிலேயே ட்ரெயினிங் கொடுத்திருக்காங்களே.  யூ ஆர் எ கம்ப்யூட்டர் savvy now.” என்பான்.

    “அது என்னப்பா கம்ப்யூட்டருக்கு பூட்டு, சாவி எல்லாம் இருக்கா? எனக்குத் தெரியாதே” என்று ஜோக்கடிப்பார்.

    அவர் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் எடுத்ததே ஒரு கதை.  கம்ப்யூட்டரைஸ் செய்யும் நோக்கத்தில், அவர் ஆபீசில் எல்லோருக்கும் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கொடுத்தார்கள்.  அவருக்கும் இனிமேல் கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம், ரிடையர் ஆகப் போகும் சமயத்தில் என்று நைஸாக தப்பிக்கப் பார்த்தார்.  ஆனால் அவர் எம்.டி. விடுவதாக இல்லை.   வீட்டிற்குப் பக்கத்திலேயே ஏதாவது ட்ரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் கம்பெனி சிலவில் கற்றுக் கொள்ளும்படி உத்திரவு.

    சேர்ந்தார், வேறு வழி.?

    .ஒரு நாள், ஒரு 9 வயதுக் குழந்தை சேர்ந்தது.  அவரைப் பார்த்து, “ஹை, தாத்தா, நமஸ்தே” என்றாள்.

     “காட் ப்ளெஸ்  யூ”.  என்றார்.

    “ஏன், நீங்களும்  ப்ளேஸ் பண்ணலாமே?”  என்றாளே  பார்க்கலாம்.

    “ஓகே, ஐ ஆல்ஸோ  ப்ளெஸ் யூ”

    “தேன்க் யூ.  நீங்க  சொல்லிக் கொடுக்கிறீங்களா, கத்துக்கறீங்களா?”

    அவருக்குக் கொஞ்சம் வழிய ஆரம்பித்தது.

    “சும்மா, டைம் பாஸ் குழந்தே, வீட்டில் கம்ப்யூட்டர் இல்லே, அதான்

    மெயில் அனுப்ப வந்தேன்”  சமாளிக்க முயற்சித்தார்.

    “பின்ன, வேறே என்னமோ தப்புத் தப்பா செய்யறீங்க?”

    “உனக்கு ஆபரேட் செய்ய  தெரியுமா?”

    “ஓ, நல்லாத் தெரியுமே,  நான் கூட மெயில் செக் செய்யத்தான் வந்தேன்.”

    “அப்போ இந்த மெயில் எப்படி ஓபன் செய்யறதுன்னு சொல்றாயா?”

    “அப்படி வாங்க வழிக்கு, உங்களுக்குத் தெரியலைன்னு  கண்டுபிடிச்சுட்டேன்.”

    அந்த வாண்டிடமிருந்த்தும்  கற்றுக்கொண்டதற்கு சற்று  தயக்கம் தான்.  ஆனாலும் கூச்சத்தைப் போக்கிக் கொண்டார், ஆர்வ மிகுதியில்.

    ஒரு மாத டிரெயினிங்.  ஓரளவு தான் புரிந்தது.  எக்ஸெல், ஈமெயில் அனுப்புவது போன்ற சமாசாரங்களில் தடுமாற்றம் தான்.

    மகனிடம் தெரிந்தாலும், தெரியாது என்று சொல்லி, அவனிடமிருந்து கற்றுக் கொள்வது போல் நடிப்பதில் அவருக்குப் பெருமை, சொல்லிக் கொடுப்பதில் அவனுக்கும் பெருமை. . ஆனாலும் சில நுணுக்கங்கள் புரியத்தான் இல்லை.

    ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்பது அடிக்கடி ஞாபகப்படுத்தும்.

    ரிடையர் ஆகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும்,  இப்பொழுது  மகன், கணினி தெரிந்த மறுமகளுடன் வசிப்பதால், பிரச்சினைகள் அதிகம் இல்லை. இருந்தாலும், அவன் கணினி மொழியில் ஏதாவது சொல்லிவிட்டால், தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் செய்கிறார்.  இப்பொழுது, கணினி விஷயத்தில், அவர், பாதி கிணறுக்கு மேல் தாண்டிய மாதிரி தான்.  அவரை கணினி savvy என்று சொல்லமுடியாவிட்டாலும், கணினி sav என்று சொல்லலாம்.

    இந்த கணினி என்று ஒன்று கண்டுபிடித்திருக்கிறார்களே, அது, ஒரே மாயா ஜால உலகம்.  அதன் முன் உட்கார்ந்து விட்டால், எது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம், பொழுது போவதே தெரியாது.  அது தவிர, அயல் நாடு என்றாலே, விமானப் பயணம் என்றாலே எதுவுமே தெரியாத நடுத்தர வகுப்பினருக்கு ஒரு வரப் பிரசாதம்.  அதனால் தான், அந்தப் பெரியவரும், இளைய ராஜா பாடிய “ஜனனி, ஜகம் நீ..” என்ற பாட்டை சற்றே மாற்றி, “கணினீ, ஜகம் நீ” என்று கணினி முன் உட்காரும்போதெல்லாம் பாட ஆரம்பித்துவிடுவார்.

    கம்ப்யூட்டரில் இதை டைப் செய்வதற்குள், இதோ, அவரது முதுகு அலாரம் அடிக்கிறது, (பெட்டர் (?) ஹாஃப்) அலாரமும் அடிக்கிறது.

     

    Share
  • தாசரி

    நாகை வை. ராமஸ்வாமி

    ‘ஹாய் ரியாஸ் ஹௌ ஆர் யூ? வாட்ஸ் குகிங்?’

    ‘ஹல்லோ சந்திரன் வாங்க குகிங் நதிங்?’

    ‘அட அந்த ரியல் குகிங் இல்லப்பா என்ன விசேஷம்னு கேட்டேன்?’

    ‘அது தெரியுமில்ல நானும் சும்மா தான் சொன்னேன் ஒண்ணும் விசேஷம் இல்ல. ஆமா இன்னிக்கு ஹாலிடே தானே ஜாலிடேயா கொண்டாடுவோமே?’

    ‘அந்த ஐடியாவோட தாம்ப்பா நான் வந்தேன் தனியா சமைச்சு சமைச்சு போரடிச்சு போச்சு வெளிலே சாப்பிடுவோமா?’

    ‘ஓ சாப்பிடலாமே ஒய் நாட் கால் தாமஸ் டூ?’

    ‘யா ஐ வாஸ் ஆல்ஸோ தின்கிங் அபவுட் ஹிம்’

    ‘ஓகே கால் ஹிம்’

    ‘ஹலோ தாமஸ் ரியாஸ் ஹியர்’

    ஹை ப்ரதர் சர்ப்ரைசிங் அட் திஸ் அவர் ஆஃப் ஹாலிடே சொல்லுங்க’

    ‘ஒண்ணுமில்ல ப்ரதர் நானும் சந்திரனும் சந்திச்சோம். இன்னக்கு ஹாலிடேயை ஜாலிடேயாக்கலாமுன்னு யோசிச்சோம். என்ன ரெடியா? வீ வில் எஞ்சாய் டுடே நாளைக்கு கட் அடிப்போம். தென் சாடர்டே ரூ சன்டே. ரெஸ்ட் அண்ட் வாஷிங் எட்செட்ரா.’

    ‘யா லவ்லி ஐடியா. எங்க வரணும் எப்ப வரணும் டெல் மீ வில் பீ தேர் பிஃபோர் யூ’

    இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்திலுள்ளவர்களானாலும் வேறு வேறு மதத்தவர்களானாலும் தாமஸ் சந்திரன் ரியாஸ் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வெவ்வேறு கம்பெனிகளின் வேலை
    நிமித்தம் மும்பையிலிருந்து ஒரே நாளில் ஒரே விமானத்தில் அமெரிக்காவின் ‘சான் ஃப்ரான்ஸில்கோ’ விமான தளத்தில் இறங்கிய பின் மிக நெருங்கிய நண்பர்கள்.

    அமெரிக்காவில் ‘ஸான் ஹோஸே (ளுயn துழளந)’யில் வாசம். ஆறு மாதங்களே ஆனாலும் அடிக்கடி சந்திப்பு ஊர் சுற்றல் அரட்டை சாப்பாடு.

    மாதச் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சம். இந்த ஆரம்ப நிலை வேலையே இந்தியாவிலிருந்தால் ரூபாய் ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம். அமெரிக்காவில் மேக்டோனால்ட் போன்ற இடங்களில் ஒரு கப் காபி 300 ரூபாய். அதுவே இந்தியாவில் ஒரு சாதாராண ஹோட்டலில் முப்பது.

    அவர்கள் அப்பா காலத்தில் அமெரிக்காவில் காபி 150 ரூபாயும் இந்தியாவில் ஐந்தாகவும் இருந்தது. அதற்கேற்ற சம்பளம் விலைவாசி. எதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கும்.

    ஒரு டாக்சி பிடித்து ஒரு இந்திய ஹோட்டலைக் கண்டுபிடித்து மூவருக்கும் பொதுவான வட இந்திய பஞ்சாபி வெஜ் ரோடி சாப்பாடு ஒரு பிடி பிடித்தார்கள்.

    பிறகு அங்கிருந்து கோல்டன் கேட் ஃபிஷர்மேன் வார்ஃப் முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு அன்று இரவு எல்லோருமே சந்திரன் ரூமிற்குச் சென்றுவிட்டார்கள்.

    எல்லோரும் டயர்டாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால் தூக்கம் வரவில்லை.

    ‘என்ன தாமஸ் ஆறு மாதமாக பழகி வருகிறோம் இன்னும் நாம் ஒருவருக்கொருவர் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லையே?’ என்றான் ரியாஸ்.

    ஒவ்வொருவராக அவர்களைப்பற்றி சொல்லவேண்டியது என்று தீர்மானித்தார்கள்.

    ‘முதலில் நீங்க சொல்லுங்க சந்திரன். வேர் ஆர் யூ ஃப்ரம்இ அபவுட் யுர் ஃபமிலி’

    ‘என்னத்த….சொல்ல?’

    ‘நிறைய தமிழ் படம் பார்ப்பீர்களா? என்னத்த கன்னயா மாதிரி இழுக்கிறீங்க?’

    ‘நாட் லைக் தட். எப்படி பிகின் பண்ணறது?…..ம்?.. ஓகே. ஐ வில் ஸ்டார்ட். ஐ வாஸ் பார்ன் ரூ ப்ராட் அப் இன் மும்பை. மை ஃபாதர் வாஸ் ஆல்சோ எ ஸாஃப்ட்வேர் எஞ்ஜினீர் ஆஃப் தோஸ் டேஸ் அண்ட் வீ ஆர் ஆல் மிடில் க்ளாஸ். ரென்டல் அகாமொடேஷன் தான் சொந்த வீடு கிடையாது.’ கொஞ்சம் அப்செட் ஆனான் சந்திரன்.

    ‘கமான் டியர். நன் ஆஃப் அஸ் ஆர் ஃப்ரம் ஹெவன். ப்ளீஸ் கன்டின்யூ.’ என்றார்கள் மற்ற இருவரும்.

    ‘எங்க கிராண்ட் டாட் தான் முதலில் மும்பை வந்தார் சம்வேர் இன் 1960. அவங்க அப்பா மை கிரேட் கிராண்ட் டாட் எல்லாம் மதுரை பக்கம் ஒரு கிராமம்.’

    ‘ஈஸ் இட்?’

    ‘யெஸ். மை கிராண்ட் டாட் லைஃப்ல ரொம்ப ஃபேமிலிக்காக சேக்ரிஃபைஸ் பண்ணி ஸஃபர் பண்ணியிருக்காங்கன்னு மை டாட் யூஸ்டு டெல்.’

    ‘ஒய்?’

    ‘அவங்க ஃபேமிலி ரொம்ப பெரிசு வித் லெஸ் இன்கம். அதனால தான் கிராண்ட் டேட் மும்பைக்கு வந்தாராம். அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. மட்டும் 10 டைப்ரைட்டிங் ரூ ஷார்ட்ஹேண்ட்’

    ‘வாட் ஈஸ் திஸ் ஷார்ட்ஹேண்ட்?’

    ‘எ மெதேட் ஆஃப் ரைடிங் ஸ்போகன் வேர்ட்ஸ் இன் ஷார்ட் சைன் ஃபார்ம். அப்போ அவங்களுக்கு நல்ல டிமாண்ட்..’

    ‘ஓ நல்ல சேலரி கிடைத்திருக்கும்?’

    ‘யூ வில் நாட் பிலீவ். ஸ்டார்ட்டிங் சேலரி ஜஸ்ட் ருபீஸ் 150.’

    ‘வாட்? பெர் டே?’

    ‘நோ யார் மந்த்லி. அண்ட் அவங்க சிலவு போக மாதம் ரூபாய் ஐம்பது ஊருக்கு அனுப்பிடுவாங்களாம்.’

    ‘கிரேட். தென்?’

    தென் ஹி காட் மேரீட் அண்ட் மை ஃபாதர் வாஸ் பார்ன். அவங்க எஞ்னீயிரிங் படித்து யுஎஸ்ல ஸேன்ஹோஸேயில் ஒன் அண்ட் ஹாஃப் யியர்ஸ் இருந்தாங்க. அப்பத்தான் அவங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு. அதாவது இங்கே ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்டதே அப்போ.’

    ‘ஓ மை காட். வேர் வாஸ் ஹி அட் தட் டைம்.?

    ‘வெரி ஃபார். நோ ப்ராப்ளம். அதுக்கப்புறம் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார். அப்புறம் அவருக்கு கல்யாணம். பட் ஹீ குட் நாட் ரிடர்ன் டு யு எஸ்.’

    ‘தென் ஐ வாஸ் பார்ன் என்னை நல்லா படிக்க வச்சார். போஸ்ட் கிராஜுவேட் இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பிஸைட்ஸ் சம் அடிஷனல் க்வாலிபிகேஷன் இன் மேனேஜ்மெனட் அண்ட் ஹியர் ஐ ஆம் வித் யூ ஆல். மை அம்பிஷன் ஈஸ் டு மேக் மை பேரன்ட்ஸ் ஹேப்பி ஹெல்தி அண்ட் கம்ஃபர்டபிள். தட்ஸ் ஆல் அபவுட் மீ. நௌ ரியாஸ் யூ ஸ்டார்ட்.’

    ‘வொன்டர்ஃபுல் அண்ட் இன்டரஸ்டிங். தாமஸ் நீங்க சொல்லுங்க. தென் ஐ வில்.’

    ‘ஓகே.. கொஞ்சம் வாக் போய்விட்டு வரலாம். வெதர் நல்லா இருக்கே. தூக்கம் வரலே. நாளைக்கு எல்லோரும் ப்ரேக் அடிச்சிட்டு ரெஸ்ட் எடுப்போம்.’

    ‘தட்ஸ் நைஸ். இப்போ வாக் போய்க்கிட்டே பேசுவோமே. தாமஸ் சொல்லுங்க.’

    ‘யா நாங்க டெல்லியிலே இருக்கோம். எங்க மதர் கிரிஸ்டியன் பட் டாட் ஹிந்து ஃப்ரம் மும்பை. மை மாம் இன்ஸிஸ்டட் தட் மை டாட் ஆல்ஸோ ஷுட் பிகம் எ கிரிஸ்டியன் பிஃபோர் மேரேஜ்னு கண்டிஷன் போட்டாங்க. ஸோ ஹீ பிகேம் ஜார்ஜ் ஃப்ரம் ஜானகிராம்.’

    ‘அப்படியா?’

    ‘யா டெல்லி ஈஸ் லவ்லி நாட் லைக் தோஸ் டைம்ஸ். எல்லாம் இன்டர் நேஷனல் ஸ்டான்டர்டு. மை டாட் ஒரு ஸ்மால் பிசினஸ்மேன்.’

    ‘ஓ ஆண்டர்ப்ரனர்?’

    ‘யெஸ். அப்பர் மிடில் க்ளாஸ். நல்லா படிக்க வெச்சாங்க. எனக்குப் பிடித்த டெக்னாலஜி. வேலை கிடைச்சுது. வந்துட்டேன். அவ்ளோதான்.’

    ‘ஹேய் வாட் ஈஸ் திஸ்? ஸோ சிம்பிள். உங்களுக்கு எந்த ஊர்?’

    ‘ஓ மை டாட் டோல்டு மீ தட் ஹிஸ் டாட் வாஸ் ஃப்ரம் டமில்நாட்.’

    ‘விச் ப்ளேஸ் இன் டமில் நாட்?’

    ‘மதுரைன்னு தான் சொன்னாங்க.’

    ‘அட என்ன ஒற்றுமை? ரியாஸ் நீங்க கூட சொன்னீங்க இல்ல? ஒங்க கிராண்ட்ஃபாதர் வாஸ் ஃப்ரம் மதுரை?’

    ‘யெஸ். யூ நோ வீ ஆர் கன்வர்டட் முஸ்லிம்ஸ். எங்க மதர் ஹிந்து. பட் எங்க ஃபாதர் முஸ்லிம்.

    ‘அவங்களும் மும்பையிலிருந்துதான் வந்தாங்க. சண்டிகர்ல செட்டில் ஆகிட்டாங்க.’

    ‘ஃபாதர் என்ன செய்றாங்க?’

    ‘லாயர்.’

    ‘நிறைய நடந்துட்டோம். ரூமுக்குப் போவோமா? வீ வில் டேக் சம் ஸ்லீப். நாளைக்குத் தான் ப்ரேக் அடிக்கப் போறோமே. பாக்கி நாளைக்குப் பேசலாம்.’

    ‘தட்ஸ் பெட்டர். கொஞ்சம் டயர்டாகத்தான் இருக்கு.’

    அடுத்த நாள் அவர்கள் எல்லோரும் சூரியனைப் பார்க்கும்பொழுது சூரியன் உச்சிக்கு வந்தாகிவிட்டது.

    குளித்து காபி போட்டு குடித்துவிட்டு வெளியே சாப்பிடக் கிளம்பும் நேரம் சந்திரனுக்கு இந்தியாவிலிருந்து செல் ஃபோனில் அழைப்பு வந்தது.

    ‘ஹலோ சந்திராஇ கண்ணா எப்படிப்பா இருக்கே? நீ இல்லாம ரொம்ப லைஃப்லெஸ்ஸா இருக்குப்பா. நல்லா சாப்பிடுகிறாயா? உடம்பு நல்லா இருக்கா?’

    ‘அப்பா நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க? ரெண்டு பேரும் ‘செக்கப்’ போனீங்களா?’

    ‘எக்சலன்ட். ஒன்லி திங் ஈஸ் வீ மிஸ் யூ டூ மச்.’

    ‘அப்பா ஒங்க ரெண்டு பேரையும் நான் த்ரீ மச் மிஸ் பண்றேன்.’

    ‘டேய் என்ன கடி ஜோக்கா? சரி ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பிடிச்சிட்டியா?’

    ‘யெஸ். அப்பா நானே சொல்லணும்னு இருந்தேன். எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு. ப்யூட்டி ஈஸ் அவங்க ஒருத்தர் தமிழ் கிரிஸ்டியன் இன்னொருத்தர் தமிழ் முஸ்லிம் பட் அவங்க கிராண்ட் பேரண்ட்ஸ் எல்லாம் மதுரை தான்.’

    ‘அப்படியா? இன்டரஸ்டிங்.’

    ‘அப்புறம் ஒரிஜினலி அவங்க ஹிந்துக்கள்.’

    ‘ஈஸ் இட்?. ஓகே ஜாக்கிரதையா இருப்பா. அம்மா தூங்கியாச்சு’

    ‘ஓகே. அம்மாவை எழுப்ப வேண்டாம். என்னுடைய வந்தனம் சொல்லிட்டு கவலைப்படாமல் இருக்கச் சொல்லுங்க. டேக் கேர்.’

    மற்ற இரு நண்பர்களும் அவர்கள் பெற்றோர்களுடன் பேசி நண்பர்கள் பற்றி சொன்னார்கள்.

    எல்லோருடைய பெற்றோர்களுக்கும் நண்பர்களின் தாத்தா பாட்டி மதுரை என்று கேள்விப்பட்டதும் அவர்களைப் பற்றி விபரம் சேகரிக்கச் சொன்னார்கள்.

    முதலில் ரியாஸ் அவன் அம்மாவிடம் பேசினான். ‘அமீ எப்படி இருக்கீங்க’

    ‘ரியாஸ் ரியாஸ்…’

    ‘அமீ ஏன் பேச மாட்டேங்கறீங்க? ரோத்தீ ஹை? (அழுகிறீர்களா?) நல்லா இருக்கீங்களா? வாப்பா எப்படி இருக்காங்க?’

    ‘நஹீ பேட்டா ஒன்ன நினைச்சு கண் கலங்கிட்டேன். இன் ஷா அல்லா நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே? சாப்பாடு கிடைக்குதா? வேலை பிடிச்சிருக்கா? நேத்து தானே பேசினே? உடம்பு சுகமில்லையா?’

    ‘நஹீ அமீ. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். இங்க எனக்கு பெஸ்ட் தோஸ்த் கிடைச்சிருக்காங்க. தமிழ்காரங்க அவங்க பேரண்ட்ஸ் கூட மும்பையிலிருந்தவங்க. ஆனால் அவங்க தாத்தா பாட்டி மதுரை பக்கம் ஏதோ குள்ளிப் பள்ளம்னு சொன்னாங்க. நம்ம தாத்தா ஊரும் மதுரை பக்கம்னு நீங்க சொல்லியிருக்கிங்களே?’

    ‘ஹாங் பேட்டா. அது குள்ளிப் பள்ளம் இல்ல முள்ளிப் பள்ளம். ஆமா. எதுக்கு இந்த கபர் (விஷயம்) எல்லாம் கேக்கிற? அதெல்லாம் வாணாம்ப்பா நானே மறந்துகிட்டிருக்கேன்.’

    ‘சும்மா சொல்லுங்க அமீ. எங்க தோஸ்த்துங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமில்ல?’

    ‘அவிங்களுக்கு எப்படிப்பா தெரியும்? தாத்தா பாட்டி இறந்து 35 40 வருஷம் ஆகிப்போச்சே?’

    ‘அவங்க அப்பா அம்மாவுக்குத் தெரிந்திருக்குமில்ல?’

    ‘டீக் ஹை டீக் ஹை. அவங்க பேர் சங்கரன் கௌரி.’

    ‘தேங்க் யூ அமீ. அப்புறம் எங்க மாமா பேரும் சொல்லுங்க.’

    ‘அதெல்லாம் வாணாம்ப்பா எங்க அண்ணன் ரெண்டு பேரும் என்னய மறந்துட்டாங்கப்பா’ என்ற போது அம்மாவின் துயரம் தெரிந்தது ரியாஸுக்கு.

    ‘நஹீ தோ சோட் தீஜியே அமீ (வேண்டாமென்றால் விட்டு விடுங்கள்). நீங்க வருத்தப் படாதீங்க.’

    ‘நஹீ பேட்டா பெரிய மாமா பேர் சுந்தரம் சிறியவர் ஜானகிராம்.’

    ‘பஹுத் அச்சா அமீ. இது போதும். நான் அப்புறம் பேசுகிறேன். வாப்பாகிட்ட சொல்லுங்க சப் டீக் சல்தா ஹை. குதா ஹாஃபிஸ்’

    ‘ஓகே பேட்டா நல்லா இரு ஜாக்கிரதையா இரு. குதா ஹாஃபிஸ்’

    இந்த விபரங்களைக் கேட்ட தாமசுக்கு ஏதோ பொறி தட்டினாற் போல் இருந்தது. ஏனென்றால் அவன் அப்பா கிறிஸ்தவராக மாறுவதற்கு முன் அவர் பெயர் ஜானகிராம்.

    உடனே அவன் அப்பாவுடன் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொன்னவுடன் அவருக்கு அதிர்ச்சியான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அவரது தங்கை தான் ரியாஸின் அம்மா.

    சந்திரனும் அவன் அம்மாவிடம் பேசியதில் அவன் அப்பாதான் ரியாஸின் பெரிய மாமா சுந்தரம் என்பதும் தெரிந்தது.

    விபரங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து பெற்றோர்களிடம் தெரிவித்ததும் தான் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரே தாத்தா பாட்டியின் பேரர்கள் தான் நண்பர்கள் மூவரும் என்று தெரிந்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கின.

    சகோதர் இருவரும் சகோதரி ஒருவரும் திருமணத்திற்குப் பின் மதத்தால் வேறுபட்டதால் பேச்சு வார்த்தை அறுந்தது. உறவு முறிந்தது. இழந்த உறவு அவர்களின் குழந்தைகளால் ஒன்றாகியது.

    அதைக் கொண்டாட மூவரின் பெற்றோர்களும் அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். எல்லோருக்கும் உலகம் மிகச் சிறியது அதில் வாழும் காலமோ கொஞ்சமே அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது

    இளமைப் பிராயத்தில் பிரிந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் முதுமையைத் தொடும் வயதில் சந்தித்த, அந்த ரத்த பாச பழுத்த இலைகள் (மலர்கள் என்று சொல்லலாம் என்றால் வயதானவர்களாயிற்றே) கண்கள் குளமாகி வார்த்தைகள் குளறி, நெஞ்சங்கள் விம்மின. பிரிந்தவர் கூடினால் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம் அங்கும் பெருகியது.

    50 ஆண்டுகளுக்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெற்றோர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒப்புதலுடனும் ஒப்புதல் இல்லாமலும் காதல் கலப்புத் திருமணங்கள் நடக்கத்தொடங்கிய காலம்.

    காலப்போக்கின் கட்டாயத்தினாலும் சமூக நிர்பந்த்தத்தினாலும் சினிமா தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கத்தினாலும் இம்மாதிரி நிகழ்வுகளை பல பெற்றோர்கள் சங்கடத்துடனும் சிலர் சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொள்ளும் கட்டாய நிலை உருவாகிவிட்டது.

    இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்நிலை இன்னும் மாறுதல் அடையக் கூடும். சாதி மத அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிடுமாதலால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரே சாதி மத வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குள் (அப்படி எங்காவது இருந்தால்) திருமணங்கள் நடைபெற குறைந்த பக்ஷ வாய்ப்புக்கள் மட்டுமே இருக்கும்.

    கலப்பு காதல் திருமணங்கள் ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்திலும் ஏன் சாதி சம்பிரதாயத்தில் ஊறி வெளியே வர இயலாத குடும்பங்களிலும் கூட சகஜமாகி விடும்.

    ஆனால் இந்நிலை வருங்கால சந்ததியினரின் நன்மைக்கா இல்லையா என்பதை காலம் தான் சொல்லவேண்டும். மதச் சார்பில்லா மனிதத்தை நேசிப்பவர்கள் நன்மையே என்று தான் வாதாடுவார்கள்.

    Share