கணினி, ஜகம் நீ
நாகை வை. ராமஸ்வாமி)
அன்றொரு நாள், ஆண்டு 1999, இரவு 1.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஒரே நிசப்தம். ரிடையர் ஆக ஒரு சில மாதங்களே இருந்த அந்த பெரியவரும், அவர் மனைவியும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் மும்பை அபார்ட்மென்டில்.
என்ன? பயந்துவிட்டீர்களா, ஏதோ பயங்கர நிகழ்ச்சி என்று? நோ, நோ.
அந்த நேரத்தில் தான், முதல் முறையாக அமெரிக்கா சென்றிருக்கும் அவர்கள் மகன் நேரடி உரையாடlல் செய்ய அழைப்பு மணி விடுப்பான். அவர்களுக்கு ஒவ்வொரு இரவும், மகிழ்வான சிவராத்திரி தான்.
அப்பொழுது தான் அவர்களுக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஓரளவு தெரியும். அவன் கிளம்புவதற்கு முன் ஒரு பி..சி.. (பர்சனல் கம்ப்யூட்டர்) வாங்கி வைத்து ஆரம்ப விளக்கங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான்.
பத்துதடவை சொன்னாலே புரியாத வயதாகிக் கொண்டிருக்கும் மூளைச் செல்கள் புத்துணர்வு பெற்று புரிந்து கொள்ளவே பத்து நிமிடம் ஆகும். அவன் ஓரிரண்டு தடவை சொல்லிக் கொடுத்துவிட்டு, “யூ நோ அப்பா, யூ ஒன்லி டாட் மீ மெனி திங்ஸ்” என்று குல்லா வைத்துவிடுவான். அதில் மகிழ்ந்து அதிகம் கேட்கக் கூடாது என்ற குல்லாகூடிய தலைக் கனத்துடன் ஓகே என்று சொல்லிவிட்டார்
ஒரு வழியாக கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டார். மகன் சொல்லியபடி, MSN
ஜன்னலைத் திறந்து, காத்திருந்தார்
மணி 2.00 நெருங்கிக் கொண்டிருக்கிறது. திக், திக், ஏன் இன்னும் கூப்பிடவில்லை?
ட்ர்ர்ர்ரிங்……. ட்ர்ர்ரிங்.
அப்பாடா, மணி அடித்தது.
அவன் உருவம் தெரிந்தது.
மனைவி தூக்கக் கலக்கத்தில், ஏதோ பிரமை பிடித்தவள் மாதிரி கனவா நனவா என்ற நிலையில், ஏற்கனவே பெரியதான தன் கண்களை இன்னும் அகல விரித்து கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டு மகன் உருவத்தைத் தடவிக்கொண்டிருந்தாள். பிரிவாற்றாமை கண்களில் நீர் வரச் செய்தது.
வாயை அசைத்து ஏதோ சொல்கிறான். அந்த நாள் மௌனப் படம் பார்ப்பது போலிருந்தது. ஏதும் கேட்கவில்லை.
அவர்கள் இருவரும் ஊரையே எழுப்பி விடுகிறமாதிரி காட்டுக் கத்தலாக “ஹலோ, ஹலோ, ஹலோ” என்று சுமார் இருபது ஹலோ போட்டிருப்பார்கள். அவர்கள் இருந்தது நான்காவது மாடி. அவர்கள் கூப்பிட்ட ‘ஹலோ ஹலோ’க்களில், அந்த இரவு நேரத்தில் சாலையில் போய்க்கொண்டிருந்த சிலர் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு, “அவாஜ் ஆதா ஹை, மகர் கோய் நஹீ, டர் லக்தா ஹை” ‘சத்தம் மட்டும் கேட்கிறது, ஆளையே காணோமே’ என்று பயந்து அலறி அடித்து ஓடுவது நன்றாகத் தெரிந்தது.
அவன் டைப் செய்வது தெரிந்தது. கம்ப்யூட்டரில் அவன் மெசேஜ் தெரிந்தது.
“ஸ்பீக்கர் ஆன்ல இருக்கா?”
“அது எப்படி செக் செய்வது?”
“ஸ்பீக்கரில் பட்டன் இருக்கும். அது ரெட் லைட்டில் இருக்கா, க்ரீன் லைட்டில் இருக்கா?”
“எந்த லைட்டும் இல்லை”
“பட்டன் ஆன் செய்தாச்சா?”
“எப்படி செய்வது?”
“அப்பா…அது ஒரு ப்ரஸ் பட்டன் தான். சைடில் இருக்கும். ஜஸ்ட் ப்ரஸ் இட். நான் சொல்லியிருக்கிறேனே?”
“இரண்டு நாள் தான் பாடம் எடுத்தாய், மறந்துவிட்டது கண்ணா, கோபிச்சுக்காதே. ஒன் மினிட். ஓகே. ஆன் ஆகிவிட்டது. க்ரீன் லைட்.”
“இப்போ பேசலாம். அம்மா எங்கே?”
“இதோ ரெண்டு பேரும் தான் இருக்கோம். உனக்கு தெரியலையா?”
“சரியா தெரியலை. கேமிராவை சரியா ஃபோகஸ் செய்யணும்.”
“இதோ ஒன் மினிட். ம்..ம்.. அட்ஜஸ்ட் செஞ்சாச்சு.”
“சரியா அட்ஜஸ்ட் செய்யலை. ரூம் சீலிங் தான் தெரிகிறது. இன்னும் சற்று கீழே ஃபோகஸ் செய்யவும்.”
தமிழ் அரைகுறையாகப் படித்திருந்ததால், செய் என்றோ செய்யுங்கள் என்றோ சொல்வதற்குத் தெரியாது. செய்யவும், பார்க்கவும், என்றுதான் சொல்வான்
“ஓகே, இப்போ”
“அப்பா….இப்போ தரை தெரிகிறது.”
“ஓகே, இப்போ?”
“ஓகே. நீங்க இரண்டு பேரும் பாதி பாதி தான் தெரிகிறீங்க>”
“இப்போ?”
“குட். சரியாக இருக்கிறது.”
“ஓகே. சொல்லு. எப்படியிருக்கே”
“நான் ஓகே. நீங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சரி. எனக்கு டைம் ஆகிவிட்டது. நாளைக்கு இதே நேரத்தில் இதே சேனலில் பார்க்கலாம். அர்ஜன்ட் மெசேஜ் இருந்தால் மட்டும் மெயில் செய்யவும். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் செல்லம்…டிங் டாங்..”
“இருப்பா இன்னும் பேசவே இல்லை. அதுக்குள்ளே ஆஃப் செய்யாதே.”
அவன் கேட்டால் தானே. ஆஃப் செய்துவிட்டான். ம்..ம்.. இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியது தான்.
அடுத்த நாள் இரவு.
அவன் சொன்னமாதிரி செய்து ரெடியாகிவிட்டோம்.
இதோ வந்துவிட்டான்.
“ஹலோ..ஹலோ”
“சொல்லுப்பா..கேட்கிறதா..”
“நீங்கள் சொல்வது கேட்கவில்லை. நான் பேசுவது கேட்கிறதா?”
“கேட்கிறது”
“ஓகே, வெயிட். ஒயர் சரி செய்யவேண்டும். பார்க்கிறேன்.”
“அந்த மௌஸ் இருக்கு பாருங்கள். அதை மேல் உள்ள பாரில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்று இருக்கும். அதில் நகர்த்தி க்ளிக் செய்யுங்கள்.”
தலை சுற்றியது அவர்களுக்கு.. ஏற்கனவே கொஞ்சம் வெர்டிகோ ப்ராப்ளம்.
“இரு, இரு. மெதுவாக சொல்லு. மௌஸா, எலியா? நான் எங்கே போவேன் இப்போ எலி பிடிக்க, என்ன சொல்றே?”
“அப்பா, கீ போர்ட் கிட்ட, கம்ப்யூட்டர் கீழே ஒரு பெரிய ஹார்டுவேர் பெட்டி இருக்கிறது, பாருங்கள், அதிலேருந்து கனெக்ட் செய்த ஒயரிலிருந்து ஒரு சின்ன எலி மாதிரி கைக்கு அடக்கமான நகர்த்தக்கூடிய டிவைஸ் பேடின் மேல் வைத்திருக்கிறது, பார்க்கவும்.”
“ஆமாம். அதுதான் மௌஸா?. ஓகே. அதை என்ன செய்யவேண்டும்?”
“அதை லேஸாக நகர்த்தினால், கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஒரு அம்புக்குறி நகரும்.”
“ஐ. ஆமாம். நகருகிறது. ஆனால், அம்புக்குறி எங்கோ போகிறதே?”
“மெல்ல நகர்த்துங்கள். அது எங்கு இருக்கிறதோ அங்கே அந்த மௌஸில் மேற்புரத்தில் உள்ள இடப்பக்கத்தில் உள்ள பகுதியை அமுக்குவதற்குத்தான் க்ளிக் செய்வது என்று பெயர்.”
“நீ நன்றாக சொல்லிக் கொடுக்கிறாய். பேசாமல் கம்ப்யூட்டர் க்ளாஸ் ஆரம்பித்து இங்கேயே இருந்திருக்கலாம் போலிருக்கிறது. எங்களுக்கு டென்ஷன் இருக்காது.”
அவன் சொன்னபடியே செய்தார். ஆனால் மௌஸின் வலப் புறத்தை க்ளிக் செய்துவிட்டார். ஒரு சிறிய ஜன்னல், “cut, copy, paste……” என்று வந்தது. அவனிடம் சொன்னார். அவன் சிரித்தான்.
“அப்பா, அது இல்லை, இடது பக்கப் பகுதியை க்ளிக் செய்யவும்” என்றான்.
செய்தார். அம்புக் குறி வந்தது ஆனால் எங்கோ போய்விட்டது சொன்னார். “அம்புக் குறியைக் காணோம்.”
“வெயிட். ஜஸ்ட் மூவ் த மௌஸ்”. மூவினார். வந்தது.
“என்ன விசேஷம் செல்லம்? எப்படி இருக்கே. வேலை பிடித்திருக்கிறதா? கீப் யுவர் பாஸ் ப்ளீஸ்ட் வித் யுவர் பெர்ஃபார்மன்ஸ், ஓகே?” அவருக்கு அவன் வேலை கவலை. அவர் காலத்திய தந்திரங்கள் தான் தெரியும். அவன் அம்மா, “நல்லா சாப்பிடுப்பா. ஏதாவது செய்யத் தெரியவில்லைனா, போனில் கேளு.”
“ஓகே, ஓகே, டைம் ஆகிவிட்டது. இரண்டு நாள் லீவு. திங்கட்கிழமை பார்க்கலாம்”
“அடாடா, என்னடாது, ஒண்ணுமே பேசவில்லை. அதுக்குளே டைம் ஆகிவிட்டது, இன்னும் இரண்டு நாள் வேற லீவு என்கிறாய்?” அவர்கள் ஆதங்கம்.
ராத்திரி பூரா சிவராத்திரியாய் விழித்திருந்து, கண்கள் சிவக்க, உடலில் சூடேறி, ஒவ்வொரு நாளும் தலையிலும் கண் இமைகளிலும் வேப்பெண்ணெய் தவிர, யார் யார் என்னென்ன சொல்கிறார்களோ அத்தனை எண்ணெய்களையும் தடவி, ஒரு நாள் அந்த எண்ணெய் கீழே கிரானைட் தரையில் கொட்டியது தெரியாமல் தடாலென்று வழுக்கி விழுந்து ஒரு நாள் பூரா ராமர் வில் மாதிரி ஆனது ஒரு எண்ணெய் காண்டம்.
அமெரிக்காவிலிருக்கும் மகனுடன் பேசுகிறோம் பேர்வழிகள் என்ற பெயரில் தினமும் இரவில் இரண்டு மூன்று மணி நேரம் இன்டர்நெட் ஆன் செய்து வைத்ததில் மாதாந்திர நெட் கனெக்ஷன் பில்லும், அவனைக் கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டே கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்யாத போதெல்லாம், செல் ஃபோனிலும் பேசிக்கொண்டிருந்ததது எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 2500 ரூபாய் மாதம் கட்டவேண்டியிருந்தது ஒரு புராணம்.
இம்மாதிரியான பல இரவுகள் கடந்த பின்தான் ஓரளவு எந்த கோளாறில்லாமலும் அவர்களால் மகனுடன் கணினி மூலம் உரையாட முடிந்தது,.
அவராவது ஏதோ தடவித் தடவி கம்ப்யூட்டர் ஓரளவு கற்றுக் கொண்டுவிட்டார். ஆனால் அவர் மனைவிக்கு இன்னும் புரியவில்லை. கொஞ்ச நேரம் அதிகம் உட்கார்ந்தால், “போதும் எழுந்திருங்க, அங்க வலிக்கிறது, இங்க வலிக்கிறதுன்னு ஒத்தடம் கொடு என்பீங்க.” என்று அலாரம் கொடுப்பாள்.
.அவனிடம் கம்ப்யூட்டரில் ஏதாவது புரியவில்லை என்று கேட்டால், “யூ நோ அப்பா, இட் ஈஸ் எ சைல்ட்ஸ் ப்ளே ஃபார் யூ. ஒங்க ஆபீசிலேயே ட்ரெயினிங் கொடுத்திருக்காங்களே. யூ ஆர் எ கம்ப்யூட்டர் savvy now.” என்பான்.
“அது என்னப்பா கம்ப்யூட்டருக்கு பூட்டு, சாவி எல்லாம் இருக்கா? எனக்குத் தெரியாதே” என்று ஜோக்கடிப்பார்.
அவர் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் எடுத்ததே ஒரு கதை. கம்ப்யூட்டரைஸ் செய்யும் நோக்கத்தில், அவர் ஆபீசில் எல்லோருக்கும் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கொடுத்தார்கள். அவருக்கும் இனிமேல் கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம், ரிடையர் ஆகப் போகும் சமயத்தில் என்று நைஸாக தப்பிக்கப் பார்த்தார். ஆனால் அவர் எம்.டி. விடுவதாக இல்லை. வீட்டிற்குப் பக்கத்திலேயே ஏதாவது ட்ரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் கம்பெனி சிலவில் கற்றுக் கொள்ளும்படி உத்திரவு.
சேர்ந்தார், வேறு வழி.?
.ஒரு நாள், ஒரு 9 வயதுக் குழந்தை சேர்ந்தது. அவரைப் பார்த்து, “ஹை, தாத்தா, நமஸ்தே” என்றாள்.
“காட் ப்ளெஸ் யூ”. என்றார்.
“ஏன், நீங்களும் ப்ளேஸ் பண்ணலாமே?” என்றாளே பார்க்கலாம்.
“ஓகே, ஐ ஆல்ஸோ ப்ளெஸ் யூ”
“தேன்க் யூ. நீங்க சொல்லிக் கொடுக்கிறீங்களா, கத்துக்கறீங்களா?”
அவருக்குக் கொஞ்சம் வழிய ஆரம்பித்தது.
“சும்மா, டைம் பாஸ் குழந்தே, வீட்டில் கம்ப்யூட்டர் இல்லே, அதான்
மெயில் அனுப்ப வந்தேன்” சமாளிக்க முயற்சித்தார்.
“பின்ன, வேறே என்னமோ தப்புத் தப்பா செய்யறீங்க?”
“உனக்கு ஆபரேட் செய்ய தெரியுமா?”
“ஓ, நல்லாத் தெரியுமே, நான் கூட மெயில் செக் செய்யத்தான் வந்தேன்.”
“அப்போ இந்த மெயில் எப்படி ஓபன் செய்யறதுன்னு சொல்றாயா?”
“அப்படி வாங்க வழிக்கு, உங்களுக்குத் தெரியலைன்னு கண்டுபிடிச்சுட்டேன்.”
அந்த வாண்டிடமிருந்த்தும் கற்றுக்கொண்டதற்கு சற்று தயக்கம் தான். ஆனாலும் கூச்சத்தைப் போக்கிக் கொண்டார், ஆர்வ மிகுதியில்.
ஒரு மாத டிரெயினிங். ஓரளவு தான் புரிந்தது. எக்ஸெல், ஈமெயில் அனுப்புவது போன்ற சமாசாரங்களில் தடுமாற்றம் தான்.
மகனிடம் தெரிந்தாலும், தெரியாது என்று சொல்லி, அவனிடமிருந்து கற்றுக் கொள்வது போல் நடிப்பதில் அவருக்குப் பெருமை, சொல்லிக் கொடுப்பதில் அவனுக்கும் பெருமை. . ஆனாலும் சில நுணுக்கங்கள் புரியத்தான் இல்லை.
‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்பது அடிக்கடி ஞாபகப்படுத்தும்.
ரிடையர் ஆகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இப்பொழுது மகன், கணினி தெரிந்த மறுமகளுடன் வசிப்பதால், பிரச்சினைகள் அதிகம் இல்லை. இருந்தாலும், அவன் கணினி மொழியில் ஏதாவது சொல்லிவிட்டால், தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் செய்கிறார். இப்பொழுது, கணினி விஷயத்தில், அவர், பாதி கிணறுக்கு மேல் தாண்டிய மாதிரி தான். அவரை கணினி savvy என்று சொல்லமுடியாவிட்டாலும், கணினி sav என்று சொல்லலாம்.
இந்த கணினி என்று ஒன்று கண்டுபிடித்திருக்கிறார்களே, அது, ஒரே மாயா ஜால உலகம். அதன் முன் உட்கார்ந்து விட்டால், எது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம், பொழுது போவதே தெரியாது. அது தவிர, அயல் நாடு என்றாலே, விமானப் பயணம் என்றாலே எதுவுமே தெரியாத நடுத்தர வகுப்பினருக்கு ஒரு வரப் பிரசாதம். அதனால் தான், அந்தப் பெரியவரும், இளைய ராஜா பாடிய “ஜனனி, ஜகம் நீ..” என்ற பாட்டை சற்றே மாற்றி, “கணினீ, ஜகம் நீ” என்று கணினி முன் உட்காரும்போதெல்லாம் பாட ஆரம்பித்துவிடுவார்.
கம்ப்யூட்டரில் இதை டைப் செய்வதற்குள், இதோ, அவரது முதுகு அலாரம் அடிக்கிறது, (பெட்டர் (?) ஹாஃப்) அலாரமும் அடிக்கிறது.
Excellent naration .Happy and proud o see all your works in a famous e-magazine like vallamai..