Tag: மீனாட்சி பாலகேணேஷ்

  • பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஐவகை நிலங்கள்

     

    மீனாட்சி க., முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)

    நெறியாளர்- முனைவர் ப. தமிழரசி., பேராசிரியர் மற்றும் தலைவர்,

    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்- 21.

     

    முன்னுரை:

     

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் இவை பாடும் புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும்.

    தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது.

    ‘மாயோன் மேய காடுறை உலகமும்

    சேயோன் மேய மைவரை உலகமும்,

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’ 1

    கருத்து விளக்கம்:

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கே உரிய ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகையும் புகழ்ந்து இயற்றப்பட்ட பல பாடல்களை அனைத்துப் பருவங்களிலும் இயற்றிய புலவர்களின் கற்பனைக்கேற்பக் கொண்டமைந்து விளங்குகின்றன. இலக்கியச் சுவையையும் மேம்படுத்துகின்றன. பாட்டுடைத்தலைவன் / தலைவியின் நாட்டின் வளம் இந்த ஐவகை நிலங்களின் செழிப்பாலும் உணரப்படும்.

    முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் பெரிதளவில் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத்தலைவன், தலைவியின் நாட்டு வளத்தைப் போற்றிவரும் பாடல்களில் வயல்சூழ்ந்த மருதநிலம், கடற்புறமான முத்துக்கள் விளையும் நெய்தல்நிலம் ஆகியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன. முல்லை, பாலை நிலங்கள் தொடர்பான செய்திகள் மட்டும் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. முல்லைநிலக் கடவுளான திருமால் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களிலும் அந்நிலம் பற்றிய வருணனைகளும் பாடல்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிஞ்சிநிலம் பற்றிய பாடல்:

    குறிஞ்சிநிலத்தின் கடவுள் சேயோனான குமரப்பெருமான். அவன் மீதான பகழிக்கூத்தனாரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்று ‘மலையும் மலைசார்ந்த இடமு’மான குறிஞ்சிமலைப்புறத்தின் அச்சமூட்டும் பேரழகை விவரிக்கின்றது. குறிஞ்சிநிலம் பற்றிய நயங்களும் மிகச்சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.

    நெடிய மரங்கள் கொடிகளுடன் பின்னிப்பிணைந்து அடர்ந்து வளர்ந்துள்ளமையால் பகல்போதிலும் இருள் சூழ்ந்திருக்கும் அச்சம்தரும் மலைப்பிரதேசம். அந்த இருளை நீக்கவும் இயற்கையே வழிசெய்கிறது. அங்குள்ளதான கொடிய நஞ்சினை உடைய ஒரு பாம்பு தன் வாயை அகலத்திறந்து மாணிக்கக் கல்லை உமிழ்கின்றது; அந்த மாணிக்கக்கல் ஊழிக்கால இருள்போன்ற கொடிய இருளை நீக்குகின்றதாம்.

    மலையில் வாழும் குறவர்கள் உணவுக்காகத் தினை பயிரிடுவர். அதுவே அவர்களின் முக்கிய உணவாகும். அதற்கு எருவாக அவர்கள் பயன்படுத்துவது கவரிமானின் முலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் பால். அது, சூரியஒளியினால் காய்ந்து, பாறைகள்மீது படர்ந்துள்ளது; சூரிய ஒளியில் அது வெள்ளித்தகடு போன்று பளபளவென்று ஒளிவீசுகின்றது. மலைவாழ் குறவர்கள் அதனை எடுத்துத் தங்களது தினைப்பயிருக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்களாம்.

    இக்குறிஞ்சி நிலத்தில் வாழும் கருநிறம் கொண்ட குறமகளிரின் இன்றியமையாத வேலை, தினைப்பயிரைத் தின்னவரும் கிளிகளையும் மற்ற பறவைகளையும், ‘ஆலோலம்’ எனக்கூறி கவண் எறிந்து ஓட்டுவதாகும். சிலபொழுது அவர்களின் கவனம் பறவைகளை விரட்டுவதில் ஈடுபடுகிறது; இன்னும் சிலபொழுது தங்கள் குலமகளான வள்ளியின் உள்ளம் கவர்ந்த குமரனையும் அவன் திருவுருவையும் எண்ணி நெகிழ்ந்து கனிகின்றது. இவ்வாறு இருவிதமான எண்ணங்களும் மாறி மாறி அவர்களுடைய உள்ளங்களில் ஊசலாடுகின்றன.

    இவ்வாறெல்லாம் குறிஞ்சி நிலவளம் கூறிப் பின்பு குறமகளிரின் செம்மைபாய்ந்த கண்களைக் கொள்ளைகொண்ட முருகப்பெருமானைத் தலையசைத்து, திருவாய் திறந்து சில சொற்களைக்கூறிச் செங்கீரையாட வேண்டுகிறார் பகழிக்கூத்தனார்.

    ‘வெங்காள கூடவிட மொழுகுபற் பகுவாய்

    ………………………………….

    மங்காம லிரசதத் தகடெனச் சுடர்விட

    மலைக்குறவர் கண்டெடுத்து

    வண்டினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற

    மகளிருள மூசலாட…….’ 2

    முல்லைநிலம் பற்றிய பாடல்:

    சிதம்பர அடிகளார் இயற்றியுள்ள முருகப்பிரானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிறுபறைப் பருவப் பாடலொன்று முல்லைநிலங்கள் செறிந்த திருப்போரூரின்கண் உள்ள பலவிதமான முல்லைநிலக் காட்சிகளைக் கூறி கருத்துக்கு விருந்து படைக்கின்றது.

    அழகான திருப்போரூர், முல்லைநிலங்கள் செறிந்தவூர். முல்லைநிலக்கடவுள் மாயோன் எனப்படும் திருமாலாவான். இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. தயிரின் முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள், அவர்கள் தயிர் கடையும் கலங்களில் முழக்கும் ஒலி ஒருபுறம் கேட்கிறது; பசுக்கூட்டங்கள் தம் கன்றுகளை நினைத்தமட்டிலேயே அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச் சுரந்து கன்றுகளை எண்ணிக் கத்தும் முழக்கமும் மிகுதியாகக் கேட்கின்றது.

    இசையமைந்த துளைகளினூடே விரல்களைப் பொருத்திப்பிடித்து தொறுவர்கள் எனப்படும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழலோசையும் கேட்கின்றது. பலவிதமான நிறங்கள் கொண்ட காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக் கூவும் ஓசையும் எழுந்தவண்ணம் உள்ளது.

    செழித்து விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய இனிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியற்போதில் எழும் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இப்போரூரின் முல்லைநிலங்கள்.

    அம்முல்லை நிலத்தில் வாழ்பவனும் குளமலி கண்ணனாகிய சிவன் தந்தருளியவனுமான முருகப்பெருமானை, “முருகா, நீ சிறுபறை கொட்டுக! முத்தமிழினை மெத்த வளர்த்தவனே! சிறுபறை கொட்டுக!”- என்பது பாடற்பொருள்.

    ஒருவரைப் பற்றிக் கூறும்போது அவர் புகழ்வாய்ந்த குடும்பப் பின்னணி உடையவராயின் அவர் பெற்றோர், மற்ற உறவுமுறைகளைக்கூறி அவரைப் பெருமைப்படுத்துவது வழக்கம். அதுபோன்றே இப்பாடலில் முருகனின் தந்தையாகிய சிவபிரானின் புகழையும் விளக்கியுள்ளார். குலம்- குடிப்பெருமை கூற ‘குளமலி கண்ணன் தரும் இறை’ எனச் சிலசொற்களையே கூறுகிறார். குளம் = நெற்றி; அலிகம்- நெற்றி. நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமான் தந்தருளும் முருகக்கடவுள் என்கிறார். வேறென்ன பெருமை வேண்டும் முருகனுக்கு? தனது பெற்றோரைப்போல் அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் வளர்த்து அருளுபவன் அல்லவா?

    அளைகடை முடைகது வியதளிர் வடிவத்

    தாய்ச்சியர் மத்தொலியும்

    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி

    ஆன்நிரை கத்தொலியும்

    ……………………………………

    …………………………முல்லைக்

    குளமலி கண்ணன் தருபோ ரூரிறை

    கொட்டுக சிறுபறையே.’ 3

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஒரு இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.

    புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது.

    மருதநிலம் பற்றிய பாடல்:

    குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்து முதல் பாட்டிலேயே மருதநிலத்துச் செய்தியைக் கூறுகிறார். காக்கும் தெய்வமான திருமாலின் பெருமையைக் கூறும்போது வயல்கள் சூழ்ந்த மருதநிலத்து வனப்பை விவரிக்கிறார். மருதநிலத்துக் கடவுள் வேந்தன் எனப்படும் இந்திரனாவான். மேலும் அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் தாமரையில் உறைபவர்கள். தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.

    திருமால் தமிழ்மீது கொண்ட காதலால் தமிழ்பாடும் புலவனின் பின்னால் தனது பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு விரைவதனை அழகுற விவரிக்கிறார். காதல்மனையாளை விட்டுப்பிரியத் திருமாலுக்கு மனமில்லை. ஆகவே வயலில் பூத்து நிற்கும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவளை அந்த வழுக்கும் சேறுநிறைந்த வயலில் தனது கையால் அணைத்தபடி அவள் விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டு உடனழைத்தவாறு தமிழ்ப்புலவரின்பின் விரைகிறான். மிக அழகான கற்பனை!

    கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்

    கலுழிபாய்ந் தளறுசெய்யக்

    கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்

    கையணை முகந்துசெல்லப்

    பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்

    பணைத்தோள் எருத்தலைப்பப்

    பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற

    பச்சைப் பசுங்கொண்டலே.’ 4

    ‘கையணை முகந்து செல்ல,’ எனும் சொற்கள் மிகவும் நயமாக, ‘கையால் அணைகொடுத்து, அவளை அன்போடு தழுவி அணைத்து நடத்திச் செல்ல,’ எனும் பொருள்படும். மிக நுட்பமான உய்த்தறிதலின் ஆளுமை நிரம்பிய கவிதையிதுவாகும்.

    நெய்தல்நிலம் பற்றிய பாடல்:

    திருச்செந்தூர் தலம் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆகவே, பகழிக்கூத்தனார் தாமியற்றிய பிள்ளைத்தமிழில் கடல்சார்ந்ததாகிய நெய்தல் நிலத்தினைப் பலவிதமாகப் போற்றியுள்ளார். நெய்தலின் கடவுள் வருணனாவான்.

    ‘திரையெறியு மலைவாய்’ – அலைகளை வீசி எறியும் திருச்செந்தூர் (திருச்சீரலைவாய் என்பது இதன் பெயர்),

    ‘வெள்வளை தரும் தண்தரள மலைகொண்டு கொட்டு நகராதிபா’- வெண்மையான சங்குகள் ஈனும் குளிர்ச்சி பொருந்திய முத்துக்களை மலைபோல கடலலைகள் கொண்டு கொட்டும் நகருக்கு அதிபனே!’,

    ‘குரைகட லலையெறி திருநக ரதிபதி’- ஓசையிடும் கடல் அலைகளை வீசியெறியும் திருநகருக்கு அதிபதி,

    ‘அலையாழிசூழ் திருச்செந்தூர் வடிவேலன்.’

    ‘கழிதொறும் கயல்குதிக்கத் திரைவாய் முழங்கும் திருச்செந்தில் வேலவனே!’ (கழி- உப்பங்கழி- நெய்தலின் அடையாளம்) என்பன சில உதாரணங்கள்.

    முத்தப்பருவத்துப் பாடலில் கூறுகிறார்: “குமரனே! உனது அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் கடலலைகள் முத்துக்களை வாரி வாரி வீசும். அலைகள் விடாது ஒலியெழுப்பும். கடலிலும், கடற்கரையிலுள்ள உப்பங்கழிகளிலும், அவற்றில் மலர்ந்துள்ள கழுநீர் மலர்களிலும், அக்கழிகளில் உண்டாகும் நீர்ச்சுழிகளிலும், கடற்கரையில் வளர்ந்துள்ள அடர்ந்த தாழைப் புதர்களிலும், இன்னும் பல இடங்களிலும் சங்குகள் வருந்திப்பெற்ற கோடிக்கணக்கான முத்துக்களைக் காணலாம். அத்தகைய வளமுடைய திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் பெருமானே! எமக்கொரு முத்தம் தந்தருளுக,” எனத் தாய் வேண்டுவதாக அமைந்த ஒரு இனிய பாடல்.

    கத்துங் கடலி னெடும்படவிற்

    கழியிற் கழுநீ ரிற்சுழியிற்

    கானற் கரையிற் கரைதிகழும்

    கைதைப் பொதும்பிற் ………

    …………………………………….

    முத்தம் சொரியும் கடலலை’வாய்

    முதல்வா முத்தம் தருகவே’5

    பாலைநிலம் பற்றிய பாடல்:

    திருவிரிஞ்சை முருகன் பி. த. நூலில் ஒரு சப்பாணிப் பருவப்பாடல், ‘பொய்யாமொழிப்புலவர் மதுரையில் சங்கம் புரக்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சியைக் கூறுகின்றது. பாலைநிலத்துத் தெய்வம் கொற்றவை ஆவாள்.

    துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடமாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவேனோ?” எனக்கூறி மறுத்துவிட்டார். இப்புலவர் ஒருமுறை மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் காக்கவேண்டிப் புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றார். இப்படிப்பட்ட வாய்ப்பிற்காகக் காத்திருந்த முருகன், அவர் செல்லும் காட்டுவழியில் ஒரு வேடச்சிறுவனாக உருக்கொண்டு புலவரை வழிமறித்தான். “நானொரு புலவன்,” எனப் பயந்தவண்ணம் கூறிய புலவரிடம், ஒரு கவிதை பாட வேண்டினான் கள்ளச்சிறுவன். ‘நமது உயிருக்கு இவனால் ஆபத்தில்லை; தமிழின் அருமை உணர்ந்த கள்ளன் போலும்!’ என மகிழ்ந்த புலவரிடம், “என்மீது சுரம்போக்காக ஒரு கவி பாடுக,” என்றான் வேட்டுவச் சிறுவன். “உன் பெயரென்ன அப்பா?” எனக்கேட்ட புலவரிடம், முன்பு அவர் கூறியதனை நினைவில் கொண்டு, “என் பெயர் முட்டை,” என்றான் குமரன். புரிந்துகொள்ளவில்லை புலவர் பெருமகனார்!

    சுரம்போக்குத் துறையாக ஒரு பாடலைப் பாடினார்.

    ‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே

    என்பேதை செல்லற் கிசைந்தனளே- மின்போலு

    மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்

    கானவேள் முட்டைக்குங் காடு.’ 6

    வேடச்சிறுவனாக வந்த முருகன் இதில் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறினான். வெட்டிப்போட்டாலும் காயாத வேலமுள் நாள்பட்டுக் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது. அப்படிப்பட்ட முள் கள்ளி வெந்து பொறியாகப் பறக்கும் பாலையில், பச்சையாக வேகாமல் இருந்து காலில் தைக்கும் எனக்கூறுவது பொருந்துமோ? (காய்ந்து உலர்ந்து வெந்தமுள் குத்தவியலாது) இப்படிப்பட்ட பொருட்குற்றம் உடைய பாடலைப் புலவராகிய நீர் பாடலாகுமோ? என்றான் வேடச்சிறுவன். பொய்யாமொழியார் பேச்சற்றுத் திகைத்து நின்றார்.

    வரகவி மார்க்கசகாயதேவர் தாமியற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

    முருகன் தானொரு பாடலைப் பொய்யாமொழியார் மீது பாடி, பெட்டை- முட்டை பற்றிய நினைவினைப் புலவருக்கு வரச்செய்தான்.

    புலவர் ‘நீ யார்?’ என வினவ, தன் அழகுத் திருவுருவைக் காட்டி, புலவரின் நாவில் தன் வேல்கொண்டு பொறித்து மறைந்த “முருகப்பெருமானே! அறிவிற் சிறந்த சதுரனே!” என முருகப்பிரானை வாழ்த்தி அவனைச் சப்பாணிகொட்ட வேண்டுகிறார் புலவனார்.

    ‘பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்

    புரக்கவெழு நாள்மறவனாய்

    புறவற வளைத்தெனது பெயர்முட்டை பாடெனப்

    பொன்போலு மென்றுபாட

    வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி

    ளம்பென…’7

    முடிவுரை:

    இவ்வாறு நுணுக்கமான பல தமிழ்நயங்களை பிள்ளைத்தமிழ்க் கவிஞர்கள் தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளமை நயந்து நோக்கத்தக்கது.

    ______________________________________

    ஆய்வுக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

    1. தொல்காப்பியம்- அகத்திணையியல் – பொருளதிகாரம்

    2. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்

    3. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் – சிதம்பர அடிகள்

    4. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்

    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

    6. தனிப்பாடல்- பொய்யாமொழிப்புலவர்

    7. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் – வரகவி மார்க்கசகாயதேவர்

    ************

    Share
  • மீன்- கயற்கண்ணி- உத்தர கோசமங்கை

    மீனாட்சி பாலகணேஷ்

    வேத விற்பன்னர்கள் அமுதமென வேதத்தினை சுருதிசுத்தமாக ஓதியருளுகின்றனர். ஓமப்புகையும் தீச்சுவாலைகளும் வானளாவ எழுந்து திகழ்கின்றன. சிவபிரானும் பார்வதி அன்னையும் அருவமாக எழுந்தருளி அந்த அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு மக்களை ஆசிர்வதிக்கின்றனர். வேதகோஷத்தின் இனிமையில் தோய்ந்த அன்னை உமையவள் ஐயனை நோக்கிக் கேட்கிறாள்: “ஐயனே! இவ்வேதத்தின் உட்பொருள் யாது? தேவரீர் எனக்கு விளக்கியருள வேண்டும்,” என்கிறாள்.

    முடிவில்லாத சொக்கவைக்கும் பேரழகனும் ஆலவாய் நகரின் இறைவனுமாகிய சோமசுந்தரக்கடவுள், அனைத்துலகங்களையும் கருப்பெறாதீன்ற கன்னியாகிய அங்கயற்கண்ணி அம்மையுடன் ஏகாந்தமான ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு அவளுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கத் துவங்குகிறான். என்ன காரணத்தினாலோ உமையவளின் முழுக்கவனமும் அவ்வமயம் அதனைக் கேட்பதில் செல்லவில்லை. மிகவும் முக்கியமானதொரு விஷயத்தை ஒருவர் நமக்குக் கூறும்போது நாம் அதனில் கருத்தைச் செலுத்த வேண்டுமல்லவா? வேதங்கள் அதிரகசியமானவை. அவற்றைக் கருத்தொருமித்துக் கேளாமல் அம்மை அவ்வாறு கருத்தைச் சிதறவிட்டதனால் சிவபிரானுக்குச் சினம் மூளுகிறது.

    “நீ அஞ்ஞானம் நிறைந்த உள்ளத்து மகளிர் போன்று நம்மிடத்துப் பராமுகம் கொண்டு சிரத்தையின்றி இவ்வேதத்தைக் கேட்டாய். ஆகவே மன்னிக்கவியலாத தவறு செய்தவளாவாய். இதனால் (நோன்பும் அறனும் இன்றி) தருமநிலையில் ஒழுகாமல் மீன்களைப் பிடித்துக் கொலைபுரியும் செயலைச் செய்தலால் இழிந்தவர்கள் என்று கருதப்படும் பரதவர் குலத்தில் அவர்கள் மகளாகப் பிறக்கக் கடவாய்,” எனச் சாபமிட்டார்.

    rajam_med

    இங்கு ஒன்றினை நோக்க வேண்டும். இறைவன் சொற்களில் பரதவர் குலம் இழிந்தது என்று கூறியது எதனால்? அவர்கள் பிறப்பால் இழிந்தவரல்லர். செயலால் மட்டுமே இழிந்தவர்கள். இறைவனின் படைப்பில் மீன்களும் ஓர் உயிரினமே எனும் எண்ணமின்றி, நோன்பு- அறமாகிய தருமம், அருள் எண்ணம் ஆகியன இன்றி அவைகளைப் பிடித்து உண்பதற்காகக் கொலை செய்வோர் அவர்கள். இதனாலேயே அவ்வாறு கூறினார்.

    ‘விரதமு மறனு மின்றி மீன்படுத் திழிஞ ரான

    பரதவர் மகளா கென்று பணித்தனன்…’ என்பார் பரஞ்சோதி முனிவர்.

    (திருவிளையாடல் புராணம்)

    அம்மை பதைபதைத்து, “நான் உம்மைப்பிரிந்து இருப்பது எப்படி? இதற்கென்ன விமோசனம்?” எனக்கேட்க, இறைவனும், “நீ பரதவர் மகளாகப் பிறந்து வாழுங்காலை நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம்,” எனக் கூறியருளினார்.

    அன்னையைக்காண ஓடோடி வருகிறான் விநாயகப்பெருமான். இதனைப் பற்றியறிந்த அவர் இவ்வேத நூல்களால் தானே இந்நிகழ்ச்சியனைத்தும் நடைபெற்றது?” எனச் சினங்கொண்டு அங்கிருந்த சுவடிகளையெல்லாம் துதிக்கையால் அள்ளி ஒருசேரக் கடலில் வீசியெறிந்தான். கிரவுஞ்சமலையைப் பிளக்க வேலேறிந்த முருகக்கடவுளும் தன் தந்தையின் திருக்கரத்திலிருந்த சிவஞானபோதம் எனும் நூலைப் பிடுங்கிக் கடலில் வீசினான். அன்னையை ஓடோடிச் சென்று அன்புமீதூர அணைத்துக்கொண்டான் முருகன்.

    வரைபக வெறிந்த கூர்வேல் மைந்தனுந் தந்தை கையில்

    உரைபெறு போத நூலை யொல்லெனப் பறித்து வல்லே

    திரைபுக வெறிந்தான்…..’ (திருவிளையாடல் புராணம்)

    இப்போது சோமசுந்தரக்கடவுள் நந்திதேவரைப் பார்த்துச் சினம்கொண்டார்.

    “நாம் உமையுடன் தனித்து உரையாடும்போது நீ எவ்வாறு குழந்தைகளை உள்ளே புக அனுமதித்தாய்? அதனால்தானே தீங்கு விளைந்தது. ஆதலால் நீ சுறாமீன் வடிவெடுத்து கடலில் கிடந்துழலக் கடவாய்,” எனச் சபித்தார்.

    வேழமுகனைச் சபித்தால் அச்சாபத்தின் வலிமை தன்னையே வந்தடையுமென்றெண்ணி அவரை ஒன்றும் கூறவில்லை. முருகப்பெருமானை, “வணிகர் மரபில் ஊமையனாகத் தோன்றக் கடவை,” எனவும் சபித்தார் சிவபிரான்.

    சாபத்தின் விளைவினால் உமையம்மை பரதவர்குல மகளாகப் பிறந்து அழகு திகழ வளர்ந்தாள். நந்திதேவரும் சுறாமீன் வடிவுகொண்டு கடலில் உழலுவாராயினார். அச்சுறாமீன் கடலைக்கலக்கி கலங்கள், மீன்பிடிக்கும் பரதவர் யாவருக்கும் மிக்க துன்பத்தை விளைவித்தது. அதனைப் பிடிக்க இயலாது வருந்திய பரதவர் தலைவன், “இச்சுறாவைப் பிடிப்பவருக்குத் தன் மகளை (அவ்வாறு வந்து பிறந்திருந்த உமையம்மையை) மணஞ்செய்து கொடுப்பதாக அறிவித்தான். சிவபிரான் ஓர் இளம் வலைஞனாகக் கோலங்கொண்டு வந்து சுறாமீனைப் பிடித்துப்பின் உமையம்மையின் கரம் பற்றினார்.

    தனது துணைவியான அம்மையுடன் சிவனார் இடப ஊர்தியின்மீது எழுந்தருளிக் காட்சி தந்தார். சுறாமீனாக உருவெடுத்திருந்த நந்தியெம் பெருமானும் அவ்வடிவு நீங்கி, தம் இடப வடிவுடன் தோன்றினார். பரதவர் தலைவனுக்கு இவ்வாறு பேரருள் புரிந்த சிவபிரான் உமையம்மையுடனும் நந்திதேவருடனும் உள்நிறை அன்பரோடும் உத்தரகோச மங்கை எனும் திருத்தலத்தை அடைந்தான்.

    அங்கு உமையவளான மங்கைக்கு அதிரகசியமான வேதத்தை வாய்மொழியாகச் செவிகளில் புகட்டினான்.

    அங்கிருந் தநாதி மூர்த்தி யாதினான் மறைகள் ஏத்தும்

    கொங்கிருங் கமலச் செவ்விக் குரைகழல் வணங்கிக் கேட்ப

    பங்கிருந் தவட்கு வேதப் பயனெலாந் திரட்டி முந்நீர்ப்

    பொங்கிருஞ் சுதைபோ லட்டிப் புகட்டினான் செவிக ளார.

    (திருவிளையாடல் புராணம்)

    Uthirakosamangai-Emerald

    சிவபிரான் மங்கைநல்லாளாகிய உமையம்மைக்கு வாய்மொழியாக (உத்தரம்) வேதங்களை (கோசம்) உபதேசித்ததனால் இத்திருத்தலம் உத்தரகோசமங்கை எனப் பெயர் பெற்றது. உத்தரம் + கோசம் + மங்கை.

    இத்தலத்தே எழுந்தருளியுள்ள சிவபிரான் மங்களநாதர் எனவும் அம்மை மங்களநாயகி எனவும் போற்றப்படுகின்றனர். இத்தலத்தின்மேல் பெரும்பற்றுக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இத்தலத்தை, “பார்மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோசமங்கை,” எனப் போற்றுகிறார். வாதவூரடிகளின் இருபிறவிகளிலும் இத்தலம் தொடர்புடையது எனத் திருக்கோவில் செய்தி கூறுகின்றது. இத்தலத்தில் அவர் ‘நீத்தல் விண்ணப்பம்,’ ‘திருப்பொன்னூசல்,’ ஆகிய இரு பதிகங்களையும் பாடியருளினார்.

    ‘திரு உத்தரகோச மங்கையில் எழுந்தருளியுள்ள வேதியன், வணங்குபவர் பாவங்களைப் போக்குபவன், அழகே வடிவெடுத்த சிவபிரான், தன்னிடம் உறவு கொண்டாடுபவர்க்கெல்லாம் நெருக்கமாகிறான்,’ என்கிறது ஒரு அழகான பாடல்.

    உன்னற்கு அரியதிரு உத்தர கோசமங்கை

    மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே

    பன்னிப் பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்றறுப்பான்

    அன்னத்தின் மேலேறி ஆடும் அணிமயில்போல்

    என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடி

    பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ’

    (திருப்பொன்னூசல்- திருவாசகம்)

    இத்தலத்து அம்மையின்மீது இரு பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டனவாம். நமக்குக் கிட்டியுள்ளது ஒன்றே! அருமையான பொருள்நயம், சந்தநயம், சொல்நயம் அமைந்த பாடல்களைக் கொண்டு விளங்கும் இந்நூலை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை.

    பிள்ளைத்தமிழ் நூல்களில் யாதேனும் ஒரு பருவத்துப்பாடலில் பாட்டுடைத்தலைவன்/ தலைவியின் புகழையோ, சாதனையையோ, அருளையோ கூறுமுகமாக அத்தலத்தின் தலபுராணம் பற்றிய செய்திகளையும் காணலாம். இப்பிள்ளைத்தமிழ் நூலிலும் அவ்வாறமைந்த பாடலொன்று சப்பாணிப்பருவத்தில் காணப்படுகிறது. இது தொடர்பான நிகழ்வை விளக்கவே மேலே திருவிளையாடல் புராணச் செய்தியொன்று கூறப்பட்டது.

    பிள்ளைத்தமிழ் என்ன கூறுகின்றதெனக் காணலாம்:

    கதை தொடர்கின்றது!

    விநாயகனும் முருகனும் இவ்வாறு வேதநூல்களைக் கடலில் எறிந்ததனைக் கண்டு அன்னை உமையாள் உள்ளம் நெகிழ்கிறாள். “என் குழந்தைகளுக்கு என்மீது எவ்வளவு பிரியம்?” எனத் துன்பத்திலும் உள்ளம் களிகொள்கிறாள். “என் முத்தையனே! உனக்கு என்னிடம் இத்துணை அன்பா?” எனக்கேட்பவள் அவனை வாரியணைத்து ஆசையாக முத்தமிடுகிறாளாம். அத்தகைய அன்னையே! உத்தரகோசமங்கை என்னும் திருவூரில் எழுந்தருளியுள்ளவளே! நீ சப்பாணி கொட்டியருளுக! எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் நயம்பட அமைந்துள்ளது. இப்பாடல் இத்திருத்தலத்தின் தலபுரானத்தை நமக்கு விளக்குகின்றது.

    மலைவளைத் திடுமங்க ளேசனை யெனக்கொரு

    மறைப்பொரு ளுரைத்தியென

    மங்கையர்க் கரசிநீ மறவாது கேளென்று

    வசனிக்க வுரைமறந்தே…….

    ……………………………………………………….

    முன்வைத்த புத்தகத்தை

    முன்கிழித் தெறியவுமென் முத்தைய னாமென்று

    முருகனெனு மிளையமகனைத்

    தலைவளைத் தேமுத்த மிட்டபெரு மாட்டியொரு

    சப்பாணி கொட்டியருளே!

    (திரு உத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி, தமிழ்த்துறை,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,

    கோயம்புத்தூர்- 21.}

    கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

    திரு உத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (நன்றி- ரோஜா

    முத்தையா ஆராய்ச்சி நூலகம்)

    2. திருவாசகம்- மாணிக்கவாசகர்.

    3. திருவிளையாடல் புராணம்- பரஞ்சோதி முனிவர்

    ************

    Share
  • அம்மி மேல் நின்பதம் எந்தை தூக்கிவைக்க…..

    மீனாட்சி பாலகணேஷ்

    பார்வதி பரமேசுவரர்களின் தெய்வத்திருமணம். வைதிக முறையில் நிகழ்கின்றது. யாரெல்லாம் இத்திருமணத்தைக் காணத் திரண்டெழுந்துள்ளனராம்? மறைகள் அனைத்தையும் உணர்ந்தவனான பிரமதேவன்- அவன் முண்டகம் எனப்படும் தாமரை மலராகிய ஆசனத்தில் முளைத்தெழுந்து அதிலேயே அமர்ந்திருப்பவன். முகுந்தன் எனப்படும் திருமால். குலிசம் எனும் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய தேவர்கள் தலைவனான இந்திரன். இவர்களைத்தவிர இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எண்ணற்ற புலவோரும் சித்தர்களும் சூழ்ந்திருந்து, “இத்தெய்வத் திருமணத்தைக் காண நமக்கு இதுவென்ன பாக்கியம்?” என உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றனராம்.

    சித்திரைத் திங்களில் பல திருக்கோவில்களிலும் ஐயன், அம்மையின் திருமண விழா நடைபெறும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.

    பக்தியினால் உருகும் அன்பர்கள் உள்ளம் பச்சாதாபத்தினாலும் உருகுகிறதாம். எதனால் என்று பார்ப்போமா?

    நமது வைதிகமுறைத் திருமணத்தில் ‘அம்மி மிதித்தல்,’ என ஒரு சடங்கு உண்டு. அதானது, மணப்பெண்ணின் இடது பாதத்தின் பெருவிரலை மணமகன் தனது வலக்கரத்தால் பிடித்தெடுத்து, ஒரு அம்மிக்கல்லின் மீதேற்றி வைப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், “இந்தக் கல்லினைப்போல் கடினசித்தம் கொண்டவளாகி, மன உறுதியோடும், வலிமையோடும் வாழ்வில் என்னுடன் இணைந்து இன்பதுன்பங்களில் பங்குகொள்வாயாக,” எனக் கூறுவதாகும். இதற்கான மந்திரங்களை மணமகன் அப்போது உச்சரிப்பது வழக்கம்.

    சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற திருமணத்திலும் இச்சடங்கினை மணமகனாகிய சிவபிரான் செய்தார். அன்பர்களால் புகழ்ந்து துதிக்கப்பட்ட (துதி மணக்கின்ற) அம்பிகையின் பாதங்களிலொன்றை எந்தையாகிய பிரான் எடுத்து அம்மிமேல் வைத்ததால், கடினமான அம்மிக்கல்லில் பட்டுச் சிவந்துபோன அப்பாதத்தைக்கண்டு அடியார்கள் மனம்வருந்தி உருகுகிறார்களாம். பாதத்தைக் கண்டு உருகியது ஒருபுறம்; இவ்வாறு ஐயன் அம்மையின் மலர்ப்பாதத்தைக் கல்லின்மீது வைக்கும் தொழிலைக் கண்டும் உள்ளம் உருகுகிறார்களாம்.

    ஏனெனில் ஒரு பெரியமனிதரை எந்த ஒரு சிறு செயலையும் செய்ய அவருடைய அடியார்களும், அன்பர்களும் விடமாட்டார்கள். அவர் செய்துவிட்டால் பொறுக்கவும் மாட்டார்கள்! சிவபிரான் என்ன சாமானிய மனிதரா?அந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவா? ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே!

    அதுமட்டுமல்ல; இப்போது அன்னையே அத்தன் செய்த அத்தொழிலுக்காக உருகுகிறாளாம்.

    தனது பாதத்தினை அவருடைய திருக்கரத்தாற் தூக்கி அம்மிமேல் இட்ட செய்கை மென்மையான அவளுடைய இதயத்தை உருக்கிவிட்டது. ஏன்? அவளை மணம் புரிந்து கொள்பவன் அகில சராசரங்களுக்கும் நாயகன். அகிலநாயகியான அவளுமே செயற்கரிய தவங்களைச் செய்தே அவனை அடைந்திருக்கிறாள். மற்றும் அவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்ய தேவரும் மற்றோரும் காத்திருக்கிறார்கள். அவனோ தனது தகுதிக்கேற்றவண்ணம் பெருமிதம் கொண்டு நில்லாது, ‘இது நம் திருமணம்; இது ஒரு புனிதமான முதன்மையான சடங்கு,’ என்று உள்ளத்தில் கொண்டு, அம்மையின் பூம்பாதத்தைத் தன் திருக்கரத்தால் பற்றி, அதனை எடுத்து மென்மையாக அம்மிமேல் வைக்கிறான்.

    அந்த மெல்லிய பூப்போன்ற பாதத்தை அம்மிமேல் தூக்கிவைக்க அவனுடைய மனமும் ஒப்பியிருக்காதுதான். ஆயினும் ஐயன் செய்வதனை உலகமே பார்த்தபடி உள்ளது. உலகத்தோர் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க ஐயன் தானே முன்னுதாரணமாகி நிற்கிறான். ‘ரோல் மாடல்’ எனக் கூறுவதுண்டல்லவா? அதுதான் இதுவும்.

    திருமண வைபவத்தைக்கண்டு களித்துருகிய அடியார்கள் ‘அன்னையின் அடி நோகுமே’ என மனமுருக, ‘உலகிற்கே முதல்வன் தன்னடியைப் பற்றி தூக்கினாரே’ என அன்னை உருக, படிக்கும் நம்முள்ளத்தையும் உருக்கும் அழகிய பாடலிது.

    இது திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணப்படும் ஊசற்பருவப் பாடல். இயற்றியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. தமிழ்நயம், சொல்நயம், சந்தநயம் எனப் பல அழகுகளும் கொண்டு பொலியும் நூலாகும் இது. பாடலடிகளைக் காண்போமே!

    ab
    …………………………………………………………..

    பாக்கிய நமக்கிதென்னப்
    பார்த்துருக வுஞ்சித்தி ரைத்திங்க ளென்னப்
    பதித்திடு மணச்சடங்கில்
    துதிமணக் கின்றநின் பதமம்மி மேலெந்தை
    தூக்கிவைத் துச்சிவந்த
    தொழில்கண்டு பின்னுருக நீயுமவர் கையினால்
    தூக்கிய தொழிற்குருகவும்
    …………………………………………………………

    புதுமணக் கோலமது கொண்டசுந் தரவல்லி
    பொன்னூச லாடியருளே!

    (திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்- பொன்னூசற்பருவம்)
    சென்ற கட்டுரையில் கண்டதுபோல் ஆதிசங்கரர் எழுதியருளிய அன்னைதெய்வத்தின் அழகுவடிவைப் போற்றும் சௌந்தரியலஹரி எனும் வடமொழிநூலில் உள்ள ஒரு பாடலின் கருத்தினையே இங்கு இப்பிள்ளைத்தமிழ் நூலாசிரியரும் அழகுற எடுத்தாண்டுள்ளார். சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். அப்பாடலைக் காணலாமா?

    “அன்னையே! உன் பாதங்கள் பஞ்சின்மேல் வைத்தாலும் வாடுகின்ற மென்மையான தன்மையுடையவை; சிவந்த தாமரை மலர் போன்றவை; இவ்வாறு அவற்றைப் போற்றாது சிலர் (மாய, மந்திரங்களைக் கற்றவர்கள்) இதனை ஆமையின் மேல் ஓட்டிற்கு உவமை கூறி வீணாக வியப்பார்களாம். கருநிற மிடற்றரானவரும் (நீலகண்டன்) உனது கையை மணநாளில் பற்றுபவருமான (வரர்= வரிப்பவர், வரைந்து கொள்பவர்) பெருமான் அந்த மென்மையான உனது பாதத்தினை அம்மிக்கல் மீதும் ஏற்றி வைப்பாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்றோருக்கு வஞ்சகக் கொடியநெஞ்சை உடையவர் அவர் எனவே எண்ணத் தோன்றும். ஆயினும் சிறிது எண்ணிப் பார்த்தால் அவர் அவ்வாறானவர் அல்ல, உன்பால் மெத்த அன்பு கொண்ட ஆண்டகையான் என்பது தெற்றென விளங்கும்,” என்கிறார் புலவனார்.

    பஞ்சு அழுத்தினும் வாடு நின்பத
    பங்கயத்து இணை ஒப்பெனா
    விஞ்சை கற்றவர் வன்புறக் கம
    டத்தை வீணில் வியப்பராம்
    அஞ்சனப் புயல் அங்கை நின்வரர்
    அம்மி மீதிலும் வைப்பராம்
    வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை
    வல்லர் அல்லர் நினைக்கினே.
    (சௌந்தர்யலஹரி- பாடல் 87- வீரை கவிராஜ பண்டிதர்)

    ஆதிசங்கரரின் சுலோகம், “எவ்வாறுதான் அந்த ஈசனுக்கு உனது மென்மையான பாதங்களை, கடினமான அம்மிக்கல்லின்மீது ஏற்றிவைக்க மனம் வந்ததோ?” எனக் கேட்பதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

    ஒவ்வொரு புலவரும் தமது எண்ணத்திற்கியைய இக்கருத்தைச் சிறிது விரித்துப் பாடி மகிழ்ந்துள்ளனர். ஆகவே அனைத்துப் பாடல்களும் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் சிறந்து விளங்குகின்றன அன்றோ?

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி………

    மீனாட்சி பாலகணேஷ்

    ab
    திலகாவின் தாய் சைலாவின் நீண்ட தலைமுடியை குஞ்சலம் வைத்து வாரிப் பின்னி முல்லை, கனகாம்பரம் வைத்துத் தைத்து அலங்கரித்தாள். பட்டுப்பாயில் உட்கார்த்தி, பாட்டுப்பாடி, ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தாள். வெட்கம், பயம், கூச்சம், கொஞ்சம் கோபம் எல்லாமாக வாய் திறவாது, உதடுகள் துடிக்க, அவற்றை அழுந்தக் கடித்துக் கொண்டு, மையிட்ட பெரிய கண்கள் அலைபாய, அவற்றைக் கஷ்டப்பட்டுத் தரை நோக்கித் தாழ்த்திக் கொண்டு, கைவிரல்கள் புதிதாக அணிந்து கொண்ட கண்ணாடி வளையல்களை அடுக்குவதும் பிரிப்பதுமாகவோ, அல்லது புது தாவணித் தலைப்பை முறுக்குவதிலுமோ ஈடுபட்டுத் தவிக்கும் மகளின் நிலையை ஒரு ஓரமாக நின்று பார்த்து, தன் சின்னஞ்சிறு மகள் பெரிய மனுஷியாகி விட்ட பூரிப்பும், ஓடியாடும் மான்குட்டியை காலைக் கட்டி உட்கார்த்தி விட்டதற்கான பரிதவிப்புமாக இருந்தார் வெங்கடேசன்.

    “ஸார், உங்களுக்குத் தந்தி வந்திருக்குது,” என்றபடி உள்ளே சங்கடத்துடன் எட்டிப் பார்த்து அறிவித்தான் ஆடலரசு. பெண்கள் சம்பந்தப்பட்ட இந்த சமாச்சாரங்கள் அவனுக்குப் புரியவுமில்லை, பிடிக்கவுமில்லை.

    வெங்கடேசன் அவசரமாகக் கையெழுத்திட்டுத் தந்தியை வாங்கிப் படித்தார். “ஓ, இது தானா?” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளே வந்து எல்லாருக்கும் கேட்கும்படி உரக்கச் சொன்னார், “அம்மா, ஜானகி அக்கா, அத்திம்பேர் ரெண்டு பேரும் பிள்ளை சீனுவோட அடுத்த வாரம் வருகிறார்களாம். ஒரு பத்து நாள் இங்கே இருப்பார்களாம்.”
    இது சைலஜாவின் காதிலும் விழுந்தது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இந்த ஜானகி அவளுக்கு ஒரே அருமை அத்தை. அக்காள் ஜானகியும் தம்பி வெங்கடேசனும் சகோதரபாசம் மிக்கவர்களாக இருந்தனர். “உன் பெண்தான் என் மருமகள் வெங்கு,”என வாயாரக் கூறிக் கொள்வாள் ஜானகி. அவள் ஒரே பிள்ளை சீனு மெடிக்கல்காலேஜில் டாக்டருக்குப் படித்துக்கொண்டிருக்கிறான். ‘வெட வெட’வென்று உயரமாக, மீசையும் கண்ணாடியுமாக இருக்கும் அவனை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை சைலஜா இத்தனைநாள் வரை!

    இப்போது மலர்ந்த உடலுடன் சேர்ந்து மலரும் மனதுமட்டும் அவசரமாக முரண்டிக் கொண்டு, அந்த ‘அவரு’க்கு ஒரு உருவம் தேடி உலவும் போது, அத்தையின் பேச்சுக்கள் காதில் ரீங்காரமிட்டன.

    “அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி, கந்தன் வரக் காணேனே,” என்று தான் சிவகாமியாகவே மாறி (பார்த்திபன் கனவு திரைப் படத்தில் வந்த கமலாவைப் போல்) ஆடவேண்டும் என உள்ளம் துடித்தது. முகம் சிவந்து தலை பின்னும் தரை நோக்கிக் கவிழ்ந்தது.

    “நல்ல முகூர்த்தம், அத்தைக்காரி பிள்ளையோட வராள். பிராப்தம் இருந்தா அவனுக்குத் தான் பண்ணிக்கட்டுமே எங்க சைலுவை,” என்று பாட்டி மகிழ்ச்சியோடு நீட்டி முழக்கி, திலகாவின் அம்மாவிடம் உரக்கக் கூறிக் கொண்டிருந்தாள்.
    ____________________%_____________________

    4

    ‘ஆசை முகம் மறந்து போச்சே- இதை
    ஆரிடம் சொல்வேனடி தோழி?
    நேச மறக்கவில்லை நெஞ்சம்- எனில்
    நினைவு முக மறக்கலாமோ?’
    *************

    வசதியாகக் காலை நீட்டியபடி இருக்கையில் சாய்ந்து கொண்டிருந்தாள் ஷீலா. ‘பியூட்டி பார்லர்’ உரிமையாளரான தாராவே அவளுடைய தலையில் இளஞ்சூடான எண்ணையைத் தேய்த்து மஸாஜ் செய்து கொண்டிருந்தாள். சுகானுபவமான அந்தப் பொழுதில் தன் உடலிலிருந்து அயர்வை எல்லாம் அவள் உருவியெடுத்து வெளியே எறிவது போல உணர்ந்தாள் ஷீலா.

    “மாகஸின்ஸ் வேணுமா?” என்றாள் தாரா.

    “நோ, தாங்க்ஸ்,” கைப்பையிலிருந்து எப்போதும் இந்த மாதிரிப் பொழுதுகளில் படிப்பதற்கென்றே வைத்திருந்த ஸிட்னி ஷெல்டனின் லேடஸ்ட் நாவலை எடுத்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்க முற்பட்டாள் ஷீலா.

    மனம் புத்தகத்தில் லயிக்கவில்லை. இத்தனை நேரமும் வேலையில் முனைப்பாக இருந்ததால், பின்னுக்கு ஒதுக்கித் தள்ளப்பட்ட கசப்பான நினைவுகள், முந்தைய இரவின் அவலங்கள் மெல்ல, இதயச் சிறையின் கதவை உந்தித் தள்ளிக் கொண்டு வந்து கண்முன் சுழல முற்பட்டன.

    ஏதோ ஒரு போக்கில் அவற்றை சிரமப்பட்டு நினைவிலிருந்து ஒதுக்கித் தள்ள முயற்சிக்காமல் மெல்ல அசை போட்டு ஆராய ஆரம்பித்தாள்.

    நேற்றிரவு நெருங்கிய நண்பர்கள் சிலரை ‘டின்னருக்கு’ அழைத்திருந்தாள். ராஜா எஸ்டேட்ஸ் உரிமையாளர் ராஜாராம், அவர் மனைவி, இண்டஸ்ட்ரியலிஸ்ட் ரஞ்சித்குமார், அவருடைய இளம் மனைவி ஷோபா- இவர்கள் எல்லாரும் தான்.

    அருணுக்கு ஏற்கெனவே போதை ஏறி இருந்தது. வலது கையில் ‘பிரஷ்’ஷைப் பிடித்தால் இடது கரத்தில் குறைந்த பட்சமாக ஒரு ‘பீர்’ கிளாஸாவது இருக்கும். அப்போது தான் சித்திரம் வரைய ‘மூட்’ வரும் என்பது அவனுடைய (விதண்டா) வாதம்.

    போதாதற்கு ‘பாரிஸ்’ ஓவியக் கண்காட்சிக்கு ஆறு சித்திரங்களைத் தர ஒத்துக் கொண்டிருந்தான். மூன்றாவதை வரைந்து கொண்டிருந்தான்.

    மழையில் நனைந்தபடி, சிறு நீர்த் தேக்கங்களில் கால் பதித்து விளையாடும் நிர்வாணமான ஒரு சிறு குழந்தை. அதன் முகத்தில் அந்த எல்லையற்ற மகிழ்ச்சியையும், இளம் பிஞ்சு உள்ளத்தின் கவலையற்ற அடிவாரத்திலிருந்து பொங்கி எழும் வியப்பையும், நாக்கை நீட்டி மழைத்துளிகளைப் பிடிக்க முயலும் குறும்பையும் தூரிகை மூலம் வெளிக்கொணர அருண் ஒருவனால் தான் முடியும் என்பது ஷீலாவின் கருத்து.

    இதனால் தானே தனக்குத் தானே விதித்துக் கொண்ட பொய்யான வேஷம் கலைந்த ஒரு போதில் அருண் சர்மாவின் மீது அன்பு கொண்டு, ஈர்க்கப்பட்டு, தன்னை விட பத்து வயது சிறியவனான அவனுடன் ஷீலா சில ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்!

    எத்தனை நாட்கள் தனிமையான முன்னிரவு வேளையில் விஸ்கியை ருசித்த வண்ணம் அருண் தீட்டும் சித்திரங்களை ரசித்தபடி அமர்ந்து உருகி இருக்கிறாள். தன்னை மூடிக் கொண்டிருக்கும் போலித்திரை அவனுடைய சித்திரங்களைத் தான் ரசிக்கும் போது விலகி விடுவதை உணர்ந்து திகைத்தும் இருக்கிறாள். தன் மனக்கதவை பலவந்தமாகத் திறக்கும் அவனுடைய கலையையும் அவ்வாறு செய்ய இயலும் விதத்தில் அந்தக் கலையைத் தனக்கு அடிமைப் படுத்தி வைத்துக் கொண்டு இருந்ததாலேயே அவனையும் எவ்வளவு ஆழமாகத் தான் நேசிக்கிறோம் என்று உணர்ந்து, அந்த உணர்வே ‘இது எத்தனை நாள் நீடிக்கும்’ என்ற பயமாக மாறி இதயத்தைக் கவ்வி அழுத்த ‘அருண் போன்ற ஒரு கலைஞன் தன் எல்லைகளைத் தேடி விரைவில் பயணப்பட்டு விடுவான். அவனைத் தன் பணத்தாலோ, நாற்பது சொச்சம் வயதிலும் இருபத்தெட்டு வயது போலப் பொலியும் தன் இளமையாலோ, பதவியாலோ கட்டிப் போட்டு வைக்க முடியாது’ என அறிந்த இயலாமையும், அதனாலேயே பொங்கி எழுகின்ற ‘உள்ளபோதே ஆசை தீர அள்ளிக்கொள்’, என்கின்ற வேட்கையுடன் தழுவி, அன்னை போல அணைத்து, பிள்ளை போல விளையாடி, காதலி போல நேசம் காட்டி மகிழ்ந்திருக்கிறாள்.

    ஆனால் அவனுடைய கலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அவலட்சணமான வேறொரு முகம் நேற்று மாலை தானே வெளிப்பட்டது. ‘நான் என்ன, பதினாறு வயதுப் பெண்ணைப் போல, என் காதல் மயக்கத்தில் இத்தனை நாட்கள் இவனைப் புரிந்து கொள்ள மறந்து விட்டேனா? சீச்சீ- இது மயக்கமல்ல- கண்களை விரியத் திறந்து கொண்டே இறங்கி விட்ட சாக்கடை- என் தனிமைக்குத் துணை தேடி, அந்தத் துணை மூலமாக என் உள்ளத்துக்கு விருந்தளித்ததில், பின் விளைவுகளை யோசியாமல் கண்மூடித்தனமான உறவில் கட்டுண்டு, உலகையே மறந்து பைத்தியமாக இருந்து விட்டேனா,’ என யோசித்தாள் ஷீலா. தலைக்குள் வண்டொன்று ரீங்காரம் இட்டபடி குடைவது போலத் தோன்றியது.

    அவள் உணராதது, உணர்ந்தாலும் ஒப்புக் கொள்ளாதது என்னவென்றால். அருணின் அந்த ‘மழையில் நனையும் குழந்தை’ ஓவியம் அவளை மிகவும் பாதித்து இதயத்தின் நிலவறைக் கதவை ஓங்கி ஓங்கித் தட்டியதால் ஏற்பட்ட ரணத்தின் வலி அது என்று.

    நாலு வயதில் தான் ‘ஜிம்’முடன் விட்டுவிட்டு வந்த குழந்தை கீதாவின் ஞாபகத்தைத் திரும்பக் கிளறியது அந்தச் சித்திரம். ஜிம் ஆண்டு தோறும் அனுப்பும் புகைப்படங்களைப் பார்த்து ஒரு சில நொடிகள் நெகிழ முற்படும் உள்ளத்தைத் தாழிட்டு அடைப்பாளே, அவ்வாறு செய்வது இந்தச் சித்திரம் பற்றிய விஷயத்தில் இயலாமல் போனது. தன் உணர்வுகளை வேண்டுமென்றே கிளறி விட்டு வேடிக்கை பார்க்கும் சித்திரத்தை வரைந்த அருணின் மீது சொல்லவியலாத கோபமா? தாபமா? ஏதோவொன்று பொங்கி எரிமலையாகக் குமுறக் காத்திருந்தது.

    விருந்தினர்கள் எல்லாம் அந்தக் குழந்தையின் சித்திரத்தைச் சூழ்ந்து கொண்டு ரசித்தார்கள். ஷோபாவும் நவீனமான இளம் பெண்களுக்கே உரிய ஆர்வமான ரசனையுடன் புகழ்மாலைகளைத் தாராளமாக அள்ளி வீசிக் கொண்டிருந்தாள்.

    “எப்படி நீங்கள் கண்முன் தத்ரூபமாக இந்தக் குழந்தையைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!,” என வியந்தாள்.

    கிளாசில் மிச்சம் இருந்த பியரைக் கடைசி வாயாகச் சப்தமிட்டுச் சுவைத்தவன், ” தட் இஸ் ஆர்ட். இந்த அருணின் ரத்த நாளங்களில் கலையுணர்வு கலந்து ஓடுகின்றது பேபி,” என்று தலையைச் சாய்த்தபடி கண்ணடித்தான்.

    “கலையா? பியர் தான் கலந்து ஓடுகின்றது இப்போது,” என முனகிக் கொண்ட ஷீலாவுக்குக் கோபம் சுர்ரென்று தலைக்கேறியது. “அருண், என்ன இது வீண் கர்வம்? பி ஹம்பிள்,” என மேல் பூச்சாக ஒரு செல்லப் புன்னகையை வீசியபடி கண்டித்தாள்.

    ‘ஷீலா என் மீது கொண்ட அன்பினால் என் கலையுணர்வைத் தூண்டியெழச் செய்து வளர வைத்தாள். இந்த ஓவியம் உங்கள் உள்ளங்களை மகிழ்விலும் வியப்பிலும் ஆழ்த்தினால், இது ஷீலாவின் அன்புக்கு நான் தரும் காணிக்கை,’ என அருண் கூறியிருந்தால் ஷீலாவுக்குத்திருப்தியாக இருந்திருக்கும். உள்ளம் பெருமிதத்தில் விம்மி இருக்கும்.

    தன்னுடைய பிஸினஸ் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி, இன்று பாரிஸ் வரை போய் ஓவியக் கண்காட்சியில் பங்கெடுத்துக் கொள்வதற்கும் தன்னையே சார்ந்து நிற்கும் இந்தப் பஞ்சைப் பரதேசிக் கலைஞனுக்கு இருக்கும் திமிரைப் பார்,’ என்ற எரிச்சலில் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கண்டித்தாள் ஷீலா.

    அருணுக்கு போதை தலைக்கேறியிருந்தது. “ஹேய், என்ன உளறுகிறாய்? யாரிடம் பேசுகிறோம் என்று நினைவிருக்கட்டும். நீ ‘ஹென்பெக்’ பண்ண நான் உன் கணவனல்ல. ஐ ஆம் எ ஜீனியஸ். என் உறவு உனக்குக் கிடைத்தது நீ செய்த அதிர்ஷ்டம்…..,” எனக் குழறியபடி கத்தினான்.

    என்றைக்குப் பாரிஸிலிருந்து ஓவியக் கண்காட்சிக்கு அழைப்பு வந்ததோ, அன்றிலிருந்தே அருணின் மனதில் தற்பெருமை பொங்கிக் கொண்டிருந்தது. ஷீலாவின் பெருமுயற்சியால் தான் இது சாத்தியம் ஆயிற்று என்பது அருணுக்கும் தெரியும். மதுவின் போதை தான் எல்லாவற்றையும் மறைத்து விட்டதே.

    (தொடரும்)

    தாரகை இணைய இதழ்

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 32

    மீனாட்சி பாலகணேஷ்

    கும்போதயன் பரவு அன்னை கோமதி!

    பிள்ளைத்தமிழ் நூல்கள் பல தலங்களில் உறையும் தெய்வங்களின் பெருமையைக்கூறி அத்தலச் சிறப்பினையும் புகழ்ந்து பாடுவது வழக்கம். இத்தகைய பொருள்நயம் செறிந்த பாடல்கள் பலவற்றை மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் காணலாம். ‘தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி,’ எனவும், ‘மதுரம் ஒழுகிய தமிழின் இயல் பயில் மதுரை மரகதவல்லி,’ எனவும் குமரகுருபரர் அம்மையைக் கூறுவார். ‘சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி,’ என முச்சங்கங்களைப்பற்றியும் போற்றுவார். அவ்வகையில் நாம் இன்று காணப்போகும் பிள்ளைத்தமிழான சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழிலும் இத்தகைய தலபுராண விளக்கப் பாடல்களைக் கண்டு, படித்து மகிழலாம்.

    சங்கரன் கோவிலெனும் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது; ‘அரியும் அரனும் ஒன்றே’ என உயிரினங்களுக்கு உணர்த்த, இறைவன் சங்கரநாராயணர் வடிவில் எழுந்தருளியுள்ளார். அன்னை பார்வதி தவம் செய்து வேண்டியதன் பேரிலேயே இவ்வாறு எழுந்தருளினாராம். அன்னையின் இத்தவம் ‘ஆடித்தபசு,’ எனும் பெயரில் ஆண்டுதோறும் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு ஈசன் புற்றிடங்கொண்ட நாதர் (வன்மீகநாதர்) என்றும் வழங்கப்படுகிறார். இந்தப்புற்றுமண் பலவிதமான நோய்களுக்கும் மருந்தாகும் எனவும் கருதப்படுகிறது.

    அன்னை, ‘ஆவுடையாள்,’ எனவும், ‘கோமதியம்மை,’ எனவும் அழைக்கப்படுகிறாள். அன்னை தவம்செய்த காலத்து, தெய்வப்பெண்டிர் அன்னையைப் பிரியாதிருக்க வேண்டினர்; அவள் கருணையினால் அன்னை தவம் செய்யுமிடத்தில் பசுக்களாக நின்று பால் பொழிந்தனர்; ஆகவே அன்னை இறைவனிடம் வேண்டிக்கொண்டு தன்னை உலகத்தோர் ‘ஆ+ உடையாள்= ஆவுடையாள்’ (கோமதி) என்றழைக்க வேண்டும் எனும் வரம் பெற்றாளாம். இதனை ஒரு அழகிய பாடல் விளக்குகிறது:

    தூதுலாங் குழலரம்பையர் ஆவுருத் தாங்கிப்
    போது தோறுமின் கால்பொழிந்துள்ள மகிழ்புரிவீர்
    ஆதலா லெமக்கு ஆவுடையா ளெனச் சிறந்த
    கோமதினாம மெவ்வுலகுங் கூறிட வேண்டும்.

    இப்பிள்ளைத்தமிழ் சங்கரன்கோயிலில் எழுந்தருளியுள்ள கோமதியம்மை பேரில் ஊற்றுமலை சமஸ்தானப்புலவரான புளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியருளியது.

    கோமதித்தாயின் முன்பு வந்து வேண்டிக்கொண்டவர்களுக்கு அவள் அருளும் திறத்தைப் பட்டியலிடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    ‘மலடியாகியவரும் நன்மக்கட்பேறு பெறுவர்; வளைந்து கூனலாகியவர்கள் நிமிர்ந்து மன்மதன்-இரதி போல் அழகான உருவம் பெறுவர்; மற்ற மக்கள் அனைவரும் எள்ளி நகைக்கும் படியான குள்ளத்தோற்றம் உடையோன் நல்ல உருவம் வாய்க்கப்பெறுவான்; சந்திரன், சூரியன் இவர்களின் ஒளி இவ்விதமானது என அறிந்திராத கண்பார்வையற்றோர் தமது அழகான விழிகளில் ஒளிவரப் பார்வை கிடைக்கப்பெறுவர்;
    ‘இருமல், குட்டநோய், வயிற்றுவலி, ஈழை எனும் காச நோய், மஞ்சள்காமாலை நோய், தலைவலி, கைகால் முடக்குவாதம், இன்னும் முன்பு உண்ட மருந்துகளினால் தீராத பலவிதமான நோய்கள், பேய் பிசாசு பிடித்து வாட்டுதல், பால்வினை நோய்கள், பித்தநோய், இவற்றினால் வருந்துவோர் உனது சன்னிதியின் முன்பு வந்தால் அந்நோய்கள் அவர்களின் முன்பு வர அஞ்சி ஓடுமாறு செய்யும் முதன்மைப்பொருள் கோமதி அன்னை!

    a1
    ‘அந்திப்பூ, அழகான பிறைநிலா இவற்றினைச் சடையில் சூடும் சிவசங்கரப்பெருமான் மகிழ்ந்து குலவும் பெண்ணரசியே! அரியமறைநூல்களின் பொருளானவளே! எம்முன் வந்தருளுவாயாக! கடலினைக் கையிலேந்திக் குடித்த குறுமுனியாகிய அகத்தியன் போற்றிப்பாடும் கோமதி அன்னையே! வருகவே!’ என வேண்டுவதாக அழகுற அமைந்துள்ளது.

    வந்தியரும் நன்மகப்பேறு பெறவளை கூன் (வந்தி- மலடி)
    மன்மதஆதி ரதியாக
    மானிலத்தவர் இகழவரு சிந்துநல் உருவம்
    வாய்க்கமதி இரவிகதிரும்
    இந்தவிதம் என்றுஅறி கிலாப்பிறவி அந்தகரும்
    எழில்விழிப் பிரபைஎய்த
    இருமல்குட்டம் குன்மம் ஈழை காமாலை
    தலைவலி இருகை கால்முடக்கு
    முந்தை வினையான் மருந்தில் தீர்ந்திடாதநோய்
    முதுபேய் தொடக்கு பித்தம்
    உற்றுநின் சன்னிதியின் முன்வந் தவர்க்கு
    முன்வாராது நீக்குமுதலே!
    அந்தியம் பிறைசூடு சிவசங்கரே சர்மகிழ்
    அருமறைப்பொருள் வருகவே!
    அம்போதி யைப்பருகு கும்போதயன் பரவும்
    அன்னை கோமதி வருகவே!
    (அம்போதி- கடல்: கும்போதயன்- அகத்தியமுனி)
    (சங்கரன் கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ்- சப்பாணிப்பருவம்)

    ___________________

    a4

    சங்கன், பதுமன் எனும் இரு நாகர்களில் ஒருவன் சிவபக்தன்; மற்றவன் திருமால் பக்தன். இவர்கள் இருவரும், ‘அரன் பெரியவன், அரியே பெரியவன்,’ என வாதிட்டு அலைந்தனர். அவர்களுக்கு உண்மையை உணர்த்த அன்னை பராசக்தியாகிய கோமதித்தாயின் வேண்டுதலால் ஈசன் சங்கரநாராயணனாகக் காட்சியளித்தான். சங்கன், பதுமன் மட்டுமின்றி உலகத்தோரும், அனைத்துக் கடவுள்களும் சிவபிரானிடம் அடக்கம் என அறிந்து தெளிந்தனர். இந்த நாகர்களால் பின்பு ஒரு சுனை இத்திருக்கோயிலின்கண் கோமதி அம்மையின் முன்பு அழகானதோர் நடுமண்டபத்துடன் அமைக்கப்பட்டது; இதனை நாகசுனை என்பர். இச்சுனையில் ஆமை, நண்டு, தவளை, மீன் என்பன கிடையாதாம். இச்சுனையில் மூழ்கி எழுவோர் கவலை தீர்ந்து நற்கதி அடைவர் என்பதும் ஐதீகம். இதனை நயம்பட புராணச் சான்றுகளுடன் விளக்குகிறார் புலவர்.

    a2
    கௌதம முனிவரின் மனைவியான அகலிகை பேரழகி. அவளழகில் ஆசைகொண்டு, மோகத்தினால் வருந்தினான் தேவர்களின் தலைவனான இந்திரன். கௌதமரைப்போல உருவெடுத்துக்கொண்டு, அவர் ஆசிரமத்தில் இல்லாத ஒருபொழுதில், அகலிகையைக் கூடினான். அதனை உணர்ந்த முனிவர், ‘உனது உடல்முழுதும் பெண்குறியாகக் கடவது,’ எனச் சாபமிட்டார். அப்படியே ஆக, இந்திரனைக் கண்டு முவ்வுலகும் எள்ளி நகையாடியது.

    Kakasuran and ramas Brahmastram(Dharbai)

    இவ்வாறெல்லாம் தகப்பனான இந்திரன் அவமானப்பட்டதை அறிந்தபின்னும் அவன் மகனான சயந்தன் பாடம் கற்றானில்லை! அவன் சீதையின் மேல்கொண்ட ஆசையினால் ஒரு காகமாக வடிவெடுத்துக் கொண்டு, அவள் தனங்களை அலகினால் குத்தித் தொல்லை கொடுத்தான். அப்போது சீதையின் மடியில் இராமபிரான் தலைசாய்த்து உறங்கியிருந்தான். உறக்கம் கலைந்த இராமன், சீதை படும் துயரைக்கண்டு, சயந்தனைச் சினந்து, ஒரு தர்ப்பைப்புல்லினை எடுத்து, மந்திரம் செபித்து, அதனை அம்பினைப்போல், காகமாகிய சயந்தன் மீது ஏவினான். அது சயந்தனை மூவுலகங்களிலும் துரத்தியது. கடைசியில் வேறுசெயலின்றி அவன் தகப்பனான இந்திரன் சொற்படி அவன் தந்த ஒரு முத்துமாலையை இந்த சங்கரலிங்கத்திற்குச் சாற்றி வழிபட்டு, நாகசுனையிலும் படிந்து எழுந்து, பின் ஈசன் திருவருளால் சயந்தன் பழைய வடிவை அடைந்தான்.

    இவ்வாறு அவனை நற்கதி பெறச்செய்தவள், கோமதி அன்னை என்கிறார் புலவர். அவள் எத்திசையும் விரிந்துள்ள அமுதம் போன்றவள்! புன்னைவனத்தினில் வாழும் பெண்ணானவள். ‘என் அன்னையே வருக! மணம் கமழும் மலர்களைக் குழலில் சூடியவளே! வருக!’ என அன்னை ஆசையுடன் தனது குழந்தையை விளிப்பதுபோல் பாடியுள்ளார் புலவர்.

    மோகத் துயரால் தந்தைமுன் ஓர்
    முனிவன் பன்னிதனைச் சேர்ந்து
    அம்முனி சாபத்தால் மூன்றுலகும்
    நகைக்க முகில்போல் நிறத்தனது
    ஆகத்தலம் எலாம் யோனியாகக்
    கண்டும் சீதை தனத்து
    ஆசையாலே சயந்தன் தன்
    அழகார் தெய்வஉரு மறைத்துக்
    காகத்து உருவாய்க் குத்துவினை
    கடிந்து திவ்விய வடிவம்நல்கும்
    கமழ்பூ நாகசுனை படிந்தோர்
    கவலை தீர்த்துக் கதிபெறசெய்
    மாகத்து அமுதே! புன்னைவன
    வாழ்வே! வருக வருகவே!
    மன்றல் கமழுமலர்க் குழல்
    கோமதியே! வருக வருகவே!

    (மாகம்- திசை; ஆகாயம்; மன்றல்- மணம்)
    (சங்கரன் கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ்- சப்பாணிப்பருவம்)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 31

    மீனாட்சி பாலகணேஷ்

    மன்றிடை நின்றாடுவோன்தமை ஆட்டுமயில்!

    am2

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே அபாரமான கற்பனை வளமும் கருத்தும் செறிந்த பாடல்களாலும், அணிநயம், சந்தநயம், போன்றன நிறைந்த செய்யுட்களாலும் அமைக்கப்பட்டவையாகும். பாடிய புலவோர்கள், கவிஞர்கள் மட்டுமின்றி இறை அடியார்களாகவும், பக்திநெறியில் சிறந்து விளங்குபவர்களாகவும் இருந்தனர். எல்லையற்ற பரம்பொருளை ஒரு சிறு குழந்தையாக்கி அன்புசெய்து கொண்டாடி நமக்கு அளவிறந்த அருமையான பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களை அளித்ததும் இவர்களே.

    am
    பல்வேறு தலங்களில் உறைந்து அருள்பாலிக்கும் அன்னை தெய்வமாம் பராசக்தியின் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பருவங்களிலும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் அழகுறப் பாடப்பெறும். அவ்வண்ணலின் நடனத்தைப் போற்றிப் பாடாத அடியார்களான புலவர்களே இல்லை எனலாம். அண்ணலின் நடனத்திற்கேற்ப அன்னையவள் கைத்தாளம் கொட்டுவாள் எனத் தாலப்பருவத்திலும், உன்மத்த நடனமாடி அவளிழைக்கும் சிற்றிலை அழிப்பவனாகவும், இன்னும் பலவிதங்களிலும் அவன் வருணிக்கப் பெறுகிறான்.

    திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பல சிறந்த பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றித் தமிழன்னைக்கு அர்ப்பணித்தவர். இவற்றுள் ஒன்றான திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டியார் மீதான பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்களைக் காணலாமே! இவை செங்கீரைப் பருவத்திற்கானவை.

    am1
    எவ்வாறு, எவற்றை எப்பொழுது செய்ய வேண்டும் எனக் கணவனை ஆட்டிவைக்கும் மகளிர் உண்டு. அவளுடைய கைப்பாவை என அக்கணவர்மார்கள் கூறப்படுவர். இதே கருத்தினை நகைச்சுவையாகக் கையாண்டு, மன்றிடை நடனமாடும் அம்பலவாணனை ஆட்டுவிக்கும் மயில் என இப்பெருந்திருவினைப் புகழ்கிறார் பிள்ளையவர்கள். அவ்வமயம், ஐயனின் நடனத்தையும் அதன் சூக்குமப்பொருளையும் அழகுற வருணிக்கிறார்.

    ஐயனின் சடை கனத்ததும், அழகு நிறைந்ததுமான பவளநிறம்கொண்ட செஞ்சடை. பாதாள கங்கை அங்கு குடிகொண்டுள்ளாள்; அவள் அங்குள்ள இளம் பிறைமதியுடன் சேர்ந்து துள்ளிக்குதிக்கிறாள்; ஐயனின் திருநடனத்தினால்தான் இது நடைபெறுகின்றது! அண்ணல் காதிலணிந்துள்ள சங்கக்குழைகள் அசைந்தாடுகின்றன. புருவங்கள் நெரிந்து வளைந்து அசைகின்றன. அவனுடைய இதழ்களில் குறுமுறுவல் பூத்து அது நிலவொளியாகக் காண்கின்றது. நடனமாடுபவனின் உடல் அசைவினால் அத்துணைப் பொருட்களும் அசைகின்றன.

    அவனுடைய அழகிய உடலைத் தழுவிய கொன்றைமாலை, வெண்மையான மண்டையோடுகளாலான மாலை, உடலைச் சுற்றிய அரவமாகிய பாம்பு, திரண்ட தோள்கள், திருவயிறு இவையெல்லாவற்றையும் கடந்து நின்று ஒளிவீசுகிறது. திருவடிகளிலணிந்த மணி நூபுரம் ஒலிக்க, உடுக்கை ஏந்திய கை படைப்பினைச் செய்ய, அமைந்த கரம் அடைக்கலம் தந்தருளவும், தழலேந்திய கரம் அழித்தலைச் செய்யவும், ஊன்றிய மலர்ப்பாதம் மறைக்கும் திரோதம் எனும் தொழிலைச் செய்யவும், எடுத்த அழகிய திருவடி, ‘இதனைப் பற்றிக்கொள், உனக்கு முத்தி,’ என அருளும்வகையில் உயர்த்தி விளக்கி ஒரு மன்றிடையில்- உலகம் எனும் அரங்கில்- நின்றாடும் ஒருவன் தன்னை ஆட்டிவைக்கும் மயிலாக விளங்குகிறாள் பெருந்திருப்பிராட்டி.

    அவள் செல்வங்கள் கொழிக்கும் தவத்துறை எனும் ஊரின்கண் உறையும் கருணைப்பிராட்டி ஆவாள். தேன்நிறைந்த மலர்மாலைகளை அணிந்த மென்மையான பெண்ணமுதம் போன்றவள்; அவளைச் செங்கீரையாடுமாறு வேண்டுகிறார் புலவர்.

    குருவார் துகிர்ச்சடை திசைத்தட வரக்கங்கை
    குழமதியி னோடுதுள்ளக் –
    குழையசை தரத்திருப் புருவமுரி தரவெழுங்
    குறுமூர னிலவெறிப்ப,
    மருவார் கடுக்கைவெண் டலையரவு திண்டோள்
    வயிற்றுயல் வரக்கதிர்த்து –
    மணிநூ புரங்குமு றிடப்படைப் பேற்றதுடி
    வாய்த்ததிதி யபயமாய்த்த,
    லுருவார் கொழுந்தழ றிரோதமூன் றியதா
    ளுவப்பரு ளெடுத்ததாளி –
    லோங்கத் தெரித்துமன் றிடையென்று நின்றாட
    வொருவர்தமை யாட்டுமயிலே,
    திருவார் தவத்துறைக் கருணைப் பிராட்டிநீ
    செங்கீரை யாடியருளே –
    தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது
    செங்கீரை யாடியருளே.

    (திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை)

    இங்கு பிள்ளையவர்கள் உண்மைவிளக்கப் பாடலொன்றின் (திருவதிகை மனவாசகம் கடந்தார்) கருத்தை அழகாக எடுத்தாண்டிருப்பது மிக அருமையாக உள்ளது. சிவமும் சக்தியும் இணைந்துதான் பிரபஞ்சத்தினை உருவாக்கிக் காத்து, அருளி, நீக்கி, மறைத்து, அழித்து ஆடுகின்றனர். இப்பிரபஞ்சப் பெருநடனத்தின் சாட்சியாக அம்மை விளங்குகிறாள் எனும்பொருள் இதன்கண் அழகுற மறைந்துள்ளது.

    தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் — ஊற்றமா
    ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
    நான்ற மலர்ப்பதத்தே நாடு.

    (உண்மைவிளக்கம்)

    ***********

    சின்னஞ்சிறு பெண்குழந்தை தவழ்ந்தாடி வருகிறாள். இவள் பெருந்திருப்பிராட்டி. இவளைச் சார்ந்த அனைத்தும் ஆடுகின்றன. விரும்பத்தக்க அழகிய திருவடிகளில் – பட்டுப் பாதங்களில் வயிரத் தண்டை அணிவித்துள்ளாள் தாய்; தவழும் குழந்தையின் கால்களில் அது நெருங்கி ஒலிசெய்கின்றது. இது அழகிய தாமரைமலரில் அன்னப்பறவை அமர்ந்து மகிழ்ந்து ஆடுவதனை ஒத்திருக்கிறது என்கிறார். கம்பைநதியில் அன்னை சிவலிங்கம் அமைத்து வழிபட்டகாலை, வெள்ளப்பெருக்கு வந்தபோது, அச்சிவலிங்கத்தைக் காப்பாற்ற இறுக அணைத்துக் கொண்டமையால் அதில் அன்னையின் முலைத்தழும்பும், கைவளைத்தழும்பும் உண்டாயின. அதனை இப்போது நினைவு கூர்கிறார். அந்த விடைக்கொடியவரின் திருமேனிக்கு வளைத்தழும்பு கொடுத்தோம் எனப் பெருமை பேசுவதுபோல கையில் ஒலிக்கும் அழகான வளைகள் ஒலிசெய்தபடி ஆடுகின்றன. முடியில் அன்னை அணிவித்த சூழியம் எனும் அணிகலன் ஆடுகின்றதாம். முகத்தில் எழும் குறுமுறுவல் மலரைப்போல விரிந்து ஆடுகின்றது. முழுமைபெற்ற நிலவின் வடிவத்தில் முத்துக்கள் அமைந்தனபோல, முகமாகிய நிலவில் நுண்மையான சிறு வியர்வைத்துளிகள் பொருந்தி ஆடுகின்றன. சிறு குழந்தையல்லவா? ஓயாது தவழ்ந்தாடினால் வியர்க்காதா?

    இக்குழந்தை அடியார்களுடைய உள்ளத்தில் விரும்பிக் குடிபுகுபவள்; நன்மையற்றவற்றை மாற்றி நல்லனவாக்கி அருளும் திருத்தவத்துறை நாயகியாகிய பெருந்திருவே! செங்கீரையாடுகவே! என வேண்டுகிறார் புலவர்.

    அன்னை செங்கீரையாடுங்கால் அனைத்துப்பொருட்களும் உடன் ஆடுகின்றன. பராசக்தியின் இயக்கத்தால் மட்டுமே இவ்வுலகம் செயல்படும் என இப்பாடல் சூக்குமமாகத் தெரிவித்தருளுகின்றது!

    சந்தநயமும் செறிந்த பாடல்.

    கடிமலர் முளரியி லெகினம் வதிந்து
    கலித்தா டுதல்பொருவக்
    காமரு சீறடி வயிரத் தண்டை
    கஞன்று கலித்தாடக்
    கொடிவிடை யார்திரு மேனிச்சுவடு
    கொடுத்த திறங்கூறிக்
    கூறிக் குமுறுதல் போல வொலிக்குங்
    கோலவளை களுமாட
    முடியுறு சூழிய மாட எழுங்குறு
    முறுவன் மலர்ந்தாட
    முழுமதி முத்தென முகமதி நுண்டுளி
    மொய்குறு வியராட
    அடிய ருளம்குடி புகுமொரு சுந்தரி
    யாடுக செங்கீரை
    அவத்துறை மாற்று தவத்துறை நாயகி
    யாடுக செங்கீரை.

    (திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ் – செங்கீரைப்பருவம் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    _

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-27

    மீனாட்சி பாலகணேஷ்

    பாண்டியன்மகள் ஊசலாடும் அழகு!

    அரண்மனை நந்தவனம் இளம்பெண்களின் சிரிப்பொலியாலும், கிளிமொழியான அவர்கள் பேச்சொலியாலும் கலகலக்கிறது. அரசகுமாரி தடாதகைப்பிராட்டி நந்தவனத்தில் தன் தோழிகளுடன் ஊசலாடி விளையாடிக்கொண்டிருக்கிறாள். நந்தவனத்தில் மலர்ந்துள்ள பலவிதமான பூக்களிலும், இந்த இளம்மங்கையர் சூடியுள்ள பூக்களிலும் மூழ்கித் தேனைமாந்தி, ரீங்காரமிடுகின்றன வண்டுகள். அந்த ஓசை, ‘தடாதகையின் மெல்லிடை ஒசிகின்றதே, அது வருந்துமே,’ எனும் ஏக்கத்தால் அவை ஒலியெழுப்புவது போலுள்ளதாம். அதற்கேற்ப, அவளும் தான் அமர்ந்துள்ள பொன்னூஞ்சலை உதைத்து ஆடுகிறாள்.

    காலில் அணிந்துள்ள பாதசரங்களும், தண்டையும் கிணுகிணுக்கின்றன. கால்களையும் மறைத்துத் தழையத்தழையக் கட்டியிருக்கும் பட்டாடை பாதங்களிலிருந்து சற்றே நெகிழ்ந்து விலகுகிறது. அருகாமையில் நிற்கும் தோழியர் எதனையோ கண்டுவிட்டனர். உடனே குதூகலித்துக் கூச்சலிடுகின்றனர்.

    am1
    திருமகள், “வாணி, இங்கே வாயேன்; இவள் பாதத்தைப் பார்த்தாயா? இது என்னவாம் தழும்பு? வலம்புரிச்சங்க ரேகையோ? உனக்குத் தெரிகிறதா?” எனக் குறும்பாகக் கேட்டு முத்துப்போன்ற பல்தோன்றச் சிரிக்கிறாளாம். உண்மையில் அதுவென்ன தெரியுமா? கூன்பிறை எனப்படும் வளைந்த பிறையினைத் தழுவியதால் உண்டான தழும்பாகும். அதாவது இவள் (தடாதகை) தன் காதல்கொழுநனிடம் (சிவபிரானிடம்) ஊடல் கொண்டபோது, அவளுடைய ஊடலைத் தணிவிப்பதற்காக ஐயன் அவளுடைய பஞ்சினும் மென்மையான அடிகளில் தனது முடி படியுமாறு கிடந்து வணங்கியுள்ளான். அப்போது அவனது சடைமுடியிலணிந்த பிறைநிலா அம்மையின் பாதத்தினை அழுத்தியதால் அதில் பிறைக்கீற்றின் தழும்பு உண்டாகிவிட்டது! பாதத்தை மூடிய பட்டாடை விலகியதால் இப்போது அது பல்லோரும் கண்டு நகைக்க இடமாகிவிட்டது!
    ‘ஆகா! இதுவா சேதி?” என எல்லாரும் நகைக்கும்வகையில், அசதியாடுகின்றாள் திருமகள். அசதியாடுதல் என்பது கேலி செய்து நகைத்தல் எனப்பொருள்படும். நமது அரசிளங்குமரி என்ன செய்தாளாம்? அவளுடைய முடியோ வணங்காமுடி. பின்னே? இமயம் வரை சென்று, செல்லும் வழியெல்லாம், அரசர்களை வென்று வாகைசூடியவளாயிற்றே! ஆனாலும் தோழிகளின் இந்தக் குறும்பான அசதியாடலில் அந்த வணங்காமுடியும் மிகுதியான நாணத்தால் வணங்கித் தலைகுனிகின்றதாம். முகம் சிவக்க, கன்னங்கள் பூரிக்கத் தடாதகை நாணத்தில் தலைகுனியும் அழகை வருணிக்கவும் இயலுமா?

    செவிலித்தாய்க்கு இதைக்கண்டு உள்ளம் நெகிழ்ந்துவிடுகிறது; தடாதகைக்கு உதவ முற்படுகிறாள். சிறுபெண்களையெல்லாம் ஒரு செல்ல அதட்டல்போட்டு நகர்த்திவிட்டு, தடாதகையின் அருகே சென்று அவள் கூந்தலை வருடிவிட்டு, வாய்மூடி மௌனியாகிவிட்டவளை, “அந்த வாயாடிகள் கிடக்கட்டும்; நீ பொன்னூசல் ஆடம்மா,” என வேண்டுகிறாள்.

    இங்கு தடாதகையின் தலைநகராகிய மதுரையின் பெருமையை அச்செவிலியின் வாயிலாகப் புலவர் குமரகுருபரனார் கூறுவது மிகுந்த நயம்வாய்ந்து படிக்க இன்பமூட்டுகின்றது.

    இளைய சிறுமிகள் கூந்தலை விதம்விதமாக முடித்துள்ளனர். இதனை ஐம்பாற்கூந்தல் என்றார். (அதாவது முடி (முடிச்சு), கொண்டை, சுருள், குழல், பனிச்சை என ஐந்து வகைகளாக முடியப்படுமாம். கூந்தல் அலங்காரத்தில் மகளிரும் இளைய சிறுமிகளும் என்றுமேதான் ஆவல்காட்டியுள்ளனர் என இதனால் அறிகிறோம்!) ஆனால் அது கூதிர்காலத்தின் பனியில் ஆற்றாமலிருக்கிறதாம். ஈரமாக உள்ளதாம். ஆகவே அகில், சாம்பிராணி போன்றனவற்றைக்கொண்டு புகையை ஊட்டி அக்கூந்தலை உலர்த்துகின்றனர் அச்சிறுமியர். இப்புகையை மடுத்த வண்டுகள் ஆண்வண்டும் பெண்வண்டுமாகச் சேர்ந்து கூடித் தழுவுகின்றனவாம். அத்தகைய பெரிய வயல்களைக் கொண்ட மதுரை நகரின் தலைவியானவளே பொன்னூசல் ஆடுவாயாக! சொக்கநாதனான சிவபிரான் புழுகுநெய்யைப்பூசி சுந்தரனாக அழகுதிகழ இருக்கிறான். அவனுடைய அழகுக்கு கொடிபோன்ற உன்னையல்லால் வேறுயார் ஒத்தவர்? நீ பொன்னூசலாடுக!’ என்கிறாள் செவிலித்தாய்!

    தடாதகையாட, குமரகுருபரனாரின் அழகுத்தமிழும் அழகான கவிதை ஊசலேறி ஆடுகிறது!

    ஒல்குங்கொடிச்சிறு மருங்குற் கிரங்கிமெல்
    ஒதிவண்டார்த்தெழப்பொன்
    ஊசலைஉதைந்தாடும் அளவின்மலர் மகளம்மை
    உள்ளடிக்கூன்பிறைதழீஇ
    மல்குஞ்சுவட்டினை வலம்புரிக் கீற்றிதுகொல்
    வாணியென்றசதியாடி
    மணிமுறுவல்கோட்டநின் வணங்கா முடிக்கொரு
    வணக்கநெடுநாண்வழங்கப்
    பில்குங்குறும்பனிக்கூதிர்க் குடைந்தெனப்
    பிரசநாறைம்பாற்கினம்
    பேதையர்கள்ஊட்டும் கொழும்புகை மடுத்துமென்
    பெடையொடுவரிச்சுரும்பர்
    புல்குந்தடம்பணை உடுத்துமது ரைத்தலைவி
    பொன்னூசல்ஆடியருளே
    புழுகுநெய்ச்சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி
    பொன்னூசல்ஆடியருளே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- ஊசற்பருவம்- குமரகுருபரர்)
    *********

    am2
    இறைவனான சிவபிரான் எல்லாமாக இருப்பவன்; எவ்வடிவிலும் உள்ளவன்; எங்கும் இருப்பவன்; என்றும் அம்பிகையை விட்டுப் பிரியாது நிற்பவன். ஊசலாடும் அன்னையைக் காணும் புலவர், அவளை இணைபிரியாத ஈசன் இங்கும் என்னென்ன வடிவில் உள்ளான் என படிப்போரின் மெய்சிலிர்க்க விளக்கியருளுகிறார். அன்னையிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது:

    “தடாதகை! உனது ஊஞ்சல் பெரிய மாணிக்கங்களை அழுத்திச் செய்த பொன்னூஞ்சல்; உன் புகழைப்பாடி நிற்கிறார்கள் தேவலோக மாதரான அரம்பை ஊர்வசி முதலியோர். அதனைக் கேட்டவண்ணமே நீயும் ஊஞ்சலில் ஆடியபடி புன்முறுவல் பூக்கிறாய். ஆகா! அந்த முறுவலுக்கும் விலையுண்டோ தாயே! அகில உலகங்களையும் அரவணைத்துக் கருணைபொழியும் புன்னகை அல்லவா அது?முழுநிலவொளியென விரியும் அதனை இடைவிடாது நுகர்கின்றது ஒரு சகோரப்பறவை- அதுவே எம்பெருமான். அப்புன்னகைக்கு முழுமுதல் உரிமையாளனும் அவனே அல்லவோ! அத்துடன் அவன் நின்றுவிடவில்லை. உன்னுடைய கூந்தலில் அணிந்துள்ள நறுமணம் பொருந்திய மலர்களின் தேனை உண்ணும் வண்டாகவும் இருந்து ரீங்காரம் செய்தபடி உன்னையே வளையவருகிறான். இன்னும் அவன் தன் தேவியான உன் அழகினை முழுவதாகக் கண்டு களிக்கவில்லை போலும். உன் திருக்கையில் நீ ஏந்திய பச்சைக்கிளியாகவும் அமர்ந்திருப்பதும் அவனே,” என்கிறார்.

    மதுரை மாநகரின் சிறப்பினையும் விளக்கப் புலவர் மறக்கவில்லை. அழகான தேவமங்கையர் துளைந்து நீராடியதனால் குங்குமச்சேறு அருவிநீரில் கரைந்துள்ளது. அதில் மூழ்கியெழுந்த ஒரு களிறு தன்னுடம்பில் அச்சேறு படிந்ததனால் தனது பிடியிடம் செல்ல அஞ்சி நிற்கின்றதாம்- ஏனெனில் ‘வேறொரு பிடியுடன் களித்து இன்புற்று வருகின்றது இக்களிறு’ என எண்ணுமாம் இதன் உரிமைப்பிடி. எவ்வாறு சிவபெருமான் மீனாட்சிக்கே உரியவரோ அதுபோன்றே இக்களிறும் தனது பிடிக்கே உரியதாகும்! “அத்தகைய அழகான, பொன்னாலான மாடங்கள் நிறைந்த கூடல் எனும் ஊரின் பெரும்செல்வியே! பொன்னூசலாடி அருளுக,” என வேண்டுகிறார்.

    கொன்செய்தசெழுமணித் திருவூசல் அரமகளிர்
    கொண்டாடஆடுந்தொறும்
    குறுமுறுவல் நெடுநில வருந்துஞ்சகோரமாய்க்
    கூந்தலங்கற்றைசுற்றும்
    தென்செய்தமழலைச் சுரும்பராய் மங்கைநின்
    செங்கைப்பசுங்கிள்ளையாய்த்
    தேவதே வன்பொலிவ தெவ்வுருவு மாமவன்
    திருவுருவின்முறைதெரிப்ப
    மின்செய்தசாயலவர் மேற்றலத் தாடிய
    விரைப்புனலின்அருவிகுடையும்
    வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட
    மென்பிடியைஅஞ்சிநிற்கும்
    பொன்செய்தமாடமலி கூடற் பெருஞ்செல்வி
    பொன்னூசல்ஆடியருளே
    புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி
    பொன்னூசல்ஆடியருளே

    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- ஊசற்பருவம்- குமரகுருபரர்)

    am
    அன்னை மீனாட்சி பொன்னூசல் ஆடுகிறாள்; நமது இதயங்களாகிய ஊசலிலும் அமர்ந்து இடையறாது ஆடி நம்மை வழிநடத்தியும் செல்கிறாள். அவள் திருவடிகளில் பணிந்து, இச்சிறு கட்டுரையை நவராத்திரி சமயம் அவளுக்குக் காணிக்கையாக்கி, இதில் காணும் முதல் பாடலின் கருத்திற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன்பு நவராத்திரி கொலுவில் நான் செய்துவைத்திருந்த காட்சியின் புகைப்படத்தினை வாசகர்கள் கண்டு மகிழ இணைத்துள்ளேன்.

    இன்னும் தொடர்ந்து இத்தகைய பாடல்களைக் கண்டு களிப்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-25

    மீனாட்சி பாலகணேஷ்

    கண்ணன் மருகா தாலேலோ!

    புலவர் பகழிக்கூத்தர் வைணவ சமயத்தவர். தமக்குண்டான தீராத வயிற்றுவலியை திருமால் மருகனான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது அழகான பிள்ளைத்தமிழ் ஒன்றினைப்பாடியதால் தீர்த்துக்கொண்டவர் என்பது வரலாறு. இவருடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் திருமால் பெருமை, மேலும் திருமால் செய்த விளையாடல்கள் தொடர்பான தொன்மங்கள் அழகுறப் புனையப்பட்டுள்ளதனைக் காணலாம். “இத்தகு திருமாலின் மருமகனே,” எனக்கூறிப் பாடி முருகவேளை வழுத்துவது இவருடைய முத்திரை எனலாம்!

    முருகப்பெருமானைச் சேடியரும் செவிலியரும் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி உறங்கவைக்கின்றனர். மாலெனும் மாமன் புகழைப்பாடி முருகனாம் மருமகனைக் கொண்டாடிப் பேரானந்தமடைகின்றனர்.

    “வாசுகி எனும் பாம்பினை நாணாகக் கொண்டு கடலினைக் கடைந்தவன்; கொடியதும் கருமையான நிறம் கொண்டதுமான அடர்த்தியான மேகக்கூட்டங்கள் பொழிந்த அடைமழைக்கு, பெரிய மலையாகிய கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தவன். எதற்காக? ஆயர்குல மக்களின் பசுக்கூட்டங்கள் அனைத்தும் அந்த அடைமழையாலும், இடிமின்னலிலும் பயந்துபதறிச் சிதறியோடாமல் இருப்பதற்காக அவற்றிடம் கொண்ட அன்பினாலும் கருணையினாலும் அவ்வாறு குடைகவித்தான். அது மட்டுமின்றி, மூங்கிலாலான தனது புல்லாங்குழலால் இனிய இசையைப் பொழிந்தும் அவற்றை அமைதிகொள்ளச் செய்கிறான். அந்தப் பசுக்கள் அவனுடனும் மற்ற இடையர்களுடனும் மேய்ச்சலுக்குச் செல்லும்போதெல்லாம், கண்ணனின் இனிய குழலோசையைக் கேட்டு அதில் திளைத்திருப்பதுண்டு. ஆகவே, பெருமழை பொழிந்த சமயத்தும், அவ்விசையைக் கேட்டால் பசுக்கள் அமைதிபெறும் என எண்ணங்கொண்டு, குழலை ஊதி அவற்றை அமைதியடையச் செய்கிறான். அவன் பெருங்கருணையாளன்!

    “காளிந்தி எனும் பெயர்கொண்ட யமுனை ஆற்றின் கரையில் மாடுகளை மேய்த்தபடி அவற்றின் பின்னே நடந்து சென்றவன் அவன். இத்தகைய பெருமை வாய்ந்த கண்ணனின் மருமகனே இவன், நமது சிறுமுருகன்,” எனக்கூறிப் பெண்டிர் பெருமையாகத் தாலாட்டுவதாகப் பாடியுள்ளார்.
    இவ்வாறெல்லாம் முருகப்பெருமானின் குலப்பெருமையை விளம்பியவர், அடுத்து அவனுறையும் திருச்செந்தூரின் பெருமையையும் அழகுற, அதன் இயற்கைநலன்களை விவரித்துப் பரவுகிறார். அடியார்களைப் பரவசப்படுத்துகிறார்.

    2
    “மொட்டுக்கள் கட்டவிழும் மலர்ச்செடிகளும் பசுங்கொடிகளும் நெருங்கியுள்ள தாமரை மலர்த்தடாகங்கள் நிறைந்துள்ளது அவ்வூர். இளம் எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்தமாத்திரத்தில் தாயன்பால் தமது மடியினின்று பாலைப்பொழிகின்றன. அதனால் அத்தாமரைத்தடாகம் முழுதும் பால் நிறைந்துள்ளது. அதனைக்கண்ணுற்ற பெட்டை அன்னப்பறவை (பேட்டெகினம்) நீரையும் பாலையும் பிரித்து பாலைப்பருகி மகிழ்கின்றதாம். அத்தகைய இயற்கைவளம் கொழித்து விளங்குவது திருச்செந்தூர். அவ்வூரின்கண் குடிகொண்ட செல்வனே தாலோ தாலேலோ! தெய்வயானையை மணம்புரிந்து கொண்ட சிறுவா தாலோ தாலேலோ!” எனப்பாடி மகிழ்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    நுட்பமாக நோக்கின் ஒரு கருத்து நமக்குச் சிறிது வியப்பையும் குழப்பத்தையும் தரும். தாலாட்டுப் பாடுவதென்றால் முருகன் தொட்டிலில் கண்வளரும் சின்னஞ்சிறு குழந்தையாகத்தானே இருக்க வேண்டும். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை வளர்ந்து பெரியவனான பின்பல்லவோ மணம்புரிந்து கொள்ள வேண்டும்? அவனை இப்போதே தெய்வயானையை மணந்த முருகனே தாலோ எனக்கூறுவது ஏன்? இதுவே பிள்ளைத்தமிழின் சிறப்பாகும். அழகிய கவிதைநயம் வாய்ந்த, இலக்கணம் ஒப்புக்கொண்ட முரண்பாடு!

    ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்பார் தொல்காப்பியர். சிறப்பான பெரியோர்கள் மீதே பிள்ளைத்தமிழ் பாடப்படும். அப்போது அவர்களை மானிடக்குழந்தையாகக் கருதியே பாடவேண்டும் என்பது நியதி! உண்மையாலுமே சிறுபிள்ளைகள் மீது பிள்ளைத்தமிழ் இயற்றப்படுவதில்லை! சாமானிய மக்கள்மீதும் பிள்ளைத்தமிழ் பாடப்படுவதில்லை!

    3
    தெய்வங்களையும், மன்னர்களையும், சான்றோரையும், அவர்களைப் பிள்ளையாகக்கொண்டு மட்டுமே பாடுவதனால், அப்பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் இளமைப்பருவத்து, வளர்ந்த பருவத்து நிகழ்ச்சிகளையும், வீரதீரப் பிரதாபங்களையும், அவர்தம் சார்பான தொன்மங்களையும் கவிதை நயத்துக்காகவும், நூலின் சிறப்புக்காகவும் அழகுற எடுத்தோம்புவது ஒரு வழக்கம்; புலவர் தனது நூலைச் சிறப்புற அமைக்க எடுத்துக்கொள்ளும் உரிமை/உத்தி எனலாமா? அதுவே தனித்தன்மை வாய்ந்த பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம்! தமிழ்மொழிக்கு ஒரு அழகான சிறப்பானஅணிகலன்!
    பாடல் இதோ!

    பாம்பால் உததி தனைக்கடைந்து
    படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
    பரிய வரையைக் குடைகவித்துப்
    பசுக்கள் வெருவிப் பதறாமற்

    காம்பால் இசையின் தொனியழைத்துக்
    கதறுந் தமரக் காளிந்திக்
    கரையில் நிரைப்பின் னேநடந்த
    கண்ணன் மருகா முகையுடைக்கும்

    பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
    புனிற்றுக் கவரி முலைநெரித்துப்
    பொழியும் அமுதந் தனைக்கண்டு
    புனலைப் பிரித்துப் பேட்டெகினந்

    தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
    செல்வா தாலோ தாலேலோ
    தெய்வக் களிற்றை மணம்புணர்ந்த
    சிறுவா தாலோ தாலேலோ.

    (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்- தாலப்பருவம்)

    **********

    சேடியரும், செவிலியரும், தாயரும் குழந்தை முருகனைத் தாலாட்டிச் சீராட்டி மகிழ்கின்றனர்.

    1
    “உனது மரகத வடிவம் (பச்சை நிறம்) சூரியனின் சிவந்த கதிர்கள் பட்டு அழகாக வாடித்துவண்டு போய்விடாதோ ஐயா?” என்கிறாள் ஒருத்தி.

    அதாவது வெயில்பட்டுக் குழந்தை வாடிக்களைத்து விட்டதாம்; அதுவும் அம்முருகனுக்கு ஒரு தனி அழகாகத் தெரிகின்றது:

    இதனை இன்னொருவிதமாக, பச்சை மயிலின்மீது ஊர்ந்து வரும் முருகப்பெருமான் வெயிலினால் வாடிக்காண்கிறான் எனக்கூறுவதாகவும் கொள்ளலாம்.

    “மதிபோன்ற உனது அழகான முகம் சிறு (வியர்வைத்)துளிகள் அரும்பிடுமாறு மிகுதியாக வியர்த்துவிடாதோ?” எனக்கொஞ்சுகிறாள் இன்னொருத்தி.

    “மலர்கள் போன்ற கைகளால் (குழந்தையாகிய) உன்னை அணைத்து இன்பம் எய்தும் அழகான பெண்டிர் உன்னைக்காணாமல் சென்றுவிடுவார்களோ? சென்றுவிடத்தான் அவர்கள் மனம் கேட்குமோ?” என வியக்கிறாள் செவிலித்தாய்.

    “பொன்மணிகள் கொஞ்சும் குண்டலம், அரைநாண் ஆகியவற்றினை அணிந்து நீ விளையாடச் சென்றால், உன் அழகான மழலைவடிவைக்கண்டு தாயன்பு பொங்கிட, கச்சணிந்த விம்மிய முலைகளிலிருந்து பொங்கிச்சுரக்கும் பாலை உனக்குத்தர தாய்மார்கள் உன்னைத்தேடி ஓடி வரமாட்டார்களோ?”

    “புரவலர் ( கொடையாளிகள்) அனைவரும் உனது விரிந்த மலர்போன்ற திருவடிகளைத் தொழுவார்கள் (ஏனெனில் புரவலர்க்கெல்லாம் புரவலன் நீதான்). போது- மலர்; இங்கு முருகனின் திருவடிகளைக்குறிப்பிடும். மெய்ஞ்ஞானமுடையவனே! (போதா) சரவணப்பொய்கையில் வளர்கின்ற தமிழ்க்கடவுளாகிய முருகனே! தாலோ தாலேலோ! நான்குவேதங்களும் போற்றுபவனே! திருச்செந்தூரை உறைவிடமாய்க் கொண்டவனே! தாலோ தாலேலோ!” எனத்தாய்மார் (ஆறு கார்த்திகைப்பெண்டிர் எனக் கொள்ளலாமா?) கொஞ்சி மகிழ்வதாக ஒரு தாலப்பருவப்பாடல்.

    மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
    வாகாய் வாடாதோ
    மதிமுக முழுதுந் தண்துளி தரவே
    வார்வேர் சோராதோ

    கரமலர் அணைதந் தின்புறு மடவார்
    காணா தேபோமோ
    கனமணி குலவுங் குண்டலம் அரைஞா
    ணோடே போனால்வார்

    பொருமிய முலையுந் தந்திட வுடனே
    தாய்மார் தேடாரோ
    புரவலர் எவருங் கண்டடி தொழுவார்
    போதாய் போதாநீள்

    சரவண மருவுந் தண்டமிழ் முருகா
    தாலோ தாலேலோ
    சதுமறை பரவுஞ் செந்திலை யுடையாய்
    தாலோ தாலேலோ.

    (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்- தாலப்பருவம்)

    இப்பாடலைப்பற்றிய இன்னொரு இனிமையான செய்தி என்னவென்றால் நமது தமிழ்நாட்டின் இசையரசி திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பத்து வயதுச் சிறுமியாக இருந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது முதற்பாடல் இதுவாகும். இதன் ஒலி-ஒளிப்பதிவு You Tube-ல் காணக்கிடைக்கும். கண்டு ரசித்து கேட்டு மகிழுங்கள். அழகான தெளிவான உச்சரிப்பு. குழந்தையே ஆயினும் சுருதிசுத்தமாகப் பாடிய பாடல்.

    இன்னும் தொடர்ந்து பிள்ளைத்தமிழ் இலக்கியத்தைப் படித்து மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 17

    –மீனாட்சி பாலகணேஷ்

    பேரண்ட கடாகப் பரப்பே சிற்றில்!

    sambandar - meenakshi1ஒரு அற்புதக் காட்சி! மூன்றுவயதுக் குழந்தை ஒன்று தன் தந்தையுடன் அவர் நீராடச் சென்றபோது தானும் உடன்சென்றது. குழந்தையைக் குளக்கரையில் இருத்தித் தந்தை நீரில் மூழ்கி நீராடினார். தந்தையைக் காணாத சிறுவன், ‘அம்மையே அப்பா!’ எனவழைத்து வருந்தி அழுதபோது, உலகுக்கே அம்மையும் அப்பனும் ஆகிய இருவரும் – சிவபிரானும் பார்வதி அன்னையும்- அவன்முன்பு தோன்றினர். குழந்தை பசியால் அழுதானோ எனவெண்ணிப் பார்வதியன்னை, தன் முலைப்பாலைத் தங்கக்கிண்ணத்தில் நிறைத்து, அச்சிறுவனுக்குப் புகட்டினாளாம். இக்குழந்தைதான் பிற்காலத்தில் ‘காழிப்பிள்ளையார்’ எனப் புகழ்பெற்ற திருஞானசம்பந்தப்பெருமானாவார். முருகப்பெருமானின் அவதாரம் எனவும் கூறப்படுவார்.

    இந்தக்குழந்தைக்கு தன் முலைப்பால் மூலம் அன்னை பார்வதி அருள்ஞானமாகிய வேதங்களின் உட்பொருளைப் புகட்டினாள். வேதங்கள் ’எழுதாமறை’ என்று அறியப்படுவன. இதனையே ‘சுருதி’ எனக் குறிப்பிடுகிறார் புலவர். இந்த எழுதாமறையாகிய வேதங்களை இச்சிறு பாலகனின் வாய்மொழியாக உலகிற்கு அறிவிக்க வேண்டி, அவனுக்கு ஞானப்பால் புகட்டினாள் பார்வதிதேவி. நேராக முலையிலிருந்து ஊட்டாது கிண்ணத்தில் சுரந்து ஊட்டியது எதனால்? இதற்கு அன்னையின் சகிமார் – பணிப்பெண்கள்- கூறும் விளக்கம் பார்வதிக்கே புன்னகையை வரவழைக்கிறது. அவ்வாறு என்னதான் அவர்கள் கூறினராம் தெரியுமா?

    “பார்வதி அம்மையே! உனது மலைபோலும் பெரிய முலைகள் சிவபெருமானையே அணைத்துக் குழைத்தSambandar- Umai_meenakshi2 வலிமையுடையவை; அவற்றிலிருந்து நேரடியாக இச்சிறுவனுக்குப் பாலருந்துவித்தால் அவனுடைய சிறியவாய் உறுத்தி நோகுமல்லவா? மேலும் உன்கையில் இலங்கும் நகக்குறியானது இப்பாலகனுக்குப் பாலருத்துவிக்கும்போது அவனுடைய சிறுபல்லில்பட்டு குழந்தைக்கு நோகும் என்று எண்ணினாய் போலும். ஆதலினால் தானே உனது இனிய முலைப்பாலைக் கிண்ணத்தில் கறந்து அவனுக்குக் கொடுத்தாய்?” எனக் கனிவுடன் கேட்கின்றனர். அன்னை இச்சொற்களைக் கேட்டுப் புன்னகை புரிகிறாளாம்.

    பிஞ்சுக்குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் அன்புநிறைந்த உள்ளத்தை அழகாக விளக்கும் இனிய பாடல் இது.

    ‘இவ்வாறான சொற்களைக்கேட்டுப்  புன்னகை புரியும் அம்மையே!  மகிழ்ச்சிநிறைந்ததும் கூர்மையான அழகிய வேல் போன்றவையுமான விழிகளை உடையவளே! அடியார்களின் பெருவாழ்வாக விளங்குபவளே, நீ எம்மிடம் ஓடோடி வருவாயாக! வளங்கள் கொழிக்கும் குளத்தூர் எனும் பதியில் வளரும் அமுதவல்லியே விரைவில் வருகவே!’ எனத் தாய் அழைப்பதாகக் கற்பனைசெய்து பாடியுள்ளார் புலவர்.

    தாயாகிப் பாலகனுக்கு ஞானப்பால் ஊட்டியவளைச் சேயாக்கி அழைத்து பிள்ளைத்தமிழால் பாடி ஏத்துகிறார். பக்தியின் பேரானந்தம் கலந்த ஓர் வெளிப்பாடு இதுவன்றோ?

    தெய்வச் சுருதி தமிழ்க்கன்றித் தீட்டா நிலைமைத் தெனவுலகிற்
    றெரிக்குங் காழித் திருஞானச் செம்மற் குழவிக் கருண்ஞானம்,
    பெய்து குழைக்க வோமுலையாம் பெரிய மலைவா யுறுத்துமென்றோ-
    பெருமான் றனையுங் குழைத்தவலிப் பெற்றி யறிந்து தடுத்தோபூங்
    கையி லிலகு நகக்குறிபற் கதுவ நோமென் றோதீம்பால்-
    கறந்து கொடுத்தா யெனச்சகிமார் கனிந்து பாட நகைமுகிழ்க்கும்
    வைவைத் தமைந்த மதர்வேற்கண் வாழ்வே வருக வருகவே –
    வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே.

    (குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சிவஞான சுவாமிகள்)

    (சுருதி- எழுதாமறை, வேதம்; )

    *****

    இமயப்பொருப்பில் ஐயன் சிவபிரான் அமர்ந்திருக்கிறார். அவர் சடையில் அணிந்திருக்கும் கொன்றைமலர் மிக்க நறுமணத்தை அள்ளி வீசுகின்றது. அவர்மகிழும் வண்ணம் அன்னை பார்வதி ‘ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு’ முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி ‘விளையாடிக் கொண்டிருக்கிறாள்’.

    அதென்ன அன்னையின் விளையாட்டு?


    ‘லீலா க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா’
     என லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் பார்வதிதேவி அன்னைக்கு உண்டு. அதன்பொருள்: விளையாட்டாகவே- அனாயாசமாகவே- மிக எளிதாக இவ்வுலகங்கள்SiRRil_meenakshi3 அனைத்தையும் படைப்பவள் என்பதுதான் அது. பேரண்டமாகிய இந்த உலகினையே சிற்றில் இழைப்பதாக அவள் பாவனை செய்துகொண்டு இழைத்து, மிக அருமையாக, ஆசையாக, விதம்விதமாக, அழகாகப் படைக்கின்றாள்; பின் படைத்த உலகங்களில் வாழும் உயிர்களுக்கு உணவளிக்க சிறுசோறாக்குகிறாள்- எதனைக்கொண்டு? இருவினைப்பயன்கள்தாம் சிறுசோறெனச் சமைக்கப்படுகின்றன! யாருக்கு இவற்றை அளிக்கிறாள் அன்னையெனும் சிறுமி? இல்லையில்லை – சிறுமியாகிய நம்மன்னை? இவ்வுலகில் உள்ள எண்பத்துநாலாயிரம் கோடிவகை உயிர்களும் அவள் தான்விளையாடச் செய்துவைத்த பாவைகள் தாம். ஆயினும் உயிருள்ள பாவைகள். அவற்றை மலங்கள் எனப்படும் பாவங்கள் (கருமவினைப்பயன்கள்) நாள்தோறும் வாட்டி வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தியவண்ணம் உள்ளன. அவள் சமைத்து வைத்துள்ள சிறுசோற்றினை அந்தப் பாவைகளுக்கு உண்ணக்கொடுத்து அவற்றின் பசியைப்போக்கி அருளுகிறாள் அவள். இது ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பொறுமையாகச் சலிப்பின்றி, கற்பகோடி காலங்களாகப் பாராசக்தி அன்னை எனும் சிறுமி செய்துவரும் விளையாட்டு; இவ்வாறு செய்யும் அவள், பராசக்தி- இங்கு குளத்தூர் அமுதாம்பிகை எனக் குறிப்பிடப்படுபவள்- விளையாடுமிடம் பரமானந்தப் பெருவீடு எனப்படும் உயர்ந்த ஞானப்பெருவெளியாகும். (அதாவது அவளை உணர்ந்து கொண்டவர்களுக்கே அவளுடைய இவ்விளையாடலையும் இக்கண்ணோட்டத்தில் உணர்ந்து போற்றவியலும்).

    இவ்வாறெல்லாம் அன்னையை, சிற்றிலிழைக்கும் சிறுமியாகக் கண்டு கொண்டாடியவர், அன்பின் மிகுதியில் தன்னையிழந்து அவளை, “உண்ண உண்ணத் தெவிட்டாத இனிய அமுதமே! உயர்ந்த குன்றின்மேல் விளைகின்ற நறுங்கனி போன்றவளே! பெருக்கெடுத்துக் கொழிக்கும் ஆறுபோலும் கருணை பொழிபவளே! சிறிதும் சலிப்பின்றி எம்மை (இங்கு புலவர் கூறுவது தம்மை மட்டுமல்ல; உயிர்க்குலங்கள் அனைத்தையுமே தான்) என்றென்றும் காத்து எங்கள் வாழ்வாகவே இருப்பவளே! நீ ஓடோடி வருக அம்மையே! குளந்தைப்பதியில் வாழும் அமுதாம்பிகையே, வருக,” எனத் தாயாகமாறி பாசம்மீதூர விளிக்கிறார்.

    அனைத்தையுமே இறைவடிவமாகத் தொழும் அடியவர்களுக்குக் குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான்; ஒன்றில் மற்றொன்றைக் காண்கின்றனர். இரண்டையும் ஒருவடிவாக்கிப் பாடுகின்றனர். பரவசத்தில் ஆடுகின்றனர்; களிப்பெய்தி நிற்கின்றனர். சைவசித்தாந்த நூலுக்கு உரைகண்ட பெரும் தெய்வமுனிவராயிற்றே இதனைப் புனைந்த புலவனார். சித்தாந்த வேதாந்தக் கருத்துக்கள் பாடல்கள்தோறும் பொங்கிப் பிரவகிக்கின்றன. நாமும் பொருளுணர்ந்து பயின்று களிப்போம்.

    கடிகொண் டலரு நறுங்கடுக்கைக் கடவுண் மகிழப் பேரண்ட –
    கடாகப் பரப்பே சிற்றிலெனக் கருமப் பகுப்பே சிறுசோறாம்,
    படிகொண் டுயிராம் பாவைகட்குப் பைதன்மலநோய்ப் பசியிரியப்-
    பல்கா லயிற்றி விளையாடிப் பரமானந்தப் பெருவீட்டிற்
    குடிகொண் டிருக்குந் தீங்கொம்பே கொள்ளத் தெவிட்டா சுவையமுதே –
    குன்றம் பயந்த நறுங்கனியே கொழிக்குங் கருணைப் பெருக்காறே –
    மடிகொண் டயரா தெமைப்புரக்கும் வாழ்வே வருக வருகவே –
    வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே.

    (குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சிவஞான சுவாமிகள்)

    (கடுக்கை- கொன்றை; பேரண்ட கடாகப்பரப்பு- உருண்டையான இவ்வுலகு; கருமப்பகுப்பு- இருவினைப்பயன்கள்)

    தமக்கு விருப்பமான தெய்வங்களின்மீது பிள்ளைத்தமிழ் பாடிவைத்த புலவர் பெருமக்கள் அவர்களை மானிடக் குழந்தைகளாக உருவகித்துக் கொண்டாலும், நம்மையும், நமது வாழ்வையும், வழிநடத்தும் தெய்வங்கள் எனும் பேருண்மை தம் மனதில் நிலைபெற்றமையால், தத்துவ வேதாந்தக் கருத்துக்களையும் ஊடே இழைத்துப் பாடல்களைப் புனைந்தளித்தனர். அந்த வகையில் இலக்கியநயமும் தத்துவக்கருத்துக்களும் கொண்டு மிளிரும் இவ்விரு பாடல்களையும் சிவஞான சுவாமிகள் இயற்றியருளிய  குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணலாம். சிவஞான சுவாமிகள் அம்பிகையின் திருவிளையாடல்களில் மனத்தைப் பறிகொடுத்தவர் எனவும், அவளுடைய பிள்ளை விளையாட்டையும் உலகில் உயிர்கள் அனுபவிக்கும் கருமப்பயன்களாகக் கண்டுணர்கிறார் எனவும் அறியலாம். திருவாவடுதுறை ஆதீனத்தின் ஒரு புலவரான இவர் சைவசித்தாந்தத்துக்கு அடிப்படை நூலான சிவஞானபோதத்துக்கு ’மாபாடியம்’ எனும் விரிவுரை எழுதியுள்ளார். கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலினையும் இயற்றியருளியுள்ளார்.

    இன்னும் தொடர்ந்து இதுபோலும் பாடல்களைப் படித்து மகிழலாம்.

    ***

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்}

     

     

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-4

    போர்க்கோலமே திருமணக்கோலமான பெண்!

    BalaM
    -மீனாட்சி பாலகணேஷ்

    ஒப்பற்ற அழகும், வீரமும், எவராலும் தடுத்து நிறுத்த இயலாத ஆற்றலும் கொண்ட தடாதகை, தென்மதுரைக்கரசி. அரியணை ஏறிய அவள், திக்குவிஜயம் புறப்பட்டு, எல்லா அரசர்களையும் வென்று வாகைசூடி வருகிறாள்.

    ஆர்த்தன தடாரி பேரி, ஆர்த்தன முருடு மொந்தை,
    ஆர்த்தன உடுக்கை தக்கை, ஆர்த்தன படகம் பம்பை,
    ஆர்த்தன முழவம் தட்டை, ஆர்த்தன சின்னம் தாரை,

    ஆர்த்தன காளம் தாளம் என திசைகள் எங்கும் ஆர்க்கும்படி’ எனப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில் போற்றியபடி, அவளுடைய படைகள் எங்கணும் வெற்றிவாகை சூடிப்பின் எம்பெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலைமலையை அடைகின்றன. வெற்றிக்குமேல் வெற்றி – தடாதகையின் உள்ளம் பெருமிதத்தில் நீந்துகின்றது. அவளுடைய படைகள் இமயமலையின் மீது விரைந்தேறுகின்றன. எங்கும் உற்சாகமும், ஆரவாரமும், யானைகளின் பிளிறலும், புரவிகளின் குளம்படி ஓசைகளும் நிறைந்து அதிர்கின்றன.

    மலையின் ஒருபுறத்தில் அமைதியாக அமர்ந்து மோனத்தவமியற்றும் முனிபுங்கவர்கள், தமது தவம் கலைய அதிர்ச்சியடைந்து கண்களை மலர்த்தி, ‘யார் வருவது?’ என நோக்குகின்றனர். மானினங்களும் மயிலினங்களும் அச்சத்தால் அலமந்து போகின்றன. எதிர்க்கும் சிவகணங்களும் அஞ்சி நடுங்கப் படை செலுத்தி வருகிறாள் தடாதகை. நந்திதேவரும் ஒடோடிச் சிவபிரானிடம் சென்று நிலைமையை விளக்கா நிற்கிறார்.

    செவியுற்ற சிவபிரான் சிறுமுறுவல் கொண்டார். அவருக்கா தெரியாது வந்திருப்பது யார்? எவர்? எதற்கென்று?
    போருக்கழைக்கும் தடாதகைமுன் சென்று குறுநகை பூத்தவண்ணம் நிற்கிறார் அண்ணல்.

    அப்போது……..என்ன நிகழ்கிறது?

    Bala
    போர்க்களத்தில் அழகிய தேரில் அமர்ந்திருந்த தடாதகைக்கு மேருமலையை வில்லாக வளைத்த சிவனாரைத் தன் முன்பு கண்டதும், உடல் சிலிர்த்து, அவளுடைய பொய்யோ எனும் குறுகிய இடை தளர்ந்து துவள்கின்றது. அவளுடைய மூன்றுமுலைகளுள் ஒன்றானது தன்னுள் ஒடுங்கி மறைந்துவிடுகின்றது- எதனால்? இத்துணை உயர்வுடைய தனது கொழுநரை (கணவரை) கண்ணுற்றதும், அவர் யார்என அவள் உணர்ந்துகொண்டமையால், அவருடன் அவள் உள்ளம் சென்று ஒன்றிவிட்டது- இதுதான் உள்ளப்புணர்ச்சி எனப்படுகின்றது.

    (இங்கு ஒரு சிறு முன்நிகழ்வை அறிந்து கொள்ளவேண்டும். தடாதகை மலயத்துவச பாண்டியனின் மகளாக வந்துதித்த போது, மூன்று முலைகளுடன் அவதரித்தாள். இதனைக் கண்டு வருந்திய மன்னனுக்கு, ‘இவள் தகுந்த பருவத்தில் தனக்குரிய மணாளனைக் காணும்போது மூன்றாம் முலை மறைந்துவிடும்,’ என அசரீரி சொல்கின்றது. அதன்படியே இப்போது நிகழ்ந்துள்ளது).

    எதற்கும் வணங்காத அவள் தலை தானாக நாணத்தில் குனிகின்றது. கடைக்கண்ணால் நோக்கித் தன் ஒருமுலை மறைந்ததை உணர்ந்து கொள்கிறாள் அரசமகள். காதற்கணவனை நோக்கி அமுதம் சொரியும் நோக்கினைப் பொழிகிறாள். பெண்மைக்கே உரிய நாணத்துடன், சிறுநுதலில் அரும்பிய குறுவியர்வையுடன், விம்மிய உள்ளத்துடன் உயிரோவியமாக நிற்கிறாள் தடாதகை. என்ன செய்வது, சொல்வது எனப் பேச்சற்று நிற்கிறாள். அகிலத்தையே ஈன்றெடுத்து ஆண்டு அருள் செய்யும் அன்னையின் அவதாரமான தடாதகைக்கும் இந்த நிலை ஒருநாள் வந்துற்றது!

    கையில் ஏந்திய வில்லைக் கீழே தழைத்துப் பிடிக்கிறாள்; அது கீழே விழுந்து விடாமல் விரல் நுனியால் மெல்லத் தழுவி, அதன் நாணைக் கைவிரலின் விளிம்பால் தடவிக் கொண்டு நிற்கிறாள்.

    கண்முன் இந்த இலக்கியச்சித்திரம் விரியும்போது முழுமையான காதலின் உண்மையான அழகுவடிவம் உயிர்பெற்று உலவுகின்றதல்லவா? அண்டசராசரத்தின் நாயகர்களான அம்மையும் அத்தனுமே காலத்தின் சுழற்சியில், அதனுள் நிரந்தரமாக உறைந்துவிட்ட காதற்சித்திரம் இதுவன்றோ? இச்சொற்சித்திரம் செவிக்கமுதம்! ஓதும் நாவுக்கும் அமுதம்!

    “இத்தகைய சிவந்த கைகளைக் கொண்டு சப்பாணி கொட்டியருளே! தமிழுடன் ஒன்று சேர்ந்து பிறந்து பழமை வாய்ந்த மதுரை நகரில் வளர்ந்த கொடிபோல்பவளே! சப்பாணி கொட்டியருள்!” எனப்புலவர் குமரகுருபரனார் மீனாட்சியன்னையைப் போற்றி வேண்டுகின்றார். இவருடைய கவிதையைப் போற்றும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணிப் பூரிக்காமல் இருக்க இயலவில்லை. பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு மகுடமாக விளங்கும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடல் இதுவாகும்.

    பொய்வந்த நுண்ணிடை நுடங்கக் கொடிஞ்சிப்
    பொலன்தேரோடு அமரகத்துப்
    பொன்மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்றுஅம்மை
    பொம்மல்முலை மூன்றிலொன்று
    கைவந்த கொழுநரொடும் உள்ளப்புணர்ச்சிக்
    கருத்தான் அகத்தொடுங்கக்
    கவிழ்தலை வணக்கொடு முலைக்கண்வைத் திடும்ஒரு
    கடைக்கண்நோக்கு அமுதம்ஊற்ற
    மெய்வந்த நாணினொடு நுதல்வந்து எழும்குறு
    வெயர்ப்பினோ டுயிர்ப்பு வீங்கும்
    விம்மிதமு மாய்நின்ற உயிரோவம் எனஊன்று
    வில்கடை விரல்கடை தழீஇத்
    தைவந்த நாணினொடு தவழ்தந்த செங்கைகொடு
    சப்பாணி கொட்டியருளே
    தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
    சப்பாணி கொட்டியருளே
    (மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்-

    சப்பாணிப் பருவம்- குமர குருபரர் இயற்றியது)

    அம்மையும் ஐயனும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் போது தடாதகையின் நிலைமையை உரைத்த புலவர் அண்ணலின் நிலையை உரைக்காது விடலாமா? ஒரு நிகழ்வைக் கூறிவிட்டு அதன் தொடர்ச்சியைக் கூறாமல் விட்டால் கதை கேட்பவர்களுக்கு ஆர்வம் அடங்காதல்லவா? குமரகுருபரனார் இதனை நினைவில் இருத்திக் கொண்டு சமயம் வாய்த்தபோது பெண்பாற்பிள்ளைத்தமிழின் கடைசிப் பருவமான ஊசற்பருவத்தில் ஒரு பாடலில் அண்ணலின் நிலையையும் அழகுற விளக்குகிறார்.

    Bala1

    அழகான மணித்தேர்; போருக்கெழுந்த தடாதகை பொற்சித்திரமென அதில் வீராவேசத்துடன் வில்லை ஏந்தி நிற்கிறாள். நந்திதேவர் கூறியதைக் கேட்ட சிவபிரான் தனது வில்லை ஏந்தி உள்ளத்தில் சினம் பொங்க (சினம் ஏன்? தனது சிவகணங்களையும், மற்றவர்களையும் தடாதகையின் படை எதிர்த்ததால் எழுந்த சினம்!) அங்கு வந்துற்றார். அம்மை நின்ற அந்த அழகுத்திருக்கோலம் தீயை அணைத்த நீரென அவர் சினத்தை மாற்றியது. ஆனால் சினம் இருந்த இடத்தில் அவ்வமயம் ‘காமம், காதல்’ எனும் தாபம் பொங்கி எழுந்து கொழுந்து விட்டெரிகின்றதாம். சிவபிரானின் சிவந்த செஞ்சடை அக்காமத்தீ போலக் காணப்படுகின்றதாம். காதலில் அண்ணலின் உள்ளம் உருக அதுபோன்றே அவர் கை வில்லும் (அது பனிபடர்ந்த மேருமலையால் ஆனதல்லவா?) உருகியோடிற்று. குளிர்ச்சியுடைய சந்திரனை முடியில் வைத்ததும், வெண்மையான இடபத்திற்கு மணி கட்டியதும் அவருக்குத் துன்பம் விளைவித்தன. காதல் கொண்டவருக்கு இவ்விரண்டும் துன்பம் தருவன என அறியப்படும்!

    கருமேகம் போன்ற கழுத்தினை உடையவரான சிவபிரான், காதல் போர்க்களத்தில் அன்னையை எதிர்கொண்டு நின்று மயங்குகிறார். ஏனெனில் தடாதகை அவர்மேல் செலுத்தும் அம்புகள் கொடியனவாம்! கரிய புருவங்களாகிய வில்லினை வளைத்துக் கண்களாகிய கணைகளை அவர்மேல் விடாது எய்தவண்ணம் இருக்கிறாள் தடாதகையான மீனாட்சி. (கட்கணை துரக்கும் கரும்புருவ வில்). இவற்றுடன் கையில் கொண்ட வில்லையும் பயன்படுத்தாது வளைத்தபடி வைத்து அழகொழுக நாணித் தலைகுனிந்து நிற்கிறாள்.

    இவளுக்கு இப்போர்க்கோலமே திருமணக் கோலமாகி விட்டது. எதிரி என எண்ணி வந்தவன் இதயத்தில் நிறைந்து விட்டான். புனுகுநெய் பூசிய சொக்கருடைய திருவழகினுக்கு ஒத்தகொடி போல்பவள் மீனாட்சியன்னை. அவளைப் பொன்னூசல் ஆடியருளத் தாய்மார் வேண்டுவதாக இப்பாடலை அமைத்துள்ளார் குமரகுருபரனார்.

    தேர்க்கோல மொடுநின் திருக்கோல மும்கண்டு
    சிந்தனை புழுங்குகோபத்
    தீயவிய மூண்டெழும் காமநலம்கான்ற
    சிகைஎன எழுந்துபொங்கும்
    தார்க்கோல வேணியர்தம் உள்ளமென வேபொன்
    தடஞ்சிலையும் உருகியோடத்
    தண்மதி முடித்ததும் வெள்விடைக்கு ஒண்மணி
    தரித்ததும் விருத்தமாகக்
    கார்க்கோல நீலக் கருங்களத் தோடொருவர்
    செங்களத்து ஏற்று அலமரக்
    கட்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு
    கைவிற் குனித்துநின்ற
    போர்க்கோல மேதிரு மணக்கோல மானபெண்
    பொன்னூசல் ஆடியருளே
    புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி
    பொன்னூசல் ஆடியருளே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- ஊசற்பருவம்)

    இவை பேரழகு வாய்ந்து கருத்தைக் கவரும் இலக்கியச்சித்திரம் என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!

     

    பி.கு.   ‘மீனாட்சி திக்விஜயம்’ எனும் பொருளில் பிரதிமைகளைக் கொண்டு நான் செய்த  நவராத்திரிக் காட்சிகளின்  படங்கள்  இவை.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share