Blog

  • ‘இன்று திரு.வி.க. இருந்தால்?’

    இன்னம்பூரான்

    திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [4]

    திரு.வி.க. அவர்களின் தன்னடக்கம், புலனடக்கம், ஒழுங்கு, சிந்தனை ஒழுக்கம், வாய்மை, நாட்டுப்பற்று, திறந்த மனம், சமுதாய சீர்திருத்த மனப்பான்மை, பெண்மைக்கு மதிப்பு ஆகிய நற்பண்புகளின் மேன்மை அவருடைய படைப்புகளிலும் சொற்பொழிவுகளிலும் புலப்படுகிறது. 

    தற்காலம் எல்லாம் தேர்தல் மயம். கொள்கை, கோட்பாடு, கருத்து அடிக்களம் ஆகியவை தகர்க்கப்பட்டு, சுய முன்னேற்றம், ‘கெலித்தால் காசு; இல்லாவிடின் நீயே தூசு’ என்ற பேராசை, வாரிசு வரிசை கட்ட, கட்சி கேலிக் காட்சியானாலும்’ என்ற உள்குத்து, துட்டு விநியோகம், கூடா நட்பு ஆகியவை பொது மக்களை வாட்டும் தருணத்தில்,  ‘இன்று திரு.வி.க. இருந்தால்?’ என்ற ஆதங்கம் வருவது இயல்பே.

    துறையூரில் ஆகஸ்ட் 6, 1932 அன்று தமிழ் மாணாக்கர் மகாநாட்டில் அவரது சொற்பொழிவு அருமையாக, பொருத்தமாக  அமைந்து இருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. 

    சோழநாடு, உடலோம்பல், கல்வி, தமிழர் யார்?, சீர்திருத்தம் ஆகியவற்றை பற்றி அவர் அங்கு பகர்ந்த சிந்தனைகள் தற்கால சங்கடமான நிலைமையில் நாட்டுப்பற்று உள்ளவர்களின் மனத்தைத் தொடும். ஒருகால் அவர்கள் வாக்களிக்கும்போது அவரது நற்பண்புகள் கண் முன் தோன்றி, மனசாட்சிப்படி வாக்களிக்கத் தூண்டலாம். அவரது உரை நீண்டது. பொது மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, சில சிந்தனைத் துளிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உடனுக்குடன், தற்கால அவல நிலை பற்றி அவருடைய சிந்தனை எவ்வாறு அமையும் என்பதையும் எண்ணிப் பார்ப்போமாக.

    சோழநாடு: “…சோழ நாடு தொன்மை வாய்ந்தது. மாண்புடையது. நாகரிகத்தில் முதிர்ந்தது…சோழ நாட்டுப் பழம்பெரும் கோயில்கள் ஓவியக் காட்சிகள் வழங்குதல் வெள்ளிடை மலை…”. 

    – நாம் அன்றாடம் கோயில் கொள்ளைகளைப் பற்றிப் படிக்கிறோம். அயல்நாட்டுக்கு நமது புராதன கலைப் பொருட்கள் திருட்டுத்தனமாக அனுப்பப்படுகின்றன. ஒரு காலகட்டத்தில் திரு. உத்தாண்டராமபிள்ளை அவர்கள் கோயில் துறைத் தலைவராக இருந்தார். அவர் ஆத்திகர். இசகு பிசகாகக்கூட தவறுகள் நடக்காது. நாத்திகப் பிரசாரம் செய்து கொண்டு மறைவில் ஆத்திக வாழ்க்கை நடந்தி வந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, நாத்திகர்கள் கோயில் அறங்காவலர்களாக ஆன பின், கோயில் சொத்துகள் சூறையாடப்பட்டன. கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. சிலைகள் திருடப்பட்டன. இந்த இழிசெயலில் ஆத்திக வேடம் போட்டவர்களும் ஈடுபட்டனர். சோழநாட்டு நாகரிகம் அழிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தான் திரு.வி.க. அவர்களின் வ்யாகூலம் அமையலாம்.

    உடலோம்பல்: “…உடல் நலன் வேண்டற்பாலது. கிளர் ஈரலும், தடைபடாக் குருதியோட்டமும், எஃகு நரம்பும், ஏக்கழுத்தும், பீடு நடையும் உடையவர்களாக மாணவர்கள் திகழ்தல் வேண்டும்…மாணாக்கர் பார்வைக்கு இனியவராயிருத்தல் வேண்டும்.

    – தற்காலம், அதுவும் கல்வித் தந்தைகள், திரை கடல் ஓடாமலே. திரவியம் தேடியதாலும், அரசுப் பள்ளிகள் பட்ஜெட் போதாமலும், அக்கறையின்மையாலும் தவிப்பதாலும், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கூட கிடைப்பதில்லை. உடலோம்பல் எட்டாக் கனியாகவிடும் என்ற தோற்றம் எங்கும் தென்படுகிறது.

    கல்வி: “…‘இளமையில் கல்’… எம்மொழியிலும் கல்வி பயிலவேண்டும்… முதல்முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலவேண்டும்… கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுங்காலமாகும்…”.

    தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுவதற்குப் பல்லாண்டுகள் பிடிக்கலாம். மற்றொரு தொடரில் [கஷ்டோபனிஷத்] தமிழ் படும்பாட்டைச் சான்றுகளுடன் எழுதியிருக்கிறேன். கலோனிய அரசுக்குப் பிறகு தமிழுக்கு இறங்குமுகம் தான். ஐயா முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கச்சேரியில் தமிழ் வலம் வந்தது. கலெக்டருக்குத் தாசில்தார் தமிழில்தான் கடுதாசி எழுதினார். ஐ.சி.எஸ். அதிகாரிகள் தமிழின் தொன்மை குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு மதிப்பு இருந்தது. பள்ளி நிலை தமிழ்ப் பாடப் புத்தகங்கள், தற்கால முதுநிலைப் பாடம் அளவுக்கு உயர் நிலை. தற்காலம் எங்கும் ஆங்கிலம் தான் பீடுநடை போடுகிறது. திராவிடக் கட்சிகள் தமிழின் வளர்ச்சியின் பொருட்டு இட்ட சட்டங்கள், கட்டத்திற்குள் உறங்குகின்றன. எல்லாம் உதட்டளவு தமிழன்பு. அவ்வளவு தான்.

    இது கண்டு திரு.வி.க. அவர்களின் மனம் வெம்பி இருந்திருக்கும். 

    தமிழர் யார்?: “…தமிழர் தொன்மை வாய்ந்தவர்… பழந்தூய தமிழர் வழி வந்த தமிழரும், இடையே குடி புகுந்து சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும். கலப்பு என்பது இயற்கை… கலப்பால் வளர்ச்சியே உண்டு… இவருள் சைவரிருக்கலாம். வைணவரிருக்கலாம். அருகரிருக்கலாம். புத்தரிருக்கலாம். கிறிஸ்தவரிருக்கலாம். இஸ்லாமியரிருக்கலாம். ஆத்திகரிருக்கலாம். நாத்திகரிருக்கலாம். இவரனைவரும் தமிழர் என்பதை மறக்கலாகாது… தூய ஆரியராதல், தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்… பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது… வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி.. தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர் தமிழைப் பயிலாமலும், தமிழ்த்தாய்க்கு சேவை செய்யாமலும் இருக்கின்றாரில்லை. முன்னாள்தொட்டு அவரும் தமிழ்த்தாயின் சேய்களாக நின்றே தமிழ்த்தொண்டாற்றி வருகிறார்… தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் தமிழராகப் பார்க்கும் நெஞ்சம் மாணாக்கர்கள் பால் அரும்பி மலர்வதாக.”

    = இதை படிக்கும்போதே மனம் கலங்குகிறது. நெஞ்சம் பதைபதைக்கிறது. காங்கிரஸ் அரசும் சரி, திராவிடக் கட்சிகளும் சரி, மற்ற சாதிக் கட்சிகளும் சரி, அரசும் சரி, தேர்தலுக்குச் சாதி மத பேதம் அடித்தளம். பிரசாரத்தில் சாதி ஒழிப்போம் என்று சொல்லும்போதே, சாதிப் பேயின் உலா அதில் உள்ளடங்கி இருக்கிறது. எறும்பை நசுக்கப் பாறாங்கல் எடுப்பது போல், சிறுபான்மையாராகிய பிராமணர் மீது எய்யப்பட்ட துவேஷத்தில், வன்முறையும் தீய செயல்களும் வளர்ந்தன, ஒற்றுமை குலைந்தது. கல்வி அளிப்பதில் ஆற்றலுக்கு இடமில்லை. ‘வாலும் போச்சு; கத்தியும் வரவில்லை..‘ என்ற படி தமிழ் தள்ளுபடி; இந்தி ஒழிக; ஆங்கிலம் அண்டலாகாது என்றால், அடி வாங்குவது மாணாக்கர்கள்தாம்; அவர்களின் பெற்றோர்களும்தாம். ஒரு வேண்டுகோள் எல்லாரும் திரு.வி.க. அவர்களின் ஆழ்ந்த சிந்தனையைப் புரிந்துகொள்ள முயலுங்கள். நல்லது பிறக்கலாம்.

    சீர்திருத்தம்: “…அஃறிணை உலகம் பெரிதும் சீர்திருத்தத்தை விரும்புவதில்லை… தீண்டாமை மனத்தைத் துறந்து வாழ்வு நடாத்துங்கள்…தியானம் வேண்டற்பாலது…”.

    என்னத்தைச் சொல்ல? திரு.வி.க. அவர்களின் பொன்வாக்கு [1932] ஒன்று” 

    “ ‘ஒழுங்கு ஊராகும் என்பது பழமொழி. ஐரோப்போயரது வாழ்வில் ஒழுங்கு என்பது ஊடுருவிப் பாய்ந்து நிற்கிறது. அவர்தம் ஒழுங்கு ஊரையும் ஆள்கிறது. உலகத்தையும் ஆள்கிறது.”

    பின்குறிப்பு 1: திரு.வி.க., சிந்தனை மனிதருள் ஒருவர். அவரின் சொந்த வாழ்வின் அடித்தளத்தில் உள்ள ஆழ்மனத்தைப் புரிந்துகொண்ட ஒரே மனிதர், திரு. ஈ.வே.ரா. அவர்கள். அந்த உருக்கமான நிகழ்வு உரிய காலத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

    பின்குறிப்பு 2: மற்றவற்றை பார்க்கும் முன், அடுத்த பதிவில் அந்த 

    “பேய்ப்பழம்” பழுத்த அட்டூழியத்தையும் பார்த்து விடுவோம்.

                                                  (தொடரும்…….

    Share
  • அடித்தால்தான் ஆசிரியை!

    நிர்மலா ராகவன்

    (நலம், நலமறிய ஆவல் – 154)

    ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிக்கூடத்தில் அவ்வருடம்தான் புதிதாகச் சேர்ந்திருந்தேன்.

    `ஐயோ! அந்தப் பள்ளிக்கூடமா?’ என்று என்னைப் பார்த்துப் பிறர் பரிதாபப்பட்டது ஏனென்று பிறகுதான் புரியத் தொடங்கியது.

    “டீச்சர் எங்களை அடிப்பதே கிடையாது. நாங்கள் எதற்கு நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்?” பதினான்கு வயதான அந்த மாணவர்கள் என்னிடம் சவால் விட்டார்கள்.

    வேறு வழியின்றி, மளிகைக் கடையில் ஒரு பிரம்பை வாங்கிக்கொண்டு போனேன்.

    “உங்களுக்கு அடிதானே வேண்டும்? இதோ பாருங்கள்!” என்று பிரம்பை மேலும் கீழும் ஆட்டியபடி, நிமிர்ந்த நடையுடன். (ஆங்கிலப் படம் ஒன்றில், குண்டர் கும்பல் தலைவன் செய்ததைப் பார்த்துத்தான்!)

    “வாவ்! டீச்சர் terror, lah! (பயங்கரமானவள்!)” என்ற பாராட்டும்(?) பெற்றேன்!

    எவராலும் அவர்களை அடக்கவே முடியாதிருந்தது. வகுப்பில் கண்டபடி ஓடுவார்கள், கூச்சலிடுவார்கள்.

    யாராவது ஒருவன் தப்பித் தவறி, “ஏய்! டீச்சர் பேசுவது காதில் விழவில்லை. வாயை மூடுங்கள்!” என்று கண்டிக்கப் பார்த்தாலும், “டீச்சர் உரக்கப் பேசட்டுமே! சம்பளம் வாங்கறாங்க, இல்லே?” என்று பதில் வரும்.

    இவர்களைப் பொறுக்க முடியாது, மற்ற ஆசிரியைகள் அந்த வகுப்பிற்குப் போகுமுன் என் பிரம்பை கடன் வாங்கிக்கொண்டு போவது வழக்கமாயிற்று.

    அவர்களைப் புரிந்துகொள்ள, “உங்களுக்கு எந்த ஆசிரியையிடமாவது பயமா?” என்று கேட்டேன். பெரிய குரலுடன் எப்போதும் கத்தும், குண்டாக இருந்த ஒருத்தியைக் குறிப்பிட்டார்கள்.

    அடித்தாலும், கண்டபடி வைதாலும்தான் சொன்னால் கேட்பார்களா? குண்டாக இருந்தால் என்ன, அவர்களை அப்படியே நசுக்கிவிடுவாளா?

    (இப்படிப்பட்ட மாணவர்கள் உணர்ச்சி ரீதியில் குறைபாடு உள்ளவர்கள். சில நாடுகளில் பள்ளிக்கூடத்திலேயே உளவியலாளர்கள், இவர்களுக்கு அனுதினமும் மாத்திரையோ, ஊசிமூலம் மருந்தோ கொடுத்தால்தான் இவர்களை அமைதியாக ஒரே இடத்தில் உட்கார வைக்க முடியும் என்று சில கால ஆராய்ச்சிக்குப் பிறகு அறிந்தேன்).

    எங்கள் பள்ளியின் எதிரிலேயே இருந்த பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவிகள் – இவர்களின் சகோதரிகள் – அம்மாதிரி இருக்கவில்லை. பையன்கள் மட்டும் ஏன் இப்படி ஆனார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களிடமே கேட்டேன்.

    கதை

    பேச்சோ, அன்போ எதுவுமில்லாது, வாரம் ஒருமுறை ஒரு பெரிய தடியை எடுத்துக்கொண்டு வீடு முழுவதிலும் மகனைத் துரத்துவாராம் ஒரு தந்தை. சிரித்தபடி இதைப் பகிர்ந்துகொண்டான் ஒரு மாணவன்.

    “அப்பா என்ற ஸ்தானத்தால், அவருக்குத்தான் என்னைவிட அதிக அதிகாரம் இருக்கிறது என்று காட்டுகிறாராம்!” என்றவன் குரலில் ஏளனம்.

    “நீ என்னடா செய்வே?” என்று அதிர்ச்சியுடன் அவன் நண்பர்கள் கேட்க, “கழிப்பறையில் போய் ஒளிந்துகொள்வேன். அரை மணி நேரம் கழித்து வெளியே வரும்போது, அப்பா என்னை மறந்திருப்பார்!” என்று மேலும் சிரித்தான்.

    இளவயதினர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்களைப் போலவே நடந்தால் எப்படி! நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

    (அடக்கவே முடியாத மாணவர்களுடன் பழக நேரிடும்போது, நம் குழந்தைகளும் எங்கே அப்படிக் கெட்டுவிடுவார்களோ என்று ஆசிரியப் பெருமக்கள், தம் செல்வங்களிடம் சற்று அளவுக்கு மீறியே கண்டிப்பைக் காட்டுவார்கள். உரிய காலம் வந்தபின், அதைத் தளர்த்திக்கொண்டால் உறவு பலப்படும்).

    முன்பெல்லாம், வீட்டுக்கு வந்து பயிற்சி அளித்த ஆசிரியர்கூட கையில் பிரம்பை எடுத்து வருவார். பெற்றோரும் மகிழ்வார்கள், மகன் உருப்பட்டுவிடுவான் என்ற தவறான நம்பிக்கையில்.

    கதை

    தாய்வழிப் பாட்டி வீட்டில் சிறு பிராயத்தைக் கழித்திருந்த மகனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டார்கள் என்று கருதி, அதற்கு நேர்மாறான வளர்ப்பு முறையைக் கையாண்டார் தந்தை. பலரும் கூடியிருக்கையில், இடுப்பு பெல்டைக் கழற்றி, அந்த பத்து வயதுப் பையன் கதறக் கதற அடிப்பார்.

    நன்கு படித்து, அயல்நாட்டுக்குப் போன மகன், தாய்நாட்டுக்குத் திரும்ப வரவேயில்லை. அப்பா அடித்தபோது அம்மா தடுக்காததால், அவள் மீதும் வெறுப்பு!

    வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், `பிறர் அன்பு செலுத்த தகுதி இல்லாதவன் நான்!’ என்ற எண்ணம் மனத்தில் படிந்துவிட, அவனுக்கு எவரையும் நம்பி உறவுகொள்ள முடியாது போயிற்று.

    “மரியாதையின்றி பழகவும், பொய்யுரைக்கவும், முறையாகக் கல்வி பயிலாதிருக்கவும் சிறு வயதிலிருந்தே தண்டிக்க வேண்டும்!” என்று வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர்.

    அதிகார வர்க்கத்தினர் சொல்வதெல்லாம் சரியல்ல என்று தோன்றினால் என்ன செய்வது? தட்டிக் கேட்டால், `எதிர்த்துப் பேசாதே!’ என்று இன்னும் திட்டு விழுமே!

    சில சமயம் மரண தண்டனைகூட உண்டு.

    கதை

    இரண்டாம் உலகப் போரின்போது வார்ஸா சிறையில் (Warsaw ghetto) அடைக்கப்பட்டிருந்தாள் ஹெலன். அவளைப் போன்ற பெண்கள் நாள் முழுவதும் தையல் வேலையில்தான் ஈடுபட வேண்டும் என்பது சட்டம். ஏதாவது புத்தகத்தை கையில் எடுத்தால் உடனே மரண தண்டனை!

    ஹெலனுக்கு Gone with the Wind என்ற புத்தகம் எப்படியோ கிடைத்தது. சரித்திரமும் காதலும் கலந்த அருமையான நவீனம். தூங்கும் நேரத்தில் மூன்று, நான்கு மணியைச் செலவழித்து அதைப் படித்தாள் ஹெலன்.

    மறுநாள், தையல் வேலையில் ஈடுபட்டபடி ஓரிரு மணிக்குள் அக்கதையை சிநேகிதிகளிடம் சொல்வாள். அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

    பிடிபட்டிருந்தால், அனைவருக்குமே மரண தண்டனை! அக்கதையை முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவா அந்த அச்சத்தையும் மீறியிருந்தது.

    `ஏதாவது புத்தகம் படித்தீர்களா?’ என்று சிறையில் அடைபட்டிருந்த அப்பெண்களைக் கேட்டால், மறுத்திருப்பார்கள். எப்போது உண்மை பேசினாலும் நம்பாதபோது பொய் சொல்வதே மேல் என்று தோன்றிப் போகிறது.

    அடிப்பது அலுப்பைத் தரும்

    “புத்தகத்திலே போட்டிருக்கிற மாதிரியெல்லாம் வளக்கணும்னு பாத்தா முடியுமா?” என்று என்னைக் கேட்டாள், என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நான் அமர்த்தியிருந்த பணிப்பெண். “எத்தனை சொன்னாலும் பிள்ளைங்களை அடிக்க மாட்டறீங்க!”

    இப்போது என் மகள் கேட்கிறாள்: “நீ ஏம்மா எங்களை அடிக்கவே மாட்டே?”

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் அடித்தார்கள், வீட்டில் பணிப்பெண்கள் அடித்தார்கள், அம்மா மட்டும் ஏன் அடிக்கவில்லை என்ற குழப்பம், வளர்ந்த பின்னரும்!

    “அடிக்கிறது சுலபம். ஆனா, அதுக்கப்புறம் அழற குழந்தையைச் சமாதானப்படுத்தறது கஷ்டம். அதைக் கட்டியணைத்துக்கொண்டு, `எனக்கு உன்னைப் பிடிக்கும். தெரியாம அடிச்சுட்டேன்!’ என்றெல்லாம் ஆயிரம் சமாதானம் சொல்ல வேண்டும். போர்! எனக்கு அலுப்பான விஷயம் அது!”

    அதிகாரத்தால் பெறும் மரியாதை

    அதிகாரம் செலுத்திப் பிறரைப் பணிய வைக்கலாம். ஆனால், அப்படிப் பெறும் மரியாதை நிலைக்காது.

    சிறு வயதினரைத் தண்டித்தாலும், `ஏன் அப்படிச் செய்யக் கூடாது?’ என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    `நான் படுத்தினேன். அதான் அம்மா திட்டறா!’ என்னும் மூன்று வயதுக் குழந்தைக்கு `படுத்தல்’ என்றால் என்னவென்று புரியுமா?

    `சும்மா படுத்தாதே!’ என்று எரிந்து விழுவதற்குப் பதில், `நான் வேலையாக இருக்கும்போது தொணதொணக்காதே! போய் விளையாடு! சமர்த்து!’ என்று நிதானம் தவறாது பேசினால் உடனே கேட்பான்.

    அதற்கான பொறுமை இல்லாமல் போகும்போது, எரிச்சலும் கோபமும் எழுகிறது. அதைக் குழந்தையிடம் திருப்புகிறார்கள்.

    பல வருடங்களுக்குமுன் கணவரிடம் அடியும் உதையும் வாங்கியிருந்த ஒரு முதியவள், தான் வளர்த்த பேரனிடம் அப்படியே நடந்துகொண்டாள். கண்டபடி அடிப்பதற்குக் காரணமே வேண்டியிருக்கவில்லை.

    “அவனை அடிச்சுட்டு, நானும் அழுவேன்!” என்பாள்.

    அநாவசியமாகத் திட்டியோ, அடித்தோ செய்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் மேலும் அவதிப்படுவானேன்!

    Share
  • நலம்விளைப்பாய் சித்திரையே!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா)

    புத்தாடை வாங்கிடுவோம்
    புத்துணர்வு பெற்றிடுவோம்
    முத்தான முறுவலுடன்
    சித்திரையைக் காத்திருப்போம்
    எத்தனையோ சித்திரைகள்
    எம்வாழ்வில் வந்தாலும்
    அத்தனையும் அடிமனதில்
    ஆழமாய்ப் பதிந்திருக்கும்!

    சொத்துள்ளார் சுகங்காண்பர்
    சொத்தில்லார் சுகங்காணார்
    எத்தனையோ துயர்வாதை
    இருந்தேங்க வைக்கிறது
    அத்தனையும் பறந்தோட
    சித்திரைதான் உதவுமென
    நம்பிடுவார் வாழ்வினிலே
    நலம்விளைப்பாய் சித்திரையே!

    வெள்ளப் பெருக்காலே
    வேதனைகள் ஒருபக்கம்
    உள்ளத்தை வதைக்கின்ற
    உணர்வற்றார் ஒருபக்கம்
    கள்ளத்தை விதைக்கின்ற
    கயவரெலாம் ஒருபக்கம்
    கழன்றோடக் காத்துள்ளோம்
    கைகொடுப்பாய் சித்திரையே!

    அரசியலில் அறமிப்போ
    அருகியே போகிறது
    ஆண்டவனின் சன்னிதியில்
    அநியாயம் நிகழ்கிறது
    அறமுரைப்போர் அனைவருமே
    அடக்கமாய் ஆகிவிட்டார்
    அடங்கிநிற்பார் தனையெழுப்பி
    அழைத்துவா சித்திரையே!

    புலம்பெயர்ந்து வந்தவர்கள்
    புலனெல்லாம் பிறந்தமண்ணின்
    நலம்பற்றி நினைப்பதிலே
    நாளதனைப் போக்குகின்றார்
    வந்தவர்கள் சிலபேர்கள்
    வம்புகளை வாங்குகின்றார்
    அந்தநிலை அகற்றுவிட
    வந்துவிடு சித்திரையே!

    ஈழத்தில் தமிழ்மக்கள்
    இடர்களின்றி வாழவேண்டும்
    ஆளுகின்ற அரசமைப்பில்
    அவரமைதி பெறவேண்டும்
    வாழுகின்ற இடத்திலவர்
    வாழ்வாங்கு வாழுதற்கு
    வகைநல்கும் பாங்கினிலே
    வந்திடுவாய் சித்திரையே!

    வாழ்வளிக்கும் நாடதனில்
    வழிமுறைகள் மாற்றுகிறார்
    ஈனமுடை செயலனைத்தும்
    எண்ணியெண்ணி ஆற்றுகிறார்
    பிறந்தமண்ணின் துயரங்களை
    பிய்த்தெறிந்து நிற்குமவர்
    மனந்திருத்தும் மருந்துடனே
    வந்திடுவாய் சித்திரையே!

    சன்மார்க்கச் சாலையெல்லாம்
    சரிவையொட்டிப் போகிறது
    பொல்லாத கூட்டமொன்று
    பொறுப்பேற்று நிற்கிறது
    நல்லவல்ல நாட்டினிலே
    நாளும்வாழ்க்கை போராட்டம்
    அல்லலெல்லாம் அகற்றிவிட
    அமைந்திடுவாய் சித்திரையே!

    எத்தனைதான் இடர்வரினும்
    இறைவனே துணையென்னும்
    எண்ணமதை மனங்களிலே
    இருத்திவிடு சித்திரையே
    இன்பமொடு சுகவாழ்வு
    எல்லோர்க்கும் கிடைக்கவென்று
    எண்ணமுடன் எழுச்சிபெற்று
    எழுந்துவா சித்திரையே!

    Share
  • (Peer Reviewed) செவ்வாய் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை

    முனைவர் தி.தெய்வசாந்தி,
    சர்வதேச ஆராய்ச்சி மையம்,
    கலசலிங்கம் பல்கலைக்கழகம்,
    கிருஷ்ணன்கோயில், தமிழ்நாடு – 626126.
    மின்னஞ்சல்: ttheivasanthi@gmail.com
    இணையத்தளம்: www.theivasanthi.weebly.com

     செவ்வாய்க் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை

    முக்கியக் குறிப்புகள்

    1) பஞ்சபூத சக்திகளின் அடிப்படையில் செவ்வாயில் உயிர் வாழ்க்கைச் சாத்தியம்

    2) இந்திய வானியல் அறிவு – ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட் – தொடர்பு

    3) விண்கலங்கள் / ஏவுகணைகள் அனுப்ப, புதிய முறை

    செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான “மார்ஸ்” என்பது, ரோமன் போர்க் கடவுளைக் குறிக்கிறது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது மிகச் சிறிய இக்கிரகம், சூரியனிலிருந்து நான்காவது வட்டத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பிலுள்ள, இரும்பு ஆக்சைடு (ஹெமட்டைட்), இக்கிரகத்திற்குச் சிவந்த நிறத் தோற்றத்தை அளிப்பதால், “சிவப்பு கிரகம்” எனவும் அழைக்கப்படுகிறது. இக்கிரகமானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது. அப்பொழுது, இக்கிரகத்தை வெறுங்கண்ணால் காண முடியும். தெய்மோஸ் (விட்டம் சுமார் 8 மைல்) மற்றும் போபோஸ் (விட்டம் சுமார் 14 மைல்கள்) என்ற சிறிய, ஒழுங்கற்ற வடிவிலான, இரண்டு இயற்கை துணைக்கோள்கள் இதனைச் சுற்றி வருகின்றன. இவற்றின் பெயர்களான போபோஸ் என்றால் பீதி / பயம் மற்றும் தெய்மோஸ் என்றால் பயங்கரவாதம் என்பதும் பொருள். போபோஸ் ஆனது, மேற்கில் உதித்து, கிழக்கில் மறைகிறது.

                  மங்கள்யான் அனுப்பிய செவ்வாயின் படம். நன்றி: இஸ்ரோ. 

    செவ்வாய் கிரகத்தில் மெல்லிய வளிமண்டலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் பனிப் படலங்கள் உள்ளன. அங்குள்ள, “ஒலிம்பஸ் மோன்ஸ்” என்ற மலை, சூரிய குடும்பத்திலுள்ள இரண்டாவது மிக உயர்ந்த மலை ஆகும். “வாலீஸ் மரிநேரிஸ்” என்பது, அங்கே, காணப்படுகின்ற ஒரு பெரிய பள்ளத்தாக்கு ஆகும். வட துருவத்தின், 40% பரப்பினை, உள்ளடக்கிய, “ஸ்மூத் பொரியலிஸ்” என்ற பெரிய வடிகால் உள்ளது. அக்கிரகத்தின் பாறைகளை ஆரய்ந்ததில், 3.5 – 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிகிறது. அக்கிரகத்தில், காந்தப் பரப்புகள் / துருவங்கள், சமுத்திரங்கள் மற்றும் கடல் மட்டங்கள் இல்லை.

    செவ்வாயின், வெப்பநிலை குறைந்தபட்சம் -143 °C லிருந்து அதிகபட்சம் 35 °C என்ற அளவில் உள்ளது. அக்கிரகத்தின், பருவ காலநிலைகள் பெரும்பாலும் பூமியைப் போன்று இருந்தாலும், பூமியின் பருவங்களை விட இருமடங்கு என்ற அளவில் உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தூரத்தை விட, சூரியனுக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் அதிகம் என்பதுதான், அதற்குக் காரணம். சூரியனில் இருந்து அதன் சராசரி தூரம், சுமார் 230 மில்லியன் கி.மீ., அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 1.52 மடங்கு அதிகம். அது, ஒருமுறை, சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் 687 (பூமி) நாட்கள் ஆகும். அதன் ஒரு நாள், ஒரு புவி நாளை விட சிறிதளவு அதிகம்: 24 மணி நேரம், 39 நிமிடங்கள், மற்றும் 35.244 வினாடிகள். அதன் ஒரு ஆண்டு 1.8809 பூமியின் ஆண்டுக்குச் சமமாகும்.

    செவ்வாய் கிரகத்தின் விட்டமானது,  பூமியின் விட்டத்தில் சுமார் பாதியாகும். அதன் அடர்த்தி, பூமியை விடக் குறைவாகும். அங்கு, சிலிக்கான், ஆக்சிஜன், உலோகங்கள், மற்றும் தாதுக்கள் போன்றவை காணப்படுகின்றன. குறைந்த கொதிநிலை உடைய குளோரின், பாஸ்பரஸ், சல்பர் போன்றவை, பூமியை விட அதிக அளவில் காணப்படுகின்றன; தவிர, இரும்பு, மக்னீசியம், அலுமினியம், கால்சியம், பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளன. அதன், இரு துருவங்களிலும் பனியடுக்குகள் உள்ளன. அவற்றின் மீது கார்பன்-டை-ஆக்சைடு, ஒரு மெல்லிய படலமாக, உறைந்துள்ளது.

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதாக, 1965ஆம் ஆண்டு வரை, நம்பப்பட்டு வந்தது. அண்மையில், அதன் துருவங்களில் பனிக்கட்டிகள் அதிக அளவில் இருப்பது ராடார்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வெப்பமான மாதங்களில் பாயும் நீர் சாத்தியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மண்ணில் 1.5% முதல் 3% வரை நீர் உள்ளதாக 2013ஆம் ஆண்டில், நாசாவின் ரோவர் கண்டறிந்துள்ளது.

    செவ்வாயைச் சுற்றும் செயற்கைக் கோள்கள், அங்கு 96% கார்பன் டை ஆக்சைடு, சிறிய அளவில் ஆர்கான், நைட்ரஜன், ஆக்ஸிஜன், நீர், அம்மோனியா, மீத்தேன் மற்றும் ஃபார்மல்டிஹைடு இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இதன் மூலம், உயிரின வாழ்க்கை, அங்கு சாத்தியம் என்பதற்கு உரிய ஆதாரங்கள் தென்படுகின்றன. ஜெர்மன் விண்வெளி மையம், செவ்வாயின் தட்ப வெப்பச் சூழ்நிலை, வளிமண்டல அழுத்தம், கனிமங்கள், ஒளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, பாசிப் பூஞ்சையானது, அங்கு வாழ முடியும் என்று தெரிவித்துள்ளது.

    மீத்தேன் வாயுவானது, உயிரினக் கழிவுகள் மட்கும் பொழுதும் அல்லது செர்பென்டினைசேஷன் (serpentinization) எனப்படும் உயிரியல் அல்லாத செயல்முறை, (அதாவது, நீர், கார்பன் டை ஆக்சைடு, மற்றும் ஒலிவைன் சம்பந்தப்பட்ட பொருள்களில் நடைபெறும் வேதிவினைகள்) மூலமும் உற்பத்தி செய்யப்படும். எனவே, மீத்தேன் வாயுவை மட்டும் வைத்து, உயிரினங்களின் வாழ்க்கை, அங்கு சாத்தியம் என்று உறுதிபடத் தெரிவிக்க இயலாது.

    பீனிக்ஸ் செயற்கைக் கோளிலிருந்து, பெறப்பட்ட தகவல்களின் மூலம், அக்கிரக மண்ணில் காரத் தன்மையும் (pH 8.3), தாவரங்கள் வளர்ச்சிக்குத் தேவையான மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் போன்ற தனிமங்கள் இருப்பதும் அறியப்பட்டுள்ளது. பஞ்சபூதங்கள் எனப்படும், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி (நிலம்) என்ற ஐந்து அடிப்படை / ஆதாரச் சக்திகள் செவ்வாய் கிரகத்தில் காணப்படுவது, அங்கு உயிரினங்களின் வாழ்க்கை சாத்தியம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    நான்காவது நூற்றாண்டு சீன வானியல் அறிஞர்கள், செவ்வாய் பற்றி அறிந்து இருந்தார்கள் என்பதைச் சீனாவின் பண்டைய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. “சூரிய சித்தாந்தம்” என்ற இந்திய வானியல் நூல், செவ்வாய் கிரகத்தின் விட்டம் மதிப்பிடப்பட்டிருப்பதாக, ஐந்தாவது நூற்றாண்டிலேயே தெரிவிக்கின்றது. கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், “பஞ்சபூதம்“ தத்துவங்கள் அடிப்படையில், அக்கிரகம், “தீக்கோள்” எனக் குறிப்பிடப்படுகிறது.

    வேதங்களில், அக்கிரகம், பூமியின் மகன் என்று கூறப்பட்டுள்ளது. அது, ரோமன் நாட்டின் போர் மற்றும் கொலைக் கடவுள் ஆகும். அதற்கு, அடையாளமாக ஈட்டி மற்றும் கேடயம் உள்ளது. அக்கிரகத்தின் மண் மற்றும் மனித இரத்தத்தின் ஹீமோகுளோபின் இரண்டும் இரும்பு செறிந்தவை. இதன் காரணமாக, அவை தனித்துவமான ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கின்றன. சோதிடவியலில், சிவப்பு கிரகமான செவ்வாய், மங்கள், அங்காரகன், இரக்த வர்ணன் (இரத்த போன்ற சிவப்பு நிறத்தில் இருப்பது) மற்றும் பூமா(பூமி மகன்) என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலும் அது, போர்க்கடவுள் என்றும், பிரம்மச்சாரி என்றும் கூறப்பட்டுள்ளது. அது, பிருத்வி, பூமி எனப்படும் பூமாதேவியின் மகன் என்றும், பூமாதேவியினால் வளர்க்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இராசி மண்டலத்தின், 12 இராசிகளில், ஒவ்வொரு இராசியிலும் 57.25 நாட்கள் இருக்கும் செவ்வாயானது, சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆர்பிட்டர்கள், லேண்டர்கள், ரோவர்கள் உடைய ஆளில்லா விண்கலங்களைச் செவ்வாய்க்கு அனுப்பியுள்ளன. தற்பொழுது, ஏழு செயற்கைக் கோள்கள், அதாவது, மார்ஸ் ஒடிசி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர், மாவன் மற்றும் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் என்ற ஐந்தும் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையிலும், மார்ஸ் எக்ஸ்புளோரேசன் ரோவர் எனப்படும் ஆப்பர்சூனிட்டி மற்றும் செவ்வாய் அறிவியல் ஆய்வுக் கூடம் எனப்படும் க்யூரியாசிட்டி என்ற இரண்டும் செவ்வாயின் மேற்பரப்பிலும் சுற்றி வருகின்றன. இவற்றின் மூலம், செவ்வாய் பற்றிய வானியல் ஆய்வு எளிதில் சாத்தியமாகிறது.

    உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக, சமீபத்தில், டைம்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட, செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் (MOM) திட்டம், “மங்கள்யான்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது (சமஸ்கிருதத்தில் “மங்களா” என்பது “செவ்வாய்” என்றும், “யானா” என்பது “வாகனம்” என்றும் பொருளாகும்). சதீஷ் தவான் விண்வெளி மையம் (ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர பிரதேசம்) இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தால் (ISRO), பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் மூலம், 28 அக்டோபர் 2013-இல் ஏவப்படுவதாக இருந்த மங்கள்யான் வானிலை சரியில்லாததால் 5 நவம்பர் 2013 அன்று, விண்ணில் செலுத்தப்பட்டது. அது, 298 நாட்களில், 780,000,000 கி.மீ.(480,000,000 மைல்) தூரம் பயணம் செய்த பிறகு, செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 1300 மைல் உயரத்தில், 24 செப்டம்பர் 2014 முதல், செவ்வாயைச் சுற்றி வருகிறது. மேலும், திட்டமிட்ட நேரத்திற்கு 41 மணி நேரம் முன்னதாகவே, அது, செவ்வாயைச் சுற்றுவது குறிப்பிடத்தக்கது. அதன், ஆறு மாத ஆயுட்காலத்திற்கு, குறைந்தபட்சம் 20 கிலோ எரிபொருள் அவசியம். ஆனால், 40 கிலோ எரிபொருள் மீதம் இருப்பதால், ஆறு முதல் பத்து மாதங்கள் வரை அது செவ்வாயைச் சுற்றிவரும் என்று எதிர்பார்க்கலாம். எரிபொருள் சேமிக்க உதவும் “ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்” என்ற கொள்கை மங்கள்யான் ஏவும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மங்கள்யானின் மொத்த நிறை 1,350 கிகி. அதில் திரவ எரிபொருள்கள் நிறைந்த எஞ்சின் மட்டும் 852 கிகி நிறை ஆகும். இரு திரவ எரிபொருள்கள் கலவையான, மோனோமீத்தைல்ஹைட்ரஸின் மற்றும் டைநைட்ரஜன் டெட்ராக்சைடு என்பவை, பூமியில் இருந்து வெளியேறுவதற்குத் தேவையான உந்துதல் வேகத்தை அடைய உதவுகின்றன (11.2 கிமீ / வினாடி). அதிகபட்சம் 840 வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ளதால், தேவையான மின்சாரம் உருவாக்கப்பட்டு, மீதமுள்ளது சேமிக்கப்படுகிறது. மேலும், மங்கள்யானின் இலக்குகள் மற்றும் செவ்வாய் பற்றிய ஆய்வுக்கு உதவும் 15 கிகி நிறையுள்ள, 5 கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    நிலாவிற்கு, 2008ஆம் ஆண்டு, சந்திரயான்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு, அதனுடைய வெற்றி, மங்கள்யானின் தோற்றத்திற்கு அடித்தளமிட்டது. மிக மிகக் குறைந்த செலவில் உருவான, இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.454 கோடி (US $ 74 மில்லியன்) ஆகும். மங்கள்யான், கிரகங்களுக்கிடையில் செயல்படுத்தப்பட்ட, இந்தியாவின் முதல் திட்டமாகும். மேலும், அது இந்தியாவை, முதல் முயற்சியிலேயே, செவ்வாயின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்த உலகின் முதல் (ஆசிய) நாடு என்று பெருமைப்பட வைத்திருக்கிறது. சோவியத் விண்வெளித் திட்டம், நாசா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்குப் பிறகு, செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெயரை இஸ்ரோ பெற்றுள்ளது.

    கிரகங்களுக்கிடையில் ஏவப்படும் விண்கலங்கள் / செயற்கைக்கோள்களுக்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், திட்டமிடுதல், மேற்பார்வையிடுதல், இயக்குதல் போன்றவற்றை விரிவாக “எடுத்துச் சொல்லும் தொழில்நுட்பம்” ஒன்றை உருவாக்குவதுதான், இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கை. ராக்கெட் ஏவுதல், விண்கலங்கள் / செயற்கைக்கோள்கள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், அவற்றை இயக்குதல் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் தானியங்கிச் சாதனங்களைத் தேவைப்படும் சூழல்களில் இயக்குதல் போன்றவற்றை இந்தியா செய்ய இயலும் என்பதை எடுத்துக் காட்டுவது, இத்திட்டத்தின் முக்கியக் கொள்கை. இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, மேற்பரப்பு, கனிம வளங்கள் மற்றும் தட்ப வெப்பச் சூழ்நிலை / வானிலைகளை ஆராய்தல், இரண்டாவது கொள்கையாகும்.

    மங்கள்யான் தற்போது, இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (IDSN) உதவியுடன், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தொலைப்பதிவு, கண்காணிப்பு மற்றும் ஆணை வலையமைப்பின் (ISTRAC) விண்கலக் கட்டுப்பாடு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் தகவல் தொடர்புகள், பெருக்கிகள் மற்றும் ஒத்திசைவு டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் கையாளப்படுகின்றன. மேலும், அதிலுள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் சக்திவாய்ந்த ஆண்டெனாக்கள் IDSN-லிருந்து தொலைப்பதிவுகள், கண்காணிப்புகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தொடர்பான கட்டளைகள் பெறவும், செலுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    சூரியன், சந்திரன், மற்ற பிற கிரகங்களின் இயக்கங்களைக் கண்காணிக்கவும் கணிக்கவும் டில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மகரசங்கராந்தி தினத்தன்று, பெங்களூரின் கவிகங்காதரேஸ்வரர் கோவிலுள்ள நந்தியின் கொம்புகள் இடையே ஒரு மணிநேரம் மட்டும் செல்லும் சூரியக் கதிர்கள், சிவலிங்கம் மீது விழுந்து ஒளிர்கிறது. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில், மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியன்று, அங்குள்ள அஸ்திக்கலசம் (சாம்பல்) மீது சூரியக் கதிர்கள் விழும்படி உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் (தமிழ்நாடு) யோகநந்தீஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது, சித்திரை மாதம் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மட்டும் (ஏப்ரல் மாதம்) சூரியக் கதிர்கள் ஒளிரும்படி அமைத்துள்ளனர். இவை, பழங்காலத்தில், நமது முன்னோர்கள், வானியல் அறிவியல் வல்லுனர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

    மேலும் இவை, “ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்” கொள்கைக்கு இணையானவையாக உள்ளன. ஆனாலும், அக்கொள்கைக்கு, பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் சேமிப்பில் உதவும், இக்கொள்கையின் அடிப்படையில், செவ்வாய்க்கு விண்கலங்கள் ஏவும் சந்தர்ப்பங்கள், ஒவ்வொரு 26 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. மங்கள்யான் ஏவுதலில், இக்கொள்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின், அந்த வெற்றிகரமான மங்கள்யான் ஏவுதலுக்குப் பிறகு, 28/9/2014-இல் பிரபல பத்திரிகையான, நியூயார்க் டைம்ஸ், பசு மாட்டுடன் ஒரு இந்திய விவசாயி, “எலைட் விண்வெளி கிளப்”-இல் கதவைத் தட்டுவது போன்ற கார்ட்டூன் வெளியிட்டு விமர்சித்து இருந்தது. பண்டைய இந்திய வானியல் அறிவுத் திறமைகள் பற்றி, அப்பத்திரிக்கை சரிவர அறிந்திருந்தால், அவ்வாறு விமர்சனம் செய்திருக்க வாய்ப்பில்லை.

    மங்கள்யானைத் தொடர்ந்து, 2017-2020-இல், செவ்வாய்க்கு, விண்கலங்கள் அனுப்ப, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  செவ்வாய் டிரேஸ் வாயு மிஷன் என்ற விண்கலம், அங்குள்ள மீத்தேன் மற்றும் சிதைவுப் பொருட்களான, ஃபார்மால்டிஹைடு, மெத்தனால் போன்றவற்றை ஆய்வு செய்ய, 2016-இல் அனுப்பப்படவுள்ளது. 30 செப்டம்பர் 2014-ல், நடந்த ஒரு கூட்டத்தின் போது, நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய் பற்றி இணைந்து ஆராய்வதற்கு, ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    எதிர்காலத்தில், செவ்வாய்க்குப் பயணம் செய்வதற்காக, நானோ தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ரோபோட்கள் மற்றும் விண்வெளி லிஃப்ட் போன்றவை பயன்படுத்தப்படும். நானோ-எரிபொருள்கள் மற்றும் கடினத் தன்மை மிகுந்தவையும், குறைந்த எடையும் கொண்ட கார்பன் நானோ குழாய்கள், கிராபின் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி விண்கலம் தயாரிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதால், விண்கலங்களின் எடை குறையும், சக்தி அதிகரிக்கும்.

    ரோபோட் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், யதார்த்தமான மனித உருவில் செயல்படும் ரோபோட்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆண்ட்ராய்டு ரோபோட்கள் என்பவை, அவ்வாறு மனிதனைப் போல் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட, செயற்கை உயிரின ரோபோட்கள் ஆகும். அவை, விண்கலங்களில் ஏற்படும் தவறுகளையும், பழுதுகளையும் சீர்செய்யப் பயன்படுத்தப்படலாம்.

    விண்வெளி லிஃப்ட் என்பது, பூமியில் ஒரு இடத்திலிருந்து, விண்வெளியை நோக்கி உயர்த்திக் கட்டப்பட்ட கேபிள் மூலம் பயணம் செய்து, விண்வெளியை அடையும் முறை ஆகும். இந்த முறையில், விண்கலங்கள் இல்லாமல், கேபிள் மூலம், விண்வெளிக்கு பொருள்கள் எடுத்துச் செல்லவும், கீழே கொண்டு வரவும் இயலும். வலுவான, குறைந்த எடையுள்ள, கெவ்லர் போன்றவை அத்தகைய லிஃப்ட் உருவாக்குவதில் உதவுகிறது. பூமியை விட, குறைந்த ஈர்ப்புச் சக்தி கொண்ட அனைத்துக் கிரகங்களுக்கும் (நிலா, செவ்வாய் போன்ற), விண்வெளி லிஃப்ட் உருவாக்கலாம். ஒபயாசி என்ற ஜப்பான் கட்டுமான நிறுவனம், 2050 ஆம் ஆண்டுக்குள், 60,000 மைல் உயரத்திற்கு, விண்வெளி லிஃப்ட், செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற லிஃப்ட்கள் நடைமுறைக்கு வந்தால், விண்கலங்கள் உருவாக்குவதற்கான செலவுகள் பெருமளவு குறையும்.

    விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை, மிகச் சிறிய துகள்களாகச் செய்து, அவற்றை ரேடியோ அலைகள் மூலம் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பி மீண்டும் அவற்றைச் செவ்வாய்க் கிரகத்தில் வைத்து, அதன் உண்மையான உருவிற்கு மாற்றும் முறைதான், மேற்கூறிய, அனைத்தையும் விடச் சிறந்த தொழில்நுட்பம் (தற்பொழுது, செவ்வாய்க் கிரகத்திற்கு கட்டளைகளையும், புகைப்படங்களையும் அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற முறையில்). இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் வெற்றியுடன் உருவாக்கப்படுமா என்பதைக் காலம்தான் சொல்லும். காத்திருப்போம்!

    References / Sources: Mars Orbiter Mission – Wikipedia. 2018. Mars Orbiter Mission – Wikipedia. [ONLINE] Available at: https://en.wikipedia.org/wiki/Mars_Orbiter_Mission [Accessed 03 Sep 2018]

    ==========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கட்டுரை ஆசிரியர், செவ்வாய்க் கோள் பற்றி இதுவரை உலக வானியல் விஞ்ஞானிகள், பொறி நுணுக்க நிபுணர்கள் கண்டுபிடித்த, யூகித்த தகவலை, முற்காலச் சீன, இந்திய வல்லுநர் எழுதி வைத்த தகவலோடு ஒப்பிட்டுக் கட்டுரை வடிக்கிறார்.

    வண்ணத்தில் குறிப்பிட்ட மூன்று கூற்றுகள் [நீர் இருப்பு, இந்திய வல்லுநர் வானியல் விஞ்ஞான அறிவு, முப்பக்க அண்ட மின்தொடர்பு (3D objects Electronic transmission)] தர்க்கத்துக்கு உரியவை. நீர்வள இருப்பு, உயிர் மூலவி இருப்பு இன்னும் உறுதியாக்கப்படவில்லை.

    ஆயினும் செவ்வாய்க் கோள் பயணம் பற்றிக் கடந்த கால, எதிர்காலத் தகவல்கள் பலவற்றைச் சேகரித்து உருவான இக்கட்டுரை, வல்லமையில் வெளியிடத் தகுதியுடையது.

    ==========================================

    Share
  • இஸ்ரேல் தேர்தலில் நேத்தன்யாஹு வெற்றி பெற்றுவிட்டார்; இது என்ன வெற்றி!?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் தேர்தலில் நேத்தன்யாஹு வெற்றிபெற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இது என்ன வெற்றி? 120 அங்கத்தினர்கள் உள்ள பாராளுமன்றத்தில் 35 இடங்களே பெற்றிருக்கிறார். இது ஓட்டு வங்கியில் 34 சதவிகிதம்தான். இன்னொரு தேர்தலைத் தவிர்ப்பதற்காகப் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் இடங்கள் பெற்றுவிட்டால் அந்தக் கூட்டுக் கட்சி அரசு அமைக்க முடியும். (இந்தியாவில் கர்நாடகாவில் 2018-ஆகஸ்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களே பெற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்ததுபோல்தான். 104 இடங்கள் வாங்கிய பிஜேபி 78 இடங்கள் வாங்கிய காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்பாததால் ஜனதா தளத்திற்கு அதிர்ஷ்டம் அடித்தது.)

    மற்றக் குட்டிக் கட்சிகள் வெள்ளை-நீலம் கட்சியின் தலைவர் கேன்ட்ஸோடு (இந்தக் கட்சிக்கும் 35 சீட்டுகள் கிடைத்திருக்கின்றன) சேர விரும்பாததால் நேத்தன்யாஹுவோடு சேர முடிவு எடுக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் நேத்தன்யாஹுவுக்கு அரசு அமைக்கும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

    நேத்தன்யாஹு வன்மம் படைத்தவர்; தனக்கு வேண்டாதவர்களைப் பழிவாங்குவதில் கில்லாடி; ஊழல் புரிந்தவர்; பாலஸ்தீனர்களின் உரிமைகள் என்று வரும்போது அவர்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பவர். இவருக்கு ஐந்தாவது முறையாக – இஸ்ரேலின் ஸ்தாபகர் பென்-குரியனுக்குக் கிடைத்ததைவிட அதிக முறை – ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது. ஊழல்கள் புரிந்திருக்கிறார் என்று இவர்மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதம மந்திரியாகிவிட்டால் பிரதம மந்திரிக்குத் தண்டனை வழங்க முடியாது என்று சட்டம் இயற்றிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

    இது இஸ்ரேலுக்கு சோதனையான சமயம் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது. அவர் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்கப் போவதால் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு அமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது, இஸ்ரேலின் ஜனநாயகத் தன்மைக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு வந்திருக்கிறது, அமெரிக்க யூதர்களுக்கும் இஸ்ரேலின் வலதுசாரி அரசுக்கும் இடையிலான உறவு முறிந்துபோகும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறது.

    நேத்தன்யாஹு காலத்தில் இஸ்ரேல் நிறையச் சாதனைகள் படைத்திருக்கிறது என்பது உண்மைதான். இவையெல்லாம் அமெரிக்காவின் உதவியால்தான் என்பதை மறுக்க முடியாது. இஸ்ரேல் தோன்றிய நாளிலிருந்தே அமெரிக்காவும் அமெரிக்க யூதர்களும் இஸ்ரேலுக்கு நிறையப் பண உதவியும் தொழில்நுட்ப உதவியும் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது ட்ரம்ப் உதவியும் நிறைய அளவில் கிடைத்திருக்கிறது. இரண்டு crooks-களும் ஒன்று
    சேர்ந்திருக்கிறார்கள். இது உலகுக்கே நல்லதல்ல.

    இதுவரை அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக உலகுக்குக் காட்டிக்கொண்டாவது இருந்தது. இப்போது அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்யாத சில காரியங்களை
    ட்ரம்ப் செய்திருக்கிறார். அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றினார். போரில் சிரியாவிடமிருந்து கைப்பற்றிய, இதுவரை ஆக்கிரமித்திருந்த கோலன் ஹைட்ஸை இஸ்ரேலின் இறையாண்மைக்கு நேத்தன்யாஹு உள்ளாக்கிக்கொண்டபோது நேத்தன்யாஹுவின் வேண்டுகோளுக்கு இணங்க ட்ரம்ப்பும் அதை அங்கீகரித்தார். கிழக்கு ஜெருசலேமிலிருந்த அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடிவிட்டார்.

    தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாட்களில் நேத்தன்யாஹு ஓட்டுகளைப் பெற, பாலஸ்தீனர்களுக்குரிய இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் கட்டியிருக்கும் குடியிருப்புகளை இஸ்ரேலின் ஆளுகைக்குக் கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தார். பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கை இஸ்ரேல் போரில் பிடித்துக்கொண்டது முதல் தவறு. அதில் யூதர்களுக்காகக் குடியிருப்புகள் கட்டியது இரண்டாவது தவறு. இப்போது அதை இஸ்ரேலின் வசமாக்கிக்கொள்ள நினைப்பது அதைவிடப் பெரிய தவறு. இது சர்வதேசச் சட்டத்திற்கே விரோதமானது. இப்படிச் செய்தால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாகும் சாத்தியமே இல்லை.

    இஸ்ரேல் உருவானதிலிருந்து செய்த அட்டகாசங்களையெல்லாம் கண்டித்து ஐ.நா. பொதுச்சபை கொண்டுவந்த எந்தத் தீர்மானத்தையும் இஸ்ரேல் மதிக்கவில்லை; அது அப்படி நடந்துகொள்வதற்கு அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து அந்தத் தீர்மானங்களை முறியடித்துவிடுவதுதான் காரணம். இஸ்ரேலும் பாலஸ்தீனர்களும் கூடிப் பேசி இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லைகளை முடிவெடுக்க வேண்டும், இஸ்ரேலால் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட  பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவது பற்றி முடிவெடுக்க வேண்டும், ஜெருசலேமின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று 1995-இல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தம் போட்ட எந்த ஷரத்தையும் இஸ்ரேலின் பிரதம மந்திரியாக 1996-இல் பதவியேற்ற நேத்தன்யாஹு நிறைவேற்றவில்லை.

    ஆஸ்லோ ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதற்கு நேத்தன்யாஹுதான் காரணம். நேத்தன்யாஹு பிரதம மந்திரியாகப் பதவியேற்ற பிறகு ஒரு காலத்தில் தென் ஆப்பிரிக்கா இருந்தது போல் இஸ்ரேலும் ஒரு இன ஒதுக்கல் நாடாக மாறிவிடும்; அதில் பாலஸ்தீனர்களுக்கு யூதர்களோடு சம உரிமைகள் இருக்காது. எல்லாப் பாலஸ்தீனர்களையும் பாலஸ்தீனத்தை விட்டே விரட்டிவிட்டு, இஸ்ரேல் யூதர்கள் மட்டுமே வாழும் ஒரு ஜனநாயக நாடாக விளங்க வேண்டும் என்ற நேத்தன்யாஹுவின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 208

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும்  காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 207-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பகலவனும் பனித்துளியும் பார்வையால் பேசிக்கொள்ளும் அழகைத் தன் நிழற்படத்தில் பதிவுசெய்திருப்பவர் திரு. சந்தோஷ்குமார். இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 207க்கு அளித்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். படமெடுத்தவர், தேர்வாளர் இருவருக்கும் என் நனிநன்றியை நவில்கின்றேன்.

    கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பை வாரி வழங்கும் இயற்கைக் காட்சிகள் காணக் காணத் தெவிட்டாதவை. நேரெதிர் குணங்களைக் கொண்ட குளிர்ந்த பனித்துளியும் கொதிக்கும் சூரியனும் ஒன்றையொன்று சந்திக்கும் இக்காட்சிக்குப் பொருத்தமான கருத்துக்களைத் தம் கவிதையில் பொதிந்துதரக் கவிஞர்களை அழைக்கின்றேன்!

    *****

    உலகுக்கு உதயம் எப்போது? ஆதவன் உதிப்பதிலா, அன்பை விதைப்பதிலா, அகிம்சை நிலைப்பதிலா, பண்பை வளர்ப்பதிலா, பண்பிலாது அரசியல் செய்வோர் அரியணை இழப்பதிலா என்று தன் உள்ளத்தெழுந்த நியாயமான ஐயங்களையெல்லாம் அடுக்கடுக்கான வினாக்களாய்ப் பட்டியலிட்டிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    உலகமே.. உதயம் எதனில்…?

    மனிதனை மனிதன் தாக்கி அழிக்கும் கொடுஞ்செயல் அழிவதிலா..?
    மனிதர்தம் மனதில் மாறாது நிலைத்த வன்மம் தொலைவதிலா..?
    தன்னலம் ஒன்றே பெரிதெனக் கருதும் மனநிலை மடிவதிலா..?
    கண்களைப் போன்று பணத்தினைப் போற்றும் பண்பு ஒழிவதிலா..?

    ஆயுதப் போட்டிகள் அடங்கி உலகு அமைதியை அடைவதிலா..?
    இயற்கையைச் சிதைத்து இன்பம் நுகரும் போக்கு மறைவதிலா..?
    கயவரை யொத்த அரசியல் செய்வோர் அரியணை இழப்பதிலா..?
    இயலாதவர்க்கு இயன்றதைச் செய்து இன்பம் துய்ப்பதிலா..?

    அமைதியை இழந்துத் தவிக்கும் மக்கள் நிம்மதி பெறுவதிலா..?
    சுமைகள் நிறைந்த கல்வியைத் தவிர்த்து பண்பை வளர்ப்பதிலா..?
    இமைய மலையின் அளவினைப் போன்று ஆசை கொள்வதிலா..?
    இமைப் பொழுதேனும் மறைபொருளே உன்னை நினைப்பதிலா..?

    உலகமே உணர்த்திடு உதயம் என்பது ஆதவன் உதிப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது அன்பை விதைப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது அகிம்சை நிலைப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது சத்தியம் தழைப்பதிலா..?

    *****

    இரவென்னும் போர்வை போர்த்தி, பூமித்தாயின் மடியில் கண்ணுறங்கும் பனித்துளிக்கு அண்ணனாய்க் கதிரவனைக் கற்பனைசெய்து, தாயின் அன்புக்கு அண்ணனும் தம்பியும் தம்முள் போட்டியிடும் அழகைக் கவிநயத்தோடு தன் பாட்டில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    அன்னையின் மடியில்…  

    பகலவன் மேற்கில் 
    பதுங்கியதும்
     
    இரவெனும் போர்வை
    இருளாய்
     
    இப்புவியைப் போர்த்தியதோ?

    நடுங்கும் குளிர்தனில்
    இதமாய்க் குளிர்காய
     
    அன்னை மடிதேடி
     
    வெண்பனியாய்
    பூமித்தாய் அவள் மடிமீது
     
    படர்ந்தாயோ?

    அதிகாலைக் கதிரவனாய் 
    மூத்தவன் முதலில்
     
    விழித்துக்கொள்ள
     
    அன்னை மடிமீது
     
    இளம்பனியாய் இளையவன்
     
    உறங்கக் கண்டு
     
    நெருப்பாய்க் கொதித்திட
     
    விலக மனம் இன்றி
     
    உறுகியதோ பனித்துளி?
     

    கதிர்மீது உருகும் பனி
    அழுகின்ற முகமாய்த் தோன்ற
     
    கண்டு கதிரவன் தடுமாற
     
    அன்னையின் அரவணைப்பு
    இன்னும் சற்று அதிகம்
     
    இளம்பனிக்குக் கிடைத்திட
     
    மேகத்திற்குள் ஒளிந்ததோ சூரியன்?
     

    பூத்துக் குலுங்கும் பூமித் தாய் அவள்
    புன்னகைக்குத் துணையாய் கதிரவன் இருக்க
     
    முத்தாய் முகத்தில் பூத்து
    முத்தங்கள் பதித்துச் சென்றதோ பனித்துளி?
     

    ***** 

    சமூக அக்கறையை, சுவைமிகு கற்பனையைக் கவிதைகளாக்கித் தந்திருக்கும் வல்லமைமிகு கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது இனி…

    விடியும் வேளை…

    விடியும்வரை
    வியாபித்திருந்தது
    பனிநீரின் அரசாங்கம்..

    பச்சைப் புல்நுனிமுதல்
    பரந்துயர்ந்த மரங்கள்
    பட்ட மரங்கள்,
    விட்டுவிடவில்லை எதையும்
    எட்டும் தூரம்வரை..

    ஆட்சி மாறுகிறது
    அதிகாலையில்,
    பகலவன் வருகிறான்
    பதவி ஏற்க..

    பதறி ஓடும்
    பழைய ஆட்சியாளர்கள்-
    பனித்துளிகள்…!

    இருட்டிலே அரசாட்சி செய்த பனிநீர், பகலவனின் வெளிச்சம் வந்ததும் அகலுவதை, புதிய ஆட்சியாளர்கள் பதவி ஏற்கையில் பழையவர்கள் பதறி ஓடும் அரசியல் நிகழ்வுக்குச் சுவையாக ஒப்பிட்டிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள் 

    கொங்கு நாடு கன்னியாகுமரி போலவே தனக்கெனத் தனிவரலாறு கொண்டிருந்ததானது அங்கத்து கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. கொங்கு, சோழர் காலத்தில் இங்கு கோயில் இயக்கம் தொடங்கியது முதல் அவர் உத்தாரம் (support) பெற்று நல்ல முறையில் கோயில் இயக்கம் எடுத்துச் செல்லப்பட்டதைக் கல்வெட்டுகளில் காண முடிகின்றது. இவற்றில் வெள்ளாளர் குழுக்களாக, கூட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப் பொறுப்பில் இருந்த வெள்ளாளரிடம் பறையர் காவற் பணியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. இப்பறையர்கள் இங்கத்து கோயில்கள் சிலவற்றில் விளக்கேற்றித் திருத்தொண்டு புரிந்தது பதிவாகி உள்ளது. இது இவர்கள் கோயிலுட் சென்று கருவறை மூலவரை எதிர் வணங்கினமைக்குச் சான்றாகின்றது.

    இதை ஏன் இங்கே சிறப்பாகக் குறிக்க வேண்டி உள்ளது என்றால் புராணங்கள், மனுதர்மம் ஆகியவற்றின்படி இவர்கள் கோயிலில் நுழைய அனுமதி இல்லாத தீண்டத் தகாதோராக நடத்தப்பட்டனர் என்ற தப்பான, பிழையான கருத்தே மக்கள் பெரும்பாலார் நெஞ்சங்களில் குடிகொண்டு உள்ளது. இப்பிழையான கருத்தை முறியடிக்கும் ஆயுதமாகச் சில கல்வெட்டுகள், கொங்கில் காணக் கிடைக்கின்றன.

    ஏன் இங்கே மட்டும் கிடைக்கின்றன? மற்ற இடங்களிள் இவ்வாறான கல்வெட்டுகள் இல்லையா? என்ற கேள்விக்கு முதலாவதாக இங்கே தமிழகத்தின் பிற பகுதிகள் போல் அல்லாமல் பெரிய கோயில்கள் மிகக் குறைவு அதனால் கல்வெட்டுகளும் குறைவு. ஆதலால் இங்கத்துச் சாதி உணர்வுள்ளவரில் தனியார் சிலர், தம் சொந்தச் செலவில் இங்கத்துக் கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்தும், படித்தும் அச்சில் ஏற்றி, நூலாக வெளியிட்டு உள்ளனர். இப்படி மற்ற இடத்தில் பெரிதாக எவரும் செய்யாததால் பறையர் பற்றிய செய்திகள் பிற இடங்களில் அதிகம் வெளியாகவில்லை.

    வெளியான அளவிற்கு இவை பறையர் சமூக சமநீதிப் போராட்டத்திற்கான சிறந்த ஆயுதங்களாக உள்ளன. இதை உணர்ந்தால் இவர்களுக்கு நன்மை உண்டாகும். அப்படி அல்லாமல் மீண்டும் மீண்டும் புராணத்தையும் மனுதர்மத்தையும் காட்டி சைவ, வைணவ மதங்களைச் சாடி, பிராமணரைப் பழிப்பார்களானால் இக்கல்வெட்டுகள், பிடியில்லாக் கத்தியாக இவர்களைத்தான் காயப்படுத்தும். கொங்கு கல்வெட்டு போல பிற இடத்துக் கல்வெட்டுகள், கோயில் வாரியாக நூலாக வெளியாவதற்கு நடுவண் தொல்லியல் துறைக்கு அழுத்தம் தர வேண்டும். இனி, சில கல்வெட்டுகளைக் காண்போம்.

    கோயம்புத்தூர் மாவட்டம் சங்கமேசுவரர் கோயில் தெற்கு ஜகதி உள்ள 3 வரிக் கல்வெட்டு.    

    1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு பதினேழாவது எதிர் எதிர் பேரூர் நாட்டு கோவன்புத்தூர் உடையார் சங்கீசுரமுடையார் கோயில் பக்கல் வடபரிசார நாட்டி
    2. லிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன் வைத்த சந்தியா தீபமொன்றுக்கு மிக்கோயிலிற் காணியுடைய சிவப்பிராமணனுக்கு ஓரச்சு குடுத்தே _ _ _ _
    3. சந்திராதித்தவரை செல்வதாகவு மிக்கோயிற் குடமுங் குச்சியுங் கொடு புக்கானிவனொருவன் செலுத்தக் கடவேனாகவும் கல்வெட்டுவித்தேநிது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பக்கல் – for, ஆக; நாட்டுக் காமுண்டன் – ஊர் காவலன்; காணியுடைய பிராமணன் – official priest ; அச்சு – காசு; புக்கான் இவன் ஒருவன்- கருவறையில் புகும் உரிமையுள்ள பிராமணன்; பன்மாகேசுவரர் – சிவனடியார்; ரக்ஷை – காக்கவேண்டும்.

    விளக்கம்: கொங்கு சோழர் மூன்றாம் விக்கிரம சோழனுக்கு 17+1+1 = 19 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1292 ) கோயம்புத்தூர் தெற்கு சங்கமேசுவரர் கோயிலில் வடபாரிச நாட்டில் வாழ்கின்றவனும் புல்லிகூட்டத்து வெள்ளாளனிடம் பணியில் உள்ளவனுமான பறையனான பறையன் என்பான், ஊர்க் காவல் செய்து வந்தான். அவன் இக்கோயில் காணியுடைய சிவப் பிராமணனிடம் காசு ஒரு அச்சு கொடுத்து சந்தியா விளக்கு ஒன்று எரிக்கச் செய்தான். இது சந்திர சூரியர் காலம் வரை ஏற்று நடத்தப்படும் என்று குடமும் குச்சியும் கொண்டு கருவறையில் நுழையும் அனுமதி பெற்ற பிராமணன் அப்படியே செய்வதாகக் கல்வெட்டி, அதைச் சிவனடியார் காக்க வேண்டும் என்கிறான்.

    இக்கல்வெட்டில் பயிலும் காணியுடைய பிராமணன், புக்கான் இவன் ஒருவன் என்ற சொல்லாட்சிகள் கருவறை பிராமணரைப் பிற கோயில் பிராமணரிடம் இருந்து வேறுபடுத்தி உயர்வாகக் காட்டுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அக்காலத்தே கோயில் சாராத (unofficial) ஆனால் அகவை முதிர்ந்த கோயில் சார்ந்த பிராமணருக்கு சார்பாக (substitute) அவர்களது உறவினரும் கோயில் பூசையில் ஈடுபட்டிருந்தனர். இத்தகையோருக்கு அந்த முதிர்ந்த பிராமணர் தான் தன் உரிமையில் இருந்து ஒரு பங்கைச் சம்பளமாக வழங்குவார்.  இது தான் அந்த வேறுபாடு.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 153 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    கோயம்பூத்தூர் வடக்கில் அமைந்த இடிகரை ஊரில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவர் 15 வரிக் கல்வட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய / தேவற்கு யாண்டு 8 வது வ / டபரிசார நாட்டுக் கொற்ற / மங்கலத்திலிருக்கும் வெள் / ளாழன் பையரில் பறைய / ன் பறையனேன் ஆளுடை / யார் வில்லீஸ்வரமுடையா / ற்கு வைத்த / சந்தியா தீபவிளக்கு / ஒன்றுக்கு ஒடுக்கின வராகன் பணம் 10 இ / ப் பணம் பத்துங் கைக் கொண்டேன் இக் / கோயிற் காணியுடைய சிவ பிராமணன் / காசிவ கோத்திரத்துத் திருநட்டன் அகத்திஸ்வர / முடையானான சித்தரமேழி பட்டனேன் கு / டங் கொடு கோயில் புகுவார் சந்திராதித்த / வரை செல்வதாக பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பையர் – கூட்டம், கீழ்ப்படிந்த வீரன், மகன், subordinate warrior; ஆளுடையார் – இறைவர்; ஒடுக்கின – கொடுத்த; வராகன் – ஒரு வகை காசு; சந்தி தீபம் – மாலை விளக்கு.

    விளக்கம்: இது 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியனான வீர பாண்டியனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் கொற்ற மங்கலத்தில் இருக்கும் பையர் கூட்டத்தை சேர்ந்த வெள்ளாளனிடம் பணியாற்றும் பறையன் பறையன் என்பான் வில்வீஸ்வரமுடையாருக்கு சந்தி விளக்கு ஒன்றிற்காக 10 வராகன் பணம் கொடுக்கின்றான். இதை பெற்றுக்கொண்ட கோயில் காணியுடைய சிவபிராமணன் காசிபகோத்திரத்தில் பிறந்த திருநட்டன் அகத்தீசுவரன் என்ற சித்திரமேழி பட்டன் அதைச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை நடத்திச் செல்வதாக உறுதி கூறுகின்றான்.  விளக்கேற்றியவர் கோயிலில் சென்று வழிபடுவது இயல்பு. இதாவது, பறையன் பறையன் உள்ளே சென்று வழிபட்டுள்ளான். இது அவன் தீண்டாமைக்கு ஆட்படவில்லை என்பதற்கு சான்று.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 179, மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    ஈரோடு பெருந்துறை வட்டம், ஆதியூர் கண் அமைந்த ஆதீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு நாலாவது குழப்பு நாட்டு ஆதவூரில் வெள்ளாளன் வண்ணக்கரில் பிள்ளையாழ்வான் கரும்பறையனேன் நாயனார் ஆதீஸ்வரமுடையார் திருக்கோயில் திருநிலைகால் இரண்டு படி இரண்டும் என் தர்மமாகச் செய்வித்தேன் கரும்பறையனேன்.

    திருவெழுத்திட்டு – முடிசூட்டி; திருநல்லியாண்டு – ஆட்சி ஆண்டு; பிள்ளையாழ்வான் – கீழ்படிந்த பணியாள்; திருநிலைக்கால் – கதவு நிலை.

    விளக்கம்: மதுரை வேந்தன் வீரபாண்டியனின் நான்காம் ஆட்சி ஆண்டான 1269 இல் குழப்பு நாட்டில் அடங்கிய ஆதவூர் வண்ணக்கர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாளான கரும்பறையன் என்பான் ஆதிசுரமுடைய ஈசன் கோயிலில் இரண்டு திருநிலைக் கதவும் இரண்டு படியும் செய்வித்து கொடுத்து திருத்தொண்டு புரிந்தான்.

    பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப் பாடலும், பக். 143

    கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் கோபுர வாசல் இடது நிலைக்காலில் வெட்டப் பட்ட 11 வரி கல்வெட்டு.

    ஸ்வஸ்திஸ்ரீ வீ / ராஜேந்திர தேவற்கு / யாண்டு பத்தாவ / து கடற்றூர் வெ / ள்ளாந் கள்ளந் ப / றையந் நரவீரகே / ரழச் சிலை செட்டி / இட்ட திருநிலை வாய் / முகவணை உ / த்தரமும் திருக்க / தவும் இட்டேந்.

    திருநிலைவாய் – கோபுரத்தோடு கூடிய வாயில்; முகவணை – வாயிலை ஒட்டிய கற்சுவர்.

    விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராஜேந்திரனின் 10ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1217) கடத்தூரில் வாழும் வெள்ளாளனுக்குப் பணியாற்றும் கள்ளன் பறையன் என்பான் நரவீரகேரளச் சிலைச் செட்டி சார்பாக இக்கோயில் திருநிலை வாயிலுக்கு முகவணை, உத்தரம், திருக்கதவு ஆகியன செய்து இட்டான். இதை வீரகேரளச்செட்டி நேரில் நின்று கவனிக்க முடியாததால் கள்ளன் பறையன் இத் திருப்பணியை அவன் சார்பில் மேற்பார்வை செய்து இட்டான் என்று கொள்வதே முறையானது. அந்த வகையில் கோயிலில் வழிபாடும் நடத்தி இருக்கின்றான்.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக் 190.

    கோயம்புத்தூர் வடக்கில் இடிகரை ஊரில் அமைந்த வல்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவரில் பொறித்த 4 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 12 வது வடபரிசார நாட்டு இடிகரையி லிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் ச
    2. டையன் நேரியான் பறையனேன்ஆளுடையார் வில்லீஸ்வர முடையாற்கு வைத்த சந்தியா தீபவிளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின வ
    3. ராகன் பணம் 10. இப்பணம் பத்துங்கைக் கொண்டேன் இக்கோயிற் காணியுடைய சிவபிராமணன் காசிவ கோத்திரத்து திருநட்ட அகத்தீ
    4. ஸ்வரமுடையானான சித்திரமேழிப் பட்டனேன் குடங்கொடு கோயில் புகுவார் சந்திராதித்த வரை செல்வதாக இத்தன்மம். பன்மீயேசுவர ரக்ஷை.

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியரில் வீரபாண்டியனுக்கு 12 ஆவது ஆட்சி ஆண்டில் இடிகரையில் வாழும் பையர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாள் நேரியான் பறையன் வில்லீசுவரமுடைய இறைவர்க்கு மாலை விளக்கு ஏற்ற 10 வராகன் பணம் கொடுத்தான். இதைக் கோயில் அலுவல பிராமணன் சித்திர மேழிப் பட்டன் பெற்றுக் கொண்டு சந்திர சூரியர் உள்ள வரை நடத்துவதாக உறுதி தந்தான்.

    இதே கோவிலில் 8ஆம் ஆட்சி ஆண்டின் இதே போல ஒரு கல்வெட்டு மேலே இடம்பெற்றுள்ளது.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 342

    கோயம்புத்தூர் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ள கபாலீசர் கோயியில் முன்மண்டப தெற்கு குமுதத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு இருபத்து நாலாவது _ _ _
    2. பாக்குடியில் இருக்குஞ் சாமந்தரில் குன்றன் _ _ _ _
    3. உடைய பாரசிவரில் வீற்றிருந்த வறியான் _ _ _
    4. இடங்கை நாயகந் நித்தப் பரையன்உள்ளிட்டாரும் வடுக _ _ _
    5. யாரும் இவர் _ _ _ _ பிடாரியாற்கு சந்தியா தீபத்துக்கு _ _ _
    6. இதுபன்மாயேசுவர ரக்ஷை.

    பாரசிவர் – அம்மன் கோயில் பூசகர்; சாமந்தன் – அமைச்சன் அல்லது படைத்தலைவன்;  பிடாரி – துர்கை.

    விளக்கம்: கொங்கு சோழரில் வீர ராஜேந்திரனுக்கு 24 நாலாவது ஆட்சிஆண்டில் (கி.பி.1230) பாக்குடியில வாழும் சாமந்தன் குன்றன், கோயில் பூசகரான பாரசிவர் வீற்றிருந்த வறியான், இடங்கைப் பிரிவுத் தலைவன் நித்தப் பரையன் உள்ளிட்டோர் ஆன இவர்கள் பிடாரிக்கு மாலை விளக்கு எரிக்க ஆவன செய்துள்ளனர்.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 270

    திருப்பூர் காங்கேயம் வட்டம் பட்டாலியில் உள்ள பால்வண்ணீசுவரர் கோயில் தெற்கு சுவர் கல்வெட்டு.

    1.   ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்

    2.    செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால் 

    3.   வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி

    4.   ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்

    5.   பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு

    6.   டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _  

    வேளான் – அரசன், அரசமரபினன், ஆட்சியாளன்; மகன் – கீழ்படிந்த வீரன்.

    விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவனுக்கு கீழ்படிந்த வீரன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன் கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ள வரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

    பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 11, 2012,  த.நா.அ. தொல்லியல்துறை.

    Share
  • திணை பாயாசமும் திரு.வி.க குருகுலமும் (3)

    இன்னம்பூரான்

    சான்றோர்கள் வரலாறு படைக்கிறார்கள். நிகழ்வுகளும் அவர்களது


    வாழ்க்கையின் படிநிலைகளாக அமைந்து விடுகின்றன. திரு.வி.க. அவர்கள் காந்தி மஹானை முதல் தடவை சந்தித்து தேசபக்தர் சேலம் விஜயராகவாச்சாரியர் அவர்களின் அன்பினால் கிடைத்த அறிமுகம். காந்திஜி சென்னைக்கு வரும் ரயிலில், அரக்கோணமோ, ஜோலார்பேட்டையா என்பது நினைவில் இல்லை. அந்த ஜங்க்ஷனில், சேலம் விஜயராகவாச்சாரியார் கொடுத்தக் கடிதத்துடன், ரயில் வண்டியில் ஏறி, தயக்கத்துடன் காந்திஜியை சந்தித்து அதை கொடுக்கிறார். தன் சொற்பொழிவுகளை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்த்து அளிப்பதற்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறார். அதற்குத்தான் இந்த சிபாரிசு. காந்திஜி நேராக, சுற்றி வளைக்காமல், விஷயத்துக்கு வருபவர். அவருடைய வினாக்களுக்கு திரு.வி.க. விடையளித்தது என் தாத்தாவை எனக்கு நினைவூட்டுகிறது. தாது வருட பஞ்சத்தில் அடிப்பட்டு, தரிசாக போய்விட்ட அரந்தாங்கியை விட்டு, பிழைப்பு தேடி, செட்டி நாடு வந்த அவரை வேலைக்கு வைக்கப்போகும் செட்டியாரிடம், அவர் ‘ எனக்கு இங்கிலீஷ் தெரியாது; தமிழ் தான் நன்றாகத்தெரியும். உங்கள் வேலைகளை தரமான முறையில் செய்வேன்.’ என்றாராம். செட்டியாருக்கு இவர் வேலை செய்யும் தோரணையும், திட்டமிடுதலும், பிடித்துப்போய்விட்டதாம். கதவுகளில் வெள்ளித்தகடு அடித்த தன் சொந்தக் காரை தான் இவருக்கு அனுப்புவாராம். ஏதோ பழங்கதை. இதே மாதிரி தான், எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்யாததை முன் வைத்து, காந்திஜியின் உரைகளை உடனுக்குடன், தமிழாக்கம் செய்து அளிக்க முடியும் என்று தீர்மானமாக சொல்லி விடுகிறார். அவரும் ஏற்றுக்கொள்கிறார். பிறகு சென்னையில் அந்த ஊழியமும் காந்திஜிக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைகிறது. 

    இவரும் தமிழ் காந்தியாகி வருகிறார். அந்த உருக்கமான தொடர் நிகழ்வை எழுத ஒரு தனி புத்தகம் தேவை. இது நிற்க.

    இன்று ஏப்ரல் 8, 2019. நூறு ஆண்டுகளுக்கு முன் அதே தேதியில்

    [ஏப்ரல் 8, 1919] நடந்ததை கவனிப்போம். அண்ணல் காந்தி நிறுவிய சத்யாக்ரஹா கமிட்டி தற்பொழுது, பத்திரிகை, படைப்புகள் ஆகியவற்றில் தனக்கு சாதகமாக இல்லாததை மட்டுறுத்துவது என்ற விதியை மட்டும் மீறப்போவதாக தீர்மானிக்கிறது. காந்திஜி எழுதிய ஹிண்ட் ஸ்வராஜ்யா இதழ்கள்,சர்வோதயா இதழ்கள், யுனிவெர்ஸல் உதயம், சத்யாக்ரஹியின் கதை, துருக்கி சீர்திருத்தவாதியும், சர்வாதிகாரியும் ஆன முஸ்தாஃபா கெமால் பாஷா அவர்களின் வாழ்க்கை, உரைகள் அடங்கிய நூல் ஆகியவை, தடை செய்யப்பட்டிருந்த்தாலும், அதை மீறி சட்ட விரோதமாக விற்கப்படுகின்றன. அதில் ஈடுபடும் தியாகிகளில், காந்திஜி, சரோஜினி நாயுடு, திரு.சோபானி, திரு லக்ஷ்மிதாஸ் டைஶ்ரீ ஆகியோர் பிரபலம், அவர்கள் துணிவுடன் தன் கையொப்பமிட்டே அவற்றையும், பல சிறிய புத்தகங்கள், போஸ்டர்களை விற்றனர். இந்த செயலை நாம் இன்று உற்று நோக்கும்போது, கருத்துத்தடை இன்றும் செயல்படுகிறது என்று புலப்படுகிறது. அதனால் தான் நான் எழுதிய திரு.வி.க. சரிதம் பிரசுரம் செய்ய முடியவில்லை. அதில் ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ என்று ஒரு அத்தியாயம் தலைப்புடன் மட்டும் நிற்கிறது.

     

    Share
  • தன்னை அறிந்து இன்பமுற

    தன்னை அறிந்து இன்பமுற

    சௌ.பூரணி      

    நிறைஞர் பட்ட ஆய்வாளர்,

    யோகமும் மனித மாண்பும் துறை,

    பாரதியார் பல்கலைக்கழகம்,

    கோவை.

    முனைவர் வெ.இராமதாஸ்

    நெறியாளர், இணைப்பேராசிரியர்,

    யோகமும் மனித மாண்பும் துறை,

    விஷன் ஸ்கை ஆராய்ச்சி மையம்,

    அறிவுத் திருக்கோயில், ஆழியாறு.

    முன்னுரை

    நிலவுலகில் தோன்றிய உயிரினங்களில் சிறப்பு வாய்ந்தவன் மனிதன். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான விலங்குகளிடத்தில் இல்லாத பெருமை ஆறறிவாக மனிதனிடத்தில் மட்டுமே உள்ளது. பகுத்தும் தொகுத்தும் பார்க்கக்கூடிய பகுத்தறிவு அவனிடம் உள்ளதால், அவனால் சிந்தனையில் சிறந்து, பண்பில் பண்பட்டு, அறிவில் ஆண்டவனை அறிந்து இன்புற முடியும். அன்பையும்  அறத்தையும் கொண்டு இந்த ஆனந்த நிலையை தானும் அனுபவித்து, பிறரும் அனுபவிக்க உதவ முடியும். இறைவனோடு இணையும் சிறப்பை மனிதன் பெற்றிருந்தாலும் ஆண்டவனை அடைய முடியாமல் செய்வது அவனிடம் உள்ள ஆணவம் என்னும் தன்முனைப்புதான். தன்முனைப்பு மனிதனிடம் அழியும்போது, அவன் தன்னை, தனது ஆன்ம சொரூபத்தை அறிந்து இன்பம் அடைகிறான். ஆணவத்திரை விலகும் போது இறைவனின் திவ்ய தரிசனத்தைக் கண்டு இன்புற முடியும் என்பது மகான்களின் கூற்றாகும்.

    தான் என்னும் தன்முனைப்பு

    தன்முனைப்பு என்பது இறைவனை மறந்த நிலையில், மனிதன் தனது சிறப்பிற்கெல்லாம் காரணம் தான் தானென்று எண்ணும் எண்ணம் ஆகும்.  தன்முனைப்பு ஆனது கர்வம், ஆணவம், செருக்கு, இறுமாப்பு என வேறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகைத் தோற்றுவித்து அதில் உயிர்களைப் படைத்து, அவற்றைக் காத்து,  ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவனை மறந்து, தனது அழகு, அறிவு, திறமை, புகழ், கல்வி  இவற்றை நினைத்துத் தற்பெருமை கொள்வதே தன்முனைப்பாகும்.

              ”அறிவின் மயக்க செருக்கு தான் தன்முனைப்பாகும். இது ஒரு

               திரை போன்று அறிவின் ஒளியை மறைத்து நிற்கின்றது1

    என்னும் வேதாத்திரி மகரிஷியின் கூற்றிலிருந்து தன்முனைப்பு நமது அறிவினை மறைத்து மயக்க நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் மனிதன் மயக்கம் என்னும் மாயையில் சிக்கிக்கொண்டு துன்புறுகின்றான். இந்த மாயை அவனைத் தீய செயல்களைச் செய்யத் தூண்டி, பாவப் பதிவுகளை ஏற்படுத்துகிறது என்பது புலனாகிறது.

    தன்முனைப்பு தகர்ந்து மனிதன் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர் நோக்கில் சித்தர்களும் மகான்களும் நன்னெறிகளை அருளியுள்ளார்கள். அவற்றுள் கர்வம் களைந்து கடவுளை அறிவதற்கு ஆறாறு தத்துவம் ஏது? என்னும் சைவ சித்தாந்த நூல் நல்கும் வழிமுறைகளை ஆராய உள்ளோம்.

    சைவ சித்தாந்தம்

    சைவ சித்தாந்தம் என்பது முழுமுதற் கடவுளான சிவபெருமானை வணங்கும் சைவ சமயத்திற்கு அடிப்படையானது. சித்தாந்தம் – அந்தம் என்றால் முடிவு. சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை என்று பொருள் படும். சைவ சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவம் பதி, பசு, பாசம் என்பதாகும்.

    1. பதி      –        பேரறிவான இறைவனையும்
    2. பசு       –       அறிவுடைய உயிர்களையும்
    3. பாசம் –       ஆணவம், கன்மம்,  மாயை என்னும் மலங்களையும் குறிக்கின்றது.

    பாசம் என்னும் மலங்கள் உயிர்களின் அறிவை மறைத்து இறைவனை அடைய முடியாமல் தடுக்கின்றன. மலத்தினால் தோன்றும் ஆணவமே ஆண்டவனை அடைய விடாமல் தடுப்பது. ஆணவ, கன்மங்களின் கலப்பிற்கு ஏற்ப மாயை சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என வகைப்படுத்தப்படுகிறது.

    அகங்காரமும் அதன் வகைகளும்

    பிரகிருதி மாயையில் முதலில் சித்தியும், சித்தியிலிருந்து புத்தியும், புத்தியிலிருந்து அகங்காரம் என்னும் தன்முனைப்பும் தோன்றுகிறது.

                        “அகங்கார  தத்துவமானது தைசத அகங்காரம், வைகரி அகங்காரம்,

                        பூதாதி அகங்காரம் என மூன்று வகைப்படும்2

    அகங்காரமானது அதனிலிருந்து தோன்றும் தத்துவங்களுக்கேற்ப தைசத அகங்காரம், வைகரி அகங்காரம், பூதாதி அகங்காரம் எனப் பகுக்கப்பட்டுள்ளது. தைசத அகங்காரத்தில் மனம், அறிவுக் கருவிகளான தோல், வாய், கண், காது, மூக்கு ஆகியனவற்றில் இயங்கி, ஒளியாய் இருக்கிறது. வைகரி அகங்காரத்தில் மனம், கை, கால், வாய், எருவாய், கருவாய் ஆகியனவற்றின் வழியாகப் புறத்தே செயல்பட்டு விகாரப்படுகிறது. பூதாதி அகங்காரத்தில் பஞ்சபூதங்களும் அவற்றின் தன்மாற்றங்களான தொடுவுணர்வு, ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகியனவும் தோன்றுகின்றன என அகங்காரத்தின் தோற்றமும், அதன் வகைகளும் ஆறாறு தத்துவம் ஏது? என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.

    மாயையிலிருந்து தோன்றிய முப்பத்தாறு ஆன்ம தத்துவங்கள், உயிருக்கு அறிவை விளக்கும் ஒளிப்பொருளாக இருந்தபோதும், ஆன்மாவின் ஆணவமே அதனை அறியாமை  என்னும் மயக்கத்திற்கு ஆளாக்குகிறது.

                       “ஆறாறு தத்துவம் சொன்னோம் அடைவாக

                        மாறா மலம்இரண்டும்,  வா,  சொல்லக்கூறில்

                        அறியாமை ஆணவம்:  நீ யான, சுகதுக்கம்

                        குறியா வினைஎன்று கொள்3 

    என்ற பாடலின் மூலம் அறியாமையால் தோன்றும் “தான் என்னும் தன்முனைப்பும்”, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் புரியும் “பழிச்செயல்களும்”தான் மனிதனின் துன்பத்திற்குக் காரணம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் தனது மூலத்தை உணராமல், மனிதன் தான் (நான்) என்று எண்ணுவதே ஆணவமாகும். தன்முனைப்பால் செயல்களைச் செய்து வினைப்பதிவுகளை ஏற்படுத்திக்கொள்வதே கன்மம் ஆகும் என்பதனையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.

    சிவ நடனம்

    மனிதனிடம் உள்ள மலங்களுக்கு ஏற்ப சிவபெருமானின் சிவநடனம், ஊன நடனம், ஞான நடனம், ஆனந்த நடனம் என வகைப்படுத்தப்படுகிறது. ஊன நடனமானது உலகப் பற்று உடையவர்களுக்கானது. ஞான நடனமானது அருள்பற்று உடையவர்களுக்கானது. ஆனந்த நடனமானது சீவன் முக்தி நிலையை அடைவதற்காக ஆடப்படுகிறது எனச் சிவ நடனத்தை இந்நூல் விளக்குகிறது.

    மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்

    தான், அந்தம் ஆன, இடத்தே தங்கிடும்  –  ஆனந்தம்                

    மொண்டு, அருந்த நின்றுஆடல் காணும் அருள் மூர்த்தியாக்

    கொண்டதிரு அம்பலத்தான் கூத்து4

    என்ற பாடலானது ஆணவம், கன்மம், மாயை என்னும் தன்முனைப்பு, பாவப் பதிவுகள், மயக்கம் மறைந்து, தான் என்ற உணர்வும் மறைந்து மெய், வாய், மனம் அசையாது மகா மௌனத்தில் லயித்திருக்கும் முக்தர்கள் கண்டு களிப்புறும் பொருட்டு ஆடும் நடனம் ஆனந்த நடனம் என்பது புலனாகிறது. மேலும்,

    பரைஇடமா நின்றுமிகு பஞ்சாக்கரத்தால்

    உரைஉணர்வுக்கு எட்டா ஒருவன் –  வரைமகள் தான்

    காணும்படியே கருணை உருக்கொண்டு,  ஆடல்

    பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு5

    தான் என்னும் தன்முனைப்பு  ஒழிந்து வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத ஒப்பற்ற இறைவனைச் சரணடைந்து, “சிவாயநம” என்னும் மகாமந்திரம் கொண்டு தொழும் ஞானிகள், உமை மட்டும் கண்டு களிக்கும் சிவக் கூத்தை உள்ளத்தில் கண்டு இன்புறுவார்கள். இவர்களுக்குப் பிறவித் தொடர் அறுபடும் என்பதை மேற்கண்ட வரிகளின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

    மும்மலங்கள் ஒழிந்து, முதலாம் மலமான ஆணவம் அழிந்த நிலையில் இறைவனின் திருநடனக் காட்சியை காண முடிகிறது. அஞ்ஞான நிலையில் தன்முனைப்புடன் வாழ்பவர்களுக்கு இறைவன் உருவ வடிவத்தில் ஊன நடனமாகக் காட்சி தருகின்றான்.  மனம் நுணுகி, தன்முனைப்பினை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அறச்செயல் புரிந்து வாழ்பவர்களுக்கு, இறைவன் தோற்றங்களுக்கு அடிப்படையான விண் துகள்களாகக் காட்சி தருகின்றான். இது பார்க்கும் அனைத்தும், அணுத்துகள்களின் கூட்டாகக் காணும் ஆனந்த நிலையான ஞான நடனமாகும். தன்னில் உள்ள தன்முனைப்பினை முற்றிலும் அழித்த நிலையில், விண்ணிற்கு அடிப்படையான இறைத்துகள்களை அனைத்திலும் காணும் பேரானந்த நிலையினை அடையலாம். தன்னிலும், தன்னைப் போன்று பிற உயிர்களிடத்திலும், இறைவனைக் காணும் உன்னத நிலையே ஆனந்த நடனமாகும்.  ஆணவம் அழியும் போது மட்டுமே தான் யார் என்பதை உணர்ந்து தன்னில் உள்ள இறைவனை அறிந்து இன்புற முடியும் என்பதனை இறைவனின் திருநடனக் காட்சியின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    ஆணவம் அழிந்தால் முக்தி

    “அப்பாஇம் முக்திக்கு அழியாத காரணம்தான்

    செப்பாய் அருளாலே; செப்பக்கேள் – ஒப்புஇல்

    குருலிங்க வேடம்எனக் கூறில், இவைகொண்டார்

    கருஒன்றி நில்லார்கள், காண்” 6

    என்ற பாடலில் குரு வழிபாடு ஆணவத்தையும்; லிங்க வழிபாடு கன்மத்தையும்; சிவனடியார்களை வழிபடுவது மாயையையும் அழிக்க உதவும். இம்மூன்று வழிபாடுகளினால் மும்மலங்கள் நீங்கி முக்தி கிட்டும் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு வழிபாடு செய்யும்போது அன்பினால் மனம் கசிந்து உருகி, தன்னை இழந்து, சரணாகதி என்ற நிலையில் நிற்கும் போது தன்முனைப்பு தகர்ந்து; ஆணவம் அழிந்து; முக்தி என்னும் வீடு பேறு கிட்டுகிறது.

                            ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டுவிட்டால்

                              இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான்7

    தன்முனைப்பு தகரும் போது தன்னை அறிவதற்கும் இறைவனை உணர்வதற்குமான தடைகள் நீங்கப்பெற்று தானே பிரம்மம் எனும் உண்மையை உணர முடிகிறது, அண்டத்தில் இருப்பதை பிண்டத்தில் காணும் ஆனந்த நிலையை அடையலாம் எனும் மகா பெரியவரின் வாக்கிற்கேற்ப, தன்முனைப்பு நீங்கி,  இறைவனிடமும் குருவிடமும் சரணடைந்து, அடியார்க்கு அடியாராக வாழ்பவர்களுக்கு முழுமைப்பேறு எனும் முக்தி நிலை கிட்டும் என்பது புலனாகிறது.

    முடிவுரை:-

    தன்முனைப்பு தகரும் போது அறியாமை அழிந்து, அறிவில் உயர்ந்து அனைத்திலும் ஆண்டவனைக் காணும் ஆனந்த நிலையை அடைய முடியும். இந்நிலையில் பார்க்கும் உயிர்கள் அனைத்தையும் இறைவனாக காணும் அதாவது சீவனில் சிவனைக்காணும் பேரானந்த நிலையை அடைய முடியும். மனிதன், அகங்காரம் அழிந்தால் அன்பு பெருகும்; ஆணவம் ஒழிந்தால் ஆனந்தம் ஓங்கும்; இறுமாப்பு நீங்கினால் இன்பம் பொங்கும் என்பதை உணர்ந்து வாழும் போது தன்னை அறிகின்றான். தன்னில் உள்ள சிவத்தை உணர்கின்றான். இப்பேரானந்த நிலையை அடையவே இப்பிறவி எடுத்து வந்துள்ளோம் என்பதை உணர்ந்து தருக்கொழித்து தன்னை அறிந்து இன்புற்று வாழ்வோமாக!

    அடிக்குறிப்பு

    1. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள், ப.354
    2. தா.ம.வெள்ளைவாரணம், ஆறாறு தத்துவம் ஏது?, ப.11
    3. மேலது, ப.32
    4. மேலது, ப.40
    5. மேலது, ப.41
    6. மேலது, ப.48
    7. ரா.கணபதி (தொ.ஆ), தெய்வத்தின் குரல் முதல் பகுதி, ப.49

    துணைநூல் பட்டியல்

    1. தா.ம.வெள்ளை வாரணம், ஆறாறு தத்துவம் ஏது? திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம், சிதம்பரம், ஆ.2008
    1. வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை பாகம் 1, வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு, ஆ.2003
    2. வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை பாகம் 2, வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு, ஆ.2003
    3. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள், வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு, ஆ.2011
    4. ரா.கணபதி (தொ.ஆ), தெய்வத்தின் குரல், முதல் பகுதி, வானதி பதிப்பகம், சென்னை ஆ.2012
    5. https://brseeth.blogspot.com
    6. www.thevaaram.org

    Share
  • (Peer Reviewed) உடம்படுமெய்கள்

    (Peer Reviewed) உடம்படுமெய்கள்

    வெ. பரமசிவம்,
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை,
    து.கோ.வைணவக் கல்லூரி (தன்னாட்சி),
    அரும்பாக்கம், சென்னை – 106.

    உடம்படுமெய்கள்

    முன்னுரை

    மாந்தனின் வாழ்வினை வளப்படுத்தும் கருவிகள் பலவற்றுள் மிகவும் முதன்மையானது மொழி. அம்மொழியை வளப்படுத்துவன, சொற்கள். அச்சொற்களை நெறிப்படுத்துபவை, இலக்கணங்கள். அவ்விலக்கணங்களின் உயிர்நாடியாய்த் திகழ்வது, புணர்ச்சியிலக்கணம். அதன் ஒரு கூறாகிய உடம்படுமெய்களைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. தமிழில் உடம்படுமெய்களாகக் கொள்ளத்தக்கவை, அவை வருமிடங்கள், அவற்றைப் பற்றிய மரபிலக்கணிகள் மற்றும் அறிஞர்களின் கருத்துகள், உலக மொழிகள் சிலவற்றில் வழங்கும் உடம்படுமெய்கள், இன்றைய நிலையிலும் அவை தேவைப்படுவதற்கான கரணியம் (காரணம்) போன்றவை குறித்து மிக விரிவாக ஆய்ந்து விளக்குவதே  இக்கட்டுரையின் நோக்கம்.

    தரவுகள்

    தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம், (இந்நூல்கள் பரவலாக அறியப்பட்டவை. ஆதலால், ஆசிரியர் பெயர் முதலானவை தரப்படவில்லை). தமிழ் நூல் (த.சரவணத் தமிழன், இயற்றமிழ்ப் பயிற்றகம்:1972), இலகு தமிழ் ஐந்திலக்கணம் (மு.வேங்கடராமன்:1990), தென்னூல் எழுத்துப் படலம் – சொற்படலம் (ச.பாலசுந்தரம், தாமரை வெளியீட்டகம்:1991), தமிழ்க் காப்பு இயம் (மி.காசுமான், காசுமான் பதிப்பகம்:2005) ஆகிய நூல்கள் உடம்படுமெய்கள் பற்றிக் கூறியுள்ள கருத்துகள் இக்கட்டுரைக்கு முதன்மைத் தரவுகளாகவும் உரையாசிரியர்கள் / அறிஞர்கள்தம் கருத்துகள் துணைத் தரவுகளாகவும் அமைகின்றன.

    பயன்

    உடம்படுமெய்கள் எவை?, இன்றைய நிலையிலும் அவை தேவையா? என்பன போன்ற பல கருத்துகளை விளங்கிக்கொள்ள இக்கட்டுரை பயன்படும்.

    உடம்படுமெய் – விளக்கம்

    “உடம்படாத இரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு இடையே தோன்றும் மெய் உடம்படுமெய் என வழங்கப்படும். உடன்பாடு, உடம்பாடு என மருவி வழங்கியது. வருமுயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனப் பொருள் கோடலுமுண்டு”1 என்றும் “நிலைமொழி ஈற்றிலும் வருமொழி  முதலிலும் உயிரெழுத்துகளே நிற்பின், அச்சொற்கள் புணருங்கால் அவ்விரு உயிர்களும் தம்முள் உடம்படாது நிற்கும். அவற்றை உடம்படச் செய்வதற்கு அவற்றிடையே ஒரு மெய்யெழுத்து தோன்றும் அதனை உடம்படுமெய் என்பர். அவ்வாறு தோன்றும் மெய்கள் யகர வகரங்களே”2 எனவும் உடம்படுமெய் என்பதற்கான விளக்கத்தினைத் தருவர்.

    மரபிலக்கண நூல்களில் உடம்படுமெய்

    தொல்காப்பியர்  உடம்படுமெய்கள் இவையென்றோ, இன்னின்ன உயிர்களுக்குப்பின் இவ்விவ்வெழுத்து வருமென்றோ தெளிவாகக் குறிப்பிடாமல்,

              “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
    உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” (தொல்.எழுத்து.இளம்.141)

    என்ற நூற்பாவைச் செய்தார். இந்நூற்பாவிற்கு, ‘உயிரீறு உயிர்முதன் மொழியோடு புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுதல் நுதலிற்று. மூவகைப்பட்ட மொழிக்கும், உயிர் முதன்மொழி வருமிடத்து இடை உடம்படுமெய் வடிவு கோடலை நீக்கார். உ-ம்: புளியங்கோடு, எருவங்குழி, விளவத்துக் கொட்கும் என வரும்’ என்று உரை வரைந்தார் இளம்பூரணர். மேலும், ‘உரையிற் கோடல்’ என்பதனால் உடம்படுமெய்யாவன யகரமும் வகரமும் எனக் கொள்க. இகரவீறும் ஈகார வீறும் ஐகாரவீறும் யகரவுடம்படுமெய் கொள்வன, அல்லனவெல்லாம் வகரமெய் கொள்வன, ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான், விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி, ஆயிருதிணை என வரும். ‘வரையார்’ என்றதனால், உடம்படுமெய்கோடல் ஒருதலை அன்றென்பது கொள்ளப்படும். கிளி அரிது, மூங்கா இல்லை என வரும்’ என்றும் விளக்கினார்.

    இவர் கருத்திலிருந்து சிறிது மாறுபட்டு, ‘நிலைமொழியும் வருமொழியுமாய்ப் புணரும் எவ்வகை மொழிக்கும்…’ என உரைவரைந்தபின்,

    ‘அவை யகரமும் வகரமுமென்பது முதனூல் பற்றிக் கோடும்;
    உடம்படு மெய்யே யகார வகார
    முயிர்முதன் மொழிவரூஉங் காலை யான

    என்றும்

    இறுதியு முதலு முயிர்நிலை வரினே
    யுறுமென மொழிப வுடம்படு மெய்யே

    எனவும் தொல்காப்பியத்தில் இல்லாத இரு நூற்பாக்களைத் தந்தார் நச்சினார்க்கினியர். இத்துடன் இளம்பூரணர் மொழியாத கருத்தாகிய ஏ முன் ய், வ் ஆகியவிரண்டும் வருமென்பதனையும் பதிவு செய்தார். மேலும், ‘ஒன்றென முடித்தல்’ என்பதனால் ‘விண்வத்துக்கொட்கும்’ எனச் சிறுபான்மை புள்ளியீற்றினும் வரும். செல்வுழி உண்புழி என்பன வினைத்தொகையென மறுக்க’ எனக் கூடுதல் விளக்கமும் தந்தார். நச்சினார்க்கினியரின் இக்கருத்தினை, “…வினைத்தொகையில் சொற்கள் உடம்படு மெய்பெறா என்பது பொருத்தமாகப் பட்டிலது. ஏனெனில், எழு+அலை > எழுவலை என வரல் இயல்பே” என மறுக்கிறார் சூ. இன்னாசி.3

    உடம்படுமெய்கள் பற்றிய இலக்கணத்தை முதன்முதலாகத் தெளிவாகவும் சிறப்பாகவும் சூத்திரமாக்கிய நூல் வீரசோழியமே (18). ‘வருமொழி முதலில் ஏதேனுமொரு உயிரெழுத்து வந்து, நிலைமொழியீற்றில் இ, ஈ, ஐ நின்றால் யகரமும் இவையல்லாத பிற உயிரெழுத்துகள் நின்றால் வகரமும் ஏ நின்றால் ய்,வ் ஆகியவிரண்டும் உடம்படுமெய்களாக வருமெனக் கூறியிருப்பதோடு, ஒரோவிடங்களில் நிலைமொழியின் ஈற்றிலுள்ளவை கெட்டு, உயிராக நின்று உடம்படுமெய் பெறுதலுமுண்டு’ என்பதே வீரசோழியத்தின் கருத்து. மேலும், வடமொழி மரபினடிப்படையில் உடம்படுமெய்யை ‘ஆகமம்’ என்ற சொல்லால் குறித்துள்ளது.

    நேமிநாதம் (13), ‘இ, ஈ, ஐ முன் யகரமும் அ, ஆ, உ, ஊ, ஏ, ஓ ஆகியவற்றின்முன்  வகரமும் தோன்றுமெனவும் நிலைமொழியீற்றில் நின்ற மகரம் ஒரோவிடத்து அழிந்து வகரம் தோன்றுதலுமுண்டு’ என்றும் விதித்துள்ளது. நிலைமொழியீற்று மகரங் கெட்டு வகரந் தோன்றுவதற்கு, ‘மரவடி, குண்டலவொளி, வெண்கலவோசை’ ஆகிய சொற்களைச் சான்றுகளாகத் தந்துள்ளார் இந்நூலின் உரையாசிரியர்.4

    வீரசோழியத்தைத் தழுவி நன்னூல் (162) நூற்பா யாத்திருக்க, இலக்கண விளக்கமும் (68) அதனைத் தழுவியே உரைத்துள்ளது. இ, ஈ, எ, ஐ ஆகியவற்றின்முன் யகரமும் பிறவெழுத்துகளின்முன் வகரமும் வருமென விதித்துள்ள தொன்னூல் விளக்கம் (20) ஏ முன் வகரம் வருவதை மட்டும் (யகரமும் வருவதைக் கூறாமல்) பதிவு செய்துள்ளது. மேலும், உடம்படுமெய் என்பதனை, ‘புணர்பெழுத்து’ என்ற சொல்லால் குறித்துள்ளது. நன்னூல் நூற்பாவையே வழிமொழிந்துள்ளதோடு (183), ‘கோ, மா ஆகியவற்றின்முன் வகரமேயன்றி யகரமும் உடம்படு மெய்யாக வரும்’ (184) என்கிறது முத்துவீரியம். இதனை, ‘கோயில் மாயிருஞாலம் ஆகிய சொற்களைக் கருத்திற்கொண்டு வழக்காறு தழுவி இவ்வாறு முத்துவீர உபாத்தியாயர் விதி கூறியது சுவை பயப்பதாகும்’ எனப் புகழ்ந்துரைத்துள்ளார் கு.சுந்தரமூர்த்தி.5

    தொல்காப்பியம் முதலான எந்நூலும் ஓரெழுத்துக் குறில்(உயிர்) மட்டுமே நிலைமொழியாக நின்று வருமொழியோடு (உயிர்) புணரும்போது உடம்படுமெய்யினைப் பெறுமென விதிக்கவில்லை (விகாரப்பட்ட மொழி நீங்கலாக). அறுவகை இலக்கணம் (தண்டபாணி தேசிகர்) மட்டுமே அவ்வாறு விதித்துள்ளது. அதுவும் அ முதல் ஔ வரையிலான 12 உயிரெழுத்துகளையும்  ஐந்து (116 – 120) நூற்பாக்களில்  இலக்கணப்படுத்தியுள்ளது. மேலும், ஏ முன் யகரம் மட்டுமே (சான்று:ஏயிருளா) வருமென  மொழிந்திருப்பதும் சுட்டத்தக்கது.

    தமிழ் நூல் (201), இலகு தமிழ் ஐந்திலக்கணம் (340), தென்னூல் (228,229), தமிழ்க் காப்பு இயம் (7) ஆகிய நூல்கள் நன்னூலைத் தழுவியே சூத்திரஞ் செய்துள்ளன. இவற்றுள் தமிழ் நூல் நூற்பாவிற்கு உரைகூறிச் சான்றுகளைத் தந்திருப்பதோடு, ‘கோவில்; கோயில் என்பது வழுவமைதி; கௌவெனல்; (கூவிற்று; கூயிற்று – என்பன இருநிலை). விரி: அவரா ஈவார்? தம்பி இளையன்; அந்த அரசன் – எனப் பிரிந்து நின்றும் நிலவுலகு (நிலவு+உலகு, நில+உலகு), அண்ணாவிழவு (விழா -விழவு; இழவு) எனப் பொருள் திரிந்தும் உடன்படுமெய் தோன்றாதென்க. கிடைக்க இல்லை; முடிய இல்லை என்பன பிழை’ எனவும் விளக்கியுள்ளது.

    இலகு தமிழ் ஐந்திலக்கணம் ‘ஏனை உயிர்வரின்’ என்ற நன்னூல் தொடரை, ‘அ ஆ உ ஊ ஒ ஓ ஔ’ எனத் தெளிவாகவே தந்துள்ளது. அச்சூத்திரத்தின் முதலடியாகிய ‘இ, ஈ, ஐ பெறும் அகரம்’ என்பதன் கடைசிச்சொல் யகரம் என்றும் ஆறாவது அடியாகிய ‘வ – வரும் சில்லிடம் த -முன்’ என்பதன் கடைசிச்சொல் ‘ஏ – முன்’ எனவும் இருக்க வேண்டும்.

    விரிவாகச் சான்றுகளைத் தந்தபின், ‘மன்னே என்றதனான் சிறுபான்மை கூயினான் கூவினான் – கோயில் கோவில் என உறழ்ந்து வருதல் கொள்க’ (228) என விளக்கியுள்ளது தென்னூல். மேலும், ஓரெழுத்தொருமொழியாக வரும் ஆகார ஈற்றின்முன் யகரம் உடம்படுமெய் ஒரோவழிவருதல் செய்யுள் வழக்காகும் எனுங் கருத்தினைச் சூத்திரமாக்கி (229), ‘மாயிருநாலம் – பாயினபுனலே (பரவின) என வரும்’ என்ற சான்றுகளையும் தந்துள்ளது. இவற்றுள் ‘மாயிருநாலம்’ என்பது மாயிரு ஞாலம் என்றிருக்க வேண்டும். தமிழ்க் காப்பு இயம் ஒவ்வோரீற்றிற்கும் தனித்தனியே சான்றுகளைத் தந்துள்ளது. இவ்வாறு, தொல்காப்பியம் (உரையாசிரியர்கள்) முதலான மரபிலக்கண நூல்களில் உடம்படுமெய்கள் பற்றிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவற்றுள் 1. நேமிநாதத்திற்கு முன் தோன்றிய வீரசோழியமே ஏ முன் ய், வ் ஆகியவிரண்டும் வருமென  விதித்திருக்க, நேமிநாதம் அதனை நீக்கியிருப்பது, 2. இ, ஈ, ஐ ஆகியவற்றோடு எ முன்னும் யகரம் வரும், ஏ முன் வகரம்  மட்டும் வரும் (யகரம் வராது) எனத் தொன்னூல் விளக்கம் பதிவு செய்திருப்பது, 3. ஏ முன் யகரம் மட்டுமே  வருமென (சான்று: ஏயிருளா) அறுவகை இலக்கணம் மொழிந்திருப்பதுமாகிய இவையனைத்தும் பொருத்தமற்றவையென்பது ய,வ வரும் சூழல் என்ற தலைப்பில் விளக்கவுள்ள கருத்துகளால் தெளிவுறும்.

    அறிஞர்களின் கருத்துகள்

    உடம்படுமெய்களைப் பற்றிய தொல்காப்பிய நூற்பாவில் வரும் ‘வரையார்’ என்ற சொல்லானது உயிரீற்று-உயிர்முதற் சொற்கள் உடம்படுமெய்களைப் பெறுதல் கட்டாயம் என்பதனை வலியுறுத்துவதாகக் கருதி, “எல்லா மொழிக்கும் எனப் பொதுமையை உள்ளடக்கிக் கூறியமையால் தொல்காப்பியர் உடம்படுமெய் கொள்ளுதலை இன்றியமையாததாகக் கருதினாரென எண்ணத் தோன்றுகிறது. மேலும், ‘வரையார்’ (தொல்.எழு.இளம்.நூ.141, 146, 266, 422) என்ற சொல் எழுத்ததிகாரத்துள் யாண்டும் மிகைச் சொல்லாக எடுத்தாளப்படாததாலும் இவ்வுண்மை புலனாகும்”6 எனக் கூறியிருப்பதோடு, இளம்பூரணர் ‘ஒருதலை அன்று’ எனக் கூறுவதால் அவர் காலத்தில் உடம்படுமெய் கொள்ளுவதும் கொள்ளாதிருத்தலுமாகிய இரு வகையான மொழியமைப்புகளும் நிலவியிருக்கலாம் எனவும் விளக்கியுள்ளார் சா.கிருட்டிணமூர்த்தி. அச்சொல் (வரையார்) உடம்படுமெய் பெறுதல் கட்டாயமன்று என்பதைச் சுட்டுவதாகத் தே.ஆண்டியப்பன்7 உள்ளிட்ட பலரும், உடம்படுமெய் அருகி வழங்கியதைக் குறிப்பிடுவதாகக் கா.கோ.வேங்கடராமன்8 முதலானோரும் கூறுகின்றனர்.

    இந்நிலையில், ‘விண்வத்துக் கொட்கும்’ எனச் சிறுபான்மை புள்ளியீறும் உடம்படுமெய் பெறு மெனக் கூறிய நச்சினார்க்கினியரின் கருத்தினை,

    ஒருகால் சிலமெய் யெழுத்துக்களின்பின்
    உயிர்வரி னுடம்படு மெய்வரல் வழக்கே (இலக்கணக் கோவை : நூ.11)

    எனச் சூத்திரமாக்கி, ‘விண்+அத்து = விண்வத்து, செல்+உழி = செல்வுழி’ எனுஞ் சான்றுகளையும் தந்துவிட்டார்  சுந்தர முதலியார்.9 மெய்க்குப்பின் வகர உடம்படுமெய் வருமெனும்  நச்சினார்க்கினியரின் கருத்து மோ.இசரயேலுக்கும்10 உடன்பாடானதே. ஆனால்,  “‘விண்வத்துக் கொட்கும்’ ‘சார்வுழி’ என்றாற்போல மெய்யீற்றின்முன் உடம்படுமெய் வருதலை உரையாசிரியர்கள் கூறுதலானும், அருகி ‘ஆயிடை’ என்றாற்போன்று உடம்படுமெய் மாறி வருதலானும் வகரம் உடம்படுமெய்யன்று; எழுத்துப் பேறாகலாம் என்ற கருத்தும் உண்டு” என்கிறார் சூ. இன்னாசி.11       

    தொல்காப்பியத்தில் காணப்படும் சில சொற்புணர்ச்சிகள் இங்குச் சிந்திக்கத்தக்கன. ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து (பாயிரம்), ஆயிரண்டும் (94, 95, 96), ஆயீரியல (108, 152),  ஆயிருபண்பின் (113), ஆயிரண்டென்ப (118), ஆயிரு புள்ளியும் (148), ஆயியல் (208) என எழுத்ததிகாரத்திலும் ஆயிருதிணை (1) ஆயிருமுதலின், ஆயிரு பாற் சொல் (3) எனச் சொல்லதிகாரத்திலும் (இ,ஈ,ஐ,ஏ முன்னரன்றி) ‘ஆ’ அல்லது ‘அ’வின் முன்னர் யகரம் வந்துள்ளமையைக் காண முடிகிறது. இவ்விடங்களிலும் மெய்யீற்றின் முன்னும் வரும் வகரத்தை இன்னாசி மொழிந்துள்ளதைப் போல  எழுத்துப்பேறு என்று கொள்வதே மிகவும் பொருத்தமானது.      

    வடமொழி, ஐரோப்பிய மொழிகளில் உடம்படுமெய்

    “வடமொழியில் பெரும்பாலும் நிலைமொழியிலும் வருமொழியிலும் உள்ள இரண்டுயிரும் ஒன்று சேர்ந்து ஓருயிராக மாறி ஒலிக்கும். ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இவ்வாறு ஓர் உயிர் அடுத்துவரும் உயிரோடு இணைந்து ஒன்றுபடல் (assimilation of Vowels) உண்டு. அதனால் இரண்டு உயிரொலிகளுக்கு இடையே நேரும் விட்டிசை (hiatus) தவிர்க்கப்படுகிறது……

    வடமொழியில் மட+அதிபதி > மடாதிபதி…” 12 எனப் புணரும் என்கிறார் மு.வரதராசன்.

    திராவிட மொழிகளில் உடம்படுமெய்

    ‘திராவிட மொழிகள் எல்லாவற்றிலுமே இரண்டு உயிர் ஒலிகள் அருகருகே இடம்பெறுவதைத் தடுப்பதற்குச் சில மெய்யொலிகளை அவ்விரு உயிரொலிகளுக்கிடையே புகுத்தும் வழக்கம் காணப்படுவதாகவும் ய், வ், ம், ர், ன் ஆகியனவே அவ்வாறு புகுத்தப்படும் மெய்கள்’ என்றும் மொழிந்துள்ள கால்டுவெல்லின் கருத்தினை அ.சண்முகதாசும்13, ‘ந்’ என்பதும் சந்தி உடம்படுமெய் என்ற  அவரின் கருத்தினைச்  சோமயாஜியும்14 எடுத்துக் காட்டியுள்ளனர்.

    தமிழில் இன்று இயல்பாகவே கோயில், கோவில் போன்ற வழக்குகள் காணப்படுகின்றன. ஆறுமுக நாவலர் இலக்கணச் சுருக்கத்தில் கோ என்பதன்முன் இல் வந்தால் இடையில் வகரம் வராமல் யகரம்(கோயில்) வருமெனவும்(பக்கம்.34) ஒரோவிடத்துக் கோவில் என வருமென்றும் குறிப்பிட்டுள்ளார். இலக்கியத் தமிழில் காணப்படும் ‘தெரிவிலை’  (ஞா. தேவநேயர், தமிழ் நூல், மதிப்புரை) போன்ற சொல் வழக்குகளில் இகரத்திற்குப்பின் வகரம் வந்துள்ளமை குறிக்கத்தக்கது.

    கம்பர் வினாவினான் என்ற சொல்லை வினாயினான் என அமைத்துள்ளமையைச் சுட்டியுள்ள மு.வை.அரவிந்தன்15 செல்வுழி என்பதில் வரும் வகரம், உண்புழி என்பதில் வரும் பகரம், முன்றில் என்பதில் வரும் றகரம் ஆகியனவும் உடம்படுமெய்களே என்கிறார். ஆனால், பிற திராவிட மொழிகளைப் போலவே தமிழில் ய், வ் மட்டுமின்றி ன், ஞ், ர் ஆகியன வருவதையும் அதற்குக் காரணம் அவற்றிற்கான ஒலித்திரிபுகளே என்பதையும், “ஒரு சொல்லில் ஈருயிர்கள் பொருந்துமிடத்து  ‘அரையுயிர்’ களான யவ்வும் வவ்வும் வருதலே பொதுக் கட்டளை. இவைதாம் உடம்படுமெய் எனப்படும். ஆயின் ஒலித்திரிபால் இவையிற்றினிடமாய் னவ்வும், ஞவ்வும் ரவ்வும் வரலுறும். உதாரணம்:-

    இருக்கின்ற அ(வ)ன்      இருக்கின்றனன்

    என்மான் (என்பார்)          என்மனார்

    இளைய (வன்)                  இளைஞன்

    காவும்                                   காரும்”

    எனச் சான்று காட்டி விளக்கியுள்ள ஞானப்பிரகாசரின்16 கருத்து இங்குச் சுட்டத்தக்கது.

    கால்டுவெல் உள்ளிட்ட பலரும் ய்,வ் மட்டுமன்றிப் பிறவெழுத்துகளும் உடம்படுமெய்களே எனக் கூறியிருக்க, “… யகர வகரங்களை ஒலி நூலார் அரையுயிர் (Semi vowels) எனக் குறிப்பிடுவர். அவை உயிரிடையே வரும் மெய்யாதற்கு உற்ற தகுதியை அது புலப்படுத்துகிறது”17 என மொழிந்து ய்,வ் மட்டுமே உடம்படுமெய்களென்பதையும்  அவை அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணத்தையும் விளக்குகிறார் மு.வரதராசன். இவரைப் போலவே, “தலைவன், கலைஞன், இயக்குநர் இவற்றை எவ்வாறு பிரிப்பது? தலை+அன், கலை+அன், இயக்கு+அர் எனப் பிரித்தால் ஐகாரம் அடுத்து வகரம், ஞகரமும் உகரத்தை அடுத்து நகரமும் வருகின்றன. இவை உடம்படுமெய்களா?

    யகரம் வகரம் தவிர தனிச்சொல்லின் இரு ஒலிகளுக்கிடையில் வரும் மெய்யெழுத்துக்களை உடம்படு ஒலிகள் என்போம்”18 என வகைப்படுத்தியுள்ள க.வீரகத்தியின் கருத்தினை எடுத்துக் காட்டுகிறார் பெ.முத்துராஜ்.

    ய, வ வரும் சூழல்

    ஏகாரத்தைப் படுத்து உச்சரித்தால் யகரமும் எடுத்து உச்சரித்தால் வகரமும் உடம்படுமெய்களாக வருமெனவுரைத்து, சேயடி … சேவடி சேயுழுதது … சேவுழுதது எனும் சான்றுகளைத் தந்திருப்பதோடு, சும்மாயிருந்தேன்…. சும்மாவிருந்தேன் ஆயிடை… ஆயிருதிணை கூயினான்… கூவினான் கோயில் … கோவில் போன்றவற்றில் வகரமெய் நிற்க வேண்டியவிடத்தில் யகரமெய் வந்திருப்பது ஏனெனில் ஆ, ஊ, ஓ ஆகிய உயிரெழுத்துகளை எடுத்தும் படுத்தும் ஒலித்தலாலே யாகுமென மொழிந்துள்ளார் நடராசா.19 மேலும், உடன்பாட்டில் வகரமும் எதிர்மறையில் யகரமும் வருமெனக் கூறி,

    உடன்பாடு            எதிர்மறை

    அரிவேன்                அரியேன்

    மடிவேன்                 மடியேன்

    கடைவேன்               கடையேன்

    அறைவேன்              அறையேன்”

    எனுஞ் சான்றுகளைத் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவரைப் போலவே, “நிலைமொழியின் ஈற்றில் ‘ஏ’ என்னும் ஒலி வந்து அது பெயர்ச்சொல்லாக இருந்தால் ‘வ்’ என்னும் உடம்படு மெய்யை யும், இடைச்சொல்லாக இருந்தால் ‘ய்’ என்னும் உடம்படு மெய்யையும் பெற்று வரும்”20 எனக் கூறி,

    தே+ஆரம் = தேவாரம் (பெயர்ச்சொல்)

    உப்பே+இல்லை = உப்பேயில்லை (இடைச்சொல்)

    எனுங் காட்டுகளை வே.சங்கர் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு மரபிலக்கணிகளும் உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் உடம்படுமெய்களைப் பற்றிய கருத்துகளை ஆழ்ந்தாய்ந்து கூறியிருக்க, “அமெரிக்க மாணவர் மூவர் உடம்படுமெய் பற்றிய பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஊரையடைந்தேன்; வரவுடம்பட்டான்; பொருளையிங்கெல்லாம் கொட்டினான் என்னும் இடங்களில் உடம்படுமெய் வருவது செயற்கை அல்லவா? ஊரை அடைந்தேன் வர உடம்பட்டான் என்று இயல்பாக எழுதலாமே என்றனர். அவர்களின் சிந்தனை சரியென்றே தோன்றுகிறது. உடம்படுமெய்யை ஒரு தொகுதிக்கு உள்ளாக அமைத்துக்கொள்வது நல்லது. கிளி+ஐ  கிளியை என்றும் சே+அடி   சேவடி என்றும் நிறுத்த சொல்லின் உள்ளே நிறுத்திக்கொள்வது நன்று. அதனால்தான் காப்பியர் இவற்றைப் பிற பகுதிகளில் பேசாமல், புணர்மொழி இயலில் பேசுகிறார்”21 என்று தே.ஆண்டியப்பனும் “உடம்படுமெய்யைப் பொறுத்தவரையில் விட்டிசையைத் தடுக்கும் நோக்குடன் யகர, வகர உடம்படுமெய்களை உருவாக்க வேண்டியதில்லை.

    மணி+அழகு = மணிஅழகு

    மலை+அழகு = மலைஅழகு

    பூ+அழகு    = பூ அழகு

    என உயிரொலி இரண்டையும் விட்டிசைத்தால் ஒலிக்கும் முயற்சியில் கடினம் இருப்பதாகத் தெரியவில்லை”22 என வெ.இசக்கிமுத்துவும் உடம்படுமெய்கள் (பெரும்பாலும்) தேவையில்லை எனும் கருத்துப்படக்  கூறியுள்ளனர். ஆனால், உடம்படுமெய்களைப் பெறும்/பெறாச் சொற்கள்  நுட்பமான புணர்ச்சி வேறுபாடு, பொருள் வேறுபாடுகளைக் கொண்டிருப்பதனாலும்  சொற்கள் விட்டிசைத்தால் ஒரு பொருளையும் தொடர்ந்திசைத்தால் பிறிதொரு பொருளையும் தருவதனாலும் புணர்ச்சியிலக்கணம் கண்டிப்பாகத் தேவை. எனவே, இவர்களின் கருத்து பொருத்தமானதன்று.

    முடிவுரை

    உடம்படுமெய்களைப் பற்றிய இக்கட்டுரையில், மரபிலக்கணிகள் உயிரீற்று-உயிர்முதற் சொற்களை இணைக்க வரும் அரையுயிர்களான ய், வ் ஆகியவற்றை மட்டுமே உடம்படுமெய்களெனக் கொண்டனர்.  புலவன் / கவிஞன் தொடைநயம் நோக்கி அல்லது இன்னோசை கருதி அமைக்கும் சொற்களில் இயல்பாக அமையும் பிறவெழுத்துகளையோ, மெய்யீற்றின்முன் வருவனவற்றையோ அவ்வாறு (உடம்படுமெய்களென) கொள்ளவில்லை. எனவே, அத்தகைய எழுத்துகளைக் (ம்,ர்,ன்,ந்…) காட்டி அவையும் உடம்படுமெய்களே என வாதிடுவது சற்றும் பொருந்தாது. ஆதலால், அவற்றை உடம்படுமெய்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல ‘எழுத்துப்பேறு’ என்றோ, வீரகத்தி மொழிந்துள்ளதைப் போன்று ‘உடம்படு ஒலிகள்’ என்றோ வழங்குவது சாலப் பொருந்தும். சொற்களை விட்டிசைக்காமல்  ஒலிக்கவும் சரியான பொருளைக் குறிக்கவும் இன்றைய நிலையிலும் உடம்படுமெய்கள் கண்டிப்பாகத் தேவை போன்ற கருத்துகள் ஆய்ந்துரைக்கப்பட்டுள்ளன.

    அடிக்குறிப்புகள்

    1. வெள்ளைவாரணன்,க., 1978, தொல்காப்பியம் (உரை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ப.14.
    2. பொன்னையா, மோசசு., 1976, தமிழ் இலக்கணத் தெளிவு, அருள்நாதர் பதிப்பகம், ப.12.
    3. இன்னாசி, சூ., 1984, இலக்கணச் சிந்தனைகள், வளனருள் வெளியீடு, பக். 25 – 26.
    4. சீனிவாசனார், ச., (ப.ஆ.), 2004, நேமிநாதம் உரையுடன், ப.43.
    5. சுந்தரமூர்த்தி, கு., (ப.ஆ.), 1972, முத்துவீரியம், கழக வெளியீடு, ப.53.
    6. கிருட்டிணமூர்த்தி, சா., இளம்பூரணர் உரை – ஓர் ஆய்வு – ஆய்வேடு, அண்ணாமலைப்                   பல்கலைக்கழகம், ப.127.
    7. ஆண்டியப்பன், தே., 1976, காப்பியர் நெறி (எழுத்தியல்), வெற்றிவேல் பிரசுரம், ப.56.
    8. வேங்கடராமன், கா.கோ., சனவரி – பிப்ரவரி, 1970, ‘தொல்காப்பியத்தில் உயிரிணைகள்’,  ‘தமிழ்ப்பொழில்’, ப.334.
    9. சுந்தரமுதலியார், இலக்கணக் கோவை, சுகோதயம் புத்தக சாலை, நூ.11.
    10. சுப்பிரமணியம், வி.ஐ., (ப.ஆ.), 1978, திராவிட இலக்கணக் கொள்கை, அன்பு நூலகம், ப.27.
    11. இன்னாசி, சூ., 1973, எழுத்தியல், தமிழரசன் பதிப்பகம், ப.124.
    12. வரதராசன், மு., 2011, மொழிநூல், பாரி நிலையம், ப.59.
    13. சண்முகதாஸ், அ., 2008, தமிழ்மொழி இலக்கண இயல்புகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ப.7.
    14. சுப்பிரமணியம்(ப.ஆ.), வி.ஐ., 1978, திராவிட இலக்கணக் கொள்கை, அன்பு நூலகம்,ப.29.
    15. அரவிந்தன், மு.வை., 1977, மொழியியல் சிந்தனைகள், ப.17.
    16. ஞானப்பிரகாசர்,S.,2008,தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்  ப.55.
    17. வரதராசன், மு., 2011, மொழிநூல், பாரி நிலையம், பக்.59 – 60.
    18. அழகேசன், சு., (ப.ஆ.), 2002 , ‘உடம்படுமெய்’, இலக்கண ஆய்வு: தொல்காப்பிய உரைகள், இரண்டாம் கருத்தரங்கக் கட்டுரைகள், பக்.290 – 293.
    19. நடராசா, F.X.C., மார்ச் – ஏப்ரல், 1959, ‘உடம்படுமெய்’, தமிழ்ப்பொழில், ப.365.
    20. சங்கர், வே., 2006, இயல் தமிழ் இலக்கணம், நன்மொழி பதிப்பகம், ப.189.
    21. ஆண்டியப்பன், தே., 1976, காப்பியர் நெறி (எழுத்தியல்), வெற்றிவேல் பிரசுரம், ப.56.
    22. இசக்கிமுத்து, வெ., 1982 , ‘உடம்படுமெய்’, ஆய்வுக்கோவை 14 – 4, பக். 25 – 29.

    பின்னிணைப்பு

    (ஆய்விற்குதவிய இலக்கண நூற்பாக்கள்)

    எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
    உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்.           (தொல். இளம்:141)

    மூன்றொடுநான்கொன்ப தாமுயிர்ப்பின்னுயிர் முந்தினடு
    வான்றயகாரம்வந் தாகமமாகுமல் லாவுயிருக்
    கேன்றவகார மெட்டேற்குமிரண்டும் …                      (வீரசோழியம்:13)

    மூன்றுநான்கு ஒன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
    ஆன்ற உயிர்ப்பின்னும் ஆவிவரின் – தோன்றும்
    யகர வகரம் இறுதியிடத்து ஓரோர்
    மகரங் கெடவகர மாம்.                                                  (நேமிநாதம்:13)

    இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்இருமையும்
    உயிர்வரின் உடம்படு மெய் என்றாகும்.                      (நன்னூல்:162)

    இ ஈ ஐவழி யவ்வும் ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் இருமையும்
    உயிர்வரின் உடம்படு மெய்யென்று ஆதல்
    வரைவின்று என்மனார் மதிக்குங் காலே.                     (இலக்கண விளக்கம்:68)

    முதல் ஈற்று உயிரும் மொழியே சேர்புளி
    இஈ எஐ ஈறு இயையும் யவ்வே
    மற்றை உயிர்க் கீழ் வகரம் புணரும்.                            (தொன்னூல் விளக்கம்:20)

    இஈ ஐவழி யவ்வு மேனை
    உயிர்வழி வவ்வு  மேமுன்னிவ் விருமையும்
    உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.                      (முத்துவீரியம்:183)

    கோமா முன்வரின் யகரமுங் குதிக்கும்.                        (முத்துவீரியம்:184)

    இருபால் விகுதிகள் சுட்டில் அகரம்
    ஒற்றின்றி வகரமாய் அணைதலும் வாய்பா(டு)
    அவன்,இவன் எவள்எனள் உதாரணம் ஆமே.             (அறுவகை இலக்கணம்:116)

    ஆஊ ஓஎனும் எழுத்தொரு மூன்றும்
    பின்வரும் உயிர்களை வகரஒற் றுட்புகச்
    செய்வன உதாரணம் ஆவாளி எனலும்
    ஊவிட்டான் எனலும் ஓவென்றான் எனலுமே.            (அறுவகை இலக்கணம்:117)

    ஈஏ எனும்இரு பொறியும் பின்வரும்
    உயிர்களை யகர வருக்கம் ஆக்கும்.
    ஈயல்ல எனலும் ஏயிருளா எனலும்
    தகுமுதா ரணமெனச் சாற்றுதல் இயல்பே.                   (அறுவகை இலக்கணம்:118)

    ஐஒள இரண்டும் அணைதரும் உயிர்கட்
    செய்வ தொலியீற்றிற் றிகழ நின்றன
    ஆயினும் ஐயனும் ஒளவையும் உதாரணம்.                 (அறுவகை இலக்கணம்:119)

    ஒகரத் துடன் உயிர் மிகைபட ஒன்றா
    ஒன்றினும் அகரத் தியல்பே ஒளிர்தரும்
    ஒவ்வெழுத் தெனும்சொல் உதாரணம் ஆமே.              (அறுவகை இலக்கணம்:120)

    உயிரோ டுயிர்வந் தொன்றுங்காலை
    இஈ ஐவழி யவ்வும் ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏமுன் இருமையும்
    ஒருமை யுறுஞ்சொலில் உடன்படு மெய்யாம்.              (தமிழ் நூல்:201)

    இ, ஈ, ஐ பெறும் அகரம்
    அ ஆ உ ஊ ஒ ஓ
    ஒள வெலாம் பெற்றிடும் வகரம்
    ஏபெறும் சில்லிடம் யகரம்.
    வ-வரும் சில்லிடம் த-முன்.
    இவ்வீர் வ் வும் ய் யும்
    உடம்படுமெய்யென்றாமே.
    உடம்பெனல் மெய்யாம் மெய்யை அடுமெய்
    உடம்படுமெய் யென்றாமே தமிழில்.                             (இலகு தமிழ் ஐந்திலக்கணம்:340)

    உயிர்வரின் இஈ ஐவழி யவ்வும்
    ஏனைமுன் வவ்வும் ஏமுனவை விருமையும்
    உடம்படு மெய்யெனும் உருபாம் மன்னே.                   (தென்னூல்–எழுத்துப்படலம்:228)

    இஈ ஐவழி யவ்வும் ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் இருமையும்
    வருவுயிர் இணையின் உடம்படு மெய்யே.                   (தமிழ்க் காப்பு இயம்:07)

    ===================================================

    ஆய்வறிஞர் கருத்துரை [Peer Review]:

    தமிழில் உடம்படுமெய்களாகக் கொள்ளத்தக்கவை, அவை வருமிடங்கள், அவற்றைப் பற்றிய மரபிலக்கணிகள் மற்றும் அறிஞர்களின் கருத்துகள், உலகமொழிகள் சிலவற்றில் வழங்கும் உடம்படுமெய்கள், இன்றைய நிலையிலும் அவை தேவைப்படுவதற்கான கரணியம்(காரணம்) ஆகியவற்றை விரிவாக ஆராய்கின்றது கட்டுரை. கட்டுரையின் மையக்கருத்திற்கேற்றவாறு தரவுகளைச் சேகரித்து உடம்படுமெய்யினைக் கட்டுரையாளர் விளக்குகின்ற திறம் பாராட்டத்தக்கது.

    தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் உள்ளிட்ட மரபிலக்கண நூல்கள், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் நூல், இலகு தமிழ் ஐந்திலக்கணம், தென்னூல் எழுத்துப்படலம்-சொற்படலம், தமிழ்க் காப்பு இயம் முதலிய இலக்கண நூல்கள், இலக்கண உரைகள், ஆய்வாளர்களின் கருத்துகள் ஆகியவற்றைத் முறையாகத் தொகுத்து உடம்படுமெய்மெயினை எளியமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் நிலையில் கட்டுரையாளர் விளக்கியிருக்கின்றார். உடம்படுமெய் குறித்த இலக்கண நூற்பாக்களைத் தொகுத்து தந்திருப்பதும் நன்று.

    ===================================================

    Share
  • இஸ்ரேல் தேர்தல்: அரேபியர்களே, கண்டிப்பாக வாக்களியுங்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9, 2019) அன்று இஸ்ரேலில் பார்லிமென்ட் (இஸ்ரேலில் இதற்குப் பெயர் க்னெசட்) தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பு இஸ்ரேல் சிரியாவின் ஹோலன் ஹைட்ஸை ஆக்கிரமித்திருப்பதை அங்கீகரிக்கும்படி இப்போதைய இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கேட்டுக்கொண்டார். ட்ரம்ப்பும் நேத்தன்யாஹுவும் கூட்டாளிகள்;நயவஞ்சகக் கயவர்கள். அதனால்தான் இருவருக்கும் ஒத்துப்போகிறது. ஹோலன் ஹைட்ஸை ஆக்கிரமித்திருப்பதற்கு ட்ரம்ப் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பதால் ட்ரம்ப்பின்ஆசீர்வாதத்தால் தேர்தலில் தான்ஜெயித்துவிடலாம் என்று நேத்தன்யாஹு மனக்கோட்டை கட்டுகிறார்.

    இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களில் சிலர்– இஸ்ரேல் ஜனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு – இந்தத் தேர்தலில் பங்குகொள்வதா வேண்டாமா என்பது பற்றி வெகுவாக யோசித்துவருகிறார்களாம்.அப்படி நினைப்பவர்கள் தாங்கள் வாக்களிப்பதால் என்ன பயன் என்று நினைக்கிறார்கள். இவர்களின் மனதை மாற்றுவதற்காக டேமர் நஃபர் (Tamer Nafar) என்னும் ஹிப் ஹாப் பாடகர் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ‘டேமர் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும்’என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருக்கும்,அரேபிய மொழியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஒரு பெரிய விவாதத்தை எல்லோரிடமும் உண்டாக்கியிருக்கிறது. டேமர் இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர், இஸ்ரேல் குடிமகன். இந்த வீடியோவில் ஓட்டுப் போட வேண்டாம் என்பவராகவும் போட வேண்டும் என்பவராகவும் தானே நடித்துக் கடைசியில் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும் என்ற முடிவுக்கு வருவதாக இருக்கிறது. சென்ற சில வாரங்களாக அவருக்குள்ளே நடந்த விவாதத்தின் விளைவு இது.

    ஓட்டுப் போட வேண்டாம் என்னும் வாதத்தை வெகுவாக எதிர்த்து,‘உங்கள் ஓட்டுக்களை வீணடித்துவிடாதீர்கள். நீங்கள் ஓட்டுப் போடுவதால் நேத்தன்யாஹுவைப் பதவியிலிருந்து விலக்குவதோடு சிறைக்கே அனுப்ப முடியும்’என்று கூறுகிறார்.

    ஓட்டுப் போட வேண்டாம் என்பவரை நஃபர் 1 என்றும், போட வேண்டும் என்பவரை நஃபர் 2 என்றும் குறிப்பிடுகிறேன்.

    நஃபர் 1:‘இந்த மண் நமக்கு (அரேபியர்களுக்கு) சொந்தமானது, ஆனால் நாடு அவர்களுடையது ( யூதர்களது). இஸ்ரேல் பாராளுமன்றம் எனக்குரியதல்ல’.

    நஃபர் 2:‘செக்கல் (இஸ்ரேல் நாணயம்) இஸ்ரேலுக்குரியதுதான். ஆனால் நாம் அதை உபயோகிக்கிறோம்.அந்தப்பணத்தில்தான் வரி கட்டுகிறோம். அது இஸ்ரேல் ராணுவத்துக்குப் போகிறது. வீட்டுத் தோட்டத்தில் தேயிலை வளருங்கள். வரி கட்ட த் தேவை வராது. அப்போது காஸாவில் போடும் குண்டுகளுக்கு உங்கள் பணம் போகத் தேவையில்லை’ என்றுஅவருக்குப் பதிலடி கொடுக்கிறார்.

    நஃபர் 1:‘இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவதால் அவர்களுக்கு யூதர்களோடு சம உரிமைகள் இருப்பதாக மேலைநாடுகளுக்குக் காட்டிக்கொள்ள இஸ்ரேலுக்கு வசதியாக இருக்கிறது. மேலும் என்னுடைய ஓட்டு எதையும் மாற்றப் போவதில்லை. ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்படும் போரில் நான் கத்தி வைத்துக்கொண்டு சண்டை போடுவதுபோல் இருக்கிறது. பீரங்கிகளை வைத்துக்கொண்டு அவர்கள் சண்டை போடும்போது என்னிடம் கல் மட்டுமே இருக்கிறது’.

    நஃபர் 2:‘நாம் பாலஸ்தீனத்தை விடுவிக்கப் போவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நம் ஓட்டுக்கள் லிபெர்மேனை (இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்) ஒழிக்கலாம். அதோடு நேத்தன்யாஹுவைச் சிறைக்கு அனுப்பலாம் என்னும்போது நான் ஓட்டளிக்கத் தயார்’

    பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அந்தத் தொகுதியில் ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பெற்றிருக்கும் கட்சிக்குத்தான் அங்கீகாரம் உண்டு. அரேபியர்கள்நிறையப் பேர் ஓட்டுப்போடமுன்வந்தால் அந்த சதவிகிதம் கூடிவிடும். அப்போது குறைந்த வாக்குகள் பெறும் லிபெர்மேன் கட்சி தோற்றுவிடும்.

    இந்த லிபெர்மேன்தான் 2015-இல் நடந்த தேர்தலில் அரேபியர்களின் கட்சிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகக் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் கூட்டினார். ஆனால் அரேபியக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘கூட்டுக் கட்சிகள்’ என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றத்தில் 13 இடங்களைப் பெற்றனர். இந்தத் தேர்தலில் போன தேர்தலைவிட நிறைய அரேபியர்கள் பங்கெடுத்துக்கொள்வார்கள் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. அரேபியர்களுக்கு எதிராகச் செயல்படும் நேத்தன்யாஹுவின்மேல் இவர்களுக்கு ரொம்பக் கோபம் இருக்கிறது. ஓட்டுப் போட வேண்டாம் என்று அரேபியர்களிடம் கூறினால் அரேபிய அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த நம்பிக்கை வீணாகிவிடும்.

    அதிக எண்ணிக்கையில் அரேபியர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பு இன்னும் இருப்பதாகத் தான் நம்புவதாகவும் அப்படி நடக்கும் பட்சத்தில் அது தர்மத்தின் வெற்றியாக (poetic justice) இருக்கும் என்றும்நஃபர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நேத்தன்யாஹுவுக்கு எதிராகப் போட்டியிடும் மாஜி ராணுவ அதிகாரி பென்னி கேன்ட்ஸுக்கும் நேத்தன்யாஹுவுக்கும் வெற்றி வாய்ப்புகள் சமமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நஃபர் பென்னி கேன்ட்ஸ் ஜெயிக்க வேண்டும் என்கிறார். (காஸாவில் எத்தனை பயங்கரவாதிகளை, அதாவது பாலஸ்தீனர்களைக் கொன்றேன் என்று பென்னி கேன்ட்ஸ் மார்தட்டிக்கொண்டதால் சில பாலஸ்தீனர்கள் அவருக்கு ஓட்டுப்போட விரும்பவில்லையாம்.) நேத்தன்யாஹுவின் மேலுள்ள குற்றச்சாட்டுக்கள் ஊழலுக்காக இருப்பதற்குப் பதிலாக போர்க் குற்றங்களுக்காக இருக்கக் கூடாதா என்று தான் விரும்புவதாக நஃபர் மேலும் கூறுகிறார்.

    நஃபர் பாலஸ்தீனர்களின் மகனாகப் பிறந்தவர். 2000-இல் இரண்டாவது பாலஸ்தீனப் புரட்சி ஏற்பட்டபோது அரசியல் கலந்த பாட்டுக்களாகப் பாட ஆரம்பித்தார். 2016-இல் இவர் தயாரித்த சுயசரிதைப் படமான ‘ஜங்ஷன் 48’ மிகவும் பிரபலமானது. பரிசு பெற்ற படங்களுக்கான ஒரு விழாவில் நஃபர் பங்கெடுத்துக்கொண்டிருந்தபோது கலாசார மந்திரி மிரி ரெஜிவ் கூட்டத்திலிருந்து வெளியேறினார்; இவருடைய படங்களைத் தடைசெய்ய முயன்றார்.

    போன தேர்தலில் அரேபியர்களின் ‘கூட்டுக் கட்சி’க்கு ஓட்டளித்த நஃபர் இப்போது அது உடைந்துவிட்டதாகவும் கப்பல் மூழ்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

    நஃபர் 2 கடைசியாகக் கூறுகிறார்: எனக்கிருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டுரிமைதான். இதை நான் பயன்படுத்தியே ஆக வேண்டும். இஸ்ரேல் அரசியலில் சில தீவிர வலதுசாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் பாலஸ்தீனர்களை இஸ்ரேலை விட்டே வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். என்னுடைய ஓட்டுரிமையைப் பயன்படுத்தி, இஸ்ரேல் எங்களை வெளியே அனுப்பும் லாரிகளில் என் சக அரேபியர்களோடு பேசிக்கொண்டிருப்பதற்குப் பதில் இஸ்ரேலிலேயே இருந்துகொண்டு அவர்களுக்குப் பாடிக்கொண்டிருக்கும் என் உரிமையை விட மாட்டேன்.

    இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களை வெளியேற்றி (இவர்களுக்கு இஸ்ரேல் குடியுரிமை உண்டு) இஸ்ரேல் நாட்டை யூதர்களுக்கு மட்டுமே உரிய நாடாக ஆக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் சில தீவிர வலதுசாரிகளிடம் இருக்கிறது.

    Share
  • வாடிக்கையாகப் பழிப்பது வேடிக்கையா?

    -நிர்மலா ராகவன்

    (நலம்… நலமறிய ஆவல் 153)

    “எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் அதிகமாகப் பேசிக்கொள்வது கிடையாது!”

    திருமணமாகிய முதல் சில ஆண்டுகளில் தம்பதிகள் நிறையப் பேசியிருப்பார்கள். அதன்பின், அந்த இணக்கம் ஏன் முறிந்துவிடுகிறது?

    மற்றவரைப்பற்றி அறியவேண்டும் என்று முதலில் இருந்த ஆர்வம் காணாமல் போய்விட்டதுதான் காரணம். அதன்பின், ஒருவர் கூறுவதை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. அப்படித் தவறாகப் புரிந்துகொள்வதால் வருத்தமோ, கோபமோ வருகிறது.

    இருவருமே, `நான் சொல்வதைக் கேளேன்! என்னைப் புரிந்துகொள்!’ என்று சண்டை பிடிக்கிறார்கள். அல்லது, மனதளவில் ஏங்குகிறார்கள். தான் எண்ணியபடி உற்றவர் இல்லையே என்று வருந்தி, விவாதித்துக்கொண்டும், பழித்துக்கொண்டும் இருந்தால் நல்ல விளைவு உண்டாகுமா?

    இது புரியாது, சிலர் `முட்டாள்!’ என்று மற்றவரைப் பழித்துக்கொண்டே இருப்பார்கள்.

    `உனக்கு நான் என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை. மூளை இருந்தால்தானே!’

    இந்த இரு வாக்கியங்களிலேயே பிழை இருக்கிறது. முதலாவதில், நான் என்ற சொல்லுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொல்பவர் புத்திசாலியோ, இல்லையோ, மற்றவரைவிடத் தனக்குத்தான் அறிவுகூர்மை அதிகம் என்று நம்பிப் பழித்தால், தாக்கப்பட்டவர் குறுகிவிடுவார். அல்லது ஆத்திரமடைவார்.

    `மூளை கிடையாது!’ என்று ஒருவர் கூறுவதைப் பலமுறை கேட்கும்போது, அதை நம்பிவிடும் அபாயமும் இருக்கிறது.

    கதை

    தமிழ் நாட்டுக் குடும்பம் ஒன்றில், தினசரியில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயித்தார்கள். மாப்பிள்ளை தலைநகரில் மிகப் பெரிய வேலையில் இருந்தான். அதனால், கல்யாணத்தைப்பற்றி யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிகம் யோசியாது, பெண்வீட்டார் ஏற்றுக்கொண்டனர்.

    கல்யாணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவனுக்கு மனநோய் என்று. (ஆனால், உத்தியோகம் பார்க்க முடிந்தது).

    சாதுவான மனைவியை, `நீ பைத்தியம்!’ என்று ஓயாமல் பழிக்க, சில வருடங்களிலேயே அவளும் நிலைகுலைந்துபோனாள். அத்துடன் திருப்தி அடையாது, ஒரே மகளையும் இப்படியே நடத்த ஆரம்பித்தார்.

    சுமார் இருபது வயதான அப்பெண்ணை நான் சந்தித்தபோது தானாகவே, “நான் நார்மல்தான். பைத்தியம் இல்லை,” என்றாள் என்னிடம்.

    என் அதிர்ச்சியைப் பார்த்துவிட்டு, தாய் விளக்கம் அளித்தாள்: “அவளுடைய அப்பா அவளை எப்போதும் `பைத்தியம்’ என்பார். அவளும் நம்பிக்கொண்டிருக்கிறாள்!”

    இம்மாதிரியான சிக்கலான மணவாழ்க்கை முறிந்தாலே நிம்மதி. தனக்குக் குறை இருக்கிறது என்று தெரிந்தும், அதை ஏற்க விரும்பாதவர்கள் தம்மைச் சார்ந்த பிறரிடம்தான் அக்குறை இருக்கிறது என்று நம்பவைப்பார்கள்.

    இன்னும் சிலர், தான் எதில் தோல்வி அடைந்தாலும் அதற்கு மனைவிதான் காரணம் என்று பழி சுமத்துவார்கள்.

    ஒரு மனைவி தன் கணவனிடம் கேட்டாள், சிரித்தபடி: `நான் உங்களை விட்டுப்போனால், நீங்கள் தவறான பாதையில் காரை ஓட்டிச் செல்லும்போதெல்லாம் யார்மீது குற்றம் சாட்டுவீர்கள்?’

    கதை

    சகாதேவன் வியாபாரத்தில் தோல்வியடைந்தவர். அதில் அவர் மனைவி எந்த விதத்திலும் ஈடுபடவில்லை. இருந்தாலும், அவள்தான் தன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தோன்றிப்போக, `முட்டாள்!’ என்று அவளைப் பழித்துக்கொண்டே இருப்பார். அவர் நொந்த மனதைப் புரிந்துகொண்டு, அவளும் எதிர்த்துப் பேசாமல், எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள்.

    `எல்லாப் பெண்களுமே முட்டாள்கள்தாம்!’ என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டது அந்த மனிதருக்கு.

    நானும் இருமுறை இவரிடம் மாட்டிக்கொண்டேன். நான் அஞ்சவில்லை. என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். பயம் அவரிடமே திரும்பியது, சுவற்றில் அடித்த பந்துபோல்.

    அச்சத்தை விளைவித்தால், உண்மையான மதிப்பும் மரியாதையும் வருமா?

    தன்னைப் பார்த்துப் பிறர் பயப்பட வேண்டும், இல்லையேல், தான் அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டும்! என்ன மனநிலை இது! இவரைப் போன்றவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமுடியுமா?

    சிறுவர்கள்கூட இப்படிப்பட்ட நடத்தையை மற்றவர்களிடமிருந்து கற்று, வீட்டில் பெரியவர்களை அப்படியே நடத்த ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் பிறர் தம்மைக் கவனிப்பார்கள் என்று அவர்கள் எண்ணம் போகிறது.

    கதை

    ஐந்து வயதான சுதா தன் சிநேகிதியான பியாங்காவின் வீட்டிற்கு விளையாடப்போய், இரண்டு, மூன்று மணி நேரம் அங்கேயே கழித்தாள். வீடு திரும்பியதும், பெரியவர்களிடம் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தாள்.

    `எப்போதும் மரியாதையாக, அன்புடன் நடந்துவந்தவளுக்கு இப்போது என்ன வந்துவிட்டது?’ என்று யோசித்தார்கள்.

    அவளை அப்படியே விட்டுவிட்டால், அதே நடத்தை தொடரும். வன்மையாகக் கண்டித்தாலோ, அதிகமாக முரண்டுபிடிக்கக்கூடும். முதன் முறை ஆனதால், கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்று தோன்றிப்போயிற்று.

    “உன் சிநேகிதி பியாங்கா அவளைப் பார்த்துக்கொள்ளும் பணிப்பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறாள்?” என்று கேட்டாள் தாய்.

    “அந்த அக்காவை பியாங்கா எப்பவும் திட்டுகிறாள்,” என்று பதில் வந்தது.

    தவறு தோழியின் தாயின்மேல்தான். தாய் பணிப்பெண்ணை எப்படி நடத்துகிறாளோ, அப்படியே மகளும் நடத்தக் கற்றுவிட்டாள்.

    வயதில் மூத்தவர்களிடம் அப்படி நடப்பது தவறு என்ற அதிர்ச்சி சுதாவின் பதிலில் காணப்படவில்லை. ஏனெனில், நல்லது, கெட்டது என்று ஆராயும் திறமை குழந்தைகளுக்குக் கிடையாது. பிறரைப் பார்த்துத்தான் எதையும் கற்கிறார்கள். உடனே அப்படியே நடந்தும் காட்டுகிறார்கள்.

    “இனி நீ பியாங்கா வீட்டுக்குப் போகாதே! அவள் உன்னைமாதிரி நல்ல பெண் இல்லை!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினர்.

    நாம் சொல்வதையும் செய்வதையும் குழந்தைகள் அப்படியே காப்பி அடிக்கின்றனர் என்பதால் சற்று கவனமாகத்தான் இருக்கவேண்டும்.

    ஒரு காரியத்தைச் செய்யும் முறையை மாணவப் பருவத்திலிருப்பவர்களுக்கு ஆரம்பிக்குமுன் சொல்லிக்கொடுக்கலாம். இருந்தாலும், கூடவே நின்று தொணதொணத்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கும் பொறுமை மீறிவிடாதா!

    `நான் இப்படிச் செய்வேன். நீ உனக்குத் தோன்றியபடி செய்!’ என்று விட்டுவிட்டால், அவர்களுக்கு நம்மேல் மரியாதை எழும். நாம் காட்டும் முறையை அப்படியே கடைப்பிடிப்பார்கள்.

    வேடிக்கைதானா?

    `வேடிக்கை’ என்று நினைத்து பெரியவர்கள் செய்யத் துணியாததை குழந்தைகளைச் செய்யத் தூண்டுகிறவர்களும் உண்டு.

    ஒரு பதின்மவயதுப் பெண்ணைக் காட்டி, “இவளைப் பாரேன்! குரங்குமாதிரி ஒக்காந்து சாப்பிடறா!’ என்று ஐந்துவயதுச் சிறுமியான சியாமளாவிடம் காட்டினாள் அவளுடைய அத்தை. (அத்தைக்குக் குழந்தைகள் கிடையாது).

    அச்சிறுமியின் தாய்வழிப் பாட்டி அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, “பாட்டி குரங்குமாதிரி ஒக்காந்து சாப்பிடறா!” என்று சியாமளா கேலியாகக் கூறிச் சிரிக்க, எல்லாருக்கும் அவமானமாகப் போயிற்று.

    இதில் குழந்தையின் தவறு என்ன?

    சியாமளா ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், அவள் வயதை ஒத்த மாலாவுடன் அவளை ஒப்பிடுவாள் அந்த அத்தை: “மாலா அசடு! சாப்பிடப் படுத்தும். ஒன்னைமாதிரி சமத்தா சாப்பிடாது!”

    பெருமையுடன், ஒவ்வொரு முறையும் மூச்சுப்பிடிக்கச் சாப்பிட்டு, குண்டாகிப்போனதுதான் நடந்தது.

    மாலாவின் தாய் என்னிடம் வருத்தத்துடன் கூறினாள்: “`நீயும் சியாமளாமாதிரி சமத்து!’ என்று சொல்லிச் சொல்லி இவளை வளர்க்கிறோம். இங்கோ, இப்படிச் சொல்கிறார்கள்!”

    `நீதான் உலகிலேயே உயர்த்தி!’ என்பதுபோல் புகழ்ந்து, சம வயதுக் குழந்தைகளை மட்டமெனக் கருதும் பழக்கத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அன்பின் மிகுதியா? அது அறிவீனம்.

    தான் அப்படியெல்லாம் சிறந்தவள் இல்லை என்று எப்போதாவது உணரும்போது அவர்கள் செய்வது அறியாது திகைத்துப்போய்விடுகிறார்கள். தம்மை அப்படி வளர்த்தவர்கள்மேல் வெறுப்புதான் மண்டுகிறது.

    Share
  • செம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கற்றிலனாயினும் கேட்க என்றார் வள்ளுவர். தாம் கற்றவற்றை மற்றவர்களுக்குச் சொல்பவர் கேள்வி ஞானத்தை வளர்க்கிறார்.

    கல்வியைப் பரப்புவதற்காகவே மேடைப் பேச்சாற்றல்.

    நுணுகித் தேடல், தேடியதைத் தொகுத்தல், கேட்பார் வேட்கை தணிக்கச் சுவையுடன் ஒழுங்கு செய்தல், வேட்ப மொழிதல் யாவும் மேடைப் பேச்சாளரின் இயல்புகள்.

    பேச்சு உள்ளத்தில் இருந்த வரவேண்டுமடா. உள்ள உணர்வுகளையும் அறிவையும் சரி சமமாகக் கலந்து பேசுபவனே கேட்பவனுக்குக் கற்பிக்கிறான் என என்னிடம் சொன்னவர் பேரா. அ. ச. ஞானசம்பந்தன்.

    அத்தகைய நுண்மா நுழைபுலத்தார் சிலம்பொலி செல்லப்பனார். ஆழ்ந்த மனித நேயமும் கற்றுத் துறை போகிய அறிவும் செறிவாகப் பெற்றவர் சிலம்பொலி செல்லப்பனார்.

    சச்சிதானந்தன் சிறையில் வாடலாமா? கேட்டவர் சிலம்பொலி செல்லப்பனார்.

    யாரிடம் கேட்டார்? மேடையில் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கேட்டார்.

    எங்கே? சென்னை, ஏவிஎம் இராசேசுவரி மண்டபத்தில்.

    எப்பொழுது? 1997 பிப்புருவரி இறுதியில்.

    முதலமைச்சர் சொன்ன பதிலால் இன்றுவரை நிறைவடையாதவர், சிலம்பொலி செல்லப்பனார்.

    ஈழத்து நோயாளிகளுக்கு அக்காலத்தில் போதிய மருந்துகள் கிடைப்பதில்லை என்பதைச் சென்னையில் பேசிக்கொண்டிருந்தாம். மருந்து கடத்த முற்பட்டேன் எனக் குற்றம் சாட்டினர். 1997 பிப்புருவரி 9ஆம் நாள் சிறையிட்டனர். சென்னைச் சிறையில் ஒரு மாதம் என் வாழ்க்கை.

    1986இல் காந்தளகப் பதிப்புப் பணியால் சென்னையில் தமிழ் அறிஞரிடையே வரவேற்பைப் பெற்றிருந்தேன். தரமான நூல்களைப்பதிப்பித்ததால் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட புகழ்பூத்த எழுத்தாளர்களுக்குப் பக்கமாக்கல் பணியைக் கூலி வாங்கிச் செய்து கொடுத்து வந்தேன்.

    சிலம்பொலியார் காந்தளகம் வந்திருக்கிறார், ஈழத்து நூல்களை வாங்கிச் சென்றிருக்கிறார். வேறு தொடர்பில்லை.

    என் சிறைவாசம் குறித்து முதல்வரிடம் அவர் பேசிய காலத்தில் நான் சிலம்பொலி செல்லப்பனாருடன் நேரடிப் பழக்கமில்லாதவன்.

    சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
    என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
    ஓடையிலே என் சாம்பல் கரையும் போது
    ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்

    என்ற வரிகளைப் பாரதிதாசன் இயற்றிய வரிகளாகத் தமிழ்நாட்டு மேடைகளில் ஓங்கி உரத்துச் சொல்வோர் சிலர் இருந்தனர்.

    அந்த வரிகள். பாரதிதாசனுடையவை அல்ல, தவறாகச் சொல்கிறார்கள், ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் எழுதிய வரிகள் என அடிக்கடி முழங்குபவர் சிலம்பொலி செல்லப்பனார்.

    ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தனைச் சிலம்பொலியார் நேரில் பார்த்துப் பேசிப் பழகாதவர். அவரின் நூல்களை விரும்பிப் படிப்பவர்.

    நேரிடையாகப் பழக்கமில்லாத ஈழத்தவர் இருவர். தமிழகத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரே காரணம், அறம் சார்ந்த சிலம்பொலியாரின் செம்மாந்த நோக்கும் சான்றாண்மையுமே.

    மனிதநேயம் என்மீதும், புலமை நேயம் ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் மீதும் கொண்டருந்ததால் குரல் கொடுத்தார். தவறுகளைத் திருத்த முயன்றார்.

    2000இன் தொடக்க ஆண்டுகளில் சென்னைக்கு ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் வந்திருந்தார். ஒரு நாள் முன்னறிவிப்பு இன்றியே காந்தளகத்துக்கு வந்தார். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    எவ்வளவு நாள் தங்குகிறீர்கள் எனக் கேட்டு, அவருக்கு வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்தேன். அந்த விழாவில் பாராட்டுரை வழங்கக்கூடியவர் சிலம்பொலியார் என ஓர்ந்து அவரிடம் முதன்முறையாகச் சென்றேன்.

    திருவான்மியூரில் கலாச்சேத்திரக் குடியிருப்பில் ஒருநாள் மாலை வேளையில் முன்தெரிவித்துச் சென்று பார்த்தபோது நெடுநாள் பழகியவர்போல வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வரப் பெருவிருப்புக் கொண்டார்.

    பின்னர் ஆனந்தம் திரையரங்க வளாகத்தில் நிகழ்ச்சிக்கு வந்தார், ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தனின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.

    சுவாமி விபுலானந்தவரின் மாணவராகவும் உதவியாளராகவும் இருந்தவர் ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன். கணிதம், வானியல், தமிழ்மொழி, தமிழிசை, கவிதை எனப் பன்முக ஆற்றல் பெற்றிருந்த புலமை நேயத்தாரை நேரில் சந்தித்ததில் சிலம்பொலியார் மிக மகிழ்ந்தார்.

    அதற்குப் பின்னர், சிலம்பொலியாருக்கும் எனக்கும் இடையே தொடர்புகள் வலுப்பெற்றன. பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம்.

    நாமக்கலில் அவர் சென்று வாழ்ந்த காலங்களில் அவருடன் கடிதத் தொடர்பும் வைத்திருந்தேன்.

    2010 முற்பகுதியில் அவரே கேட்டதால், உலகெங்கும் தமிழர் என நான் தயாரித்த வரைபடத்தைச் செம்மொழி மாநாட்டில் பயன்படுத்த, அவரிடமே நேரில் சென்று, எணினி வடிவத்தைக் கொடுத்துவந்தேன். மாநாட்டில் பெரிய படமாக்கி வைத்ததாக மாநாடு சென்ற பலர் என்னிடம் கூறினர்.

    காந்தளகம் வெளியிட்ட நூல் ஒன்றுக்குக் கடந்த 2011 வைகாசியில் பரிசு கிடைத்தது. நூலாசிரியருக்குப் பரிசு என்றாலும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்து, பாராட்டு, பரிசு சான்றிதழ் வழங்கும் மரபு தமிழகத்தில் உண்டு.

    காந்தளகம் சார்பில் பாராட்டையும் பரிசையும் வாங்க முகாமையாளர் சென்றிருந்தபொழுது, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த என்னை மேடையில் இருந்த சிலம்பொலியார் அடையாளம் கண்டார். ஒருவரை என்னிடம் அனுப்பினார். பரிசைப் பெற நானே மேடைக்கு வரவேண்டும் என்றார். முகாமையாளருடன் சேர்ந்து பரிசைப் பெற்றேன். சிலம்பொலியார் என் மீது கொண்ட அன்பும் பாசமும் வாஞ்சையும் அளப்பில.

    கடந்த சில மாதங்களுக்கு முன், சிட்னியில் பழனியப்பனாரின் மகனுக்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்வுக்குப் போயிருந்தேன். பழனியப்பனாரின் மருமகள், சிலம்பொலியாரின் பெயர்த்தி முறையானவர். கொங்கு நாட்டவர். அங்கு சென்றதும் தெரிந்துகொண்டேன், மகிழ்ச்சியைப் பழனியப்பனாரிடம் தெரிவித்தேன்.

    பங்குனி 27, 2043 (09.04.2012) மாலை சிலம்பொலியாரின் இல்லம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. திருவான்மியூரில் அருள்மிகு மருந்தீச்சரர் திருக்கோலுக்குத் தெற்கே சிலம்பொலியாரின் இல்லம்.

    என்னை அழைத்துச் சென்றவர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

    என் சிறைவாசம் தொடர்பாக, முதலமைச்சராகக் கலைஞர் சொன்ன பதில் தனக்கு இன்றும் நிறைவைத் தரவில்லை எனக் கூறினார்.

    அறிஞர் அண்ணா, எம்ஜியார், கலைஞர் எனத் தொடர்ச்சியாக முதமைச்சர்களுடன் பணிபுரிந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்தார். ஈழத்துப் பேராசிரியர்கள் வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி பற்றிய தன் மதிப்பீடுகளைக் கூறினார்.

    சிட்னியில் பழனியப்பனாரின் மருமகளைச் சந்தித்ததை நினைவு கூர்ந்தேன். சிலம்பொலியாரின் அண்ணன் பாவலர் முத்துசாமியின் மகன், எம்பிஏ படித்தவர், காந்தளகத்தின் தொடக்க காலத்தில் பொறுப்பாளராகப் பணிபுரிந்ததையும் நினைவு கூர்ந்தேன். அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், பாவலர் முத்துசாமி.

    திருவான்மியூரில் 09.04.2012 அன்று பதிந்த காட்சிகளைக் காண்க, பகிர்க.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 30

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 30 – வாய்மை

    குறள் 291:

    வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
    தீமை யிலாத சொலல்

    வாய்மைங்கது என்னன்னா மத்தவங்களுக்கு சிறிசா கூட கெடுதல் செய்யாத சொல்ல சொல்லுதது.

    குறள் 292:

    பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கு மெனின்

    குத்தங்கொறயில்லாத நன்மைய குடுக்கும்னா உண்ம பேசுத எடத்துல பொய்யக்கூட சொல்லலாம்.

    குறள் 293:

    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்

    மனசறிஞ்சு பொய் சொல்லுதது தப்பு. அப்டி சொன்னாம்னா அவன் மனசாட்சியே அவன தண்டிக்கும்.

    குறள் 294:

    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்

    மனசால கூட பொய்ய நெனையாம இருக்கவன் ஒலகத்துல இருக்கவங்க மனசுல எல்லாம் இருப்பான்.

    குறள் 295:

    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை

    மனசார உண்ம பேசுதவங்க தவமும் தானமும் செஞ்சவங்கள விட ஒசந்தவங்க.

    குறள் 296:

    பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
    எல்லா அறமுந் தரும்

    பொய் சொல்லாம இருக்குதது போல புகழ் வேற ஒண்ணுமில்ல. அது அவனயறியாம அறவழில அவனுக்கு எல்லா நல்லதையும் குடுத்துபோடும்.

    குறள் 297:

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று

    பொய் சொல்லாம ஒருத்தன் வாழ்ந்தாம்னா மத்த அறங்கள செய்யாம இருந்தாக் கூட  நல்லாதாவே ஆவும்.

    குறள் 298:

    புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்

    அழுக்கு போவ மேலுக்கு தண்ணி ஊத்தி கழுகினா சுத்தம் ஆவும். மனசுக்குள்ளார இருக்க அழுக்கு உண்ம பேசுததுனால தான் சுத்தம் ஆவும்.

    குறள் 299:

    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு

    கருக்கல் ல இருட்ட போக்குத எல்லா விளக்கும் விளக்காவாது. மனசுக்குள்ளார இருக்க இருட்ட போக்குத பொய் சொல்லாத தன்மைங்குத விளக்குதான் பெரியமனுசங்களுக்கு விளக்கு.

    குறள் 300:

    யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற

    வாய்மை யப் போல ஒசந்த கொணம் இப்பம் வர வேற இல்ல ங்குததுதான் ஆஞ்சு அறிஞ்சு உணந்துக்கிட்ட உண்ம.

    Share