Blog

  • “என்னில் சாயி, எல்லாம் சாயி” – இசைத்தகடு மற்றும் புத்தக வெளியீடு

    -விவேக்பாரதி

    சென்ற வாரம் சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் “எல்லாமே சாயி” என்னும் இசைக் குறுந்தகடு வெளியானது. கவிமாமணிகள் க.ரவி மற்றும் சு.ரவி, கவிஞர்கள் சாய்ரேணு, நதிநேசன் ஆகியோர் எழுதி, க.ரவி அவர்கள் இசையமைத்து, திருமதி கிருபா ரமணி அவர்கள் பாடியிருந்த அந்தக் குறுந்தகட்டையும் அதனையொட்டி திருமதி சாய்ரேணு எழுதிய “என்னில் சாயி, எல்லாம் சாயி” என்ற சாய் சரித்திர நூலையும் சொல்லின் செல்வர் சுகி.சிவம் அவர்கள் வெளியிட்டு சாய்நாதன் மகிமைகளைக் குறித்து ஓர் சிற்றுரை ஆற்றினார். A forum for Art & Poetry என்னும் வாட்ஸாப் குழுவின் முன்னெடுப்பாக நிகழ்ந்த இந்த நிகழ்வில் Forum குழுவைச் சேர்ந்த நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர். சாய்நாதன் தாமரை மலர்ப்பதங்களில் குறுந்தகடும் புத்தகமும் சமர்ப்பிக்கப்பட்டது. சாய் பக்தர்கள் ஒருசேர சில பஜனைப் பாடல்களை சாய்நாதன் சன்னிதியில் பாடிய பின்னர் புத்தக வெளியீடும் அதைத் தொடர்ந்து உரை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    “குருமார்கள் மனிதர்களின் நிலவழிப் பயணத்தை விமானத்தின் வான்வழிப் பயணமாக மாற்றும் டேக் ஆஃப் செய்வதற்குப் பெரிதும் உதவுகிறார்கள், சாய்நாதர் கிருபை அத்தகையது” என்று ஆழமான உண்மைகளைச் சுகி சிவம் பேசினார். வாழ்த்துரை வழங்கிய சு.ரவி அவர்கள் “சாய்நாதம் மீது கொண்ட அளவற்ற பக்தியும் அவரது அருளும் தான் இத்தகைய படைப்புகள் உருவாகக் காரணம்” என்று பாராட்டினார்.

    அதன் பின்னர் சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பேராசிரியர் வ.வே.சு, திரு. பாலகிருஷ்ணன், திருமதி ஷோபனா ரவி, திருமதி மங்கலசுந்தரி, கவிஞர் சியாமளா ராஜசேகர், திருமதி ராணி, திரு. ராஜு போன்ற எண்ணற்ற நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நிகழ்வில் கலந்து கொண்டமை மேலும் சிறப்பைச் சேர்த்தது.

    கீழே நிகழ்வின் நிழற்படங்கள்

    Share
  • குறளின் கதிர்களாய்…(252)

    செண்பக ஜெகதீசன்

    உள்ளுவ தெல்லா முயர்வுள்ளல் மற்றது

    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

    -திருக்குறள் -596(ஊக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    அரசாள்வோர்

    எண்ணுவதெல்லாம்

    உயர்வு கருதிய எண்ணமதாய்

    இருத்தல் வேண்டும்..

    ஊழ்வினையால்

    உயர்வது நிறைவேறாதுபோனாலும்,

    உயர்வு கருதிய எண்ணமதை

    விட்டுவிடக் கூடாது…!

     

    குறும்பாவில்…

     

    உயர்வுகருதியதாயிருக்கட்டும் எண்ணம்,

    நிறைவேறாதுபோனாலும் எண்ணிய உயர்வு

    நிறுத்திவிடாதே உயர்வுகருதும் எண்ணமதை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    மக்களை யாளும் மன்னனவன்

    மனதில் எண்ணும் எண்ணமெல்லாம்

    மிக்க உயர்வது கருதியதாய்

    மிளிர வேண்டும் எப்போதுமே,

    சிக்கலாய் அந்த உயர்வதுதான்

    செயலில் நிறைவே றாதுபோனால்,

    துக்க மேதும் கொள்ளாமல்

    தொடர்ந்திட வேண்டும் உயரெண்ணமே…!

     

    லிமரைக்கூ..

     

    உயர்வைக் கருதியதாயிருக்கட்டும் எண்ணம்,

    உயர்வது நிறைவேறாதபோதும் நடந்துகொள்

    எண்ணமதைக் கைவிட்டுவிடாத வண்ணம்…!

     

    கிராமிய பாணியில்…

     

    விட்டிடாதே விட்டிடாதே

    ஒயர்வான எண்ணமத

    விட்டிடாதே கைவிட்டிடாதே..

     

    நாட்டயாளுற ராசாவுக்கு

    எண்ணமெல்லாம் எப்பவுமே

    ஒயர்வாத்தான் இருக்கவேணும்..

     

    நெனச்சபடி நடக்காமப்போனாலும்

    நெனப்பு அதத்தான் மாத்தவேண்டாம்,

    எப்பவுமே ஒயர்வாவே இருக்கட்டும்..

     

    அதால

    விட்டிடாதே விட்டிடாதே

    ஒயர்வான எண்ணமத

    விட்டிடாதே கைவிட்டிடாதே…!

     

    Share
  • தேவரடியார் பெற்ற சிறப்புச் சலுகைகள் உரிமைகள் பற்றிய கல்வெட்டு

    – சேஷாத்ரி ஸ்ரீதரன்

    திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில்

    திருக்கழுக்குன்றம் புடைப்புச்  சிற்பம்

       திருவொற்றியூர் புடைப்புச்  சிற்பம்.

    பொதுவாகக் கல்வெட்டுகள் தேவரடியார்கள் கோவிலுக்கு அளித்த தானங்களைத் தான் எடுத்து இயம்புகின்றன, ஆனால் மிகச்சில கல்வெட்டுகளே கோவில்களில் தேவரடியார் பெற்றிருந்த உரிமைகள் சிறப்புச் சலுகைகளைப் பற்றிக் கூறுகின்றன. இந்த உரிமைகள் தேவரடியார்க்கு சில கோவில்களில் மட்டுமே வழங்கப்பட்டதாக இருந்ததால் அதுவும் இதற்கு காரணமாகலாம். இதற்கு சில கோவில்களில் மட்டுமே  சிற்பங்கள் சான்றாக உள்ளன. ஒன்றரை ஆண்டுகள் முன் நான் திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயிலுக்கு சென்ற போது ஈசுவரன் சன்னதி முன் மண்டபத்தில் ஒரு தூணில் தலையில் கொண்டை போட்டு ஆடை அணியுடன் இரு தேவரடியார் புடைப்புச் சிற்பம் தம் கையில் திறவுகோல் வைத்திருப்பது போல் செதுக்கப்பட்டிருந்தது. இந்த சிற்பம் அவர்கள் கோவிலைத் திறந்து வழிபாடு நடத்துவதைக் குறிப்பதாக இருந்தது. கோபுர வாயில் கதவை இவர்கள் திறக்கப்போவதில்லை. பின் எதைத் திறக்கத் திறவுகோல்?  கருவறைக் கதவுகளை திறப்பதாக இருந்தால் மட்டுமே அதை சிறப்பாகக் குறிக்க கையில் திறவுகோலை செதுக்கி இருக்க வேண்டும் என்று உணர முடிந்தது. இதே கருத்தை உணர்த்துவது போல சென்னை திருவொற்றியூர் கோயிலில் ஆதிபுரீசுவரர் சன்னதியை நுழைவதற்கு முன் அமைந்த புறமண்டபத்தின் ஒரு தூணில் இரு தேவரடியார் புடைப்புச் சிற்பம் கையில் திறவுகோலுடன் நல்ல அலங்காரத்துடன் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரு தூண் சிற்பங்களும் தேவரடியார் கோயிலைத் திறந்து ஏதோ ஒரு பூசனை ஆற்றும் உரிமை பெற்றிருந்ததைக் குறிக்கின்றது. இதற்கான மேலும் சில சிற்ப, எழுத்துச் சான்றை நான் பல கோயில்களில் தேடி அலைந்து, கல்வெட்டு நூல்களைத் தேடி ஆராய்ந்நு 1- ½ ஆண்டுகள் ஓடி, பின் இறுதியில் இப்போது அச்சான்று திருப்பூர் திருமுருகன் பூண்டி கல்வெட்டாக வந்து நின்றது. இனி கல்வெட்டுச் சான்றை பார்க்கலாம்.

    திருமுருகன்பூண்டி தேவி கோயில் கருவறை வடக்கு ஜகதியில் பொறித்த 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்ரீ கோனேரின்மை கொண்டான் ஆளுடையார் திருமுருகன் பூண்டி கோயில் தேவகன்மிகளுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது இத்தானத்தில் குல
    2. சோழமண்டல கச்சா தேவரடியார்களுடை _ _ _ பெறும் முதன்மை தாநம் ஆளுடையார் திருமுருகன் பூண்டி யாண்டார்க்கு நாலாவது முதல் திருமேற்பூச்சும் குடுத்தோம். இப்படிக்கு
    3. செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க. இவை இலாடத்தரையன் எழுத்து. நந்தமாற் படுத்துக் கொள்க. இது பந்மாயேசுரரட்சை.

    தேவகன்மிகள் – கோயில் இறைப்பணியார்கள்; இத்தானத்தில் – இக்கோயில் தளத்தில், இந்த ஸ்தானத்தில்; தாநம் – ஸ்தானம், நிலை, status;  திருமேற்பூச்சு – சந்தனப்பூச்சு;  நந்தமார் –  பன்மாஹேஸ்வர ரக்ஷை – பல சிவனடியார்கள் காக்கவேண்டும்.

    கோனேரின்மை கொண்டானான கொங்கு சோழன் வீரராஜேந்திரச் சோழன் ஆட்சி (ஆண்டு குறிக்கவில்லை). திருமுருகன் பூண்டி கோயில் இறைப்பணியாளர்களுக்கு நாம் தந்த ஓலைஆணையாவது இந்த கோவிலில் சோழமண்டலத்  தேவரடியார்கள் பெறும் முதன்மைநிலை (ஸ்தானம்) யாதெனில் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு நாலாம் நாள் முதல் திருமேற் பூச்சு செய்யும் உரிமை கொடுத்தோம். இதை செம்பிலும் கல்லிலும் வெட்டிக் கொள்ளலாம். இவை இலாடத்தரையன் ஆணைஎழுத்து. நந்தமார் படுத்துக் கொள்க. இந்த நடைமுறை சிவனடியார் காப்பில் விடப்படுகின்றது.

    இதன்படி கோவிலில் இறைவர்க்கு சந்தனமேற் பூச்சு செய்ய சோழமண்டல தேவரடியார்கள் முதல்நிலை உரிமை பெறுகிறார்கள், இதாவது திருமுழுக்காட்டும் உரிமை பெறுகிறார்கள். பொதுவாக பிராமணர் தவிர்த்து பிறர் கருவறைக்குள் நுழைய முடியாது என்பது ஒரு கட்டுப்பாடு அது இங்கே தளர்த்தப்பட்டிருக்கின்றது. இப்படி உரிமை கொடுக்கக் காரணம் கோவில்கள் வேந்தர், மன்னவர்ஆகியோருக்கு  சொந்தமானது, அவர்களே இதன் தலைவர்கள் பிராமணர் அவர் சொல் கேட்டு நடக்க வேண்டியவர் என்ற கருத்திற்கு இக்கல்வெட்டு சான்றாகின்றது. நந்தமார் படுத்துக் கொள்க என்பது இதில் அவர்கள் தலையிட வேண்டாம் என்பதே.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 84 & 85 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் வடக்கு சுவரில் பொறித்த 9 வரிக்  கல்வெட்டு.

    1. தண்டீஸ்வரன் ஓலை சாகரஞ்சூழ் வையகத்துக் கண்டீஸ்வரன் கருமமாரய்க _ _ _  பண்டே அறஞ்செய்தான் அறங்காத்தார் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து அவர்களால் சண்டேஸவரன் ஆதேசம் நம்
    2. உடையார் திருமுருகன்பூண்டி ஆளுடைய நாயனார் கோயில் தேவரடியாற் ஆடக்கொண்ட நாச்சிமகள் _ _ _ பெருமாளான சவுண்டய நங்கை(க்கு)ம் இவள் தங்கை மக்கள் தோழியான திருவுண்ணாழியர் நங்கைக்கும் இவள்
    3. தங்கை காங்கய நாச்சியான ஆலால சுந்தர நங்கைக்கும் நம் ஒலை குடுத்தபடியாவது ஈஸ்வர சம்வத்சர _ _ ராக _ _ _ முதல் இவர்களுக்கு நாம் குடுத்த திருவந்தி காப்புக் குடுக்கையில் இவர்கள் திருவந்திக் காப்பும் எடுத்துப் பணியுமுறை
    4. யுஞ் செய்து  உடையார்க்கு பணியாக _ _ _ _ காலந்தோறும் திருநீற்றுக் கா_ _ _ _ திருக் கண்ணா மடை வண்காட _ _ _ லியற் இக்காள _ _ _ _ உள்ளிட்டாரையும் _ _ _  பார்க்கவும் திருநாளுக்கு நடே
    5. ஸ்வர நாயனார் எழுந்தருளும் பொழுது முன்னரங்கு ஏறக்கடவார்களாகவும் இவர் திருமுன்பு பிச்சவேஷம் _ _ _ _ கவும் இந்த ஹொதுசவத்துக்கு ஏறியருளும் திருத்தேர் திருநட்டப் பூங்கோயில் திருநடைக்கா
    6. வண முள்ளிட்ட ஆசநங்களேறக் கடவார்களாகவும் திருமார்கழித் திருவாதிரை மூற்றா(வதா)யுள்ள  திருவெம்பாவைக்கு கைநாட்டி  மூன்றாம் அறை முதலாயுள்ள அறையுங் கடக்கக் கடவ
    7. ர்களாகவும் மேற்சாத்தும் பரிவட்டமும் பெறக்கடவார்களாகவும் இந்தத் திருவந்திக் காப்பால் வந்த பிராப்தியங்களான வரிசைகளும் பெறக்கடவார்களாகவும். இப்படிக்கு இவர்கள் மக்கள் மக்கள் சந்திரா
    8. தித்தவரை அனுபவித்து வருவார்களாகவும் .இப்படிக்கு செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்வார்களாகவும் (நாம் நம்ஓலை) குடுத்தோம். இப்படிக்கு அருளிச்செயல்படிக்கு தேவர்கள் சீர்காழிப் பிள்ளை எழுத்து. பால் வண்ணத் தாண்டான் பெருமாள் எழுத்து. அண்ணாமலையான் எழுத்து. அடிக்கிளத்தை எழுத்து. சத்தி
    9. ன் எழுத்து மாடாபத்தியம் காஞ்சிபுரத்து சோமனா தேவன் எழுத்து. கானக் கா _ _ _ எழுத்து. கண்டியதேவன் எழுத்து. ஆனந்தக் கூத்தன் எழுத்து. முத்திக்கு நாயகன் எழுத்து. திருவம்பலப்பட்டி காட்டிய கைய்யன் எழுத்து. ஆனந்தக் கூத்தனார் எழுத்து. இவை அருளால் ஆதிசண்டேஸவரஸ்ரீ கரணத்தன் எழுத்து.  

    திருவந்திக் காப்பு – திருவிழாமுடிவில் கண்ணூறு போகச் செய்யும் சடங்கு; மேற்சாத்து – சால்வை; பரிவட்டம் – தலைப்பாகை போன்ற கட்டு; அருளிச்செயல்  – அனுமதி.

    தண்டீசுவரன் ஓலைஆணை யாதெனில் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு ஊழியம் செய்யும் கோயில் தேவரடியார் ஆடக்கொண்ட நாச்சி மகள் _ _ பொருமாளான சவுண்டய நங்கைக்கும் இவளுடைய தங்கைப் பிள்ளைகளின் தோழியான திருவுண்ணாழியர் நங்கைக்கும் இவளுடைய தங்கை காங்கய நாச்சியான ஆலால சுந்தர நங்கைக்கும்  நான்கொடுத்த ஓலைஉரிமை யாதெனில் இவர்களுக்கு நான் தந்த திருவந்திக் காப்பு சடங்கின்  போது அந்த திருவந்திக் காப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல காலந்தோறும் திருநீற்றுக் காப்பும் செய்ய வேண்டும். உற்சவ காலங்களின் போது நடராஜர் எழுந்தருளும் போது முன்னரங்கில் வீற்றிருக்க வேண்டும்.  நடராஜர் திருமுன்பு பிச்சவேஷம் இட வேண்டும். திருத்தேர், திருநட்டப் பூங்கோயில் திருநடைக்கு ஆகவேண்டியன ஆகிய நேர்வுகளின்  போது வீற்றிருக்க வேண்டும்.  மார்கழித் திருவாதிரையின் போது மூன்றாவதாக உள்ள திருவெம்பாவைக்கு திருநடம் புரியும் போது வீற்றிருக்க வேண்டும்.  மூன்றாம் அறையான கருவறை முன் அறையையும் கடக்க வேண்டும். அதன்போது சால்வையும், தலைப் பரிவட்டமும் ஏற்க வேண்டும். இந்தத் திருவந்திக் காப்பால் அடையப்படுவதான வரிசைகளும் (மதிப்பு) பெறவேண்டும். இப்படியான நிகழ்வுகளின் இந்த உரிமை இவர்களுக்கும் இவர் பிள்ளைகளுக்கும், இவர் பேரர்களுக்கும் என தலைமுறை தலைமுறையாக சந்திர சூரியர் உள்ள நாள் வரையும் அனுபவித்து வருக. இதை செப்புத் தகட்டிலும் பாறையிலும் பொறித்துக் கொள்வாராக என்று உரிமைஓலை கொடுத்தேன். இந்த மேலிட ஆணையை உடன் உள்ள அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்று ஒப்பமிட்டு கொடுத்துள்ளனர்.

    இக்கல்வெட்டில் ஆட்சியாளன் பெயரும் ஆட்சிஆண்டும் குறிக்கப்படவில்லை. தேவரடியார் கண்ணூறு நீக்கும் சடங்கு நடத்தவும், திருநீற்று காப்பு நடத்திடவும் உரிமை தரப்பட்டது அல்லாமல் இறைவர் எழுந்தருளும் போது வீற்றிருக்க வேண்டும். திருத்தேர், திருநடை திறப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு உள்ள இருக்கையைப் பெறவும் திருவாதிரையின் போது கைநாட்டி கோவில் கட்டட அமைப்பில் முன் மண்டபம், கூடம், உள்கூடம் என்ற மூன்றாம் அறையை கடந்து அதற்கும் அப்பால் உள்ள கருவறை வரையும் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. அதன்போது அவர்களுக்கு சால்வையும், பரிவட்ட மரியாதையும் தரப்பட வேண்டும். இந்தத் திருவந்திக் காப்பிற்கு உள்ள மரியாதை பெற உரிமை தரப்பட்டுள்ளது.  இந்தச் சலுகை இவர்களுடன் நில்லாமல் இவர் பெண் பிள்ளைகளுக்கும் பேத்திகளுக்கும் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தீட்டாகும் பெண்களுக்கு இந்த சலுகை, உரிமை ஆகியன ஆகமங்களை மீறித் தான் தரப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகின்றது அல்லது அரசாணை ஆகமத்திற்கும் மேலானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டு பிராமணர்களை மற்ற சாதாரண பணியாளர் போலத் தான் வைக்கின்றது. வேந்தன், மன்னன் முன் இவர்கள் கீழ்நிலையர் என்பது தெளிவாகின்றது.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 74 & 75 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்

    மன்னியூர் மன்னீசுவரர் கோயில் வடக்கு சுவரில் பொறித்த 5 வரிக் கல்வெட்டு.

    1. கோனேரின்மை கொண்டான் வடபரிசார நாட்டு ஆளுடையார் மன்னியூராண்டார் தேவகன்மிகளுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இத்தேவர்க்கு நாங்குடுத்தவூர் இராசடியான இயாழவல சோழநரல்லூரென்று தேவதானமாக ஊரேற்றிக்
    2. கொள்வார்களாகவும் இவ்வூர்க்கு நான்கெல்லை குழிமங்கலத்(தி) _ _ _ _ (க்கு) வடக்கும் இலுப்பையெல்லைக்கு மேற்கும் வாதிக்கரைக்கு தெற்கும் பாண்டிகுல மாணிக்க (வதிய்) எல்லைக்குக் கிழக்கும் இந்நாந்கெல்லை(க்)கு உள்(ப்)பட்ட நந்செய் புந்செ(ய்)யிலு
    3. ள்ள இறை புரவு சிற்றாயமும் எலவை யுகவை _ _ _ _  தெண்டகுற்றம் (எப்)பேர்ப்பட்டனவும் இத்தேவர்க்குத் திருப்பணிக்கும் தேவரடியார், நட்டுவர், காந்தப்பர், திருப்பதியம் பாடுவார், நிமந்தக்காறர்க்கும் இட்டு வருவதாக நமக்கு இருபத்தொன்
    4. றாவது முதல் நம்மோலை குடுத்தோம். இவை சோழகுல மாணிக்க மூவேந்த வேளாநெழுத்து. இயாண்டிருபத்தொற்றாவது நாளிரு நூற்றெழுபது இலாடத்தரையறெழுத்து காடுவெட்டி யெழுத்து. குருகுலத்தரைய நெழுத்து. கோசலத்தரைய ரெழுத்து. இது
    5. பன்மாஹேசுவரரக்ஷை.                                           

    ஊரேற்று – குடியேற்று; புரவு – விளைநில வரி; சிற்றாயம் – சிறு வரி; தெண்டக் குற்றம் – குற்றத்திற்கான தண்டம், fine; நட்டுவர் – நட்டுவனார், நாட்டியம் ஆடுவிப்போன்; காந்தப்பர் – கந்தர்வர் போல் பாடுபவர்; நிமிந்தக்காரர் – வாகனங்களை தண்டில் கட்டுவோர்

    கோனேரின்மை கொண்டானன வீரராஜேந்திரனின் 21 ஆம் ஆட்சிஆண்டில் 270 ஆம் நாளில் மன்னியூர் ஆண்டவர் கோயிலுக்கு இராசடி என்ற இயாழவல சோழநல்லூரை என்ற ஊரை உருவாக்கி தேவதானமாகக் கொடுத்து குடியேற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. இந்த ஊருக்கு நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது. இந்த ஊரில் நன்செய் புன்செய்யில் திறட்டப்படும் வரி, வயல்வரி, சிறுவரி, எல்லை வரி, உகவை, குற்றதண்ட வரி என எப்பேர்பட்ட வரியும் இறையிலியாக்கப்பட்டு அந்த வருவாய் இக்கோயிலில் பணியாற்றும் தேவரடியார், நட்டுவனார், காந்தப்பர், திருப்பதியம்பாடுவோர், வாகன தண்டு கட்டும் நிமிந்தர் போன்றோருக்கு சம்பளமாகக் கொடுக்க வேந்தன் இசைவளிக்க அதை மூவேந்த வேளான், இலாடத்தரையன், காடுவெட்டி, குருகுலத்தரையன், கோசலத்தரையன் போன்றோர் கையொப்பமிட்டுக் கொடுக்கின்றனர்.

    வேந்தரும் மன்னவரும் கோயிற் பூசனை பணியாளருக்கு மட்டுமல்லாமல் பிற தொண்டு ஊழியருக்கும் நிவந்தங்கள் தானங்கள் வழங்கி கோயில் இயக்கம் தடையின்றி நடந்துவர பல்வேறு வகையில் ஏற்பாடு செய்ததற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று. அவ் வகையில் தேவரடியார் என்போர் ஏதோ ஆடல்புரிபவர் என்றல்லாமல் கோயில் பணியாளரில் ஒருவராகவே ஆக்கப்பட்டனர் என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 114 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    திருமுருகன் பூண்டி  http://www.nammacoimbatore.in/article_view.php?newsId=2316

    Share
  • தங்கச் சிலம்பொலியார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    சித்திரை பிறக்குமுன்னர் சிலம்பொலி அடங்கியதே!
    மொத்தமுள்ள தமிழறிஞர் முழுப்பேரும் அழுகின்றார்!
    எத்தனையோ பட்டங்கள் ஏற்றநிறை விருதெல்லாம்
    அத்தனையும் அவர்பிரிவால் அழுதபடி நிற்கிறதே!

    உலகமெலாம் சென்றிருந்தார் உவப்புடனே தமிழ்கொடுத்தார்!
    நிலைபெறு மாறெண்ணிநிற்க நிறைவாக அவர்கொடுத்தார்!
    அளவில்லாக் கட்டுரைகள் அவர்கொடுத்தார் உலகினுக்கு!
    அழவிட்டு சிலம்பொலியார் அவ்வுலகு சென்றுவிட்டார்!

    மாநாடு பலகண்டார் மலர்கள் பலகொடுத்தார்!
    பூமாலை புகழ்மாலை தேடியவர் போகவில்லை!
    கோமகனாய் கொலுவிருந்தார், கொழுகொம்பாய்த் தமிழ்கொண்டார்!
    பாவலரும் காவலரும் பதறியழச் சென்றுவிட்டார்!

    தேன்தொட்டத் தமிழ்பேசி, திசையெங்கும் வசங்கொண்டார்!
    தான்விரும்பி சிலம்பதனைத் தமிழருக்கு எடுத்துரைத்தார்!
    நானென்னும் அகங்காரம் காணாத வகையினிலே
    தான்சிலம்பார் வாழ்ந்ததனால் தானுலகம் தவிக்கிறது!

    சங்கத்தமிழை அவர் இங்கிதமாய் எடுத்துரைத்தார்!
    எங்குமே சிலம்பொலியார் என்பதே பேச்சாச்சு!
    பொங்கிவரும் தமிழுணர்வால் பொழுதெல்லாம் தமிழானார்!
    தங்கச் சிலம்பொலியார் தவிக்கவிட்டு போனதேனோ!

    Share
  • (Peer Reviewed) கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் அகத்திணை மரபும் மாற்றமும்

    முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி.அ
    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
    கேரளப் பல்கலைக்கழகம்,
    திருவனந்தபுரம்

    கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் அகத்திணை மரபும் மாற்றமும்

    கம்பர் முத்தமிழ்த் துறை வித்தகர், உத்தமக் கவிஞர்.  அவர் இயற்றிய இராமாயணம், வால்மீகி ராமாயணத்தைத் தழுவி எழுதியதாக இருப்பினும் அதில் தமிழர் மரபும் பண்பாடும் காப்பியம் முழுமையும் விரவிக் கிடப்பதைக் காணலாம். கம்பர், வால்மீகி ராமயணத்தினின்று மாறுபட்டு படைத்துக் கொண்டுள்ள சிறந்த பகுதியாகக் கருதப்படுவது இராமனும் சீதையும் மணந்து கொண்ட வரலாறாகும். சங்க இலக்கிய மரபில் வந்த புலவரான கம்பர், இப்பகுதியைத் தமிழ் அகப்பொருள் மரபைத் தழுவி புதுமையாகப் படைத்துக் கொள்கிறார். தொல்காப்பியரது அகத்திணை மரபுகள்,  கம்பராமாயணத்தில் பயின்று வருமாற்றையும் அவற்றினின்று விலகி வருவனவற்றையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    அவத்தைகள்

    “கலந்த பொழுதும் காட்சியும் அன்ன (தொல்.பொரு18)”

    என்ற நூற்பா உரையில் இளம்பூரணர் கலந்த பொழுது என்பது தலைமகளைக் கண்ணுற்றவழி மன நிகழ்ச்சி உளதாங்காலம்: அக்காட்சி, பின்னர்க் குறிப்பறியும் துணையும் நிகழும் நிகழ்ச்சி. காட்சியாவது தலைவியை எதிர்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புணருந்துணையும் நிகழும் முன்னிலை யாக்கல் முதலாயின புணர்தல் நிமித்தம். இவை அந்நிகரனவன்றி பொதுப்பட நிற்றலின் வேறு ஓதப்பட்டன. அன்ன என்பது (இவையும்) ஓர் இடத்து நிகழும் உரிப்பொருள் என்றவாறு. ஓரிடமாவது கைக்கிளை. அதாவது காட்சி முதலிய நான்கும் கைக்கிளையாமன்றிப் புணர்தல் நிமித்தமாகா என்பதற்கு இதனால் விளக்கம் தந்துள்ளார். ஏனைய தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடாத ஒன்று. ஏனையோர் இதனை உரிப்பொருள் மயக்கம் என்று கூறுகின்றனர். இளம்பூரணர் காட்சி ஐயம் துணிவு குறிப்பறிதல் ஆகிய நான்கும் இயற்கைப் புணர்ச்சிக்கு நிமித்தம் எனவும் இவை கைக்கிளையாம் எனவும் கூறுவார். ஆராயின் இது கைக்கிளையின் பாற்படும்.

    தொல்காப்பியரது கருத்துப்படி இயற்கைப்புணற்சிக்கு முன்பு தலைவன் தலைவியர்
    ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்ளும் நிகழ்ச்சி உண்டு என்பதை உணரலாம்.
    அத்தகைய காட்சியைக் கம்பரும் ராமாயணத்தில் காட்டுகிறார். விசுவாமித்திரர், இராம இலக்குவர் இம்மூவரும் மிதிலை மாநகரின் காட்சிகளைக் கண்டுகொண்டே செல்கின்றனர். இவர்கள் கண்ட காட்சிகளை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஆடலரங்கு கண்டார், உலாவக் கண்டார், உதயங்கண்டார், எனப் பாடியுள்ளார். அவ்வாறு பல காட்சிகளைக் கண்டவர்கள், சீதையைக் கண்டதும்,

    ”கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோ
    டன்னம் மாடு முன்னுறை கண்டங் கயனின்றார். (மிதிலை. கா.ப 23)”

    என்று குறிப்பிடுகிறார்.

    அதாவது பொன்னினது ஒளியும், வண்டுகள் உண்ணும் தேனினது இனிய சுவையும் திருத்தமான சொற்களாலமைந்த பாட்டினது இன்பமும் ஆகியவை அனைத்தும் ஓர் உருக்கொண்டு விளங்குவது போல சீதையைக் கண்டு பிரமித்து அவளைக் கண்ட இடத்திலேயே நின்றனர். அங்கே சீதையை இராமன் கண்ட காட்சியை,

    ”எண்ணரு நலத்தினாளினைய நின்றுழிக்
    கண்ணொடு கண்ணிணை கெளவி ஒன்றையொன்று
    உண்ணவு நிலைபெறா துணர்வும் ஒன்றிட
    அண்ணலு நோக்கினான் அவளும் நோக்கினாள்” (மி.கா.ப. 35)

    ஒருவர் பார்வையோடு ஒருவர் பார்வை ஒன்றையொன்று பற்றி விழுங்கினது போல இருவர் உணர்வுகளிலும் தத்தம் இடத்து நிலைபெறாமல் ஒன்றையொன்று நாடி ஒன்றாய்க் கூடிக் கலக்கும் காதற் பார்வையாக இராமனும் சீதையும் கண்டனர். இருவருடைய உள்ளங்களும் ஒன்று கலந்தன. (மி.கா.ப.100) என்று இராமன் சீதை களவுக் காதலைப் பாடுகின்றார் கம்பர்.

    அவர்களது உள்ளப் புணர்ச்சியை எடுத்துரைக்கிறார்.

    காட்சி முதல் இயற்கைப் புணர்ச்சி நிகழும் காலம் வரையுள்ள இடைப்பட
    நிலையிலுள்ள மன நெகிழ்ச்சியைத் தொல்காப்பியர்,

    வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
    ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
    னோக்குவ எல்லாம் அவையே போறல்
    மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச்
    சிறப்புடை மரபினவை களவென மொழிப (தொல்.பொரு 97)

    என்கிறார்.

    வேட்கை- பெறல் வேண்டும் என்ற உள் நிகழ்ச்சி, ஒருதலை உள்ளுதல் – இடைவிடாது
    நினைத்தல், மெலிதல்- உண்ணாமையால் உடல் இளைத்தல், ஆக்கம் செப்பல்- உறங்காமை போன்ற நிலையை வர்ணித்தல், நாணும் வரை இறத்தல் –நாணம் நீங்குதல், நோக்குவ எல்லாம் அவையே போறல்- தன்னால் காணப்பட்டதெல்லாம் தான் கண்ட உறுப்புப் போலத் தோன்றுதல், மறத்தல்- தினசரி மறவி – பித்தாதல், மயக்கம்—மோகித்தல் வெறித்தனமாக நினைத்து மயங்குதல், சாக்காடு- மரணம் – சாதல். இவையெல்லம் களவுகாலத்து நிகழ்பவை. இவற்றைக் கைக்கிளை பாற்படும் என்று உரைக்கிறார். இதற்கு இளம்பூரணர் அவத்தைகள் என்று விளக்கம் தருகிறார்.

    கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். ஒருவரது காதலை எடுத்துக் கூறும் வரையுள்ள மன நிலையையும் ஒருதலைக் காமமாகக் கொள்ளலாம். இராமன் – சீதை இருவரிடையே நிகழும் களவின்போது தொல்காப்பியர் கூறிய பத்து அவத்தைகளுள் பல நிகழ்வதைக் காணலாம். பின்வரும் பகுதி, அவற்றை எடுத்துரைக்கிறது.

    காட்சிக்குப் பின் ஐயம் நிகழும் (தலைவியைக் கண்டதும் ஐயம் ஏற்படும்). இதனை விளக்குவதற்குத் திருக்குறளை எடுத்துக் காட்டியுள்ளனர், தொல்காப்பிய உரையாசிரியர்கள்.

    கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கிம் மூன்று முடைத்து                       (குறள்-1085)

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலுமென் நெஞ்சு                 (குறள்-1081)

    இவ்வாறு ஐயம் கொள்ளும் காட்சி, கம்பராமாயணத்திலும் பயின்று வந்துள்ளது. இராமன், சீதையைக் கண்டு துயில் கொள்ளாது மாடத்தில் வைத்து புலம்பும் பகுதி இதனைத் தெளிவு செய்கிறது.

    விண்ணி நீங்கிய மின்னுரு விம்முறை
    பெண்ணின் அன்னலம் பெற்றதுண்டோ? (மி. கா.ப. 58)

    கை கால் முதலிய அவயவப் பகுப்பில்லாத மின்னுருவம் கண நேரத்தில் மறைந்து ஒழிவதல்லது நிலையானதாய் இவ்வாறு அவயவப் பகுப்புடைய பெண் போலச் சிறந்த அழகு பெற்றதுண்டோ? நான் காண்கின்ற இவ்வுரு மின்னுருவோ அல்லது பெண்ணுருவோ? என்று ஐயம் கொள்கின்றான். ’இவ்வாறு நிகழும் ஐயம் தலைமகன் மாட்டுதான் நிகழும், தலைமகள் மாட்டு நிகழாது. தலைமகள் ஐயப்படாது ஏனெனில், அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ என்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி உண்டாகாது என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.”

    ஆனால், இதற்கு மாறாக, கம்பராமாயணத்தில் சீதையும் ஐயப்படுதல் காணப்படுகிறது. இராமனைக் கண்ட சீதை, காமம் ஆற்றப்பெறாளாய் ,

    பொருப்புறழ் தோள்புணர் புண்ணி யத்தது
    கருப்புவில் லன்றவன் காம நல்லனே (மி.கா.ப. 54)

    என் நெஞ்சினுள் பிரவேசித்து நிறையையும் பெண் தன்மையையும் நெகிழச் செய்து அவற்றை என் உயிரோடு கவர்ந்து கொண்டு போனவனுடைய மலை போன்ற தோள்களைச் சேரும் பாக்கியத்தைப் பெற்று விளங்கும் வில் கரும்பு வில்லன்று ஆதலால் அவன் காமன் அல்லன் என்று கூறுவதிலிருந்து சீதை இராமனைக் காமன் என ஐயுற்று அவது வில்லைவைத்து காமனல்லன் எனத் தெளிவுறுகிறாள். இங்கு கம்பர், தொல்காப்பிய மரபிலிருந்து விலகிச் செல்வதையும் காணலாம்.

    வேட்கை

    பத்து அவத்தைகளுள் ஒன்று, வேட்கை. பெறல் வேண்டு என்ற உள்ள நிகழ்ச்சி. கம்பராமாயணத்தில் இருவருக்கும் இவ்வேட்கை உணர்வு மேலிட்டதைக் கம்பர்
    எடுத்துரைத்துள்ளார். சீதையும் இராமனும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்ட பின்பு, ஒருவரையொருவர் நினைத்துப் புலம்பும் காட்சிகள் அனைத்து வேட்கையின்பாற்படும். சீதை இராமனை நினைத்து வெதும்புகிறாள் நிலவின் கதிர்கள் அவள்மேல் விழுந்ததால் தளர்வடைந்து சோர்ந்தாள், தோழியர் சந்தனக் குழம்பை அள்ளிப் பூசப் பூச உலர்ந்தது. மற்ற நோய்க்கு மருந்திருத்தல் போல ஆசை நோய்க்கு மருந்துண்டோ என்று ஆசிரியர் கேட்கிறார்.

    இராமனும் சீதை தன் உள்ளத் தாமரையில் வீற்றிருப்பதாகக் கூறுகிறான் . இவை
    தொல்காப்பியர் கூறிய வேட்கையாகும்.

    ஒருதலையுள்ளுதல்

    ஒருதலையுள்ளுதல் என்பது இடைவிடாது நினைத்தல். மாலைப் பொழுது வந்ததும்
    சீதை,

    பெண்வழி நலனோடும் பிறந்த நாணோடும்
    எண்வழி உணர்வு நானெங்கும் காண்கிலேன் (மி.கா.ப. 55)

    பெண் நலங்களையும் அவற்றுள் தோன்றிய நாணத்தையும் அறிவையும் என் அகத்தே தேடியும் காண்கிலேன், இராமன் அவற்றைக் களவாடியதாகக் கூறுகிறாள். இந்திர நீலத்தை ஒத்த நிறமும், தாழ்ந்த கைகளும், பூரண சந்திரனையொத்த முகமும் நீல மலையொத்த தோள்களும் சீதையின் உயிரை உண்டதாகக் குறிப்பிடுகிறார். மாரழகினும் தாளழகினும் அதிகமாக நடையழகு மனதில் நிலைத்திருப்பதாகக் கூறுகிறார். இவ்வரிகளிலிருந்து சீதை, ராமனை இடைவிடாது நினைத்தலை உணரலாம்.

    மெலிதல்

    மெலிதல் என்பது காம நோய் காரணமாக உண்ணாமையால் உடல் நலிதலாகும்.

    மாலுற வருதலு மனமு மெய்யுந்தான்
    நூலுறு மருங்குல் போனுடங்கு வாணெடுங்
    காலுறு கண்வழி புகுந்த காத நோய்            (மி.கா.ப. 41)

    இராமன் மீது கொண்ட காதலால் மனமும் தேகமும் இடைபோல மெலிவுற்றது என்று
    கூறுகிறார்.

    ஆக்கஞ் செப்பல்

    ஆக்கஞ் செப்பலுக்கு இளம்பூரணர் உறங்காமையும் உறுவது ஓதல் முதலாயின என்று உரையெழுதுகிறார். சீதை இராமன் காதலிலும் இத்தகைய அவத்தை பயின்று வந்துள்ளது. சீதை மாலைப் பொழுதையும் சந்திரனையும் பழிக்கும் காட்சிகள் அனைத்தும் இதன்பாற்படும். இராமனும் தூக்கம் வராமல் உலாவும் காட்சியை வர்ணிக்கிறார்.

    நோக்குவயெல்லாம் அவையே போறல்

    தன்னால் காணப்பட்ட அனைத்தும் தான் நினைத்ததாகவே தோன்றுதல். இக்காட்சியும் முழுமையாக இராமாயணத்தில் காணக் கிடைக்கின்றது.

    ஆல முலகிற் பரந்ததோ வாழி கிளர்ந்த தேவர்தன்
    நீல நிறத்தை யெல்லாரு நினைக்க வதுவாய் நிரம்பியதோ (மி.கா.ப.67)

    இரவு வந்ததும் அவ்விரவு நீல நிறம் போன்று எங்கும் காட்சியளிக்கிறது. ஆலம் உலகத்தில் பரவியதோ. சமுத்திரம் மேலோங்கி எங்கும் பெருகியதோ அவர் நீல நிறத்தை நினைக்க அதுவாய் பரவியதோ என்றும் கூறும் பகுதியிலிருந்து சீதை காணும் காட்சியனைத்தும் இராமனாகவே தோன்றுவதாகக் குறிப்பிடுகிறார். இராமனும்

    தெருளிலாவுலகிற் சென்று நின்றுவாழ்
    பொருளெலாமவள் பொன்னுரு வானவே ( மி.கா.ப. 123)

    என்னும் வரிகளில் உலகில் காணும் அனைத்து பொருட்களிலும் சீதையது அழகிய வடிவம் காட்சியளிப்பதாக இராமன் கூறுகிறார்.

    கம்பர், வால்மீகியைத் தழுவி ராமாயணத்தை அமைத்தாலும் தமிழ் மரபிற்கேற்பவே
    இதனை அமைத்துள்ளார். தொல்காப்பியர் களவுக்கு ஆமென்று வகுத்த பத்து அவத்தைகளுள் பெரும்பான்மையானவை சீதாராமன் களவிலும் பயின்று வந்து சிறப்பித்துள்ளன என்றும் சில இடங்களில் விலகியும் சென்றுள்ளன என்பதை இதினின்று அறிந்துகொள்ளலாம்.

    பயன்பட்ட நூல்கள்

    • கம்பராமாயணம் பாலகாண்டம், இராவ் சாகிப், வெ.ப.சு. நூல் நிலையம், மதுரை,1995
    • தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, திருவரங்கம் அச்சகம், சென்னை,1974
    • தொல்காப்பியத்தில் மணமுறைகள், செல்வராசு.சிலம்பு. நா , காவ்யா, சென்னை,2010
    • காப்பிய நோக்கில் கம்பராமாயணம், பாண்டுரங்கன்.அ, நியூ செஞ்சுவரி புக் ஹவுஸ், சென்னை

    படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

    ================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    ஆய்வாளர், கம்பராமாயணத்தின் பால காண்டத்தில், மிதிலைக் காட்சிப் படலத்தில்  காணப்படும் அகத்திணை மரபுக் கூறுகளை ஆய்ந்து அவற்றை அம் மரபுக்கு இயைய பொருத்திக் காட்டியிருக்கிறார். கட்டுரை சிறப்பாக அமைந்திருக்கிறது. எடுத்துக்கொண்ட தலைப்புக்கிணங்க, பால காண்ட நிகழ்வுகளை வைத்து ஆய்ந்திருக்கிறார். சுந்தர காண்டம் காட்சிப் படலத்திலும் இந்தக் கூறுகள் காணக் கிடைக்கின்றன. ஆய்வாளர், பால காண்டத்தோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார் எனினும் சிறப்பாகச் செய்திருக்கிறார். கட்டுரையின் நடை, கடுமையாக இருக்கிறது. இன்னும் எளிமையாக எழுதுவது, வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும்.

    ================================================================

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் -29

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 29 – கள்ளாமை 

    குறள் 281:

    எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு

    அடுத்தவங்க எளக்காரமா பாக்கக்கூடாது னு நெனைக்கவன் மத்தவங்க பொருள மனசால கூட களவாங்க நெனைய கூடாது.

    குறள் 282:

    உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வே மெனல்

    மத்தவம் பொருள அவனுக்குத் தெரியாம களவாங்கணும் னுமனசால நெனைக்குததே தப்புதான்.

    குறள் 283:

    களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
    தாவது போலக் கெடும்

    களவாங்கதுனால வர சொத்து அதிகமாகுதது போல தோணுச்சினாலும் பொறவு முன்ன அவங்கிட்ட இருந்ததயும் சேத்து அழிச்சுப்போடும்.

    குறள் 284:

    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
    வீயா விழுமந் தரும்

    அடுத்தவம் பொருள களவாங்குத ஆச களவாண்ட பொறவு அழியாத துன்பத்த கொடுக்கும்.

    குறள் 285:

    அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
    பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

    மத்தவன் எப்ப அசருவான் களவாங்கலாம்னு நேரம் பாத்து இருக்கவன் கிட்ட அருள் கருதி நேசமா நடக்குத கொணம் இருக்காது.

    குறள் 286:

    அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
    கன்றிய காத லவர்

    சிக்கனத்த கடபிடிச்சி வாழ்க்க வாழாதவங்கதான்  அடுத்தவம் பொருள களவாண்டு வர ஆசப் படுவாங்க.

    குறள் 287:

    களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்க ணில்

    அளவறிஞ்சு வாழ்க்க நடத்துதவங்ககிட்ட அடுத்தவம் பொருள களவாங்குதது ங்குத கெட்ட புத்தி கெடையாது.

    குறள் 288:

    அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
    களவறிந்தார் நெஞ்சில் கரவு

    அளவறிஞ்சு வாழுதவங்க மனசுக்குள்ள அறம் நிக்குதது போல களவாண்டு பழக்கப்பட்டவன் மனசுக்குள்ள வஞ்சம் நிக்கும்.

    குறள் 289:

    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர்

    அடுத்தவம் பொருள களவாங்குதது தவித்து வேற ஒண்ணும் தெரியாதவங்க ஆக்கங்கெட்ட செயல செஞ்சு அப்பமே கெட்டழிஞ்சு போவாங்க.  

    குறள் 290:

    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
    தள்ளாது புத்தே ளுலகு

    களவாங்குதவங்கள அவங்க உசிரே வெறுத்துபோயிடும். களவாங்காம இருக்கவங்கள தேவர் ஒலகமும் வெறுக்காது.

    Share
  • பார்வைகள்

    மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

    ஆஃப்டர் கேர்ஹோமிற்கு முன்னால் உள்ள பைன் மரங்களுக்கிடையில் ரோஸியும் மாத்யூவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். டிசம்பர் மாதம். ஒரு மாலை நேரம் வெப்பமற்ற குறைந்த வெயில்.

    மாத்யூ ரோஸியை பார்க்க வந்திருந்தான்.

    ரோஸி ஆஃப்டர் கேர் ஹோமில் தங்கியிருந்தாள்.
    அதற்கு முன்பு புவர்ஹோம் சொசைட்டி நடத்துகின்ற அனாதை இல்லத்திலிருந்தாள். பதினெட்டு வயதான பிறகு ஆஃப்டர்கேர் ஹோமிற்கு மாறிவிட்டாள். அவளைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவளது மனதைத் தொடுமளவிற்கு ஏதாவது கூறவேண்டும் என்று மாத்யூ நினைப்பான். ஆனால் பேருந்தை விட்டிறங்கி பைன் மரங்கள் நிறைந்த நடைபாதையை அடைவதற்குள் அவன் நினைத்ததெல்லாம் மறந்திருப்பான்.

    ரோஸியும் ஏதேதோ சொல்லவேண்டும் என நினைப்பாள். ஆனால் வார்த்தைகள் வெளியில் வராது.

    வார்த்தைகள் பயன்படவில்லையெனில் தான் சொல்ல வந்த எண்ணங்களை கண்களால் வெளிப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் அவள் மாத்யூவை உற்றுப்பார்த்தாள்.

    ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையிலிருந்து ஜன்னலுக்கருகில் ஒன்றாக நின்று பலரும் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் அன்புடன், சிலர் ஆசையுடன்.

    தாங்கள் கவனிக்கப்படுகிறோமென்று கட்டடங்களைப் பார்க்காமலேயே மாத்யூவுக்கும் ரோஸிக்கும் தெரிந்திருந்தது. அப்பார்வைகள் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

    ஒன்றும் பேசவில்லை. சொல்லப்போனால் பேசுவதற்கோ நிறைய இருந்தது.

    ரோஸியின் கண்கள் திடீரென ஈரமாயின

    மாத்யூ செய்வதறியாது அவளுடைய தோள்களில் கை அமர்த்தினான். அவளை சமாதானப்படுத்த என்ன சொல்வதென்று அறியாமல் அவன் தயங்கினான். கவலைப்படவேண்டாம் என்றும் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூற அவன் விரும்பினான். அவர்களுக்கிடையில் பைன் மரங்களின் வழியே காற்று நுழைந்தது.

    “அவங்க என்ன பேசியிருப்பாங்க?”

    ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையில் இடப்புறத்தின் கடைசியில் ஜன்னலுக்கருகில் நிற்கின்ற ‘நோர்மா’ அருகில் நிற்கும் ப்ரஜித்தாம்மாவிடம் கேட்டாள்.

    ப்ரஜித்தம்மாவோ கீழே இருக்கும் ரோஸியையும், அவளைப் பார்க்க வந்த மாத்யூவையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
    “ரெண்டு தேவதகளைப் பார்க்கற மாதிரி இருக்கு”.
    அவள் திரும்பிப்பார்க்காமல் கூறினாள்.

    பின்னாலொரு அறையிலிருந்து கிறிஸ்டீனா என்ற பெண் வயலின் வாசிக்கத் தொடங்கினாள். அறையில் கிறிஸ்டீனா தனியாக இருந்தாள். அவள் வயலின் வாசித்துக்கொண்டே அறையில் மெதுவாக நடந்தாள். ஜன்னலுக்கருகில் நின்று கொண்டிருந்த காத்ரின் பரிதாபத்தோடு அவளைப் பார்த்தாள். அவள் யாரையும் கவனிக்காமல் கண்களைப் பாதி மூடினாள். வயலினுடன் அறையில் நடந்தாள்.

    பைன்மரங்களுக்கிடையில் மாத்யூவும், ரோஸியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையின் ஜன்னல்கள் வழி பலவிதமானப் பார்வைகள் அவர்களின் மேல் விழுந்து கொண்டிருந்தது.
    —————————————————–

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    Share
  • (Peer Reviewed) தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

    (Peer Reviewed) தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

    க.ரங்கநாதன்,      

    முனைவர் பட்ட ஆய்வர்

    யோகமும் மனித மாண்பும் துறை

    பாரதியார் பல்கலைக்கழகம்

    கோவை

    முனைவர் பெ.சுந்தரமூர்த்தி

    நெறியாளர்

    யோகமும் மனித மாண்பும் துறை

    விஷன் ஸ்கை ஆராய்ச்சி மையம்

    ஆழியாறு, பொள்ளாச்சி

    சுருக்கம்:

    உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல நோக்கங்களை தமக்குள் அமைத்துக் கொள்கின்றனர். தனது இலக்கிற்கு ஏற்ப செயல்பாடுகளை வகுத்துக் கொள்வதுதான் சிறப்பான வாழ்க்கையாகும். பலருக்கு செல்வத்தைச் சேமித்துக் கொள்வதாக அமைகின்றது. சிலருக்குக் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றுணர்ந்து தேர்ந்து படைப்பாளியாவது நோக்கமாகின்றது. வெகுசிலருக்கே தவம் பயின்று ஆன்மீகத்தில் முன்னேறுவது ஆர்வமாகின்றது. அனைத்து மதங்களிலும், தன்னை அறிந்து இயற்கையின் பேரறிவை உணர்ந்துகொள்ள யோகப் பயிற்சிகள் அவசியமாகின்றன.

    (கலைச் சொற்கள்: அன்னமயகோசம் – மனம் உணவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது,     பிரத்தியாகாரா   – பற்றற்ற மனநிலை, தாரணா     -ஒருநிலைப்படுத்துதல்,         ஏழு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம்,  விசுக்தி, ஆக்கினை, துரியம், மானோமனநிலை – புலன் வயப்பட்ட மனநிலை)

    முன்னுரை:

    தவம் என்பது மனத்திற்கான பயிற்சி ஆகும். நீண்ட காலமாக மனித குலம் மனத்திற்கு முறையான பயிற்சிகளைக் கொடுத்து மனத்தைச் செம்மையாக்கி வருகிறது. முற்காலத்தில் குருகுலத்தில் மாணாக்கர்களுக்கு சுவாசப் பயிற்சிகளோடு தியானம் கற்றுத் தரப்பட்டது. ஆதிகாலத்தில் மகளிர் தவமுறைகளை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படவில்லை. தற்காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களால் தீட்சை முறையில் மகளிருக்கும் கற்றுத் தரப்படுகின்றன.

    அன்னமய கோசத்திலே மனம் சுழன்று வாழ்ந்து வரும் மக்கள், புலன் இச்சைக்கு உட்பட்டு, வேண்டாத அறுகுணங்களில் மூழ்கி விடுகின்றனர். அதனால் ஏற்படும் பிராராப்த வினைகளிலிருந்து மீட்டுக்கொள்ள தவங்களை மேற்கொள்வது அவசியமாகிறது. ஆசானின் உயிராற்றலையும் தன் உயிராற்றலோடு இணைத்துக்கொண்டு தவப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. யோகியர் பிரத்தியாகார மற்றும் தாரணா பயிற்சிகளுடன் உயர்ந்து சமாதி நிலையை அடைந்தனர்.

    மனத்தை ஓரிடத்தில் நிலை நிறுத்துவதே தவம் எனப்படுகின்றது. தவம் மற்றும் அதைச் சார்ந்த யோகப் பயிற்சிகளுக்கு மனமே பயிற்சிக் கூடமாகவும், விளை நிலமாகவும் அமைகின்றது. விளக்குச் சுடரின் மீதோ ஒரு புள்ளியின் மீதோ தனது பார்வையைச் செலுத்துவதே ஒருமைப்படுத்துதல் ஆகும். உடலையும் உயிரையும், உயிரையும் மனத்தையும், மனத்தையும் அறிவையும், அறிவையும் பேரறிவோடும் இணைத்து லயமாவது தியானத்தின் சிறப்பம்சங்களாகும். ஒரு தியான ஆசனத்தில் அமர்ந்து இரு கண்களும் மூடிய நிலையில் சுவாசத்தை ஒழுங்குபடுத்தி நிலைத்து நிற்பதே தவத்தின் முக்கிய அம்சமாகும்.

    “யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று நிலத்தில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அதனை மென்மையான துணியால் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர் இதன்மேல் ஸ்திரமாக அமரந்து மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி மனத்தை ஒருமுகப்படுத்தி இதயத்தைத் தூய்மைப்படுத்த, யோகியானவர் யோகத்தைப் பயில வேண்டும்.”

                      “பகவத் கீதை அத்தியாயம் ஆறு – தியானயோகம் பதங்கள் 11-12”;

    உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் தியானத்தால் இணைக்கப்படுகின்றன. இதனால் ஏழு நாளமில்லாச் சுரப்பிகளுக்கும் உயிராற்றல் அதிகப்படுத்தப்பட்டு சுரப்பிகளின் பணி ஊக்கவிக்கப்படுகின்றன. வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் மன அலைச் சூழலை உணர்ச்சி அலை என்றும் அல்லது பீட்டா அலை எனவும் அது குறைந்து வரும்போது அமைதி அலை, நுண்ணலை, அறிதுயில் அலை எனவும்   ஆங்கிலத்தில் ஆல்பா அலை, தீட்டா அலை, டெல்டா அலை எனவும் அழைக்கப்படுகின்றன.

    1 பீட்டா அலை உணர்ச்சி அலை 40-14 சுற்றுகள் :வினாடி
    2 ஆல்பா அலை அமைதி அலை 13-8 Rw;Wfs; :வினாடி
    3 தீட்டா அலை நுண்ணலை 7-4 Rw;Wfs:வினாடி
    4 டெல்டா அலை அறிதுயில் அலை 3-1 சுற்றுகள் :வினாடி

    ஆழ்ந்து தவம் செய்கின்ற போது மனம் 3-1 சுற்றுகள்ஃவினாடி என்ற அளவிற்கு குறைந்து அறிதுயில் அலைக்கு வருகின்ற போது மனிதனின் சிற்றறிவு, பேரறிவோடு இணைகின்றது. பிறவித் தொடராக வந்த சஞ்சித கர்மமும் மூன்று வயதுக்குப் பின் நாம் செய்த வினைகளான பிராராப்த கர்மமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய புகுவினையான ஆகாமிய கர்மமும் மறைந்து, பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை கிட்டுகிறது.

    “தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

    போய பிழையும் புகுதருவா நின்றனவும்

    தீயினில் தூசாகும் செப்பலோ ரொம்பாவாய்”.

                                        -ஆண்டாள் பாசுரம். பாடல்-5 – டி.ஜி.ராமையா, மாருதி வெளியீடு.

    கருமைய களங்கங்கள் அழிக்கப்பட்டு, நான் யார்? எனும் வினாவிற்கு இறைவனே தானாக இருப்பது உணரப்படுகிறது.

    சுவாசத்தை மனத்தோடு ஒன்றிணைத்து, சாதனம் செய்யும் போது தவமானது வெற்றி அடைகின்றது. பிராணன் எனப்படும் மூச்சுக்குக் காற்றை ஒழுங்குபடுத்திச் செய்யும் பயிற்சிக்கு பிராணாயாமம் எனப்படுகின்றது. உடல், புலன்கள், மனம், மூச்சுக்காற்று ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செய்யும் தியானமானது சிறப்பானதாக அமைகின்றது.

    நாடி சுத்தி  எனும் பிராணாயாமப் பயற்சியில் இடநாசி, வலநாசி இரண்டையும் ஒருங்கே இயக்கி நுரையீரலைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் இதயத்தின் செயலாற்றல் அதிகப்படுத்தப்படுகிறது. இரு நாடிகளையும் தூய்மைப்படுத்துவதால் சுழுமுனை எனும் நாடி சக்கரங்களின் வழியாக மேலேறி துரியம் சென்று தவத்தினைத் திறம்படச் செய்வற்குப் பேருதவியாக உள்ளது. உடலில் புத்துணர்ச்சி மேலோங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. மனம் எச்செயலைச் செய்தாலும் அதற்கு நுட்பம் நிலைத்திருக்கிறது.

    முக்குணங்களில் ரஜோ, தாமச குணங்களின் வீரியம் குறைகின்றது. எந்த உயிருக்கும் துன்பம் தராத செயல்களைச் செய்து, துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யும் மனநிலையைப் பெறமுடிகின்றது. மானோ மனநிலையில் தோன்றுகின்ற ஆறு தீய குணங்களும் படிப்படியாகக் குறைகின்றன.

    தீய குணங்கள் நல்ல குணங்கள்
    பேராசை                 (காமம்) நிறைமனம்
    கடும்பற்று                (லோபம்) ஈகை
    முறையற்ற பால்கவர்ச்சி      (மோகம்) கற்பு நெறி
    உயர்வு தாழ்வு மனப்பான்மை  (மதம்) நேர்நிறை உணர்வு
    வஞ்சம் (மாச்சரியம்) மன்னிப்பு

    தவத்தால் நல் வாழ்விற்குத் தேவையான ஆறு நற்குணங்கள் மானுடத்தில் மாற்றி   அமைக்கப்படுகின்றன மற்றும் அறநெறி வாழ்க்கை மேற்கொள்ள முடிகின்றது. குடும்பத்தில் அன்பும் கருணையும் ஓங்கி இன்புற்று வாழ முடிகின்றது.

    வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவகிரக தவம்:

    அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம். அண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களே நம் உடலிலும் இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நிலம் எலும்பு
    நீர் இரத்தம்
    நெருப்பு உடல்சூடு
    நிலம் காற்று, மூச்சு
    ஆகாயம் உயிர்

    பஞ்ச பூதங்களின் விகிதாச்சாரம் மாறும்போது உடலின் பஞ்ச பூதத்தன்மைகளும் மாறுபடுகின்றன. இதனால் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் மற்றும் காற்றோட்ட உயர்வு தாழ்வுகளால் நோய்கள் வரக் காரணமாகின்றன.

    பிரபஞ்சத்திலுள்ள கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள், ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளாமல் தங்களது பாதைகளில் உலவிக்கொண்டிருகின்றன. இவற்றின் காந்த அலைகள் பூமியில் வாழும் உயிரினங்களோடு தொடர்பு கொண்டிருகின்றன. சூரிய குடும்பத்திலிருந்து வரும் காந்த அலைகள், மனிதனின் உடலோடும் உயிரோடும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. ஒன்பது கோள்களோடு நட்புறவு கொள்வதனால் உடலில் உள்ள சிற்றறைகளும் உறுப்புகளும் பலம் பெறுகின்றன. மேலும் மன அமைதி, மன மகிழ்ச்சி, மனவலம், தைரியம், உயர் நட்பு ஆகியன பெற, நவகிரக தவம் துணை புரிகிறது.

    நவகிரகங்களின் உடல் தொடர்பு:

    சூரியன்          –           எலும்பு

    புதன்               –           தோல்

    வெள்ளி          –           வித்து சக்தி

    சந்திரன்          –           இரத்தம்

    செவ்வாய்      –           மஜ்ஜை

    வியாழன்       –           மூளைச்செல்

    சனி                 –           நரம்பு

    இராகு,கேது  –           ஓஜஸ்

    முடிவுரை:   

    எட்டு வித அங்கங்கள் கொண்ட அஷ்டாங்க யோகத்தால் மனித இனம் நன்மையே பெறுகின்றது. தவப் பயிற்சிகளை மேற்கொள்ள அமைதியான மனநிலை தேவைப்படுகின்றது. உள்ளதை உணர்ந்து, அல்லதை விடுத்து, நல்லதைச் செய்து வாழ, தவங்கள் மிகவும் துணைபுரிகின்றன. துன்பத்தில் உழலும் மக்கள் தவப்பயிற்சிகள் செய்வதால் அமைதி, பேரின்பம் பெற்று வாழ்க்கை பிரகாசமாகும்.

    மேற்கோள் நூல்கள்:

    1)         உயிர் வளமும் மனவளமும்: யோகமும் மனிதமாண்பும், முதுகலைப்பட்டம் முதலாம் ஆண்டு, தாள் – 33, வேதாத்திரி உள்ளுணர்வுக் கல்வி நிலையம், ஆழியாறு 11ஆம் பதிப்பு, மே – 2018

    2)         மனவளக் கலை தொகுப்பு – 1, வேதாத்திரி மகரிஷி 30ஆம் பதிப்பு – சூன் – 2007

    3)         பகவத் கீதை, உண்மையுருவில், சுவாமி.பிரபுதாதர் இரண்டாம் வெளியீடு.

    4)         திருப்பாவை – திருவெம்பாவை – டி.ஜி.ராமையா, மாருதி வெளியீடு.

    =========================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்னும் கட்டுரை, தவத்தின் மேன்மையினையும் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது. உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒழுங்குபடுத்த, தவம் என்பது எவ்வாறு பயன்படுகிறது என்பதைச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. கட்டுரையில் ஒரு தொடர்ச்சி இல்லை. ஆய்வின் முடிவுகளுக்கும் கட்டுரையின் கருத்துகளுக்கும்  நெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும். மேற்கோள்கள் பல ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற வேண்டும். கட்டுரை ஆய்வுக் கட்டுரையாக மாறவேண்டும் எனில் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

    =========================================================================

    Share
  • படக்கவிதைப் போட்டி 206-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கடலோர மண்ணில் கால்பதித்து, கடலலை மேலே கண்பதித்து நிற்கும் நங்கையைத் தன் புகைப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் ஷாமினி. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 206க்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    பாவை முகம் நம் பார்வைக்குக் கிட்டாததால் அவர் அகத்தைப் படிக்க இயலவில்லை. எனினும் அவர் நின்றிருக்கும் தோற்றம் அலைகளோடு அவர் ஏதோ மானசீகமாக உரையாடிக்கொண்டிருக்கின்றாரோ என்றே எண்ண வைக்கின்றது.

    தம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இந்நங்கையின் மனவுணர்வுகளைக் கவிதையில் நகலெடுக்கக் காத்திருக்கும் கவிஞர்களை அழைக்கின்றேன் இனி!

    *****

    கடல்தாண்டிச் சென்ற காதற் கணவனிடம் கடலலையைத் தூதாக அனுப்பும் வஞ்சியின் நெஞ்சைத் தம் கவிதையில் அழகாய்க் காட்டியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தொடர்கதையாய்…

    வேலைக்காக
    வெளிநாடு சென்றவர்களின் கதைகள்,
    அடுத்தடுத்து வரும்
    அலைகளைவிட அதிகம்தான்..

    ஆனாலும்
    அவளும் சொல்கிறாள் தன்கதையை,
    தூதாகிட வேண்டுமாம்
    கடலலைகள்..

    கேட்டுக்கொண்ட கடலும்
    தலையசைத்தவிட்டு அவளுக்கு,
    திரும்பிச் செல்கிறது
    துயரத்துடன்..

    தொடர்கதையான
    தொடரும் கதைகள்,
    துடைத்துக்கொண்டது கண்ணீரை
    அலைகளில்..

    அதனால்தன்
    ஆனதோ கடல்நீர்-
    உப்பாக…!

    *****

    ”அண்டங்களையும் கண்டங்களையும் விழுங்கி ஏப்பமிட்ட ஆணவக் கடலே, உன்னைப் பாட மாட்டேன்!” என மறுத்து, ”அடுப்பூதிய எம் பெண்டிர் அண்டவெளி அளக்கும் சாதனையை நீ பாடிப் பரப்பு!” என்று கடலுக்குக் கட்டளையிடுகின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ. 

    அலைகடலே எம் புகழ் பரப்பு!

    ஆழி உன்னுடன் பேச
    ஆயிரம் உண்டு எனக்கு
    அசையாமல் நின்று உன்
    அலை விளையாட்டுக் காண
    ஆயிரம் கண்கள் போதுமோ
    அன்றைய கவிகளின் புகழுரையால்
    ஆணவம் கொண்டு நீ
    ஆடிக்களித்ததில் சுனாமி
    அலைகளாய்ப் பெருக்கெடுத்து
    ஆருயிர் மக்களின் வாழ்வழித்தாய்
    ஆதிகவிகளின் காலத்திலோ
    அமுதுசெய்யக் கண்டங்களை விழுங்கி
    ஆறுகளைக் குடித்து நீ
    ஆற்றிக்கொண்டாய் உன் தாகத்தை!
    அலைகடலே இனி என் முடிவைக் கேள்!
    அணுவளவும் புகழேன் உன்னை!
    அற்புதமான எம்இந்தியப் பெண்களின்
    அளப்பில்லாச் சாதனைப் பட்டியலை
    அமைதியாய்க் கேட்டு அலைகளினால்
    அகிலமெல்லாம் பரவிடச் செய்!
    அருமைச் சகோதரிகள்
    அறுவர் தாரிணியெனும் கலம் ஏறி
    ஆறு மாதம் உன்னுடன் உறவாடி
    அவனியை வலம் வந்து புரிந்தார்
    அசைக்கமுடியா உலக சாதனை!
    ஆறாறு மாதங்களுக்குப்பின் மற்றொருத்தி
    அழகான விண்கலம் ககன்யான்மூலம்
    அண்டவெளியை வலம்வருவாள்
    அருமையான வீராங்கனைகளுள் ஒருவராய்
    அன்னையவள் கொடிதாங்கி
    அடுப்பூதிய எம் மகளிர் இன்று
    அனைத்துத் துறைகளிலும்
    அளப்பரிய சாதனைகள் படைத்து
    ஆசிரியராய் விஞ்ஞானியாய்
    ஆகாயவிமானம் ஓட்டுபவராய்
    அணு ஆராய்ச்சி முதல்
    அண்டவெளிப்பயணம் வரை
    அடுத்தடுத்துப் படைத்துவரும் சாதனையை
    அலுக்காமல் பரப்புவதே உன்தொழிலாய்
    அயராது செய்து நீ உள்ளளவும்
    அவளின் புகழை நிலைபெறச்செய்!

    *****

    புகைப்படத்துக்குப் பொருத்தமாய்க் கவிதைகள் படைத்துத் தந்திருக்கும் புலமைசால் கவிஞர்கட்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

    இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

    இவள் யாரோ?
     
    விரிந்து கிடைக்கும் கடல் முன்னே
    வந்து நின்ற வஞ்சி இவள் யாரோ?
     
    துள்ளி எழுந்தாடும் அலை கடல் கண்டும்
    அமைதியாய் நிற்கும் நங்கை இவள் யாரோ?
     
    வாழ்வில் தோற்றவர்கள் பலர் இங்கிருக்க
    தேர்வில் தோற்றதற்காக உன் வாழ்வை
    முடித்துக்குள்ள இங்கு வந்தாயோ?
     
    அன்னையின் அன்பின்றி அனாதைகளாய்ப் பலர் இங்கிருக்க
    காதல் தோல்வியால் உன் உயிரைத்
    துறக்க இங்கு வந்தாயோ?
     
    உடன் வந்த உறவுகள் எல்லாம் விட்டுப்பிரிந்திட
    துயர் வந்து கடலாய் உனை இன்று சூழ்ந்திட
    தனித் தீவாய் ஆனாயோ?
    உன் துயரம் நீங்கிட உயிர்தனைத் துறந்திட
    கடல்தனைத் தேடி வந்தாயோ?
     
    நிலையில்லா வாழ்வில்
    வரும் துயரம் யாவும் நிலைகொள்வதில்லை!
    இதுவும் கடந்து போகும்…
    தொலைவில் தோன்றும் தொடுவானம்கூடப்
    பொய்யாய்ப் போகும் முன்னேறிச் சென்றால்!
    இவள் கதை அறியும் முன்னே
    அலை வந்து அழித்துச் சென்றதே
    இவள் பதித்த காலடித் தடங்களை!
    திரும்பியவள் புதிதாய்த் தடங்களை பதித்திடவோ?!
     
    புதிய பாதை அமைத்துப் புதிய சரித்திரம் படைத்திடு!
    யார் நீ என்று இவ்வுலகுக்கு உணர்த்திடு!
    அதுவரை…
    விடை தெரியா வினாக்களால்  
    காண்பவர் மனதில் கேள்விக்குறியாய்  
    என்றும் நீ இருப்பாய்
    இவள் யாரோ?

    கடலோரம் நின்றிருக்கும் இந்த வஞ்சி யாரோ? கல்வியிலோ, காதலிலோ தோற்றவளோ? வாழ்வில் உடன்வந்த உறவுகளை இழந்து இறக்கத் துணிந்தவளோ? தெரியவில்லை! நிலை எதுவாயினும் ’இதுவும் கடந்து போகும்’ என்ற நெஞ்சத் துணிவோடு வேதனை தந்த பழைய பாதையை மறந்து, சாதனை படைப்பதற்கோர் புதிய பாதையை இவள் தேர்ந்தெடுக்க வேண்டும்! என்றிப் பாவைக்கு ஊக்கமூட்டும் ’பா’வைப் படைத்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

      

    Share
  • [Peer Reviewed] முடுகா மொழியின் வினைச் சொற்களும் பழந்தமிழும்

    முனைவர் த. கவிதா,
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம்,
    அரசுக் கல்லூரி,  சித்தூர், பாலக்காடு,
    கேரளம், 678104.

                                   முடுகா மொழியின் வினைச் சொற்களும் பழந்தமிழும்                               

    உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளைக் கண்டறிவதற்கு அம்மொழியின் வட்டார வழக்குகளை ஆய்ந்தறிந்து ஆவணப்படுத்த வேண்டியதன் தேவை அதிகரித்துள்ளது. அவ்வகையில் பழந்தமிழின் வட்டார வழக்கு என்ற நிலையில் இன்றுவரை நிலைபெற்றிருக்கும் மொழியாகிய முடுகா மொழிச் சொற்களை ஆய்ந்து உணருவோமானால் பழந்தமிழின் வட்டார வழக்கு மொழிகளை எளிதில் இனங்காண்பதற்கு வழிவகை அமையும்.

    கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி மலைப் பகுதிகளில் காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடிகளாகிய முடுகர் இனத்தினர் பேசிவரும் முடுகா மொழியின் சொற்களில் பழந்தமிழின் தாக்கங்களை அதிகளவில் காண முடிகின்றது. அவ்வகையில் அம்மொழியின் வினைச்சொற்களை ஆய்ந்து காணும் விதமாக இக்கட்டுரை அமைய உள்ளது.

    வினைச்சொற்கள்

    தமிழ்                                                                                      முடுகா மொழி

    உறங்கு                                                                                     உறாங்கு
    இறங்கி                                                                                     இறாங்கி, றாங்கி
    காய வைத்து                                                                        உணக்கி
    சமைக்க வேண்டும்.                                                       அடோணு(ம்).
    விரட்டியவாறு சென்றான்                                         துரத்தீட்டுப் போனா
    விளையாடுகின்றார்கள்                                            விளாடுறாரு
    தொங்கிய நிலையில் இறந்தான்                        தூங்கிச் செத்தா(ன்)
    அண்டையைக் கவிழ்த்து வை                              அண்டெனெ கவிசி வெயி, கம்த்தி வெயி
    சினம் வரும்                                                                           வெறி வரும்
    தின்கின்றோம் .                                                                  திங்கடோ(ம்).
    அழைத்து வா.                                                                      உலேத்து வா.
    அழைக்கிறார் .                                                                   உலேக்காரு, உளேக்கா, உளேக்கிறா
    அமைதியாக இரு .                                                           சப்பெந்திரி.
    தொங்குகின்றார்.                                                            தொங்குறாரு.
    பூப்படைந்து விட்டாள் .                                                நிறேந்திருக்கா.
    தின்கின்றோம்.                                                                  தீனி திங்கடோ(ம்).
    நீ சாப்பிட்டாயா?                                                              நீ திந்தேகா?
    கீரை கடைந்திருக்கின்றேன்.                                அடா கடாந்திருக்கேரு.
    இடி இடிக்கின்றது ;                                                         இடி முடுங்குகிது.
    தூண்டில் இடலாமா?                                                     தூண்டா விடுகாமா?
    நான் அமர்ந்திருக்கின்றேன்.                                 நக் குக்காந்திருக்கே(ன்).
    கருவுற்றிருக்கின்றாள்.                                              வேராயிருக்கா(ள்)
    குளிக்கப் போகின்றேன்.                                           தண்ணியாடிய போறெ(ன்).
    திருமணம் செய்து கொண்டான்.                        பெண்ணு சேந்தா(ன்).
    குரங்கு மரத்தின் மேல் செல்கின்றது.             குராங்கு மர மேல போது.
    கிழிந்து விட்டது .                                                              கீறித்து.
    விழுந்து விட்டோம் .                                                       விந்தாமு.
    சண்டையிடுகின்றார்.                                                மல்லு பிடிக்காரு.
    பசு கன்றினை ஈன்றுகொண்டிருக்கின்றது. மாடு கன்னு ஈனுது.
    விதைத்தார்கள்.                                                               விதெத்தேரு.
    மழை பெய்கின்றது.                                                      மகெ அடிக்கிது.
    என் இடத்திற்கு வா.                                                        எம்முதுக்கெ வா.
    பனி விழுகின்றது.                                                           பனி வீது.
    யானை பிளிறுகின்றது.                                             ஆனெ அகாருது.
    காற்று நின்று மழை வருகின்றது.                     காத்து நிந்துது; மகெ வருது.

    “உறங்கு” எனும் வினைச்சொல் “உறாங்கு” என்றும் “இறங்கி” என்பது “இறாங்கி”, “றாங்கி” என்றும் “காயவைத்து” என்பது “உணக்கி” என்றும் முடுகர் மொழியில் மொழியப்படுகின்றன. இச்சொற்கள் சங்க காலத்திற்கு உரியவை என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.

    “தீஞ்சோற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க” (மதுரைக் – 627)

    “ஞாழல் இறங்குஇணர்ப் படுசினை” (ஐங்குறு – 142)

    “வெள்ளெள் சுளகிடை உணங்கல்” (புறநா – 321)

    ஆகிய சங்க இலக்கியத் தொடர்களில் முறையே உறங்கு, இறங்கு, உணங்கல் என்ற சொற்கள் இடம் பெறுகின்றன. இப்பழந்தமிழ்ச் சொற்களே சற்று மாறுதல்களோடு முடுகர்களிடையே காணப்படுகின்றன. இங்கு உறங்கு, இறங்கு முதலான சொற்களில் இடம்பெறும் றகரங்கள் நீண்டொலிக்கின்றன. உணவு சமைத்தலாகிய தொழிலைக் குறிப்பதற்கு முடுகர்கள் “அடோணு(ம்)” என்பார்கள். இச்சொல் வழக்காற்றினை இரவாளர், மலசர், இருளர், மன்னான் போன்ற பிற பழங்குடியின மக்களிடையேயும் காணலாம். “கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ்” (புறநா – 399) என்ற புறநானூற்றுத் தொடரில் காணப்படும் “அட்ட” என்னும் சொல் “சமைத்த” என்ற பொருளைத் தருவதை உணரலாம்.

    முடுகர் மொழியிலுள்ள “விளாடுறாரு” (விளையாடுகின்றார்கள்), “தூங்கிச் செத்தா(ன்)” (தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்) ஆகிய பேச்சு வழக்குகளும் பழந்தமிழில் இருந்தனவே என ஊகிக்கலாம். “பைய விளையாடுவாரும்” (பரிபா – 10) என்ற தொடரில் மெதுவாக விளையாடுகின்ற நிலை கூறப்படுகின்றது. “தூங்கு கையான்” (புறநா – 22), “செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை” (புறநா – 240) ஆகிய புறநானூற்றுத் தொடர்கள் யானையின் தொங்கிய நிலையிலுள்ள தும்பிக்கையினையும், இறந்தவர்களைச் சேர்க்கும் கள்ளிச் செடிகள் நிறைந்த இடுகாட்டினையும் குறிக்கின்றன. ஆதலால் முடுகர் மொழியில் காணலாகும் தூங்கி, செத்தான் போன்ற பேச்சு வழக்குகளும் சங்கத் தமிழைச் சார்ந்தனவே என்பது உறுதியாகின்றது.

    விரைவாகச் செலுத்துதலை முடுகர்கள் “துரத்தீட்டு” என்று சுட்டுவதுண்டு. இச்சொல் வழக்காற்றினை “செம்மல் உள்ளம் துரத்தலின்” (அகநா – 81) என்ற அகநானூற்றுத் தொடரில் காண முடிகின்றது. கூடை, மூங்கிலண்டை போன்றவற்றை கவிழ்த்து வைக்குமாறு கூறும்பொழுது “கவுசி வெயி”, “கம்த்தி வையி” என்று கூறுவர். முடுகாமொழியில் ழகரம் தவிர்க்கப்படுவதால் “கவிழ்த்து” என்ற சொல்லானது மேற்சுட்டிய நிலைகளில் வழங்கப்படுகின்றது என்றறியலாம். “கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி” (நற் – 30) என்ற சங்கத் தொடரில் அச்சொல் இடம் பெறுவதுண்டு. கவிழ்த்து – கவித்து – கவுத்து – கம்த்து – கம்த்தி என்று மாற்றமடைந்திருக்கக் கூடும். அதுவே பிறகு கம்த்தி – கம்சி – கவுசி என்ற நிலைகளில் மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.

    “அழைத்து வா” என்பதற்கு முடுகாமொழியில் “உலேத்து வா”, “உளேத்து வா” என்று கூறுவது வழக்கம். இங்கு ழகரத்திற்கு மாற்றாக ல, ள ஆகிய ஒலிகள் இடம்பெறுகின்றன. அத்துடன் மொழி முதல் அகரம், உகரச் சாயலை அடைந்து விட்டது. “அழைத்து” என்ற வழக்காறு சங்க காலச் சூழலிலேயே வழக்கில் இருந்திருக்கின்றது. “கூகை அழைப்ப” (புறநா – 261) என்று புறநானூற்றில் அச்சொல் இடம்பெறுவதுண்டு. அழைத்து – அளைத்து – அலைத்து – உலைத்து – உலெத்து – உலேத்து – உளேத்து என்ற நிலைகளில் அச்சொல் திரிந்திருக்க வாய்ப்புண்டு.

    பெண் குழந்தைகள் பூப்படைந்த நிலையினைச் சுட்டுவதற்கு முடுகா மொழியில் “நிறேந்திருக்கா” என்று கூறுவது வழக்கம். இல்வாழ்க்கைக்கு ஒரு பெண் தயாராகி விட்டாள் என்று உணர்த்துவதற்குப் பயன்படும் சொல்லாக அச்சொல்லைக் கருதுவதற்கு வழியுண்டு. நிறைவடைந்துவிட்டாள், முழுமையடைந்துவிட்டாள், வளர்ச்சியடைந்துவிட்டாள் போன்ற பொருட்புலப்பாடுகளைத் தரும் தமிழ்ச்சொல்லாக அச்சொல்லைக் கருதலாம். ஒரு பெண் கருவுற்றிருத்தலைச் சுட்டுவதற்கு “வேராயிருக்கா(ள்)” என்று அம்மக்கள் கூறுவர்.

    “இடி முழங்குகின்றது” என்பதை முடுகர்கள் “இடி முடுங்குகிது” என்பர். “முழங்குகின்றது” என்பதிலுள்ள ழகரம் டகரமாக மாற்றமடைந்த நிலையில் மொழிமுதலில் இடம்பெறும் உகரத்தின் தாக்கத்தினால் “ட” ஒலி “டு” ஒலியாகியிருக்கின்றது என்பது வெள்ளிடை மலை. முழங்குகின்றது – முளங்குகின்றது – முடங்குகின்றது – முடங்குகிது – முடுங்குகிது என்பதான மாற்றங்களாகக் அச்சொல்லைக் கருத வழியுண்டு.

    “கீரை கடைந்திருக்கின்றேன்” என்பதை முடுகர் இனத்தினர் “அடா கடாந்திருக்கேரு” என்பர். “கடைந்து” என்ற சொல்லே “கடாந்து” என்று முடுகா மொழியில் மருவியிருக்கின்றது. “தீம் தயிர் கடைந்த” (அகநா – 87) என்ற சங்கத் தொடரில் அச்சொல் வருவதுண்டு. பெரும்பாலான தமிழர்களின் நாவில் “கடைந்து” என்ற சொல்லிலுள்ள முதலண்ண ஒலிகளாகிய ந், து என்பன ஞ்,சு என்ற இடையண்ண ஒலிகளாக மாற்றம் பெற்று “கடஞ்சு” என்றாகின்ற பொழுது முடுகர் நாவில் ந், து என்பன மாற்றமடையாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. மொழியிடை ஐகாரம் மட்டும் ஆகாரமாகி “கடாந்து” என்றாகியிருப்பது நோக்கற்பாலது.

    “விழுந்துவிட்டோம்” என்று கூறும்போது முடுகர்கள் “விந்தாமு”, “வீந்தாமு” என்பர். இச்சொல் “வீழ்ந்து” “விழுந்து” என்று சங்க காலத்திலும் இரு நிலைகளில் காணப்பட்டது. “பெரும் பழம் விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு” (நற் – 116) என்ற நற்றிணைத் தொடரில் “வீழ்ந்து” இடம் பெறுவதுண்டு. “விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து” (மலைபடு – 220) என்ற பத்துப்பாட்டுத் தொடரில் “விழுந்து” என்ற சொல் காணப்படுகின்றது. “விழுந்து விட்டோம்” என்ற தொடர் மிகச் சுருங்கிய வடிவ மாற்றத்திற்கு உள்ளான நிலையில் “விந்தாமு” என்று மருவியிருப்பது கவனிக்கத் தக்கது. முடுகா மொழியில் ழகரம் தவிர்க்கப்படுதல் அல்லது வேறு ஒலியாகத் திரிபடைதல் என்ற தன்மையினைக் காண முடிகின்றது. இங்கு ழகரம் தவிர்க்கப்படுகின்றது.

    “சண்டையிடுகின்றார்” என்பதற்கு முடுகர்கள் “மல்லு பிடிக்காரு” என்கின்றனர். “மல் ஆர் அகலம் வடு அஞ்சி”(பரிபா – 12) என்ற தொடரில் இடம்பெறும் “மல்” என்னும் சொல் மற்போரினைச் சுட்டுவதாக அமைகின்றது. ஆனால் முடுகா மொழியில் பொதுவாக சண்டையிடுவதனை “மல்லு” என்ற சொல்லால் குறிப்பது வழக்கமாக இருக்கின்றது. உச்சரிப்பு எளிமைக்காக மொழியிறுதியில் “லு” இடம்பெறுவது கண்கூடு.

    பசு கன்று ஈன்றெடுப்பதைக் குறிப்பதற்கு “மாடு கன்னு ஈனுது” என்று முடுகர்கள் வழங்குவர். “ஈன்றேன் யானே” (நற் – 198) என்ற சங்கத் தொடரில் மகளைப் பெற்றெடுத்த ஒரு தாய் கூறியமையும் கூற்றினைப் பார்க்கின்றோம். ஒரு பெண் கருவுற்றிருப்பதைச் சுட்டுவதற்கு முடுகா மொழியில் “வேராயிருக்கா(ள்)” என்று மொழிவர். ஒரு குழந்தையின் வாழ்க்கை துவங்குவதற்கான வேர் அவள் வயிற்றில் உருவாகியிருக்கின்றது என்று சுட்டுவதற்கு அவ்வாறு மொழிகின்றனர் போலும்.

    நீராடச் செல்வதனை முடுகர்கள் “தண்ணியாடிய போறே(ன்)” என்பார்கள். “தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே” (நற் – 124) என்ற சங்கத் தொடரிலேயே தண்ணீர் என்ற சொல் காணப்படுவதுண்டு. இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் தற்காலத்தில் நீராடுதலைச் சுட்டுவதற்கு “குளித்தல்’ என்ற சொல் பயன்பாட்டில் இருக்கின்ற நிலையில் முடுகர்கள் “தண்ணியாடுதல்” என்று குறிப்பிடுவது கவனத்திற்குரியது. அம்மக்கள் அருகிலுள்ள நீர்நிலைகளில் குளிப்பதை வழக்கமாகக் கொள்வர். அந்நீர்நிலைகள் எப்பொழுதும் தண்ணென்று குளிர்ந்து காணப்படுவதனால் “தண்ணியாடுதல்’ என்று கூறுவது பொருத்தமாகத் தெரிகின்றது.

    திருமணம் செய்து கொண்டான் என்று கூறுவதற்கு பதிலாக முடுகர்கள் “பெண்ணு சேந்திட்டா(ன்)” என்று சுட்டுவது வழக்கமாக இருக்கின்றது. பொதுவாக அட்டப்பாடி மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினரிடையே களவுவழி வந்த திருமண முறை பெரியவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. அந்நிலையில் ஒத்த அன்பு கொண்ட ஆணும் பெண்ணும் பொருட் செலவு செய்து திருமணம் என்ற சடங்கினை நிகழ்த்திய பிறகுதான் இணைந்து வாழ வேண்டும் என்ற கட்டாயம், அவர்களிடையே இல்லை. பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற தயக்கம் இருந்தால் தோழர் மற்றும் தோழியர் உதவியுடன் உடன்போக்கு நிகழ்த்துவர். மூன்று நான்கு நாட்கள் கழிந்த நிலையில் பதிக்குத் திரும்பி வருவர். ஒரு தனிக் குடிசையிட்டுத் தனிக் குடித்தனம் துவங்க ஆரம்பித்துவிடுவர். பலத்த எதிர்ப்புகளொன்றும் தோன்றுவதில்லை. அவர்களுக்கென்று பொருளாதார வசதி எப்பொழுது ஏற்படுகின்றதோ ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழிந்த நிலையில் உறவுகளை அழைத்துத் திருமணச் சடங்கு நிகழ்த்துவதுண்டு.

    மனமொத்த நிலையில் ஆண் பெண் இருவரும் சடங்குகளின்றி இணைந்து வாழ்தல் என்பது தொல்காப்பியத்திற்கு முந்தைய கற்புநெறி என்பது போதரும். சமுதாயத்தில் “பொய்யும் வழுவும் புகுந்த பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல் –பொருளியல் – நூற்பா – 4) என்பார் தொல்காப்பியர். எனவே “பெண்ணு சேந்திட்டான்” என்று முடுகர்கள் கூறுவது பொருத்தமுடையதாகவே தோன்றுகின்றது. மட்டுமின்றி சங்க காலத்திற்கும் முற்பட்ட இத்தகைய சில நல்ல வாழ்வியல் ஒழுகலாறுகள், அம்மக்களிடையே இன்றும் நிலவியிருக்கின்றது என்பது எண்ணி மகிழ்தற்குரியது.

    “கிழிந்துவிட்டது” என்பதற்கு முடுகர்கள் “கீறித்து” என்பார்கள். “ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்” (அகநா – 194) என்ற சங்கத் தொடரிலேயே “கிழித்து” என்ற சொல் இடம் பெற்றிருக்க அச்சொல் முடுகா மொழியில் முதலுயிர் நீளல் மற்றும் ழகரம் றகரமாதல் முதலான மாற்றங்களுக்கு உள்ளாகி “கீறித்து” என்றவாறு மாறியிருக்கின்றது என்று அறியலாம்.

    முடுகா மொழியின் சொற்கள் மற்றும் தொடர்களை உற்று நோக்கும்போழுது அவை பழந்தமிழர்களின் பேச்சு வழக்குகளை உணர்ந்தறிய உதவி புரிவனவாக அமைகின்றன. முடுகா மொழியின் சில வினைச் சொற்கள் மட்டுமே இங்கு ஆய்வுக்குள்ளான நிலையில் அம்மொழியின் அனைத்துச் சொற்களையும் ஆய்ந்து காண்போமானால் பழந்தமிழின் வட்டார வழக்குகள் பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவடையும் என்பது உறுதி.

    துணை நின்ற நூல்கள்

    1. அகத்தியலிங்கம். ச , திராவிட மொழிகள் , மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை -08.
    2. கருணாகரன். கி , சமுதாய மொழியியல் , மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு , சிதம்பரம் – 1.
    3. சண்முகம் பிள்ளை.மு. (ப. ஆ), தொல்காப்பியம் –பொருள்- இளம்பூரணம், முல்லை நிலையம், மண்ணடி, சென்னை – 1.
    4. பாலசுப்பிரமணியன்.கு (த.ப.ஆ), எட்டுத்தொகை & பத்துப்பாட்டு நூல்கள், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , சென்னை.

    படத்திற்கு நன்றி: https://www.ethnologue.com/18/map/IN_08/index.html

    ==============================================================

    ஆய்வறிஞர் கருத்துரை [Peer Review] :
    ஆய்வாளரின் தகவல் திரட்டும் முயற்சிக்கும் கட்டுரை அமைப்பிற்கும் பாராட்டுகள். முடுக மொழியில் வழங்கி வருகின்ற சொற்களை சங்க காலத்தில் வழங்கப்பட்ட சொற்களோடு ஒப்புமைப்படுத்தி தக்க சான்றுகளுடன் விளக்கியிருப்பது சிறப்பு. ‘பெண்ணு சேந்திட்டான்’ என்ற வார்த்தையை விளக்குமிடத்து இத்தகைய நல்ல வாழ்வியல் முடுகர்களிடையே இன்றும் நிலவுகிறது என்று கூறாமல் இருந்திருக்கலாம். திருமணச் சடங்கில்லாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது நல்ல முறை என்பது ஏற்புடையதாக இல்லை. முடுகா மொழி பேசுவோரின் எண்ணிக்கை? முடுகா எந்த மொழி எழுத்துகளில் எழுதப் பெறுகின்றது? இதைத் தமிழ் எழுத்துகளில் எழுதும் முயற்சி நடைபெற்றுள்ளதா? போன்ற பின்புல விவரங்களையும் ஆய்வாளர் வழங்கியிருக்கலாம்.
    ==============================================================
    Share
  • படக்கவிதைப் போட்டி – 207

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சந்தோஷ்குமார் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 28

    நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம் 

    குறள் 271:

    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்

    ஒழுக்கமானவன் போல ஊர ஏமாத்துத வஞ்சமனசுக்காரங்கள பாத்து அவங்க ஒடம்புல கலந்து இருக்க நிலம், நீர், காத்து, தீ,ஆகாயம் ங்குத அஞ்சு பூதங்களும் தங்களுக்குள்ள சிரிச்சிக்கிடும்.

    குறள் 272:

    வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
    தானறி குற்றப் படின்

    தன் மனசறிஞ்சு குற்றம் செய்யுதவனுக்கு அவனோட தவக்கோலம் என்ன பிரயோசனத்த கொடுக்க முடியும்?..

    குறள் 273:

    வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

    மனச அடக்க முடியாதவன் போடுத துறவி வேசம், பசு புலியோட தோலப் போத்திக்கிட்டு பயிர மேயுததுக்கு சமானம்.

    குறள் 274:

    தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

    தவக்கோலத்துல இருக்கவங்க கெட்ட செயல செய்யுதது புதருக்கு பின்னால மறஞ்சு நின்னு பறவைய வலைவீசி பிடிக்குத வேட்டக்காரனுக்கு சமானம்.

    குறள் 275:

    பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
    றேதம் பலவுந் தரும்

    எல்லாத்தையும் துறந்துட்டதா பொய் சொல்லி ஏமாத்துதவங்களுக்கு ஏன் அப்டி செஞ்சோம் ஏன் அப்டி செஞ்சோம் னு வருத்தப்படுத  மட்டுக்கு நெறய துன்பம் வந்து சேந்துக்கிடும்.

    குறள் 276:

    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணா ரில்

    மனசுக்குள்ள இருக்க ஆசய வெறுக்காம, வெறுத்தது போல நடிக்குத வஞ்சக மனுசங்கள மாதிரி இரக்கமில்லாதவங்க யாருமில்ல.

    குறள் 277:

    புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    மூக்கிற் கரியா ருடைத்து

    வெளில பாக்குததுக்கு குந்து மணி போல செவப்பா இருந்தாலும் அதோட மொனைல இருக்க கறுப்புபோல மனசுக்காரங்களும் ஒலகத்துல உண்டு

    குறள் 278:

    மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்

    தண்ணிக்குள்ள முங்கினவங்க தன்னய மறச்சிக்கிடது போல மனசுக்குள்ள அழுக்க மறச்சிகிட்டு தவத்தால ஒசந்தது போல நடிக்கவங்க பலபேரு இந்த ஒலகத்துல இருக்காங்க.

    குறள் 279:

    கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
    வினைபடு பாலாற் கொளல்

    நேரா இருக்க அம்பு கொல செய்ய ஒதவும்.  வளஞ்ச யாழ்கொம்பு நல்ல இசைய கொடுக்கும். அதுபோல மக்களையும் அவங்க உருவத்த பாக்காம செய்யுத செயல வச்சி எட போடணும்.

    குறள் 280:

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்த தொழித்து விடின்

    ஒலகம் பொல்லாப்புன்னு சொல்லுத கெட்ட செயல துறவி மனசார உட்டுட்டாம்னா மொட்டையடிக்குதது, சடா முடிவளக்குதது எல்லாம் செய்ய தேவையில்ல.

    Share
  • சேக்கிழார் பா நயம் (32)

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருத்தொண்டர் புராணத்துக்குத், திருத்தொண்டத்  தொகை   முதல் நூல்; திருத்தொண்டர் திருவந்தாதி   வழிநூல்!  இவ்வாறு சேக்கிழார்    இறைத் தொண்டர்  பலரின் வரலாற்றைக் கூறினாலும் , சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்  வரலாற்றின்  வழியிலேயே  ஏனையோர் அருள்   வரலாறுகளையும் கூறுகிறார். அவ்வகையில் இந்நூலின் கதைத்தலைவர்  சுந்தரமூர்த்தியே ஆவார்! கைலையில்  தொடங்கித்  தென்னாட்டில்  தொடர்ந்து மீண்டும் கைலையிலேயே நிறைவுறும்  சுந்தரரின்  அருள்வரலாற்றின் இடையே  அறுபத்துமூவர் அருள்வரலாறும்   அமைந்துள்ளன!

    அவ்வரலாறுகளில்  தம்  திருமுறைகளாகிய தோத்திரங்களால்  சமயத்தொண்டு   புரிந்த, தேவார மூவரின்  வாழ்க்கையுடன்  அவர்கள் அருளிய வாக்கினையும் அப்படியே எடுத்துக்கொண்டு  நூலியற்றும் சேக்கிழார் பெருமானின்  சிறப்பு  போற்றுதற்கு உரியது!   சுந்தரமூர்த்தி  சுவாமிகளின் முதல் திருப்பாடலை இந்நூலில்,  அப்பாடலின் யாப்புமுறையை  அப்படியே மேற்கொண்டு தம் புராணத்தில் அமைத்து விடுகிறார்! சுந்தரரை  அற்புதப் பழ ஆவணம் காட்டித்  தடுத்தாட்  கொண்டார்  பெருமான்! அவருடன் திருவெண்ணெய்  நல்லூர் திருக்கோயிலாகிய  திருவருட்டுறைக்குள்  சென்ற சுந்தரரை நோக்கி இறைவனே , ‘’ நம்மைப் பாடுவாய்!’’ என்று அருளினார்!

    தம்மை அடிமுடி தேடி அலைந்த  திருமாலும் பிரமனும்  காணா  மலையாக உயர்ந்த இறைவனின்  திருப்பாதங்களில் தம் உள்ளத்தை ஊன்றிச் சிந்தித்து வணங்கினார் சுந்தரர்!   அவரை நமச்சிவாய   என்றும்,  சிவாயநம  என்றும் ஐந்தெழுத்து மந்திரத்தால் அனைவரும் வழிபட்டாலும் அந்த ஐந்தெழுத்தின் பொருளையும் பெருமையையுயும்  அளவிட்டுக் கூறுதல் எத்தகையோருக்கும்   அரிது!  அத்தகைய  பெருமானின்  திருப்பாதங்களைச்    சிந்தித்துத்  தம் கரங்களைக்  கூப்பி  நின்றார் சுந்தரர்!  

    நம் நீண்ட வாழ்க்கையின் பயனாக  நாம் அடையும்  ஊதியம் யாது என்பதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும். தம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு  ஈதலால்  இவ்வுலகில் புகழ் உண்டாகும். இவ்வாறு ஈந்து புகழ் பெற்றால் பிறவிப் பயனாகிய திருவடிப்பேறு  கிட்டும். இதனைத்  திருக்குறள்,

    ‘’ஈதல்  இசைபட வாழ்தல்  அதுவல்ல

    ஊதியம்  இல்லை  உயிர்க்கு!’’

    என்று கூறுகிறது! இத்தகைய  வாழ்க்கையின் ஊதியத்தை அறியாமல்  மையல் மானுடமாய்  மயங்கினார்  சுந்தரர்! அதனால், இறைவனிடம்  ‘’எளியேன்   முன்னே , ஒரு முதிய   வேதியனாக   எழுந்தருளி, வாழ்க்கைப்   பணியையும், அதன்  ஊதியத்தையும்  எளியேனுக்கு  உணர்த்தினாய்! குற்றமேதும்  அற்ற நற்பண்பே உருவமான தேவா! எளியேனைப் பாடு  என்றாயே,  நின் குணங்களாகிய பெருங்கடலை எவ்வாறு அறிந்துகொள்வது? அதன்  தனிச்   சிறப்புகளை  எவ்வாறு  ஆராய்ந்தறிந்து  கொள்வது?அவற்றை  எவ்வாறு, எதனைச்  சிறப்பித்துப் பாடுவது? ‘’

    அதனைக் கேட்டருளிய  பெருமான், ‘’ முன்பு   அந்தணர்கள்  சூழ்ந்த அவையில் என்னைப் ‘’பித்தனோ? ‘’ என்றாயே!  இப்போது  பித்தன் என்றே என்னை  அழைத்துப்  பாடு!’’ என்றார். உடனே  அந்தத்  திருவார்த்தையையே  மந்திரமாகக்  கொண்டு சுந்தரர்  பாடத்  தொடங்கினார்.

    கொத்துக்களால் ஆன  மலர்களை அணிந்து  கொண்டு , இறைவனின் இடப் பாகத்தில்  இணைந்து காட்சி தரும் அன்னை பார்வதியுடன் , நமக்குப்  பெற்ற தாயினும் இனியவர்  சிவபிரான்! என்பதை ,

    ‘’கொத்தார்  மலர்க்  குழலாள்  ஒரு கூறாய் அடியவர்பால்

    மெய்த்தாயினும் இனியானை ‘’

    என்று சேக்கிழார் பாடுகிறார்! இங்கே சுந்தரருக்குப்  பழைய நினைவு வருகிறது.

    முன்பு கைலையில்  மலர்த்தொண்டு  புரிந்தமையும், அப்போது அன்னைக்கு அணுக்கராய்  விளங்கிய  பெண்டிர்  செய்த  தொண்டால், அன்னையின்  கூந்தலில்  மலர்க்கொத்துக்கள் அமைந்தமையும்  சுந்தரர் நினைவுக்கு  வருகின்றன. ஆதலால் அந்தத்  தாயினும் இனியானாகத்  தம்மைத்  தடுத்தாட்  கொண்ட பெருமானை , உலகெல்லாம்  போற்றத்தக்க  நாவலூரராகிய  சுந்தரர்,     ‘’பித்தா’’ என்றழைத்தார்! இச்சொல்  உலகியலில்  பெற்ற  மனம்  பித்து ,‘’பிள்ளை  மனம்  கல்லு ‘’  என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. அது கருதியே சேக்கிழார் ‘’ மெய்த் தாயினும் இனியானை ‘’ என்று இறைவனின் தாயுள்ளத்தை எண்ணிப் பாடுகிறார்! ‘பித்தா’ என்று தொடக்கிச்  சுந்தரர்  பாடிய திருப் பதிகம்,  மிகவும் பெரும் புகழ் பெற்றது!  

    பண்ணிலக்கணம்  பதினொன்றில், மருதத்தின் வகையாகிய  இந்தளத்தில்  முறையான  தாளத்துடன்  ஒத்திசைய, இசையை  உலகிற்களித்த  இறைவன் மகிழும்படி , தமக்கு ஒப்பாரில்லாத  சுந்தரர் , ‘’பித்தா பிறைசூடி’’ எனத் தொடங்கிப்   பாடலுற்றார். இறைவர் பித்தனல்லர், அவர் பிறையின் குறையை நீக்கிச்  சூடியவர்! ஆகவே  சுந்தரரின்  குறையை நீக்கி  நிறைசெய்யும் தாய் போன்றவர் இறைவன் என்கிறார். இதனைச் சேக்கிழார் ,

    ‘’’கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்

      மெய்த் தாயினும் இனியானை ‘’

    என்று பாடுகிறார். மேலும் பத்துப் பாடல்களைக் குறிக்கும்  இப்பதிகம்   பெரியபுராணத்தில் முதன்முதலாக  இடம் பெற்றது! இப்பதிகமுறையைத் தமிழில் முதன்முதலில்   அறிமுகப்  படுத்தியவர் , மூத்த திருப்பதிகம்  பாடிய  காரைக்கால்  அம்மையார் ஆவார்! அவர் பாடிய பண் இந்தளமாகும்; சுந்தரர் பாடிய பண்ணும் இந்தளமாகும்! ஆகவே இப்பதிகம்  சைவ உலகில் பெருமதிப்புப்  பெற்றதாயிற்று!   ஆகவே  இவ்வுலக மெல்லாம் சிவநெறியை உணர்ந்து  உய்வடைந்தது! இதனைச் சேக்கிழார்,

    “பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்

    இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.’’

    என்று பாடினார்! இனி முழுப்பாடபாலையும்  பயில்வோம்!

    ‘’கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்

    மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்

    “பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்

    இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.’’

    இப்பாடலில்  இறைவனின் தாயினும் இனிய தன்மை, சுந்தரர் இயல் நாவலர் பெருமான் என்று போற்றப்பெற்ற  நிலை, உலகத்தார்  எல்லாருக்கும் இறை வழிபாட்டுக்கு உரிய சாதனத்தை அறிமுகப்படுத்திய அழகு ஆகியவை  நமக்குப்  புலப்படுகின்றன! இன்னும் இப்பாடலின் சிறப்பைச் சான்றோர்கள்  மேலும் விரிவாக உரைப்பர்.

    Share
  • உள்ளீடுகள்

    -சேஷத்ரி பாஸ்கர்

    கண்களற்ற காற்று காதோரம்
    தோற்று போய் திரும்பும்அலைகள்
    தகரடப்பாவில் தலையை விட்ட பாட்டி
    இன்னொரு முறை அலையை தொலைத்தாள் .
    அரைத்து போட்ட மின்னும் மணல்தூள் 
    எங்கோ வறுபடும் நிலக்கடலை .
    பிரமிப்பான தருணத்தை நழுவும் மனிதன்
    கடலுக்காகவே பிறந்தது போல் நிலா
    எப்போதும் அவசரமான நண்டுகள் .
    காலம் கடப்பதேன் கவலையில் மனம்.

    புதைமணல் வாழ்விலும் இதமான உள்ளிறக்கம்

    Share
  • ஏக்கமுற்று நாமிருப்போம்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    இளமையெனும் பூங்காற்று 

    இதயமதில் எழும்போது 

    உலகமெலாம் காலடியில்

    விழுகுதென நினைத்திடுவோம் 

    தலைநிமிர்ந்து ஆணவமாய்

    தான்சாமி ஆடிடுவோம் 

    நிலைதளர்ந்து போகுமென

    நினைவினுக்கு வருவதில்லை 

    ஆடாத ஆட்டமெலாம்

    ஆடிநாம் பார்த்திடுவோம் 

    கூடாத கூட்டமெலாம்

    கூடியே குலவிடுவோம் 

    தேடாத பெயரயெல்லாம்

    தேடியே பெற்றிடுவோம்

    தெருமுழுக்க எம்பெயரை

    செதுக்கும்படி ஆக்கிடுவோம் 

    இளமையெனும் முறுக்காலே

    முழுவாழ்வை தொலைத்திடுவோம்

    நிலைமையது தெரிகையிலே

    நெடுந்தூரம் வந்திருப்போம்

    எவ்வளவு முயன்றாலும்

    எம்மிளமை போனதுதான்

    ஏக்கமுற்று நாமிருப்போம்

    இதுபோன்ற  நிலைமையிலே 

    Share