ஏக்கமுற்று நாமிருப்போம்

-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

இளமையெனும் பூங்காற்று 

இதயமதில் எழும்போது 

உலகமெலாம் காலடியில்

விழுகுதென நினைத்திடுவோம் 

தலைநிமிர்ந்து ஆணவமாய்

தான்சாமி ஆடிடுவோம் 

நிலைதளர்ந்து போகுமென

நினைவினுக்கு வருவதில்லை 

ஆடாத ஆட்டமெலாம்

ஆடிநாம் பார்த்திடுவோம் 

கூடாத கூட்டமெலாம்

கூடியே குலவிடுவோம் 

தேடாத பெயரயெல்லாம்

தேடியே பெற்றிடுவோம்

தெருமுழுக்க எம்பெயரை

செதுக்கும்படி ஆக்கிடுவோம் 

இளமையெனும் முறுக்காலே

முழுவாழ்வை தொலைத்திடுவோம்

நிலைமையது தெரிகையிலே

நெடுந்தூரம் வந்திருப்போம்

எவ்வளவு முயன்றாலும்

எம்மிளமை போனதுதான்

ஏக்கமுற்று நாமிருப்போம்

இதுபோன்ற  நிலைமையிலே 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *