Blog

  • கோலன் ஹைட்ஸ்: இஸ்ரேலின் நயவஞ்சகம்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவானதே பல பாவக் காரியங்களின் விளைவால்தான். யூதர்கள் கிறிஸ்துவுக்கு முன்னால் (கி.மு.) பல நூற்றாண்டுகள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்துவந்த போதிலும் பல நாடுகளைச் சேர்ந்த அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்துவந்தனர். ஜெருசலேமிலிருந்த அவர்களுடைய முதல் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டது. அதன் பிறகு அதே இடத்திலேயே இரண்டாவது கோவிலையும் கட்டிக்கொண்டனர்.மேலும் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்தபோது அந்தக் கோவிலும் இடிக்கப்பட்டது. ரோமானியர்களை எதிர்த்துப் போர்புரிந்த யூதர்கள் அவர்களால் நசுக்கப்பட்டதால் ஜெருசலேமை- அதாவது பாலஸ்தீனத்தை- விட்டே புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர். கி.பி. 132-இல் பாலஸ்தீனத்தை விட்டு ஐரோப்பாவில் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த யூதர்கள் எல்லா நாடுகளிலும் அங்குள்ள மக்களோடு கலவாமல் தனித்தே வாழ்ந்துவந்தனர். தாங்கள் பெரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்ததே அவர்கள் மற்ற இனத்தவர்களோடு ஒட்டாமல் இருந்ததற்கும் மற்ற இனத்தவர்கள் இவர்களை ஒதுக்கிவைத்ததற்கும் முக்கிய காரணம். எல்லா நாடுகளிலும் இவர்கள் மருத்துவம் போன்ற பல தொழில்கள் செய்துவந்தாலும் நிறைய வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலையும் செய்துவந்தனர். இந்தத் தொழிலும் இவர்கள்மேல் மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படவும் அவர்களைப் பிரித்துவைக்கவும் காரணமாயிற்று.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹெர்ஸல் என்னும் வியன்னாவைச் சேர்ந்த யூதர் ஒருவர் பிரான்சில் பத்திரிக்கை நிருபராக வேலைசெய்தபோது அங்கு ஒரு யூதருக்கு நேர்ந்த அநியாயத்தைக் கண்டு மிகவும் மனம் வருந்தி யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று விரும்பி அதற்கான திட்டங்களில் ஈடுபட்டார். உலகெங்கிலுமுள்ள யூதர்களை ஒன்றுதிரட்டி அதற்கான வழிகளைக் கண்டறிய முற்பட்டார். அப்போது முதல் உலக யுத்தம் முடிந்து ஆட்டோமான் பேரரசு கவிழ்ந்து பல துண்டுகளாகப் பிரிந்திருந்தது. யுத்தத்தில் வென்ற நாடுகள் துண்டாகிப் போன அந்த நாடுகளைத் தங்கள் வசம் ஆக்கிக்கொண்டன. ஆட்டோமான் அரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்தது. சுமார் 1800 வருஷங்களுக்கு முன் பாலஸ்தீனத்திலிருந்து ரோமானியர்களால் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனத்தைத் தங்கள் புண்ணிய பூமி என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு அங்கு குடியேற ஆரம்பித்தனர்.

    முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவிய,அப்போது பிரிட்டனில் வாழ்ந்துவந்த வெயிஸ்மேன் என்னும் யூதர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியில் யூதர்களுக்கு ஒரு நாடு அமைக்க உதவுவதாக வாக்களித்தது. இதற்கு முன்பே பாலஸ்தீனத்திற்குள் ஐரோப்பாவின் பல இடங்களிலுமிருந்து பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வர ஆரம்பித்திருந்தனர். இவர்கள் தங்களோடு கொண்டுவந்திருந்த பணத்தினாலும் புதிய தொழில் நுணுக்கங்களாலும் பாலஸ்தீனர்களிடமிருந்து நிலங்களை வாங்கிப் போட்டு பாலஸ்தீனத்தை வளப்படுத்தியதோடு தங்களையும் அங்கு நிலைப்படுத்திக்கொண்டனர். யூதர்களின் வரவால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் வந்ததைக் கண்ட பாலஸ்தீனர்கள் அவர்களோடு மோதத் துவங்கினர். தான்ங்கள் அமைத்துக்கொண்ட ஒரு குடிப்படையால் யூதர்கள் பாலஸ்தீனர்களை எளிதாக வென்றனர். பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் கொடுக்க முடிவுசெய்துபீல் என்னும் ஒரு அதிகாரியை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியது. பாலஸ்தீனத்தைப் பிரிப்பது அவ்வளவு எளிதல்ல என்று பீல் அறிக்கை கொடுத்தார். பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்தன.

    இனி தன்னால் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க முடியாது என்று எண்ணிய பிரிட்டன் பாலஸ்தீனத்தைக் கண்காணிக்கும்பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை விட்டுச் சென்றுவிட்டது. ஐ.நா. பாலஸ்தீனத்தின் 55 சதவிகிதத்தை யூதர்களுக்கும் 45 சதவிகிதத்தை பாலஸ்தீனர்களுக்கும் பிரித்துக் கொடுக்க முடிவுசெய்தது. தாங்கள் நினைத்ததற்கு மேலேயே தங்களுக்குக் கிடைத்திருப்பதால் யூதர்கள் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுச்சென்ற அன்றே இஸ்ரேல் என்ற தங்கள் நாட்டைப் பிரகடனப்படுத்திக்கொண்டனர். தங்கள் நாட்டை யூதர்களோடு பங்கு போட்டுக்கொள்வதா என்ற குமுறலோடு பாலஸ்தீனர்கள் ஐ.நா.வின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் முழுப் பாலஸ்தீனத்தையும் பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள். அன்று அவர்கள் செய்த தவறு இன்றுவரை பாலஸ்தீனர்களுக்கென்று ஒரு நாடு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

    இஸ்ரேல் நாடு உருவானதை எதிர்த்து சிரியா, எகிப்து,லெபனான் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது போர்தொடுத்தன. பாலஸ்தீனர்களுக்கு முழுப் பாலஸ்தீனத்தையும் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் என்பதைவிட ‘எரிகிற நெருப்பில் கிடைத்தது லாபம்’ என்ற எண்ணத்திலும் அவர்கள் இஸ்ரேலோடு போர்புரியத் தயாராகினர். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியிருந்த யூதர்களின் பணபலத்தாலும் அமெரிக்காவின் உதவியாலும் பாலஸ்தீனத்தில் குடியேறியிருந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு குடிப்படையை அமைத்துக்கொண்டிருந்தனர். அதுவே இஸ்ரேலின் ராணுவமும் ஆனது. பலம் பொருந்திய ராணுவத்தின் மூலம் அரபு நாடுகளை எளிதாகப் போரில் வென்றதோடு ஐ.நா. பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்கென்று கொடுத்த சில நிலங்களையும் பிடித்துக்கொண்டனர்.

    அதன் பிறகு இஸ்ரேலோடு அரபு நாடுகள் ஆறு முறை போர் புரிந்தன. எல்லாப் போர்களிலும் இஸ்ரேல் வென்று பாலஸ்தீனத்திலும் சிரியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் அந்த நாடுகளுக்குச் சொந்தமான இடங்கள் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது. அப்படி 1967-ஆம் வருடப் போரில் சிரியாவிடமிருந்து பிடித்துக்கொண்டதுதான் கோலன் ஹைட்ஸ் என்னும் இடம். இந்த இடத்தை 1981-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து பிடித்துக்கொண்ட கிழக்கு ஜெருசலேமிலும் வெஸ்ட் பேங்கிலும் தன்னுடைய குடியிருப்புகளைக் கட்டிப் புதிதாக இஸ்ரேலுக்கு வந்த யூதர்களைக் குடியமர்த்தியது. இதற்கிடையே 1995-இல் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனால் வெஸ்ட் பேங்கிலும் காஸாவிலும் பாலாஸ்தீனர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குவதென்று முடிவாகியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவாவது கிடைத்ததே என்று பாலஸ்தீனர்களும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பிறகு இஸ்ரேல் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்தைப் பின்பற்றாததோடு வெஸ்ட் பேங்கில் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டே போனார். ஒபாமா அமெரிக்க ஜனத்திபதியாக இருந்தபோதாவது நேத்தன்யாஹு பாலஸ்தீனர்களுக்குச் செய்துவந்த அநியாயங்களைக் கொஞ்சமாவது பயந்துகொண்டு செய்துவந்தார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆன பிறகு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், அமெரிக்கா தன் பக்கம் இருக்கிறது என்ற பலத்தில் தடித்தனமாகக் காரியங்கள் செய்துவருகிறார். அடுத்த மாதம் நடக்கப் போகும் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க எண்ணி சிரியாவில் தான் ஆக்கிரமித்துக்கொண்ட கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலோடு இணைத்துக்கொள்ள முயன்று அதற்கு ட்ரம்ப்பின் ஆதரவையும் கேட்டார். ட்ரம்ப்பும் இஸ்ரேல் சிரியாவின் கோலன் ஹைட்ஸைத் தன்னோடு இணைத்துக்கொண்டதை அமெரிக்கா அங்கீகரிப்பதாகக் கூறும்ஜனாதிபதி ஆணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார். உடனேயே அதற்கு நன்றி தெரிவித்து நேத்தன்யாஹு ட்விட்டும் அனுப்பிவிட்டார். தான் செய்திருக்கும் இந்த அநியாயத்திற்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதால் வரப் போகும் தேர்தலில் தான் ஜெயித்துவிடுவோம் என்று நேத்தன்யாஹு நம்புகிறார்.

    இந்த இரண்டு கயவர்களும் (crooks)சேர்ந்து செய்திருக்கும் இந்தக் காரியத்தால் சிரியா தன்னுடைய நிலத்தில் ஒரு பகுதியை இழந்திருக்கிறது. அதற்குமேல் இனி என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றனவோ. இதையடுத்து வெஸ்ட் பேங்கிலும் நிறைய இடங்களை (ஏற்கனவே அங்கு யூதக்குடியிருப்புகள் நிறைய இருக்கின்றன) சேர்த்துக்கொள்ளப் போவதாக நேத்தன்யாஹு கோடி காட்டியிருக்கிறார். அங்கு வாழும் பாலஸ்தீனர்கள் மூன்றாம்தரக் குடிமக்களாக இஸ்ரேலால் நடத்தப்படுவார்கள்.

    உலகில் ஒரு இனம் இன்னொரு இனத்திற்குச் செய்த பெரிய அநீதிகளில் இதுவும் ஒன்று.

    Share
  • வெறுப்பின் வெப்பப்பூவின் உயிர் கேட்கும் தருணம்

    -கவிஞர் பூராம்

    கந்தகத்தின்  நெடி
    மூளையில் ஆணியாக
    அறையப்பட்டுவிட்டது!

    எத்திசையில் இருந்து
    தோட்டாக்கள் இதயம்
    பிளக்குமென்ற பயத்தின் உச்சத்தில்
    புத்தகத்தின் பக்கங்கள்
    வெறுமையில் திருப்பப்படுகின்றன!

    யாருமற்ற பேருந்து நி்ன்று
    சென்றாலும்
    நிற்பதற்கே இடமில்லா பேருந்து
    கடந்து சென்றாலும்
    நடுங்கி தளர்கிறது பெண்ணுடல்!

    பேரன்பின் வசந்த காலம்
    என்று வருமோவென
    இருந்து கிடக்கிறது
    ஆன்மாவின் ஒரு துளி.

    Share
  • கிழக்கு கோதாவரி பீமேசுவரர் கோயில் தமிழ்க் கல்வெட்டுகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    ஆந்திர மாநிலம் கோதாவரியின் கிழக்குக் கரையில் அமைந்த திரக்ஷாரமம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காகிநாடாவிற்கு 28 கி.மீ. தொலைவில்அமைந்துள்ளது. இங்குள்ள பீமேசுவரர் கோயிலில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தே சிங்கள மன்னர் நல்கிய கொடை பற்றிய இரு தமிழ்க் கல்வெட்டுகள் இங்கு விளக்கப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் தென்சுவரில்  4 & 5 தூண்களுக்கு இடையே கீழிருந்து இடமாக 2 ஆம் கற்பலகையில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவை(S.I.I. IV ல் எண் 1246) உள்ளன. இக்கோவிலில் 400 மேற்பட்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இக்கால் இக்கோவில் நடுவண் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன்காரணமாக உள்ளே புல்தரையும் தோட்டமும் அமைந்து நல்ல முறையில் பேணப்பட்டு வருகின்றது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 43 _ _ _ _
    2. க தேவர்  பொன் கொண்டருளி சிங்களப்பிடாரர்க்கு வலிச _ _ _ _
    3. பரிசாவது இது இறையிலி தவிர்வதாகவும்  அந்தராயம் உட்பட்ட இறை த(விர்)
    4. வ(தா)கவும் மஹேஸ்வர மடத்திலே முப்பது கலம் உண்பதாகவும் தம்முடை
    5. ய திருக்கையாலே எழுத்திட்டுத் தந்தது. இதுக்குப் (பதினைம்ப
    6. தப்) பதினைம் பலத்தால் பதினைஞ்சு கலமும் பத்துப் பசுவும்
    7. இரண்டு அடிமையும் சத்தராயவர்கம் நிற்கக்  கடவதாக. இத்தன்ம
    8. ம் அழிவு பண்ணுவான் தங்கள் அம்மைய்க்கு த் தானே மின்னாளன். இத்த
    9. மம் நட(ப்பி)த்தான் ஸ்ரீபாதம் இரண்டும் சிங்களப்பிடாரனேன் த
    10. லை மேலன லிகிதம். தாகரேமிசுராசாரி அயன வீரராஜேந்த்ர சோழ ஆ
    11. சார்ய:

    சொற்பொருள்: 

    இறையிலி தவிர்வதாக – வரிச்சலுகை நீங்கியதாக; இறை தவிர்வதாக – வரி நீங்குவதாக; நிற்க –இருக்க;  மின்னாளன்- பாலுறவில் துணைவன்; அயன – ஆயினவர், ஆனவர், ஆகியவர்; தெலுங்கில் அய்ன.

    கல்வெட்டு விளக்கம்:

    முதற் குலோத்துங்க சோழனின் 43 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1113) போது நிலதானம் செய்து (கல்வெட்டு சிதைந்துள்ளதால் தெளிவாக பொருள் கொள்ள இயலவில்லை) சிங்களப்பிடாரர் இறையிலி நீங்குவதாகவும் அந்தராயமான உள்நாட்டு வரி தவிர்வதாகவும் சொல்லியதோடு மகேசுவர மடத்தில் உண்பதற்கு முப்பது கலம் அளவிற்கு நெல்லை அளிக்கத் தம் கையாலே கையொப்பமிட்டுத் தந்தார். பதினைம்பலத்தால் அளந்து பதினைந்து கலம் நெல்லும் 10 பசுவும்  2 அடிமையும் சந்திராதித்தவர் உள்ள வரை செல்வதாக விட்டார். இந்தக் கொடையை அழிப்பவன் தன் அன்னைக்குத் தானே கலவித்துணைவன் ஆகுவன். இந்தக் கொடையைத் தடையின்றி நடப்பிப்பான் கால் இரண்டும் சிங்களப்பிடாரன் தலைமேல் எனக் கூறி மடல் எழுதினான்.  இதை கல்வெட்டாய் பொறித்தவன் அயன வீர்ராஜேந்திர சோழ ஆசாரி எனபவன்.

    பொதுவாக இறையிலி தருவார்கள் ஆனால் இங்கு அது நீங்கப்பட்டு இறை தண்டப்படவேண்டும் என்பது போல் இருப்பது குழப்பம் அளிக்கின்றது. தவறான சொல்லாட்சியாகத் தெரிகின்றது. எழுத்து சிதையாமல் இருந்திருந்தால் தெளிவான விடை கிட்டிருக்கும். இதில் 2 அடிமையும், 10 பசுவும் தரப்பட்டது விளக்கு எரிப்பதற்காகவா? கல்வெட்டில் செய்தி முழுமையாக, சரியாக, தெளிவாக இல்லாமல் உள்ளது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. (ஸ்வஸ்திஸ்ரீ) கொலோத்துங்க சோழ (தேவர்)கு யாண்டு 4(9 ஆவ)
    2. து நாள் 70 கங்கைகொண்ட சோழ வளநாட்டு குட்டவாடி நாட்டுப் பெரிய
    3. தாக்கரம்பை பீமீஸ்வரம் உடைய ம(ஹாதேவர்க்கு சூர்)(ய்)ய கிராண நிமி(ர்)த்தத்து வீ
    4. ழத்து விக்கிரம (பாஹு)க்கள் பிரதானி உய்யவந்தான் திருவண்ணாமலையன் வி
    5. ஜயபாஹு மாசாத்து
    6. நாயன் _ _ _ _ கோதாவிரிக் கீழ்கரைக் கொண்டிகரு
    7. டு தாக்கரம்பை ந(ரே)ந்த்ர ஈசுரம் உடைய மஹாதேவர் கோயில் சமீபம் தீர்
    8. த்தக் கரையில் மேற்படியான் பிரதிஷ்டித்த பன் மாஹேஸ்வரன் மடத்தில் உ
    9. ண்ணக் கடவ  தபஸ்யர் பதினை(ய்)வரும் இவர்களுக்கு அமுது செய்யக் க
    10. லம் பதினைஞ்சும் சட்டுவம் ஒன்றும் ஆக உருப்பதினாரினால் நிறை நூ
    11. ற்று முப்பத்தேழு பல வரையும் பெண்ணாடினம் ஒன்றும் குட்டாவாடி நா
    12. ட்டு ஊருள்இடப்பள்ளி அளம் வளையிற் சுற்று முப்பது வட்டி நிலமும் நகர
    13. மும் _ _ _ _ தோட்டமும்  _ _ _ _ _ த செல்கையுட்பட அந்தராயமும்
    14. _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

    பகுதி 2

    1. ப் பத்தரத்தத்தம் சந்தித்தவர் செய்யவும் உண்ணவு
    2. ம் மடம் அழிவு செய்யும் திருக்காளத்தி உடையான் ஆன பலவிளக்குப்
    3. பரிசாரர் வசம் இட்டோம்// ஸ _ _ _ அ ஸம் நை பஹுபிர் வஸுதா
    4. தத்தா ப

     சொற்பொருள்:

    தாக்கரம்பை – இடப்பெயரான திரக்ஷாரமம் தமிழில் இப்படி குறிக்கப்பட்டுகின்றது; பிரதானி – முதன்மை அரசலுவலர்; தபஸ்யர் – சிவயோகியர்; சட்டுவம் – கரண்டி; பெண்ணாடினம் – பெண் ஆடு; அளம் – உப்பளம்; வளை – சூழ்ந்த இடம்; பத்திரதத்தம் – ஓலைஆவணம் தருதல்; சந்தித்தவர் – சந்திராதித்தவர் வரை

    கல்வெட்டு விளக்கம்:

    முதற் குலோத்துங்க சோழனின் 49 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1119) போது கிழக்கு கோதாவரியான கங்கைகொண்ட சோழவளநாட்டில் குட்டவாடி நாட்டில் உள்ள பெரிய தாக்கரம்பை ஊரில் கோயில் கொண்ட பீமேசுவரர்க்கு சூரியகிரகணம் காரணமாக ஈழத்து விக்கிரமபாகுவின் முதன்மை அரசலுவலர் உய்யவந்தான் திருவண்ணாமலையான் விஜயபாகு மாசாத்து நாயன் என்பான் கோதாவரியன் கிழக்குக்கரையில் கொண்டிக்கருடு தாக்கரம்பை நரேந்திரேசுவரம் இறைவர்க்கு அண்மையில் ஆற்றங்கரையில் மேற்படியானவர் நிறுத்திய பன்மாகேசுவரர் மடத்தில் பதினைந்து சிவயோகிகள் உண்பதற்கு பதினைந்து கலம் நெல்லும் கரண்டி ஒன்றும் ஆக பதினாறு பேருக்கு 137 பலம் வரையும், பெண் ஆடு ஒன்றும், குட்டவாடியில் இடப்பள்ளியில் உப்பளம் சூழ்ந்த இடத்தில் சுற்றியுள்ள 30 வடி நிலமும், நகரமும், தோட்டமும் எல்லா வரியும்நீக்கிக் கொடுத்தார். இந்த தருமம் சந்திராதித்தவர் வரை செல்க எனவும் இவற்றையும் மடத்தையும் அழிப்பவன் பாவத்திற்கு உட்படுவான் என்றும் குறிக்கவருவதை புரிந்து கொள்ள முடிகின்றது. பலவிளக்கு பரிசாரகர் வசம் ஒப்படைக்கப்பட்டது.  13 ஆம் வரிக்கு பின் கல்வெட்டு சிதைந்துள்ளது. அதனால் பொருளை சரியாக விளக்க முடியவில்லை. பகுதி இரண்டு வேறு ஒரு கல்வெட்டு செய்தி ஆகலாம். பகுதி 2 முழுமையாக செய்திகளைக் கொண்டிருக்கவில்லை. அது வேறு ஒரு கல்வெட்டுச் செய்தி ஆகலாம்.

    விக்கிரமபாகு ஈழத்தில் பொலன்நறுவையை கி.பி. 1111 – 11132 வரை ஆண்ட சிங்கள மன்னன். இவனது முதன்மை அலுவலர் வழங்கிய கொடைகளைப் பார்க்கும் போது இவன் சார்பாகவே அவன் வழங்கியது என்று தெரிகின்றது. பீமேசுவரமும் நரேந்திரீசுரமும் ஒரே ஊரில் அமைந்த இரு வேறு கோவில்கள் போலும். மேல் இரண்டு கல்வெட்டும் சிங்கள ஆட்சியாளர் தொடர்புடையது என்பது தெளிவு. ஒரு கோவிலுக்கு யார் விரும்பினாலும் பொருளாக எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்யலாம் ஆனால் வேறு ஆட்சியாளர் ஆளும் நிலவரம்பில் சென்று இன்னொரு ஆட்சியாளர் அந்தராயம் உள்ளிட்ட வரிவிலக்கு தரமுடியுமா? அந்த அதிகாரம் எப்படி வந்தது?  என்பதே எனது விளங்காப் புதிராக உள்ளது.

    பார்வை நூல்: Ephigraphica Andhrica Vol I

    https://eastgodavari.nic.in/tourism/temples/lord-bhimeswara-swami-temple-draksharama/

    https://www.google.com/maps/uv?hl=en&pb=!1s0x3a378d12c6558be3:0x8d61e2b9749eca81!2m22!2m2!1i80!2i80!3m1!2i20!16m16!1b1!2m2!1m1!1e1!2m2!1m1!1e3!2m2!1m1!1e5!2m2!1m1!1e4!2m2!1m1!1e6!3m1!7e115!4shttps://lh5.googleusercontent.com/p/AF1QipPqjALou3VymtBTTA38DtNp4ujtaLQzv2UlUBuT%3Dw213-h160-k-no!5sdraksharamam+bhimeswara+photos+-+Google+Search&imagekey=!1e10!2sAF1QipPqjALou3VymtBTTA38DtNp4ujtaLQzv2UlUBuT&sa=X&ved=2ahUKEwiEhqei2JnhAhULuo8KHdVgBIwQoiowFHoECA0QBg

    Share
  • நற்றமிழ் நாவலர் – சோமசுந்தர பாரதியார்

    -மேகலா இராமமூர்த்தி

    சத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயர் கொண்ட சோமசுந்தர பாரதியார் 1879-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27-ஆம் நாள் எட்டப்பப்பிள்ளை – முத்தம்மாள் இணையருக்கு மகவாய் எட்டயபுரத்தில் பிறந்தார்; எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்ரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார்.

    இவர்கள் இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்கள் புனைவதிலும் குழவிப் பருவத்திலேயே பெருவிருப்புக் கொண்டிருந்தனர். அச்சமயம், யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லைக்கு புலவர் ஒருவர் வருகை புரிந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு அவர் புலவர்களை வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் இருவரும் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் ’பாரதி’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

    எட்டயபுரத்திலும் அதைத் தொடர்ந்து நெல்லையிலும் கல்விபயின்ற சோமசுந்தர பாரதியார், பின்பு சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்; அதன்பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905-ஆம் ஆண்டில் இளநிலை சட்டப்படிப்பை (Bachelor of Law) முடித்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தபொழுது தாமே முயன்று பயின்று தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    1905-ஆம் ஆண்டு முதல் 1920-ஆம் ஆண்டுவரை தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார் பாரதியார். விடுதலைப் போராட்டம் எங்கும் வீரியத்தோடு நிகழ்ந்துகொண்டிருந்த அக்காலகட்டத்தில் விடுதலை வேட்கையால் உந்தப்பட்ட சோமசுந்தர பாரதியும் அவற்றில் பங்கேற்கலானார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905-ஆம் ஆண்டு முதல் 1919-ஆம் ஆண்டு வரை அவரது பெயரை ஐயப்பாட்டுக்குரியோரின் பட்டியலில் வைத்திருந்தது ஆங்கில அரசு.

    வ. உ. சிதம்பரனாரின் அழைப்பை ஏற்று “இந்தியன் நேவிகேஷன்” என்னும் சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாளராகச் சேர்ந்தார் சோமசுந்தர பாரதியார்.

    1937-ஆம் ஆண்டில் இராசகோபாலாசாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது, உயர்நிலைப் பள்ளிகளின் முதல் மூன்று படிவங்களுக்கு (6, 7, 8-ஆம் வகுப்புகள்) இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்துடைய பாரதியார், இந்தி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார். 1937 செப்டம்பர் 5-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25-ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியை கைவிடக் கோரி, முதலமைச்சர் இராசகோபாலாசாரியாருக்குத் திறந்த மடலொன்றை (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar) தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுப் பலருக்கும் அதனை விநியோகித்தார்.

    தமிழகத்தில் ‘ஆரிய-திராவிட’ எதிர்ப்பு அரசியல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டமது. ’கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்’ என்றும், ’கூடாது’ என்றும் சொற்போர் ஒன்று 14.03.1943-இல் சேலத்தில் நடைபெற்றது. ’தீயிட்டுக் கொளுத்த வேண்டும்’ என வாதிட்டவர் பேரறிஞர் அண்ணா.  ’கொளுத்தக் கூடாது’ என அண்ணாவின் கருத்தை மறுத்து வாதிட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

    அதற்கு அவர் முன்வைத்த காரணங்களாவன:

    “ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதன்று; அது தமிழ்நெறியன்று. ஆபாசக் கருத்துக்களை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணைநிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போன்ற ஒரு சிறந்த கவியை நான் கண்டதில்லை. மக்களுக்கு அறிவூட்டுங்கள்; ஆபாசத்தை எடுத்துக் கூறுங்கள்” என்று தமது கருத்தை யார்க்கும் அஞ்சாமல் ஆணித்தரமாக வெளியிட்டார் நாவலர்.

    இளமையிலேயே தமிழிலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். ஆராய்ச்சிகளில் தாம் கண்ட முடிவைத் தம் சொற்பொழிவுகள் வாயிலாகவும் ஆய்வுநூல்கள் வாயிலாகவும் அவர் வெளியிட்டார். 1916 ஆகஸ்டு 16-ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ’தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்னும் தலைப்பில் பாரதியார் ஆற்றிய ஆராய்ச்சிச் சொற்பொழிவு பின்னாளில் அதே தலைப்பில் நூலாக வெளிவந்தது.

    தசரதன் நல்லவன்; அவன் உயிருக்கே உலைவைத்த மாபாதகியான கைகேயியே தீயவள் என்று கூறப்படுவதே நம்மனோரின் பொதுவான வழக்கம்.  இவ்வுண்மையை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டதே ”தசரதன் குறையும் கைகேயி நிறையும்” எனும் ஆய்வு நூல். இதில் தசரதனின் குறைகளைப் பின்வருமாறு பட்டியலிடுகின்றார் பாரதியார்:

    1. தசரதன், கைகேயியை மணமுடித்த காலத்து, அவளுக்குக் ’கன்யாசுல்கமாக’ (சீதனம்) அயோத்தி நாட்டை அளித்தவன்; அதனால் நாடு பரதனுக்கே உரியது. ஆனால், தசரதனோ, அவனை வஞ்சித்து, இராமனுக்கு முடிசூட்ட முயன்றான்.
    2. சம்பராசுரப் போரின்போது, தான்கொடுத்த வாக்குறுதியைமீறிக் கைகேயியை வஞ்சிக்கத் துணிந்தான்.
    3. மிதிலை மணவிழா முடிந்தபின், காரணம் காட்டாமலேயே பரதனைக் கேகயநாட்டிற்கு அனுப்பிவிட்டான்.
    4. பரதன் சென்றதும், ஆட்சித் துறையில் இராமனை ஈடுபடுத்தினான்.
    5. பரதன் இல்லாத சமயம் பார்த்து, இராமனுக்குப் பட்டாபிடேகம் நடத்த முடிவுசெய்தான்.
    6. பட்டாபிடேக அழைப்பினை அனைவருக்கும் அனுப்பியவன், கேகயனுக்கும் அவனிடத்திருக்கும் பரதனுக்கும் அனுப்பாமல் விட்டுவிட்டான்.
    7. பட்டாபிடேக ஏற்பாடுகளைக் கைகேயினிடத்து மட்டும் கூறாமல் மறைத்துவிட்டான்.
    8. ஏதுமறியாப் பரதனைத் ’தன் மகன் அல்லன்’ என்றான்.

    இவ்வாறு தசரதன்பால் அமைந்துள்ள குற்றங்களை வரிசையாக அடுக்கிச் செ(சொ)ல்லும் நாவலர் பாரதியார், கைகேயினிடத்து அமைந்துள்ள நிறைகள் இவையிவை என்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

    1. கைகேயி, மக்கள் நால்வரிடத்தும் வேறுபாடு காணாதவள்.
    2. தன் மகன் பரதனைவிட இராமனித்து அளவற்ற அன்புடையவள்.
    3. கொண்டானையன்றிப் பிற தெய்வம் அறியாதவள்.
    4. போர்க்களத்தும் தன் கணவனைப் பிரிய எண்ணாமல், அவன் தேர்ச்சாரதியாய் இருந்து, தன் இன்னுயிரையும் அவனுக்காகப் பலியிடத் துணிந்தவள்.
    5. தசரதனிடத்து அன்பு பூண்டவள்; ஆனால் அவனுக்குப் பழிவந்திடலாகாது என்பதற்காக வரம் கேட்டவள்.
    6. தன் கணவனுக்காகத் தானே பழி சுமந்தவள்.
    7. ‘தெய்வக் கற்பினள்’ எனக் கம்பரால் பாராட்டப் பெற்றவள்.

    இவ்வாறு அதுவரை யாரும் கண்ணுறாத வகையில் தசரதனையும் கைகேயியையும் ஆய்வுக் கண்கொண்டு நோக்கி அரிய உண்மைகளை அறியத் தந்தார் சோமசுந்தர பாரதியார்.

    தம் கெழுதகை நண்பரான சுப்ரமணிய பாரதி, ’பாஞ்சாலி சபதம்’ எழுதிப் பாஞ்சாலியின் பெருமையைப் பாருக்கு உணர்த்தியதுபோல், சோமசுந்தர பாரதி, கைகேயியின் பெருமைகளை விளக்கவே ’தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ கூறினார் எனில் பொருந்தும். அவ்வகையில் தமிழிலக்கிய உலகுக்கும், தமிழாய்வுத்துறைக்கும் இந்நூல் ஒரு முன்னோடி எனலாம்.

    ’திருவள்ளுவர்’ என்னும் தலைப்பில் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல், வள்ளுவர் குறித்துத் தமிழகத்தில் நிலவிவந்த பல்வேறு வெற்றுக்கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாய் அமைந்தது. அதிலிருந்து சில முக்கியமான செய்திகள்:

    திருவள்ளுவர் மயிலையில் பிறந்தவர் அல்லர். மதுரையில் அருந்தமிழ் வேளிர் குடியில் பிறந்தவர். பண்டைப் பாண்டியரிடம் உள்படு கருமத்தலைவராக இருந்தவர்.

    குறளடியால் அறக்கருத்துக்களைப் பாடி உலகுக்களித்தவர்.

    நீதி நூல்களின் தோற்றத்துக்கு அடிப்படை வடமொழி நூல்களே என்றும், வள்ளுவரும் பிரமதேவர் எழுதிய திரிவர்க்கம் எனும் நூலைச் சுருக்கியே முப்பாலாக மொழிந்தார் என்றும்; அதனாற்றான் அவரை நான்முகன் அவதாரம் என்றும் கூறுவதுண்டு என்று மொழிந்த தமிழறிஞர் மு. இராகவையங்காரின் கருத்தை மறுத்த சோமசுந்தர பாரதியார்,

    ”ஆரிய தரும சாத்திர மரபு வேறு; தமிழற நூன்மரபு வேறு. இரண்டையும் நன்குணர்ந்த வள்ளுவர் தமிழ் மரபு வழுவாது, பொருளின் பகுதிகளான அகப் புறத்துறை அறங்களை  மக்கள் வாழ்க்கைமுறைக் கேற்றவாறு வடித்தெடுத்துத் தந்திருக்கும் அரிய தமிழ்நூல் வள்ளுவம்.

    தமிழிற் பெருமையுடைய அனைத்தும், ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகும் என்பது வெள்ளிடைமலையாம்” என்றார்.

    தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார் நாவலர் பாரதியார். அவ்வுரைநூல் ’தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை’ எனும் தலைப்பில் 1942-ஆம் ஆண்டில் வெளிவந்தது.

    இவையன்றிச் சேரர் தாயமுறை, சேரர் பேரூர் போன்ற ஆராய்ச்சி நூல்களையும் சோமசுந்தர பாரதியார் எழுதியுள்ளார். வடமொழியில் காளிதாசன் எழுதிய ’மேக சந்தேசம்’ எனும் நூலை அடியொற்றித்  தமிழில் அவர் எழுதியதே ’மாரி வாயில்’ எனும் கவிதை நூலாகும். நாவலரின் நற்றமிழ்க் கவிப் புலமைக்குக் கட்டியங்கூறும் இந்நூலில் இடம்பெற்றுள்ள  அழகிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிது!

    ”தமிழினிய தெய்வதமே மொழிகள்குலத் தனிவிளக்கே
    தகவெழில்மெய் சீர்த்த சொல்லின்
    அமிழ்துவிழைந் தடுத்தபல புலவரெலாம் அசையலையைக்
    கடைந்தபொழு தழகி னோங்கும்
    துமியினிடை எழுந்தொளிரும் செல்விஅறி வெனுமலவன்
    துணைவியருள் முதல்வி தூய்மை
    கமழ்கவிதை உலகுபடை கவிஞருளம் களிவிக்கும்
    காதல்வளர் கன்னி வாழி!”

    இளமையிலேயே சமூகச் சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார் சோமசுந்தர பாரதியார். ஆதலால் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தம்மைப் பிணைத்துக்கொண்டார். சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராகவும் செயற்பட்டார். அப்பணியின் உச்சமாக, 1933 மே 13-ஆம் நாள் மதுரைக்கு அருகிலுள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத் தொடக்கப்பள்ளி ஒன்றை நிறுவினார். அதன் தொடக்க விழாவில் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார்.

    வழக்கறிஞராய்ப் பல்லாண்டுகள் பணிபுரிந்த பாரதியார்,  1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1938 ஏப்ரல் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கின்றார். முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார், வித்வான் க. வெள்ளைவாரணனார், திறனாய்வறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் போன்றோர் இவரிடம் தமிழ்பயின்று பின்னர் நானிலம் போற்றும் நற்றமிழ் அறிஞர்களாய்ச் சிறந்தனர்  என்பது கருதத்தக்கது.

    பெரும்புலமையும் பேரறிவும் நாநலமும் வாய்க்கப்பெற்ற சோமசுந்தர பாரதியாருக்கு ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் 1944ஆம் ஆண்டு நாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

    மதுரை திருவள்ளுவர் கழகத்தார் அவருக்கு 1954-ஆம் ஆண்டில் கணக்காயர் பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் வெள்ளிவிழாவில் அவருக்கு மதிப்புறு முனைவர் (Honorary Doctor) பட்டம் அளிக்கப்பட்டது.

    பேச்சாலும் எழுத்தாலும் மட்டுமன்றிச் செயலாலும் தமிழ்சிறக்கப் பாடுபட்டவர் ’இளசை கிழாரான’ நாவலர் சோமசுந்தர பாரதியார். தாய்த்தமிழுக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அதனை அஞ்சாது எதிர்த்து நின்ற தீரர் அவர். தமிழ்ப் புலவர்களைப் போற்றிக் கொண்டாடி அவர்கட்கு வேண்டுழிப் பொருளுதவி செய்தவர். ஆய்வு நெறிமுறைகள் இவை எனக் காட்டித் தம் மாணாக்கரிடையே ஆய்வு மனப்பான்மையை ஊக்குவித்துத் திறனாய்வுத்துறையை வளர்த்த சான்றோர். ஆரிய மரபு இது, தமிழ் மரபு இது என்று தெள்ளிதின் விளக்கித் தமிழ்மரபு காக்க வலியுறுத்தியவர். இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன்முதலில் எதிர்த்த பெருமைக்குரியவர். தமிழிலக்கியத்துக்கும், தமிழாராய்ச்சிக்கும் புத்தொளி பாய்ச்சிய  வித்தகர். இத்துணைப் பெருமைகட்குச் சொந்தக்காரரான நாவலர் பாரதியார், 1959-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் நாள் தம் எண்பதாம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

    ’தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ? ’என்று பாவலர் சுப்ரமணிய பாரதிக்குப் பாவேந்தர் சூட்டிய புகழாரம் நாவலர் சோமசுந்தர பாரதிக்கும் பொருந்துவதாகும்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. நாவலர் பாரதியார் – நற்றமிழ் ஆய்வுகள் – 1
      தொகுப்பாசிரியர் ச. சாம்பசிவனார், ம. சா. அறிவுடைநம்பி.
    2. https://ta.wikipedia.org/wiki/ சோமசுந்தர_பாரதியார்

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 205-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நித்தி ஆனந்தின் இந்தப் புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 205க்கு வழங்கியிருக்கிறார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்!

    ”பாலைப் பொழிந்துதரும் பாப்பா – அந்தப்
    பசுமிக நல்லதடி பாப்பா”
    என்று பசுவின் பரந்த மனத்தை, உதார குணத்தை உலகுக்கு உணர்த்தினார் மகாகவி பாரதி.

    பசுவின் பால் மட்டுமல்லாது, அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் மற்றும் நெய்யுடன் பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்து `பஞ்சகவ்யம்’ தயாரிக்கப்படுகின்றது. இது கோயில்களில் அபிடேகப் பொருளாகவும், ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துப் பொருளாகவும், இயற்கை வேளாண்மையில் நிலத்துக்கு ஊட்டமளிக்கும் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது.

    அந்தக் காலத்தில் நாட்டு மாடுகளே பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்பட்டன. அவை வைக்கோலையும் புல்லையுமே உணவாகத் தின்று வந்தமையால் அவற்றின் உடலில் நோய்த்தொற்று இல்லாதிருந்தது. இன்றோ செயற்கையான முறையில் தயாராகும் தீவனங்களையே மாடுகள் அதிகம் உண்கின்றன. எனவே மருந்துப்பொருள்கள் தயாரிப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் மாட்டின் சிறுநீர், சாணம் முதலியவற்றைப் பயன்படுத்துவதற்குமுன், அவற்றில் கிருமித்தொற்று, நச்சுத்தன்மை போன்றவை இல்லாதிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின் பயன்படுத்துதலே சிறந்தது.

    இனி, பசுவின் சிறப்பைத் தீஞ்சுவைப் பாடலாய்ப் பொழியக் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

    ******

    ”ஊரார் பிள்ளைக்குப் பாலூட்டி வளர்க்கும் இரண்டாம் தாய் நீ! மடி நிறையப் பாலும், மனம் நிறைய அன்பும் கொண்ட உன்னைப்போல் மன்னுயிர்கள் இருந்தால் மாநிலம் பயனுறும்” என்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

    இரண்டாம் தாய்

    தாயில்லாப் பிள்ளைக்கு எல்லாம்
    தாயாகிப் பாலூட்டும் இரண்டாம் தாய் நீ
    தன் பிள்ளை தானே வளரும் என்று
    தன் பாலை ஊரார் பயனுறத் தரும் அன்னை நீ

    வாயில்லா ஜீவன் தான் நீ, ஆயினும்
    வாரித் தருவதில் வள்ளல்!
    வறுமையுற்ற ஏழைக்கெல்லாம்
    வாழ்வளிக்கும் நீயே வாழும் குலசாமி
    உணவளிக்கும் உழவருக்கு
    உயிர் கொடுக்கும் தெய்வம்
    உன்னை வளர்ப்பவர் வாழ்வை
    உயர்விக்கும் உன்னத நண்பன் நீ!

    உழவனைத் தொழுகின்றதாகக் கூறும் உலகம் அவன்
    உழைப்பை உறிஞ்சிக் களித்திருக்கும்
    உடல் பொருள் ஆவி அனைத்தும் தரும்
    உன் உழைப்பால் வானுயரும் அவன் மதிப்பு!

    ஈன்ற கன்றுக்கு அன்புடன் பால் சுரந்து
    ஈத்துவக்கும் இன்பம் உடைய பசுவே
    ஈரமுள்ள நெஞ்சு கொண்ட உனை
    ஈகைக் குணத்தில் மிஞ்ச யார் உளார்?

    மடிநிறையப் பால் இருக்கு
    மனம் நிறைய அன்பு இருக்கு
    மன்னுயிர்கள் எல்லாம் உன்னைப் போலானால்
    மாநிலத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கும்!

    *****

    பால் விற்போரே! வாலை ஆட்டிவரும் கன்றுக்கும் கொஞ்சம் பால் இருப்பது நன்று! ஆவின் பாலனைத்தையும் நீரே முற்றாய்க் கறந்துவிடவேண்டாம்!” என்று அன்போடு கண்டிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கன்றுக்கும் விட்டுவை

    பாலது கறந்து விற்பவரே
    பாலை முற்றிலும் கறக்கவேண்டாம்,
    வாலதை யாட்டி வரும்கன்று
    வயிறு நிறையக் குடிப்பதற்கே
    பாலது வேண்டும் வைத்திருங்கள்
    பசியில் துடிக்க விடவேண்டாம்,
    போலியாய்ச் செய்த கன்றன்று
    பிழைக்க வைப்பீர் உயிரதையே…!

    *****

    ”பாரில் உள்ள பாதிப் பிள்ளைகளுக்குப் பருகிடத் தாய்ப்பாலாய் இருப்பது உன் பாலே! இருக்கும்வரை பால்தந்து இறந்தபின்னும் தோல்தந்து நிற்கும் நீ எம் குலம் தழைக்கவந்த குலதெய்வம் அன்றோ!” என்று நெகிழ்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    குலதெய்வம்

    அழுகின்ற பிள்ளைக்கு
    அள்ளி அணைத்து
    அன்போடு பால் கொடுக்கும்
    அன்னையைப் பார்த்ததுண்டு

    அடுத்தவர் பிள்ளையாயினும்
    பசி அதனைப் போக்கிட
    பரிவோடு பால் கொடுத்த
    அன்னை பற்றிக் கேட்டதுண்டு

    உன் இளங்கன்றை ஏங்கவைத்து
    ஊருக்கே தினந்தோறும்
    ஊற்றெடுக்கும் பால் அனைத்தும்
    தந்து நிற்கும் உன் உருவில்
    தியாகம் செய்யும் அன்னை மனதைக்
    கண்டு மகிழ்ந்தோம்!

    பாசம் அது பெருகிடவே
    பருகிடும் தாய்ப் பால் அது உதவிடுமே
    பாரில் உள்ள பாதி பிள்ளைகளுக்கு
    பருகிடத் தாய்ப் பாலாய் இருப்பது உன் பாலே!

    கலப்படம் இன்றி நீ கொடுக்கும் பாலில்
    மனதில் ஓடும் ஆசையைப் போல்
    கலந்து வைத்துத் தண்ணீரை
    மதிகெட்டு விற்கும் மாந்தர் கூட்டம் இங்கே!

    கட்டிய வீட்டில் காசு சேர்ந்திடக்
    கட்டி உன்னை அழைத்து வந்து
    பூஜை செய்து போற்றி நிற்கும் மனமது
    உன் பிள்ளை அருந்திட உருவான பால்தனை
    ஊருக்கு அளித்து மகிழ்ந்து இருக்கும்
    உன் தியாகம் தனை என்று உணர்ந்திடும்?

    கல்லையும் புனிதமாக
    மாற்றத்தக்க பாலைத் தந்து
    தரணியில் இருக்கும் அனைவருக்கும்
    பசி தீர்க்கும் பானமாய்
    இருக்கும்வரை பால் தந்து
    இறந்த பின்னும் தோல் தந்து
    எம் குலம் தழைத்திடவே
    கால் நடையாய் வந்த
    குலதெய்வம் நீ!

    *****

    பசுவின் இனிய இயல்பை, கன்று உண்ணாத போதினும் கலம் நிறையப் பால்கொடுத்து மற்றவருக்கு உதவும் அதன் தயாள குணத்தைச் சிறப்பாய்த் தம் பாடல்களில் பதிவுசெய்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    அன்பைப் பெருக்கி அமுதைச் சுரப்பதற்காய்
    தன் கன்றை முத்தமிடும் தாயின் தயவின்றேல்
    உலகினிலே மாந்தருக்கு உணவேது? உயிரேது?

    தாய்ப்பாலிலாது தவிக்கும் குழந்தைகட்கு
    ஆவினங்களன்றோ அனாத ரட்சகர்கள்.

    அஃதை உணர்ந்தேதான் அன்றே எம்முன்னோர்கள்
    பதியின் அடுத்த பசுவென்று ஆன்மாவைத்
    தூய நிலையில் துதிசெய்யச் சொன்னார்கள்

    உதிரத்தைப் பாலாக்கி ஊட்டுகிற அன்னைக்குப்
    பதிலீடாய் என்றும் பசுக்கூட்டம் உள்ளதனால்
    அன்பைப் பொழிகின்ற ஆவினத்தை எப்போதும்
    துன்பமறக்காத்துத் தொழுதிடுதல் எம் கடமை

    தெய்வத் திருமுறையில் திரு மூலர் சொன்னபடி
    பதிக்கொரு பச்சிலையும் பசுவுக்கோர் வாயுறையும்
    என்றுங் கொடுத்து எமைக்காக்கும் ஆவினத்தை
    நன்று பராமரிப்போம் நாளும்!

    ”உதிரத்தைப் பாலாக்கி ஊட்டுகின்ற அன்னைக்கோர் பதிலீடாய்த் திகழும் ஆவினத்தைத் தொழுவோம். ”யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை” என்று உரைத்துச்சென்ற சித்தர் திருமூலரின் வாக்குக்கிணங்க, பார் புரக்கப் பால் சுரக்கும் பசுவினத்தைப் பாங்காய்ப் பராமரிப்போம் நாளும்!” என்று நற்சொல் நவின்றிருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 25

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 25 – அருளுடைமை

    குறள் 241:

    அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணு முள

    எல்லாச் செல்வத்துலயும் ஒசந்தது அருள் ங்குத செல்வம் தான். மத்த எல்லா செல்வமும் கீழானவங்க கிட்ட கூட இருக்கும்.

    குறள் 242:

    நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.

    நல்ல வழிய தெரிஞ்சிக்கிட்டு அருளோடு வாழணும். பலவழிகள் ல ஆஞ்சு அறிஞ்சு பாத்தாலும் அருளே நம்ம வாழ்க்கைக்கு தொணையா நிக்கும்.

    குறள் 243:

    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்

    அருள் நெறஞ்ச மனசக் கொண்டவங்க அறியாம ங்குத இருட்டு ஒலகத்துல கெடந்து சீரளிய மாட்டாங்க.

    குறள் 244:

    மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
    தன்னுயி ரஞ்சும் வினை

    எல்லா உசிரயும் இரக்கத்தோட காக்குதத தன் கடமயா செய்யுத பெரிய மனுசங்க தன் உசிர பத்தி கவலப் பட மாட்டாங்க.     .

    குறள் 245:

    அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
    மல்லன்மா ஞாலங் கரி

    உள்ளத்துல ஊறுத அருளோட இயக்கத்துனால சங்கடப்படாம கடமய செய்யலாம் ங்குததுக்கு ஒதாரணமா காத்தோட்டத்துனால செழிப்பா இயங்குத இந்த ஒலகத்த சொல்லலாம்.

    குறள் 246:

    பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்

    அருளில்லாம கெட்டத செய்யுதவங்க பொருளயும் தொலச்சி கடமையையும் மறந்தவங்க ஆவாங்க.

    குறள் 247:

    அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
    கிவ்வுலகம் இல்லாகி யாங்கு

    பொருள் இல்லாதவங்களுக்கு பூமில இருக்க வாழ்க்க சந்தோசமா இருக்காதது போல மத்த உசிருங்க கிட்ட பாசமா நேசமா  நடந்துகிடாதவங்களுக்கு மேல் உலகம் சந்தோசமா இருக்காது.  .

    குறள் 248:

    பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
    அற்றார்மற் றாதல் அரிது

    பொருள் இல்லாமப் போனவங்க பொறவு சம்பாதிச்சிக்கிடலாம். அருளில்லாம இருக்கவங்க மறுபடி அருள் உள்ளவங்களா ஆகுதது சிரமந்தான்.

    குறள் 249:

    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்

    தெளிஞ்ச புத்தி இல்லாதவன் நூலப் படிச்சு அது சொல்ல வருதத சரியா புரிஞ்சிக்கிடமுடியுமா? அப்டிதான் அருள் இல்லாதவன் அறச்செயல செய்ய நெனைக்குததும்.

    குறள் 250:

    வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
    மெலியார்மேற் செல்லு மிடத்து

    அருள் இல்லாதவன் தன்னைய விட எளச்சவனுக்கு தொந்தரவு குடுக்கப்போகுத நேரம் இப்பம் ஒரு பலசாலி முன்ன வந்தா எப்டி பயந்து சாவோம்னு நெனைச்சிக்கிடணும்.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 31

    – திருச்சி   புலவர் இரா. இராமமூர்த்தி

    இறைவன்   திருவருள்  நிகழ்ச்சிகள்  உலகில்  நிகழும்போது,  இயற்கையாகவே இசைக்கருவிகள்  ஆர்த்து ஒலிக்கும். திருஞான  சம்பந்தர்  அவதரித்த    நேரத்தில்,

    மங்கல முழக்காகிய தோற்கருவியும் , தாளமாகிய கஞ்சுகக்கருவியும், சங்கு, படகம், தாரை முதலான காற்றுக் கருவிகளும்  இசைப்பார்  இல்லாமல்  தாமாகவே   வானில்  எழுந்து  ஒலித்தன! இதனை,

     ‘சங்கபட கங்கருவி தாரைமுதலான, எங்கணுமி யற்றுபவரின்றியு மியம்பும்,
     மங்கல முழக்கொலி’’ 

    என்று  சேக்கிழார் பாடுவார்.   முன்னரே  , ’மாதவம் புரி  தென்திசை  வாழ்ந்திடத்  தீதிலாத்திருத்  தொண்டத்தொகைதர   வந்த  சுந்தரரைத்  தடுத்தாட்கொண்ட போது,  இயற்கையாகவே  பூமியிலுள்ள  இசைக்கருவிகள் ஐந்தும்  முழங்கின! அதன் ஓசை வானுலகை எட்டியது!  அப்போது வானவர்கள்  பூமாரி பொழிந்தனர்; வேதங்களின் ஓசை  எங்கும்நிறைந்தது!  -. பூவுலகினின்று போந்த ஓசையைந்தும் விசும்பு சென்று நிறைய, அதற்குப் பிரதியாய் விண்ணினின்று போந்த பூமாரி மேதினி நிறைந்த தென்ற அழகு காண்க) இதனைச் சேக்கிழார்,

    ‘’எண்ணிய வோசை யைந்தும் விசும்பிடை நிறைய வெங்கும்
     விண்ணவர் பொழிபூ  மாரி மேதினி நிறைந்துவிம்ம,
    மண்ணவர் மகிழ்ச்சிபொங்க  மறைகளும் முழங்கியார்ப்ப’’

    எனப்பாடுகிறார். இவை  இரண்டும்   சிறந்த நிகழ்ச்சிக்கான அடையாளங்க ளாகும்! அடுத்து இறைவன்  சுந்தரரை நோக்கிக்   கூறும்பாடல் நயம்மிக்கதாகும்!

    இறைவன்  தாமே சுந்தரர்  செயல்களை நோக்கிச் , சுந்தரருக்கு ‘வன்றொண்டன் ‘ என்ற திருப்பெயரை  இட்டருளினார்! ‘’அந்தப் பெயரை நாமிட்டதால், நீயே  உனக்கு உரியதாய்ப்  பெற்றுக்கொண்டாய்!’’  என்கிறார்! இதனை இறைவன் ,

    ‘’மற்றுநீ  வன்மை பேசி  வன்றொண்டன்  என்னும் நாமம்  பெற்றனை!’’

    எனக் கூறினார்! சுந்தரர் இறைவனைப் ‘’ பித்தனோ, மறையோன் ?’’ என்றும், தம் சாதி பெருமை தந்த  வலிமையை வாதத்தில் ஏற்றியும்   கூறியதை , ‘’வன்மை பேசி ‘’ என்ற தொடரால்  குறிப்பிடுகிறார்!  அதனால்  சுந்தரர் எடுத்துக்கொண்ட  உரிமையைப் பாராட்டி, ‘’வன்றொண்டன்‘ என்ற திருப்பெயரைப் பெற்று  விட்டாய்!’’ என்று கூறினார்! இவ்வாறு இறைவனால் தரப்பெற்ற  பெயரைச் சுந்தரர்  விருப்புடன் ஏற்றுக் கொண்டார்! அதனால்  தம் சொற்றமிழ்ப் பாடல்களில்  பல இடங்களிலும் எடுத்துக் போற்றியுள்ளார்!

    ‘’அடியேனைத்  தாமாட்கொண்டநாட் சபைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர்  வாழ்வு தந்தார்………’’ (நம்பிகள் தேவாரம் – திருநாவலூர் – 2) முதலியவை காண்க. இதுபோலவே நம்பிகள் சரித நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அவரது தேவாரத்திருவாக்குக்களாகிய அகச்சான்றுகளாலே மிகத் தேற்றமாய்  விளங்குதல் காணத் தக்கதாம். சுந்தரருடைய  பிள்ளைத் திருநாமம்  ‘ஆரூர்நம்பி’  என்பதாகும் . ‘’வன்றொண்டன்’’ என்பதுதீட்சாநாமம்.

    பெண்ணும்  ஆணுமாய், உடலழகை ஐம்புலன்களால் துய்க்கும்  நிலை எளிய மானிட வாழ்க்கை. ஆனால் இறைவனின்  பேரழகை  அறுவகைப் புலன்களாலும் ஆரத்  துய்ப்பது அடியார்களின் வாழ்க்கை.

    ‘’மாசில் வீணையும்  மாலை மதியமும்
     வீசு   தென்றலும்  வீங்கிள  வேனிலும்
     மூசு  வண்டறை  பொய்கையும் போன்றதே
     ஈசன் எந்தை இணையடி நீழலே ‘’

    என்பது , சுண்ணாம்புக் காளவாயில், அப்பரின் உடல் , வெந்து நொந்தபோது, அந்நீற்றறை  மாசில் வீணை ஓலியாய் செவிக்கும், மாலை மதியமாய் கண்ணுக்கும், வீசுதென்றலாய்  உடலுக்கும், வீங்கிளவேனில்  கனிகளாய் நாவுக்கும்,  மூசுவண்டுகள்  ஒலிக்கும் பொய்கை மணமாய் மூக்குக்கும் இன்பம் தந்ததோடு , உள்ளத்தில்  ஏற்பட்ட நிரதிசய இன்பமாய் மனத்துக்கும்  பேரின்பமாகி  ஆறத்  துய்க்க  வைத்தது!  ஆகையால்  பக்தியுணர்வே  பேரின்பம்!  இந்த இன்பத்தைத்  தாமும் துய்த்துப்  பிறரும் துய்க்க வைப்பது அடியாரின் அனுபவங்களை  விளக்கும் பாடலாகும். அவ்வாறு அடியார் இறைவனைப் போற்றிப் பாடுவதே இறைவழிபாடாகும்.

    ‘’இங்குத் தொண்டுசெய்யும் பலவகை வழிபாடுகளையும்உட்கொண்ட பொதுப் பெயராய்நின்றது. ‘அருச்சனை வயலுளன்பு வித்திட்டு’ (திருவண்டப் பகுதி) என்ற திருவாசகம் காண்க. அன்பிலிருந்து ஊறிப்பெருகியதும் அதனாலே சிறப்பின் மிகுந்ததும் ஆகிய பாட்டு என இவற்றைப் பாட்டுக்கு அடைமொழியாக்கி உரைக்க. என்னை வலிய ஆட்கொண்டது மன்றுளீர் செயல் என்று தெளிந்த நம்பிகளுக்குத் தம்முடைய பணியாவது இன்னதென்று காட்டியவாறு. அன்பு மிகுதியினாலே தாமே மேல் எழுந்து வழியும் பாட்டே சிறந்ததாய் இறைவன் மகிழ்ந்து அருளுவன் என்க.’’ என்பது    சிவக்கவிமணியார்   விளக்கம்.

    இறைவனே நான்மறையையும் அருளினார் அந்நான்மறைகளை நாள் தோறும் ஓதிய   ஞானியரே, நான்மறையின் பொருளுணர்ந்து மகிழ்வர். எளிய வாழ்க்கை உடைய மானிடருக்கு,   இனிய  தமிழால் கூறும்   எல்லாமே  பொருளின்பம்தரும். இந்த இன்பத்தை எல்லாரும்    துய்க்கும்  போது, அவர்களின்  ஆன்ம  நாயகனாய் உயிரெங்கும் உள்ளவனாகிய  ஆண்டவனும்  இன்பம்  அடைவான் போலும்!  இதனை,

    கோழை மிடறாக   கவி கோளும்  இலவாக  இசை  கூடும் வகையால்
    ஏழை  அடியார்  அவர்கள்  யாவை  சொன்ன  சொல்மகிழும்  ஈசன் ‘’

    என்று திருஞானசம்பந்தர் அருளுகின்றார்!இதே இன்பத்தைத்   தோத்திரங்களின்    பொருள் உணரும்  பாமரரும் அடைகிறார்கள். இதனை மிக விளக்கமாக, நால்வர் நான்மணி  மாலை  கூறுகின்றது!

    ‘’உமையம்மை  உடனாய முக்கண்ணனாகிய அனைத்துக்கும் காரணன்  ஆகிய  சிவபிரான்  அருளிய  வேதமோ, இறைவனின்  பழம்பெருமையை  எடுத்துரைக்கும்  திருவாதவூரராகிய  மாணிக்க வாசகர்  திருவாய் மலர்ந்து அருளிய  திருவாசகம் என்னும் தேனோ, எது சிறந்தது? ‘’ எனக் கேட்பீராயின் அதற்கு விடை கூறுகிறேன்!  ‘’வேதம் ஓதினால் பாமரர்கள்  அதைக் கேட்டு  விழிகளில் கண்ணீர் பெருகி , உள்ளம் உருக மாட்டார்கள்! ஆனால் மாணிக்க வாசகரின்  திருவாசகப் பாடலை ஒரே ஒருமுறை  ஓதக்கேட்டால், கல் போன்ற  வன்மையான  மனமும்  கரைந்து உருகும்;   கண்களிலிருந்து மணற்கேணியில்  ஊறிப்பெருகும் நீர்போலக்  கண்ணீர்  பெருகும்; உடல் சிலிர்க்கும்; மனம் பதைக்கும்; அப்பாடலின் பொருள் உணர்ந்து அப்பாட்டுக்கு  உரிய இறைவனின் அடியார்களாக , எளிய பாமரரும்  ஆவார்கள்! மற்ற எவரும் இதே நிலையை அடைவார்கள்! இதனை  சிவப்பிரகாசர் ,

    ‘’விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
    காரணன் உரையெனும் ஆரண மொழியோ
    ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
    மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
    யாதோ சிறந்த தென்குவீ ராயின்
    வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
    நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
    திருவா சகமிங் கொருகால் ஓதிற்
    கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
    மெய்மயிர் பொடிப்ப விதிர்வதிர்ப் பெய்தி
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே.’’

    என்பது  அப்பாடல்!   இறைவன்  தமிழ்ப் பாட்டின் சிறப்பை உணர்ந்து, தாம் ஓதும் வேதத்தைத்  தமிழில் ஆக்கி,  ஒலிக்கச்  செய்து அதனைக் கேட்க  விரும்பினார்! இவை  அனைத்தையும் சேர்த்து,

    மற்றுநீ  வன்மை பேசி  வன்றொண்டன்  என்னும் நாமம்
    பெற்றனை! நமக்கும்  அன்பின்  பெருகிய  சிறப்பின் மிக்க 
     அர்ச்சனை  பாட்டேயாகும். ஆதலால்  மண்மேல் நம்மைச் ’
    ’சொற்றமிழ்  பாடுக  என்றார்,  தூமறை பாடும் வாயார்! ‘’

    என்று சேக்கிழார்  சுவாமிகள்  அருளுகின்றார்!  இந்தப்பாடல், அடியார்களின்  வழிபாட்டு முறையையும்,  சிறந்த சொற்களையும்  பொருளுணர்ச்சியையும் உடைய தமிழ்ப்  பாடலின்  பெருமையையும், எளிமையையும், உள்ளம் உருக்கும் பக்தி  நெறியையும் என்றும்,   பாராயணம்  செய்யத்தக்க  அருமையையும்,  இது  சிவபிரானுக்கே  விருப்பம் உடையது  என்பதையும் எடுத்துக் காட்டுகிறது!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (291)

    அன்பினியவர்களே !

    மிகவும் நீண்ட ஒரு இடைவேளைக்குப் பின்னால் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். காலம் என்பது கண்மூடித் திறப்பதற்குள் கனவேகத்தில் ஓடி மறைகிறது . எதற்காக இந்த நீண்ட இடைவேளை ? எங்கே சக்தி சென்றிருப்பார் ? என்று உங்களில் சிலர் எண்ணியிருக்கலாம் , ஓ ! அதுகூட எனது நப்பாசையோ ? இருந்தாலும் இடைவெளிக்கு ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். பெப்பிரவரி 4ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை எனது வருடாந்த சென்னை விஜயத்திலிருந்தேன். மார்ச் 5ம் தேதி திரும்பியதும் என்னோடு சேர்ந்து விமானத்தில் இலவசமாக பயணம் செய்த வைரஸ் கிருமி ஜலதோஷம், ஜுரம் என ஒரு இரண்டுவார காலம் பாடாய்ப் படுத்தி விட்டது.

    சரி எனது சென்னை விஜயத்தின் அனுபவங்களை உங்களுடன் இரண்டு மூன்று மடல்களில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன் விட்டதா? இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதம். தனது உருவத்தை மிகவும் பூதாகரமாக்கி இங்கிலாந்து அரசியல் மேடையையே ஒரு திகில் நிறைந்த தினம் ஒரு காட்சி அரங்கேறும் ஒரு நிலைக்குத் தள்ளி விட்டது . சுமார் மூன்று வருடங்களின் முன்னர் நடந்த சர்வஜன வாக்கெடுப்பின் முடிவின் பிரகாரம் ஐக்கிய  இராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2019 மார்ச் மாதம் 29ம் தேதி இரவு 11 மணிக்கு வெளியேறும் என முடிவு எடுக்கப்பட்டு அதை பாராளுமன்றத்தின் மூலம் சட்டமாகியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்

    சரி நான் இந்த மடலை எழுதிக் கொண்டிருப்பது மார்ச் 26ம் தேதி . அப்படிப் பார்த்தால் நாம் அதாவது ஐக்கிய  இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இன்னும் முன்று நாட்களே பாக்கியுள்ளது. அப்படியாயின் வரும் வெள்ளிக்கிழமை அதாவது 29ம் தேதி இரவு 11 மணிக்கு நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி விடுகிறோமா? அதற்கு விடையாக மிகப்பெரிய ” இல்லை ” என்பதுவே ஒலிக்கிறது . அட , இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா ? இத்தகைய ஒரு நிலையில் இன்று ஐக்கிய  இராச்சியம் இருப்பதற்கான பின்னனிக் காரணிகள் தான் என்ன ?

    உண்மைகள்

    • சர்வஜன வாக்கெடுப்பில் 52% வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாகவும் 48% வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டது.
      வாக்கெடுப்பின் பிரகாரம் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் , எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று முடிவு செய்தன.
    • வெளியேறுவதற்கான வழியான ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட மசோதா “50” ஜ நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று பிரித்தானிய அரசு அறிவிப்பதற்கு ஆதரவான மசோதா இங்கிலாந்து[ பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது.
    • 2017 மார்ச் 29ம் தேதி இம்மசோதவை நடைமுறைப்படுத்தி அதை சட்டமூலமாக்கியதன் மூலம் ஐக்கிய  இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு சட்டப்பிரகாரம் இரண்டு வருட அவகாசம் கொடுத்து வெளியேறும் தேதி 2019 மார்ச் 29 இரவு 11 மணி என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேற்குறிப்பிடப்பட்டவைகளே யாராலும் மறுக்கப்பட முடியாத உண்மைகள் (Facts)
    ஆகும் . ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய  இராச்சியம் வெளியேற இரண்டு வழிகளிருந்தன
    ஐரோப்பிய ஒன்றியத்தோடு எதுவித தொடர்பும் இல்லாத வகையில் ஒட்டு மொத்தமாக வெளியேறுவது அதை ஆங்கிலத்தில் ” நோ டீல் ” என்றார்கள்.

    இவ்வகையான வெளியேற்றத்தை பல முன்னனி பொருளாதார நிபுணர்களும் , பல முன்னனி முதலீட்டாளர்களும் பாரளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களும் எதிர்த்தார்கள். காரணம் இது ஐக்கிய  இராச்சியத்தின் பொருளாதாரத்தை மிகவும் தீவிரமாகப் பாதிக்கும் எனும் காரணத்தினால்.
    ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி இரு சாராருக்குமிடையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் விலகுவது.

    இத்தகைய ஒரு விலகலையே பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள் . காரணம் இது ஒரு சீரான படிப்படியான திடீர் மாற்றங்களில்லாத ஒரு விலகல் எனும் காரணத்தினால். இதன் பிரகாரம் விலகிய பின்னால் இரண்டுவருட காலம் ” மாற்றத்துக்குரிய காலம்” அதாவது Transition period என்று அறிவிக்கப்பட்டது . அத்துடன் இந்த இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐக்கிய  இராச்சியத்தின் வர்த்தக, போக்குவரத்து, பாதுகாப்பு என்பது போன்ற முக்கிய விடயங்களில் எத்தகைய நெருங்கிய உறவுகள் பேணப்படும் எனும் வரைமுறைகளையும் தீர்மானிப்பது என்றும் குறிக்கப்பட்டது.

    ஐக்கிய  இராச்சிய அரசாங்கத்தின் நோக்கத்தின் படி இத்தகைய ஒரு உடன்பாடு குறித்து கடந்த இரண்டு வருடங்களாக இரு சாராருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது இதனை “விலகல் உடன்படிக்கை” “widrawal deal” என்று அழைத்தார்கள். இதனைக் கைச்சாத்திட்டது இங்கிலாந்தின் சார்பாக பிரதமர் தெரேசா மே என்பதினால் இதனை இங்கிலாந்தில் சுருக்கமாக “மே டீல்” என்றும் அழைத்தார்கள்.

    இவ்வுடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்

    • இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட் மூலதாரர்களில் ஒன்றாக இருந்த ஐக்கிய  இராச்சியம் இதுவரை திட்டப்பட்ட திட்டங்களுக்காக மாற்றறத்துக்குரிய காலமாகிய இரண்டு வருடங்களும் வருடம் ஒன்றுக்கு 39 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் தனது பங்காகச் செலுத்த வேண்டும்.
    • ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் கொள்கைப் பிரகடனங்கள் இந்த இரண்டு வருடமும் ஐக்கிய  இராச்சியத்தையும் பாதிக்கும்
      ஐரோப்பிய கோர்ட்டின் தீர்ப்புகளுக்கு இங்கிலாந்து இந்த இரண்டு வருட காலமும் கட்டுப்பட வேண்டும்.
    • இந்த இரண்டு வருட காலத்துக்குள் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள எந்த நாட்டுடனும் தனிப்பட்ட வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது
    • இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கையும், மற்றைய உடன்பாடுகளும் ஏற்படாத பட்சத்தில் ஐக்கிய  இராச்சியத்தின் ஒரு அங்கமான வட அயர்லாந்துப் பிரதேசம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இதற்கான காரணம் அயர்லாந்துக்கும், வட அயர்லாந்துக்கும் இடையே ஒரு நிரந்தர வர்த்தக எல்லை போடப்படுவதைத் தவிர்ப்பது என்று கூறப்படுகிறது.

    ஆனால் இந்த இரண்டு வருட காலத்தின் பின் அதற்குள் ஒரு வர்த்தக , மற்றும் ஒரியக்க உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் முக்கிய அம்சங்கள்,

    • ஐரோப்பிய ஒன்றிய குடி மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய  இராச்சியத்துக்கு உண்டு.
    • ஐரோப்பிய வழக்கு மன்றத் தீர்ப்புகளுக்கு ஐக்கிய  இராச்சியம் கட்டுப்படத் தேவையில்லை
    • ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைப் பிரகடனங்கள் ஐக்கிய  இராச்சியத்துக்கு எந்தவிதமான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.
    • ஐக்கிய  இராச்சியம் எந்த நாட்டுடனும் தனிப்பட்ட ரீதியில் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்

    இரண்டு வருடகால கடும் பேச்சுவார்த்தையின் பின்னால் எட்டப்பட்ட இந்த உடன்படிக்கையே எமக்கு ஏற்றது இதிலிருந்து வேறெந்த சலுகைகளையும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றார் எமது பிரதமர்.

    அதன் விளைவாக இந்த உடன்படிக்கையை சிபாரிசு செய்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிக்கு விட்டார் முடிவு இதுவரை சரித்திரத்தில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் எந்தப் பிரதமருமே சந்தித்திராத வகையில் பிரதமரின் இவ்வுடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று 230 பாரளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தோற்கடித்தார்கள். இதற்கான முக்கிய காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்பாடு காணப்படாத பட்சத்தில் வடஅயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் அதனை ஐக்கிய  இராச்சியத்தினின்றும் வேறுபடுத்தும் நடவடிக்கையாகிவிடும் என்பதே கூறப்பட்டது . இன்றைய இங்கிலாந்து அரசினை தக்கவைத்துக் கொண்டிருப்பது வட அயர்லாந்தைதைச் சேர்ந்த ” ஜனநாயக ஐக்கிய அமைப்பு” எனும் கட்சியைச் சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களேயாகும். இவர்கள் மேற்கூறிய காரணத்தினால் இவ்வுடன்படிக்கையை முற்று முழுதாக எதிர்த்தார்கள்.

    அது மட்டுமின்றி பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே ” ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழு ” எனும் ஒரு அமைப்பில் ஏறத்தாழ 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முற்று முழுதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானவர்கள். முழுக் கொள்கைவாதிகள். ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உறவுமில்லாமல் வெளியேற விரும்புபவர்கள். இவர்களுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான கொள்கையுடைய ஏனைய அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால் பிரதமரின் இவ்வுடன்படிக்கையை அவரது கட்சியிலேயே சுமார் 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள்.

    சரி எனது உடன்படிக்கையில் இந்த வட அயர்லாந்து சம்பந்தமாகத்தானே அதிக எதிர்ப்பு உள்ளது அதனை நான் சரி பண்ணப் பார்க்கிறேன் என்று மீண்டும் கிளம்பினார் பிரதமர் மே. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி வட அயர்லாந்து சம்பந்தமான சிக்கலுக்கு சட்டரீதியான உறுதி ஏதாவது கொடுக்க முடியுமா என்று அவர் வுடுத்த கோரிக்கைக்கு சில மேலதிக விளக்கங்களை மட்டுமே கொடுக்க முடியும் இவ்வுடன்படிக்கையில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது . மேலதிக சில விளக்கங்களுடன் மட்டும் மீண்டும் தனது உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டார் பிரதமர் மீண்டும் தோ;ல்வி இம்முறை 149 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது . இவ்வுடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் மே 29ம் தேதி சட்டபூர்வமாக இங்கிலாந்து வெளியேறுகையில் பெரும்பான்மை பாராளுமன்ற அங்கத்தினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத எதுவித உடன்படிக்கையற்ற ஒரு விலகலையே மேற்கொள்வது சாத்தியமாகவிருந்தது . ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த உறவுமே வேண்டாம் என்போருக்கு இது கற்கண்டாக இனித்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சும்மா விடுவார்களா? இங்கிலாந்து பாராளுமன்ற ஜனநாயகம் மீண்டும் தனது அதிகாரத்தைக் காட்டியது. “நோ டீல் ” எனும் வகையிலான வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பெரும்பான்மையான பாராளுமன்ற அங்கத்தினர்கள் வாக்களித்தனர். இது அரசாங்கத்தின் கைகளை மேலும் இறுகக் கட்டியது.

    இருதலைக் கொள்ளி எறும்பானார் இங்கிலாந்துப் பிரதமர்.

    இங்கிலாந்துப் பிரதமரின் பதவிக்கே உலை வைக்கும் நிலை ஏற்பட்டது. . இங்கிலாந்துப் பிரதமர் இன்னும் சில நாளைக்குத்தான் பிரதமராக இருப்பார் எனும் வகையிலான வதந்திகள் ஊடகங்களில் தலைவிரித்தாடின. ஆனால் யாராலும் அசைக்க முடியாத திடகாத்திரமான இரும்பு மனுஷியாகச் செயல்பட்டார் பிரதமர். என் நாட்டு மக்கள் எனக்குக் கொடுத்த ஆணையை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன் என்று கங்கணங் கட்டிக் கொண்டு இருக்கிறார் . கைகளை பின்னால் கட்டி விட்டு விட்டு அவரை ஐரோப்பிய ஒன்றியப் போராட்டக்களத்துக்கு அனுப்பியது இங்கிலாந்து பாராளுமன்ற ஜனநாயகம் . மார்ச் 29ம் தேதி 11 மணிக்கு நாம் எண்ணியவாறு விலக முடியாது மேலும் கால அவகாசம் வேண்டும் மே மாதம் 22ம் தேதி வரை எமது விலகல் திகதியைத் தள்ளை வைக்க முடியுமா ? என்று கேட்டார் . தாள்ளி வைத்து எதைத்தான் சாதித்து விடுவீர்கள் ? உங்கள் பாராளுமன்றம் தான் ஆளுக்கொரு பக்கமாக சிதறி நிற்கிறார்களே என்று கூறிய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நிபந்தனை போட்டது. உங்களது உடன்படிக்கை வெற்றி பெற்றால் நீங்கள் கேட்ட மே 22ம் தேதி வரையிலான கால அவகாசம் கிடைக்கும் அப்படி வெற்றி பெற வில்லையாயின் ஏப்பிரல் 12ம் தேதி மேற்கொண்டு உங்கள் திட்டம் என்ன என்று கூறவேண்டும் இல்லையானல் எதுவிதம உடன்படிக்கையுமில்லாமல் “நோ டீல்” எனும் வகையில் வெளியேற வேண்டும் என்பதுவே அது.

    நேற்றைய பாராளுமன்றத்தில் பிரதமரின் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் பெரும்பான்மையுள்ள மாற்று உடன்படிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொள்வார்கள் எனும் உரிமையை வாக்கெடுப்பின் மூலம் இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பெற்றுக் கொண்டனர் . ஜனநாயக அரசியலில் மீண்டும் ஒரு காட்சி அழகாக கண்முன்னே விரிந்திருக்கிறது. நாளை மாற்று உடன்படிக்கைகள் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தினர்கள் தனது திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தை பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொண்டாலும் அது அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது எனும் வாதத்தை முன்வைக்கிறார் பிரதமர் . ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் இத்தகைய வகையில் நடந்து கொள்ளலாமா? என எதிர்கட்சி அங்கத்தினர்கள் மட்டுமல்ல அவரது கட்சி அங்கத்தினர்களே கருத்துத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . அப்படி பிரதமர் அதனை ஏற்றுக் கொள்ளாத நிலை வந்தால் அதனை அவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பணிப்போம் என்கிறார்கள். அது மட்டுமல்ல மார்ச் மாதம் 29ம் தேதி 11 மணிக்கு விலக வேண்டும் என்பது சட்டமாக இருப்பதால் அதனை மாற்றுவதற்கான சட்ட மசோதவை பாரளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் கடப்பாடு இப்போது பிரதமரின் தலையில் விழுந்திருக்கிறது.

    சரி இன்றைய நிலையில் இங்கிலாந்துப் பிரதமரின் முன்னே இருப்பவை என்ன ?

    “நோ டீல்” எனும் விலகல் முறையை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது

    பிரதமர் மேயின் டீல் மறுபடியும் பாரளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் முன்னால் அது வெற்றியடையத் தேவையான மனமாற்றங்களை வட அயர்லாந்து கட்சியிடமும், அவரது கட்சி பாராளுமன்ற அங்கத்தினர்களிடமும் அவர் ஏற்படுத்த வேண்டும்.
    பாராளுமன்ற அங்கத்தினர்கள் கொண்டுவரும் மாற்றுத் திட்டத்தில் எதையாவது தன்னாலும், தனது அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தீர்மானிக்க வேண்டும்.

    மார்ச் 29ம் தேதி விலகுவது எனும் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

    அனைத்தும் தோல்வியடையும் பட்டசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் நீண்ட அவகாசம் கோர வேண்டும்

    அத்தகைய ஒரு நீண்ட கால அவகாசம் கேட்பதில் ஐக்கிய  இராச்சியத்துக்கு ஒரு சிக்கலுண்டு. மே மாதம் நடக்கவிருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக முடிவு செய்த ஐக்கிய  இராச்சியமும் பங்கு பற்ற வேண்டும் . இது தேவையா ?

    அனைத்துக்கும் மேலாக இத்தகைய ஒரு சிக்கலான சூழலில் தான் பதவியில் தொடர்வதா இல்லையா ? அன்றி மற்றுமொரு பொதுத் தேர்தலின் மூலம் மக்களிடம் கையளிப்பதா? இல்லை மீண்டும் மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா இல்லை இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதத்தை அப்படியே சாகடிக்கும் வகையில் ” மசோதா 50 “ ஜை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வாபஸ் வாங்கி விடுவதா ?

    தலை சுழல்கிறது , எனக்கே இப்படி என்றால் பிரதமருக்கு எப்படி இருக்கும் ?

    இந்த மடல் பிரசுரமாகும் வெள்ளிக்கிழமை மார்ச் 29ம் தேதி நிலைமை இன்னும் கொஞ்சம் தெளிவாக வாய்ப்பிருக்கிறது. அடுத்த மடலில் இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கூற முடியும் என்று நம்புகிறேன்.

    இன்றைய பாராளுமன்றத்தில் இந்த ப்றெக்ஸிட் விவகாரத்தில் ஒரு விடமுண்டு. அது என்ன என்கிறீர்களா? பாராளுமன்றத்தில் கட்சி அரசியல் உடைப்பில் போடப்பட்டு விட்டது இது கட்சி எல்லைகளைக் கடந்து பலரை நாட்டின் நலன் கருதி இணைய வைத்திருக்கிறது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றிதானே ! இப்படியான ஒரு கட்சி பேதம் மறந்து இணையும் நிலையை இன்று எத்தனை நாடுகளில் நாம் காண முடிகிறது ?

    எது எப்படியிருப்பினும் ஒரேயொரு விடயம் என் நெஞ்சை நிறைக்கிறது . பாராளுமன்ற அரசியலின் தாயகமான ஐக்கிய  இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் இந்த ஜனநாயக அதிர்வுகளைக் கண்டு அதனை சமகாலப் பதிவுகள் மூலம் பதிவிடும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது என் பாக்கியமே !

    பெரும்பான்மையான மக்கள் விலக வேண்டும் என்று வாக்களித்திருந்தும் அவர்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற அங்கத்தினர்கள் நாட்டின் எதிர்கால வளத்தினைக் கருத்திற் கொள்வதே தமக்கு மக்கள் இட்ட கட்டளை எனும் வகையில் நடப்பது தான் உண்மையான ஜனநாயகமா ? அன்றி இதுவே இங்கிலாந்தின் ஜனநாயக அரசியலுக்கு சாவுமணி அடித்து விடுமோ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

    1. இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.

    கல்வெட்டுப் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும்,  வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _

    சொற்பொருள்:  
    காரியம் ஆராய்கின்ற – கருத்தாலோசிக்கும், consultant; சிற்றிங்கண் – தணிக்கை செய்கிற. முதுகண் என்பதற்கு எதிர்ச்சொல் ஆகுமோ; கோயில் மயிலை –     ; தேவகன்மிகள் – இறைப்பணியாளர்; நிவந்தம் – கோயிற்பணி செலவு; ஏவல் – மேலிடத்துக் கட்டளை; எதிராமாண்டு – ; திருத்தம் – பத்தாம் நாள் நடைபெறும் தீர்த்தவாரி; கொற்றும் – உணவு; கூத்து – ஆடி நடிப்பது.

    கல்வெட்டு விளக்கம்:  

    இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் 4 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 968) திருவிடைமருதூர் மூலவருக்கு ஆரியக் கூத்தாடுவற்கான திருப்பணி பற்றி கருத்தாலோசனை செய்கின்ற தணிக்கை செய்கின்ற அதிகாரியான பராந்தக மூவேந்த வேளாரும், திரைமூர் நாட்டவரும், திருவிடைமருதூர் நகரத்தாரும், இறைபணியாளர்களும், நாகடசபையில் கூத்தாடும் திருவெள்ளறை சாக்கையான கித்திமறைக்காடன் என்பானும் இவனுக்கு பணிக்கூலி கொடுக்க மேலிடக் கட்டளையால் ஒன்று கூடி ஆலோசித்து விளங்குடியில் இவ்இறைவர்க்கு உள்ள தேவதான நிலத்தில் பறைச்சேறிபற்று உள்பட ஒரு வேலி நிலத்தை  கோயிற்பணி கூலியாக ஏற்றுக் கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல், இதாவது, ஐந்தாம் ஆட்சி ஆண்டு முதல் தைப்பூசத்தன்று ஒரு கூத்தாடவும், தீர்த்தவாரி கழிந்து வரும் பின் மூன்று நாளும், வைகாசித் திருவாதிரைக்கு பின் மூன்று நாளும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கங்கள் ஆடவேண்டும். கோயில் அலுவலகத்தில் 16 கலம் நெல், உணவு பெற்றுக் கொள்ளவும் இசைவு தரப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூத்து நடத்த 16 கல நெல்லும், விலை அடைப்படி நெல்லும், உணவும் இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வெகுமதிப் பரிசு திருவெள்ளறை சாக்கையருக்கு கித்தமறைக்காடனால் சந்திராதித்தர் வரை தொடர்வதாக என்று குறிக்கப்பட்டுள்ளது.

    திருவிடைமருதூர் கோவிலில் நாடகசபை ஒன்று இருந்ததையும் அதில் மூலவருக்காக ஆண்டுதோறும் கூத்து நடைபெற ஏற்பாடு ஆனது பற்றியும் அறியமுடிகின்றது. சாக்கை கூத்து ஆடியவர்கள் பறையர்கள் என்பதால் கித்தமறைக்காடனுக்கு பறைச்சேரியில் உள்ள பற்று ஒதுக்கப்படுகின்றது. அதைக் கொண்டு அவர் பறையர் என்பதையும் அறிய முடிகின்றது. புராணத்தில் பக்த நந்தனார் தீண்டாமைக்கு ஆட்பட்டு கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார். ஆனால் இங்கோ கித்திமறைக்காடன் என்ற பறையர் கோயிலில் அமைந்த நாடக சபையில் கூத்து நிகழ்த்துகிறார். இவ்விரண்டு செய்திக்கும் எத்தனை முறண். இது சோழர் காலத்தில் தீண்டாமை இல்லை என்பதற்கு சான்று. எவரும் தாழ்த்தி ஒடுக்கப்கவில்லை என்பதற்கு சான்று. இதனால் இரண்டாயிரம் ஆண்டு ஒடுக்குமறை என்பது பொய்யன்றோ?

    2. முதற் பராந்தகன் காலத்தில் உடுக்கை அடிப்போனுக்கு பணிக்கூலியாக நிலம்.

    கல்வெட்டுப் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 17 ஆவது திருவிடைமருதூருடையாருக்கு ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற குறும்பில் வாஸுதேவனார் ஆராய்ச்சியில் திரைமூர் ஸபையாரும் _ _ _ _ _ த _ _ _ ரல் நகரத்தாரும் திருக்கோயிலுடையார்களும் பதிபாத மூலத்தாரும் நாடக சாலையிலிருந்து திருவிடைமருதூருடையார்க்குத் திருஓலக்கத்து மூன்றுஸந்தியும் உடுக்கை வாசிப்பான் ஒருவனுக்கு விளங்குடி தேவர் நிலத்தில் நிவந்தமாகச் செய்த நிலம் முக்கால்.

    சொற்பொருள்:  
    ஆராய்ச்சி – கருத்தாலோசனை, consult; பதிபாத –  சிவன்கோயில் பூசகர்; திருஓலக்கம் – நாயனம், நாதஸ்வரம்.

    கல்வெட்டு விளக்கம்:  

    முதற் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 924) போது திருவிடைமருதூர் ஈசன் கோயிலில் கருத்தாலோசனை செய்கின்ற குறும்பில்லைச் சேர்ந்த வாசுதேவன் நடத்தின கருத்தாலோசணை கூட்டத்தில் பங்கெடுத்த திரைமூர் கருவறை பட்டர்களும், நகரத்தவரும், திருக்கோயில் பணியாளர்களும், சிவன்கோயில் பூசகரும் கூடி நாடக சபையில் இருந்து திருவிடைமருதூருடைய ஈசர்க்கு நாதாவரம் வாசிக்கின்ற போது மூன்று கால பூசனையின் போது உடுக்கை அடிப்பவனுக்கு விளங்குடியில் உள்ள தேவதான நிலத்தில் தானமாகக் கொடுத்த நிலம் முக்கால் பங்கு வேலி.

    கூத்து, நாடகம் முதலியவை கோவிலகளில் இராசராசனுக்கு முன்பே பல்லவர் காலத்திலேயே தொடங்கி விட்டன போலும்.  உடுக்கை அடிப்பவர் பறையர் என்பதால் விளங்குடியில் அவருக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது.

    பார்வை நூல்: திருவிடைமருதூர் கல்வெட்டுகள், வெளியீடு 1960, ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவாதானம்.

    இந்த மகாலிங்க சுவாமி தேவஸ்தானம், திருப்பதி தேவஸ்தானம் போல ஆங்காங்கே உள்ள திருக்கோயில் நிருவாகத்தார் தமது கோயில் கல்வெட்டுகளை அச்சில் ஏற்றி இருந்தால் தமக்கு இப்போது எவ்வளவோ கல்வெட்டுகள் ஆராயக்கிட்டி இருக்கும்.

    Share
  • தேடி அலைந்த பாதியில் கிடைத்த மீதி

    -கவிஞர் பூராம் 

    அதிகமாகி விட்டது வயது
    பாா்க்காதே அதையெல்லாம்!

    உடம்பு இப்படி நடுங்குகிறது
    மறைக்க முடியவில்லை
    அவளுக்குத் தெரிந்தால்
    எனது வீரமெலாம் போச்சு!

    பயந்து ஒளிந்து அவளது
    அழகு உதட்டைப் பாா்த்தேன்
    அனுமதித்தால் ஒரு முத்தம்
    எதற்கு கஞ்சத்தனம்
    அவளது விருப்பம் வரை!

    ஓடி எங்காவது ஒளிந்துகொள்
    அவளுக்குத் தெரிந்துவிட்டது
    மனதில் நீ எண்ணிய
    முத்தம்,
    கடந்து சென்றாள் என்னையும்
    எனது எண்ணத்தையும்!

    மூன்று ஆண்டுகள் அறிமுகம்
    எனக்கும் அவளுக்கும்
    பேசுவதற்குச் சொற்களைத்
    தேடிக்கொண்டிருக்கிறேன்

    ஒவ்வொரு முறையும்
    சென்றுகொண்டு இருக்கிறாள்
    ஏமாற்றத்துடன்!

    பேராசையின் பெருவிருப்போடு
    அவளோடு கலந்த பாா்வை
    உதடுகளில் ஈரம் இன்னும்
    மறையவில்லை
    நடுங்கும் உடலோடு நான்!

    போய்க்கொண்டு இருக்கிறாள்
    காத்திருக்காமல் எனது மனதையும்
    அழைத்துக்கொண்டு!

     

    Share
  • பிளாஸ்டிக் கொடுமை

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    பிளாஸ்டிக்கைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. எங்கள் நண்பர்களிடமெல்லாம் பிளாஸ்டிக்கை மறுபடி உபயோகிப்பது பற்றி நிறையக் கூறிவிட்டோம். ஆனாலும் இன்னும்சிலர் பிளாஸ்டிக் பைகளை, டப்பாக்களைத் தாறுமாறாக உபயோகிக்கிறார்கள். அவற்றை மறுசுழற்சி செய்வதில்லை; திரும்ப உபயோகிப்பதும் இல்லை. இவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இன்று பத்திரிக்கையில் வந்த செய்தி மனதில் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கரை வந்துசேர்ந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் 88 பவுண்டு பிளாஸ்டிக் (40 பவுண்டு பைகள், மீதி குப்பையில் இருந்த பல விதமான பிளாஸ்டிக் சாமான்கள்) இருந்ததாம். அதன் எடையே 1100 பவுண்டுதான். அதன் எடையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு பிளாஸ்டிக்கை சுமந்து கொண்டிருந்திருக்கிறது அந்த வாயில்லா ஜீவன். அதன் உடலைப் பிரேத பரிசோதனை செய்தவர் இதுவரை இத்தனை பிளாஸ்டிக் சாமான்கள் ஒரு பிராணியின் வயிற்றுக்குள் இருந்ததில்லை என்கிறார். திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் வெகு நாட்களாக அங்கு இருந்ததால் அப்படியே கட்டியாகி செங்கல்போல் ஆகியிருந்ததாம்.

    பிளாஸ்டிக்கை உட்கொள்ளுவதால் திமிங்கலங்களுக்கு வயிறு நிறைந்த ஒரு உணர்ச்சி ஏற்படுமாம். அதனால்தான் அவை பிளாஸ்டிக்கினால் மற்றப் பிராணிகளைவிட அதிகமாக ஈர்க்கப்படுகின்றனவாம். ஆனால் இப்படிப்பட்ட பிளாஸ்டிக்கினால் அந்தப் பிராணிக்கு அதற்குத் தேவையான எந்தவித உணவுச் சத்தும் கிடைப்பதில்லை. இப்படி வயிற்றில் பிளாஸ்டிக் சேருவதால் அவற்றின் எடை குறைகிறது; பலம் குறைகிறது; வேகமாக நீந்தும் சக்தியை இழக்கின்றன. அதனால் இவற்றை உண்ணும் அல்லது தீமை விளைவிக்கும் மற்றவகை ஜீவராசிகளிடமிருந்து தப்ப முடியவில்லை. ஒரு முறை அவற்றை உட்கொண்டுவிட்டால் அந்தத் திமிங்கலங்களால் அவற்றை ஜீரணிக்கவும் முடியாது; வெளியே தள்ளவும் முடியாது.

    2015-இல் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவின்படி வருடத்திற்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடியே முப்பது லட்சம் மெட்ரிக் டன் வரை பிளாஸ்டிக் குப்பைகள் கடலுக்குள் சேருகின்றனவாம். இப்படிக் கடலுக்குள் பிளாஸ்டி குப்பை சேருவதில் சீனா முதல் இடத்தையும் இந்தோனேஷியா இரண்டாவது இடத்தையும் பிப்பைன்ஸ் மூனறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனவாம். இந்தியா இந்தப் பட்டியலில் சேராததற்கு முக்கிய காரணம் இந்தியர்களால் நிறையச் சாமான்கள் வாங்க முடியவில்லை என்பதுதான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். மேலும் மேலே குறிப்பிட்ட நாடுகளில் சட்டங்களும் அவ்வளவு கடுமையாக இல்லாததும் அவை சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப் படாததும் காரணங்கள் என்று சொல்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் உருப்படியாக மறுசுழற்சி செய்யப்படுவதும் இல்லை.

    கடல்களிலோ ஆறுகளிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேரும்போது பல வகை இனப் பிராணிகள் அழிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அதிலும் திமிங்கலங்கள் நிறையப் பிளாஸ்டிக்கை தங்கள் வயிற்றுக்குள் வைத்துக்கொள்ள முடிவதால் அவைதான் நிறையப் பாதிக்கப்படுகின்றன. பிப்ரவரி மாதம் ஸ்பெயினில் இறந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றிலும் குடலிலும் 64 பவுண்டு பிளாஸ்டிக் குப்பை இருந்ததாம்;போன வருடம் ஜூன் மாதம் தாய்லாந்தில் ஒரு திமிங்கலம் 18 பவுண்டு குப்பையைச் சாப்பிட்டிருந்ததாம்; நவம்பரில் இந்தோனேஷியாவில் ஒரு திமிங்கலம் 13 பவுண்டு குப்பையை விழுங்கியிருந்ததாம்.

    இந்த அப்பாவிப் பிராணிகள் நமக்கு எத்தனையோ விதத்தில் – உணவாக, மருந்தாக – பயன்படுகின்றன. இவற்றுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?மேலும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு நமக்கு எவ்வளவு உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகள் இந்த அப்பாவிப் பிராணிகளுக்கும் இருக்கின்றன. இதை நாம் ஏன் உணறுவதில்லை? உணர்ந்து பிளாஸ்டிக் உபயோகத்தை ஏன் குறைப்பதில்லை? அல்லது அறவே விடுவதில்லை?

    இனி ஒவ்வொரு மனித இனத்தைச் சேர்ந்தவனும் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தும் முன் அது தேவையா என்று பல முறை யோசிக்க வேண்டும்; கண்டிப்பாகத் தேவையென்றால் மட்டுமே வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் அதை மறுபடி மறுபடி உபயோகிக்க வேண்டும். இதற்குமேல் உபயோகிக்க முடியாது என்னும் பட்சத்தில் அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நாம் மிகச் சிறிய அளவுதான் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க முயற்சி செய்கிறோம். இது ஒரு சிறிய ஆரம்பம்தான். ஆனால் அதையாவது ஆரம்பிப்போமே.

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை என்ற ஒன்று அமலானதே. அது என்னவாயிற்று. ஊழல் நிறைந்த தமிழ்நாட்டில் அது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

    Share
  • திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [2

    -இன்னம்பூரான்

    ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’

    மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. ஐயம் ஒன்றும் இருப்பது சாத்தியமில்லை. இன்றைய அரசியல்வாதிகளை, சமுதாய பிரமுகர்களை நடிப்பு சுதேசிகள் என்று கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பே இனம் கண்டு கொண்டு மனவருத்தத்தில் ஆழ்ந்தவர். அவருக்கு ஏப்ரல் 6, 1919 ஒரு சுபதினம் என்று தோன்றியதும், அவர் ஆதவனின் பொற்சுடர்களை வருணித்ததும் வியப்புக்குரியவை அல்ல. அவருடன் கோரஸ்ஸாக, அந்த திருபள்ளியெழுச்சி பாடலை பாடி மகிழ்ந்து, அன்றைய நிகழ்வுகளை காண்போமாக.

    திருப்பள்ளியெழுச்சி

    பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
    புன்மை யிருட்கணம் ோயின யாவும்
    எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
    பொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
    தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
    விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
    வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே

    மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ
    மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ
    குதலை மொழிக்கிரங்காதொரு தா
    மகளே!பெரும் பாரதர்க்கரசே
    விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
    வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய்
    இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய்
    ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே

    நண்பர்காள்! இது சென்னை.வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.க. அவர்களின் ‘தேசபக்தனின்’ சாது அச்சுக்கூடம்.அதுவே யான் கூறும் குருகுலம்). சென்னையின் பட்டாளம் பகுதியில் தான் தொழிளாளர்கள் பெரும்பாலும் வசித்தனர். திரு.வி.க. அவர்கள் ஒரு தொழிளார் சங்கத்தலைவர் என்பதை நம்மில் பலர் அறிந்ததில்லை. மற்றொரு நாள் அது பற்றி, யாராவது கேட்டால் எழுதலாம். அத்தருணம், மதுரைக்காரர்கள் கேட்டால், மதுரை சத்யாக்ரஹம் பற்றியும் எழுதலாம். பட்டாளத்திலிருந்து தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெரிய பட்டாளம் சாது அச்சுக்கூடத்தில் வந்து சேர்ந்தது. சத்யாக்ரஹ சிந்தனைகடலில் மூழ்கி அவர்கள் உணர்ச்சிப்பெருக்கால் தத்தளித்தாலும், தலைவரின் ஆணையை மறக்கவில்லை.அதனால் நிம்மதியில்லாத அமைதி. அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு  அந்த பேரலை ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்ந்துவிட்டது.ஒரு குளிர்; ஒரு வெயில்.

    தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.க. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார்.  அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இதை நூறாண்டுகளுக்கு (20 நாட்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்.) பின் எழுதும் போது, அர்ஜுனனின் உடல் நடுங்கியது போல, என் நாவு உலர்ந்து விட்டது. தேகமாடுகிறது. நடை தளர்ந்து விட்டது. இது என் அனுபவம்.

    இந்த கூட்டம், களிறு போல், கடற்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும்  அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். இது, வணிக பெருமக்கள் அரசாணையை மீறிய அருங்காட்சி. திலகர் திடம். புனித பூமி. (தற்காலம் ‘அழகு’ படுத்தப்பட்டு உரம் இழந்தது.) தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.க. அவர்கள். அவரை கைது செய்வார்கள் என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது.

    (தொடரும்) 

    Share
  • படக்கவிதைப் போட்டி – 206

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(250)

    -செண்பக ஜெகதீசன்

     

    பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
    தாள்வினை யின்மைப் பழி.

    -திருக்குறள் -618(ஆள்வினையுடைமை)

     

    புதுக் கவிதையில்…


    உடலுறுப்புகளில்
    ஒன்றிரண்டு குறைந்தாலும்,
    அதனால்
    யார்க்கும் பழியில்லை..
    அறியவேண்டியவற்றை
    அறிந்து
    முயற்சி செய்யாமலிருப்பதே
    பெரும்பழியாகும்…!

    குறும்பாவில்…

    பழியன்று உடலுறுப்புகளின் குறை,
    உற்றதறிந்து உடன்முயற்சி செய்யாமலிருத்தல்
    பெரும்பழி ஆகிவிடும்…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனித வாழ்வினிலே
    முற்றிலும் தேவையாம் மெய்யுறுப்புகள்
    எண்ணில் ஒருசில குறைந்தாலும்
    எவர்க்கு மில்லை பழியதுவே,
    திண்ணமாய் அறிய வேண்டியதைத்
    தெளிவா யறிந்தே செயலாற்றும்
    எண்ணமே யின்றி முயலாமல்
    இருப்போர்க் கதுதான் பெரும்பழியே…!

    லிமரைக்கூ.. 

    பழியில்லை உடலிலிருப்பினும் குறை,
    அறியவேண்டியதறிந்து செயல்பட முயலாதவர்க்கு
    அதுவேயாகிவிடும் பெரும்பழியாம் கறை…!

    கிராமிய பாணியில்… 

    மொயற்சிவேணும் மொயற்சிவேணும்
    வாழ்க்கயில சோம்பலில்லா
    நல்ல மொயற்சிவேணும்..
    ஒடம்புலவுள்ள உறுப்புகளுல
    ஒண்ணுரெண்டு கொறஞ்சாலும்
    ஒருத்தருக்கும் பழியில்ல..
    அறியவேண்டியத அறிஞ்சி
    அதுபடியே வேலசெய்ய
    மொயற்சியேதும் செய்யாதவனுக்கு
    அதுவே பெரும்பழியாவிடுமே..
    அதால,
    மொயற்சிவேணும் மொயற்சிவேணும்
    வாழ்க்கயில சோம்பலில்லா
    நல்ல மொயற்சிவேணும்…!

    Share
  • (Peer Reviewed) சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்

    முனைவர் க. இராஜா
    இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
    ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டிணகிரி (மா.)

    சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்

    சடங்கு நிகழ்த்தப்படும் இடம், காலம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணங்களை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன. சடங்குகள் செயல், நிகழ்த்துதல், நனவு, தன்னார்வம், கருவி, பகுத்தறிவு, கூட்டுத்தன்மை, சமூகம், சமூக உறவுகள், புனைவு, குறியீடு, வெளிப்பாடு, நடத்தை, அழகியல், புனிதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமைகின்றது.

    சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், திருவிழாச் சடங்குகள், மந்திரச் சடங்குகள், பிற சடங்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நிச்சயதார்த்தம், சிலம்பு கழித்தல், மணநாள் குறித்தல் போன்றன வாழ்க்கை வட்டச் சடங்குகளாகும். மணநாளில் நிகழும் சடங்குகள் மணச் சடங்குகள் எனப்படும்.

    ‘மணம்’ என்ற சொல் நிறைந்த பொருளுடையது. மணம் என்பதன் வேர்ச்சொல் மண், மண்ணின் நலன்களைப் பெருமளவில் நுகர்வதற்கு வாய்ப்பளிப்பது ஆகும். எனவேதான் நல்லறமாக இல்லறத்தை மண வாழ்க்கை என்றனர் (நாஞ்சில் ஆனந்தன், சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள், பக்.27-28).

    திருமணமும் அதற்குரிய சடங்குகளும் சமுதாயத்தில் எக்காலத்தில் தோன்றி வளம் பெற்றன என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இருப்பினும் திருமணச் சடங்கு என்பது பொய்யிலிருந்து, வழுவிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்றியது என்பதை,

                                  பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                                  ஐயர் யாத்தனர் கரணம் என்ப                     (தொல். கற்.4)

    என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரம் மூலம் அறிய முடிகிறது. தொல்காப்பியம், மணத்தைக் கரணம் என்று குறிப்பிடுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் திருமணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது என்பது இதனால் விளங்கும்.

    திருமணச் சடங்குகள் இனச் செழிப்பை வேண்டிச் செய்யப்படும் சடங்குக் கூறுகளை மிகுதியாகப் பெற்றுள்ளன. “இச்சடங்கின்போது, முளைப்பாலிகைகள், கும்பம் (விளைந்த தானியப் பயிர்களை நீர் நிரம்பிய இடத்தில் வைத்தல்) முதலியவற்றை மணமக்களுக்கு முன் வைக்கும் வழக்கம் கள்ளர், பள்ளர், பறையர் இனங்களுக்கிடையே காணப்படுகிறது முளைத்த நெல், கம்பு போன்ற தானிய விதைகளை மணமக்களின் மேல் தூவும் மரபும் நிலவுகிறது” (தே. ஞானசேகரன், மனித வாழ்வில் மந்திர சடங்குகள், ப.24).

    வேளாண்மையில் நேரடியாகப் பங்குபெறும் சமுதாயத்தினரிடம் இச்சடங்கு முறைகள் வேரூன்றிக் காணப்படுகின்றன. “கண்ணகி கோவலன் திருமணத்தில், பெண்கள் முளைப்பாலிகைகளைக் கையிலேந்தி, முளைத்த விதைத் தானியங்களை மக்களின் மேல் தூவி வாழ்த்துக் கூறுவதை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்” (தே. ஞானசேகரன், மனித வாழ்வில் மந்திர சடங்குகள், ப.25).

    முளைப்பாலிகைகளிலும், தானிய விதைகளிலும் பயிர்கள் எவ்வாறு செழித்து வளர்கிறதோ அதேபோன்று மணமகளும் விரைவில் குழந்தைப் பேற்றை அடைந்து, மானிடச் செழிப்பைப் பெருக்க வேண்டும் என்ற வளமைச் சடங்கின் சாயலாக இல்வாழ்வியல் சடங்கு அமைந்துள்ளது.

    மணமக்களுக்குக் கட்டப்படும் தாலியைத் திருமணத்தில் கலந்துகொள்ளும் அனைத்துப் பெரியோர்களும் குறிப்பாகப் பெண்களும் தொட்டு வணங்குவர். இச்சடங்கு முடிந்த பின்புதான் மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுவார். தாலியைத் தொட்டு வணங்குகின்ற அனைத்துப் பெண்களின் வளமை ஆற்றலும் மணமகளுக்குச் சென்று சேரும் என்ற நம்பிக்கைக் கூறுகள் இதில் காணப்படுகின்றன.

    நிச்சயதார்த்தம்

    சங்க காலத்தில் திருமணத்தை வதுவை, வரைவு, மணம், மன்றல் எனக் குறிப்பிட்டனர். திருமணத்தின் முதல் சடங்காகக் கொடுப்போர், கொள்வோர் ஆகியோரின் பரிமாற்றம், மன நிம்மதி ஆகியவை அமைகின்றன. இதனை,

                                 கற்பெனப் படுவது கரணமொடு புணர

                                 கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை

                                 கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல். கற்.1)

    என்னும் நூற்பா விளக்குகிறது. மணமகளின் வீட்டார், தம் மகளைத் திருமணம் செய்ய எண்ணியதன் பின்னர் மனம் உவந்து மணமகனுக்கு வதுவை செய்து தரவேண்டும் என்பதை,

                                  யானுங் காதலென் யாயும்நனி வெய்யள்

                                  எந்தையுங் கொடீஇயர் வேண்டும்                    (குறுந்.51)

    என்னும் குறுந்தொகை அடிகள் விளக்குகின்றன. இப்பாடலில் தலைவி ஒருத்தியை அவள் விரும்பிய தலைவனுக்குத் தந்தையும் தாயும் திருமணம் செய்து கொடுக்க முன்வருகின்றனர்.

    திருமணம் நடைபெறும் முன்னர் நிச்சயதார்த்தம் என்னும் முறைமையும் நடைபெற்றது. இந்நிச்சயதார்த்தம் என்பது கொடுப்போர், கொள்வோர் இருவரின் எண்ணங்களையும் உறுதி செய்துகொள்ளுதல் என்னும் மரபாகும். சங்க காலத் திருமணங்கள் பெரும்பான்மையாகக் கொடுப்போர், கொள்வோர் சம்மதத்துடன் நடைபெற்றவை என்பதை அறிய முடிகிறது.

    திருமணம் நிச்சயிக்கப் பெண் கேட்டு வரும் தலைவன் வீட்டாரைத் தலைவி வீட்டார் வரவேற்று உபசரிக்கும் பண்பு அக்காலத்தில் இருந்தே நிலைபெற்று வருகிறது. அதனை,

                                   தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர்

                                   நன்றுநன் றென்று மாக்களோ

                                   டின்றுபெரி தென்னு மாங்கன தவையே                   (மேலது, ப.146)

    என்னும் குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

    சிலம்பு கழித்தல்

    திருமணம் ஆகாத பெண்கள், காலில் சிலம்பு அணியும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. திருமணத்தின்பொழுது காலில் உள்ள அச்சிலம்பினைச் சடங்கு நிமித்தமாகக் கழற்றுவது மரபாக இருந்தது. இம்மரபு மணமகளின் வாழ்வில் பூப்புச் சடங்கினைப் போன்று ஒரு புனிதத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனைச் ‘சிலம்பு கழி நோன்பு’ என்று கூறுவர்.

    “திருமணத்திற்கு முன்பு இளமை தொட்டே தலைவி அணிந்திருந்த காற்சிலம்பைக் கழற்றுதலை மரபாகக் கொண்ட செய்தி தெரிகின்றது. இதனை ஒரு விழாவாகவே   பெற்றோர் கொண்டாடினர் எனலாம்” (அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.78).

    தலைவனும் தலைவியும் உடன்போக்கின்போது தலைவியின் காலில் அணிந்துள்ள சிலம்பைக் காணும் கண்டோர்கள், இவர்களின் நிலையை நினைத்து அச்சமுறுகின்றனர். இவள் காலில் சிலம்பணிந்துள்ளாள். அதனால் இன்னும் திருமணம் முடியவில்லை என்பதைத் தெரிந்து, எப்படித் தனியே வாழப் போகிறாள் என்று ஐயம் கொள்கின்றனர். இதனை,

                                   வில்லோன் காலன கழலே தொடியோள்

                                    மெல்லடி மேலவுஞ் சிலம்பே                                  (குறுந்.7)

    என்னும் அடிகளால் அறியமுடிகின்றது. இங்ஙனம் இளமை வாழ்வு கழிய ஆடவர் வீரக்கழல் அணிந்து போர்ப் பயிற்சி முதலியன பெறுதலும் பெண்கள் சிலம்பு அணிதலும் அதனை கழித்தலும் சடங்குகளாகப் பின்பற்றப்பட்டன.

    மணநாள்

    அக்காலத்தில் திருமணம் நல்ல நாளும் நேரமும் கணிக்கப்பட்டே நடைபெற்றது. வேங்கை மலர்கள் மலரும் இளவேனிற் காலமே மணத்திற்குரிய காலமாகக் கருதப்பட்டது. இதனை,

                                   வேங்கை தந்த வெற்பணி நன்னாள்                   (நற்.336)

    என்றும், ‘நன்னாள் வேங்கை, ‘கணிவாய் வேங்கை’ என்றும் குறிப்பிடுகின்றது நற்றிணை. சந்திரன் உரோகிணியைக் கூடிய நாள் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கருதப்பட்டது. இதனை அகநானூறு (அகம்.86, 136), சிலப்பதிகாரம் (சிலம்பு.50-53) வாயிலாக அறிய முடிகிறது.

    பரத்தையிற் பிரிந்த தலைமகன் விடுத்த தூதைக் கண்டு ஒரு தலைவி பேசும் பேச்சிலிருந்து மணக்காலத்தில் தீ வேட்டனர் என்பதை அறிய முடிகின்றது. தலைவனுடைய தூதுவனைக் கண்ட தலைவி, அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையில் சிறிதும் மாறாமல் நாம் இருக்கின்றோம். நாங்கள் மணந்த காலத்தில் நெய் பெய்த தீ முன்னர் எப்படி விருப்பத்துடன் இருந்தோமோ அதேபோன்று இப்பொழுதும் நான் இருக்கின்றேன் என்று பேசுகிறாள்.

                                     நெய்பெய் தீயி னெதிர்கொண்டு

                                     தான்மணந் தனையமென விடுகந் தூதே                  (குறுந்.106)

    மணக்காலத்து நிலைமையில் தான் உள்ளமையைக் கூறி, நெய்பெய் தீயின் எதிர்கொள்வோம் என்பதால் இது மனைவியின் பகுதியாக அமைந்த எரிவேட்டல் எனப்படுகிறது.

                                        தெறல்அருங் கடவுள் முன்னர் தேற்றி

                                        மெல் இறைமுன்கை பற்றிய சொல் இறந்து

                                        ஆர்வ நெஞ்சம் தலைத்தலைச் சிறப்ப நின்

                                         மார்பு தருகல்லாய்                                                              (அகம்.396)

    என வரும் அகநானூற்றுத் தலைவியின் பேச்சை நோக்கும்போது, தீக்கடவுள் முன்னர் நின்று, என்றும் பிரியாமல் இருப்பதாக உறுதி உரைத்து ஏற்றுக்கொள்வதாகத் தலைவியின் கையைப் பற்றுதல் அக்கால வழக்கம் என்பது தெரியவருகிறது.

    மணக்கும் பொழுது தீயில் நெய் பெய்து யாகம் வளர்ப்பது, பண்டைக் காலமுறை. தீயில் நெய் பெய்யப்பட்டபோது அத்தீயானது மேல்நோக்கி எழுந்து நெய்யை ஏற்றுக்கொண்டு தான் அவியாது நிற்றலைப்போலத் தலைவன் தலைவியை ஏற்றுக்கொண்டு செம்மையடைய வேண்டுதல் என்பது வழக்கு.

    நெருப்பு என்பது தூய்மையானது. மங்களம் சார்ந்தது. எண்ணெய் நிலையிலிருந்து தீ என்னும் நிலைக்கு வேள்வி மாற்றம் அடைவதைப் போல ஆண், பெண் இருவரையும் அந்நிலையிலிருந்து கணவன் மனைவி என்னும் நிலைக்கு மாற்றம் செய்கிறது.

    சங்க காலத்தில் மணமுரசு ஒலித்தலைப் பற்றி,

                        படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
                        வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று           (அகம்.7-8)

    என்று அகநானூறு உறுதி செய்கிறது. சங்க காலத்தைவிட அதனை அடுத்த சங்கம் மருவிய சிலப்பதிகாரக் காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் முழங்கப்பட்டன.

    தமிழகத்தில் திருமணம் எனத் தாம் எழுதிய கட்டுரையில் எஸ். வையாபுரிப்பிள்ளை, “பாணிக் கிரகணம், ஓமம், தீ வலம் வருதல், சப்தபதி முதலியன சங்க காலத்தில் நிகழ்ந்தன அல்ல. புரோகிதர்கள் மந்திரம் ஓதுதலும் மணவினையில் இல்லை என்றே கூறலாம். தாலி கட்டும் சடங்கும் காணப்படவில்லை” (மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும், ப.264) என்று எழுதியுள்ளார். எனினும் குறுந்தொகைப் பாடலில் (குறுந்.106) யாகம் வளர்த்துத் தீயின் முன்னர் திருமணம் நடைபெற்றது என்ற செய்தியால் தீ வலம் வருதல் அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதைத் தெரியப்படுத்துகிறது. அவர் சுட்டிய சடங்குகளில் மற்ற சடங்குகள் ஏதும் சங்க காலத்தில் இல்லை என்பது உறுதியாகிறது.

    திருமணம் நிகழ்வதற்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நிகழ்த்தப்பெறுதல் வழக்கத்தில் இருந்துள்ளது. ஆண், பெண் இருவரும் சிலம்பு அணியும் வழக்கம் இருந்தாலும் மணநாள் அன்று பெண்ணுக்குச் சிலம்பு கழித்தலைச் சங்க காலத்தில் காண முடிகின்றது. அதனைச் சிலம்பு கழி நோன்பு என்று வழங்குகிறோம். அவை தவிர ஒரு சிறந்த நாளை மணநாளாகக் குறித்து, அன்று சில சடங்குகள் நிகழ்த்தி மணம் முடித்துத் தரும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தமையை அறிய முடிகின்றது.

    பயன்பட்ட நூல்கள்

    1. ஆனந்தன். நாஞ்சில். 1999. சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள், திருச்சிராப்பள்ளி: கண்மணி பதிப்பகம்.
    2. இளம்பூரணர் (உ.ஆ). 2011. தொல்காப்பியம் பொருளதிகாரம், சென்னை: சாரதா பதிப்பகம்.
    3. சண்முகம்பிள்ளை. மு. 2003. சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
    4. சாமிநாதையர். உ.வே. 2000. குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை: உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
    5. ஞானசேகரன். தே. 1990. நாட்டார் சமயம், சென்னை: கிரியா பப்ளிகேஷன்ஸ்.
    6. தட்சிணாமூர்த்தி. ஆ. 2005. தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: யாழ் வெளியீடு.
    7. நாகராசன். வி. 2004. குறுந்தொகை (தொகுதி 1,2), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
    8. பாலசுப்பிரமணியன். கு.வெ. (உ.ஆ). 2004. நற்றிணை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
    9. விசுவநாதன். அ (உ.ஆ). 2007. கலித்தொகை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
    10. வேங்கடசாமி நாட்டார். ந.மு. 1884. சிலப்பதிகாரம், சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (பி) லிமிடெட்.
    11. ஜெயபால். இரா (உ.ஆ). 2004. அகநானூறு (தொகுதி 1,2), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

    =========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தது, சடங்கு. இச்சடங்கு, மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளில் நிகழ்த்தப்படுகின்றது. இவற்றைப் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. ‘சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்’ என்னும் இக்கட்டுரை, தமிழரின் திருமணம் சார்ந்து மேற்கொள்ளப்படும் சடங்குகளை முறையாக அறிமுகம் செய்கின்றது. தொல்காப்பியத்தின் நூற்பாவையும், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு முதலிய சங்கச் செய்யுட்களையும் ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை நகர்கின்றது. சங்க காலத்தில் திருமணத்திற்கு முன் நிகழும் நிச்சயதார்த்தம், வதுவைச் சடங்கு, சிலம்பு கழித்தல், மணநாள் பார்த்தல் உள்ளிட்ட சடங்குகளைப் பண்டைய தமிழர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதைச் சங்கப் பாடல்களின் சான்றுகளோடு கட்டுரையாளர் விளக்கிச் செல்வது பாராட்டத்தக்கது.

    =========================================================

    Share