கோலன் ஹைட்ஸ்: இஸ்ரேலின் நயவஞ்சகம்

0

-நாகேஸ்வரி அண்ணாமலை

இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவானதே பல பாவக் காரியங்களின் விளைவால்தான். யூதர்கள் கிறிஸ்துவுக்கு முன்னால் (கி.மு.) பல நூற்றாண்டுகள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்துவந்த போதிலும் பல நாடுகளைச் சேர்ந்த அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்துவந்தனர். ஜெருசலேமிலிருந்த அவர்களுடைய முதல் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டது. அதன் பிறகு அதே இடத்திலேயே இரண்டாவது கோவிலையும் கட்டிக்கொண்டனர்.மேலும் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்தபோது அந்தக் கோவிலும் இடிக்கப்பட்டது. ரோமானியர்களை எதிர்த்துப் போர்புரிந்த யூதர்கள் அவர்களால் நசுக்கப்பட்டதால் ஜெருசலேமை- அதாவது பாலஸ்தீனத்தை- விட்டே புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர். கி.பி. 132-இல் பாலஸ்தீனத்தை விட்டு ஐரோப்பாவில் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த யூதர்கள் எல்லா நாடுகளிலும் அங்குள்ள மக்களோடு கலவாமல் தனித்தே வாழ்ந்துவந்தனர். தாங்கள் பெரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்ததே அவர்கள் மற்ற இனத்தவர்களோடு ஒட்டாமல் இருந்ததற்கும் மற்ற இனத்தவர்கள் இவர்களை ஒதுக்கிவைத்ததற்கும் முக்கிய காரணம். எல்லா நாடுகளிலும் இவர்கள் மருத்துவம் போன்ற பல தொழில்கள் செய்துவந்தாலும் நிறைய வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலையும் செய்துவந்தனர். இந்தத் தொழிலும் இவர்கள்மேல் மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படவும் அவர்களைப் பிரித்துவைக்கவும் காரணமாயிற்று.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹெர்ஸல் என்னும் வியன்னாவைச் சேர்ந்த யூதர் ஒருவர் பிரான்சில் பத்திரிக்கை நிருபராக வேலைசெய்தபோது அங்கு ஒரு யூதருக்கு நேர்ந்த அநியாயத்தைக் கண்டு மிகவும் மனம் வருந்தி யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று விரும்பி அதற்கான திட்டங்களில் ஈடுபட்டார். உலகெங்கிலுமுள்ள யூதர்களை ஒன்றுதிரட்டி அதற்கான வழிகளைக் கண்டறிய முற்பட்டார். அப்போது முதல் உலக யுத்தம் முடிந்து ஆட்டோமான் பேரரசு கவிழ்ந்து பல துண்டுகளாகப் பிரிந்திருந்தது. யுத்தத்தில் வென்ற நாடுகள் துண்டாகிப் போன அந்த நாடுகளைத் தங்கள் வசம் ஆக்கிக்கொண்டன. ஆட்டோமான் அரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்தது. சுமார் 1800 வருஷங்களுக்கு முன் பாலஸ்தீனத்திலிருந்து ரோமானியர்களால் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனத்தைத் தங்கள் புண்ணிய பூமி என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு அங்கு குடியேற ஆரம்பித்தனர்.

முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவிய,அப்போது பிரிட்டனில் வாழ்ந்துவந்த வெயிஸ்மேன் என்னும் யூதர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியில் யூதர்களுக்கு ஒரு நாடு அமைக்க உதவுவதாக வாக்களித்தது. இதற்கு முன்பே பாலஸ்தீனத்திற்குள் ஐரோப்பாவின் பல இடங்களிலுமிருந்து பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வர ஆரம்பித்திருந்தனர். இவர்கள் தங்களோடு கொண்டுவந்திருந்த பணத்தினாலும் புதிய தொழில் நுணுக்கங்களாலும் பாலஸ்தீனர்களிடமிருந்து நிலங்களை வாங்கிப் போட்டு பாலஸ்தீனத்தை வளப்படுத்தியதோடு தங்களையும் அங்கு நிலைப்படுத்திக்கொண்டனர். யூதர்களின் வரவால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் வந்ததைக் கண்ட பாலஸ்தீனர்கள் அவர்களோடு மோதத் துவங்கினர். தான்ங்கள் அமைத்துக்கொண்ட ஒரு குடிப்படையால் யூதர்கள் பாலஸ்தீனர்களை எளிதாக வென்றனர். பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் கொடுக்க முடிவுசெய்துபீல் என்னும் ஒரு அதிகாரியை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியது. பாலஸ்தீனத்தைப் பிரிப்பது அவ்வளவு எளிதல்ல என்று பீல் அறிக்கை கொடுத்தார். பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்தன.

இனி தன்னால் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க முடியாது என்று எண்ணிய பிரிட்டன் பாலஸ்தீனத்தைக் கண்காணிக்கும்பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை விட்டுச் சென்றுவிட்டது. ஐ.நா. பாலஸ்தீனத்தின் 55 சதவிகிதத்தை யூதர்களுக்கும் 45 சதவிகிதத்தை பாலஸ்தீனர்களுக்கும் பிரித்துக் கொடுக்க முடிவுசெய்தது. தாங்கள் நினைத்ததற்கு மேலேயே தங்களுக்குக் கிடைத்திருப்பதால் யூதர்கள் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுச்சென்ற அன்றே இஸ்ரேல் என்ற தங்கள் நாட்டைப் பிரகடனப்படுத்திக்கொண்டனர். தங்கள் நாட்டை யூதர்களோடு பங்கு போட்டுக்கொள்வதா என்ற குமுறலோடு பாலஸ்தீனர்கள் ஐ.நா.வின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் முழுப் பாலஸ்தீனத்தையும் பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள். அன்று அவர்கள் செய்த தவறு இன்றுவரை பாலஸ்தீனர்களுக்கென்று ஒரு நாடு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இஸ்ரேல் நாடு உருவானதை எதிர்த்து சிரியா, எகிப்து,லெபனான் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது போர்தொடுத்தன. பாலஸ்தீனர்களுக்கு முழுப் பாலஸ்தீனத்தையும் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் என்பதைவிட ‘எரிகிற நெருப்பில் கிடைத்தது லாபம்’ என்ற எண்ணத்திலும் அவர்கள் இஸ்ரேலோடு போர்புரியத் தயாராகினர். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியிருந்த யூதர்களின் பணபலத்தாலும் அமெரிக்காவின் உதவியாலும் பாலஸ்தீனத்தில் குடியேறியிருந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு குடிப்படையை அமைத்துக்கொண்டிருந்தனர். அதுவே இஸ்ரேலின் ராணுவமும் ஆனது. பலம் பொருந்திய ராணுவத்தின் மூலம் அரபு நாடுகளை எளிதாகப் போரில் வென்றதோடு ஐ.நா. பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்கென்று கொடுத்த சில நிலங்களையும் பிடித்துக்கொண்டனர்.

அதன் பிறகு இஸ்ரேலோடு அரபு நாடுகள் ஆறு முறை போர் புரிந்தன. எல்லாப் போர்களிலும் இஸ்ரேல் வென்று பாலஸ்தீனத்திலும் சிரியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் அந்த நாடுகளுக்குச் சொந்தமான இடங்கள் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது. அப்படி 1967-ஆம் வருடப் போரில் சிரியாவிடமிருந்து பிடித்துக்கொண்டதுதான் கோலன் ஹைட்ஸ் என்னும் இடம். இந்த இடத்தை 1981-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து பிடித்துக்கொண்ட கிழக்கு ஜெருசலேமிலும் வெஸ்ட் பேங்கிலும் தன்னுடைய குடியிருப்புகளைக் கட்டிப் புதிதாக இஸ்ரேலுக்கு வந்த யூதர்களைக் குடியமர்த்தியது. இதற்கிடையே 1995-இல் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனால் வெஸ்ட் பேங்கிலும் காஸாவிலும் பாலாஸ்தீனர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குவதென்று முடிவாகியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவாவது கிடைத்ததே என்று பாலஸ்தீனர்களும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பிறகு இஸ்ரேல் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்தைப் பின்பற்றாததோடு வெஸ்ட் பேங்கில் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டே போனார். ஒபாமா அமெரிக்க ஜனத்திபதியாக இருந்தபோதாவது நேத்தன்யாஹு பாலஸ்தீனர்களுக்குச் செய்துவந்த அநியாயங்களைக் கொஞ்சமாவது பயந்துகொண்டு செய்துவந்தார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆன பிறகு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், அமெரிக்கா தன் பக்கம் இருக்கிறது என்ற பலத்தில் தடித்தனமாகக் காரியங்கள் செய்துவருகிறார். அடுத்த மாதம் நடக்கப் போகும் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க எண்ணி சிரியாவில் தான் ஆக்கிரமித்துக்கொண்ட கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலோடு இணைத்துக்கொள்ள முயன்று அதற்கு ட்ரம்ப்பின் ஆதரவையும் கேட்டார். ட்ரம்ப்பும் இஸ்ரேல் சிரியாவின் கோலன் ஹைட்ஸைத் தன்னோடு இணைத்துக்கொண்டதை அமெரிக்கா அங்கீகரிப்பதாகக் கூறும்ஜனாதிபதி ஆணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார். உடனேயே அதற்கு நன்றி தெரிவித்து நேத்தன்யாஹு ட்விட்டும் அனுப்பிவிட்டார். தான் செய்திருக்கும் இந்த அநியாயத்திற்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதால் வரப் போகும் தேர்தலில் தான் ஜெயித்துவிடுவோம் என்று நேத்தன்யாஹு நம்புகிறார்.

இந்த இரண்டு கயவர்களும் (crooks)சேர்ந்து செய்திருக்கும் இந்தக் காரியத்தால் சிரியா தன்னுடைய நிலத்தில் ஒரு பகுதியை இழந்திருக்கிறது. அதற்குமேல் இனி என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றனவோ. இதையடுத்து வெஸ்ட் பேங்கிலும் நிறைய இடங்களை (ஏற்கனவே அங்கு யூதக்குடியிருப்புகள் நிறைய இருக்கின்றன) சேர்த்துக்கொள்ளப் போவதாக நேத்தன்யாஹு கோடி காட்டியிருக்கிறார். அங்கு வாழும் பாலஸ்தீனர்கள் மூன்றாம்தரக் குடிமக்களாக இஸ்ரேலால் நடத்தப்படுவார்கள்.

உலகில் ஒரு இனம் இன்னொரு இனத்திற்குச் செய்த பெரிய அநீதிகளில் இதுவும் ஒன்று.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *