Blog

  • (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்

    (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்

    மு. இராமகிருஷ்ணன்
    உதவிப் பேராசிரியர்
    பழங்குடியினர் வழக்காற்றியல் துறை
    ஜார்க்கண்ட் நடுவண் பல்கலைக்கழகம்
    பிராம்பே, இராஞ்சி – 835205.

    இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்

    முன்னுரை

    தொல்தமிழர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்வில் ஈகை என்னும் கருத்தாக்கம் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றிருந்ததை இலக்கியச் சான்றுகள்வழி அறிய முடிகின்றது. தொல்காப்பியம் முதல் ஔவையாரின் தனித் திரட்டுவரை ஈகை குறித்த வரையறைகளை முன்வைப்பதில் தொல் தமிழ்ச்சமூகம் முற்போக்குடன் விளங்கியுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஈகை தொடர்பான கருத்தாக்கத்தை வரையறை செய்வதிலும் அதற்கான சான்றுகளைக் கட்டமைப்பதிலும் தொல் தமிழர்களுக்குப் பெரும் பங்காற்றியவை அன்று நிலவிவந்த சமூகப் பொருளாதாரக் காரணிகளே என்ற போதிலும் அன்றே வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்திருந்த தமிழ் மொழியின் பங்களிப்பை மறுக்க முடியாது.

    ஈகை தொடர்பான இலக்கியச் சான்றுகளை நோக்கும் பொழுது தமிழ் மொழியின் அன்றைய நிலையை அறிய முடிகிறது. மனித இனத்தின் இருத்தலுக்கே ஆணிவேராக விளங்கும் இக்கருத்தாக்கம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒன்றாக இன்று விளங்கி வருகின்ற போதிலும் இக்கருத்தாக்கம் குறித்த தெளிவான பார்வையும் புரிதலும் தொல்தமிழர்களிடையே இருந்துள்ளதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனிதர்களின் சமூக வாழ்விற்கு அடித்தளமாக விளங்கி வரும் ‘மனிதம்’ என்னும் உணர்விற்கு அவர்களின் பிறர் நலம் பேணும் போக்கு மட்டுமே காரணம் என்றால் அது ஈகை என்னும் பண்பினால் மட்டுமே சாத்தியமாகிறது என்பதைத் தொல்தமிழர்கள் உலகிற்குக் காட்டியுள்ளனர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

    தொல்காப்பியத்தில் ஈகை

    ‘ஈ,’ ’தா,’ ’கொடு’ ஆகிய சொற்களின் பயன்படுத்தப்படும் முறை குறித்த வரையறையைத் தொல்காப்பியம் பின்வருமாறு வழங்குகிறது. ‘ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்/ இரவின் கிளவி ஆகு இடன் உடைய/ அவற்றுள்/ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே/ தா என் கிளவி ஒப்போன் கூற்றே/ கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே/ கொடு என் கிளவி படர்க்கை ஆயினும்/ தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின்/ தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்’ (தொல்.எச்சவியல் 9:48-56). இம்மூன்று சொற்களிடையான வேறுபாடு சமூகப் பொருளாதாரப் படிநிலையைக் காட்டுவதாக இருப்பது போன்றே, ‘என்மனார் புலவர்’ என்பது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இது மரபாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. அதாவது, ’ஈ’ என்பதைத் தன் நிலையிலிருந்து திரிந்து இழிநிலை அடைந்தபின் ஒருவன் தனக்குத் தேவையானதைக் கேட்கும் தகுதியை இழந்த நிலையிலிருப்பதை உணர்ந்தும் உணர்த்தியும் கேட்டுப் பெறுவது என்று புரிந்துகொள்ள முடியும். மாறாக, ‘தா’ என்று கேட்டுப்பெறும் ஒப்புநிலையைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது. சமூகத்தில் சமநிலையுடையவர்கள் பயன்படுத்தும் சொல்லாகத் ‘தா’ விளங்கியுள்ளது. இவ்வாறே, ‘கொடு’ என்று அதிகாரத்தோடு கேட்கும் நிலையைச் சமூக நிலையில் ‘உயர்ந்தோர்’ பயன்படுத்தும் சொல்லாக விளங்கியிருப்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

    திருக்குறள் முன்வைக்கும் ஈகை

    உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் அறத்துப்பால் பிரிவின் கீழ் ஈகை என்னும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரையறையின் பண்புகள் பின்வருமாறு:

    1.வறியவர்களுக்குக் கொடுப்பது மட்டுமே ஈகை; பிறருக்குக் கொடுப்பெதெல்லாம் பயன் எதிர்நோக்கிக் கொடுப்பதாகும் (குறள். 221);

    2. பிறருக்குப் பொருள் கொடுத்தல் நல்ல நெறியாகும்; பெறுவது தீமையாகும். அதாவது மேலுலகமே கிடைக்காவிடினும் இரந்துவரும் பிறருக்கு ஈதலே நன்று ஆகும் (குறள்.222);

    3.‘தான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் (குறள்.223);

    4.பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தை காணும்வரை இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது (குறள்.224);

    5.வலிமை உடைய ஒருவன் தன்னுடைய பசியைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம்; பிறர் பசியை உணவு கொடுத்து மாற்றுகிறவர்களின் தன்மைக்குப் பிற்பட்டதாகவே அவ்வலிமை கருதப்படுகிறது (குறள்.225);

    6.  பொருள் பெற்ற ஒருவன் தான் சேர்த்த பொருளைப் பாதுகாக்க வேண்டினால், வறியவரின் கடும் பசியைத் தீர்க்க வேண்டும், அதுவே சேர்த்த பொருளைப் பாதுகாக்கும் இடமாகும் (குறள்.226);

    7. தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவரைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை (குறள்.227);

    8. பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது (குறள்.228);

    9.ஒருவன் தான் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் கல்நெஞ்சம் (வன்கண்மை) உடையவர், பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாதவரே ஆவார் (குறள். 229);

    10. வறியவர்க்கு ஒருபொருள் கொடுக்க முடியாத நிலை வரும்போது இறந்து போதலே இனியது (குறள்.230).

    அறத்துப்பாலில் புகழ் என்னும் அதிகாரத்தின்கீழ் வரும் இரண்டு குறள்களும் ஈகையின் சிறப்புபைக் காட்டுகின்றன:

    1. வறியவர்க்குக் கொடுப்பதால் கிடைக்கும் புகழே பிறந்ததன் ஊதியமான புகழ் ஆகும் அதாவது வறியவர்க்கு ஈதலால் உண்டாகும் புகழன்றி உயிர்க்கு ஊதியமான புகழ் வேறொன்றும் இல்லை (குறள். 231).
    2. புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும் (குறள். 232).

    இரவு (106) அதிகாரத்தில் இரத்தலின் தன்மை குறித்துத் திருக்குறள் முன்வைக்கும் வரையறையின் பண்புகள் பின்வருமாறு:

    1. இரந்துகேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும். அவர் இல்லையென்று ஒளிப்பாரானாலும் அது அவர்க்குப் பழியாகும் கேட்பவருக்குப் பழியன்று (குறள். 1051).
    2. இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத்தக்கதாகும் (குறள்.1052).
    3. ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும் (குறள்.1053).
    4. உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பது போன்ற சிறப்புடையதாகும் (குறள்.1054).
    5. ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்’. (குறள்.1055).
    6. உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவர்கள் கொடுக்கவேண்டியதில்லை அவர்களைச் சென்று இரப்பவர்கள் கேட்கவேண்டியதில்லை. மாறாக அவர்களைக் கண்டால் போதும், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும் (குறள்.1056).
    7. இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள் உவகை அடையும். வறியவர்கள் இல்லையானால் கொடைவள்ளல்களுக்கு வேலையேது? (குறள்.1057).
    8. இரப்பவர் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும் (குறள்.1058).
    9. பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்? கொடுப்பவரின் புகழ் என்று கேட்பதன்மூலம் இரப்பவர் மூலமாகத்தான் கொடுப்பவரின் புகழ் ஓங்குகிறது (குறள்.1059).
    10. இரப்பவனின் தன்மைகளுள் முதன்மையானது சினங்கொள்ளமை ஆகும். எனும் குறள் தெளிவுப்படுத்துகிறது. இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்கவேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும் (குறள்.1060).

    திருக்குறள் வரும் இரவச்சம் (107) அதிகாரத்தில் இடம்பெறும் குறள்கள், இரத்தலின் கடுமையைப் பற்றியும் இரப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும் வரும் வரையறையின் பண்புகளைப் பின்வருமாறு முன்வைக்கின்றன:

    1. உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்தில் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லது ஆகும் (குறள்.1061).
    2. இரந்துண்டு வாழுமாறு வறியவர்கள் படைக்கப்பட்டிருந்தால் அவர்களின் கொடுமையை அந்தப் படைத்தவன் அனுபவித்துக் கெடுவானாக (குறள்.1062).
    3. வறுமைத் துன்பத்தை இரப்பதன் மூலமாகத் தீர்ப்போம் என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை (குறள்.1063).
    4. வாழ வழி இல்லாதபோதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பெருமையுடையதாகும் (குறள்.1064).
    5. தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை (குறள்.1065).
    6. பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை (குறள்.1066).
    7. இரந்து கேட்பதானால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன் (குறள்.1067).
    8. இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒருத்து வைக்கும் (ஒளித்துவைக்கும்) தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்துவிடும் (குறள்.1068).
    9. இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும்; உள்ளதை ஒளிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும் (குறள்.1069).
    10. இரப்பவர் ‘இல்லை’ என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ? (குறள்.1070).

    நாலடியார் முன்வைக்கும் ஈகை

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் ஈகை குறித்த தெளிவான வரையறையை முன்வைத்துள்ளது. அவ்வரையறையின் பண்புகளாக வைக்கப்படும் கருத்துகள் பின்வருமாறு:

    1. ஒருவரிடம் கொடுப்பதற்கென்று போதுமான அளவு பொருள் இல்லாதபோதும் தேவையான அளவு இருப்பதுபோல் உள்ளம் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணம் உள்ளவர்களுக்கு மறுமை உலகின் கதவுகள் திறந்தே இருக்கும் (நாலடி.91).
    2. இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் எதிரிலேயே உள்ளன; வலிமையை அழிக்கும் நோய்களும் உள்ளன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாமலும் இருக்கும் பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிருக்காமலும் சிறிதும் ஒளிக்காமலும் பகுத்து உண்ணுங்கள் (நாலடி. 92).
    3. பிறருக்குக் கொடுப்பதாலும் தான் அனுபவிப்பதாலும் பொருள் சேரும் காலத்தில் சேர்ந்தே ஆகும். ஆனால், நல்வினை இல்லாதபோது எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அப்பொருள் நில்லாது போய்விடும். இதை அறியாத மக்கள் வறுமையால் வாடி வருந்தி, உதவி நாடி வந்தவரின் துயரைப் போக்க மாட்டார்கள் (நாலடி.93).
    4. ஒரு சிறிய அரிசியின் அளவாவது – நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர் (நாலடி. 94).
    5. மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறரிடம் சென்று இரவாமை நன்று; இது கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது (நாலடி. 95).
    6. பலரும் தன்னை விரும்புமாறு வள்ளன்மையுடன் வாழ்பவர்களை ஊரின் நடுவினிலே இருக்கும் பெண் பனை மரத்திற்கு ஒப்பாவார்கள். ஆனால், தன்னிடம் செல்வம் பெருகியிருந்தும் பிறருக்குக் கொடாதவரை சுடுகாட்டில் வளர்ந்துள்ள ஆண் பனைமரத்திற்கு ஒப்பாவார்கள் (நாலடி.96).
    7. பருவ மழை தவறியபோதும், உலகில் உள்ள உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளைப் பிறருக்குச் செய்யாவிட்டால் உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்? இருப்பவர்கள் இல்லாத காலத்தில் வறியவர்களுக்குக் கொடுப்பதால் சமூக வாழ்வு சீர்படும் (நாலடி.97).
    8. திருப்பித் தர இயலாத வறியவருக்கு ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். திருப்பிக் கொடுக்கும் தகுதியுடையோருக்கு ஒன்றை ஈதல் என்பது கடன் கொடுப்பதே ஆகும் (நாலடி.98).
    9. தருவது மிகச் சிறியது என்று கருதாது, இல்லை என்றும் கூறாது, எப்போதும் பயனுடைய அறத்தையே அனைவரிடத்தும் செய்யவேண்டும்; வாழ்நாள் முழுவதும் ஈதலில் ஈடுபட வேண்டும் (நாலடி.99).
    10. இவர் தகுதியுடையவருக்குக் கொடுத்தார் என்னும் சான்றோரின் புகழ்ச் சொல்லை மூவுலகங்களிலும் உள்ளவர்களால் கேட்க முடியும் (நாலடி.100).

    மேற்கூறிய கருத்துகளை வரையறையாகக் கொடுத்தல்: இல்லாதபோதும் இருப்பதாக எண்ணி உள்ளம் மகிழ்வோடு கொடுத்தல், இறப்பு, நோய் போன்ற துன்பங்கள் நிறைந்த உலகில் பொருள் சேர்ப்பதில் வாழ்கையை வீணடிக்காமல் பகுத்துண்ணுதல், கொடுத்தாலும் பொருள் சேரும் காலத்தே சேர்ந்தே ஆகும், நாள்தோறும் ஓர் அரிசி அளவாவது உதவுங்கள், வறுமையினால் கொடுக்க முடியாது போனால் இரவாமல் இருங்கள், ஊரின் நடுவில் வளரும் பெண்பனைமரம் போன்று பயனுடையவராய் இருத்தல், வறட்சிக் காலங்களில் வறியவர்களுக்கு உதவுதல், திருப்பித் தர இயலாதவருக்கு உதவுதல் என்பதாகும்.

    பழமொழி நானூறு முன்வைக்கும் ஈகை

    ஈகையினை வரையறுக்கும் நோக்கில் அதன் பண்புகளாகப் பின்வரும் கருத்துகளைப் பழமொழி நானூறு முன்வைக்கிறது:

    1. சிறிய மீனை விட்டுப் பெரிய மீனை இழுத்தல் போல, இம்மையில் சிறிதுதவி மறுமையிற் பெரும்பேறடைதல் அறிவுடையோர் செயலாம் (அவ்வாறேனும் வறியோர்க்கு உதவுங்கள்.) (பழமொழி. 372).
    2. வறியோர்க்கீயாது மறைத்து வைப்பவர்கள் அரிதின் முயன்று தேடிப் புதைத்து வைத்த பொருள், பகைவரைக் கடிதலுடைய மன்னர்க்கே பயன்படுவதல்லாமல் அவன் வழிவந்தவர்க்கும் உதவுவதில்லை. வறுமையால் துன்பம் மிகுந்தவர்களுக்குப் பயன்படுமாறு ஒரு பொருளை ஈதல், சுரத்திடைப் பெய்த பெயல் அதாவது பாலை நிலத்தின்கண் சொரியப்பட்ட மழைநீரை ஒக்கும் (பழமொழி.373).
    3. மிகுந்த நீரைக் கொண்டதாகிய குளம், இறைத்தால் நீர் வற்றுதல் இல்லை. அவ்வாறே, பல ஆண்டுகளாக ஒன்றுசேர்த்துக் குற்றமுடையதாய்க் கிடந்த பொருளை, கொடை வல்லானொருவன் செய்யும் நெறியறிந்து அதனை வறியோர்க்கு விரைந்து வழங்குமிடத்துச் செல்வத்தை மிகுதியாகக் கொண்ட அது கெடுதலில்லை (பழமொழி.374).
    4. இரக்கும் பாத்திரத்தில் அன்னமிடுவதன்றிக் கற்களை இடுவார் இல்லையாதலால், வருகின்ற தன்மையைப் பார்த்து இவன் கருதி வந்த பொருள் இதுவென்று அறிந்து ஈவார் மாட்சிமை உடையவராவர் (பழமொழி.375).
    5. சிறந்த குதிரை பொருந்த, தான் வாடிய காலத்தும், போருக்குரியவற்றை வைத்துக் கட்டவே, வேறு குதிரை போன்று ஆண்மை கொண்டு நிற்கும். அவ்வாறே, வறியோரை அழைத்துக் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லையாயினும் தம்மையடைந்து ஒரு பொருளை வேண்டினார்க்கு ஒரு பொருளைக் கொடுத்து அச்செயலில் அடிபட்டு வந்தவர்களே பிறருடைய துன்பத்தை நீக்க வல்லார் (பழமொழி.374).
    6. தம்மையடைந்து ஒரு பொருளை வேண்டினவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்தவர்களை இரவலர் தாழ்வுபடுத்தி, ஏழையென்று சொல்லப் போகினும் எத்தகுதியை உடையவரேயாகினும் பிறர்க்குக் கொடுத்து வறுமையுற்றார் ஒருவருமிலர் (பழமொழி.377).
    7. தன்னையடைந்து ஒரு பொருளை வேண்டுவார்க்குக் கொடுப்பதால் தமது செல்வம் குறையும் என்று நினைத்துத் தமது பொருளை மறைப்பவர்கள், இறைக்குந்தோறும் நீர் ஊறுங்கிணற்றைக் கண்டு அறியார் (பழமொழி.378).
    8. இரப்போர் நிலைக்குத் தக்க அளவினதாகக் கொடுப்பதே கொடை என்று சொல்லுகின்றவர்கள் மூடர்களே ஆவார்கள். நீர்ப்பூ நீரின் அளவினதாயிருக்கும். கையிலுள்ளதை மறையாதவர்களாகிக் கைவண்மையுடைய அரசர்கள் செய்யும் கொடைச் செயலும் மற்றும் சிறந்த எல்லாச் சிறப்புகளும் அவருடைய கொடை முதலியன அவர் நிலைமையை நோக்கியதாய் இருக்கின்றன. (பழமொழி.379) (திருக்குறளின் 223வது குறள் இங்கு நினைவுகூரத்தக்கது).
    9. ஒரு பொருளை வேண்டுவார் முறையாக இத்தன்மையை உடையார் என்று புகழ்ந்து கூறுதல் வேண்டாவாம். கொடுக்கின்றவர்கள் தம் நிலையின் அளவையறிந்து செய்வார்கள் (பழமொழி. 380).
    10. மழையென்பதே ஒன்று இல்லாமல் வற்றியிருந்த காலத்திலும் பாரியினுடைய இளமை பொருந்திய மகள் வந்து இரந்த பாணனுக்கு நீரையுடைய உலையுள் பொன்னைப் பெய்து அதனைக் கொண்டுவந்து உணவாகக் கொடுத்தாள். ஆதலால் ஒரு பொருளும் இல்லாத வீடோ இல்லை. ஒவ்வொருவரும் தம்மாலியன்றதொரு பொருளைக் கொடுக்க வேண்டும் (பழமொழி. 381).

    ஔவையார் முன்வைக்கும் ஈகை

    ஒளவையாரின் தனிப் பாடல், மனிதர்களுக்குத் தேவையான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கின் தத்துவப் பொருளை விளக்குகின்றது. அறன் என்பதே ஈதல் ஆகும். தீவினைகளை நீக்கிவிட்டுத் தன் முயற்சிகளால் தேடிக்கொள்ளுதலே பொருள் ஆகும். இன்பம் என்பது அன்புடைய இருவர் தம் கருத்துகளிலே இணைந்தவராக இருத்தலே ஆகும். இதுவே இல்லற இன்பம் என்பதாகும். இம்மூன்றையும் கைவிட்டபின் அடையக்கூடியதே வீடுபேறடைதல் ஆகும்.

    ஈகை என்னும் கருத்தாக்கத்தைத் தொல்தமிழர்கள் எவ்வாறு உள்வாங்கிக்கொண்டுள்ளனர் என்பது இவ்விலக்கிய வரையறைகள் மூலம் அறிய முடிகின்றது.  இவ்வரையறைகள் எவ்வாறு இலக்கியச் சான்றுகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் அன்றாடச் சொல்லாடல்களில் முக்கியப் பங்காற்றுகின்றன என்று பின்வரும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

    மூவேந்தர்கள் முதல் கடையேழு வள்ளல்கள் வரை பழந்தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பற்றிய குறிப்புகள் இலக்கியக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. அவ்வேந்தர்களின் வெற்றிகள், தோல்விகள், ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த புலவர்கள் தங்களின் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இச்சான்றுகளை நோக்கும்பொழுது வியப்பு ஏற்படுவதுபோன்றே ஐயமும் ஏற்படாமலில்லை. சில பாடல்கள் முன்வைக்கும் நிகழ்வுகள், பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டு இருப்பதை உணர முடிகிறது. மேலும் சில பாடல்களின் நிகழ்வுகள் வெறும் இலக்கியக் கட்டமைப்பிற்காகவே புனையப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள் முன்வைப்பது வெறும் கற்பனைத் திறத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டக் காட்சிகளா அல்லது உண்மை நிகழ்வுகளின் பதிவுகளா என்ற கேள்வி எழுவதும் உண்மை.

    ஒரு கருத்தாக்கத்தின் தோற்றத்திற்கு அச்சமூகத்தில் நிலவும் பல்வேறு காரணிகளே காரணம். ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய உறுப்பினர்களின் நடத்தைகள் மீதான கட்டுப்பாட்டை வரையறுப்பதன் மூலம் அச்சமூகத்தின் இருத்தலை உறுதிப்படுத்திக்கொள்கின்றது. அதாவது, அச்சமூகத்தின் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் உள்வாங்கிக்கொண்டு அக்குழுவினரோடு சாதகமான ஊடாட்டத்தை உறுதிப்படுத்தாவிடில் சமூகத்திலிருந்து (குழுவிலிருந்து) தனி நபர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது அதற்கான தண்டனையைப் பெறுகிறார்கள். ஆக, ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய நடத்தை விதிகளையும் அறநெறிக் கருத்துகளையும் எதிர்வரும் தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டிய கடமை, அச்சமூகத்தின் உறுப்பினர்களுக்கு உண்டு. இங்கு ஆய்வு மையப் பொருளாக இருக்கும் ஈகை என்னும் கருத்தாக்கம், குழு உறுப்பினர்களின் மீது தாக்கம் ஏற்படுத்தும் ஒன்றாக இருப்பதால் இக்கட்டுரையின் மையப்பொருளாக அமைந்துள்ளது.

    தொல்தமிழர்கள் முன்வைத்த ஈகை தொடர்பான வரையறை (கள்), பல இலக்கியச் சான்றுகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கருத்தாக்கம் ஒன்றினைக் கற்றலிலும் கற்பித்தலிலும் மனப்படத்தின் பங்கு மிக முக்கியமானது. திறமையான கற்பித்தல் என்பது கற்றலில் ஈடுபடுபவரின் மனத்தில் கற்பிக்கப்படும் கருத்துகளின் மனப்படத்தை மிகத் தெளிவாகக் கட்டமைப்பதே ஆகும். ஒரு கருத்தின் மனப்படம் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருப்பின் அவற்றை உள்ளவாறே (அல்லது மெருகூட்டி) கற்பவரின் மனத்தில் தோற்றுவிக்க வேண்டும். புதிய கருத்து (அல்லது கருத்தாக்கம்) எனில் அதைக் கற்பிக்கும் பணி சற்றுக் கடினமானதாகக் கற்போருக்கும் கற்றுக் கொடுப்பவருக்கும் இருப்பதற்கு இதுவே காரணமாகக் கருதப்படுகிறது.

    ஒரு கருத்து (idea), அல்லது பொருள் (object) அல்லது நிகழ்வு (event) தொடர்பான கட்டமைத்தல் (construction), மீட்டெடுத்தல் (retrieval), கையாளுதல் (manipulation) ஆகிய அறிதல்சார் செயலாக்க முறைகளின் வெளிப்பாடாக மனப்படம் விளங்குகிறது. மேலும், அக்கருத்து, பொருள், நிகழ்வு ஆகியவற்றோடு தொடர்புடைய புலனுணர்வு எண்ணத்தையும் கொண்டிருத்தல் வேண்டும். உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட தூண்டுதல்களும் இங்குப் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு கருத்தாக்கம் தொடர்பான உணர்வும் அதன் அறிவும் சேர்ந்தே அதன் மனப்படத்தைக் கட்டமைக்கிறது என்று கருதலாம். ஈகை குறித்த மனப்படத்தை ஏற்படுத்துவதில் இலக்கியச் சான்றுகள் பயன்படுகின்றன.

    தொல்தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்ட போதிலும் குறுநில மன்னர்கள் பலர்மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து காலத்தால் நீங்காப் பெரும் புகழை அடைந்துள்ளனர். இவர்களின் சமூக வாழ்வு வாரி வழங்கும் கொடைத்தன்மை என்னும் பண்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளதைச் சங்கப் பாடல்கள் பல குறிப்பிடுகின்றன.

    எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாரி வழங்கி வள்ளல்களாக (இரவலர் வரையா வள்ளியோர் – புறம். 376; ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே – மலைபடு. 400); இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ –சிறுபாண். 38; வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்திம் – புறம். 206) வலம் வந்திருக்கின்றனர். தொல்தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் கொடைச் சிறப்புடன் விளங்கியவர்களை மூன்று காலக்கட்டங்களில் வகைப்படுத்துவர்.

    முதலேழு வள்ளல்கள் (சகரன், காரி, துந்துமாரி, நிருதி, எம்பியன், விராடன்) மற்றும் இடையேழு வள்ளல்கள் (அக்ரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்ரன்) கடையேழு வள்ளல்கள் (அதியமான் நெடுமானஞ்சி – அஞ்சி, ஆய் அண்டிரன் – ஆய், வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி – காரி, கண்டீரக் கோப்பெருநள்ளி – நள்ளி, பறம்பிற் கோமான் பாரி – பாரி, வையாவிக் கோப் பெரும் பேகன் – பேகன்).

    இவர்களின் ஈகை என்று வரும்பொழுது கடையேழு வள்ளல்களின் பெயர்களே அன்றாட வாழ்வில் உச்சரிக்கப்படுகின்றன. இக்கடையேழு வள்ளல்களின் வாழ்க்கையே ஈகையின் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இவர்களின் கொடைத்தன்மையும் சமூக வாழ்வும் தற்காலத் தமிழ்ச் சமூகத்தின் அன்றாடச் சமூகப் பண்பாட்டு அரசியல் சொல்லாடல்களில் நீக்கமற இடம் பெற்றுள்ளதன் காரணமும் நோக்கமும் இங்கு விளக்கப்படுகின்றது.

    ஈகையின் தோற்றம்

    உளவியலைப் பொறுத்தவரை ஒரு பொருளின் அல்லது நிகழ்வின் அல்லது தன்மையின் பொதுவான பண்புகளிலிருந்து வருவிக்கப்பட்டுப் பொதுமைப்படுத்தப்பட்ட தொகுதியே கருத்தாக்கம் ஆகும்.

    ஒரு குழுவின் உறுப்பினர்களின் பொதுவான அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட அல்லது வருவிக்கப்பட்ட சாராம்சமே கருத்தாகவோ, கருத்தாக்கமாகவோ மாறுகிறது. புதிதாக ஒரு பொருளை எதிர்கொள்ளும் உறுப்பினர்கள் அப்பொருளின் தன்மையை அதன் பண்புகளை உள்வாங்கிக் கொள்வதற்கான முயற்சி அவர்களின் அறிதல்சார் திறனைப் பொறுத்தே அமைகிறது.

    மக்களின் உடல்ரீதியான அனுபவங்களின் அடிப்படையில்தான் கருத்தாக்கங்கள் உருவாகின்றன. அரூபமான கருத்தாக்கத்திற்கும் (abstract concept) உற்றுநோக்கவல்ல (observable) அனுபவத்திற்கும் இதுதான் அடிப்படையாகும். மேலும், அரூபமான கருத்தாக்கங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மொழியின் குறைபாடுகளின் தீர்வாக உருவகம், உவமை, ஆகுபெயர் போன்றவை இருப்பது போலவே கருத்தாக்கங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் அவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் சான்றுகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, ஒரு கருத்தாக்கத்தின் இன்றியமையாமையைப் பொறுத்து அதன்மீதான இலக்கியக் கட்டமைப்புகள் அவசியப்படுகின்றன. இவ்விலக்கியக் கட்டமைப்புகளே இலக்கியச் சான்றுகளாகச் செயல்பட்டு அக்கருத்தாக்கங்களை முன்னெடுத்துச் செல்லுகின்றன.

    இவ்வாறு சமூகப் பங்காற்றி வரும் இவ்விலக்கியச் சான்றுகள் கால ஓட்டத்தில் அக்கருத்தாக்கங்களுக்கான உருவகங்களாகவும் மாறிவிடுவதோடு அச்சமூகத்தின் அடையாளமாகவும் செயல்படுகின்றன. இறுதியாக, இக்கருத்தாக்கங்கள் மக்களின் அன்றாடச் சொல்லாடல்களில் பங்கெடுக்கின்றன.

    தமிழ் போன்ற வளர்ச்சியடைந்த மொழிகளில் கருத்தாக்கங்கள் மிகச் செறிவானவையாகவும் செழுமையானவையாகவும் இருப்பது போன்றே, அவை நீண்ட வரலாற்றையும் கொண்டிருக்கின்றன. இதனால் இக்கருத்தாக்கத்தின் தோற்றம் பற்றித் தெளிவான கருத்தை முன்வைக்க இயலாத போதிலும் அச்சமூகத்திற்கு ஏற்பட்ட தேவையைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு இனக்குழுச் சமூகமும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைச் சந்தித்திருக்கக் கூடும்; மேலும் அச்சிக்கலிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஏற்பட்ட முயற்சியின் பயனாகத் தோற்றுவிக்கப்பட்டதே இக்கருத்தாக்கங்கள். பின்னர்த் தேவையைக் கருத்தில் கொண்டு இக்கருத்தாக்கத்தின் பண்பாட்டு மாதிரிகளாக உருமாற்றமடைந்து அச்சமூகத்தை வழிநடத்தும் அறிதல்சார் விசையாக மாறுகின்றன.

    இவ்வாறு பண்பாட்டு மாதிரிகளாக (cultural models) அல்லது பண்பாட்டுச் சட்டங்களாக (cultural schemata) மாற்றம் பெற்றபின் அவை எதிர் வரும் தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படவேண்டிய வழிமுறைகளை அச்சமூகம் ஆராய்கின்றது. அத்தகைய தேடலின் பயனாகக் கிடைத்ததுதான் வழக்காறுகளும் (வாய்மொழி இலக்கியங்கள், சமூக நம்பிக்கைகள், சடங்குகள், நிகழ்த்துக் கலைகள்) இலக்கியப் படைப்புகளும் ஆகும்.

    ஒரு கருத்தாக்கத்தை விளக்குவதற்குத் திறமையான காட்சிப்படுத்துதல் அவசியமாகிறது. காட்சிப்படுத்துதல் மூலமாக அக்கருத்தாக்கத்தின் ஆழமான பொருளைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் முன்வைக்க முடிகிறது. திறமையான கட்டமைப்பிற்கு மொழியின் வளர்ச்சியடைந்த நிலையும் ஒரு காரணமாகும்.

    மொழியின் சிறப்புக் கூறுகளாகிய உருவகம், உவமை, ஆகுபெயர் போன்றவற்றைப் பயன்படுத்திய பாங்கை நோக்கும்பொழுது தொல் தமிழர்களின் கற்பனை வளமும் சமூக அக்கறையும் ஈடு இணையற்றவையாக விளங்குகின்றன. மொழியின் சிறப்புப் பண்புகளை உற்று நோக்கும் பொழுது இப்படைப்புகள் உண்மை நிகழ்வுகளின் வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது புனைவுகளாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். இருப்பினும் ஒன்றை யதார்த்தமாகக் கட்டமைக்க வேண்டுமெனில் வளர்ச்சியடைந்த மொழியில் மட்டுமே அது சாத்தியமாகிறது.

    அவ்வாறே, ஈகை குறித்த இலக்கியச் சான்றுகளும் யதார்த்த நிலையில் விவரிக்கப் பட்டுள்ளதற்குத் தமிழ் மொழியின் வளர்ச்சியடைந்த நிலையே காரணம் என்றும் இங்கு முன்வைக்கப்படுகின்றது.

    காட்சிப்படுத்துதல் என்றால் என்ன? நேரம், காலம், பண்புகள், உணர்வுகள், வாழ்க்கை போன்றவை அரூபமான கருத்தியல் அமைப்புகளாக இருக்கின்றன. கருத்து நிலையிலும் அவற்றிற்கான மனப்படம் (மனப்பிம்பம்) கிடையாது; அவை குறியீட்டு வெளிப்பாடாக உள்ளன. மாறாக மரம், விலங்குகள் போன்று பிற பொருட்களுக்கு மனப்படம் உள்ளது.

    கருத்து நிலையில் இருக்கும் ஒன்றிற்கு வடிவம் கொடுப்பதன் மூலம் அதனை முழுமையடையச் செய்ய முடியும். கருத்துகள் மனப்படத்தைப் (mental image) பெற்றே மக்களின் மனத்தில் நிலை கொள்கின்றன. இவ்வாறு மனப்படமாக நிறுத்தப்பட்ட கருத்துகள் தகவல் பரிமாற்றத்தில் பங்கேற்கின்றன. தகவல் பரிமாற்றம் என்பது எளிமையாகத் தோன்றினாலும் அது ஒரு சிக்கலான செயல்பாடாகும். பேசுபவரின் மொழிக் கட்டமைப்பு கேட்பவரிடமும் இருக்க வேண்டிய கட்டாயத்தைத் தகவல் தொடர்பு உறுதிப்படுத்துகிறது. அவ்வாறே பேசுபவரிடம் இருக்கும் கருத்துகளின் மனப்படங்களும் கேட்பவரிடம் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ‘மலர் மலர் பறித்தாள்’ என்று கூறும்பொழுது கேட்பருக்கு அவ்வாக்கியம் பொருள் கொடுக்க வேண்டும்;

    குறிப்பாக, கூறுபவரின் நோக்கப் பொருளை உணர்ந்து கேட்பவர் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறல்லாமல் கேட்பவருக்கு வெவ்வேறாகப் பொருள் கொடுத்தால் அத்தகவல் பரிமாற்றத்தினால் பயனேதும் இருப்பதில்லை. அப்படியெனில், பேசுபவரும் கேட்பவரும் ஒரே விதமான மொழியியல் கூறுகளை ஒருங்கே கொண்டிருக்க வேண்டும்.  ‘முதல்’ மலரை ‘இரண்டாவது’ மலரிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க அறிந்திருக்க வேண்டும், அதோடு ’பறித்தல்’ என்பது குறித்தும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

    கற்றலிலும் கற்பித்தலிலும் மனப்படத்தின் பங்கு மிக முக்கியமானது. திறமையான கற்பித்தல் என்பது கற்றலில் ஈடுபடுபவரின் மனத்தில் கற்பிக்கப்படும் கருத்துகளின் மனப்படத்தை மிகத் தெளிவாகக் கட்டமைப்பதே ஆகும். ஒரு கருத்தின் மனப்படம் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருப்பின் அவற்றை உள்ளவாறே (அல்லது மெருகூட்டி) கற்பவரின் மனத்தில் தோற்றுவிக்க வேண்டும். கருத்து புதிது எனில் அதைக் கற்பிக்கும் பணி சற்றுக் கடினமானதாகக் கற்போருக்கும் கற்றுக் கொடுப்பவருக்கும் இருப்பதற்கு இதுவே காரணமாகக் கருதப்பட வேண்டும்.

    ஒரு கருத்து, அல்லது பொருள் அல்லது நிகழ்வு (event) தொடர்பான கட்டமைத்தல் (construction), மீட்டெடுத்தல் (retrieval), கையாளுதல் (manipulation) ஆகிய அறிதல்சார் செயலாக்க முறையின் வெளிப்பாடாக மனப்படம் விளங்குகிறது. மேலும், அக்கருத்து அல்லது பொருள் அல்லது நிகழ்வு ஆகியவற்றோடு தொடர்புடைய புலனுணர்வு எண்ணத்தையும் கொண்டிருத்தல் ஆகும். உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட தூண்டுதல்களும் இங்குப் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கருத்தாக்கம் தொடர்பான உணர்வும் அதன் அறிவும் சேர்ந்தே அதன் மனப்படத்தைக் கட்டமைக்கிறது என்றும் கருதலாம்.

    மனப்படம் என்பதைக் காட்சிப்படுத்துதல் அல்லது மனக்கண்ணால் காண்பது அல்லது காதினால் கேட்பது அல்லது உள்ளுக்குள் உணர்வது (உள்ளுணர்வது) அல்லது அரை-புலனுணர்வு (quasi-perceptual) என்று புரிந்துகொள்ள முடியும்.

    புலனுணர்வு போன்ற அனுபவத்தைக் கொடுத்த போதிலும் பொருத்தமான வெளித்தூண்டுதல்கள் இன்றி ஏற்படுகிறது. உள்ளுணர்வைக் கொண்டிருப்பதால் நம்மிடம் இருக்கும் ஒன்றின் மனப்பிரதியின் உண்மை வடிவமாகச் செயல்படுகின்றது. இது நிழற்படம் போன்று இருப்பதாகப் பலர் கருதிய போதிலும் இக்கருத்தைப் பொதுவாக ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஒன்றைப் புரிந்து கொள்வதற்கும் மனத்தில் வைத்திருப்பதற்கும் உந்துதலுக்கும் மனப்படம் பயன்படுகின்றது. புதியனவற்றைச் (கருத்துகள், பொருட்கள், நிகழ்வுகள்) சந்திக்க நேரிடும் பொழுது அவை குறித்த புரிதலுக்கும் அவை போன்றே தோற்றமளிக்கும்/செயல்படும் பண்புகளைக் கொண்டவற்றின் (கருத்துகள், பொருட்கள், நிகழ்வுகள்) மனப்படமே அவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் அவை தொடர்பான மனப்படத்தைத் தோற்றுவிக்கவும் உதவுகின்றது. அத்தோடு, சிந்திக்கும் செயல்பாட்டிற்கு இன்றியமையாத பங்காற்றுகிறது.

    ஒரு மொழிக்கான பொருளியல் அடிப்படையைத் தருவதும் இந்த மனப்படமேயாகும். அனுபவம் குறித்த கேள்விகள் மனப்படத்தோடு தொடர்புடையவை. மனப்படம் இல்லாத ஒரு பொருள் குறித்து நாம் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? மொழியின் சொற்களும் வாக்கியங்களும் பிரதியும் சொல்லாடல்களும் மனத்தில் இருக்கும் (மனப்படத்தின் அடிப்படையில் இருக்கும்) கருத்தின் குறியீட்டு வெளிப்பாடு என்று புரிந்துகொள்கிறோம்.

    மனத்தில் ஒரு கருத்தாகவோ, மனப்படமாகவோ இல்லாத ஒரு பொருளினுடனான முதல் சந்திப்பு எந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது? ஒரு பொருளைக் குறித்துக் கட்டமைக்கப்படும் மனப்படம் எவ்வகையான அனுபவத்தைக் கொடுக்கும்? அரூபமான ஒன்றும் யதார்த்தத்தில் இல்லாத ஒன்றும் சமமாகுமா? மனத்தில் இருக்கும் மனப்படம் வெளியுலகின் பொருளைக் குறிக்கவில்லை. இருப்பினும், மனப்படம் குறிப்பிடும் பண்புகள் வெளியில் இருக்கும் பொருளின் பொதுப்பண்பைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘மரம்’ என்ற சொல் ‘மரம்’ என்ற மனப்படத்தைக் குறிக்கும்பொழுது அது வெளியுலகில் இருக்கும் மரம் ஒன்றையும் குறிப்பதில்லை. ஆனால், ‘மரம்’ குறிப்பிடும் பண்புகள் வெளியில் இருக்கும் மரத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

    மனத்தில் இருக்கும் ‘மரம்’ ஒரு முன்மாதிரி (prototype) ஆகும். ஒரு முன்மாதிரி முன்வைக்கும் பண்புகள் மரம் என்ற பொதுத் தொகுதிக்குப் பொருந்துகிறது, ஆனால் வெளியில் இருக்கும் ஒரு மரத்தின் பண்புகள் முன்மாதிரியோடு விலகிச் செல்லவும் வாய்ப்புள்ளது.

    மனப்படம் என்பது அனுபவமல்ல என்று கொண்டால், அது இல்லாமல் அனுபவம் ஏற்படுவதில்லை என்பது புலப்படும். அனுபவம் என்பது ஒருவரின் அகநிலை சார்ந்தது; அது அவரின் உள்ளார்ந்த புரிதல். அறிதல்சார் அறிவியல் தோற்றத்தினால் விளைந்த மாற்றங்களில் ஒன்று மனப்படம் குறித்த சிந்தனையின் மீட்டெடுப்பு. மனிதர்களின் மூளை ஒரே விதமாகக் கட்டமைத்திருந்த போதிலும் அதன் செயல்படும் தன்மை வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, நினைவிற்குக் கொண்டு வருதல் என்ற நிகழ்வு அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. ஒருவருக்குப் பிடித்த நிறம், மற்றவருக்குப் பிடிப்பதில்லை. ஒருவருக்குப் பிடித்த பாடல் மற்றொருவருக்குப் பிடிக்காமல் போகிறது. ஒருவர் நினைவுகூர்வதைப் போன்று மற்றவர் நினைவுகூர்வதில்லை. ஒருவர் நல்ல கதைச்சொல்லியாக அடையாளம் காணப்படுகிறார். சிலர் எண்களை நினைவு வைத்திருக்கின்றனர். சிலர் நிகழ்ந்த ஆண்டுகளை நினைவில் வைத்திருப்பதுண்டு. சிலரின் கற்பனைத் திறன் வியப்பளிப்பதாக இருக்கின்றது. இருப்பினும் கருத்தாக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கு மக்களுக்குச் சான்றுகளும் பண்புக் கூறுகளும் தேவைப்படுகின்றன. சில வேளைகளில் மாதிரியாக (model) / சட்டமாக (framework) இச்சான்றுகள் விளங்குகின்றன.

    ஒரு கருத்தாக்கம் மனப்படமாக இருந்து மாதிரியாகச் செயல்படும் பொழுது அச்சமூக மக்களின் அறிதல்சார் செயல்பாடுகளை அது கட்டமைக்கிறது. இதுபோன்ற கருத்தாக்கங்களைச் சமூகத்தின் எதிர்வரும் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுக்கத் தேவைப்படும் கருவியாக/ ஊடகமாக இலக்கியச் சான்றுகள் விளங்குகின்றன என்பதே இங்கு முன்வைக்கப்படும் கருத்து ஆகும்.

    ஈகை என்ற கருத்தாக்கத்தை எவ்வாறு இளம் தலைமுறையினருக்கும் பண்பாட்டிற்கு அந்நிய மானவர்களுக்கும் கற்றுத் தருவது? இக்கருத்தாக்கத்தின் நடைமுறைச் சாத்தியம் குறித்து எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் கூறுவது? இக்கருத்தாக்கத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை எவ்வாறு எடுத்துக் கூறுவது? இக்கருத்தாக்கங்கள் ஏன் சமூக உறுப்பினர்களுக்குக் கற்றுத் தரப்படவேண்டும்? அவ்வாறு கற்றுத் தரப்படும்பொழுது அதன் பொருள் மாறுபடாமல் அவ்வாறே கற்றுத் தரப்பட வேண்டியதன் அவசியம் என்ன? அக்கருத்தாக்கங்கள் உள்ளவாறே சென்றடையவில்லை எனில் கருத்தாக்கங்களுக்கு ஏற்படும் மாற்றங்களும் சமூகத்திற்கு ஏற்படும் இழப்புகளும் உள்ளனவா? இங்கு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் ஒன்றுதான். ஒரு சமூகத்தின் தொடர்ச்சி என்பது அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியிலும் மரபுத் தொடர்ச்சியிலும் கருத்தாக்கங்களின் தொடர்ச்சியிலும் இருக்கிறது.

    மொழியைப் போன்று சமூக மரபுகளும் தொடர்ந்து வருவதால் மட்டுமே அச்சமூகம் கால ஓட்டத்தில் வெற்றி பெறும். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மொழியையும் மரபையும் கொண்டுள்ளது. பல கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் உலகத்தின் பல நாகரிகங்களின் அறிவு மரபையும் சிந்தனை மரபையும் விட உயர்ந்ததாகக் காணப்படுகின்றன.

    தொல்தமிழர்களின் அனுபவத்தின் பயனாகக் கட்டமைக்கப்பட்ட இக்கருத்தாக்கங்களும் கருத்துகளும் இன்றைய சமூகத்திற்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் எடுத்துரைப்பதால் சமூகத்தின் அறிவுத் தொடர்ச்சிக்கு வழிவகை செய்யும். இக்கருத்தாக்கங்களைக் கற்றுத் தருவதில் இருக்கும் சிக்கல்கள் சமூக மாற்றத்தை வெளிப்படுத்திய போதிலும் அவற்றிற்கான தீர்வும் தரப்பட்டுள்ளது. தொல்தமிழர் விட்டுச் சென்ற இலக்கிய வளத்தின் மூலம் இக்குறைபாடுகள் அனைத்தையும் களைய முடியும் என்கின்ற நம்பிக்கை, தமிழ்ச் சமூகத்திற்கு என்றும் உண்டு.

    1. பேகன்

    பொதினி மலையிலிருந்த வையாவி என்னும் ஊரில் குறுநில மன்னனாக இருந்தவன் பேகன். வளமிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் ஏராளம். மழைக்காலத்தில் ஒருநாள் குளிரில் நடுங்கிய மயிலிற்குத் தனது போர்வையைப் போர்த்தினான் பேகன். இந்நிகழ்ச்சியைச் சிறுபாணாற்றுப்படை பாடல் அடிகள் (84-87) மூலம் அறிய முடியும். இரு நிகழ்வுகள்: மழையின் குளிரில் வாடி நிற்கும் மயில், வாரி வழங்கும் இயல்புடைய பேகன் அம்மயிலுக்குத் தன்போர்வையைக் கொடுத்தல். இவற்றில் எதையும் கேட்க முடியாத நிலையிலிருக்கும் மயிலும், எதையும் கொடுக்கும் உள்ளம் கொண்ட பேகனும் இங்கு இரப்பாருக்கும் கொடையாளிக்குமான குறியீடாகக் காட்சியளிக்கின்றனர்.

    பேகன் கொடுத்த போர்வையை மயிலினால் திருப்பித் தர இயலாத பொருளாக இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித மொழியற்ற பறவையின் துயர்துடைத்த பேகனின் செயல் யதார்த்தத்தில் நகைப்புக்குரியதாகத் தோன்றினாலும், ஆழமான பொருளுடையது. அப்பறவையின் அகவல் பேகனுக்கு அழுகுரலாகத் தோன்றியது.

    பார்த்தும் கேட்டும் பிறரின் துன்பத்தைப் போக்கும் தன்மையின் குறியீடாகவே பேகன் காட்சியளிக்கின்றான். பேகனுக்கும் மயிலுக்குமான இந்த ஊடாட்டம் தவறான புரிதலின் வெளிப்பாடல்ல. போர்வை என்பது விலை மதிப்புமிக்க சிறிய பொருள். அதே வேளையில் மயில் என்பதும் காட்டுப் பறவை. காலமும் இடமும்தான் இங்குப் பேகனின் செயலுக்குப் பெரிய அங்கீகாரம் கொடுக்கிறது.

    ஊர் / காடு, மனிதன் / பறவை என்கின்ற முரண் வெளிகளுக்கிடையான ஊடாட்டம், ஈகை என்னும் பண்பினால் பொருள் தருவதாகிறது. வறியோருக்குக் கைம்மாறு கருதாமல் கொடுக்கும் செயலே ஈகை என்றால் மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனின் கொடை, இங்கு ஈகையின் குறியீடாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ’அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்’ என்ற புறநானூற்றுப் பாடல் (142) பேகனின் கொடைத் தன்மை இது தேவையான இடம், இது தேவையற்ற இடம் என்று பாகுபாடு பாராமல் பெய்யும் மழையினது இயல்பைக் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது ஆராயாமல் கொடுப்பதால் கொடைமடம் கொண்டவன் என்றும் ஆனால் போர்க்களத்தில் (படைமடம் இன்றி) அற நெறியினின்று விலகாமல் நிற்கக்கூடியவன் என்றும் இப்பாடல் புகழாரம் சூட்டுகின்றது.] கொடைமடம் என்பது யார் எவர் என்று ஆராயாமல் கொடைத்தன்மை கொண்டிருத்தல் பேகனின் சிறப்பு ஆகும் அதனால்தான் ஈகை என்னும் கருத்தாக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.

    பழமொழி நானூற்றில் (சான்றோர் இயல்பு 74) அறிமடம் எவ்வாறு சான்றோர்களுக்குச் சிறந்ததோ (“அறிமடமும் சான்றோர்க் கணி”) அவ்வாறே கொடை மடமும் வள்ளல்களுக்குப் [பாரியும் பேகனும்] புகழ் தருவதாகிறது என்கிறார் முன்றுறை அரையனார்.

    2. பாரி

    பறம்பு மலையையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் ஆண்டவன் பாரி. இரப்பாருக்கு இல்லை என்று கூறாது வாரி வழங்கி மூவேந்தர்களை விடத் தனிப் புகழுடன் விளங்கியவன். மழையைப் போலக் கைம்மாறு கருதாது கொடை வழங்குபவன் என்று வேள்பாரியின் புகழைக் கபிலர் (சிறுபாண். 87 – 91) கூறுகிறார்.

    சுரும்புகள் (வண்டுகள்) உண்ணுமாறு தேன் வழங்கும் சிறப்பு உடைய சுரபுன்னைகள் நிறைந்த வழிப்பாதையில் சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடி பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பிற்காகத் தான் ஏறி வந்த தேரைக் கொடுத்து அதில் முல்லைக் கொடியைப் படரவிட்ட பாரியின் செயல் கொடைமடத்திற்கு மற்றுமொரு எடுத்துகாட்டாகப் பார்க்கப்பட்டுள்ளது. மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனுக்குக் கூறிய அதே குறியீட்டுப் பண்பைக் கொண்டிருப்பதால் முல்லைக்குத் தேர்கொடுத்த பாரியின் செயலைக் கொடையாகக் கொள்ளவேண்டும்.

    செந்நாப்புலவர் எல்லோரும், ‘பாரி பாரி’ என்று அவனையே புகழ்கின்றார்களே? வழங்குவது பாரி ஒருவன் அல்லனே? உலகம் காப்பதற்கு இங்கு மாரியும் உள்ளதன்றோ? கைம்மாறு கருதாமல் பெய்யும் மழைக்கு ஒப்பானவன் பாரி என்று கூறுவதைப் புறநானூற்றுப் பாடல் எண் 107 மூலம் அறியலாம்.

    குறத்தி அடுப்பில் மாட்டி எரித்த கடைக்கொள்ளி சந்தன மரமாதலின், அதனின்று கமழும் நறும்புகை வேங்கைப் பூங்கொம்பினூடும் சென்று பரவி நிற்கும். அத்தகைய மலைச்சாரலினை உடைய பறம்பினைப் பாடுவார்க்கெல்லாம் பங்கிட்டுக் கொடுத்த பேரருளாளன் பாரி. பரிசிலர் இரந்தால், ‘வாரேன்’ என்றுகூடச் சொல்லாது, அப்போதே அவர் உடைமையாகி விடுபவன் அவன். காலம் தாழ்த்தாமல் வழங்கும் கொடையே சிறந்த கொடை என்பது இங்கு விளங்கும்.

    பாரியின் கொடைக்கு எடுத்துக்காட்டு கொடுப்பதோடு அவனின் கொடைத்தன்மையும் வரையறுக்கின்றது புறநானூற்றின் 108ஆம் பாடல். காலம் தாழ்த்தாமல் வழங்கும் சிறப்பும் இங்கு முன்வைக்கப்படுகிறது.

    3. காரி

    கடையேழு வள்ளல்களில் ஒருவனாகச் சிறந்து விளங்கி மலையமான் நாட்டை ஆட்சி செய்து வந்தவன் காரி; வீரத்தில் சிறந்தும் ஈகையிலும் புகழ்பெற்றும் இருந்தான். மூவேந்தர்களிடையேயான போர்களின் போது காரியின் துணையைத் தேடி வரும் மூவேந்தர்களுக்கு உதவி புரிந்ததனால் வெற்றிக்குக் காணிக்கையாகக் கிடைக்கும் பரிசுப் பொருட்களைப் (மணி, ஊர், நாடு, பண்டங்கள், யானைகள், குதிரைகள்) புலவர்களுக்கு வாரி வழங்கி வந்துள்ளான்.

    தமிழ்ப் புலவர்களைக் கண்டால் அவன் பேரன்பு கொள்வான். அவர்களுக்குக் காதிற் கடுக்கன் போட்டுப் பார்ப்பான். தேரைக் கொடுத்து ஏறச் செய்து கண் குளிரக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவான். இதனால் அவனுக்குத் தேர் வழங்கும் பெருவள்ளல் என்ற பெயர் வந்துவிட்டது. ‘‘தேர்வண் மலையன்” என்று புலவர்கள் பாடிப் புகழ்ந்தனர்.

    மணியையும் தலையாட்டத்தினையும் உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்துப் பிறர் அஞ்சும்படியான நீண்ட வேலையும், சுழலும் தொடியணிந்த கையினையும் உடைய காரி என்னும் வள்ளல் என்று சிறுபாணாற்றுப்படை (91-95) குறிப்பிடுகின்றது.

    செறிந்த கொம்புகளில் நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்த சுரபுன்னையும், குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்த, காரி என்னும் பெயர் பெற்ற குதிரையை உடைய காரி. ஆடல் பாடல்களில் திறம்பெற்ற கலைஞர்களுக்கும் நாடுகளைக் கொடையாக வழங்கிய பெருமைக்குரியவன். புலவர்கள், வறியவர்கள் என்று பாராமல் கலைஞர்களுக்கும் வாரி வழங்கியுள்ளதைச் சிறுபாணாற்றுப்படை (107-110) பதிவு செய்துள்ளது.

    வள்ளன்மையிற் சிறந்த எம் தலைவனே! நின் ஒருவனையே நினைத்து நாற்புறமும் இருந்து பரிசிலர் பலரும் வருவர். அவர் தகுதியை அளவிட்டு அறிதல் இயலாது. வழங்குவதோ நினக்கு எளிது. அவர் தகுதியை நன்கு அறிந்தாயானால், இனியேனும் புலவரிடத்துப் பொதுநோக்கம் கொள்வதைக் கைவிட்டு விடுவாயாக. அவரவர் தகுதிக்குத் தக்கவாறு அதனை அறிந்து அதற்கேற்பவே வழங்குவாயாக! இப்பாடலில் காரியின் ஈகைப் பண்பைத் தகுதி நோக்காது பெய்யக்கூடிய மழையோடு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது. தகுதி அறிந்து கொடையளித்தால் அது கொடைமடம் ஆகாது என்று புறநானூறு (121) குறிப்பிடுகின்றது.

    மதுவுண்டு மயங்கினோர் நாளோலக்கத்திலே மகிழ்வுடன் இருக்கும்போது, தேரையும் அறியாதே வழங்கிவிடுவர். அது நிகழ்வது மிகவும் எளிது. காரியோ, அவ்வாறு மதுமயக்கம் ஏதும் இன்றியே, உள்ளத்தில் விருப்பமுடன், வரும் இரவலர்களுக்குத் தேர்களாகவே வழங்குகின்றனனே! ஒன்றிரண்டல்ல அவையும்! முள்ளூர் மலையில் வீழும் மழைத்துளிகளினும் அவன் வழங்கிய தேர்கள் பலவாகுமே! என்று காரியின் கொடைத்தன்மையைப் புறநானூறு (123) புகழ்கிறது.

    நாளும் நல்ல நாளன்று. புள் நிமித்தமும் தீதாகத் தோன்றும். அது மன்னனைச் சந்திக்கும் சமயமும் அன்று. இவ்வாறு சென்றும், தம் திறனற்ற சொற்களால் முள்ளூர் மலைக்குரிய காரியைக் கண்டு பாடியவருங்கூட வெறுங்கையோடு திரும்பார். அவன் வள்ளன்மையின் சிறப்பு அத்துணைப் பெரிதாகும். நாள், புள் நிமித்தம் பாராமல் திறனற்ற புலவர்களுக்கும் வாரி வழங்கியவன் என்று காரியின் கொடைச் சிறப்பை இங்குப் புறநானூறு (124) விவரிக்கிறது.

    4. ஆய் அண்டிரன்

    பொதிகை மலை அருகிலுள்ள ஊர்களை ஆட்சி செய்தவன் ஆய் என்னும் வள்ளல். பொதிகை மலையில் யானைகள் மிகுதியாக இருந்ததால் அவற்றைப் பிடித்துவந்து பழக்கச் செய்தான். ஆய் அண்டிரனின் யானைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைந்து காணப்பட்டதில்லை. தன்னை நாடிவரும் புலவர்களுக்குப் பொன்னும் மணியும் கொடுப்பதோடு யானையையும் பரிசாகக் கொடுத்துள்ளான். உருவத்தாலும் வலிமையாலும் மதிப்பிலும் பெரிய பரிசுகளைத் தருபவன் என்று பெயரெடுத்துள்ளான்.

    முனிவர் தனக்குக் கிடைத்த மிகப் புனிதமான நீல ஆடையை ஆயிடம் கொடுத்து “இதை வைத்திருப்பவர்களுக்கு எல்லா வளங்களும் நிறைய உண்டாகும். பலருக்கு நலம் செய்யும் உன்னிடம் இருந்தால் சிறந்த பயனை நீ அடைவாய். உன்னால் பிறரும் அடைவார்கள் என்று எண்ணி உனக்கு வழங்குகிறேன்” என்று கூறினார். பணிவுடன் வாங்கிக்கொண்ட போதிலும் அவன் உள்ளம் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தப் புனித ஆடையை அவனிடத்தில் வைத்துக் கொள்ளாமல் அவனுடைய குலதெய்வத்திற்கே காணிக்கையாக அளித்துக் கொடை வள்ளலாகிவிட்டான் என்று சிறுபாணாற்றுப் படை (95-99) குறிப்பிடுகிறது.

    ஆய் வேளே! இனிய அடிசிலைப் பிறர்க்கு உதவாதார் சிலர்; தாமே உண்டு வயிற்றை நிறைப்பவர் அவர். புகழற்ற முரசு விளங்கும் அருளற்ற அரசர்கள் அவர்கள். ஆயின் நீயோ, நின் யானைகள் அனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய். கொடுக்கவியலா மங்கல அணிமட்டுமே நின் மனைவி அணிந்துள்ளாள். பிறவெல்லாம் பரிசிலர் பெற்றுச் சென்றுவிட்டனர். வள்ளன்மை சிறந்த ஆயே! நின்கோயில் மற்றையோர் நகரினும் மேம்படுவதாக! என்று புறநானூற்றுப் பாடல் (127) புகழ் பாடுகின்றது.

    இரப்போர்க்கு வழங்கிய யானைகளோ மிகவும் பலவாகும். வானம் முழுவதும் மீனால் நிறையினும், அதனினும் எண்ணால் மிக்கனவாகும் அவை. அத்தகையோனின் புகழ் ஓங்குக! (புறம்.129:6-9).

    நீ இரவலர்க்குக் கொடுத்த யானைத் தொகையை எண்ணினால், கொங்கரை மேற்கடற்கண்ணே நீ போரிட்டுத் துரத்திய காலத்து, நினக்குத் தோற்றோடிய கொங்கர் படையினர், தம் கையினின்றும் எறிந்து சென்ற வேலினும் அவை பலவாகுமே! (புறம். 130: 4-7).

    ‘இன்றைக்குச் செய்த ஒரு நற்செயல் பின்னொரு காலத்தே நமக்கு உதவியாக அமையும் என்று, பின் வருகின்ற ஊதியங்கருதி அறம் செய்பவன் ஆய் அல்லன். அவன் கைவண்மை, சான்றோர் சென்ற அறவழியிலே தானும் செல்லுதல் வேண்டும்’ என்ற நற்செய்கைக் கடமைப்பாடு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டதாகும். (புறம். 134)

    செவ்விய நாவையுடைய புலவர்களே! பலாமிகுந்த இந்நாஞ்சில் மலைவேந்தன் அறியாமையே உடையான் போலும்! விறலியர் பறித்த இலை உணவின்மேல் தூவுவதற்குச் சில அரிசியே வேண்டினோம். அவனோ, எம் வறுமையை எண்ணாது, தன் மேம்பாட்டையே எண்ணியவனாக, மலைபோன்ற பெரிய யானையை எமக்கு அளித்துள்ளான். இவ்வாறு, தெளியாது கொடுக்கும் கொடையும் உலகில் உளதோ? பெரியோனான அவன் முறையறிந்து ஈதலைச் செய்யானோ! (புறம். 140)

    5. அதியமான்

    அதியமான் நெடுமான் அஞ்சி, தகடூரை ஆண்ட குறுநில மன்னன். மூவேந்தர்களை எதிர்த்து நின்ற இவனது வீரமும் வறியோர்களுக்கு வாரிக் கொடுத்த கொடையும் ஔவையார் முதலிய புலவர்கள் பாடியுள்ளனர். மழையைப் போன்று கொடைச் சிறப்புமிக்க கைகளைக் கொண்ட அதியமானின் அரண்மனை, இல்லையென்று வரும் வறியோர்க்கு அடையாத வாயிலை உடையது. தனக்குக் காட்டில் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்குக் கொடுத்துத் தன் கொடையின் சிறப்பை வெளிக்காட்டினான். சேர மன்னன் நெடுமான் அஞ்சி மீது போர் தொடுத்தான். சோழனும் பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாகப் போரிட்டபோதும் இப்போரில் அதியமான் தோற்று இறந்தான் என்பதாக அறிய முடிகிறது.

    வேட்டையாடச் சென்ற காட்டிலிருந்த மலைச்சாரலில் மருத்துவத் தன்மையுடைய நெல்லி மரத்திலிருந்த ஒரே ஒரு பழத்தைப் பறித்துத் தான் உண்ணாமல், உண்போர் நீண்ட நாள் உயிர் வாழ்வர் என்பதையும் அறிந்து, ஔவையாரிடமே கொடுத்துவிட்டான் (சிறுபாண். 101-103)

    ஒருநாள் இருநாள் அல்ல; பல நாட்கள் மீள மீளச் சென்றாலும், பலரோடு செல்லினும் முதல் நாளினைப் போலவே விருப்பமுடன் உதவும் பண்பினன்; யானையும் தேரும் உடையவன்! யானைக் கொம்பினிடையே வைக்கப்பட்ட கவளம், அதனை விட்டு ஒரு நாளும் தவறாததுபோல, அவன் தரும் பரிசில் நம் கையிலேயே உள்ளது; அது தப்பாதது நெஞ்சே! நீ வருந்தாதே வாழ்க, அவன் தாள்கள்! (புறம். 101)

    6. வள்ளல் நள்ளி

    வளம் செறிந்த கண்டீர நாட்டை ஆண்ட நள்ளி ‘உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும், உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் பயன் தராது’ என்ற கொள்கை உடையவன். தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும் வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு உடையவன் நள்ளி (சிறுபாண். 101-107).

    நள்ளியினது கொடைச் சிறப்பிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, புறநானூற்றில் வரும் வன்பரணர் இயற்றிய பாடல் இயன்மொழித் துறையைக் கொண்டுள்ளது.

    நள்ளியே, ‘வாழ்வாயாக, நள்’ எனும்மாலை வேளையிலே மருதப்பண் வாசித்தலும், காலையிலே செவ்வழிப்பண் இசைத்தலும், எம் பாணரும் மறந்தனர். அவரை மறக்கச் செய்தவன் நீயே! கொடுத்துக் காத்தலைக் கடனாகக் கொண்டு அவர்க்குப் பெருநிதி வழங்கிய நின் வண்மையாலேதான், அவர் பரிசிலுக்கு வேண்டிப் பாடும் தம் வழக்கத்தை அறவே மறந்து, இவ்வாறாயினர்! (புறம். 149).

    7. வல்வில் ஓரி

    ஓரி என்னும் புகழ்மிக்க குதிரை கொண்ட ஓரி, கொல்லி மலையை ஆட்சி செய்து வள்ளல் எனப் பெயரெடுத்த குறுநில மன்னன் ஆவான். காரியுடன் போரிட்டுப் பல முறை வென்றபோதிலும் இறுதியில் சேரனின் துணையோடு வந்த காரியினால் கொல்லப்பட்டான்.

    புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி என்று ஓரியைச் சிறுபாணாற்றுப்படை (107-109) புகழ்கிறது.

    விறலியே! அருவிகள் வழியும் சந்தனச் சாரலுக்கு உரியவனான வல்வில் ஓரிதான் இவன். அம்பு ஏவுந்தொழிலிலே மிக வல்லவன். எனினும், விலைப்பொருட்டாகக் கொல்லும் எளியனும் அல்லன், மிக்க செல்வன். சந்தனம் பூசிப் புலர்ந்த பரந்த மார்பினன். பல இசைக்கருவிகளையும் இசைத்து இருபத்தொரு பாடல் துறையையும் பாடி வாழ்த்தும்போது வேந்தே எனத் தொடங்கவும், தன்புகழ் தன்னெதிரே கேட்க நாணித், தொடர்ந்து “நின் போன்றார் ஒருவரும் இலரே என வாழ்த்து முன்னர், மான் தசையும் ஆநெய் போன்ற மணமுள்ள மதுவும் கலந்து ஊட்டிப், பொன்னும் மணித்திரளும் இடைவழியிலேயே எமக்கு வழங்கினான். உயர்ந்த மலைக்குத் தலைவன்; வரையாத ஈகையினை உடையவன்; வெற்றி வீரன்; அந்த ஒரி. அவன் வாழ்வானாக! (புறம். 152: 21-30)

    மழையணி குன்றத்திற்குத் தலைவன், இரப்போர்க்கு யானைகளாகவே வழங்கி மகிழ்பவன்; பொற்பூணும் கடகமும் அணிந்த கொல்போர் மறவன்; அத்தகைய ஆதன் ஒரியின் மழைபோலும் வள்ளிய கொடையைக் காணச் சென்றது எம் கூத்தச் சுற்றம். அவர்க்குப் பொன்னரி மாலைகளும் பிற நல்லணிகளும் யானைகளும் அவன் வழங்கினான். பசி தீர்ந்து பேரூண் உண்டு களித்தனர் அவர்கள். அதனால், இயங்களை ஒலித்து இசைக்கவும், ஆடவும் பாடவும் மறந்தவராக, அவர் பெரிதும் மாறிவிட்டனர்! (புறம். 153: 1-10)

    ‘ஈயேன் என்னும் இழிபினும், கொள் எனக் கொடுக்கும் உயர்பினும், நினக்குத் தக்கது அறிந்து செய்க என்று கூறியதாகக் கொள்க என்பது இதன் பொருள் ஆகும். ஒன்றைத் தா என இரத்தல், இழிந்தது; அவ்வாறு இரந்தோர்க்கு “ஈயேன்” என்று மறுத்தலோ அதனினும் இழிவு உடையதாகும்.  ‘கொள்வாயாக’ என ஒன்றைத் தானே விரும்பிக் கொடுத்தல் உயர்ந்தது; அவ்வாறு கொடுப்பினும் கொள்ளேம்’ என்பது அதனினும் மிக உயர்ந்தது. தண்ணீர் வேட்கையினர் கடல் நீரை உண்ணார், ஆவும் மாவும் கலக்கிய சேற்றுநீர் எனினும், அத் தாழ்ந்த இடத்திற்குச் செல்லும் வழிகள் பலவாகும். இரவலர் பரிசில் பெறாதபோது, தாம் நாடி வந்தவரைப் பழித்துப் பேசாது, தாம் புறப்பட்ட நேரத்தையும் புள் நிமித்தத்தையுமே பழிப்பர். அதனால், நீ எனக்கு இல்லை என்றனையேனும், நின்னை யான் வெறுப்பவன் அல்லேன். மழைபோல வழங்கும் ஓரியே, நீ நீடு வாழ்வாயாக! – வல்வில் ஓரியின் கொடைத்தன்மைக்குச் சான்றாக இப்புறநானூற்றுப் பாடல் (புறம். 204) விவரிக்கிறது.

     முடிவுரை

    கருத்துருவின் பண்பை/ தன்மையை உள்வாங்கிக் கொண்டு மனப்படம் கட்டமைக்கப்பட்ட போதிலும், அன்றாடச் சமூக ஊடாட்டங்களில் இக்கருத்தாக்கங்கள் வெறும் மனப்படங்களின் அடிப்படையில் கட்டமைக்க முடியாது. எனவே, இக்கருத்தாக்கங்களை விளக்குவதற்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எடுத்துக்காட்டுகள் அவசியமாகின்றன. இவ்வாறு கருத்தாக்கங்களுக்கு மாதிரியாக முன்வைக்கப்படும் எடுத்துக்காட்டுகள் பொதுமைத் தன்மை வாய்ந்தவையாகவும் முரண்பாடு அற்றவையாகவும் இருக்க வேண்டும் அல்லது கட்டமைக்கப்பட வேண்டும். மேலும், அவற்றின் பொருள் தரும் நிலை குறியீட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அக்கருத்தாக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை உள்கொண்டதாகவும் இருக்க வேண்டும். இங்குக் காட்சிப்படுத்துதல் என்பதைத் தரவுகளின் அடிப்படையில் பிரதிபலிக்கக்கூடிய பிம்பங்களை உருவாக்குவது என்பதாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

    ஒரு கருத்தாக்கத்தைக் காட்சிப்படுத்தும் போது அக்கருத்தாக்கத்தின் அனைத்துக் கூறுகளையும் பிரதிபலிக்க வேண்டும். அக்கருத்தாக்கத்தின் முன்மாதிரி வடிவமாக (prototype model) அக்காட்சிப்படுத்துதல் இருத்தல் வேண்டும். பல இடங்களின் இதுபோன்ற காட்சிப்படுத்துதலுக்குக் கதை அல்லது கதையமைப்பு (narrative or narrative-structure) கை கொடுக்கின்றன. காட்சிப்படுத்துதல் என்பது கதைசொல்லல் போன்ற பல கூறுகளை ஒன்றிணைத்துச் செல்வதாகும்.

    கருத்துகளுக்கும் கருத்தாக்கங்களுக்கும் அன்றாடம் நடக்கும் சமூக நிகழ்வுகளிலிருந்தோ வரலாற்றுச் சான்றுகளிலிருந்தோ புனைவுகளிலிருந்தோ எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டு அவற்றுக்குச் சமூக அங்கீகாரம் கொடுக்கும் போக்கைக் காட்சிப்படுத்துதலின் பயன் என்றும் கருதலாம். ஒரு குழுவின் இருத்தலுக்கு ஈகை என்னும் கருத்தாக்கம் மிக அவசியம் என்பதால் இக்கருத்தாக்கம் குறித்த கட்டமைப்புக்குத் தமிழ்ச் சமூகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அன்பும் காதலும் வீரமும் போரும் நிறைந்த தொல்தமிழர்களின் சமூக வாழ்வில் ஈகையின் இன்றியமையாமை குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் முன்வைக்கின்றன.

    ஈகை என்கிற கருத்தாக்கத்தின் தோற்றமும் அதன் தேவையும் குறித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச் சமூகம் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இந்த அரூபமான கருத்தாக்கத்தின் மனப்படத்தின் பிரதிபலிப்பாக நம்மிடையே இலக்கியக் கட்டமைப்புகள் இருக்கின்றன. இலக்கியத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தாக்க வரையறையும் இலக்கியப் படைப்புகள் மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டு விளக்கங்களும் தமிழ்ச் சமூகம் எவ்வாறு ஈகை என்ற கருத்தாக்கத்தைக் கையாண்டுள்ளது என்பதற்குச் சான்றுகளாகும் (மணிமேகலையில் வரும் அட்சயப் பாத்திரம் இக்கருத்தாக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாக உள்ளது).

    தொல்தமிழர்கள் விட்டுச் சென்றிருக்கின்ற சான்றுகள் ஏராளம் என்ற போதிலும், இக்கட்டுரையில் கடையேழு வள்ளல்களின் வாழ்க்கை அவர்களின் வாரி வழங்கும் கொடைத்தன்மை மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு அச்சான்றுகள் எவ்வாறு ஈகை என்னும் கருத்தாக்கத்தின் காட்சிப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றின் சமூகப் பங்களிப்புக் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

    மூல நூல்கள்

    1. தனிப்பாடற்றிரட்டு (மூலம்) (சென்னை: பி.நா.சிதம்பர முதலியார் & பிரதர்ஸ், 1940.  – https://ta.wikisource.org/wiki/ஔவையார்_தனிப்பாடல்கள்)
    2. திருக்குறள் (பரிமேலழகர் உரை. சென்னை: பழனியப்பா பிரதர்ஸ், 2007)
    3. தொல்காப்பியம் (இளம்பூரணர் – மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம், சென்னை, 2010)
    4. தொல்காப்பியம் (ச.வே.சுப்பிரமணியம் தொல்காப்பியம் தெளிவுரை, 2000.)
    5. பத்துப்பாட்டு – சிறுபாணாற்றுப்படை (சா.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம் 2009)
    6. பத்துப்பாட்டு – சிறுபாணாற்றுப்படை (பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழகம் வெளியீடு 2009)
    7. பதினெண்கீழ்க்கணக்கு – நாலடியார் (மூலம் சைன முனிவர் –இளவழகனார் உரை. கழகம் வெளியீடு 2007)
    8. பழமொழி நானூறு (ம. இராசமாணிக்கம் பிள்ளை உரை. கழகம் வெளியீடு 2007)
    9. பழமொழி நானூறு (புலியூர்க்கேசிகன் உரை, சென்னை: சாரதா வெளியீடு, 2010)
    10. புறநானூறு (புலியூர்க்கேசிகன் உரை, ஸ்ரீசெண்பகம் பதிப்பகம், 2010)

    இரண்டாம் தரவுகள்: (தமிழ்)

    1. தமிழ்வாணன், ம. 2018. “தொல்தமிழர் கொடையும் மடமும்.” வல்லமை. அக்டோபர் 3. (ISSN: 2348 – 5531. http://www.vallamai.com/?p=88133.)
    2. இராமகிருஷ்ணன், மு. 2016. “ஈகையினால் நிலைத்திருக்கும் இவ்வுலகம்: திருக்குறள் வழி அறியப்படும் ஈகை”, திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கோவை 2016. காரைக்குடி: அழகப்பா பல்கலைக் கழகம். 143-148.

    இரண்டாம் தரவுகள்: (ஆங்கிலம்)

    1. Kendler, Tracy S. 1961. “Concept Formation” Annual Review of Psychology, 447-472.
    2. Mauss, Marcel, 2002 (1954). The Gift: The Form and Reason for Exchange in Archaic Societies. London and New York: Routledge.

    ================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    தொல்தமிழர்களின் ‘ஈகை’: கருத்தாக்கமும் இலக்கியச் சான்றுகளின் பங்களிப்பும் என்னும் இக்கட்டுரை பண்டைத் தமிழரின் ஈகைச் சிறப்பினை விரிவாகப் பதிவு செய்கின்றது. எடுத்துக்கொண்ட பொருண்மையினை நுட்பமாக விளக்கிச் செல்கின்றார் கட்டுரையாளர். இக்கட்டுரை இரண்டு நிலையில் ஈகை குறித்த கருத்துகளை முன்வைக்கின்றது.

    1. ஈகை பற்றிய கட்டமைப்பு, தொல் தமிழர்களிடையே எவ்வாறு தொழிற்பட்டுள்ளது.
    2. பண்டைய இலக்கியங்கள் முன்னிறுத்தும் கடையேழு வள்ளல்களின் கொடைச் சிறப்புகள்வழி அறியப்படும் ஈகை பற்றிய வரையறைகள்.

    இவ்விரு கருத்தாக்கங்களை இலக்கண, இலக்கியத் தரவுகளைக் கொண்டு கட்டுரையாளர் கட்டமைக்கின்றார். முதல் நிலையில் தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள், பழமொழி நானூறு, நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, ஔவையாரின் தனிப்பாடல் ஆகியவற்றில் இருந்து ஈகை குறித்த பதிவுகள் திரட்டப்பட்டுள்ளன.

    அடுத்த நிலையில் தமிழ் இலக்கிய மரபில் சுட்டப்படும் முதல், இடை, கடையேழு வள்ளல்களின் சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று நிலைகளில் வள்ளல்கள் சுட்டப்படினும் கடையேழு வள்ளல்களே நிலைத்த புகழினைப் பெற்றுள்ளனர். இதனை அடையாளப்படுத்தும் வகையில் கிடைக்கும் இலக்கியச் சான்றுகள் கடையேழு வள்ளல்களின் ஈகைக் குணத்தை விரிவாகப் பதிவு செய்கின்றன. புறநானூறு, மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட இலக்கியங்களில் காணப்படும் பேகன், பாரி, காரி, ஆய் அண்டிரன், அதியமான், நள்ளி, ஓரி ஆகியோரைக் குறித்த நுட்பமான பதிவுகளைத் தொகுத்து ஆய்வு கண்ணோட்டத்தோடு கட்டுரையாளர் விளக்கியுள்ள திறன்கள், நெஞ்சாரப் பாராட்டத்தக்கன.

    கடையேழு வள்ளல்கள் குறித்துத் தொல்இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சான்றுகள் அனைத்தையும் கட்டுரையாளர் முறையாகத் தொகுத்து, வகை தொகை செய்து விளக்கியிருப்பது ஓர் ஆய்வுக் கட்டுரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலை நாட்டாரின் கருத்துகள், பின்னமைப்பியல், உளவியல் கோட்பாடுகள் ஆகியவற்றை உரிய வகையில் கட்டுரையில் கையாண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.

    ================================================================

    Share
  • படக்கவிதைப் போட்டி 209-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பார்கவ் கேசவனின் நிழற்படத்தில் ஆரஞ்சுப் பழமாய் மிளிரும் ஆதவனைக் காண்கின்றோம். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 209க்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணர், திறமையான தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    அகலவா வேண்டாமா என்று யோசனை செய்துகொண்டிருக்கும் பகலவன்; அவன் மறைவதற்குள் நாம் கூட்டுக்குச் சென்றுவிடுவோம் என்று சிறகு விரிக்கும் சிறிய பறவைகள்; சுடரொளியோனே! எமைவிட்டுச் செல்லாதே  என்று கிளைக் கரங்களை விரித்துத் தடுக்கும் மரக்கூட்டங்கள் இப்படி இயற்கை நிகழ்த்தும் மாயாசாலம் காணத் தெவிட்டா இனிய கோலம்!

    இவ் இயற்கைக் காட்சிக்கேற்ற எழிற்கவிதைகளைப் படைத்துத் தரக் கவிஞர்களை அழைக்கிறேன் கனிவோடு!

    *****

    ”இரவியே! இரவில் அழிவுப்பணியைத் தொடங்கிவிடும் மானிடனின் இருள் மனத்துக்கு உன் ஒளிக்கிரணங்களால் அறிவுகொளுத்து!” என்று ஆதவனை வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இருளை விரட்டு…

    அந்தியில் அழகுகாட்டும்
    கதிரவனே,
    ஓய்வெடுக்கச் செல்கிறாய் நீ
    இன்றும்
    ஒழுங்காய்ப் பணிமுடித்த நிறைவில்..

    ஓய்வெடுக்கச் செல்கின்றன
    வழக்கம்போல் பறவைகளும்,
    பணிமுடித்து
    இரைதேடிய நிறைவில்..

    இந்த மனிதன் மட்டும்
    ஏன் இப்படி,
    நீ பணிமுடித்தபின்
    இரவின் இருள்வரவில்
    இவன் பணியைத்
    தொடங்கிவிடுகிறானே,
    ஆக்கப் பணியாய் அல்ல-
    அழிவுப் பணியாய்..

    இரவின் இருளை
    இரவியே நீ
    இவன்மனதில் புகுத்திவிட்டாயா..

    இதை விரட்ட
    நீட்டு
    உடனே உன் ஒளிக்கிரணங்களை…!

    *****

    ”அந்தியில் ஓய்வெடுக்க ஆழியில் மூழ்கும் ஆதவ அன்பனே! மாலையில் உனை இரசிக்கும் எனக்குக் காலையில் நீ பகையாவதேன்?” என்று ஆதவனிடம் ஆதங்கப்படுகின்றார் திருமிகு. கி. அனிதா. 

    அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழியில் மூழ்குகிறாய்…
    உன்னுடன் சேர்ந்து இயற்கை அன்னையும் ஓய்வெடுக்கச் சென்றுவிடுகிறாள்!!!
    மாலையிலே உன்னை ரசிக்கும் நண்பனாய் நான் இருக்க…
    காலையிலே ஏன் எனக்கு பகைவனாக மாறுகிறாய்! !!

    *****

    நீலவானம் சிவப்பாய் மாறிய கோலம் அதன் கோபத்தின் வெளிப்பாடோ? இரவில் வரும் ஆடவருக்கு நட்சத்திரப் பூக்களாய் ஒளிரும் அபலைப் பெண்களின் வாழ்க்கை உண்மையான விடியல் காண்பதெப்போது? என்ற தன் வருத்தத்தைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    இரவு பூக்கள்

    கிழக்கும் மேற்கும் பகலெல்லாம்
    ஓடி திரிந்து குறும்புகள் என்ன செய்தாயோ
    நீல வானம்கூட நிறம் மாறியதே
    கோவத்தில் அது நன்கு சிவந்ததே

    இரைதேடி திசை எங்கு பறந்தாலும்
    இருள் வந்து சேரும் முன்னே
    இல்லம் வந்து சேரும்
    இரவில் கூட்டாய் கூட்டில் வாழ்ந்திடவே

    விடியலாய் விடிவெள்ளி நீ வந்து
    விடைபெற்று சென்றதும்
    வெண்ணிலவு வந்து
    விடிகின்றதே இங்கே பலரது வாழ்வு

    ஆசை அடக்கிட
    மோகத்தில் திளைத்திட
    அள்ளி அணைத்திட
    ஆள் தேடும் ஆண்களுக்கு
    ஆனந்தத்தை வெளிச்சமாய் காட்டிடுவாள்
    மெழுகாய் இவள் தினம் உருகி

    இன்றேனும் விடியாதா என்று
    இரவெல்லாம் எதிர்பார்த்து
    நாட்கள் நகர்ந்திட
    அழகாய் பூத்து நின்று
    ஆண்களை கவர்ந்திடவே
    நாள்தோறும் இரவில் மட்டும்
    பூத்து நிற்கும்
    நட்சத்திர பூக்கள் இவர்கள் …….
    விடியலை எதிர்பார்த்து……..

    *****

    சூரியனின் சுடரொளியைச் சுற்றித் தம் கற்பனைகளை அழகாய்ப் பின்னியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    நேற்று நீ மறைந்ததால் தான்
    எங்களுக்கு இன்று கிடைத்தது!
    இன்று நீ மறைந்தால் தான்
    எங்களுக்கு நாளை கிடைக்கும்!
    என்ன மாயம் உன்னிடத்தில்..?
    ஒன்பது கோள்களும் உன்னைச் சுற்ற…
    தங்கமுலாம் பூசப்பட்டதா உனக்கு..?
    பூசி என்ன பயன்?
    பார்ப்பதற்குள் கண்கள் கூசுகிறதே
    மாலைப் பொழுதில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பின்னால் மறைவதென்ன..?
    நீ மறைந்த கர்வத்தில்
    சந்திரன் ஒளிர்கிறது
    கொண்ட கர்வத்தில் தேய்ந்தும் போகிறது!
    நீ உதித்தால்தான் எங்களுக்கு விடியல்
    என்றும் உதித்திடு!
    உன்னை போல் நாங்கள் ஒளிர வாழ்த்திடு!

    ”காய்கதிர்ச் செல்வனே! நீ மறைவதும் உதிப்பதும்தானே புதிய நாட்களைக் கொண்டுவருகின்றது இப்புவிக்கு! எங்கள் கண்களைக் கூசவைக்கும் தங்கமுலாம் பூசியவனே! உன்னைப்போல் எம்மையும் ஒளிரவிடு!” என்று சூரியனுக்குக் கோரிக்கை வைக்கும் இக்கவிதையைப் படைத்திருக்கும் திருமிகு. காந்திமதி கண்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 210

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும்  காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்தை,  வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • வல்லமையாளர் 305 – கோமதி மாரிமுத்து

    விவேக்பாரதி

    வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி, சுமைகளை ஏந்தி நாம் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லாமல் பாதியிலே நாம் பந்தயத்திலிருந்து விலகியும் விடுகிறோம். ஆனால் உள்ளம் முழுவதிலும் சாதிக்கும் திண்ணத்துடன் ஓடும் வீரர்கள் பந்தயங்கள் எத்தனை வந்தாலும் வென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவொரு வீரரே வீராங்கனை கோமதி மாரிமுத்து.

    போதிய அளவு மைதான வசதியோ, பேருந்து வசதியோ கூட இல்லாத முடிகண்டம் என்னும் ஊரிலிருந்து தனது ஒவ்வொரு பயிற்சியையும் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மேற்கொண்டு ஓட்டம் பயில ஓடி ஓடி உழைத்த கோமதி மாரிமுத்து அவர்கள் கத்தார் நாட்டில் நிகழ்ந்த 23 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இந்திய நாட்டின் சார்பாக தங்கம் வென்றுள்ளார்.

    காலை 3 மணி முதல் தன் நாளின் ஓட்டத்தைத் தொடங்கி, பள்ளி அதன்பின் கல்லூரி என்று தன் இளமைப் பருவம் முழுக்கவும் தன்னை ஓட்டப் பந்தயத்திற்காகவே தயார் செய்த கோமதி அவர்களுக்கு அவரது தந்தை மாரிமுத்து அவர்கள் பின்னால் உந்து சக்தியாக செயல்பட்டு இவரது இன்றைய வெற்றியைக் காண பெரிதும் ஆசைப்பட்டார் என்று சொன்னால் அது மிகையன்று. தன் மகள் வென்றதையே பத்திரிகையாளர்கள் தம் இல்லம் சூழ்ந்ததை வைத்துத் தெரிந்து கொண்ட தாய் “எங்க பாப்பா எப்டியோ ஓடி ஜெயிச்சிட்டா” என்று உருக்கமாக பேட்டியும் அளித்துள்ளார்.

    விளையாட்டுப் பிரிவில் தேர்ச்சிபெற்று, பெங்களூருவில் வருமான வரித்துறையில்  பணியாற்றிக் கொண்டிருக்கும் கோமதி மாரிமுத்து, தனது மாபெரும் துணையான தம் தந்தையை இழந்த இரண்டாவது ஆண்டில் அவரது கனவை நனவாக்கியுள்ளார். 800 மீட்டர் தடகளப் போட்டியில் அதன் தூரத்தை 2 நிமிடம் 70 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

    தமிழகத்தில், திருச்சி மாவட்டம் முடிகண்டம் பகுதியிலிருந்து இந்தியா சார்பாக போட்டியிட்டு வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துத் தந்திருக்கும் வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் “வல்லமையாளர்” என்னும் விருதினைப் பெருமையோடு அளித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென்று வாழ்த்துகிறது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 34

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-34

    34. நிலையாமை

    குறள் 331:

    நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை

    நெலச்சி நிக்காத ஒண்ண நெலயானதா நெனைக்க மரமண்ட புத்தி கேடுகெட்டது.

    குறள் 332:

    கூத்தாட் டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அருவிளிந் தற்று

    கொஞ்சம் கொஞ்சமா சொத்து சேருதது கூத்து பாக்க கூட்டம் சேருதது போல, கூத்து முடிஞ்சதும் கூட்டம் கலைஞ்சு போகுதது கணக்கா சொத்தும் பைய பைய கொறஞ்சு ஒண்ணுமில்லாம அழிஞ்சு போவும்.

    குறள் 333:

    அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்

    சொத்து எப்பமும் ஒருத்தர்கிட்ட நெலச்சி நிக்காது அதஉணந்து இருக்குதப்போ நெலயான நல்ல காரியத்த செஞ்சுபோடணும்.

    குறள் 334:

    நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
    வாள துணர்வார்ப் பெறின்

    வாழ்க்கைய நல்லா புரிஞ்சிக்கிட்டவங்க நாள் னு சொல்லுதது நம்ம ஆயுச (ஆயுள) அறுத்து கொறச்சிட்டே வருத அருவான்னு (வாள்) அறிஞ்சுகிடுவாங்க.

    குறள் 335:

    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேற்சென்று செய்யாப் படும்

    நாக்க அடக்கி நாம சாவததுக்கு முன்ன நல்ல அறச்செயல்கள வெரசலா (விரைவாக)  செய்யணும்.

    குறள் 336:

    நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை யுடைத்திவ் வுலகு

    நேத்தைக்கு இருந்தவன் இன்னிக்கு இல்ல ன்னு சொல்லுத நிலையில்லாத தன்ம ங்குத பெருமய கொண்டது இந்த ஒலகம்.

    குறள் 337:

    ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
    கோடியு மல்ல பல

    புத்திகெட்டவன் உசிரோட இருக்குத இந்த ஒடம்பு நெலையில்லாதது னு புரிஞ்சுகிட மாட்டான்.  வீணா அவன் மனசுக்குள்ளார கோடிக்கும் மேல ரோசன (எண்ணங்கள்) ஓடிக்கிட்டே இருக்கும்.

    குறள் 338:

    குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
    உடம்போ டுயிரிடை நட்பு

    ஒடம்புக்கும் உசிருக்கும் உள்ள ஒறவு, முட்டைலேந்து வெளிய வந்த பறவக்குஞ்சு அத உட்டுப்போட்டு வேற எடத்துக்கு பறந்து போகுதது போல.

    குறள் 339:

    உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு

    சாவு ங்கது ஒறங்குதது போல. பொறப்பு ங்கது ஒறங்கி கண் முழிப்பு தட்டுதது போல.

    குறள் 340:

    புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சி லிருந்த உயிர்க்கு

    ஒடம்புல ஒரு மூலைல குடியிருக்க உசிருக்கு இப்பம் வரைக்கும் நெலச்சு தங்குததுக்கு எடம் கெடைக்கலியோ?

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • சேக்கிழார் பா நயம் 34

    திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி

    சுந்தரமூர்த்தியாரை, இறைவன்  திருவருட்டுறையமைந்த  திருவெண்ணை நல்லூரில் ஓர் அந்தணராக வந்து  ஆட்கொண்டருளியபின்    இறைவன் மேல்  அருச்சனை யாகிய சொற்றமிழ்ப் பதிகம்  பாடினார்!  பின்னர் அங்கிருந்து  புறப்பட்டுத் திருநாவலூர் கடந்து  திருத்துறையூரில்  தவநெறி தந்தருள வேண்டிப்   பாடினார். பின்னர் பெண்ணை  யாற்றைக்   கடந்து திருத்தில்லையில்  நடமாடும் கூத்தப் பிரானின்   திருப்பாதம்  பணிய   எண்ணினார்.  தில்லை  செல்லும்   வழியிலே திருமாணி குழியைக்  கடந்து  திருவதிகை என்ற  தலத்தை அடைந்தார்.

    அங்கேதான்  திருநாவுக்கரசரைச்  சிவநெறியில்   செலுத்த  வேண்டித்  திலகவதியார் வழிபட்டார்;  பின்னர்   அப்பருக்குத்  திருநீறளித்தார்!  அந்தத்  திருத்தலத்தில் உறைந்த இறைவனைக்  ‘’கூற்றாயினவாறு’’  என்ற  பதிகத்தால்   திருநாவுக் கரசர்   வழிபட்டார், அந்த அருள்  வரலாற்றை எண்ணிய  சுந்தரர், திருநாவுக்கரசர் நடமாடிய திருத்தலத்துள் கால்வைக்க மாட்டேன் என்று ஊருக்குப்  புறம்பேயுள்ள ‘’சித்தவட மடம்’’ என்ற   வழிப்போக்கர் தங்கும் இடத்தில்  சற்றே சாய்ந்து   படுத்தார்.          

    சுந்தரர் செல்லுமிடந்தோறும்  எழுந்தருளும்  சிவபிரான், அந்தச்   சித்தவட மடத்தில் சுந்தரர்  படுத்திருந்த  இடத்திற்கு ஓர்  அந்தணர்  உருவுடன் வந்தருளி,  அவர் தலைமேல்  தம் பாதத்தை  வைத்தபடிப்  படுத்தார்! தம் தலைமேல்  கால் படும்படி, அவர் படுத்திருப்பதைக்  கண்ட சுந்தரர், ‘’அருமறை உணர்ந்த அந்தணரே, இவ்வாறு  என் தலைமேல்  கால் படும்படிப்  படுக்கலாமா?’’ என்று  கேட்டார். சுந்தரருக்குத்  தாமும் உயர்ந்த  அந்தணர் குலத்தில் பிறந்தோம்  என்ற செருக்கு! அதனால்  ஓர் அந்தணர்  தம் தலைமேல்  பாதம் படப்  படுக்கலாமா?  என்ற  சினத்துடன், ‘’அரிய  வேதங்களைக்  கற்ற  அந்தணரே! இவ்வாறு  அடுத்தவர் தலைமேல் கால் வைத்துப் படுக்கலாமா?’’ என்று கேட்டார்.

    வந்தவர் வேதம் பயின்ற  அந்தணர் என்பதைத்  தம் வாக்கால் வெளிப்படுத்திய  சுந்தரர், தம்மைத்  திருவெண்ணெய் நல்லூரில்  தடுத்தாட்கொள்ள  வந்த சிவபெருமான்  வேதம் பயின்ற அந்தணர்  கோலத்தில்தானே வந்தார், என்பதை மறந்து விட்டார்! வந்த அந்தணர்  சிவபெருமானே  என்பதையும் உணர வில்லை.  அதனால்  அந்தணரிடம்  சினங் கொண்டார்! இன்னும் அவர் மையல் மானுடமாய்  மயங்கினார்! ஆனால் அவரைத்  தொடர்ந்து வந்த சிவபெருமான் , தம் அடையாளத்தை  நுட்பமாக  உணர்த்தினார்! ‘’ எனக்கு  அகவை  மிகவும் அதிகம். ‘’யான்  என்று பிறந்தவன்  என்று  உணராத  இயல்பினன்!’’என்றார்! அவரைப்‘’பிறவாயாக்கைப்பெரியோன், முதுமுதல்வன்’’என்று  சங்கப்பாடல்கள் கூறும். காலப்  பெருவெளியில் என்றும்   நடனமாடுபவர் அவர்! அவர்  ஆடும்  பரவெளிக்குத் திசைகள்  இல்லை !  ஆதலால், ‘’என் மூப்பு என்னைத்   திசை அறியா  வகையில் இவ்வாறு உன்னை மிதிக்கச்செய்துவிட்டது!’’ என்று   அவரே  கூறியருளினார்!  இதனைக்   கேட்ட  பின்னரும் சுந்தரர் பெருமானை உணரவில்லை. ஆதலால் முதியவரை  விட்டு  விலகி சற்றுத்   தள்ளிப்   படுத்தார்! இதனைச்  சேக்கிழார்,  

    ‘’அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்

     சென்னியில் வைத்தனை ‘’

    என்று பாடினார்!  உடனே சிவபிரான் ,

    ‘’திசை அறியா   வகை செய்தது  என்னுடைய   மூப்புக்  காண் ! ‘’    என்றார். அப்படியும்  உணராத சுந்தரர் ,

    ‘’அதற்கு இசைந்து

     தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.’’

    என்று  பாடினார் . அங்கும்  அவர் தலைமேல்  தம் காலை நீட்டினார்   இறைவன்! ‘’இங்கே மீண்டும் மீண்டும்  என்னைத் தொடர்ந்து வந்து  பலமுறை மிதித்தது  ஏன்?’’ என்று  சுந்தரர் கேட்டார்! கங்கையைச்  சடையில் மறைத்துக் கொண்ட சிவபிரான் , ‘’என்னை அறிந்து கொள்ள வில்லையோ?’’ என்று கேட்டு , அங்கேயே  மறைந்தார்! அதன் பிறகே  சுந்தரருக்கு  உணர்வு  வந்தது. எந்தக்  கூத்தன் திருவடியில்  வணங்கிப்  பணிய வேண்டும் என்று ஆசைப்பட்டுத்  தில்லை நோக்கி நடந்தேனோ, அந்தப் பெருமானே  எளியேன் தலை  மேல்  திருவடி பதித்தானே !’’ என்று புலம்பினார்! எண்ணங்களின் அலைபாய்ந்த  அவர் உள்ளம்,   செங்கயல் மீன்கள் பாயும் குளம்  போல  அலைபாய்ந்தது  என்பதைச் சேக்கிழார் ,  

    ‘’அங்குமவன்   திருமுடிமேல்  மீட்டும் அவர்   கால் நீட்ட

    செங்கயல் பாய்   தடம்புடைசூழ்  திருநாவ    லூராளி

    ‘’இங்கென்னைப்   பலகாலும்  மிதித்தனைநீ   யார்?’’ என்ன

    கங்கைசடைக்  கரந்தபிரான்   ‘’அறிந்திலையோ?’’ எனக்கரந்தான் ‘’

    எனப் பாடினார்! இப்பாடலில்  சுந்தரர் மனக்கலக்கமும், இறைவன்  அருளிய மொழியும், அடியார்  ஒழுக்கமும், ஆண்டவன்  விளையாடலும் எனப் பல்வகைச்  சொல்லாட்சித்  திறத்துடன்  விளங்குவதைக்  காணலாம்!

    Share
  • 20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++

    ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்
    உப்பிடும் பிரபஞ்சக் குமிழி
    உடைந்து மீளும்!
    பரிதி விழுங்கிய கருந்துளை
    வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள்!
    விண்வெளி விரிய விண்ணோக்கியின்
    கண்ணொளி நீண்டு செல்லும்!
    நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை
    ஊடுருவிக் காமிரா
    கண்வழிப் புகுந்த
    புதிய பூமிகள் இவை!
    பரிதி மண்டலம் போல்
    வெகு தொலைவில் இயங்கி
    சுய ஒளிவீசும்
    விண்மீனைச் சுற்றிவரும்
    மண்ணுலகம் இவை!
    ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறை
    பூமி போல் வாயு  சூழ்வெளி
    பூண்ட அண்டக்கோள் ஒன்றைக்
    கண்டுள்ளது கெப்ளர் விண்ணோக்கி!
    சில்லியின் வானோக்கி மூலம்
    விண்வெளி நிபுணர்
    கண்ட கோள்கள் பற்பல! ஆயினும்
    இன்னும் சவால் விட்டு
    கண்ணுக்குத் தெரியாது ஒளிந்த வண்ணம்
    தேடிக் கிடைக்காக் கோள்கள்
    கோடிக் கணக்கில்!

    +++++++++++++++

    20 ஆண்டுகள் விண்ணோக்கி ஐந்து புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

    2019 ஏப்ரல் வரை அண்டவெளியில் 4000 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. முதல் புறக்கோள் 1995 ம்  ஆண்டில் வெளியிடப்பட்டது. அவற்றில் பெரும்பான்மையான புறக்கோள்கள் அவற்றின் பரிதிகளைச் சுற்றிவரும் பாதைகளின் காலங்கள் [Orbital Periods] குன்றியதாக இருந்தன. ஒரு புறக்கோளின் வசிப்பை உறுதியாக்க, அது அதன் பரிதியை ஒரு முறை அல்லது பல முறை சுற்றும் காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வானியலார் சில நாட்கள் முதல், பல பத்தாண்டுகள் வரை காத்துக் கண்காணிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக நமது பூமி சூரியனை ஒருமுறை சுற்ற ஓராண்டு ஆகும்போது, வியாழக்கோள் ஒருமுறை சுற்ற 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

    அண்டவெளியில் புறக்கோள்களின் வசிப்பை நீண்ட காலம் கண்காணித்துக் கண்டுபிடிக்க, தனிப்பட்ட கருவிகள் ஏந்திய விண்ணோக்கிகள் தேவைப்படுகின்றன. தென் அமெரிக்கா சில்லியில் உள்ள, சுவிஸ் ஜெனிவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூலார் விண்ணோக்கி [Swiss Euler Telescope at La Silla Observatory, Chile] அத்தகைய நெடுங்காலக் கண்காணிப்புக்குப் பயன்படுகிறது. அந்த விண்ணோக்கியில் 20 ஆண்டு காலமாய்ப் பல வானியல் விஞ்ஞானிகள் கூர்ந்து நோக்கி, ஐந்து புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றைக் காண இரண்டு முக்கிய மறைமுக முறைப்பாடுகளை  பயன்படுத்தினர்.

    ஆர வேக முறைப்பாடு [Radial Velocity Method]. இம்முறையில் கோளின் ஈர்ப்பு

    • விசைத் தாக்கம் பரிதியைப் பாதிப்பதை அளப்பது.
    • கோளின் குறுக்கீடு, சிறு மறைப்பு [Mini Eclipse] பாதிப்பை அளப்பது.

    அவ்விரு முறைப்படி ஐந்து புறக்கோள்கள் மிகத் தெளிவாகவும், மேலும் நான்கு புறக்கோள்களின் பாதைகள் கண்டறியப்பட்டன. அவற்றின் சுற்றுக் காலங்கள் [Orbital Periods] 15.6 & 40.4 ஆண்டுகட்கு இடைப்பட்டன. அவற்றின் நிறைகள் வியாழக் கோள் போல் சுமார் 3 முதல் 27 மடங்கு இருந்தன. அப்புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு 15 ஆண்டு சுற்றுக் காலத்துக்கு மேற்பட்ட கோள் எண்ணிக்கையை 26 ஆகப் பெரிதாக்கி யுள்ளது.

    u

    +++++++++++++++
    https://youtu.be/g9pCLcZEJIw

    http://exoplanet.eu/
    http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270
    ++++++++++++

    The rocky exoplanet GJ 1132b was first pinpointed in 2015 (Dana Berry)
    ++++++++

    பூமிபோல் சூழ்வளியுள்ள நீர்க்கோள் முதன்முறைக் கண்டுபிடிப்பு

    2017 ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் பூதப்பூமி [Super-Earth GJ 1132b] ஒன்று சூழ்வெளி வாயு உள்ள நமது பூமிபோல் இருப்பதை முதன்முறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். வாயு உள்ள குன்றிய நிறை கொண்ட அண்டக்கோள் நமது பூமிபோல் வடிவமும், நிறையும் ஒத்திருப்பதை தெரிவித்துள்ளார். அண்டவெளிக் கோளில் உயிரினம் இருப்பதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கிய எட்டடி வைக்கும் என்று தெரிகிறது. மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்து ஜெர்மன் விஞ்ஞானிகள் இதன் விண்மீன் [GJ 1132] காண தென்னமெரிக்கா, சில்லியில் உள்ள 2.2 மீட்டர் விண்ணோக்கி [ESO/MPG Telescope] பயன்படுத்தியுள்ளார். புதிய பூதப்பூமியின் நிறை நமது பூமிபோல் 1.6 மடங்கு. அதன் ஆரம் பூமிபோல் 1.4 மடங்கு. விஞ்ஞானிகளின் தற்போதைய குறிக்கோள் : புதிய பூமியில் உயிரின வளர்ச்சிக்கு உகந்த இரசாயனப் பொருள் கலந்த சூழ்வெளிக் காற்றுள்ளதா, போதிய உயிர்வாயு ஆக்சிஜென் உள்ளதா என்று அறிவதே. புதிய கோள் [GJ 1132b] அதன் செங்குள்ளி விண்மீனை [GJ 1132] சுற்றிவரும் பாதை, நமது பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தூரத்தில், வேலா தென்னக விண்மீன் மந்தையில் [Southern Constellation Vela] உள்ளது.

    Water vapour in Large Planet

    Gliese 1132 b
    EXOPLANET List of exoplanets

    Exoplanet Comparison GJ 1132 b.png
    Size comparison of Gliese 1132 b with Earth.

    PARENT STAR
    Star Gliese 1132
    Right ascension (α) 10h 14m 51.1s
    Declination (δ) −47° 09′ 12″
    Apparent magnitude (mV) 14.7
    Distance 39 ly
    (12 pc)
    Spectral type M3.5D
    ORBITAL ELEMENTS
    Orbital period (P) 1.6 d
    PHYSICAL CHARACTERISTICS
    Mass (m) 1.6 M
    Radius (r) 1.2 R
    Stellar flux (F⊙) 19 
    Temperature (T) 410 K (137 °C; 278 °F) K
    DISCOVERY INFORMATION
    Discovery date May 10, 2015 (announced)[1]November 12, 2015 (confirmed)[2]
    Discoverer(s) MEarth-South Array Team
    Discovery method Transit
    Discovery site Chile
    Discovery status Confirmed
    OTHER DESIGNATIONS
    Gliese 1132 b, Gl 1132 b, GJ 1132 b

    ஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.

    அலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]

    இப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீட்டர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா என்று ஆராயவும் உதவும்.

    ஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]

    Water found in exoplanet

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது

    2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா என்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.

    Hunt for Earth like planets

    சூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணப் பட்டது.

    நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour] இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப்பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்டப் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.

    CHIO Observatory, Chile

    “இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல. அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை. ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை உடையவரா என்பது தெரியாது. இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான்  நீடிக்க முடியும். ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும். மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”

    லீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]

    கண்டுபிடித்த நீர்க்கோள்கள் கெப்ளர் -62e, கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன. அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன. நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது. கணனி மாடலின்படி துருவம் வரை முழுக்கவும் சூடான வெப்ப மயமானது [Warm and Humid]. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு வாயுவை மிகுதியாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது. இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”

    டிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]

    Two Water Planets“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”

    ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    Kepler -62 System

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது

    2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது. அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62]. விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது. அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் : கெப்ளர் -62e, கெப்ளர் -62f [Kepler -62e and Kepler -62f]. நீர்க்கோள் கெப்ளர் -62e, அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்; நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள். அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f 40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப்பட்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலம் இன்றி பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார். கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும், பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில் நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது. இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

    2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b. 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது. 2013 ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது. நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியிலிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது. மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும் நிலவு போல் காணப்பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கரமானது : 2000 டிகிரி F. வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவதில்லை. அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது. 2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope] விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F என்று கணிக்கப்பட்டது.

    Einstein Planet

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி! அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas) ”

    பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந் திருக்கலாம்.”

    ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

    Hubble Space Telescope

    “மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”

    அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London’s Science Museum]

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென்  [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமான சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

    “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது!  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது!  மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது !  எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    Share
  • நீல வண்ண அரை நிஜார்

    சேஷாத்ரி பாஸ்கர்.

    பள்ளிக்  காலங்களில் எனக்குச் சீருடையைத் தாண்டி பெரிய துணிமணி ஏதுமில்லை. ஏதோ ஒன்றோ  இரண்டோ தான். அதனைப் போஷிப்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் அந்த நீல வண்ண அரை நிஜாரை மறக்கவே முடியாது. அக்கறை இல்லாமல் தைக்கப்பட்ட ஒன்று. அது காஞ்சி பட்டு அல்ல. ஆனால் கஞ்சி பட்டு அதன் நிறம் வெண் நீலம் ஆயிற்று.

    நல்ல முறுக்கேறிய பருத்தித் துணி. உடம்பு கீறும் அளவுக்கு அதன் மொரமொரப்பு. பணம் கொடுத்து (நாலணா) இஸ்திரி போட வசதி இல்லை. ஆனால் என் தந்தை மிகுந்த அக்கறை ஆனவர். வித்தியாசமாய் யோசிப்பவர். நல்ல டெக்னிகல் மூளை. ஒரு பெரிய டபராவை நன்றாய்ச் சுட வைத்து என் துணிக்கு இஸ்திரி போட்டு விடுவார். எப்படி அந்த சுடும் பாத்திரத்தைக் கையாண்டு அதைச் செய்தார் என்று இன்றளவும் எனக்கு ஆச்சரியம் .ஆனால் மனசால் செய்த காரியம். சுத்தமான அன்பு. எந்தப் பிரதி பலனையுன் பாராத குணம்.

    இஸ்திரி போட்ட பின் அந்த கிரீஸ் மேல் நகத்தால் கோடு கிழித்து வேலை முடித்தாலும் திருப்தி வராது அவருக்கு. அவர் கலைஞர். அந்தத் துணியை அப்படியே எடுத்து ஒரு பேப்பர் மேல் போட்டு அதன் மேல் அழுத்தமாய் உட்கார்ந்து இருப்பார். அணியும் போது தான் தெரியும் அதன் அருமை. அந்த காலத்து வண்ணான் ஜெயராமன் கெட்டான். அப்படி ஒரு நேர்த்தி.

    இன்று எவ்வளவு ஆடை அணிந்தாலும் எனக்கு அந்த நீல நிஜார் ஒரு காலமானி. இருக்கும் போது அவர் அருமை தெரியவில்லை. குடும்ப மயக்கம். இன்று மனசு கிடந்து அடித்து கொள்கிறது. கெட்ட பின்பு ஞானி….

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 9

    -மேகலா இராமமூர்த்தி

    1932ஆம் ஆண்டு தோற்றம்பெற்ற  கலைமகள்  மாத இதழுக்கென்று ஓர் தனிச்சிறப்பு உண்டு. தமிழகப் பெண்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்த முதல் இதழ் அதுதான். கலைமகள் பெண் எழுத்தாளர்கள் வரிசை என்ற ஒன்றே அந்நாளில் இருந்திருக்கின்றது. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எம்.ஆர். ராஜம்மா போன்றவர்கள் அவ்வரிசையில் வரக்கூடியவர்கள். அவ்விதழில் பரிசுக்குரிய சிறுகதைகளையும் பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களே படைத்துள்ளனர் என்பது நாம் நினைந்து மகிழத்தக்கது. ராஜம் கிருஷ்ணனின் ’ஊசியும் உணர்வும்’, ’நூறு ரூபாய் நோட்டு’, ஆர். சூடாமணி எழுதிய ’காவேரி’ போன்றவை கலைமகளில் பரிசுபெற்ற சிறுகதைகளாகும்.

    1947இல், கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில், குறிப்பிடத்தக்க மற்றொரு பெண் எழுத்தாளரான, அநுத்தமாவின் முதல் கதையான ’அங்கயற்கண்ணி’ இரண்டாம் பரிசினைப் பெற்றது. பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் குடும்ப உறவுகள், குடும்பச் சிக்கல்களை மையமாக வைத்தே அப்போது கதைகள் எழுதினர். ராஜம் கிருஷ்ணன், சூடாமணிபோல் ஓரிருவர் மட்டுமே சமூக நோக்குடைய கதைகளை எழுதி வந்துள்ளதையும் அறியமுடிகின்றது. பெண்ணியச் சிந்தனைகளின் அடித்தளங்களைக் கட்டமைத்த பெருமை இப்பெண் எழுத்தாளர்களையே சாரும்.

    1960களில் தொடங்கி சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றவர்கள் சிறுகதைகள் அதிகம் எழுதியுள்ளனர். இவர்களது சிறுகதைகளில் பெரும்பாலும் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தையின்மை போன்றவை கருக்களாக அமைந்திருந்தன. எழுபத்தைந்துக்குப் பின் சிவசங்கரி, வாஸந்தி எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகப் பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றைக் கருவாகக் கொண்ட கதைகளை இவர்கள் எழுதத் தொடங்கினர்.

    இதழ்களேயன்றி வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று பல்வேறு வகைகளில் ஊடகத்துறை வளர்ச்சியும் விரிவும் கண்டது இருபதாம் நூற்றாண்டிலேயே. அதனால் எழுத்து மட்டுமல்லாமல், பேச்சு, நடிப்பு என்று பல்துறைகளில் தம் திறமைகளை வெளிப்படுத்தப் பெண்களுக்கு வாய்ப்புகள் கிட்டின.

    தொடக்க காலத் திரைப்படங்களில் நடிகையாக வலம்வந்த எம். எஸ். சுப்புலட்சுமி சிறந்த பின்னணிப் பாடகியாகவும் திகழ்ந்தார். இவரைப் போன்றே கே.பி. சுந்தராம்பாள், எஸ். வரலட்சுமி போன்றோர் நடிப்போடு சொந்தக் குரலில் பாடியும் புகழ்பெற்றனர். பி. பானுமதி, நடிப்பு, பாட்டு இவற்றோடு நில்லாது இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று திரைத்துறையின் பல்வேறு திறன்களும் ஆளுமையும் வாய்க்கப்பெற்ற அரிய பெண்மணியாய்த் திகழ்ந்தார்.

    ஆரம்பத்தில் ஆண் நடிகர்களுக்கு நிகரான கனமான பாத்திரங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பைப் பெண்களுக்கு(ம்) அளித்துவந்த திரைத்துறை பின்பு அந்த நல்ல போக்கிலிருந்து மெல்ல மாறி, பெண்களை வெறும் கவர்ச்சிப் பதுமைகளாகவும், போகப் பொருளாகவுமே திரைப்படங்களில் காட்சிப்படுத்தத் தொடங்கியது. 60களின் இறுதியில் தொடங்கிய இந்த அவலப்போக்கு இன்றுவரை மாறவில்லை என்பது பெரிதும் வருந்தத்தக்கது.

    தொலைக்காட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பத்தில் அரசாங்கத் தொலைக்காட்சிகள் ஒன்றிரண்டு இருந்தவரையில் செய்தி வாசிப்பது, அறிஞர்களைப் பேட்டியெடுப்பது என்ற அளவில்தான் பெண்களின் பங்களிப்பு இருந்துவந்தது. நாளடைவில், தனியார் தொலைக்காட்சிகள் புற்றீசல்கள்போல் புறப்படத் தொடங்கின. அத்தோடு பெரிய திரைக்குப் போட்டியாக அவையும் தொலைக்காட்சித் தொடர்களைப் படைக்கத் தொடங்கின. பெண்களுக்கு இவற்றில் அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதென்னவோ உண்மைதான். ஆனால் அவை பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இல்லை. அவர்களை இரக்கமே இல்லாத அரக்கிகளாகவும், நடமாடும் நகைக்கடைகளாகவும், எப்போதும் யாரையாவது பழிவாங்கத் துடிக்கும் கொடூர மனம் படைத்தவர்களாகவுமே காட்டிப் பெண்மையைப் பெரிதும் இழிவுபடுத்தி வருகின்றன.

    இவை போதாதென்று விளம்பரத்துறை என்றொரு துறை இருக்கின்றது. அத்துறைக்கு, ஆண்களுக்கான சிகரெட், உள்ளாடை, ஆணுறை விளம்பரங்களுக்குக் கூட அரைகுறை ஆடையணிந்த பெண்களே விளம்பர மாடல்களாகத் தேவைப்படுகிறார்கள்.

    இப்படியாக சின்ன திரை, பெரிய திரை, விளம்பரத்துறை மூன்றுமே பெண்களைப் போட்டி போட்டுக்கொண்டு கேவலப்படுத்துவதைத் தவிரப் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை.

    ஆண்களின் ஆதிக்கத்தில் அகப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்த மற்றொரு துறை மேடைப்பேச்சுத் துறை.  அத்துறையிலும் பெண்கள் மெதுவாய் நுழைந்து அரங்குகளை அணிசெய்யத் தொடங்கினர். புலவர் காந்திமதி, இளம்பிறை மணிமாறன், சாரதா நம்பிஆரூரன், இராம. சௌந்தரவல்லி, சரஸ்வதி இராமநாதன், சௌந்தரா கைலாசம் என்று நீளும் நாவரசிகளின் பட்டியலில் சமீப காலங்களில் பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் சுமதி, ஆண்டாள் பிரியதர்சினி, பர்வீன் சுல்தானா, விஜயசுந்தரி, சுமதிஸ்ரீ என்று பல பெண்கள் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசிவருவது பெண்டிர்க்குப் பெருமை தருவதாகும். ஆனால்…கவியரங்கம், பட்டிமண்டபம் போன்றவற்றில் அரங்கத் தலைமைக்கான நாற்காலிகள் இன்றும் ஆடவர்க்கே அதிகம் ஒதுக்கப்படுவது கண்கூடு.

    கல்விகற்ற பெண்கள் இப்போது அரசு மற்றும் தனியார்த்துறைகளில் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். தம் அன்றாடத் தேவைகளுக்கும் ஆண்களையே சார்ந்துநின்ற இழிநிலை மாறி இன்றைய பெண்களில் பலர் தம் சொந்தக் காலில் நிற்பதும், சொந்த உழைப்பில் சோற்றை உண்பதும் பெரிதும் போற்றுதலுக்குரியது. எனினும் பெண்களை வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களின் உழைப்பை வேண்டியமட்டும் சுரண்டும் அலுவலகங்கள், அவர்களின் தகுதிக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற உயர்பதவிகளை உரிய காலத்தில் வழங்குகின்றனவா என்று வினவினால் ’ஆம்’ என்று அழுத்தமாகச் சொல்லமுடியவில்லை.

    காரணம், ஆண் பெண் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் பெண்டிரை மட்டும் மேலெழும்ப விடாமல் தடுத்துநிற்கும் கண்ணாடிக் கூரைகள் (Glass ceiling). இக்கூரைகளைத் தகர்த்தெறிந்தால் மட்டுமே பெண்கள் தம் தகுதிக்கேற்ற பதவி உயர்வையும் ஊதியத்தையும் பெறமுடியும்.

    அடுத்ததாக நாம் ஆராயவேண்டியது பணியிடங்கள் பெண்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகின்ற வகையில் அமைந்திருக்கின்றனவா என்பது.

    தாம் கற்ற கல்வியால் தமக்குச் செல்வம் வருகின்றது என்பது பெண்டிர்க்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் உடன்பணிபுரியும் ஆடவரால் பெண்களில் பலர் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சுக்கள் போன்றவை அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அலுவலகத்தையே ’விடமென’ வெறுக்க வைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. இதனால் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் வாழவேண்டும் எனும் கொள்கையுடைய பெண்கள் மனத்துக்குப் பிடித்த நல்ல வேலையைக்கூட உதறிவிட்டு ஓடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்!

    இடைக்காலத்தில் பெண்டிர் கல்வி மறுக்கப்பட்டு, சிந்தனை முடக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டு நுகர்பொருளாகவே நோக்கப்பட்டார்கள் என்றால் ஆண்களுக்கு நிகராகக் கல்வி கற்கவும் பணிபுரியவும் அவர்கள் அனுமதிக்கப்படும் இன்றைய நவீன காலகட்டத்திலும்கூடப் பண்டமாகவும் தசைப் பிண்டமாகவுமே பெண்களைப் பார்க்கும் ஆண்களின் வக்கிரப் பார்வையிலும் கழிகாமச் செய்கைகளிலும் மாற்றமில்லை என்பது வெறுப்பையும் வேதனையையும் தருகின்றது. உயர் விழுமியங்களை ஒல்லும் வாயெல்லாம் ஓயாதுரைத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியாகவே இதனை நாம் எண்ண வேண்டியிருக்கின்றது.

    கடந்த இருபது ஆண்டுகளில் கணினித் துறை அசுரவளர்ச்சி கண்டிருக்கின்றது. அதன்பயனாய்த் தோன்றியிருக்கும் தொழில்நுட்பங்கள் நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றான திறன்பேசி (smartphone), நம் உள்ளங்கைக்குள் உலகத்து நிகழ்வுகள் அனைத்தையுமே கொண்டுவந்து தந்துவிடுகின்றது. ஊடகத்துறையின் புதிய அவதாரமாகப் புறப்பட்டிருக்கும் சமூக ஊடகங்கள் (social media), இணையத் தொடர்பு வைத்துள்ள அனைவருமே எழுத்தாளர்களாகவும், புகைப்பட நிபுணர்களாகவும் மாற வழிவகை செய்துவருகின்றது.

    நம் சிந்தனைகளை இணையத்தில் இலவசமாகப் பூக்கவைக்க உதவும் வலைப்பூக்கள் (Blogs), முகமறியாரோடும் முகமன்கூறிப் பழகவைக்கும் முகநூல் (Facebook), எண்ணச் சிறகால் வையமெங்கும் வட்டமடித்துப் பறக்கவைக்கும் சிட்டுரை (Twitter), சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் நெருக்கமான நண்பர்களோடு அலச உதவும் புலனம் (WhatsApp), வண்ணப் புகைப்படங்களைச் சுடச்சுட வெளியிட்டுத் தம் அழகையும் ஆளுமையையும் பறைசாற்றப் பயன்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) என எத்தனை வகைகளில் மனிதர்களின் வாழ்க்கையை இவ்வசதிகள் வனப்புறச்செய்கின்றன!

    எனினும் ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் நம்மை வசீகரிக்கும் இத்தொழில்நுட்பங்களுக்குக் கோரமான இன்னொரு முகமும் இருக்கவே செய்கின்றது.

     [தொடரும்]

    *****

    http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011223-23799

     

    Share
  • அமைதிக்காக …அமைதியாக!!

    சத்தியமணி

    இலங்கைக்கு இன்று ? இதுபோல் எத்தனையோ அன்று ?
    வலக்கைக்குப் புரியும் இடக்கைக்குத் தெரியும் ?
    எதுவரை போகும் ? எப்போது முடியும் ?
    எத்துணை வருடங்கள்? இன்னும் காக்கவேணும் ?

    ஆலயங்களில் வெடி. ஆன்மீகத்தில் பழி.
    ஆண்டவர்மேல் கேலி. ஆறாத எகத்தாளம்.
    யாரும் கண்டிக்காது எவரையும் மன்னிக்காது
    வன்மம் வளர்கிறது….. வஞ்சகம் விளைகிறது.

    கேட்டவர்க்குக் கலக்கம். தப்பித்தவர்க்கு நடுக்கம்.
    பார்த்தவர்க்குப் பரிதாபம் ….வார்த்தவர்க்கு அனுதாபம்
    காயப்பட்டோர்க்கோ மயக்கம், இறந்தவர்க்கோ இழப்பு
    அன்புள்ளே அதிர்ச்சி……அகிம்சைக்குத் தளர்ச்சி

    வெறிகளாலும் வெறுப்புகளாலும்
    காழ்ப்புணர்வுகளாலும் கலவரங்களாலும்
    தன்னலங்களாலும் கொடூர வன்மங்களினாலும்
    மனிதன் தான் மாய்கிறான்.
    மண் தான் புண்ணாகிறது
    எத்தனை புதைகுழிகள்
    அத்தனை விழுப்புண்கள்.

    யாருக்கோ இழப்பில்லை…நமக்குத்தான்
    யாருக்கோ துக்கமில்லை…நமக்குத்தான்
    யாருக்கோ வலியில்லை..நமக்குத்தான்
    யாருக்கோ பழியில்லை..நமக்குத்தான்
    யாருக்கோ பாவமில்லை..நமக்குத்தான்
    என்று புரியுமோ அன்று தான் விடியும்
    அமைதிக்காக … அமைதியாக!!!

    Share
  • கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    புதுவை அருகு  திருவாண்டார் கோயில் எனும் ஊரில் அமைந்த பஞ்சநதீசுவரர் கோயிலின் தனித்துக் கிடக்கும் கற்பலகையில் உள்ள 18ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட  கல்வெட்டு.

    1. விளம்பிஸ்ரீ_ _ _
    2. மாதம் 10 தேதி நயினார்
    3. வசவப்ப மழவராயர்
    4. திருவய்யாறுடை
    5. ய நயினார் கோயில்
    6. வந்தேறு குடியளு
    7. க்கு கட்டளை விட்டபடி
    8. திருவாண்டார் கோயி
    9. லில் குடியிலிபா
    10. ழாக இருக்கவல்
    11. அண்ணமாரை
    12. யன் குடியேற்
    13. றிக் கொள்ள சொல்
    14. விருத்தகை இரு
    15. க்கையில் தம் கு
    16. டியளுக்கு கட்டளை
    17. இட்டபடி கையிகோளர்
    18. வியாபாரியள் உண்
    19. டான பலபட்டடை
    20. காசவற்கத்துக்கும்
    21. குடியளுக்கும் இவரு
    22. ஷம் ஒன்றுக்கு
    23. மானியம். அதுக்கு
    24. மேல் மாதம் ஒன்றுக்
    25. கு அரைக் கட்டணமு
    26. ம் ஆயத்துக்கு மா
    27. தம் மூன்று காசு

    விருத்தகை – வேண்டுகோள்; பலபட்டடை – வணிகர் மற்றும் கைத் தொழில் செய்வோர் வரி; காசவற்கம் – வரியை நாணயமாக செலுத்தும் கைத்தொழிலோர், வணிகர்; ஆயம் – நிர்வாகம் வரி.

    விளக்கம்: விளம்பி ஆண்டு 16 ஆம் நூற்றாண்டில் 1539 & 1599 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. வசவப்ப மழவராயர் கட்டளைப்படி பஞ்சநதீசுவரர் கோயில் அமைந்த திருவாண்டார் கோயில் ஊரில் வந்து குடியேறும் குடிகளுக்கு இட்ட கட்டளை. திருவாண்டார் கோவிலில் குடியில்லாத வறிதாக இருக்கின்ற நிலங்களில் அண்ணமாரையன் குடியேற்றிக் கொள்ளச் சொல்லி வேண்டுகோள் தெரிவித்திருந்தபடி தம் குடிகளிடம் கட்டளையிட்டபடி கைக்கோள வணிகர்கள் உள்ளிட்ட பல தொழில் செய்வோர், வரிகட்டும் வணிகர் உள்ளிட்ட குடியேறும் குடிகள் இவ்வாண்டு மட்டும் மானியம் பெறலாம். அதன்பின் மாதம் ஒன்றுக்கு அரைக் கட்டணமும் நிர்வாகத்திற்கு மாதம் மூன்று காசும் செலுத்த வேண்டும்.

    இந்நாளைய நகர வரி போல் உள்ளது, அந்நாளைய ஆயம். பண்டு மக்கள் அதிக வரிச்சுமைக்கு ஆளாகி இருந்தனர். அதிலும் குறிப்பாக நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்ட முடியாத அளவிற்கு அதிக வரிச்சுமை.

    பார்வை நூல்: வரலாற்றில் திருவாண்டார் கோயில், வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன்

    புதுவை காரைக்கால் அருகு மேல்பொன்பேத்தி ஊரில் தனியார் வீட்டின் வாயிற்படியில் உள்ள கற்பலகையில் பொறித்த  16 ஆம்  நூற்றாண்டு 20 வரிக் கல்வெட்டு. இந்தக் கோட்டுச்சேரி, காரைக்காலிலிருந்து பொறையாறு செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

    1. ஆங்கீர ஆண்டு வைய்யாசி 10ந் தேதி
    2. ஸ்ரீமதுராயச _ _ _ _ _ ருவர் அய்யன் கா
    3. ரியத்துகே _ _ _ _ _ தவதரையர்
    4. கோட்டுச்சேரி பட்டணவர் செங்
    5. கணச்செட்டி எறையச் செட்டி ஆ
    6. லத்துடைய நம்பி அறம்[வ]ளத்த
    7. நம்பி உள்ப்பட்டாற்கு குடுத்த ச
    8. றுவ மானியப் பட்டையம்
    9. இந்த ஊர்ப் பட்டணச்சேரி வரு
    10. ஷம் ஒன்றுக்கு அய்யன் கட்டளை
    11. பொன் அறுபது இந்தக் கட்டளை
    12. இட்ட[தி]ல் தரும் பொன் அறுபதுக்கு
    13. ள்ளே இந்த ஊரில் பரவை மீனு
    14. [ம்] பட்டணச்சேரி _ _ _ _ _ த்துடநே சே
    15. [ர்]ந்தபடியாலே [நா]ளது முதல் சந்தி
    16. ராதித்தவரையும் கோட்டுச்சேரி பரவை
    17. மீன் உள்பட பட்டணவரே அனு
    18. பவித்துக் கொள்ளவும் யிந்த மாநி
    19. யத்தை இயாதொருவ_ _ _ _ _
    20. அழித்தவன்

    பட்டணவர்–மீனவச் செட்டியார்  அய்யன் கட்டளை – அய்யனுடைய  நில எல்லை பரவை மீன் – கடல் மீன்

    விளக்கம்: 18ஆம் நூற்றண்டில் ஆங்கிர ஆண்டு கி.பி. 1742-1743 இல் நிகழ்கின்றது. கோட்டுச்சேரி பட்டணவரான செங்கணச் செட்டி, எறையச்செட்டி, ஆலத்துடைய நம்பி, அறம்வளர்த்த நம்பி உள்ளிட்ட நால்வருக்கு கொடுத்த சர்வமானிய பட்டயம் யாதெனில் அய்யன் கட்டளை வரை உள்ள பட்டணச்சேரியில் ஆண்டு ஒன்றுக்கு 60 பொன் ஓபோ கட்டவேண்டும். இப்படி தரும் பொன் அறுபதுக்கு கடல்மீனை பிடிக்கும் உரிமையை இந்த நால்வரே அனுபவிப்பாராக என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டணவர் 12ஆம் நூற்றாண்டில் துணி, ஆடை நெய்து விற்றுவந்தனர் என்று தெரிகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் மீன் விற்க வந்துவிட்டனர்.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                       S. Kuppusamy & G. Vijayavenugopal.

    திருப்புவனை வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு வராந்தா திருச்சுற்று மதில் 10 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணரப் புவிமாது விளங்க நாமாது வி[ளங்க] ஜயமாது மகிழத் தந்திரு பாதமலர் மன்நவர் சூட மந்நிய வுரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் செந்று திசை தொறு நடப்ப வேங்கலி  நீங்க மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடம
    2. லை நடத்தி வலங்கோளாழி வரையாழி [ந]டப்ப இருசுடரளவும் ஒருகுடை சுழற்றச் செம்பொன் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக் கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபந்மரான த்ரி(பு)ஹுவ[ன]ச் சக்கரவத்தி
    3. கள் ஸ்ரீ விக்கிரம சோழ [தேவர்]க்கு யாண்டு ஒன்பதாவது ராஜராஜ வளநாட்டு வீராவதார வளநாட்டு ப்ரஹ்மதேயம் [த்ரி]புவன மாதேவிச் சதுப்பேதி மங்கலத்து [ந]டுவிற் கோயில் ஸ்ரீவீரநாராயண விண்ணகராழ்வார்க்கு இர _ _ _ _ _
    4. ணவர் ப்ரஹ்மவைஸ்வநு[க்]கு ஜனித்த [ப்ரித்ரஷ்ட] ஆயோஹவாரானப் பற்றுள்ணர்கு உபநயாநாதி கருமங்களுக்கும் தேவர்களுக்கு  [த்வ]ஜ படமும் சாத்தியருளத் திருப்பரிசட்டங்களும் ராஜாக்களுக்குச் சாத்தியருளத் திருப்பரிச்ச[ட்டங்களும்]
    5. நெய்யக் கடவ முறைமையாலும் பல ஆஹமங்களும் ங ஸ்மிதிகளாலும் ((ஞ்) சொல்லுதலாலும் செய்யக்கடவராவ[ர்]களே யாதலால் இக்கோயிலுக்கு இவர்களுக்கு நிமந்தமாகவிட்ட நிலம் ஜனனாத நல்லூர்க் கட்டளையில் இவ்வாழ்வார்
    6. யிறையிலி நிலத்தில் திரிபுவனமாதேவி வதிக்கு மேற்குப் பிராந்தக வா[ய்]க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று முதற் சதிரத்துக் கிழக்கடைய நிலம் ஆறுமாவில்  வடக்கடைய நில[ம்] இருமாவரையும் சேட்படி விளாகத்தில் வடதலை
    7. யிலே பத்து மனையுங்  கைக்கொண்டு  வைகாசித் திருநாளைக்கு நாலு  திருப்பரிச்சட்டமும்  திருவுத்திரியம் இரண்டு  திருமுடிச்சேலை  இரண்டும்  விஷுவயன ஸங்கிரமங்கள் நாலுக்கு திருப்பரிசட்டம்  நாலும் து[வ]ஜ படமும்  திருவாசலுக்கு  திருநமநி
    8. கையும் திருவிதான ஒந்றும் ஆக இவ்வூர்க்கள் பணிமாரக் கடவோமாக இந்நிலம் இம்மனைகளும் கைக் கொண்டு சிலாலேகை  பண்ணிக்   குடத்தோம்  இயோரிரான பட்டணவரோம். இப்படி  செய்யாவிடில்  இவ்வாழ்வார் கோயிலில் ஸ்ரீவயிஷ்ண
    9. வர் தடுத்தும் வளைத்தும்  தண்டியும்  சிறையாக்கியும் கொள்ளக்கடவ[ர்]களாக  ஸம்மதித்தோம்  செங்காட்டுப் புத்தூரான உத்தம சோழப் பட்டணத்தோமும் உம்பர்பாடியான உய்யக்கொண்ட  சோழபட்
    10. டணத்தோமும்  வேளார்  காணியான  இராஜேந்திர சோழபுரத்தோமும்  கருப்பூரான  விக்கிரம  சோழபுர்த்தோ[மு]ம்.  ஸ்ரீ வைஷ்ணவர்  இரக்ஷை.

    உபநயநாதி கர்மம் – பூணூல் சடங்கு; தேவர்களுக்கு – பிராமணர்களுக்கு; த்வஜ படமும் – பிராணமத் துணியும்; திருப்பரிசட்டம் – செப்புத் திருமேனிகளுக்கு சாற்றும் ஆடை; கட்டளை – எல்லைக்கு உட்பட்ட, jurisdiction;  வதிக்கு –  கால்வாய்க்கு; கண்ணாறு – சிறு பாசன வாய்க்கால்; திருவுத்திரியம் – தோள் துண்டு; விஷுவயன சம்கிரமங்கள் – புத்தாண்டு, அயன கால சடங்குகள்; பணிமார – செய்து தர; இயோரியரான –

    விளக்கம்: விக்கிரம சோழனின்  9 ஆம் ஆண்டு (கி.பி. 1127) ஆட்சிக் கல்வெட்டு. முதல் இரண்டு வரிகளில் மெய்கீர்த்தியுடன் தொடங்குகின்றது. பிரதிலோமரில் அடங்கும் பிரம்ம வைசியரான இதாவது, பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்த ஆயோகவரான பட்டணவர் பற்றியது.  பூணூல் சடங்குகளில் பிராமணருக்கு பிராமண ஆடை, மேனியில் சாற்றத் துணி. அதே போல் வேந்தர், மன்னவர், அரசர், கிழார் உள்ளிட்ட ஆளும் குடிக்கு மேனியில் சாற்றும் துணியும் நெய்ய வேண்டிய முறையில் நெய்ய ஆகமங்களும் ஸ்மிருதிகளும் சொல்லுகின்ற முறையில் நெய்பவராதலால்  இக்கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு ஆடை சாற்ற இவர்களுக்கு நிவந்தமாக (பணிக்கூலி) விட்ட நிலம் ஐனனாத நல்லூர் வரம்பில் உள்ள இவ்விறைவர்க்குச் சொந்தமான இறையிலி நிலம் (நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது) இருமாவரையும் அதோடு சேட்படி விளாகத்தில் வடதலையில் பத்து வீடுகளும் இவர்கள் ஏற்று வைசாகித்  திருநாளுக்கு  நான்கு  சாற்றும் ஆடை, தோள்துண்டு, இரண்டு  திருமுடிச்சேலை,  கொடிக்குத் துணி,  திருவாசலுக்கு திருநமநிகை திருவிதானம் ஒன்று என இந்த உருப்படிகளைச் செய்து தந்து இந்நிலம் இவ்வீடுகளை கைக்கொண்டு இப்படியே ஆவதாகக் கல்வெட்டிக் கொடுத்தோம் பட்டணவரான நாம். இப்படி செய்யாவிட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் எங்கள் தொழிலைத் தடுக்கவும், எம் உடலை வளைக்கவும், எம்மைத் தண்டிக்கவும், சிறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். செங்காட்டுப் புத்தூர் உத்தம சோழ பட்டணத்தோம், உம்பர்பாடி உய்யக்கொண்ட சோழ பட்டணத்தோம்,  வேளார் காணி ராஜேந்திர சோழபுரத்தோம், கருப்பூரான விக்கிரம சோழபுரத்தோம் என நான்கு ஊர் பட்டணத்தவர் இந்த ஒப்பந்தத்தை    மேற்கொண்டனர். இது கோயில் சார்பாளர் பட்டணத்தவர் என இரு தரப்புக் கல்வெட்டு ஆகும்.

    எப்படி அனுலோமர் என்பது உண்மையில் இல்லாததோ, அப்படித்தான் பிரதிலோமர் என்பதும் இல்லாதது. அதனால்தான் இங்கு சாஸ்திரம் வலிந்து சுட்டிக் காட்டப்படுகின்றது. பட்டணவர் எவரும் சாஸ்திரம் சொல்லுவது போல பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர் அல்லர்.  மாறாக தந்தை தாய் இருவருமே வணிகர் குலத்தவர்தாம்.  இந்தப் பட்டணவர் சாதி, பிராமண தந்தை வைசியத் தாய்க்கு பிறந்தவரை மூதாதையராகக் கொண்டது என்பதும் ஏரணப்படி ஏற்புடையது அல்ல. இந்த வரையறை பட்டணவருக்குத் தெரிந்திருக்க வாயப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால் அதை அவர் ஏற்றிருக்க மாட்டார் என்பது திண்ணம். என்றாலும் இப்படி ஒன்றிரண்டு கல்வெட்டுகள் இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நால் வருணமும் மனு தர்மமும் சோழர் ஆட்சியில் கோலோச்சியதாகப் பிதற்றுகின்றனர், தொல்லியல் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

    மேற்கண்ட இரண்டாம் கல்வெட்டில் பட்டணவர் மீனவச் செட்டியாராக அறியப்படுகின்றனர். இக்கல்வெட்டிலோ, ஆடை நெய்பவராக அறியப்படுகின்றனர். இவற்றில் இடம்பெறும் இருவரும் ஒரே சாதியார் என்றால் 12ஆம் நூற்றாண்டில் ஒருதொழிலும் 18ஆம் நூற்றாண்டில் வேறு ஒரு தொழிலும் செய்யக் காரணம் என்ன? என்று ஆராய்ந்தால் அயலவரான விஜயநகரர் ஆட்சியின் போதும் நாயக்கர் ஆட்சியின் போதும் ஆந்திரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிரர் மற்றும் முத்திரிய நாயுடுகள் ஆகியோர்  கோயில் ஆடைகள் நெய்யவும் ஆட்சியாளருக்கு ஆடை நெய்யவும் உரிமை பெற்றதால் தமிழ்ப் பட்டணவர் வாழ்வாதாரம் இழந்து மீன் விற்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. அயலவர் படையெடுப்பும் ஆட்சியும் இந்த அளவிற்கு சமூக பொருளியல் பாதிப்பை தமிழருக்கு  ஏற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் உணர முடிகின்றது.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                         S. Kuppusamy & G. Vijayavenugopal,  Institut Francais De Pondichéry :  2006

    https://en.wikipedia.org/wiki/Varadharajaperumal_temple,_Thirubuvanai

    Share
  • குறளின் கதிர்களாய்…(254)

    செண்பக ஜெகதீசன்

    இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
    ததனை யவன்கண் விடல்.

    -திருக்குறள் -517  (தெரிந்து வினையாடல்)

    புதுக் கவிதையில்…

    இவ்வினையை
    இவ்வழியில்
    இவன்
    பழுதின்றிச் செய்வான்
    என்பதைப்
    பகுத்தாராய்ந்து அறிந்தபின்னே
    அவனிடம் ஒப்படைக்கவேண்டும்
    அச்செயலை…!

    குறும்பாவில்…

    செயல் கருவி செயல்படுவோன்
    மூன்றையும் பகுத்தாராய்ந்து அறிந்தபின்னே,
    அவனிடம் ஒப்படைக்கவேண்டும் செயல்பட…!

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலின் தரமறிந்து
    சேர்க்கும் கருவி தனையறிந்து,
    செய்வோன் தனது திறமறிந்து
    சேர்த்து மூன்றையும் ஆராய்ந்து,
    மெய்யதை நன்றாய் முழுதுணர்ந்து
    முடிவு செய்த பின்னர்தான்
    செய்யும் செயலினைத் தொடங்கிடவே
    சேர்க்க வேண்டும் அவனிடமே…!

    லிமரைக்கூ..

    வினைவிவரங்கள் முதலில் எடுத்துவிடு
    செயல் கருவி செய்பவன் தன்மை மூன்றையுமே,
    ஆராய்ந்தறிந்து செயல்படக் கொடுத்துவிடு…!

    கிராமிய பாணியில்…

    வேலகுடு வேலகுடு
    விவரமறிஞ்சி வேலகுடு,
    ஆள அறிஞ்சி ஆராஞ்சி
    அப்புறமா வேல செய்யவுடு..

    வேல விவரமறிஞ்சி
    செய்யிற வழியறிஞ்சி
    செய்யிறவன் தெறமயறிஞ்சி,
    எல்லாத்தையும் அலசி ஆராஞ்சி
    அப்புறந்தான் அவங்கிட்ட வேலய
    ஒப்படைக்கணும்..

    அதால
    வேலகுடு வேலகுடு
    விவரமறிஞ்சி வேலகுடு,
    ஆள அறிஞ்சி ஆராஞ்சி
    அப்புறமா வேல செய்யவுடு…!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 33

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 33

    33.கொல்லாமை

    குறள் 321:

    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாந் தரும்

    அறம் ங்கது என்னன்னா எந்த உசிரயும் கொல்லாம இருக்கது. கொல்லுதது எல்லா பாவத்தையும் குடுக்கும்.

    குறள் 322:

    பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
    தொகுத்தவற்று ளெல்லாந் தலை

    இருக்கத பங்குபோட்டு சேந்து சாப்புட்டு பல உசிர காப்பாத்தணும் ங்கது நூல்கள எழுதினவங்க தொகுத்த எல்லா அறத்திலயும் ஒசத்தியா நிக்குத அறம்.

    குறள் 323:

    ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று

    அறங்கள வரிசப்படி வச்சோம்னா மொதல்ல உசிர கொல்லாம இருக்குத கொல்லாமையும் அதுக்கு பொறத்தால பொய் பேசாத பொய்யாமையும் இருக்கும்.

    குறள் 324:

    நல்லா றெனப்படுவது யாதெனின் யாதொன்றுங்
    கொல்லாமை சூழும் நெறி

    நல்ல வழி எதுன்னு கேட்டா எந்த உசிரயும் கொல்லாம இருக்குத அறம் காக்குத வழி தான்.

    குறள் 325:

    நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை

    ஒலகத்து வாழ்க்கைய வெறுத்த துறவிய விட ஒரு உசிரயும் கொல்லக் கூடாதுனு நெனைக்கவன் தான் ஒசந்தவன்.

    குறள் 326:

    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லா துயிருண்ணுங் கூற்று

    கொலை செய்யாமை ங்குத அறத்தைக் கடைபிடிக்கவனோட பெருமையப் பாத்து சாவு கூட கிட்டத்துல அண்டத் தயங்கும்.

    குறள் 327:

    தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
    தின்னுயிர் நீக்கும் வினை

    தான் சாவப் போறோம் ங்குத நெலமைல அத தடுக்குததுக்காவ கூட மத்தவன் உசிர எடுக்குத செயல செய்யக் கூடாது.

    குறள் 328:

    நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை

    கொல செய்யுததுனால பெரிசா நன்ம கெடைக்கதா இருந்தாலும் படிச்ச பெரிய மனுசங்க அந்த நன்மைய தாழ்த்தியா தான் நெனைப்பாங்க.

    குறள் 329:

    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
    புன்மை தெரிவா ரகத்து

    கொல செய்யுதத தொழிலா நடத்துதவங்க தன் தப்ப உணந்துகிடலனாலும் அத அறிஞ்ச பெரிய மனுசங்க மனசுக்குள்ளார அவங்க தாழ்த்தியா தான் நெனைக்கப்படுவாங்க.

    குறள் 330:

    உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
    செல்லாத்தீ வாழ்க்கை யவர்

    காசு பணமில்லாம நோவு நொடியோட கெடந்து சீரளியுதவன் முன்ன பல உசிரக் கொன்ன பாவத்த செஞ்சிருப்பான்னு அறிவாளிங்க சொல்லுதாங்க.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!

    இன்னம்பூரான்

    திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5]

    டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்றுப் பேராசிரியர், என்னுடைய மாமனார். மணிக் கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப் புனல் காலத்துச் செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, என் மனத்தில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்துகொண்டேன். அது மனத்தில் உதித்தது, இன்றும்.

    “குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹம் அன்றோ! ஊற்றுகளும் உப நதிகளும் கிளை நதிகளும் காட்டாறுகளும் நீரோடைகளும் நீர் வீழ்ச்சிகளும் கால்வாய்களும் வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்கா மாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவ ப்ரயாக், ருத்ர ப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்ப சாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிற நீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்துகொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்…”

    நூற்றாண்டின் சில தினங்கள், சோக தினங்களாக அமையும். எந்த வரலாறும் அவற்றைப் புறக்கணிக்க முடியாது. திரு.வி.க. அவர்கள் தேசபக்தர். காந்தீயவாதி. காந்திஜி சத்யாக்ரஹம் தொடங்கியதை அடுத்து, நன்நிமித்தங்களும் நடந்தன. சம்பந்தமில்லாத தீநிமித்தங்களும் பேயாட்டம் ஆடின. அதைத்தான் ‘ஒரு பேய்ப்பழம்’ என்று இரண்டாவது பகுதியில் கூறினேன். கலோனிய அரசின் அகம்பாவ ஆதிக்கத்தால் கண கண என்றிருந்த கனல், வேள்வித் தீயாகப் பரிமளித்து, குருதிப் புனலாக அமைந்துவிட்ட தினத்தின் நூற்றாண்டு தினம் இன்று.

    நீதி மன்றத்தைப் புறக்கணித்து, மக்களில் சிலரைச் சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், பஞ்சாபின் ‘அமுதக்கேணி’ எனப்படும் அமிருதசரசில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்சலு, டாகடர் சத்யபால் என்ற இருவரையும் அரசு உளவுத்துறை கண்காணித்து வந்தனர். ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்தச் சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறைச் சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுதீன் கிச்லூவும், டாக்டர் சத்யபாலும் கைது செய்யப்பட்டு தர்மசாலாவுக்குக் கடத்தப்பட்டனர்.

    [டாக்டர் சைஃபுதீன் கிச்லூ 65 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென அவரைப் பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கிக் குத்திய வண்ணம், அவர் ஆவேசமாகப் பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947இல் இந்தியாவின் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்காரர், இவர் தான். அந்தக் கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்]

    போலீஸார் கெடிபிடி ஓங்கியது. கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ஆம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். சொல்லப் போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி.

    ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப் பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக்கில், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை. மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப் பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5.50-இலிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத் தள்ளினான். தாங்க முடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர். சிலகாலம் முன்பு பாபு சிங்காரா சிங், 87 அந்த குருதிப்புனலை நினைவு கூர்ந்தார். கூட்டத்தை நோக்கி, ராணுவத்தை அணி வகுத்து டையர் என்ற பேய்பிடித்த ராணுவ அதிகாரி, குறி வைத்துச் சுட்டதில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். இது அரசின் கணிப்பு. ஆயிரம் மக்கள் மாண்டதாக, மற்ற ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.

    இந்த ஆங்கிலேயர்களுக்கு சொல் மாற்றம், கைப்பழக்கம். சில நாட்கள் முன்னால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, இந்தக் குருதிப் புனலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்கத் தயாரில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சி தலைவர், மன்னிப்பு கேட்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். 2019ஆம் வருடம், ஆங்கிலேய அரசின் விந்தையான அணுகுமுறை இது.

    நூறு வருடங்களுக்கு முன் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதை அடுத்த தொடரில் பார்த்து விட்டு, திரு.வி.க. பக்கம் திரும்புவோமாக.

    Pic Courtesy: Wikipedia

    Share
  • குடும்பம் என்றாலே குழப்பம்தான்!

    – நிர்மலா ராகவன்

    (நலம், நலமறிய ஆவல் – 155)     

    ஒவ்வொரு குடும்பத்திலும் செய்யக்கூடியவை, கூடாதவை என்று எழுதப்படாத சில விதிமுறைகள் இருக்கும். தாய், தந்தை இருவருமே அவைகளை ஏற்காதபோது குழப்பம் வருகிறது.

    கதை

    வனமாலா விளையாட்டுகளில் விருப்பமும் திறமையும் கொண்டவள். அவளுடைய தந்தையோ, மகளின் நேரம் அதனால் விரயமாகிறது, அந்த ஆர்வத்தையும், பொழுதையும் படிப்பில் செலுத்தினால் வாழ்வில் நன்றாக முன்னேறலாமே என்று எண்ணினார். அதன் விளைவாக, பள்ளிக்கூடத்தில் அவள் எந்த விளையாட்டுப்போட்டியிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். அவளோ பள்ளியின் பிரதிநிதி!

    மகளுடைய மனம் தாய்க்குப் புரிந்தது. அவள் சிறுமியாக இருந்தபோது எத்தனை இடர்களைச் சமாளிக்கமுடியாது திணறியிருப்பாள்!

    “நீ சேர்ந்துகொள்! அப்பாவிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!” என்று மகளுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.

    அவர்கள் எதிர்பார்த்தபடி தந்தை அதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தன்னையே எதிர்த்து ஒரு காரியம் செய்வதாவது!

    “உனக்கு நான் சொல்வதற்கு நேர்மாறாக ஏதாவது செய்தாகவேண்டும்!” என்று அவர் கத்த, “யாராவது மகிழ்ச்சியாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்காதே!” என்று பதிலுக்கு அவளும் குற்றம் சாட்டினாள்.

    கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் முற்றியது.

    “நீ சொல்வதுதான் சரியென்று சாதிக்கிறாயே! அதுமட்டும் ஏன் சரியாக இருக்கவேண்டும்?”

    வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் பெற்றோர் ஒத்துப்போகாது, தமது விருப்பு வெறுப்பை குழந்தைகள்மீது திணித்தால் அனைவருக்குமே சிரமம்தான்.

    நன்கு படித்து, நிறைய பட்டங்கள் வாங்கினால் பெரிய உத்தியோகத்திற்குப் போகலாம் என்று நம்பினார் வனமாலாவின் தந்தை. அதனால் தானும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமே!

    நல்லதாகவே இருந்தாலும், பிடித்ததைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் வருத்தமும் மனக்குழப்பமும் உண்டாகும் என்று தாய்க்குப் புரிந்திருந்தது. அதனால், `அப்பா சொல்வதைக் கேட்டு நட!’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து, மகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.

    வனமாலாவின் பாடுதான் திண்டாட்டமாக ஆயிற்று. இறுதியில், அப்பாவை எதிர்க்கலாம், அம்மா தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்று தோன்றிப்போயிற்று.

    தாய் ரகசியமாக மகளிடம் சொன்னாள்: “விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி, படிப்பில் கோட்டைவிட்டுவிடாதே! அப்புறம் நான்தான் அப்பாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!”

    மகளுக்குப் பொறுப்பு வந்தது.

    விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றாள். ஆனால், தன் மகிழ்ச்சியைத் தந்தையுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றவில்லை. அவர் ஊக்குவித்தாரா, என்ன!

    “என்னிடம் யாரும், எதுவும் சொல்வதில்லை!” என்று முணுமுணுப்பாக வருந்தத்தான் முடிந்தது தந்தைக்கு.

    இந்த மனக்கசப்பை எப்படித் தவிர்த்திருக்கலாம்?

    கணவன் மனைவி இருவரும் தனித்திருக்கும்போது, தம் குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என்று கலந்துபேசி, ஒரு முடிவுக்கு வருவது நல்லது. குழந்தைகளின் எதிரில் அவர்கள் வாக்குவாதம் செய்தால், தமக்கு ஏற்ற ஒருவர்புறம் சாய்ந்து, மற்றவரை அலட்சியப்படுத்தத் துணிவார்கள் குழந்தைகள். ஒரு கட்சி ஓங்கியிருக்கும்.

    எதற்காக வளர்ப்பது?

    குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் பெரியவர்களானதும் நிறையச் சம்பாதித்து, வயது முதிர்ந்த காலத்தில் நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கல்ல. பிறருடன் நன்கு பழகி, தமக்கும் பிறருக்கும் உபயோகமாக இருக்க அவர்களைப் பழக்கவேண்டும்.

    `நீ செய்யும் தவறுகளுக்கு நீதான் பொறுப்பு!’ என்று இரண்டு வயதிலிருந்தே பழக்க இயலும்.

    வயதுக்கேற்ற பொறுப்பு

    குழந்தை காகிதக்குப்பையை குப்பைத்தொட்டிக்குள் போடாமல், அலட்சியமாக எடுத்து வீசுகிறதா?

    “எடுத்து, சரியா உள்ளே போடு!”

    இது அதிகாரமில்லை. எதையும் சரியாகச் செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பது.

    வீட்டில் அழ அழச் சொல்லிக்கொடுத்தால், பிறகு நான்கு பேர் அவனைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்கள். பாராட்டைப் பெறுவான்.

    குழந்தைகளோ, பெற்றோரால் தடை செய்யப்பட்டவைகளை எப்படி மீறலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்கள்.

    என் மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எதற்கோ கோபித்தேன்.

    உடனே, “சுபீரா இப்படிச் செஞ்சா பக்கத்தாத்து ஆன்ட்டி திட்டமாட்டா!” என்று எகிறினாள்.

    சுபீராவின் தாயுடைய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம்.

    அலட்டிக்கொள்ளாது ,“அப்போ, நீ அங்கேயே போயிடேன்!” என்றேன்.

    பயந்துவிட்டாள். “சும்மா ஜோக் பண்ணினேன்!”

    “ஏன் சும்மாச் சும்மா திட்டறே? ஒனக்கு என்னைப் பிடிக்காது?” இது நான்கு வயதில்.

    “தப்பு பண்ணினா திட்டணும். (அதாவது, கண்டிக்க வேண்டும்). இல்லேன்னா, நீ அசடாப் போயிடுவே!” என்று விளக்கினேன்.

    ஒரு முறை, உறவினர் வீட்டில் சில தினங்கள் கழித்துவிட்டு, “என்னை இனிமே அங்கே அனுப்பாதே. அசடாப்போயிடுவேன். தப்பு பண்ணினா திட்ட மாட்டேங்கறா!” என்றாள்!

    இதுதான் மனித குணம். தவறு செய்கிறோம் என்று தெரிந்தே செய்துவிட்டு, மாட்டிக்கொண்டால் முழிப்பது!

    ஆத்திரமும் குற்ற உணர்ச்சியும்

    என்னுடன் வேலைபார்த்த மஞ்சித் கௌர், “நேற்று எனக்கு ஒரே ஆத்திரம். Go to hell! என்று என் மகளைப் பார்த்துக் கத்திவிட்டேன்!” என்று தெரிவித்தாள்.

    உற்றவரைப் பார்த்து, `நரகத்துக்குப் போ!’ என்று ஆத்திரத்தில் கத்தும்போது, உண்மையில் அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போய்விடுவோம் என்று யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை.

    குற்ற உணர்ச்சி மெதுவாக வருகிறது.

    இதை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. பொறுமையை இழக்காமலேயே இருக்க முனிவர்களாலேயே முடியவில்லையே, நாமெல்லாம் எம்மாத்திரம்!

    சற்று நிதானம் பிறந்ததும், `நான் களைப்பாக இருக்கும்போது தொந்தரவு செய்தாய். அதான் அப்படிப் பேசிவிட்டேன்!’ என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசினால், நிம்மதியுடன் புன்னகைப்பாள் மகள்.

    மன்னிப்பு கேட்கும் நல்ல பழக்கத்தை இப்படித்தான், நம்மையறியாது, புகுத்திவிட முடிகிறது.

    குழந்தைகளின் எதிர்ப்பு

    தம் மனக்குழப்பத்தை பெற்றோர்தாம் குழந்தைகளிடம் ஏதோ வழியில் காட்டுவார்கள் என்பதில்லை.

    கதை

    தகுந்த பணிப்பெண்கள் கிடைக்காததால், என் மகன் சசி இரண்டு வயதிலேயே பாலர் பள்ளிக்குப் போனான்.

    ஒரு நாள், என்னை முறைத்தபடி, “You so proud!” என்றான். விம்மலில் பிஞ்சு உதடுகள் துடித்தன.

    அதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம். யாரோ அவன் மனதை நோகடித்திருக்கிறார்கள். அதை இப்படி வெளிப்படுத்துகிறான்!

    நான் என் குழந்தைகளை நிறையப் புகழ்ந்து, அதன்மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்படுமாறு வளர்த்திருந்தேன்.

    அவன்மேல் எந்தத் தவறும் இல்லை என்று எப்படி விளக்குவது?

    “சசியை டீச்சர் நான்சி அப்படிச் சொன்னாளா? டீச்சர் Stupid!“ என்றேன், உறுதியான குரலில். தன் பொறுப்பில் இருக்கும் சிறு குழந்தையின் போக்கைப் புரிந்துகொள்ளாதிருந்த ஆசிரியை முட்டாள்தான்.

    (ஆனால், ஏழு வயதான என் குழந்தைகள் தம் ஆசிரியையை தரக்குறைவாகப் பேசினால் கண்டிப்பேன்: `அம்மாவை யாராவது அப்படிப் பேசினால், ஒங்களுக்கு எப்படி இருக்கும்?’)

    வித்தியாசமான வளர்ப்புமுறை

    சீனர்களின் வளர்ப்புமுறை வித்தியாசமானது. குழந்தைகளை ஓயாது மட்டம் தட்டினால்தான் அடக்கம் வரும் என்று கருதி, திட்டியும், காரணமின்றி பிரம்பால் அடித்தும் வளர்ப்பார்கள்.

    சீனப்பெண் ஆலிஸிடம் அவளுடைய தாய் கேலியாகக் கூறினது: `உன் வகுப்பில் நீ முதலாவதாக வந்தாயா! மற்ற மாணவிகள் எவ்வளவு முட்டாளாக இருக்கவேண்டும்!’

    பெண்ணுக்கு அடக்கம் வரவில்லை. தாயின்மீது வெறுப்புதான் பிறந்தது. பாராட்டவேண்டிய தருணத்தில் குத்தலாகப் பேசினால்?

    `எனக்குக் குழந்தைகளே வேண்டாம். நானும் என் அம்மாவைப்போல்தானே இருப்பேன்!’ என்று உறுதியுடன் இருக்கிறாள்.

    Share