Blog

  • எப்போதும் போல்….

    -சேஷாத்ரி பாஸ்கர்

    இன்றைய நாளிதழ் அபிட்சுரி வயிற்றை கலக்கவில்லை
    கடன்காரர்கள் யாரும் அழைப்பு மணி அமிழ்த்தவில்லை
    வெயில் இன்று கம்மி என்று யாரோ சொல்ல காதில் விழுந்தது
    விடுமுறையில் பசங்களும் பறவைகளும் போடும் கூச்சல் ரம்மியமாகத்தான் இருக்கின்றன
    எந்த மாத்திரையும் இப்போது தேவைப்படவில்லை
    இருக்கும் இருநூறில் உலகம் தெரிகிறது
    வேலைகள் யாவும் நானின்றி நடக்கின்றன
    கடக்கும் காலங்கள் கரையேறி சிரிக்கின்றன
    எப்போதும் போல் இரவு தூக்கத்திற்காக காத்திருக்கிறேன்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 210-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    காய்ந்து கருகிய சருகையும் படமாக்கி நம் கவனத்தைக் கவரமுடியும் என்று தன் நிழற்படத்தின்மூலம் நிரூபித்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன்; பாராட்டும் நன்றியும் அவருக்கு!

    இளமையெனும் வண்ணப் பொலிவிழந்து சல்லடைக் கண்களால் சகத்தினை நோக்கி இச்சருகு பகரும் அனுபவ மொழி என்னவோ?

    கவிஞர் பெருமக்களே! சருகு குறித்த உம் கருத்துக்களைச் சத்தான கவிதைகளாய் மெருகேற்றித் தருக!

    இச்சருகைக் காண்கையில் அப்பா அணிந்து நைந்த முண்டா பனியனும் தேய்ந்த காலணிகளுமே மூளையின் மூலையில் மின்னி மறைகின்றன என்கிறார் திருமிகு. காந்திமதி கண்ணன்.

    இச்சருகின் தோற்றம்!

    ஓசோன் வழி ஊடுருவும் கதிர்களால்
    உருக்குலையும் உலகை உவமித்தாலும்

    மூளையின் ஏதோ ஒரு மூலையில்

    அப்பா அணிந்தே நைந்த முண்டா பனியனும்
    அலைந்தே தேய்ந்த வெள்ளை நீலக் காலணிகளுமே

    மின்னி மறைகிறது…

    *****

    ”மரத்துக்கு அழகுதரும் பச்சை இலைகள் பழுத்துச் சருகாகி உதிர்வதுபோன்றதே மானுட வாழ்க்கை” என்று சருகினை வைத்து வாழ்வியல் உண்மை உரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழ்வு முடிந்தால்…

    ஆயிரத்தில் ஒன்றாக இருந்தால் கூட
    அழகேதான் மரத்திலுள்ள பச்சை இலைகள்,
    ஆயுளது முடிந்தவைதான் பழுத்து வீழ்ந்தே
    அனல்வெயிலில் காய்ந்தேதான் சருகாய் மாறும்,
    ஓயுதலிலாக் காற்றடித்து மண்ணை விட்டு
    ஒன்றதிலே பறந்துசென்று கோபுர மடையினும்
    மாயமதாய் மதிப்பேதும் வருவ தில்லை
    மாண்டுவிட்ட சருகேதான் வாழ்க்கை இதுவே…!

    *****

    ”காதலில் தோற்ற உள்ளம் சல்லடையாய் மாறிக் கல்லறைக்குச் சென்றபோது அங்கே வந்து விழுந்த சருகிது!” என்று துயர கீதம் இசைக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    நினைவுச் சின்னம்

    பாவை உன்னைக் கண்டு
    நெஞ்சில் காதல் முளைத்ததே!
    நினைவாய் நீ அனுதினம்
    நெஞ்சில் நீர்வார்க்கக் காதல் வளர்ந்ததே

    இல்லை என சொல்லி எனை ஏற்க மறுக்க
    இலையுதிர் காலம்தனில் உதிரும்
    இலை போல் என் இதயம் இடறியதே

    அணு அணுவாய் உருகித் தினம்
    காதல் நோய் வந்து சேர்ந்ததே
    உதிரம் உறைந்து அணுக்கள் அழிந்ததே
    உள்ளம் உடைந்து சல்லடையாய் மாறியதே

    உதிர்ந்த இலையும் சருகாய் மாறி
    உறங்கும் இடம்தேடி வந்து விழுந்ததே
    இடி விழுந்த இதயம் உடைந்து நான் உறங்கும்
    கல்லறையில் வந்து விழுந்ததே
    நினைவுச் சின்னமாய்!

    சருகை வைத்து மனம் உருகும் கவிதைகள் யாத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    இலைச் சருகு…

    இலைகள் காய்ந்தால் சருகாகும்.. இவை
    மண்ணில் புதைந்தால் எருவாகும்..
    கலைக்கண் கொண்டு பார்த்தாலே..
    அதுவும் தனிவித அழகாகும்..!!

    செல்வச் செழிப்பே உயர்வென்று.. எண்ணும்
    மனிதா சருகைப் பார்.. தன்
    நிலையில் தாழ்ந்து வீழ்ந்திடினும்..இத்
    தரணி செழித்திட உரமாகும்..!!

    காற்றில் சருகுகள் பறந்ததெல்லாம்.. இன்று
    பகற் கனவாக ஆயிற்று..
    வேற்று கிரகமோ இதுவென்று.. தோன்றும்
    நிலைக்கு பூமி மாறிற்று..!!

    வாழும் உயிர்கள் அனைத்திற்கும்.. தீங்கின்றி
    நம் வாழ்வைக் கடப்பதுதான்..
    தரணிக்கு நாம்செயும் தொண்டென்று..
    உணர்ந்தால் வாழ்வு வளமாகும்..!!

    சருகான இலைகளும் கலைக்கண் கொண்டு நோக்கிட அழகே!
    காய்ந்தபின்னும் அவை மண்ணுக்கு உரமாகி உதவுவதுபோல் மனிதனும் பிற உயிர்களுக்குத் தீங்கின்றி வாழ்வதே அவன் புவிக்குச் செய்யும் தொண்டாகும் என்று கவி வடித்திருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 211

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    காயத்ரி அகல்யா எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.05.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

    37. அவா அறுத்தல்

    குறள் 361:

    அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
    தவாஅப் பிறப்பீனும் வித்து

    எல்லா உசிருக்கும் எல்லாக் காலத்திலயும் ஓயாம வருத பிறவித் துன்பத்த உண்டாக்கும் விதை தான் ஆச.

    குறள் 362:

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும்

    ஒண்ண விரும்புததுக்கு நெனைக்கவன் பொறக்காம இருந்திருக்கலாமோன்னு ரோசன (யோசனை)  பண்ணுத அளவு தொயரம் ஆசய ஒழிக்கலேனா வரும்.

    குறள் 363:

    வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்ப தில்

    எதிலயும் ஆச இல்லாம இருக்குததுபோல செல்வம் இந்த ஒலகத்துல இல்ல. மத்த எங்கயும் கூட இதுக்கு ஒப்பா ஒண்ணுமில்ல.

    குறள் 364:

    தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்

    மனத் தூய்மை னு சொல்லுதது மனசுல ஆச இல்லாம இருக்கது. ஆச இல்லாம இருக்கது உண்மைப் பொருள விரும்புதப்போ உண்டாவும்.

    குறள் 365:

    அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
    அற்றாக அற்ற திலர்

    எல்லா ஆசயயும் விட்டவர தான் துறவி ங்குதோம்.  ஆசய முழுசும் விடாதவரு உண்மயான துறவி ஆவமாட்டார். .

    குறள் 366:

    அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா

    ஒருத்தன வஞ்சித்து கெடுக்குதது ஆச. அதனால ஆசைக்கு அடிமையாவக் கூடாது னு நெனச்சி பயந்து வாழணும்.

    குறள் 367:

    அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
    தான்வேண்டு மாற்றான் வரும்

    ஒருத்தன் கெட்டுப்போவாம வாழணும்னு நெனச்சாம்னா அவன் ஆசப்படுத கொணத்த மொத்தமா ஒழிச்சுப் போடணும்.

    குறள் 368:

    அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும்

    ஆச இல்லாதவுகளுக்கு துன்பம் வாராது. ஆச உண்டாயிடுச்சின்னா அதுக்கு பொறத்தாலேயே துன்பம் ஓயாம வளய வரும்.

    குறள் 369:

    இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    பெருசா துன்பத்த தருத ஆச இல்லாமப் போனா சந்தோசம் சேந்தாப்ல வந்துக்கிட்டேயிருக்கும்.

    குறள் 370:

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்

    காலத்துக்கும் முடிவில்லாம இருக்க ஆசய ஒருத்தன் விட்டுபோட்டாம்னா அது அவனுக்கு நெலச்சி நிக்குத மகிழ்ச்சியான வாழ்க்கயக் கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • சேக்கிழார் பா நயம் – 35

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருவதிகை வீரட்டானத்தில் சித்த வட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி தலைமேல் திருவடியைப் பலமுறை வைத்தருளியதன் உட்பொருளைச் சுந்தரர் உணர வில்லை. அவருக்கே உரிய இறுமாப்புக்கொண்டு இறைவனிடமே கேள்விகேட்டார்! இறுமாப்பு என்பது தன்னை அறியாத தருக்கு! அது தலைவனையும் அறிந்து கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளிவிடும்! அதனால் தம்செயல், இறுமாப்பினால் அதாவது செம்மாப்பினால் விளைந்தது என்பதை ’’செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் !’’ என்று வருந்தும் நிலைக்குத் தள்ளியதே என்று சுந்தரர் கூறுகிறார்! அதன் பின்னர் அவர் தெளிவடைகின்றார். இங்கே இறைவன் சுந்தரர் தலைமேல் பலமுறை திருவடியை வைத்தது, அவருக்கு அவர் நிலையைத் தெரிவிக்கவே என்பது புலனாகின்றது. அருணகிரிநாதர் தம் தலைமேல் முருகன் திருவடி பட்டமையால் நிகழ்ந்த நன்மையைக் கூறுகிறார்!

    ‘’அவன் கால் பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே!’’ என்பது அவர் இயற்றிய கந்தரலங்காரம்! இதனைச் சித்தாந்தம் ‘’;திருவடி தீட்சை’’ என்று கூறும். இவ்வாறு வலிய வந்து சிவபெருமான் தம்திருவடியால் சுந்தரருக்கு ஞானம் தந்தார் .அதனால் யான் அறியாமையால் தவறு செய்தேன் இப்போது அறிவு பெற்றேன்! அதனால் ‘’எத்தகைய தவறுசெய்தேன்! ‘’ என்று வருந்துகிறார். அதனால் தம் இழிந்த மனநிலைமையால், தம்தலைவரைக்கூட அறியாத தொண்டனாகி விட்டேனே! என்றுவருந்தி,

    ‘’தம்மானை அறியாத சாதியார் உளரே!’’ என்று கூறுகின்றார். அனைவருக்கும் தலைவராய், வீரட்டானம் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவபிரானை நினைக்கிறார்! அப்பிரான் ஆணவத்தால் எதிர்த்து வந்த மதங்கொண்ட யானையின் தோலை உரித்து அணிந்த வீரச் செயல் புரிந்த தலம், வீரட்டானம்! ஆகவே செம்மாப்பை, – இறுமாப்பை விலக்குவதற்காக அவர் திருவடி பதித்தார்! முன்பு திருக்கைலையை விட்டுநீங்கிய நிலையில் நினைவால் ஞானம் தரும் ‘’மானஸ தீட்சை’’ எனப்படும் திருவுள்ளதீக்கை யாலும், திருவருட்டுறையில் காட்சிதந்தபோது, நேரில் கண்டு ‘’சட்சுதீட்சை’’ எனப்படும் திருக்கண் தீக்கையாலும், பின்னர் அந்தண வேடத்துடன் சித்தவடமடத்திற்கு வந்த போது, திருவடி தீட்சை எனப்படும் பரிச தீக்கையாலும், ‘’எம்மைப்பாடு!’’ என்றபோது, உபதேச தீட்சை எனப்படும் வாக்குத் தீக்கையாலும், தடுத்தாட் கொண்டார். இவையனைத்தையும் தம் திருப்பாடலில், சேக்கிழார் அமைக்கிறார்.

    ‘தம்மானை அறியாத சாதியாருளரே’ – இது உண்மையுணர்ந்தவுடனே நம்பிகள் பாடிய திருப்பதிகத்தின் முதற்குறிப்பு. தமது தலைவனையும் அறிந்துகொள்ளாத வகுப்பாரும் உலகத்தில் உண்டோ? சாதியார் – வகுப்பினர் – வகையிலே – பட்டவர் – அறியாத வகையினர். சாதி – வகுப்பு என்ற பொருளில் வந்தது. தமது தலைவனைத் – தம்மை ஆளாகக்கொண்டு காக்கின்றவனைத் தமது நலங்கருதியேனும் யாவரும் அறிவர். அவ்வாறு அறியாத வகையினர் உலகில் இல்லை என்றபடி. உளரே – ஏகார வினா இல்லை என்ற விடை குறித்து நின்றது. வேறு ஒருவரும் இல்லை; ஆயினும் யான் ஒருவன் இறைவனை யறியாது இறைபோதும் இகழ்வன் போலும் என்பது பதிகக் கருத்து. முன்னர் ஆணவ மறைப்பினாலே ‘பலகாலும் மிதித்தனை’ என வெறுத்த அந்தக் கழலையே மறைப்பு நீக்கம் பெற்ற இப்போது பணிந்து துதித்தார்.

    (1) எம்மான்ற னடிக்கொண்டென் முடிமேல் வைத்திடு மென்னு மாசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் – இது திருவடி தீக்கையிலே நம்பிகள் ஆசை வைத்திருந்ததைக் குறிக்கும் “இறைதாள் புரிவுடைய மனத்தினராய்“ என்ற சரிதத்துக்கு அகச்சான்றாம். அறிவிலா நாயேன் – முன்னர் வழக்கு இட்டபோது அறியாததுபோலவே இன்றும் இறைவர் தாமே வெளிவந்தபோதும் அறியாமலிருந்ததற் கிரங்கிய கூற்று.

    (2) முன்னே எம்பெருமானை மறந்தேன்கொல் மறவா தொழிந்தேன்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன். இதுவும் நம்பிகளது அறிவு நிலையை மிக நன்றாக உணர்த்தும் அகச்சான்றாம்.

    (3) வளராத பிறையும் வரி அரவும் உடன்றுயில வைத்தாளும் எந்தை – உடன்றுயில
    – ஒன்றாய் வாழ; வளராத பிறை –

    ‘மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமே னாகந்
    தெறுமென்று தேய்ந்துழலு மாவா – உறுவான்
    தளரமீ தோடுமேற் றானதனை யஞ்சி
    வளருமோ பிள்ளை மதி’

    – காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதி – 36

    காண்க.

    4) நாற்றானத் தொருவனை – ‘இது நாலா நிலையாகிய சிவயோகத்தைக் குறிக்கும் என்பர். நாற்றானத் தொருவனை – என்பது திருக்களிற்றுப்படி. நின்மல துரிய நிலையே தசகாரியத்துள் சிவயோகநிலை. சிவம் தெளிவாக விளங்கும் நிலை இதுவே! நம்பிகள் ஞானயோக நெறியை விளக்கவந்த ஆசாரியராதலும் காண்க

    “பத்திப்போர் வித்திட்டே பரந்த வைம்புலன்கள் வாய்ப்
    பாலே போகா மேகாவாப் பகையறு வகைநினையா
    முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய்
    மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச்
    சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
    சேர்வார் தாமே தானாகக் செயுமவன்’’

    தலவிசேடம் – அட்டவீரட்டங்களில் ஒன்று. திரிபுரமெரித்த வீரம் நிகழ்ந்த தலம். அப்பர் சுவாமிகளை ஆட்கொண்ட வரலாறு அப்புராணத்துக் காண்க. திலகவதியம்மையார் திருப்பணி செய்தமர்ந்த தலம். இவர்களது திருவுருவங்கள் இங்கு அமைத்துப் பூசிக்கப் பெறுகின்றன. திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு இறைவன் இங்கு முன்னே எதிர்காட்சி கொடுக்க ‘ஆடும் வீரட்டானத்தே’ என்ற குறிப்புடன் பதிகம் பாடியருளினர். இறைவனது இலிங்க அருட்டிரு மேனி மிக உன்னதமாய் விளங்குவது. தீர்த்தம் – கெடிலநதி. சுவாமி – திரிபுராந்த கேசுவரர். தேவியார் – திரிபுரசுந்தரி. இது நடுநாட்டுத் தலங்களில் 7-வது தலம். கெடில நதியின் வடகரையில் உள்ளதென்பது பதிகம் . பண்ணுருட்டி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. இனி ,முழுப்பாடலையும் காண்போம்.

    ‘’செம்மாந்திங்கு யான்அறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
    ‘தம்மானை அறியாத சாதியார் உளரே ‘ என்று
    அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
    கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்!’’

    Share
  • ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கிக் குழி பறித்துள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    நிலவினில் முதற்தடம் வைத்து
    நீத்தார் பெருமை யாய்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
    தவ்விய தளவுளவி களை 
    நாசாவும்
    ஈசாவும் கொண்டு இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டிச் சென்று வால் வீசிய
    தூசியைப் பிடித்து வந்தார்
    காசினிக்கு !
    வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
    வையத்தில் இறக்கிடும்
    ஜப்பானின்
    ஹயபூசா முதல் விண்ணுளவி
    அயான் எஞ்சனை இயக்கி
    ஆறு பில்லியன் மைல் கடந்து
    சீராய் மாதிரி கொணரும் !
    ஹயபூசா -2 தாமிரக் கட்டி தாக்கி, 
    முரண்கோளில் குழி உண்டாக்கும் !
    பூர்வ உயிரின மூலவி காணப் போகுது. 
    ஜப்பான் தளவுளவி.
    முரண்கோள் குழி மண் எடுத்து
    தரணிக்கு மீளும் ஜப்பான் கழுகு 
    ஆய்வு புரிய
    வரலாற்று முதலாய் !

    ++++++++++++++++

    ஜப்பான் கழுகு ஹயபூசா -2 முதன்முதலாய் முரண் கோளில் குழி பறித்துள்ளது

    2019 ஏப்ரல் 5 ஆம் தேதி ஜப்பான் ஹயபூசா-2 விண்சிமிழ் உலக முதன்மையாய் முரண்கோள் ஒன்றைத், தாமிரக் கட்டியால் ஒரு மைல்  [1.7 கி.மீடர்] உயரத்திலிருந்து தாக்கி சுமார் 30 அடி [10 மீடர்] விட்டக் குழியை உண்டக்கி உள்ளது.  தாமிரக் கட்டியின் எடை ஒரு பவுண்டு [2 கி.கிராம்].   தாமிரக் கட்டி விழுந்த இடம் திட்ட மிட்ட இடத்துக்கு அருகில் குழி  பறித்துள்ளது.  பூமியிலிருந்து 200 மில்லியன் மைல் [340 மில்லியன் கி.மீடர்]  தூரத்தில் சூரியனைச் சுற்றி வரும் முரண்கோளில் நேர்ந்த இந்த நிகழ்ச்சி ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகக் கருத்தப்படுகிறது.  ரியூகுவில் உண்டான இந்த செயற்கை குழியை,  5500 அடி [1700 மீடர்] உயரத்தில்  பயணம் செய்யும் விண்சிமிழ்க் கருவி படமெடுத்து உறுதி செய்தது.

    குழி உண்டான போது தெறித்த மண் மாதிரிகளை அடுத்து  சேமிக்க , விண்சிமிழ் இனிமேல் முரண்கோளை நெருங்கி வரும்.  எடுத்த  மண் மாதிரிகளை, விண்சிமிழ் 2020 ஆண்டில் பூமிக்குக் கொண்டுவரும்.  இந்த திட்டத்துக்கு  ஆகும் ஜப்பான் நிதிச்செலவு சுமார் 30 பில்லியன் யென். [27 பில்லியன் டாலர்]  [2019 நாணய மதிப்பு] என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது

    ++++++++++++++++++

       [January 16, 2019]
    ++++++++++++++++
    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
    ஜப்பான் கழுகு ஹயபூசா -2 விண்கப்பல் புதிய முரண்கோளில் இறங்கியுள்ளது.
    2018 ஆண்டு முதலாய் ஜப்பான் கழுகு என்னும் ஹயபுசா -2 தளவுளவி ரியூகு முரண்கோளை விரட்டிப் பிடிக்க முயன்று, 2019 பிப்ரவரி 22 இல் வெற்றிகரமாய் தகுந்த இடத்தில் இறங்கி யுள்ளது.  அதன் குறிக்கோள் முரண்கோள் ரியூகுவின் தள மாதிரி மண்ணை எடுத்துச் சேகரித்து, புவிக்கு மீளும் சுய இயக்குத் திட்டம்.  சின்னஞ் சிறு மண் மாதிரிகளைச் சேமிக்க தளவுளவி யில் பல்வேறு சுடும் கருவிகள் [Firing Projectiles] அமைக்கப் பட்டுள்ளன.   முரண்கோள் ரியூகு [ C-Type] [கார்பன் மூலக்கூறுகள்] கொண்டது.  அவை 4.5 பில்லியன் ஆண்டு கட்கு முன்பு சூரிய மண்டலம் எப்படி இருந்திருக்கலாம் என்று விளக்கம் அளிக்கும்.  அவற்றில் உயிரின மூலவிகள் தோன்றத் தேவையான  பூர்வ ஆர்கானிக் புரோட்டீன்கள் செழிக்கும் அமினோ ஆசிடுகள் [Amino acids] என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரிய மண்டலத்தில் உள்ள முரண்கோளில் மூன்றில் இருபங்கு [68%] கார்பன் மூலக்கூறுகள் கொண்ட வையாக  [C-TYPE]  கருதப் படுகின்றன.  ஜப்பான் சுய இயக்குத் தளவுளவி ஹயபூசா -2 போல் நாசா விஞ்ஞானி களும்  ஆசிரிஸ் – ரெக்ஸ் விண்ணுளவி  [Osiriis-Rex Spacecraft]  தற்போது “பென்னு” என்னும் C-TYPE முரண்கோளை  [BENNU ASTEROID] ஆராய்ந்து வருகிறது.  1500 அடி அகலம் உடைய “பென்னு ” முரண்கோள் ரியூகுவை விடச் சிறியது.  அதன் மாதிரி மண்ணை 2023 இல் தான் நாசா புவிக்கு மீட்டுக் கொண்டுவரும்.  ஜப்பான் புவிக்குக் கொண்டு வரும் ரியூகு மாதிரி மண் 2020 இல் கிடைக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
     
     
    ஜப்பான் விண்வெளித் தேடலில் முன்னோடி முயற்சிகள்
    சூரிய மண்டல மூலாதாரத் தோற்றத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் தேடல் பயணங்களில், சூரியனைச் சுற்றும் முரண்கோள்களைச் [Asteroids] சுற்றி, அவற்றில் தடம் வைத்து மாதிரி மண்ணை எடுத்துப் பூமிக்கு மீளும் யந்திர சுய இயக்கப் பொறி நுணுக்கத்தில் ஜப்பானை யாரும் மிஞ்ச முடியாது.  அந்த பயணங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது ஜப்பானின் “ஹயபுஸா-2” விண்ணுளவி.   அடுத்து புரியப் போகும் சாதனை பிப்ரவரி 22, 2019 இல் நிகழப் போகிறது.  அதாவது 880.மீடர். [540 அடி] விடமுள்ள “ரியூகு” முரண்கோளில்  ஹயபுஸா -2 இன் தளவுளவி இறங்கப் போகிறது.  முரண்கோளில் தடமிடும் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது..  2018 ]செப்டம்பரில் ஜப்பான் விண்வெளி ஆணையகம் [JAXA – JAPAN AEROSPACE EXPLORATION AGENCY]  10 கி.கிராம் [22 பவுண்டு] பளு உள்ள மாஸ்காட்   [MASCOT] [MOBILE ASTEROID SURFACE SCOUT] என்னும் தளவுளவியை  ஏவி வெற்றிகரமாக  அங்கே இறக்கியுள்ளது.
    Japan Impact Landers
    மாஸ்காட் தளவுளவியின் கருவிகள் படங்களைப் பல்வேறு அலை நீளங்களில் பதிவு செய்யும்.  நுண்ணோக்கி மூலம் முரண்கோளின் தாதுக்களை ஆய்வு செய்யும்.  தள உஷ்ணத் தையும், காந்த சக்தியையும் அளக்கும்.  ஜப்பானிய  “கழுகு” எனக் கருதப்படும் ஹயபூஸா – 2 ஒரு சமயலறை ரெஃப்ரி ஜெரேட்டர் அளவு கொண்டது.  2014 டிசம்பரில் ஏவப்பட்ட ஹயபுஸா 2 அனுப்ப ஆகும் நிதிச் செலவு சுமார் U$ : 260 மில்லியன்.  அது ரியூகு மாதிரி மண்ணை 2020 ஆண்டில் பூமிக்குத் தானாய்க் கொண்டு வரும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் எடுக்கப் பட்ட மண் மாதிரிகள் பிரபஞ்ச உயிரினங்கள் பற்றிய தகவலை  விஞ்ஞானிகளுக்கு கூறும்.  அத்துடன் வேறு எந்த மூலகங்கள் [Elements] சேர்ந்து, பூமியில் உயினங்கள் தோன்றின என்றும் அறிவிக்கும்.
    [Click to Enlarge]

    ஜப்பான் கழுகு -2 முரண்கோள் நோக்கி விண்வெளிப் பயணம்

    +++++++++++++++++

    Information News

    1. https://www.nytimes.com/2019/02/21/science/ryugu-asteroid-hayabusa2.html [February 21, 2019]
    2. https://www.dailymail.co.uk/sciencetech/article-6215311/Japans-hopping-Ryugu-robots-send-video-surface-asteroid-180million-miles-away.html
    3. https://www.breitbart.com/news/touchdown-japan-probe-hayabusa2-lands-on-distant-asteroid/
    4. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
    5. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
    6. http://www.the-japan-news.com/news/article/0005561687[February 22, 2019]
    7. http://www.spacedaily.com/reports/Hayabusa2_probes_asteroid_for_secrets_999.html[March 20, 2019]
    8. https://en.wikipedia.org/wiki/Hayabusa2 [February 23, 2019]
    9. https://www.thestar.com/news/world/2019/04/26/japans-hayabusa2-spacecraft-makes-crater-on-asteroid-in-world-first.html [April 26, 2019]
    10. https://www.space.com/japan-blasts-crater-asteroid-ryugu-hayabusa2-photo.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190426-sdc [April 25, 2019]
    11. https://www.dailymail.co.uk/sciencetech/article-2858828/Japan-s-Hayabusa-2-begins-landmark-mission-hunt-asteroid-hold-clues-Earth-formed.html[April 27, 2019]
    12. https://www.japantimes.co.jp/news/2019/04/26/national/science-health/japans-hayabusa2-probe-succeeds-blasting-first-man-made-crater-asteroid/#.XMSRufmJIkI [April 26, 2019]
    13. https://en.wikipedia.org/wiki/Hayabusa2  [April 25, 2019]
    14. http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html

    ++++++++++++++++++++++++

    S. Jaybarathan  [jayabarathans@gmail.com] [April 27, 2019]  [R-2]

    Share
  • வல்லமையாளர் விருது 306 – பனை சதிஷ்

    -விவேக்பாரதி

    நம் வாழ்க்கை வேகமயமாக மாறி வருகிறது. மரபு சார்ந்த நம் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ மறந்து வருகின்றன. இயற்கை விவசாயம் என்ற சொல்லை நாம் போராட மட்டும் தான் காண முடிகிறது. இந்த அவலநிலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் கூறுகள் நம்மைச் சிந்திக்க வைப்பதில்லை. மாறாக தன் வளர்ச்சியை நம் வளர்ச்சியாக மாற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இளைஞர்கள் அறிவார்ந்த புரட்சிகளைக் கைகளில் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் இந்த வாரத்தின் வல்லமையாளர்.

    நீர் வளத்தைக் காக்க இயற்கை நமக்குக் கொடுத்த அற்புதமான வரம், பனை மரம். ஆழ்ந்து விரிந்து தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லும் வேர்களைக் கொண்டவை பனைமரங்கள். ஆறு மற்றும் குளத்தின் கரை ஓரங்களில் பனைமரங்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குளங்களெல்லாம் வற்றி நிலங்களாயின. நமக்கும் ஏனோ பனை மரங்களின் மகிமை மட்டும் இதுவரை புரியாமலேயே இருக்கிறது.  பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனையோடும் உழைப்போடும் தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணிக்கிறார் பனை சதிஷ் என்னும் இளைஞர். இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வாரின் வழியில் பயணிக்கிறார் இவர்.  சமகால இளைஞர்களைப் போல இவரும் வாழ்க்கைத் தேவைக்காகத் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்திருந்தாலும், பூமியில் பனை மரங்கள் போன்ற ஒரு வாழ்வாதாரத்தைக் காக்கப் பெரிதும் முயற்சியெடுத்து வருகிறார். பனை மரங்களின் பயன்களைச் செல்லும் இடங்களில் எல்லாம் தீர்க்கமாக வலியுறுத்தி வருகிறார்.

    பனை சதிஷ், தன் குழுவுடன் இணைந்து சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 2000 பனை விதைகளை சென்ற பருவத்தில் விதைத்திருக்கிறார். இதனைப் பாராட்டி நேற்று (28.04.2019) கவிப்போம் அறக்கட்டளை இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது. துரித உணவுக் கலாச்சாரத்தில் மயங்கி, நம் கலாச்சாரத்தைத் தொலைத்து நிற்கும் இளைஞர்கள் மத்தியில் இவர் இயற்கை உணவுப் பழக்கங்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார்.

    “சிலரிடம் பனை பற்றி எத்தனை விழிப்புணர்வோடு பேசினாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் அதனைக் கடந்துவிடுவது இயற்கை, ஆனால் இளஞ்சிறார்கள் அப்படி அல்ல, பனை விதைகளை விளையாடக் கொடுத்து, நடச்சொல்லி, பனை மரங்களைப் பற்றிய பயன்பாட்டை விளக்கினால் அவர்கள் இந்தப் புரட்சியை மிகச் சாதாரண விளையாட்டாக செய்வார்கள்” என்று ஒரு அமைதிப் புரட்சியைச் செய்து நம்மையும் சேர்த்துப் புளகாங்கிதம் அடைய வைக்கிறார் பனை சதீஷ்.

    அவருடைய சாதனையையும், விடா முயற்சியையும் பாராட்டுகிறோம். வல்லமை மின்னிதழ் குழு பனை சதிஷுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இயற்கை வேளாண்மையுடைய வல்லமையை இன்னும் உலகறிய வைக்கவும் வாழ்த்துகிறோம்.

    பனை சதிஷ் குறித்து அறிய அவருடைய முகநூல் பக்கம் பார்க்கவும். (https://www.facebook.com/sathishkumar.pichandi)

    பனை குறித்த தகவல்கள் தேவைப்பட்டால் அவருடைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் (99949 69088)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

    36. மெய்யுணர்தல்

    குறள் 351:

    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு

    பொய்யான ஒண்ண நெசம் னு நெனச்சு நம்பி வாழுதவன் வாழ்க்க சிறப்பா இருக்காது.

    குறள் 352:

    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு

    மனசு கொளம்பாம எது உண்ம எது பொய் னு புரிஞ்சிக்கிடுத தன்மைய அடஞ்சவனுக்கு துன்பம் வெலகி மகிழ்ச்சி வந்து சேந்துகிடும்.

    குறள் 353:

    ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வான நணிய துடைத்து

    மனசுல ஐயமில்லாம உண்மப் பொருளத் தெரிஞ்சுக்கிட்ட மனுசங்களுக்கு அவுக வாழுத பூமிய விட வான ஒலகம் அருகாமையில இருக்கும்.

    குறள் 354:

    ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர் வில்லா தவர்க்கு

    உண்மையக் கண்டுபிடிக்கத் தெரியாதவுக அவுகளோட மனச அடக்கக் கத்துக்கிட்டிருந்தாலும் அதனால பிரயோசனம் இல்ல.

    குறள் 355:

    எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    எந்தப் பொருளுன்னாலும் பாக்குததுக்கு எப்டி இருந்துச்சின்னாலும் அதப் பத்தின  நெசத்த தெரிஞ்சிக்கிடதுதான் மெய்யுணர்வு

    குறள் 356:

    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி

    கத்துக்கிட வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டு உண்மப் பொருள அறிஞ்சிக்கிட்டவங்க மறுபடி பொறக்காம இருக்குத வழிய அடையுவாக.

    குறள் 357:

    ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

    ஒருத்தன் உண்மய ஆஞ்சு அறிஞ்சு உறுதியா உணந்தாம்னா அவனுக்கு திரும்பயும் பொறப்பு இருக்கு னு நெனைக்க வேண்டாம்.   .

    குறள் 358:

    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
    செம்பொருள் காண்ப தறிவு

    பொறப்பு ங்குத அறியாமைய நீக்குததுக்கு அடுத்த பொறப்பு இல்லாம செய்யுத முக்தி ங்குத நெலைய அடைய ஒதவும் ஒசந்த பொருள கண்டுகிடதுதே மெய்யுணர்வு.

    குறள் 359:

    சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்

    எல்லாப் பொருளுக்கும் எடமா இருக்குத மெய்ப்பொருள உணந்து ஒட்டுதல் இல்லாம வாழ்ந்தோம்னா நமக்கு வருத துன்பங்களும் ஒட்டாம வெலகிப்போவும். .

    குறள் 360:

    காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
    நாமங் கெடக்கெடு நோய்

    விருப்பு, வெறுப்பு, அறியாம இந்த மூணுக்கும் எடம் கொடுக்காதவங்கள நெருங்குத துன்பம் அழிஞ்சு போவும்.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • குறளின் கதிர்களாய்…(255)

    செண்பக ஜெகதீசன்…

    அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
    லின்மை யரிதே வெளிறு.

    -திருக்குறள் -503(தெரிந்து தெளிதல்)

    புதுக் கவிதையில்…

    அரிய நூற்கள் பல
    கற்றறிந்த
    குற்றமற்றவர்களையும்
    அணுகி ஆராய்ந்தால்,
    அவர்களிடமும்
    அறியாமை என்பது இல்லாதிருத்தல்
    அரிதே…!

    குறும்பாவில்…

    பலநூல் படித்துத் தேர்ந்த
    பண்பாளர்களையும் பரிசீலித்தால் அவர்களிடமும்
    அறியாமை இல்லாதிருத்தல் அரிதே…!

    மரபுக் கவிதையில்…

    அரிய நூல்பல கற்றேதான்
    அறிவில் பண்பில் சிறந்தோரெனத்
    தெரிந்த சான்றோர் தம்மையுந்தான்
    தீர வாய்ந்து பார்த்தாலே,
    தெரியும் உண்மை ஒன்றேதான்
    தூய பண்புடன் அறிவுடைய
    பெரியோர் இவரிடம் அறியாமை
    போகா திருத்தல் அரிதாமே…!

    லிமரைக்கூ..

    பலநூல்கற்ற அறிவு பெரிது
    அத்துடன் பண்புநிறைந்தவரையும் ஆராய்தால்
    அறியாமையவரிடம் இலாதிருத்தல் அரிது…!

    கிராமிய பாணியில்…

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    மனுசன நல்லாத் தெரிஞ்சிக்கோ,
    தெளிவாகத் தெரிஞ்சுக்கோ..

    பெரிய படிப்பெல்லாம் படிச்சி
    பலநூல் படிச்ச அறிவாளி
    நல்ல கொணமுள்ளவனாயிருந்தாலும்,
    அவனயும் கொஞ்சம் ஆராஞ்சிபாத்தா
    அவங்கிட்டயும்
    அறியாம இல்லாமயிருக்கது பெருசுதான்..

    அதால
    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    மனுசன நல்லாத் தெரிஞ்சிக்கோ,
    தெளிவாகத் தெரிஞ்சுக்கோ…!

     

    Share
  • மேல்படிப்பு வேண்டாம்

    -நிர்மலா ராகவன்

    (நலம்… நலமறிய ஆவல் – 156)

    வேண்டுமென்றே பரீட்சையில் தவறான பதில்களை எழுதுவார்கள், சில பதின்ம வயதுப் பையன்கள்.

    ஏன்?

    `எனக்கு மேல்படிப்பு வேண்டாம்பா. படி, படின்னு அம்மாவும் அப்பாவும் உசிரை வாங்குவாங்க!’

    அப்போது அடைந்த அலுப்பு எந்த வயதிலும் மறைவதில்லை.

    `நல்லவேளை! நான் நல்லா பாஸ் பண்ணலே. இல்லாட்டி, படி, படின்னு வீட்டில உசிரை எடுத்திருப்பாங்க!’ என்று நிம்மதியுடன் என்னிடம் கூறியவருக்கு வயது நாற்பது.

    அவருடன் சேர்ந்து நானும் சிரித்தேன். ஆனால், வருத்தமும் அடையாது இருக்க முடியவில்லை. உயர்கல்வி இல்லாது, வாழ்க்கையில் ஓரளவுதான் அவரால் உயர முடிந்தது.

    பெற்றோருக்குப் பயந்தோ, பணிந்தோ, வேண்டா வெறுப்பாக புத்தகத்தைக் கையில் எடுத்தால், நல்ல தேர்ச்சியையா அடைய முடியும்?

    பெற்றோரின் தொணதொணப்பு அதிகரிக்க, அதிகரிக்க, பையன்களின் தன்னம்பிக்கை குறைவதுதான் பலன்.

    “ஏன் இப்படி அவன் உயிரை எடுக்கிறீர்கள்?” என்று நான் ஒரு தாயைக் கேட்டேன்.

    “இவ்வளவு சொல்லியும் அவனால் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடியவில்லையே! நாங்கள் சொல்லாவிட்டால், தானாக புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவா போகிறான்?” என்ற எதிர்க்கேள்வி பிறந்தது.

    படிக்கப் பிடிக்காது

    மிகச் சிறு வயதிலிருந்தே குழந்தைகள் சுதந்திரமாக நடக்கத் தலைப்படுவார்கள். அவர்கள் போக்கில் விட்டால், அவர்களது திறமை வெளிப்படும். அவ்வப்போது வழிகாட்டினாலே போதும்.

    எட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அதற்குப் பிற்காலத்தில் படிக்கப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

    குழந்தையை மடியில் அமர்த்திக்கொண்டு புத்தகத்தில் ஏதாவது படத்தைக் காட்டினால், தலையை வேறு புறம் திருப்பிக்கொள்ளும். முகவாயைப் பிடித்து, புத்தகம் இருக்கும் திசையில் திருப்பினால், தலை இன்னொரு பக்கம் திரும்பிக்கொள்ளும்! (என் அனுபவத்தில், பெண் குழந்தைகள் இப்படிச் செய்வதில்லை. பள்ளிப் பருவத்திற்குப் பின் படிக்கவே பிடிக்காமல் போவது ஏனென்றால், எப்போதும் படித்தால் அறிவு வளர்ந்துவிடும் என்று நச்சரித்த பெற்றோர்களால்தான். இவர்கள், அபூர்வமாக, காதல் நவீனங்களை மட்டும் படிப்பார்கள்).

    இம்மாதிரியான குழந்தைகள் அறிவில் குறைந்தவர்கள் என்பதில்லை. அவர்களுக்கு விளையாட்டிலோ, நுண்கலைகளிலோ அலாதி ஈடுபாடு இருக்கும். அவரவர் போக்கிலேயே விட்டால், புத்தகத்தை எடுத்துப் படிக்காவிட்டாலும், பரீட்சையில் தோற்கமாட்டார்கள். `இந்த வரைக்கும் பெற்றோர் தடை செய்யாமல் இருக்கிறார்களே!’ என்று, சற்றுப் படித்தும் வைத்திருப்பார்கள்.

    `நீ படித்தே நான் பார்த்ததில்லையே! எப்படி பாஸ் பண்ணினே?’ என்று இப்படிப்பட்ட ஒரு சிறுவனை நான் அதிசயப்பட்டுக் கேட்டதற்கு, `பள்ளியில் பெண்கள் ஓயாது பாடங்களை விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். மௌனமாக அதை கேட்டுக்கொண்டிருப்பேன்!’ என்று பதில் வந்தது.

    பலரும் எழுத்துகளை பார்த்தால்தான் புரியும் என்று நினைக்கிறார்கள். காதில் கேட்டாலே போதும். புத்தகங்கள் இல்லாத காலத்தில் செவிவழி அறிவைப் போதித்தது நீடித்த பலனை அளிக்கவில்லையா?

    செய்வதையே செய்யணுமா?

    வழக்கமாக, சில காரியங்களையே ஒன்றையடுத்து ஒன்று செய்ய நேரும்போது அலுப்பாகத் தோன்றலாம். ஆனால், அதுவும் அவசியம். செய்வதற்கு எதுவும் இல்லாமல் போகிற போதுதான் மனம் வேண்டாத யோசனைகளிலோ, காரியங்களிலோ ஈடுபடும்.

    பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வந்தால் காலணியைக் கழற்றுவதுபோல், வீட்டுப் பாடம் செய்வதும் பழக்கமாகிவிடும்.

    இது புரியாது, சில தாய்மார்கள், பிள்ளைகள் வீட்டுக்குள் நுழையும்போதே, `வீட்டுப்பாடம் இருக்கா? செஞ்சு முடி!’ என்று ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துவார்கள். இது கசப்பில்தான் கொண்டுவிடும்.

    `இவனுக்கு ஒவ்வொண்ணையும் நான் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்கணும்!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமை பேசுவது வீண்.

    பதின்ம வயதுச் சிறுவர்கள், சலிக்காது வீட்டு வேலைகளில் உதவ

    ஒவ்வொன்றாகச் சொன்னால்தான் நச்சரிப்பு. ஒன்று, இரண்டு என்று காகிதத்தில் பலவற்றை எழுதி வைத்துவிடலாம். எதை முதலில் செய்ய வேண்டும் என்ற முடிவை அவர்களிடமே விட்டுவிடுகிறோம், அல்லவா?

    என்னால் முடியும்!

    சிறுவர்களுக்கு மூன்று வயதிலேயே மின்சாரச் சாதனங்களில் அலாதி ஈடுபாடு வந்துவிடும். மூன்று வயதில் தானே அவற்றை இயக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துவிடும்.

    இது புரிந்து, என் மகனிடம், `ஸ்விட்சைப் போடு!’ என்று பழக்கினேன். (வயதுக்கேற்ற வேலையைத்தான் கொடுக்க வேண்டும் என்பது பிறகுதான் புரிந்தது).

    ஒரு முறை, துணி துவைக்கும் இயந்திரத்தைப் அவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு, கதவைத் திறக்க, வெள்ளப்பெருக்கு!

    ப்ளெண்டரை மூடுமுன்னரே ஆர்வக் கோளாறுடன் ஸ்விட்சைத் தட்ட, அதற்குள்ளிருந்த அனைத்தும் வெளியே பீய்ச்சி அடித்தது.

    இரண்டு முறையும் பயந்து, அவன் அலறியபடி பின்னால் ஓட, `போனாப் போறது! இனிமே நான் சொல்றச்சே நிறுத்து!’ என்று சமாதானப்படுத்தியபடி, அவனை அணைத்தேன்.

    தவறு செய்தவர்களே, `இப்படிச் செய்துவிட்டோமே!’ என்று வருத்தப்படும்போது, எதற்காகத் தண்டிப்பது! பெரிது பண்ணாது விட்டுவிட்டால், அடுத்த முறை கவனமாக இருப்பார்கள்.

    மாறாக, தண்டித்து, அதைப் பற்றிக் கேலியாகவே பேசிக்கொண்டிருந்தால், `மீண்டும் தப்பு செய்துவிடுவோமோ?’ என்ற பயத்திலேயே காரியம் கெட்டுப்போகும்.

    கதை

    இரண்டு லிட்டர் எண்ணெய் கொண்ட தகரக் குவளையை என்னிடமிருந்து பிடுங்கினான் என் மூன்று வயதுப் பேரன்.

    அவன் அதைத் தூக்க முடியாது தூக்கி வருவதைப் பார்த்த சில ஆண்கள், என்னை வெறுப்புடன் பார்த்தார்கள் – நான் அவனை வேலை வாங்குவதாக எண்ணி.

    “எங்கிட்ட குடு,” என்று நான் கைநீட்ட, “நான் boy! என்னால் முடியும்!” என்று மறுத்தான்.

    ஒருவர் மட்டும் என்னைப் பார்த்து புன்னகைத்தார். அவருக்குப் புரிந்தது, நான் ஏன் குழந்தையை `கஷ்டப்படுத்துகிறேன்’ என்று.

    அடுத்த முறை, ஒரு கூடையில் சில சாமான்களைப் போட்டு, அவனைத் தள்ளிக்கொண்டு வரச்செய்தேன். அவனுக்கு மிகப் பெருமை. `நான் help பண்ணினேன்!’ என்று தாயிடம் பீற்றிக்கொண்டான்.

    கொஞ்சுவானேன்?

    `குழந்தை! அவனால் என்ன முடியும்!’ என்று அவனுக்கான வேலைகளையும் பிறர் செய்தால், சுயமாக நடக்கத் தெரியாது, பிறரைச் சார்ந்திருக்கவே தோன்றும்.

    ஓயாமல் கொஞ்சுவதைவிட அவர்களால் இயன்ற வேலைகளைக் கொடுத்தால் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளரும்.

    இணைந்து செய்வது

    குழந்தைகள் விளையாடிவிட்டுத் தம் விளையாட்டுச் சாமான்களைத் தரை பூராவும் பரப்பிவிட்டுப் போவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

    `நீதான் எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்!’ இந்த அதிகாரத்தால் அவனுக்கு அழுகைதான் வரும். (தவறு)

    `வா! நாம்ப ரெண்டுபேரும் எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம். நடக்கிறபோது கால்லே குத்திடுமே!’ (சரி)

    எந்தக் காரியமானாலும், விளையாட்டுபோல் சேர்ந்து செய்பவருடன் உள்ள நெருக்கம் அதிகரிக்கும். (பண்டிகைகளில் குடும்பத்திலுள்ள அனைவரும் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்கும்போதும், இணைந்து சமைக்கும்போதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!)

    பாராட்டும் அவசியம்

    தவறு செய்யும்போது தண்டிப்பதில் குறியாக இருப்பவர்கள் குழந்தைகள் உருப்படியாக ஏதாவது செய்யும்போது அதைப் பாராட்டத் தவறிவிடுவார்கள்.

    பாராட்டினால்தானே தொடர்ந்து நல்வழியில் செல்லத் தோன்றும்?

    எல்லா இனங்களுக்கும், எந்த வயதிலும், பாராட்டு புரிகிறது.

    கதை

    எங்கள் வீட்டில் வளரும் பூனைக்குட்டி தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, பெரிய பூனைக்கு வைக்கும் ஆகாரத்திற்கும் போட்டி போடும்.

    பல முறை தடுத்தபின் அதற்குப் புரிந்தது. ஒரு முறை மெல்ல விலக, “குட்டி சமத்து!” என்று பாராட்டினேன்.

    கண்ணை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தது, அதை ஆமோதிக்கும் வகையில்!

    சொன்னபடி செய்

    பெற்றோர் தம் வாக்கைக் காப்பாற்றத் தவறும்போது பிள்ளைகளின் மதிப்பையும் இழக்கிறோம் என்பதை உணர்வதில்லை.

    “இன்று எனக்கு பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கான பாட்டுப் பயிற்சி இருக்கிறது,” என்று பூரிப்புடன் சொன்னான், என்னிடம் படிக்க வந்த அமீர்.

    குறித்த நேரத்தில் தாய் வரவில்லை. பையனின் படபடப்பைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.

    வழக்கம்போல், இரண்டு மணி நேரம் கழித்து வந்தவளிடம், “நீங்கள் அரை மணியிலேயே வந்துவிடுவீர்கள் என்று அமீர் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தான், பாவம்!’ என்றேன்.

    அலட்சியமாகக் கையை வீசியபடி, சூள் கொட்டினாள். அவளுக்கு மகனுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் முக்கியமில்லை.

    பெற்றோரின் கட்டாயத்தால் படிப்பில் நாட்டமிழந்த பலருள் அமீரும் ஒருவன்.

    Share
  • ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை

    கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம். 12/5/19 ஞாயிறு, இடம் விரைவில் அறிவிக்கப்படும். கட்டணமில்லை. மதிய உணவு, தேனீர் வழங்கப்படும். முன்னணி எழுத்தாளர்கள் பயிற்சி அளிப்பர்.

    கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய கைபேசி எண்கள்:
    தோழர்கள்
    பி ஆர் நடராஜன் (செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)
    (94434 27156 ),
    இரா. சண்முகம் (தலைவர்)
    (99448 15107 )

    நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.

    செய்தி: பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)  ( 94434 27156 ),

    Share
  • வீரபாண்டியன் மணந்த தேவரடியாள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கோவில் இயக்கம் தந்திவர்மன், அவன் மகன் கம்ப வர்மன் காலத்தில் கருங்கல் கட்டடமான கற்றளி இயக்கமாக உருப்பெற்று ஆகமமாக முறைப்படுத்தப்பட்ட போது கோவில்களில் ஆடல், பாடல், பூசனை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கெனத் தம்மைத் தாமே மனமுவந்து ஒப்புக் கொடுப்போர் கோவில்களில் ஏற்கபட்டு அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகளும் ஆட்சியாளர்களால் செய்துதரப்பட்டன. தம்மை இறைவனுக்கு அடியவராக ஒப்புக் கொடுத்ததால் இவர்கள் தேவரடியார் எனப்பட்டனர். இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர். இவருள் அரசகுலத்தாரும் இருந்தனர். கோவில்களில் பெண்களுக்குத் தரப்பட்ட மிக உயர்ந்த பதவி இது என்பதே உண்மை மற்றபடி பலரும் எண்ணுவது போல இந்த தேவரடியார் பாலியற் பெண்டிர் அல்லர்.

    பல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழப் பேரரசு காலத்தில் கோவில் கற்றளி இயக்கம் அவர் ஆட்சிப் பரப்பு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர்.  இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக இவருள் சிலரை வேந்தரும், மன்னவரும், அரையரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் மதுரை ஆண்ட  வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். இவளைப் பற்றிய கல்வெட்டுகள் குமரி மாவட்டம் சுசீந்திரம், நெல்லை வள்ளியூர் ஆகிய இடங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றை இனி நாமும் காண்போம்.  

    சுசீந்திரம் கோவில் மேற்கு பிரகாரத்தில் உள்ள வாகனப் புரைச் சுவரில் பொறித்த கல்வெட்டு.

    1. கொல்லம் – 432  மாண்டை(த்) தனு ஞாயிறு 19 சென்ற வி(யாழ) வாட்டையும் வி
    2. சாகமும் ஏகாதேசியும் பெற்ற இந்நாளால் நாஞ்சி நாட்டூர் சுவீந்த்ர சுந்தர சோழச் சதுர்வேதி
    3. தி மங்கலமுடையார் சுவீந்தரம் உடைய நயினார் சீ கோயிலில் திருச்சுற்று மண்டபத்திலிருந்து
    4. சபையும் ஸ்ரீகாரியஞ் செய்வாரும் இருந்தெழுதின செய்கட ஓலை(க்) கரணமாவது உடையார் சுவீந்தர
    5. முடையார்க்கு பெருமாள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர் நம்பிராட்டியார் சொக்கத்தாண்டாளான
    6. உலக முழுதுடையார் நித்தல் செல்வதாக திருவமுதுக்கு கற்பிச்ச அரிகுறுணி இருநாழிக்கும் அஞ்சிரண்டால்
    7. நெல் முக்குறுணி ஒரு நாழியும் பூஜாகாலத்து அமுது செய்யும் பிராமணர் மூவர்க்கு வெஞ்ச
    8. நமுட்பட நெல் முக்குறுணியுங்கூட _ _ _ _ க்குங் கல்பிச்ச புதுப்பொன் அச்சு இருநூறு
    9. இவ்வச்சு இருநூற்றிலும் இவ்வூர் தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி கைக்கொ
    10. ண்ட அச்சு 155 க்கும் நாளொன்றுக்குச் செலுத்தும் அரிகுறுணி யிதில் பெரிய நாயனார்(க்)கு திரு
    11. வமுதுக்கு அரி அஞ்ஞாழியும் திருவேங்கடத்துக்கு திருவமுது செய்விச்சு சோறுதான் கொண்டுவரும்
    12. அரி முந்நாழியும் பிராமண போஜனத்துக்கு ஓராண்டில் இவள் செலுத்தும் மாசம் ஒன்பது
    13. ம் இப்படி செலுத்துவாளாகவும் செலுத்துமிடத்து முட்டுகில் இவள் கைக்கொண்ட அச்சு 155
    14. க்கும் ஓன்றொன்றே காலாக வரக் கண்ட அச்சு 39 ங்கூட அச்சு 194 க்குஞ் செலுத்தின  நில
    15. ங்கள் வேட்கைக் குளத்தின் கீழ் அமரபுயங்க வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ _ _ _ _
    16. கீழ் மருதுறை தடி 1 நில _ _ _ _ _ _ பள்ள மடை தடி _ _ _ _ _ _ யும் இந்திர வீரவாய்க்காலுக்கு தெற்கு _ _ _ _
    17. _ _ _ _ _ _ யும் ஆகத்தடி மூன்று _ _ _ _ _ _ ன் மேல் அச்சு _ _ _ _ _மேல் அச்சு _ _ _ _ மேல்படியாள்  _ _ _ _ _ _ _
    18. _ _ _ _ _ அமரபுயங்க வாய்க்காலுக்கு தெக்கு _ _ _ _ கேசவநாராய _ _ _ _ _ _
    19. _ _ _ _ _ _ பனையறைதடி ஒன்று நிலம் வாய்க்கால் _ _ _ _ _ கு வடக்கு
    20. றைதடி 1 நில _ _ _ _ _ _ ஆக _ _ _ _ _ யின் மேலும் ஓ _ _ _ _ _ _
    21. _ _ _ _ _ _ _ _ _ யின் மேலும் ஒள்ள _ _ __ _ _ _ __
    22. அச்சு _ _ _ _  பிரம்ம சுவமில் 5 ஆம் கண்ணாற்றில் குளத்தில் பெரு _ _ _ _ _
    23. அச்சு 90 கொடுத்து விலை கொண்டுடைய _ _ _ _ _ றொன்றாலும் ஆன இந்நில _ _ _
    24. தொண்ணூற்று நாலும் மேல்படியில் செல்லாண்டி சேகராண்டாள் கைக் கொண்ட _ _ _

    வியாழவாட்டை – வியாழ ஆழ்ச்சை(கிழமை); செய்கட ஓலை – செய்யக்கடவது பற்றிய ஓலை; சபை – கருவறை பிராமணர்; ஸ்ரீகாரியம் – கோவில் திருப்பணியாளர்; கரணம் –ஆவணம்; நம்பிராட்டி – துணைவி, தேவி, மனைவி;  நித்தல் – எப்பொழுதும்;  கற்பிச்ச – பிடிபாடு, வழிகாட்டுநெறி,  guidelines; வெஞ்சனம் – சமையல்; அச்சு – காசு; முட்டுகில் – நின்றுபோனால். 

    கொல்லம் ஆண்டு 432 (கி.பி. 1257) தனுர் ராசி நேரும் ஞாயிற்றுக்கிழமை 19 நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டது. கடந்த வியாழக்கிழமை விசாக நட்சத்திரமும் ஏகாதேசியும் கூடிய நாளில் நாஞ்சில் நாட்டூரான சுசீந்திரம் என்னும் சுந்தரச்சோழ சதுர்வேதி மங்கலத்தில் சுசீந்திரமுடைய ஈசனின்  கோவில் திருச்சுற்று மண்டபத்தில் கருவறைப் பிராமணரும் கோவிற் பணியாளர்களும் அமர்ந்து எழுதிய செய்யக்கடவதான ஓலை ஆவணம் யாதெனில் இறைவர் சுசீந்திர ஈசனுக்கு வேந்தன் வீரபாண்டியனின் தேவியான சொக்கத்தாண்டாள் என்னும் உலகமுழுதுடையாள் எப்பொழுதும் இறைவனுக்கு திருவமுது நடந்துவர வேண்டும் என்று வழிகாட்டுநெறி தந்து அரிசிகுறுணி அளவில் இருநாழிக்கும் 10ன் அளவு நெல்லை ஒரு நாழி அளவிற்கு அதற்குத் தரவேண்டும். பூசனை காலத்தில்  சோறு உண்பிக்க மூன்று பிராமணருக்கான சமையல் செலவு உட்பட நெல் முக்குறுணி அளவிற்கு கொடுக்க வழிகாட்டுநெறி தந்து இவற்றுக்கு அவள் தந்த புதுப்பொன்னாலான காசு இருநூறு ஆகும். இந்த இருநூறு பொற்காசில் 155 ஐ சுசீந்திரத்து தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி என்பாள் கடனாகப் பெற்றுக் கொண்டாள். இதற்கான வட்டியை  இவள் ஒவ்வொரு நாளும் குறுணி அளவு அரிசி தரவேண்டும். இந்த குறுணி அரிசியில் ஐந்துநாழி ஈசன் திருவமுதுக்கும்  எஞ்சியவற்றில் திருமாலுக்கு திருவமுது சோறும் ஆக்க வேண்டும்.  இவள்  மூன்று நாழி அளவில் கொண்டு வரும் அரிசி பிராமணர் உணவிற்கு ஆகும். ஓராண்டில் இவள் மாதாமாதம் செலுத்த வேண்டிய பணம் ஒன்பது ஆகும். இவற்றை எல்லாம் செய்ய முடியாது நின்று போனால் 155 பொற்காசுகளுக்கு  ஒரு காசிற்கு கால் பொற் காசு என்ற கணக்கில் 39 பொற்காசையும் கூட்டி 155 + 39 = 194 பொற்காசிற்கு செலுத்த வேண்டிய அடமான நிலங்கள் வேட்கைக் குளத்திற்கு கிழக்கே உள்ள அமரபுயங்கன் வாய்க்காலுக்கு வடக்கேயும், இந்திர வீரவாய்க்கால்க்கு தெற்கேயும் உள்ளன என்று நில எல்லைகள் குறிக்கப்படுகின்றன. இவளோடு வேறு ஒரு தேவரடியார் செல்லாண்டி சேகராண்டாள் வாங்கிய பணதிற்கு என்ன செய்யவேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் கல்வெட்டு பெரிது என்பதால் இங்கே தரப்படவில்லை. இணைப்பில் அதைக் காணலாம்.

    உலகுமுழுதுடையாள் தந்த காசு உடனடியாக வட்டிக்கு விடப்பட்டு அதன் மூலம் வட்டியாக குன்றாண்டி திருவாண்டியிடம் அரிசி பெறப்பட்டு  உலக முழுதுடையாளின் திருவமுதப்படிக்கான வழிகாட்டுநெறி நிறைவேற்றப்படுகின்றது. இது ஏனெனில் பண்டு காசு புழக்கம் செல்வரிடம் மட்டுமே நிலவியது. பொது மக்கள் பண்டமாற்றில் வாழ்க்கையை நடாத்தினர். அதனால் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் கோவில் பணியாளருக்கு ஏற்பட்டது. கோவில் பணியாளருக்கும் குன்றாண்டிக்கும் ஏற்பட்ட உடன்பாடே கல்வெட்டாகக் காட்சிப்படுகின்றது. பிற்பகுதியில் கல்வெட்டு பல்லிடங்களில் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. கல்வெட்டில் சேரநாட்டு வழக்குச்சொல் ஆங்காங்கே புழங்குகின்றது. கி.பி.

    1257 இல் ஜடவர்ம சுந்தர பாண்டியன் தான் ஆட்சியில் இருந்தான், வீரபாண்டியன் 1309 இல் தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறான். ஆண்டுக் கணக்கு வாசிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது. அல்லது சுந்தர பாண்டியனுக்கு வீரபாண்டியன் என இன்னொரு பெயர் இருந்துள்ளது எனக் கொள்ள வேண்டும்.

    பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 45 & 46, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் Travancore archaeological series, Vol 5.  

    இனி, திருநெல்வேலி வள்ளியூரில் உள்ள மூன்றுமுக அம்மன் கோவிலில் பொறித்த கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோசடைய பன்மரான திரி
    2. புவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ வீர பாண்டிய
    3. தேவர் (க்)கு யாண்டு 4 வது (ராஜகம்பீ)
    4. ர வளநாட்டு திருவானைக்காவில்
    5. திருப்பதியில் சாந்திக் கூத்திகளில்
    6. சொக்கத் தாண்டாரான உலகமு
    7. ழுதுடையார் வள்ளியூர் வடக்கு வா
    8. சலில் தேவி கோயிலுக்கு உபான (ஜெ
    9. கதி குமுதோபரி பட்டிகையந்த மகா) 
    10. தேவியையும் வர்திச்சுத் தங்கள் பேத்தி(யா
    11. ரா) சிறிய பிள்ளை (யை உலகத் தாண்டாளுக்)
    12. கும் _ _ _ _ _ ல அவ _ _ _ _ _ _ _ _ யு
    13. ருளு _ _ _ _ _ _ _ கோயில் _ _ _ _ _ _ _ _
    14. ஞ்செ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _  உலகமுழுதுடையா
    15. த _ _ _ _ _ _ _ _ க்கு _ _ _ _ _

    சாந்தி கூத்தி – சாந்தி கூத்தாடும் ஆட்டத்தி; உபான ஜகதி – கருவறைப் புறச் சுவர் கீழ் பகுதி;  குமுதோபரி – விமான உறுப்புள் ஒன்று; பட்டிகை – கருவறை புறச் சுவர் உறுப்பு; வர்திச்சு – எழுந்துருளவித்து

    வேந்தன் வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1313)  ராஜகம்பீர வளநாட்டில் அமைந்த திருவானைக்காவல் கோவிலில் சாந்தி கூத்தாடும் கூத்திகளில் சொக்கத் தாண்டாள் எனும்  உலக முழுதுடையாள் வள்ளியூர் வடக்குவாசலில் அமைந்த அம்மன் கோவில் கருவறை புறச்சுவருக்கு உபான ஜகதி, குமுதம், முப்பட்டை ஆகியவற்றை கட்டிக் கொடுத்து அந்த அம்மனை எழுந்தருளச் செய்தாள். தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள். பிற செய்தி கொண்ட கல்வெட்டுப் பகுதி சிதைந்ததால் அச்செய்திகளை அறிய முடியவில்லை.

    வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் சொக்கத் தாண்டாள் தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள் என்றால் வீரபாண்டியன் முதுமையில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் எனத் தெரிகின்றது. இளமையில் இவன் அவளை மணந்தான் என்பது புலனாகின்றது. சொக்கத் தாண்டாள் ஒரே காலத்தில் சுசீந்திரம் மற்றும் வள்ளியூருக்கு திருச்செலவு சென்றாள் என அறியலாகின்றது.

    பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக்.  48 & 49, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் A.R.E. 1929-30 No 364 P 37.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்- 35

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-35

    35. துறவு

    குறள் 341:

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் அலன்

    ஒருத்தன் எது எதுலேந்தெல்லாம் ஆசப் படாம வெலகுதானோ அந்தந்த பொருள் னால ஏற்படுத துன்பம் அவன அண்டாது.

    குறள் 342:

    வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டியற் பால பல

    துன்பம் அண்டாம வாழணும்னா எல்லாம் நம்ம கிட்ட இருக்குதப்பவே அது மேல இருக்க ஆசய உட்டுறணும். உட்டபொறவு நமக்கு இந்த ஒலகத்துல நெறய மகிழ்ச்சி கெடைக்கும்.

    குறள் 343:

    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு

    நம்மளோட அஞ்சு புலனை (பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி) அடக்கி அதுக ஆசப்படுத எல்லாத்தையும் சேந்தாப்ல விட்டுப்போடணும்,

    குறள் 344:

    இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து

    துறவிங்களுக்கு எதுலயும் ஆச இருக்கக் கூடாது. ஏதாச்சும் மேல இருந்திச்சின்னா அது திரும்ப புத்திய கெடுத்துப் போடும்.

    குறள் 345:

    மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க் குடம்பும் மிகை

    இனிமே பொறக்கவே கூடாது னு நெனைக்க துறவிங்களுக்கு அவுக ஒடம்பே ஒரு சுமை தான். அதுக்கு மேலயும் வேற ஒட்டுஒறவு எதுக்கு?

    குறள் 346:

    யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
    குயர்ந்த உலகம் புகும்

    ஒடம்ப ‘நான்’ னும் சம்பந்தமில்லாத ‘பொருள’ எனது னும் நெனக்க அகராதிய ஒழிச்சவன் தேவர்கள விட ஒசந்த நெலய அடையுவான்.

    குறள் 347:

    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர்க்கு

    நான்,  என்னோடது ங்குத ஆசையில ஒட்டுதல் வச்சிக்கிட்டு விடாதவங்கள  துன்பமும் விடாம வந்து ஒட்டிக்கிடும்.

    குறள் 348:

    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்

    அரைகொறயா இல்லாம ஆசய முழுக்க உட்டவங்க தான் ஒசந்த நெலய அடையுவாங்க. அப்டி செய்யாதவங்க அறியாம ங்குத வலைக்குள்ளார சிக்கிக்கிடுவாங்க.

    குறள் 349:

    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும்

    சந்தோசத்துலயும் துக்கத்துலயும் மனசு ஒட்டாம ஒண்ணுபோல வச்சிருந்தாத்தான் பிறவித்துன்பம் ஒழியும்.  இல்லன்னா இந்த ரெண்டும் மாறி மாறி வந்து ஒரு நெலையில இல்லாம சீரளிக்கும்.

    குறள் 350:

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு

    எதிலயும் ஒட்டு ஒறவு இல்லாம இருக்க கடவுள் மேல ஆச வைக்கணும். அவர் மேல ஆச வைக்குதது நம்மளோட எல்லா ஆசையயும் விட்டு ஒழிக்கத்தான்.

    (அடுத்தாப்லயும் வரும்…..

    Share
  • வானுக்கு மேல்

    -விவேக்பாரதி

    வானம் எனக்கு எப்போதும் அதிசயமானது. வானத்தைப் பார்த்தாலே என் மனத்தில் வார்த்தை மழை பெய்யும். “பாரதி யார்?” நாடகத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வழியில் விமானத்தில் எழுதிய கவிதை…

    வானுக்கு மேல்வந்து பாருங்களேன்! இங்கு
    வண்ணங்கள் இல்லையோர் வேற்றுமை இல்லை
    நானென்றும் நீயென்றும் போட்டிகள் இல்லை
    நாடில்லை கோடில்லை நாடகம் இல்லை!

    காலுக்குக் கீழ்கோடி மேகம் மிதக்கும்
    காற்றுக்கு நாம்தோழன் லீலை இனிக்கும்
    மேலுக்கும் கீழுக்கும் சண்டை இல்லாமல்
    மென்மனம் குழந்தையாய்த் தாவிக் குதிக்கும்!

    அமைதியாம் வீட்டிற்கு வாசல் திறக்கும்
    ஆனந்தம் நெஞ்சத்தில் ஊஞ்சல் அமைக்கும்
    சுமைநீங்கப் பெறும்போது சொர்க்கம் திறக்கும்
    சுறுசுறுப் பாய்ரத்த நாளம் துடிக்கும்!

    யாருக்கும் கிட்டாத காட்சி கிடைக்கும்
    யவ்வணம் நம்மோடு சேர்ந்தே சிரிக்கும்
    பாருக்குள் ஒருவிந்தை வானம் திறக்கும்
    பார்பார்பார் வாவென்று மேகம் அழைக்கும்

    வானத்தை நமக்காக தேவன் படைத்தான்
    வானத்தின் அடிவாழ நம்மைப் படைத்தான்
    ஞானத்தில் உயர்ந்தோர்க்கு வானம் மனத்துள்
    நம்போன்ற ரசிகர்க்கு மனமே அதற்குள்!

    மேலேறு வதுபோல ஆட்டம் நடக்கும்
    மெச்சினால் சிலநொடியில் தரையும் நகைக்கும்
    காலுண்டு காலில்லை நாமே பறப்போம்
    ககனத்தின் நிலைகண்டு கவிதை படிப்போம்!

    இந்த வானுக்கு மேல்வந்து பாருங்களேன்!!

    -11.04.2019

    Share
  • எண்ணியெண்ணி அழுகின்றோம்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

    இரக்கமின்றி கொலைசெய்ய
    எம்மதமும் சொன்னதுண்டா?
    வணக்கத்தலம் வன்முறைக்கு
    வாய்த்ததென்றும் சொன்னதுண்டா?

    அரக்ககுணம் மனமிருத்தி
    அனைவரையும் அழிக்கும்படி
    அகிலமதில் எம்மதமும்
    ஆணையிட்டு சொன்னதுண்டா!

    ஈஸ்டர்தின நன்னாளில்
    இலங்கையினை அதிரவைத்த
    ஈனச்செயல் தனைநினைக்க
    இதயமெலாம் நடுங்குகிறதே!

    துதிபாடி துதித்தவர்கள்
    துடிதுடித்தார் குருதியிலே
    அதையெண்ணி அகிலமுமே
    அழுதேங்கி நிற்கிறதே!

    பிராத்தனைக்குச் சென்றவர்கள்
    பிணமாகிக் கிடந்தார்கள்
    பேயாட்டம் நடந்தேறி
    பெருந்துயரே எழுந்ததுவே

    இன்னுயிரை ஈந்தளித்த
    யேசுபிரான் சன்னதியில்
    இரத்தவெறி அரங்கேறி
    எடுத்ததுவே பலவுயிரை!

    மதங்கடந்து இனங்கடந்து
    மக்கள்மனம் சேரவேண்டும்
    மதவெறியை இனவெறியை
    மனம்விட்டு அகற்றவேண்டும்

    புவிமீது பொல்லாங்கு
    நிகழ்த்துகின்றார் அனைவருமே
    அறவழியில் வருவதற்கு
    ஆண்டவனை வேண்டிநிற்போம் !

    ஈழத்தின் துயரமதை
    எண்ணியெண்ணி அழுகின்றோம்
    வாழுகின்ற வயதினிலே
    மண்மீது சாய்ந்தார்கள்,

    ஆழமாய்ப் பதிந்துவிட்ட
    அவலமதை நினைக்கையிலே
    அழுகின்ற நிலைமாற
    ஆண்டுபல ஆகிடுமே!

                                    

                                   

    Share