நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

37. அவா அறுத்தல்

குறள் 361:

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

எல்லா உசிருக்கும் எல்லாக் காலத்திலயும் ஓயாம வருத பிறவித் துன்பத்த உண்டாக்கும் விதை தான் ஆச.

குறள் 362:

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

ஒண்ண விரும்புததுக்கு நெனைக்கவன் பொறக்காம இருந்திருக்கலாமோன்னு ரோசன (யோசனை)  பண்ணுத அளவு தொயரம் ஆசய ஒழிக்கலேனா வரும்.

குறள் 363:

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்

எதிலயும் ஆச இல்லாம இருக்குததுபோல செல்வம் இந்த ஒலகத்துல இல்ல. மத்த எங்கயும் கூட இதுக்கு ஒப்பா ஒண்ணுமில்ல.

குறள் 364:

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

மனத் தூய்மை னு சொல்லுதது மனசுல ஆச இல்லாம இருக்கது. ஆச இல்லாம இருக்கது உண்மைப் பொருள விரும்புதப்போ உண்டாவும்.

குறள் 365:

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்

எல்லா ஆசயயும் விட்டவர தான் துறவி ங்குதோம்.  ஆசய முழுசும் விடாதவரு உண்மயான துறவி ஆவமாட்டார். .

குறள் 366:

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

ஒருத்தன வஞ்சித்து கெடுக்குதது ஆச. அதனால ஆசைக்கு அடிமையாவக் கூடாது னு நெனச்சி பயந்து வாழணும்.

குறள் 367:

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

ஒருத்தன் கெட்டுப்போவாம வாழணும்னு நெனச்சாம்னா அவன் ஆசப்படுத கொணத்த மொத்தமா ஒழிச்சுப் போடணும்.

குறள் 368:

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

ஆச இல்லாதவுகளுக்கு துன்பம் வாராது. ஆச உண்டாயிடுச்சின்னா அதுக்கு பொறத்தாலேயே துன்பம் ஓயாம வளய வரும்.

குறள் 369:

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்

பெருசா துன்பத்த தருத ஆச இல்லாமப் போனா சந்தோசம் சேந்தாப்ல வந்துக்கிட்டேயிருக்கும்.

குறள் 370:

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

காலத்துக்கும் முடிவில்லாம இருக்க ஆசய ஒருத்தன் விட்டுபோட்டாம்னா அது அவனுக்கு நெலச்சி நிக்குத மகிழ்ச்சியான வாழ்க்கயக் கொடுக்கும்.

(அடுத்தாப்லயும் வரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *