-மேகலா இராமமூர்த்தி

காய்ந்து கருகிய சருகையும் படமாக்கி நம் கவனத்தைக் கவரமுடியும் என்று தன் நிழற்படத்தின்மூலம் நிரூபித்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன்; பாராட்டும் நன்றியும் அவருக்கு!

இளமையெனும் வண்ணப் பொலிவிழந்து சல்லடைக் கண்களால் சகத்தினை நோக்கி இச்சருகு பகரும் அனுபவ மொழி என்னவோ?

கவிஞர் பெருமக்களே! சருகு குறித்த உம் கருத்துக்களைச் சத்தான கவிதைகளாய் மெருகேற்றித் தருக!

இச்சருகைக் காண்கையில் அப்பா அணிந்து நைந்த முண்டா பனியனும் தேய்ந்த காலணிகளுமே மூளையின் மூலையில் மின்னி மறைகின்றன என்கிறார் திருமிகு. காந்திமதி கண்ணன்.

இச்சருகின் தோற்றம்!

ஓசோன் வழி ஊடுருவும் கதிர்களால்
உருக்குலையும் உலகை உவமித்தாலும்

மூளையின் ஏதோ ஒரு மூலையில்

அப்பா அணிந்தே நைந்த முண்டா பனியனும்
அலைந்தே தேய்ந்த வெள்ளை நீலக் காலணிகளுமே

மின்னி மறைகிறது…

*****

”மரத்துக்கு அழகுதரும் பச்சை இலைகள் பழுத்துச் சருகாகி உதிர்வதுபோன்றதே மானுட வாழ்க்கை” என்று சருகினை வைத்து வாழ்வியல் உண்மை உரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

வாழ்வு முடிந்தால்…

ஆயிரத்தில் ஒன்றாக இருந்தால் கூட
அழகேதான் மரத்திலுள்ள பச்சை இலைகள்,
ஆயுளது முடிந்தவைதான் பழுத்து வீழ்ந்தே
அனல்வெயிலில் காய்ந்தேதான் சருகாய் மாறும்,
ஓயுதலிலாக் காற்றடித்து மண்ணை விட்டு
ஒன்றதிலே பறந்துசென்று கோபுர மடையினும்
மாயமதாய் மதிப்பேதும் வருவ தில்லை
மாண்டுவிட்ட சருகேதான் வாழ்க்கை இதுவே…!

*****

”காதலில் தோற்ற உள்ளம் சல்லடையாய் மாறிக் கல்லறைக்குச் சென்றபோது அங்கே வந்து விழுந்த சருகிது!” என்று துயர கீதம் இசைக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

நினைவுச் சின்னம்

பாவை உன்னைக் கண்டு
நெஞ்சில் காதல் முளைத்ததே!
நினைவாய் நீ அனுதினம்
நெஞ்சில் நீர்வார்க்கக் காதல் வளர்ந்ததே

இல்லை என சொல்லி எனை ஏற்க மறுக்க
இலையுதிர் காலம்தனில் உதிரும்
இலை போல் என் இதயம் இடறியதே

அணு அணுவாய் உருகித் தினம்
காதல் நோய் வந்து சேர்ந்ததே
உதிரம் உறைந்து அணுக்கள் அழிந்ததே
உள்ளம் உடைந்து சல்லடையாய் மாறியதே

உதிர்ந்த இலையும் சருகாய் மாறி
உறங்கும் இடம்தேடி வந்து விழுந்ததே
இடி விழுந்த இதயம் உடைந்து நான் உறங்கும்
கல்லறையில் வந்து விழுந்ததே
நினைவுச் சின்னமாய்!

சருகை வைத்து மனம் உருகும் கவிதைகள் யாத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

இலைச் சருகு…

இலைகள் காய்ந்தால் சருகாகும்.. இவை
மண்ணில் புதைந்தால் எருவாகும்..
கலைக்கண் கொண்டு பார்த்தாலே..
அதுவும் தனிவித அழகாகும்..!!

செல்வச் செழிப்பே உயர்வென்று.. எண்ணும்
மனிதா சருகைப் பார்.. தன்
நிலையில் தாழ்ந்து வீழ்ந்திடினும்..இத்
தரணி செழித்திட உரமாகும்..!!

காற்றில் சருகுகள் பறந்ததெல்லாம்.. இன்று
பகற் கனவாக ஆயிற்று..
வேற்று கிரகமோ இதுவென்று.. தோன்றும்
நிலைக்கு பூமி மாறிற்று..!!

வாழும் உயிர்கள் அனைத்திற்கும்.. தீங்கின்றி
நம் வாழ்வைக் கடப்பதுதான்..
தரணிக்கு நாம்செயும் தொண்டென்று..
உணர்ந்தால் வாழ்வு வளமாகும்..!!

சருகான இலைகளும் கலைக்கண் கொண்டு நோக்கிட அழகே!
காய்ந்தபின்னும் அவை மண்ணுக்கு உரமாகி உதவுவதுபோல் மனிதனும் பிற உயிர்களுக்குத் தீங்கின்றி வாழ்வதே அவன் புவிக்குச் செய்யும் தொண்டாகும் என்று கவி வடித்திருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "படக்கவிதைப் போட்டி 210-இன் முடிவுகள்"

  1. இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டிய நடுவர் அவர்கட்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.