Blog

  • இந்த வார வல்லமையாளர் (285)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    இந்த வார வல்லமையாளராக உலகின் மிக நீண்ட பாலத்தைக் கடலில் கட்டிய பொறியாளர் ’மெங் ஃபான்சாவ்’ (Meng Fanchao) என்னும் சீன சிவில் எஞ்சினீயரை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.


    14,000 கோடி ரூபாய் செலவில் சீன நகரம் ஃசுலாய், மக்காவ் தீவு, ஹாங் காங்கையும் இணைக்கும் பாலம் இது. 54 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கடலின் மீது வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய பொறியியற் சாதனை. இதன் தலைமைப் பொறியாளர் மெங் ஃபான்சாவ் அவர்களை வாழ்த்துகிறோம்.  ரிச்டர் ஸ்கேலில் 8 எண்ணலகு கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கூடத் தாங்கும் வலிமை கொண்டது. பல நூறு மைல் வேகம் கொண்ட சூறாவளிப்புயலோ, சுனாமிப் பேரலைகளோ வந்தாலும் தாங்கும் அளவிலும், 120 ஆண்டுகள் வரை இருக்கும் வரையிலும் இந்த எஞ்சினீரிங் சாதனை உருவமைக்கப்பட்டுள்ளது.

    ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்றார் மகாகவி பாரதியார். ஒருநாள் ஈழத்துக்காரர்கள் ராமேசுவரத்தில் சினிமா, கலை நிகழ்ச்சிகள் பார்க்கவும், தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகளில், கார்களில் மக்கள் இலங்கைக்கு கடலின் மீது எழுப்பப்பட்ட பாலத்தின் வழியாகப் போய் சுற்றுலா, வணிகம் செய்யும் நாள் வரட்டும். சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையில் கடல்வழியாக செல்ல வசதிகள் உள்ளதுதானே.

    தமிழ்நாட்டு, இலங்கை (தமிழ், சிங்களம்) அரசியல் தலைவர்கள் முயன்றால் கடல்பாலம் வரும். தொழில்நுட்பம் இருக்கிறது, பாலம் கட்ட தமிழ்நாடு, இலங்கையில் பணமும் நிறைய உள்ளது. அரசியல் முயற்சிகளால் இது சாத்தியம் ஆகலாம். கப்பல் போக்குவரத்தும், கடற் பாலமும் ஆகி தமிழக, இலங்கை உறவுகள் அதிகமாகவேண்டும். இப்பொழுது இலங்கைத் தீவுக்கு தமிழ்நாட்டில் இருந்து பலர் சுற்றுலாச் சென்றுவருகின்றனர். அது நீர்வழி, பாலவழி, விண்வழி என்று மிகவேண்டும்.  இந்தியா, இலங்கை பாலத்திற்கு பூகம்பப் பிரச்சினை இருக்காது. புயல் காற்றும், ஆழிப்பேரலை என்னும் சுனாமியும் எப்போதாவது வரலாம். அதற்கான கட்டுமானப் பொறியியல் எளிது. வலிமையாக பாலம் எழுப்ப இயலும்.

    ”ராமேஸ்வரம் கொட்டகை தியேட்டரில் படம் பார்க்க யாழ்ப்பாணத்தில் இருந்தும் வருவார்கள்” ‘கதம்பம்’ ஆசிரியர் கே.வி.எஸ் மோகன் http://123tamizhamutham.blogspot.com/2009/12/re_7707.html

    டென்மார்க்கையும் சுவீடனையும் இணைக்கும் ஒர்சன் பாலம் (Øresundsbron)  http://vinaiooki.blogspot.com/2010/05/resundsbron.html

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி – 185

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்

     

    -முனைவா் அரங்க. மணிமாறன்.

    ————–

    மனித மனம் வினோதமானது.பல்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்படக்கூடியது.ஒருவன் மற்றவா் மீது அன்பு, வெறுப்பு, பொறாமை, அதீதப்பற்று ஆகியவை கொள்வதற்கு அவனது மனவியலே அடிப்படையாக அமைகிறது.

    மனித மனத்தின் பரிமாணங்களை ஆராயும் உளவியல் இன்றைய ஆராய்ச்சிக் கூறுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

    உளவியலாளா்கள் மனித மனம் ஒரு பனிக்குன்றுப் போன்றது.அதன் ஒரு பகுதிதான் வெளிப்படையாகத் தோன்றி  வெளிமனமாக இருக்கிறதென்றும், மற்றொரு பகுதி மறைந்து நின்று மறைமனமாக இருக்கிறதென்றும் அவா்கள் விளக்கம் கூறுகிறார்கள் என்கிறார் பெ.துாரன்.1

    உளவியல் எனும் சொல் கிரேக்க மொழி சொற்களான ஸைக்கி என்ற உயிரையும் லோகஸ் எனும் அறிவியலையும் குறிக்கும் சொற்களின் கூட்டிணைவாகும்.ஆன்மா, மனம் பற்றி ஆராயும் இது நடத்தையியல்  தற்காலத்தில் வழங்கப்படுகிறது.

    உளவியல் என்பதனைத் தற்காலத்தில் நடத்தை மற்றும் அனுபவத்தை அறிவியல் முறையில் ஆராயும் ஒரு பிரிவாகக் கொள்கின்றனா்.உளவியல் மனித மூளை அதன் சிந்தனை, புறநிலை ஆகியவற்றோடு தொடர்படையதாக உள்ளது.

    மனிதனின் புறச்செயல்களை உற்றுநோக்கி முறையாக ஆராய்ந்து அதன்மூலம் அவை எங்ஙனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடா்பு கொண்டுள்ளன என்றும் புறநிலைகளால் ஏற்படும்  நிகழ்வுகளால் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதையும் விளக்குவதே உளவியலாகும் என்கிறார் கி.நாகராஜன். 2

    இத்தகைய உளவியல் சார்ந்த சிக்கல்களை கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    இரவு நேரத்தின் குணம்:

    மனித மனம் தனிமையில் இருளில் எந்த தீமைகளையும் செய்ய துணிகிறது. அதற்குக் காரணம் இரவு இருள் நிறைந்தது.  கொலை, கொள்ளை, களவு, விபச்சாரம் போன்ற தீமைகள் இரவிலேயே தடையின்றி நடக்கின்றன.

    இரவு சிறுகதையில் இளம்வயது நண்பா்கள் கூடிபேசிக்கொள்கின்றனா். இரவுக்கென்று தனிப்பட்ட குணம் உள்ளதாகவும் பகலில் ஒரு பொருள் பற்றி தோன்றும் எண்ணத்திற்கும் இரவில் அதே பொருள் பற்றி தோன்றும் எண்ணத்திற்கும் வேறுபாடு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    இரவு வந்ததும் தனிமையின் துணிவோடு மனம் கெட்ட எண்ணங்களை எண்ணுகிறது. உலகம் இருண்டதும் மனிதன் துணிந்துவிடுகிறான் . எந்த கெட்ட காரியத்திற்கும் இரவு ஆதரவாகத்தான் இருக்கிறது. 3 என்று இரவின் உளவியல் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் கு.அழகிரிசாமி.

    ஆண்பெண் நேசத்தில் வேறுபாடு:

    திருமண வயதில் ஓா் ஆண் தான் பார்க்கும் எந்தப் பெண்ணையும் அவள் தனக்கு மனைவியாக வருவாளா என எண்ணிப்பார்க்க முடியும். ஆனால் ஒரு பெண் அப்படி நினைக்க முடியாது. சமுதாயம், கட்டுப்பாடு, கற்பு, ஆகிய காரணிகள் அதற்குக் காரணம்.

    ஏமாற்றம் சிறுகதையில் நாயகன் கிருஷ்ணமூர்த்தி  திருமணத்திற்குப் பின் பழைய நினைவுகளை அசைபோடும்போது தான் அவளை  பால்ய வயதிலிருந்தே விரும்பி வருவதாகக் கூறுகிறான். ஆனால் அவன் மனைவி லஷ்மியோ  மூன்றாம் வருடம் சந்தித்தபோதுதான் விரும்பியதாகக் கூறுகிறாள். இது அவனுக்கு  பெருத்த அவமானமாகிவிடுகிறது.

    “வீட்டுக்கு அப்பாவையோ அண்ணணையோ தேடிக்கொண்டு வருபவர்களுக்கு நான் பதில் சொல்லநேரிடும்போது வரக்கூடியவர்களெல்லாம்  உங்களைப்போல மனப்பரவசத்துடன்தான் பேசுவார்கள்”. 4

    திருமணத்திற்கு முன் எல்லா வாலிபர்களுக்கும் ஏற்படும் பரவசமே கிருஷ்ணமூர்த்திக்கும் ஏற்படுகிறது.ஆனால் பெண்ணுக்கு ஆணின் மீது நம்பிக்கை உருவான பிறகுதான் பெற்றோரின் சம்மதத்திற்கு பிறகுதான் நம்பிக்கையும் காதலும் வரும். அதுவன்றி எல்லா ஆடவரையும் கண்டவுடன் தன் கணவனாக நினைத்து பரவசப்பட  முடியாது என்ற உளவியல் கருத்து இக்கதையில் வெளிப்படுகிறது.

    குழந்தை உளவியல்:

    பெரியவர்களைவிட குழந்தைகள் வேறுபாடு கருதாதவர்கள் மாசுமறுவற்றவர்கள். தன்மீது அன்புகொண்டவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்பவர்கள். கல்வி, பதவி, வயது, புகழ் ஆகியவற்றாலும் உயர்ந்தவர்களானாலும் குழந்தைகளுக்கு அது பெரிதில்லை.

    அன்பளிப்பு கதையில் பல குழந்தைகளோடு  நாயகன் நட்புக் கொள்கிறான். அக்குழந்தைகளுக்கு புத்தகங்களைப் பரிசளிக்கிறான். சாரங்கன் என்ற சிறுவன் மட்டும் வால்ட் விட்மனின் கவிதைத் தொகுப்பை கேட்கிறான். அவனால் இச்சிறு வயதில் புரிந்துகொள்ளமுடியாது எனக்கருதி நாயகன் தரமறுக்கிறான்.  அதனால் சிறுவன் கோபித்துக்கொள்கிறான். தன்தோழி ஒருத்திக்கு உடல்நலமிலாதபோது நாயகன் சென்று பார்த்துவந்ததைப்போல தன் வீட்டிற்கும் வரவேண்டும் என்கிறான்.

    நாயகன் தன் நட்பு குழந்தைகளுடன் மட்டுமே. அவர்களின் பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணி மறுக்கிறான்.

    “எங்கள் வீட்டுக்கும் வாருங்கள் என்று கையைப்பிடித்து இழுத்தான்.

    உங்கள் வீட்டிற்கு எதற்கு?

    பிருந்தா வீட்டிற்கு மட்டும்?

    பிருந்தாவிற்கு ஜீரம் அதனால் போய்ப்பார்த்து வந்தேன்.

    ஊஹீம்.. எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்.5

    பணக்கார குழந்தையின் வீட்டிற்குச்சென்றவன் ஏன் தன் வீட்டிற்கு வரவில்லை? அனைவருக்கும் புத்தகம் தந்தவன் தனக்கு ஏன் தரவில்லை? என்பது சாரங்கன் வாதம்.

    நட்பு குழந்தைகளோடு மட்டுமே.  அவர்களின் குடும்பத்தாரோடு இல்லை என்பது நாயகனின் பார்வை.

    குழந்தைகள் அன்பு வைத்துவிட்டால் பேதம் பார்க்கமாட்டார்கள் என்ற உளவியல் சிக்கல் இக்கதையில் விடுவிக்கப்பட்டுள்ளது

    மனம் எனும் புதிர்:

    மனித மனம் எப்போதும் தன்னுள் ஏதோ ஒரு பாதிப்பையோ நிகழ்வையோ மனதில் வைத்துக்கொண்டு சமயம் வாய்க்கும்போதெல்லாம் அதன் பாதிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

    அழகம்மாள் சிறுகதையில் வாழ்ந்து கெட்டவரான கிருஷ்ணகோனாருக்கு உறவுமுறைப்பெண்ணான அழகம்மாளை திருமணம் செய்து வைக்கின்றனர். மகன் வளர்ந்து மதுரையில் கல்லூரியில்  படிக்கிறான். விடுமுறைக்காக அவன் வரும்போதெல்லாம் தாயும் தந்தையும் ஒருவரோடு ஒருவா் சண்டையிடுகின்றனர். மற்ற நேரங்களில் இயல்பாக இருப்பவர்கள் தான் ஊருக்கு வரும்போதுமட்டும் ஏன் சண்டையிடுகின்றனர் என வேதனைக் கொள்கிறான்.

    கறிச்சோறு போடும் போது அவனிடம்  கொஞ்சம் கறிவிட்டுச் சாப்பிடேன் எனக்கூற இதைக்கேட்ட அழகம்மாள் நான் செய்ததும் செய்யாததும் அந்த அவிஞ்ச கண்ணுக்குத் தெரியப் போகிறதா? 6 (ப.466) என்றுச் சொல்லி மனதை நோகடிக்கிறாள்.

    தற்போது தன் மகனின்  மோகன வடிவையும் அவனது வளர்ச்சியையும் ஊரார் அவனை மதிப்பதையும் கண்டு தன்வாழ்வு இந்த ஊதாரியிடம் பறிபோனதை எண்ணி வேதனைக் கொள்கிறாள். அதன்வெளிப்பாடே எரிந்து விழுவதும் கண்டையிடுவதும் என்று உளவியல் சிக்கலை விடுவிக்கிறார்.

    கௌரவ சண்டை:

    நல்லவள் சிறுகதையில் வித்வான் வீட்டில் குடியிருக்கிறாள் ஜெயா. வித்வானின் மனைவி ராஜேசுவரி தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஜெயாவிடம் சிறுசிறு கடன் வாங்குகிறாள். சில நேரங்களில் அவர்களோடு  காரணமின்றிச் சண்டையிடுகிறாள். கோபமாக பேசுவதும் தன் மகளை அவர்கள் வீட்டிற்கு போகாதே என்று திட்டி அடிப்பதும் தொடர்கிறது.

    “ராஜேசுவரி அப்பறம் எனக்கு ஆராய்ச்சிக்குரிய விஷயமாவே மாறிவிட்டாள்.கடன்கொடுத்த தினத்தில் சண்டைக்கு வருவாள். கையில் பணம் இருக்கும்போது அன்பில் உயிரையே கொடுக்கச் சித்தமாக இருப்பாள்.இவளை நல்லவள் என்று எப்படி சொல்லாமல் இருப்பது?”7

    தன்வீட்டில் குடியிருப்பவளிடம் தான் கடன்வாங்குவதால் தன்னை அவள் ஏளனமாக நினைத்துவிடக்கூடாது என மான உணர்ச்சியினால் கோபமும் சண்டையும் போட்டுத் தன் கௌரவத்தை நிலைநாட்ட நினைக்கும் உளவியல் சிந்தனை இக்கதையில் வெளிப்படுகிறது.

    அழகின் மீது நாட்டம்:

    அழகற்ற தேவகியை யாரும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் ஆறாம் வகுப்பு பெயிலாகி ஒரு மளிகைக் கடையில் கணக்குப் பிள்ளை வேலைப்பார்க்கும் பாண்டுரங்கன் திருமணம் செய்துகொண்டு  பெண் பிள்ளைப் பெற்று வாழ்கிறான். தேவகி வந்த நேரம் குடும்பம் தழைக்கிறது. அவள் அழகில்லாதவள் என்பதை மறந்து மனைவிப் பித்தனாகி குடும்பம் நடத்துகிறான். வீட்டின் மேல்மாடியில் சில இளைஞர்களை குடிவைக்கின்றனர்.

    தேவகி அலங்கார பிரியையாகி முப்பொழுதும் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். தாம் அழகற்றவள், வயதானவள் என்பதை மறந்து இளைஞர்களிடம் வளைய வந்து நட்பையும் பாராட்டையும் பெற விழைகிறாள்.

    தன்னை அழகி என்று அவர் தொடர்ந்து கருதுகிறாரா என்பதை தெரிந்துகொள்வதற்காக அவள் சிறுநடை பயில்வாள்; கொஞ்சுவாள்; கோபிப்பாள்; கூப்பிட்டால் வரமாட்டாள். 8

    இறுதியில் தன்மகளோடு வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர்களில் ஒருவன்  பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போய் அவனை வசைபாடுகிறாள்.

    இதனை அறிந்த பாண்டுரங்கன் தன்  பிள்ளைகளை கவனிக்காமல் அலங்கார மயக்கத்திலேயே காலம் கழித்து இளசுகளிடம்  சிரித்துப்பேசி குதித்து கும்மாளமிட்டதைக் கண்டித்தும் வசைமாரி பொழிகிறான்.

    இதனால் அவள்,

    “அலங்காரத்தையும் கைவிட்டாள். உலகத்தையே வெறுத்தவளாக வீட்டிற்கும் வாசலுக்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்” 9

    இவ்வாறு அழகின்மை எனும் தாழ்வுணர்ச்சியினால் அலங்காரப் பைத்தியமாகி தவிக்கும் பெண்ணின் உளவியல் நிலையை வெளிப்படுத்துகிறார்.

     முடிவுரை:

    மனிதர்களின் ஒவ்வொரு நடத்தையிலும் உளவியல் உட்கூறு வெளிப்படுகிறது. கணவன்- மனைவியிடத்தும், மாமியார் மருமகளிடத்தும், பணக்காரன் ஏழைகளிடத்தும் உளவியல் காரணமாகவே மோதல்களும் சிக்கல்களும் உருவாகின்றன. ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டாலே சிக்கல்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். உளவியல் சிக்கல்கள் அற்ற சமுதாயமே பிரச்சனைகள் நீங்கி மேம்பட்ட சமுதாயமாக மலரும் என்பது கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் வழி தெளியமுடிகிறது.

    ————————–

    முதன்மை ஆதாரம்:

    கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

    பதிப்பாசிரியர் பழ.அதியமான்.

    காலச்சுவடு பதிப்பகம்

    669 கே.பி.சாலை நாகர்கோவில்-1

    முதல் பதிப்பு ஏப்ரல் 2011.

    ———————————

    அடிக்குறிப்புகள்:

    1. பெ.தூரன் -மனமும் அதன் விளக்கமும்-ப.165
    2. கி.நாகராஜன்-கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் ப.1.-ஸ்ரீராம் பதிப்பகம் சென்னை-2009.
    3. இரவு-சிறுகதை பக்.73-74. கு.அழகிரிசாமி சிறுகதைகள் காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில். முதற்பதிப்பு ஏப்ரல் 2011.
    4. மேற்குறித்த நூல் ஏமாற்றம் சிறுகதை ப.186.
    5. மேற்குறித்த நூல் அன்பளிப்பு சிறுகதை ப.375
    6. மேற்குறித்த நூல் அழகம்மாள் சிறுகதை ப.466
    7. மேற்குறித்த நூல் நல்லவள் சிறுகதை ப.703
    8. மேற்குறித்த நூல் முகக்களை சிறுகதை ப.1186
    9. மேற்குறித்த நூல் முகக்களை சிறுகதை ப.1194

    —————————-

    கட்டுரையாளர்:

    முதுகலை தமிழாசிரியர்

    அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி

    செங்கம்-606701.

    திருவண்ணாமலை மாவட்டம்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • புள்ளக்குட்டிக்காரி!

    -முனைவர் பா. ஜெய்கணேஷ்

    “இது எத்தனாவது”

    “ஏழு மா”

    “உங்க வீட்டுக்கார் என்ன வேல செய்யறார்”

    “லாரியில கம்பி ஏத்தற வேலதாங்க”

    “அந்த ஆளுகிட்ட சொல்லுமா. இத்தோட குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் பண்ணிரலாம்னு”. கவுர்மண்ட்டு ஆஸ்பத்திரி நர்ஸ், ராஜேஸ்வரிகிட்ட சொன்னப்பா அவளோட முகம் வெளிறிப் போச்சு.

    “என்ன நர்ஸம்மா சொன்னீங்க. அத்தோட அந்த ஆளு என்ன நடுரோட்டுலயே வச்சி வெட்டிருவான். நல்ல வேள அந்த ஆளு இங்க இல்ல. இல்லனா உங்ககிட்ட இந்நேரம் மல்லுக்கு நின்னிருப்பான்”.

    “என்னமோ போங்க எனக்கு என்ன? நீதான் நாளைக்கு அவஸ்த படப்போற. அந்த ஆளுக்கு என்ன? படுத்தானா? எந்திரிச்சு போனானான்னு போயிடப் போறான். வருஷா வருஷம் சாகிறது நீ தான. திருந்தவே மாட்டீங்கன்னு” நர்ஸ் அம்மா சொல்லிக்கிடே டாக்டர் கூப்பிட உள்ள போச்சு.

    “சின்ன வயசுலயே புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. எங்க அப்பன் ஒரு குடிகாரன். எங்க அம்மா மட்டும் என்ன பண்ணும். அதுவும் அஞ்சும் பொண்ணுங்க நாங்க. எல்லாரையும் கரையேத்தறதுக்குள்ள எங்க அம்மா போய் சேர்ந்துருச்சு. எனக்கு வாய்ச்சவன் இவன்தான். ஆறு பெத்து கீழ இறக்கிட்டன். வயித்துல இருக்கற இது ஏழாவது. எல்லாம் என் தலையெழுத்துன்னு” பக்கத்துல இருந்த ஆயாகிட்ட புலம்பிக்கிட்டுக் கிடந்தா ராஜேஸ்வரி.

    “எனக்கு முதல்ல பொண்ணுதான் பொறந்துச்சி. ஆஸ்பத்திரியில உயிர கையில புடிச்சி படுத்துக்கிட்டு இருந்தன். இந்த ஆளுக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருந்தாங்க. வேக வேகமா உள்ள வந்தான். என்ன கத்தப்போறானோன்னு ஈரக்குலலாம் நடுங்கி கிடந்துச்சு. கையில தூக்கினான். நான் அவனையே பாத்தான். அப்ப அவன் ஒன்னு சொன்னான்.

    “புள்ளையில என்ன பொம்பள புள்ள ஆம்பள புள்ள. எங்க ஆத்தா பொம்பளதான. என்கூட பொறந்ததுங்கள்ல நாலு பொம்பள புள்ள தான. உன்னை எதுக்கு கல்யாணம் பண்னன். உங்க வீட்டுல அஞ்சும் பொம்பள புள்ளைங்க. உங்க ஆத்தா என்ன பாடு பட்டிருப்பான்னுதான் உன்ன பண்ணிக்கிட்டன். மகாலட்சுமிய பெத்துத் தந்திருக்க. அதனால இவ பேரு மகாலட்சுமின்னு வைக்கலாம்னு” அவன் சொல்லிட்டு நின்னப்ப,

    “எனக்கு அவன் மேல வந்த மரியாதைக்கே அளவில்லாமப் போச்சு. இவனுக்காக என் உடம்பு என்ன ஆனாலும் பரவாயில்ல. எத்தன புள்ள வேணா பெத்துத் தரலாம்ணு தோணுச்சு. அதுக்கப்பறம் எனக்குப் பொறந்தது எல்லாமே ஆம்பள புள்ளைங்கதான்னு” ராஜேஸ்வரி எதிர்ல இருந்த இன்னொரு கர்ப்பிணிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கறப்ப அவ கண்கள்ல இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிஞ்சுது.

    “சரி ஆத்தா நான் கிளம்பறன். புள்ளைங்க வீட்டுல தனியா கிடக்கும். அவ அக்காவும் இவரோட அம்மாவும்தான் எல்லாத்தையும் பாத்துக்குவாங்க. நான் வேலையோட போய் சேரன்னு” அங்கிருந்து கிளம்பினா ராஜேஸ்வரி.

    ஓட்டு வீடுதான். ஒரே ஒரு அறைதான். ஒரு சமையல்கட்டு. மொழுவன அடுப்பு. கொஞ்சமான பாத்திரங்கதான். ராஜேஸ்வரிக்கு மீனுனா உசுரு. ஒவ்வொரு புள்ளயும் பொறந்த அஞ்சாம் நாளே புள்ளைய கிழவிகிட்ட விட்டுட்டு, தன்னோட நீண்ட முடிய வாரி எடுத்து ஒரு கொண்டைய போட்டுக்கிட்டு, ஒரு பெரிய தூக்கு எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்குப் போய் குழம்பு மீனையும் வறுக்கற மீனையும் வாங்கியாந்து கால நீட்டிப்போட்டு அருவாமனையில உக்காந்து ஆஞ்சியெடுத்து சட்டியில தெருவே மணக்க மணக்க குழம்ப வைச்சு கவல மீன மொறு மொறுன்னு வறுத்து எடுத்து சூடா சோத்தப் போட்டு வக்கணையா வாயில ஒரு உண்டைய போடறப்பதான் அவளுக்கு உசுரே வந்த மாதிரி இருக்கும்.

    ”ஏண்டி ராஜேஸ்வரி. பச்ச உடம்புக் காரி. இப்படியா மார்க்கெட்டுக்குப் போய் வருவ. அப்படி என்னதாண்டி அந்த மீன்ல வச்சிருக்கன்னு” எதிர்த்த வீட்டுக்காரி கேக்கறப்ப,

    “அடப் போக்கா. இதல்லாம் உனக்கு சொன்னா புரியாது. அது மூக்க துளைச்சி, நாக்குல வழிஞ்சி உள்ள போற விஷயம். அத அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு” ராஜேஸ்வரி சொல்லிட்டு போயிருவா.

    நல்ல உயரம். சிகப்பிதான் அவ பட்டபேரு. ரோட்டுல நடந்தா நாலு கண்ணு இல்ல நானூறு கண்ணுங்க அவமேல படும். அப்படி ஒரு அழகு. ஒருமுறை ரோட்டுல ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அந்தப் படத்துல வைஜெயந்தி மாலா நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அந்த ஷூட்டிங்க ராஜேஸ்வரி வேடிக்க பாத்துக்கிட்டு இருந்தப்ப அந்தம்மாவோட கண்ணு இவ மேல பட்டுச்சு. ராஜேஸ்வரிய கிட்ட கூப்பிட்டவங்க “நீ ரொம்ப அழகா இருக்க. உன் கூட ஒரு போட்டோ எடுத்துக்கவான்னு கேட்டாங்கலாம். ராஜேஸ்வரிக்கு கையும் ஓடல காலும் ஓடல. பதற்றத்துலயும் கூச்சத்துலயும் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா. அன்னைக்கு சாயங்காலமே ஒரு பிரிண்ட் போட்டு ராஜேஸ்வரிக்கு ஒரு போட்டோவை வீடு தேடி வந்து கொடுத்துட்டு போச்சாம் அந்த அம்மா”.

    கொஞ்சா நாட்கள்லயே ஏழாவது புள்ளயும் பொறந்துச்சு. ஹாஸ்பத்திரியில அன்னைக்குப் பெரிய சண்டையே நடந்துச்சு. கிருஷ்ணன் யார் சொல்லியும் கேக்கல. “இதல்லாம் பேச உங்க யாருக்கும் உரிமை இல்ல. அவ என் பொண்டாட்டி. நான் சொல்றததான் கேப்பான்னு” கோவமா கத்திக்கிட்டே வெளியில போனான்.

    பதினோராவது புள்ள பொறக்கவரைக்கும் ஆஸ்பத்திரியில இதே தகராறுதான். ஏழு வருஷம் கடந்தும் அவன் மனசுல எந்த மாற்றமும் இல்ல.

    “மகாலட்சுமிக்கு இப்ப பதினாறு வயசு ஆயிருச்சு. பக்கத்து தெருவுல ராம்குமார்னு  ஒரு பையன் இருக்கான். இவளதான்  கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கானாம். குடும்பம் கூட நல்ல குடும்பம்னு கேள்விப்பட்டன். கல்யாணம் பண்ணி வச்சிரலாமான்னு”
    ராஜேஸ்வரி கிருஷ்ணன் கிட்ட சொன்னப்ப  “அதுக்கென்ன பண்ணி வச்சிட்டாப் போச்சுன்னு” கிருஷ்ணன் சொல்ல பெருமூச்சு விட்டா ராஜேஸ்வரி.

    “வீட்ட மாத்தணுங்க. ரெண்ரு ரூம் இருக்க வீடாப் பாருங்க. மருமகன்லாம் வந்தா அவங்களுக்குன்னு தனியா ஒதுக்கணும்னு” ராஜேஸ்வரி சொன்னப்ப “ஆமா ஆமா மாத்தணும். சீக்கிரமே மாத்திடறன்னு சொல்லிட்டு” வெளிய கிளம்பினான் கிருஷ்ணன்.

    கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்குப் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்த அன்னைக்கு ராத்திரி முதல் இரவு.

    “புள்ளைங்க எல்லாம் தூங்கிருச்சாடின்னு” கிருஷ்ணன் கேட்டான்.

    “ஏங்க எதுக்க இப்ப கேக்கறிங்க. பொண்ணயே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அவளுக்குப் புள்ள பொறக்க நேரத்துல எனக்கும் புள்ள பொறக்கணுமான்னு” சொல்லி முடிக்கற நேரத்துல விழுந்த அடியில அலற ஆரம்பிச்சா ராஜேஸ்வரி. எல்லாரும் முழிக்க மாப்பிள்ளையும் பொண்ணும் அலறி ஓடிவர அன்னைக்கு ராத்திரி எல்லாருக்கும் சிவராத்திரிதான்.

    “என்னடி நினைச்ச என்ன? ஆம்பளடி நானு. எனக்கு என்ன வயசாயிருச்சா? இல்ல உனக்குதான் வயசாயிருச்சா? இன்னும் பத்து பெத்துக்குவண்டி. என்ன யார் கேக்க முடியும்னு” கிருஷ்ணன் பேசின பேச்சுல அடுத்த நாளே பொண்ணும் மாப்ளையும் ஊருக்குக் கிளம்பிட்டாங்க.

    மாசம் ஓடிப்போச்சு. ஒருநாள் ராஜேஸ்வரிக்கு ஒரு போன் வந்துச்சுன்னு கடைகாரன் கூப்பிட போன கையில எடுத்தப்ப “அம்மா நான் மகாலட்சுமி பேசறன். நீ எப்படி இருக்க. உன் கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்னுதான் பண்ணன்”னு அவ சொல்றப்பவே ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிச்சுருச்சு. மவராசியா இருடின்னு அவள வாழ்த்திட்டு திரும்பி வந்த ராஜேஸ்வரி எதையோ ஒன்ன மென்னு முழுங்கிக்கிட்டே வீட்டுக்கு வந்து சேந்தா.

    ஏழாம் மாசம் வீட்டுக்குள்ள மகாலட்சுமி நுழையறப்பவே கத்த ஆரம்பிச்சிட்டா. “ஏன்மா உனக்கு அசிங்கமாவே இல்லையா? அந்த ஆளுக்குதான் அறிவு இல்ல. உனக்குமா. என்னதான் ஜென்மங்களோ?”

    “என்ன என்னடி பண்ண சொல்ற. அந்த ஆளப்பத்திதான் உனக்குத் தெரியுமே. இங்க பாரு அந்த ஆளு என் புருஷன். அவன் நீ பொறந்தப்ப என்ன தெரியுமா சொன்னான்.”

    “நிறுத்துமா. நீ இதச் சொல்லியே பன்னிரண்டு பெத்துட்ட. இப்ப பதிமூணாவது. பொண்ணும் ஏழாம் மாசம். அம்மாவும் ஏழாம் மாசம். மாத்தி மாத்தி வளைகாப்பு செஞ்சிக்குவோம். நல்லா இருக்குமா தாயின்னு” மகாலட்சுமி சொல்றப்பவே மூலையில உக்காந்து அழுதுகிட்டு இருந்தா ராஜேஸ்வரி.

    ராஜேஸ்வரிக்குப் பதிமூணாவதா பொறந்தது பொண்ணு. மகாலட்சுமிக்கும் பொண்ணு. மகாலட்சுமியோட புருஷன் அமைதியா இருக்கறதாலயும் அவங்க வீட்டுல மகாலட்சுமிய எல்லாருக்கும் புடிச்சுப் போனதாலயும் எந்தப் பிரச்சினையும் இல்ல. அப்பாவோட முரட்டு குணம் தெரிஞ்ச பொண்ணும் அமைதியாயிட்டா.

    ஒரு  வருஷம் கழிச்சு மகா போன் பண்ணா அம்மாவுக்கு. என்னடின்னு ராஜேஸ்வரி கேக்கறப்பவே “நீ எத்தனாவது மாசம் சொல்லுன்னு சொன்னா?”

    ராஜேஸ்வரி வெக்கப்பட்டுக்கிட்டே “இது நாலாவது மாசம்டின்னு” சொன்னா.அதான் தெரியும்மே அதுக்குதான் கேட்டன்.

    “நான் இப்ப மூணு. ஏழாம் மாசம் வரன் பாத்துக்கோன்னு” போன வச்சிட்டா.

    ஆஸ்பத்திரியே அன்னைக்கு அரக்க பரக்க கிடந்துச்சி. கிருஷ்ணன் துள்ளிக் குதிச்சிட்டுக்கிட்டு இருந்தான். “ ஏய் ஆத்தா எனக்கு ரெட்ட புள்ள. எப்படி சிங்கங்க மாதிரி இருக்காணுங்க பாருன்னு” எல்லாருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்துட்டு இருந்தான்.

    மகாலட்சுமி வயித்த தள்ளிக்கிட்டு ராஜேஸ்வரி இருந்த அறைக்குள்ள நுழைஞ்சப்ப வெக்கத்துல கண்ண மூடிக்கிட்டுப் படுத்து இருந்தா அவ.

    “இந்த வெக்கத்துல ஒன்னும் குறைச்சல் இல்ல உங்களுக்கு. வெக்கத்தப்பாரு வெக்கத்த. காலம் போன காலத்துல ரெட்ட புள்ள வேற. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்வன் நானுன்னு” அவ புலம்பிக்கிட்டே தன்னோட தம்பிங்க கன்னத்த கிள்ளி முத்தம் தந்துக்கிட்டு இருந்தா. ஓரமா நின்னுக்கிட்டு இருந்த மாப்பிள “அத்த உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு” ஆரம்பிச்சார்.

    “சொல்லுங்க மாப்பிளைன்னு” ராஜேஸ்வரி கேக்க, “உங்களுக்கு இப்ப பதினாலு புள்ள ஆயிருச்சு. எனக்குப் பொறக்கப் போறது ரெண்டாவது. நானும் மகாலட்சுமியும் ரெண்டு போதும்னு முடிவுக்கு வந்துட்டோம். அவ குழந்தை பொறக்கறத நிறுத்திக்கிட்ட பிறகும் நீங்க புள்ள பெத்துக்கிட்டு இருந்திங்கனா எங்க எல்லாருக்கும் அசிங்கம். அதனால ஆபரேஷன் பண்ணிருங்க அத்தன்னு” தயங்கித் தயங்கி அவர் சொல்லி முடிச்சப்ப ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து தண்ணி வழிய ஆரம்பிச்சிருச்சு.

    மகாலட்சுமிக்குப் பையன் பொறந்தான். குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனுக்குத் தயார் ஆயாச்சு. பக்கத்துப் படுக்கையில ராஜேஸ்வரியும் படுத்து இருந்தா அதே ஆபரேஷனுக்கு.

    “அத்த ஒன்னும் கவலப் படாதீங்க. மாமா ஊருல இருந்து வரதுக்குள்ள எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும். அவர் வந்த பிறகு சொல்லிக்கலாம்னு” மருமகன் சொல்லி முடிக்கறதுக்குள்ளயே அவ ஒடுங்கியும் நடுங்கியும் படுத்து இருந்தா.

    எதிர்த்த வீட்டுக்காரி வேகமா ஓடி வந்தா. “அண்ணி அண்ணி உள்ள போய் கதவ சாத்திக்கோங்க. அண்ணனுக்கு யாரோ தகவல் சொல்லிட்டாங்க. கத்திய எடுத்துக்கிட்டு ஓடி வரார். மாப்ள நீங்களும் எங்கயாவது போயிருங்க. அந்த ஆளு கொல கூட பண்ணத் தயங்க மாட்டான்னு” சொல்லி முடிச்சா.

    ராஜேஸ்வரி சின்னப்புள்ளைங்கள கூப்பிட்டுக்கிட்டு உள்ள போய் கதவ சாத்திக்கிட்டு அழுதுகிட்டே கிடந்தா. வெளியில பயங்கர சத்தம். கிருஷ்ணனோட குரல் தெரு முழுக்கக் கேட்டுச்சு. நல்லா தண்ணி அடிச்சு இருந்தான்.

    “எவன்டா என்ன கேக்காம என் பொண்டாட்டிக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணது. மருமகன்னா என்ன வேணா பண்ணலாமா? என் பொண்ணதான் அவனுக்குக் கட்டிக் கொடுத்தன். அவன் பொண்டாட்டிக்கு அவன் பண்ணது சரி. என் பொண்டாட்டிக்கு ஏன் பண்ணான்.

    பெரியவங்க கல்யாணத்து அன்னைக்கு என்ன சொன்னாங்க. பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும்னு. அதுவும் அத சொன்னது எங்க அப்பத்தா. அது வாக்க காப்பாத்ததாண்டா இவ்ளோ போராடினன். பதினாலுதாண்டா பெத்தன். பதினாறு பெத்துமுடிக்கறதுக்குள்ளயே இப்படி பண்ணிடிங்களேடா. பாவிப்பயலுகளா?ன்னு” கிருஷ்ணன் போட்ட கூப்பாடு, அவனோட அழுகை, கோபம், வெறி எல்லாம் சேந்து காத்துல கரைஞ்சிக்கிட்டு இருந்துச்சு.

    “மாமா வந்து அத்த முகத்த பாருங்க. நான் பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க. எந்திரிச்சு வாங்க. ஒருமுறை பாருங்க. இத்தன வருஷம் தான் பேசாமலே இருந்துட்டீங்க. கடைசியா ஒருமுறை பாக்கவாவது செய்யலாம்லன்னு” மருமகன் சொல்றப்ப கைய உதறிட்டு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டார்.

    “எத்தன முறையா உன் கிட்ட சொன்னன். ஏழாவது புள்ள அப்பவே ஆபரேசன பண்ணிரு பண்ணிருன்னு தலப்பாடா அடிச்சுகிட்டன். கேட்டியா நீ. அன்னைக்குப் பண்ணியிருந்தா இந்தக் கற்பப் பையில பாழாப் போன கேன்சர் வந்திருக்குமா? அவளும்தான் இவ்வளவு சீக்கிரமா செத்து இருப்பாளா. நீங்கலாம் திருந்தவே மாட்டிங்கையா?ன்னு அந்த ஆஸ்பத்திரி நர்ஸ் சொன்ன வார்த்தைகள் கிருஷ்ணனனோட காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்துச்சு.

    சேகண்டி சத்தம் எழுப்ப, சங்கு தெருவெங்கும் முழங்க, பறை இசை காதுகளைத் தொலைத்து கால்களை ஆடவைக்க ரெண்டு பெண்களும் அழுது புலம்ப புள்ளைங்க எல்லாம் பாடையைத் தோளில் ஏந்த பேரப்பிள்ளைகள் தீப்பந்தம் சுற்ற கிளம்பினாள் ராஜேஸ்வரி.

    “புள்ளக்குட்டிக்காரிடா? எப்படி கம்பீரமா போறான்னு” எதிர்த்த வீட்டுக்காரியின் பேச்சு ராஜேஸ்வரியின் காதில் உள்நுழைய எத்தனித்த படியே கிடந்தது.

    *****

    கதாசிரியர் – துறைத்தலைவர், தமிழ்த்துறை,
    அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
    காட்டாங்குளத்தூர் – 603203

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 40

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?

    ஒரு சிறிய நண்பர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஒருவர் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பரின் நிலையைக் குறிப்பிட்டும் சொல்லும் பொழுது கூறினார் “அவர் வாழ்ந்து கெட்டவர். ஒரு காலத்தில் தன்னுடைய தொழிலில் மிகச் சிறப்பாக முன்னணியில் இருந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் தொழில் எடுபடவில்லை. பல புதிய புதிய தொழிலில் பல புதிய தயாரிப்பு முறைகளும் விளம்பரத் தேவைகளும் வந்துவிட்டதால் அவர் தொழில் படுத்துவிட்டது. தனது தொழில் என்றும் படுக்காது என்ற அசைக்கமுடியாத தன்னம்பிக்கையில் இருந்த அவர்   தோல்வியில் துவண்டு ஒரு மனநோயாளியாகவே ஆகிவிட்டார்.”  இந்த நிலை இன்று பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தோல்வியை எதிர்பார்க்காத பலர் அதைச் சந்திக்கும் பொழுது அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் தங்களுடைய வெளிமதிப்பு காலாவதியாகிவிடுமோ என்ற பயத்தில் தங்கள் தன்னம்பிக்கையை இழந்து வாழ்வின் முடிவுக்கே சென்று விடுகின்றார்கள். இதற்கு என்ன காரணம்?

    நாமெல்லாம் இன்று மாறிவரும் சமுதாயத்தின் அங்கத்தினர்களாக இருக்கின்றோம். மாற்றங்கள் என்றும் நிரந்தரமானவை. ஆனால் இன்று மாற்றங்களின் வேகம் அதிகரித்து விட்டது. இன்றைய அறிவுசால் சமுதாயத்தின்(Knowledge society)  காலச்சக்கரம் சில வாரங்கள் என்ற ஒரு கணிப்பினை சமூகவியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் பொருள் என்ன? சில அறிவுத்திறன்களின் தேவைகளும் தாக்கங்களும் பயன்முறைகளும் சில வாரங்களுக்குள் முடிந்து விடுகின்றன. அவைகளுக்கு புதிய அறிவுத்திறன்களும் அவற்றைச் சார்ந்த செயல்திறன்களும் விடைகொடுத்து விடுகின்றன. எனவே இத்தகைய மாற்றங்களுக்கு நாம் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்தவகையான மாற்றங்கள் தொடர் நிகழ்வுகளாக இருப்பதால் நம்முடைய கற்றலும் திறன் ஈட்டல்களும் தொடர்ச்சியாக இருத்தல் அவசியமாகின்றது.

    சுமார் நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய ஊர்திகள் (Cars) ஓட்டும்பொழுது நாம் இயந்திர பிரேக்குகளை  (Mechanical Brakes) உபயோகித்து வந்தோம். அந்த நிலை மாறி தற்பொழுது மின்னணுக்களால் இயக்கப்படும் (electronic brakes) பிரேக்குகளை உபயோகிக்கின்றோம். பழைய ஊர்திகளை பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் கூட இன்று கிடைப்பதில்லை. நாம் உபயோகித்த வானொலிப்பெட்டிகள் காணாமல் போய்விட்டன. நாம் பார்க்கின்ற தொலைக்காட்சி பெட்டிகளில் பலவித புதுமைகள் இணைக்கப்பட்டு விட்டன. நாம் ஒருகாலத்தில் உபயோகித்த தொலைபேசிகள் அருங்காட்சியகத்திற்குத் தேவையான பொருள்களாகி விட்டன. புதிய அலைபேசிகள் ஆதிக்கத்திலும் தாக்கத்தாலும் நம்முடைய சிந்தனைத்திறன்களும் செயல்திறன்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. இதனுடைய தாக்கம் நமது மாணவர்கள் கற்கும் முறைகளிலும் செயலாற்றும் முறைகளிலும் ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது. அது மட்டுமின்றி, நமது வாழ்க்கைப் பாதைகளையும் மாறிவரும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மாற்றங்கள் மிகுந்த அளவில் பாதித்து விட்டன. இதன் காரணமாக நாம் செய்யும் தொழில்களில் தொடர்ந்து மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.

    எனவே இந்த மாற்றங்களில் நாம் பங்கீட்டாளர்களாக (Stakeholders) இல்லாவிட்டால் அவைகள் நம்மைப் பின்தள்ளிவிட்டு முன்னே சென்றுகொண்டிருக்கும். சிஸ்கோ (CISCO) என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒருமுறை தனது பேச்சினில் குறிப்பிட்டார்: “இனி வரும் சமுதாயத்தில் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களைப் பின் தள்ளுவதற்கான வாய்ப்பு குறைவே; ஆனால் வேகமாகக் கற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மெதுவாகக் கற்றுக்கொள்ளும் நிறுவனங்களைப் பின்தள்ளிவிடும்.” ( In the Knowledge society, the big will not swallow the small, but the faster will swallow the slower).

    மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத நபர்கள், நிறுவனங்கள் மாற்றும் தொழில் அமைப்புக்கள், மாற்றங்களை முன்கூட்டியே நுகராத நபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புக்கள் தங்களுடைய தோல்விகளுக்கும் வருங்காலச் சீரழிவுக்கும் தாங்களே வித்திட்டுக்கொள்ளுகின்றன. மாற்றங்களை நுகர்தலும், அறிதலும், அவற்றை ஏற்றுக்கொண்டு புதிய சிந்தனைகளையும் வழிமுறைகளையும் நடைபடுத்திக்கொள்ளுதலும், தோல்விகளைத் தவிர்ப்பதற்கு மட்டுமின்றி வருங்கால வெற்றிகளுக்கு வித்தாகவும் அமையலாம்.

    பழமையைப் பாராட்டுதலும், பழமையைப் போற்றுதலும், பழமைச் சின்னங்களைப் பாதுகாத்தலும் எவ்வளவுக்கெவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கவ்வளவு புதுமையை  ஏற்றுக்கொண்டு முன்னேற்றப்பாதையில்  செல்லுவதற்குத் தயார் செய்து கொள்ளவேண்டும். மாற்றங்களை ஏற்க மறுப்பவர்கள் மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கற்களை தாங்களே முன்வைத்துக்கொள்கின்றார்கள்.

    மாற்றங்கள் நம்முடைய ஒப்புதலுக்காகவோ அல்லது விருப்பு வெறுப்புக்களுக்காகவோ காத்திருப்பதில்லை அல்லது பணிவதில்லை. அவைகள் இயற்கையின் மற்றும் மனித சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடுகள். நம்முடைய வேகத்தைக் கணித்து அவைகளுக்காகத் தங்களுடைய வேகத்தை அவைகள் சமன் செய்துகொள்வதில்லை. நாம் நமது தேவைகள் மற்றும் நிர்பந்தங்களுக்கேற்றவாறு இந்த மாற்றங்களின் வேகத்தை கணித்து முன்செல்லவேண்டும். மறுத்தால், நம்முடைய சமூக, பொருளாதார மற்றும் தொழில் துறைகளில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவ வேண்டியிருக்கும்.

    மாற்றங்கள் இயற்கையின் நியதி. மாற்றங்களைத் தவிர வேறெதுவும் மாறுவதில்லை என்பது முதுமொழி. வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிக் கூறிய வள்ளுவர் தந்த குறள் இந்த மாற்றங்களின் ஆதிக்கத்திற்கு இன்னொரு சான்று.

    இன்றிருப்பார் நாளையில்லை என்னும்

    பெருமை உடைத்து உலகு.

    மாற்றங்கள் என்பது நமது பார்வைகளின் மற்றொரு கோணம். மாற்றங்கள் நமது சிந்தனைகளின் இன்னொரு புதிய வெளிப்பாடு. எனவே மாற்றங்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இந்த மாற்றங்கள் நம்முடைய கலாச்சார அடிப்படைகளைத் தாக்காத வண்ணமும் நம்முடைய பாரம்பரியங்களை சின்னா பின்னமாக நசுக்கி விடாத வண்ணமும் நாம் அவற்றை ஏற்று புத்திசாலித்தனமாக நிலைநிறுத்த வேண்டும்.

    மாற்றங்களால் நமக்கு ஏற்படும் இழப்புக்கள் தோல்விகள் அல்ல. அவைகள் நம்முடைய செயல்திறன்களில் உள்ள சிறிய குறைபாடுகளே. பலருக்கு நம்மால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற ஒரு பயமும் சந்தேகமும் ஏற்படுகின்றது.

    இதை விளக்கும் வண்ணம் ஒரு மேலைநாட்டு மனநல நிபுணர் கூறுகின்றார்: “நாமெல்லாம் கோவிலில் ஒரு கயிற்றால் கல்தூண்களில் கட்டப்பட்ட யானையைப் போன்றவர்கள். அந்த யானை நினைத்தால் அந்தக் கயிற்றை ஒரு நொடியில் அறுத்துக்கொண்டு வெளிவர முடியும். ஆனால் நாம் கட்டப்பட்டுள்ளோம் என்ற ஒரு எண்ணம்  அதன் மனதில் இருக்கும் வரை அது அந்த இடத்தை விட்டு நகராது. அதுபோல் நம்மில் பலர் நம்முடைய வளர்ச்சியை சில சிந்தனைகளால் கட்டுப்போட்டிருக்கின்றோம். அந்த சிந்தனைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளுதல் அவசியம். இதைக் கற்றலின் இயலாமை (Learned Helplessness) என அழைக்கலாம்.”

    உண்மைதானே?

    நாமும் புதிய தரமான சிந்தனைகளையும் மாற்றங்களையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப் பழகலாமே !

    (தொடரும்)

    Share
  • படைப்பின் வழிப்பயணம்!

    -கவிஞர் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)

    புதிராய் ஈா்க்கும் மிளிரொளி வானத்தின்
    பாய்ந்து வரும் தூசியில்
    ஆண்டுகள் கோடியின் அணுத்தவம்
    மௌனத்தின் பேரோசையில்
    கேட்பாரற்றுப் பரவெளி
    கிடக்கிறது பரந்து!

    அணுக்கள் அணுக்கமாய்
    அந்நியமில் அண்டவெளியில்
    மூலாக்கினியாய் ஓங்காரம்
    உறங்கிக் கொண்டிருக்கும்
    அணுவின் ஆற்றலாய்
    அவள்!

    ஓசையில்லாமல் மாலை நேரத்துக்
    குயில் பாடலோடு மஞ்சள் வெயிலோடு
    அமைவதில்லை எதுவும்!

    அணு பிளந்து
    பாறை உடைந்து
    ரத்தமும் சதையுமாக
    நூற்றாண்டு வரலாற்றின்
    புதைபொருளாக உள்ளிருந்து
    வெளிப்படும்
    பிரபஞ்சத்தின் அனைத்தும்
    ஒரு துளி நீரில்!

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 131

    நிர்மலா ராகவன்

    நண்பர்களும், மரக்கட்டைகளும்

    பிறருக்கு நல்லது செய்ய நினைப்பவர்களை இக்காலத்தில் அபூர்வமாகத்தான் காணமுடிகிறது. உலகின் போக்கு இவர்களுக்கு கசப்பாக ஆகிவிடுவதில் என்ன அதிசயம்? நல்லவர்களை `முட்டாள்’ என்று கருதும் உலகத்தில் அல்லவோ இருக்கிறார்கள்!

    எவரைப் பார்த்தாலும், `இவரிடமிருந்து எதைப் பெறலாம்?’ என்றே சிந்தனை நிலைத்திருக்கும் காரியவாதிகள் மலிந்திருக்கும் உலகம் இது. ஒன்றும் பெறமுடியாது என்ற நிலை வரும்போது காணாமல் போய்விடுவார்கள்.

    பள்ளி நாட்களில் மிகச் சிலருடன் உண்டாகும் நட்பு நீடித்திருக்கும். இது மகிழ்ச்சி அளிக்கும் சமாசாரம். ஏனெனில், உத்தியோகம் பார்க்கும் பருவம் வந்தால், பெரும்பாலோர்க்கு போட்டி, பொறாமை, புறம்பேசுவது போன்ற வேண்டாத குணங்களும் கூடவே எழுந்துவிடுகின்றன. அதனால் யாரையும் எளிதாக நம்புவது கடினம்.

    நட்பு பலப்படுத்தும்

    நாம் அறியாமலே நமக்குள் சில திறமைகள் இருக்கும். அவர்களை வெளிக்கொணர்பவர்களின் நட்பு நம்மை பலப்படுத்தும் தன்மையது.

    கதை

    நல்ல உத்தியோகத்திலிருந்த இளைஞர் பாஸ்கர். “எனக்கு இசை என்றால் கொள்ளை ஆசை. சிறு வயதில் எங்கள் குடும்பம் ஏழ்மையில் மிகவும் அவதிப்பட்டது. அதனால் கற்க இயலவில்லை,” என்று குறைப்பட்டார்.

    “இப்போது கற்றுக்கொள்ள என்ன தடை? போயேன்!” என்றார் நண்பர் எரிச்சலாக. (நமக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் எப்போதும் இனிமையாகத்தான் பேசுவார்கள், பேசவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது).

    முகம் மலர, உடனே ஓர் இசை வகுப்பில் தன் பயணத்தை ஆரம்பித்தார் பாஸ்கர்.

    `இனி நீ பாட்டு கற்றுக்கொண்டு என்ன லாபம்? கச்சேரியா செய்யப்போகிறாய்?’ என்ற ரீதியில், கேலிச்சிரிப்புடன் நண்பர் பேசியிருந்தால்?

    (முகத்தில் சிரிப்பு மாறாது எப்போதும் இருப்பவர்களே சந்தேகத்துக்கு உரியவர்கள். இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில்லை. பிறரைக் கவர (ஏமாற்ற?) வேண்டும் என்ற நோக்கம்தான்!)

    `நம்மால் செய்ய முடியாததை இவன் சாதித்துவிடப்போகிறானே!’ என்ற கலக்கமும் சிலரை அப்படிப் பேச வைக்கிறது.

    நம் மன நிம்மதிக்காக அப்படிப்பட்டவர்களைத் தவிர்க்க வேண்டும். முடியாவிட்டால், அவர்கள் கூறுவதையாவது அலட்சியம் செய்ய வேண்டும்.

    கச்சேரி செய்யும் அளவுக்கு இசைத்திறன் வளராவிட்டால் என்ன? பாடும்போதே மகிழ்ச்சியும், பின்னர் திருப்தியும் கிடைக்கிறதே, போதாதா?

    ஒருவருக்கு அவரது மகிழ்ச்சிதான் முக்கியம் – அவரது செய்கை பிறருக்குத் தீங்கு விளைவிக்காததாக இருக்கும்வரை.

    நம் குறைகளையே நாம் பெரிதாகக் கருதி மறுகும்போது, நம் வருத்தத்தை மேலும் தூண்டிவிடுபவர்கள் நண்பர்களில் சேர்த்தியில்லை.

    நெருங்கியவரெல்லாம் நண்பர்களா?

    `உனக்கு என்னைவிட உன் பொழுதுபோக்குதான் முக்கியம்!’ என்று நெருங்கியவர் குறைப்பட்டால், அது நம் தவறல்ல.

    பிடித்தமான பொழுதுபோக்கு மன இறுக்கத்தைக் குறைத்து, நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கூட்டும் வல்லமை படைத்தது. பிறருக்குப் பயந்து, நமது மகிழ்ச்சியை எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும்?

    நாம் அனுமதித்தாலே ஒழிய, பிறர் நம்மை ஆட்டுவிக்க முடியாது.

    கேள்வி: யார் ஆட்டுவிக்கிறார்கள்?

    பதில்: பிறர் நம்மை ஏற்க வேண்டுமே என்ற தாபத்துடன் சுயகௌரவத்தை விட்டுக்கொடுப்பவர்கள். இவர்களுக்குப் பிறரைப் பாராட்டவோ, மதிக்கவோ தெரிவதில்லை. தம் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்கவும் வழி புரிவதில்லை. `பிறரை மேலே தூக்கிவிடும்போது நாமும் உயரலாமே!’ என்ற எண்ணமே இவர்களுக்கு உதிப்பதில்லை.

    ஏன் ஆட்டுவிக்கிறார்கள்?

    தம்மைப்போல் அல்லாதவர்களைக் கண்டு அச்சம் எழுவதால்.

    எப்படி?

    தம்மைப்போன்று இல்லாதவர்களையும் இழித்தும், பழித்தும் தம்மைப்போல் ஆக்க முயற்சிக்கிறார்கள். `என்னைப்போல்தான் பலரும் இருக்கிறார்கள்!’ என்ற திருப்தியாவது எழுமே! அப்படிச் செய்யும்போது, தாமும் கீழேயேதான் இருக்க நேரிடும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.

    கதை

    அப்போதுதான் முதன்முறையாக அவளைத் தூதரகத்தில் நடந்த விழாவொன்றில் சந்தித்திருந்தேன்.

    “எழுதுவதைத் தவிர நீ வேறு என்ன செய்கிறாய்?” என்று கேட்டாள். (`உனக்கெல்லாம் எப்படி அழைப்பு கிடைத்தது?’ என்று வெளிப்படையாகக் கேட்டால் மரியாதைக்குறைவாக இருக்குமே!)

    அவளுடைய உள்நோக்கம் புரிந்து, “உருப்படியாக ஒன்றுமில்லை!” என்று பதிலளித்தேன், அசிரத்தையாக.

    “நானும் என் கணவரும் கோலாலம்பூர் பிரதான சாலையில் ஒரு பெரிய கட்டடத்தை வாங்கி, அதில் கல்லூரி நடத்துகிறோம், தெரியுமா?” என்று பெருமையுடன் தெரிவித்தாள்.

    நான் அவளைப் பார்த்துப் பிரமிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பெருமை பேசியவளைப் பார்த்து, “அப்படியா?” என்றேன், அலட்சியமாக.

    நம் நம்பிக்கைக்கு உகந்த நண்பர்கள் இவ்வாறு நம்மைக் கவரவேண்டும் என்ற நோக்கத்துடன் எதையும் செய்யவோ, சொல்லவோ மாட்டார்கள். நம்மீது பொறாமையும் எழாது.

    வாழ்க்கை ஒரு பயணம்

    ஓரிடத்திலிருந்து இன்னொரு ஊருக்கு ரயிலில் பயணம் செய்கிறோம். வழியில் எத்தனையோ அசந்தர்ப்பங்கள். ரயில் தாமதமாக வருகிறது. பெட்டியில் ஒரே கும்பல், சத்தம். வாங்கும் உணவும் கெட்டுவிட்டதுபோல் இருக்கிறது. இத்தனையையும் சகித்துக்கொண்டு, நாம் செல்லுமிடத்திற்கு வந்து, அங்கு உறவினர்களைப் பார்த்ததும் கலகலப்பு மீண்டுவிடுகிறது. பட்ட கஷ்டங்களெல்லாம் வெறும் கதைகளாகிவிடுகின்றன.

    இப்படித்தான் நம் தினசரி வாழ்க்கையில் எதிர்ப்படுகிறவர்களால் என்ன இடர் வந்தாலும், அவைகளால் மனம் தளராது இருப்பதே மகிழ்ச்சியைத் தக்கவைக்கும்.

    இன்னலை விளைவிப்பவர்கள் — ஆற்று நீரில் மோதி விலகும் மரக்கட்டைகள். இவர்கள் நம்மை அதிகம் பாதிக்க விடக்கூடாது.

    யாரைத்தான் நம்புவது?

    நாம் எப்படி இருந்தாலும் ஏற்பவர்களே நல்ல நண்பர்கள். இவர்களுடன் சேர்ந்திருக்கையில் எளிதாகச் சிரிப்பு வரும். நம் உடலோ, மனமோ நொந்திருக்கையில், அதை நாம் சொல்லாமலேயே புரிந்துகொள்வார்கள். அப்போதெல்லாம் ஆறுதலாகப் பேசி, அல்லது பேச்சை வேறு திசையில் கொண்டு சென்று, நம் மனப்பாரத்தை லேசாக்குவார்கள்.

    எண்ணிக்கை எதற்கு?

    `எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்!’ என்று பெருமை பேசிக்கொள்பவர்கள் அவர்களில் எத்தனைபேர் உண்மையானவர்கள் என்று நினைத்துப்பார்க்கிறார்களோ?

    நிறையச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்வதைவிட சத்து நிறைந்த உணவு சிறிதாகிலும் போதுமே!

    தொடருவோம்

    Share
  • அறிவழகனும் அவனது கூட்டாளிகளும்

    -முனைவர் ஆ. சந்திரன் 

    விண்ணை முட்டிநின்றது மலை.  அந்த மலையிலிருந்துதான் பேய் வரும் என்று பெரியவர் கூறியிருந்தார்.  அவன் அந்த மலையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் தென்படவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலால் பல நாட்கள் அவ்வாறு செய்தான்.

    ஆனால் அவனது முயற்சி தோற்றுக்கொண்டே இருந்தது. அதனால் அவனுக்குப் பெரியவர் கூறியதன் மீது சந்தேகம் வந்தது. ஒரு வேளை பேய் பற்றிக் கூறியது பொய்யாக இருக்குமோ என்று நினைத்தான். அவரிடம் அது பற்றி எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

    அப்போது அவனது கூட்டாளிகள் வந்தார்கள். தன்னுடைய எண்ணத்தை அவர்களிடம் கூறினான் அறிவழகன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.

    “சரி சரி சிரிச்சது போதும் வாங்கடா விளையாடப் போகலாம்” என்றான் அந்த கூட்டத்திலேயே உயரமாக இருந்த ஒருவன். அவனை எல்லோரும் வளர்ந்துகெட்டவன் என்றுதான் அழைப்பார்கள். அவன்தான் அவர்களில் வயதில் மூத்தவன்.

    பக்கத்தில் இருந்த மைதானத்தில் கபடி விளையாட ஆரம்பித்தார்கள்.

    அப்போது அந்த வழியாக அந்தப் பெரியவர் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் ஸ்ரீ ஸ்ரீ பால ராம கங்க சிங்கர். அவர் மீது அந்த ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. காரணம் அவர்தான் அந்த கிராமத்தில் அதிகம் படித்தவர். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார்.

    அவரைப் பார்த்ததும் அவரிடமாவது இந்த சந்தேகத்தைக் கேட்கலாமா? என்று அறிவழகன் யோசித்தான்.

    அதைப் புரிந்துகொண்ட கூட்டாளிகளில் ஒருவனான அந்த வளர்ந்துகெட்டவன் அதைக் கேட்டேவிட்டான். ஐயா! கொல்லிக்கட்டி பேய்னு ஒன்னு இருக்கா? என்று.

    கொல்லிக்கட்டி பேயா? என்று வாய்ப்பிளந்த அவர், ”ஆமாம்! முன்னாடி இருந்தது. நான் என்னுடைய சின்ன வயசில பார்த்திருக்கிறேன். வெள்ளையாக இருக்கும். அதோட தலை வானத்திலும் கால்கள் பூமியிலும் இருக்கும். ஆனால் நம்ம ஊருக்கு மின்சாரம் வந்ததில் இருந்து அது வருவதில்லை” என்று பெருமூச்சு விட்டவர் தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    இரவு மீண்டும் புலர்ந்தது.

    அன்றும் வழக்கம் போல நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தார்கள் அறிவழகனும் அவனுடைய கூட்டாளிகளும்.

    மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் அறிவழகன். அவனுக்கு நட்சத்திரங்களை எண்ணுவதில் ஆர்வம் அதிகம். அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய கூட்டாளிகளுக்கும் அப்படித்தான். சில  நேரங்களில் யார் அதிகமாக நட்சத்திரங்களை எண்ணுகிறோம் பார்க்கலாம் என்று அவர்களுக்குள் போட்டி வரும்.

    இரவு ஏழு மணியளவில் இம்மாதிரியான வாதம் துவங்கும். அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்கள். மறுநாள் மீண்டும் அது தொடரும். அந்த  கிராமத்துச் சிறுவர்களின் வாடிக்கை அது.

    எட்டொன்பது வீடுகளைக் கொண்ட அந்தக் கிராமத்தில் நான்கு பிரதான தெருக்கள் இருந்தன. அவற்றில் மூன்று தெருக்கள் கிழக்கு மேற்காக இருந்தன. அவற்றை இணைப்பது போல் அமைந்திருந்தது நான்காவது தெருவான சங்கத் தெரு. வாடைக் காற்றை வரவேற்கும் அத்தெருவில்தான் அறிவழகனின் வீடு இருந்தது.

    அந்தத் தெருவில் வசிப்பவர்கள் இரவில் பெரும்பாலும் வாயிலுக்கு வெளியில் பாய்விரித்துப் படுத்துறங்குவது வழக்கம். இந்த வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது என்ற கேள்விக்குப் பதில் யாருக்கும் தெரியாது. யாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பவில்லை.

    அன்று வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே பாய்போட்டுப் படுக்கப்போனான் அறிவழகன். அவனுடைய கூட்டாளிகள் சிலரும் அவனுடன் இருந்தார்கள். அப்போது தான் அதைப் பற்றி அவர்கள் முதல் முறையாகக் கேட்டார்கள்.

    கொல்லிக்கட்டி பேய். அது இரவு வேளையில் நடமாடும். வானளவு உயரத்திற்கு அது இருக்கும். வெள்ளையாக இருக்கும். அது நடந்துவரும் போது “ஜல் ஜல்” என்று சத்தம் வரும் என்று பேய் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர்.

    அவர் பெயர் ஆனந்தன். அவர் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தார்.

    சிறுவர்கள் குதூகலத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மின்விளக்கின் ஒளியில் அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி நன்றாகத் தெரிந்தது.

    அவர் தொடர்ந்தார். ”தான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் தன்னுடைய அப்பாவுடன் வயலுக்குச் செல்லும்போதுதான் முதல் முறையாக அப்பேயைக் கண்டதாகவும், அப்போது சிலீஸ்! சிலீஸ்! என்று அவருடைய அப்பா கூற அப்பேய் அவர்களை ஒன்றும் செய்யாமல் போய்விட்டதாகவும்” அவர் கூறினார்.

    அக்கதையைக் கேட்ட சிறுவர்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அறிவழகனுக்கு அது சுவாரசியமாக இருந்தது. கொல்லிக்கட்டிப் பேயைப் பார்க்க அவன் மனம் ஆவல் கொண்டது. பெரியவர் கூறிய வடிவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்தப் பேய் இப்போதும் நடமாடிக்கொண்டுள்ளதா? என்று பெரியவரிடம் கேட்கலாம் என்று அவன் நினைத்தான்.

    ஆனால் ஏனோ கேட்காமல் விட்டுவிட்டான்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • குறளின் கதிர்களாய்…(230)

     

     

     

    கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 

    தோட்கப் படாத செவி.

           -திருக்குறள் -418(கேள்வி)

     

    புதுக் கவிதையில்…

     

    காதுகளின் பயன்

    கேள்விஞானம் பெறுவதே..

     

    கேள்விஞானத்தால்

    துளைக்கப்படாத காதுகள்

    கேட்பினும் அவை

    கேட்காத

    செவிட்டுக் காதுகளே…!

     

    குறும்பாவில்…

     

    கேள்விஞானம் பெறாத காதுகள்                  

    கேட்பினும் அவை பயனேதுமற்ற   

    செவிட்டுக் காதுகள்தான்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    காதுக ளிரண்டு படைத்ததற்கே

         காரண மிதுதான் கேளீரே,

    ஓதி யுயர்ந்தோர் கொடுக்கின்ற

         ஒப்பிலாக் கேள்வி ஞானம்பெற,

    சேதி நல்லதாய்க் கேட்காத

         செவிகளால் பலன தில்லையென்பதால்,

    காதுக ளிவையொலி கேட்டாலும்

         கருதப் படுமே செவிடெனவே…!

     

    லிமரைக்கூ..

     

    கேள்விஞானம் பெற்றாலது காது,       

    அவ்வாறில்லாக் காதுநன்றாய்க் கேட்டாலும்                      

    பெற்றிடும்பேர் செவிடெனும் தீது…!

     

    கிராமிய பாணியில்…

     

    வேணும் வேணும் கேள்விஞானம்

    காதுக்கு வேணும் கேள்விஞானம்..

     

    காதக் கடவுள் படச்சதுவே

    நல்ல வார்த்த கேட்டிடத்தான்,

    நல்லாப் படிச்சவன் சொல்லுகிற

    நல்ல வார்த்த கேட்டிடத்தான்..

     

    கேள்வி ஞானம் கேட்காத

    காது நல்லாக் கேட்டாலும்,

    அது

    ஒண்ணுமே கேக்காத

    செவுட்டுக்காது போலத்தான்..

     

    அதால

    வேணும் வேணும் கேள்விஞானம்

    காதுக்கு வேணும் கேள்விஞானம்…!

     

    செண்பக ஜெகதீசன்…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181028 Anjalimala -(Copic) brushpen A4 lr

    ஹரிச் சுவடி
    —————-

    அஞ்சலி மாலா கோவிந்தா
    ஆவுடை அப்பா கோவிந்தா
    இந்திர லோகம் கோவிந்தா
    ஈ கொசு எனக்கு கோவிந்தா
    உந்தன் மலையில் கோவிந்தா
    ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
    எந்த நாளுமே கோவிந்தா
    ஏகாந்த சேவை கோவிந்தா
    ஐந்து பொறிகட்கு கோவிந்தா
    ஐயமிட்டிடு கோவிந்தா
    ஒன்றி உரைப்போம் கோவிந்தா
    ஓம் நம நாரண கோவிந்தா….கிரேசி மோகன்….!

    Share
  • அணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்

    Posted on October 27, 2018

    fusion-reaction

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பிண்டமும் சக்தியும் ஒன்றெனக்
    கண்டார் ஐன்ஸ்டைன்
    சமன்பாட்டு மூலம் !
    அணுப்பிளவு யுகம் மாறி
    அணுப்பிணைவு யுகம் உதயமாகும் !
    கதிரியக்க மின்றி
    மின்சார விளக்கேற்றும்  !
    இயல்பாய்த்
    தேய்ந்து மெலியும் ரேடியம்
    ஈயமாய் மாறும் !
    யுரேனியம் சுயப் பிளவில்
    ஈராகப் பிரிந்து
    பிளவு சக்தி உண்டாகும் !
    பேரளவு உஷ்ணத்தில்
    சூரியனில் நேரும் பிணைவு போல்
    போரான் – நீரக வாயு  
    எரிக்கரு  அழுத்தப் பட்டு
    பேரளவு வெப்ப சக்தி  
    சீராக  உண்டாக் கப்படும். 
    கதிரியக்க மின்றி
    மின்காந்த அரணுக்குள் !

    ++++++++++++++++

    https://www.sciencedaily.com/releases/2018/10/181009175515.htm

    அணுப்பிணைவு சக்தி உற்பத்தியில் நேரும் இடர்ப்பாடுகள்

    வணிகத்துறை அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வர முடியாமல் பல சிக்கல்கள், பிரச்சனைகள் நேர்ந்து வருகின்றன.  2016 மே மாதம் 20 தேதியில் ஒர் எரிசக்தி ரிப்போர்ட்டர்  நியூஜெர்ஸி பிரின்ஸ்டன் பிளாஸ்மா பௌதிக ஆய்வுக்கூடம் சென்று, சமீபத்தில் மேம்படுத்தப் பட்ட தேசீய வளையக் கோள் சோதனை கூடத்தைக்  [ National Spherical Torus Experiment (NSTX-U) ] காணச் சென்றார்,  அது உலகிலேயே மிகையான ஆற்றல் கொண்ட உருண்டை டோகாமாக் [Spherical Tokamak].  அறுத்த ஆப்பிள் போல் தெரியும் அது,  85 டன் பளுகொண்ட அசுர யந்திரம்.  அந்த டோகாமாக் உயர்சக்தி துகள்களைப் பயன் படுத்தி, ஹைடிரஜன் அணுக்களை 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தை உண்டாக்குகிறது.  அந்த உஷ்ணம் நமது சூரியனின் உட்கரு உஷ்ணத்தை விட மிகச் சூடானது.  அந்த பேரளவு உஷ்ண பிளாஸ்மாவை[ஒளிப்பிழம்பு] காந்த அரணுக்குள் அடைக்கச் சுற்றிலும் தாமிர வடங்கள் [Cooper Coils], பூமியைப் போல் 20,000 மடங்கு வலுவான ஒரு பூத காந்த மண்டலத்தை உண்டாக்கும்.

     

    மின்காந்த அரணுக்குள் சில நிமிடங்கள் நீடித்த அணுப்பிணைவு சக்தி

    ++++++++++++++++++++

    ஒருசில நிமிடங்களில்  ஹைடிரஜன் அணுக்கள் முட்டி மோதிப் பிணைந்து வெப்ப சக்தியை  வெளியாக்கும்.  சொல்வதற்கு எளிதாய் உள்ளது.  பிரச்சனை என்ன வென்றால்,  அப்பிணைவு சக்தி முதலில் அதிக அழுத்தமுள்ள காந்த அரணுக்குள் அடைக்கப் பட வேண்டும். இயக்கத்தில் உண்டாகும் நியூட்ரான்கள் எல்லா திசைகளிலும் பாய்ந்து சுவர்களை தாக்கும். அணுப்பிணைவு சக்தி வெளியீடு நீடிக்கப்பட வேண்டும்.  சீராகத் தொடரவேண்டும்.

    சூரியனில் உள்ள பிளாஸ்மா [ஒளிப்பிழம்பு] பேரளவு வாயு அழுத்தத்தில் நீடிக்கிறது; தொடர்கிறது.  அதுபோல் புவியில் நேர்ந்திட ஆற்றல் மிக்க காந்தங்களோ அல்லது லேசர் ஆற்றலோ தேவைப்படும்.   ஒரு சிற்றளவு பிளாஸ்மா சாதனத்தில் எங்கோ கசிந்தாலும் அணுப்பிணைவு இயக்கம் உடனே நிறுத்தம் அடையும்.  அணுப்பிணைவு இயக்கத்தைச் சைனா 2017 ஆண்டு துவக்கத்தில் தனது உயர்கடத்திப் பிணைவு அணு உலையில் [Superconducting Fusion Reactor] 50 மில்லியன் டிகிரி  செல்சியஸ் உஷ்ணத்தில், 102 வினாடிகள் நீடிக்க முடிந்தது.

    முதன் முதலாக 2016 இலையுதிர் காலத்தில் ஜெர்மனி தனது வெண்டெல்ஸ்டைன் அணுப்பிணைவு உலையில் [Wendelstein X-7 Stellarator] உலக முதன்மை முத்திரையைத் தாண்டி 30 நிமிடங்கள் பிணைவு இயக்கம் நீடித்தது.  அணுப்பிணைவுச் சோதனையில்  இது ஒரு பெரிய வரலாற்று மைல் கல் ஆகும்.  விஞ்ஞானிகளின் குறிக்கோள் அணுப்பிணைவு இயக்கம் சூரியனில் நிகழ்வது போல் நிற்காமல் நீடிக்க வேண்டும் என்பதே.  இதுவரை அப்படி ஓர் ஏற்பாடும் செய்து காட்ட முடியவில்லை.

    அடுத்த பெரும் இடர்ப்பாடு பல மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ண பிளாஸ்மாவைத் தொடர்ந்து தாங்கும் அணு உலைக் கோளம்.  அதிவேக  ஆற்றல் கொண்ட நியூட்ரான்கள் அடிப்பில் நெளிந்து முறிந்து போகாத கவசங்கள் கிடைக்காதது. நியூஜெர்சி பிரின்ஸ்டன் அணு உலைக் கவசமாக தற்போதுள்ள கார்பன் கிராஃபைட்டை நீக்கி விட்டு, நீடித்த துருப்பிடிப்பு நேராது, திரவ லிதியம் பயன்படுத்தப் போகிறது.

    இந்த இடர்ப்பாடுகள் நீக்கப்பட்டு எப்போது, வணிவ வடிவத்தில் நீடித்து இயங்கும் அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் நிறுவகமாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது. 10 -15 ஆண்டுகள் ஆகலாம்; இல்லை 25 ஆண்டுகள் கூட எடுக்கலாம்.  ஐயமின்றி அவை நிச்சயம் வரப் போகின்றன.  பிரான்சில் ITER பல நாட்டுக் கூட்டுறவில் அணுப்பிணைவு நிலையம் 2005 ஆண்டு முதல் அடித்தளம் இட்டு 40 பில்லியன் டாலர் செலவில் 2030 இல் இயங்கத் திட்டமிடப் பட்டுள்ளது .

    +++++++++++++++++

     

    சூட்டுப் பிணைப்பு மூலம் போரான் – நீரக வாயு அணுக்கருப் பிணைப்பு இயக்கத்தில்  பேரளவு வெப்பசக்தி உற்பத்தி.

    2017 டிசம்பர் 28 ஆம் தேதி ஜெர்மன் நாட்டு  மாக்ஸ் பிளாங்க் ஒளிப்பிழம்பு பௌதிக ஆய்வுக்கூடத்தின்   [Max Planck Institute for Plasma Physics]  ஆய்வுக்குழுவினர் முதன்முதலாய்ப் புதிய முறையில் அணுப்பிணைவு இயக்க மூலம் பேரளவு வெப்பசக்தி உண்டாக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.  கடந்த 60 ஆண்டு களாய் இதுவரை அணுப் பிணைவு [Nuclear Fusion] இயக்கத்துக்கு ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலங்கள் [Isotopes] எனப்படும் டிரிடியம் & டியுட்டீரியம் [Tritium & Deuterium Isotopes] கதிரியக்க மூலகங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.  இப்போது ஜெர்மன் அணுக்கரு பௌதிக  ஆராய்ச்சியாளர் போரான் & நீரக வாயுவை [Boron & Hydrogen] எரிக்கருவாக எளிய ஓர் கோள வடிவுச் சாதனத்தில் பயன்படுத்தி வெப்பசக்தி உண்டாக்க முடியும் என்று அறிவித்துள்ளார்கள்.  இப்போது கூட்டு முயற்சியில் பிரான்சிலும், மற்ற உலக நாடுகள் தனியாகவும் செய்துவரும் சோதனைகள் வெற்றி அடையும் முன்பே, போரான் – நீரக வாயு பிணைப்பியக்கம் மின்சக்தி உற்பத்தி செய்யும் என்று உறுதி யாக நம்பப்படுகிறது.  இந்தப் புதிய அணுப்பிணைவுத் திட்டத்தை 2017 டிசம்பர் 12 ஆம் தேதி ஹையன்ரிக் ஹோரா [Heinrich Hora] என்பவர் லேசர் & துகள் கற்றை வெளியீட்டில்  [Journal of Laser & Particle Beams]  அறிவித்துள்ளார்.

    ஹையன்ரிக் ஹோரா சொல்கிறார் :  நீரக வாயு & போரான் -11 மூலகம் [Hydrogen -0] [One Proton and Boron -11 (Boron with 6 Neutrons)] இரண்டையும் திணிவு மிகுத்த நிலையில் [100,000 times More density than ITER Fuel], பேரளவு உஷ்ணமுடன் [5 பில்லியன் டிகிரி F (3  பில்லியன் டிகிரி C)], ஒரு கோள வடிவான அரணில் அழுத்திப் பிணைத்தால், மூன்று ஹீலியம் [Helium -4] உண்டாகும்.  அந்த இயக்கத்தில் எழும் ஒளிப்பிழம்பிலிருந்து [Plasma], நேராக மின்சாரம் தயாரிக்கலாம்.  தற்போது நடைபெறும் சோதனைச் சாதனங்கள் பெரிய துளைவடை வடிவு [Donut – Shaped Chambers] உடையவை. பெருத்த மின் காந்தச் சுவர்கள் சூழ்ந்து இருப்பவை.  அந்த சாதனத்தில் டியுடீரியம் & டிரிடியம் ஏகமூலங்கள் [Deuterium & Tritium Isotopes] பேரளவு சூடாக்கப்பட்ட ஒளிப்பிழம்பால்  [Superheated Plasma] அழுத்தப்பட்டு பிணைக்கப் படுகின்றன.  இந்த விதமான அணுக்கருப் பிணைப்பு இயக்கத்தில் ஹீலியம் உண்டாகி வெப்பசக்தியும் கூடவே ஒரு நியூட்ரான் விளைகிறது.  இந்த உயர் சக்தி நியூட்ரான் [High Energy]  அருகில் உள்ள உலோகச் சாதனங்களில் பட்டு சிறிதளவு  கதிரியக்கம் உண்டாகிறது.

    Hydrogen – Boron Hot Fusion Reactor

    போரான் – நீரக வாயு சூட்டுப் பிணைப்பு அணு உலை 

    2017 டிசம்பர்  28 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய எரிக்கரு அணு உலை [Nuclear Fuel Reactor] பயன்படுத்தும் எரிக்கரு  ஹைடிரஜன் -1 & போரான் -11 [Hydrogen -1 & Boron -11].  இந்த எரிக்கரு 1 பில்லியன் டிகிரி உஷ்ணத்தில், பேரளவு அழுத்தத்தில் பிணைப்பியக்கம் தூண்டப் படுகிறது.  இந்த இயக்கத்தில் உண்டாகும் வெப்பசக்தி அனைத்தும்  3 ஹீலியம் -4 மூலகமாய் [ஆல்ஃபா கதிர்வீச்சாக]  [Alpha Radiation]  ஒவ்வொன்றும் 8 MeV அளவில்  வெப்பசக்தியாய் வெளியாகிறது.  ITER மாடல் அணு உலைபோல், H–B பிணைவு அணு உலையில்,  உயர் சக்தி நியூட்ரான்கள் [High Energy Neutron]  வெளியேறா.  இப்புதிய போரான் – ஹைடிரஜன் அணுப்பிணைவு அணு உலை முன்னோடி மாடல் இன்னும் உலகில் தயாரிக்கப் படவில்லை.  ஆனால் புதிய போரான் – நீரக வாயு அணு உலைகள் விரைவில் கட்டப்படும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

    Laser Fusion Experiment

    நாங்கள் செய்யப் போவது இதுதான்:  ஒரு கட்டுப்பாட்டு முறையில்  எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium – Tritium Pellet [D-T Pellet]  Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    KRISHNA FOR TODAY….!
    —————————————————

    திவ்யப் பிரபந்தம் மாதிரி இது கேசவாழ்வாரின் திவ்ய BRUSH பந்தம்….அட்டகாசம்….கிரேசி மோகன் ….கேசவ் தொடரட்டும் உம் தூரிகைத் தவம்…ஒருநாள் கண்ணன் உம்வீட்டு காலிங் -பெல் அடிக்கப் போவது நிச்சயம் ….

    “விண்ணார்வம் வேண்டேன் வியனுலகும் வேண்டேனே
    கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
    குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
    குடிபோன கோகுலனே காப்பு”….!

    SRI Aurobindho or THE Adventure of consciousness….!
    ————————————————————————————————
    I had simply to go to the meeting and make NAMASKAR to the audience as NARAYAN and wait and speech would come to me from some other source than the mind, as though it were dictated….And ever since all speech, writing ,thought, and outward activity have to come to me from the same source above the brain -SRI AUROBIDO….!

    ’’வாக்கும், எழுத்தும்.வரும்பார்,உனக்கது
    காகும்நா ராயணர்தம் கைங்கர்யம், -பாக்கொடு,
    சுண்ணாம்பும்,பச்சையும்(வெற்றிலை) சேர சிவப்பாகும்,
    கண்ணாம்பாள்(கண்ணன் & அம்பாள்-காளி) மேனி கலர்’’….

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனே வேண்டினேன் காப்பு….!

    வாஸ்த்தாவார்(வாஸ்து ஆவார்) வந்த விரஜநிலம் வாழ்ந்திட ,-
    தோஸ்த் தாவார் பார்த்தனுக்கு தோள்கொடுத்து , -ஆஸ்த்தான –
    ஆவுக்கு ஞானம் அடிநீட் டியளிப்பார்-
    பூவைத்து வைப்பார்செம் பொன் “….!

    “கன்றினை மேய்க்க குழலூதும் கண்ணன் –
    நின்றனன் கேசவ்கை நித்தமும்; -இன்றவன் –
    தேசுடன் நிற்பதை தேசிகனைப் போல்பாட-
    ஆசுகவி ஆக்குகண் ணா(ஆ)”….!

    வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
    ’ஆ’வென்றால் கற்பக அம்மாவாம் -சோவென்று
    மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
    வேறிருள் போக்கும் விளக்கு….கிரேசி மோகன்….!

    அபாரம் கேசவ்….இது புதிய பாணி “கே(லிச்)ளிச் சித்திரம் “….!

    “கேரள கேளி கிருஷ்ணன் அருச்சுனனை
    ஓரளவு ஒப்பேற்றும் உத்தியுடன் , -தேரலகில்
    தைதை கதகளி தாண்டவம் செய்தனன்
    கீதைக்(கு) இதுஒத்தி கை”….

    Share
  • ” திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்”

    சுப்ரபாரதி மணியன்

     

    ”திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.. திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் திரைப்பட ரசனையை முறைப்படுத்த பாடத்திட்டங்களும் ஒரு முக்கியப்பங்கு வகிக்க வேண்டும். தனியார் திரைப்படக்கல்லூரிகள்,திரைப்பட நிறுவனங்கள் தரும் படிப்பை மீறி அரசும் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் ” என்று திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஹைதராபாத் பிரகாஷ் ரெட்டி ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ) கூறினார்.

    தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் திருப்பூரில் புதன்கிழமை அன்று வினாயகா ஓட்டலில், ( தொடர்வண்டி நிலையம் அருகில் ) நடைபெற்றது.

    சென்னை கோதண்டராமன் ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைச்செயலாளர் ) தலைமை வகித்தார்,

    திரைப்படக்கலாச்சாரத்தை சீர்படுத்துவதில் திரைப்பட விழாக்களும் , ரசனை வகுப்புகளும் முக்கியப்பங்கு வகிப்பதை பெங்களூர் நஞ்சுண்டையா ( துணைத்தலைவர் – தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பு ) தெரிவித்தார்.

    ” சமூக அக்கறை, சமூக சீர்திருத்தம் , புதுமையானக் கருத்துக்கள் கொண்ட திரைப்படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். திரைப்பட சங்கங்கள் திரைப்படம் பார்க்கும் ரசனைக் கோணத்தை மாற்றியதில் பெரும் பங்கு வகித்தன “ . என்று எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்கூறினார் .. திருப்பூர் நியூலுக் திரைப்படச் சங்கத்தின் நிறுவனர் விடி சுப்ரமணியன் நீண்ட கால திரைப்படச்சங்கப் பணிக்காகப் பாராட்டப்பட்டார்.

    ஹைதராபாத் திரைப்படச்சங்க நிர்வாகி ரவிக்குமார் நன்றி தெரிவித்தார். ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பு, திருப்பூர் நவகனவு திரைப்பட சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின ) செய்தி : சுப்ரபாரதிமணியன்

    * பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும்

    ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )

    * மக்கள் இசைப்பாடல்கள் ( துருவன் பாலா, து.சோ.பிரபாகர், கா.ஜோதி, சாமக்கோடங்கி ரவி )

    * சிறப்பு கவி இரவு நிகழ்ச்சி

    28/10/2018 ஞாயிறு மாலை 6 மணி முதல், என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி .,புதிய பேருந்து நிலையம் , திருப்பூர்

    கவிதைகளோடும், பாடல்களோடும் , படைப்புகளோடும் வருக,.

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    181026 The Lullaby-Vanvihari -mixed media-10×14″ icam lr

    ஆனையைத் தாங்கியவர் ஆராரோ பாடுகின்றார்,
    பூனைக் குமதே பரிவுண்டு : -சேனைக்
    களத்திலன்று கீதை கொடுத்தவராம், கண்ணன்
    ஜலத்தில் படுத்தமாலம் சர்….!

    பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
    கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
    கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
    வள்ளலென மாறும்காண் வாழ்வு….கிரேசி மோகன்….!

    ஆனை அடிமுட்ட ஆவாச்சு, பாற்கடல்
    பூனைக் குமிதே புனுகுதான் -ஞானக்
    கடலுறங்கும் மாலவர் காண்டீ பருக்காய்
    உடலெடுத்து வந்த உறவு….!

    Share
  • பயிலரங்க அறிவிப்பு மடல்

     

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் உதவிப் பேராசிரியர்களுக்கான ஏழு நாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.  விருப்பம் உள்ள உதவிப்பேராசிரியர்கள் கலந்துகொள்ளலாம்.

    Share