Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181022 -Gov pattaabhishekam -mixedmedia-9×12” Strathmore 160g 72dpi wm

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….!

    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
    நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
    பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
    மால்பிறப்பு பாகவத மாச்சு”….கிரேசி மோகன்….!

    பசு பறந்து கொசுவானது….இந்த கொசு கடிக்காது, மடிப்பாலை மாலவர் மீது சுரக்கிறது….சபாஷ் கேசவ்….!

    அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
    மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
    காட்டிய கேசவ் கவி”….!

    மந்தாகினி -ஆகாஸகங்கை….!

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (284)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    இந்த வார வல்லமையாளராக சமூகப் போராளி ‘தரனா பர்க்’ என்னும் அமெரிக்கப் பெண்மணியை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    உலகம் முழுவதிலும் நானும் (‘மி டூ’) என்னும் பெண்கள் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் வளர்ச்சியாலும், அவற்றை மொபைல் போன்களில் பார்த்து பதில் அளிப்பது பெருகிவருவதாலும் இந்த அதிவேகப் பரவல். ஹேஷ் டேக் (HashTag) போன்றவை ஏற்படுவதன் முன்னரே இந்த இயக்கத்தை 2006-லேயே தொடங்கியவர் தரனா பர்க் (Tarana Burke) என்னும் சமூகப் போராளி. பாலியல் வன்முறைகள், கொடுமைகள், அத்துமீறல்களை வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளேயே மறுகி இருந்த பெண்கள் திரைப்பட, அரசியல் உலகங்களில் தமக்கு நிகழ்ந்த பாலியல் துன்பங்களை அம்பலப்படுத்தி வருகின்றனர், #MeToo என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் அலிஷா மிலானோ என்னும் நடிகை உருவாக்கியதில் இருந்து பலரும் பயன்படுத்திவருகின்றனர்.

    மும்பை திரையுலகத்தில் தனுஸ்ரீ தத்தா என்னும் நடிகை இந்த மிடூ இயக்கத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்திரை உலகத்திலும் இந்த இயக்கத்தின் தாக்கம் தெரிகிறது.

    https://www.reuters.com/article/us-india-harassment-actress/actress-who-helped-trigger-indias-metoo-movement-inspired-by-god-idUSKCN1MQ127
    https://en.wikipedia.org/wiki/Me_Too_movement

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • தேர்தல் திருவிழா!

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    இந்திய சனநாயகத்தில் தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது! தற்போது 5 மாநிலங்களில், (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீசுகர், தெலுங்கானா) தேர்தல் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு 2019இல் பாராளுமன்றத் தேர்தலும், அதோடு இணைந்து மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாராளுமன்றத்துடன் சேர்த்து தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல்கள் எப்படி நடந்தாலும் ஊடகங்களின் துணையோடு தம்மைப் பூதாகரமாகக் காட்டிக்கொண்டுதான் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தலைச் சந்திக்கின்றனர். முன்பு தனி நபர்கள் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பரிசுகளாக காதணியிலிருந்து காலணி வரை, குக்கரிலிருந்து தட்டு முட்டு சாமான்கள் வரை பரிசுப்பொருட்களாகக் கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருந்துவிட்டது. ஆனால் இன்றைய சட்டப்படி வாக்களிக்க பரிசுப்பொருட்களை பெற்றாலும், கொடுத்தாலும் இரண்டாண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. வாக்களிக்க பரிசுப் பொருட்களைக் கொடுக்கும் கட்சிகளை முழுவதுமாகவே தேர்தலிலிருந்து தடை செய்யலாம். தனி நபர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை தரலாம். தன்னார்வம் மிக்க கட்சி சார்பற்ற தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டு தங்களுக்குக் கிடைக்கக்கூடியத் தகவல்களை ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியம். வழக்கு மன்றங்கள் இது போன்ற வழக்குகளைத் தாமாகவே முன்வந்தும் அந்த வழக்கை ஏற்று நடத்தும். குற்றம் செய்பவர்களை தண்டனைக்கு உள்ளாக்கும். கையூட்டு பெறும் அல்லது கையூட்டு அளிக்கும் கயவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும், உரிமையும் ஆகும்.

    ஊழலற்ற ஆட்சியும், கரை படியாத நிர்வாகமுமே இன்றையத் தேவை. வாக்களிக்க கையூட்டு பெறுவதும், கொடுப்பதுமே இதன் முதற்படி என்பதால் அதிலிருந்தே அதனை வேரறுக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இந்தியாவிலேயே ஒன்றுபட்ட ஆந்திரத்தில்தான் தேர்தலில் மிக அதிக பணப்புழக்கம் இருந்ததாகவும், தற்பொழுது தேர்தல் நடக்கவிருக்கும் தெலுங்கானாவில் மிக அதிக பணப்புழக்கம் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தெலுங்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இதற்குப் பொறுப்பாகிறார்கள் என்பதை உணர்ந்து, ஊழலற்ற அரசை உருவாக்க ஆவண செய்ய வேண்டியது இன்றைய அத்தியாவசியத் தேவை! சனநாயகம் நம் கையில் என்பதை பொது மக்கள் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டமிது என்பதை உணர வேண்டும். அல்லது சம்ப்பந்தப்பட்ட நேர்மையான சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு இதனை உணர்த்தி விழிப்படையச் செய்ய வேண்டும். தெற்கிலிருந்து வடக்கு வரை பரவ வேண்டிய பேரலையாக இது உருவாக வேண்டும் என்பதே மக்களின் பேராவல். சனநாயகம் வெற்றி பெற பாடுபட வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 184

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிக்சர்ஸ்க்யூஎல்எஃப்எஸ் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • கு.ப.ரா. சிறுகதைகளில் பெண்மனப் பதிவுகள்

    முனைவர் ப.சு. மூவேந்தன்,

    உதவிப்பேராசிரியர்,

    தமிழியல்துறை,

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

    அண்ணாமலைநகர் – 608 002.

    ————————————————————-

    முன்னுரை

    தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கக் காலத்தில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்றவர் கு.ப.ரா. ஆவார். அவரது சிறுகதைகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட பெண்ணினத்தின் குரலாக ஒலிப்பதுடன் பெண்களின் மன உணர்வுகளை நுண்ணோக்கோடும் வெளிப்படையாகவும் அறிவிக்கின்றன. தமிழில் பெண்ணுர்வுகளைச் சிக்கல்களைச் சிறுகதைகளில் வெளிப்படுத்திய முதல் பதிவாளராக அவர் விளங்குகின்றார். அவரது ‘தனபாக்கியத்தின் தொழில்’, ‘குந்துமணி’ என்னும் இரு சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் பெண்மன உணர்வுப் பதிவுகள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

    மனச் செயல்பாடுகள்

    மனிதனது ஆறாவது அறிவு மனம் ஆகும். மனிதனது செயல்பாடுகள் யாவற்றினுக்கும் மனமே அடிப்படை அலகாக அமைகின்றது. மனம் உள்ளவன் மனிதன். அவ்வகையில் நமது இலக்கியங்கள் மனம் என்பதனைக் குறித்துப் பரவலாகப் பேசியுள்ளன. மனத்தின் செயல்பாடுகளாலேயே மனிதச் செயல்பாடுகள் அமையும் என்பதனைக் கருதியே திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று அறிவுறுத்தினார். ஆனால் நடைமுறைச் சிந்தாத்தந்தில் மனத்தின் செயல்பாடுகள் ஒத்த தன்மையினதாக அமைவதில்லை. தன்னைப் போன்றே மற்றவர்களுக்கும் மனம் என்பது உண்டு என்று அறியவாய்ப்பே கொடுக்கப்படாமல் ஆதிக்கத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு ஆண்டுவரும் மாக்களின் செயல்பாடுகளைத் தனது சிறுகதைகளின் மூலம் காட்டியுள்ளார் கு.ப.ரா.

    மனஉணர்வு என்பது ஆண் பெண் யாவர்க்கும் ஒன்றுதான். என்றாலும் மனத்தின் வழியான செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்னும் கருத்தினை ‘தனபாக்கியத்தின் தொழில்’ (1934), ‘குந்துமணி’ (1934) என்னும் சிறுகதைகளின்வழி புலப்படுத்தியுள்ளார் கு.ப.ரா.

    ‘தனபாக்கியத்தின் தொழில்’ (1934), ‘குந்துமணி’ (1934) என்னும் இரு சிறுகதைகளும் அன்றைய சமூகத்தில் தள்ளிவைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெண்ணினமான தேவதாசியர் நிலையைப் பேசுகின்றது. தேவதாசிச் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ‘ஆடல் பாடல் வல்லாராகி;, இன்பமும் பொருளும் நல்கி, ஒருவர் மாட்டும் தங்காதார்’ என்ற கருத்து வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் இக்கதைகள் படைக்கப்பட்டன என்பது கருத்தில் கொள்ளத் தக்கது. தாசியர் குலத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் சமூகத்தின் இழிநிலையிலிருந்து மேலே வருவதற்கு அனுமதிக்காத சமூகத்தை இக்கதைகளின்வழி காட்டுகின்றார் கு.ப.ரா.

    தனபாக்கியத்தின் காதல்

    ‘தனபாக்கியத்தின் காதல்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் தனபாக்கியம் தாசியர் குலத்தில் பிறந்தவள்; என்றாலும் அவள் உள்ளத்தில் தன்னைக் காதலிப்பதாகச் சொல்பவனுடன் சேர்ந்து மணமுடித்துக் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது. இதனால் தன் குலத்தின் இழிவும், ஊரார் தூற்றும் பழியும் நீங்கும் என்று நினைக்கின்றாள். அவள் ஒரு புலவனைக் காதலிக்கின்றாள். புலவனோ தாசியரைப் பழிவாங்க நினைக்கும் ஒரு வஞ்சகனால் அவள் வீட்டுக்குக் கொண்டுவந்து விடப்படுகின்றான். என்றாலும் பாதகமில்லை; புலவனாகிய சண்முகசுந்தரம் தனபாக்கியத்தை உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றான்: என்றாலும் தன் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு அவள் தன்னை விட்டுவிட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சவுணர்வு அவன் உள்ளத்தில் எப்பொழுதும் நிறைந்திருக்கின்றது. தனபாக்கியத்தின் உள்ளத்திலோ தான் ஒரு தாசிதானே என்று கருதி, புலவன் தன்னைவிட்டுச் செல்லக்கூடும் என்ற உணர்வு மேலெழுந்து நிற்கின்றது.

    “காதல் தழைப்பதற்கு உலகத்தில் இடையூறுகள் உண்டா? உண்டு. உதாரணமாக உன் தாய் என்னை இங்கு வரவேண்டாமென்று தடுத்துவிட்டால்? எதற்காக? நன்றாயிருக்கிறது அவள்தானே”     (ப. 22)

    என்னும் பகுதியில் புலவனின் வறுமைவயப்பட்ட வாழ்வியல் நிலை இக்காதலுக்குத் தடையாக நிற்கும் என்ற நிலைப்பாட்டினையும்,

    “அடி தனம் ! இனிமேல் அந்தப் பரதைப்பயல் இந்த வாசல் நுழையக்கூடாது தெரியுமா? என்று தனத்தின் தாய் கமலம் வெடுக்கென்று பேசினாள். தொழிலில் கண்ணும் கருத்தும் உடையவள் அவள் …..இன்றைக்கு அவன் வந்தால் வீட்டை விட்டுத் துரத்து”  (ப. 22)

    என்னும் பகுதியில் தனத்தின் தாய் எதிர்நோக்கியிருக்கும் வியாபார நிலையினையும் காட்டுகின்றார் கு.ப.ரா.

    “உன்னை ஏமாற்றும் நோக்கிலேயே புலவன் உன்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான்” என்ற தனபாக்கியத்தின் தாயாரது குரலுக்கு, தனபாக்கியம் “காதல் என்பது வலிந்து வரக்கூடிய விசயமில்லை” என்று மறுத்துரைக்கின்றாள்.

    “நீ சுத்த அசடாயிருக்கியேம்மா. அவன் செய்யவாவது? என் மனசை ஆக்க அவனால் ஆகுமா?”              (ப. 23)

    என்று கேள்வி எழுப்புகிறாள். இதனால் பெண்ணின் மனதை யாரும் குழப்பவும் குறைத்தும் மதிப்பிட்டுவிட முடியாது என்பதனை இப்பகுதியில் எடுத்துரைக்கின்றார் கு.ப.ரா.

    மீண்டும் புலவன் வந்து தனபாக்கியத்தைச் சந்திக்கும் போது, தங்கள் காதல் நிறைவேறாது என்று அவநம்பிக்கைக் கொள்ளுகிறான். தான் ஒரு ஏழைப்புலவன் என்று தெ ரிந்துவிட்டால் அவள் தன்னை மறுத்துவிடுவாள் என்று கருதி அவளை விலக நினைக்கின்றான்;. அப்போது தனபாக்கியத்தின் உள்ளத்தில் எழும் மன உணர்வுகளையும், தாசியர்களைப் பற்றிய சமூக மதிப்பீட்டினையும் கு.ப.ரா. இவ்விருவரது உரையாடலின் மூலம் தெளிவாக்குகின்றார்.

    “நீங்கள் பணக்காரரா?

    இல்லை. நான் ஏழைப்புலவன். ஆ! என்னை வெறுக்கிறாயல்லவா?

    நீ பணத்தை விரும்புவது சகஜந்தானே….?

    என் ஜாதிக்குச் சகஜம் என்று சொல்லிக்காட்டுகிறீர்களா? என் ஜாதி ஸ்வபாவத்துடனா நான் உங்களை-என் குலத்து வழக்கப்படியா உங்களை – என்று அவள் விம்மி விம்மிச் சொல்வதற்குள் கண்ணீர் நெஞ்சை அடைத்து விட்டது”             (பக். 23-24)

    என்னும் பகுதியில் தெளிவாக உணர்த்துகின்றார்.

    தனபாக்கியம் தன் குலத்தொழிலாகிய தாசியர் குலத்தொழிலைச்; செய்யாமல் ஏழைப்புலவனைத் திருமணம் செய்து கொண்டு எவ்வாறு வாழமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றாள் அவளது தாய் கமலம். இனி நீங்கள் இருவரும் இங்கிருக்கக் கூடாது என்று ஆணையும் இடுகின்றாள்.

    “வெளியே கமலத்தின்குரல் கேட்டது.

    அடியே, அவனை வெளியே போகச் சொல்லு !

    மாட்டேனம்மா !

    ஆனால், இருவரும் வெளியே போங்கள் !”                                         (ப. 24)

    என்று கதையை நிறைவு செய்கின்றார். உண்மையாகக் காதலித்தவனை மணந்து கொள்வதற்குத் தனது தாய் உரிமை தராதபோது தன் வாழ்க்கையினை அவளே கையில் எடுத்துக்கொள்கிறாள். தன் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறத் தயராகிவிட்டாள் என்று குறிப்பாக உணர்த்துகின்றார் கு.ப.ரா. இதில் பெண் மன உணர்வு வெளிப்பாட்டையும் சமூக எதிர்ப்புணர்வினையும், எதிர் வினையாற்றலையும் கதை நிகழ்ச்சிகளின் போக்கில் எடுத்துரைத்துள்ளார் கு.ப.ரா.

    தாசியர்குலப் பெண்கள் பணம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள் என்றும், தங்களிடம் வருகின்ற ஆண்களின் சொத்துக்களையெல்லாம் பறித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் உண்மையான காதல் உணர்வால் உந்தப்பட்டு பொன்னையும் பொருளையும் இழப்பதற்குத் தயராகும் பெண்மன உணர்வினை இக்கதையின்வழி காட்டுகின்றார்.

    குந்துமணி

    காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை ‘குந்துமணி’ ஆகும். இதில் பணக்கார இளைஞனான ராமு, தாசியர் குலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமியைக் காதலிப்பதாகப் பொய்சொல்லி அவளுடன் பழகுகின்றான். அவனது காதலை உண்மை என்று நம்பி அவனிடம் தன்னை ஒப்படைக்கின்றாள் ராஜலட்சுமி. நாட்கள் செல்லச் செல்ல அவளது உடல் மட்டுமே அவனுக்குத் தேவைப்படுகின்றது. அவளுக்கோ அவனால்  தனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தனது குலத்தொழிலை விட்டுவிட்டு தன்மானத்துடன் வாழலாமே என்ற உணர்வு எழுகின்றது. இந்தக் கதையிலும் அவளது தாய் பணக்கார ஆண்களின் மனஉணர்வினைத் தெளிவாக அறிந்துவைத்துள்ளாள்;. இதனால் இந்தக் காதல் நிலைக்காது என்ற கருத்தினைத் தன் வாய்மொழியாகப் பதிவுசெய்கிறாள்.

    “உங்களை வரவேற்பதில் என் தாயாருக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை.

    அவளிஷ்டம் எனக்கெதற்கு?

    நன்றாயிருக்கிறது! ….இல்லவேயில்லை. இப்படித்தான் புருஷர்கள் பேதைப் பெண்களின் மேல் பழியைச் சுமத்துவது”       (ப. 30)

    என்னும் பகுதியில் தன் தாயின் மறுப்பினையும், இளைஞனின் பொய்யைச் சொல்லி ஏமாற்ற நினைக்கும் மனப்பாங்கினையும் காட்டுகின்றான்.

    தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராமுவை வலியுறுத்துகின்றாள் ராஜலட்சுமி. அந்நிலையில் அவர்களிடையே நடைபெறும் உரையாடல் பகுதியால் பெண்மன உணர்வுகளைப் பதிவிடுகின்றார்.

    “எங்கள் ஜாதித் தொழிலை நான் பழகவேண்டுமென்று படுத்துகிறாள் – அதாவது நான் பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துகிறாள்.

    அதற்கு நான் வந்துகொண்டிருப்பது தடையொன்றும் இல்லையே?

    இல்லை, இல்லை நான் தான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேனே…

    ஏன்?

    ஏனா? உங்களுக்கு இன்னும் விஷயம் புரியவில்லையா? சொல்லுகிறேன்- என் தாயார் என்னை விலைமாதா இருக்க வேண்டுமென்கிறாள்.

    நீ சொல்வது எனக்கு அர்த்தமே ஆகவில்லை. இப்பொழுதும் அப்படித்தான்-

    அதாவது நான்…

    ராஜத்தின் முகம் வெளுத்தது. கண்கள் பயத்தால் பெரிதாகிப் பரந்தன.

    என்ன, என்ன? என்ன சொன்னீர்கள்?

    ராஜம் ஏனிப்படிப் பதறுகிறாய்? நான் என்ன சொல்லிவிட்டேன்?

    நான் உங்களுடைய வைப்பு என்கிறீர்களா?

    அதிலென்ன உனக்குக் குறை? எந்தப் பெயரானால் என்ன?

    அவன் சொன்னது ஒன்றும் அவள் காதில் விழவில்லை. கண்களில் நீர்வடிய, குழந்தை போன்ற விக்கல் குரலுடன்,

    நான்-ஆனால் நான் உங்கள் தாஸி தானா?

    சுத்த அசடா யிருக்கியே? பின் என்னவென்று எண்ணிக் கொண்டிருந்தாய்?

    நீங்கள்… ஆனால், என்னை மணக்கப் போவதில்லையா?

    ……………………

    நீங்கள் கொடுத்த உறுதிகளெல்லாம் பொய்யா?               (பக். 31-32)

    இப்பகுதியில் சமூகத்தின் கொடூரப்பிடியிலிருந்து வெளியேறத் துடிக்கும் அவளது உள்ள உணர்வினையும் அதை அலட்சியமாகவும், அது சமூக நடைமுறைதான் என்று சொல்லித் தப்பிக்க நினைக்கும் ஆணாதிக்க எதேச்சதிகார நிலைப்பாட்டினையும் பதிவிடுகின்றார். பெண்கள் சமூகத்தில் எத்தகைய நிலையிலிருந்தாலும் அவர்களைப் பொருளாகக் கருதும் நிலைப்பாட்டினை இக்கதையின்வழி காட்டுகின்றார் கு.ப.ரா.

    இவர்களது உரையாடல் இவ்வாறே நீண்டு கொண்டு செல்கின்றது. ஒரு கட்டத்தில் ராமு, ராஜலட்சுமியைப் பார்த்து,

    “ஓஹோ! ஏது குலப்பெண்களுக்கு மேற்போய்விட்டதே உனது எண்ணம்?”  (ப.32)

    என்று சொல்லி அவளை அடக்கப் பார்க்கின்றான். அப்பொது பொங்கிவரும் தன் மன உணர்வினை ராஜலட்சுமி,

    “நற்குணத்தில் குலப்பெண்களுக்குத்தான் உரிமையோ? ஐயோ! என் கனவுகளெல்லாம் கானலாகவா போகவேண்டும்? என்னுயிர் ஏக்கங்கள் இத்துடன் இப்படியா முடிவடைய வேண்டும்?”                 (ப. 32)

    என்று சொல்லி புலம்புகின்றாள். தான் பிறந்த குலத்தின் இழிநிலையைக் கருதி வருந்தவும் செய்கின்றாள்.

    இறுதியில் ஆண்சமூகத்தை எதிர்த்து வாழ்வது தன்னால் இயலாத செயல் என்று தன் விதியை நொந்தபடி தாசியாகவே தன் வாழ்க்கையைக் கழிப்பது என்று முடிவெடுப்பதாகக் கதையை நிறைவுசெய்துள்ளார் கு.ப.ரா.

    இவ்விரு கதைகளிலும் பெண்களின் மன உணர்வுகளையும், ஏக்கங்களையும், உணர்வுக் குமுறல்களையும் எடுத்துரைத்துள்ள அதே வேளையில் சமூகத்தில் எதிர்த்து வாழத்துடிக்கும் நிலையினை ஒருகதையிலும், சமூகத்தை எதிர்த்து நின்று வாழத் துடித்தாலும் பெண்களை ஆண்சமூகம் அடிமைகளாகவே கருதும் நிலைப்பாடு உள்ளதனை அடுத்த கதையின் மூலமும் எடுத்துரைத்துள்ளார்.

    இக்கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழிந்துள்ள பின்னரும், இன்றைக்கும் பெண்களின் மனஉணர்வுகள் மதிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. தமிழின் தொடக்கக் காலச் சிறுகதைகளில் பெண்களின் மன உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்திய படைப்பாளர்களின் கு.ப.ரா. தனித்து விளங்கும் திறன் இக்கட்டுரையின்வழி தெளிவாகிறது.

    ———————-

    கருவி நூல் :

    1. அ, சதீஷ், (ப.ஆ.) கு.ப.ரா. கதைகள், அடையாளம் வெளியீடு, சென்னை. பதி. 2008.

    மதிப்பீடு

    மனித உறவுகளின் நுட்பமான தருணங்களைத் தமது படைப்பின் வெளிப்பாடாகக் கொண்டிருந்தவர் கு.பா.ரா. ஆண், பெண் உறவுகளைப் பற்றி அதிகம் எழுதியவர். இவரின் தனபாக்கியத்தின் தொழில், குந்துமணி என்னும் இரு சிறுகதைகளில் பெண்களின் மன உணர்வுகள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட கட்டுரை ஆராய்ந்துள்ளது. கு.பா.ரா.வின் சமகால எழுத்தாளர்களின்  பெண் பற்றிய மனச்சித்தரிப்பிலிருந்து கு.பா.ரா.வின் பெண் பதிவுகள் எவ்வாறு தனித்துவம் பெறுகிறது என்று நோக்கியிருந்தால் இன்னும் அவரைப் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.

    கல்பனாசேக்கிழார்.


     

    Share
  • நிறம் உதிர்க்கும் பட்டாம் பூச்சிகள்

    முனைவர் பா. ஜெய்கணேஷ்

    “முடிதான் இப்ப உன் பிரச்சனையா? வயசு முப்பது ஆயாச்சு. படிக்கிறேன்ற பேர்ல காலத்த ஓட்டிட்டு இப்ப வந்து நின்னுகிட்டு மாப்ள அப்படி வேணும் இப்படி வேணும்னு கேட்டா நாங்க என்ன பண்றது? இத்தோட ஐஞ்சி ஆறு பாத்தாச்சு. வரவன் மூஞ்சிய பாத்தா பரவால்ல. அவன் மண்டையதான் பாப்பன். அதுவும் டி.ஆர். மாதிரி முடி வேணும்னு சொல்ற. உங்க அப்பா கூடதான் கல்யாணத்துக்கு முன்னடி மண்ட முழுக்க முடி வச்சி இருந்தார். இப்ப பாரு பின்னடி இருந்து வழிச்சு விட்டாதான் முன்னடி வந்து நாலு விழுது. நான்லாம் குடும்பம் நடத்தல. அதுக்காக விட்டுட்டா போயிட்டன்னு” கலா சத்தமா பேசிக்கிட்டு இருந்தா.

    “அம்மா நிறுத்தும்மா. சும்மா ஏன் இப்படி கத்துற. நான் என்ன சொத்துபத்து வேணும், கார் வேணும், நல்ல வேல வேணும்னா கேட்டன். மண்டையில முடி இருக்கறவனாதான் கேட்டன். ஒன்னு முன் மண்ட வழுக்க, இன்னொன்னு பின் மண்ட வழுக்க, அப்புறம் ஒன்னு கூட்டிட்டு வந்தீங்களே அதுக்கு ரெண்டு பக்கம் பட்டயான்னு ஏறிக்கிட்டு கிடக்கு. அதல்லாம் கூட பரவா இல்ல இப்ப வந்துச்சே அது வழுக்க இல்ல மொட்ட. இப்படியா கூட்டிட்டு வந்து நிறுத்தி கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன்” அப்படின்னு கோபத்துல கொப்பளிச்சா நிலா.

    “ஆவோன்னா அப்பா கல்யாணத்துக்கு முன்னடி எப்படி இருந்தாரு, இப்ப எப்படி இருக்காரு, பாரு பாருன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன். அவர் என் அப்பா. அவர் மண்டையில முடி இருந்தாலும் இல்லனாலும் பிரச்சன இல்ல. ஆனா நான் கட்டிக்கப்போறவன் மண்டையில நிச்சயமா முடி இருந்தே ஆகணும்.

    அதுவும் என் தலைவர் டி.ராஜேந்தர் மாதிரி இருந்தே ஆகணும். ஏன்னா அப்பதான் கல்யாணம் ஆயி, புள்ள பெத்து, வயசான கிழவியானாலும் அவருக்கு முடிகொட்டாது. நீ அப்பா தலைய சரியாப் பாக்கல. ஆனா நான் ரொம்ப விவரம்ல. முடி முன்னடி வந்து சரியணும். அப்படி இருக்கற மாப்பள எவன்னா இருந்தா கூட்டிக்கிட்டு வாங்க. இல்லனா  போய் வேலய பாருங்க”.

     “இது என்னடா வம்பா இருக்கு. ஊருல அந்தந்த அம்மாக்கு ஆயிரம் பிரச்சினைனா ஏன் பிரச்சன முடி பிரச்சனையா இருக்கே. ஊருல இருந்து சென்னைக்கு வர மாப்பிளலாம் முடியோடதான் வரானுங்க. ஆனா இங்கு வந்து உப்பு தண்ணியில குளிச்சாலே முடிலாம் தண்ணியோட வழிஞ்சி வழிஞ்சி ஓடிருதாம். இவ ஊரு பக்கம் எவனாவதுன்னு சொன்னா வேணாம்னு சொல்றா. சென்னை செட்டில்னா இந்தப் பிரச்சன.

    “முப்பத்தைஞ்சி வயசுக்காரன் கூட இருபத்தைஞ்சி, இருபத்தெட்டுனா சொல்லுங்க. அதுக்கு மேல வயசான பொண்ணுலாம் வேணாம்னு சொல்றானுங்கன்னு இந்த புரோக்கர் சொல்லிட்டுப் போறாரு. எனக்கே என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறன். போன மாசம் கூட நியூஸ்ல படிச்சன் ஒரு பையன் முடி வளக்கறன்னு போயி தப்பான சிகிச்சையால செத்துப்போனத. பாவம் இந்தப் பசங்க மட்டும் என்ன பண்ணுவானுங்க. முடிவளக்கறதுக்காக உயிரயே விட்டுடறானுங்கன்னு” புலம்பிக்கிட்டே பாத்திரங்கள கழுவி அடுக்கிவைச்சுக்கிட்டு இருந்தா கலா.

    “நீ என்ன வேணா சொல்லு. ஆனா நான் சொல்றதுதான் நடக்கணும்… சரிசரி நீ ஏதாவது தனியாப் பேசிக்கிட்டே இரு. நான் புவனா வீட்டுவரைக்கும் போயிட்டு வந்துடறன்”னு தன்னோட வண்டிய தள்ளிக்கிட்டு கிளம்பினா நிலா.

    இரு பக்கங்களிலும் சீராக நின்றிருக்கிற புளியமரங்களின் இடையே ஓடும் சாலையைக் கடந்து புவனா வீட்டு வாசலில் போய் நின்ற வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு முன்வாசல் வழியாக நிலா உள்ளே நுழைந்த போதே “என்னடி நிலா எங்க ஆளயே காணோம். ஊருக்கு வந்து நாளுநாள் ஆச்சாம். பாக்கவே முடியல” என்றாள் புவனா.

    “அத ஏண்டி கேக்கற எங்க அப்பாவும் அம்மாவும் மாப்ள பாக்கறன்ர பேர்ல உயிர எடுக்கறாங்க. மண்டையில முடி இல்லாதவங்களா கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினா? நான் என்ன பண்ணுவன். அதான் வந்ததுல இருந்து ஒரே சண்ட. சண்ட போடவே நேரம் சரியாப் போச்சுடி” என்று சொல்லியபடியே அருகிலிருந்த சோபாவின் மீது அமர்ந்தாள்.

    “ஏண்டி மண்டையில முடி இருக்கறவனதான் கட்டிக்குவன்னு அடம்பிடிக்கற. முடிலாம் ஒரு பிரச்சனையா.அதான் உன் உயிர் நண்பன்னு ஒன்னு இருந்துச்சே அதுக்கு மட்டும் என்ன மண்டையில முடியா இருந்துச்சு. அததான ஆறு வருஷமா கட்டிக்கிட்டு அழுத.

    ஆமாம் இப்ப எங்கடி அவன ஆளயே காணோம். போன்ல கூட பேசறதா தெரியலயே. நான்லாம் உனக்கு பேருக்குத்தான் பிரெண்டு” என்று புவனா தொடங்கும்போதே,

    “இப்ப உனக்கு பேசறதுக்கு வேற எதுவுமே இல்லயா?” என்று எரிச்சலுடன் கேட்டாள் நிலா.

    “இல்ல எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். உங்களுக்குள்ள என்னதான் பிரச்சன. அந்த கதைய எனக்கு நீ முழுசா இதுவரை சொன்னதே இல்ல” என்று புவனா கேட்டுக்கிட்டே ஒரு ஆப்பிளை இரண்டு துண்டாக நறுக்கிவைத்தாள்.

    “ ஏண்டி ஆப்பிள். இன்ட்ரெஸ்டிங்கா திங்க நொறுக்குத்தீனி வேற எதுவுமே இல்லையா” என்று நிலா கேட்க கொஞ்சம் சலிப்புடன் “ஆப்பிள்தான் இருக்கு. அதயே தின்னு. இன்ட்ரெஸ்டிங்கா நீ உன் ‘நட்புக்காக’ கதையச் சொல்லு” என்றாள் புவனா.

    “அத இங்க சொன்னா யாருக்குமே புரியாதுடி. காலேஜ்ல நான் எம்.பில். படிச்ச சமயம். ஒருநாள் காலேஜோட பின்பக்கம் ஒரு அணில் அடிபட்டு கிடந்துச்சு. நான் பாத்துட்டு பதறியடிச்சு ஓடிப்போய் தூக்கிப் பாத்தான். மூச்சுவிடமுடியாம உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல அது செத்தும் போயிருச்சு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்ப அங்க ஒல்லியா கருப்பா ஒரு உருவம் வந்து நின்னு இங்கதாங்கன்னு வாங்கி அத பத்தரமா பள்ளம் தோண்டி பொதச்சு மனுசங்களுக்கு சடங்கு பண்ற மாதிரியே பண்ணுச்சு.

    எங்கயோ அந்த அணில் நிம்மதியா தூங்குன உணர்வு கிடச்சி அது இறந்த உணர்வே இல்லாம ஆயிருச்சு எனக்கு. அப்புறம்தான் விசாரிச்சன் அது யாருன்னு. எம்.ஏ. படிக்கறாங்கன்னு சொன்னங்க. அடுத்தநாள் வராண்டவுல பாத்தன். கொஞ்சநாள்லயே பேச ஆரம்பிச்சு நல்லாப் பழகவும் ஆரம்பிச்சுருச்சு. இதோட வகுப்புலயே இருக்கற இன்னொருத்தனுக்கும் என்ன பிடிக்கும் போல. படிப்புலயே இதுக்கும் அவனுக்கும்தான் போட்டியாம்? அவனும் என் பின்னடியே திரிஞ்சான். இதால தாங்கிக்க முடியல போல. என்மேல இருந்த பாசம் கூட ஆரம்பிச்சுருச்சு.

    ஒருநாள் வந்து ஏன்கிட்ட நான் உன்ன விரும்பறன். கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுச்சு.

    அந்த ஒரு கணம் அதிர்ச்சியா இருந்தாலும் கேட்டது அதுவா இருந்ததால என்னால மறுக்க முடியல.

    நானும் சரின்னு சொல்லிட்டேன். ஒருவாரம் ரொம்ப சந்தோஷமா இருந்தன். ஆனா எனக்குள்ள இருந்த அந்தக் குற்றஉணர்வு என்ன இயல்பா இருக்கவிடல. அத நான் சொல்லாம போனா பாவம் பண்ணவளா ஆயிருவன்னு அன்னைக்கு சொல்ல முடிவுபண்ணன்”.

    “என்னடி அப்படி ஒரு குற்ற உணர்ச்சி” என்று புவனா இடைமறித்துக் கேக்க “அதுவா இரு சொல்றன்னு” நிலா தொடர்ந்தா…

    “எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கற இதயப் பிரச்சன உனக்குத் தெரியும்ல. அதத்தான் அதுகிட்ட அன்னைக்கு சொன்னன். பின்னடி குழந்த பெத்துக்கறதுலயும் பிரச்சன இருக்கலாம்னு டாக்டர் சொன்னத சேத்தே சொன்னன். அந்த நிமிஷம் அது அந்த அணிலுக்குக் காட்டின இரக்கமும் பரிவும் என் கண்ணுக்கு முன்னடி வந்து நின்னுச்சு.

    கொஞ்சநேரத்துல வரன்னு எந்திரிச்சு போனதுதான் ஆளயே காணோம். அப்புறம் மாலையில போன் பண்ணுச்சு.“இங்க பாரு நிலா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீயில்லாம நான் இல்ல. என்ன மாதிரி ஒரு ஆள இந்த உலகத்துலயே உன்னாலதான் பாத்துக்க முடியும்.ஆனா பொண்டாடியா இல்ல. ஒரு தோழியான்னு சொல்லுச்சு”.

    “எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன்னு கூட கேக்கல. காரணம் தெரிஞ்சதுதான். வாரிசு எவ்ளோ முக்கியம் ஒவ்வொருத்தருக்கும்னு நாம பாக்காததா. அத தர சக்தி இல்லாத நான் ஏன் அவ்ளோ ஆசப்படணும்னு நினைச்சன்.

    ஒண்ணும் சொல்லாம “பரவா இல்ல இந்த ஒரு வாரக் காதல் போதும் என் வாழ்க்கையில. யாரையும் காதலிக்கிற தகுதியும் எனக்கு இல்ல. நான் ஒரு தோழியாவே இருக்கன்னு” அன்னையில இருந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அப்படியே தான் இருந்தன்.

    “அவன் பிரெண்டுன்னு சொன்னதும் பல்ல இளிச்சிக்கிட்டு போய் ரெண்டு வருஷம் முன்னடி வரைக்கும் உயிரக் கொடுத்த. அப்பறம் எப்படி ஒனக்கு ஞானம் பொறந்து அத விட்டுத் தொலைச்ச. அது பண்ணத நினைச்சா எனக்கே கடுப்பா வருது. நீ எப்படிதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டியோ” என்று புவனா புலம்பினாள்.

    “எல்லா மனுஷங்களுக்கும் சுயநலம் இருக்கும். அதுக்காக நான் பொதுநலமா யோசிக்கறன்னு சொல்லல. ஒரு உயிரு என்னால வலி அனுபவிச்சிரக்கூடாதுன்னு மட்டும்தான் நினைச்சன். அதனாலதான் அத்தன வருஷமும் நான் ஒரு தோழியாவே இருந்தன். தோழின்னு மட்டும் இல்ல அதக் கடந்து சில நேரங்கள்ல ஒரு அம்மாவா, ஒரு சகோதரியாலாம் என்ன நானே கற்பனை பண்ணிக்குவன்”.

    ஏன் அப்படியெல்லாம் நான் யோசிச்சேன்னா அது என்ன விரும்பிட்டு இதயப் பிரச்சினையாலதான வேணாம்னு சொல்லுச்சு. அந்த குற்றவுணர்ச்சிக்காகத்தான் என்ன அது ரொம்ப பத்தரமா பாத்துக்கிறன்னும் பாத்துக்கிச்சு. எனக்கும் இந்த காதல் மேலலாம் நம்பிக்க இல்ல. நான் நினைச்ச எல்லாக் கதாப்பாத்திரங்களாகவும்  இருந்து அதோட துக்கங்கள்ல சந்தோஷங்கள்ல பங்கெடுத்துக்கறன்ற திருப்தி மட்டும் இருந்துச்சு.

    “சரி அவ்ளோ நம்பிக்கையில போன உங்க உறவுக்குள்ள வந்த சிக்கல் என்னதான்”. சொல்லண்டி மண்டையே வெடிச்சுரும் போல இருக்கு” எனக்குன்னு புவனா ஆர்வமாக கேட்டாள்.

    “அதுக்கு குழந்தைனா உயிரு. அதுவும் அழகான குழந்தையாத்தான் வேணும்னு தேடித் தேடி அழகான பொண்ணுங்களா காதலிச்சுகிட்டு இருந்துச்சு. ஆனா அதுங்களுக்கு எதுவும் இதப் பிடிக்கல”.

    “ஆமா ஆமா எல்லாம் உன்ன மாதிரி மூஞ்சியவே பாக்காம சரின்னு சொல்லிருங்களா? அணில பாத்தன், ஆட்டுக்குட்டிய பாத்தன்னு வேற ஒரு காரணம். மூஞ்சிய விட முழு மண்டையிலயும் முளைச்ச புல்லு, பூண்டெல்லாம் எப்ப போச்சுனே தெரியல. அப்புறம் எப்படி யாருக்கும் பிடிக்கும்னு” புவனா கடுப்பில் சொல்ல,

    “அதான் அதோட பிரச்சனையே. ஆனா தான் பிரச்சனைய அது புரிஞ்சிகிட்டதே கிடையாது. ஒவ்வொரு முறையும் நான் இத காதலிக்கறன், அத காதலிக்கறன்னு விதவிதமான பொண்ணுங்களோட போட்டாவா அனுப்பும். அதுல ஒரு பொண்ண இதுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. அந்தப் பொண்ணுக்கும் இத கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. அன்னையில இருந்து எப்ப பாத்தாலும் அந்தப் பொண்ணு உன்னவிட  ரொம்ப அழகு, அவ அவ்ளோ நல்லவ, அவள மாதிரி மனிதாபிமானம் இங்க யாருக்கும் இல்லன்னு ஒப்பிட்டுப் பேசிக்கிட்டே இருக்கும்.

    ரொம்ப பொறுக்க முடியாம ஒருநாள் சொல்லிட்டன். “இங்க பாரு நான் உனக்கு ஒரு தோழி அவ்ளோதான். யாரோடயும் என்ன ஒப்பிட்டுப் பேசாதன்னு சொன்னன்”.

    அப்போ அது சொல்லுச்சு. “உனக்குப் பொறாம. அந்தப் பொண்ணு எனக்குக் கிடச்சிட்டான்னு”.

    “எனக்கு என்ன பொறாம. எது கிடைச்சாலும்தான் நீ எப்படியும் தூக்கிப் போட்டுடப் போறன்னு” நான் சொல்ல அதுக்கு அது, “ உன்ன நான் வேணாம்னு சொன்ன மாதிரி அவள நான் வேணாம்னு சொல்லவேண்டி அவசியம் இருக்காது. ஏன்னா அவ எனக்கு அழகான குழந்தையப் பெத்துத் தரதுல அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல”ன்னு சொல்லுச்சு.

    “அதுக்கு நீ என்னடி சொன்ன. வச்சி வாங்கி இருக்கக்கூடாது” என்று புவனா கோபத்தோடு கேட்டாள்.

    “கேட்டா மட்டும் என்ன ஆகப்போகுது. எனக்கு ஒன்னு மட்டும் அப்ப விளங்குச்சு. அப்படி ஒரு வெள்ள மனசோட எங்கிட்ட அது பழகலன்றது. அப்பதான் முடிவு பண்ணன். அதோட இனியும் பேசினா நான் பைத்தியமா ஆயிருவன்னு.

    மொத மொதலா  இது என் கிட்ட காதல வந்து சொன்னப்ப பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு சொன்னா அக்கா இவர் மண்டையில முடியே இல்லன்னு”. ஆனா அப்ப அது எனக்குப் பெருசாத் தெரியல. அப்படிப்பட்ட இது என்னோட குறைய என்ன காயப்படுத்தற மாதிரியே என்கிட்ட வந்து சொல்லுதுனா என்ன பத்தி இத்தன நாளா என்ன நெனச்சி இருந்திருக்கும்னு எனக்கு அப்பதோணுச்சு. “நட்பும் கிடையாது, நான் தோழியும் கிடையாதுன்னு அப்ப முடிவு பண்ணன்”.

    ஆனா அதுகிட்ட நான் வெளிக்காட்டிக்காம “உனக்குன்னு ஒருத்தி கிடைச்சிட்டா. இனி நான் உன் கிட்ட பேசனா அது உனக்கு நல்லது இல்லன்னு சொல்லிட்டு அதுக்கப்பறம் பேசறதையே விட்டுட்டன்.இதுவரை அதுவும் என்கிட்ட பேசறதே இல்ல” அப்படின்னு நிலா சொல்லி முடிச்சப்ப புவனா ஏதோ ஒரு மிருகத்த பாக்கற மாதிரி வித்தியாசமா பாத்துக்கிட்டு இருந்தா.

    “எப்படி இத்தன வருஷம் பொறுத்துகிட்டு இருந்தடி. காதலிக்கறன்னு சொல்லி ஒரே வாரத்துல தோழியா மாத்துன ஒரு ஆளுக்காக அதோட அவ்ளோ வலியையும் உள்ள வாங்கிட்டு இருந்திருக்க… அப்பாடா ஒரு வழியா ஓச்சியே அதன்னு” புவனா அத ஒரு சாதனையா சொல்லிக்கிட்டு இருந்தப்ப நிலா எந்த உணர்வும் இல்லாம திண்ணையில உக்காந்து காலாட்டிக்கிட்டே இருந்தா.

    “பாத்தியா இதுக்குதான் இந்தக் கதைய நான் யார்கிட்டயும் சொல்றதே இல்ல.எனக்கு இருந்த இதயப் பிரச்சினையும் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சரிபண்ணியாச்சு. அதல்லாம் தான் உனக்குத் தெரியுமே”.

    “ஆமா ஆமா தெரியும். ஹோ அதுக்காகத்தான் இப்படி முடியோட மாப்பிளை தேடிக்கிட்டு இருக்கியா?”

    “அய்யோ பழி எடுக்கலாம் இல்லடி. சின்னவயசுல இருந்தே அப்படி இருக்கறவங்க எனக்குப் பிடிக்கும். முடி இல்லனாலும் மனசு இருக்கேன்னு இத எனக்குப் பிடிச்சுது. ஆனா அதோட மனசுல என்ன எவ்ளோ மோசமா நினைச்சி வச்சிருந்திருக்கு. தான் ஒரு பொண்ண ஏமாத்திட்டோமேன்ற குற்ற உணர்ச்சியில இருந்து தப்பிக்க அது என்ன சுமையா தூக்கிட்டு திரிஞ்சிதா எனக்கு இப்ப தோணுது. எனக்கே அருவருப்பாவும் கஷ்டமாவும் இருந்துச்சுடி. என்னமோ போது.

    ஆனா அதுக்காகலாம் முடியோட மாப்ள தேடல. நல்ல மனசு எதுன்னு தேடிக்கண்டு பிடிக்க இங்க கஷ்டம். இனி யாரையும் காதலிக்கவும் விருப்பம் இல்ல. வரவன் மனச ஒரேநாள்ல புரிஞ்சிக்கவும் முடியாது. குறைஞ்சபட்சம் முடியோடாவது இருக்கட்டுமேன்னு இருக்கு. அதனாலதான் இப்ப முடி இருக்கறது என்னோட லட்சியமா ஆயிருச்சு”.

    “நல்ல லட்சியம்டி. உனக்கு பின்னடி இவ்ளோ பெரிய கதை இருக்கும்னு பாத்தா முடிக்குப் பின்னடி இருக்கற ஒரு கதைய சொல்லிட்டுப் போற”.

    “சரி எனக்கு ஒரு சந்தேகம் நிலா”.

    “என்னடி சந்தேகம்”

    “ஆம்பளைக்கு முடி இல்லனா சொத்து வீடு வாசல் வேலன்னு ஏதேதோன்னு சொல்லி சம்மதிக்க வச்சிராங்க. பொண்ணுங்க சொட்டையா இருந்த எந்த ஆம்பளையாவது கட்டிக்குவானாடி”ன்னு புவனா கேட்டா.

    “முடி கீழ வரைக்கும் தொங்கணும்றதுதான் ஆம்பளைங்களோட ஆசையே. அப்படி இருக்கறப்ப எந்த ஆம்பளடி கட்டிக்குவான். ஆம்பளை பொம்பளை இன்றதே இங்க ஒரு சிந்தனைதான். எல்லாமே ஆம்பளைங்களால உருவாக்கப்பட்டது. முடி இருந்தாலும் இல்லனாலும் அவன கட்டிக்கணும். முடி இல்லாம போன வாழ்நாள் பூரா ஒரு பொண்ணோட நிலமை”…

    “யோசிக்கவே முடியலடி. சரி விட்டுருவோம்”. புவனா நான் வந்து ரொம்பநேரம் ஆச்சு. அம்மா தேடுவாங்க கிளம்பறன்.

    சிலநாட்கள் கழிச்ச பிறகு நிலாக்கிட்ட அவ அம்மா கலா “என்னடி இப்ப சந்தோஷமா. முடி நல்லா நெத்தி வரைக்கும் வந்து விழுற மாப்பளையாவே கிடைச்சிட்டான். பொதுவா முடி இல்லனாதான் அறிவு அதிகம்னு சொல்லுவாங்க. ஆனா நீ அறிவு வேணாம். முடிதான் வேணும்னு அடம்பிடிச்ச பாரு. என்னமோ போ”.

    “இப்ப ஒனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதுன்னு நம்புறன். தட்டுலாம் மாத்தியாச்சு. கல்யாணத்தோட முதல்நாள்லயே மண்டபத்துல நிச்சயம் வச்சிகலாம்ல. இல்ல தனியா நிச்சயம் வக்கணுமான்னு”கலா கேட்டப்ப போம்மா “அவரோட நான் வாழவே ஆரம்பிச்சுட்டன் மனசுல. இப்ப போய் நிச்சயம் கிச்சயம்னு பேசிக்கிட்டிருக்கன்னு சொல்லி அப்படியே தூங்கிப் போனா”.

    காலையிலலேயே நிலாவுக்கு அவன்கிட்ட இருந்து ஒரு போன். “நிலா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்”.

    “என்ன சொல்லுங்க”.

    “இல்ல நேத்து இரவு ஒரு கனவு”.

    “என்ன கனவு ஏன் இவ்ளோ பொறுமையா பேசறீங்க”..

    “திடீர்னு ஒருநாள் நான் தூக்கத்துல இருந்து முழிச்சு பாக்கறன். மண்டையில இருந்த ஒரு பக்கம் முடி தலைக்காணி மேல கிடக்குது. பதறியடிச்சு எந்திரிச்சுப் போயி பாத்ரூம்ல வாஷ்பேசின்கிட்ட நின்னு தலையில அள்ளி தண்ணி ஊத்தினா மிச்ச முடியும் கீழ கொட்டுச்சு. முக்கா வழுக்க தலை. ஏன் இப்படி எனக்குக் கனவு வரணும். ஒன்னுமே புரியல”.

    ”என்னது மண்ட வழுக்கையான கனவா”? என்று நிலா அதிர்ச்சியடைந்து கேட்க…

    “அது மட்டும் இல்ல இன்னோன்னு”.

    ”இதுவரைக்கும் நான் கண்ட கனவு எதுவுமே எனக்குப் பலிக்காம போனதே இல்ல நிலா”….

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 130

    நிர்மலா ராகவன்

     

    கூடா நட்பும் தண்டனையும்

    “உனக்கு என்ன வந்துவிட்டது? நல்ல பையனாக இருந்தாயே?” என்று என் பதின்ம வயது மாணவன் நவாவியைக் கேட்டேன், மலாய் மொழியில்.

    சிறிதுகூட தயக்கமே இல்லாது வந்தது அவனது பதில்: “என் நண்பர்கள் அவ்வளவுபேரும் விஷம்!”

    “தகாத உறவு என்று தெரிந்தே ஏன் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாய்?” என்று நான் கேட்டபோது, அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

    ஏழைகளான பெற்றோருக்குப் பிள்ளைகளின் அத்தியாவசியத் தேவைகளை நிரப்புவதற்கே பொழுது போய்விடுகிறது, அதனால் தகுந்த கவனிப்பின்றி பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக நடக்கிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நவாவியைப்போல வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்த சிறுவர்களும் பாதைமாறிப் போகிறார்களே, ஏன்?

    பல பெற்றோர் குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிக்க மாட்டார்கள். கேட்டால், `அவர்கள் மனம் நொந்துவிடும். பெற்றோருக்கு நம்மிடம் அன்பில்லை என்று நினைத்து அவமானம் அடைந்துவிடுவார்கள்!’ என்று பலவாறாகச் சொல்வார்கள். ஒரு வேளை, திருத்த நினைத்தாலோ கெஞ்சலாகச் சொல்வார்கள். யாரும் அதைச் செவிகொடுத்துக் கேட்பதில்லை. இத்தகைய வளர்ப்புமுறையால் தான் என்ன செய்தாலும் சரிதான் என்று தோன்றிப்போகிறது சிறுவர்களுக்கு.

    அவர்களுக்குப் பன்னிரண்டு வயதாகும்போது, பெற்றோர் சற்று அடக்க முயல்கிறார்கள். ஐந்திலேயே வளைத்திருக்கவேண்டும். காலங்கடந்து திருத்துவது இயலாத காரியமாகிவிடுகிறது.

    அந்த வயதுக்கே உரிய எதிர்க்கும் குணத்துடன், `என் பெற்றோருக்கு என்னைப் புரிவதேயில்லை!’ என்று தம்மை ஒத்த மாணவர்களிடம் குறை கூறுகிறார்கள். நண்பர்களுடன் ஒன்றாக இணையும்போது, அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் ஏற்பது தனி மகிழ்ச்சி. தீய பழக்கங்களைப் பெற்றோர் கண்டித்தால், அவர்கள் வேண்டாதவர்களாகி விடுகிறார்கள்.

    பரவும் கசப்பு

    பெற்றோரிடம் கொண்ட காழ்ப்பு ஆசிரியைகளிடமும் பரவுகிறது. `என்னைப் புரிந்துகொள்கிறவர்கள் நண்பர்கள் மட்டும்தான்!’ என்பார்கள்.

    `உன் நண்பர்கள் உருப்படாதவர்கள்!’ இப்படிச் சொன்னால், எந்தப் பையன்தான் ஏற்பான்? (சில பெண்களும் இதில் சேர்த்தி).

    பொதுவாக, நண்பர்களைக் குறை கூறாது, அவர்களுடைய பழக்கவழக்கங்களை மட்டும் குறிப்பிடலாமே!

    “அவர்கள் சிகரெட்டில் ஆரம்பித்து, இன்று போதை மருந்துவரை போய்விட்டார்கள். இப்பழக்கம் சட்ட விரோதம் என்பது ஒருபுறமிருக்க, உன் ஆரோக்கியம் கெடும். படிப்பும் வீணாகும்,” என்று பொறுமையாக எடுத்துச்சொல்லும் பெற்றோர் மகனை சிறுகச் சிறுக மாற்ற முடியும்.

    ஒரு தண்டனையானது அதிலிருந்து கற்கும்படி அமையவேண்டும்.

    கதை

    சுந்தர் கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தில் பாடம் நடக்கையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருந்தது. மீறினால், மறுநாள்தான் தவறிழைத்த மாணவன் அதைத் திரும்பப் பெறமுடியும்.

    சுந்தர் நன்றாகப் படிப்பவன். அவனுடைய போதாத காலம், அவனுடைய கைத்தொலைபேசி பிடுங்கப்பட்ட அன்று வெள்ளிக்கிழமை. திங்கள்வரை அது இல்லாது, அவனுக்குக் கை ஒடிந்ததுபோல் ஆயிற்று! தலைமை ஆசிரியையிடம் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லாமல் போயிற்று. `நீயே இப்படிச் செய்யலாமா?’ என்று கைவிரித்துவிட்டாள்.

    இனி எந்த விதியையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற புத்தி வந்தது பையனுக்கு.

    தொலைகாட்சி, கணினி விளையாட்டுகளும் இளவயதினருக்கு மோகம் அளிக்கும் சாதனங்கள். உல்லாசமாகப் பொழுதைப் போக்க இவை இருக்கையில், யாராவது வீட்டுப்பாடம் செய்வார்களா!

    பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து உண்மையை அறியும் பெற்றோர் குறிப்பிட்ட காலம் இவை இரண்டும் கூடாது, வீட்டுப்பாடத்தை முடிக்க வேண்டும் என்று தடை உத்தரவு போடலாம்.

    இங்கு `காலம்’ என்பது சில மாதங்கள். அவர்களுக்கு முதலில் பொறுக்க முடியாமல் இருக்கும். பிறகு பழகிவிடும். வகுப்பில் நல்ல பெயர் எடுக்கும்போது, தொலைகாட்சியின் முக்கியத்துவம் குறைய, பொறுப்பு வந்துவிடும்.

    வீண் தண்டனைகள்

    சிலவித தண்டனைகளால் பயனுள்ள எதையும் கற்க மாட்டார்கள் சிறுவர்கள். உதாரணமாக, `பாடம் படிக்காது, இன்னொரு முறை தொலைகாட்சிமுன் உட்கார்ந்தாயோ..!’ என்று மிரட்டினால் பயமும் எதிர்ப்பும்தான் எழும்.

    மாறாக, `அரைமணி நேரத்திற்குமேல் கணினி கூடாது. பரீட்சை நெருங்குகிறது! சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டாம்?’ என்று பொறுமையாக வழிகாட்டுவது சிறுவர்களைப் பொறுப்பானவர்களாக ஆக்கும்.

    எது கூடாத நட்பு?

    நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் மாதவனை அவன் வகுப்பிலிருந்த பிற மாணவர்கள், “உரு! கடம்!’ என்றெல்லாம் கேலி செய்வதைக் கண்டிருக்கிறேன். எதையும் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காது, மணிக்கணக்காக மனப்பாடம் செய்கிறான், இப்படிச் செய்வது பெண்களின் குணம் என்று அந்த கேலிக்கு அர்த்தம்.

    மாதவனோ, தன் பொறுப்பை உணர்ந்திருந்தான். சக மாணவர்களின் கேலியை அலட்சியப்படுத்தினான். சில ஆண்டுகளுக்குப்பின் அவன் மேற்படிப்புக்கு ஆயத்தமாக, அவனை நையாண்டி செய்தவர்கள் பின்தங்கிப் போனார்கள்.

    முன்னேறவிடாத முட்டுக்கட்டைகள்

    சிறு குழந்தைகள் தாம் நல்லவர்களா, புத்திசாலியா என்று அறிய பெற்றோரது பாராட்டை எதிர்நோக்குவது இயற்கை.

    `நீ உருப்படமாட்டே!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தால் குழந்தைகளுக்கு நற்புத்தி வரும் என்று எண்ணிய பெற்றோர் வாய்த்திருந்தால், சிலர் பெரியவர்களானபின்னும் அதேபோல் பழிக்கும் நண்பர்களையே நாடுகிறார்கள். தம்மை அவர்கள் முன்னேறவிடாது தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

    நாம் அடையும் மகிழ்வும், தன்னம்பிக்கையும் பிறரிடமிருந்துதான் பெறவேண்டும் என்ற நிலை ஓரளவு சரியாக இருக்கலாம். அதற்காக எப்போதும் பிறரையே நாடுவது பலகீனம் அல்லவா?

    நண்பர்கள் மட்டுமல்ல, சில சமயம், வாழ்க்கைத்துணைகூட ஒருவரை தாழ்த்தக்கூடியதுதான்.

    கதை: பயங்கொள்ளிகளின் ஆயுதம்

    தன்னைவிடப் பலவிதங்களில் சிறந்திருந்த மனைவியை ஓயாது மட்டம்தட்டி, பலர் முன்னிலையில் `முட்டாள்’ என்று பழித்தால் தான் உயர்ந்துவிட்டதாக எண்ணும் ஆண்களில் சுதாகரும் ஒருவன்.

    அவன் மனைவி சுமதிக்கு உற்றார் உறவினர் எவரும் அருகில் இருக்கவில்லை. அதனால் கணவன் அவளை எப்படி நிந்தித்தபோதிலும் அனுதாபம் காட்டவோ, அறிவுரை வழங்கவோ எவரும் இல்லை. படித்த பெண்ணானாலும் மரியாதை கருதி, `இதுதான் தமிழ் பெண்ணுக்கு அடையாளம்!’ என்று பொறுத்துப்போனாள்.

    மனைவியை மட்டுமின்றி, அவளுடைய பெண் உறவினர்கள் யாராவது வந்தால், அவர்களையும் தாக்குவதுபோல் பேசத் துணிந்தான் சுதாகர்.

    மனைவியை தாழ்த்திப் பேசும் ஆண்கள் உலகிலுள்ள எல்லாப் பெண்களையும் அப்படியே நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். அபூர்வமாக சில பெண்கள் எதிர்க்கையில், ஒரேயடியாகப் பயந்துவிடுவார்கள்.

    (என்னை ஒருவர் அப்படி நடத்தியபோது, நான் எழுதியவைகளின் நீண்ட பட்டியலை அவரிடம் மௌனமாகக் கொடுத்தேன். புரட்டிவிட்டு, `பயமா இருக்கே!’ என்றார். அதன்பின் ஒரே மரியாதை!)

    பயந்தாங்கொள்ளிகளின் ஆயுதம் அடங்கிப்போகும் பெண்களை மிரட்டுவதோ?

    அதன்மூலம் தாம் தைரியசாலிகள்தாம் என்று தமக்கே தைரியம் சொல்லிக்கொள்கிறார்களோ?

    ஆரம்பத்திலேயே எதிர்க்காது, விட்டுக்கொடுத்துப்போனது சுமதி செய்த தவறு. மனைவியின் எதிர்ப்பின்மை அவனுடைய பலத்தை அதிகப்படுத்துவதுபோல் இருக்க, வன்முறையில் இறங்கினான் சுதாகர்.

    பிறர் நம்மை ஏற்கவேண்டும் என்று நம் சுயகௌரவத்தை விட்டுக்கொடுத்தால் பிறருக்கு மட்டுமின்றி, நமக்கும் நம்மையே பிடிக்காதுபோகும் அபாயம் இருக்கிறது.

    நண்பர்களோ, உறவினர்களோ, நம் ஆற்றலை முழுமையாக வெளிக்காட்டாதிருக்க தடை போட்டால், அவர்கள் தொடர்பு வீண்.

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 39

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்விகளுக்கு யார் காரணம் ?

    பல நேரங்களில் நாம் நம்முடைய தோல்விகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்குகின்றோம். எப்பொழுதுமே நமது தோல்விகளுக்கு நாமே காரணமாக இருக்கின்றோம் என்பதை உணருவதில்லை அல்லது உணர மறுக்கின்றோம். தோல்விகளில் நம்முடைய பங்கு எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்தால் தன்னுடைய சுய கௌரவத்திற்கு தாக்குதல் ஏற்படுமோ என்ற பயத்தில் உண்மையிலிருந்து விலகி நிற்கின்றோம்.  மற்றவர்கள் நம்முடைய தோல்விக்காக நாம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நாம் ஏன் மற்றவர்களை நம்முடைய தோல்விகளுக்கு பொறுப்பாக்குகின்றோம்? இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

    1. நாம் நம்முடைய சுய தனித்திறன்களை அறிந்து கொள்வதிலும் . நம்முடைய தனித்திறன்கள் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. அவைகளைக் குறைத்து மதிப்பிடுகின்றோம். அல்லது நமது திறன்கள் விலைபோகுமா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் நம்மை மற்றவர்களிடம் ஒப்பிடும் பொழுது பல நேரங்களில் நமது திறன்கள் மீது நாம் கொண்ட பார்வை துல்லியமாக இல்லாமல் பாரபட்சமாகவோ அல்லது ஒருவித தயக்கத்துடனோ இருக்கின்றது. இதை மற்றவர்கள் அறிந்து தங்களுடைய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் தங்களுடைய புத்திசாலித்தனமான உள்ளீடுகள் மூலமாகவும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிடுகின்றனர்.
    1. வெற்றிப்பாதைகளுக்கு ஏற்றவாறு நாம் நமது திறன்களை புதிப்பித்துக்கொள்வதில்லை. பல நேரங்களில் நாம் நம்முடைய பழைய அறிவுகள், சிந்தனைகள், கற்றல்கள், திறன்கள் ஆகியவற்றை பெரும் சொத்தாக நினைத்து அவைகளின் அடிவாரகங்களில் கட்டப்பட்ட மாளிகைகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காலப் போக்கில் இவைகள் உபயோகமற்றவைகளாகவும் தேவையற்றவைகளாகவும்  மாறி நமக்கு உதவாமல் உளுத்துப் போகின்றன. வேகமாக மாறிவரும் அறிவு மற்றும் திறன்களின் சந்தையில் நாம் தனிமரமாக தோல்வியின் சின்னமாக நின்றுவிடுகின்றோம். இதற்கு யார் பொறுப்பு? மற்றவர்களோ தங்கள் அறிவினையும் சிந்தனைகளையும் திறன்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகக் கூர்மையாக்கிக் கொண்டு வருகின்றனர்.  வெற்றிக்கனியை பிடிப்பதற்குத் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். பல நேரங்களில் அவர்கள் நம்மை விட அனுபவத்தில் குறைந்தவர்களாகவும் வயதில் குறைந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. அந்த நேரங்களில் நாம் அவர்களைக் கண்டு பொறாமை கொண்டோ அல்லது வெறுப்புக் கொண்டோ அவர்களை நம்முடைய தோல்விகளுக்கு காரணமாகக் காட்டுகின்றோம். இதை வெல்ல ஒரே ஒரு வழி – நித்தம் நம்முடைய அறிவையும் திறன்களையும் சீர் செய்து கொண்டு இருப்பதுதான் !
    1. தோல்விகளைக் கண்டு துவளாமல் உயர்வது எப்படி என்று நாம் சிந்திப்பதில்லை.  ஒருமுறை எட்மண்ட் ஹில்லாரி (Edmund Hillary) எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக தன்னுடைய முதல் முயற்சியை மேற்கொண்ட பொழுது தோல்வியைத் தழுவினார். அவர் இமயத்தை விட்டு கீழே இறங்கியதும் அந்தச் சிகரத்தை ஒரு முறை நோக்கி சொன்னார்: ” நீ இதைவிட பெரியதாக உயரமுடியாது. ஆனால் நான் இப்பொழுது இருப்பதைவிட பெரியவனாக உயர முடியும்.” என்னே! ஒரு மனப்பான்மை. தோல்விகள் நமக்கு கற்றலையும் துணிவையும் கொடுக்கக்கூடியவை. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளாமல் மற்றவர்களை அந்தத் தோல்விக்கு காரணமாக ஆக்குவது நமது குறுகிய மனப்பான்மையையும் நமது இயலாமையின் வெளிப்பாட்டையும் காட்டுகின்றது.
    1. சில நேரங்களில் தோல்விகளின் தாக்குதல்களிருந்து விடுபட நாம் மாறுபட்ட சிந்தனைகளைக் (Out of Box thinking) கையாள வேண்டும். நேர்கோட்டுச் சிந்தனை (Linear thinking) முறைகள் பல நேரங்களில் பயன் அளிப்பதில்லை. எனவே ஒவ்வொரு நேரத்தில் எப்படிப்பட்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சிந்தித்து அதற்குத் தக்கவாறு கையாள வேண்டும். செகப்பிரியர் (Shakespeare) எழுதிய “வெனிஸ் நாடு வியாபாரி” (The Merchant of Venice) என்ற கதையிலே தன்னுடைய தேவைக்காக ஷைலக் (Shylock) என்பவரிடம் ஒரு தொகையைக் கடன் வாங்கிய அன்டோனியோ (Antonio) என்பவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தக் கடனைத் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளிக்க, அது தவறினால் தன்னுடைய இதயத்திலிருக்கும் சந்தையிலிருந்து ஒரு பவுண்டு சதையைத் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றார். குறிப்பிட்ட காலத்தில் அந்தப் பணத்தை திருப்பித் தர முடியாததால் ஷைலக் ஒரு பவுண்டு இதயச் சதையைக் கேட்க பல நண்பர்கள் அதற்குப் பதிலாக பலமுறை அதிகமாகப் பணம் தருவதாகவும் தன்னுடைய கோரிக்கையைக் கைவிட்டுவிடுமாறும் ஷைலக்கை கேட்கின்றனர். இதற்குப் பணியாத அந்த வியாபாரி ஷைலக்கிடம் மாறுவேடத்தில் ஒரு வழக்குரைஞராக வந்த போர்ஷியா (Portia) என்ற பெண் அந்தக் கோரிக்கையை ஏற்று “உங்களுக்கு ஒரு பவுண்டு இதயச் சதை நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால் அதை எடுக்கும் பொழுது ஒரு துளி இரத்தம் வந்தாலும் உங்களுடைய பணம் மட்டுமின்றி உங்கள் வாழ்வும் போய்விடும் என்று கூறி அந்த வழக்கை வென்று விடுகின்றார். இந்த கதை ஒரு மாறுபட்ட சிந்தைக்கு (Lateral thinking) முகாந்திரமாக அமைகின்றது. பல நேரங்களில் மாறுபட்ட சிந்தனைகள் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தோல்விகளைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாக அமைகின்றது.
    2. தோல்விகள் நிரந்தரம் அல்ல; மற்றும் தோல்விகள் ஒரு முடிவின் வெளிப்பாடு அல்ல. வாழ்க்கை என்ற பயணத்திலும் முன்னேற்றம் என்ற பாதையிலும் தோல்விகள் சில நேரங்களில் தடைக்கற்கள். அவைகளைக் கடந்து செல்ல நாம் பயில வேண்டும். இந்த வழியிலே வெற்றிகண்டவர்கள் சரித்திரம் படைக்கின்றார்கள் ஆபிரஹாம் லிங்கனின் (Abraham Lincoln) வாழ்க்கை இதற்கு ஒரு சான்று. இது போன்று சரித்திரம் படைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை நமக்கு பாடங்கள் சொல்லித் தருகின்றன. அவர்கள் வழிகள் நம்முடைய பாதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அனுபவங்கள் ஆசானாக இருக்கும்பொழுது தோல்விகளுக்குத் தோள்கொடுக்கத் துயரங்கள் வருவதில்லை. தோல்விகளைப் பாராட்டுபவர்கள் இருக்கும் இடத்திலேயே நின்று குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு நபர்கள் மிகக் குறைவு.

    எனவே நாம் நிமிர்ந்து நிற்கப் பழகிக் கொள்ளவேண்டும். தோல்விகளைச்  சிறிய நிகழ்வுகளாகக் கருதி மேலே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர கற்றுக்கொள்ள வேண்டும்.

    என்ன, முயன்று பார்க்கலாமா ?

    (தொடரும் )

    Share
  • நவீனத்துவ தொடக்கமும் ஆதவனின் பிரதியாக்கமும்

    -செ.ர. கார்த்திக் குமரன்

    இலக்கியம் தொன்றுதொட்டு பலவிதப் பரிணாமங்களை எய்தியுள்ளது. அதைப்பொறுத்து அதனுடைய வடிவமுறைகளும் மாற்றம்பெற்றே வந்துள்ளது. இம்மாற்றங்களை ஏற்படுத்திய இலக்கியவாதிகள் ஒரு சிலரைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெளித்தெரியாமல் செய்துவிடுகின்ற நிலையும் தற்காலச் சூழலில் ஏற்படுகின்றது. அந்தவகையில், நவீன இலக்கியத்தில் தனக்கான தனித்த எழுத்தினைப் பதிவுசெய்த ஆதவன் என்ற படைப்பாளர் தற்காலத்தில் அதிகம் பேசப்படுவது கிடையாது. இதேபோல் கோபிகிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், க.நா.சு, கிருஷ்ணன் நம்பி, நகுலன், ஜி.நாகராஜன், சம்பத், கரிச்சான் குஞ்சு என இதன் பட்டியல் நீள்கிறது. இவ்வெழுத்தாளர்களைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில கட்டுரைகள் தற்போதுள்ள இதழ்களில் வெளிவருவது வரவேற்கத்தக்கது. மேலும், இதனை வாசிக்கும்போது நிகழ்ந்த ஆர்வமே, ஆதவன் குறித்த இக்கட்டுரை எழுதத்தூண்டியது.

    ஐரோப்பியர்களின் வருகையினாலும் நவீனக் கல்விமுறையில் அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தினாலும் இலக்கியம் பல்வகை அர்த்தக்கட்டுமானங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டு பிரதிகள் வெளிவந்துள்ளன. இத்துடன், நவீனக் கோட்பாடுகளின் தாக்கங்களும், படைப்பாக்கத்தினால் பல புதிய புரிதல்களை இலக்கிய உலகிற்கு அளித்ததோடு, வாசகர்களின் ஆய்வாளர்களின் கல்வியாளர்களின் மனங்களில் சிந்தனை ரீதியாக மாற்றங்களுக்கும் வித்திட்டன. இதனால், எழுத்தாளர்கள் பலதரப்பட்ட விஷயங்களையும் கருத்துக்களையும் வெளிப்படையாகவே வெளிப்படுத்தி உள்ளனர். இதில் ஆதவன் தன் எழுத்தினூடாக நவீன இலக்கியத்திற்கு அளித்த பங்கினைக் காண்பதாகவே இக்கட்டுரை அமைவுபெறுகிறது.

    கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஆதவன், 1942இல் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். 1960களில் எழுதத்தொடங்கிய இவர், தமிழ்ப் படைப்புலகில் பலவாறான நவீனச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் வகையில் படைப்புகளைப் படைத்தவர். மத்தியதர வர்க்கத்தின் நிலைகளையும் நவீன சமூகத்தில் ஆண் – பெண்ணுக்கு ஏற்படும் காதல் மனஉணர்வுகளையும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளையும் அவர்கள் அணியும் முகமூடிகளையும் போடும் வேஷங்களையும் தோலுரித்துக் காட்டுவதாக இவருடைய கதைகள் அமைந்துள்ளன. “என் பெயர் ராமசேஷன்”, “காகித மலர்கள்” ஆகிய இரு புதினங்களும் அறுபது சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் படைத்த இப்புனைகதைகளின் வாயிலாகத் தற்காலச் சூழலின் இயங்குநிலையையும் அறியமுடிகின்றது. இவர் எழுதிய காலகட்டத்தில் நவீனத்துவ கோட்பாடானது பரவலாகப் பேசப்பட்டது. மேலும், இவருடைய எழுத்துக்களானது அக்கோட்பாட்டைச் சார்ந்ததாகவே உள்ளதோடு, இவருடைய எழுத்துக்களைத் தவிர்த்து நவீனத்துவத்தை புரிந்துகொள்ள முடியாத சூழலும் உள்ளது எனலாம்.

    நவீனம் (Modern) – நவீனமயமாதல் (Modernity)- நவீனத்துவம் (Modernism)

    நவீனம் என்பதை ஒரு கண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் வாழ்க்கைமுறை என்றே கூறலாம். இது, கி.பி.18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் நிலவி வந்த அறிவொளிக் காலத்தில் எழுந்தது. “நவீன என்கிற அடைமொழி காலத்தைக் குறிக்கிறது. காலத்தினால் நமது இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் நெருங்கிய சம்பந்தமுடையது என்பதையும், அதனுடன் இந்தக் காலத்தில் சிறப்பாக எழுதப்பட்டதையும் குறிக்கிற வார்த்தை அது.”1   1127ஆம் ஆண்டு பாரிஸிலிருந்த ஒரு தேவாலயம் சீரமைக்கப்பட்டபோது சுசர் என்பவர், அது ‘நவீனப்’படுத்தப்பட்டதாகக் கூறியபோது தான் இச்சொல் புழக்கத்தில் வந்தது எனலாம். கட்டடக்கலையில் தோன்றிய இச்சொல்லானது, பிறகு ஓவியம், கலை இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக, நவீனம் என்ற சொல்லுக்கு அகராதியில் பழையதிலிருந்து மாறுபட்டு, புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மையையும் கொண்டு அமைவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய 20ஆம் நூற்றாண்டுக்காலம் வரைப்பட்ட சிந்தனைகளை உள்ளடக்கிய தத்துவக் காலகட்டத்தை நவீன காலம் என்பர்.”2 இக்காலகட்டத்தில் தான் அறிவியல் வளர்ச்சியின் மூலம் சமூக அமைப்பே மாறியது. ஐரோப்பியர்கள் காலனிய நாடுகளில் ஏற்படுத்திய வணிகத்தின் காரணமாக பிரபுத்துவச் சமூகம் இல்லாமலாகி முதலாளித்துவச் சமூகம் தோற்றம் பெற்றதுடன், புதிய புதிய போக்குகளுக்கும் சிந்தனைகளுக்கும் வழிவகை செய்தது.

    இதனை அடியொற்றி தோன்றிய நவீனமயமாதல் என்ற பெயர்ச்சொல், புதுமை, தற்காலம், புத்தியல் ஆகிய பொருண்மையைத் தருகிறது. இத்துடன் புதிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்காலத் தேவைக்கேற்ப பலனை அதிகப்படுத்துவதின் நோக்கில் மாற்றியமைத்தலையும் இச்சொல் குறிக்கிறது. இதனால், உற்பத்திப் பொருட்களில் புதுமைகளைப் புகுத்தி, அதன் தரத்தை கூட்டுவதற்கும் அதிகளவு பொருட்களைத் தயாரித்து, உலக சந்தையை கவர்வதற்கும் இது பயன்பட்டது. மேலுமிதைப் பல துறைகளிலும் கொண்டு சென்று, தங்களின் சுயத்தை நிலைநாட்டி, நிர்வாகம் சார்ந்த அமைப்பிலும் தன் முத்திரையைப் பதியச் செய்தனர்.

    “15ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய, இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி உள்ளிட்ட காலகட்டத் தத்துவமாக ‘நவீனத்துவம்’ அடையாளங்காணப்படுகிறது.” இத்துடன் ‘நவீனத்துவம்’ என்றால் என்ன? இதன் பண்புகள் எவையென அறிய முற்படுமிடத்து,    எம்.ஜி.சுரேஷ் எடுத்தாளும் ஹ்கோவான் ஹாஃப்மன்ஸ்தால்  தரும் விளக்கம் பொருத்தமாக இருக்கும். “இன்று இரண்டு விதமான விஷயங்கள் நவீனமானவையாக இருக்கின்றன. வாழ்க்கையை ஆய்வு செய்தல், வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லுதல். மனித மனத்தின் உள்ளார்ந்த வாழ்கையை அல்லது கனவுகளைப் பகுப்பாய்வு செய்வதையும், நம்ப முடியாத மாயத்தோற்றங்கள், கண்ணாடியில் தோன்றுவது போன்ற மாயப்பிம்பங்கள், கனவுத் தோற்றங்கள் போன்றவை மீது கவனம் செலுத்துவதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். பழைய மேசை  நாற்காலிகளைப் போலவே புதிய கண்டுபிடிப்பான நியுரானும் நவீனமானதே. அறிவொளிக் காலத்தின் ‘நெருக்கடி’க்குள்ளான அறிவும் ரொமாண்டிச யுகத்தின் புத்தாய்வை நாடும் ஆர்வமும் சேர்ந்ததே நவீனத்துவத்தின் பண்பாகும் என்பனவே நவீனத்துவங்குறித்த விளக்கமாக இவரால் முன்வைக்கப்படுகின்றன. இவர் மேலும், 1890 முதல் 1930 வரையிலான காலகட்டத்தை நவீனத்துவத்தின் உச்சக்கட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ்மக் ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுத்துள்ளனர் எனவும் கூறுவர்.”3 நவீனத்துவத்தின் வாயிலாக கல்வி வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி, கனரக இயந்திரங்கள் மூலம் அபரிமிதமான உற்பத்தி, தொழில் துறையில் முன்னேற்றம், மக்களாட்சிக் கோட்பாடுகளின் வருகை போன்றவைகள் இக்காலத்தில்தான் ஏற்பட்டது. இதன் இயல்புகளாக, எதையும் அப்படியே ஏற்காமல் தர்க்கபூர்வமான முறையில் ஆராய்ந்து, வர்ணனைகள், விவரணைகள் கொடுத்து வளர்க்காமல், சுருக்கமான முறையில் வெளிப்படுத்தி, தனிமனித மனஉணர்வுகளைப் புலப்படுத்தும் வகையில் அமையும். “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தீவிரங்கொண்ட நவீனத்துவம் நகர்மயமாதல், வெகுசனமயமாதல், ஒருமுகமாதல் என மனித இயக்கங்களில் அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம், தொழில் என அனைத்துத் துறைகளையும் புதிய தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது.”4 இந்நவீனத்துவத்தின் சாரம்சமாக, நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் முதலாளித்துவத்தின் ஊடாக அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஏகாதிபத்தியத்தின் தோற்றத்தையும் குறிப்பிடலாம்.

    என் பெயர் ராமசேஷன்

    சமகால நவீனத்துவப் போக்கினை நாவல்களில் சிறந்த முறையில் உருவாக்கியவர் ஆதவன். மத்தியதர வர்க்கத்தின் சிந்தனைகளை, உணர்வுகளை, செயல்களை அப்பட்டமாக சித்திரித்தவர். நவீன வாழ்நிலையில் இளைஞன், தன் சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பையும் அடையாளத் தேடலையும் வெளிப்படுத்துவதாக இந்நாவல் படைத்துள்ளார். ராமசேஷன் என்ற இளைஞனை மையப்படுத்திய இக்கதை, விடுதியில் தங்கி, பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு ஏற்படும் அனுவங்களை, கிண்டல்களை, உணர்வுகளைச் சொல்வதாக உள்ளது. மேல்தட்டு வர்க்கத்தின் இயல்புகளையும் குணங்களையும் சகநண்பனின் குரோதத்தையும் கீழ் மத்தியதரப் பின்னணி கொண்ட ராமசேஷன் உணர்கிறான்.  இதிலிருந்து தான் விடுபடவும் சுயநிரூபனம் அடையவும் முயல்கிறான். எனினும் தன் (மத்தியதர வர்க்க)  உணர்வுகள் அவனை நிலைகுலைய வைக்கின்றன. இதனால், தனக்கு நேரும் விளைவுகளை ராமசேஷன் பிரதியின் வாயிலாக எள்ளலாக எடுத்துரைக்கிறான்.

    “முதல் நாள் என்னைப் பார்த்தவுடனேயே நான் எப்படிப்பட்டவனென்று தனக்குத் தெரிந்துவிட்டதாக மாமி சொன்னாள். என் கண்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது (முழுக்க முழுக்க விஷமத்தனம்). அவள் முட்டாளில்லை. என் போன்றவர்களை உள்ளும் புறமும் அவள் அறிவாள். … உன் நண்பனுடைய தாயையும் தங்கையையும் உன் தாயையும் தங்கையையும் போல நினைப்பது சிரமமானது. இந்தச் சிரமத்தை உங்கள் தலைமுறையினர் படத் தயாராயில்லை. இவை அனாவசியக் கட்டுப்பாடுகளாக, ஹிப்போக்ரிஸியாக உங்களுக்குத் தோன்றுகின்றன. உங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நீங்கள் வளரும் சூழ்நிலை அப்படியிருக்கிறது. … உன் மனதில் ஓடுவது ஒவ்வொன்றும் அணுஅணுவாகத் தெரியும். கீழ் மத்தியதர வகுப்புக்கே உரிய வஞ்சிக்கப்பட்டுவிட்ட களை உன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. … நீ எங்களுக்கு புழுவுக்கு சமானம். எங்கள் மட்டத்துக்கு ஏற்ற சமூக நாகரிகத்தை ஒட்டி நாங்கள் காட்டும் நேச பாவத்தையும் இனிமையையும் உன் அசட்டு மனம் எப்படியெல்லாம் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறதோ, என்னவோ … நீ இனி இந்த வீட்டுப்பக்கம் வராதேயென்று நான் சொல்லப்போவதில்லை. தாராளமாக வா. ஆனால் ஒரு ஜென்டில்மேனாக லட்சணமாக இரு. Don’t try your dirty tricks here…5 மத்தியதர வர்க்கத்தின் போக்கினையும் அவர்களுடைய சிந்தனையையும் வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் காட்டியுள்ளார். நவீனகாலப் போக்கினால் இளைஞர்களுக்கு ஏற்படும் மாற்றத்தினை, மேல்தட்டு வர்க்கம் புரிந்துகொண்டதையும் மேலுமவர்கள் எச்சரிக்கைச் செய்வதையும் ஆதவன் தெளிவுபடுத்தியுள்ளார். தனிமனித, கல்லூரி மாணவனின் யதார்த்தப் போக்கினையும் மரபுகளிலிருந்து விடுபட்டு வாழ நினைப்பதையும் நவீனகாலத்திய இயங்குதளத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும் இப்பிரதியின் வழி ஆதவன் சித்திரித்துள்ளார். நவீனத்துவ இலக்கியப் போக்கினை முன்னெடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவராகவும் இவர் கருதப்படுபவர்.

    அப்பர் பெர்த்

    தில்லியிருந்து சென்னைக்கு இரயிலில் மூன்றாம் வகுப்பு அப்பர் பெர்த்தில் பயணம் செய்யும் சிதம்பரம் என்ற நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த இளைஞனின் சுயதேடல் மற்றும் நவீன உலகில் தன் இருத்தல் குறித்த சிந்தனைகளை வெளிக்கொணரும் விதமாக இச்சிறுகதை அமைந்துள்ளது. மேலும், இவ்விளைஞன் தில்லி சமூகவாழ்க்கையில் திளைத்ததினால் ஏற்பட்ட உளவியல் (பாலின்ப) சார்ந்த உணர்வுகளையும் செயல்களையும் சொல்வதுடன், இந்திய – தமிழ்ப்பெண்களின் பாரம்பரிய பண்பாட்டு உணர்வுகளையும் மிக நேர்த்தியாக தன் எழுத்தினூடே சித்திரித்துள்ளார். “அவளை ஆதரவுடன் அணைத்துக்கொண்டு, ‘உன் மனசு எனக்குத் தெரியும், அபர்ணா!’ என்று மெல்லிய குரலில் அவளிடமும், ‘இவள்தான் என் உண்மைக்காதலி, தெரிந்துகொள்ளுங்கள்!’ , என்று மற்றவர்களிடமும் உரக்கச் சொல்லிவிட்டு, ரயிலைத் தவறவிட்டு அவளுடனேயே இருந்துவிடலாமா என்று தோன்றியது. … அபர்ணாவை மணந்துகொண்டால் வாழ்க்கையில் என்றைக்குமே அமைதியும் அழகும் மிளிரும். ஆனால், அவனுடைய ஆசைகள்? கனவுகள்? என்றும் சாதாரணமானவனாகவோ இருந்துவிட அவன் விரும்பவில்லை. என்றாவது ஒரு நாள் சமூகத்தில் பெரிய புள்ளியாக வர வேண்டும். ஒரு புத்திசாலித்தனமான கல்யாணத்தின் மூலம்இதற்கு அவன் அடிகோலலாம். காதலா, வாழ்வின் மேன்மையா என்று யோசித்தபொழுது, பிந்தையதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.”6  நவீன சமூகத்தில் செய்யும் காதலுக்கும் கல்யாணத்திற்கும் இடையே வாழ்வின் மேன்மையை அடைவதுதான் புத்திசாலித்தனம் என்ற சுயநலப்போக்கினைச் சொல்வதோடு, சாதாரணமாகவே தான் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது என்பதையும் சமூகத்தில் தனக்கான இடம்பெற, இளைஞர்கள் செய்யவேண்டியவற்றையும் எடுத்துரைக்கிறது.

    “எதிரே தூங்கிக்கொண்டிருந்த பெண்மணியின் தோற்றம் அவன் உள்ளத்தில் ஏதேதோ கற்பனைகளைக் கிளர்ந்தெழச் செய்தது!…

    காப்பிக்குப் பிறகு, பேச்சு. சிதம்பரம் நம் சினிமாக்களைக் கேலி செய்து ஏதேதோ பேசினான். அவள் சிரித்தாள். பிறகு அவளும் ஏதோ பேசினாள். இருவரும் பேசினார்கள். நிறையப் பேசினார்கள். அலுக்காமல் பேசினார்கள்.

    சிதம்பரத்துக்கு மெல்ல நம்பிக்கை பிறந்தது. தான் பாயக்கூடிய தொலைவுக்குள் வந்துவிட்ட இரையைப் பார்த்த புலிபோல, அவன் தயாரானான். …

    அடுத்த குகைக்குள் ரயில் நுழைந்ததும் அவன் யோசிக்கவே இல்லை. சட்டென்று அவளைக் கட்டியணைத்துக் கொண்டான். அவனுடைய கைப்பிடியில் அவளுடைய சதை அழுந்தியது. திடுக்கிட்டுத்தான் போய்விட்டான் அவன். எதிர்பாராத அதிர்ச்சியில் செயலற்றுப் போனாள். ஆனால் ஒரு கணம்தான். மறுகணமே பளாரென்று அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நெருப்பைத் தீண்டினவன் போல அவன் சரேலென்று கைகளை எடுத்துக்கொண்டான்.”7 தில்லியின் சமூகச்சூழல்களில் வாழ்ந்த சிதம்பரம், அங்கு பழகிய பெண்களின் இயல்பு ஆகியவற்றைக் கொண்டு, அடுத்தவனின் மனைவியாகிய இப்பெண்ணினுடைய கணவனின் இயலாமையை அறிந்து, தன்போக்கில் நடந்துகொண்டான். வேண்டிய பொருட்கள் எல்லாம் தன் கையில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் செய்த செயலானது, அவனுக்கு அவநம்பிக்கையையும் வெட்கத்தையும் கொடுத்தது. ஃபிராய்ட் பிரித்த (இன்பமனம் – id, நீதிமனம் – ego, ஆழ்மனம் – super ego) மனிதமனங்களில் முதலாவதாக இருக்கும் இன்பமனத்தை நாடிய நவீன இளைஞன், மரபான பண்பாட்டு உணர்வுகொண்ட இந்தியச் சூழலில் அதனைத் தவிர்க்கும் நிலை உள்ளதை ஆதவன் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவன் இத்தகைய கேவலங்களை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், வாழ்க்கையில் தான் அப்பர் பெர்த்தாகவே இருக்க, செய்யவேண்டிய செயல்களைப் பற்றிச் சிந்திப்பதாக கதை முடிவடைகிறது.

    இதைப்போலவே இவருடைய நிழல்கள் என்ற சிறுகதையும் ஆணின் காதல் குறித்த பார்வையும் நவீனச்சூழலில் பெண்ணின் உடல்சார்ந்த தற்காப்பு நிலையும் ஆண் x பெண், காதல் (உடல்) x கற்பு ஆகிய இரட்டை எதிர்நிலைகளுடன் (Binary Opposition) எழுத்துருவாக்கியுள்ளார். சமகாலத்திய காதல் பற்றிய கருத்தாக்கங்களை இருநிலைகளில் அதாவது ஆண், பெண் என்ற இருமனங்களின் உணர்வுகளினூடாக பதிவுசெய்துள்ளார்.

    “இந்தத் திரைகள் அவசியந்தானென்று நீ நினைக்கிறாயா?

     ‘இது கற்காலமல்ல.’

     ‘இதோ பார் – உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல – ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப்பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் நினைக்கிறாயே, அதுவல்ல; எனக்கு வேண்டியது நீ – பூரணமான திரைகளற்ற நீ; முழுமையான நீ – புரிகிறதா உனக்கு? எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது ….’

    ‘வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்துவிடுகின்றன’ என்று அவன் நினைத்தான்.”8 கற்பு குறித்து மாற்றுக்கருத்துக்கள்கொண்ட (அக்னிப்பிரவேசம், பொன்னரகம்) போன்ற சிறுகதைகளினூடே, இக்கதை கற்பினைத் தாண்டிய பூரண மனஉணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய காலங்களில் பெண்களைப் பாலின வன்கொடுமைகளுக்கு ஆளாக்கும் பட்சத்தில் இக்கதையானது, பெண்ணுடலை மீறிய தத்துவார்த்தச் சித்தாந்தத்தை ஆணின் பார்வையில் எடுத்தியம்புகிறது. சமூகக் கட்டுமானங்களைத் தனிமனிதர்கள் மாற்றுத் திசையில் கொண்டு செல்ல முடியும் என்பதை ஆதவன் இதன்வழி தெரியப்படுத்தியுள்ளார்.

    இதற்கடுத்ததாக இவருடைய ‘இண்டர்வியூ’ மற்றும் ‘கனவுக்குமிழிகள்’ போன்ற கதைகள் தனிமனிதப் பிரச்சினைகளை, சுதந்திரத்தைக் கோருகின்றன. பொருளாதார நிலையில் ஒருவன் உயர்மட்டத்தை அடையவேண்டுமெனில் தன் சுயவிருப்பங்களுடன் செயல்படவேண்டுமென்றும் பிற உறவுகளைத் தவிர்க்கவேண்டுமென்றும் இதில் கூறப்படுகின்றது. பணம்தான் எல்லாம் என்ற தற்காலச் சமூகச்சூழலில்  ஆழ்ந்த அறிவுபெற்றிருந்தாலும் பணமில்லையென்றால் ஏற்படும் அவலநிலையையும் இது சித்திரிக்கிறது. மேலும், இந்தியாவின் படித்த இளைஞர்களின் மனத்தை, வாழ்க்கையை துல்லியமாகவும் தத்ரூபமாகவும் தம் படைப்புகளில் படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இவருடைய ‘சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல்…’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’, ‘முதலில் இரவு வரும்’, ‘புகைச்சல்கள்’ போன்ற கதைகளும் முறையே ‘ஆண் – பெண்ணுக்கு இடையே நிலவும் egoக்கள்’ ‘எழுத்தாளனுடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதல்கள்’, ‘முந்தைய தலைமுறைச் சார்ந்த பெற்றோர் மனங்களில் விளையும் சிக்கல்கள்’, ‘திருமணம் முடிந்து, பாலின்ப வேட்கை தணிந்த பிறகு எழும் நிறை – குறைகள்’ எனத் தற்கால புதுயுக மாற்றத்தினால் நிகழும் பிரச்சினைகளைத் தன்னளவில் பிரத்யேகமான முறையில் எழுத்துருவாக்கியுள்ளார்.

    சமகாலப் படைப்பிலக்கியச் சூழலில் ஆதவனின் பிரதியாக்க முறையானது இன்றும் தனித்துவம் மிக்கதாகத் திகழ்வதுடன், காலத்திற்கேற்றவாறு மனிதமனங்களின் பிரக்ஞைகள் மாற்றம்பெறுவதை நுணுக்கமாகவும் அழகியல் தன்மையுடனும் நவீன இலக்கியத்திற்கு அளித்துள்ளதை இவரை வாசிக்கும் யாராலும் மறுக்க இயலாது.

    மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

    1. காவ்யா சண்முகசுந்தரம் (தொ.ஆ.), க.நா.சு. (க.ஆ.), இலக்கிய விமர்சனங்கள், க.நா.சு. கட்டுரைகள் – II, ‘நவீன இலக்கியம்’, ப.857.
    2. ஆ. பூமிச்செல்வம், பின்னை நவீனத்துவம், ப.40.
    3. மேலது., பக். 45-46.
    4. மேலது., ப.47.
    5. ஆதவன், என் பெயர் ராமசேஷன், பக்.41-42.
    6. ஆதவன் சிறுகதைகள், ‘அப்பர் பெர்த்’, ப.22.
    7. மேலது., பக். 36-37.
    8. ஆதவன் சிறுகதைகள், ‘நிழல்கள்’, ப.221.

    துணைநூற்பட்டியல்

    1. இலக்கிய விமர்சனங்கள், க.நா.சு. கட்டுரைகள் – II, காவ்யா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு : 2005.
    2. ஆதவன், என் பெயர் ராமசேஷன், உயிர்மை பதிப்பகம், சென்னை, நான்காம் பதிப்பு: நவம்பர் 2014.
    3. ஆதவன் சிறுகதைகள், கிழக்கு பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 2005.
    4. ஆ. பூமிச்செல்வம், பின்னை நவீனத்துவம், அகரம் பதிப்பகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு: 2014.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,                  தியாகராசர் கல்லூரி, மதுரை.                                                                  செல் : 99443 77853, 70924 44193.

    Share
  • குறளின் கதிர்களாய்…(229)

     

    செண்பக ஜெகதீசன்

     

    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற்

    சொல்லா திருக்கப் பெறின்.                                                

           -திருக்குறள் -403(கல்லாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    பயன்தரும் நூலெதுவும்

    படிக்காத ஒருவனும்

    நல்லவனாகிவிடுகிறான்,

    படித்தவர்கள் முன்னிலையில்

    ஏதும்

    பேசாமல் இருந்துவிட்டால்…!

     

    குறும்பாவில்…

     

    கல்லாதவனும் நல்லவனாகிவிடுகிறான்,                 

    கற்றோர் முன்னிலையில் எதுவும்   

    சொல்லாமல் இருந்துவிட்டாலே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    நல்ல நூற்கள் பலகற்று

         நலந்தரும் தேர்ச்சி பெறாதவனாம்

    கல்லா ஒருவன் முன்சென்றே

         கற்றவர் நிறைந்த சபையிலேதும்

    சொல்லா திருந்தால் போதுமவன்

         சிறப்புப் பெறுவான் வாழ்வினிலே,

    எல்லா வரையும் விடநல்லான்

         என்னும் பேரைப் பெறுவதாலே…!

     

    லிமரைக்கூ..

     

    நல்லவனெனப் பேர்பெறுகிறான் கல்லாமலே,      

    கற்றவர் முன்னாலவன் இருந்தால்போதும்                     

    வார்த்தை யொன்றும் சொல்லாமலே…!

     

    கிராமிய பாணியில்…

     

    பேசாதே பேசாதே

    படிக்காத நீ

    பேசாதே பேசாதே..

     

    ஒண்ணும் படிக்காதவன்

    படிச்சவங்க சபயில

    முன்னால போய் ஏதும்

    பேசாம இருக்கணும்..

     

    அப்புடி இருந்தாலே அவன்

    எல்லாரையும்விட

    ரெம்ப நல்லவன்..

     

    அதால

    பேசாதே பேசாதே

    படிக்காத நீ

    பேசாதே பேசாதே…!

     

    செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • பிறந்துள்ளது கறுப்புக் குழந்தை !

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++++

    கண்மணி ! என் செய்வேன் ?

    பிறந்துள்ளது, கறுப்புக் குழந்தை !

    பேதலிக்கும் என் நெஞ்சம் !

    காதலியே என் செய்வேன் ?

    கறுப்புக் குழந்தை பிறந்துள்ளது !

    மனக்கவலை எனக்கு !

    கனிவோடு சிசுவை அணைத்து

    கறுத்த உடை அணிவாள் !

    திரும்பி வாராது சிறுவன் போயினும்

    கறுத்த ஆடையே அணிவாள்.

    கண்மணி சொல் ! என் செய்வேன் ?

    கவலைப் படும் என் மனம்.

    அவள் மீது ஆசை எனக்கு !

    கறுத்த பிள்ளை மீது விருப்பு

    அவளுக்கு !

    எத்தனை நாள் இருக்கும்

    இந்த ஆசை ?

    தவறை அவள் உணர்வாளா ?

    கறுப்பு சிசு பிறந்துள்ளது,

    கவலைப் படும் என் மனம் ?

    +++++++++++++++++++++

    Share
  • மூதாட்டியைப் புணர்ந்த முனியன்

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி

    திருப்பத்தூர் வேலூர்

    ————————————–

    மார்பெலும்பை நன்றாகக் கவ்விய தூண்டில் முள்ளின் இழுவிசையில் நடந்துகொண்டிருந்தது சுகமாய் இருந்தது. மங்களான வெளிச்சத்தில் கால்கள் தரையில் படும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை. நிலவின் ஒளியற்ற இருளில் கண்களுக்கு காட்சிகள் மங்களாகவே தெரிந்தது. தெளிவற்ற பிம்பங்களைப் பார்த்தவாறே மெல்ல நடந்துகொண்டிருந்தான் முனியன்.

    புருவத்தின் ஓரம் லேசாகக் கீரிச்சென்ற முள்ளின் சுவடு குருதியாய்க் கன்னத்தில் வழிந்தபோதுதான் இடது பக்கம் முள்செடிகள் இருப்பது அவனுக்குப் புரிந்தது. ஏனோ! அதுவும் அவனுக்கு இன்பமாகவே தோன்றியது.

    இருளின் அடர்த்தி மெல்ல மெல்ல கூடிக்கொண்டே இருந்ததால் கல்களை எச்சரிக்கையாக எடுத்துவைத்து மெல்ல நடந்துகொண்டிருந்தான்.

    சுற்றுமுற்றும் பார்த்து மெதுவாக நடந்துகொண்டிருந்த அவனுடைய கண்களில் தொலைவில் கொழுந்துவிட்டு எரியும் தீயின் ஒளி தென்பட்டது.

    ஓடும் ரயிலை எட்டிப்பிடிப்பவன் போல் வேகமெடுத்த அவனுடைய கால்கள் ஒளி வந்த அந்த இடத்தை அடைந்து பிறகுதான் நின்றன. பூனையைப் போல் மெல்ல அருகில் சென்றபோது அங்கு கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

    அதற்குக் காரணம் யாருமற்ற அந்த வனாந்திரத்தில் ஒரு மூதாட்டி அடுப்பில் எதையே வேகவைத்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தில் அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

    நரைத்த கூந்தல். சுருக்கங்கள் பீடித்த தேகம். தளர்ந்த நடை என அணிவகுத்து நின்ற உறவுகளைப் பெற்ற மகிழ்ச்சி அவளது முகத்தில் தெரிந்தது.

    கால்கடுக்க நெடுந்தூரம் நடந்த களைப்புடன் பசியும் கூட்டணி அமைத்து தாக்க மூதாட்டியிடம் உண்ண ஏதாவது கேட்கலாமா? என்று முனியன் யோசித்த போது, “இந்தா தம்பி” என்று ஒரு சிறு மண்பாண்டத்தில் எதையோ உண்ணத் தந்தாள்.

    பசியில் “அது என்ன என்று ஆராயுமுன்” வயிற்றில் அடைக்கலம் அடைந்தது.

    பசி நீங்கிய உடன் அந்த மூதாட்டியிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

    ஆனால் அதற்குள் அவன் பயணம் மீண்டும் தொடர்ந்தது.

    கொஞ்ச தூரம் நடந்ததும் அதுவரை இழுத்துவந்த தூண்டில் அவனை விட்டு திடீரென மறைந்தது.

    ஏன் தூண்டில் காணாமல் போனது? எங்கு போனது? தன்னை ஏன் இங்கு இழுத்து வந்தது? போன்ற கேள்விகள் அவனைத் தொலைத்துக் கொண்டிருந்தபோது, சர்ர்ர்…னு வந்த அம்பு ஒன்று அவனது மார்பில் ஊடுருவி புற்றில் நுழைந்த நாகம் போல் முதுகில் தலையை எட்டிப்பார்த்தது.

    அம்பைத் தொட்ட அவனது கரங்களை அருவி நீராய் பீரிட்ட குருதி நனைக்க சூரைக்காற்றில் சிக்குண்ட வாழை குலையாய்த் தலைசுற்றி மண்ணில் வீழ்ந்தான்.

    திடுக்கிட்டு அலறிஅடித்துக்கொண்டு எழுந்த முனியனுக்குத் தன் மார்பில் ஏதும் இல்லாததை அறிந்த போதுதான் அனைத்தும் கனவென்று புரிந்தது.

    கனவு அவனது நினைவைப் பின்னிக்கொள்ள உறக்கம் அவனை உதறிதள்ளிவிட்டு ஓடியது.

    எழுந்து விளக்கைப் போட போன போது மின்சாரம் தடைப்பட்டிருப்பது தெரிந்தது.

    படுக்கையில் ஊடல் கொண்ட காதலியுடன் போராடுவது போல் போரடித் தோற்றுப் போனதால் மீண்டும் மின்சாரம் வந்துள்ளதா? என்று பார்த்து ஏமாந்தவன், பூசையறையில் இருந்த மண் விளக்கை எடுத்து தீப்பந்தந்தைப் போல் எரியச் செய்தான்.

    ஜன்னல் வழியாக சில்லென்று வந்த காற்று அவனைத் தழுவத்துடித்தது. அவனுக்கும் அதே உணர்வு வந்தால் ஜன்னலை நோக்கிப் போனான்.

    வங்கி சேமிப்பில் சேர்ந்திருந்த பணத்தில் கட்டிய வீட்டில் நல்ல தரமான பளிங்கு கற்களை பலகடைகள் ஏறி இறங்கி தேர்வு செய்து பதித்தான். புதுமனை புகுவிழாவிற்கு வந்த நண்பர்கள் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது  “டிசைன் சூப்பர். செம்ம கலர். ஆனா.. யூ.பி. எஸ் போட்டிருந்தா நல்லா யிருக்கும்” என்று பேசிக்கொண்டிருந்தது முனியன் காதில் விழுந்தது. அதைக் கேட்காதவன் போல் அப்போது அவன் நடந்துகொண்டான்.

    தீப்பந்தம் போல் எரிந்த விளக்கில் வெளியான வேம்பின் வாடை அவனைத் தழுவிக்கொள்ள ஜன்னல் நோக்கி வந்தது.

    சில் காற்றில் தவழ்ந்து வந்த முல்லையின் மணமும் அகல்விளக்கில் இருந்து வந்த வேம்பின் மணமும் நான் நீ என மோதிக் கொள்வதை அவன் உணர்ந்தபோது வாழை இலையின் மேல் விழுந்த மழைத்துளிகள் அவன் காதில் சந்தடியில்லாமல் நுழைந்துகொண்டிருந்தன.

    ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். பூமித்தாயின் வயிறு நிறைந்திருந்தது. மின்மினி போன்ற மின்னலின் ஒளியில் அது நன்றாகத் தெரிந்தது.

    அப்போது கனவில் கண்ட மங்கிய இருள் அவனை வேதாளம் போல் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

    மங்கிய வெளிச்சித்தில் பார்த்த மூதாட்டியின் முகமோ? அவள் தந்த உணவோ? தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவற்றைத் தெளிவாகப் பார்க்க பகீரதனாய் முயன்று கொண்டிருந்தான்.

    இறுதியாக வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி பயணப்பட்டான்.

    பாதியில் குறுக்கிட்ட ஆற்றில் வெண்ணிற அலைகள் திருடனைத் துரத்துவது போல் ஓடிக்கொண்டிருந்தது.

    சில மணிநேர பணயத்திற்குப் பிறகு பேருந்திலிருந்து இறங்கியவன் புற்களுக்கிடையே காலடிகள் பட்டுத்தேய்ந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான். தன் முதுகில் தொங்கிய பையை அவ்வப்போது சரிசெய்தபடியே நடந்துகொண்டிருந்தான்.

    உழவர்கள் வயலில் மூழ்கியிருந்தனர். அவர்களைக் கண்டு அஞ்சிய சர்ப்பம் ஒன்று முனியனின் பாதையில் நாலடிமுன்னார் உயிர் பிழைத்துக்கொள்ள ஓடியது. வளைந்து நெளிந்து தாவிக் குதித்தோடிய அதன் அழகை ரசித்தபடியே படம் பிடித்தவன் பாம்பின் உருவம் மறைந்ததும் அங்கிருந்து புறப்பட்டான்.

    அவனது இடப்பக்கத்தைத் தாக்கிக்கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் இப்போது அவனது தலையை மட்டும் குறிவைத்து தாக்க ஆரம்பித்தது. அதனால் களைத்துப்போனவன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதில் இருந்த தண்ணீரைத் தேடி அதை நாக்கில் படும்படிசெய்தான்.

    தன்னைக் கடந்து போன மேகத்துண்டுகளைப் பார்த்து அவ்வப்போது நன்றி கூறியவாறு நடந்துகொண்டிருந்தவன் நாவறண்டு தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தான்.

    ஒரு வழியாக இடப்பக்கமாக இருந்த ஓரு நீரோடை அவனது கண்ணில் பட திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் திரும்பப்பெற்றவர் போல் அதை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

    மலையிலிருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் காட்டாற்றில் தண்ணீர் தெள்ளத் தெளிவாக இருந்தது.

    அதைப் பார்த்ததும் பருகவேண்டும் என்ற ஆவல் மேலிட தன்முதுகில் இருந்த பையை இறக்கி அருகிலிருந்த ஒரு சிறு கல்லின் மேல் வைத்தான். மெல்ல தண்ணீரின் மேற்பரப்பைத் தன் உள்ளங்கையால் இருபுறமும் விளக்கியபோது அவன் முன்னர் ஒரு சிட்டுக் குருவி படபடத்துக்கொண்டிருந்தைப் பார்த்தான்.

    பேருந்து நிறுத்ததில் இறங்கிபோது அக்குருவியைப் பார்த்ததாக ஒரு நினைவு அவனுள் தோன்றி மறைந்தது.

    அதே நினைவுடன் இருகையால் தண்ணீரை அள்ளி வாயருகே கொண்டு சென்றபோது அவன் காதுகளை அடைந்த அந்தக் குரல் கையிலிருந்த தண்ணீரை கை கழுவ செய்தது.

    “அண்ணே! அந்தத் தண்ணீரைக் குடிக்காதீங்க” என்று கத்தியபடி ஒரு சிறுவன் முனியனை நோக்கி மூச்சிறைக்க ஓடிவந்தான்.

    அது நல்ல தண்ணி இல்லண்ணே! குடிக்க தண்ணி வேணுமா? வாங்க என்று அழைத்தான்.

    “தண்ணீர் நல்லா தானே இருக்கு. ஏன் குடிக்கக் கூடாது?” என்று தெள்ளத் தெளிவாக இருந்த அதன் தோற்றம் அவனைக் கேட்க வைத்தது.

    ஆனால் கோவணத்துடன் இருந்த அச்சிறுவனிடம் அதைப் பற்றி ஏதும் கேட்க வில்லை.

    மஞ்சு புற்கள் நிறைந்த இங்கொன்றும் அங்கொன்றும் சிதறிக்கிடந்த தேயாத கால்தடங்கள் தென்பட்ட பாதையில் நடக்க ஆரம்பித்த சிறுவன் வலப்பக்கத்தில் கொஞ்ச தொலைவில் இருந்த பாறையைச் சுட்டிக்காட்டி “அதோ அந்தப் பாறையில் ஒரு சுனை இருக்கு. அங்க நல்ல தண்ணீ கிடைக்கும் வாங்க“ என்று கூறியவாறே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

    “ஆமா? தம்பி நீ இங்க தனியா என்ன பண்ற? ஸ்கூல் போகறதுதில்லையா?” என்று முனியன் கேட்டான்.

    அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல அதனால ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு மாடு மேய்க்க வந்துட்டேன்.

    என்ற பதிலைக் கேட்டு முனியன் அடுத்த கேள்வியைத் தயக்கமின்றி கேட்டான். என்ன வகுப்பு படிக்கிறாய் என்று.

    “எட்டாம் வகுப்பு“ என்று ஆங்கிலத்தில் கூறியது அவனது மண்டையில் ஆணி அடித்தது போல் அழுத்தமாய் பதிந்தது.

    தான் கனவில் கண்ட காட்சியைப் பற்றிக் கூறி மூதாட்டி பற்றி விசாரித்தான்.

    அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் புன்னகைப்பதாக அவனுக்குத் தோன்றினாலும் ஏன் சிரிக்கின்றாய் என்று கேட்கவில்லை.

    அதற்குள் தண்ணீர் இருந்த சுனையை அடைந்ததால் முனியன் தன்தாகத்தைத் தீர்த்துக்கொண்டான்.

    தாகம் தணிந்த தெம்பில் “தம்பி இங்க பாம்புமலை எங்கிருக்கு என்று கேட்க” சற்றும் தாமதிக்காத அந்தச் சிறுவன் வடக்கு திசையை நோக்கியிருந்த மலையைச் சுட்டிக்காட்டி “அதோ தெரியுதே அந்த ஆர்ப்பு மரக்காட்டைத் தண்டினால் நீங்கத் தேடிவந்தது கிடைக்கும்” என்று கூறிய சிறுவன் மாடுகள் பற்றிய நினைவு வந்தவனாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

    தன்னுடைய  இலக்கு கண்ணில் தெரிந்த தெம்பில் வேகமாக நடந்த முனியன் ஆர்ப்பு மரக்காட்டை நெருங்கியபோது தான் கனவில் கண்ட பாதை எதிர்படுவதாய் உணர ஆரம்பித்தான்.

    அதனால் இன்னும் வேகமாய் நடக்க ஆரம்பித்தான். இங்கொன்னும் அங்கொன்றுமாய் இருந்த நெல்லி மரங்களில் சிலவற்றில் மட்டும் நெல்லிக்காய் காய்த்திருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சென்றவனின் கண்முன்னர் பெரிய யானையை ஒத்த பாறை திடீரெனத் தோன்றியது. அதன் உச்சியில் பிரண்டைக் கொடிகள் பாம்புகள் போல் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

    அதைக் கடந்தவனுக்கு பிரமிப்பு அதிகமானது அச்சு அசல் கடந்து வந்த மலையைப் போன்ற மற்றொரு மலை எதிரில் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. அதைக் கடந்தவனுக்கு மயக்கம் வருவது போல் ஆனது. மீண்டும் ஒரு மலை அதே போல் இருந்தது.

    திரும்பிப் போய் விடலாம் என்று கூட அவன் நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தூண்டுவதாய் அவன் உணர்ந்தான்.

    ஏழு மலைகளைத் தாண்டியபோது இதுவரை கடந்துவந்த மலைகளை ஒன்று சேர்த்ததுபோல் பருத்த பாறை கண்ணில் பட்டது. அந்தப் பாறையின் நடுவில் ஒரு பெரிய நுழைவு வாயில் போன்ற தோற்றம் இருந்தது. அதனருகே சென்றான். அதுவரை உடன் வந்த சிட்டுக் குருவி திடீரெனக் காணாமல் போனது.

    தயக்கத்துடன் அந்த வாயிலினுள் நுழைந்தவன் கனவில் கண்ட மூதாட்டியை நேரில் பார்த்தான். ஆனால் இப்போது அவனுக்கு பிரமிப்பு ஏதும் ஏற்படவில்லை.

    அவனைப் பார்த்த அந்த மூதாட்டி தன்னிருக்கரங்களை நீட்டி அவனை தன்னருகே அழைத்தாள். அவளுடைய நெற்றியில் இருந்த திலகத்தைப் பார்த்தவாறே சென்று அருகில் நின்றான் பித்துப் பிடித்தவனாய்.

    நீட்டிய கரங்களால் அவனை ஆரத்தழுவினாள் அம்மூதாட்டி.. அவளுடைய கொங்கைகள் அவனுடைய மார்பில் ஈட்டியாய்த் துளைத்தது.

    அவளை விளக்க முயன்றகொண்டிருந்த போது மூதாட்டியின் சாயம் மெல்ல மெல்லவிலகியது.

    உடுத்தியிருந்த இருவரின் ஆடைகளும் மண்ணைத் தஞ்சமடைந்தன.

    இருவரின் சரீரங்களும் பாம்புகளாய்ப் பின்னிக்கொண்டு நின்றன.

    சூரியன் பூமியை நோக்கி வீசியெறிந்த ஒளிக்கதிர்களுக்கு அஞ்சி இருவரும் காற்றில் மறைத்துக்கொண்டார்கள்.

    அது சரி முனியன் பற்றி கூறும் நீ யார்? என்று கேட்கிறீர்களா?

    ம்…. ம்…. புரிகிறது

    ………………………… நான் தான் முனியனின் நிழல்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181021 DWA -mixedmedia-9×12 Strathmore 160g 300dpi (Conté, charcoal, wcol) -lr

    நீபுவனம் பாரத்தை நீக்கசுற்றும் சூரியன்நான்
    தீகவனம் தீண்டும் தலைப்பா(தலைப்பாகை பாரதியார்)நான் -நீவீரன்
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
    தர்கம் புரிதல் தவிர்….கிரேசி மோகன்….!

    Share
  • 2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது

    Posted on October 20, 2018
    Trina Solar Company Supplies Solar Power Modules to
    Ukraine’s Largest Solar Power Plant
     
     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     
    ++++++++++++++++++

    சூரியக்கதிர் மின்சக்தி சேமிக்க,
    நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள
    ஓரரும் பெரும் மின்கலம்
    தாரணியில் உருவாகி விட்டது
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    தட்டாம்பூச்சி போல் பறக்க
    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் பிறக்கும்  !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்களில்  உலகைச் சுற்றியது.
    சூரியக்கதிர் தட்டுகள்  அனுதினம்
    பராமரிக் கப்பட வேண்டும்.  
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    See the source image
     
     
    இந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள்  உற்பத்தி செய்யும்.
     
     
    2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார்.   உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங் களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த  முன்வந்துள்ளன.  இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில்  ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.
    See the source image
    2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் :  2700 மெகாவாட்.
    இந்திய  உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]
    சூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells]   : 500 மெகவாட்.
    உள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன.  வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது.   சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு  [2015 நாணய மதிப்பு]  சுமார் 4 பில்லியன் டாலர்.
    indian solar industry
    Trina Solar Company to Invest $500 Million in Indian Solar Industry
    [December 4, 2017]
    See the source image
    See the source image
    ராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்
    துப்புரவு செய்கிறார்

    ++++++++++++

     

    magazine
    ++++++++++++++++++++++++++++
    இந்தியச்  சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்
     
     சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும்  உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்”  [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது.  தற்போதைய  பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும்,  அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு  [Climate, Improper Installation, Lack of Maintenance]  ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல !
    இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து  [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத்  ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை  வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது.  ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.  அதற்கு  புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம்  [Ministry of New & Renewable Energy (MNRE)]  &   [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.
    ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை
    +++++++++++++++++++
    உலக நிறுவன அரங்குகளில்  சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில்  [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று    [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds]  யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin]  கூறுகிறார்.  குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது.  இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில்  சிரமாக உள்ளது.
    சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.
     
    கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு
     
    +++++++++++++
     
    +++++++++++++++++

     சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.
    2013 -2014 ஆண்டுகட்கு  இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
     
    அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters] விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.
    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

     

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியா வின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    SPOUSE(S)
    CHILDREN 6
    PARENT(S)
    RELATIVES
    SIGNATURE

    Image result for Lithium Ion Research

    Image result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion Technology

    Elon Musk’s Tesla Roadster
    Tesla Roadster in Falcon Heavy fairing.jpg
    The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation
    OPERATOR SpaceX
    MANUFACTURER Tesla
    INSTRUMENT TYPE Inert mass
    FUNCTION Dummy payload
    WEBSITE spacex.com
    PROPERTIES
    MASS Approximately 1,300 kg (2,900 lb)
    HOST SPACECRAFT
    LAUNCH DATE January 2018
    ROCKET Falcon Heavy
    LAUNCH SITE KennedyLC-39A
    ORBIT Heliocentric

    Image result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw battery

    Image result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel Cell

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Image result for Lithium Ion Research

    1.  http://www.solardaily.com/reports/PI_Berlin_examines_risks_facing_PV_projects_in_India_999.html  [August 2, 2018]
    2. https://natgrp.wordpress.com/tag/renewable-energy-certificates/  [October 19, 2016]
    3. https://solarpowermanagement.net/home
    4. http://www.solardaily.com/reports/Denver_takes_big_step_on_renewables_999.html [July 18, 2018
    5. http://www.solardaily.com/reports/KYOCERA_TCL_Solar_Completes_28MW_Solar_Power_Plant_in_Miyagi_Prefecture_Japan_999.html [August 2, 2018]
    6. https://www.marketscreener.com/KYOCERA-CORP-6492472/news/Kyocera-finishes-28-MW-solar-power-plant-in-Taiwa-Japan-26991864/ [July 25, 2018]
    7. https://economictimes.indiatimes.com/industry/energy/power/governments-target-to-set-up-100-gw-of-solar-plants-drives-local-foreign-companies/articleshow/47494798.cms [June 1, 2015]
    8.  http://www.saurenergy.com/solar-energy-news/trina-to-invest-usd-500-million-in-indian-solar-industry  [December 4, 2017]
    9. http://www.solardaily.com/reports/Trina_Solar_Supplies_Modules_to_Ukraines_Largest_Solar_Power_Plant_999.html [October 18, 2018]
    10. http://www.solardaily.com/reports/Renewable_energy_is_common_ground_for_Democrats_and_Republicans_999.html [October 17, 2018]

    +++++++++++++++++++++++++

    Share
  • ”மை LOVE வாப்பூர் டைம்ஸ்’’….!

    கிரேஸி மோகன்
    —————————

    மயிலாப்பூர்வாசிகளுக்கு நாகேஸ்வரராவ் பார்க்தான் காதல்கோட்டை. கல்லூரி நாட்களில் நான், விச்சு, நடராஜன் மூவரும் வேலை மெனக்கெட்டு பார்க்குக்கு வரும் காதலர்களை வேவு பார்க்கப் போவோம். லவ் டுடே பற்றி எனக்கு தெரியாது. அந்நாளில் மயிலாப்பூர் லவ் மடியாக ஆச்சாரத்தோடு இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு இடையே உள்ள போதிய இடைவெளிவிட்டு காதலர்கள் அமர்ந்து (நாங்கள் பார்த்த காதலர்களில் பாதி பேர்கள் நாலு முழ வேட்டி, காலர் அழுக்காகாமல் இருக்க கழுத்தில் கர்சீப், சொக்காயின் கைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் கைவைத்த உள் பனியன், நெற்றியில் காதல் நிறைவேற கபாலீஸ்வரர் விபூதி, கற்பகாம்பாள் குங்குமம், சீனுவாசப் பெருமாள் தாயார் சன்னிதி மஞ்சள் காப்பு. பேசினால் அனுமார் கோயிலில் சாப்பிட்ட துளசி வாசனை தூக்கும்)
    ‘இவன் காதலிக்க வந்தானா?’ இல்லை கோயில் கச்சேரிக்கு தவில் வாசிக்க வந்தானா?’ என்று
    எண்ணத் தோன்றும்….

    சுவாரஸ்யமாக பேசியபடி பார்க் புல்லை காதலர் இருவரும் பிடுங்கி பிடுங்கி
    வாயில் வைத்து கடிப்பார்கள். காதலர்கள் வருவதற்கு முன்பு ஹவுஸ்புல்லாக இருந்த பார்க் எழுந்து போகும் போது புல்லே இல்லாமல் கார்-பார்க் செய்யும் அளவுக்கு வெட்ட வெளியாகிவிடும்.
    காதல் தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம், காதலில் வெற்றி அடைந்து கல்யாணமாகி தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் விட வேடிக்கை என்னவென்றால் அன்று நாங்கள் பார்த்த காதல் ஜோடிகளில் ஓரிரு ஜோடிகள் இன்றும்கூட அதே நாகேஸ்வரராவ் பார்க்கில் இளம் நரை, கொட்டாவி, ஏப்பம், இருமலோடு புல்லைப் பிடுங்கிக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    காதலர்களை வேவு பார்ப்பதிலேயே ஜன்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்த எங்கள் மூவரில் “டயமாச்சுடா… அப்பா கோவிச்சுப்பா…” என்று அசமஞ்ஜமாக பேசும் நடராஜன், பார்க்கில் பெஞ்சில் அமர்ந்து கெமிஸ்ட்ரி படிக்கும் கெளசல்யாவைக் கண்டதும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்க ஆரம்பித்தான். அந்நாளில் சைக்கிள் வித்தைகள் தெரிந்த நடராஜனை ‘ஹெர்குலிஸ்’ஸாகவே மதித்து பெண்கள் பெரிதும் விரும்பி ரசிப்பார்கள். நடராஜன் சைக்கிளை சரளி வரிசை, ஜண்ட வரிசை, கீர்த்தனம் என்று முறையாகப் பயின்ற மகாவித்வான். நானும் விச்சுவும் போட்டு தந்த திட்டப்படி கெளசல்யாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடராஜன் நாகேஸ்வரராவ் பார்க் அருகில் சைக்கிளில் அசுர சாகசங்களை செய்தான். கெளசல்யா எதிரே வரும் போது குரங்கு பெடலில் சுருதி சேர்த்துக் கொண்டு வரும் நடராஜன் தடாலென ஆரோகணத்துக்கு தாவி சீட்டில் அமர்ந்து இரண்டு கைகளையும் விட்டு பாலன்ஸ் ஆலாபனை செய்தபடி உச்சஸ்தாயியில் செல்லும்போது சட்டென்று அவரோகணமாக பின் சீட்டுக்கு இறங்கி, பின்பு அதிலிருந்து ரோட்டில் குதித்து சைக்கிளை மட்டும் தனி ஆவர்த்தனமாக சிறிது நேரம் ஓடவிட்டு, பின்பு அதை துரத்திச் சென்று ஜல்லிக்கட்டு காளையைப் பிடிப்பது போல ஹாண்டில் பாரைப் பிடித்து ஒரே ஜம்பில் சீட்டுக்கு தாவ… கெளசல்யா “நீயல்லவோ வீரன்” என்று கண்களால் தெரிவித்துவிட்டு கமிட் செய்யாமல் போய் விட்டாள்.

    நடராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில் ஓரளவு ஆகுபெயர், வினைத்தொகை தெரிந்த விச்சு
    “கெளசல்யா, நீ வானம்னா நான் பூமி, நீ பூமின்னா நான் வயல்… நான் வயல்னா நீ நாத்து…
    நீ நாத்துன்னா நான் வாத்து” என்ற ரீதியில் ஒரு காதல் கடிதம் எழுதித் தர… நடராஜன் அதை நேரிடையாக தந்தான். அதைப் படித்து விட்டு சிறிது நேரம் விசும்பி விசும்பி அழுத கெளசல்யா, நடராஜனின் வலது கையை பிடித்து, “கவிதை எழுதிய கைக்கு என் பரிசு” என்று செல்லமாக கையில் முத்தமிட்டு “நடராஜன்… கி.வா.ஜ.வுக்கு நீங்க உறவா?” என்று பேந்த பேந்த முழிக்கும் நடராஜனை பேசவிடாமல் “ஐ லவ் யூ” சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

    வழக்கம் போல காதலுக்கு மரியாதை இல்லை. “நடராஜனும் கெளசல்யாவும் பாம்பேக்கு ஓடிப்போவது” என்று நான் முன்மொழிய பின்வழிந்தான் விச்சு. ஓடிப்போகும் திட்டத்தை கெளசல்யாவிடம் தெரிவிக்கும் ரிஸ்க்கான பொறுப்பை விச்சு ஏற்றுக் கொண்டான். மறுநாள் இரவு எட்டு மணிக்கு நாங்கள் நாகேஸ்வரராவ் பார்க்கில் நுழைந்தபோது திட்டமிட்டபடி ஆலமரத்தடியில் நீலநிறப்புடவையுடன் கெளசல்யா அமர்ந்திருந்தாள். நடராஜன் அருகில் சென்று “கெளசல்யா ரெடியா…” என்று தோளைத் தொட்டு திருப்ப கெளசல்யாவின் அப்பா நீல புடவையை களைந்து, “ம்… ரெடி,
    ஸ்டெடி ஜூட்” என்று சொல்லி நடராஜனை துரத்தி துரத்தி அடித்தார். டினோசர் போல
    நடராஜனை புரட்டி புரட்டி எடுத்து ஒரேடியாக நாகேஸ்வரராவ் பார்க்கை ஜுராஸிக் பார்க் ஆக்கினார் கெளசல்யாவின் தந்தை.

    சமீபத்தில் கெளசல்யாவை அம்பிகா அப்பளம் வாசலில் பார்த்தேன். “என்ன மோகன் செளக்கியமா…
    ஒரு நிமிஷம்” என்று கூறிவிட்டு கடைக்குள் பார்த்து, ஏங்க… வாங்க யார் பாருங்க இங்க…” என்று கூற விச்சு நாலு குழந்தைகளுடன் வந்தான். கெளசல்யாவின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து நடராஜனை ஒதுக்கி இடைச் செருகலாக நுழைந்து கெளசல்யாவைக் கைப்பற்றிய விச்சுவை வில்லன் என்றும் சொல்ல முடியாது. தற்போது ஒரு பெரிய விளம்பரக் கம்பெனியின் ஓனராக இருக்கும் விச்சு கெளசல்யாவை சவுகரியமாக காப்பாற்றி வருகிறான். நடராஜன் மயிலையில்
    சைக்கிள் கடை வைத்து பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கிறான். நாகேஸ்வரராவ் பார்க் அருகில் அமிர்தாஞ்சனம் தயாரிக்கும் இடம் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை… நடராஜனின் காதல் “போயே போச்… போயிந்தே… இட்ஸ்-கான்” என்று ஆகிவிட்டது.


    Share